கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நுண்கடன் நிறுவனங்களின் அட்டூழியம் தொடர்ந்து நடக்கிறது. வருமான ஆதாரங்கள் அத்தனையையும் இழந்த மக்களிடம் கடனைக் கட்டுமாறு மிரட்டுவது அவமானப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தன இந்நிறுவனங்கள். இதனைப் பொறுக்க முடியாமல் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இப்போராட்டங்களின் விளைவாக கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் 6 மாத காலத்திற்கு நுண்கடன்களை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
ஆனாலும், கலெக்டர் உத்தரவை மதிக்காத தனியார் நுண்கடன் நிறுவனங்களும், தேசிய வங்கிகளும் கடனைக் கட்டச் சொல்லி தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அரசின் 100-நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வரும் சம்பளப் பணத்திலேயே வங்கிகள் அதற்கான நுண்கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
இதனை ஒட்டி மக்கள் அதிகாரம் அப்பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் பரவலாக ”பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டாம்” என இது குறித்து பிரச்சாரம் செய்து வந்தது.
வங்கிகள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களின் தொடர் நெருக்குதல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்கள் குறிப்பாக பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு கடந்த 07-01-2019 அன்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்களைத் தடுத்து உள்ளே விட அனுமதி மறுத்தது போலீசு. இதனைக் கண்டித்து பெண்கள் அனைவரும் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களின் இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் அனைவரையும் கைது செய்தது போலீசு. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் முன்னிலை வகித்த 6 மக்கள் அதிகாரம் தோழர்களைத் தனியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தோழர்களில் நால்வரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறது போலீசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சட்டப்படியான உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்காக கைது செய்கிறார்கள் எனில் நாம் என்ன ஜனநாயக நாட்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
தொடர்புக்கு : 96263 52829