நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள் எது நிகழக் கூடாது என்று முப்பாட்டன் மாயோனை வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்த துன்பியல் சம்பவம் நிகழ்ந்தே விட்டது. அண்ணன் சீமான் ஏற்கனவே போட்டுடைத்த ஃபர்னிச்சர்களான அ.க 74, ஆமைக் கறி, அரிசிக் கப்பல், ஆமை ஓட்டுப் படகு வரிசையில் பொட்டு அம்மானையும் புதிய ஃபர்னிச்சராக சேர்த்துள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல் பல அரியவகை கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்போது புதிதாக தெறித்து விழுந்துள்ள அடேங்கப்பா வகை தத்துவங்களுக்கு முட்டுக் கொடுத்து களமாட தம்பிமார்கள் முகநூல் நோக்கி விரைந்துள்ளனர்.

அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.

சுருக்கமாக “அனைத்து உயிர்களுக்குமான” அரசியலை தங்கள் அண்ணன் முன்வைக்கிறார் என்பது தம்பிமார்கள் மேற்படி தத்துவங்களுக்கு அளிக்கும் விளக்கம். வாட்சப் நிலைத் தகவல்களின் மூலமாகவும், முகநூல், ட்விட்டர் மற்றும் யுட்யூப் கமெண்டுகளின் மூலமாகவும் உக்கிரமாக சுவிசேஷ நற்செய்தியை பரப்பும் தம்பிமார்கள், எல்லா உயிர்களுக்குமான தமது அக்மார்க் அரசியலை ஏற்காதவர்களை “அடேய் கொல்டி வந்தேறிகளா” என அன்போடு வாழ்த்துவது வழக்கம்.

தம்பிமார்கள் எதிர்கொள்ளும் மாபெரும் அரசியல் நெருக்கடியே அண்ணன் அவ்வப் போது “வெட்டிருவேன் – குத்தீருவேன்” பாணி அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் இருந்து ஈழத்தில் கரையேறும் சந்தர்ப்பங்கள் தாம்.

***

வ்வாறான ஒரு சந்தர்ப்பம் தான் மேலே குறிப்பிட்ட நிகழ்வின் போது அண்ணன் நிகழ்த்திய உரை. நிகழ்வில் அண்ணன் பேசியதில் முக்கியமான பகுதியைக் கேட்டு விடுவோம் :

“ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்து வைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாகச் சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன். ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட  சம்பவம் அருமையானது.

தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்‌ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார்” எனப் பேசியுள்ளார் சீமான்.

படிக்க:
♦ பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !
♦ நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !

“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும்  “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற  வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு  சுவாரசியமூட்டுகின்றன.

மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும் என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது.

குறிப்பு: யாராது சம்பந்தப்பட்ட தம்பியிடம் பைக்குகளுக்கெல்லாம் சுங்கம் வசூலிப்பதில்லை என்பதைச் சொல்லி விரைப்பாய் உயர்த்தி வைத்துள்ள அவரது தோள்களை தளர்த்தச் சொல்வது நல்லது. தொடர்ந்து தோளை உயர்த்தியே வைப்பதால் ஸ்பாண்டிலிட்டிஸ் வர வாய்ப்புள்ளது.

***

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அண்ணனின் உரைவீச்சில் சில விசயங்கள் சூசகமாக சொல்லப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

எப்போது அண்ணன் சர்ஜிகல் தாக்குதல் செய்தாலும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் பிற்காலத்தில் அண்ணன் அதை விவரிக்கும் போது உயிரோடு இருக்க மாட்டார்கள். உதாரணமாக, கலைஞரின் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அண்ணன் எழுதிய அழகை அவரே விவரித்த போது கலைஞர் இறந்து போயிருந்தார். அதே மாதிரி அண்ணன் எழுதிய திரைக்கதையைக் கண்டு சிவாஜி அசந்து போன சம்பவத்தை அண்ணன் உலகுக்கு அறிவித்த போது சிவாஜி இறந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. ஆமைக் கறி, அரிசிக் கப்பல் மகாத்மியங்களை அண்ணன் எடுத்துரைத்த போது பிரபாகரனும் இல்லை.

இப்போது பொட்டு அம்மான் விசயத்துக்கு வருவோம் – இறுதிப் போரில் பொட்டு அம்மான் “எப்படியோ” தப்பி விட்டதாகவும் “எங்கோ” இருந்து அவர் இயக்கத்தை வழிநடத்தி வருவதாகவும் தம்பிமார்கள் சொல்வதுண்டு. இப்போது அண்ணன் பொட்டு அம்மான் வீட்டில் இட்லியோடு நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை ஊருக்கு சொல்லி விட்டதால் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அண்ணனின் இதர சாட்சியங்களின் படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பரிமாறி இருக்கின்றனர் – அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி தனது முக்கிய தளபதிகளையும் அண்ணன் வாழை இலையின் முன் செய்திட்ட ஊடறுப்புத் தாக்குதல்களுக்கு தோள் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அங்கே கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு புலி போராளிகள் வரிசையாக கொத்து குண்டுகளுக்கு வீழ்ந்து கொண்டிருந்த போது தலைவர் பிரபாகரன் குழம்புக் குண்டானின் முன் குத்த வைத்து அமர்ந்து ஆமைக்கறி சரியான பதத்தில் வெந்துள்ளதா என குத்திக் குத்திப் பார்த்துள்ளார். போர்க்களத்தில் எப்படி விருந்துப் பந்தி என்று ஆத்திரப்படுவோர் அண்ணன் சீமானிடம்தான் அந்த பந்தி புரூடாக்களை கேட்க வேண்டும்.

