எங்காவது பெஞ்சு தட்டும் சத்தம் கேட்டால், சட்டப்பேரவை தொடங்கிவிட்டது என்று பிறந்த குழந்தையும் நினைக்கும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. ஒண்ணு பெஞ்சை தட்டு, இல்லை ‘அம்மா’ ஆட்சியை எதிர்த்துப் பேசும் ஆளை தட்டு எனுமளவுக்கு முதல் ரவுண்டிலேயே கூச்சல் கிளம்பிள்ளது.
அம்மாவின் ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்’
“அது என்ன கெட்ட வார்த்தைன்னே தெரியல!” என்று சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி வெளியே வந்து விளக்கம் கேட்குமளவுக்கு, அம்மாவின் உண்மை விசுவாசிகள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அங்கேயே ‘முழு உடல் பரிசோதனை’ திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர்.
அபஸ்வரங்களுக்கு இடையே ‘அம்மாவுக்கே’ சிரிப்பு வரும்படி அவ்வப்போது சரத்குமார், தனியரசு, செ.கு.தமிழரசன் மற்றும் வெளிப்படையாகவே “இந்த சந்தைக் கடையில் நாங்கள் எந்த பிராண்ட்?” என்று கேட்ட தே.மு.தி.க அதிருப்தி எம.எல்.ஏவான அருண்பாண்டியன் போன்றோரின் மானாட மயிலாட கூத்து நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் ‘புரட்சித்தலைவர்’ ‘புரட்சித்தலைவியின்” படங்களிலிருந்து சூப்பர் சிங்கர் போட்டி தொடரலாம்.
‘சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனைகளை பேசவும், விவாதிக்கவும், தீர்வு காணவும் ஜனநாயகம் புழங்கும் இடம்’ என்றும், ‘மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதன் மூலம் இது மக்களும் பங்குபெறும் மக்களாட்சி’ எனவும் சொல்லப்பட்ட நீதி நெறிமுறைகள் அந்த மன்றத்திலேயே புதைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே இங்கே அவர்கள் எது பேசவும் வாய்ப்புமில்லை, உரிமையுமில்லை என மக்களைப் பார்த்து நியாயம் கேட்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உரிமைகளையே காலில் போட்டு மிதிக்கும் இந்த அரசமைப்பு மக்களின் குரலை எந்த அளவுக்கு மதிக்கும் என்பதற்கு தனியே ஆராய்ச்சி தேவை இல்லை.
தி.மு.க. , காங்கிரசு, இடது, வலது கம்யூனிஸ்ட்டுகள், பா.ம.க., புதிய தமிழகம், ம.ம.க. என பல கட்சிகளும் தனிநபர் மசோதாவும் கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொடுத்தாலும் பேரவை விதி முறைப்படியே விதி 55-ன் படி பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மதுவிலக்கு பற்றி பேச ஜவாஹிருல்லா மனு கொடுத்தும் எல்லாம் துறைவாரியான மானியக் கோரிக்கையின் போது அம்மாவுக்கு திருஷ்டிப் பொட்டாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார் சபாநாயகர்.
அம்மாவின் ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்’ உறுப்பினர்களின் எல்லாக் குரலையும் ஒரே தள்ளாக தள்ளிவிடுகிறார். அம்மா உணவகம் போல இது அம்மா சட்டமன்றம். சும்மா இருப்பவர்க்குத்தான் இங்கு வேலை. அம்மா சகஸ்ரநாமங்களையும், அவிழ்த்துவிடும் 110 விதியின் கீழான மந்திரங்களையும் கேட்டுக் கொண்டிருப்பவருக்குத்தான் இங்கு இடம். சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு இங்கு யாரும் அழுத்தம் கொடுத்தால் சட்டமன்ற நடவடிக்கை பிதுக்கி வெளியே தள்ளிவிடும். எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளின் எந்தக் குரலையும் பெருந்தெய்வம் குளிர்காயும் குமுட்டி அடுப்பில் வைத்து இடிக்கும் இந்த சட்டமன்றத்தை மக்களுக்கான ஜனநாயகம் என்று எந்தக் கிறுக்கனாவது ஒத்துக்கொள்ள முடியுமா? காண்பதெல்லாம் பதினெட்டுப்பட்டி நாட்டாமையும் மரத்தடியும் சொம்பும்தான்!
அம்மா உணவகம் போல இது அம்மா சட்டமன்றம்
வெளிப்படையாக தமிழக ஊடகங்களில் ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில், ஆற்றுமணல் கொள்ளை பற்றிய ஒரு உறுப்பினரின் கேள்விக்கு, “அப்படி ஒன்று தமிழகத்தில் கிடையவே கிடையாது, விதி மீறி எந்த இடத்திலும் மணல் அள்ளவே இல்லை!” என்று முதல் கிடாவை வெட்டி அம்மனுக்கு காணிக்கையாக்கியுள்ளார் ஓ.பி!
விருத்தாச்சலம் வெள்ளாறு, சேத்தியாதோப்பு பகுதி ஆறு, வேலூர் கானாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் தமிழகமெங்கும் மக்கள் ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக போராடும் போது போலீசை விட்டு மண்டையை உடைத்தவர்கள்! மக்களை மதிக்கும் மக்களாட்சியின் யோக்கியதை இதுதான்!
இன்னொரு உறுப்பினர் மின் பற்றாக்குறை பற்றி கேட்ட கேள்விக்கு, “சும்மா பொழுதை போக்க பேசக் கூடாது, சந்தேகமிருந்தால் சுவிட்சில் கையை வைத்து பாருங்கள்” என்று நத்தம் விஸ்வநாதன் அம்மாவின் கொலைவெறி ரசனைக்கு தீனி போடுவதுதான் சட்டமன்ற ஜனநாயகத்தின் மாண்பு!
