சாமில் குடியேறிய வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் பொருட்டு குடிமக்கள் பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இதன்படி குடிமக்கள் அல்லாதோர் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுடைய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இது நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் முசுலீம்களை வெளியேற்ற ’இன வெறுப்பின்’ அடிப்படையில் கொண்டு வரப்பட்ட மிக மோசமான சட்டம் என்கிற விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்திய அரசின் மிக உயரிய விருதுகளைப் பெற்றவர்களும்கூட ‘சட்ட விரோத குடியேறிகள்’ என்ற பெயரில் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர். ஏறக்குறைய நூறு பேர் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டதால் நேர்ந்த மனஉளைச்சலில் மரணமடைந்தனர்.

இந்த நிலையில், இக்கொடுமையான வழியை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்துடன் பதவியேற்றுள்ள இந்துத்துவ அரசு செயல்பட்டு வருகிறது. அசாமில் உள்ளதுபோல கர்நாடகத்தில் அடுத்து ‘சட்ட விரோத குடியேறிகளை’ வெளியேற்ற தடுப்பு முகாம் அமைக்கப்படும் என பேசியுள்ளார் மத்திய உள்துறை இணை அமைச்சர்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி., பி.சி. மோகன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், “கர்நாடக அரசு தடுப்பு மையங்களை உருவாக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.  இந்தப் பணிக்குத் தேவையான போலீசு அதிகாரிகள், மற்ற கட்டமைப்பு வசதிகள் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன” என தெரிவித்தார் அவர்.

கர்நாடகத்தில் எத்தனை ‘வெளிநாட்டவர்’ இருக்கின்றனர் என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சகம், “இதுவரை 143 வழக்குகள் ‘சட்டவிரோத வெளிநாட்டவர்’ வங்காள தேசத்தவர்கள் மீது பதியப்பட்டுள்ளன. இவர்களில் 114 பேர் கர்நாடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்’ எனக் கூறியிருக்கிறது.

சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்ற தடுப்பு முகாம்களை ஏற்படுத்தவும் அவர்களை கண்காணிக்கவும் வேண்டும் என கர்நாடகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2009, 2012, 2014, 2018 ஆண்டுகளில் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் உள்துறை அமைச்சகத்தின் பதில் தெரிவிக்கிறது.

படிக்க:
ஆதார் மேனியா : ஆதார் இல்லாமல் சாகக் கூட முடியாதா ?
தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?

மத்திய உள்துறை அமைச்சகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிநாட்டினர் (தீர்ப்பாய) உத்தரவு 1964-ல் திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிட்டது. முன்னதாக, வெளிநாட்டினர் சட்டம், 1946-ன் படி நபர் வெளிநாட்டவரா இல்லையா என்பதை முடிவு செய்யவும் கருத்து கேட்கவும் தீர்ப்பாயத்திற்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிடலாம்.  திருத்தப்பட்ட உத்தரவில் மத்திய அரசுடன், மாநில அரசு, யூனியன் பிரதேச நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி ஆகியோருக்கும் இந்த அதிகாரம் உள்ளதென சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டவர் என எவர் மீதும் முத்திரை குத்தும் அதிகாரம் கீழ்மட்டத்தில் இருக்கிறவர்கள் வரை பரவலாக்கப்பட்டுள்ளது. அதாவது, பசுப் பாதுகாப்பு கும்பல் போல, ‘வெளிநாட்டவர்களை’ கண்டுபிடிக்கவும் ஒரு கும்பல் கிளம்பும். அந்தக் கும்பல் அளிக்கும் புகாரின் பேரில் மேற்கண்ட உத்தரவின்படி உள்ளூர் அளவிலேயே ‘நடவடிக்கை’ பாயும்.

அனிதா
நன்றி: sabrangindia