சட்டிஸ்கர் பழங்குடிகள் தங்களுடைய போராட்டத்தின் மூலம் அம்மாநிலத்தின் தந்தவாடா பகுதியில் உள்ள பைலாடிலா மலைப்பகுதியில் அமைய இருந்த அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை அமைய விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அம்மக்களின் தொடர்ச்சியான ஆறு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சுரங்கம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
இரும்புத்தாது சுரங்கப் பின்னணி :
இம்மாநிலத்தில் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் 2014-ம் ஆண்டு அங்குள்ள கிராம சபை மூலமாக இந்த சுரங்கத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய போராட்டத்தில் பங்கெடுத்த பழங்குடிகள் அந்த கிராம சபை என்பது ஒரு மோசடி. கிராம சபைத் தீர்மானத்தில் 104 பேர்தான் கையொப்பமிட்டுள்ளனர். ஆனால் நாங்கள் 600 வாக்காளர்கள் உள்ளோம். இது எப்படி ஒரு கிராம சபைத் தீர்மானமாக இருக்க முடியும் என்கிறார்கள்?
வனத்துறை கடந்த 2015-ம் ஆண்டு 315.813 ஹெக்டர் பரப்பளவில் பைலாடிலா மலைப் பகுதி எண் 13-ல் இரும்பு தாது சுரங்கம் எடுப்பதற்கு அனுமதி வழங்கியது. இந்த 13 பிரிவு மலைப்பகுதியில் 25 கோடி டன் இரும்புத்தாது இருப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சி நிறுவனமும், மாநில அரசின் சட்டிஸ்கர் கனிம வளர்ச்சி நிறுவனமும் (51:49 என்ற பங்கின் அடிப்படையில்) சேர்ந்து கூட்டு நிறுவனமாக NCL என்ற நிறுவனத்தை உருவாக்கியது. பின்னர் 2018 டிசம்பரில் 25 வருட குத்தகைக்கு அதானி குழுமத்திற்கு (MDO –Mineral development cum Operator) இந்த மலைப்பகுதி எண் 13 வழங்கப்பட்டது.
இது கடந்த ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவசரமாக அக்குழுமத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டிஸ்கரின் முன்னாள் பா.ஜ.க முதலமைச்சர் ராமன் சிங் ஆட்சியின்போது அதிகாரவர்க்கத்தின் தலையீட்டின் பேரில் இந்த குத்தகை வழங்கப்பட்டிருக்கிறது.
இச்சுரங்கத் திட்டத்திற்காக இக்காடுகளில் சுமார் 25,000 மரங்களை வெட்ட வேண்டியதிருக்கும். இதுவரை சுமார் 10,000 மரங்கள் வெட்டப்பட்டு இருக்கின்றன. சுரங்கத்திற்காக சாலை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைப்பெற்று வந்தது.
சட்டிஸ்கர் பழங்குடிகளின் நம்பிக்கை :
பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள். “எங்கள் தெய்வமான பீத்தோர் ராணி இந்த மலையில் வாழ்கிறார். பீத்தோர் ராணி எங்கள் வன தேவதை. அவர் எங்கள் தெய்வம் நந்தராஜின் துணை. எங்கள் கடவுள் நந்தராஜும், பீத்தோர் ராணியும் இந்த மலைகள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் ஒவ்வொரு பாடலிலும் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்.” என்று பழங்குடிகள் போராட்டத்தின் போது தெரிவித்தனர்
படிக்க:
♦ தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
♦ ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !
பைலாடிலா மலைப்பகுதியில் உள்ள மற்ற இடங்களில் பல வருடங்களாக NMDC மூலம் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தாலும், இந்த 13 எண் மலைப் பகுதியில் தங்கள் தெய்வம் வாழ்வதாக நம்புவதால், அவர்கள் இந்த மலைப்பகுதியில் தாது வெட்டி எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறுகிறார்கள்.
மேலும் புதியதாக NCL என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டதும், மலையின் குத்தகையை அதானி குழுமத்திற்கு கொடுத்ததும், பழங்குடிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.
சட்டிஸ்கர் பழங்குடிகளின் போராட்டம் :
தந்தவாடா, சுக்மா, பிஜப்பூர் மாவட்டங்களில் உள்ள, 200 கிராமங்களிலிருந்து திரண்ட சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பழங்குடிகள் தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தின் (NMDC) முன்பு சங்க்யூத் பஞ்சாயத் சமிதி என்ற அமைப்பின் கீழ் ஜூன் 7-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.
NMDC யிலிருந்து சுமார் 60 கீ.மீ. தூரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை தங்கள் தலையில் சுமந்து கொண்டு, நடந்தே NMDC வாயிலுக்கு வில், அம்புகளோடு வந்தடைந்தனர்.

NMDC சோதனைச் சாவடியை மறித்தும், இரும்புத்தாது சுரங்கத் தொழிலாளர்களை வனப்பகுதிக்கு உள்ளே அனுமதிக்காமலும் போராடியுள்ளனர். இந்தப் போராட்டத்தை கண்டு பயந்த சட்டிஸ்கர் மாநில அரசு, பழங்குடிகளின் தலைவர்கள் மற்றும் பஸ்தர் காங்கிரஸ் மக்களவை எம்.பி தீபக் பாஜ் ஆகியோரிடம் நடத்திய பேச்சுவார்த்தை மூலம், தற்காலிகமாக இரும்புத்தாது சுரங்கம் சம்பந்தமான அனைத்து விதமான வேலைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. சட்டிஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் யோகி பழங்குடிகளுக்கு ஆதரவாக போராட்டக்களத்திற்கு வந்துள்ளார்.
சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதை தடுக்கவும், அப்போது இருந்த கிராம சபை எடுத்த உத்தரவிற்கா விசாரணை கமிட்டி அமைக்கவும் சட்டிஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.
அதானி குழுமத்திற்கு வழங்கிய குத்தகையை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக பூபேஷ் கூறுகிறார். NMDC என்பது மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் மாநில அரசின் கீழ் மட்டும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்கிறது சட்டிஸ்கர் மாநில அரசு. இதில் என்ன சிறப்பம்சம் என்றால் NCL-ன் இயக்குநர்களில் ஒருவராக பூபேஷ் பாகல் இருக்கிறார்.
ஜனதா காங்கிரஸ் சட்டிஸ்கர் கட்சியைச் சேர்ந்த அமித் ஜோகி பூபேஷ்க்கும், அதானி சகோதரர்களுக்கும் இடையே நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தையை சட்டிஸ்கர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார்.
படிக்க:
♦ அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !
♦ ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !
தந்தவாடாவில் பல்லிளிக்கும் அரசு கட்டமைப்பின் தோல்வி :
- கிராம சபை என்ற அரசு உறுப்பு எவ்வாறு புரையோடி உள்ளது என்பது அது வழங்கிய ஒப்புதல் மூலம் தெளிவாகி உள்ளது. மற்றும் அதை எவ்வாறு எளிதாக வளைக்க முடியும் என்பதற்கான ஒரு உதாரணமாக இது இருக்கிறது.
- பா.ஜ.க அல்லது காங்கிரஸ் என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு சூறையாட அனுமதி வழங்குவதில் போட்டிதான் நடக்கிறது என்பதும் இதில் தெளிவாகிறது.

தந்தவாடா எஸ்.பி. அபிசேக் பல்லவ் தாங்கள் போராட்டக் களத்தில் மாவோயிஸ்ட்டுகளின் துண்டறிக்கைகளை கண்டறிந்து உள்ளதாகவும், மாவோயிஸ்ட்டுகள் போராட்டத்தை தூண்டுவதாகவும் கூறியுள்ளார்.
சங்க்யூத் சர்பந்த் ஜன் சங்கர்ஸ் சமிதி என்ற அமைப்பின் தலைவர், நாங்கள் எப்போதல்லாம் எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோமோ அப்பொழுதெல்லாம் அவர்கள் இதை வழக்கமாக சொல்வார்கள். நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக, எங்கள் காடுகளுக்காக, பூமிக்காக, தெய்வத்திற்காக போராடுகிறோம் என்கிறார்.
தந்தவாடாவில் நிறைந்து இருப்பது கனிம வளங்கள் மட்டுமில்லை! பீத்தோர் ராணியும், பழங்குடி மக்களின் போராட்டச் சிந்தனையும்தான்!!
பரணிதரன்
செய்தி ஆதாரம் :
♦ Why is Bhupesh Baghel silent on his alleged meeting with Adani officials?
♦ Chhattisgarh mining protests continue on Day 5
♦ Chhattisgarh stops iron ore mining at in Bailadila after tribal protests
♦ After protests by tribals Chhattisgarh stops mining in Bailadila hills
♦ Dantewada Tribal Protest Enters Fifth Day Against Adani Mining on Hill