ந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் 2019 – பிப்ரவரி மாதத்தின் படி 7.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2016, செப்டம்பருக்கு பிறகான காலக்கட்டத்தில் அதிகபட்சமாக பதிவாகியுள்ள இது 2018, பிப்ரவரியில் 5.9 விழுக்காடாக இருந்தது. இந்த விவரங்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE) வெளியிட்டுள்ளது.

மோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு

வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைந்த போதிலும் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக மும்பையை சேர்ந்த இச்சிந்தனை குழாமின் தலைவர் மகேஷ் வியாஸ் கூறியுள்ளார். உழைப்புச் சந்தையில் தொழிலாளர்களின் பங்கேற்பு சற்று குறைந்துள்ளதை மேற்கோளிட்டு இதை கூறினார்.  சென்ற ஆண்டு 40.6 கோடியாக இருந்த வேலையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 40 கோடியாக குறைந்து விட்டதாக அவர் கூறினார்.

இலட்சக்கணக்கான குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் உள்ள விவரங்கள் ஏனைய அரசாங்கத்தின் ஆய்வு விவரங்களை காட்டிலும் அதிக நம்பகத்தன்மை கொண்டதாக பல்வேறு பொருளாதார அறிஞர்களும் கூறுகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள மோடிக்கு இந்த ஆய்வறிக்கையின் விவரங்கள் விரும்பத்தக்கதாக இருக்கப்போவதில்லை. விவசாய உற்பத்திப்பொருட்களின் விலை குறைவு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவைகள் ஆளுங்கட்சிக்கு எதிராக எப்பொழுதுமே எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் பிரச்சினைகள் ஆகும்.

படிக்க:
வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !
♦ பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

இதற்கு முன்பு அரசாங்கம் வெளியிட்ட வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் காலாவதியாகிவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் சமீபமாக வேலையின்மை குறித்த அறிக்கையை வெளியிடாமலேயே மோடி அரசாங்கம் நிறுத்தியது. அறிக்கையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதாலேயே அதை வெளியிடாமல் நிறுத்தியதாக அரசாங்கம் சப்பைக்கட்டு கட்டியது. ஆனால் மோடி அரசாங்கத்தின் புரட்டலை அத்துறையின்  தலைமை அதிகாரி போட்டுடைத்தது மட்டுமல்லாமல் அப்பதவியிலிருந்தும் விலகி விட்டார்.

இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவாறு 2017-18-ம் ஆண்டுகளில் எகிறிவிட்டது என்று வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையிலிருந்து ஊடகங்களுக்கு கசியவிடப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையினால் 110 இலட்சம் பேர் வேலையிழந்ததாக இதே ஆய்வு நிறுவனம், 2019 ஜனவரி மாதம் வெளியிட்ட மற்றுமொரு அறிக்கை கூறியது. அதே போலவே 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மோடி ஏவிய மற்றுமொரு அஸ்திரமான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி இலட்சக்கணக்கான சிறு வணிகங்களை காலி செய்ததாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

வேலை வாய்ப்பு மற்றும் சிறு வணிகங்களில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது குறித்து எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்று சென்ற மாதத்தில் பாராளுமன்றத்தில் மோடி அரசாங்கம் கூறியிருந்தது.

பணமதிப்பழிப்பு மற்றும் GST அஸ்திரங்களால் அன்றாடம் நூறோ, இருநூறோ சம்பாதித்துக் கொண்டிருந்த ஏழைகளின் வயிற்றில் அடித்தது மட்டுமல்லாமல், படித்த இளைஞர்கள் பக்கோடா விற்பதும் ஒரு ‘பிசுனஸ்’தான் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.


நன்றி: the wire
சுகுமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க