இவர்தான் டாஸ்மாக்கை மூடச்சொன்னதற்கு “முதலில் இந்தியாவை நிறுத்தச் சொல்! குடிப்பவனை நிறுத்தச் சொல்! அவனை நிறுத்த சொல்! நான் நிறுத்துகிறேன்” என்று வசனம் பேசும் நாயகர்!
இவர்களே ஏற்றுக் கொண்ட ஜனநாயக நெறிப்படி கேள்விகளை எதிர்கொள்வதும் அதற்குரிய பதில் அளிப்பதும் கடமை. ஆனால் கேட்டவர்களை நக்கலடிப்பது, நாலந்தர வசனத்தால் வறுத்தெடுப்பது, நாற்காலியை விட்டே ஓட வைப்பது என்று சீரழிந்த இந்த பேய் பங்களாவில் உறுப்பினர்களுக்கே மதிப்பில்லாத போது மக்களுக்கு ஏது? இதைப்பற்றி சபாநாயகரிடம் முறையிடுவது பேயைப் பற்றி அதன் பாட்டியிடம் புகார் சொல்வது போல வேலைக்கு ஆவாதது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் அம்பானிக்கும், அதானிக்கும் அந்திய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், அரசியலில் கொள்ளையடிப்பதற்கும் மட்டுமே அதிகாரத்தை குவித்து வைத்திருக்கும் இது, மக்களைப் பொறுத்தவரை வெட்டி மன்றம் மட்டுமல்ல மக்கள் விரோத மன்றமும் ஆகும்.
சொந்த அனுபவத்தில் மக்கள் புரிந்து வைத்திருக்கும் இந்த உண்மையை இன்னும் உணராதவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைப் பாருங்கள்! கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் சட்டப் பேரவைக்கு வெளியே வந்து மைக்குக்கு நேரே “உள்ளே எதையும் பேச விடுவதில்லை, மக்கள் பிரச்சனைகளை பேச எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” என்று மக்களைப் பார்த்து அவர்கள் நியாயம் கேட்பதிலிருந்தே தெரியவில்லையா? உண்மையான மக்களின் அதிகாரம் இந்த அரசமைப்புக்கு வெளியே இருக்கிறது என்பது!.
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்கள், கோவை, கடலூர், விருத்தாச்சலம், ஓசூர் என பல பகுதிகளில் கைதான மக்களுக்கும் தோழர்களுக்கு பெயில் எடுப்பதற்கான தொடர் முயற்சிகளில் நமது வழக்குரைஞர்கள் தோழர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தப் போராட்டத்தில்… சில நிகழ்வுகள்!
விருத்தாசலம்
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் வழக்கறிஞர் ராஜூ மற்றும் பிற தோழர்கள்
மேலப்பாலையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை மூடிய போராட்டத்தில் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரால் போடப்பட்ட பொய் வழக்கில் வழக்கறிஞர் ராஜு உட்பட பொதுமக்கள் 12 பேர் மொத்தம் 13 போராளிகளை 21-8-2015 அன்று விருத்தாசலம் குற்றவியல் நடுவர் எண் II நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது காவல்துறை கைவிலங்கு போட முயற்சித்த போது வழக்கறிஞர் ராஜு மற்றும் பொதுமக்கள் மறுத்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் “கைவிலங்கு போட்டுதான் அழைத்துச் செல்வோம்” என்று சொன்னபோது, வழக்கறிஞர் ராஜு, “நீங்கள் எங்களுக்கு கைவிலங்கு போட்டால் நீதிமன்றத்தில் புகார் செய்வோம்” என்று கூறியுள்ளார்.
வழக்கறிஞர் ராஜூ
அதற்கு CL 632 என்ற போலீஸ் “உங்களை நாங்கள் நேராக நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால்தானே புகார் செய்வீர்கள். கடலூர் O.T. காவல்நிலையத்தில் நீங்கள் தப்பிக்க முயற்சி செய்தீர்கள் என்று F.I.R. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துதான் அழைத்துச் செல்வோம்” என்று மிரட்டியுள்ளார்.
பிறகு காவல்துறை வாகனத்தில் வரும்போது, “இரண்டுபேர் சேர்ந்து ஒரு விலங்கு போட்டுக் கொள்கிறீர்களா? அல்லது தனித்தனி விலங்கு போட்டுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டுள்ளனர். அதற்கும் நம்முடைய தோழர்கள் மறுத்துள்ளனர்.
மக்கள் அதிகார அமைப்பின் தோழர்களும், டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் பொதுமக்களும் காவல்துறைக்கு எதிராக கோஷம்
அதற்கு ஒரு போலீஸ், “நீங்கள் கைவிலங்கு போட மறுத்தால் அனைவரையும் விருத்தாசலம் பாலக்கரையில் இறக்கி கைவிலங்கு போட்டு நடத்தியே அழைத்துச்செல்வோம்” என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல் வழக்கறிஞர் ராஜு மற்றும் பிற தோழர்கள் கைவிலங்கு போட மறுத்து விட்டனர்.
பின்னர் விருத்தாசலம் நீதிமன்றத்தில் அழைத்து வந்த போது நீதிமன்றம் முன் மக்கள் அதிகார அமைப்பின் தோழர்களும், டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் பொதுமக்களும் காவல்துறைக்கு எதிராக கோஷம் போட்டனர்.
பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மூத்த வழக்கறிஞர் வே.அம்பேத்கார் தலைமையில் வழக்கறிஞர் R.புஷ்பதேவன் மற்றும் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் வழக்கறிஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி நீதிமன்ற காவல் அடைப்பு உத்தரவிடகூடாது என்று மனு கொடுத்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கறிஞர் ராஜுவிடமும், மற்ற பொதுமக்களிடமும் தனித்தனியாக, “உங்களுக்கு கைவிலங்கு போடச் சொல்லி மிரட்டினார்களா” எனக் கேட்டு தெரிந்துகொண்டார்.
