மேற்கத்திய ஆதரவுடைய உக்ரைன் அரசு, ரஷ்யாவின் பிப்ரவரி 24 படையெடுப்பை இடதுசாரிகள் மீதான அடக்குமுறையை அதிகரிக்கவும், உக்ரைனிய சோசலிஸ்ட் கட்சிகளைத் தடை செய்யவும், இடதுசாரி செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கவும் பயன்படுத்துகிறது.
உக்ரைனிய அரசு இடதுசாரிகளை கைதுசெய்து சித்திரவதை செய்வதாக பரவலான செய்திகள் வருகின்றன. மார்ச் 20 அன்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைனின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் 11 அரசியல் கட்சிகளை தடை செய்வதாக அறிவித்தார். அதில் பாதி இடதுசாரி கட்சிகள். இடது எதிர்ப்பு, இடது சக்திகளின் ஒன்றியம், உக்ரைனின் சோசலிஸ்ட் கட்சி, உக்ரைனின் முற்போக்கு சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்டுகளின் கட்சி ஆகியவை குற்றம்சாட்டப்பட்டவைகளில் சில கட்சிகள்.
இக்கட்சிகள் ரஷ்ய சார்பு அல்லது மாஸ்கோவுடன் நிரூபிக்கப்படாத “உறவுகளை” கொண்டிருப்பதாக குற்றம்சாட்டி, இந்த தடை விதிப்பிற்கு நியாயம் சொல்கிறது உக்ரைன் அரசு. இருப்பினும், இந்த எதிர்க்கட்சிகளில் சில ரஷ்ய படையெடுப்பை பகிரங்கமாக கண்டித்துள்ளன.
படிக்க :
உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
ரஷ்யா படையெடுப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பிப்ரவரி 2021-ல், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது அரசாங்கத்தை விமர்சித்த பல தொலைக்காட்சி சேனல்களை தடைசெய்தார். அவரது இரும்புப் பிடியை எதிர்த்துப் போராடிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கைது செய்தார். ஆனால், கிவ் பகுதியில் இத்தகைய ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்துவது முதல் முறை அல்ல.
கடந்த 2014-ல் அமெரிக்க ஆதரவுடன்  “மைதான்” ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, வந்த ஆட்சி, கிவ் நகரில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தடைசெய்து, ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பதை சட்டவிரோதமாக்கும் தீவிர வலதுசாரி “டிகம்யூனிசேஷன்” பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதை 2015-ம் ஆண்டு “சோவியத் சின்னங்களை உக்ரைன் தடை செய்கிறது மற்றும் கம்யூனிச ஆதரவுகளை குற்றமாக்குகிறது” என்ற தலைப்பில் தி கார்டியன் ஒரு கட்டுரையில் எழுதியது.
உக்ரைனில் அனைத்து கம்யூனிச சின்னங்களையும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது, இதில் அரிவாள், சுத்தியல் மற்றும் சோவியத் காலத்து நினைவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
மேற்கத்திய ஆதரவுடன் 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, உலகளாவிய சோசலிச இயக்கத்தின் கீதமான “தி இன்டர்நேஷனல்”-ஐப் பாடுவது உக்ரைனில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
உக்ரைனின் தீவிர வலதுசாரி “டிகம்யூனிசேஷன்” சட்டங்களை மீறும் எந்தவொரு தனிநபரும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்வார்கள், மேலும் இடதுசாரி அமைப்புகளின் பல உறுப்பினர்கள் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
உக்ரைனிய தேசியவாதிகளின் பாசிச அமைப்பு (OUN) மற்றும் உக்ரைனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) உட்பட தீவிர தேசியவாத நாஜி பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை விமர்சிப்பது குற்றமாக்கப்பட்டது. ஹிட்லரின் ஆதரவாளர் ஸ்டீபன் பண்டேரா உட்பட இந்த தீவிர வலதுசாரி உக்ரைனிய கொலைக் குழுக்களின் தலைவர்கள் பலர் கதாநாயகர்கள் போல் சித்தரிக்கப்பட்டனர்.
இடதுசாரி உக்ரைனியர்களின் சிவில் உரிமைகளை அப்பட்டமாக மீறும் இந்த தீவிரவாத கொள்கைகளை நிறைவேற்றியதால், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கீவ் பகுதியின் வலதுசாரி ஆட்சியை ஆதரித்தன.
