நூலாசிரியர் மாட் விக்டோரியா பார்லோ கனடாவைச் சேர்ந்தவர். 2008-2009 தண்ணீரின் அரசியல், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பரிமாணங்களை கையிலெடுத்து இந்த உலகத்தின் தண்ணீர் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுவதற்கு எதிராக போராடிவருபவர்.
இவரது Blue covenant என்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்தான் இந்நூல். இப்புத்தகத்தில், இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவைகள் எவ்வாறு இருந்தன, அவைகளின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர்நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்தப் புத்தகத்தை வழங்கியுள்ளார் பார்லோ. (நூலிலிருந்து பக்.5-6)
ஒரு பக்கம் வலிமை மிக்க தனியார் நிறுவனங்கள் மற்றும், சர்வதேச நீர் மற்றும் உணவு கழகங்கள், குறிப்பாக முதல் உலகப் போர் அரசுகள், உலக வங்கி, சர்வதேச நிதியகம், உலக வாணிப அமைப்பு, உலக நீர் கவுன்சில் போன்ற சர்வதேச அமைப்புகளின் சொந்த நலம், இந்த சக்திகளுக்கு தண்ணீர் என்பது வெளிச்சந்தையில் விற்று வியாபாரம் பண்ணக்கூடிய ஒரு பொருள். இவர்கள் தண்ணீரின் மீதான தனியார் கட்டுப்பாட்டை அதிகப்படுத்த ஒரு விரிவான உட்கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். மற்றும் இவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக செயலாற்றுகிறார்கள். அவர்களின் கதை இங்கே சொல்லப்படுகிறது.
இன்னொரு புறம், சூழலியலாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், உள்ளூர் ஆண் மற்றும் பெண்கள், சிறிய உழைப்பாளிகள் மற்றும் தொழிலாளிகள், ஆயிரக்கணக்கான அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட போராளிகள். இவர்கள் தங்களது நீராதாரத்தின் மீதான கட்டுப்பாட்டிற்காக தண்ணீருக்கான நீதி கோரும் இயக்கம் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் என்பது மனித இனம் மற்றும் அனைத்திற்குமான பாரம்பரியச்சொத்து என்று நம்புகிறார்கள். மேலும், ஒரு பொதுச்சொத்தை தனி நபரின் சுய நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது மற்றும் கட்டணம் செலுத்த கொடுக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அந்த சொத்தை மறுக்கவும் முடியாது என்றும் இந்த இயக்கத்தினர் நம்புகின்றனர். (நூலிலிருந்து பக்.14)
1989 -ம் ஆண்டு தாட்சர் பிரிட்டன் அரசுக்கு சொந்தமான பிராந்திய நீர் அமைப்புகளை தனியார்மயமாக்கினார். இவைகள் அடிமாட்டு விலையில் விற்கப்பட்டன. ஆன்-கிறிஸ்டின் ஹோலண்ட் (Ann-Christin Holland), தங்களுடைய The Water Business என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல் இந்த விற்பனையில் கலாச்சார மற்றும் இயற்கையின் சொத்துக்களும் சேர்ந்தே விற்கப்பட்டன என்கிறார்கள். இதை வாங்கிய தனியார் நிறுவனங்கள் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பின் சொந்தக்காரர்களானார்கள். இருபது வருடங்களுக்கு எந்த போட்டியும் இல்லாமல் செயல்பட அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அவர்கள் விரும்பிய கட்டணத்தை வசூலித்துக் கொள்ளவும், தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கவும், அவர்களால் எவ்வளவு இலாபம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு இலாபம் சம்பாதிப்பதற்குமான சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள்; தண்ணீர் கட்டணம் கடுமையாக உயர்ந்தது; தனியார்மயமாக்கப்பட்ட பத்தாண்டுகளில் வரிக்கு முந்திய இலாபம் 147 சதவீதம் உயர்ந்தது. தண்ணீருக்கான கட்டணத்தை செலுத்த முடியாத இலட்சக்கணக்கான மக்களுக்கு தண்ணீர் சேவை நிறுத்தப்பட்டது…
படிக்க:
♦ தண்ணீர் தாகத்திற்கா… லாபத்திற்கா…?