அண்ணன் சீமான் சொல்லும் சம்பவங்கள் உண்மை என்று “உளப்பூர்வமாகவே” நம்பித் தான் இதையெல்லாம் ஊகிக்கின்றோம். மேலும் தொடர்வோம்,

அதே கூட்டத்தில் சீமான் சொல்கிறார்:

“சுற்றிலும் ஷெல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்தன் சாப்பிடுறேன். பின்னாடி ஒருவர் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார். என்னடா எழுதறான் என்று முதல் நாள் விட்டுட்டேன். இரண்டாவது நாள் அதை வாங்கிப் பார்த்தேன். ‘இந்த சம்பலைத் இரண்டு முறை தொட்டார். இந்த கூட்டை முழுக்க சாப்பிட்டார், இந்த கறியை தொடவில்லை. சாம்பார் ஊற்றிக் கொண்டார்’. என்று எழுதிக் கொண்டிருந்தார். ஏனப்பா இதை எழுதுகிறாய் என்று கேட்டேன். இல்லைங்க தலைவருக்கு அனுப்பனும்னு சொன்னார்”

இதில் பல குறியீடுகள் உள்ளதை நீங்களே கவனித்திருப்பீர்கள். போர் உச்சத்தில் இருந்த போது, புலிகள் களத்தில் பின்டைவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்து கொண்டிருந்த போது – சீமான் எந்த சம்பலை தொட்டார், எந்த ஊறுகாயை ருசித்தார், எந்த சாம்பாரை மோந்து பார்த்தார் என்பதை கணக்கெடுக்க ஒரு புலிப் போராளியை டெபுடேசனில் டியூட்டி  போட்டுள்ளனரோ என்றே தோன்றுகிறது. இதை வக்கிரம் என்போர் அண்ணன் சீமானிடம் அன்பாக கேட்டுப் பாருங்கள். தாளித்து விடுவார்.

விருந்தோம்பல் என்னவோ பிரமாதமாகத் தான் உள்ளது – ஆனால், இப்படி எத்தனை பருக்கை உள்ளே போனது எத்தனை பருக்கை சிதறிப் போனது என்பதை கணக்கெடுப்பதெல்லாம் போராளி வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் என்பதை நினைத்தால் தான் திடுக்கென்று இருக்கிறது. இதில் உச்சகட்டமாக மறு நாள் காலை அண்ணன் கொல்லைக்கு போவதற்கு புலிப் போராளிகள் பாடிகார்டாய் போய் வந்ததாக அண்ணன் அடித்து விட்டாலும் அதை நம்புவதற்கு நாதக தம்பிமார்கள் தயாராகவே இருக்கிறார்கள். இருப்பினும் அண்ணன் சீமான் ஆய் போன கதைகளை இன்னும் சொல்லவில்லை – சொல்லி இருந்தால் அதை ஜீரணிக்கும் நிலையில் நாமும் இல்லை.

படிக்க:
♦ புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
♦ மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் !

மற்றொரு விசயமும் உள்ளது. சுற்றிலும் ஷெல் அடித்தார்கள், பத்து ஷெல்லுக்கு ஒன்று எனக் கணக்கு வைத்தாலும் நாள்தோறும் சில பத்து பேராவது மாண்டு போயிருக்க வேண்டும். பலருக்கு கை வேறாய் கால் வேறாய் உடல் சிதைந்து போயிருக்க வேண்டும் – இத்தனை களேபரத்துக்கும் இடையில் ஒரு ஜீவன் ரவுண்டு கட்டி ரசித்து ரசித்து சாப்பிட்டிருக்கிறது என்றால் அது சாதாரண ஜீவனாக இருக்க முடியுமா? பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என இகலோக கர்மாக்கள் அனைத்தையும் சம்சார சாகரத்தையும் கடந்த ஒரு பரஜீவனாகத் தான் இருக்க வேண்டும்; அதைத்தான் ஆதிசங்கரனின் அத்வைதம் பரமாத்மா என்கிறது. சுத்த தமிழில் பம்முற ஆத்துமா என்றும் சொல்லலாம்.

இதில் ஒரே ஒரு விசயம் மட்டும் தான் நெருடலாக உள்ளது. அண்ணன் சீமானுக்கு பிரபாகரன் அ.க74 துப்பாக்கியால் சுடும் பயிற்சியை அளித்துள்ளார். பயிற்சிக்காக ஒரு ஆஸ்திரேலிய அரிசிக் கப்பலையே தாரை வார்த்துள்ளார். அப்படி ஒரு கப்பலையே துல்லியமாக தாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற சீமான், சுற்றிலும் குண்டுகளைப் போட்டு மக்களைக் கொன்று கொண்டிருந்த சிங்களனிடம் சமர் புரிந்து அவன் தலையை தரையில் உருட்டியிருக்க வேண்டும்; ஆனால், அண்ணன் சப்பளாங்கால் போட்டமர்ந்து இட்டிலியை உருட்டி விளையாடியது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.

அடுத்த கூட்டத்தில் அதை விளக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

– சாக்கியன்