லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 2

எல். என். டால்ஸ்டாயும் நவீனத் தொழிலாளர் இயக்கமும் !

வி.இ.லெனின்
ஷ்யாவில் ஏறத்தாழ சகலப்  பெருநகரங்களிலுமுள்ள ரஷ்யத் தொழிலாளர்கள் எல். என். டால்ஸ்டாய் மரணம் சம்பந்தமாகத் தமது பிரதிபலிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்கள். உலகின் மாபெரும் எழுத்தாளர் வரிசையில் இடம் பெற்றுத் தந்து மிகவும் தலைசிறந்த பல கலைப் படைப்புக்களை உருவாக்கிய எழுத்தாளரும், நவீன அரசியல் சமுதாய அமைப்புகளின் அடிப்படை அம்சங்கள் குறித்து அளப்பரிய ஆற்றலுடன் சுய நம்பிக்கையுடன் நேர்மையுடன் பல பிரச்சினைகளை எழுப்பிய சிந்தனையாளருமான அவரைப் பற்றி ஏதாவதொரு வகையில் தமது கருத்தினை வெளியிட்டிருந்தார்கள். பொதுவாக இந்தக் கண்ணோட்டம் மூன்றாம் டூமாவின் 53 தொழிலாளர் பிரதிநிதிகள் அனுப்பி வைத்து பத்திரிகைகளில் பிரசுரமான தந்திச் செய்தியில் வெளியீடாயின.

அடிமைத்தனம் நிலவிய ஆனால் அதன் இறுதி நாள்கள் நெருங்குவது ஏற்கெனவே தெளிவாகிவிட்ட காலத்தில் எல்.டால்ஸ்டாய் தமது இலக்கிய வாழ்க்கையினைத் தொடங்கினார்.  1861-1905 என்ற அதன் இரு திருப்பு முனைகளுக்கிடையிலான ரஷ்ய வரலாற்றின் காலகட்டத்தில் டால்ஸ்டாயின் பிரதான நடவடிக்கைகள் இடம் பெற்றன. இந்தக் காலகட்டம் முழுவதிலும் நாட்டின் ஒட்டு மொத்தமான பொருளாதார (குறிப்பாக நாட்டுப்புறத்தில்), அரசியல் வாழ்வில் அடிமைத்தனத்தின் அடையாளங்கள், அதன் நேரடி மீத மிச்சங்கள் பரவிக் கிடந்தன. அதே சமயம் இந்தக் காலகட்டம் முதலாளித்துவ வளர்ச்சி, கீழிருந்து துரிதப்படுவதன், மேலிருந்து நாட்டப்படுவதன் காலகட்டமாயும் இருந்தது.

அடிமைத்தனத்தின் மீத மிச்சங்கள் எவற்றால் வெளியீடாயின? வெகுவாயும் மிகவும் தெளிவாகவும் ரஷ்யா பிரதானமாயும் ஒரு விவசாய நாடு என்ற உண்மையில் வெளியீடாயின. அந்தக் காலத்தில் விவசாயம், சீரழிந்த வறுமையுற்ற விவசாயிகளின் கரத்தில் இருந்தது. அவர்கள் காலாவதியான பழம் முறைகளைக் கையாண்டு பழைய நிலப்பிரபுத்துவ ஒதுக்கு நிலங்களில் வேலை செய்து வந்தார்கள். இந்த ஒதுக்கீடுகள் கூட 1861-ல் நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாகக் குறைக்கப்பட்டன. மறுபுறம் விவசாயம் நிலப்பிரபுக்களின் கைகளில் இருந்தது. மத்திய ரஷ்யாவிலிருந்த இவர்கள் நிலத்தை விவசாயிகளின் உழைப்பு, மர ஏர் கொண்டு குதிரைகள் மூலம் சாகுபடி செய்தார்கள். பதிலுக்கு விவசாயிகளுக்கு வெட்டி ஒதுக்கிய நிலங்கள்”54 புல்வெளிகள், நீர்ப்பாசன இடங்கள் கிடைத்தன. எல்லா வழிகளிலும் இது பொருளாதாரத்தில் பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பாகவே இருந்தது.

இந்தக் காலகட்டம் முழுவதும் ரஷ்யாவின் அரசியல் அமைப்பு நிலப் பிரபுத்துவத்தால் ஊடுருவப்பட்டு கிடந்தது. 1905-ல் மாற்றுவதற்கு எடுத்த முதல் முயற்சிக்கு முன்பாக நிலவிய நாட்டின் அரசியல் சட்டத்திலிருந்து இது துலாம்பரமாகிறது. இந்தச் சட்டம் அரசாங்க விவகாரங்களில் நிலப்பிரபுக்களின் முக்கியமான செல்வாக்கிலிருந்தும், அதிகாரிகளின் – இவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக உயர் பதவிகளில் உள்ளோர் நிலப்பிரபுக்களிடையிருந்தே வந்தவர்கள் – வரம்பற்ற அதிகாரங்களிலிருந்தும் வந்தனர்.

