“இனிமேல் தமிழ்நாட்டுக்குள் காடுகள் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ள எந்தப் பகுதிகளிலும் கால்நடைகள் மேய்க்க அனுமதிக்க கூடாது” என கடந்த மார்ச் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வைகை தோன்றும் இடமான மேக மலையில் மாடுகள் தொடர்ந்து மேய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதியில் சேதம் ஏற்பட்டு ஆற்றில் வரவேண்டிய நீர் குறையும் என்றும்; வனத்துறை அதிகாரிகள் அதிக அளவில் மேய்ச்சல் அனுமதி சீட்டுகளை வழங்கி, காடுகளில் மாடுகளை  மேய்க்க உதவுகிறார்கள் என்றும்; இத்தகைய அனுமதி மேகமலை வனப்பகுதியை சீரழித்து இறுதியில் ஐந்து மாவட்டங்களுக்கு வரவேண்டிய தண்ணீரை வராமல் தடுத்துவிடும் என்றும்; இதனால், பாரம்பரியமாக இருந்துவரும் மாடுமேய்க்கும் வழக்கத்தை நிறுத்த ஆணையிடும்படி திருமுருகன் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கின்றனர்.
இந்தத்தீர்ப்பால் பாதிக்கப்படப்போவது யார்? பலனடையப்போவது யார்? மாடுகள் மேய்ச்சலை நிறுத்திவிட்டால் வைகையில் தண்ணீர் வளம் பாதிக்காமல் இருக்கும் என்று யாராவது உறுதி கூறமுடியுமா? சரி, ஒருவர் ஒரு பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடுக்கிறார் என்றால், அவ்வழக்கில் எதிர் மனுதாரர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா இல்லையா?  அப்படி  எவ்வித அவசியமும் நீதிமன்றத்துக்கு இல்லாமல் போய்விட்டது.
000
மேக மலைப் பகுதியில், வேளாண்மைக்கு அடுத்தபடியாக பெருவாரியானவர்கள் செய்துவரும் தொழில் மேய்ச்சல்தொழில். ஏற்கெனவே, மாடு மேய்க்க அனுமதி கேட்பவர்களிடம் வனத்துறையினர் செய்யும் இடையூறுகள் மற்றும் வழக்குகள், அபராதங்கள்  என பலவித கெடுபிடிகள்.
படிக்க :
மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை !
அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !
வைகை ஆற்றில் தண்ணீர் வரத்துக் குறைவதற்கு முதல் காரணம் நீர்ப்பாசனத் துறையின் தவறான நிர்வாகம். மேலும் வைகை அணைக்கு மேல் உள்ள ஆற்றின் இரு மருங்கிலும் நடக்கும் அதீதமான தண்ணீர் திருட்டு; தண்ணீரை தொடர்பில்லாத பகுதிகளுக்கு மடை மாற்றம்செய்யும் பாசனத்துறையின் முறையற்ற செயல்கள் என பல முக்கிய காரணங்கள் உண்டு.
தண்ணீர் திருட்டு தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்ப்பாசனத் துறையினர் தொகுத்த அறிக்கை கடந்த ஆண்டு வெளியானது. அதில், ஆற்று நீர் வைகை அணைக்கு வந்துசேரும் முன்பே நூற்றுக்கணக்கான பம்புகளை வைத்து, நீரை பல மைல் தூரம் கடத்திச்சென்று முறையற்ற பாசனத்தில் ஈடுபடுவதுதான் தண்ணீர் குறைவுக்கு காரணம் என்பது தெளிவாக்கப்பட்டது. இதையெல்லாம் கண்கொள்ளாத உயர்நீதிமன்றம் பாமர மக்கள் என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு நியாயம் வழங்குகிறது.
நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்புக்கு ஆதாரமாக மேகமலை ஒரு பல்லுயிர் காப்பு பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி, அணில்களும் புலிகளும் வாழும் பகுதி; எனவே மாடுகளை உள்ளே விடக்கூடாது என்று கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்குக்காக நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட உயிரியல் பேராசிரியர் தனது அறிக்கையில், மேகமலைக் காடுகள் ஒரு சரணாலயப் பகுதி என்பதால் அங்கு வாழும் விலங்குகளுக்கு மலைமாடுகள் போன்ற வளர்ப்புக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி போன்ற நோய்கள் பரவக்கூடும்; மாடுகள் எழுப்பும் இரைச்சல் ஒலிகள் காட்டு விலங்குகளை துன்புறுத்தும்; எனவே மாடுகளை மேய்க்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேகமலை பல நூறு ஆண்டுகளாக விலங்குகள் சரணாலயம் என்பது போலவும், திடீரென்று சிலர் மாடுகளை மேய்ப்பது போலவும் அதனால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போலவும் கூறுவதெல்லாம் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த கதைதான்.
000
1947-க்கு முன்பு வரை மேகமலை, கண்டமனூர் ஜமீனுக்கு உட்பட்ட நிலப் பகுதியாகவே இருந்து வந்தது. இங்கு தனியாருக்கு சொந்தமான பல தேயிலை தோட்டங்கள், தனியார் சுற்றுலா விடுதிகள், செல்வந்தர்களுக்குரிய சொத்துகள் பல உள்ளன.
தனது கால்நடைகளை மேகமலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் மேய்ச்சல்காரர்.
