நா. வானமாமலை

பேராசிரியர் நா.வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் நூலைத் தொடர்ந்து, அவரது முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளுள் ஒன்றான ”தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற இந்நூலை தொடராக வெளியிடுகிறோம். அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து, தனிநூலாக 1966-ம் ஆண்டில் என்.சி.பி.எச். வெளியிட்டிருந்தது.

வரலாறு என்று பள்ளிப் பாடங்களில் சொல்லித்தரப்படும் ”சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா?” எனக் கேள்வியெழுப்பும் பேராசிரியர் வானமாமலை, ”மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான். இவற்றை உற்பத்தி சக்திகள் என்று நாம் அழைக்கிறோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது.” என்ற கோணத்தில் அதாவது மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிலிருந்து வரலாற்றை அணுக வேண்டுமென்கிறார்.

இத்தகைய மார்க்சிய நோக்கில் சமூகத்தில் மக்கள் எந்தவகையில் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள், உற்பத்திப் பொருள்களை எவ்வாறு தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள், மனிதர்களிடையே எத்தகைய உறவுமுறை பின்பற்றப்படுகிறது என்பதிலிருந்தும் வர்க்கங்களை பற்றிய பார்வையிலிருந்தும் தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் இந்நூலில் உள்ள பல்வேறு கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார், பேராசிரியர் வானமாமலை.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களில் இந்தத் தொடர் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் !

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ! நன்றி !

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 01

பதிப்புரை

பேராசிரியர் நா. வானமாமலை

ண்பர் திரு. நா. வானமாமலை அவர்கள் தமிழக கிராமிய இலக்கியங்களில் நல்ல ஈடுபாடும் புலமையும் பெற்றவர். ‘தமிழர் வரலாறும் பண்பாடும்’ என்ற இவ்வாராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பில் காணப்படும் கட்டுரைகள் சமுதாயத்தை முழுக் கோணத்திலும் ஆராய்ந்து சிறப்புச் செய்கின்றன.

இத்தொகுப்பின் முதல் கட்டுரை சமுதாய மாற்றங்களைப் புதிய அடிப்படையில் அணுகி, ‘தமிழக வரலாறு’ படைக்க வேண்டியதன் அவசியத்தை அழகுற வலியுறுத்துகிறது.

பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையுமென்று நம்புகிறோம்.

பதிப்பகத்தார்

பண்டைத் தமிழர் வரலாறு தேவை

யர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்று இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை நீங்கள் படித்துப் பார்த்தால் பண்டைத் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கென, பத்துப் பதினைந்து பக்கங்கள் ஒதுக்கப்படிருக்கும். அப்பக்கங்களை வரிவிடாமல் வாசித்தால் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படும்.

“தமிழ்நாடு இந்திய நாட்டின் தென் பகுதியில் உள்ளதோர் பிரிவு. பழமையான நாகரிகம் படைத்த நாடு. சங்க காலம் எனப்படும் பழமையான காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் என்பார். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர் மூவர் ஆண்டனர். சோழருள் கரிகாலனும் ராஜராஜனும், ராஜேந்திரனும் புகழ் பெற்றவர்கள். சேரருள் செங்குட்டுவன் சிறந்தவன். பாண்டியருள் குறிப்பிடத்தக்கவர் யாருமில்லை. சோழர் பெருவாழ்வு வாழ்ந்த காலத்தில் கம்பன் தோன்றினான். சமணத்தை முறியடித்து சைவ வைணவ மதங்கள் தோன்றின. தமிழ் நாட்டின் வடபிரிவில் பல நூற்றாண்டுகளாக பல்லவர் செங்கோல் செலுத்தினர்.”

இதற்குமேல் தமிழ் நாட்டின் பழம் பெரும் பண்பாட்டைப் பற்றியோ, இலக்கிய வளத்தைப் பற்றியோ, இவ்விரண்டையும் உருவாக்கிய தமிழினத்தவரைப் பற்றியோ, அவர்களது சமூக வாழ்க்கையில் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஏற்பட்டு வந்த மாறுதல்களைப் பற்றியோ, அம்மாறுதல்களுக்குரிய காரணங்கள் எவை என்பன பற்றியோ, இந்நூல்கள் எதுவும் கூறுவதில்லை.

தமிழர் வரலாறு இவ்வளவுதானா; சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையையும், பண்பாட்டையும், இலக்கிய வளத்தையும் கலைச்செல்வத்தையும், உருவாக்கியவர்கள் குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான புகழ் பெற்ற மனிதர்கள்தானா என்ற கேள்விகள் தமிழர் வரலாறு பற்றி எழுந்துள்ள சில நூல்களைப் படிக்கும்போது நமக்குத் தோன்றுகின்றன.

தமிழ் நாட்டின் வரலாறு பற்றி இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பல நூல்கள் சென்ற ஐம்பது ஆண்டுகளில் வெளியாகியுள்ளன என்பதை நான் மறக்கவில்லை. சங்க காலத்தைப் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப் பிள்ளையின் நூலும், சமணர்களது ஆதிக்கத்தைப் பற்றி சக்கரவர்த்தி நயினார் அவர்கள் எழுதிய நூல்களும், சோழ வம்சத்தைப் பற்றி கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூல்களும், பல்லவர் வரலாறு பற்றி பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும், இன்னும் பலவும் தமிழாராய்ச்சியாளர்களுக்குப் பழக்கமானவையே. ஆயினும் இவையாவும் முழுமையான தமிழர் வரலாறு ஆகா. குறிப்பிட்ட சரித்திர காலங்களின் நிகழ்ச்சிகளை இவை விவரிக்கின்றன என்பது உண்மையே. ஆனால் தமிழர் சமூகம் எவ்வாறு மாறி வந்துள்ளது என்பதையும், அம்மாறுதல்களுக்கு அடிப்படையான காரணங்கள் யாவை என்பதையும், இந்நூல்கள் சுட்டிக் காட்டவில்லை.

ஆகவே முழுமையான தமிழர் வரலாறு ஒரு புதிய அடிப்படையில் எழுதப்பட வேண்டும்.

இதுவரை பொதுவாக எந்த அடிப்படையில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன? ‘பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மகா புருஷர்கள் தோன்றுகிறார்கள், அவர்களே நாட்டின் வரலாற்றை உருவாக்குபவர்கள்’ என்பர் ஒரு சாரார். இக்கொள்கையின்படி இரு மகா புருஷர்கள் தோன்றுவதற்கு இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் வாழும் மக்கள் வாயில்லாப் பூச்சிகள் சொல்வதைச் செய்து வாழும் இயந்திரங்கள் ஆட்டி வைக்கிறபடி ஆடுகிறவர்கள். ‘சமூக மாறுதல்கள், சரித்திர மாறுதல்கள் நிகழ்வது தீடீர்ப் பிரளயம் போன்ற புரட்சிகளால்’ என்பர் மற்றோர் சாரார். இப்பிரளயங்கள் யாராலும் உருவாக்க முடியாத எரிமலைகளைப் போல பழைமையைத் தகர்த்து புதுமையை நிறுவுகின்றன என்று தங்கள் கொள்கைக்கு அவர்கள் விரிவுரை கூறுவார்கள்.

படிக்க:
வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !
வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?

இவை செல்லரித்துப் போன கொள்கைகள். மார்க்ஸீயவாதிகள் இக்கொள்கைகளை எதிர்த்துத் தாக்கி முறியடித்து விட்டார்கள். மகா புருஷர்கள் சமூக உணர்வின் சிருஷ்டிகள். அவ்வக்காலச் சமூக உணர்வின் சிறந்த பிரதிநிதிகள் என்ற உண்மையை அவர்கள் நிரூபித்து விட்டார்கள். இதே போல் நம் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் சூட்சுமமான கருவிகள் மூலம் அறியக் கூடிய பல மாறுதல்களின் கடைசி விளைவே பூகம்பமும், எரிமலையின் சீற்றமுமென விஞ்ஞானிகள் முடிவு கட்டியுள்ளார்கள். அதேபோல்தான் சமூக விஞ்ஞானிகளும் படிப்படியான பல சமூக மாறுதல்களின் இறுதிக் கட்டமே புரட்சிகரமான மாறுதல் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆகையால் மேற்சொன்ன அடிப்படைகளில் தமிழர் வரலாறு என்ற மாளிகையைக் கட்ட முடியாது.

பின் எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களே, சமூக மாறுதலாகப் பரிணமிக்கின்றன. வாழ்க்கை நிலைமைகள் என்றால் என்ன? மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் உணவு, உடை, உறைவிடம் முதலியன. இம்மூன்றும் இன்றி மனிதன் வாழ முடியாது. மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான். இவற்றை உற்பத்தி சக்திகள் என்று நாம் அழைக்கிறோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது. ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சரித்திர மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது. அவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அவற்றைத் தமக்கு உடைமையாகக் கொண்ட ஒரு வர்க்கமும், அவற்றைப் பயன்படுத்தி வேலை செய்யும் மற்றொரு வர்க்கமும் தோன்றுகின்றன. இவ்விரு வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகப் போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டங்களின் விளைவாக சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன.

இவ்வடிப்படையில் தமிழரது சமூக மாறுதல்களைக் கவனிப்போம்.

தமிழர் வாழ்க்கை முதன் முதலில் மலைச் சாரல்களிலே தோன்றிற்று. அப்பொழுது அவர்கள் வேட்டையாடி உணவைப் பெற்றனர். வில், அம்பு, ஈட்டி, கவண்கற்கள் முதலியவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினர். காய், கனி, கிழங்குகளைத் தேடி அலைந்தனர். மிகச்சிறிய அளவில் புன்செய் பயிர் செய்யவும் அறிந்திருந்தனர். புல் பூண்டுகள், இலைத் தழைகளால் வேயப்பட்ட குடிசைகளில் குடியிருந்தனர். இக்கூட்டத்தார் குறவர், எயினர் எனப்படுவர். அவர் கூட்டுண்டு வாழ்ந்தனர். வேலன் என்ற தெய்வத்தைப் போற்றினர். தம்மைப் போன்ற ஒரு கடவுளை மலைநாட்டு மக்கள் கற்பனையில் உருவாக்கினர். அவர்களுடைய வாழ்க்கையை மிகப் பழமை வாய்ந்த தமிழ் நூல்கள் குறிஞ்சித் திணையில் விவரிக்கின்றன. அவர்களுடைய மண வாழ்க்கையைப் பற்றியும், பொழுது போக்குகளைப் பற்றியும், சிற்சில செய்திகளை சங்க நூல்கள் நமக்கு அறிவிக்கின்றன. புராதன தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை மேலும் ஆராய்வது அவசியம். அதற்குத் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, புறநானூறு போன்ற நூல்கள் துணை செய்வன.

இதன் பின்னர் இயற்கையின் கருணையை நம்பி வாழ்ந்த கூட்டத்தார் ஆடு மாடு வளர்க்கத் தொடங்கினர். ஆடு மாடுகளுக்கு வேண்டிய தீனியையும் தங்களுக்கு வேண்டிய உணவையும் பயிர் செய்து பெற முயன்றனர். ஆட்டுத் தோலை உடையாகத் தைத்துக் கொண்டனர். செருப்புத் தைத்துக் கொண்டனர். குழல் என்னும் இன்னிசைக் கருவியைக் கண்டுபிடித்தனர். வேலை செய்த களைப்புத் தீரவும், மழை வளம் வேண்டியும், மால் என்னும் தெய்வத்தை வேண்டிக் கூத்தாடினர். மால் பசு நிலைகளைப் புரக்கும் கடவுள். இவ்வாழ்க்கையை முல்லை நில வாழ்க்கையென்று சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கும் மலை நாட்டு மக்களுக்கும் சிறிதளவு பண்டமாற்று வாணிபம் நிகழ்ந்திருக்க வேண்டும். மலைநாட்டார் தேனும் தினையும் கொடுத்துத் தோலுடையும் கயிறும் பெற்றார்கள். மலைநாட்டினரும், காட்டுச் சாதியினரும், சேர்ந்து விழாக்கள் நடத்துவதுண்டு. அவற்றில் ‘சல்லிக் கட்டு’ என்று இன்று அழைக்கப்படும் ’கொல்லேறு தழுவுதல்’ என்ற விளையாட்டு நடத்தப் பெறும். பாணர், பாணியர் ஆகிய கலைஞர்களது பாட்டும் கூத்தும் நடைபெறும்.

(தொடரும்)

……………………………………………………………………………………………….. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

3 மறுமொழிகள்

  1. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி – வர்க்கப் போராட்டம் இவற்றின் அடிப்படையில் தமிழர் வரலாற்றைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.

Leave a Reply to சி.பரத் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க