1861-க்குப் பிறகு இந்தப் பழைய, தந்தை வழி ரஷ்யா உலக முதலாளித்துவத்தின் செல்வாக்கின் கீழ் துரிதமாகச் சீரழியத் தொடங்கியது. விவசாயிகள் பட்டினி கிடந்தனர், இறக்கலாயினர். முன் என்றும் இல்லா எல்லா வகையிலும் நாசமடைந்தனர். நிலத்தைக் கைவிட்டு நகரங்களை நோக்கி ஓடினார்கள். சீரழிந்த விவசாயிகள் மூலம் கிடைத்த “மலிவான உழைப்பு’’ காரணமாக ரயில்வே, மில்கள், ஆலைகள் கட்டும் வேலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டது. பெருவித வர்த்தகத் தொழில் துறை முதலாளித்துவத்துடன் கூடவே பெரும் நிதி முதலாளித்துவமும் ரஷ்யாவில் வளர்ந்தது.

பழைய ரஷ்யாவின் இந்தப் பழைய தூண்கள், துரிதமாக வேதனை தரும் வகையில், தீவிரமாக அழிந்து வந்தன. கலைஞர் என்ற முறையில், டால்ஸ்டாயின் நூல்களில் சிந்தனையாளர் என்ற முறையில் டால்ஸ்டாயின் கருத்துகளிலும் பிரதிபலித்தது.

படிக்க:
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
சில பைன் மரங்களையும் ஒரு காகத்தையும் குறி பார்த்து அழித்த மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 !

கிராமிய ரஷ்யா குறித்து, நிலப்பிரபுக்கள் விவசாயிகளின் வாழ்க்கை முறை பற்றி டால்ஸ்டாய்-க்கு அபாரமான அறிவு இருந்தது. தமது கலைப்படைப்புக்களில் இந்த வாழ்க்கை பற்றிய வர்ணனைகளை அவர் கொடுத்தார். இந்த நூல்கள் உலக இலக்கியத்திலேயே  சிறந்த படைப்புக்களாக எண்ணப்படுகின்றன. கிராமிய ரஷ்யாவின் “பழைய தூண்கள்’’ அனைத்தும் தீவிரமாக அழிக்கப்பட்டன. அவரது  கவனத்தைக் கூர்மைப்படுத்தியது, தன்னைச் சுற்றி நடப்பது சம்பந்தமான அவரது அக்கறையை ஆழப்படுத்தியது, அவரது உலகக் கண்ணோட்டத்தில் அடிப்படையான மாறுதல் விளைவித்தது.

பிறப்பாலும் கல்வியாலும் டால்ஸ்டாய் மிக உயர்ந்த நிலப்பிரபு வரிசையினைச் சேர்ந்தவராவார். அவர் இந்தச் சுற்றுச்சார்பின் வழக்கமான கருத்துகளிலிருந்து முறித்துக் கொண்டார். தமது பிற்கால நூல்களில் வெகுஜனங்களை அடிமைப்படுத்தல், அவர்களது வறுமை, விவசாயிகளின், பொதுவாக நடுத்தர உரிமையாளர்  நாசமாதல், முடிமுதல் அடிவரை அனைத்து  நடப்பு வாழ்க்கையினையும் ஊடுருவி நின்றவற்றை, போலித்தனம் இவற்றை அடிப்படையாக்கிய சமகாலத்திய அரசு, சமயபீடம், சமூகப் பொருளாதார அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்துத் தாக்கினார்.

டால்ஸ்டாயின் விமர்சனம் புதிதன்று. ஐரோப்பிய இலக்கியத்திலும் ரஷ்ய இலக்கியத்திலும் உழைக்கும் மக்களின் நண்பர்கள் முன்பு சொல்லியிராத எதையும் அவர் சொல்லிவிடவில்லை. ஆனால் டால்ஸ்டாயின் விமர்சனத்தின் தனிச்சிறப்பும், அதன் வரலாற்று முக்கியத்துவமும் இந்த விமரிசனம் ஒரு மேதையான லைஞருக்கு மட்டுமே உரியதான வலிமையுடன் கிராமப்புற விவசாய ரஷ்யாவின் இந்தக் காலகட்டத்திய வெகுஜனங்களின் கருத்துகளில் ஏற்பட்டு வந்த அடிப்படையான மாறுதல்களை வெளிப்படுத்தியதில் காணக்கிடக்கின்றன.

ஏனெனில் சமகால அமைப்புகள் பற்றிய டால்ஸ்டாயின் விமரிசனம், நவீன தொழிலாளர் இயக்கத்தின் பிரதிநிதிகள் அதே அமைப்புகள் பற்றி நடத்தும் விமரிசனத்திலிருந்து மாறுபட்டது. டால்ஸ்டாயின் கருத்து ஒரு தந்தைவழி மரபினரின், பாமர விவசாயியின் கருத்தாகும். அவனது மனோ தத்துவத்தை டால்ஸ்டாய் தமது விமரிசனத்திலும் சித்தாந்தத்திலும் புகுத்தினார். டால்ஸ்டாயின் விமரிசனத்தில் “வேர்களுக்குச் செல்வதில்” மக்கள் துன்பத் துயரங்களுக்குரிய உண்மைக் காரணத்தை அறிதல் இவற்றில் எல்லாம் பேருணர்ச்சி, வலிமை, ஆவேசம் மெய்ப்படுத்தும் ஆற்றல், பசுமை, நேர்மை, அச்சமின்மை ஆகிவை சிறப்பாக விளங்கின.

நிலப்பிரபுத்துவத்திலிருந்து சுதந்திரத்தில் அடிவைத்து, இந்தச் சுதந்திரம் புதிய நகரவாசிகளின் கீழ் மட்டத்திலுள்ள மக்களுக்கு கொண்டுவரும் என்னதக்கண்ட லட்சோப லட்சம் விவசாயிகளின் கருத்துகளில் ஏற்பட்ட கூரிய மாற்றத்தை உண்மையில் வெளிப்படுத்தியது. டால்ஸ்டாய் இந்த உணர்வுகளை அப்படியே நிலைக்கண்ணாடி போன்று பிரதிபலித்தார். தமது கோட்பாடுகளில் அவர்களது பாமரத்தன்மையினை இறக்கும் செய்தார், அரசியல் வாழ்விலிருந்து விலகி நிற்றலை, அவர்களது மாயாவாதத்தை, உலகிலிருந்து எட்டி நிற்கும் “தீமையை எதிர்க்காதே” என்ற விருப்பத்தை, முதலாளித்துவத்தையும் “பணத்தின் வலிமையையும்’’ எதிர்த்த அவர்களது ஆண்மை பெற்ற பழி ஆட்டங்களைப் பிரதிபலித்தார். லட்சோப லட்சம் விவசாயிகளின் கண்டனம் அவர்களது மனக்கசப்பு – இவை டால்ஸ்டாயின் சித்தாந்தத்தில் இணைந்திருந்தன.

நவீன, தொழிலாளர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கு எதிர்த்துக் கண்டனம் தெரிவிப்பதற்கு ஏராளமானவை  உள்ளன.  ஆனால் எதைப்பற்றியும் அங்கலாய்க்க வேண்டுவதில்லை என்பதைக் காண்கிறார்கள். அங்கலாய்ப்பு அழிந்து வரும் வர்க்கங்களின் அடையாளம். ஆனால் கூலித்தொழிலாளர் வர்க்கம் தவிர்க்கவொண்ணாத வகையில் அதிகரித்து வருகிற ரஷ்யா உள்ளிட்ட எல்லா முதலாளித்துவ சமூகத்திலும் வளர்ந்து வலுப்பெற்று வருகிறது.

தீமையின் காரணத்தை அறியாத, தப்ப வழி புரியாதவர்கள் போராடும் சக்தியற்றவர்களின் சின்னமே அங்கலாய்ப்பு. நவீன தொழில்துறைத் தொழிலாளி வர்க்கம் அத்தகைய வர்க்கத்தைச் சேர்ந்ததன்று.

– லெனின்
நவம்பர் 28, 1910-ல் எழுதியது
லெனின் தொகுப்பு நூல்கள், பக்கம் – 16, பக்கம் 320 – 32

அடிக்குறிப்புகள்:

53: இது மூன்றாவது டூமாவின் சமூக – ஜனநாயகவாத பிரதிநிதிகளால் அஸ்தபோவோவுக்கு, லியோ டால்ஸ்டாயின் நெருங்கிய நண்பரும், சீடருமான வி.ஜி. செர்த்கோவுக்கு அனுப்பப்பட்ட தந்தியைக் குறிப்பிடுகிறது : “டூமாவிலுள்ள சமூக-ஜனநாயகவாத குழுவானது அதிகார பூர்வ மத குருவாதத்திற்கு எதிரான சமரசத்திற்கிடமற்ற, வெல்லற்கரிய போராட்டக்காரரும், மரண தண்டனைக்கு எதிராக தமது உரத்த குரலை எழுப்பிய கொடுங்கோலாட்சி, அடிமைத்தனத்தின் வைரியும், ஒடுக்கப்பட்டவர்களின் நண்பரும் ஆன தலைசிறந்த கலைசர் மரணமடைந்தது குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

54: கைப்பற்றப்பட்ட நிலங்கள் – ரஷ்யாவில் பண்ணை அடிமைமுறை நீக்கப்பட்ட பொழுது விவசாயிகளிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட (கைப்பற்றப்பட்ட) நிலங்கள்.

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்
ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ
1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.

முந்தைய பாகம் :

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க