மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 25 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
”பூமி எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி முஜீக்குக்குக் கவலை கிடையாது” என்று உரத்த பெருமூச்சுடன் பேசத் தொடங்கினான் ரீபின்: “அது கைக்குக் கை எப்படி மாறுகிறது என்பதும், மக்களிடமிருந்து பண்ணையார் எப்படி அதைத் தட்டிப் பறிக்கிறார் என்பதைப் பற்றியும்தான் அவனுக்குக் கவலை. பூமி சுற்றிக் கொண்டிருந்தாலும், சுற்றாமல் அப்படியே நின்றாலும் அவனைப் பொருத்தவரையில் ஒன்றுதான்.

அந்தப் பூமி அவன் காலடியிலேயே கிடந்தாலும் சரி, அல்லது ஆகாசத்தோடு போய் ஒட்டிக்கொண்டாலும் சரி. அவனுக்கு அது நன்றாகச் சாப்பாடு மட்டும் போட்டால் போதும்!

”அடிமை வாழ்வின் சரித்திரம்” என்ற ஒரு புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து வாசித்தான் எபீம். “இதென்ன, நம்மைப் பற்றிய புத்தகமா?”

“நீ உன் வாத்தியத்தையே வாசித்துக் கொண்டிரு. பூமியில் அறைந்தாற்போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத் தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள். நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை.

”இந்தப் புத்தகத்தில் நமது ருஷ்ய அடிமை வாழ்வைப் பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பாவெல் அவனிடம் வேறொரு புத்தகத்தை எடுத்து நீட்டினான். எபீம் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். பிறகு அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.

”இதெல்லாம் பழைய காலத்து விவகாரம்.”

“சரி, உங்களுக்குச் சொந்தமாக நிலம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான் பாவெல்.

“இருக்கிறது. எனக்கும் என் சகோதரர் இருவருக்கும் சுமார் பத்தரை ஏக்கர் நிலம் இருக்கிறது. எல்லாம் ஒரே மணல் வெளி. பாத்திரம் விளக்க உதவுமே ஒழிய, பயிர் செய்ய உதவாத மண்.”

ஒரு கணம் கழித்து மீண்டும் அவன் பேசத் தொடங்கினான்.

”நான் நிலத்தை விட்டுவிட்டேன். அதை வைத்துக் கொண்டு என்ன பிரயோஜனம்? சும்மா நம்மை வேலையில்லாமல் கட்டித்தான் போடும், உணவு தராது. நாலு வருஷ காலமாய், நான் பண்ணைக் கூலியாளாகத்தான் வேலை பார்த்து வருகிறேன். மழைக்காலத்துக்குப் பிறகு நான் ராணுவ சேவைக்கும் செல்ல வேண்டும். ‘பட்டாளத்துக்குப் போகாதே. இப்போதெல்லாம் சிப்பாய்களைக் கொண்டு ஜனங்களை அடிக்கச் சொல்லுகிறார்களாம்’ என்று மாமா மிகயீல் சொன்னார். ஆனால் நான் போய்ச் சேரத்தான் எண்ணியிருக்கிறேன். ஸ்திபான் ராசின், புகச்சோவ் முதலியவர்கள் காலத்திலும் கூட, பட்டாளத்துக்காரர்கள் ஜனங்களை அடித்து நொறுக்கத்தான் செய்தார்கள். இதுக்கொரு முடிவுகட்ட வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவன் பாவெலைக் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான்.

”ஆமாம். காலம் மாறத் தொடங்கிவிட்டது!” என்று இளம் புன்னகையுடன் சொன்னான் பாவெல். ”ஆனால் காலத்தைப் பரிபூரணமாக மாற்றுவது மிகவும் கடினமான காரியம். நான் சிப்பாய்களிடம் என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.”

”நாங்கள் அதைக் கற்றுக் கொள்வோம்” என்றான் எபீம்.

“ஆனால், ராணுவ அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்து விட்டார்களோ, அப்புறம் உங்களைச் சுட்டுக் கொன்று விடுவார்கள்” என்று எபீமைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே சொன்னான் பாவெல்.

“ஆமாம், அவர்களிடம் இரக்கச் சித்தத்தை எதிர்பார்க்க முடியாது” என்று அந்தப் பையன் அமைதியுடன் ஆமோதித்துக்கொண்டே மீண்டும் புத்தகங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

“தேநீர் அருந்து, எபீம்” என்றான் ரீபின். ”நாம் சீக்கிரம் புறப்பட வேண்டும்.”

“அதற்கென்ன? போவோம். அது சரி, புரட்சி என்பது என்ன? பெருங்கலகமா?” என்றான் எபீம்.

அதற்குள் அந்திரேய் அங்கு வந்து சேர்ந்தான். குளித்துவிட்டு வந்ததால் அவனது உடம்பெல்லாம் சிவந்துபோய் ஆவியெழும்பிக் கொண்டிருந்தது. முகத்தில் சோர்ந்த பாவம் காணப்பட்டது. அவன் ஒன்றுமே பேசாமல் எபீமோடு கைகுலுக்கிவிட்டு ரீபினுக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்தான். ரீபினைப் பார்த்ததும் லேசாகச் சிரித்துக் கொண்டான்.

”நீ ஏன் உற்சாகமே அற்றுப் போயிருக்கிறாய்?” என்று அவனது முழங்காலில் தட்டிக்கொண்டே கேட்டான் ரீபின்.

“ஒன்றுமில்லையே” என்றான் ஹஹோல்.

“அவனும் ஒரு தொழிலாளிதானா?” என்று அந்திரேயைப் பார்த்துக் கேட்டான் எபீம்.

“ஆமாம். எதற்காகக் கேட்கிறாய்?” என்றான் அந்திரேய்.

“இல்லை. அவன் இதற்கு முன் எந்த ஆலைத் தொழிலாளியையும் பார்த்ததே இல்லை. அவனுக்கு அவர்களைப் பற்றி ஒரு தனி அபிப்பிராயம்” என்றான் ரீபின்.

“எப்படிப்பட்ட அபிப்பிராயம்?” என்றான் பாவெல்.

“உங்கள் எலும்புகள் கூர்மையானவை. ஆனால் விவசாயியின் எலும்புகள் மொட்டையானவை” என்று அந்திரேயைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான் எபீம்.

“முஜிக் தன் கால்களை நிலத்தில் நன்றாகப் பதிய ஊன்றி நிற்கிறான் – நிலம் அவனுக்குச் சொந்தமில்லாவிட்டாலும், நிலத்தில் நிற்கும் உணர்ச்சி மட்டும் அவனை விட்டு நீங்குவதில்லை. அவன் பூமியைத் தொட்டு உணர்கிறான். ஆனால் ஆலைத் தொழிலாளியோ, அப்படியல்ல. அவன் ஒரு சுதந்திரமான பறவை. நிலம், வீடு என்று எந்தப் பற்றுதலும் அவனுக்கு கிடையாது. இன்றைக்கு இங்கே, நாளைக்கு எங்கேயோ? ஒரு பெண்ணின் ஆசைகூட, அவனை ஒரே இடத்தில் இருத்தி வைத்துவிட முடியாது. அவனுக்கும் அவளுக்கும் ஏதாவது ஒரு சின்னத் தகராறு வந்தாலும் போதும். உடனே அவளை விட்டு விலகி, வேறொரு இடத்தைத் தேடிப் புறப்பட்டுப் போய்விடுவான். ஆனால் முஜீக் அப்படியல்ல. இடத்திலிருந்து நகராமல் தன்னைச் சுற்றி மேன்மைப்படுத்திக் கொள்ள திரும்புவான். சரி, இதோ உன் அம்மா வந்துவிட்டாள்” என்று பேசி முடித்தான் ரீபின்.

நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக்கூடாது. பூமியையே அசைக்க வேண்டும். நாம் அசைக்கிற அமைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து உழலுகின்ற மக்களை உலுக்கி, பிடி தவறச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் அந்தப் பிடிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்…”

“சரி, எனக்கு ஒரு புத்தகம் இரவல் கொடுப்பீர்களா?” என்று பாவெலிடம் நெருங்கி வந்து கேட்டான் எபீம்.

“தாராளமாய்” என்றான் பாவெல்.

அந்தப் பையனின் கண்கள் பிரகாசம் அடைந்தன.

”நான் திருப்பித் தந்துவிடுவேன்” என்று அவன் அவசர அவசரமாக பாவெலுக்கு உறுதி கூற முனைந்தான். “எங்களூர்காரர்கள் இந்தப் பிரதேசத்துக்குத் தார் எண்ணெய் ஏற்றிக் கொண்டு அடிக்கடி வருவார்கள். அவர்கள் மூலம் கொடுத்தனுப்புகிறேன்.”

“சரி, போக நேரமாச்சு” என்று தனது கோட்டையும் பெல்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு கூறினான் ரீபின் .

