Monday, June 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 464

சென்னை : மக்களை உறைய வைத்த கண்ணீர்க் கடல் ஆவணப்படம் !

2

ன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கிறது ஒக்கிப் புயல். இந்த புயலால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும், உடைமைச் சேதமும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து மீனவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்பது தெரியாது. காணாமல் போன மீனவர்கள் இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என அவர்களது குழந்தைகளும், மனைவியும், தாய் தகப்பனும் கதறலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடல் விமானத்தில் வந்து இறங்கி பவுசு காட்டினார் மோடி. ஆனால் துயரில் ஆழ்ந்திருக்கும் மீனவர்களைப் பார்க்க எந்த வாகனத்திலும் வரமுடியாதாம்.

புயலுக்கான முன்னறிவிப்பு எச்சரிக்கை கொடுப்பதில் தொடங்கி மீட்புப் பணி வரையிலான அனைத்துக் கடமைகளிலும் மெத்தனம் காட்டியது அரசு. விளைவு, 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. கொதித்துப் போன மீனவ மக்கள் போராடினார்கள். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

மக்கள் துயரத்துல் அல்லல் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் திமிரோடு பதிலளித்தார்; எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஆர்.கே. நகரிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலும் தவம் கிடந்தார்கள்; மோடி குஜராத்தில் வீதி வீதியாக ஓட்டு வேட்டை நடத்திக் கொண்டிருந்தார்.

பொதுத்தளத்தில் பலரும் கடுமையாக விமரிசித்த பின்னர் எடப்பாடி ஒரு கூட்டத்தில் பங்கேற்று விட்டு,ஒரு சில இடங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். மீனவர்களின் பகுதிக்கு வரவே இல்லை. மோடியோ, வெறும் புகைப்படங்களில் மட்டும் பாதிப்பைப் பார்த்து விட்டு டாட்டா காட்டிச் சென்று விட்டார்.

பாதிப்படைந்த மீனவ கிராமங்களுக்குச் சென்று கள நிலைமைகளை வினவு செய்தியாளர்கள் பதிவு செய்தனர். அங்கிருக்கும் மக்களிடம் அரசின் மீட்புப்  பணிகளைப் பற்றி கேட்டறிந்தனர். அப்படி உருவானது தான் “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தை வெளியிடுவதோடு, ஒக்கிப் புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரி மீனவர்கள் மத்தியில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்கள் கலந்துரையாடல் மற்றும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்றச் சென்று வந்த மீனவ இளைஞர்களின் நேருரையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.

அதன்படி கடந்த டிசம்பர் 25 – திங்கள் கிழமையன்று சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. முன்னோட்டத் திரையரங்கில் இந்நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து வினவு இணைய தளத்தில் கடந்த 24.12.2017 அன்று அறிவிக்கப்பட்டது.

ஓரிரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்பட்டாலும் திரளான மக்கள், தோழர்கள், பத்திரிகை நண்பர்கள் திரண்டு வந்தார்கள்.

அறிமுக உரை பேசிய தோழர் மருதையன் இந்த நிகழ்வு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் சுருக்கமாகப் பேசினார்.

தோழர் மருதையன்

அதனைத் தொடரந்து “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம் திரையிடப்பட்டது. சுமார் 1மணி நேரம் 20 நிமிடங்கள் திரையரங்கேறிய இந்த ஆவணப்படம் பார்வையாளர்களை உறையச் செய்தது. இளைஞர்களும், மாணவர்களும் இப்படத்தின் உதவியால் மீனவர்களின் பிரச்சினையை முழுமையாக அறிந்து கொண்டோம் என்றார்கள். தொழிலாளர்கள் சிலர் தமது பணியை விட மீனவர்களின் தொழில் எப்படி சிரமம் நிறைந்தது என்பதை அறிந்ததாக கூறினார்கள். பெரும்பாலானோர் படம் தங்களை கண்ணீர் விட வைத்ததை நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார்கள்.

ஆவணப் பட திரையிடல் முடிந்ததும்,  மீனவர் நேருரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்திரிக்கையாளர் பாரதிதம்பி இந்நிகழ்வை நெறியாளுகை செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளையச் சேர்ந்த மீனவ இளைஞர்களான ஆல்பர்ட் மற்றும் டிக்சன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களோடு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையனும் கலந்து கொண்டார்.

பத்திரிக்கையாளர் பாரதிதம்பி தமது கள அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு மீனவ இளைஞர்கள் இருவரிடமும் அங்கிருக்கும் யதார்த்த நிலைமைகள் குறித்துக் கேட்டார். பொறியியல் பட்டதாரியான ஆல்பர்ட்-ம், மீனவரான டிக்சனும் தங்களது அனுபவங்களையும், மீனவர்களின் யதார்த்த நிலைமைகளையும் எடுத்துரைத்தனர்.

இதில் டிக்சன், அரசின் கடலோரக் காவல் படையுடன் மீனவர்களின் தேடுதலுக்கு உடன் சென்ற இளைஞர். அவர் தனது அனுபவத்தைக் கூறுகையில், கடலோரக்காவல் படையினர் தங்களை அழைத்துக் கொண்டு வெறுமனே 25 கடல் மைல்களுக்கு மட்டுமே சென்றதாகக் குறிப்பிட்டார்.

ஆல்பர்ட்

மேலும், மீனவர்கள் பொதுவாக மீன்பிடிக்குச் சென்றிருக்கும் பகுதிகளாக மீனவர்கள் குறித்துக் கொடுத்த பகுதிகளுக்கு அவர்கள் செல்லவில்லை. அதற்கு மேல் தாங்கள் செல்வதற்கு சட்டம் அனுமதிக்காது எனக் கூறியிருக்கின்றனர். அதைத் தாண்டி மேலும் சுமார் 50 கடல் மைல்கள் சென்றிருந்தால் கண்டிப்பாக பல மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்திருக்க முடியும். மீனவர்களின் உயிருக்காக சட்டமா, இல்லை சட்டத்திற்காக உயிர்களை இழக்க முடியுமா எனத் தெரியவில்லை என மிகுந்த மனவருத்தத்துடன் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

ஆல்பர்ட் பேசுகையில், பல மீனவர்கள் 3 நாள், 3 இரவுகள் தொடர்ச்சியாக நீந்திக் கடற்கரையை நோக்கி வந்ததாகக் குறிப்பிட்டார். அப்படி வந்தவர்களை கடற்கரையில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்னர், அவர்கள் கண் விழித்துப் பார்த்த போது, அவர்களை நடுக்கடலில் இருந்து கடற்படை காப்பாற்றியதாக செய்தி வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

மேலும் பல மீனவர்கள் படகில் மீண்டு வந்தபோது அவர்களை இடைமறித்து அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் தாங்கள் மீட்டதாகக் கடலோரக் காவல் படையினரும், கடற்படையினரும் கூறியதாகவும் பதிவு செய்தார் ஆல்பர்ட். மேலும் முதலில் ஜப்பான் வர்த்தகக் கப்பலால் காப்பாற்றப்பட்ட 4 மீனவர்களை அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏற்றிக் கொண்டு திரும்பிய காட்சியை மட்டுமே கடைசி வரை மீட்டதற்கான ஆதாரமாக வெளியிட்டுக் கொண்டிருந்தது அரசு. அதனைத் தவிர வேறு எந்த வீடியோவையும் வெளியிடவில்லை. அரசு தொடர்ச்சியாக பல கப்பல்களீல் தேடுதல் வேட்டை நடத்துவதாகக் கூறியது. ஆனால் 3 நாட்கள் தொடர்ச்சியாக நீந்திக் கரையேறிய மீனவர்கள், வழியில் ஒரு கப்பலையோ, மீட்புப் படகையோ பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.  நிலைமை இப்படி இருக்கையில் இந்த அரசை எப்படி நம்புவது எனக் கேள்வி எழுப்பினார்.

வல்லவிளையை சேர்ந்த  டிக்சன்

சாலையில் விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றாமல் ஒரு தனி மனிதன் சென்றால் அவனை சுயநலவாதி எனக் கூறி ஒதுக்கிவிடலாம். ஆனால், ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது அதனால் இப்போது போய்க் காப்பாற்ற முடியாது எனச் சொல்ல முடியுமா? இன்று அரசும் அந்த நிலையில் தான் இருந்து கொண்டு பேசுகிறது. இதனை விபத்து என்று கூறுவதா இல்லை மீனவர் படுகொலை எனக் கூறுவதாவெனத் தெரியவில்லை என்று கூறினார்

வள்ளவிளை மீனவர்கள் சுமார் 8 படகுகளில் கடலுக்குள் சென்று 11 நாட்கள் தேடி 24 மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு அரசு கடற்படைக் கப்பலையும் தேடுதல் பணியில் தாங்கள் காணவில்லை என்கின்றனர் மீனவர்கள். இவர்கள் தேடினோம் என்று சொல்கிறார்களே, ஒவ்வொரு கப்பலிலும் இருக்கும் வாயேஜ் டேட்டா ரிக்கார்டரின் (பயணத் தகவல் பதிவகம்) தகவலை கடற்படை பகிரங்கமாக வெளியிடத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார் ஆல்பர்ட்.

அவர் மேலும் கூறுகையில், இவர்கள் தேடுவதாகச் சொன்னது அனைத்தும் நாடகமாகத் தான் தெரிகிறது. படகு கவிழ்ந்ததால், கரையை நோக்கி நீந்திக் கொண்டு வந்த மீனவர்கள் 4 பேர் கைகளை அசைத்தும் கடற்படை ஹெலிகாப்டர் அவர்களை மீட்கவில்லை.

புயல் வீசிய அன்று 123 மீனவப் படகுகள் தங்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவி கோருவதற்காக வழங்கப்பட்ட ஆபத்துக்கால எச்சரிக்கை ட்ரான்ஸ்மிட்டர் (Distress Alert Transmitter) பொத்தானை அழுத்தியுள்ளனர் மீனவர்கள். ஆனால் அந்தத் தகவல் தங்களுக்கு 14ம் தேதி தான் வந்து சேர்ந்ததாகக் கூறியிருக்கிறது மீன் வளத்துறை.

ஆபத்துக் காலங்களில் தங்களுக்குத் தகவல் கிடைக்கும் வகையில் செயற்கைக்கோள் அலைபேசி கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்பதற்கு பாதுகாப்புக் காரணங்களை சொல்கிறது அரசு. ஆனால் மீனவர்கள் கேட்பது ஒரு வழியில் மட்டும் பேசக் கூடிய அலைபேசிகளையே, அதில் பாதுகாப்புப் பிரச்சினை வர வாய்ப்பில்லையே. என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் பாரதி தம்பி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1000 படகுகள் ஒரு மாதத்திற்கு தலா 5000 லிட்டர் டீசல் வாங்குகின்றனர். அதன் மூலம் அரசு ஈட்டும் வரி வருவாய் மட்டுமே மாதத்திற்கு சுமார் 5 கோடியே 58 இலட்சம் ரூபாய் ஆகும். இது தவிர உணவுப் பொருள் தொடங்கி பல்வேறு வகைகளில் மீனவர்கள் அதிகமாக அரசுக்கு வரிவருமானம் ஈட்டித் தருகிறார்கள். ஆனால் ஒரு புயலுக்கு முன்னரும் அவர்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. புயலுக்குப் பின்னரும் மீட்புப் பணியில் அரசு ஈடுபடவில்லை. இது மீனவர்களை அழிக்கும் செயல் என்று ஆல்பர்ட் கூறினார்.

அரசின் நிவாரணம் குறித்து கேட்கப் பட்ட போது அதற்குப் பதிலளித்த ஆல்பர்ட், தங்கள் மக்களை பார்க்கக் கூட வராத அரசு, தனது குடும்பத்தாரை இழந்து உண்ணாமல் தவிக்கும் மக்களைப் பார்த்து சாப்பீட்டீர்களா என்று கூட கேட்காத அரசா, நிவாரணம் கொடுக்கப் போகிறது ? எனக் கேள்வி எழுப்பினார்.

மீனவர்களை இந்த அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகத் தெரிவித்த ஆல்பர்ட், கன்னியாகுமரிக்கும், இலங்கைக்கும் இடையே வெட்ஜ்பேங்க் என்ற மீன் அதிகம் கிடைக்கும் பகுதியை தற்போது அந்நிய நாட்டுக் கப்பல்கள் மீன் பிடிக்க இந்த அரசு தாரை வார்த்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். மற்றநாடுகள் தங்களது கடல்பரப்பையும், நிலப்பரப்பையும் விரிவு படுத்த முனையும் போது, நமது நாடு மட்டும்தான் தனது எல்லையை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

பத்திரிக்கையாளர் ரகுமான்

இந்தக் கலந்துரையாடலில் பேசிய தோழர் மருதையன் அவர்கள், விவசாய நிலம் – கடற்கரை, ஆகிய இரண்டையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது அரசு. விவசாயிகளையும், மீனவ மக்களையும் அப்புறப்படுத்துவது தான் அதன் நோக்கம். கடற்கரை நெடுகிலும், சரக்குப் பெட்டக முனையங்கள், துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள் என நிறுவுவது தான் அரசின் திட்டம். இதற்கு ’சாகர் மாலா’ எனப் பெயர் சூட்டியுள்ளது அரசு. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உல்லாச விடுதிகள், தீம் பார்க்குகள் போன்றவற்றை கட்டிக் கொள்ள கேரள கடற்கரைப் பகுதிகளை அவர்களுக்கு அள்ளிக் கொடுக்க திட்டமிடுகிறது அரசு. இதற்காக மீனவ மக்களை கடற்கரையை விட்டு அப்புறப்படுத்தத் துடிக்கிறது அரசு என்று கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் ரகுமான் பேசுகையில், மீனவர்களின் மரணம், அரசின் மனதை உலுக்கவில்லை. அதனால் தான் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீண்டு வரவில்லை என நிர்மலா சீதாராமனிடம் மீனவமக்கள் கூறிய போது “பொய் சொல்லாதீர்கள்” என அவர்களை நோக்கிச் சொன்னார். அரசின் எண்ணத்திற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும் ? என்று கூறினார்.

சமவெளி மக்கள், மீனவ மக்களுக்காக போராட முன் வராத நிலை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ரகுமான், சமவெளி மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகவே போராட முன்வராத சூழல் தான் இன்றும் நிலவுகிறது எனப் பதிவு செய்தார்.

நிகழ்வு மாலை 6:20 மணியளவில் நிறைவுற்றது. தமிழகமெங்கும் “கண்ணீர்க் கடல்” திரையிடப்படுமென தோழர் மருதையன் தெரிவித்தார். திரையிட ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

– வினவு செய்தியாளர்

மேலும் படிக்க: scroll.in ஆங்கிலப் பத்திரிகையில் “கண்ணீர் கடல்” குறித்து வந்த கட்டுரை:

A documentary on Cyclone Ockhi exposes government apathy towards Kanyakumari’s fisherfolk

 

பணிந்தால் பதவி – சதாசிவம் ! மறுத்தால் மரணம் – ஹர்கிஷன் லோயா !!

1

பணிந்தால் பதவி !  மறுத்தால் மரணம் !!

சோராபுதீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமித் ஷா விடுவிக்கப்பட்டதன் பின்னே நடந்துள்ள சதிகளை, அவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் அம்பலப்படுத்துகிறது.

குஜராத் மாநில போலீசால் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பய் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு – நவம்பர் 30, 2014 அன்று நள்ளிரவில் நாக்பூரில் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்டது. நீதிபதி லோயாவின் மரணம் குறித்துப் பல்வேறு சந்தேகங்களை அவரது தந்தையும், சகோதரிகளும் தற்பொழுது எழுப்பியுள்ளனர்.

கேரவன் என்ற ஆங்கில இதழின் பத்திரிகையாளர் நிரஞ்ஜன் தாக்லே, லோயாவின் தந்தை, லோயாவின் சகோதரி டாக்டர் அனுராதா பியானி, அவருடைய மகள் மற்றும் லோயா மரணமடைந்த நேரத்தில் அவருக்கு அருகிலிருந்தவர்கள் போன்றோரைக் கடந்த ஓராண்டாகச் சந்தித்து, விவரங்களைச் சேகரித்து, “ஒரு குடும்பத்தின் மௌனம் கலைகிறது – சோராபுதின் வழக்கை விசாரித்து வந்த நீதிபதியின் மரணத்தில் எழும் அதிர்ச்சியூட்டும் விவரங்கள்” என்ற கட்டுரையை கேரவன் இணையதளத்தில் கடந்த மாதம் வெளியிட்டார்.

சோராபுதின் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அமித் ஷாவின் அதிகாரத்துக்கும் இலஞ்சப் பணத்துக்கும் பணிய மறுத்த காரணத்தினால் லோயா கொல்லப்பட்டாரா என்பதுதான் கேரவன் கட்டுரை எழுப்பும் கேள்வி. அதனால்தான், அக்கட்டுரை வெளியானவுடனேயே டெல்லி உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, மும்பய் உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி பி.ஹெச். மார்லபள்ளி ஆகிய இருவரும் லோயாவின் மரணம் குறித்து உச்சநீதி மன்றமோ அல்லது மும்பய் உயர்நீதி மன்றமோ உடனே விசாரிக்க வேண்டும் எனக் கோரினர்.

சோராபுதின் கொலை வழக்கு – சதிகளும் முறைகேடுகளும்

சோராபுதின் குஜராத் போலீசால் அகமதாபாத் நகரில் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். “சோராபுதின் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதியென்றும், அவன் மோடியைக் கொல்வதற்காக குஜராத்திற்குள் நுழைந்ததாகவும், குஜராத் போலீசின் தீவிரவாதத் தடுப்புப் படையினர் அவனைப் பிடிக்க முயன்றபொழுது நடந்த மோதலில் சோராபுதின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்” கூறியது, குஜராத் மாநில அரசு.

டிசம்பர் 28, 2006 அன்று சோராபுதினின் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி குஜராத்-ராஜஸ்தான் மாநில எல்லையையொட்டியுள்ள கிராமத்தில் குஜராத் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது, குஜராத் போலீசு.

இக்கொலைகள் நடந்த சமயத்தில் நரேந்திர மோடி தலைமையில் இருந்த குஜராத் மாநில அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் பா.ஜ.க.வின் இன்றைய தேசியத் தலைவரான அமித் ஷா.

சோராபுதினின் தம்பி ருபாபுதின் தனது சகோதரனின் மரணம் குறித்தும், அவர் இறந்துபோன அதே சமயத்தில் தனது அண்ணி கவுசர் பீ காணாமல் போனது குறித்தும் உச்சநீதி மன்றத்திற்குக் கடிதம் எழுதினார். ருபாபுதினின் கடிதத்தை வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம், சோராபுதினின் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது.

இவ்விசாரணையில், “சோராபுதின் தீவிரவாதி அல்ல, சிறு குற்றங்களைச் செய்துவந்த கிரிமினல். குஜராத், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமானவன். பா.ஜ.க. தலைவர்களுக்கும் போலீசுக்கும் கட்டுப்படாமல் நடந்து கொண்டதால் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சோராபுதின் மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதி என்பது கட்டுக்கதை” என்ற உண்மைகள் தெரியவந்தன.

சோராபுதின் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பே, அவனும், அவனது மனைவி கவுசர் பீயும் கூட்டாளி துளசிராம் பிரஜாபதியும் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மூவரும் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டனர். சோராபுதினைக் கொன்ற குஜராத் தீவிரவாத தடுப்புப் படை, கவுசர் பீயைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. பின் மயக்க ஊசி போட்டுக் கொன்று, அவரது சடலத்தை இரகசியமாக எரித்தும் விட்டது. மிச்சமிருந்த ஒரே சாட்சி துளசிராம் பிரஜாபதி என்பதால், அவனையும் சுட்டுக்கொன்றது குஜராத் போலீசு.

2010-இல் உச்சநீதி மன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், “இம்மூன்று படுகொலைகளும் குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க.வின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சாந்த் கடாரியா ஆகிய இருவரின் உத்தரவுப்படியே நடந்தன. அமித் ஷா இப்படுகொலைகள் நடந்த காலம் நெடுகிலும், இக்கொலைகளைத் தலைமையேற்று நடத்திய வன்சாரா உள்ளிட்ட போலீசு அதிகாரிகளோடு நேரடியாகவே தொலைபேசி மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு, இப்படுகொலைகளை மேற்பார்வையிட்டிருக்கிறார். இக்கொலைகள் தொடர்பாக அமித் ஷாவிற்கும் சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரிகளுக்கும் இடையே ஏறத்தாழ 331 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன” என்பவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமித் ஷா குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

நீதிபதி லோயா மரணத்தின் பின்னணி

வழக்கு விசாரணை குஜராத்தில் நடந்தால் சாட்சியங்கள் கலைக்கப்படலாம் என்ற அடிப்படையில் 2012-ஆம் ஆண்டில் மும்பய் சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற்றிய உச்சநீதி மன்றம், இவ்வழக்கை தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜே.டி.உத்பத் என்பவரை விசாரணை நீதிபதியாக நியமித்தது, மும்பய் உயர்நீதி மன்றம்.

நரேந்திர மோடி மே,2014-இல் பிரதமரான பிறகு, இவ்வழக்கைச் சீர்குலைக்கும் சதிகளை சி.பி.ஐ. அரங்கேற்றத் தொடங்கியது. அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க கோரினார். நீதிபதி ஜே.டி.உத்பத் அச்சலுகையைத் தர மறுத்து, ஜூன் 26, 2014 அன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஜூன் 25, 2014 அன்று அவரைத் திடீரென்று இடமாற்றம் செய்தது மும்பய் உயர்நீதிமன்றம். இவ்வழக்கை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவைத் துடைத்துப் போட்டுவிட்டு, இம்மாறுதல் செய்யப்பட்டது. எனினும் இந்த அத்துமீறலை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ளவில்லை.

உத்பத்தின் இடத்தில் நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷண் லோயா நீதிபதியாக நியமிக்கப்பட்டார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில்தான் இந்த வழக்கில் தன்னைச் சேர்த்திருப்பதாகவும், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும்” அமித் ஷா கோரினார். இதனை ஏற்க மறுத்த லோயா, டிசம்பர் 15, 2014 அன்று அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அக்.31 அன்று உத்தரவிட்டார். ஆனால், டிசம்பர் முதல் தேதி அவர் உயிருடன் இல்லை.

நீதிபதி லோயாவிற்குப் பின் எம்.பி.கோசாவி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னை விடுவிக்க கோரிய அமித் ஷாவின் மனுவை டிசம்பர் 15, 16 ஆகிய இரு தினங்களில் விசாரித்து, டிசம்பர் 30, 2014 அன்று அமித் ஷாவைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார் கோசாவி. அமித் ஷா அரசியல் காரணங்களுக்காகத்தான் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தான் ஒத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டு, அமித் ஷாவை விடுதலை செய்தார் கோசாவி.

இத்தீர்ப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் சி.பி.ஐ. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால்தான், நீதிபதி லோயாவின் மரணத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சந்தேகங்களும் பூசிமெழுகும் விளக்கங்களும்

நீதிபதி லோயா சக நீதிபதியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நாக்பூருக்குச் சென்ற இடத்தில்தான் திடீரென இறந்து போகிறார். அவரது அகால மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது குடும்பத்தினர், மிக முக்கியமாக லோயாவின் சகோதரியும் மருத்துவருமான அனுராதா பியானி கருதுவதற்கு 16 விதமான ஐயங்களை எழுப்பியிருக்கிறார்கள்.

இந்தத் திருமணத்திற்குச் செல்லும் எண்ணமே லோயாவுக்கு இல்லை. தன்னுடன் பணியாற்றும் இரண்டு நீதிபதிகளின் வற்புறுத்தலின் காரணமாகவே லோயா திருமணத்திற்குச் சென்றிருக்கிறார். அந்த இரண்டு நீதிபதிகளிடமிருந்து விலகியிருக்குமாறு நீதிபதி லோயாவின் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

அமித் ஷாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்குமாறு பல்வேறு இடங்களிலிருந்து நிர்பந்தம் கொடுக்கப்படுவதாக நீதிபதி லோயா தனது தந்தை மற்றும் சகோதரிகளிடம் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, அச்சமயத்தில் மும்பய் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மோஹித் ஷாவே லோயாவைச் சந்தித்து நூறு கோடி வரையில் பணமாகவோ அல்லது மும்பயில் வீடாகவோ தருவதாகப் பேரம் பேசியதாக லோயா தன் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

மேலும் அமித் ஷாவை விடுதலை செய்யும் தீர்ப்பை டிசம்பர் 30-இல் அறிவிக்குமாறும், அன்று வேறொரு முக்கியமான நிகழ்வு தலைப்புச் செய்தியாகிவிடும் என்பதால், அமித் ஷா விடுதலை குறித்த தீர்ப்பை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் மோஹித் ஷா லோயாவிடம் தெரிவித்ததாக லோயாவின் சகோதரி கூறுகிறார்.

அவர் இறந்த பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்ட கோசாவியும் டிச.30, 2014-இல்தான் அமித் ஷாவை விடுதலை செய்யும் தீர்ப்பை அளிக்கிறார். அன்றுதான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி விலகும் செய்தி வெளியாகி, அது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக அடிபட, அமித் ஷா விடுதலையான செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு, coronary artery insufficiency காரணமாக இறந்து போனதாக லோயாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த வகை மாரடைப்பு ஏற்படுமென்றும், நீதிபதி லோயாவிற்கு இந்த வகையான நோய்கள் எதுவுமே இல்லையென்றும், தமது சந்ததியில் யாரும் இந்த நோய்களால் பீடிக்கப்பட்டோ, மாரடைப்பு ஏற்பட்டோ இறந்து போகவில்லை என்றும் மறுக்கிறார், மருத்துவரான அனுராதா பியானி.

வெளியூருக்கு வந்த இடத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மையானால், மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்ற தகவலை, லோயாவுடன் இருந்த நீதிபதிகள் லோயாவின் குடும்பத்தினருக்கு உடனே சொல்லியிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் 1 அதிகாலை ஐந்து மணிக்கு லோயா இறந்துவிட்டாரென்ற தகவலைத் தங்களுக்கு அறிமுகமேயில்லாத விஜயகுமார் பார்தே என்ற நீதிபதி தொலைபேசியில் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையிலோ அவர் டிச.1 காலை 6.15 மணிக்கு இறந்து போனதாக கூறப்பட்டிருக்கிறது. கேரவன் பத்திரிகையாளர் நிரஞ்ஜன் தாக்லே நாக்பூர் அரசு மருத்துவமனையில் நடத்திய விசாரணையில், பெயர் வெளியிட விரும்பாத சிலர், அவரது உடல் நவ.30 அன்று நள்ளிரவே மருத்துவமனைக்கு வந்துவிட்டதாகவும், பெயருக்குப் பிரேத பரிசோதனை நடத்தினால் போதும் என மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர்.

இந்த முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, மாரடைப்பு ஏற்பட்டு இயற்கையாக மரணமடைந்ததாகக் கூறப்படும் நீதிபதி லோயாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமென்ன? அதற்கான சம்மதத்தை லோயாவின் மனைவி, தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் யாரிடமும் பெறாமல், லோயாவின் தந்தை வழி உறவினர் என நாக்பூரைச் சேர்ந்த பிரசாந்த் ரத்தி என்ற மருத்துவரை செட்டப் செய்து, பிரேதப் பரிசோதனையை நடத்தி, சடலத்தையும் அவரிடம் ஒப்படைத்தது ஏன்?

லோயாவின் மனைவியும் மகனும் மும்பயில் வசித்துவரும் நிலையில், அவரது உடல் குஜராத்திலுள்ள அவரது சொந்த கிராமமான கேட்காவ்னுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவரது சடலம் மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்திற்கு யாருடைய துணையுமின்றித் தனியாக அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறுகிறார், அனுராதா பியானி. மேலும், அவரது தலைப்பகுதியில் காயம் இருந்ததாகவும், அவரது சட்டையின் காலர் பகுதியில் இரத்தக் கறை இருந்ததாகவும் கூறும் அவர், இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த தாங்கள் கோரியதாகவும், அதனை லோயாவின் சக நீதிபதிகள் விரும்பாமல் தடுத்துவிட்டதாகவும் கூறுகிறார், அவர்.

லோயாவிடமிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை போலீசுதான் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், லோயாவின் கைபேசியை குஜராத்-லட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஷ்வர் பஹேதி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரன்தான் லோயாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறான். அக்கைபேசியில் அனைத்துப் பதிவுகளும் அழிக்கப்பட்டிருந்தன, “அந்த இரண்டு நீதிபதிகளிடமிருந்து விலகி இருங்கள்” என்ற குறுஞ்செய்தி மட்டும் தப்பியிருக்கிறது.

இந்த சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிரஞ்ஜன் தாக்லே எழுதிய கட்டுரை வழியாக வெளியே வந்துவிட்ட நிலையில், அவற்றுக்குச் சப்பைக்கட்டும் விதத்தில் விளக்கங்கள் தரப்படுகின்றன. லோயாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டவுடனேயே கொண்டுபோய்ச் சேர்த்ததாகக் கூறப்படும் தாண்டே மருத்துவமனையில் ஈ.சி.ஜி. இயந்திரமே வேலை செய்யவில்லை எனக் குற்றஞ்சுமத்தியிருந்தார், அனுராதா பியானி. அங்கு ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டதாகக் கூறி, அதனின் நகலைத் தற்பொழுது வெளியிட்டுள்ளனர். லோயாவிற்கு டிச.1, அதிகாலை 4.00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வெளியிடப்பட்டுள்ள ஈ.சி.ஜி.யில், அது எடுக்கப்பட்ட தேதி நவம்பர் 30 எனப் பதிவாகியிருப்பதோடு, லோயாவின் பெயரும் தவறாக உள்ளது. இவையெல்லாம்  தொழில்நுட்பக் கோளாறு எனச் சமாளித்திருக்கிறார்கள்.

பிரேதப் பரிசோதனைக்கான ஒப்புதலைத் தந்தவர் எங்கள் பெற்றோர் வழி உறவினரே அல்ல என லோயாவின் குடும்பத்தினர் மறுத்துவரும் நிலையில், ஒப்புதலைத் தந்தவர் லோயாவின் தந்தை வழி உறவினரின் உறவினர் எனக் கதை எழுதியிருக்கிறார்கள்.

நீதிபதி லோயாவின் சடலத்தோடு யாரும் வரவில்லை என்கிறார், அவரது சகோதரி பியானி. நீதிபதி லோயா இறந்துபோன நேரத்தில், அவரை வற்புறுத்தி திருமணத்துக்கு அழைத்துச் சென்ற இரு நீதிபதிகள் மட்டுமின்றி, 100 கோடி தருவதாகப் பேசிய மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவும் இருந்ததாக அவர்களே கூறுகின்றனர். ஆனால், தாங்கள் வேறு இரண்டு நீதிபதிகளை அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானதால் சடலத்தோடு வரமுடியாமல் போய்விட்டதாகவும் கதை சொல்கிறார்கள். நாக்பூர் போலீசோ, அந்த இரு நீதிபதிகளும் ஆம்புலன்ஸில் லோயாவின் உடலுடன் சென்றதாகச் சாதிக்கிறது.

‘மோடிக்கேத்த’ மூடியாய் நீதிமன்றம்

நீதிபதி லோயா இறந்து போன மூன்றாவது மாதத்திலேயே அவரது அகால மரணம் குறித்து விசாரணை வேண்டுமென லோயாவின் மகன் அனுஜ் மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவிடம் நேரிலேயே கடிதம் கொடுத்தும் அது கமுக்கமாகக் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

அமித் ஷாவை விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிராக மும்பய் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த சோராபுதின் தம்பி ருபாபுதின், ஒரு கட்டத்தில் தனது மேல்முறையீட்டு மனுவைத் தனது வழக்குரைஞருக்கே தெரியாமல் திரும்பப் பெற்றுக்கொண்டார். ருபாபுதின் மிரட்டப்படாமல், இது நடந்திருக்காது. ஆனால், ருபாபுதின் மிரட்டப்படவில்லை என மும்பய் உயர்நீதி மன்றம் விளக்கமளிக்கிறது.

அமித் ஷாவை விடுவித்த தீர்ப்பை மீளாய்வு செய்யவேண்டுமென்று, குஜராத் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகத் தனது பதவியைத் துறந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹர்ஷ் மந்தேர் மும்பய் உயர்நீதி மன்றத்திலும், அதன் பின் உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்தார். இரு நீதிமன்றங்களும் இதில் தலையிட மூன்றாவது நபருக்கு உரிமையில்லை எனக் கூறி, அவரது மனுக்களைத் தள்ளுபடி செய்தன.

காந்தி கொலையிலிருந்து இந்து மதவெறி கும்பலை விடுவிக்கும் நோக்கத்தில் அந்த
வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று அபிநவ் பாரத் என்ற அமைப்பின் டிரஸ்டியான பங்கஜ் பட்னிஸ் என்ற “மூன்றாவது நபர்” தாக்கல் செய்த மனுவை அனுமதித்து, இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்ற ஆலோசகரை (amicus curie) நியமித்துள்ள உச்சநீதி மன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வுதான், ஹர்ஷ் மாந்தேரின் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பதை எதிர்த்து அவருடைய கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

தமக்கு உடன்பட்டுக் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குப் பதவியும் சன்மானமும் அளிக்கவும் தமக்கு எதிராகத் துணிந்து நிற்பவர்களைத் தூக்கியெறிய எந்த எல்லை வரை செல்லவும் மோடி-அமித் ஷா கும்பல் தயங்கியதேயில்லை.

துளசிராம் பிரஜாபதி போலிமோதல் கொலை வழக்கில் அமித் ஷா மீது சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராகிவிட்டார்.

குஜராத் முசுலீம் படுகொலைகளில் மோடிக்கு பொறுப்பில்லை என்று  அறிக்கை அளித்த சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் ராகவன், சைப்ரஸ் தூதராகிவிட்டார்.

இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுப் பிணையில் வெளிவந்த பி.பி. பாண்டே குஜராத் போலீசுதுறையின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

அதே சமயம், அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்ட சி.பி.ஐ. நீதிபதி உத்பத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சோராபுதின் போலிமோதல் கொலை வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியன், அமித் ஷாவுக்கும் குஜராத் அரசுக்கும் எதிராக அறிக்கை அளித்ததன் காரணமாக, அவர் மீது சி.பி.ஐ. மூலம் அவதூறு பரப்பி, அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவிடாமல் தடுத்தது மோடி-அமித் ஷா கும்பல்.

குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்த உண்மையைக் கூறிய குஜராத்  உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

குஜராத் படுகொலையை நியாயப்படுத்துவதற்கும் தன்னைத் தீவிரவாதத்தை ஒழிக்க வந்த நாயகனாக காட்டிக்கொள்வதற்கும் 2002 – 2006 காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட போலி மோதல்களை அரங்கேற்றியிருக்கிறது மோடி-அமித் ஷா கும்பல். 2002 குஜராத் படுகொலை மூலம் அம்மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே, 2014-இல் லவ் ஜிகாத் என்ற பொய்யைக் கிளப்பி, முசாபர்பூர் கலவரத்தை நடத்தி உ.பி. நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது, அக்கும்பல்.

அதிகாரத்தைக் கைப்பற்றவும், தக்கவைக்கவும் எந்த எல்லை வரையும் செல்லத் தயங்காத கிரிமினல்தான் மோடி. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தத் தயங்காத சர்வாதிகாரிதான் மோடி. அதன் காரணமாக இறந்து போனவர்களைக் கேலி பேசிய இரக்கமற்ற கொடூரன்தான் மோடி. இத்தகைய கிரிமினலின் ஆட்சியில் நீதி, நியாயத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்பதைத்தான் லோயாவின் மரணம் எடுத்துக் காட்டுகிறது.

-செல்வம்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

பாரி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயி கமலாவின் போராட்டம் !

0
நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை என்றும், என் மகனும் அப்படித்தான்

மிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் விவசாயிகள் தங்கள் உரிமைக்காக போராடி வருவது அனைவரும் அறிந்ததே. கதிராமங்லம், நெடுவாசல் போன்ற விவசாய டெல்டா பகுதிகளில் அனுதினமும் விவசாயிகள் கொதித்தெழுந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

கமலாவும் அவரது மகன் இளவேந்தனும்

காவேரி பாயும் டெல்டா பகுதியான கரூர் மண்மங்கலம் தாலுக்கா பகுதிகளில் நெல், கரும்பு, வாழை போன்ற விவசாயம் செய்வது வழக்கம். இந்நிலையில் மண்மங்கலம் கிழக்கூரைச் சேர்ந்த பெண் விவசாயி கமலாவும் அவரின் மகன் இளவேந்தன் தன் சொந்த நிலத்தில் விளைவித்த கரும்பை வெட்டுவதற்கு புகளுர் பாரி சர்க்கரை ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய சம்பவம் சமீபத்தில் அனைத்து தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளியானது அனைவரும் அறிந்ததே!

இந்நிலையில் மக்கள் அதிகாரம் சார்பாக பாதிக்கப்பட்ட ஏழை பெண் விவசாயி கமலாவின் குடும்பத்தினரை சந்தித்து பிரச்சினை குறித்து கேட்டறிந்தோம். கிழக்கூரைச் சேர்ந்த பெண் விவசாயி கமலாவின் கணவர் தங்கவேல் இறந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தனது மகன் இளவேந்தனை கல்லூரியில் படிக்க வைத்து, கண்பார்வையற்ற தனது மாமியாரை பராமரித்து சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்.

தனக்கு சொந்தமான 3 ஏக்கரில் 1 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். 3-வது போகம் கரும்பு பயிரிட்டு வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு விற்பனை செய்ய கடந்த 21.12.2017 அன்று வெட்டும் பொழுது புகளுர் பாரி சர்க்கலை ஆலை ஊழியர்கள் மற்றும் கரும்பு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கமலாவின் கரும்பு காட்டிற்கு வந்து கரும்பை வெட்டக் கூடாது என்றும், கமலாவின் நிலத்தில் பயிர்செய்யப்பட்ட கரும்பு மேற்படி சர்க்கரை ஆலைக்கு சொந்தமானது என்றும், அதற்குண்டான ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து செய்துள்ளீர்கள் என்றும் கூறி கரும்பை வெட்ட விடாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

அப்பொழுது பெண் விவசாயி கமலா மூன்றாவது போகத்திற்கு மேற்படி சர்க்கரை ஆலையுடன் தான் எந்தவித ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்றும், கையெழுத்து என்னுடையது அல்ல என்றும், போலியான ஆவணம் தயார் செய்து, போலியாக கையெழுத்து போட்டு, நான் ஏழை விவசாயி என்பதால், என் கரும்பை அபகரிக்க நினைக்கிறீர்கள் என்று கூறி போராடியுள்ளார். மேலும் வலுக்கட்டாயமாக அவரின் சொந்த நிலத்திலிருந்தே கமலாவை வெளியேற்றியுள்ளனர்.

கமலாவின் நிலத்தில் பயிரிடப்பட்டு வெட்டாமல் கிடக்கும் கரும்பு

மேலும் கமலா கூறும்பொழுது, நாங்கள் 1 மற்றும் 2-வது போக கரும்பு வெட்டுவதற்கு மட்டுமே பாரி சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். 3-வது போக கரும்பு வெட்ட மேற்படி ஆலையுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று கூறியது மட்டுமல்லாமல், பாரி சர்க்கரை ஆலையின் அடாவடித்தனத்தையும், முறைகேடுகளையும் தோலுரித்து காட்டுகிறார் கமலா. கரும்பு ஒரு டன்னுக்கு அரசு நிர்ணயித்த தொகை ரூ.2750.00 ஆனால் பாரி சர்க்கரை ஆலையோ டன் ஒன்றுக்கு ரூ.2333.00 மட்டுமே தருகிறார்கள். அதோடு 12 மாதத்தில் வெட்ட வேண்டிய கரும்பை 14 மாதங்கள் கழித்த பின்னரும் கரும்பை வெட்டாமல் பாரி நிறுவனம் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றும், கரும்பு நன்கு விளைந்த நிலையில் வெட்டாமல் அது காய்ந்து சருகாகும்போதுதான் மேற்படி நிறுவனம் வெட்டுகிறது. இதனால் கரும்பில் உள்ள சர்க்கரை அளவு குறையாது… கரும்பின் எடை குறைந்து எங்கள் வயிறுதான் எரிகிறது… எனக்கூறி வேதனையடைகிறார் கமலா.

மேற்படி பாரி சர்க்கரை ஆலை வெட்டிய கரும்பை காலை முதல் மாலை வரை வெயிலில் அடுக்கி வைத்து மாலைக்கு மேல் லோடு செய்து எடுத்துச் செல்வதால், கரும்பின் எடை குறைந்து, கரும்பு மெலிந்து விடுகிறது. மேலும் கரும்பை எடை போடும்பொழுது அதனை பார்க்க எங்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் சொல்லும் எடைதான். மேலும் முதல் போகம் கரும்பை வெட்டி 10கி.மீ தொலைவில் உள்ள சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் சென்றதாகவும், இரண்டாவது போகம் வெட்டியபோது 60கி.மீ தொலைவில் உள்ள பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் சென்று காலை முதல் கரும்பை டிராக்டரிலேயே வைத்து, அதன்பின் தான் சர்க்கரை ஆலைக்குள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தற்போது 200கி.மீ தொலைவில் உள்ள ஆலைக்கு கரும்பை எடுத்துச் சென்று எடைபோடுவதால் கரும்பின் எடை குறைந்து எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவுப்படி, 30 கி.மீ சுற்றளவில் மட்டுமே கரும்பை கொள்முதல் செய்துகொள்ள வேண்டும், விவசாயிகளை அலைக்கழிக்க கூடாது என பிறப்பித்த உத்திரவினை மீறி பாரி சர்க்கரை ஆலை செயல்படுகிறது.

முருகப்பா நிறுவனத்தின் பாரி சர்க்கரை ஆலை

2வது போகம் கரும்பை வெட்டிய பின்னர் அரசு நிர்ணயித்த ஒரு டன்-க்கு ரூ.2750 வீதம் கணக்கு பார்த்தால் முதல் இரண்டு போகத்திற்கு மேற்படி பாரி சர்க்கரை ஆலை தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.58000 தனக்கு வரவேண்டியுள்ளது என்றும், அதனை தராமல் இன்றுவரை எங்களை அலைக்கழித்து ஏமாற்றி வருகிறார்கள் எனக்கூறினார். மேலும் ஏழை விவசாயிகள் மேற்படி ஆலையுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யாத நிலையில், ஒப்பந்தம் செய்துள்ளதாக பொய்யான ஆவணங்களை தயாரித்து எங்கள் கரும்பை அபகரித்து கொள்கின்றனர் என்றும், பணக்கார விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அவர்களாகவே கரும்பை வெட்டினாலும் ஆலை நிறுவனம் கண்டுகொள்வதில்லை என்றும், மேற்படி பாரி நிறுவனம் ஏழை விவசாயிகளை துன்புறுத்தியும் அரசியல் செல்வாக்குள்ள பணக்கார விவசாயிகளை கண்டுகொள்ளாமலும், பராபட்சமாக நடந்து கொள்கிறது என ஆதங்கப்படுகிறார் கமலாவின் மகன் இளவேந்தன்.

மேலும் கரும்பு காய்ந்து போனால் ஆலையின் சார்பில் எங்களுக்கு காப்பீடு தருவதாக கூறி எங்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஆனால் கரும்பு காய்ந்தவுடன் இழப்பீடு கேட்டால் 100 ஏக்கர் 200 ஏக்கர் என மொத்தமாக காய்ந்தால்தான் காப்பீடு தருவோம், ஒரு ஏக்கர், 2 ஏக்கருக்கு நீங்கள் தான் பொறுப்பு என தட்டிக்கழிக்கிறார்கள். இதனை அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. கரும்பு வெட்டிய பிறகு எங்களுக்கு மொத்த தொகையும் கிடைக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிடுகிறது. இதனால் நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல், எங்கள் குழந்தைகளுக்கு உரிய காலத்திற்குள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மேலும் கடன் பெறும் நிலை ஏற்பட்டுவிடுகிறது என குமுறுகிறார் கமலா. ஆகையால் இனிமேலும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளாத ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒருபோதும் கட்டுப்படமாட்டோம் என்கிறார் கமலா.

நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை

21.12.2017 அன்று சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு இன்ஸ்பெக்டர் வந்து, உங்களுக்கு குறையிருந்தால் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று கூறியதால், 23.12.2017 அன்று கமலாவும், அவரின் மகன் இளவேந்தனும் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் இல்லாத காரணத்தால் அவரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்துள்ளனர். மேற்படி மனுவில் 3-வது போகத்திற்கு தாங்கள் பாரி சர்க்கரை ஆலையுடன் எந்தவித ஒப்பந்தமும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும், அந்த கையெழுத்தும் தங்களுடையது அல்ல என்றும், எங்கள் நிலத்தில் விளைவித்த கரும்பிற்கு எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, எங்கள் விருப்பப்படி வெல்லம் தயார் செய்ய கரும்பை வெட்டுவதற்கு இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர். இந்த அரசு நடவடிக்கை எடுக்காது என்பதும் எங்களுக்கு தெரியும், அதிகாரிகள் கூறியதால் மனு கொடுத்தோம் என்று கூறினார் இளவேந்தன்.

விவசாயி கமலாவின் வீடு

எங்கள் கரும்பு காயும்போதும், நாங்கள் கஷ்டப்படும்போதும், பாரி நிறுவனம் எங்களை துன்புறுத்தியபோதும் இந்த அரசாங்கம் தலையிடவில்லை. அதனால்தான் நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை என்றும், என் மகனும் அப்படித்தான் என்கிறார் கமலா. இறுதியாக 27.12.2017-ம் தேதி புதன் கிழமை எங்கள் விளைநிலத்தில் உள்ள கரும்பை வெட்டப்போவதாகவும், “எவன் தடுத்தாலும் எங்கள் கரும்பு, எங்கள் மண்ணை விட்டுச் செல்லமாட்டோம்” இரவு பகல் பார்க்காமல் லாரியில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி நல்ல விளைச்சல் செய்வதால் தானே பாரி சர்க்கரை ஆலை வெட்ட வருகிறது. காயந்திருந்தால் எவன் வெட்டவருவான் ? பாரி நிறுவனத்திற்கு ஒரு துண்டு கரும்பக்கூட வெட்ட அனுமதிக்க மாட்டோம். மீறி வெட்ட முயற்சித்தால் என்னையும் என் மகனையும் வெட்டிவிட்டு கரும்பை வெட்டிட்டு போகட்டும் என மன உறுதியுடன் இருக்கிறார் எதிர்வரும் பிரச்சினையை களத்தில் சந்திக்க தயாராக உள்ளார் கமலா.

ஆம்! உண்மைதான், இது ஏதோ ஒரு கரும்பு விவசாயி கமலா குமுறல்கள் மட்டுமல்ல, உழைத்து வாழும் விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்திற்கே உண்டான கோபமும், மன உறுதியும் ஒட்டுமொத்த தமிழகத்தில் இந்தியாவில் தன் நிலத்தின் மீது விளையும் பொருளுக்கு தானே சொந்தக்காரன் என்று ஆளுமையோடு வரும் போராட்டக் குரல் !…

போராட்டக் குரலுக்கு தோள் கொடுப்போம் !
விவசாயிகளை காப்போம் !!
விளை நிலத்தின் மீதான நமது உரிமையை நிலைநாட்டுவோம்!!!

தகவல்
மக்கள் அதிகாரம், கரூர்
செல் – 97913 01097

 

உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை ! கருத்துப் படம்

3

32 நபர்களுக்கு உ.பி.யில் டார்ச் லைட் அடித்து கண் அறுவைசிகிச்சை

”நாங்க எல்லாம் அப்பவே…    பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சோம்”னு சொல்லி…
இனி, கல்ல எடுத்துதான் கண்ண நோண்ட போராய்ங்க

படம் : வேலன்

இணையுங்கள்:

 

ரஜினியின் டிசம்பர் 31 அறிவிப்பு : கருத்துக் கணிப்பு

27

ஆர்.கே.நகர் அத்தியாயம் முடியும் தறுவாயில் அடுத்த ‘பரபரப்பு’ வந்து விட்டது. வரும் டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவது பற்றி திருவாளர் ரஜினி அறிவிக்கிறாராம். இலண்டன் பிபிசி முதல் தில்லி என்டிடிவி வரை அலச ஆரம்பித்துவிட்டார்கள். என்றால் தமிழின் நடுப்பக்க கருத்து கந்தசாமிகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ரஜினியின் 67-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 66, 65, 64……….50 பிறந்த நாட்களில் என்னென்ன பேசினார்களோ அவையே சலிக்காமல் மீண்டும் புதிய மேக்கப்பில் வருகின்றன.

டிசம்பர் 26 முதல் ஆறு நாட்களுக்கு அடையாள அட்டை வைத்துள்ள ஆறு மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கிறாராம். புகைப்படமும் எடுக்கிறாராம். ரஜினியின் சமீபத்திய அரசவைப் புலவரான தமிழருவி மணியன் இந்த நாட்களின் திரைக்கதையை எழுதியிருப்பார் போலும்.

உதவி இயக்குநர்கள் விதந்தோதும் இயக்குநர் மகேந்திரன் முதல் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அவரும் ரஜினியைப் போன்ற தலைவர் யாருமில்லை, அவருடைய அறிவிப்பிற்காக காத்திருப்பதாக பேசியிருக்கிறார்.

பிறகு பேசிய ரஜினி “காலா படப்பிடிப்பு, மழை, மனம் சரியில்லாத காரணத்தால் ரசிகர்களை சந்திப்பது தள்ளிப்போனது” கூறியிருக்கிறார். மனம் சரியில்லாத காரணத்தால் காலா படப்பிடிப்பு ரத்தாகவில்லை, ரசிகர் சந்திப்புதான் ரத்தாகியிருக்கிறது. முன்னது பணம், பின்னது அடிமைத்தனம் என்பதால் விளக்கம் தேவையில்லை.

சென்ற முறை போர், வீரம் என்று ஆக்சன் ஹீரோ வேடம் போட்டவர் இந்த முறை, வியூகம், கஷ்டம் – நஷ்டம், தயக்கம் என ‘அறிவு’ வேடம் போடுகிறார்.  இறுதியில் வரும் 31 அன்று அரசியலுக்கு வரப்போவதாகத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் குறித்து அறிவிக்கப் போவதாக மட்டும் கூறியதாக தனிச்சிறப்பாக விளக்கியிருக்கிறார். இதை சாதாரண பாப்பையா பாணியில் ஆய்வு செய்தாலும், அவர் அரசியலுக்கு வரவில்லை என பொருள் கொள்ளலாம்.

எனினும் வரும் நாட்களில் பல்வேறு நிலைய வித்வான்களின் வாசிப்போடு ரஜினி அரசியல் பற்றி ஊடகங்களில் பீறாய்ந்து பேசப்படும். காதுகள் கவனம்.

இன்றைய கருத்துக் கணிப்பு

ரஜினியின் டிச 31 அறிவிப்பிற்கு என்ன காரணம்?

  • காலா – எந்திரன் 2.0 பட மார்கெட்டிங்
  • கமலுக்கு தான் குறைவில்லை என்று காட்ட
  • அட போங்கப்பா வினவுக்கு வேறு பிரச்சினை கிடைக்கவில்லை
  • தமிழருவி மணியனின் மாபெரும் சதித் திட்டம்
  • ரசிகர்களை தொடர்பில் வைத்திருக்க வேறு நாதியில்லை
  • சலிப்பூட்டும் நாடகம்
  • தமிழக மக்களின் முட்டாள்தனத்தில் அவ்வளவு நம்பிக்கை

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)

உத்திரப் பிரதேசம் : மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் !

0
மாதிரிப்படம்

சுமன் தேவி படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார். ஆனால் சரிந்து விழுந்துவிட்டார். அவரது மருமகள்கள் வேலைகளில் முழுமூச்சாக இருக்க அவரது குழந்தைகளோ விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒரு மூங்கில் கழியை பற்றிக்கொண்டு தடுமாறி மெதுவாக எழுந்து நின்றார். எட்டுக் குழந்தைகளுக்கு தாயாகவும் மற்றும் ஒரு பாட்டியாகவும் இருக்கும் 38 வயதே நிரம்பிய அவர் 11 -வது முறையாக கருவுற்றிருக்கிறார்.

சுமன் தேவி

உஷா தேவி, ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர் (Accredited Social Health Activist – ASHA). சுமன் தேவி வசிக்கும் உத்திரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த சலர்பூர் கிராமத்தில் ஒரு ஆஷாவாக(ASHA) அவர் பணி புரிகிறார். இந்தியாவின் சுகாதார அமைப்பைப் பொறுத்தவரையில், கருவுற்றப் பெண்களின் உடல்நலத்தை கவனிப்பது, அவர்களுக்கு அரசு அளிக்கும் விலையில்லாப் பொருட்களையும் மருந்துகளையும் கொடுப்பது, அருகாமை மருத்துவமனையில் நான்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதை உறுதி செய்வது மற்றும் அங்கு மகப்பேறுக்காக அழைத்து செல்வது ஆகியவை ஒரு ஆஷா ஊழியரின் பணிகளாக இருக்கிறது.

சுமன் தேவி கருவுற்றிருப்பது உஷா தேவிக்கு தெரியாது. கருவுற்றப் பெண்களின் பெயர்கள் இருக்கும் பதிவேட்டைத் தவறான இடத்தில் வைத்துவிட்டதாக அவர் கூறினார். “அவர் கருவுற்றதை அறிந்திருந்தால் இரும்புச் சத்து (இரும்பு ஃபோலிக் அமில) மாத்திரைகளை அவருக்கு அளித்திருப்பேன்” என்கிறார்.

கர்ப்ப கால இரத்த சோகை (maternal anaemia), எடைக்குறைவாக குழந்தை பிறத்தல் மற்றும் குறை பிரசவம் ஆகியவற்றை தடுப்பதற்காக கருவுற்றப் பெண்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

சுமன் தேவியும் தன் பங்கிற்கு ஆஷா ஊழியரை சந்திக்கவில்லை. அவர் கருவுற்ற அனைத்து காலத்திலும் கூடுதலாக (மருத்துக்கள் உள்ளிட்ட) எதையும் எடுத்துக் கொள்ளவில்லை, மருத்துவர் எவரையும் அவர் பார்க்கவில்லை அல்லது சிசுவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை செய்து பார்க்கவுமில்லை. சலர்பூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் தான் மருத்துவமனை உள்ளது. கருவுற்றப் பெண்களை மருத்துமனைக்கு அழைத்து சென்று மகப்பேறு முடிந்ததும் குழந்தையுடன் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்துவிடும் உத்திரப்பிரதேச அரசின் மருத்துவ ஊர்தி சேவையை அவர் அறிந்திருக்கவில்லை. மேலும் மருத்துவ ஊர்தி சேவையைப் பெறுவதற்கு கைப்பேசியும் அவரிடம் இல்லை.

இப்படியான மருத்துவ வசதிகள் இருப்பது பொதுவாக உத்திரப்பிரதேசத்தின் தெராய் பகுதி பெண்களுக்கு தெரியாமல் இருக்கிறது. பெண்களின் பேறுகால மரணங்கள் மற்றும் குழந்தை மரணங்களின் எண்ணிக்கை தெராய் பகுதியில் இருக்கும் பஹ்ரைச் மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்களைப் போல இந்தியாவில் வேறெங்கிலும் பார்க்க முடியாது. பேறுகாலத்தில் சராசரியாக ஒரு இலட்சம் குழந்தைகள் பிறப்பிற்கு 167 பெண்கள் மரணிக்கிறார்கள். ஆனால் ஆண்டு சுகாதார ஆய்வு 2012 – 13 -ன் படி தேவி பதான் பகுதியிலோ பேறுகால மரணங்கள் இலட்சத்திற்கு 366 ஆக இருக்கிறது.

தேசிய குடும்ப நல ஆய்வு 2015 – 16 -ன் படி பிறந்து ஒரு ஆண்டிற்குள் இந்திய அளவில் சராசரியாக ஆயிரத்துக்கு 41 குழந்தைகள் இறக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் தான் நாட்டிலேயே மிக அதிகமாக குழந்தைகள் இறக்கின்றன. அதாவது ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 64 குழந்தைகள் இறக்கின்றன.

குழந்தைகளின் இறப்பும் ஈன்ற தாயின் இறப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது:

பன்முறை கருத்தரித்த ஊட்டச்சத்து குறைபாடுடைய தாய் ஊட்டச்சத்து குறைபாடுடைய மகவையே ஈன்றெடுப்பார். இது தாயையும் மகவையும் சேர்த்தே பாதிக்கிறது.

பஹ்ரைச் மற்றும் பல்ராம்பூர் மாவட்டங்கள் தான் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிலேயே கீழ்மட்டத்தில் இருக்கும் மாவட்டங்கள். இது மென்மேலும் அப்பகுதிகளின் தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.

கோரக்பூரில் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 2017, ஆகஸ்டு மாதத்தின் இரண்டே நாட்களில் 30 குழந்தைகள் மடிந்தன – இது போன்று எதாவது கடுமையாக நடந்தாலொழிய இந்த நெருக்கடி நிலை வெளியே தெரியாது. கவனக்குறைவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மருத்துமனைகளின் மோசமான நிலையில் அல்ல மாறாக அடிப்படை மருத்துவ வசதிகள் கிராமங்களில் இல்லாததில் தான் இருக்கிறது உண்மையான பிரச்சினை.

மாதிரிப்படம்

குழந்தை இறப்புகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் ஏன் தோல்வி அடைகின்றன என்பதற்கு கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் தெராய் பகுதியிலிருந்து வரும் இந்த தொடர் அறிக்கைகள் ஒரு நெருக்கமான தோற்றத்தை தருகின்றன. முறையான சுகாதார அமைப்பிற்குள் கருவுற்றப் பெண்களை கொண்டு வர கையாலாகாத அரசாங்கத்திடம் இருந்து தான் இந்த தோல்வி தொடங்குகிறது.

குழந்தை பிறப்பு மற்றும் இறப்புகள்:

பஹ்ரைச்சின் மாவட்ட அரசு மருத்துவமனையில் 2017, அக்டோபர் மாதத்தில் 49 குழந்தைகள் மடிந்தன. பெரும்பாலான பெண்கள் வீடுகளிலேயே குழந்தைகளை பெறுகிறார்கள். முடிவில் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறைபாட்டு பிரச்சினையான ஆஸ்பிக்சியாவினால்(Aphyxia) குறிப்பாக மகப்பேறு சமயத்தில் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துவரும் நேரத்திற்குள் பாதி போராட்டம் முடிந்து விடுகிறது என்று குழந்தைகள் மருத்துவரான கே.கே.வர்மா கூறினார்.

சுமன் தேவியின் குழந்தைகள் அனைத்தும் வீட்டிலேயே பிறந்திருந்தன மேலும் அதில் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உடனடியாக இறந்து விட்டன. குழந்தைகளின் இறப்பிற்கான எந்த பதிவுகளும் கிடையாது மேலும் அவை எப்படி மடிந்தன என்று யாருக்கும் தெரியாது. “வீட்டில் குழந்தைகள் ஒருவேளை இறந்து விட்டால் குடும்பத்தார் வெறுமனே இறுதிச்சடங்கை செய்கிறார்கள்” என்கிறார் ஆஷா ஊழியர் உஷா தேவி. மகப்பேறின் போது பெண்கள் பலரும் குழந்தைகளும் இறக்கிறார்கள் ஆனால் அனைத்தையுமே நாங்கள் தெரிவிக்க முடியாது. ஏனெனில், மிகவும் தாமதமாக தான் சில நேரங்களில் எங்களுக்கு இது தெரிய வருகிறது.

தேசிய குடும்ப நல ஆய்வின் படி பொது நல மருத்துவமனைகளுக்கு செல்லாத 70 விழுக்காடு பெண்கள் பேறுகால பராமரிப்பை (பேறுகால உடல்நல கவனிப்புகள்) பெறுவதில்லை. பஹ்ரைச்சில் வெறும் 4 விழுக்காட்டு பெண்கள் மட்டுமே பேறுகால பராமரிப்பை பெறுகிறார்கள்.

ஒரே ஆஷா ஊழியர், பல்வேறு பணிச்சுமைகள்!

பல்வேறு வகையான சேவைகளுக்கு ஒரேயொரு ஊழியரை அதீதமாக சார்ந்து இருப்பது இந்திய சுகாதார துறையின் ஒரு பெரிய பலவீனமாகும். கருவுற்றப் பெண்களைப் பதிவு செய்வது, மருத்துவமனையில் மகப்பேறை உறுதிச்செய்தல், பிறந்த குழந்தைகளின் உடல்நலத்தை கண்காணித்தல், ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளை பகிர்தல் உள்ளிட்ட பணிகளை உஷா தேவி போன்ற ஆஷா ஊழியர்கள் செய்கிறார்கள். மேலும் அங்கன்வாடி ஊழியர்களும் துணை மருத்துவ தாதிகளும்(Auxiliary Nurse Midwives) ஊட்டச்சத்து திட்டங்களுக்காக, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவதற்கும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கும் இவர்கள் உதவி செய்கின்றனர்.

“வெளிநாடுகளில், குறிப்பிட்ட சேவைகளை அளிப்பதற்கு துறைசார் திறமை கொண்ட ஊழியர்கள் இருக்கிறார்கள்” என்று லக்னோவில் உள்ள டாக்டர் இராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மூத்த மகளிர் மருத்துவரான யசோதரா பிரதீப் கூறினார். “இந்தியாவில், அனைத்து உடல்நல குறிப்புகள், கருத்தடை, தாய்ப்பால் கொடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நோய்த்தடுப்பு குறித்த அனைத்தையும் ஆஷா ஊழியர் ஒருவரே விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று மேலும் கூறினார்.

தன்னுடைய ஆற்றலையும் நேரத்தையும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் மட்டும் செலுத்த முடியாத ஒரு ஆஷா ஊழியரால் பொது சுகாதார செய்திகளை அவர் வேலை பார்க்கும் சமூகம் முழுக்க திறம்பட கூற முடியாது என்று பிரதீப் வாதிடுகிறார்.

ஆஷா ஊழியர்களுக்கான பொறுப்புகள் பலவாக இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் என்னவோ சொற்பம் தான். குறைவான ஊதியம் மற்றும் ஊதியம் தாமதமாதலை எதிர்த்து 2017, மே மதம் ஆஷா ஊழியர்கள் உத்திரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். சில மாநிலங்கள் ஆஷா ஊழியர்களுக்கு ஓரளவிற்கு ஊதியம் கொடுக்கின்றன. ஆனால் செய்யும் சேவைகள் மற்றும் கையாளும் நபர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான ஊக்கத்தொகையை ஊதியமாக கொடுக்கும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று.

சான்றாக, கருவுற்றப் பெண்களுக்கு அனைத்து டெட்டானஸ் தடுப்பூசி மற்றும் போலிக் அமில மாத்திரைகள் கிடைப்பதையும், நான்கு பேறுகால உடல்நல பரிசோதனைகளை எடுப்பதையும் மற்றும் மருத்துவமனையில் குழந்தை பிறப்பையும் உறுதி செய்தால் தான் ஒரு ஆஷா ஊழியருக்கு 600 ரூபாய் கிடைக்கும். மறுபுறம் குடும்பக்கட்டுப்பாட்டிற்கு ஒரு ஆணை சம்மதிக்க வைத்தால் 400 ரூபாயும் ஒரு பெண்ணை சம்மதிக்க வைத்தால் 300 ரூபாயும் ஊக்கத்தொகையாக கிடைக்கும்.

“ஊக்கத்தொகை அடிப்படையிலான இந்த அணுகுமுறை காரணமாக அவர்கள் அதிகபட்ச பணத்தை பெறும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறார்கள்” என்று பிரதீப் கூறினார்.

மேலும் ஆஷா ஊழியர்களின் வெளிப்படையான பலன்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது மாறாக அவர்களின் முயற்சிக்கு அல்ல. “சில நேரங்களில் தடுப்பூசி போடுவதற்கும் மகப்பேறுக்காக மருத்துவமனை செல்வதற்கும் தாய்மார்களை(அல்லது கருவுற்றப் பெண்களை) சம்மதிக்க வைக்க நாங்கள் கடுமையாக முயன்றாலும் அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். அதனால் எங்களது முயற்சிகளுக்கு எவ்வித ஊதியமும் கிடைப்பதில்லை” என்று கூறினார் உஷா தேவி. அதனால் பல ஆஷா ஊழியர்கள் அதிகபடியான வேலைகள் எதுவும் செய்வதில்லை என்று மேலும் கூறினார்.

உஷா தேவி மாதமொன்றிற்கு சராசரியாக 500 ரூபாய் சம்பாதிக்கிறார். சில மாதங்களில் அதுவும் இல்லை.

பரிசோதனைகளுக்காகவோ அல்லது மகப்பேறுக்காகவோ மருத்துவமனைக்கு செல்ல பெண்களை சம்மதிக்க வைப்பதும் சில நேரங்களில் நடப்பதுண்டு. அனால் சுகாதார அமைப்பானது இருவரையும் ஏமாற்றி விடுகிறது. சான்றாக விலையில்லா மருத்துவ ஊர்தி சேவை அடிக்கடி வேலை செய்வதில்லை.

உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கு கருவுற்றப் பெண்களையும் பிறந்த குழந்தைகளையும் ஏற்றி செல்ல 2,270 மருத்துவ ஊர்திகள் உள்ளன. இந்த சேவையைப் பெற விரும்பும் பெண்கள் அவசர எண் 102 -யை தொடர்பு கொள்ள வேண்டும். பிற அனைத்து மருத்துவ நெருக்கடிகளுக்கும் மருத்துவ ஊர்தி அவசர எண் 108 -யை தொடர்பு கொள்ள வேண்டும். அவசர எண் 108 -ன் கீழ் 1,488 மருத்துவ ஊர்திகள் செயல்படுகின்றன. “அவசர எண் 108 -யை கருவுற்றப் பெண்கள் அழைத்தால் போதும் மருத்துவமனைக்கு அவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள்” என்று உத்தரபிரதேச மருத்துவ ஊர்தி சேவையின் பொறுப்பாளரான மருத்துவர் பி.கே. ஸ்ரீவஸ்தவ் கூறினார்.

மிக அதிகமான அழைப்புக்களாலோ அல்லது அலைப்பேசி சமிக்ஞை எதுவும் கிடைக்கவில்லை என்பதாலோ மருத்துவ ஊர்திகள் சில நேரங்களில் கிடைக்காது என்று ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

பெரும்பாலான உத்திரப்பிரதேச பெண்களுக்கு அவசர எண் பற்றி தெரியும் என்று வாதிட்டார் ஸ்ரீவாஸ்தவா. ஆனால் ஸ்க்ரோல் இணையதளம் நடத்திய கள ஆய்வின் படி பெரும்பாலான பெண்களுக்கு அப்படி ஒரு வசதி இருப்பது பற்றி தெரியாது.

மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல மருத்துவ ஊர்தி சேவை கிடைத்தாலும் ஊழல் மற்றும் பிற சவால்களால் வீட்டில் மகப்பேறு பார்ப்பதையே ஸ்க்ரோல் சந்தித்த பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். “மருத்துவமனைக்கு நான் சென்ற போது 200 ரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை பார்ப்பேன் என்று ஒரு செவிலியர் கூறியதாக” நகினா கூறினார். குழந்தைக்கு உடை வாங்க வைத்திருந்த பணத்தில் இருந்து செவிலியருக்கு தன்னுடைய கணவர் பர்கத் அலி பணம் கொடுத்ததாக மேலும் கூறினார்.

நகினா

மருத்துவமனை அதிகாரிகள் இந்த ஊழலை அறிந்திருக்கிறார்கள். ஆனால் அதை எதிர்ப்பதில் கையறு நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். “யாராவது புகார் செய்தாலும் மருத்துவமனை ஊழியர்கள் பணத்தை வாங்கியதற்கும் கேட்டதற்கும் சான்றுகள் இல்லை” என்கிறார் பால்ரம்பூரின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கன்சன்யாம் சிங். “ஒருவேளை நான் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்தால் என்னுடைய தலைவலி இன்னும் அதிகரிக்கும். ஏனெனில் இங்கே ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே இப்போது எங்களால் வழங்கப்படும் சிறு அளவிலான சேவையும் கூட இதனால் நிறுத்தப்படும்” என்று மேலும் கூறினார்.

அரசு மற்றும் சுகாதார அமைப்பை இந்த சமூகம் நம்பவில்லை என்பதை ஸ்ரீவாஸ்தவா ஒப்புக்கொண்டார். இது ஆஷா ஊழியர்கள் தங்களது வேலைகளை நிறைவேற்றுவதை கடினமாக்குகிறது. சான்றாக, சப்ருன் பேகம் கருவுற்றிருக்கும் காலத்தில் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்லவில்லை. மேலும் இரும்பு ஃபோலிக் அமில மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. “சர்கார் கி டாவை சே அஸர் நஹி பாடா,” என்று அவர் கூறினார். (அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மருந்துகளால் எந்த பயனும் இல்லை.)

ஆஷா ஊழியர்கள் ஒரு பெரிய சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டியிருப்பதால் தனிநபர்களிடம் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே இது சமூகத்திடம் அவநம்பிக்கையை மேலும் வளர்க்கிறது. ஒவ்வொரு சுகாதார ஊழியரும் 1000 பேர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான ஆஷாக்கள் அதை விட அதிகமான மக்களை கவனிக்கின்றனர். சான்றாக, உஷா தேவி 1,400 பேர்களை கவனித்துக் வருகிறார்.

ஆஷா ஊழியரின் மதமோ சாதியோ சில நேரங்களில் சவாலாக இருக்கிறது என்று உஷா தேவியின் மேற்பார்வையாளரான பூசாம் சர்மா கூறினார். “முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் இந்து ஆஷா ஊழியர் ஒருவர் சென்று அவர்களை சம்மதிக்க வைப்பது சவாலானது” என்று அவர் மேலும் கூறினார்.

கைவிடப்பட்டு விட்டனரா?

சுமன் தேவி போன்ற கருவுற்றப் பெண்களுக்கு சுகாதார பராமரிப்பு முறையின் சுமூகமான செயல்பாடு என்பது வாழ்விற்கும் சாவிற்கும் இடையேயான வேறுபாடு ஆகும். தன்னுடைய 11-வது கருவை சுமந்திருக்கும் நிலையில் சுமன் தேவி பிழைக்காமலும் போகலாம். “அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார்” என்று அந்த ஆஷா ஊழியர் கூறினார். “லக்டா நஹின் கே ஈ பர் பேஷ்கி” (ஏன் என்று எனக்கு தெரியவில்லை). என்று மேலும் கூறினார்.

மருத்துவ ஊர்தி சேவை, அருகமை அல்ட்ராசவுண்ட் சோதனை வசதி மற்றும் மருத்துவமனை மருத்துவர் – இவற்றை நம்பி தான் மகப்பேறுக்காக செல்லும் போது சுமன் தேவியின் உயிர் இருக்கிறது. ஆனால் இவற்றில் எதிலுமே உறுதி கிடையாது. (ஏனெனில்) முரண்பாடுகள் அனைத்தும் தெளிவாக அவருக்கு எதிராகவே உள்ளது.

– தமிழாக்கம் : சுந்தரம்

மூலக் கட்டுரை :

 

நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்

0

இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19 -ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். இதற்கு மாற்று சோசலிசமே!

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிறைவு, நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் எஸ்.பாலன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

வம்பர் புரட்சிக்குப் பின், ரஷ்யாவில் முதலாளித்துவம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. பண்ணை நிலங்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1917-க்குப் பிறகு பல நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கம் கண்டு போராடினர். காலனிய, அரைக்காலனிய நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

அதன் விளைவாக 1926-இல் இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் வருகிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை, போராடும் உரிமை என மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனுடைய தியாகத்தினால் பாசிசம் வீழ்த்தப்பட்டது, அதே காலக்கட்டத்தில் இந்தியாவில் 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி அகற்றப்பட்டு, அதன் இடத்தில் இந்திய அரசு நிறுவப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் 1947-க்குப் பின் இந்தியாவில் 44 சட்டங்கள் வருகின்றன, சட்டப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, குடியுரிமை, பணிப் பாதுகாப்பு, L.T.C., E.S.I., P.F., தொழிற்தகராறு சட்டங்கள், தொழிலாளர் நல அமைச்சகம், தொழிலாளர் துறை என அனைத்தும் தொடங்கப்பட்டன. இந்த ஆரம்ப காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் உரிமை எப்படி இருந்தது என்பதற்கு இவையெல்லாம் சான்று.

அன்று நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளிக்கு, E.S.I., BASIC PAY, P.F., பஞ்சப்படி, குடியிருப்பு என அனைத்துச் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. அதேபோல் மத்திய தொழிற்சாலைகளான H.A..L., B.H.E..L., தனியார் வங்கி, இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் போன்றவற்றிலும்கூட அனைத்துத் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்கள். இந்த நிலைமை 1980 வரைதான்.

1980-இல் சுமார் 20% தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள். 80% தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சட்டப் பாதுகாப்பு இல்லாதவர்கள். இந்த நிலைமை 1990-இல் 10% பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள், 90% பாதுகாப்பற்ற தொழிலாளர்கள். தற்போது 97% தொழிலாளர்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர், வெறும் 3% தொழிலாளர்களுக்கு மட்டுமே சலுகைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

1971-இல் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள் – CONTRACT REGULATION AND ABOLITION ACT – ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளியாக ஆக்கக்கூடிய சட்டம் அது. 1976-இல் மத்திய அரசின் அரசாணை ஒன்று வருகிறது. அந்த அரசாணையின்படி துப்புரவு, கேண்டீன், கார்டனிங், செக்கியூரிட்டி ஆகிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கூறியது அந்தச் சட்டம்.

இந்தச் சட்டத்தை முன்மாதிரியாக வைத்து நடந்த வழக்கில்தான் பல ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். 1997-இல் நடந்த ஏர்-இந்தியா வழக்கில் உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளியானார்கள்.

பின்னர் வாஜ்பாய் அரசு வந்தது. 2002-இல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. துப்புரவு, கேண்டீன், கார்டனிங், டிரைவிங் முதலிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்கத் தேவையில்லை என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் போட்டார்கள். 2001-இல் STEEL AUTHORITY OF INDIA வழக்கு தொடர்பான தீர்ப்பில் உச்சநீதி மன்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இத்தகைய  நடவடிக்கையின் மூலம் இந்த நாட்டின் 100கோடி கைகளும், கால்களும் இலவசம் என்று அறிவித்து விட்டார்கள். ஆகையால்தான் மோடி நாடுநாடாகச் சென்று எங்கள் நாட்டில் உள்ளதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூவிக்கூவி அழைக்கிறார்.

இந்த நிலைமையில் நாட்டில் எவ்வாறு தொழில் நடக்கிறது என்றால், மாருதி தொழிற்சாலையை எடுத்துக் கொள்ளுங்கள். மாருதி தொழிற்சாலையில் 15% நிரந்தரத் தொழிலாளர்கள், 80% ஒப்பந்த தொழிலாளர்கள். நிரந்தரத் தொழிலாளிக்கு ரூ.30,000 சம்பளம், ஒப்பந்த தொழிலாளிக்கு ரூ.7000 அல்லது 8000 தான். ஹுண்டாய் கம்பெனியில் 18% நிரந்தரத் தொழிலாளர்கள், 82% ஒப்பந்த தொழிலாளர்கள்.
H.A.L., H.M.T., B.H.E.L., ஆகியவற்றில் ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தரத் தொழிலாளர்களும் சரிபாதியாக உள்ளார்கள்.

மாநில அரசின் ஆம்புலன்ஸ், செவிலியர், EB control, கணினி ஆப்பரேட்டர்கள் என அனைத்திலும் ஒப்பந்த தொழிலாளர்கள். அரசு அலுவலகத்திலும் டைப்பிஸ்ட் முதற்கொண்டு அனைத்தும் குத்தகைமயம். இவர்களுக்கு ஊதியம் வெறும் ரூ.7,000 அல்லது 8,000 தான். நீதிமன்றங்களில் என்ன நிலைமை என்றால், நீதிபதியும் குத்தகை நீதிபதி, ஊதியம் ரூ.10,000 தான்.

பெங்களூரில் துப்பரவுத் தொழிலாளர்கள் துடைப்பம் கேட்டார்கள் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் செருப்பு கேட்டார்கள் என்பதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். சங்கம் வைத்தால், சங்கத்தில் பெயர் பதிவிட்டுள்ள அனைவரும் வீட்டிற்குப் போகவேண்டியதுதான்.   இந்த மாதிரியான நிலைமையில்தான், இந்தியாவில் 50 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

டொயோட்டோ கார் ஜெர்மனியில் என்ன விலையோ அதேதான் பெங்களுரிலும், சென்னையிலும், இங்கிலாந்து, அமெரிக்காவிலும். ஆனால், அதே இந்தியத் தொழிலாளியின் கூலி மட்டும் ஒரு டாலரில் கால் பங்கு, ஜெர்மனியில் 32 டாலர்.
1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியபோது ஜெர்மானிய முதலாளிகள் ஹிட்லரைத் தேர்ந்தெடுத்தார்கள். காரணம் போராடினால் இவர் இரும்புக் கரம் கொண்டு அடக்குவார் என்பதால்தான்.  போராடுபவர்களை நசுக்குவதற்காகவே இங்கே மோடி அரசு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஆகவே, இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19 ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். அப்படியென்றால், இந்த நூறு கோடி கைகள், நூறு கோடி கால்கள் நியாயம் கேட்டு எங்கே போவார்கள் என்பது தான் கேள்வி. சட்டசபையிலே சென்று முறையிட்டால் நடக்குமா, பாராளுமன்றத்தில் முடியுமா? நீதிமன்றத்தை நாடினால் உச்சநீதி மன்றம் கூறுகிறது தரமுடியாது என்று. ரஷ்யத் தொழிலாளி, முதலாளி வர்க்கத்தை தூக்கியெறிந்த பின்புதான் சுரண்டலிலிருந்து விடுபட்டான். இந்தியத் தொழிலாளிக்கு வேறு எதாவது மார்க்கமுண்டா என்றால், கிடையாது,

இந்த மூன்றாண்டுகால மோடியின் ஆட்சியில் பி.எஃப்., இ.எஸ்.ஐ., தொழிலாளர் துறை முடக்கம் எனத் தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய, எந்த உரிமையும் பெறப்படவில்லை. மக்கள் நல அரசு என்ற தகுதியை மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் என அனைத்தும் இழந்துவிட்டன. இவர்கள் யாரும் தொழிலாளியின் பக்கமில்லை. ஆகவே தீர்வுதான் என்ன என்றால், ரஷ்யப் புரட்சி. வழிதான் நமது வழி.

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர. ஆனால், அடைவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மார்க்ஸ். அதேதான் இன்றும். ஆனால், முதலாளிகள் இன்று என்ன சொல்கிறார்கள்? இதற்கு மாற்று என்ற ஒன்று இல்லை என்கிறான்.

நாம் கூறுகிறோம் சோசலிசமே மாற்று, இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானது சோசலிசம். சோசலிசமே வெல்லும், கம்யூனிசமே வெல்லும், தொழிலாளர்கள் அவர்களுடைய போராட்டத்தினால் வெற்றி பெற முடியும் என்று கூறி உரையை முடிக்கிறேன். நன்றி!

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்

நவம்பர் 30-ல் வீசிய ஒக்கிப் புயல் குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வை சூறையாடியிருக்கிறது. முன்னரே வானிலை எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. கேட்டால் இது எதிர்பார்க்காத புயல் என்கிறார், வானிலை ஆய்வு மைய இயக்குனர்.

ஒருக்கால் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ, புயலிலிருநது மீட்கவோ இந்திய அரசு, தமிழக அரசு நிறுவனங்களிடம் எந்த ஏற்பாடும், அக்கறையும் இல்லை. புயல் கடந்த பின்னரும் மீட்புப் பணியில் அரசுகள் முனைப்புடன் செயல்படவில்லை. புயல் வீசிய நாட்களில் குமரி கடலோரம் முழுவதும் மீனவ மக்கள் தங்களது சொந்தங்களை காப்பாற்றுமாறு கதறினர்.

ஊடகங்களில் சில விவாதங்கள் நடைபெற்றன. மத்திய மாநில அமைச்சர்கள் கடனே என்று குமரி சென்றனர். இருபது நாள் கழித்து வந்த மோடியும் கடற்கரைக்குச் செல்லாமல் புகைப்படக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு சில கோடிகளை நிவாரணமாக அறிவித்து விட்டு சென்று விட்டார்.

விளைவு, 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை இன்னமும் காணவில்லை. 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர். டிசம்பர் 25 கிறிஸ்மசுக்கு பிறகு இந்த எண்ணிக்கை சரியாக உறுதி செய்யப்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்மஸ் அன்று குமரி மீனவர்கள் எங்கே இருந்தாலும் ஊர் திரும்பியே ஆக வேண்டும் என்ற மரபும், யதார்த்தமும் அங்கே இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் அங்கே இல்லை

இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா?

பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்!

 

டிசம்பர் முதல் இரண்டு வாரங்களில் வினவு செய்தியாளர்கள் குமரி கடற்கரை கிராமங்களுக்கு நேரில் சென்றனர். அதே நாட்களில் இங்கே ஆர்.கே.நகர் தேர்தலை ஒட்டி காசி மேடு மீனவர்களையும் சந்தித்தனர்.

இந்த ஆவணப்படம் ஒக்கி புயலோடு தமிழக மீனவர்களின் வாழ்வாதார போராட்டத்தை தீவிரமாக எடுத்து வைக்கிறது. இந்தப் படத்தைப் பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்!

 

சென்னை டிச 25 : ஒக்கி புயல் – மீனவர்களின் நேருரை – பத்திரிகையாளர் கலந்துரையாடல் – அனைவரும் வருக !

1

வம்பர் 30-ல் வீசியஒக்கிப் புயல் குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வை சூறையாடியிருக்கிறது. முன்னரே வானிலை எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. கேட்டால் இது எதிர்பார்க்காத புயல் என்கிறார், வானிலை ஆய்வு மைய இயக்குனர். தன்னார்வ வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் ஒரு நாள் முன்பே எச்சரிக்கை கொடுத்தார். ஏன்?

ஒருக்கால் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ, புயலிலிருநது மீட்கவோ இந்திய அரசு, தமிழக அரசு நிறுவனங்களிடம் எந்த ஏற்பாடும், அக்கறையும் இல்லை. புயல் கடந்த பின்னரும் மீட்புப் பணியில் அரசுகள் முனைப்புடன் செயல்படவில்லை. புயல் வீசிய நாட்களில் குமரி கடலோரம் முழுவதும் மீனவ மக்கள் தங்களது சொந்தங்களை காப்பாற்றுமாறு கதறினர். ஊடகங்களில் சில விவாதங்கள் நடைபெற்றன. மத்திய மாநில அமைச்சர்கள் கடனே என்று குமரி சென்றனர். இருபது நாள் கழித்து வந்த மோடியும் கடற்கரைக்குச் செல்லாமல் புகைப்படக் கண்காட்சியை மட்டும் பார்த்து விட்டு சில கோடிகளை நிவாரணமாக அறிவித்து விட்டு சென்று விட்டார்.

விளைவு, 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை இன்னமும் காணவில்லை. 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர். டிசம்பர் 25 கிறிஸ்மசுக்கு பிறகு இந்த எண்ணிக்கை சரியாக உறுதி செய்யப்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்மஸ் அன்று குமரி மீனவர்கள் எங்கே இருந்தாலும் ஊர் திரும்பியே ஆக வேண்டும் என்ற மரபும், யதார்த்தமும் அங்கே இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் அங்கே இல்லை!

இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா?

இந்தப் பேரிடரையும், குமரி மீனவ மக்களின் துயரையும் இந்தக் கலந்துரையாடல் எடுத்து வைக்கிறது. குமரிக்கு நேரில் சென்ற பத்திரிகையாளர்கள் மூவர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். குமரி மாவட்ட மீனவர்கள் சார்பில் இரு மீனவ இளைஞர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். அவர்களின் ஒருவர் மீனவர்களே நேரில் சென்று மீட்ட அணியில் பங்கேற்றவர்.

இந்தக் கூட்டத்தில் குமரிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த வினவு செய்தியாளர்களின் நேர்காணலை அடிப்படையாக வைத்து “கண்ணீர்க் கடல்” எனும் திரைச்சித்திரம் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக!

நாள்: 25.12.2017 திங்கட் கிழமை

நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணி வரை

இடம்: ஆர்.கே.வி வெள்ளித்திரை பிரிவியூ தியேட்டர், சின்னத்திரை நிறுவனம் (RKV Film and Television Institute),
எண். 317-G, டாக்டர். என்.எஸ்.கே. சாலை, விஜயா கார்டன், வடபழனி, சென்னை-26
(சென்னை வடபழனி பேருந்து நிலையம் எதிரில்)

நேரம்: மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை

நிகழ்ச்சி நிரல்:

3.00 மணிக்கு அறிமுக உரை மற்றும்
ஒக்கிப் புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி

3.20 மணிக்கு ”கண்ணீர்க் கடல்” – திரைச்சித்திரம் திரையிடல்

4.45 மணிக்கு மீனவர் நேருரை மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல்

பங்கேற்பாளர்கள்:

திரு ஆர்.கே. ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
திரு அருள் எழிலன், பத்திரிகையாளர்
திரு பாரதி தம்பி, பத்திரிகையாளர்
தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க,
மீனவ இளைஞர்கள், குமரி மாவட்டம்

நிகழ்ச்சி ஏற்பாடு : வினவு
தொடர்புக்கு: 97100 82506 , 99411 75876

அனைவரும் வருக !

 

மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு ! தோழர் தியாகு

1

கார்ல் மார்க்சின் மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு !

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்!

தோழர்களே, இரண்டு நிகழ்வுகளை இணைத்து நாம் கொண்டாடுகிறோம். நாம் இணைக்கிற நிகழ்வுகள் என்பதைக் காட்டிலும்  வரலாற்றில் இந்த நிகழ்வுகள் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அறிவியல் துறையில் டார்வினுடைய நூல் வெளிவந்ததைக் குறிப்பிட்ட மார்க்ஸ், அந்தத் துறையில் அது ஒரு புரட்சி என்றார்.

சமூக அறிவியல் துறையில் மார்க்சின் மூலதனம் என்பது ஒரு திருப்பம். சமூக அறிவியலுக்கு அடிப்படை மாற்றத்தைக் கொடுத்தது. அதே போல் அரசியல் வரலாற்றில், உலக வரலாற்றில் ஒரு திருப்பு முனையைக்கொடுத்த புரட்சி என்றால் அது நவம்பர் புரட்சி தான்.

அண்டத்தின் பிறப்பு எனப்படுவது குறித்து ஒரு கருத்து அண்டவியல் துறையிலே உண்டு. பிக் பேங் (மாவெடிப்பு) கொள்கை என்று சொல்வார்கள். மனிதகுல வரலாற்றில் ஒரு நூலாகக் கண்ட மாவெடிப்பு மூலதனம், அரசியல் புரட்சியாகக் கண்ட மாவெடிப்பு  நவம்பர் புரட்சி. அது சோசலிசப் புரட்சிகளின் தொடக்கம் மட்டுமல்ல; அடிமைத் தனத்தில் உழன்றுகொண்டிருந்தநாடுகளில் விடுதலைக்கு வித்திட்ட புரட்சி அது.