♦ சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்
இங்கிலாந்தில் தண்ணீரை தனியார்மயமாக்கியது தோல்வி என்பது தெளிவாக தெரிந்தாலும், இந்த அமைப்புமுறைதான் தென்கோளப்பகுதி வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தண்ணீரை தனியார்மயமாக்கியதில் உள்ள அனுபவத்தை வைத்துக்கொண்டு தாட்சர், சர்வதேச தனியார் சந்தையில் குதிப்பதற்காக சூயஸ், வியோலியா உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கு உதவிகள் செய்தார். குறிப்பாக தேம்ஸ் நதியின் தண்ணீரை சொல்லலாம். இந்நதியின் நீரை ஜெர்மன் நாட்டின் பகாசுர நிறுவனமான RWE 2002 ஆம் ஆண்டு வாங்கியது. RWE உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார்ப்பரேட் தண்ணீர் நிறுவனம் ஆகும். (நூலிலிருந்து பக்.63-64)
உலகவங்கியில் நடப்பது…
முதல் உலக நாடுகளே உலக வங்கியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்நாடுகள் தாங்கள் முதலீடு செய்திருக்கின்ற தொகைக்கேற்ப ஓட்டுரிமையைப் பெற்றுள்ளன. அதற்கேற்ப, ஏழை நாடுகளுக்கு கடனாக வழங்கப்படுகிற 20 பில்லியன் அமெரிக்க டாலரை பெறப்போவது யார், அதைப்பெற அந்நாடுகள் ஒத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் என்னென்ன என்பதை முடிவெடுப்பதில் அமெரிக்கா (இதனைத் தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸ்) ஆதிக்கம் செலுத்துகிறது. தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 3 பில்லியன் அமெரிக்க டாலராகும். வடகோள கார்ப்பரேட் நிறுவனங்கள் தென்கோளப் பகுதியில் சந்தைகளைத் திறக்க உலக வங்கி தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதுதான் தலையாய குறிக்கோள் என்று உலக வங்கியின் குறிப்பு ஒன்று கூறுகிறது. (அமெரிக்கா தனது பங்களிப்பாக கொடுக்கும் ஒவ்வொரு டாலருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் 1.30 டாலர் அளவிற்கு ஒப்பந்தங்களாகப் பெறுகின்றன என்று நிதித்துறை உயர் அதிகாரி ஒருவர் கிண்டலாக கூறியுள்ளார்)
1993 -ம் ஆண்டுக்கு முந்திய வருடங்களிலிருந்தே உலக வங்கி தண்ணீர் தனியார்மயமாக்கத்தை ஊக்குவித்து வந்தது. அதே வருடம் நீர் ஆதாரங்கள் மேலாண்மை (Water Resource Management) குறித்த திட்டக் குறிப்பை ஏற்றுக்கொண்டது. இக்குறிப்பு ஏழை நாடுகள் தண்ணீர் சேவைகளுக்காக கட்டணம் செலுத்த “விருப்பம் இல்லாமல்” இருக்கின்றன என்று கூறியது. மேலும் தண்ணீர் என்பது திறன் வாய்ந்த, நிதி ஒழுங்கு சார்ந்த, முழு உற்பத்திச் செலவையும் மீட்டுவிடக்கூடிய ஒரு பண்டமென்றும் அந்த அறிக்கை கூறியது. (முதலீட்டுத் தொகையை மீட்டுக் கொள்வதற்காக தன் கட்டணத்தை கடுமையாக உயர்த்துவதோடு மட்டுமல்ல, முதலீட்டாளர்கள் இலாபம் சம்பாதிக்க கட்டணத்தை ஏற்றுகின்ற ஒரு திட்டம்தான் இது.) 1990-2006 -ம் ஆண்டுகளுக்கு இடை பொதுத்திட்டங்களுக்கான கடன் வசதி தனியார் திட்டங்களுக்குச் சாதகமாக தள்ளுபடி செய்யப்பட்டன. உலக வங்கி வளரும் நாடுகளில் 300-க்கு மேற்பட்ட குடிநீர் சார்ந்த திட்டங்களுக்கு நிதி உதவி செய்துள்ளது.
