ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 26 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு) இருந்த கிட்டத்தட்ட 100 நோயாளிகளுக்கு ஐந்து நிமிடங்களுக்கு ஆக்சிஜனை துண்டித்து போலி ஒத்திகை நடத்தியுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் பராஸ் என்ற தனியார் மருத்துவனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் காட்டி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்களிடம் நிர்வாகம் கூறியுள்ளது. அவ்வாறு அழைத்துச் செல்லாத நிலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டுபிடிக்க நோயாளிகளுக்குச் செல்லும் ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தி பரிசோதனை செய்துள்ளது. இப்படி செய்ததன் காரணமாக, மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த 22 நோயாளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகம் யாரும் இறக்கவில்லை என்று கூறியிருக்கிறது.
இதனைக் கூறியிருப்பது உத்தரப் பிரதேச அரசு என்பதால், அந்த 22 நோயாளிகள் உயிர்பிழைத்திருப்பது குறித்த வதந்தியே பரவியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் 22 பேரும் அந்தச் சமயத்தில் இறக்கவில்லையெனினும், அவர்களது உடல் நிலைமைகள் மேலும் மோசமடைவதற்கும், சிறிது காலத்திற்குப் பிறகு அவர்கள் மரணமடைவதற்கும் வாய்ப்புள்ளது.
படிக்க :
♦ ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை
இந்த சம்பவம், பராஸ் மருத்துவமனை உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின் பேசிய வீடியோ மூலமாக அம்பலமாகியுள்ளது.
வீடியோவில் பேசும் ஜெயின் “கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் சில நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுனோம். ஆனால், யாரும் போகவில்லை. இதனால் கைவசம் இருக்கும் ஆக்சிஜனை வைத்து எந்த நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்பதை கண்டறிய நினைத்தோம். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை நிறுத்தினால் யார் பிழைப்பார்கள், யார் தாக்குபிடிக்கமாட்டார்கள் என்பதை அறிய எண்ணினோம்.
Dr Arinjay Jain, owner of Paras hospital in Agra, caught on camera and accept if switching off oxygen supply for 5 minutes on April 26 following which 22 patients in critical condition succumbed.#Agra #oxygenshortage #murder pic.twitter.com/ZqDTA7yOqb
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) June 7, 2021
இதற்காக நோயாளிகளுக்கு வினியோகம் செய்யப்படும் ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்த முடிவு செய்தோம். தாக்குப் பிடிக்கும் நோயாளிகளை கண்டறியும்படி ரகசிய தகவல் அனுப்பினோம். கடந்த ஏப்ரல் 26-ம் தேதி காலை 7 மணிக்கு ஆக்சிஜனை நிறுத்தி இந்த ரகசிய சோதனை நடத்தப்பட்டது. ஆக்சிஜன் நிறுத்தப்பட்ட அடுத்த சில நிமிடத்திலேயே 22 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களின் உடல் நீல நிறமாக மாறியது. அவர்கள் பிழைக்கமாட்டார்கள் என்பதை அறிந்தோம்.” என்று பதற்றமேதும் இல்லாமல் காணொளியில் கூறியுள்ளான்.
“பாஜக ஆட்சியின் கீழ் ஆக்சிஜன் மற்றும் மனிதநேயம் இரண்டிலும் கடுமையான பற்றாக்குறை உள்ளது. இந்த ஆபத்தான குற்றத்திற்கு காரணமான அனைவருக்கும் எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்ததைத் தொடர்ந்து, ஆக்ரா மாவட்ட நிர்வாகத்தால் கடந்த ஜூன் 8-ஆம் தேதி அன்று ஸ்ரீ பராஸ் மருத்துவனைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ஒருபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. மறுபுறம், தனியார் மருத்துவமனைகள் இலாபம் மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பதற்கு ஒரு துலக்கமான சான்று, இந்த பராஸ் மருத்துவமனை சம்பவம்.
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் அவர்களை எப்படி பிற மருத்துவமனைகளுக்கு அனுப்புவது, வேறு எங்கிருந்து ஆக்சிஜன் பெற முயற்சிப்பது என்று பார்ப்பதுதான் ஒரு மருத்துவரின் வேலை. பொருட்களில் இது தேறும் தேறாது என கழித்துக் கட்டுவது போல, நோயாளிகளின் உயிரை கருதியிருக்கிறான் இந்த மருத்துவமனையின் உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின்.
படிக்க :
♦ டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !
♦ தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!
இத்தகைய இலாப நோக்கத்தைக் கொண்ட கிரிமினல்களையே தனியார்மயம் உருவாக்கியுள்ளது. உயிர்காக்கும் மருத்துவத்துறையில் தனியார்மயத்தை அனுமதித்ததன் விளைவுதான், உ.பி-யில் நடைபெற்றிருக்கும் இந்த கிரிமினல் நடவடிக்கை.
மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஒழிப்பது, அரசே மருத்துவத்துறையை சேவையாக நடத்தும்போதுதான் மருத்துவமனைகள் மனித உயிரை ஒரு பொருட்டாக மதிக்காத போக்குக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire