சபரிமலை கோவிலில் மாதவிடாய் காரணமாக பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று (28-09-2018) தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்களின் மத வழிபாட்டு உரிமையின் மீது ஆணாதிக்கத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ரோஹிண்டன் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்ட் 2, 2018 அன்று இவ்வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்தது.

இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் ஆகியோர் இணைந்து தங்களது தீர்ப்பை ஒரே தீர்ப்பாக வழங்கினர். நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் அதனுடன் ஒத்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதி இந்து மல்கோத்ரா நல்வருக்கும் முரணான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மல்கோத்ரா தவிர நான்கு நீதிபதிகளும், அனைத்துப் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

சபரிமலை தந்திரி (பூசாரி) மட்டுமே கோவிலின் பாரம்பரியம், நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க முடியும் என முன்னர் கூறியது கேரள உயர்நீதிமன்றம். அந்த அடிப்படையில் சபரிமலையில் பெண்கள் நுழைய இருந்த தடை தொடரும் எனத் தீர்ப்பளித்திருந்தது.

இதற்கு எதிராக மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பழைய பாரம்பரியமே பெண்களுக்கு எதிரானதாக, அவர்களை தாழ்வாகக் கருதும் தன்மையுடையதாக இருப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தனர்.

இது குறித்து நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், “ஆணாதிக்க விதிகள் மாற்றப்பட வேண்டும். மதத்தில் ஆணாதிக்கம் அனுமதிக்கப்படலாகாது. உயிரியல் தன்மையை அடிப்படையாகக் கொண்ட எந்த விதியும் அரசியல் சாசன சோதனையைத் தாண்டி நிலை பெற்றிருக்க முடியாது. அதே போல திருவனந்தபுரம் தேவசம் போர்டு குறிப்பிட்டிருப்பது போல, அய்யப்ப பக்தர்களை மதத்தின் தனிப்பிரிவினராக ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

மேலும், “கேரளா இந்து பொது வழிபாட்டுத்தலங்கள் விதிகள் – 1965, மதத்தைப் பின்பற்றுவதற்கான இந்துப் பெண்களின் உரிமையை பறிக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் வயதை அடிப்படையாகக் கொண்டு பெண்களின் நுழைவுக்குத் தடை விதிப்பது என்பது அவசியமான நடைமுறையாக ஏற்றுக் கொள்ளமுடியாது” என்றும் குறிப்பிட்டனர்.

நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தமது தீர்ப்பில், “பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் வழக்கமானது அரசியல்சாசன பிரிவு 25(1)-க்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் பகுதி 3-ன் கீழ் வரும் அடிப்படை உரிமைகள், சமூக மாற்றத்திற்கு மிகவும் அவசியமானவை” என்று குறிப்பிட்டார். மேலும் ”கேரள இந்து பொது வழிப்பாட்டுத் தலங்கள் விதிகள்” (1965)-ன் விதி 3(பி)-யை நீக்கி உத்தரவிட்டார் நாரிமன்.

நீதிபதி சந்திர சூட் தமது தீர்ப்பில், “மதம் பெண்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஒரு உறையாக இருக்க முடியாது. பெண்களை தாழ்வாக நினைப்பது அரசியல்சாசனத்தின் நியாய விழுமியங்களை ஏளனம் செய்வதற்கு ஒப்பானது. பெண்களை அனுமதிக்காதது அவர்களை இழிவுபடுத்தக் கூடியசெயலாகும்.” என்று குறிப்பிட்டார்.

மேலும், “10-50 வயதிலான பெண்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிப்பதானது பெண்களின் மதிப்பை குறைக்கச் செய்வது ஆகும். பெண்களால் 41 நாள் விரதத்தை கடைபிடிக்க முடியாது என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் நால்வருக்கும் எதிரான கருத்துக்களை தமது தீர்ப்பில் முன்வைத்தார் நீதிபதி இந்து மல்கோத்ரா. “ஆழமான மத நம்பிக்கைகள் குறித்த பிரச்சினைகளில் நீதிமன்றம் சாதாரணமாக தலையிடக் கூடாது. சபரிமலை கோவிலும் அதன் கடவுளும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 25-ஆல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. மத நடைமுறைகளை வெறுமனே அரசியல் சாசன சட்டப்பிரிவு 14-ன் அடிப்படையில் மட்டும் பார்க்க முடியாது”. என்று கூறியுள்ளார்.

மேலும், “மதம் சார்ந்த விவகாரங்களில் பகுத்தறிவு கருத்தியல்கள் தலையிடக் கூடாது. மத நடைமுறைகளை வகுப்பதை அந்தந்த மதப் பிரிவினர்தான் முடிவு செய்ய முடியுமே அன்றி நீதிமன்றம் அல்ல. அரசியல்சாசனத்தின் விழுமியங்கள் அனைத்து தரப்பினரின் நம்பிக்கையையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவு அல்லது மதத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால் ஒழிய அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்து மல்கோத்ராவைப் பொறுத்தவரையில், இந்துப் பெண்கள் எல்லாம் அந்த மதப்பிரிவில் வராதவர்கள் போலத் தெரிகிறது. பாஜக ஆட்சியில் வழக்கறிஞராக இருந்த மல்கோத்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பில் அமர வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் தேவசம் போர்டின் தலைவர் இது குறித்துக் கூறுகையில் தாம் சீராய்வு மனு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால் தேவசம் போர்டு பின்னர் தீர்ப்பை ஏற்பதாக கூறியிருக்கிறது. சபரிமலை தந்திரி இத்தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். பந்தளம் அரச குடும்பம் ஏற்கனவே பெண்கள் நுழைவை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தது.

நாடு முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிரான சமத்துவ போராட்டங்கள் அதிகரித்து வரும நிலையில் உச்சநீதி மன்றம் இந்தத் தீர்ப்பினை அளித்திருக்கிறது. தனது இயக்கத்திலேயே பெண்கள் நுழைவை தடை செய்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இத்தீர்ப்பு வருவதற்கு முன்பு கடைசி நேரத்தில் சபரி மலை கோவிலில் பெண்கள் நுழைவை ஏற்கலாம் என போனால் போகட்டும் பாணியில் தெரிவித்திருந்தது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தினை இந்து மல்கோத்ரா என்ன விளக்கம் சொன்னாரோ அதையே வேறு வார்த்தைகளில் இதே உச்சநீதிமன்றம் தீர்ப்பாக தெரிவித்திருந்தது. அதனால்தான் இன்றும் தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நடைமுறை அமலில் வராமல் இருக்கிறது.

கேரள வெள்ளத்திற்கு காரணமே இந்த வழக்குதான் என பார்ப்பனர்களும், இந்துமதவெறியர்களும் தமது வக்கிரத்தை கக்கியிருந்தார்கள். தற்போது தீர்ப்பு இப்படி வந்த நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள்? தற்கொலை செய்து கொள்வார்களா?