தண்ணீரை தனியார்மயமாக்குவதில் அடிப்படையில் மூன்று வகைகள் உள்ளன. சலுகை அடிப்படையிலான (Concession) ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய உரிமம் வழங்கப்படும். இவர்கள் இலாபம் பெற நுகர்வோர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்றனர். புதிய குழாய்கள் அமைத்தல், வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து முதலீட்டுத் திட்டங்களுக்கும் இந்த நிறுவனங்கள் பொறுப்பு. பிரிட்டிஷ் மாதிரி தனியார்மயம் என்பது இந்த சலுகை அடிப்படையிலான ஒப்பந்தம் ஆகும். ஆனால், இந்தியாவில் தீவிர சலுகை அடிப்படையிலான (Extreme Concession) ஒப்பந்தம் பின்பற்றப்படுகிறது. இதில் ஆறுகள் முற்றிலும் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன. இதை தனியார்கள் அரசின் தலையீடு இல்லாமல் இலாபத்திற்காக நடத்துகிறார்கள். இருக்கின்ற தளவாடங்களைப் புதுப்பிப்பதற்கும், பழுது பார்ப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்கும் தண்ணீரை வினியோகிப்பதற்கும் நிறுவனத்தைப் பொறுப்பாக்கும் ஒப்பந்தம் இது. ஆனால், புதிய முதலீட்டுக்கு அங்கு உள்ள அரசுதான் பொறுப்பு. மேலாண்மை ஒப்பந்தம் (Management) என்பதில் தனியார் நிறுவனம் தண்ணீர் சேவையை நிர்வாகம் செய்வதே அதன் பொறுப்பு. எந்த முதலீட்டையும் செய்யாது.
உலக மேம்பாட்டு இயக்கம் குறிப்பிடுவதுபோல் பொதுச் சொத்துக்களை முழுவதும் தனியாருக்கு விற்பனை செய்யும்போது மட்டுமே உலக வங்கி தனியார்மயமாக்கம் என்ற பதத்தை பயன்படுத்துகிறது. மேலாண்மை ஒப்பந்தங்கள், குத்தகைகள் போன்ற பெரும்பாலான திட்டங்களை விவரிக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்பு அல்லது தனியார் துறை பங்களிப்பு போன்ற குறைந்தளவிலான அரசியல் தன்மை கொண்ட பதங்களையே உலக வங்கி பயன்படுத்துகிறது. பங்களிப்பு என்பது சரிசமமான பொறுப்பும் மற்றும் ஜனநாயகத் தொனியும் கொண்டது. ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாபம் அடங்கியுள்ளதால் இந்த ஒப்பந்தங்கள் தனியார்மயமாக்கல் என்றே அழைக்கப்படுகின்றன. மக்கள் இவர்களின் “உற்பத்திப்பொருளுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால் சேவை துண்டிப்பைப் பெற வேண்டும். இவர்கள் உறுதியளித்ததற்கு மாறாக சேவைக் குறைபாடு இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது; மாற்று வழிகள் இல்லை. ஆனால், இக்கார்ப்பரேட்கள் தங்களது இலாபம் குறைய ஆரம்பித்து விட்டது என்று உணர்ந்தார்களானால் ஒப்பந்தத்தை விட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள். (நூலிலிருந்து பக்.65-67)
நூல்:நீராதிபத்தியம்
(சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்)
ஆசிரியர்: மாட் விக்டோரியா பார்லோ (Maude Victoria Barlow)
தமிழில்: சா. சுரேஷ்
வெளியீடு: எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002.
தொலைபேசி: 04259 – 226012, 98650 05084.
மின்னஞ்சல்:ethirveliyedu@gmail.com
இணையம்:ethirveliyedu.in
பக்கங்கள்: 248
விலை: ரூ 200.00 (இரண்டாம் பதிப்பு)
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க
இணையத்தில் வாங்க: noolulagam | panuval | ethirveliyedu
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277