நாடு முழுவதும் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக்கொள்கை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மட்டுமல்லாது மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில்  மக்கள் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்ப்பை இரு நாட்களாக #stophindiimposition என்ற ஹேஷ் டேக் மூலம் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்தார்கள். கடும் எதிர்ப்பின் காரணமாக இந்தியை திணிக்கும் வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதிலும் மழுப்பலாக, இந்தி கட்டாயமல்ல, விருப்பப் பாடமாக இருக்கும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதை கவனப்படுத்தியும் பலர் சமூக ஊடகங்களில் எழுதியுள்ளனர். இந்தி திணிப்பை தொடர்ந்து விடாப்பிடியாக செய்துகொண்டிருக்கும் மத்திய அரசை தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்கிற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்…

அசோக்குமார் தவமணி:

இந்தி திணிப்பு என்னும் பூதம் இன்னும் விலகிவிடவில்லை!

ஏற்கனவே வெளியான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழிப்பாடமாக இந்தி இருக்கும் என்பதும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது கட்டாய இந்தி திணிப்பு என்று தமிழகம் தீவிரமாக எதிர்த்ததால், இன்று அதில் சில மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மூன்றாவது மொழிப்பாடமாக இந்தி கட்டாயம் இல்லை என்றும், அது விருப்பப்பாடமாக இருக்கும் என்றும் திருத்தப்பட்டுள்ளது. இந்தி கட்டாயம் இல்லை என்றதால் இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என்பது போல் கொண்டாடப்படுகிறது. இந்தி கட்டாயம் என்பதிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றப்பட்டாலும். மும்மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்ல. அப்படியென்றால், இந்தி திணிப்பு என்னும் அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை என்பது தான் உண்மை.

மும்மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால், புதிய கல்விக்கொள்கை ஏற்கப்பட்டால், தமிழகத்தில் தற்போது இருக்கும் இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கையாக மாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். எடப்பாடி அரசு இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று அறிவித்தாலும், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று எப்படி நீட் விவகாரத்தில் நிகழ்த்ததோ அது போன்று நிகழவே சாத்தியம் அதிகம்.

மும்மொழிக் கொள்கை என்பது மறைமுக இந்தி திணிப்பு தான். மும்மொழிக் கொள்கைபடி, தமிழகம் மூன்றாவது மொழிப்பாடம் எது என்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சமஸ்கிருதம் (நவீன மொழியில் வருமா என்று தெரியவில்லை), பிரெஞ்சு, ஜெர்மானியம் என்று பல மொழிகள் விருப்பப்பாடமாக இருந்தாலும், பாஜகவின் அடிமை எடப்பாடி அரசு, இந்தியையே தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது. மக்களின் மனநிலையும் அதனையொட்டியே இருக்கும்.

பள்ளியளவில் தேர்ந்தெடுக்க வாய்ப்பளித்தாலும், எல்லையோர மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர அனைத்தும் இந்தியையே தேர்ந்தெடுக்கும். இதற்கு மிகமுக்கியமாக சொல்லப்படப்போவது, இந்தி மொழி தவிர மற்ற மொழிகளில் போதிய ஆசியர்கள் இல்லை என்பதுவே.

இந்தி ஆசிரியர்கள் என்றால் அது பார்ப்பனர்களாக மட்டுமே இருப்பார்கள். தகுதி என்ற அடிப்படையில் பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இதில் முற்றிலும் புறக்கணிக்கப்படுவார்கள். தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மாறுதல்கள் இதனை மனதில் கொண்டுதான். இந்தி மொழி திணிப்பு என்பதோடு இதில் பார்ப்பனர்கள் மட்டுமே வேலைவாய்ப்புகளை பெறுவார்கள். இதனால் ஏற்படப்போகும் விளைவை சிந்தித்துப் பாருங்கள்.

ஆக, இந்தி மொழி திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், மும்மொழிக் கொள்கையை முழுவீச்சில் எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் இருமொழிக்கொள்கையை நீட்டிப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியம். அது தான், இந்தி மொழி கட்டாயமில்லை என்று கூறிவிட்டார்களே என்று விட்டுவிட்டால், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்தி திணிக்கப்படும் என்பது உறுதி. எடப்பாடி அரசு கொடுக்கும் உறுதிமொழி என்பது காற்றில் எழுதப்படுவது. தொடர்ந்து நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

படிக்க:
♦ கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

வில்லவன்:

கட்டாய இந்திக்கு (சில விளக்கெண்ணெய்கள் அது “கட்டாய இந்தி அல்ல” என வியாக்கினம் செய்வார்கள், பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது இளவரசி ஆகிவிடும் என சாதிப்பவர்கள் அவர்கள்) பின்னால் இருக்கும் மோடியின் கருணை…

இனி ஏழைகளுக்கு உயர்கல்வி கிடைக்காது. ஆகவே அவர்கள் கொஞ்சம் இந்தி படித்தாலாவது வடக்கே போய் முறுக்கு சுட்டாவது பிழைக்கலாம்.

அரசு வேலை மற்றும் ஓரளவு சம்பளம் கிடைக்கும் தனியார் வேலைகள் இனி வட இந்தியனுக்கே.. மிடில் கிளாஸ் மொத்த சொத்தையும் உயர் கல்விக்கு செலவிட்டு நொடித்துப் போயிருக்கும். ஆகவே மிடில் கிளாஸ் பிள்ளைகள் இங்கு பணியாற்றும் இந்திக்காரர்களிடம் இந்தியில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்.

இப்படி தொலைநோக்கோடு மோடி எடுத்த முடிவிது. எல்லாரும் ஒருமுறை மோடிலூயா சொல்லுவோமா, மோடி, மோடி, மோடி.

செ. அன்புச்செல்வன்:

தென்னக மாநிலங்களில் இந்தி இல்லையாயினும் மும்மொழிக்கொள்கை கைவிடப்படவில்லை. அதாவது, ஆங்கிலம், தமிழுடன் இன்னொரு மொழியைக் கட்டாயம் (வேற்றுநாட்டுமொழி என்கிறது திருத்தப்பட்ட வரைவறிக்கை) படித்தே ஆகவேண்டுமாம்.

வெளிநாட்டு மொழிகளில் புலமையும் பட்டமும் பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமனம் செய்து நம்மூர் பள்ளிகளில் மூன்றாம் மொழி சொல்லிக்கொடுக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

ஆகவே, இது ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் போல…. எப்போதும் போல புறவாசல் வழியாக இந்தியைப் புகுத்தும் முயற்சியே அன்றி வேறெதுவும் இல்லை. பள்ளிகளில் வேற்றுநாட்டுமொழி கற்பிக்கும் ஆசிரியர் இல்லை… ஆகவே, வேறு வழியில்லை இந்திதான் சந்தையில் இருக்கிறது, டப்பிய மூடிக்கிட்டுப் படிங்கடா என்று சொல்லப்பட்டு உள்ளே நுழைக்கவே துணிந்திருக்கிறார்கள்…. நாம் விழித்துக்கொண்டே ஆகவேண்டும்.

அ. மார்க்ஸ்:

கட்டாய இந்திக் கல்வி என்பதில் இன்று செய்யப்பட்டுள்ள மாற்றம் உண்மையில் மாற்றம்தானா இல்லை தமிழர்கள் காதில் பூ சுத்தும் வேலையா?

இந்தித் திணிப்பிற்கு தென்னகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகளின் விளைவாக இன்று மோடி அரசு முன்னதாக வெளியிட்ட கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்துள்ளது.

மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள கஸ்தூரிரங்கன் குழு, இந்தி பேசாத மாநிலங்களைப் பொருத்தமட்டில் இந்த மூன்று மொழிகளில் ஒன்று “இந்தி” எனச் சொல்லி இருந்தது.

தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் இதை எதிர்த்தன அதை ஒட்டி இந்தி கட்டாயம் என்பதிலிருந்து இப்போது பின்வாங்கியுள்ளது. ஆனால் மும்மொழித் திட்டத்தில் மாற்றமில்லை எனக் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.

முந்தைய அறிவிப்பில் கற்றுக் கொள்ள வேண்டிய மூன்று மொழிகளில் “இந்தி அல்லது ஆங்கிலம்” கட்டாயம் என்பதில் இப்போது ‘இந்தி’ நீக்கப்பட்டுள்ளது. அனால் மூன்று மொழிகள் கட்டாயம் என்பது தொடர்கிறது.

அதில் ஒரு மொழியில் இலக்கியத் தரத்தில் திறன் இருக்க வேண்டுமாம். இது தவிர ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், சீனம், ஜெர்மன், ஜப்பானிய மொழி என்பதுபோல ஒரு வெளிநாட்டு மொழியும் secondary level வரும்போது கற்றுக் கொள்ள வேண்டுமாம் (உருது அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் “என்பது போல ஒரு வெளிநாட்டு மொழி” என்பதை முன்னிட்டு அதுவும் இருக்கும் என நம்பலாம்).

எப்படியும் ஆங்கிலம், தாய்மொழி தவிர மூன்றாம் மொழி கட்டாயம் எனவும் பிற நாட்டு மொழி ஒன்றைக் கற்க secondary level -ல் வாய்ப்புள்ளது என்கிறபோதும் தென்னக மாணவர்கள் மூன்றாவது மொழியாக எதைத் தேர்வு செய்வார்கள்? அது இந்தியாகத்தானே இருக்க முடியும்? ஆக இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதுதானே?

நண்பர்கள், கல்வியாளர்கள் சிந்திக்கவும். மொழிகளை விரும்பிக் கற்பது வேறு. இப்படித் திணிப்பதை என்ன சொல்வது?

சுபாஷினி சிவா:

ஒரு பக்கம் ‘பள்ளில படிச்ச algebra வாழ்க்கைக்கு உதவுதா’ ‘social science தான் சோறு போடுதா’ ‘ தமிழ் இலக்கணத்து படிச்சு எதுக்காச்சு’ ‘ குழந்தைகளுக்கு முன்ன மாதிரி விளையாட நேரமேயில்ல. எப்ப பாரு படி படினுட்டு’ என்றெல்லாம் பேசியவர்கள் இன்று பல்டி அடித்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அளிப்பது வியப்பாக இருக்கிறது.

சிந்திக்கவும் தமிழகத்தில் இருப்பவர்களோடு பேசவும் தமிழ்மொழி அறிவு வேண்டும். உலகத்தோடு உறவாட, உரையாட அனைத்திற்கும் ஆங்கிலம் இன்றியமையாதது. மூன்றாம் மொழியறிவு என்பது ஆடம்பரம் தான். ஆமாம் ஆடம்பரம் தான்.

பல மொழிகள் கற்பதன் பயன்பற்றி நன்கறிவேன். அதில் அனைவருக்கும் விருப்பமும் தேவையும் இருக்கிறதா என்பது தான் கேள்வி. ஆடம்பரத்திற்காக கற்கும் மொழியை தனிப்பட்ட முறையில் அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப விரும்பிய நேரத்தில் விரும்பிய அளவில் படித்துக் கொள்ளலாம். அதை விடுத்து பள்ளியில் ஐந்து ஆண்டு படித்து கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்று திணிக்கத் தேவையில்லை.

ஏற்கனவே இருக்கும் பாடச் சுமையில் குழந்தைகள் இதையும் படித்துத் துன்புறத் தேவையில்லை. அவர்களுக்கு வாழ்வில் தேவைப்படும் காலகட்டத்தில் தேவைப்படும் மொழியைக் கற்றுக் கொள்வார்கள். குறிப்பாக AI வளர்ந்து வரும் காலத்தில், சும்மா சுத்திப் பார்க்க போனா தேவைப்படும் என்று எல்லாம் ஒரு மொழியைக் கற்க வேண்டிய நிலை வராது. அதற்கு மீறிய விருப்பமும் தேவையும் இருப்பவர்களுக்கு ஐந்தாண்டில் பயிற்றுவிக்கப்படும் ஆரம்ப நிலை மொழியறவு போதாது. அதை விடப் பெரிய சிக்கல், படிக்கும் அந்த மூன்றாம் மொழி தான் அவர்களுக்கு பின்னாளில் தேவைப்படும் என்று சொல்லவும் முடியாது.

தமிழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சும்மா நம்முடைய வீம்பிற்கு கட்டாயமாக இன்னொரு மொழியைப் பயிற்றுவிக்கத் தேவையில்லை.

அதைவிட முக்கியமான ஒன்று என்னவென்றால், மூன்றாம் மொழி விருப்ப மொழியாக இருக்கும் என்பது கண்துடைப்பே. ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்கள் தேர்வு செய்யவில்லை, கற்பிக்க ஆளில்லை என்று சொல்லி மூன்றாம் மொழிகளின் எண்ணிக்கையைப் பள்ளிகள் குறைத்துவிடுவர். பெரும்பாலான பள்ளிகள் மூன்றாம் மொழியாக இந்தியை மட்டுமே மாணவர்கள் மீது திணிப்பார்கள்.

அதனால் தான் மூன்று மொழிப் பாடத்திட்டமே எதிர்க்கப்பட வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் பயின்று கொள்ளலாம். வேண்டுமென்றால் விடுமுறை நாட்களில் வேற்று மொழிகளுக்கு பாசறைகள் அமைத்து அரசே கற்றுத் தர முன்வரலாம். அதில் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் சேர்ந்து பயன்பெறலாம்.

தயவு செய்து இன்னொரு தேவையில்லாத ஆடம்பரப் பாடத்தை மாணவர்கள் மீது திணித்து தேவையான பாடங்களில் இருந்தும், அவர்களின் பொழுது போக்கிலிருந்தும் அவர்களை திசைதிருப்ப வேண்டாம். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பள்ளியை மட்டம் போட்டுவிட்டு நீட்டுக்கு பயிற்சிக்குப் போவார்கள். மற்ற குழந்தைகள் தான் இன்னொரு பாடத்தையும் சேர்த்துப் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஸ்வரா வைத்தி:

நாங்க ஹிந்திய திணிக்கலையே, அவங்களா விரும்பி படிக்கறாங்க என்று நம்ப வைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது!

சௌக்கிதார் ச்சோர் என்பது இது தான். இந்தி கட்டாயமில்லை ஆனால் கட்டாயம் மாதிரி தான்.

விழியன்:

தென் மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இந்தி கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற செக்‌ஷனில் இந்தி என்ற வார்த்தையை நீக்கி இருக்கின்றார்கள். ஆனால் மும்மொழி கொள்கை அப்படியேத்தான் இருக்கின்றது.

தமிழ், ஆங்கிலம் + வேறு விருப்பமான பாடங்களை படிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும். மூன்றாம் பாடம் கற்பிக்க எந்த மொழியில் அதிக ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

கன்னடம், மலையாளம், மராத்தி, பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளை தேர்ந்து எடுக்கலாம், ஆனால் ஆசிரியர்கள்?? ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு காலியாக இருக்கின்றன? ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பிற மொழி ஆசிரியராவது தேவை. அரசின் தேர்வு ஹிந்தியாகத்தான் இருக்கும். பிற மொழி ஆசிரியர்கள் கிடைப்பார்களா என்ற நடைமுறை சிக்கல் ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் மூன்றாம் மொழியாக ஒன்றினை கற்றிட அவ்வளவு தேவை இருக்கின்றதா?

உண்மையிலேயே மூன்றாம் மொழி குழந்தைகளின் தேர்வாக இருக்க முடியுமா? ஏற்கனவே நடைமுறையில் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் இந்த மூன்றுமொழி கொள்கை உள்ளது ஆனா 90% அந்த மூன்றாம் மொழியாக இந்தி மட்டுமே உள்ளது. ஏனெனில் மற்ற மொழி புலமை பெற்றவர்கள் இங்கே குறைவு, வரவழைப்பதும் மிகச்சிரமமே.

ஒரு வேளை முன்வாசல் வரமுடியாமல் பின்வாசலை தேர்ந்தெடுத்துள்ளார்களோ?

இரு மொழியே போதுமானது.

Recruitment of teachers for language teaching: In localities where there is a shortage of teachers who speak a given language, special efforts will be made, and special schemes rolled out, to recruit teachers (including retired teachers) to that locality who speak that language. There will be a major nationwide effort and initiative for the development of teachers of Indian languages.

இதன் மூலம் பயனடையப்போகின்றவர்கள் யார்?

படிக்க:
♦ தமிழில் தேசியக் கல்விக் கொள்கை 2019 – பிடிஎஃப் டவுண்லோடு
♦ உங்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் என்ன மொழியில் கற்கிறார்கள் ? கருத்துக் கணிப்பு

நியாண்டர் செல்வன்:

கிமு 4ம் நூற்றாண்டு: தேசிய மொழி மகதம் படியுங்கள்

கிபி 5ம் நூற்றாண்டு: தேசிய மொழி பிராகிருதம் படியுங்கள்

கிபி 12ம் நூற்றாண்டு: தேசிய மொழி பாரசிகம் படியுங்கள்

கிபி 1800: தேசிய மொழி ஆங்கிலம் படியுங்கள்

கிபி 2019: தேசிய மொழி இந்தி படியுங்கள்

இவனுங்க ஐநூறு வருடத்துக்கு ஒரு தேசிய மொழியை மாத்திகிட்டிருப்பானுங்க. அதை எல்லாம் உக்காந்து படிச்சிகிட்டிருக்க முடியுமா? முதல்ல நீங்க உருப்படியா ஒரு மொழில நில்லுங்க.

யமுனா ராஜேந்திரன்:

பிஜேபி அரசு என்பது மூர்க்கத்தனமான ஒரு கருத்தியலை முன்னெடுக்கும் அரசு. அதனை எவரும் ஒரு போதும் மறக்கக் கூடாது. அவர்கள் தலித் வாக்குகளைக் கோருகிறார்கள். சிறுபான்மையினரிடம் நம்பிக்கையை உருவாக்கவேண்டும் என்கிறார்கள்.

செயலில் என்ன செய்கிறார்கள்? அன்றாடம் இவர்களுக்கு எதிராகச் செயல்படுவது அதே கட்சியின் தலைமையும் தொண்டர்களும்தான். சொல் ஒன்று செயல் ஒன்று என்பதே அவர்களது பாணி. யுனிட்டி அப் இன்டியன் லாங்குவேஜஸ் என ஒன்று இல்லை. திராவிட மொழிக்குடும்பம், பிறிமொழிகளின் குடும்பங்கள் எனவே உண்டு. மேல்கண்ட அறிக்கையில் மொழி என பிற மொழிகள் ஒப்புமை காணக் குறிப்பாக பெயர் சொல்லபட்டிருக்கும் ஒரே மொழி சமஸ்கிருதம். ஆதாரம், கட்டமைப்பு எனச் சமஸ்கிருதத்துடன் பிறிமொழிகளை ஒப்பிடுவது அரசின் திட்டம். இப்போது அரசியல் பிரச்சாரத்திற்கு இந்தித் திணிப்பு இல்லை எனும் இவர்களது திட்டவட்டமான மொழிக் கொள்கை இதுதான். புழக்கடை வழியில் சமஸ்கிருதத்தின் வழி இவர்கள் நுழையப் பார்க்கிறார்கள்..

அப்பணசாமி:

மிக அதிகமாகக் குதிக்காதீர்கள்… இந்தி கட்டாயம் இந்தி பேசாத ஏனைய மாநிலத்தில், திருத்தம் வந்துவிட்டது.. என்பவர்கள் கவனத்திற்கு.. மாற்றப்பட்ட வரைவு சொல்வது இதுதான்… இன்னமும் கடக்க வேண்டிய தூரமும் களமும் நெடிது…

Course on the Languages of India: Every student in the country will take a fun course on “The Languages of India” sometime in Grades 6-8. In this course, students will learn about the remarkable unity of most of the major Indian languages, starting with their common phonetic and scientifically-arranged alphabets and scripts, their common grammatical structures, their origins and sources of vocabularies from Sanskrit and other classical languages, as well as their rich inter-influences and differences. They will also learn what geographical areas speak which languages, get a sense of the nature and structure of tribal languages. They will learn to say a few lines in every major language of India (greetings and other useful or fun phrases), and a bit about the literature (e.g. simple poetry or major uplifting works from a representative and diverse set of authors) of each. Such a class would give them both a sense of the unity and the beautiful cultural heritage and diversity of India, and would be a wonderful icebreaker their entire lives as they meet people from other parts of India.

வினோத் குமார் ஆறுமுகம்:

சூழ்ச்சி… முதலில் நீங்கள் ஏதாவது ஒரு ஹிந்திய மொழியை கற்கலாம் ஹிந்தி கட்டாயம் இல்லை என்பார்கள்.

அடுத்து பள்ளிகளில் ஹிந்திக்கு மட்டும் ஆசிரியர்களை நிறப்பிவிட்டு பிற மொழிகளுக்கு ஆசிரியர்கள் போட மாட்டார்கள். இந்த நிலையில் பள்ளியின் என்ன நாடக்கும் என்று தெரியாதா, ஹிந்திக்கு மட்டும் தான் ஆசிரியர் இருக்கிறார் என மற்ற மொழி விருப்ப மாணவர்களை ஹிந்தி வகுப்புக்கு கட்டாயம் அனுப்பிவிடுவார்கள்.. சோலி முடிஞ்சிது…

ஆ.ஜே. ராஜராஜன்:

தமிழ்நாட்டில் இந்திய தேசிய விடுதலை போராட்டத்தால் ஊக்கம் பெற்ற ஒரு தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளுக்கு காந்தி, நேரு, இந்திரா, நேதாஜி என பல வடப்பெயர்களை வைத்திருப்பார்கள். நம் மாமா பெயரோ, பெரியப்பா, சித்தப்பா பெயரோ இப்படி இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் அதிகம் தாக்கம் பெற்றது பெரியாரின் சமூக சீர்த்திருத்த போராட்டம். அதில் பார்பனிய எதிர்ப்புடன் சமஸ்கிருத எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு என பல இருந்தது. இதனால் ஊக்கம் பெற்ற ஒரு தலைமுறையினர் தங்கள் பிள்ளைகளுக்கு தனித்தமிழில் பெயர் வைக்க ஆரம்பித்தனர். அழகு தமிழில் பெயர்களை வைக்க ஆரம்பித்தனர். ஆனால், பெரியாரோ மொழியைத்தாண்டி பெயரில் புரட்சியை செய்தார். ஆண், பெண் பாலின வேறுபாடுகள் இல்லாத வகையிலும், புரட்சியின் குறியீடாகவும் ரஸ்யா, மாஸ்கோ என பெயர்களை சூட்டியவர் பெரியார்.

இப்போது எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், இன்று காலை இருப்பெயர்களை பார்த்தேன். ஒருவரின் பெயர் ராஷ்டிரபதி. இன்னொருவரின் பெயர் செல்வம். ஒன்று தூய வடநாட்டுப்பெயர். இன்னொருவருக்கு தமிழ்ப்பெயர். இதில் முரண் என்னவென்றால், ராஷ்டிரபதி சாதி மறுப்பாளராக இருக்கிறார். செல்வம் மோடி-அமித்ஷா பக்தனாக இருக்கிறார்.

ஆகவே, பெயரை வைத்து அரசியல் செய்த தமிழர்கள் இன்று பெயரை கடந்தும் அரசியல் செய்கிறார்கள் என்று புரிகிறது.

அஜயன் பாலா:

வட இந்தியாவில் பலருக்கு தமிழே தெரியவில்லை. எனக்கு ரொம்ப ஆச்ச்ர்யம். இந்தியாவின் பழமையான மொழியைக் கூட கற்றுக்கொள்ளாமல் எப்படி இந்தியர்கள் என தங்களை கூச்சமில்லாமல் சொல்லிக்கொள்ள முடிகிறது. தமிழ் மொழி பேசி ஒரு மாநிலமே உயரும்போது இந்தியாவே உயர தமிழை பாடமாக நாடு முழுக்க. அமல் படுத்துவதுதான ஒரேவழி

விஜயானந்த்:

இந்திய ஒன்றியம் ஹிந்தி திணிப்பின் மூலம் அதன் முடிவை நெருங்குகிறது. மொழி சிறுபான்மையினரின் மொழியை அழித்து அவர்களை ஹிந்தி கணக்கில் வைப்பதென்பது தேன் கூட்டில் கல்லறிந்து விட்டு வேடிக்கை பார்ப்பது.

யோ. திருவள்ளுவர்:

திருத்தம் செய்த கல்விக்கொள்கை பெரிதாக எதையும் மாற்றவில்லை. மும்மொழி கொள்கை எதிர்க்கப்பட வேண்டும். தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியா முழுமையும் ஒற்றைக்கல்வி முறையை திணிப்பதையும், டில்லியின் அதிகாரத்திற்குள் கல்வி முழு கட்டுப்பாட்டில் வருவதையும் ஏற்க கூடாது. கல்வி அந்தந்த மாநிலங்களில் அதிகாரத்திற்குட்பட்டதாக மாற்றப்பட வேண்டும். இது மொழி தொடர்பானது மட்டுமல்ல.

தோழர் கார்த்திக்:

மூன்றாவது மொழி கற்றுகொள்ள வேண்டுமென்பதற்கு தேவை என்ன ? ஆங்கிலத்தை படிக்கவேண்டுமா ஆங்கிலம் அறிவியல்மொழி, பிசினஸ் மொழி. ஹிந்தியோ தமிழை விட எந்தவிதத்திலும் கூடுதலான மொழியல்ல. மொழியென்பது தேவையினடிப்படையில் தெரிந்துகொள்ள வேண்டியவிடயம் அவ்வளவே #stophindiimposition

மகுடேஸ்வரன்:

“மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமில்லை, மூன்றாவது மொழியாக உங்கள் விருப்ப மொழி எதுவோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறினாலும் நாம் மகிழ்வதற்கில்லை. அது இருமொழிக் கொள்கைக்கு எதிரானது.

இருமொழிக் கொள்கையைத் தகர்க்கும் எவ்வாய்ப்பும் கல்விப்புலத்தில் நமக்குத் தேவையில்லை. மூன்றாவது மொழியாக விருப்ப மொழி ஒன்று எனில் எத்தனை மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் இருப்பார்கள் ? இது பொய் வாக்குறுதியாக முடியும்.

மூன்றாவது மொழியாக நாம் வங்காளத்தையோ, அசாமியையோ கற்கப் போவதில்லை. அறிவிக்கப்படாத கமுக்கமாக இந்தி மொழியைத்தான் தேர்ந்தெடுக்க நேரும். அதனால் இருமொழிக் கொள்கைக்கு எதிரான எதுவும் இந்தியைப் புகுத்தலே ஆகும். கல்விக்கூடங்கள் மொழி இறக்குமதிச் சாலைகள் அல்ல.

தாய்மொழிக் கல்வியும் (தமிழ்) தொடர்புமொழிக் கல்வியும் (ஆங்கிலம்) என இருமொழிகளைக் கற்றால் நமக்கு மிகை. அது போதும். அதற்குமேல் மொழிப்பாடத்தில் காலம் செலவழிக்க ஒன்றுமில்லை. வேண்டிய மொழிகளை வேண்டியவாறு கற்பதற்கு இன்று இணைய வழிமுறைகள் இருக்கின்றன. ஆயிரம் காணொளிகள் கிடைக்கின்றன. கல்வித்திட்டம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைக்கவும் வேண்டா. சரிதானே ?

படிக்க:
♦ வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் !
♦ தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?

சிவபாலன் இளங்கோவன்:

இந்தி திணிப்பு என்பது வெறும் மொழி பிரச்சனை மட்டுமல்ல. ஒரு பண்பாடு என்பதே மொழியில் அடிப்படையிலானது. ஒரு பண்பாட்டை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் மைய சரடாக இருக்கும் மொழியை அழிக்க வேண்டும். வேறு எப்படி ஒரு பண்பாட்டை சிதைத்தாலும், மொழி என்னும் பசை இருக்கும் வரை அது மீண்டும் ஒட்டிக்கொள்ளும்.

திராவிடப் பண்பாடு என்பதுதான் இன்றைய சூழலில் ஆரியப் பண்பாட்டின் முதல் எதிரி. இந்தியை திணிப்பதன் வழியாகன் இந்தப் பண்பாட்டை அழித்து ஆரியப் பண்பாட்டை இந்தியா முழுமைக்கும் கட்டமைக்க முடியும். அதனால் இந்தி திணிப்பு என்பது ஒரு சித்தாந்த போரின் தொடக்கம்.

இது ஒரு சித்தாந்த போர் என்பதை நாம் உணர்ந்தால் தான் இதை எதிர்த்து தீவிரமாகப் போராட முடியும். இதை வெறும் மொழிப் பிரச்சினை அல்லது பிஜேபி தமிழ்நாட்டின் மீது காட்டும் வன்மம் என்று சுருக்கிப் பார்த்தால் இதன் தீவிரத்தை நாம் உணர முடியாது. ஆரியம் பிஜேபி என்னும் ஒரு கருவியின் வழியாக திராவிட சித்தாந்தத்தின் மீது தொடுக்கும் போர் என்றே நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மண்ணில் ஒவ்வொருமுறை ஆரியம் தலை தூக்கும் போதும் அதை திராவிடமே எதிர்த்து வந்திருக்கிறது. இப்போதும் அந்த வேலை திராவிடர்களாகிய நமக்கே இருக்கிறது. #TNAgainstHindiImposition


தொகுப்பு : அனிதா