மூலதனம் என்கின்ற அந்த நூலில் மார்க்ஸ் வகுத்துக் கொடுத்தபொருளியல் கொள்கை, அதற்கு அடிப்படையாக இருந்த மெய்யியல் அரசியல் இவற்றையெல்லாம் இந்த நாட்டின் எல்லைகளைத் தாண்டிக் கண்டங்களின் அளவில் கொண்டு சேர்த்த புரட்சி இந்த நவம்பர் புரட்சி.

முதன் முதலாக ஜெர்மானியப் பதிப்பிற்காக, மார்க்ஸ் மூலதனத்தை இலண்டனில் வாழ்ந்து கொண்டு எழுதினார். ஆனால், ஆங்கிலத்தில் எழுதாமல், தன் தாய்மொழியான ஜெர்மனில் எழுதினார். மார்க்ஸ் மறைந்ததற்குப் பிறகு எங்கெல்ஸ் செய்த மகத்தான காரியம் இரண்டாம் பாகத்திற்காக ஈராண்டு காலம், மூன்றாம் பாகத்திற்காக ஒன்பது ஆண்டு காலம் என அந்த வயோதிகப் பருவத்தில் கண் பார்வை மங்கியிருந்த போது, நோயுற்ற நிலையில், இறுதியாகப் புற்று நோய் தாக்கிய நிலையில் பதினோரு ஆண்டு  காலம் அந்த மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை வெளியிடுவதற்காகவே எங்கெல்ஸ் செலவிட்டார். அது மட்டுமல்ல, அதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட வேறு மொழிகளில் வந்த ஒவ்வொரு மொழிபெயர்ப்பையும் திருத்துவது எங்கெல்சின் வேலையாக இருந்தது.

பாலுக்குள் மறைந்திருக்கிற நெய்யைப் போல், பூவுக்குள் மறைந்திருக்கிற விதையைப் போல், மார்க்ஸ் என்று சொல்லும் போதெல்லாம் அதற்குள் எங்கெல்சும் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதற்கடுத்து நாம் மூலதனம் படைப்பிற்காக நினைவு கொள்ள வேண்டிய ஒரு நபர் இருப்பாரென்றால், அது  ஜென்னி மார்க்ஸ். அவர் பிரபுத்துவ குலத்திலே பிறந்தவர், அவருடைய சகோதரர் பிற்காலத்திலே பிரஷ்ய நாட்டினுடைய அமைச்சரவையிலே உள்துறை அமைச்சராகின்ற அளவுக்கு ஒரு பெரிய குடும்பம்.

மார்க்சுக்கும் ஜென்னிக்கும் பிறந்த குழந்தைகள் ஏழு. பசியால், பட்டினியால் நோயுற்றதால், மருத்துவத்திற்கு  வழியில்லாததால் 7 பேரில் 4 பேர் இறந்து போனார்கள்.

மார்க்சியம் என்ற விரிந்தகன்றமைந்த கருத்துக்குள்ளே மார்க்சிய மெய்யியல், மார்க்சியப்  பொருளியல், மார்க்சிய அரசியல் ஆகியவை அடங்குகின்றன. இப்போது எல்லாவற்றுக்குப் பிறகும் ஒரு இயம் என்று போட்டுவிடுகின்றார்கள். அப்படிப் போட முடியாது. மார்க்சியம் என்றால் என்ன என்கிற போது, லெனின்  பதில் சொல்கிறார், மார்க்ஸ்  கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு ஒழுங்கமைப்பு இது என்கிறார்.

மார்க்ஸ் இரண்டு கண்டுபிடிப்புகளைச் செய்தார். மனித சமூகத்தின் வளர்ச்சி விதியை அவர் கண்டுபிடித்தார்.

மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காகப் புதியவற்றைப் படைக்க வேண்டியுள்ளது. அப்படிப் புதியவற்றைப் படைக்கிறபோது, அந்தத் தேவை பெருகுகிறபோது, அவர்கள் அதை உற்பத்தி செய்யும்போது பொருட்களை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, தங்களுக்கிடையிலான புதிய உறவுகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த உறவுகள் ஒரு  கட்டத்தில் மேற்கொண்டு உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சிக்குத் தடையாகி விடுகிற போது, உறவுகளை மாற்றி அமைக்க வேண்டி வருகிறது. சமூக வளர்ச்சிக்கெல்லாம் மூல காரணமாக இருப்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், அதையொட்டி உற்பத்தி உறவுகளின் மாற்றமும் தான் என்ற விதியைக் கண்டுபிடித்தவர் கார்ல் மார்க்ஸ்.

இது ஒரு சாதனை, மூலதனம் முன்னுரையின் முதல் பாகத்தில் மார்க்ஸ் சொல்வார், “முதலாளித்துவம் நிறைய போர்வைகளைப் போர்த்திக் கொண்டு வருகிறது. ஜனநாயகப் போர்வை, பாராளுமன்றப் போர்வை இப்படி என்னென்ன வழிகள்இருக்கின்றதோ, அத்தனைக்குள்ளும் தன்னை ஒளித்துக் கொண்டு வருகிறது. இந்தப் போர்வைகளையெல்லாம் நீக்கி, முதலாளித்துவத்தை அம்மணமாக்கிக் காட்டுகிற வேலைதான் இந்த நூலை எழுதுவதில் எனக்கிருக்கின்ற நோக்கம்” என்று அவர் சொல்லுவார். மூலதனம் அதைத்தான் செய்கிறது.

ஒரு உடற்கூறியல் ஆராய்ச்சியாளன் உடற்கூறுகளைப் பற்றி ஆய்வு செய்யவேண்டுமென்றால், முதலில் அவன் தன் எதிரே உள்ள உடலைப் பார்க்க வேண்டும். தலை, வாய், கண், மூக்கு, தோல், கை, கால் என்று தான் அவன் ஆராய்ச்சி தொடங்கும். வெளியில்  உள்ள தோற்றப்பாடுகள், புலப்பாடுகளைத் தாண்டி, இறுதியாக இருக்கிற சாரம், ஒவ்வொரு உடலிலும் இருக்கின்ற உயிரணுவில் போய் முடியும். இதுவே ஆய்வு செய்கிற முறை.

ஆனால், இந்த முடிவை அவன் மாணவனுக்குக் கற்றுத்தருகிறபோது, அறிவியல் உலகத்தின் முன்னால் படைக்கிற போது எங்கிருந்து ஆரம்பிப்பான்? உயிரணுவிலிருந்து ஆரம்பித்து உடல் முழுவதையும் விளக்குவான். அதேபோல, இந்தச் சமூகத்தின் உயிரணு என்பது சரக்கு. இந்த உயிரணுவைக் கடைசியாகத் தான் விளக்கமுடியும், ஆனால், மார்க்ஸ் சரக்கு என்பதிலிருந்துதான் மூலதனம் நூலையே ஆரம்பிக்கின்றார்.

ஒவ்வொரு சரக்குக்கும் பயன்பாடு இருக்கிறது. ஒவ்வொரு பயன்மதிப்புள்ள சரக்கையும் சந்தையிலே போய்க் கொடுத்து வாங்குகிறோம். எனவே, அதற்கு மாற்று மதிப்பு இருக்கிறது. ஏதோ ஒருகட்டத்தில் இந்த சரக்கு உற்பத்தி என்பது, பணத்தின் அளவைக் கூட்டக்கூடிய ஒன்றாக மாறுகிறது. பணம், சரக்கு, கூடுதல் பணமாக ஆகிறது. எங்கே இந்த மர்மத்தைக் கண்டுபிடியுங்கள் என்று அவர் அறைகூவுகிறார்.

இந்த ஆய்வில் அவர் முடிவுக்கு வருகிறார். சந்தைக்கு எத்தனையோ சரக்குகள் வருகின்றன. சட்டை வருகின்றது, பேனா வருகின்றது, கட்டிடம் வருகிறது, கல் வருகிறது, இவையெல்லாம் அவற்றின் மதிப்புக்கேற்ப விற்கப்படுவதாகவும் வாங்கப்படுவதாகவும் நாம் அனுமானம் செய்து கொள்ளலாம். ஆனால், அதே சந்தைக்கு ஒரு புதிய சரக்கு வருகிறது. இது ஒரு அதிசயமான சரக்கு, அற்புதமான சரக்கு. அதற்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. சட்டைக்குள்ளே அடங்கியிருக்கிற மொத்த மனித உழைப்பு சட்டையின் மதிப்பைத் தீர்மானிக்கிறது, புத்தகத்திற்குள்ளே அடங்கியிருக்கிற மொத்த மனித உழைப்பு, புத்தகத்தினுடைய மதிப்பைத் தீர்மானிக்கிறது, இவையனைத்தும் தனிப்பட்ட ஒருவரின் உழைப்பல்ல; மாறாக, சமூக உழைப்பு; சமூக அளவிலான சராசரி உழைப்பு.

கார்ல் மாக்ஸின் மனைவி ஜென்னி மார்க்ஸ்.

ஒரு தொழிலாளி தன்னுடைய உழைப்புச் சக்தியைச் சந்தையிலே விற்க வருகிறான். அப்படி விற்க வரும்போது அந்த உழைப்புச் சக்தி என்ற சரக்கையும் வாங்குகிறார்கள். இந்த உழைப்புச் சக்தியை ஆலை முதலாளி வாங்கி நுகர்கிறான். நுகர்கிறான் என்றால், அவனுடைய ஆலையில் எந்திரங்கள் மீது, கரியின் மீது, மூலப் பொருட்களின் மீது அவற்றைப் பயன்படுத்துகிறான். இப்படிப் பிரயோகிக்கும்போது ஒரு அதிசய விளைவு ஏற்படுகின்றது.  அது என்னவென்றால், இந்த ஒரு சரக்கு மட்டும் தன் மதிப்புக்கு மேல் கூடுதல் மதிப்பைத் தோற்றுவிக்கிறது.

அவனுடைய 4 மணி நேர உழைப்பு அவன் உழைப்புச் சக்தியின் மதிப்பை நிறைவு செய்துவிடுகிறது. எஞ்சிய 4  மணி நேர உழைப்பு ஒரு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறது. அந்த உபரி மதிப்பு யாருக்குக் கிடைக்கிறது; எந்தமுதலாளியின் கையில் எந்திரங்கள், கச்சாப் பொருள், கட்டிடம் உள்ளிட்ட இதர பொருட்கள் இருக்கிறதோ, அவனுடைய கைகளில் உபரி மதிப்பு சேருகிறது. இதுதான் உபரி மதிப்பு, இதுதான் சுரண்டல் என்று அவர்முடித்து  விடுகிறார். இப்படி உபரிமதிப்பைப் படைக்கிற பணம் மூலதனமாகிறது. மூலதனம் உபரிமதிப்பைப் படைக்கிறது, உபரிமதிப்பு மூலதனத்தைத் தோற்றுவிக்கிறது.

ஒவ்வொரு சரக்கிலும், சமூக அளவில் தேவைப்படுகிற அந்த சராசரி உழைப்பு மதிப்பைத் தீர்மானிக்கிறது. இது எங்கு போய் ஈடேற்றம் பெறுகிறது? ஒருவன் பகவத் கீதை விற்கிறான், இன்னொருவன் பட்டைச் சாராயம்விற்கிறான். பட்டைச் சாராயத்திலும், பகவத் கீதையிலும் சரிசமமான உழைப்பு பங்கிடப்படுகிறது. இந்த உறவு யாருக்கும் யாருக்குமான உறவு? பகவத் கீதையை அச்சிட்டவனுக்கும், பட்டைச் சாராயம் காய்ச்சியவனுக்குமானஉறவு. இந்த உறவு நமக்கு எப்படித் தெரிகிறது? பட்டைச் சாராயத்திற்கும், பகவத் கீதைக்குமான உறவாக நமக்குத் தெரிகிறது. இதைச் சரக்குகளின் மாய்மாலம் என்று மார்க்ஸ் சொல்கிறார்.

இது மனிதர்களுக்கிடையிலான உறவைப் பொருட்களுக்கிடையிலான உறவாகக் காட்டுகிறது. தெருவில் ஒருவர் விளக்குமாறு விற்றுக்கொண்டு போகிறார். ஏய், விளக்குமாறு இங்கே வா என்று நாம் கூப்பிடுகிறோம். ஏனென்றால்,விற்கப்படும் பொருள் அதுதான். அப்படி அந்த விளக்குமாற்றினுடைய மதிப்பில் அடங்கிய ஆள் உருவமாக அந்த நபர் இருக்கிறார்.

உற்பத்தியும் உழைப்பும் சமூகமயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், உபரி மதிப்பு முதலாளிகளால் களவாடப்படுகிறது.

ஆனால், ஒரு அம்பானியை,  ஏய்! ஃபோன் இங்கே வா என்று அழைக்க முடிவதில்லை. அங்கே அந்த நிறுவனத்தின் பெயராக அது வந்து விடுகிறது.  ஏனெனில், அதில் சமூக அளவிலான உழைப்பு நிறைந்திருக்கிறது. இப்படி வருகிற போது, சரக்காக விற்கப்படுகிற உழைப்புச் சக்தி யாரிடமிருக்கிறது? தொழிலாளியிடமிருக்கிறது.

கூலித் தொழிலாளி ஒரு முனையில் இருக்கிறான், எந்த உற்பத்திச் சாதனங்களும் அவனுக்குச் சொந்தமில்லை, ஒரு நட்டு, கருவி, போல்டு என எதுவுமே அவனுக்குச் சொந்தமில்லை. இன்னொரு பக்கம் இந்தக் கருவிகள், உற்பத்திச் சாதனங்கள் எல்லாவற்றையும் தன் கையில் தனி உடைமையாக வைத்திருக்கின்ற முதலாளி. இந்த இரண்டு பேருக்கும் இடையிலான அந்த உறவு இருக்கிறதே, அந்த உறவுக்குப் பெயர் தான் மூலதனம்.

மூலதனம் என்றால் கரியில்லை, மூலதனம் என்றால் எந்திரமில்லை, மூலதனம் என்றால் வங்கியிருப்பில்லை. மூலதனம் என்பதின் வடிவங்கள் இவையனைத்துமே. ஆனால், மூலதனம் என்பதின் சாரம் இந்த உறவு தான். மூலதனம் உற்பத்தியாகிறதென்றால், இந்த உறவு உற்பத்தியாகிறது என்பது பொருள்.

முதலாளித்துவத்தினுடைய ஆதி மூலதனத் திரட்டல் என்பது என்னவென்றால், இந்த உறவைப் புதிதாக உண்டுபண்ணுவது. இந்த உறவை உண்டுபண்ணுவது அவ்வளவு எளிதில்லை. நிலத்திலிருந்து விவசாயியைப் பிரிக்கவேண்டும், பட்டறைத் தொழிலிருந்து பட்டறை அதிபரைப் பிரிக்க வேண்டும், கைவினைஞனைக்  கைத்தொழிலிடமிருந்து பிரிக்க வேண்டும், மொத்தத்தில் அவர்களை ஒன்றுமற்ற ஓட்டாண்டியாக மாற்ற வேண்டும்.

இந்திய துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் பஞ்சமும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலும், அமெரிக்காவில் ‘கோல்டு ரஷ்’ என்ற பெயரில் செவ்விந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இந்த மூலதனத் திரட்டலினுடைய சாரம்தான்.

இப்போது மூலதனம் பல வடிவங்கள் எடுத்துவிட்டது. இது தேச எல்லைகளை உடைத்துக்கொண்டு பரவுவது பற்றி 1847 -ஆம் ஆண்டு காலக்கட்டத்திலேயே கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார். முதலாளித்துவ பெருமலையை உடைப்பதற்கு மார்க்சும் எங்கெல்சும் வார்த்த சிற்றுளி கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை.

ஜெய்பூர் நகர விரிவாக்கத் திட்டத்திற்காகத் தமது நிலங்கள் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதை எதிர்த்து ராஜஸ்தான் விவசாயிகள் நடத்திய போராட்டம்.

இன்று சொல்கின்றார்களே, உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்பதான போக்குகள், எல்லாவற்றையும் சரக்குகளாக மாற்றுகிறது. அதாவது கல்வி சரக்கு, கலைகள் சரக்கு என எல்லாவற்றையுமே சரக்குகளாக மாற்றுவது என எல்லா ஒப்பந்தங்களும் நடக்கின்றன. இது முதலாளித்துவ சமூகத்தினுடைய வளர்ச்சி விதி. இந்த விதியை எவனொருவனும் மாற்றி எழுத முடியாது.

எப்படிப் பணம் மூலதனமாகிறது, எப்படி மூலதனம் உபரி மதிப்பைப் படைக்கிறது என்பதை முதலில் கோட்பாட்டளவில், பின்னர் நடைமுறைச் சான்றுகளோடு எடுத்துரைக்கிற நூல்தான் மார்க்சின் மூலதனம். படிக்க முடியாது என்றோ, முடிக்க முடியாது என்றோ கவலைப்படவேண்டாம், முயற்சி எடுத்துப் படிக்க வேண்டும்.

லெனின் அந்த நூலைப் படித்தார். அவர் படித்ததோடு நிற்கவில்லை, அந்த நூல் வரையறுத்துக் கொடுக்கிற விதிகளை, முதலாளித்துவ வளர்ச்சியினுடைய பொருளாதார இயக்க விதிகளைத் தன்னுடைய  நாட்டில் எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆய்வில் அவர் ஈடுபட்டார்.

ரஷ்ய முதலாளித்துவ வளர்ச்சி விதியை அவர் ஆய்வு செய்து கண்டுபிடித்த காரணத்தினால்தான், ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை, புரட்சி என்ற ஒரு புள்ளியிலே அவரால் முடிக்க முடிந்தது. நமக்கும் அப்படி ஒரு தேவை இருக்கிறது.

இது அறிவியல் நூல், நம்மைச் சூழ்ந்திருக்கிற சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு, அந்தச் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு அறிவியல் ஆயுதம் இந்த நூல். 27 வயதில் ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகளில் மார்க்ஸ்எழுதினார். அறிவியல் அறிஞர்கள், மெய்யியல் அறிஞர்கள் இந்த உலகைப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு முக்கியம் இந்த உலகை மாற்றுவது தான். இது நடக்க வேண்டுமென்றால் நாம் உழைக்கவேண்டும். மார்க்சும், எங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆற்றிய பணி என்பது தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே அறியும்படி செய்ததும், உணரும்படி செய்ததும் தான். இதில் ஒரு வார்த்தைகூட வீணாக எழுதவில்லை. அவர்களுடைய பணியின் சாரம் கனவுகளின் இடத்தில் அறிவியலை வைத்தார்கள்.

நான் இந்த மேடையிலிருந்து அறைகூவலாகச் சொல்கிறேன், மூலதனத்தின் அறிவியல் முடிவுகளை, மார்க்சியத்தின் அறிவியல் முடிவுகளை வேறு ஒரு தளத்திலே நின்று யாரும் கேள்வி கேட்கத் துணிந்தால், நானும்விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். எதையுமே படிக்காமல், யாரையுமே படிக்க விடாமல், மார்க்ஸ் போய்விட்டார், லெனின் போய்விட்டார், புரட்சி எப்படி நடக்கும் என்று பேசிக்கொண்டும், புலம்பிக்கொண்டும்இருப்பவர்களைப்  பற்றி நமக்குக் கவலையில்லை. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், நின் வழியே நீ செல் என்று மார்க்ஸ் நமக்கு அறிவுறுத்தினார்.

நாம் கோழைகளல்ல, தடுமாறுகிறவர்களல்ல, தெளிவானவர்கள் என்றால் மார்க்சியம் என்கிற அறிவியலை,  அதைச் சாறு பிழிந்து கொடுக்கிற மூலதனத்தை, அதை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டியிருக்கிற நவம்பர் புரட்சியை, மூலதனம் எப்படி இயங்குகிறது, முதலாளித்துவ அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதைக் கற்பிக்கிற அந்தப் பாடத்தைக் கற்போம், உள்வாங்குவோம், மற்றவர்களுக்குக் கற்பிப்போம், மாற்றத்தைக்கொண்டுவருவோம்.

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்

0
இட்லரின் நாஜிப் படைகளைத் தோற்கடித்த பிறகு, செஞ்சேனை படை வீரர் செங்கொடியை ஜெர்மன் நாடாளுமன்றக் (ரெய்ச்ஸ்டாக்) கட்டிடத்தில் ஏற்றும் வரலாற்று நிகழ்வு. (கோப்புப் படம்)

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிறைவு, நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து மும்பையிலிருந்து வெளிவரும் “ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய் அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.

க்டோபர் புரட்சியை நினைவு கூர்வதற்காகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தின் அமைப்பாளர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

20 -ஆம் நூற்றாண்டை அக்டோபர் புரட்சியைப் போலத் தீர்மானகரமாக மாற்றியமைத்த நிகழ்வு வேறெதுவும் இல்லை என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. உலகின் ஆக மிகப் பெரிய மக்கள் தொகையின் வாழ்க்கையினை நேரடியாக மாற்றிய அசாதாரண சீனப் புரட்சிகூட, அதன் போல்ஷ்விக் முன்னோடி இல்லாமல் சாத்தியமாகியிருக்க முடியாது. இருப்பினும், பின்னர் நேர்ந்த பின்னடைவுகளுக்குப் பிறகு, மார்க்ஸ் 19 -ஆம் நூற்றாண்டின் தத்துவ மேதையாக மட்டும் பல அறிஞர்களால் பார்க்கப்படுவது போல, அக்டோபர் புரட்சி 20 -ஆம் நூற்றாண்டு நிகழ்வாக மட்டும் கருதப்படுகிறது. ஆகையால்தான் நாம் காலத்தால் அழியவொண்ணாத சில உண்மைகளைத் திரும்பவும் வலியுறுத்த வேண்டிய அவசரம் எழுந்திருக்கிறது.

“ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய்

முதலில், அக்டோபர் புரட்சியில்தான் மனித வரலாற்றில் முதன்முதலில் மக்கள் வெறுமனே காலத்தின் போக்கில் அனிச்சையாக எதிர்வினையாற்றாமல், ஒரு திட்டவட்டமான செயல்திட்டத்தின்படிச் செயல்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர். மக்கள் தங்கள் சொந்த தலைவிதியைத் தாங்களே மாற்றிக் கொள்வதன் அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்து கொண்டால், அவர்கள் அவ்வாறு செய்து காட்ட முடியும் என்பதுதான் இந்த புரட்சியின் முக்கியத்துவமாகும். தங்கள் தலைவிதியை அவர்களின் மனம் போன போக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். அவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் மிகக் குறுகிய வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான். முன்னால் பிப்ரவரி புரட்சி நடக்காமல் அக்டோபர் புரட்சி நடைபெற்றிருக்காது தான். பிப்ரவரி புரட்சியும் அதற்கு முன்னால் நிகழ்ந்த எதேச்சதிகார நாடுகளுக்கிடையிலான போர் உட்பட, பல மாற்றங்களால் தூண்டப்பட்டது தான்.

நவம்பர் புரட்சிக்கு முன்பாக, 1917, ஜூனில், அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே என்ற அரசியல் முழக்கத்தின் கீழ் பெத்ரோகிரேடு நகரில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணி. (கோப்புப் படம்)

பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு கூட போல்ஷ்விக்குகள் தங்கள் விருப்பப்படி புரட்சியை துவங்கவில்லை. மக்கள் களத்தில் இறங்கத் தயாரான பிறகு தான், எதிரி குழப்பத்தில் இருந்த போதுதான், அவர்கள் எழுச்சியைத் துவக்கினார்கள். அக்டோபர் புரட்சி மிகத் துல்லியமாகவும், வலிமிகுந்ததுமான தயாரிப்புகளாலே சாத்தியமாயிற்று. திட்டமிடல் செயலளவில் மட்டுமல்ல, அமைப்பளவிலும், கோட்பாட்டளவிலும் செய்யப்பட்டது. பிறகு வந்த காலத்தில், லெனினிசக் கட்சி என்று அறியப்பட்ட கட்சியால் இந்தத் திட்டமிடல் செய்யப்பட்டது. (இந்தப் பரபரப்பான சூழலில்தான் 1917 -இல் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம், அரசும் புரட்சியும் என்ற இரண்டு கோட்பாட்டு நூல்களை லெனின் வெளியிட்டார். அரசும் புரட்சியும் என்ற நூல் அவர் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் ஜூலை மாதம் எழுதப்பட்டது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற நூல், வரப் போகும் புரட்சியின் சமூகப் பொருளாதார அடிப்படையை வரையறுத்தது; அரசும் புரட்சியும், புரட்சியின் அரசியல் நோக்கத்தை விளக்கியது.)

மக்கள் தங்கள் சொந்த முயற்சியால் வரலாற்றை மாற்றியமைக்க முடியும் என்ற இந்த உண்மை மனித வரலாற்றை அக்டோபர் புரட்சிக்கு முன், அக்டோபர் புரட்சிக்குப் பின் என்று இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, கட்சியின் உலக கண்ணோட்டம் மற்றும் பாதையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகப் புரட்சி பின்னடைவுக்குள்ளானது என்பது அதன் வரலாற்று முக்கியத்துவத்தை எந்த வழியிலும் குறைத்துவிடவில்லை. வரலாற்றை உணர்வுபூர்வமாக படைக்கின்ற ஆற்றல் தங்களுக்கு இருக்கிறது என்பதை மக்களால் இனி மறக்கவியலாது. மக்களின் இந்த ஆற்றல் குறித்துத்தான் சுரண்டும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன. அதனால்தான் இக்கோட்பாடுகளை மக்களிடம் பரப்புபவர்களை அழித்துவிட அவர்கள் எத்தனிக்கிறார்கள்.

இரண்டாவதாக, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுகின்ற ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதற்காக அல்லாமல், உழைப்புச் சுரண்டல் என்பதே இல்லாத ஒரு சமூகத்தைப் படைக்கும் பொருட்டு, ஒரு வர்க்கம் அன்றைய ஆளும் வர்க்கத்தை அகற்றி, தானே ஆளும் வர்க்கமாக மாற்றிக் கொண்டதென்பது வரலாற்றில் அதுதான் முதன் முறை. மழலைப் பருவம் தொடங்கிப் பிஞ்சு உள்ளங்களிலேயே திணிக்கப்பட்டிருந்த மரபு சார்ந்த கருத்துகள் எதையும் இந்தப் புதிய சமூகத்தால் பயன்படுத்திக் கொண்டிருக்க இயலாது.

இளம் சோவியத் அரசை வீழ்த்தும் நோக்கில் நடந்த ஏகாதிபத்திய படையெடுப்பின்போது, பெத்ரோகிரேடு நகரை ஆக்கிரமித்த் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு, ஜப்பானிய இராணுவத் துருப்புகள். (கோப்புப் படம்)

முதலாளித்துவத்தைப் போன்று  தன்னெழுச்சியாகத் தம்மைத்தாமே மறுஉற்பத்தி செய்து கொள்ளும் சக்திகளையும் இந்தப் புதிய சமூகம் நம்பியிருக்க முடியாது. வெகு மக்களின் உணர்வுபூர்வமான செயல்பாடுகளை மட்டுமே அது நம்பியிருக்க முடியும். எனவே, வரலாற்றில் நடைபெற்றுள்ள வேறெந்த ஆட்சி மாற்றத்தை விடவும் இந்த மாற்றம் மிக மிகக் கடுமையானதாகத் தான் இருந்திருக்க முடியும். இவ்வளவையும் எதிர்கொண்டு அது சாதித்த முன்னேற்றம் என்பது நிச்சயமாக அசாத்தியமானது.

மூன்றாவதாக, இந்தக் கடினமான பணி நடந்தது ஏகாதிபத்திய நாடுகளிலேயே தொழில் துறையில் மிகவும் பின் தங்கிய நாடு. உழைப்பாளர்களில் ஐந்தில் நான்கு பங்கினர் விவசாயிகளாக இருந்த நாடு. அந்தக் காலக்கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த புரட்சிகரத் தன்மையற்ற மிதவாத மார்க்சியவாதிகள், முதலில் ரசியா முதலாளித்துவ வழியில் போதிய வளர்ச்சி பெற்ற பின்னர்தான் பாட்டாளி வர்க்க ஆட்சி என்பதை நோக்கி முறையாக நகரமுடியும் என்று தொழிலாளி வர்க்கத்துக்குப் போதித்தார்கள். அன்றைய காலத்தின் முன்னனி மார்க்சியவாதியான கார்ல் கவுட்ஸ்கி, “போல்ஷ்விக் புரட்சியானது பாட்டாளிகளின் மிக உயர்ந்த இலக்குகளுக்கும் நாட்டின் மிகத் தாழ்வான வளர்ச்சி நிலைக்கும் இடையேயான பாரிய வேறுபாட்டை மிகவும் தீவிரமானதாக ஆக்கி விடும்” என்று அறிவித்தார்.

ஆரம்பத்தில், போல்ஷ்விக்குகள்கூடத் தங்கள் புரட்சியைத் தொடர்ந்து ஐரோப்பாவின் தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் புரட்சிகள் வெடிக்கும் என்று எண்ணினார்கள். விரைவில் அத்தகைய மாற்றங்களை எதிர் நோக்கி கம்யூனிச அகிலம் என்ற அமைப்பையும் உருவாக்கினார்கள். ஐரோப்பாவில் சில நம்பிக்கையளிக்கும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், அவை புரட்சிகளில் முடியவில்லை. ஆகையால், சோவியத் யூனியனின் பாட்டாளிகள் மீண்டும் முதலாளித்துவத்திற்குத் திரும்புவது அல்லது தனியொரு நாட்டில் சோசலிசத்தைப் படைப்பது என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யவேண்டிய இக்கட்டுக்கு ஆளானார்கள். மறுபடியும் மக்கள் தங்களது தலைவிதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியுமா, முடியாதா என்ற கேள்வியாகவே அது மாறியது. போல்ஷ்விக் தலைமையின் கீழ் மாபெரும் தியாகங்கள் பலவற்றின் ஊடாக, அதிசயிக்கத்தக்க வேகத்தில் தொழில் துறையில் முன்னேறிய ஒரு சோசலிச நாட்டை அவர்கள் படைத்தார்கள்

அக்டோபர் புரட்சியானது, பின்தங்கிய ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்கள், காலனிய, அரைக்காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை ‘வளர்த்து விடுவார்கள்’ எனக் காத்திராமல், தங்கள் விதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளுமாறு விடப்பட்ட ஒரு அறைகூவலாக அமைந்தது. 1917 -க்கு பிறகு, சில ஆண்டுகளிலேயே சீனா, இந்தியா, ஈராக், இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒரு பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கிளர்ந்து எழுந்தது. உண்மையிலேயே, மூன்றாம் நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளின் மக்கள் அக்டோபர் புரட்சிக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறார்கள்.

நான்காவதாக, அக்டோபர் புரட்சியானது, தங்களது சொந்த அதிகார உறுப்புகளான சோவியத்துகள் என்ற மக்கள் மன்றங்களின் மூலம், நேரடியாக ஆட்சியதிகாரத்தில் பங்குபெற்று, தங்களைப் பாதிக்கும் உண்மையான, பொருளாயத விவகாரங்கள் அனைத்தின் மீதும் முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்களே பெற்றிருந்த முதல் அரசை உருவாக்கியது.

சோவியத் மக்கள் தங்கள் அரசுக்கு தாங்களே சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளாதவரை, எப்படி அந்த இளம் அரசு ஐந்து ஏகாதிபத்திய இராணுவங்களின் படையெடுப்பையும், உள்நாட்டு எதிர்புரட்சிப் படைகளின் தாக்குதலையும் மீறிப் பிழைத்தெழுந்தது என்பதையும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஐரோப்பிய அரசுகளை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்த முடிந்த இட்லரின் படைகளை சோவியத் மக்களால் எப்படி முறியடிக்க முடிந்தது என்பதையும் புரிந்து கொள்ளவியலாது.

(இந்த ஏகாதிபத்திய படையெடுப்புகளை மனதில் கொள்ளாமல் சோவியத் யூனியனின் சாதனைகளை மதிப்பிடுவது சாத்தியமில்லை. இத்தகைய முதல் படையெடுப்பின் இறுதியில், அதாவது 1921 -இல், நாட்டின் தொழில்துறை உற்பத்தி போருக்கு முந்தைய ஆண்டுகளைவிட 80 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. அடுத்த சில ஆண்டுகள் போருக்கு முந்தைய உற்பத்தி நிலையை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே கழிந்தன.

இட்லரின் நாஜிப் படைகளைத் தோற்கடித்த பிறகு, செஞ்சேனை படை வீரர் செங்கொடியை ஜெர்மன் நாடாளுமன்றக் (ரெய்ச்ஸ்டாக்) கட்டிடத்தில் ஏற்றும் வரலாற்று நிகழ்வு. (கோப்புப் படம்)

அதன் பின்னர்தான் திட்டமிட்ட, வேகமான வளர்ச்சி நிகழ்ந்தது. ஆனால், போர் மூளும் என்ற அச்சுறுத்தலும், அதன் பொருட்டு சில வகை கனரகத் தொழில்களை அவரசமாகத் தொடங்குவதற்கான தேவையும் அமைதி நிலவிய குறுகிய காலப்பகுதியிலும் தொடர்ந்தது. 1937 வாக்கில் நாஜி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் கவிந்தது. மத்திய திட்டப் பொறுப்பாளர்கள் மீண்டும் போருக்கு தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரவலாக தெரிந்தது போல ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் பாசிசத்தைத் தோற்கடிப்பதில் முதன்மைப் பங்காற்றியது. இந்தப் போரில், உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரப் பேரழிவையும்  மனித உயிர் இழப்புகளையும் சந்தித்தது. இதற்காகவும் உலக மக்கள் சோவியத் மக்களுக்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறார்கள்.)

எந்த வகையில் பார்த்தாலும், அக்டோபர் புரட்சி என்பது 20 -ஆம் நூற்றாண்டிற்கு மட்டுமானது அல்ல. தனது எதிர்காலத்தைத் தானே உருவாக்கிக் கொள்ள விரும்பும் வேட்கை மனித இனமாகிய நம்மிடம் இருக்கும் காலம் வரை அது நம்முடன் இருக்கும். அதனைச் சாதிப்பதற்கான அறிவை அது நமக்கு வழங்கும். அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை. மாவோ கலாச்சாரப் புரட்சியின் போது முயற்சித்ததைப் போல, நாமும் அதை முன்னோக்கி எடுத்துச் செல்லமுடியும். ஆனால், இந்த எல்லா முயற்சிகளும், 21 -ஆம் நூற்றாண்டில் தொடரும் முயற்சிகள் உள்ளிட்ட அனைத்தும், அக்டோபர் புரட்சியின் வாரிசுகளே!

வாழ்த்துக்களுடன்,
ரஜனி எக்ஸ். தேசாய்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

ஒக்கி புயல்: தமிழ் இந்து நாளிதழின் கருத்து “ரேப்” !

2

“திசை திரும்புகிறதா குமரி மீனவர்கள் போராட்டம்?” – இது டிசம்பர் 15-ம் தேதி தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தியின் தலைப்பு. போராட்டம் திசை திரும்புவதை ஆராய்வது அல்ல… திசை திருப்ப வேண்டும் என்பதே இந்த செய்தியின் நோக்கம்.

குழித்துறை ரயில் மறியல் ஊர்வலத்தில் வந்த பாதிரியார்கள்! இதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை!

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தென்முனை கடலோரத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீனவர் போராட்டங்களை கத்தோலிக்க பாதிரியார்கள் கட்டுப்படுத்துகிறாரக்ள்; வழிநடத்துகிறார்கள் என்பது இந்த செய்தியின் சாரம்சம். ஆம்… பாதிரியார்களின் தலைமையில்தான் குழித்துறை ரயில் மறியல் நடந்தது. அவர்கள்தான் முன்னே நின்றார்கள். கடலோர மீனவ கிராமங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நிறைந்தவை. ஆகவே இந்த ஒக்கி புயல் பாதிப்புகளின்போதும் சர்ச் முன்னிற்கிறது. முன் நிற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியுமில்லை. இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவை இல்லை.

ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாத நிலையில், மீட்க வராத அரசுக்கு எதிராக பெரும் கொதிப்பு கடற்கரையோரம் முழுக்க பரவியுள்ளது. இது செயல்வடிவம் பெற்று பெரும் போராட்டங்களாக வெடிக்காமல் மெழுகுவர்த்தி ஊர்வலங்களாக அடங்குவதற்கு காரணம் பாதிரிமார்கள். இதன் பொருட்டு தமிழ் இந்துவும், அந்தக் கட்டுரையாளரின் மூளையில் இருக்கும் சமஸ்கிருத இந்துவும் நியாயமாக பாதிரிமார்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஆனால் தமிழ் இந்துவோ இந்த பாதிரியார்களின் மத அடையாளத்தை மட்டும் பூதாகரப்படுத்தி, ஒக்கி புயலின் பாதிப்புகள், மீனவர்களின் துன்பங்களை இரண்டாம்பட்சமாக்கி குளிர்காய பார்க்கிறது. ‘போராட்டத்தை பாதிரியார்கள் தூண்டிவிடுகிறார்கள்’ என்பது பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். குழுவினர் முதல் நாளில் இருந்து பரப்பி வரும் வதந்தி. அந்த வதந்தியை அப்படியே வாந்தி எடுத்து அதை ஒரு செய்தி என்று அரை பக்கத்துக்கு அனைத்துப் பதிப்புகளிலும் (ஆல் எடிசன்) எழுதுகிறது தமிழ் இந்து.

காவி ரவுடி அர்ஜுன் சம்பத்தின் அய்யர் ரவுடி வெர்சனான பால கவுதமனை சமூக ஆர்வலராக்கிய தமிழ் தி இந்து!

இது எதன் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பது முக்கியமானது. ‘புயல் நிவாரண மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு எந்திரத்தை முடக்கவும், மீனவ சமுதாயத்துக்குத் துரோகம் இழைக்கும் முயற்சியும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக’ சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு வலம் வந்ததாம். என்னே ஒரு இதழியல் தர்மம்?

‘புயல் நிவாரண பணிகளில் அரசு எதையும் புடுங்கவில்லை. மக்களை அனாதைகளைப் போல கைவிட்டுவிட்டது. நடுக்கடலில் மீனவர்கள் சாகிறார்கள்’ என்பதுதான் குற்றச்சாட்டே. இவர்கள் அப்படியே மொத்தமாக திருப்பிப் போடுகிறார்கள். ’சமூக ஊடகங்களில் வலம் வரும் குற்றச்சாட்டு’ என்று கூறி, கிறிஸ்தவ பாதிரிகள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் பால கவுதமன் என்பவர். இப்படியொரு குற்றச்சாட்டை நாம் தமிழ் சமூக ஊடகங்களில் காணவில்லை. ஒருவேளை “ஸமூஹ” ஊடகங்களில் வந்திருக்கலாம்.

இந்த பால கவுதமனை, ’சென்னையில் வசிக்கும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று அறிமுகப்படுத்துகிறது தமிழ் இந்து.  பால கவுதமன் ஓர் அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர். நாகர்கோயிலை சொந்த ஊராக  கொண்ட இவரை தந்தி டி.வி.யும், இன்னபிற தொலைக்காட்சிகளும் அவ்வப்போது ‘சமூக ஆர்வலர்’ என்றும், சில நேரங்களில் பா.ஜ.க. ஆதரவாளர் என்றும் விவாதங்களில் பயன்படுத்துவார்கள். தமிழ் இந்து இவரை, ‘சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று கௌவரப்படுத்தி இருக்கிறது. இவர் செய்யும் ஆராய்ச்சிகளை தமிழ் ஆர்.எஸ்.எஸ். தளமானwww.tamilhindu.com -வில் கட்டுரைகளாக படிக்கலாம். அது மட்டுமல்ல… 2013-ம் ஆண்டு இவருக்கு ‘இந்து தர்ம சேவா ரத்னா’ என்று விருது வழங்கி கௌரவித்திருக்கிறார் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன்.

கொலை கார சங்கராச்சாரியின் கையால் விருது வாங்கும் பால கவுதமன்!

பால.கௌதமனுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கும்போது எதற்கு அவரை ‘சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று அறிமுகப்படுத்துகிறது தமிழ் இந்து? அப்போதுதானே… இதை பொதுவான கருத்தாக கட்டமைக்க முடியும்? அப்படி இந்த ஆய்வாளர் என்ன அரிய கருத்தை சொல்லியிருக்கிறார்?

’’மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வந்து, மீனவப் பிரதிநிதிகளை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். கேரள கடல் பகுதியில் இருந்து இந்திய கடற்படையினர் மீனவர்களை வேகமாக மீட்கத் தொடங்கினர். ஆனால், 5 நாட்களுக்குப் பின்னர் மீனவர் பிரச்சினையை திசைதிருப்ப சூழ்ச்சி நடந்தது. இதில் சின்னத்துறை பாதிரியார் ஷபின், பூத்துறை பாதிரியார் ஆன்றோ ஜோரிஷ் ஆகியோர் தீவிரம் காட்டினர்.’’ என்று போகிறது பால கவுதமனின் ‘கருத்து’.

இந்திய கடற்படையினர் எவ்வளவு வேகமாக மீட்டனர், எத்தனை பேரை மீட்டனர் என்று தமிழ் இந்து நிருபரும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. நிர்மலா சீத்தாராமன் எவ்வளவு தெனாவட்டாக பேசினார் என்பது குறித்து தமிழ் இந்துவுக்கு கவலையும் இல்லை.

’’முதல்வர் பழனிசாமி குமரி மாவட்டம் வந்தார். மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.’’ என்று பால.கௌதமன் சொல்வதாக எழுதியுள்ளது தமிழ் இந்து. ஆனால் எடப்பாடி பாதிக்கப்பட்ட ஒரு மீனவ கிராமத்துக்குக் கூட வரவில்லை; மீனவர்களை சந்திக்கவில்லை. அது மட்டுமல்ல… எடப்பாடி வந்து சென்ற பிறகும் போராட்டங்கள் வெகு தீவிரமாக அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றன.

வெளிநாட்டு இந்துமதவெறி என்ஆர்ஐக்களிடம் பணம் சுருட்ட பால கவுதமன் நடத்தும் வேத ஆராய்ச்சி மையம்

உண்மைக்கு முற்றிலும் மாறான, வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை பொய்களையும் அவதூறுகளையும் உள்ளடக்கிய ஒரு ஆர்.எஸ்.எஸ். வெறியனை சமூகவியல் ஆராய்ச்சியாளன் என்று அறிமுகப்படுத்தும் உள்நோக்கம் கொண்ட இந்த செய்தியை தமிழ் இந்து ஆசிரியர் குழு தற்செயலாக வெளியிட்டது என்றோ, ‘சிக்கலின் மறுபக்கம்’ என்ற அளவில் இதுவும் ஒரு செய்தியாக வெளியிடப்பட்டது என்றோ சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. இது பத்திரிகை அறத்துக்கு புறம்பானது மட்டுமல்ல…  பொய் செய்தியை வெளியிட்டு பகையுணர்ச்சியை வளர்க்கும் அபாயகரமான நடவடிக்கை.

Vedic science research centre என்பது பால கௌதமன் இயக்குனராக உள்ள, இந்து மதவெறியை பரப்பும் ஒரு நிறுவனம். இதன் இணையதளத்தில் தமிழ் இந்துவில் வெளியான செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் முகப்புப் படமாக வைத்துள்ளனர். இன்னும் பல இந்துத்துவ குழுமங்களில் மிகுந்த உற்சாகத்துடன் இந்த செய்தி பகிரப்பட்டு வருகிறது. ஆகவே தமிழ் இந்துவின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

‘நாங்க தினத்தந்தி போல ‘கற்பழிப்பு’ செய்திகளை வழங்குவதில்லை’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறது தமிழ் இந்து. மூளைக்குள் நிகழ்த்தப்படும் இந்த ரேப் “கற்பழிப்பு” வகையில் வராதோ?

__________

பின்குறிப்பு:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தையும் திருச்சபை தூண்டிவிடும் கிறித்தவர்களின் போராட்டமாகவே சித்தரித்தனர் சங்கபரிவாரத்தினர். அப்போராட்டத்தில் இடிந்தகரை மீனவர்கள் மட்டுமல்ல, கூடங்குளம் இந்து நாடார்களும் பங்கேற்றார்கள். இந்த ஹிந்துக்களுக்கு ஆதரவாகப் போராடுவதற்கு சங்கராச்சாரி  போயிருக்கலாமே. அல்லது கிறித்தவ பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படும் ஹிந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தர்ம சன்சாத் பார்ட்டிகளையோ பாபா ராம்தேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி போன்ற ஜி க்களையோ அனுப்பி வைக்கலாமே!

  • கீரன்

செய்தி ஆதாரம் :


 

குஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?

6

தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சரி, காங்கிரசு கட்சியின் இந்துத்துவ எதிர்ப்பு பேச்சுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சரி, ஒரு சிறிய ஏமாற்றம். “குஜராத்தில் மோடி தோற்றிருக்க கூடாதா?” என்ற அங்கலாய்ப்பு.

பாஜக எப்படி வென்றது என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன :

முதலாவது பதில் – ஓட்டுப்பதிவு எந்திர மோசடி. 2002 -இல் தேர்தல் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொலை செய்யக் கூசாத கொடியவர்களும், பொய் வீடியோ, பொய் புகைப்படம், பொய் செய்தி ஆகியவற்றை பரப்புவதில் கைதேர்ந்தவர்களுமான காவி கிரிமினல்கள், இத்தகைய தில்லுமுல்லுகளை செய்யமாட்டார்கள் என்று கருத இடமேயில்லை. இருப்பினும், மிசின் தான் பிரச்சினையா, மற்றப்படி குஜராத் மக்கள் இந்துத்துவத்தின் பிடியிலிருந்து மீண்டுவிட்டார்களா, என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கின்றன. அதன் முன்னேற்றம் என்பது, இந்துத்துவ அரசியலிடம் சரணடைந்து பெற்ற முன்னேற்றம் என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ராகுல் காந்தி கோயில் கோயிலாகப் போனார் என்பது மட்டுமல்ல, மதச்சார்பின்மை என்ற சொல்லையோ, முஸ்லிம்கள் என்ற சொல்லையோ குஜராத்தில் அவர் தவறிக்கூட உச்சரிக்கவில்லை. அது “இந்து பெரும்பான்மையின் மனதை புண்படுத்தி விடும்” என்பது காங்கிரசின் அச்சம். இந்திராவும், ராஜீவும் பயன்படுத்திய மிதவாத இந்துத்துவம் என்ற துருப்புச் சீட்டுதான் இது.

தோல்வி பீதிக்கு ஆளான மோடி, “பாகிஸ்தான் – ஔரங்கசீப்” என்று வெறிக்கூச்சலை கிளப்பிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் “பாபு பஜ்ரங்கி, பிரவிண் தொகாடியா போன்ற படேல் சாதியினரை மோடி பலி கொடுத்துவிட்டாரென்றும் அவர்கள்தான் ஒரிஜினல் இந்துத்துவவாதிகள் என்றும்” ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருந்தார்.

“பாஜக இந்துத்துவக் கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். ஒரிஜினல் நாங்கள் இருக்கும்போது, குஜராத் மக்கள் டூப்ளிகேட்டுக்கு எப்படி ஓட்டுப்போடுவார்கள்?” என்று சொல்லி ராகுலின் கோயில் யாத்திரையை கிண்டல் செய்தார் அருண் ஜேட்லி.

ஒருவேளை காங்கிரசு வெற்றி பெற்றிருந்தால் அந்த வெற்றியின் “தன்மை” எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சோற்றுப்பதம்.

***

ங்கில இந்து நாளேட்டின் 19.12.2017 தேதியிட்ட இதழின்  நடுப்பக்கத்தில், குஜராத்தை பாஜக வெற்றி கொண்டது எப்படி என்ற தலைப்பில் சிரேயஸ் சர்தேசாய், சஞ்சய் குமார் ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில விசயங்கள் கவனிக்கத்தக்கவை. லோக்நிதி, சி.எஸ்.டி.எஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் அவர்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் சேகரித்த விவரங்களை அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்.

“ஐந்தில் இரண்டு வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போடுவது என்பதை கடைசி வாரத்தில்தான் முடிவு செய்தார்கள். அவர்களில் 53% பாஜகவுக்கும், 38% காங்கிரசுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இந்த கடைசி நாட்களில்தான் மதவெறியைத் தூண்டுகின்ற சங்கேத மொழியிலான பிரச்சாரம் மோடியால் முடுக்கி விடப்பட்டது” என்று கட்டுரையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது மட்டுமல்ல, எந்த தொகுதிகளில் முஸ்லிம் மக்கள்தொகை குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் இந்துக்களின் வாக்கு மேலதிகமாக காங்கிரசுக்கு விழுந்திருக்கிறது என்றும், முஸ்லீம்களின் மக்கள்தொகை சற்று அதிகமாக உள்ள இடங்களில் இந்து வாக்குகள் பாஜக -வுக்கு சென்றிருக்கின்றன என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தங்களது வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்ற பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளும் அளவுக்கு, இந்து சமூகத்தின் கணிசமான பிரிவினர் மதவெறிக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு இது சான்று.

திருச்சியிலிருந்து ஒரு நண்பர் சொன்னார். குஜராத் தேர்தல் முடிவுகளைப் பார்த்து ஆத்திரமடைந்த காந்தி மார்க்கெட் சிறுவியாபாரிகள், “என்னய்யா குஜராத் மக்கள் இவனுங்களுக்கு அறிவு சொரணை இருக்கா?” என்று கொந்தளித்தார்களாம். 2002 -இல் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை நேரடியாக கண்ணால் பார்த்த பின்னரும் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல், இதே குஜராத் மக்கள் இந்துத்துவ கொலைகாரர்களுக்கு வாக்களித்தபோது, இப்படியொரு கேள்வி இவர்களிடமிருந்து வரவில்லை. 2014 -இல் அந்தப் படுகொலையின் நாயகன் பிரதமரானபோதும் இந்தக் கேள்வி வரவில்லை. பண மதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி. -க்கு பிறகுதான் இந்த தேசத்தின் சொரணையற்ற நிலை குறித்து நம் வியாபாரிகளுக்கு உறைக்கிறது என்பதை அவர்களுக்கு நாம் உரைக்க வேண்டியுள்ளது.

இந்த வியாபாரிகளுக்கான பதிலை டிசம்பர் 6 -ம் தேதியன்றே பத்திரிகையாளர் ராணா அயூப், (குஜராத் ஃபைல்ஸ் நூலின் ஆசிரியர்} கூறிவிட்டார். ஜி.எஸ்.டி. -க்கு எதிராக சூரத்தில் தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வைர வியாபாரி ஒருவரிடம், “உங்களுடைய இந்தக் கோபம் வர இருக்கும் தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதிபலிக்குமா?” என்று கேட்டாராம். அதற்கு அந்த வியாபாரி சொன்னாராம். “இது வேறு, அது வேறு. நான் சொத்தை வித்தாவது மோடியை ஜெயிக்க வைப்பேன்” என்றாராம்.

குஜராத் தேர்தல் முடிவு பற்றி ஜிக்னேஷ் மேவானி கூறியிருக்கும் கருத்தும் (தமிழ் தி இந்து, 19.12.2017) நம் கவனத்துக்குரியது. “குஜராத்திகள் பாஜக மீது வைத்திருப்பது பாசமல்ல, பயம். தோல்வியடைந்தால் பாஜக -வினரே மதக்கலவரத்தை ஏற்படுத்துவார்கள். அதன் காரணமாகவே வணிகர்களும் நடுத்தர மக்களும் பாஜக -வுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள்” என்கிறார் ஜிக்னேஷ் மேவானி.

பாசமும் இருக்கிறது பயமும் இருக்கிறது என்பதுதான் உண்மை. தமது உடனடி வர்க்க நலன்கள் (வேலை வாய்ப்பு முதல் வணிகம் வரை) பாதிக்கப்பட்டாலும், அவற்றையும் மீறி மோடியை ஆதரிக்கும் அளவுக்கு இந்துத்துவ பாசம் இருக்கிறது. அதாவது, தானாடாவிட்டாலும் தசையாடும் என்று கூறுமளவுக்கு அந்தப் பாசம் குஜராத்தில் கணிசமான மக்கட் பிரிவினரிடம் இயல்பாகியிருக்கிறது.

அதேபோல பயமும் இருக்கிறது. ஜிக்னேஷ் மேவானி குறிப்பிடும் அந்தப் பயத்தை பெரும்பான்மை சமூகத்திடம் ஏற்படுத்துவதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம். கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் முதலானோரின் கொலையில் தொடங்கி நீதிபதி லோயாவின் மர்ம மரணம் வரையிலான அனைத்தின் நோக்கமும் இதுதான்.

***

ந்துத்துவ பாசிசத்தின் மீதான இந்தப் பாசத்திலிருந்து சித்தாந்த ரீதியாகவும், அவர்கள் மீதான பயத்திலிருந்து நடைமுறை ரீதியாகவும் மக்களை விடுவிக்கின்ற சாத்தியம் தேர்தல் அரசியலில் இருக்கிறதா?

இந்தக் கேள்விக்கு பல முற்போக்காளர்களிடம் தயாரான பதில் இருக்கிறது. “தேர்தல் அரசியலுக்கு அப்பால் என்று பேசுவதெல்லாம் உடனடியாக ஆகக்கூடிய காரியங்கள் அல்ல. அதெல்லாம் வெறும் வாய் வீச்சு. நடைமுறையில் ஆகக்கூடியது தேர்தலில் பாஜக -வை தோற்கடிக்க வேலை செய்வது ஒன்றுதான்”

இந்தப் பதிலை நமது சமீபத்திய அனுபவத்துடன் சேர்த்துப் பரிசீலித்துப் பார்ப்போம். 2014 மோடியின் வெற்றிக்குப் பிறகு, கேஜ்ரிவால் டில்லியில் பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாக கொண்டாடப்பட்டது.

அரசியல் கட்சிகள் அரசு எந்திரம் உள்ளிட்ட இந்த அரசமைப்பின் தோல்வி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை மையப்படுத்தி, “ஜனாதன சர்க்கார்” என்ற அரசியலற்ற என்.ஜி.ஓ. முழக்கத்தை முன்வைத்த கேஜ்ரிவால், தவறியும் இந்துத்துவ எதிர்ப்பு பேசவில்லை. நல்லிணக்கம் பேசுகின்ற இந்துவாகவே தன்னை முன்நிறுத்திக் கொண்டது மட்டுமல்ல, ஜாட் சாதிவெறியர்களின் காப் பஞ்சாயத்தை நமது பண்பாட்டின் அங்கம் என்று கூறி சொறிந்து விடும் வகையிலும், காஷ்மீர் விவகாரத்தில் பாஜக -வை வழிமொழியும் வகையிலும் இருந்தது அவருடைய அரசியல்.

தேர்தல் அரசியலில் இந்துத்துவ எதிர்ப்புக்கு கிடைத்த அடுத்த நம்பிக்கை நட்சத்திரம், லாலு – நிதீஷ் கூட்டணி. சாதிய பிழைப்புவாதிகள், சாதி வெறியர்கள், ஊழல் பேர்வழிகள், நிரூபிக்கப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாதிகள் ஆகியோரெல்லாம் சேர்ந்து அமைக்கும் கூட்டணி என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், “இப்போதைக்கு இதுதான் சாத்தியம்” என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு, இந்துத்துவத்தை வீழ்த்துவதற்கான மாபெரும் முன்மாதிரி என்று இந்தக் கூட்டணியைக் கொண்டாடினார்கள் பல முற்போக்காளர்கள். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த பலூனில் நிதீஷ் ஊசியைக் குத்தினார்.

“ராகுல் அகிலேஷ் ஆகியோர் மாயாவதியுடன் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் உ.பி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வை வீழ்த்தியிருக்க முடியும்” என்று, வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்களைக் கையில் வைத்துக்கொண்டு, தேர்தலுக்குப் பின் அங்கலாய்த்துக் கொண்டார்கள் பல முற்போக்காளர்கள்.

“நடைமுறையில் ஆகக்கூடிய ஒரே வழி” என்று பெரிதும் நம்பப்படும் தேர்தல் அரசியலில், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் என்று நம்பப்படும் கட்சிகளின் உண்மையான நிலை இதுதான்.

காங்கிரசும் பாஜக -வும் ஒன்றல்ல, சமாஜ்வாதியும் பாஜக -வும் ஒன்றல்ல அதேபோல ஆம் ஆத்மியும் பாஜக -வும் ஒன்றல்ல என்பதென்னவோ உண்மைதான். ஆனால், “இந்துத்துவவாதிகள் அல்லர்” எனப்படுவோரெல்லாம் “இந்துத்துவ எதிர்ப்பாளர்”களாகி விடுவார்களா? அவ்வாறு நாம் கற்பிதம் செய்து கொள்வது இந்துத்துவ பாசிசத்தை எதிர்ப்பதற்கு உதவுமா, ஊறு விளைவிக்குமா என்பதே கேள்வி.

இது “ஓட்டுப்போடுவதா, தேர்தலைப் புறக்கணிப்பதா” என்ற கேள்வியல்ல, இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க தேர்தல் அரசியல் பயன்படுமா? என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை எதார்த்தமாக நம் கண் முன்னே இருக்கும் உண்மை விவரங்களிலிருந்து பரிசீலிக்க வேண்டும்.

***

ந்துத்துவ பாசிசம் என்பது “முஸ்லிம் எதிர்ப்பு அல்லது பன்முகத்தன்மை எதிர்ப்பு” என்று மட்டுமே பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாதிய, இன, மொழி ஒடுக்குமுறைகள் அடங்கிய பார்ப்பனிய உள்ளடக்கமும் தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்திய சார்பு உள்ளடக்கமும் பிரிக்கவொண்ணாத வகையில் பிணைந்திருப்பதுதான் இந்துத்துவ பாசிசத்தின் அரசியல்.

மோடியின் பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் பிற நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள்தான். இப்படி விவசாயிகள், பழங்குடிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், சுய தொழில் செய்வோர் என இந்த நாட்டின் ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களை சூறையாடுகின்ற மோடியின் “வளர்ச்சிப் பாதை”க்கான (விகாஸ்) சித்தாந்த நியாயம் பார்ப்பனியத்தில் இருக்கிறது.

பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட சகித்துக் கொள்ளவியலாது என்கின்ற புள்ளியில், “வர்க்கச் சுரண்டலும், ஏற்றத்தாழ்வும் தவிர்க்கவியலாத விதிகள்” என்று தலையெழுத்தைப் போல சகித்துக் கொள்ளச் சொல்கின்ற புள்ளியில், புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் ஒன்று கலக்கின்றன.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவம் என்ற சொல்லையே உச்சரிக்காமல் “விகாஸ் விகாஸ்” என்று முழங்கிய மோடி, 2017 குஜராத் தேர்தலில் விகாஸ் பற்றியோ, குஜராத் மாடல் பற்றியோ மூச்சு விடாமல், இந்துத்துவம் பேசிவிட்டு, இப்போது தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இது “என்னுடைய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி” என்கிறார்.

“இந்துத்துவம் – விகாஸ்” ஆகிய இரண்டையும் பிரித்துக் கையாள்வது எப்போதுமே மோடிக்குத்தான் சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் மோடியை எதிர்ப்பதற்கு தேர்தல் கட்சிகளை சார்ந்திருப்பவர்களும்கூட இரண்டையும் பிரித்தே கையாள்கிறார்கள். அவ்வாறு பிரித்துக் கையாளாவிட்டால் ராகுலை முன்னிறுத்தி மோடியை எதிர்ப்பது அவர்களுக்கு சாத்தியமற்றதாகிவிடும்.

இந்துத்துவ எதிர்ப்பை தேர்தல் அரசியலின் வரம்புக்கு உட்படுத்தும்போது தோன்றும் முரண்பாடு இது ஒன்று மட்டுமல்ல.

அரசியல் கட்சிகள் கொள்கையற்ற பிழைப்புவாதிகள் ஆகியிருப்பதைப் போலவே, நீதித்துறை, போலீசு, அதிகார வர்க்கம், ஊடகங்கள் ஆகியவை உள்ளிட்ட ஒட்டு மொத்தக் கட்டமைவும் தானே வகுத்துக் கொண்ட விதிகளுக்கு கட்டுப்பட மறுப்பவையாக மாறிவிட்டன. உச்ச நீதிமன்றம் தொடங்கி கீழமை நீதிமன்றங்கள் வரையில் சந்தி சிரிக்கும் ஊழல், முறைகேடான தீர்ப்புகள், அதிகார வர்க்கம் போலீசின் கிரிமினல் நடவடிக்கைகள் ஆகியவை, ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் பார்ப்பன பாசிசம் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. அரசமைப்பின் இந்த உறுப்புகள் இந்துத்துவ சார்பாக மாறும் போக்கையும் துரிதப்படுத்தியிருக்கின்றன.

இவையெதுவும் சிக்கலான கோட்பாட்டு விவகாரங்கள் அல்ல. தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தை விட்டு வெளியறுகிறார் பிரசாந்த் பூஷண். வழக்கறிஞர் தொழிலை விட்டு விலகுகிறார் ராஜீவ் தவான். குஜராத் படுகொலைகளின் நாயகர்களான காக்கி உடைக் கிரிமினல்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள். பிரபல ஊடகவியலாளர்கள் நேரடியாக மிரட்டப்படுகிறார்கள். ஊடகங்கள் அடாவடியாக இந்துத்துவப் பொய்களை கடை விரிக்கின்றன. அதிகார வர்க்கத்தின் கேந்திரமான பதவிகளில் சங்க பரிவாரத்தினர் அமர்த்தப்படுகிறார்கள். தேர்தல் ஆணையமும், சிபிஐ-யும், வருமானவரித்துறையும், வருவாய் புலனாய்வுத்துறையும் நேரடியாக பாபு பஜ்ரங்கியைப் போலவும், வன்சாராவைப் போலவும் செயல்படுகின்றன.

“எந்த நிறுவனத்தையும் நம்ப முடியவில்லை” என்று கையறு நிலையில் நின்று தேர்தல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். “இந்துத்துவ பாசிசத்தின் மீதான பயம்” என்பது ஜிக்னேஷ் மேவானி கூறுவதைப் போல மக்களிடம் மட்டும் நிலவவில்லை. மக்களைக் காட்டிலும் அந்தப் பயம் தேர்தல் கட்சிகளைத்தான் அதிகமாகப் பிடித்தாட்டுகிறது.

***

“புலிக்குப் பயந்தவர்கள் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறும் நிலையில் இருக்கும் தேர்தல் கட்சிகள், புலியிடமிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடுமா?

அக்லக், பெஹ்லு கான் கொலைகளுக்கு எதிராக இந்த தேர்தல் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? லவ் ஜிகாத் என்று பொய்க்குற்றம் சாட்டி அப்ரசூல் என்ற முஸ்லீமைக் கொன்ற கொலைகாரனுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காலித்தனம் செய்கிறது. நீதிமன்றக் கூரையின்மீது காவிக்கொடி ஏற்றுகிறது. எந்தக் கட்சி இதனை எதிர்த்து மோதியது?

இந்துத்துவத்துக்கும் மறுகாலனியாக்கத்துக்கும் ஏற்ப இந்த அரசமைப்பு தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருகிறது. இந்த அரசமைப்பின் வரம்புக்குள் நின்று இவற்றுக்கு எதிராக கருத்து கூறுவதற்கான வாய்ப்புகளே கூட குறைந்து கொண்டு வருவதையே எல்லா நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

யார் களத்தில் நேருக்கு நேர் நின்று இந்துத்துவ பாசிஸ்டுகளை எதிர்கொள்கிறார்களோ அவர்கள்தான் இந்த பாசிசத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்.

யார் களத்தில் நேருக்கு நேர் நின்று இந்துத்துவ பாசிஸ்டுகளை எதிர்கொள்கிறார்களோ அவர்கள்தான் இந்த பாசிசத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளாக இருக்கட்டும், புதிய தாராளவாதக் கொள்கைகளின் தாக்குதல்களாக இருக்கட்டும் அவற்றை எதிர்த்து சமரசமில்லாமல் களத்தில் நின்று போராடுபவர்கள் கட்சி சார்பற்ற தன்னார்வலர்களும் மக்களும்தான். நெடுவாசல், கதிராமங்கலம், குமரி முதல் நாடெங்கும் நாம் காணும் உண்மை இது. இத்தகைய போராட்டங்களுக்கு வருகை புரிந்து வாழ்த்துரை வழங்கும் வேலையை மட்டுமே தேர்தல் கட்சிகள் செய்து வருகின்றன. அது அவர்களுடைய வரம்பு.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைக்கூலி என்று நூறு முறை அறிக்கை விடுவார்கள். நூற்று ஒன்றாவது முறையும் ஆணையத்திடம் முறையிடுவார்கள். பின்னர் மீண்டும் புலம்புவார்கள். ஏனென்றால் அவர்களுடைய நலன் அதில் இருக்கிறது. ஆகப்பெரும்பான்மையான கட்சிகள் இந்துத்துவ எதிர்ப்பு என்ற கொள்கை அடிப்படையில் கட்டப்பட்டவை அல்ல. சாதி, பிழைப்பு, பதவி என்பவைதான் அவர்கள் நோக்கம். எனவே, இந்த அரசமைப்பு விதிக்கின்ற எல்லைக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும் என்ற வரம்பு அவர்களுக்கு இருக்கிறது.

அத்தகைய வரம்பு எதுவும் மக்களுக்கு இல்லை. இந்த வரம்புக்குள் நின்றால் வாழவே முடியாது என்ற நிலையை நோக்கி மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். எனவேதான் தன்னியல்பாக அவர்கள் பல இடங்களில் வரம்புகளை மீறுகிறார்கள்.

***

க்கி புயலால் தாக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள், காணாமல் போன தங்கள் சொந்தங்களை மீட்டுத்தருமாறு கெஞ்சினார்கள், கதறினார்கள், போராடினார்கள் – பயனில்லை. எடப்பாடி அரசுக்கும், மோடி அரசுக்கும், கடற்படைக்கும், கடலோர காவல் படைக்கும் அது குறித்த அக்கறை கடுகளவும் இல்லை.

