ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு அனுமதி அளிப்பதற்கு தமிழக அரசும் துணைபோயுள்ளது. மக்களை பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றம் என அலைகழிப்பதன் மூலம் ஒரு முட்டு சந்துக்குள் நிறுத்தப்பார்கிறது எடப்பாடி அரசு.

இதனை கண்டிக்கும் விதமாகவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் தனிச்சட்டமியற்ற வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று (17.12.2018) தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது அதன் பதிவுகள்.

*****

திருச்சியில்…

மிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஸ்டெர்லைட்டை ஆலையை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் முன்பாக சிக்னல் பகுதியிலிருந்து 60 -க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை, மகஇக செயலர் தோழர் ஜீவா, ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் உட்பட பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகாலை செய்யப்பட்ட 14 பேர் உருவ படத்தை அணிந்து ஊர்வலமாக நடந்து வந்ததும், ஆர்ப்பாட்ட இடத்தில் துப்பாக்கியால் சுட்டு வீழ்ந்து கிடப்பது போன்று காட்சி படுத்தியதும், பொது மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது.

இதனால் திருச்சியின் முக்கிய சிக்னல் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அருகில் இருந்த BSNL ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நமது போராட்ட பிரசுரங்களை கேட்டு வாங்கிப் படித்தனர் மற்றும் இந்த போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்தனர்.

போலீசு மத்திய அரசின் அலுவலகம் ழுன்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி மறுத்து அனைவரையும் கைது செய்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம். தொடர்புக்கு : 94454 75157.

*****

தர்மபுரியில்…

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தருமபுரி காமராஜர் சிலை அருகில் டிசம்பர் – 17, 2018 அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

‘ஸ்டெர்லைட்டை மூடுவதுதான் எங்கள் நோக்கம்’ என பசப்பு வார்த்தை பேசும் தமிழக அரசின் போலீசு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர்களை மிகவும் கேவலமாக ஆபாச வார்த்தையில் திட்டி, தரதரவென்று இழுத்து குண்டர்களை  கைது செய்வது போல் இழுத்துச் சென்றது.

அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் இரத்தினக் குமார் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களின் கழுத்தை கொலைவெறியுடன் நெருக்கினார். “உங்களை விடமாட்டேன்டா…” என கத்திக் கொண்டே ஆபாசவார்த்தைகளில் திட்டத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் இரத்தின குமார்.

போராடும் தோழர்களை வாகனத்தில் அடைத்து ஏற்ற முற்பட்ட போது ஒரு காரில் எப்படி 40 பேர் ஏறமுடியும் என கேட்டதும்; “ஏறுங்கடா தே….பசங்களா” என ஒரு ரவுடியைப் போல நடந்துகொண்டார் இந்த இன்ஸ்பெக்டர்.

போலீசு தாக்கியதில் இரண்டு தோழர்களுக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட போலீசு தற்போது தோழர்களை தருமபுரி B1 காவல் நிலையத்தில் அடைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு : 97901 38614.

*****

கோவையில்…

கோவை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் அருகில் இன்று(17.12.2018) காலை 11 மணி அளவில் டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று ! என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், எட்டு மணிநேர தொழிலாளர் இயக்கம் உட்பட பல அமைப்புகள்  பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாசகர ஸ்டெர்லைட் ஆலையை விரட்ட தமிழக அரசு  உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் தூத்துக்குடி மக்கள் மட்டும் போராடி வெல்ல முடியாது. அவர்களோடு தமிழக மக்கள் கரம் கோர்த்து வீதியில் இறங்க வேண்டிய நேரமிது.! என அறைகூவல் விடுக்கப்பட்டது !

தமிழக அரசுக்கும் ஆலையை விரட்டுவது தான் நோக்கம் என சொல்கிறது, ஆனால் அதே நோக்கத்திற்க்காக போராடிய மக்கள் அதிகாரத்தினர் 26 பேரை தற்போதுவரை கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பபட்ட முழக்கங்கள் :

தமிழக அரசே! தமிழக அரசே !
கொலைகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டியடிக்க
தனிச்சட்டம் இயற்றிடு!

ஏற்காதே! ஏற்காதே!
ஸ்டெர்லைட்டை திறக்கச்சொல்லும்
பசுமைத் தீர்ப்பாயத்தின்
அநீதியான உத்தரவை
ஏற்காதே ஏற்காதே!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
நாசகார ஸ்டெர்லைட்டை
ஆதரிக்கும் பா.ஜ.க. அரசை
வன்மையாகக் கண்டிக்கிறோம்.

விடமாட்டோம் ! விடமாட்டோம்!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக
விரட்டாமல் ! விடமாட்டோம் !

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில்
கொல்லப்பட்ட தியாகிகளுக்கு
பதில் சொல்! பதில் சொல் !
தமிழக அரசே பதில் சொல்

தடுக்காதே தடுக்காதே
தூத்துக்குடி மக்களின்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை
தடுக்காதே! தடுக்காதே!

கோயலும் அகர்வாலும் கூட்டாளி!
கார்ப்பரேட்டும் மோடியும் பங்காளி!
நம்பாதே! நம்பாதே!
இந்த அரசைமைப்பையே நம்பாதே!

இங்கிலாந்து கம்பெனிக்காக
சொந்த நாட்டு மக்களை
சுட்டுக்கொன்றது போலீசு !
வாழ்வை அழிக்குது தீர்ப்பாயம்
இதுக்கு பெயரா ஜனநாயகம்?

ஓயாது ! ஓயாது !
கொலைகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டாமல்
மக்கள் போராட்டம் ஓயாது !

சட்டமியற்று ! சட்டமியற்று  !
நாசகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டியடிக்க
தமிழக அரசே சட்டமியற்று !

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை, தொடர்புக்கு : 95858 22157

*****

விருத்தாச்சலத்தில்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையத்தை கண்டித்தும்! சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும்! மக்கள் அதிகாரம் சார்பில் விருதையில் இனறு அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 150-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்…

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர ஒருங்கிணைப்பாளர் தோழர் வே.மா.அருள், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் கோகுல் திருஷ்டிபன், CPM.(ML) மக்கள் விடுதலை அமைப்பைச் சார்ந்த தோழர் ராமர், CPM-விடுதலை அமைப்பைச் சார்ந்த தோழர் தனவேல், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர். மணியரசன், மாணவர்களின் கல்வி உரிமைகான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் வ.அன்பழகன், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் தோழர் புஷ்பதேவன் மற்றும் மக்கள் அதிகாரம் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம், தொடர்புக்கு : 97912 86994.

*****

மதுரையில்…

ஸ்டெர்லைட் திறக்க அனுமதித்த டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அநீதியானது ஸ்டெர்லைட்டை மூட தனி சட்டம் இயற்றக் கோரி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

அதன் ஒரு பகுதியாக மதுரை மண்டலத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் மதுரை ரயில்வே சந்திப்பில் இன்று (17.12.2018) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்காக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்றார்கள். அவர்களை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் வழிமறித்த போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை.