ந்தோனேசியாவில் புதியதாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். இப்போராட்டங்களைக் கடுமையான முறையில் போலீசு  ஒடுக்கி வருகிறது.

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் “பல அம்சங்களைக் கொண்ட” வேலை உருவாக்கச் சட்டத்தை இந்தோனேசிய அரசு கடந்த திங்கள் கிழமை (05-10-2020) அன்று நிறைவேற்றியது.

தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு விரோதமான பல்வேறு அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்துக்கு இந்தோனேசியத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய அளவிலான போராட்டத்துக்கு அந்நாட்டு தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

படிக்க :
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்
♦ தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை !

இதனையொட்டி, கடந்த செவ்வாய்க் கிழமை (06-10-2020) முதல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு நீண்ட பேரணிகளை நடத்தினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தடியடி, தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் மூலம் தாக்குதலைத் தொடுத்தது இந்தோனேசிய போலீசு. பல இடங்களில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.

வேலைவாய்ப்பைப் பெருக்குவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என அந்த நாட்டின் அதிகார வர்க்கத்தினர் கூறிவருகின்றனர். இந்தியாவிலும் கூட தொழிலாளர் நலச் சட்டங்களில் கார்ப்பரேட் ஆதரவு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது அரசால் சொல்லப்படும் காரணமும் இதுதான். ஆனால் உண்மையில் இந்தச் சட்டம் என்ன  செய்யவிருக்கிறது ?

இந்தோனேசியாவின் தொழிலாளர்களுக்கான சம்பளம், வேலை நிலைமைகளில் உள்ள பாதுகாப்பை ரத்து செய்துள்ளது.  துறைவாரியான குறைந்தபட்ச ஊதியத்தை அகற்றுகிறது.

இதற்கு முன்னர், ஒரு நிறுவனத்திலிருந்து தொழிலாளர் வெளியேறும் போது அவருக்குக் கொடுக்க வேண்டிய பிரிவுத் தொகை, அதிகபட்சமாக 32 மாதச் சம்பளமாக இருந்தது. இது அவர் எவ்வளவு காலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார் என்பதைப் பொருத்து மாறுபடும். ஆனால் தற்போது இந்தப் புதிய சட்டம் அதிகபட்ச தொகையை 19 மாதச் சம்பளமாக சுருக்கிவிட்டது.

அனுமதிக்கப்பட்ட கூடுதல் உழைப்பு நேரத்தை (Overtime) நாளொன்றுக்கு 4 மணிநேரமாக உயர்த்தியிருக்கிறது இந்தச் சட்டம். வாரத்திற்கு 18 மணிநேரம் அதிகபட்ச கூடுதல் உழைப்பு நேரமாக வரம்பு வைத்திருக்கிறது.

வேலையை வெளியே கொடுப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்தச் சட்டம் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளில் பெருமளவிலான தளர்வுகளை அனுமதிக்கிறது.

இந்தப் புதிய சட்டம் பெரு முதலாளிகளுக்குப் பெரும் ஆதாயமாக இருக்கும் நிலையில் இந்தோனேசிய பங்குச் சந்தை புள்ளிகள் 1.31% அளவிற்கு உயர்ந்துள்ளன.

தங்களது உரிமைகளுக்காகப் போராடும் இந்தோனேசிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம் !

 போராட்டப் புகைப்படங்கள் !

இந்தோனேசியாவின் தெற்கு சுலவெசி மாகாணத்தில் உள்ள மகஸ்ஸரில் இந்தோனேசிய அரசிற்கு எதிராகப் போராடும் ஒரு பல்கலைக் கழக மாணவர் ! நாள் : அக் 06, 2020 படம் :ரெய்டர்ஸ்
மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டங் பகுதியின் மண்டல பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்னர் தடுப்பரணாக நிற்கும் போலீசாருடன் மோதும் போராட்டக்காரர் ! நாள் : அக் 06, 2020 படம் :ரெய்டர்ஸ்
சுமத்ராவில் உள்ள லாம்பங்க் பகுதியில் நடைபெற்ற போராட்டம் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பெகாசியின் ஜபபேகா தொழிற்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
மஃப்டியில் இருந்த ஒரு போலீசு (கையில் துப்பாக்கியைப் பிடித்திருப்பவர்), இரண்டாம் நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இளைஞரை கைது செய்து அழைத்துச் செல்கிறார். இடம் : பாண்டங்க்., நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
ஜகார்த்தாவில் போராட்டக்காரர்களுடனான மோதலில் கவிழ்க்கப்பட்ட போலீசு வாகனத்தை மஃப்டியில் உள்ள போலீசுக்காரர்கள் தூக்குகின்றனர். நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
மத்திய ஜாவாவில் உள்ள செமராங் பகுதியில் போலீசாருடன் மோதும் போராட்டக்காரர்கள் நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
இந்தோனேசியாவின் பெகாசி பகுதியில் கலவர போலீசுடனான மோதலுக்குப் பின்னர் மாணவர்கள் எதிர்வினையாற்றுகின்றனர். நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
ஜகார்த்தாவில் போராட்டத்தினிடையே போலீசு வாகனத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் மாணவர்கள். நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
பாண்டங்கில் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தண்ணீர் பீரங்கியின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது கலவர போலீசு. நாள் : அக் 07, 2020 படம் : ஏ.எஃப்.பி
மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டிங் பகுதியில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
மேற்கு ஜாவாவின் பாண்டங்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அவை கட்டிடத்தின் முன்னர் நடந்த போராட்டம் நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
இந்தோனேசியா, ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள டான்ஞ்-ஜெராங்கில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட போராட்டம் ! நாள் : அக் 07, 2020 படம் : ரெய்டர்ஸ்
மேற்கு ஜாவா – பாண்டங்கில் நடந்த போராட்டத்தில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பற்றி எரிகிறது. நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி
இந்தோனேசியாவின் லாம்பங்கில் நடைபெற்ற போராட்டத்தில், இளைஞர்கள் போலீசை நோக்கி கற்களை எரிகின்ற காட்சி. நாள் : அக் 07, 2020 படம் : ஈபிஏ. –ஏ.எஃப்.பி


சரண்

நன்றி : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க