டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்படுத்தப்பட்ட போலீசுடனான மோதல்களைக் காரணம் காட்டி, விவசாயிகளுடனான வேளாண் சட்டத் திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தனது கை ஓங்கியிருப்பதாகக் கருதுகிறது மோடி அரசு. மேலும் விவசாய சங்கங்கள் குறித்த அவதூறுகளையும் பாஜக மற்றும் தமது அடிவருடி ஊடகங்களின் மூலமும் செய்து வருகிறது.

கடந்த 26-01-2021 அன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் போலீசால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து இதனை விவசாயிகளின் வன்முறையாக சித்தரிக்கத் துவங்கியது மோடி அரசு.

மோடி அரசுக்கு ஒத்து ஊதும் வண்ணம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் இதனை “விவசாயிகளின் வன்முறை” என்றே குறிப்பிட்டன. இதன் போக்கில் இது விவசாய சங்கங்களின் ஜனநாயக விழுமியங்களின் மீதான கேள்வியாக மாற்றப்பட்டது.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

♦ தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

இதன் விளைவாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டியிலிருக்கும் ஒரு சில விவசாயிகள் சங்கங்கள், டெல்லியில் நடந்த மோதலில் பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் சதி குறித்தும் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டத்தில் ”வன்முறை” வெடித்ததற்கு காரணமாக ஒரு சில விவசாய சங்கங்களை, வேறு சில விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டின.

இந்தக் குற்றச்சாட்டுகளையே பெரும் பிளவாகக் காட்டும் வேலையை மோடி அரசு தற்போது துவங்கியிருக்கிறது. அதனை அரசாங்கத் தரப்பிலிருந்தும், பாஜக தரப்பிலிருந்து முன்னெடுத்திருக்கிறது. இப்படிக் காட்டுவதன் மூலம், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் போராட்டங்களின் மீதான மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் சீர்குலைத்துவிட முடியும் என்று நம்புகிறது.

விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருந்து வரும் குரல்கள்தான் விவசாயிகள் களத்தில் நிற்பதற்கான உத்வேகத்தை அவர்களுக்கு வழங்குகின்றன. இந்த அடித்தளத்தைக் கலைக்க விரும்புகிறது மோடி அரசு.

மேலும் விவசாய சங்கங்களின் இடையே உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் கொடுத்த சலுகைகளை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது மோடி அரசு. இது குறித்து மோடி அரசின் பிரதிநிதிகள் சிலரிடம் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் விரிவாகக் கூறியிருக்கிறது.

“பேச்சுவார்த்தை மேஜையில் அரசாங்கத்தின் கை இப்போது ஓங்கியுள்ளது. எங்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளாண் சங்கத் தலைவர்கள், போராட்டக்காரர்கள் மீதான தங்களது பிடிப்பை இழந்துவிட்டனர். இந்த வாய்ப்பை கருணைமிக்க வெளியேறும் வழியாக கருதிக் கொண்டு அரசாங்கம் ஏற்கெனவே முன் வைத்தனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளோரையும் தனித்தனியாகப் பார்த்துப் பேசி அவர்களை போராட்டத்தில் இருந்து விலகச்செய்வதற்கான முயற்சிகளில் அரசுத் தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் தெரிவிக்கிறது.

அரசுத் தரப்பில் இருந்து இத்தகைய வேலைகளைச் செய்து கொண்டிருக்கையிலேயே அக்கம்பக்கமாக பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், ஊடக விவாதங்களின் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் சிறு சிறு சலசலப்புகளை பூதாகரமாக காட்டி பேசி வருவதோடு அவர்கள் பலமிழந்துவிட்டதாகவும் பேசி வருகிறது.

ஜனவரி 26, 2021 அன்று டெல்லியில் நடத்தப்பட்ட விவசாயிகளின் டிராக்டர் பேரணி, சரியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்த நாளாக வரலாற்றில் பதிவாக வேண்டுமே தவிர விவசாயிகளின் போராட்டங்கள் பின்வாங்க அடித்தளமிட்ட நாளாக அடையாளப்படுத்தப்பட்டு விடக் கூடாது. அதற்கு உடனடியான தேவை விவசாய சங்கங்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து ஆதரித்து அவர்களுக்கு ஊக்கமளிப்பதுதான்.

பெரும்பான்மை மக்களாகிய நாம் விவசாயிகளுடன் இருக்கிறோம் என்பதை அவர்களிடம் உறுதியாகக் காட்டும்போது, உத்வேகமாக வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல முடியும்.


கர்ணன்

செய்தி ஆதாரம் : Indian express

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க