தமாற்றம் என்கிற வார்த்தையைக் கொண்டுவந்து ஊடகங்களில் திணித்து ஒரு கலவரத்தை நிகழ்த்த இன்றைக்கு சில தமிழக இந்துத்துவாதிகள் முயன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அணுவளவிற்கான வாய்ப்பு கிடைத்தாலும் அதனை அணுகுண்டாக்கி வெடித்து அதனால் வீழ்ந்த பிணங்களின் மீதேறி மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர்கள் தான் இந்துத்துவவாதிகள்.
மறதி என்பது மனிதனின் இயல்பு என்பதால், ஒவ்வொரு ஜனவரி 22-ம் தேதியும், அதே தேதியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு குறித்து ஏதாவது ஒரு பதிவையாவது எழுதி, அதனை மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன்.
1965-ம் ஆண்டு, தன்னுடைய 24-வது வயதில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரிசாவின் மனோகர்பூர் என்கிற பழங்குடி கிராமத்திற்கு வந்தார் கிரகாம் ஸ்டெயின்ஸ். அங்கிருக்கும் தொழுநோய் மருத்துவமனையை கவனித்துக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டார். காதலித்து மணமுடித்து மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் ஒரு மகளுடனும் அந்த பழங்குடி கிராமத்திலேயே மக்களுக்காக வாழ்ந்து வந்தார் கிரகாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த கிராமத்திற்கு பயணித்து, அங்கேயே தங்கி தொழுநோய்க்கான சிகிச்சை பெற்று ஆண்டுதோறும் ஏராளமானோர் பயனடைந்துவந்தனர்.
படிக்க :
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
1999-ல் ஃபாதர் கிரகாமும் அவரது இரு மகன்களும் ஒரு காருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அங்கே 50 பேருக்கும் மேற்பட்டோரைக் கொண்டு ஒரு கும்பல் வந்தது. அந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளின் வெளிப்புற கதவுகளையும் மூடி பூட்டுப் போட்டது அக்கும்பல். பின்னர், கிரகாம் இருக்கும் காரைச் சுற்றி அக்கும்பல் நின்றது. அவர்கள் ஒவ்வொரின் கையிலும் வாளும் கோடாரியும் இருந்தன. அந்த ஆயுதங்களை வைத்து அந்த காரை அடித்து உள்ளே இருக்கும் கிரகாமையும் அவரது மகன்களையும் மிரட்டினர். உள்ளே என்ன செய்வதென்றே பயந்து கதறிக்கொண்டிருந்த மகன்களைக் காப்பாற்று வழிதெரியாமல், காருக்கு வெளியே இருக்கும் கும்பல் என்னதான் செய்யப்போகிறதோ என்ற பதட்டத்தில் கிரகாமும் இருந்தார்.
அந்த காரின் மீது ஊற்றுவதற்காகவே கொண்டுவந்திருந்த எரிபொருளை அக்கும்பல் ஊற்றியது. அதன்பின்னர், அந்த காரின் மீது நெருப்பைப் பற்றவைத்தது அக்கும்பல். அந்த கார் முழுமையாக பற்றி எரிவதைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தது அக்கும்பல். காரிலிருந்து கிரகாம் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த கார் எரிந்து முற்றிலும் சாம்பலாகும் வரையிலும் அதனைச் சுற்றியே அக்கும்பல் நின்று கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்தது.
மிக வசதியான ஒரு நாட்டில் பிறந்து, ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தும், அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவின் ஏதோவொரு மூலையில் இருக்கிற ஒரு கிராமத்தில் ஏழை மக்களுக்காக சேவை செய்ய வந்த ஒரு குடும்பத்தையே உயிரோடு எரித்துவிட்டு, தன்னுடைய கோரப்பசியைத் தீர்த்துக்கொண்டதும் அங்கிருந்து அக்கும்பல் கிளம்பியது.
ஏழைகளை ஏமாற்றி கிருத்துவ மதத்திற்கு மாற்றுவதாக குற்றஞ்சாட்டித்தான் அவர்களைக் கொன்றதாக கைதுசெய்யப்பட்டவர்கள் தைரியமாகவே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தனர். அத்தனை பெரிய கும்பல் திட்டமிட்டு செய்த இவ்வளவு பெரிய குற்றத்திற்கு டாரா சிங் ஒரே ஒருவனுக்கு மட்டும் தான் தண்டனையே கிடைத்தது. அவன் அக்கொடூரக் கொலையை நிகழ்த்துவதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் கூட பாஜகவுக்காக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்து ஓட்டுக்கேட்டவன். பஜ்ரங் தளத்தில் இருந்தவன்.
“டாரா சிங்குக்கும் பாஜகவிற்கு உள்ள தொடர்பு ஊரறிந்த ஒன்றுதான். அந்த சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் அனைத்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம் கூட்டங்களிலும் வகுப்புகளிலும் கலந்துகொள்ளும் அளவுக்கு அவன் அதன் அங்கமாகவே இருந்தான்” என்றார் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த லலித் தாஸ்.
