டந்த 4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. தொடர் செய்திகளை படிக்கையில் கண்களில் நீர் முட்டுகிறது. இதெல்லாம் உண்மையில் நடக்கிறதா அல்லது நாம்தான் வேறு ஏதேனும் ஒரு உலகத்தில் இருக்கிறோமா என்பது தெரியவில்லை. இவையே மனசை பிசைகிறது என்றால் இன்னும் இன்னும் பாக்கி இருக்கோ என எண்ணுகையில்….

என் பெரிய குழந்தை வயது(11) இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு, காவல்துறையின் விசாரணை வளையத்தில் அந்தப் பெண்ணும் அவள் தோழிகளும் அவள் பள்ளியும். ஆமாம், பள்ளிக்கு வந்து அவள் வயதை ஒத்த குழந்தைகளை அதாவது 4, 5 & 6-ம் வகுப்புகளில் படிக்கிற குழந்தைகளை, பள்ளிக்கு வந்து சுமார் 45 நிமிடம் – 3 மணி நேரம் என குறுக்கு விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாய்.

இவ்வளவிற்கும் அந்தக் குழுந்தைகளின் ஆசிரியர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ இக்குழந்தைகளுடன் இல்லாமல் ஒரு “மேக் ஷிப்ட் விசாரணை ரூமில்” விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு “தற்காலிக விசாரணை ரூம்” என்பது ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இருந்ததா என நண்பர்கள் தெரியப்படுத்தவும். அக்குழந்தைக்கு தந்தை இல்லை. விவசாயம் நொடித்துப் போக கணவர் இறக்க வேறு வழியின்றி நிலத்தை குத்தகைக்கு விட்டு அக்குழந்தையின் கல்விக்காக அரசு உதவிப் பெறும் இந்த சிறுபான்மைப் பள்ளியில் ஏகப்பட்ட கனவுகளை நெஞ்சில் சுமந்து சேர்த்த அந்த எழுத்தறிவற்ற தாய் இப்பொழுது ஜெயிலில். அவருடன் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும். பெயில் கிடைக்கவில்லை ஏனென்றால் ‘ஜட்ஜ் அய்யா’ விடுப்பில் இருக்கிறார்.

“அம்மா எங்கு இருக்கிறார்” எனவும், இரவிலும் எழுந்து “நான் செய்தது தப்புதான், எனக்கு எதுவும் வேண்டாம் என் அம்மா மட்டும் போதும்” என அரற்றியவாறு கொடும் நாட்களை உற்றார் தூரத்தில் இருப்பதால் வீடு வாடகைக்கு கொடுத்த அந்த பெரிய மனதுக்காரரின் வீட்டில் இருக்கும் அந்தப் பெண்ணின் அழுகுரலுக்கு இந்த நாகரிக சமூகத்தில் எங்கே இருக்கிறது பதில்?

படிக்க:
10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !
♦ பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் !

செய்த குற்றம்தான் என்ன? அக்குழந்தைகள் அப்பள்ளியில் ஒரு நாடகத்தை நடத்தினர். அந்த நாடகத்தில் அக்குழந்தை பேசிய வசனமே இந்நிலையை குழந்தைக்கு தருவித்து இருக்கிறது. அந்த வசனம், “ஆவணங்கள் எங்கே என கேட்பவரிடம், செருப்பை காட்டுவோம்” என்பதுதான். இப்போது புரிந்திருக்குமே உங்களுக்கு.

இது தேசவிரோத செயல் என “சமூக செயற்பாட்டாளர்” ஒருவர் காவல்துறையில் முறையிட கர்நாடக மாநிலம் பிடார் மாவட்ட காவல்துறை நிர்வாகம் விரைந்து செயல்பட்டு உள்ளது. ஆம், விரைந்து உடனே பள்ளிக்கு சென்று அக்குழந்தையை விசாரணை செய்ய, ஆம் நான்தான் சொன்னேன், என் அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் என அக்குழந்தை சொல்ல, பின் நடந்தது எல்லாம் தான் நீங்கள் முன்பு படித்தது.

இதில் சோகம் என்னவென்றால், “ஏன் தப்பா” என அக்குழந்தை கேட்க, “இல்லையா..?” என போலீஸ் வினவ, “அப்படியென்றால் சாரி” என அக்குழந்தை சொல்லியும், “நீங்கள் பெரும் குற்றம் இழைத்திருக்கிறீர்கள், தேசத்தின் தலைமை சேவகரை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள்…”

CAA, NPR, NRC என்பவைக்கு எதிராக பேசி தேசத்துரோக செயலில் ஈடுபட்ட அக்குழந்தையின் தாயையும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியையும் ஜெயிலில் அடைத்து, தேசத்திற்கு நன்மை செய்திருக்கிறது காவல்துறை. இதுவரை சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை பலமுறை “ஐயாம் சாரி, ஐயாம் சாரி” என அரற்றியிருக்கிறது. இன்னும் அந்த தாயும், தலைமை ஆசிரியையும் ஜெயிலில்.