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரைனின் பாதுகாப்பு சேவைகளில் நவ-நாஜி மற்றும் தீவிர வலதுசாரிப் படைகளால், பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
2014-ல் உக்ரைனில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆதரவு சதித்திட்டத்தைத் தொடர்ந்து, அசோவ், ரெஜிமென்ட் போன்ற நவ-நாஜி பயங்கரவாதிகள் அதிகாரப்பூர்வமாக தேசிய காவலில் இணைக்கப்பட்டனர், அதே நேரத்தில் பாசிச ஐடர் பட்டாலியன், ஆயுதப் படைகளின் ஒரு பகுதியாக மாறியது.
நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த உக்ரைனிய நவ-நாஜிகளுக்கு ஆயுதங்களை வழங்கியும், அவர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளன.
000
உக்ரைனிய இடதுசாரிகள் “உக்ரைனில் இடதுசாரிகள் மற்றும் எதிர்ப்பாளர்களின் அடக்குமுறை” என்ற பெயரில் ஒரு டெலிகிராம் சேனலை உருவாக்கி, மேற்கத்திய ஆதரவுடைய உக்ரைனிய ஆட்சியால் நடத்தப்பட்ட கொடூரமான வன்முறைக் குற்றங்களின் அறிக்கைகளைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் சில,
உக்ரைனின் தேசிய பாதுகாப்பு படையில் நவ-நாஜி அசோவ் வலதுசாரி பயங்கரவாதிகள்
மார்ச் 3 அன்று, உக்ரைன் பாதுகாப்பு சேவை (Security Service of Ukraine – SBU) அதிகாரிகள், அசோவ் குழுவின் நவ-நாஜிகளின் பங்கேற்புடன், டினிப்ரோபெட்ரோவ்ஸ்கில் உள்ள லெவிட்சா சங்கத்தைச் சேர்ந்த இடதுசாரி ஆர்வலர் ஒலெக்சாண்டர் மத்யுஷென்கோவை கைது செய்தனர். உக்ரைனிய குற்றவியல் நிதிமன்றப் பிரிவு 437 – “ஆக்கிரமிப்புப் போரை நடத்துதல்”-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், உக்ரைனில் உள்ள நீதிமன்றங்கள் இப்போது வேலை செய்யாததால், விசாரணையின்றி கைது செய்யப்பட்டு, 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேநாளில், டினிப்ரோவில் இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் 4 அன்று 14 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் 5 அன்று, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிவ் பகுதியில், கைதுகள் முன்பே தொடங்கிவிட்டன. பிப்ரவரி 27 அன்று, உக்ரைனிய கொம்சோமோல் (Komsomol – கம்யூனிஸ்ட் இளைஞர்கள்) மிகைல் மற்றும் அலெக்சாண்டர் கொனோனோவிச் ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
மார்ச் 11 அன்று, இடதுசாரி ஆர்வலர் ஸ்பார்டக் கோலோவாச்சேவ் கார்கிவில் காணாமல் போனார். அவர் கடைசியாக தனது சமூக வலைதளத்தில், “உக்ரைனிய சீருடையில் ஆயுதம் ஏந்திய நபர்களால் கதவு உடைக்கப்படுகிறது. குட்பை” என்று எழுதியிருந்தார்.
மார்ச் 13 அன்று, ஒடெசாவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், இடதுசாரி ஆர்வலர் டிமிட்ரி லாசரேவின் வீடு தேசியவாத வெறி கொண்ட அவரது அண்டை வீட்டாரினால் தீவைத்து கொளுத்தப்பட்டது.
படிக்க :
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
மார்ச் 4 அன்று, ஜபோரோஷையைச் சேர்ந்த இடதுசாரி ஆர்வலர் விளாடிமிர் இவானோவ் காணாமல் போனார்.
மார்ச் 19 அன்று, கிரிவோய் ரோக் (Krivoy Rog) நகரில், பன்னாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான ஆர்செலர் மிட்டல் கிரிவோய் ரோக் (Arcelor Mital Krivoy Rog) நிறுவனத்தின் உலோகவியலாளர் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தின் தலைவரான யூரி பாப்செங்கோவின் வீடுபுகுந்து உக்ரைன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
000
ஏகாதிபத்திய ரஷ்யா தனது கார்ப்பரேட் நலன்களுக்கான உக்ரைன் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போர் தொடுக்கிறது. இதை பயன்படுத்தி உக்ரைன் அரசு அந்நாட்டில் இருக்கும் இடதுசாரிகளை ஒடுக்கி ஓர் நவ-நாஜி பாசிச ஆட்சியை நிறுவி வருகிறது. அமெரிக்க, ரஷ்ய போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் போர்களை எதிர்ப்பதும், உக்ரைனிய இடதுசாரிகளை நசுக்கும் ஜனநாயக விரோத செயலை கண்டிப்பதும், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : mronline

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க