பாஜகவினருக்கு மேற்கு வங்கத்தில் கருப்பு தினம் ! பாஜகவை எதிர்ப்போருக்கு இந்தியா முழுவதிலுமே கருப்பு தினம் !

செய்தி : கடந்த பாராளுமன்ற தேர்தலை ஒட்டி மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் கட்சிகளுக்கிடையிலான வன்முறைகள் நடந்து வருகின்றன. வங்கத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை எப்படியாவது பிடித்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் பாஜகவினர், மத்திய அரசு உதவியோடு வன்முறைகளை திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த மோதலில் இரண்டு பாஜக –வினரும், ஒரு திரிணாமூல் கட்சிக்காரரும் கொல்லப்பட்டார்கள். இதை கருப்பு தினமாக அனுசரிக்க முனையும் பாஜகவினர், கொல்கத்தாவில் போலிசாரோடு மோதி வருகின்றனர்.

நீதி : இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், முற்போக்கு அரசியல் பிரிவினர் அன்றாடம் கொல்லப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வருவதைப் பார்க்கும் போது நாம் தினசரி இந்தியாவில் கருப்பு தினம் கொண்டாட வேண்டியிருக்கும்.

♠ ♦ ♣

கொலையிலும் வன்புணர்ச்சியிலும் பேதம் பார்க்கும் காவி நீதி!

செய்தி : பத்தாயிரம் ரூபாய் கடனை பெறுவதற்காக அலிகாரில் இரு வயது குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கைது செய்யப்பட்டவர்கள் முசுலீம்கள் என்பதால் அவர்களை உயிருடன் கொளுத்த வேண்டும் என்று இந்துமதவெறியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

நீதி : கதுவாவில் சிறுமி ஆஃசிபாவைக் கொன்ற பாஜகவினரை விடுதலை செய்யுமாறு அதே இந்துமதவெறியர்கள் போராடுகின்றனர். இந்துமதவெறியர்களைப் பொருத்தவரை நீதிக்கும் காவி என்றொரு நிறமுண்டு!

♠ ♦ ♣

உத்திரப் பிரதேசம்: குடும்பத்தினர் முன்னால் வன்புணரப்பட்ட 12 வயது தலித் சிறுமி!

செய்தி : உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு தலித் சிறுமி கொடூரமாக வன்புணரப்பட்டாள். பாதாளச் சாக்கடை தொடர்பாக ஏற்பட்ட ஒரு சச்சரவில் அந்த தலித் குடும்பத்தை பழிவாங்க நினைத்த ஆறு கயவர்கள் 12 வயது சிறுமியை அவளது குடும்பத்தினர் முன்னிலையில் வன்புணர்ந்திருக்கின்றனர். பதைபதைத்துப் போய் எதிர்க்க வந்த குடும்பத்தினரை அடித்து போட்டிருக்கிறது அந்தக் கும்பல்!

நீதி : இதுதான் காவி ரவுடி ஆதித்யநாத்தின் ராமராஜ்ஜியம்!

♠ ♦ ♣

கதுவா கும்பல் வன்புணர்ச்சி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!

செய்தி : ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் எட்டு வயது சிறுமியை கும்பலாய் வன்புணர்ந்து கொலை செய்த கொடுமை இந்தியாவையே உலுக்கியது. குற்றவாளிகளை பாதுகாக்க பாஜக ஊர்வலம் போன கொடுமை, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வழக்கில் ஒரு மைனர் சிறுவனை உள்ளிட்டு எட்டு பேர் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். பதன்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு குறித்த தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.

நீதி : காவிகள் ஆளும் நாட்டில் காவிகளே குற்றவாளிகளாய் இருப்பதால் நிச்சயம் தூக்குத் தண்டனை இருக்காது. நிறைய ஓட்டைகளோடு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு பின்னர் மேல் முறையீட்டில் காவி பயங்கரவாதிகள் தப்பிப்பார்கள். காவி ஆண்டால் நீதி மட்டும் தப்பிப் பிழைக்குமா என்ன?

♠ ♦ ♣

எழுத்தாளர், நடிகர்  கிரிஷ் கர்னாட் மறைந்தார்

செய்தி : பிரபல நடிகரும், நாடக ஆசிரியரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கிரிஷ் கர்னாட் இன்று (10.06.2019) பெங்களூருவில் மறைந்தார். தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார்.

நீதி : திறமை வாய்ந்த இந்த படைப்பாளியை சில விதிவிலக்குகள் தவிர பிற தமிழ் மற்றும் இந்தி சினிமா படைப்பாளிகள் பலர் வீணடித்துள்ளனர்.

கற்பூரத்தின் வாசனை தெரியாத திரை உலகில் காலந்தள்ளிய கிரீஷ் கர்னாட் அது குறித்து பெரிதும் வருந்தவில்லை. 1998-ம் ஆண்டில் ஞானபீட விருது பெற்றவர் கிரீஷ் கர்னாட். அவருக்கு நம் அஞ்சலிகள்!

♠ ♦ ♣

யோகி ஆதித்யநாத்தை எவர் எதிர்த்தாலும் .பியில் கைது, சிறை!

செய்தி : உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைப் பற்றி ஆட்சேபிக்கத்தக்க கருத்துக்களை தெரிவித்தார்கள் என்று ஒரு பத்திரிகையாளர், ஒரு டி.வி சானலின் ஆசிரியர், அதன் உரிமையாளர் ஆகிய மூவரும் ஏற்கனவே கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தற்போது நான்காவதாக ஒருவர் சமூக வலைத்தளங்களில் ஆதித்யநாத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தார் என்று கோரக்பூரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நீதி : ரவுடி ஆதித்யாநாத் ஆண்டால் கருத்துச் சுதந்திரம் குழி தோண்டி புதைக்கப்படும்!

♠ ♦ ♣

திருட்டுக் கும்பலுக்கு இரட்டை தலைமை வேண்டாமாம்!

செய்தி : அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை வேண்டாம் ஒரே ஒரு தலைமைதான் தேவை என, மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா திடீரென போர்க்கொடியை உயர்த்தியுள்ளார்.

நீதி : மாமூல் வாங்கும் ரவுடி கும்பலுக்கு ஒரு தலைவன்தான் இருக்க முடியும் என்ற விதியை ராஜன் செல்லப்பா கோருகிறார்.

♠ ♦ ♣

மோடியின் கொழும்பு அஞ்சலிக்கு போட்டியாக ராஜபக்சே குஜராத்துக்கு வருவாரா?

செய்தி : இலங்கைக்கு அரசு முறை பயணமாக சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சர்ச்சுகள் மற்றும் ஓட்டல்களில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில், தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

நீதி : அப்போ 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்த மகிந்த ராஜபக்சே அகமதாபாத் வருவாரா?

♠ ♦ ♣

மழைமேகத்தை அறியாத இந்திய ரேடார்கள் மாலத்தீவுகளுக்கு அர்ப்பணிப்பு

செய்தி : இந்தியா உதவியுடன், மாலத்தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள, கடலோர கண்காணிப்பு ரேடார் திட்டத்தை, மோடி மற்றும் அந்த நாட்டு அதிபர் சோலிஹ் துவக்கி வைத்தனர்.

இதைத் தவிர, மாலத்தீவுகள் ராணுவத்துக்கான பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தனர்.

நீதி : மழைமேகங்கள் இருந்தால் இந்திய ரேடார்கள் வேலை செய்யாது என்ற மோடியின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பு தெரிந்துமா மாலத்தீவு இந்த ரேடார் திட்டத்தை ஏற்றது?!

♠ ♦ ♣

திருப்பதியில் அதானியின் நண்பர் சாமி தரிசனம்.

செய்தி : இரண்டாவது முறையாக பிரதமரானதைத் தொடர்ந்து முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார். அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

சுமார் 10 நிமிடங்கள் வரை வழிபட்ட பிரதமருக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோடிக்கு கோயில் பிரசாதமும், வெங்கடாசலபதி – பத்மாவதி தாயார் புகைப்படம் வழங்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

நீதி : அதானியின நண்பர் பணக்காரக் கடவுளான வெங்கடாசலபதியை தரிசித்தார். பணம் பணத்தோடுதான் சேரும்.

♠ ♦ ♣

இலண்டன் ஓவல் மைதானத்தில் திருடன் மல்லையா!

செய்தி : இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை காண இலண்டன் ஓவல் மைதானத்திற்கு வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை நோக்கி, திருடன் என ரசிகர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீதி : ஒரு திருடனுக்கு கிரிக்கெட் விளையாட்டு பார்க்கக் கூட உரிமை இல்லையா? பொதுத்துறை வங்கிப் பணத்தை ஏப்பம் விட்டவர் என்பதால் சிக்சருக்கும், பௌண்டரிக்கும் கை தட்டக்கூடாதா என்ன?