“சாதாரண பாஷை புரிய வில்லை என்றால், துப்பாக்கி பாஷையில் பேசலாம்” என தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத் பேசுகிறார். நாட்டின் மத்திய மந்திரி ஒருவர் தேசவிரோதிகளை என்ன செய்யலாம், என கேட்டு “துப்பாக்கி கொண்டு கொல்லலாம்” என பதில் வர புளங்காகிதம் அடைகிறார். அவரது இக்குரலுக்கு பின் அமைதியாய் போராடி வரும் ஷாஹின் பாத் இஸ்லாமியப் பெண்கள் பகுதியில் ஜாமியா பல்கலைக்கு அருகே மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தபட்டிருக்கிறது, சில நபர்களால். “டுக்டே கேங்” கூட்டத்திற்கு பாடம் புகட்டுவோம் என நாட்டின் உள்துறை அமைச்சர் சொல்ல, அன்று மாலை ஜே.என்.யூ பல்கலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தி மாணவர் ஆசிரியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது.

துர்காவாஹினி என்ற பெயரில் சென்ற ஆண்டும் அதற்கு முன்னரும் துர்கா பூஜையின் போது கையில் வாளுடன் பெண் குழந்தைகள் ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர். ஆனால், யோகி ஆதித்யநாத் தொடங்கி எவரும் கைது ஏன் வழக்கு கூட போடப்படவில்லை. அவர்கள் அனைவரும் தங்களது வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

படிக்க:
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
♦ CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !

இது ஏதோ அந்தக் காலம் இல்லை, அம்மாநிலம் இல்லை அம்மாவட்ட செய்தித்தாள் பதிப்பில் ஒரு பெட்டி செய்தியாய் வந்து எவர் கண்ணிலும் படாமல் போக. நான்கு நாட்களாய் டிவிட்டரில் வலம் வந்து, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் செய்திகளாக்கி, இதோ நேற்று என்.டி.டிவியில் பிரைம் டைம் செய்தியாகவும், தனது வலைத்தளத்தின் முகப்பு செய்தியாகவும் இட்டு இருக்கிறது. சமூக வலைத்தள காலத்தில் செய்திகள் வெகு விரைவாக திரும்ப திரும்ப கவனம் பெறும் வேளையில் பிடார் பள்ளி அந்த பெண் குழந்தை செய்ததாக சொல்லும் தவறை அவள் மன்னிப்பு கோரிவிட்டாளே என்றாவது இரங்கி மன்னித்து விடும் அரசு இன்று இருக்கிறதா என்ன? நீதிமன்றங்கள் இருக்கிறதா என்ன?

காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்கும் இடத்தில் எல்லாம் நாமன்றி வேறில்லை என அன்றே இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேச விரோத செயல் புரிந்திட்ட பாரதியின் வரிகளில் தான் மீண்டும் நாம் தஞ்சம் அடைய வேண்டி இருக்கிறது, “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்…”

நன்றி : முகநூலில் Ram Gopal

disclaimer

4 மறுமொழிகள்

  1. காவலனே திருடன் என்று பிரதமரை நோக்கி கூறினார் ஒரு அரசியல் தலைவர் அதற்காக ஜெயிலில் எல்லாம் வைக்கவில்லை மன்னிப்பு கேட்கப்பட்டவுடன் விடப்பட்டார். ஆனால் பார்ப்பன படிநிலையில் ஐந்தாம் இடத்தில் கூட வைக்கப்படாத தரத்தில் உள்ளவர்கள் செருப்பால் அடி என கூறினால் அதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இந்தியாவில் நீதி என்பது மக்களுக்கு மக்கள் மாறுபடும்.

  2. “செருப்பை எடு”என்பது வெறும் செய்தியாக இருக்கும் வரையில் பிரச்சினைகள் தீராதுதான்…

    • நீங்கள் சொல்லும் வார்த்தை இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு நிச்சயம் பொருந்தும்.

  3. நிச்சயம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பொருந்தும் மணி சார்..இந்தியாவை முழு காலனியாக்கத் துடிக்கும் துரோகிகளுக்கு எதிராய் செருப்பை “எடு”ப்பவர்கள் அவர்கள் தானே…

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க