“இதோ, படிக்கப் போகிறேன்” என்று ஒரு புத்தகத்தைச் சுட்டிக் காட்டியவாறு புன்னகையோடு கூறினான் எபீம்.

அவர்கள் சென்றவுடன் பாவெல் உணர்ச்சிவயப்பட்டவனாக அந்திரேயின் பக்கம் திரும்பினான்.

”இவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டான்.

”ஹூம்” என்று முனகினான் ஹஹோல். ”இரண்டு புயல் மேகங்கள் மாதிரிதான்!”

“மிகயீல் இருக்கிறானே. அவனைப் பார்த்தால் தொழிற்சாலையிலேயே வேலை பார்த்தவன் மாதிரி தோன்றவில்லை – அசல் முஜீக் ரொம்பப் பயங்கரமான ஆசாமி” என்றாள் தாய்.

“நீ இங்கே இல்லாமல் போனது ரொம்ப மோசம்” என்று அந்திரேயை நோக்கி, பாவெல் சொன்னான். அந்திரேய் மேஜைக்கு எதிராக அமர்ந்து, தன் எதிரே இருந்த தேநீர்க் கோப்பையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பாவெல் மேலும் பேசினான். ”நீ அடிக்கடி மனித இதயத்தைப் பற்றிப் பேசுகிறாயே. அவன் இதயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீ கொஞ்சமாவது பார்த்திருக்க வேண்டும். பின் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் படபடவென்று பொரிந்து தள்ளி, என்னைத் திணற அடித்துவிட்டான். அவனுக்குப் பதில் சொல்லக்கூட எனக்கு வாயெழவில்லை. அவன் இந்த மனித ராசியை எவ்வளவு கேவலமாக மதிக்கிறான்? மனித குலத்திடமே அவனுக்கு நம்பிக்கை இல்லை. அம்மா சொன்னது ரொம்ப சரி. ஏதோ ஒரு பயங்கரமான சக்திதான் அவனுள் குடிகொண்டிருக்கிறது!”

”நானும் அதைக் கவனித்தேன்” என்று உணர்ச்சியற்றுக் கூறினான் ஹஹோல். “ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு கிளர்ந்தெழுந்தால், எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு வெறும் நிலம்தான் வேண்டும்; அந்த நிலத்தை வெறுமனே போட்டிருக்கவும் அவர்கள் செய்வார்கள். எல்லாவற்றையும் கிழித்தெறிந்து விடுவார்கள்.”

அவன் மெதுவாகவே பேசினான்; அவன் மனதில் வேறு ஏதோ ஒரு சிந்தனை ஊடாடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தாய் வந்து அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

“தைரியமாயிரு, அந்தியூஷா” என்றாள் தாய்.

‘கொஞ்சம் பொறு, அம்மா’ என்று மிகுந்த பரிவோடு கூறினாள் அவன். திடீரென்று அவன் உத்வேக உணர்ச்சியோடு மேஜை மீது ஓங்கிக் குத்திக்கொண்டே பேசினான். ”அது உண்மைதான் பாவெல்! முஜீக் மட்டும் விழித்தெழுந்தால் அவனது நிலத்தைத் தரிசாகவே போட்டுவிடுவான். கொள்ளை நோய்க்குப் பிறகு மிஞ்சும் சாம்பலைப் போல, சகலவற்றையும் சுட்டெரித்துச் சாம்பலாக்கி, தான் பட்ட சிரமத்தின் வடுக்களையெல்லாம் தூர்த்துத் துடைத்துவிடுவான்!”

“அதன் பின் அவன் நம் வழிக்கு வந்து சேருவான்” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

”ஆனால் அந்த மாதிரி நடக்காதபடி பார்த்துக்கொள்வதுதான் நமது வேலை. அவனைச் சரியான பாதையில் செலுத்துவதற்கு அவனை இழுத்துப்பிடிப்பது நமது வேலை. மற்றவர்களைவிட நாம்தான் அவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள். அவன் நம்மை நம்புவான். பின்பற்றுவான்.”

‘ரீபின் கிராமத்துக்கென்று ஒரு பத்திரிகை வெளியிடும்படி சொன்னான்” என்றான் பாவெல்.

“செய்ய வேண்டியதுதான்”
”அவனோடு நான் விவாதியாமல் போனது பெருந்தவறு” என்று லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான் பாவெல்.

“பரவாயில்லை, இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தன் தலைமயிரைக் கோதிக் கொடுத்தான் ஹஹோல். “நீ உன் வாத்தியத்தையே வாசித்துக் கொண்டிரு. பூமியில் அறைந்தாற்போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத் தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள். நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை. மேலும், நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக்கூடாது. பூமியையே அசைக்க வேண்டும். நாம் அசைக்கிற அமைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து உழலுகின்ற மக்களை உலுக்கி, பிடி தவறச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் அந்தப் பிடிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்…”

படிக்க:
எச்ச ராஜாவோடு ஒரு ’ ஆன்டி இந்தியன் ’ நேருக்கு நேர் ! காணொளி
#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

“உனக்கு எல்லாமே எளிதாக இருக்கிறது அந்தியூஷா” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் தாய்.

“ஆமாம். வாழ்க்கையைப் போல்” என்றான் ஹஹோல்.

சில நிமிஷம் கழித்து அவன் பேசினாள்.

”சரி. நான் வயல் வெளியில் கொஞ்சம் உலாவி வரப்போகிறேன்.”

“குளித்த பிறகா? காற்று வேறு அடிக்கிறது. சளிப்பிடிக்கும்” என்று எச்சரித்தாள் தாய்.”

“கொஞ்சம் காற்றாடி வந்தால்தான் தேவலை” என்றான் அவன்.

“சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள். கொஞ்சம் பாடேன்!” என்றான் பாவெல்.

“வேண்டாம். நான் போகிறேன்.”

அவன் தனது உடைகளை மாட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல் வெளிக் கிளம்பினான்.

“அவன் மனம் என்னவோ சங்கடப்படுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து நீ அவன் மீது அதிகமான அன்போடு நடந்து கொள்கிறாய். அதைப்பற்றி எனக்கு மிகுந்த சந்தோஷம் என்றான் பாவெல்.

”நானா? எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. என்னவோ அவனை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று. எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.”

“உனக்கு மிகவும் அன்பான மனம், அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

”நான் மட்டும் உனக்கு – உன் தோழர்கள் அனைவருக்கும் – உதவ முடிந்தால், கொஞ்சமேனும் உதவி செய்ய முடிந்தால் எப்படி உதவுவது என்பது மட்டும் தெரிந்தால்?”

“கவலைப்படாதே, அம்மா நீ தெரிந்து கொள்வாய்.”

”எனக்கு அது மட்டும் தெரிந்துவிட்டால் அப்புறம் கவலையே இராது” என்று சிறு சிரிப்புடன் கூறினாள் தாய்.

“சரி, அம்மா. இந்தப் பேச்சை விட்டுவிடுவோம். ஆனால் ஒன்று மட்டும் ஞாபத்தில் வைத்துக்கொள். உனக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவன்.”

அவள் பேசாது சமையலறைக்குள் சென்றாள். தன் கண்களில் பொங்கும் கண்ணீரை அவன் பார்த்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பு அவளுக்கு.

அன்று இரவு ஹஹோல் வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான். வந்தவுடனேயே அவன் படுக்கச் சென்றுவிட்டான்.

“நான் இன்றைக்குப் பத்து மைலாவது நடந்திருப்பேன்.”

“அதனால் பலன் இருந்ததா?” என்று கேட்டான் பாவெல்.

”தொந்தரவு பண்ணாதே, எனக்குத் தூக்கம் வருகிறது.”

அவன் அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை.

சிறிது நேரம் கழித்து, நிகலாய் வெஸோவ்ஷிகோவ் உள்ளே வந்தான். அவனது ஆடைகள் கிழிந்து கந்தல் கந்தலாயிருந்தன. ஒரே அழுக்குமயமாகவும் அதிருப்தி நிறைந்தவனாகவும் அவன் வந்து சேர்ந்தான்.

“இஸாயை யார் கொன்றார்கள் என்று கேள்விப்பட்டாயா?” என்று பாவெலிடம் கேட்டுக்கொண்டே அவன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தான்.

”இல்லை” என்று சுருக்கமாக விடையளித்தான் பாவெல்.

“எவனோ ஒருவன் வேண்டா வெறுப்பாக இந்தக் காரியத்தில் முந்திவிட்டான். நானே அந்தப் பயலைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று இருந்தேன். நான்தான் அதைச் செய்திருக்க வேண்டும். அதற்கு நான்தான் தகுந்த ஆசாமி.”

”அந்தப் பேச்சை விடு, நிகலாய்” என்று நட்புரிமை தொனிக்கும் குரலில் சொன்னான் பாவெல்.

“நான் நினைத்தேன்’ என்று அன்போடு பேச ஆரம்பித்தாள் தாய். ‘உனக்கு மிகவும் மிருதுவான மனம் இருக்கிறது. நீ ஏன் இப்படி விலங்கு மாதிரி கர்ஜிக்கிறாய்?”

அந்தச் சமயத்தில் நிகலாயைப் பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகம் கூடக் கவர்ச்சிகரமாகத் தோன்றியது.

“இந்த மாதிரிக் காரியங்களுக்குத் தவிர, வேறு எதற்கும் நான் லாயக்கில்லை’ என்று தன் தோளைச் சிலுப்பிக்கொண்டே சொன்னான் நிகலாய். ‘நானும் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இந்த உலகில் என் இடம் எது என்று. ஆனால் எனக்கு ஒரு இடமும் இல்லை. ஜனங்களோடு பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படிப் பேசுவது என்பது எனக்குத் தெரியாது. எல்லாம் எனக்குப் புரிகிறது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எல்லாம் பார்த்து அனுதாபம் கொள்கிறேன். என்றாலும் அதை வாய்விட்டுச் சொல்லத் தெரியவில்லை. நான் ஒரு ஊமைப்பிறவி.”

அவன் பாவெலிடம் திரும்பினான்; உடனே தன் கண்களைத் தாழ்த்தி, மேஜையையே துளைத்துவிடுவது போல் வெறித்துப் பார்த்தான். பிறகு அவரது இயற்கையான குரலுக்கு மாறான மழலைக் குரலில் பேசத் தொடங்கினான்.

”தம்பி, எனக்கு ஏதாவது பெரிய வேலையாகக் கொடு. இந்த மாதிரி, எந்தவிதக் குறிக்கோளுமற்று என்னால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் வேலைகளிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். உங்களது இயக்கம் எப்படி வளர்ந்து மலர்கிறது என்பதை நான் பார்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நான் மட்டும் ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறேன். வெறுமனே மரங்களைச் சுமந்து திரிவதோடு முடிந்து விடுகிறது என் பிழைப்பு. இந்தப் பிழைப்பு ஒருவனுக்கு வாழ்வளித்துவிடாது. எனக்கு வேறு ஏதாவது கடினமான பெரிதான வேலை கொடு.”

பாவெல் அவனது கையை எட்டிப் பிடித்து அவனைத் தன்னருகே இழுத்தான்.

“சரி தருகிறேன்.”

இடையிலிருந்த மறைவுக்கு அப்பாலிருந்து ஹஹோலின் குரல் கேட்டது.

“நான் உனக்கு அச்சுக் கோக்கிற வேலை சொல்லித் தருகிறேன், நிக்லாய். உனக்கு அது பிடிக்குமா?”

நிகலாய் ஹஹோலிடம் பேசினான்:

“நீ மட்டும் எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டால் – உனக்கு நான் என் கத்தியைப் பரிசளித்து விடுகிறேன்” என்றான் அவன்.

”உன் கத்தியைக் கொண்டு உடைப்பிலே போடு” என்று கடகடவென்று சிரித்தவாறே கத்தினான் ஹஹோல்.

“இல்லை, அது ஒரு நல்ல கத்தி” என்றான் நிகலாய். பாவெலும் சிரிக்க ஆரம்பித்தான்.

“நீங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்கிறீர்கள்!” அறையின் மத்தியில் நின்றவாறே கேட்டான் நிகவாய்.

“ஆமாம் அப்பா, ஆமாம்!” என்று படுக்கையை விட்டுத் துள்ளி யெழுந்தவாறே சொன்னான் ஹஹோல். “சரி வா. வயல்வெளிப் பக்கம் உலாவிவிட்டு வரலாம். நிலா அருமையாகக் காய்கிறது. வருகிறாயா?”

“சரி” என்றான் பாவெல்.

“நானும் வருகிறேன் என்றான் நிக்கலாய். ”ஹஹோல், உன் சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.”

“நீ பரிசு கொடுப்பதாகச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான் ஹஹோல் சிரித்துக்கொண்டே.

அவன் சமையலறைக்குள் சென்று உடை உடுத்திக்கொண்டான்.

“மேலே ஏதாவது போர்வையைப் போட்டுக்கொள்” என்று அவசர அவசரமாகச் சொன்னாள் தாய்.

அவர்கள் மூவரும் வெளியே சென்ற பிறகு அவள் ஜன்னலருகே சென்று அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சுவரிலிருந்த விக்ரகத்தை நோக்கி வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்:

“”கருணையுள்ள கடவுளே! அவர்களுக்கு நல்லது செய் அவர்களைக் காப்பாற்று…”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க