அதன் பிறகு விருத்தாசலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து மூடிய பொய் வழக்கில் மக்கள் அதிகாரம்-தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு அவர்களை 27-8-2015 அன்று விருத்தாசலம் குற்றவியல் நடுவர் I நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது கைவிலங்கு போட முயற்சி செய்துள்ளனர். அதற்கு வழக்கறிஞர் ராஜு கைவிலங்கு போட மறுத்திருக்கிறார்.
அதற்கு எஸ்கார்டு இன்சார்ஜ் த.பழனிச்செல்வன், எஸ்.ஐ அவமரியாதையாக அநாகரிகமான முறையில் பேசியுள்ளார். நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர் ராஜு, அங்கிருந்த வழக்கறிஞர்களிடம் சம்பவத்தை விளக்கினார். சம்பந்தப்பட்ட எஸ்கார்ட் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதியிடம் பெட்டிசன் மனு ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார்.
இதை அறிந்த காவல்துறை ஏட்டு ”சார், இதெல்லாம் வேண்டாம், அவர் செய்தது தப்புதான். அவரே அதை ஒப்புக்கொள்கிறார். உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறார். கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க” என்று அவர் எழுதும்போது பவ்யமாக கேட்கிறார்.
உளவுத் துறை போலீசு கண்காணிப்பு
அதற்கு வழக்கறிஞர் ராஜு, “சார் இது மூன்றாவது முறை. போனமுறையும் இப்படித்தான் உடன் இருந்தவர் சொன்னார். அதனால் சரி என்று விட்டோம். ஆனால் இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கூட வந்த கான்ஸ்டபிளை கேட்டுப் பாருங்க. என்ன திமிராக பேசினார் என்று” என்று பதிலளித்தார்.
இதையெல்லாம் கேட்டுவிட்டு, “தப்புதான் சார். அவருக்கு நீங்க யார் என்று தெரியாது, அங்கிருந்து அனுப்பரவங்க உங்கள பத்தி சொல்லி அனுப்பணும். இங்க என்றால் எங்களுக்கெல்லாம் உங்களை பற்றி நன்றாகத் தெரியும். இந்த ஒருமுறை மன்னித்து விடுங்க சார்” என்றார்.
அருகில் இருந்த வழக்கறிஞர்கள் ”அண்ணா நீங்க எழுதுங்க” என்று கூறினர்.
மற்றொரு வழக்கறிஞர், “வாங்க ஏட்டய்யா, டீ சாப்பிட்டு வரலாம். அவரு எழுதட்டும்” என்றார்.
ஆனால் ஏட்டய்யா நகராமல் வழக்கறிஞர் ராஜு விடம் ”சார் இந்த ஒருமுறை விட்டுடுங்க என்றார்”.
வழக்கறிஞர் ராஜு, “நீங்க யார் சார், முதலில் நான் எழுதறேன். நீதிபதியிடம் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று பிறகு முடிவு செய்யலாம்” என்றார்.
அந்த பெட்டிசனில் ” நான் வழக்கறிஞர். நான் ஒரு அரசியல் கைதி. எனவே மேற்படி வழக்கில் கைதாகியுள்ள யாருக்கும் கைவிலங்கு போடக்கூடாது என உத்தரவிட வேண்டும்” எனவும், “எஸ்கார்ட் பழனிச்சாமி, S.I. ஆகியோர் முறைகேடாக நடந்து கொண்டு என்னை மிரட்டினார்கள்” என்றும், “என்னை ஒருமையில் பேசினார்கள் என்றும், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பெட்டிசனை வழக்கறிஞர் நீதிபதியிடம் சேர்த்தார்.
இதற்கிடையில் வழக்கறிஞர் ராஜுவை சிறைக்கு அழைத்துச்செல்ல மேற்சொன்ன அதிகாரிகளுடன், டி.எஸ்.பி.யும் வந்து இருந்தார்.
அவர் “All fingers art not equal. ஏதோ ஒரு கேசை பார்த்துட்டு யார் என்னன்னு தெரியாம ஒரே மாதிரி நடத்துக்கறாங்க. They are immatured” என்றார்.
அதற்கு வழக்கறிஞர் ராஜு, “என்ன சார் பேசறீங்க. 75 வயது நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் டாஸ்மாக்கை மூடு என்று சொல்லி கைதாகியிருக்கிறார். அவரிடம் போய் உன்னை கைவிலங்கு போடு, இல்லையென்றால் தப்பிக்க முயன்றதாக பொய்கேசு போட்டுதான் எல்லாரையும் கூட்டிட்டுப்போவேன் என்று திமிராகப் பேசறாங்க. நான் கேட்கறேன், பேசும்போது யார்கிட்ட பேசறோம், எங்க பேசறோம் என்று உணர்வு இல்லாமல்…. மூளையை கழட்டி வைச்சுருவாங்களா” என்றார் கோபமாக.
டி.எஸ்.பி. பதில் சொல்ல முடியாமல் அமைதி ஆனார்.
மேலும் வழக்கறிஞர் ராஜு, “இதையெல்லாம் பார்க்கும்பாது இவை எதுவுமே மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை” என்றார்.
உடனே டி.எஸ்.பி. “பார்த்தீங்களா? பழியை எங்களிடமே போடுறீங்க” என்றார்.
அதற்கு ராஜு, “ஆமாம் சார். அப்படித்தான் சந்தேகப்படறேன்” என்றார்.
அதன்பிறகு அவசர அவசரமாக ராஜுவை போகலாம் என்று டி.எஸ்.பி. காவல்துறை வேனில் அழைத்துச்சென்றார்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே திரும்பவும் டி.எஸ்.பி.-யுடன் ஒரு ஜீப்பில் ராஜு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். என்னவென்று கேட்டபோது, நீதிபதியிடம் மறுதேதி வாங்காமலேயே அவசரமாக போய்விட்டதாக சொல்லி நீதிபதி வரசொல்லியிருக்கிறார் என்று தெரிந்தது. நீதிபதி வழக்கறிஞர் ராஜுவை நேரில் அழைத்து மறுதேதி குறிப்பிட்டு பிறகு அனுப்பி வைத்தார்.
மூடு டாஸ்மாக்கை என்று போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுமக்களை கைவிலங்கு போட அச்சுறுத்தி பார்த்தது அதிகார வர்க்கம். அதற்கு அஞ்சாமல் மறுத்தனர் நம் தோழர்கள். உண்மையிலேயே கைவிலங்கு போட வேண்டிய குற்றவாளிகள் ”சாராயம் விற்கும் ஜெயா அரசும்-போலீசும்தான்” என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பத்திரிகை செய்தி
செய்தி
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்டம்
சென்னை
பச்சையப்பா கல்லூரி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவ தோழர்களை கைதாகும் பொழுது போலீசு கடுமையாக தாக்கியதை உலகமே பார்த்து காறித்துப்பியது. சட்டவிரோதமாக காவல்நிலையத்திலும் மணல் நிரப்பிய பைப்பால் அடித்தது! அன்று இரவு மாணவர்களை ரிமாண்ட் செய்வதற்காக போலீசு நீதிபதி வீட்டிற்கு அழைத்துவந்தது!
பச்சையப்பன் கல்லூரி, பு.மா.இ.மு மாணவர்கள் போராட்டம் (கோப்புப் படம்)
ஊர் அடங்கியதும் இரவு 9.30 மணிக்கு நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். “ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்கும் வழக்கில் உரிய காரணங்கள் இல்லாமல் ரிமாண்ட் செய்யக்கூடாது” என உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதாடினோம். நீதிபதி அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, மாணவர்களை சிறையில் அடைப்பதிலேயே காவல்துறை கண்ணும் கருத்துமாய் இருந்தது.
கைது செய்த பொழுதும், காவல்நிலையத்திலும் காட்டுமிராண்டித்தனமாக அடித்ததை எடுத்து சொல்லியும் நீதிபதிக்கு பதைபதைப்பு வரவில்லை. இவ்வளவு மோசமாக தாக்கியிருக்கிறீர்களே என போலீசை நீதிபதி கண்டிக்கவுமில்லை.
நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்த நீதிபதியை, காவல்நிலையத்தில் மாணவர்களை அடித்ததை ஒவ்வொருவராக சொல்வதை உட்கார்ந்து விரிவாக பதிவு செய்யவேண்டும் என கோரினோம். “நானும் மனுசன் தானே!” என சொல்லி, சீக்கிரம் முடிச்சுட்டு தூங்க போகணும் என ஒரு இயந்திரத்தை போல போலீசு கேட்ட கையெழுத்தை போட்டுவிட்டு கிளம்புவதிலேயே இருந்தார். காவல்நிலையத்தில் போலீசு அடிப்பதையெல்லாம் இவ்வளவு பெரிதுபடுத்துகிறோம் என அசுவாரசியமாய் கேட்டு பதிவு செய்தார்.
அடித்ததை பதிவு செய்யும் பொழுது மாணவர்களை நீதிபதி “வா! போ!” என ஒருமையில் அழைத்தார். “பொது நோக்கத்திற்காக போராடிய அந்த மாணவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. போலீசை போல ஏன் நடந்துகொள்கிறீர்கள்? மரியாதையாக அழையுங்கள்” என பல வழக்குரைஞர்களும் போராடிய பிறகுதான், ஏற்கனவே கேட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் உணவிற்கு அனுப்பிவைத்தார். எல்லா மாணவர்களுக்கும் வெளிக்காயங்களுக்கு மட்டும் பெயருக்கு டிஞ்சர் போட்டு, உள்நோயாளியாக அனுமதித்து விடக்கூடாது என மருத்துவர்களை டீல் செய்து, திரும்ப அழைத்துவந்தார்கள்.
நீதிபதியின் நடவடிக்கையை கவனித்த பொழுது, சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் மக்களை அடிக்கும் ஒவ்வொரு போலீசுக்கும் ஐ.ஜி நம்மள காப்பாத்துவார் என்பதை விட, “ஜட்ஜய்யா! நம்மள காப்பாத்துவார்” என்ற நம்பிக்கை எல்லா போலீசுக்கும் இருக்கும் என அப்பட்டமாக தெரிந்தது!
கொசுறு செய்தி : இரவு 9.30 மணி அளவில் நீதிபதி வீட்டிற்கு மாணவ தோழர்களை அழைத்து வந்த பொழுது, அரசை, போலீசை அம்பலப்படுத்தி முழக்கம் எழுப்பினார்கள். இதனால் பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த இன்னொரு நீதிபதி வந்து மாணவர்களையும், நம்மையும் பார்த்து “தூக்கம் கலைக்கிறீர்களே!” என விசனப்பட்டார்.
டாஸ்மாக் போராட்டம் அன்றைக்கு தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது, தூக்கம் கலைத்ததற்காக கவலைப்படுகிறார்! நாம் பலரின் ’தூக்கத்தை’ கலைக்க வேண்டியிருக்கிறது!
இன்று தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை/போலீசுக் காட்டாட்சி ஜெயலலிதா தலைமையில் நடக்கிறது.
“மூடு டாஸ்மாக்கை” – பள்ளி மாணவர்கள் போராட்டம் (கோப்புப் படம்)
மதுவிலக்கு கோரியும் சாராயக் கடைகளை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை, மனிதச் சங்கிலி வரை அமைதி வழியில் போராடும் பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் போலீசால் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கப்படுகின்றனர். போராடுபவர்கள் மீது கொலை முயற்சி போன்ற கடுமையான வழக்குகள் ஏவப்படுகின்றன.
