த்திரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் காவிவெறி கும்பலால் போலீசு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதை நாடு முழுவதும் அதிர்ச்சியுடன் பார்த்தது. ஆனால், எந்தவித பதட்டமும் இல்லாமல் உ.பி.யை ஆளும் காவி சாமியார் ஆதித்யநாத்,  ‘பசுக்களை கொன்றவர்களை பிடித்து உள்ளே போடுங்கள்’ என ஆணையிட்டுவிட்டு,  ஒலி – ஒளி காட்சியை கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்.

கரும்புத் தோட்டத்தில் இறந்த மாட்டின் எச்சங்கள் இருப்பதாக பஜ்ரங்தள் மற்றும் இந்துவாஹினி காவி பயங்கரவாத அமைப்பினர் 400 பேருக்கும் மேற்பட்டோர் திரண்டு அருகில் இருந்த காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வன்முறை வெறியாட்டம் நடத்தினர்.  இதில், சுபோத் குமார் சிங் என்ற போலீசு அதிகாரி கற்களால் தாக்கப்பட்டு,  பிறகு சுட்டுக்கொல்லப்பட்டார். சுபோத் குமார், அக்லக் படுகொலை வழக்கை விசாரித்து வந்தவர் என்பதற்காக காவி வெறிகும்பல் திட்டமிட்டு அவரை கொலை செய்திருக்கிறது.

பட்டப்பகலில் திட்டமிட்டு நடந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு, பசுக்களைக் கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என போலீசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் ஆதித்யநாத்.

சுபோத் குமார் சிங் கொலையில் முக்கிய குற்றவாளியாக பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த யோகேஸ் ராஜ் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.  பசுவை கொன்ற இவர் அளித்த புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் 11, 12 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பசுக்கொலையில் தொடர்புடையதாகக் கூறி போலீசு அதிகாரிகள் தங்களிடம் நான்கு மணி நேரம் விசாரித்ததாகச் சொல்கிறார் இந்த சிறுவர்களின் தந்தை. திட்டமிட்டே சிறுவர்களின் பெயரை போலீசு சேர்த்திருக்கிறது என்கிறார் இவர்.

சிறுவர்களை பசுக்கொலை வழக்கில் சேர்த்திருப்பது சர்ச்சையை கிளப்பிய நிலையில், தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் (போலீசை கொன்றதாக குற்றச்சாட்டப்பட்டவர் அளித்த புகார்) விசாரித்ததாக சொல்கிறது போலீசு.

படிக்க:
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்
பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?

இந்த நிலையில் கொல்லப்பட்ட போலீசு அதிகாரியின் சகோதரி, ஆதித்யநாத்துக்கு பசு..பசு..பசு மட்டும்தான் முக்கியம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.  “அக்லக் கொலையை விசாரித்ததற்காக போலீசு சதி செய்து எங்கள் சகோதரரைக் கொன்றுள்ளது” என குற்றம்சாட்டுகிறார் அவர்.

போலீசு அதிகாரி கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கு பசுவை வைத்து கேவலமான அரசியல் பிழைப்பு நடத்தும் காவி வெறிகும்பல் தலைவன் ஆதித்யநாத்தின் செயல்பாடுகளே ஆதாரமாக உள்ளன. 11, 12 வயது சிறுவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடுப்பதெல்லாம் பாசிஸ்டுகள் ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.

செய்தி ஆதாரங்கள்: