னக்கு நினைவு தெரிந்து எந்த இந்திய பிரதமரும் ஹிட்லர், முசோலினி, இடி அமீன், காலிகூலா போன்ற கொடூர சர்வாதிகாரிகளோடு ஒப்பிடப்பட்டதில்லை. இன்று மோடி அப்படி ஒப்பிடப்படுகையில் அதனை பாஜக ஆதரவாளர்களாலேயே மறுக்க முடிவதில்லை என்பதுதான் விஷேசம். தரித்திரத்தின் பிரதிநிதியாக உள்ள மோடியின் ஆட்சிக்கு இந்த கட்டமைப்பிலேயே உள்ள கோளாறுகள் மற்றும் இந்துத்துவ வெறி ஆகியவைதான் காரணம் என்றாலும் அதில் மோடியின் தனிப்பட்ட பண்புகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. மதங்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இத்தகைய கோளாறான ஆளுமை கொண்ட நபர்களின் தேவை வரலாறு நெடுக இருந்திருக்கிறது.

மோடி ஒரு நிர்வாகத் திறனற்ற அரைவேக்காடு; சுயமாக எதையும் திட்டமிடத்தெரியாத மூடர், மேக்கப் வெறிபிடித்த மேனாமினுக்கி என்பதையெல்லாம் கடந்து அவரைக் குறித்து அச்சம்கொள்ள வேறு அபாயகரமான அம்சங்களும் இருக்கின்றன. சில கேள்விகளில் இருந்து மோடியின் ஆளுமையை பரிசீலிப்பது இங்கே பொருத்தமாக இருக்கும். (இவை மோடி பற்றிய உளவியல் மதிப்பீடு அல்ல, அப்படி செய்யவும் கூடாது. இது அவரது செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்கும்போது உருவாகும் அபிப்ராயங்கள் மட்டுமே. இவை முழுக்க உண்மையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஒருவேளை அவர் இதைவிட மோசமாகவும் இருக்கலாம். 100% சரியான அபிப்ராயங்கள் உலகில் இருக்க முடியாது என்பதை மனதில் வைத்து வாசிப்பைத் தொடரவும்)

மோடியின் தனிப்பட்ட வாழ்வு, இளமைக்காலம் ஆகியவை ஏன் இரகசியமாக இருக்கிறது? எல்லா பெரிய தலைவர்களின் வரலாறும் அதற்கான சாட்சிகளும் சுலபமாக கிடைக்கும்போது மோடியின் ஒளிவட்டத்துக்கு முந்தைய காலம் ஏன் அணுக இயலாததாக இருக்கிறது?

அவர் ஏன் திரும்பத் திரும்ப தன்னை டீ விற்றவன் என்றே அடையாளப்படுத்த வேண்டும்?

ஏன் மோடி எந்த விவகாரத்துக்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவதில்லை?

அவருக்கு நண்பர்கள் என யாராவது இருப்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? அவர் குறித்த தேவசாட்சியங்கள் யாவும் ஒரு பக்தனுக்கே உரிய பரவசத்தோடு இருக்கின்றனவே ஒழிய ஒரு இயல்பான சாமானியனை காட்டும் தரவுகளை எப்போதேனும் நீங்கள் தரிசித்திருக்கிறீர்களா?

படிக்க:
♦ தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல | மக்கள் அதிகாரம் தோழர் இராஜு உரை
♦ என்ன படித்திருக்கிறார் ஸ்மிருதி இரானி ?

எல்லாம் வல்ல சூப்பர்மேனாக காட்டப்படும் மோடி ஏன் பள்ளி கல்லூரி மாணவர்களோடு மட்டும் உரையாடுகிறார்? வாழ்நாளில் தேர்வு என்று ஒன்றை எழுதியதற்கான எந்த ஆதாரமும் இல்லாத மோடி எப்படித் தேர்வு எழுதுவது என புத்தகம் எழுதுகிறார். ஆனால், பல்லாயிரம் கோடி முதலீட்டில் தம்மை சிறந்த நிர்வாகி என காட்டிக்கொள்ளும் அவர், ஏன் அது குறித்து எதையும் பேசுவதோ எழுதுவதோ இல்லை?

அவர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் விவாதங்களில் பெருமளவு பங்கேற்றதில்லை, அதேதான் நாடாளுமன்றத்திலும். அவருக்கு மிகவும் வேண்டிய ஊடக ஆட்களை மட்டுமே ஓரிரு முறை சந்தித்திருக்கிறார். அவையும் மோடியின் ஆட்களால் முன்பே தயாரிக்கப்பட்டு கேட்க வைக்கப்பட்ட கேள்விகள். அவரது சமீபத்திய ஓரிரு பேட்டிகளை பாருங்கள். பதட்டம், மனனம் செய்த பதில்களை நினைவுபடுத்துபவனின் உடல்மொழி ஆகியவற்றை காண இயலும். குறுக்குக் கேள்விகளை அனேகமாக நீங்கள் கண்டிருக்கவே முடியாது.

கேள்விகள் மீது ஏன் இந்த முதியவருக்கு இவ்வளவு பயம்? ஜெயாவுக்கும் கேள்விகள் மீது வெறுப்பு இருந்தது, அவர் அதே வெறுப்போடு அந்த கேள்விகளை எதிர்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும்கூட அவர் கேள்விகளை கண்டு அஞ்சி ஓடியதில்லை. அப்படியானால் மோடிக்கு இருக்கும் பிரத்தியேக சிக்கல் என்ன?

மோடி மேடைகளில் பொளந்து கட்டும் முன்பு வெளிப்படுத்திய உணர்வுகளை கவனித்ததுண்டா? அதீத இறுக்கமும் இயல்பின்மையும் அவர் உடல்மொழிகளில் வெளிப்படும். அவர் மேடைகளில் காட்சியளித்த பெரும்பாலான தருணங்களில் அருகிலிருப்போருடன் இயல்பான உரையாடலை மேற்கொண்டதில்லை. ஏன்?

ஆனால் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் நடிகைகள் அருகே இருக்கையில் அவர் வெளிப்படுத்தும் பரவசம் உச்சகட்ட பாமரத்தனத்தை கொண்டிருக்கும். உண்மையில் இயல்பான மோடியை அத்தகைய தருணங்களில் மட்டுமே பார்த்திருக்க முடியும். ஏன்?

மோடி தன் மீதே நம்பிக்கையற்றவராக இருக்கிறார்..

தமது பால்யம் மற்றும் இளமைக்காலம் குறித்த நிஜத்தை மோடியே நினைத்துப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான் பிரச்சினையின் ஆரம்பம். தான் பார்த்து ரசிக்க விரும்புகிற மோடியின் பிம்பத்துக்கு பழைய மோடியின் பிம்பம் இடையூறாக இருக்கும் என அவர் கருதியிருக்கலாம் அல்லது பொதுப் பார்வையிலேயே அவர் பால்யம் பாடாவதியானதாக இருந்திருக்க வேண்டும். முதலாவது காரணம் சரியென்றால் மோடிக்கு சுயமரியாதை குறைவாக இருக்கிறது. இரண்டாவது காரணம் சரியெனில் அவர் மோசமான நடத்தை கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இரண்டுமே ஒரு தலைவருக்கு இருந்தால் அது ஆபத்தானதுதான்.

அவர் தமது பழைய வரலாற்றை பகிர விரும்பாத இயல்புடையவராக இருக்க முடியாதா என கேள்வி எழுப்புவோர் அவர் ஏன் போகுமிடமெல்லாம் தன்னை டீ விற்றவன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள வேண்டும் எனும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ ஒரு சமயத்தில் டீ விற்ற ஒரு நிகழ்வைத்தவிர வேறெதுவும் அவர் வாழ்வில் சொல்லிக் கொள்ளும்படியாக நிகழவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். (சிறுவனாக இருக்கும்போது முதலைகள் நிறைந்த சர்மிஷ்டா ஏரியை நீந்திக்கடந்து ஒரு கோயில் கொடியை மாற்றிவிட்டு வந்தார் எனும் திகைப்பூட்டும் வடையை அவரது அவரது சுயசரிதையை எழுதிய ஏண்டி மோரோ சுட்டிருக்கிறார் (நரேந்திர மோடி – எ பொலிட்டிக்கல் பயோகிராஃபி புத்தகத்தில்))

படிக்க:
♦ நீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் ?
♦ பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !

இவரது தன்னம்பிக்கையின்மையை வெறும் தனி மனித பலவீனம் என சுருக்கி புரிந்துகொள்ள வேண்டுமா என்றால் அதுவும் முடியாது. அவர் தமது மனைவியையும், வேறொரு பெண்ணையும் அராஜகமான முறையில் உளவு பார்த்திருக்கிறார். மனைவியை பேட்டி எடுக்க முயன்ற ஊடக நிருபர் ஒருவரை அவரே நேரடியாக அழைத்து எச்சரித்திருக்கிறார். ஒருவேளை மோடி அதிகாரத்தை இழந்தால் அவர் வேறெங்கேயெல்லாம் தன் வரலாற்றை மறைத்திருக்கிறார் என்பது அம்பலமாகலாம். இவற்றைக்கொண்டு நாம் அனுமானிக்கையில் “மோடி தன் ஒரிஜினல் முகத்தைக் கண்டு அவமானப்படுகிறார் அல்லது பயப்படுகிறார்” என்பது தெரிகிறது.

அவருக்கு இரக்கமோ நன்றியுணர்வோ எப்போதும் இருந்ததில்லை ..

மோடியின் பேச்சுக்களை தொகுத்துப் பாருங்கள். அவர் எப்போதும் தன்னை வளர்த்தவர்கள் பற்றி பேசியதில்லை. அவரது பேசுபொருள் அவராக மட்டுமே இருந்திருக்கிறார். மோடி அடித்துவிடுவார் என பாகிஸ்தான் பயப்படுவதாக சொல்வார், என் அதிருஷ்ட்டத்தால் பெட்ரோல் விலை குறைந்ததாக இருக்கட்டுமே என்றிருக்கிறார், என்னை கொல்ல முயல்கிறார்கள் என சீன் போட்டிருக்கிறார், அவரது தேசபக்தி பீத்தல்கள்கூட என்னிடம் இருந்தால்தான் இந்த நாடு நன்றாக இருக்கும் எனும் மறைபொருளை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கிறது. தன் மண்டையை மட்டுமே நேசிக்கும் சினிமா பிரபலங்கள்கூட தமது இரக்க உணர்வையும், குற்ற உணர்வையும், நன்றியுணர்வையும் காட்டிய தருணங்கள் இருந்திருக்கின்றன (எம்.ஜி.ஆர், ஜெ).

ஆனால் மோடியிடம் அது வெளிப்பட்டதே இல்லை. குஜராத் கலவரம் பற்றிய பேட்டியில் அவர் சொன்ன நாய்க்குட்டி உதாரணம் (நாய் சாவுக்கு கார் ஓனர் எப்படி பொறுப்பாவான் எனும் நக்கல்தான் அதில் வெளிப்பட்டது), ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என அப்போது பேசினார், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மறுநாள் இந்தியாவே பீதியில் உறைந்து தெருக்களில் அலைந்தபோது ஜப்பானில் அந்த திகிலை விவரித்து வெடித்து சிரித்தார் மோடி (காசு இருக்கும் ஆனா கல்யாணம் பண்ண முடியாது என்றார்), புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு தமது விளம்பர ஷூட்டிங்கில் இருந்தார். அவரது வெறித்தனமான வேட்டைகளில் ஒன்றான டீமானிடைசேஷன் பற்றி பேசும்போதுகூட (சமீபத்திய ஐந்து மாநில தேர்தலின்போது) வீட்டில் சாவு விழுந்தால் அதைப்பற்றியே எவ்வளவு நாள் பேசுவீர்கள் என்று சொன்னார்.

அம்மா செண்டிமெண்ட் இந்தியாவில் விற்பனையாகும் சரக்கு என்பதை சினிமா பார்த்து அவர் அறிந்துகொண்டிருக்கக்கூடும். அதனால் அம்மாவை வைத்து சில காட்சிகளில் மட்டும் அவர் நடிக்கிறார். மற்றபடி அப்பா அண்ணன்களைப் பற்றிக்கூட அவர் பகிர்ந்துகொண்டதாக எனக்கு நினைவில்லை. அவர் நண்பர்கள், அவரை அரசியலில் வளர்த்தவர்கள் என யாரையுமே அவர் குறிப்பிட்டதில்லை, குறிப்பிடவிட்டதும் இல்லை. வெறிபிடித்தது போல தன் பெயரையே உச்சரித்து தன் முகத்தையே ரசித்துக்கொண்டிருக்கும் விநோத ஜீவன்தான் மோடி (தன் பெயரை தன் வாயாலேயே அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் தலைவர் மோடியாகத்தான் இருக்கும்).

அடிமைகளின் மஹாராஜா, மஹாராஜாக்களின் அடிமை ..

மோடியிடம் ஒரு மிதமிஞ்சிய பகட்டையும் திமிரையும் நீங்கள் வெளிப்படையாகக் காணமுடியும். அவர் பயன்படுத்தும் பேனாவின் விலையே ஒன்றேகால் லட்சம், அந்த செய்தியை அவர் குஜராத் முதல்வராக இருக்கும்போதே வர அனுமதித்தார். தின்னும் சோறு முதல் அணியும் சட்டைவரை ஒவ்வொன்றின் பெறுமதியும் ஆயிரக்கணக்கான மக்கள் மாதக்கணக்கில் வயிறார சாப்பிடப் போதுமானவை. இவை குறித்து வெளிவரும் செய்திகளை அவர் மறுக்கவும் முயன்றதில்லை. தேர்தல் அல்லாத காலங்களில் அவர் பங்கேற்கும் கூட்டங்களில் அவர் அருகாமையில் இருப்போரை கண்டுகொள்ளாமல் மிதப்பாக நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பிரபலமானவை (பாரிக்கர் ராணுவ அமைச்சரான பிறகு கோவா முதல்வராக இருந்தவர் மற்றும் உடல் சவால் கொண்ட கவர்னர் ஒருவரது வணக்கத்தை அலட்சியம் செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பிரசித்தம்).

மறுபக்கம் ட்ரம்ப் போன்ற மேலைநாட்டு தலைவர்களிடமும் சினிமா பிரபலங்களிடமும் அவர் காட்டும் பணிவும் பரவசமும் நேர் எதிரானவை. தமது மஹாராஜா முகத்தை அவர் முகேஷ் அம்பானியிடமும் அவர் மனைவியிடமும் காட்டாமல் இருப்பது அவ்வளவு இயல்பாக இருக்கிறது. அவரது இந்த இரண்டு முகமுமே பாசாங்கற்றவை. அதனாலேயே அவற்றை ஆபத்தானதாக கருத வேண்டியிருக்கிறது.

எழைத்தாயின் மகனல்ல, கோழைத்தனத்தின் மகன் ..

எல்லா சர்வாதிகாரிகளும் அடிப்படையில் கோழைகள்தான், என்ன பிரச்சினையென்றால் அவர்கள் அந்த முகத்தை மறைத்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் மக்களை முச்சந்தியில் நிறுத்திவிடும். மோடி ஒரு முழுவேக்காட்டு கோழை என்பது பிரத்தியேக ஆதாரங்கள் தேவைப்படாத உண்மை. எதிர்பாராத கேள்வியை கண்டு தண்ணீரை குடித்துவிட்டு ஓடி ஒளிந்த விவகாரம் (கரண் தப்பார் பேட்டி) ஒன்றே போதும், அவர் வீரத்தின் லட்சணத்தை அறிய. மேலும் சில தரவுகள் வேண்டுமென்றால் அவர் பள்ளி கல்லூரி பிள்ளைகளிடம் மட்டும் பொளப்பதை சொல்லலாம். கோழைகள்தான் தமது பராக்கிரமங்களை குழந்தைகளிடம் மட்டும் காட்ட முயல்வார்கள். பெரியவர்கள் ஏதேனும் கேள்விகேட்டு தம்மை அம்பலப்படுத்தலாம் எனும் பயம்தான் காரணம். அதனால்தான் கோழை காமவெறியர்கள் சிறார்களிடம் மட்டும் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

மோடியின் பேச்சில் அனேகமாக அழிப்பேன், ஒழிப்பேன் எனும் பதங்களே இருக்கும். காரணம் அவர் தன்னை ஒரு வீரன் என தனக்கே நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். உண்மையில், வீரர்களும் தன்னை வீரன் என நம்புபவர்களும் மற்றும் தமது கோழைத்தனத்தைப்பற்றி கவலைப்படாதவர்களும் தன்னை வீரன் என நிரூபிக்க மெனக்கெடுவதில்லை.

ஒப்பனை + ஒத்திகையில்லாமல் மோடி இல்லை ..

மோடியில் முகத்துக்கான ஒப்பனைக்கே நாடு இதுவரை பலகோடி ரூபாய்களை செலவிட்டிருக்கும். பிரான்ஸ் பிரதமரின் மனைவிக்கு மாதம் 20 லட்சம் ரூபாய் ஒப்பனைக்கே செலவாகிறதாம். மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரது மனைவியின் இளமைக்கான ஊசிகளுக்கு மட்டுமே இரண்டரை கோடி செலவானதாக சொல்லப்பட்டது (பிரதமரின் மனைவி திருத்தமாக இருக்க வேண்டுமில்லையா என அதற்கு அவர் நியாயம் சொன்னார்). ஆகவே மோடியின் பல கோடி ‘ஃபேர் அண்ட் லவ்லி’ செலவை சட்டப்பூர்வமாக குறைசொல்ல இயலாது. ஆனால் மோடி தமது பர்சனாலிட்டிக்கே மேக்கப் போடவேண்டிய நிலையில் இருக்கிறார்.

அவருக்கு தமது சொந்த முகத்தைக் காட்ட இஷ்டமில்லை, காட்ட விரும்பும் முகத்துக்கான எந்த தகுதிகளும் இல்லை. கோழை எனும் முகத்தைக் காட்ட முடியாது. மதவெறி முகம் யாவாரத்துக்கு ஒத்துவராது. அவர் தன்னை ஒரு மாவீரன் எனவும் மலையை உடைத்து மயிரைப் பிளப்பவர் எனவும் காட்டிக்கொள்ள விரும்புகிறார். நீங்கள் சூப்பர் மேனாக இருக்க கடுமையான உழைப்பு தேவைப்படும். சூப்பர் மேனாக நடிக்க கடுமையான ஒத்திகை தேவைப்படும். ஆர்.எஸ்.எஸ்-காரன் என்றைக்கு உழைத்தான்? ஆகவே ஒத்திகை எனும் தேர்வைத்தான் அவர் எடுத்தாக வேண்டும். அவர் போட்ட எல்லா சீன்களுக்கும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. டீமோ அழுகை (என்னை உயிரோடு கொளுத்துங்கள்), ராணுவ பஜனை என எல்லாமே போதிய ஒத்திகையோடு நடத்தப்பட்ட அரங்கேற்றங்களே. அவர் லைவில் அறிவித்ததாக சொல்லப்படும் டீமோ அறிவிப்பே முன்னதாக படம்பிடிக்கப்பட்டதாக இருக்கலாம் என துறைசார் வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்தார்கள்.

படிக்க:
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”
♦ மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

இப்படி சகல அம்சத்திலும் நஞ்சான ஒரு மனிதர் எதையும் உருப்படியாக செய்ய முடியாது. நிஜ முகத்தை மறைக்க வேண்டும்; காட்ட விரும்பும் முகத்துக்கு பயிற்சி எடுத்தாக வேண்டும். தம் முதலாளிகள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டாகவேண்டும். தனக்கு கீழிருப்பவன் பேச்சை கேட்கவே கூடாது. அடுத்தவர்கள் கேள்விகளை கண்டுகொள்ளாமல் ஓட வேண்டும்; ஓடும்போதே வீரனைப்போல கத்தி சீன் போட வேண்டும். இதற்கெல்லாம் இடையிடையே வேண்டியவர்களையும் வேண்டாதவர்களையும் கண்காணிக்க வேண்டும். சுருங்கச்சொன்னால் இருப்பதை மறைக்க வேண்டும் இல்லாததை காட்ட வேண்டும். கடவுளால் மட்டுமே ஆகிற காரியத்தை மோடி செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அவரால் தவறுதலாகக்கூட நல்லது செய்ய முடியாது.

மோடியிடம் பாராட்டத்தக்க விசயங்களே இல்லையா என்றால் சிலவற்றை சொல்லலாம். ‘டெலிபிராம்டரை’ வைத்துக்கொண்டு சொந்தமாக பேசுவதுபோல பேசுவதற்கு ஒரு அபார திறமை தேவை. பல்லாண்டு பயிற்சியின் வாயிலாக அதனை அவர் கைக்கொண்டிருக்கிறார். தனக்குள்ளே விழித்திருக்கும் அடிப்படைவாத மிருகம் ஆதாரப்பூர்வமாக வெளிப்படாதபடிக்கு பூட்டிவைத்திருக்க அவரால் முடிந்திருக்கிறது. பக்காவான ஒரு கிரிமினல் அடியாளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் வேலை செய்யும் அளவுக்கு பயிற்றுவித்திருக்கிறார். இந்தியாவில் புனிதப்படுத்தப்பட்ட எல்லா அமைப்புக்கள் மீதும் மூச்சா போய், நம்மை மூக்கை பொத்திக்கொள்ள வைத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக எந்த உருப்படியான திறமையும் இல்லாத ஒரு சப்பை மனிதனும் பெரிய உயரங்களைத் தொடலாம் எனும் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

இப்படியான ஒரு ஆளுமை எப்படி தொடர்ந்து வெற்றி பெறமுடிகிறது என தர்க்கப் பூர்வமாக நீங்கள் கேள்வி எழுப்பக்கூடும். அதற்கான பதில், போதுமான பணத்தை செலவிட்டால் ஒரு கழுதையைக்கூட மோடி லெவலுக்கு உங்களால் உயர்த்த இயலும் (ஆனால் எவ்வளவு செலவிட்டாலும் கழுதையின் நற்பண்புகளை மோடியிடம் நீங்கள் வெளிக்கொணர இயலாது). இன்றைய தொழில் நுட்பத்தில் பொதுக்கருத்தைக்கூட ஒருவரால் உற்பத்தி செய்ய முடியும். ஆகவே மோடியின் எழுச்சி ஒன்றும் அதிசயமல்ல.

வில்லவன் இராமதாஸ்

9 மறுமொழிகள்

  1. பதிவு அருமை. “மோடி பற்றிய உளவியல் மதிப்பீடு அல்ல, அப்படிச் செய்யக் கூடாது” என்ற போதிலும் மோடியின் நடவடிக்கைகள் மூலம் அவரது உளவியலை மதிப்பிடவேத் தோன்றுகிறது. கட்டுரை முழுவதும் இரண்டு நிமிட திரைப்படம்போல மோடியின் முகபானைகள் கண்முன்னே வந்து மறைகிறது. வாழ்த்துக்கள்.

    ஒரு கழுதையைக் கூட மோடியின் லெவலுக்கு உயர்த்த முடியும், உண்மைதான். அதற்கு போதுமான பணபலம் இருந்தால் மட்டுமே போதாது. அதற்க ஒரு பின்தங்கிய சமூக அமைப்பும் அதைக் கட்டிக்காக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற பொறுக்கிக் கும்பலும் தேவைப்படுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

  2. இதற்கு எப்படி மறுமொழி எழுதுவது? இக்கட்டுரை என் மனதில் எழுப்பும் காட்சிப்படிமங்களை எப்படி வார்த்தைகளாக்குவது ?
    கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக,வரிசையாக அறிவுத்துறையினர் மக்களிடம் மன்றாடுகிறார்களே!அவர்களது அறிக்கைகள், வல்லுறவுக்கு ஆட்பட்ட அபலையின் கதறலுக்கு நிகராக மக்களிடம் வேண்டுகிறதே, திரும்பவும் மோடியை பதவியில் அமர்த்தாதீர்கள்!என்ன விலைக்கொடுத்தேனும் பி.ஜே.பி.யை துரத்துங்கள் என்று ஆயிரக்கணக்கில் கையெழுத்து இட்டு பெரும் குரல் எழுப்புகிறார்களே! அவர்கள் பட்டியலிடும் மோடி ஆட்சியின் அழிவுகளின் தரவுகளை நினைவுப்படுத்தினாலே நெஞ்சம் பதறுகிறது! அதே பதற்றம் இக்கட்டுரை படிக்கும்போதும் வருகிறது.
    இக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தயவு செய்து தேசீய ஊடகங்களுக்கு அனுப்புங்கள்.தமிழன் மட்டும் ஏன் விடாமல் GO BACK MODI என்று மோடியை துரத்தினான் என்று புரிந்துக்கொள்வார்கள்.

  3. ஒன்றே ஒன்று போதும் இவர் காட்டிய ” பிட்நெஸ் ” கலாட்டா … அதிகமா – பக்கம் பக்கமா எழுத தேவையில்லை …!

  4. ஒன்றே ஒன்று போதும் இவர் காட்டிய ” பிட் நெஸ் ” கலாட்டா … அதிகமா – பக்கம் பக்கமா எழுத தேவையில்லை …!

  5. இந்த வினவு தளத்தில் மற்ற எல்லோரையும் விட பெரிய ** தனமான கட்டுரைகளை எழுதுவதில் வில்லவன் ஒரு பெரிய *** என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த கட்டுரையில் என்ன பலன் இருக்க முடியும். மீண்டும் அவர்கள்தான் கூட்டணி மூலமாவது ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதுதான் நம் விசனம். இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதற்கு தமிழகத்தைச் சேர்ந்த வாழும் வள்ளுவம் நடத்தும் கட்சி கம்பெனியின் கடந்தகால பங்களிப்புதான் காரணம். அதுவும் தேசிய அளவில் கூட்டணி மூலமான பங்களிப்புதான் காரணம் என்பதை இந்த தளத்தின் எந்த கட்டுரையும் மூச்சு விடுவதில்லை. இதுதான் ஊடக தர்மம் போலும்.

    • பெரியசாமி ** அவர்களே! கட்டுரையின் கருத்தாக்கத்திற்கு பதில் இல்லை. கருத்துக்கணிப்புகள் சமைக்கப்படுபவை/உருவாக்கப்படுபவை.அதன் பொருட்டு மோடிக்கு வலிந்து சொம்படிப்பது ஏன்?வில்லவன் மாற்றுப்பார்வையில் தன் கருத்தை வைத்துள்ளார்.அதற்கு இந்தப் ****தனமான பின்னூட்டம் தேவைதானா?.எல்லாவற்றிற்கும் திமுகவை குறை சொல்லி மற்றவர்களை யோக்கிய சிகாமணிகளாக்க முற்படுவது ஏன்?

