கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியிருந்தது. அரசி, பருப்பு, காய்கறிகள், பால் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களும்; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற மிக அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் விண்ணை முட்ட விலை உயரத்தொடங்கின. எரிபொருட்களைப் பொருத்தவரை மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. எரிபொருள் நிரப்பும் மையங்களில், பல மணிநேரங்கள் மக்கள் வரிசை கட்டி நிற்க வேண்டியிருந்தது.
இலங்கையில் மின்சாரமானது பெருமளவு எரிபொருட்களைச் சார்ந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. டீசல் இல்லாததால், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இரண்டு ஆலைகளைத் தவிர, மற்ற அனைத்து மின் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டன. ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணி நேரங்களுக்கு மேலாகவாவது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான மருந்துகள், குழந்தைகளுக்கான இன்ட்யூபேஷன் கருவிகள் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் தீர்ந்துபோய்விட்டன; இறக்குமதி செய்வதற்கு அரசிடம் பணம் இல்லாததால், மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளைக் குறைக்கத் தொடங்கின. காகிதங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலையில், பள்ளி-கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
நெருக்கடியின் சுமைகள் தாளமுடியாமல், மக்களில் ஒருபிரிவினர் நாட்டைவிட்டே வெளியேறினர். பல ஈழத் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுடன் குடும்பம் குடும்பமாக கப்பல் மூலம் தமிழகத்திற்கு வரத் தொடங்கினர். அதேநேரம் அரசை எதிர்த்த போராட்டங்களோ சிறுசிறு தீப்பொறிகளாகக் கிளம்பி, நாட்டின் பலப் பகுதிகளிலும் பரவிக்கொண்டிருந்தன. தொடக்கத்தில், அவை எதிர்க்கட்சிகளின் அடையாளப் போராட்டங்களாகவே இருந்தன. பின்னர் மக்கள் போராட்டங்களாக தீவிரமடைந்தன.
தடுக்க முடியாத போராட்டப் பெருவெள்ளம்
மார்ச் 25-ஆம் தேதிக்கு பின்னர் பல்வேறு நகரங்களில், “ராஜபக்சேக்களே வீட்டுக்கு போங்கள்”, “கோ கோத்தபயா” போன்ற முழக்கங்கங்களை ஒலித்தபடி, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான ரெய்ட் அவென்யு (Reid Avenue), வி.எம்.டி பார்க் (VMD Park), நெகம்போ (Negambo), பண்டரகம (Bandaragama), நுகேகொட (Nugegoda), கொஹுவல சந்திப்பு (Kohuwela Junction) ஆகிய பகுதிகளில், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். இது மெல்ல மெல்ல தென்னிலங்கையின் மற்ற பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருந்தது.
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
கணக்கீடு ஒன்றின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 19 தேதிகளுக்குள் மட்டும் நாடு முழுவதும் 304 அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றுள் மிகப்பல தென்னிலங்கையில் நடைபெற்றவை. குறிப்பாக, கொழும்புவைச் சுற்றிமட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. ஒரு சூறாவளியின் கருவைப் போல, போராட்டங்களின் குவிமையமாக கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மாறிக் கொண்டிருந்தன.
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், முதன் முதலில் மிகப்பெருமளவு கவனத்தை ஈர்த்த போராட்டமாக அமைந்தது மிரிஹானை (Mirihana) போராட்டமாகும். மார்ச் 31 அன்று, நுகேகொட புறநகர் பகுதியான மிரிஹானையில் கூடிய மக்கள், மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பின்னர், அருகாமையில் அமைந்திருந்த கோத்தபய இராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிடுவதற்காகப் பேரணியாகச் செல்லத்தொடங்கினர். போராட்டம் பிற்பகல் சுமார் ஆறு மணி அளவில் தொடங்கியது. நடு இரவுவரையில் மிரிஹானையை நோக்கி மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கப் பிரிவினர்.
மின் தடை, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் அரசை எதிர்த்து வீதிக்கு வரும்படி கட்டாயப்படுத்தியிருந்தது.
ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இப்போராட்டம்தான் காலிமுகத்திடல் போராட்ட முகாமுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டம் உருத்திரள்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத இராஜபக்சேக்கள், ஆரம்பத்திலேயே இதனை கிள்ளியெறிய முற்பட்டார்கள். ஆனால் தோற்றுப் போனார்கள்.
அதிபரின் வீட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்த சிறப்பு போலீசுப் படை, வரவழைக்கப்பட்ட போலீசு கும்பல் ஆகியவை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் மக்களை கலைக்க முயற்சித்தது. பதிலுக்கு மக்கள் கையில் கிடைத்தப் பொருட்களை போலீசை நோக்கி வீச ஆரம்பித்தார்கள். எனவே போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. போராட்டங்களை செய்தியாக்க வந்த ஊடகங்களுக்கு அதிபர் மாளிகையிலிருந்து மிரட்டல்கள் குவிந்தன. ஊடகவியலாளர்கள் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இப்போராட்டத்தை ஒட்டி, போலீசால் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேர்களுள் (ஏப் 2 வரை) ஊடகவியலாளர்களும் அடக்கம்.
இவற்றின் மூலம் கோத்தபயவின் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததே ஒழிய, போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை. இரவு முழுவதும் போராட்டச் செய்திகளும் போலீசின் ஒடுக்குமுறைகளும் சமூக ஊடகங்களில் போராட்டக்காரர்களால் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. “கோட்டா கோ ஹோம்” (#Gota Go Home – கோத்தபயவே வீட்டுக்கு போ) – என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பிரபலமானது. இவை இதர பகுதி மக்களுக்கும் கிளர்ச்சியூட்டின. அரசின் அடக்குமுறையைக் கண்டு ஆத்திரமுற்றனர் மக்கள். அடுத்தடுத்த நாட்களிலேயே தென்னிலங்கையின் வீதிகள் மக்கள் போராட்டங்களால் மூழ்கத்தொடங்கின.
ஏப்ரல் 2 ஆம் தேதி, அவசர நிலை மற்றும் நாடுதழுவிய ஊரடங்கை அறிவித்தது கோத்தபய அரசு. தங்களது ஆட்சிக்கெதிராக ‘தீவிரவாதிகள்’ சதிசெய்ததாகவும்; ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதக் குழுவொன்று, இலங்கையில் ‘அரபு வசந்தத்திற்கு’ அழைப்பு விடுத்துள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் இதனை திட்டமிட்டதாகவும் புலம்பியது அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவு அறிக்கை.

முகநூல், வாட்ஸப், டுவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் என அனைத்து வகை சமூக ஊடகங்களும் திடுமென முடக்கப்பட்டன. “கோட்டா கோ ஹோம்” என்ற பெயரில் முகநூல் பக்கம் தொடங்கியதற்காக, அனுருத்த பண்டார என்பவர் கைதுசெய்யப்பட்டார். ஊரடங்கை மீறியதாக, ஒரே நாளில் 660 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய முயற்சிகளின் மூலம் போராட்டங்களை பரவாமல் இருக்கச் செய்யவும், கலைத்துவிடவும் முயற்சித்தது அரசு.
ஆனால், போராட்டங்கள் மேலும் தீவிரமடையவே செய்தன. ஒடுக்குமுறைகள் தூள் தூளாக்கப்பட்டன. ஊரடங்கையும் மீறி, வீதிகள் ஆர்ப்பாட்டங்களால் அழகுபடுத்தப்பட்டன. மிரிஹானை போராட்டம் தொடர்பாக கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட 53 பேரையும் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது, சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராளிகளை கைதட்டி, முழங்கங்களை முழங்கி ஆரவாரமாக வரவேற்றனர். வழக்கு முடிகின்ற வரை ஒருவர் கூட நீதிமன்றத்தை விட்டு வெளியேறவில்லை. காயம்பட்ட போராளிகளுக்கு, மருத்துவர்கள் சிறப்பு கவனமெடுத்து மருத்துவம் பார்த்தனர். நாடு முழுவதிலும் காணப்பட்ட கொதிநிலையை அறிந்துகொண்ட மஹிந்த-கோத்தபய அரசு வேறுவழியே இல்லாத நிலையில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. 15 மணிநேரத்திற்கு பிறகு முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் விடுவிக்கப்பட்டன.
கொழும்பு கடற்கரையை நோக்கி தன்னெழுச்சி அலை
மக்கள் போராட்டங்கள் அரசின் அடக்குமுறைகளையும் கடந்து தீவிரமாகி வந்ததால், ஓட்டுக் கட்சிகள் மக்கள் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஏப்ரல் 4-ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தலைநகர் கொழும்புவில் பேரணியாக சென்றனர். அன்றைய நாளே, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள், “அரசின் சில தவறான நடவடிக்கைகள்தான் நெருக்கடிக்கு காரணம்” என்று கூறி கூண்டோடு பதவி விலகினர்.
கோத்தபயவும் மஹிந்தவும் உடனடியாக பதவி விலக வேண்டும், அனைத்துக் கட்சித் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், ஓட்டுக்கட்சிகளின் கபடநாடகத்தால் மக்கள் கவரப்படவில்லை. போராட்டக்காரர்களில் பலரும் (60 சதவிகிதம் பேர்) எந்தக் கட்சிகளும் யோக்கியம் இல்லை; நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களுமே பதவி விலக வேண்டும் என்று கருதுவதாக, “மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்” என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் 96.2 சதவிகிதம் மக்கள், அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; மக்களை கொள்ளையிட்டுச் சேர்த்த அவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
***
ஏப்ரல் 5, 6-ஆம் தேதிகளில் கொழும்புவைத் தாண்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் திரள் திரளாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தங்களது வீடுகளிலும் வாகனங்களிலும் கருப்புக் கொடிகளை ஏற்றுவது, “கோட்டா கோ ஹோம்” என்ற முழக்கம் பதித்த அட்டைகளை வீட்டின் மேல் மாட்டுவது, சுவர்களில் எழுதுவது என நாடே போர்க்கோலம் பூண்டது. ஒரு பக்கம் பல்வேறு பகுதிகளிலும் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் 6 ஆம் தேதிக்கு பின்னர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்பு கடற்கரையை நோக்கி திரளத் தொடங்கினார்கள். கொழும்புக் கடற்கரை, அதிபர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள காலிமுகத் திடல் மக்கள் கூட்டங்களால் நிரப்பப்பட்டது. பீதியானது அரசு.