டாஸ்மாக்கிற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மதுரை, ராஜபாளையம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உளவுத் துறையினர் மூலம் போட்டோ எடுத்து மிரட்டப்படுகின்றனர். திருச்சியில் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களை “மாவோயிஸ்டுகளைப் போல் என்கவுண்டரில் கொல்லப் போவதாக” மிரட்டுகிறது கியூ பிரிவு போலீசு. சட்டப் பேரவையில் கூட எதிர்க் கட்சிகள் மதுவிலக்கு தொடர்பாகப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
“மூடு டாஸ்மாக்கை, கெடுவிதிப்போம் ஆகஸ்டு 31” என மக்கள் அதிகாரம் அமைப்பு விடுத்த அறைகூவலை தமிழக மக்களும் மாணவர்களும் ஆகஸ்டு மூன்றாம் நாளே அமுல்படுத்தத் தொடங்கி விட்டனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ விருத்தாச்சலம், கோவை, விழுப்புரம் எனத் தமிழகம் முழுவதும் பற்றிப் படந்தது. டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக்கோரும் மக்கள் போராட்டம், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரையும் போராட்டக் களத்தில் கொண்டு வந்து நிறுத்தி ஒரே குரலில் பேச வைத்தது.
ஜெயலலிதா அரசோ ஒட்டு மொத்த தமிழகத்தின் டாஸ்மாக் எதிர்ப்பையும் துச்சமாகக் கருதி, போராடும் மக்கள் மீது கொடிய அடக்குமுறையை ஏவி விடுகிறது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போர்க்குணமான போராட்டத்தைக் கண்டு தனது மாமூல் வசூல் பறிபோய்விடும் என்று ஆத்திரமடைந்து, கல்லூரி மாணவர்களை போலீசு நிலையத்தில் தாக்கியதோடு, சிறையிலும் சித்திரவதை செய்தது. விசாரணை செய்த நீதிபதியும் போலீசின் சித்திரவதையை உறுதி செய்துள்ளார். அதோடு சட்ட விரோதமாக பெண்கள் சிறைக்குள் சென்று மாணவிகளை மிரட்டி, ஆபாசமாகவும் பேசியுள்ளது உளவுத்துறை போலீசு.
மதுவிலக்குக் கோரி அறவழியில் போராடிய சசிபெருமாளை ஜெயா அரசு தனது அலட்சியத்தால் கொலை செய்தது. அதையும் தாண்டி சசிபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் புளுகிக் கொச்சைப்படுத்தியது; டாஸ்மாக் எதிர்ப்பு மட்டுமல்ல, குடிநீர், சாலை, குடியிருப்பு என அடிப்படை உரிமைகளுக்கான எல்லாப் போராட்டங்களையும் போலீசை ஏவிக் கொலைவெறியோடு ஒடுக்குகிறது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் போராடும் பெண்கள் (கோப்புப் படம்)
டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடியதால் சிறை வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்ட தோழர்களையும் பிணையில் விடக் கடுமையாக எதிர்த்து வருகிறது, ஜெயா அரசு. சட்ட விரோதமாகக் காவல் நீட்டிப்பு செய்கிறார்கள், நீதிபதிகள். வழக்கறிஞர்கள் “சட்டப்படி நடக்குமாறு” கேட்டால், “போலீசு சொல்வதைத்தான் கேட்பேன்” என்கிறார்கள், நீதிபதிகள். வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் முன்பே, பிணையில் விடுவதற்கே அழிக்கப்பட்ட சாராயத்துக்கு நட்ட ஈடாக முன்பணம் கட்டும்படி உத்தரவு போடுகிறார்கள். போலீசும் நீதித்துறையும் வேறு வேறல்ல ஒன்றுதான் என்பதோடு, இவை மக்களுக்கு எதிரானதாகவும் மாறிவிட்டதையே நடந்து வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
புரட்சிகர அமைப்புகள் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவிவிடும் ஜெயா அரசு, எதிர்க்கட்சிகளையும், போராடும் அமைப்புகளையும் கூட விட்டு வைப்பதில்லை. வைகோ, விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தி.மு.க-வினர், பத்திரிகையாளர்கள் என அனைவர் மீதும் தொடர்ந்து பல பொய்வழக்கு, அவதூறு வழக்குகளைப் போடுகிறது.
குறிப்பாக, காங்கிரசு தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறை, ஆளும் அ.தி.மு.க.வினரால் ஏவப்படுகிறது. அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன், அ.தி.மு.க எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், மேயர்கள் ஜெயலலிதாவின் ஆசியோடு நேரடியாக வன்முறையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது தடியடியோ, வழக்கோ, கைதோ – எந்த நடவடிக்கையுமே இல்லை என்பதுடன், ஆளுங்கட்சி நடத்தும் வன்முறைக்கு போலீசும் உளவுத்துறையும், பாதுகாப்புக் கொடுத்து வழி நடத்துகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக ஆளும் கட்சி – உளவுத்துறை – போலீசு ஆட்சிதான் நடைபெறுகிறது. இவ்வாறாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு, மத்தியில் உள்ள மோடி அரசும் துணை நிற்கிறது.
இன்னொருபுறம், தமிழகம் இன்று குற்றங்களின் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காத கொலை, கொள்ளை, பெண்கள் மீதான வன்முறை, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறியர்களின் தாக்குதல் முதலியவை அதிகரித்துக் கொண்டே போகின்றன. இவை எதையும் குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாத ஜெயலலிதா, டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடினால் மேலும் கடுமையாக ஒடுக்குவேன் என்று கொக்கரிக்கிறார்.