தமிழ்நாடு அரசு பல சிக்கல்களுக்கிடையில் மேகமலையின் ஒரு பகுதியை 1978-ஆம் ஆண்டு உள்ளோர் உரிமைகளை (settlement rights)  வரையறுக்க சட்ட அறிவிப்புச் செய்தது. அந்த அறிவிப்பின்படி, 2௦1௦ ஆண்டு சுமார் 25,000 ஹெக்டேர் நிலங்களைக் காப்புக் காடுகள் என்று இறுதியாக அறிவித்தது. இடைப்பட்ட காலத்திலும் அங்கு வசிப்போர், சுற்றியுள்ள கிராம மக்கள், போக்கு மேய்ச்சல்காரர்கள் உட்பட பலரும்  மேய்ச்சல் நடத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.
வனத்துறையும் தான்தோன்றித்தனமாக அனுமதிதருவது, சில கட்டுப்பாடுகள் விதிப்பது, மேய்ச்சல்காரர்களை துன்புறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. ஆனாலும் முற்றிலும் தடுக்கவில்லை. சட்டரீதியாக அப்படி தடை செய்வது நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் படி சாத்தியம் இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த காப்புக் காடு (reserve forest) பகுதியை மேலும் மேலும் விரிவு செய்து சுமார் 63,000 ஹெக்டேர் நிலங்களை மேகமலை வன விலங்குகள் சரணாலயம் என்று அறிவிப்புசெய்தது. அதன் பின்னர் அருகில் அமைந்துள்ள திருவில்லிபுத்தூர் வனங்களையும் இணைத்து அணில்கள் மற்றும் புலிகள் சரணாலயம் என்று சமீபத்தில் அறிவித்தது. அப்போதும்கூட சுமார், 37,500 ஹெக்டேர் நிலங்களை மேய்ச்சலுக்கு பயன்படுத்தலாம் என்றும் 64,000 ஹெக்டேர் நிலங்களை மட்டும் யாரும் நெருங்கக் கூடாது என்றுதான் அறிவித்திருந்தது.
விலங்குகள் சரணாலயம் வரும் முன்பே மேய்ச்சல்காரர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு பாரம்பரிய உரிமை இருந்து வருகிறது என்ற உண்மையைப்பேசுவதற்கு தமிழ்நாடு அரசும் தயாராக இல்லை, அந்த உண்மையைப்பேசும் மேய்ச்சல் தொழில் செய்யும் மக்களின் கருத்துக்களைக் கேட்க நீதிமன்றமும் தயாராக இல்லை.
“யாரும் உட்புகாத வன விலங்கு சரணாலயங்கள்” என்ற கருத்து ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் அடிப்படை (unanimous scientific basis) அல்ல. உலகின் பல நாடுகள் இததகைய கருத்துகளை “மக்களிடம் இருந்து அலாதியாக நிற்கும் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகள்” என்று பிரகடனம் செய்துள்ளன.
காலனியாதிக்கச் சட்டங்களை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற நாடுகளில்தான் இப்படி வெறுமனே ஏட்டறிவை மட்டுமே நம்பும் ‘அறிவாளிகள்’, அனிமல் பிளாநெட், நேசனல் ஜியக்ராபி  போன்ற தொலைக்காட்சிகளைப் பார்த்து ஆர்வலர்களானவர்கள், பல நூறு ஆண்டுகளாக காடுகளில் ஆடு, மாடு மேய்த்த நமக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
000
வழக்கு தொடுத்தவர், மேகமலையில் ஆடு மேய்க்க தடை கேட்கிறார், நீதிமன்றமோ தமிழகம் முழுவதும் காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்க்க தடைவிதிக்கிறது. ஒரு தொழிலாளிக்கு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் இல்லாமல், ஒரு ஆலை நிர்வாகம் பணி நீக்க உத்தரவு அளித்துள்ளது எனில், இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் இது போன்று உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு சேர்த்து நீதி வழங்குமா என்ன? என்ற கேள்வியில்தான் நீதிமன்றத்தின் வர்க்கப்பார்வை ஒளிந்திருக்கிறது.
படிக்க :
தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
எட்டுவழிச்சாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, எட்டுவழிச்சாலை கூடாது என்பதல்ல; எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை  அரசு நிலமாக வகைமாற்றம் செய்ய மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுச்சூழல்  அனுமதிபெற்று, முறையாக  புதிய அறிவிப்பை அரசு வெளியிடலாம் என்பதே தீர்ப்பு.  இந்த அன்னிய மூலதனத் தேவைக்காக உருவாக்கப்பட்ட எட்டு வழிச்சாலை திட்டம் செல்லும் வழியில் வனவிலங்குகள் மலைகள், காடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லையா என்ன?
விவசாய நிலங்களையும் காடுகளையும் மலைகளையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதையே இலக்காகக் கொண்டு செயல்படும்  தனியார்மய-தாராளமய திட்டங்களை உயிர் ஆதாரமாகக்கொண்டு செயல்படும் அரசு, “காடுகளை அதிகரிக்க போகிறேன், இயற்கையைக் காப்பாற்றப் போகிறேன், சுற்றுச்சூழலை பாதுகாக்க போகிறேன்” என்று சொல்வது எவ்வளவு பெரிய நாடகம்! இந்த நாடகத்திற்கு நீதிமன்றங்கள்தான் மிகச்சிறந்த பக்கவாத்தியம்.
“முதலாளியா?, இயற்கையா?” என்ற கேள்வி எழும்போது முதலாளிகளின் பக்கம் நிற்கும் நீதிமன்றங்கள், “மக்களா? இயற்கையா?” என்ற கேள்வி வரும்போது இயற்கையின் பக்கம் நிற்பதாகக் கூறும் நீதியை மக்கள் யாரும் ஒருபோதும் நம்பத்தயாராக இல்லை.

கிருஷ்ணராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க