த்திவரதர் தரிசனத்தில் சராசரி மக்கள் சிலரை வி.வி.ஐ.பி வரிசையில் அனுமதித்ததாக ஒரு போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு கொதிக்கும் கலெக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. கலெக்டரிடம் போலீஸ்காரர் மன்னிப்பு கேட்டு கெஞ்சும் காட்சியும் அதில் வருகிறது. மத உணர்வு நிரம்பிய ஒருவருக்கு கலெக்டரின் செயல் தவறில்லை என்று தோன்றலாம். ஆனால் அடிப்படை மனித அற உணர்வு நிரம்பிய ஒருவருக்கு நிச்சயம் ஒரு சிறு தவறுக்கு வழங்கப்படும் அதிகப்படியான தண்டனையாகத்தான் அது தோன்றும்.

காமிராக்களுக்கு மத்தியில், போலீசை மிரட்டும் காஞ்சிபுரம் கலெக்டர்.

அந்த போலீஸ்காரரின் செயலுக்கு அவரை கூனிக்குறுக செய்து அவமானப்படுத்தி உள்ளார், கலெக்டர். உச்சபட்சமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனையை அங்கேயே அறிவித்து மிரட்டுகிறார். கலெக்டரின் ஆவேசம் வீடியோ பதிவு செய்யப்பட்டு பின்னர் அது அதிகளவுக்கு பகிரப்படுவதால் கூடுதல் அவமானப்படுத்தலை அந்த போலீஸ்காரர் சந்தித்து வருகிறார்.

ஓரிரு வாரங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி  மாணவர்கள் சிலர் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மாணவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கையை உடைத்தது போலீஸ். பின்னர் மாவு கட்டு போடப்பட்ட கரங்களுடன் மாணவர்கள் தோன்றும் வீடியோ காட்சி மாலையில் வெளியானது. சில சமூக வலைதள கணக்காளர்கள் குதூகலமாக அதை பரப்பினார்கள். சமூக வலைதளத்தில் அது பேசுபொருளாகவும் ஆனது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சமூக ஒழுங்கை மீறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி விடுகையாக அது கருதப்பட்டது.

போலீசு ரவடிகளால் கை உடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.

இந்த தண்டனைகளின் உள்ளியல்பு 18–ம் நூற்றாண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய தண்டனை முறையை ஒத்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரத்தை மக்கள் முன்னால் காட்சிப்படுத்துவதன் மூலம் மொத்த சமூகமும் குற்றமிழைக்க காத்திருப்பது போன்ற ஒரு எண்ணத்தை அது ஏற்படுத்துகிறது. தனக்கு விதிக்கப்பட்ட சமூக அந்தஸ்தை மீற நினைத்தால் என்ன நடக்கும் என்ற விளைவு பற்றிய எச்சரிக்கையை விடுக்கிறது. என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியின்படி தள்ளாட்டம் கொண்ட ஒரு முதிர்ந்த ஜோடியை தான் வி.வி.ஐ.பி வரிசையில் அந்த போலீஸ்காரர் அனுமதித்துள்ளார். நல்ல சமாரியன் செயல்தான் அது. அதற்கு சனாதன தர்மத்தில் எந்த மதிப்பும் இல்லை.

பெண் அல்லது புலி? நூலின் முகப்பு அட்டை.

இயேசு சிலுவையில் ஏற்றப்பட்டது, சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதும் கூட மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட தண்டனை நிறைவேற்றம்தான். மத்தியகால தண்டனை முறையை நகைக்கும் ஒரு அங்கத சிறுகதையாக ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டனின் ‘பெண் அல்லது புலி?’–ஐ (The Lady or the Tiger) கொள்ளலாம். ஒரு அரைக்காட்டுமிராண்டி மன்னன் தனது ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்கள் செய்யும் தவறுகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பான். குற்றம் சாட்டப்பட்ட நபர் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். பின்னர் அந்த நபரின் வயது மற்றும் சமூக தகுதிக்கேற்ப ஒரு பெண் தேடப்படுவார். குற்றத்தின் தீவிரத்துக்கேற்ப புலியும் கொண்டு வரப்படும்.

தண்டனை நாளின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு மைதானத்துக்கு அழைத்து வரப்படுவார். மைதானத்தில் இரண்டு அறைகள் இருக்கும். சுற்றிலும் மக்கள் திரண்டிருப்பர். குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு அறைகளில் ஒன்றை திறக்க வேண்டும். அவரின் அதிருஷ்டத்தை பொறுத்து பெண்ணோ? புலியோ? அறையிலிருந்து வெளிப்படுவார்/வெளிப்படும். ஒரு வேளை பெண் வெளியே வந்தால் அவளை மணந்து கொள்ள உரிமை உண்டு. அது குற்றமின்மையின் அறிவித்தலாக கொள்ளப்படும். ஒரு வேளை புலி வெளிப்பட்டால் அவருடைய ‘குற்றத்துக்கு’ உடனடி மரண தண்டனை கிடைத்ததாக கொள்ளப்படும். கூடியிருக்கும் மக்கள் இரண்டு விதமான தண்டனை அமலாக்கத்துக்கும் உரிய உணர்ச்சி வினையாற்றலை ஆற்றி விட்டு கலைந்து செல்வர்.

பெண் அல்லது புலி? கதையைச் சித்தரிக்கும் ஓவியம்.

இது குழந்தைகளுக்கு சொல்லப்படும் விளையாட்டு கதையாக தோன்றினாலும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை மக்கள் முன்னிலையில்தான் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கான பதிவுகள் இருக்கின்றன. 1757–ம் ஆண்டு ஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் என்ற முன்னாள் ராணுவ வீரர் 15–ம் லூயி மன்னனை நோக்கி ஓடி சென்று உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி சிறு காயத்தை ஏற்படுத்தினார். உடனடியாக கைது செய்யப்பட்ட டேமியன்ஸ் மீது இரண்டு விதமான கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ராஜ கொலை (regicide) மற்றும் தந்தை கொலை — parricide (மன்னன் குடிமக்களின் தந்தை என்பதால்) — குற்றச்சாட்டுகள் அவை.

தண்டனை நாளின் போது டேமியன்ஸின் கரங்களில் எரியும் மெழுகை ஏந்த செய்து பாரீஸ் தேவாலயத்திலிருந்து மரண கம்பம் வரை கட்டை வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு மரண மேடையில் வைத்து அவரது கை, தொடை மற்றும் நெஞ்சு பகுதிகளிலிருந்து கூர்மையான இடுக்கி ஒன்றின் மூலம் சதை உருவப்பட்டது. துளையிடப்பட்ட உடல் பாகங்களில் சூடான எண்ணெய், கந்தகம் மற்றும் சுடுபசை ஆகியவை ஊற்றப்பட்டன. அதன் பின்னர் நான்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டன. மரண கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட அவரது உடலிலிருந்து தசைநார்களை உருவும் பொருட்டு நான்கு குதிரைகளையும் அவர் உடலோடு பிணைத்து பின்னர் இயக்கப்பட்டன. அப்போது அவரது உடல் பாகங்கள் துண்டாயின. இவை அனைத்தும் மக்கள் முன்னிலையில் அரங்கேறின என்பது முக்கியமானது. குற்றம் புரியும் எண்ணத்திலிருந்து விடுபடும் ஆன்ம துப்புரவாக்கலாக அது அப்போது கருதப்பட்டது.

ஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் – உடலில் நான்கு குதிரைகளைக் கட்டி நாலாபுறமும் சிதறியடிக்கப்படும் கொடூரத் தண்டனையை விவரிக்கும் கோட்டோவியம்.

‘பெண் அல்லது புலி?’ சிறுகதையிலும் தண்டனை அமலாக்கத்துக்கு பிறகு கூடியிருக்கும் மக்கள் தங்கள் மனஅழுக்குகளை தூய்மைப்படுத்தி விட்டுச் செல்வர். மாணவர்களின் கைகளை உடைக்கும் போலீஸின் நடவடிக்கையை ஆதரிக்கும் நபர்கள்  ‘தப்பு செய்யணும் என்ற எண்ணம் இனிமேல் யாருக்கும் வராதென்று’ கூறி நியாயப்படுத்துகின்றனர்.

ஐரோப்பாவில் மத்தியகால காட்டுமிராண்டி தண்டனை முறைகள் பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு படிப்படியாக கைவிடப்பட்டன. தண்டனை வழங்கல் நான்கு முக்கிய அளவுகளில் மாற்றம் அடைந்தது. 1) மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது  ஒழிக்கப்பட்டது. அது தனியாக, மக்களின் உணர்ச்சியை கிளறாத நடவடிக்கையாக பார்த்துக் கொள்ளப்பட்டது. 2) குற்றவாளியின் சமூகப் பொருளாதார மற்றும் வளர்ப்பு சூழல் தண்டனை வழங்கலின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது. 3) தண்டனையை நிறைவேற்றுவது நீதிபதியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அதற்கென்று பணியமர்த்தபட்ட ஊழியர்கள், மருத்துவர்கள், உளவியலாளர்கள் என்று பல துறையினருடன் பகிரப்பட்டது. 4) தண்டனையின் நோக்கம் பழி வாங்குவது என்றில்லாமல் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு என்பதாக மாற்றப்பட்டது.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கொண்டாடும் இந்துமதவெறியர்கள்.

தற்போதைய நவீன கால தண்டனை முறையில் போலீஸ் வதை என்பது மறைமுகமாக தொடர்ந்தபடியேதான் உள்ளது. அவற்றின் கொடூரம் பற்றிய புரிதல் அனைவரின் நினைவுகளிலும் இருக்கிறது. என்றாலும் மக்கள் இந்த தண்டனை வழங்கலின் ஒரு பகுதியாக தங்களை இணைத்து சிந்திப்பது ஒரு புதிய போக்காக சமீபகாலத்தில் இருந்து வருகிறது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை பஜ்ரங் தள் மற்றும் ஏபிவிபி அமைப்பினர் கொண்டாடித் தீர்த்தனர். சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களை  மட்டுமே முன்வைத்து அஃப்சல் குருவுக்கு எதிராக தீர்ப்பெழுதிய நீதிபதி சொன்னது, ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சி இந்த வழக்கில் மரண தண்டனை மூலம்தான் திருப்தியுறும்’ என்றார்.

இயேசுவும் கூட சமூகக் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தத்தான் கொல்லப்பட்டார் என்று கூற முடியும். ரோம ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து இயேசுவை விடுவிக்கவே விரும்பினான். இயேசுவிடம் எந்த குற்றத்தையும் அவன் காணவில்லை. அவனது மனைவியும் கூட இயேசு விடுவிக்கப்படுவதையே விரும்பினாள். ஆனால் அதற்கு மாறாக இருந்தது மதவாதிகளின் கூச்சல். மதவாதிகள் மற்றும் அவர்களால் தூண்டப்பட்ட மக்கள் முன்பு பிலாத்து ஒரு தெரிவுரிமையை வைத்தான். பஸ்கா பண்டிகைக்கு ஒருவரை விடுவிக்க வேண்டும். அதற்கு யாரை விடுவிக்கலாம் — இயேசுவையா? அல்லது குற்றங்கள் மிகுபுரிந்த பாரபாசையா? என்று முடிவு செய்யும்படி கோரினான். பாரபாசை விடுவிக்கவே கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இயேசுவை சிலுவையில் அறைய விரும்பும் மதவாதிகளின் கோரிக்கைக்கு பிலாத்து வேறு வழியில்லாமல் இணங்கினான்.

படிக்க:
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !
காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

மதப் பெரும்பான்மைவாதத்தின் பாதிப்புக்கு இந்திய சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஆளாகி வருவது சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள் மற்றும் சமூகப் படிநிலையில் கீழே இருக்கும் மக்கள் பிரிவினரின் நல்வாழ்வுக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கிறது. அத்தி வரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பி. வரிசை மீதான அதீத அக்கறை, மத்தியில் இருக்கும் மதவாத ஆட்சியாலும், மாநிலத்தில் இருக்கும் பொம்மை ஆட்சியாலும் கலெக்டருக்கு வருகிறது. ஆட்சியாளர்கள் எவரேனும் வருகை புரியும்போது அவர்களுக்கு சிறிது அசவுகரியமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்விலிருந்து அது ஆவேசமாக பீறிட்டு வெளி வந்துள்ளது.

உ.பி. அரசால் பழிவாங்கப்பட்ட, குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான்.

அந்த போலீஸ்காரர் ஓர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய ‘கடமை மீறல்’ மாபெரும் சதியாக மாற்றப்பட்டிருக்கும். விசாரணை செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டிருக்கலாம். உ.பி.யின் கோராக்பூர் மருத்துவமனையில் 2017–ம் ஆண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகளின் உயிர்களை அப்போது காப்பாற்ற போராடிய குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கானுக்கு ஏற்பட்ட நிலைமை எண்ணிப் பார்க்கத்தக்கது.

மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது. ‘பெண் அல்லது புலி?’ சிறுகதையில் மன்னனை அரைக்காட்டுமிராண்டி என்று கதாசிரியர் குறிப்பிட்ட இடத்தில் அது சற்று நேர்மறை தன்மையில்தான் இருந்தது. தூரத்து லத்தீன் மற்றும் கிரேக்க தாக்கத்தால் கவித்துவ நீதியின் மேல் மன்னனுக்கு ஏற்பட்ட தாகத்தின் காரணமாக கொடூரமான தண்டனை முறையிலும் வெளிப்பட்ட சில நற்பண்புகளின் அடிப்படையில் அவ்வாறு அழைக்க முற்பட்டார்.

கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறாமல் இருக்க வயதான தம்பதியரை காலியாக இருந்த வி.வி.ஐ.பி வரிசையில் அழைத்து சென்ற போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டும் கலெக்டரிடம் என்ன அற உணர்வு அல்லது நேர்மறை அம்சம் உள்ளது?

ராஜ்