      • மோடிக்கு சொம்பு அடிப்பதால் எனக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. சொம்பு கிம்பு அடிப்பது எல்லாம் உங்களை மாதிரியான ஆட்கள்தான். வாழும் வள்ளுவம் மலை ஏறிய போது வந்த அஞ்சலிக் கட்டுரை ஒன்றே போதும். 2006 வரை தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் கல்வி முறை இருந்தது. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு போட்டித் தேர்வுகள் தான் கதி என்பதால் கிராமப்புற கீழ் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளை இந்த மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் இருந்த தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தனர். மெட்ரிகுலேஷன் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் அப்படி ஒன்றும் நேர்த்தியானவை அல்ல. ஆனால் மாநில அரசின் பாடத்திட்டத்தை காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லை என்னும் ரகத்தை சார்ந்தவை. ஆனால் அந்த மெட்ரிகுலேஷன் பாடத்திட்டமும் பத்தாம் வகுப்பு வரை தான். பிளஸ் 1 பிளஸ் 2 ஆகியவற்றுக்கு மாநில அரசின் பாடத்திட்டம் தான் கதி. அப்படி இருக்கும்போது பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்த அந்த மெட்ரிகுலேஷன் பாடத் திட்ட முறையை ஒழித்துக் கட்டினால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி பூத்துக் குலுங்கி விடும் என்று எவனோ வாழும் வள்ளுவத்தின் காதில் ஊதி விட்டான். உடனடியாக ஒழிக்கப்பட்டு சமச்சீர் கல்வித் திட்டம் எனும் பெயரில் ஒரு அரைகுறையான குப்பையான கல்வித் திட்டம் தமிழக மாணவர்களின் தலையில் கட்டப்பட்டது. அப்போதே அதுகுறித்து பல கல்வியாளர்கள் எச்சரித்தனர். எல்லாமே போட்டித் தேர்வுகள் என்றாகிவிட்ட இந்த காலத்தில் இந்த மாதிரியான பாடத்திட்டம் தமிழகத்தின் எதிர்காலத்தையே பாழ்ப் படுத்திவிடும் என எச்சரித்தனர். ஆனால் அது அப்போதைய ஆட்சியால் காதில் வாங்கப்படவில்லை. அதனுடைய பின் விளைவு பத்தாண்டு காலம் கழித்து தமிழகத்தின் தலையில் இடியாக இறங்கி இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அருகி வருவதற்கு சமச்சீர் கல்வித் திட்டம் என்னும் இந்த குப்பை திட்டம் முக்கிய காரணம். ஆனால் அப்போது இந்த அரைகுறை திட்டத்தை ஆதரித்து இந்த வில்லவன் மாதிரியான ஆட்கள் எப்படி எல்லாம் கட்டுரை தீட்டினார்கள் தெரியுமா. சரியான கருத்து கொண்டவர்களை இவர்கள் எப்படியெல்லாம் வசைபாடினார்கள் தெரியுமா. மாற்றுப்பார்வை என்பது துறை சார்ந்த அரசியல் சாராத வல்லுநர்களால் மட்டுமே முன்வைக்கப்பட முடியும். இவர்கள் மாதிரியான ஆட்களால் அல்ல. இதே வினவு தளத்தில் வக்கு கிக்கு என்றெல்லாம் கருத்து சொல்லக் கூடிய ஒருவர் இருக்கிறார். அவரை இன்னும் காணோம். வந்து ஏதாவது உளறிக் கொட்டினால் பரவாயில்லை.

  6. இப்படி ஒரு கோணத்திலும் மோதியைப் பார்க்க வேண்டியது அவசியம் தான்.பாசிஸ்டுகள் ஜனநாயக வேடம் தரிக்கும் போது இவையெல்லாம் தேவைப்படுகிறது.எந்தக் கூச்சமும் இல்லாமல் பொய்களை அனாயாசமாகச் சொல்வதில் மோடியை அவரது சீடர்கள் அப்படியே பின்பற்றுகிறர்கள்.மோடியின் நூற்றுக்கணக்கான கெட்- அப் கள் சமூக வலைத் தளங்களில் வலம்வருவது அவர்களாலேயே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம்.மோடி இடதுகைப் புழக்கம் உள்ளவர்.அதுகூட ஒரு ஸ்டைல்தான்.முகவிலாசமும் உடல் மொழியும் ஒட்டிப் பிறந்தவை.அதை சூழலுக்கு ஏற்ப மற்றிக்கொள்வது தான் நடிப்பு.அதில் கைதேர்ந்தவர் மோடி என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்துகொள்ளும் அளவுக்கு நடித்திருக்கிறார்.இதை அடையாளங் காட்டியதால் அவரது பக்தர்களுக்குத்தான் இக்கட்டு.காலத்தே வந்த நல்ல மதிப்பீடு…தமிழ்ச் சமுதாயத்தால் மதிக்கப்படாத ஒருவர் பற்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க