ஆனால், அவனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என்றும் அவன் தனியாக ஒருவனே திட்டமிட்டு, ஒருவனே அந்த காரை மடக்கி, ஒருவனே அந்த காருக்கு தீவைத்து, கொலை செய்ததாக தீர்ப்பு எழுதப்பட்டு, அவனுக்கு மேலுள்ள மிகப்பெரிய கொலைகாரர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
இதையெல்லாம் விட மிகக்கொடுமை என்னவென்றால், அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் கூட ஆயுள் தண்டனையாக பின்னர் குறைக்கப்பட்டுவிட்டது. அதுகூட பரவாயில்லை. ஆனால், அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணங்கள் இருக்கிறதே, அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
“கிரகாம் ஸ்டெயின்சும் அவரது இரு குழந்தைகளும் கொல்லப்பட்டதற்கு, அவர்கள் ஏழைகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததும் அதற்காகவே அவர்களுக்கு பாடம் புகட்டவே குற்றவாளி இவ்வாறு செய்ததாகவும் தெரியவருகிறது. அதனை கருத்தில்கொண்டு, அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டையாக குறைக்கிறோம்… ஒருவரின் மத நம்பிக்கையில் தலையிட்டு, அவரை மதமாற்றம் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்..” என்றெல்லாம் விரிவாக மதமாற்றத்தையே அதிகமாகக் கண்டித்து ஒரு தீர்ப்பு எழுதப்பட்டது.
ஒருவேளை சோத்துக்காக மதம் மாறினால் என்ன? தொட்டால் தீட்டு, அருகே வராதே, படிக்காதே, வேலைக்குப் போகாதே என்று தள்ளிவைக்கப்படும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ஒருவேளை சோறும் வேலையும் வாழ்க்கையும் கிடைக்கிறதென்றால் மதம் மாறினால் கூட தவறில்லை தானே.
‘தேசம்… தேசம்’ என்று பேசிக்கொண்டே காசுக்கும் பெரிய வேலைக்குமாக ஆசைப்பட்டு அமெரிக்காவிற்கு போய், தேசம் மாறும் தேசபக்த(?) இந்துத்துவாதிகள் இல்லையா? காசுக்காக தேசம் மாறலாம், ஆனால் ஒருவேளை சோத்துக்காக மதம் மாறக்கூடாதா என்ன?
இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டாய மதமாற்றம் நடந்ததாக சொன்னது அந்த குற்றவாளி மட்டும்தான். அது வேறெந்த வடிவத்தில் நிரூபிக்கப்படாத ஒரு வாதம் தான்.
இந்த தீர்ப்பை எழுதியவர் வேறு யாருமல்ல… அச்சு அசல் தமிழரான முன்னாள் நீதிபதியும், ஓய்வுக்குப்பின்னர் கேரளாவின் கவர்னராக பதவிகிடைத்தவருமான சதாசிவம் தான்.
சரி, ஏழைகளை மதமாற்றம் செய்ததால் தான் கொலை செய்தோம் என்று சொன்னார்களே அந்த கொலைகாரர்கள், ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்சைக் கொன்ற பின்னர், அந்த கிராமத்தின் ஏழ்மையை அவர்கள் போக்கிவிட்டார்களா?
இல்லை. இல்லவே இல்லை.
அந்த கிராமம் முன்பைவிடவும் மிகக்கொடூரமான ஏழ்மை நிலையில் தான் இருக்கிறது. அங்கே இருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தின் கட்டிடம் வெறுமனே ஒரு பெயர்ப்பலகையுடன் கூடிய பாழடைந்த கட்டிடமாகத் தான் இருக்கிறது. அந்த கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
தன்னுடைய வாழ்க்கையையே அந்த கிராமத்தில் வாழமுடிவுசெய்திருந்த கிரகாமின் மனைவியும் மகளும் அந்த கிராமத்தைவிட்டே வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கே சென்றுவிட்டனர்.
படிக்க :
தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !
ஆனால், யார் இலாபமடைந்திருக்கிறார்கள்?
ஃபாதர் கிரகாம் கொல்லப்பட்ட போது, பஜ்ரங்தளத்தின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சிங், 2019-ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட்டு, வென்று, இன்று மத்திய அமைச்சராக இருக்கிறார்.
ஒரு குடும்பத்தை உயிரோடு கொளுத்தியவர்களும், அவர்களின் கொள்கையும், இயக்கங்களும் இன்றும் நம்மிடையே வெட்கமில்லாமல் ஓட்டுக்கேட்டு, வெற்றிபெற்று, ஆட்சியையும் பிடித்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நினைக்கும்போது தான் ஒவ்வொரு ஜனவரி 22-ம் தேதியும் தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது.
இவர்கள் அண்டா திருடர்கள் மட்டுமல்ல… அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிவுபெற்ற விசக்கிருமிகள் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது…
முகநூலில் : சிந்தன் இ. பா.
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க