பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?”

திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர். விடுதலை ராஜேந்திரன் அறிக்கை :

யோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது.

இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

தோழர். விடுதலை ராஜேந்திரன்

இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

1949-ம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அந்த மசூதியில் தொழுகைகள் ஏதும் நடக்கவே இல்லை என்று சங்பரிவாரங்கள் முன்வைத்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 450 ஆண்டு கால உரிமை முஸ்லிம்களுக்கு அந்த மசூதியில் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

450 ஆண்டுகாலம் ஒரு இடத்தில் மசூதி இஸ்லாமியர்களுக்கு இருந்தது அதை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்று சொன்னதற்கு பிறகு அவர்கள் நிலத்திற்கான உரிமை கோருவதற்கு (இஸ்லாமியர்களுக்கு) உரிமை இல்லை என்ற தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அது மட்டுமின்றி 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23 தேதிகளில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து சில விஷமிகள் ராமன் சீதை சிலைகளை போட்டது சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதும் குற்றத்திற்கு உரிய நடவடிக்கை என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டவைகள். சங்பரிவாரங்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு எதிரான கருத்துக்கள்.

ஆனால் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டது. இந்துக்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா? இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவான விளக்கம் இல்லை. மௌனம்தான் சாதிக்கிறது.

ஒப்பீட்டளவில் அது இந்துக்களுக்கு சொந்தம் என்கிற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பில் திரும்பத் திரும்ப கூறுகிறது. எப்படி இந்த முடிவுக்கு வந்திருக்கிறது என்பதற்கு தொல்லியல் துறை சமர்ப்பித்த அறிக்கை; அந்த அறிக்கை மசூதி இருந்த இடத்தில் பூமிக்கு கீழே நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கே இஸ்லாமிய கட்டுமானங்கள் ஏதும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்று கூறி இருப்பதை ஒரு காரணமாக காட்டுகிறது.

இரண்டாவதாக அங்கேதான் ராமன் பிறந்தான் என்கிற ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கையை காரணமாக காட்டுகிறது. ஒட்டுமொத்த இந்துக்கள் ராமன் அங்குதான் பிறந்தான் என்ற நம்பிக்கையை காரணம் காட்டி மசூதி இருந்த இடத்தில் கோயிலை கட்டிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையை இந்துக்களுக்கு சாதகமாக பயன்படுத்திய உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கிறது. அதாவது தொழுகையை நடத்துவதற்கு மசூதிதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எனவே வேறு இடத்தில் மசூதி கட்டி அவர்கள் தொழுகை நடத்தலாம் என்று கூறுகிறது. ஆக இஸ்லாமியர்களுடைய நம்பிக்கையை அந்த இடத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கும் இந்துக்களின் நம்பிக்கை மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றம் இப்போது பயன்படுத்தி இருக்கிறது.

படிக்க:
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
♦ நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

யார் இந்த மசூதியை இடித்தார்களோ, அவர்களே ஒரு அறக்கட்டளையை நிறுவிக் கொண்டு ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பற்றி கோரிக்கை எதுவும் இந்த வழக்கில் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

ஒருவேளை மசூதி இடிக்கப்படாமல் மசூதி அங்கு இருந்திருக்கும் என்று சொன்னால் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. சட்டவிரோதமாக மசூதி இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட ஒரு மசூதி இன்றைக்கு ராமன் கோயில் கட்டுவதற்கு சட்டரீதியான ஒரு தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.

இது சட்டத்தின் முன் சரியான தீர்ப்புதானா என்ற கேள்வியை வரலாறு எதிர்காலத்தில் நிச்சயம் எழுப்பத்தான் செய்யும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் – திராவிடர் விடுதலைக் கழகம் – சென்னை

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க