இந்தச் சம்பவங்கள் அரசுக் கட்டமைப்பு, மக்களை ஆளும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டதையும், பாசிசத்தை நோக்கிச் செல்வதையும், எதிர்ப்பே இல்லாத ஏகபோக ஆட்சியை நிறுவ எத்தனிப்பதையும் பளிச்செனக் காட்டுகின்றன. இத்தகைய அபாயகரமான அரசியல் சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டியது அவசியமானதும், அவசரமானதுமாகும்.
அ.தி.மு.க அரசின் அடக்குமுறை மற்றும் டாஸ்மாக்கிற்கு எதிரான போர்க்குரலாக, வரும் ஆகஸ்டு – 31 அன்று சென்னை, மதுரை, தருமபுரி, விழுப்புரம், திருச்சி ஆகிய 5 மையங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அனைத்துக் கட்சிகள், மக்கள் இயக்கங்களை இணைத்து, “மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!” என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.
இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைவரும் திரளாகப் பங்கேற்பதோடு, முழு மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பல்வேறு முறைகளில் போராட்டத்தைத் தொடர உங்களை அறைகூவி அழைக்கிறோம்.
குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!
தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!
மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது!
அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு! இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!!
மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது!
ஆர்ப்பாட்டம்
31-08-2015 மாலை 4 மணி
BSNL தந்தி அலுவலகம் எதிரில், தருமபுரி.
தலைமை: தோழர் முத்துக்குமார், மக்கள் அதிகாரம்.
கண்டன உரையாற்றுவோர்:
தோழர் கிருஷ்ணன், முன்னாள் தருமபுரி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம். திரு T.K.தேவேந்திரன், வழக்கறிஞர், பென்னாகரம் வழக்கறிஞர் சங்கப் பொருளாளர். தோழர் சிவாஜி, தலைவர், அனைத்து அருந்ததியினர் மக்கள் கூட்டமைப்பு. திரு B.M.ரமேஷ், B.A., B.L., தருமபுரி நகரச் செயலாளர், தே.மு.தி.க. திரு ஜெயபிரகாஷ், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர், ம.தி.மு.க. தோழர் ராமன் என்கிற எழிலன், தருமபுரி மாவட்டச் செயலாளர், வி.சி.க. திரு.நவநீதன், மதுவை ஒழிக்கப் போராடிய தியாகி சசிபெருமாளின் இளைய மகன். தோழர்.விளவை ராமசாமி, மக்கள் அதிகாரம்.
கலைநிகழ்ச்சி: “மக்கள் அதிகாரமே தீர்வு”
நன்றியுரை : தோழர் அருண், மக்கள் அதிகாரம்.
தகவல் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு. உள்ளூர் தொடர்புக்கு: 81485 73417
____________________________
2. மதுரை
தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை
______________________
3. சென்னை ஸ்ரீபெரும்புதூர்
குடிகெடுக்கும் டாஸ்மாக் வேண்டாம் என்று சொல்வதற்கு கூட தமிழகத்தில் கருத்துரிமை மறுக்கப்படுகின்றது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்களையும் மக்களையும் சிறைப்படுத்தியும் அவர்களை கிரிமினல்கள் போல சித்தரவதை செய்தும் தமிழக அரசு கடுமையாக ஒடுக்கி வருகின்றது. டாஸ்மாக் பிரச்சினை மட்டுமல்ல, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எதற்காகவும் கவலைப்படாத அரசு, மக்களின் போராட்டங்களை தீவிரமாக ஒடுக்கி வருகின்றது. இந்த சம்பவங்கள் அரசுக் கட்டமைப்பு, மக்களை ஆளும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டதையும், பாசிசத்தை நோக்கி செல்வதையும், எதிர்ப்பே இல்லாத ஏகபோக ஆட்சியை நிறுவ எத்தணிப்பதையுமே காட்டுகின்றன. இந்த அபாயகரமான அரசியல் சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும். இந்த அபாய அரசியல் சூழலை முறியடிக்கும் விதத்திலும் ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்கள், தொழிலாளார்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் வகையில் 31.08.2015 அன்று காலை 11 மணிக்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ஆர்ப்பாட்டம்.
மூடு டாஸ்மாக்கை ! மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையால் தடுக்க முடியாது ! ஆர்ப்பாட்டம் ஸ்ரீபெரும்புதூர்
31.08.2015 – காலை 11 மணி
தலைமை :
தோழர் அமிர்தா, தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்
சுதிர் ஷர்மா – பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் இவரொரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். அனுதாபி. அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் சரசுவதி சிஷு மந்திர் என்ற பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தவர். சுதிர் ஷர்மாவின் தந்தை கூட்டுறவு பால் சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றிக்கொண்டே, மாலை நேரத்தில் வீடுவீடாகச் சென்று பால் ஊற்றிக் கிடைத்த வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றியவர். ஆனால், இன்று சுதிர் ஷர்மாவின் அந்தஸ்தே வேறு. 20,000 கோடி ரூபாய் மதிப்புமிக்க நிறுவனங்களின் அதிபர் அவர். சுரங்கம், கல்வி என அவரது தொழில் சாம்ராஜ்யம் பரந்து கிடக்கிறது.
சுதிர் ஷர்மாவின் “நல்ல காலம் (அச்சே தின்)” 2003-ல், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு தொடங்கியது. அந்த ஆண்டில்தான் சுதிர் ஷர்மா தான் பார்த்துவந்த வேலைகளையெல்லாம் உதறிவிட்டு, மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசில் சுரங்கம் மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக இருந்த இலட்சுமிகாந்த் ஷர்மாவிடம் தனி உதவியாளராகச் சேர்ந்தார். அதன் பிறகு, மத்தியப் பிரதேசத்துக்கு வந்துவிட்டுத் திரும்பும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கும் ‘தொண்டில்’ சுதிர் ஷர்மாதான் நம்பர் 1 ஆகத் திகழ்ந்தார்.
