privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

-

விண்வெளியில் பறந்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் குடிமகன் என்றாலும் இந்தியாவின் தூரத்து சொந்தம் என்ற வகையில் அவரை இங்கே அப்துல் கலாம் வகையறா கனவான்களும், சீமாட்டிகளும் கொண்டாடுவர். அப்பேற்பட்ட நாட்டில்தான் சாமி கும்பிடுவதற்கு கூட பெண்களுக்கு அனுமதியில்லை.

Sabrimala-woman-entry
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது கூடாது என்பதை பெண்களே ஏற்கிறார்கள் என்று காட்டுவதற்கு “Ready to wait” என்ற ஹேஷ்டெக்குடன் இந்துமதவெறியர்கள் செய்யும் பிரச்சாரம்!

சபரிமலை ஐயப்பனை ஆண்கள் மட்டுமே வழிபடவேண்டும், மாத விலக்கு பருவத்திற்கு முந்தைய பிந்தைய பெண்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பது அவாள்கள் உருவாக்கிய விதி முறை. இது குறித்து அவ்வப்போது பெண்கள் அமைப்புக்களும், முற்போக்கு அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதன்படி 2006-ம் ஆண்டில், கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென ஒரு பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதற்கு ஐயப்பனன் கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம்போர்டு மற்றும் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மதநம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று ஏற்கனவே உத்திரவு பிறப்பித்திருக்கும் நீதிமன்றம், தானே அதை மீறக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்த வழக்கில் எல்லா பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று இதற்கு முன்னர் அச்சுதானந்தன் தலைமை தாங்கிய இடதுசாரி முன்னணி அரசு, 2007-ம் ஆண்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உ ம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்தது. அவர்கள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். என்ன இருந்தாலும் இவர்கள் ‘மென்மையான’ இந்துத்துவா அல்லவா!

தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரள அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேட்கின்றனர். உடனே முந்தைய அச்சுதானந்தன் அரசு எடுத்த அதே நிலைப்பாடுதான் மாற்றமில்லை என்று தற்போதைய இடதுசாரி முன்னணி அரசு கூறியிருக்கிறது. உடனே தேவசம்போர்டு வழக்கறிஞர், “இப்படிமாநில அரசு அடிக்கடி நிலைப்பாடை மாற்றக்கூடாது. பெண்களை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டிருக்கிறார்.

பிறகு நீதிபதிகள் இந்த வழக்கை அடுத்த ஆண்டு 2017 பிப்ரவரிக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த தள்ளிவைப்புக்கு காரணம் இது போன்ற பிரச்சினைகளை ஆறப்போட்டு கொல்வது மனுநீதிமன்றத்தின் வழக்கம். அது உண்மையெனும் விதமாக இந்துமதவெறியர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் அணிவகுத்து, பெண்களை விடக்கூடாது, நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

magara-jothi
சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்

பொதுவாக சபரிமலை சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளர் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம்!

ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும்  இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.

இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல?

பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பார்ப்பான பூசாரியின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பார்ப்பானர் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறார். இதைக் கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. சபரிமலைக்கு சென்ற நடிகைகள் ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்தவர்கள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்ய வேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.

இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.

இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு ‘அறிவியல்’ விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்கலாம்.  மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.

SABARIMALASசபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!

கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்குபவர்கள் காட்டுமிராண்டிகளா இல்லையா?

“சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் அன்றைக்கு கோயிலின் தலைமைத் தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை அன்றைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?” என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்தார் அன்றைக்கு முதல்வராக இருந்த மார்க்சிஸ்டு கட்சியின் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா?  “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல.  பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

இப்பேற்பட்ட மார்க்சிஸ்டுகள் இன்றைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாலும் இந்த மகர ஜோதி குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வார்களா? ஒரு மூடநம்பிக்கையை வருமானம் சார்ந்து மறைக்கும் போது இன்னொரு மூட நம்பிக்கை பாலினம் சார்ந்து ஒடுக்குகிறது. இதையெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து பார்ப்பனியத்தை கேள்வி கேட்கும் தைரியமோ, அறிவோ, தெளிவோ மாரக்சிஸ்டு கட்சியிடம் இல்லை. அப்படி பிரச்சாரம் செய்தால் ‘இந்துக்களின்’ வாக்கு போய்விடும் என்பது மார்க்சிஸ்டுகளின் பயம். மக்கள் மத்தியில் இதை பிரச்சாரம் செய்யாமல் நீதிமன்றத்தில் மட்டுமே கொண்டு வந்து விட முடியாது.

மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய வழக்கில் தீர்ப்பு கொடுத்திருக்கும் உச்சநீதிமன்றம் சபரிமலை வழக்கிலும் என்ன கொடுத்து விட முடியும்? ஒருவேளை பெண்கள் போகலாம் அதை முடிவெடுக்க வேண்டியது பந்தளம் மகாராஜா என்று கொடுத்து விட்டால், யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் பிரச்சினையை அமுக்கிவிடலாம். பிறகு பெண்களும் கோவிலுக்கு போக முடியாது. போக கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லையென  லாவணியும் பாடலாம்.

happytobleed“இது நம்பிக்கை சார்ந்த விசயம். இதை அரசோ, நீதிமன்றமோ திணிக்க முடியாது” என்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ஆளுர் ஷாநவாஸ். அதை தானும் ஏற்பதாக பா.ஜ.கவின் கே.டி. ராகவனும் கூறுகிறார். ஆதிக்க சாதிவெறியைத்தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்காமலே தடை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது, இது போன்ற மதநம்பிக்கைகளை அப்படி பார்க்க முடியாது என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் ஷாநவாஸ்.

ஒருவேளை மசூதிகளில் பெண்கள் தொழ முடியாமை, மவுல்விக்களில் பெண்கள் இல்லாமை, புர்கா, தலாக், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் இசுலாமிய மதத்தின் தனித்துவத்தை பேணவும், அதை நீதிமன்றமோ, அரசோ திணிக்க முடியாது என்பதற்காக அவர் இப்படி சேம்சைடு கோல் போட்டிருக்கலாம்.

சபரிமலை விவகாரத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதை வெறுமே நம்பிக்கை விவகாரமாக அவர் பார்க்கிறார். அப்படி எனில் நேரடி வன்முறை சாராமல், ஆதிக்கசாதிவெறியர்கள் நடத்தும் தீண்டாமைக் கொடுமைகளையும் அவர் தனிப்பட்ட மத,சாதி நம்பிக்கை என்று அவர் ஏற்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கை, உரிமை அனைத்தையும் மதச்சார்பின்மையில் இருந்து பார்க்காமல் எல்லா மதங்களுக்கும் உரிமை உண்டு, அனைத்தையும் அனுசரித்து போகவேண்டும் என்று போனால் அது இப்படித்தான் கேடி ராகவனோடு அணிசேர வேண்டியிருக்கும். இதையே அரசியல் ரீதியாக பா.ஜ.க வுடன் கூட்டணி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் கூறுகிறார். அப்போது கண்டனம் தெரிவித்த ஷாநாவாசை இப்போது ரவிக்குமார் திருப்பிக் கேட்டால் என்ன  சொல்ல முடியும்?

ஒடுக்கப்படும் மக்களையெல்லாம் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி ஒடுக்குதலை நியாயப்படுத்துவது பார்ப்பனிய மரபு. “ஹரியின ஜனங்கள்தான் ஹரிஜனங்கள்” என்று காந்தி காலத்தில் துவங்கியது இந்த கணக்கு. மோடி பிரதமரானதும் துப்புறவுத் தொழிலாளிகளின் பணியை கடவுளின் பணியென்றார். அதே போல வீட்டில் மட்டும்தான் பெண் இருக்க வேண்டும் என்று  கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வழியில்தான் “பாரத தேசம் பெண்களை தாயாக போற்றும் நாடு” என்று வானரக் கூட்டம் ஓதி வருகிறது.

நியாயமாக சபரிமலையில் பெண்களை அனுமதி, என்று தற்காப்பு நிலையில் இன்று பேசுவதை விட, பெண்களை இழிவுபடுத்தும் ஐயப்பனை கைது செய் என்று போராடுவதே சரியாக இருக்கும். சட்டப்படி கோவில் சொத்துக்களின் உரிமையாளரான அந்தந்த கோவில் கடவுள்களை ஒரு தனி நபராகவே சட்டம் கருதுகிறது. ஆகவே ஐயப்பன் சிலையை தூக்கி மத்திய சிறையில் அடைத்து விசாரியுங்கள் !