வேளாண் துறை சட்டங்களுக்கு எதிராக கடந்த டிசம்பர் 26-ம் தேதி இந்தியா முழுவதும் டிராக்டர் பேரணிகளை நடத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணிகள், வாகன பேரணிகள் நடைபெற்றன. அன்றைய தினம் மட்டும் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. தன்னை முதல்வராக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி மோடிக்கு ஏற்ற ஜாடி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

டெல்லியிலே விவசாயிகள் பேரணிக்கு அனுமதி கொடுத்து விட்டு அதிலேயே போலீஸ் திட்டமிட்ட கலவரம் செய்தது போல, திருவாரூரிலும் அப்படிப்பட்ட முயற்சியை செய்தது போலீசு என்பதை அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல அப்படிப்பட்ட முயற்சியை தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

படிக்க :
♦ திருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் !
♦ திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை !

டிசம்பர் 25-ம் தேதி பேரணிக்கு அனுமதி கேட்க செல்லும் பொழுது அனுமதி மறுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு 50 டிராக்டர்களை மட்டும் ஓட்டிச் செல்லலாம் என்று அனுமதி கொடுக்கப்படுகிறது.

அன்றைய தினம் ஆயுதம் தாங்கிய போலீஸ் திருவாரூரில் நகர வீதிகளில் ஒத்திகை அணிவகுப்பு நடத்தி மக்களை அச்சுறுத்துகிறது. போலீசு ஒத்திகை அணிவகுப்பின்  நோக்கமே விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு யாரும் வரக்கூடாது என்பதுதான்.

டிசம்பர் 26-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த டிராக்டர் பேரணியை மறித்த போலீசு, வேண்டுமென்றே தகராறு செய்தது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாக்கைத் துருத்திக்கொண்டு விவசாயிகளை அடிக்கப் போவதும், அதனால் விவசாயிகளை ஆத்திரமடையச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. பின்னர் விவசாயிகள் அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

திருவாரூரிலே டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் போலீஸ் அனுமதி திடீரென்று மறுக்கிறது. பூண்டி கலைவாணன் எம்எல்ஏ டிராக்டரை ஓட்டி வருகிறார். உடன் சிபிஎம், AIKSCC, மாவட்ட பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். வேண்டுமென்றே அந்த ட்ராக்டர் முன்பு இரும்புத் தடுப்புகளை தூக்கி போலீஸ் வீசுகிறது.

ஓடிக்கொண்டிருக்கும் டிராக்டரை கையால் பிடிப்பதற்கு பெண் போலீசை ஏவி விடுகிறார்கள். டிராக்டர் ஓடும்போது வேண்டும் என்றே நடுவில் நின்று கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஒரு கலவரத்தை நடத்தி விட வேண்டும் என்று போலீஸ் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தது. அதையும் மீறி விவசாயிகள் வெற்றிகரமாக பேரணியை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

This slideshow requires JavaScript.

அன்றைய தினம் மீண்டும் ஆயுதம் தாங்கிய போலீஸ் மக்களை அச்சுறுத்தும் விதமாக திருவாரூர் நகர வீதிகளில் வலம் வந்திருக்கிறது. பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, அகில இந்திய விவசாயிகளின் போராட்டக் குழுவின் மாவட்ட பொறுப்பாளர் மாசிலாமணி, மற்றும் சிபிஎம் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட கொடூரமான பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஐந்து பேர் பயங்கரவாதிகளை கைது செய்யப்படுவது போல வீட்டில் புகுந்து அதிகாலை கைது செய்யப்படுகிறார்கள். மற்றவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது போலீஸ். கொலை முயற்சி வழக்கு என்பதற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். ஆக விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் பேசினால் ஆயுள் தண்டனைதான் கிடைக்கும் என்பதை போலீசு பதிவு செய்கிறது.

விவசாயிகள் மீதும் விவசாய சங்கத் தலைவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்து 31.1.2021 அன்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடைக்கு எதிரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு கைகளில் லத்தியோடும் கலவரத்தை தடுப்பதற்கான எல்லா கவசங்களோடும் தயாராக இருந்தது. மேடைக்குப் பின்னே வஜ்ரா வாகனங்களும் அதிவிரைவு படை போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தது. எடப்பாடி போலிசின் எதிரி யார்? விவசாயிகளும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்களும்தான் என்பதைத்தான் இது நிரூபித்தது .

இதையெல்லாம் மீறி சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரே ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் அங்கிருந்த மக்களிடம் போலீஸ் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் விதமாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவர், அன்று போலீசார் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தாங்கள் எல்லாம் விவசாயி வீட்டுப் பிள்ளைகள் என்றும் கதையளந்து கொண்டிருந்தார் .

ஒரு ஆர்ப்பாட்டம் முடிவதற்கு முன்னரே இப்படியெல்லாம் போலீசு வேண்டுமென்றே ஆத்திரத்தை தூண்டும் வகையில் மைக்கில் பிரச்சாரம் செய்வது எந்த சட்டத்தில் இருக்கின்றது ? போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேசிய வண்டிக்கு கீழே இரண்டு டிஎஸ்பிக்கள் நின்று கொண்டிருந்தார்கள். இதிலிருந்தே உயரதிகாரிகளின் திட்டப்படி ஆர்ப்பாட்டம் முடிவதற்கு முன்பு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே போலீசு செயல்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ரவுடிகள் எல்லாம் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்-ல் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ஒரு கலவரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்யத் துப்பில்லாத போலீஸ்தான் போராடுகின்ற விவசாயிகளையும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்களையும் கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு கைது செய்ய தேடிக் கொண்டிருக்கிறது.

This slideshow requires JavaScript.

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தேர்தலுக்கு வெளியே அரசு நிர்வாகம், போலீஸ், ரவுடிகள் என அனைத்து இடங்களிலும் தனக்கான ஆட்களைத் தெரிவு செய்து வைத்திருக்கிறது. கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அச்சத்தை கொடுப்பது, மக்களை அச்சத்திலே நிரந்தரமாக இருக்க வைப்பது என்பதுதான் அவர்கள் நோக்கம்.

தேர்தலுக்கான ஒரு கூட்டணியை அமைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிராமல் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கும்பலால் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினருக்கும் ஓரணியாக நிற்காமல் இந்த பாசிஸ்டுகளை வீழ்த்துவதைப் பற்றி ஒரு கணம் கூட யோசிக்க முடியாது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்-82207 16242.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க