சில நாட்களுக்கு முன் விசைப்படகுகளில் குமரி மாவட்டத்திலிருந்து புறப்பட்ட மீனவர்கள் லட்சத்தீவுக்கு அருகே, புயலில் பழுதாகி நின்று கொண்டிருந்த ஒரு படகில் தவித்துக் கொண்டிருந்த மீனவர்களை நேற்று மீட்டிருக்கிறார்கள். இன்னும் எங்கெல்லாம் மீனவர்கள் இருக்கக் கூடுமோ அங்கெல்லாம் தேடியும் வருகிறார்கள்.

இந்த அரசிடம் முறையிட்டுப் பயனில்லை என்ற கருத்துக்கு ஒரு சில நாட்கள் முன்னரே வந்திருந்தால் ஒருவேளை அவர்கள் மேலும் சிலரை மீட்டிருக்க முடியும்.

விமானமும், ஹெலிகாப்டரும், கப்பல்களும் இந்த மீனவர்களின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவையாக இருந்திருந்தால் மேலும் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

“மீனவர்களின் அதிகாரத்தின் கீழ் கப்பல்களா, அதெல்லாம் சாத்தியமா?” என்று மீனவர்களே கூட எண்ணக் கூடும். கப்பல்படை பயன்படாது என்று மீனவர்கள் பிரகடனம் செய்து விட்டார்கள். நடைமுறையில் தங்களைத் தாங்களே மீட்டுக் கொண்டுவிட்டார்கள். எதை அவர்களே சாத்தியமாக்கிவிட்டார்களோ, அதுவே ஒரு கருதுகோள் என்ற வகையில் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

‘தேர்தல் அரசியலுக்கு வெளியே இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க முடியுமா?’ என்ற ஐயமும் இதைப் போன்றதுதான்.

“Be Realistic, Demand the Impossible!” என்பது 1968 இல் நிகழ்ந்த பிரெஞ்சுக் கிளர்ச்சியில் மாணவர்கள், தொழிலாளர்கள் எழுப்பிய முழக்கம்.

ஆம். “சாத்தியமற்றது” என்பது ஒரு மதிப்பீடு மட்டுமே. “உண்மை” என்பது உங்களுடைய அல்லது என்னுடைய “மதிப்பீடு” அல்ல – அது உண்மை!

உண்மையை எதிர்கொள்! சாத்தியமற்றதைக் கேள்!

– மருதையன்


 

திருப்பூர் : டாலர் சிட்டியை டல் சிட்டியாக்கிய மோடி அரசு !

2

திருப்பூர் : GST…. கதறும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் !!!  

ரு காலத்தில் தமிழகக் கிராமங்களில் வேலையிழந்து பிழைப்புத்தேடி நகரங்களை நோக்கி வருபவர்களின் முதல் தேர்வாக இருந்தது திருப்பூர் நகரம். தமிழகம் மட்டுமல்ல பல அண்டை மாநில மக்ககளையும் அரவணைத்து வாழ்வளித்து வந்த திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழிலானது, இன்று மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய நாசகாரக் கொள்கைகளால் ‘யானை புகுந்த வெண்கலக் கடையைப் போல’ சின்னா பின்னமாகிக்  கிடக்கிறது!

ஆயத்த ஆடை உற்பத்தி என்பது விவசாயி உற்பத்தி செய்யும்  பருத்தியில் தொடங்கி பஞ்சாலை, நூல்மில், பின்னலாடை, சலவை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங் ஆகியவற்றைக் கடந்து பின்; கட்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என்று பல கட்டங்களின் வழியாக முழுமையடைகிறது. இதன் ஒவ்வொரு தொழில் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களும், சுமார் 6000 சிறு நிறுவனங்களும் திருப்பூரில் இயங்கி வருகின்றன.  இதுதவிர இவற்றின் துணைத் தொழில்களாக உள்ள போக்குவரத்து, மெக்கானிக், வயரிங், சில்லறை வர்த்தகம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் விளங்கி வருகிறது.

மேற்கண்ட தொழில் பிரிவுகள் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டுள்ளதோடு, நேரடியாக அந்நிய நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள், இதில் ஒரு சில தொழில் பிரிவுகளை மட்டுமே சொந்தமாகக் கொண்டு இயங்கும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள், மேற்கண்ட இருவகை நிறுவனங்களிடமும் மற்றும் அந்நிய நிறுவனங்களின் ஏஜென்டுகளிடமும் குறைந்த லாபத்திற்கு ஆர்டர் எடுத்து ஆடை உற்பத்தி செய்து கொடுக்கும் சிறு நிறுவனங்கள், 5, 10 மிசின்களை வைத்துக் கொண்டு தையல் வேலை மட்டுமே செய்பவர்கள் மற்றும் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தியாளர்கள் என மொத்தம் ஐந்து பிரிவுகளாக ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெற்று வருகிறது.

சிறு நிறுவனங்களின் அவல நிலைமை:

எண்ணிக்கை அளவிலும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் சிறு நிறுவனங்களே அதிக பங்கு வகிக்கின்றன. பெரு நிறுவனங்களிடம் ஆர்டர் பெறும் இந்நிறுவனங்கள் அதற்கான நூலை தனது சொந்தப் பொறுப்பில் வாங்கி, அதனை நிட்டிங், வாஷிங், சாயமேற்றுவது, பிரிண்டிங், பிளீச்சிங், ஆகியவற்றுக்காக தனிச் சிறப்பாக இயங்கும் சிறு நிறுவனங்களிடம் ஜாப் ஒர்க்காகக் கொடுத்து முடிக்கின்றனர். இதற்கான கட்டணத்தை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் 30 நாள் கடனாக செய்து தருகின்றனர்.

பின்னர் கட்டிங், தையல், அயர்ன், பேக்கிங் வேலைகளை முடித்துக் கொடுக்கும் சிறு நிறுவனங்கள் இதற்கான கூலியைப் பெரு நிறுவனங்களிடமிருந்து வாங்கிய பிறகுதான் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு கடனை அடைக்கின்றனர். ஒரு வேளை இப்பணம் கிடைப்பதில் தாமதமானாலோ அல்லது வங்கியில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டாலோ வார வட்டிக்கு கடன் பெற்று இக்கடனை அடைத்தாக வேண்டும். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இவ்வாறுதான் பலநூறு சிறு நிறுவனங்கள் போண்டியாகிப் போனது!

ஏற்கனவே 30% லாபத்தில் ஆர்டர் கொடுத்துவந்த பெரு நிறுவனங்கள் தற்போது தொழில் போட்டியின் காரணமாக தற்போது 20 சதமாக குறைத்து விட்டன. இந்நிலையில் கட்டிட வாடகை, மின்கட்டணம், வார இறுதியில் கொடுக்க வேண்டிய கூலியாள் சம்பளம் என எப்போதும் நெருப்பின் மீது நிற்கும் நிலையில்தான் சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு விட்ட இச்சிறு நிறுவனங்களை, சவக்குழிக்குள் தள்ளி இறுதிச்சடங்கு நடத்துவதற்கு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ஜி.எஸ்.டி.!

என்ன சொல்கிறது ஜி.எஸ்.டி?

ஜி.எஸ்.டி. என்பது சரக்கு மற்றும் சேவை வரி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஒரு பொருளின் உற்பத்தி நிலையிலிருந்து இறுதியாக நுகர்வோரைச் சென்றடையும் வரையுள்ள வர்த்தக சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலும் வரி விதிப்பதுதான் ஜி.எஸ்.டி-யின் வரி விதிப்பு முறை!

ஒரு ஆயத்த ஆடை, பஞ்சு கொள்முதலில் தொடங்கி இறுதியாக பேக்கிங் செய்யப்படுவது வரை சுமார் 10 நிலைகளைக் கடந்து உருவாகிறது. இதன்படி ஒவ்வொரு நிலையிலும் 5, 12, 18, 24 சதவீத வரி விதிக்கிறது ஜி.எஸ்.டி. இதற்கு முன் ‘வாட்’ வரியின்போது விலக்களிக்கப்பட்ட நிட்டிங், வாஷிங், காம்பேக்டிங், துணி ஆகியவற்றுக்கும் கூட ஜி.எஸ்.டி.யில் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. தையல் நூல், அட்டைப்பெட்டி, கம்டேப், பட்டன், லேபில், ஹேங்கர் ஆகியவற்றுக்கு ‘வாட்’ வரியைவிட 3 மடங்கு அதிகமாக ஜி.எஸ்.டி.யில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் வரிவிதிப்பினால் கச்சாப் பொருள்களின் விலை உயர்வு, அதற்கான கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நெருக்கடி என்பதைத் தாண்டி, இதன் வரி விதிப்பு நடைமுறைகளும் சிறு நிறுவனங்களை கடும் நெருக்கடிக்குத் தள்ளுவதாக உள்ளது.

ஜி.எஸ்.டி.யின் நடைமுறையும், சிறு நிறுவனங்களின் அழிவும்

மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களையும், அடுத்த 10 நாட்களில் விற்பனை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 30-ம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகை ஏழு நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் (input tax recovery)  வரவு வைக்கப்படும் என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்! இதனால் உள்ளீட்டு வரி வரவு வைக்கப்படும் வரை கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகளை பாதுகாப்பதுடன், தன்னிடம் வர்த்தகம் செய்பவர் வரி செலுத்திவிட்டாரா என்பதையும்  கண்காணிக்க  வேண்டியதுள்ளது. மேலும் இதற்காகவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பது, ஆடிட்டருக்கு மாதக் கட்டணமும் செலுத்துவது ஆகிய செலவுகளும் சிறு நிறுவனங்களின் தலையில் கூடுதல் சுமையாக ஏற்றிவிடப்படுகிறது.

ஆண்டுக்கு 20 லட்சம் வரை வர்த்தகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஆனால் ஜி.எஸ்.டி. பதிவு எண் இல்லாதவர்களிடம் வர்த்தகம் செய்தால் உள்ளீட்டு வரியை திரும்ப பெற முடியாது என்பதால் இத்தகைய சிறு நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் புறக்கணித்து விடுகின்றன. எனவே வேறு வழியின்றி எல்லா சிறு நிறுவனங்களும் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் தொழிலில் நீடிக்க முடியாது.

மேலும், உள்ளீட்டு வரியை 7 நாட்களுக்குள் வரவு வைத்து விடுவோம் என்ற தனது வாக்குறுதியை அரசே காற்றில் பறக்க விட்டுவிட்டது. ஜி.எஸ்.டி. அறிமுகமாகி  ஆறு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் முதல் மாதம் செலுத்திய உள்ளீட்டு வரியே இதுநாள் வரை வரவு வைக்கப்படவில்லை. எப்போது வரும் என்ற உத்தரவாதமும் இல்லை. இதனால் பொருளை விற்பவர்கள் முன்கூட்டியே உள்ளீட்டு வரியையும் பிடித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அடுக்கடுக்கான சிக்கல்களை உருவாக்குவதன் மூலம் “நீ பிழைத்திருக்க வேண்டுமானால் எனக்கு வரி கட்டு. இல்லாவிட்டால் ஒழிந்து போ” என்று சிறு நிறுவனங்களை மிரட்டுகிறது மத்திய அரசின் ஜி.எஸ்.டி!

ஜி.எஸ்.டி.யின் விளைவுகள்

மேற்கண்ட பல்வேறு நெருக்கடிகளால் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலே கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-க்கு முன்பு ஆர்டர் கொடுத்த பெரு நிறுவனங்களும், ஏஜென்டுகளும் புதிய வரிச்சுமையை ஏற்க மறுத்து பழைய விலையிலேயே உற்பத்தி செய்து தருமாறு கோருகின்றன. முடியாத நிலையில் ஆர்டரை ரத்துசெய்து விடுகின்றன. மறுபுறமோ புதிய ஆர்டர்களில் வழக்கமான அளவுக்கும் குறைவான லாபமே கிடைப்பதால் நடைமுறை செலவுகளுக்கே ஈடுகொடுக்க முடியாமல் தொழிலையே கைவிட்டு ஓடும் நிலைக்கு சிறு நிறுவனங்கள் ஆளாகியுள்ளன.

இதற்கு முன்பு தொழில் போட்டியின் காரணமாக லாபம் குறைவாக கிடைத்தாலும், மத்திய அரசு தரும் ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புத் தொகையால்(duty draw back) ஓரளவு இழப்பை ஈடுகட்ட முடிந்தது. முன்பு 7% ஆக இருந்த இத்தொகையையும் ஜி.எஸ்.டி-க்குப் பின் 2% ஆக குறைத்து விட்டது மோடி அரசு.

மாதத்தில் பாதிநாள் வேலை இல்லை. வேலை இருந்தாலும் உரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இதனால் திருப்பூரில் 60%  சிறுதொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டது. ஜி.எஸ்.டி. -க்குப்பின் அக்டோபரில் மட்டும் 1400கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி சரிந்துவிட்டது.  திருப்பூரின் வர்த்தக நிறுவனங்களுக்காகவே காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கிவந்த வங்கிகள் எல்லாம் காலை 10  முதல் மாலை 4 மணி வரை என்ற வழக்கமான முறைக்குத் திரும்பி விட்டன. இவ்வாறு ‘டாலர் சிட்டி’யான திருப்பூர் இன்று ‘டல்’ சிட்டியாகி விட்டது! ஆனால் மோடி கும்பலோ, “ஜி.எஸ்.டி. -யால் விலைவாசி குறையும்” ‘ஏற்றுமதி பெருகும்” என்று மக்களை மோசடி செய்து வருகிறது!

கார்ப்பரேட் சேவைக்கே ஜி.எஸ்.டி!

1984 -க்கு முன்பு வெறும் 4 கோடியாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதியை இன்று 25,000 கோடியாக உயர்ந்து நிற்பதற்கு ஆணிவேராக செயல்பட்ட தொழிலாளர்களும், அவர்களுக்கு வேலைவாய்ப்பளித்த சிறு நிறுவனங்களும் இன்று நெருக்கடியில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருப்பது திடீரென ஜி.எஸ்.டி.யால் மட்டும் உருவானதல்ல. மத்திய ஆட்சியாளர்களின் தொடர் நடவடிக்கைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை!

1984 வரை எளிய வரிவிதிப்பு, நேரடி பணப் பரிமாற்றம் என ஆயத்த ஆடை உற்பத்தி சுமூகமாகவே இருந்து வந்தது. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் என்று திசை மாற்றி இழுத்துச் சென்றது மத்திய அரசு. ஆலைகளை நவீனப்படுத்துவதற்கு கடனுதவி, இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கு வரிச்சலுகை கொடுத்து ஊக்கப்படுத்தியது மத்திய அரசு! இவ்வாறு உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியில் இருந்தவர்களை, கார்ப்பரேட் திமிங்கலங்களின் பிடியிலுள்ள உலகச் சந்தையோடு திருப்பூர் ஆயத்த ஆடைத்தொழிலை கோர்த்துவிட்டது மத்திய அரசு.

இதன் பிறகு 2007 -ல் கொண்டுவரப்பட்ட ‘வாட்’ வரிவிதிப்பு மூலம் அதுவரை இருந்த நேரடிப் பணபரிமாற்றத்தை வங்கிப் பரிமாற்றத்திற்குள் கொண்டு வந்தார்கள். அடுத்து மோடியின் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையோ வங்கிப் பரிமாற்றத்திற்கு மாறுவதைக் கட்டாயமாக்கி விட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவ்வாறு படிப்படியாக திட்டமிட்டு, சுற்றி வளைத்து, தான் விரித்த வலைக்குள் இரையை வீழ்த்தும் திறமையான வேட்டைக்காரனைப் போல மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

வலையில் விழுந்த இரையை கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தாக்குவதுதான் மோடி அரசின் நோக்கம். வேலையிழந்த தொழிலாளர்களும், சிறு நிறுவனங்களும் பெரும் நிறுவனங்களின் அற்பக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாறி விடுங்கள் என்கிறார் மோடி.

ஏன் மாற வேண்டும்? ஆயத்த ஆடை தொழிலில் நமக்குப் போட்டியாக உள்ள பங்களாதேஷ் நம்மை விடக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வருகிறார்கள். நாம் பங்களாதேஷை விட மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்தால்தான் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அப்போதுதான் அவர்கள் இந்தியாவுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். நம் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிக்கும். நாடு வல்லரசாக முடியும், எனவே கொத்தடிமைகளாக மாறி நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள், என்கிறார் மோடி!

ஆயத்த ஆடைத் தொழில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து தொழில்களையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நலனுக்காக தாரை வார்ப்பதையே மோடி அரசு தீவிரக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதற்கேற்ப ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளை, வரி விதிப்பு முறைகளை ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட் நலனுக்கு சாதகமான வகையில் மறு கட்டமைப்பு செய்து வருகிறது மோடி அரசு! அதன் ஒரு கண்ணிதான் ஜி.எஸ்.டி. என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஜி.எஸ்.டி எதிர்ப்பு என ஒற்றைக் கோரிக்கையோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கு எதிராக மாறிவரும் அரசுக் கட்டமைப்புக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர். தொடர்புக்கு : 99658  86810.

கவுசல்யா இந்த மண்ணின் பெருமை !

13

இவளல்லவோ பெண்!

சாதிய – மத எதிர்ப்பில்,
மண் என்றால்
அது தமிழ்நாடு
பெண் என்றால்
அது கவுசல்யா
தந்தை என்றால்
அது பெரியார்!

கவுசல்யா…
பெண்ணின் பெருமை
மட்டுமல்ல
இந்த மண்ணின் பெருமை,
ஆயிரம் அடக்குமுறைகள்
அழுத்தினாலும்
சாதிய வேலிகள் தடுத்தாலும்
சமுதாயம்
முன்னோக்கி வளர்ந்தே தீரும்
என்ற வரலாற்றின் உண்மை.

படம் : நன்றி – இது வேற தமிழ்நாடு முகநூல் பக்கம்

தனிப்பட்ட
காதலுக்காக மட்டுமன்றி
தான் வாழும் சமூகத்தின்
கொடுமைகளுக்கு
எதிராகத் துடிக்கும்
அவள் இதயம்.
என்ன ஒரு திண்மை!

சாதிவெறியைப் பார்த்து
சொந்த தந்தையையும்
வெறுத்தாள்.
சமத்துவத்தை நேசிக்கும்
சுயமரியாதை
உணர்வைப் பார்த்து
பெரியாரை தந்தையாய்
நினைத்தாள்.
இவளல்லவோ பெண்!

நேசித்த காதலனை
கண் எதிரே
வெட்டி வெறியாடிய போதும்
நிலைகுலைந்த
தனக்காக மட்டும்
கதறவில்லை
அந்தக்காதல்.

வெறுக்கத்தக்க சாதிவெறியை
கட்டி அழும்
சமூகத்தின் குரூரத்தை
பேசுகிறது அவள் குரல்.

கவுசல்யா,
யாரையும்
பாவப்பட  கூப்பிடவில்லை,
சாதிவெறி ஆணவத்திற்கு எதிராக
கோவப்பட கூப்பிடுகிறாள்…

விலங்குகள் கூட
விளங்கிக் கொள்ளும்
சக அன்பை,
மனிதர்களுக்கு மறுக்கும்
கயமைத்தனம் தான் சாதி.
கவுசல்யா போல்
சுயசாதிக்கு எதிரான
கலகம்தான் நீதி!

வெட்டியவர்கள்
சமூகத்தின் கண்களுக்கு
தழும்பாக,
வெட்டுப்பட்டவளோ
சமூக நீதியின் பிழம்பாக,

சங்கர்
வெட்டவெட்ட துளிர்க்கிறான்
கவுசல்யாவிடம்,
பெரியார் மொழியில்
நகைக்கிறான்

சாதிய மனம்
இருந்தாலும்
அழுகிடும் பிணம்

சங்கர் இறந்தாலும்
கவுசல்யாவின்
கருத்தில் பரவிடும்
சமூக நறுமணம்.

ஒரு ஆணை
விரும்பியதைவிட
சங்கர் எனும்
தாழ்த்தப்பட்டவரை
காதலித்தது தான்
சாதிய மனநிலைக்கு
கடுங்குற்றம்.

சங்கரின் மீதான காதல்
சமூகத்தின் மீதான காதலாக
விரிவதைப்பார்த்து
ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள்
வசவுகளில் வாழ்கிறது.
உண்மையில்
‘வாழா வெட்டி’யானது
கவுசல்யா அல்ல,
வக்கிரம் பிடித்த சாதிவெறி.

கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே
தாங்கள் கெட்டழிவது திண்னம்!
பல கவுசல்யாக்களை உருவாக்கும்
பெரியார் மண்ணில்
பலிக்காது உங்கள் எண்ணம்!

கவுசல்யாவின்
தனிப்பட்ட காதல் பிரச்சனை என்று
யாரும் ஒதுங்கிட முடியுமா?

சாதியின் காதலர்கள்
வெறியோடு
எகிறி வரும் போது,

காதலுக்காக
உருகுபவர்கள்,
காதலுக்காக
படம் எடுப்பவர்கள்,
காதலுக்காக
தத்துவம் பேசுபவர்கள்,
சுடப்பட்ட காவலர்க்கு
வீரவணக்கம் செலுத்தும்
விசித்திர காதல் தளபதிகள்
யாருமே
வெட்டப்பட்ட
கவுசல்யா பக்கம்
காணவில்லையே ஏன்?

சாதிவெறி
அரிவாளோடு சுத்தும்
கூலிப்படை என்று
நாம் நினைத்தால்
அது அறியாமை.

சாதிவெறியர்கள்…
சினிமாவாக
இலக்கியாமாக, எழுத்தாக
பேஸ்புக்காக, டிவிட்டராக
நம்மை சுற்றி திரிகிறார்கள்.

சமூகத்தின் காதலர்களே
நாம்
கவுசல்யாக்களாக
உரு‍வெடுப்போம்
சாதிவெறிக்கு எதிராக
பெரியாரின் தடியை
முன்னேடுப்போம்!

-துரை. சண்முகம்