பின்லாந்து நிறுவனமான நோக்கியா ஆலை கடந்த 2006-ம் ஆண்டில் ரூ 650 கோடி முதலீட்டில் திருபெரும்பதூர்-சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆலையை அமைத்து உற்பத்தியை துவங்கியது 10,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் பணிபுரிந்து வந்தார்கள்.

நாள் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மொபைல்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அப்படி உற்பத்தி செய்து குறிப்பிட்ட மொபைல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பூரண வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசு வருடத்திற்கு ரூ-600 கோடி மானியம் அளித்தது இந்த மானியம் 2006-ல் துவங்கி, 2014-ம் ஆண்டு வரை, வரிசலுகையை பெற்று, கொள்ளை லாபம் ஈட்டியது அந்நிறுவனம்.

இதற்கிடையில் நிறுவனம் சார்பாக முறையாக கட்ட வேண்டிய வரியினை செலுத்தாமல் ஏய்த்து வந்தது. இதற்கு எதிராக, மத்திய அரசின் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது ஆலையில் உற்பத்தியை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்த நிர்வாகம், தொழிலாளர்களை VRS-என்ற பெயரில் சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியது. இதற்கேற்ப, ஆலைக்குள் இருந்த சங்க நிர்வாகிகளை ஊழல்படுத்தி தனது கைப்பாவையாக மாற்றி, எல்லாம் சட்டப்படி நடத்துவதாக நாடகமாடியது.

குறிப்பாக 5000-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களை அதுவும் 22-25 வயது உள்ளோரை VRS-திட்டத்தில் வேலையை பறித்தது சட்டபடியும், நடைமுறைப்படியும் எதிரானதாகும் என்பதனை தொழிலாளர்களுக்கு உணர்த்தியது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. மாநிலக் குழுவின் வழிகாட்டுதலை, ஏற்று 102 தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் சட்ட விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கையை எதிர்த்து திருப்பெரும்புதூர் ACL(தொழிலாளர் உதவி ஆணையர்) முன்னிலையில் தொழிற்தாவா எழுப்பப்பட்டு, நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது.

படிக்க:
நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு
அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது !

சட்டத்தையே மதிக்காத நிர்வாகம், சமரச பேச்சுவார்த்தைக்கு வந்து விடுமா? 4, 5 முறை வாய்தா போட்டும் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதைக் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடத்தி வந்தோம்.

தற்போது நோக்கியா ஆலையை சால்காம்ப் நிறுவனம் ரூ 215 கோடிக்கு வாங்க இருப்பதாகவும் 2019-2020 ஆண்டில் ரு-1,300 கோடி முதலீடு செய்து 10,000 பேருக்கு வேலை வழங்க இருப்பதாகவும், மேற்படி திருப்பெரும்புத்தூர் பகுதியை மின்னணு உற்பத்தியின் மண்டலமாக அறிவிக்க இருப்பதாகவும் தமிழக அரசின் தொழிற்துறை சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா நிர்வாகத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்தும் மீண்டும் வேலை வழங்கக் கோரி வழக்கு நடத்திவரும் நிலையில், மேற்படி அறிவிப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு, வேலையை உத்ரவாதப்படுத்துவது இயற்கை நியதிப்படியும், சட்டத்தின் படியும் அரசின் பொறுப்பாகும் என பு.ஜ.தொ.மு வழிகாட்டியது.

அதன் அடிப்படையில் 09/12/2019 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வேலைகேட்டு போராடி வரும் நோக்கியா தொழிலாளர்களுக்கு, வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க