மத்திய அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான், பா.ஜ.க.வின் தேசியத் துணைத் தலைவர் பிரபாத் ஜா, அவரது இரு மகன்களான ஆர்.எஸ்.எஸ். கூடுதல் பொதுச் செயலர் சுரேஷ் சோனி, பா.ஜ.க. எம்.பி. அனில் தவே ஆகியோருக்கும் சுதிர் ஷர்மாவிற்கு இடையே கொடுக்கல் வாங்கல் இருக்கும் அளவிற்கு நெருக்கமுண்டு. இவர்கள் மட்டுமல்ல, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான் குடும்பத்தினரோடும் சுதிர் ஷர்மாவிற்கு நெருக்கம் இருந்திருக்கிறது. இப்படி கடந்த பத்தாண்டுகளில் கிடுகிடுவென வளர்ச்சியடைந்த சுதிர் ஷர்மா இன்று வியாபம் ஊழல் வழக்கில் கைது செயப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஜகதீஷ் சாகர் – இந்தூரைச் சேர்ந்த அலோபதி மருத்துவர். இவரது வீட்டில் நோயாளிகளின் கூட்டத்தைவிட, மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தரச் சொல்லி, கையில் பணக்கட்டுகளோடு காத்திருக்கும் கூட்டம்தான் அதிகமிருக்கும். இவரது விரல் அசைந்தால் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்; அரசுத் துறைகளில் வேலை கிடைக்கும். அதற்கு ஏற்ப ஒரு வலைப்பின்னலையே உருவாக்கி இயக்கி வந்தவர்தான் ஜகதீஷ் சாகர்.
வியாபம் ஊழலின் சூத்திரதாரிகள் : ம.பி மாநில முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் இலட்சுமிகாந்த் ஷர்மா (இடது) மற்றும் அவரது முன்னாள் உதவியாளரும் ஆர்.எஸ்.எஸ் அனுதாபியுமான சுதிர் ஷர்மா.
இவருக்குப் போட்டியாக இன்னொரு வலைப்பின்னலை இயக்கி வந்தவன் சஞ்ஜீவ் ஷில்ப்கர். வியாபம் ஊழலின் முக்கிய புள்ளிகளான இருவரும் கைது செயப்பட்டுள்ளனர்.
நம்ரதா தமோர் – வியாபம் ஊழல் வழியாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நம்ரதாவின் உயிரற்ற உடல் இருப்புப் பாதை அருகே 2012-ஆம் ஆண்டு ஜனவரியில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை மூடியது, ம.பி. போலீசு.
அக்ஷய் சிங் – ஆஜ் தக் இந்தி மொழி தொலைக்காட்சியின் செய்தியாளரான இவர், நம்ரதா கொலை குறித்து அவரது பெற்றோரை பேட்டியெடுத்து திரும்பும் வழியிலேயே வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் இறந்து போனார்.
வியாபம் ஊழலை விரிவாக்கி, நிறுவனமயமாக்கிய பெருமை கொண்ட ம.பி முதல்வர் சிவராஜ் சௌஹான்.
1000-க்கும் மேற்பட்டவர்கள் ஆள்மாறாட்டம், விடைத்தாளைத் திருத்துவது போன்ற மோசடியான வழிமுறைகளின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஏறத்தாழ 1,40,000 பேர் பல்வேறு மோசடிகளின் மூலம் அரசு வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள். ம.பி. அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்வி அதிபர்கள், தனியார் தனிப்பயிற்சி நிலைய அதிபர்கள், பெரு வியாபாரிகள், அரசு ஒப்பந்ததாரர்கள் என ஒரு பெரிய கும்பலே இந்த ஊழலை இயக்கிப் பலன் அடைந்திருக்கிறது. ஏறத்தாழ 9,000 கோடி ரூபாய் வரை இலஞ்சப் பணம் கைமாறியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஊழல் அம்பலமாகி விசாரணை தொடங்கிய பின், ஊழலோடு தொடர்புடைய 50-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்து போனார்கள். மருத்துவ மாணவர்கள், இடைத்தரகர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் எனப் பலரும் இறந்து போனவர்களில் அடக்கம். இதுதான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து, இன்று நாடுதழுவிய அளவில் விவாதிக்கப்படும் வியாபம் ஊழலின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். சுதிர் ஷர்மாவும், ஜகதீஷ் சாகரும், நம்ரதா தாமோரும், அக்ஷ சிங்கும் ‘பாரதத்தையே’ சற்று உலுக்கிப் போட்ட இந்த ஊழல் புராணத்தின் கதாபாத்திரங்கள்.
வியாபம் ஊழல் இரண்டு விஷயங்களை மிகவும் துலக்கமாக நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது. முதலாவதாக, அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தாமே வரையறுத்துக் கொண்ட தமது கடமைக்கு எதிராகத் திரும்பி, மக்கள் விரோத அமைப்பாக மாறியிருக்கும் கட்டமைப்பு நெருக்கடிக்கு எடுப்பான உதாரணமாக வியாபம் ஊழல் விளங்குகிறது. இரண்டாவதாக, இப்படி எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்ட நிறுவனங்களை ஆளும் உரிமை இந்து மதவெறிக் கும்பலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கையில் சிக்கும்பொழுது, அது எவ்வளவு தூரத்துக்கு அபாயகரமானதாகவும், முதுகுத்தண்டையே சில்லிட வைக்கும் கிரிமினல்தனமானதாகவும் மாறும் என்பதையும் வியாபம் ஊழல் நமக்குப் புரிய வைத்திருக்கிறது.
***
“இலஞ்சம் கொடுத்தும், ஆள் மாறாட்டம் செய்தும், விடைத்தாள்களைச் சட்டவிரோதமாகத் திருத்தியும் அரசுப் பணிகளிலும், தொழில் படிப்புகளிலும் சேருவது மற்ற மாநிலங்களில் நடைபெறவில்லையா” என்று மடக்குகிறார்கள், ஆர்.எஸ்.எஸ். சார்பாகப் பேசும் அறிவாளிகள். உண்மைதான்; தமிழகத்தில் தொகுதி-1 வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பணி நியமனம் சமீபத்தில் கேள்விக்குள்ளானது. அவர்களது விடைத்தாள்கள் மோசடியான முறைகளில் திருத்தப்பட்டு, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அம்பலமாகி, அவர்களது நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களைக் காட்டி அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செயப்பட்டனர். இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வில் மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகி, அத்தேர்வு ரத்து செயப்பட்டது. இப்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மோசடிகள் நடப்பது நாடெங்கும் பரவலாகக் காணப்பட்டாலும், வியாபம் ஊழலோடு ஒப்பிடும்பொழுது இவையெல்லாம் பாச்சாக்கள் அல்லது ஜுஜுபிக்கள்.
வியாபம் ஊழலை ம.பி முழுவதும் விரிவாக்குவதற்கு ஏற்ற கிரிமினல் வலைப்பின்னலை உருவாக்கி இயக்கி வந்த ஜகதீஷ் சாகர் (இடது) மற்றும் சஞ்ஜிவ் ஷில்ப்கர்.
பீகார் மாநிலத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களது உறவினர்களே பள்ளிக்கூட கட்டிடத்தில் ஏறி பிட்டைத் தூக்கிப் போடும் காட்சி சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகியது. இதனையொட்டி பொது அறம் இந்தளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதே என்று அழுகாச்சி விவாதங்கள் தொலைக்காட்சிகளில் நடந்தன. மண்டலை ஆதரிக்கும் பிற்பட்ட சாதிக் கூட்டணி ஆளும் பீகாரில் நடந்த அந்த முறைகேடு ஒருவகையில் பாமரத்தனமானது. ஆனால், இப்படியான முறைகேட்டை பார்ப்பன பாசிசக் கும்பல் தலைமையேற்று நடத்தினால், அது எந்தளவிற்கு ஹை-டெக்காகவும், கிரிமினல்தனம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை வியாபம் ஊழல் எடுத்துக் காட்டியிருக்கிறது.
ஒரு தொழில்முறை நேர்த்தியோடும், மாநிலம் தழுவிய அளவில் தரகர் வலைப்பின்னலை அமைத்துக் கொண்டும், மோசடிகளுக்குத் தக்கவாறு “ரேட்டை” நிர்ணயித்துக் கொண்டும் பா.ஜ.க. அரசின் ஆதரவோடு நடத்தப்பட்டிருப்பதுதான் வியாபம் ஊழல். போட்டித் தேர்வுகளை நடத்தி தொழில் படிப்புகளுக்கும் அரசுப் பணிகளுக்கும் ஆட்களை நியாயமான முறையில் தேர்ந்தெடுக்க உருவாக்கப்பட்ட “வியாபம்” என்ற அரசுக் கட்டமைப்பே, கோடிகளுக்கும் இலட்சங்களுக்கும் சீட்டுக்களை விற்கும் ஏஜெண்டாக மாறிப் போன அயோக்கியத்தனம்தான் வியாபம் ஊழல். இந்த ஊழலை அம்பலப்படுத்த துணிந்தவர்களையும், இந்த ஊழலுக்குச் சாட்சியங்களாக இருப்பவர்களையும் அடுத்தடுத்துக் கொன்றொழிப்பதன் மூலம் இந்த ஊழலை அடியோடு மறைத்துவிட முயலுவதோடு, இந்தக் கொலைகள் மூலம் ஊழலில் சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்களைக் காப்பாற்ற முயலுகின்ற அதிபயங்கர சதியாகவும் வியாபம் ஊழல் பரிமாணம் எடுத்திருக்கிறது.
***
மத்தியப் பிரதேச தொழில் தேர்வு வாரியம் என்பதன் (இந்தி மொழி) சுருக்கம்தான் வியாபம். இது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்துக்கு நிகரானது. வியாபம் 1970-களில் ஒரு சுயேச்சையான, சுயநிதி கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டு, முதலில் மருத்துவ படிப்புக்கும், பின்னர் பொறியியல் படிப்புக்கும், 40 அரசுத் துறைகளுக்கும் ஆளெடுப்பதற்கான நுழைவு/போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு அதனிடம் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டது. 1990-களின் பின் இந்நிறுவனத்தில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டாலும், மத்தியப் பிரேதசத்தில் 2003-ல் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், இந்த ஊழலும், முறைகேடுகளும் அசாதாரண முறையில் விரிவாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டது.
வியாபம் முறைகேடு தடங்கலின்றி நடைபெறுவதை மேற்பார்வையிட்டு வந்த தேர்வுக் கண்காணிப்பாளர் பங்கஜ் திரிவேதி (இடது) மற்றும் நிதின் மொஹிந்திரா.
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக சிவராஜ் சிங் சௌஹான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 2007-ல் வியாபம் தொடர்பாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். இதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அனைத்து அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பாக வியாபம் மாற்றியமைக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்குப் பிறகான காலக்கட்டத்தில்தான் (2007 முதல் 2013 வரை) வியாபம் ஊழல் அதன் உச்சத்தை எட்டியது. இதேகாலக் கட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகியது தற்செயலானதல்ல. அதேபோல இந்த ஊழலின் தலைமையாக ஷர்மாக்கள், திரிவேதிகள், மிஷ்ராக்கள் என்ற பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த அதிகார கும்பல் இருப்பதும் தற்செயலானதல்ல.
உயர் கல்வி அமைச்சர் இலட்சுமிகாந்த் ஷர்மாவின் தனி உதவியாளராகச் சேர்ந்த சுதிர் ஷர்மா, வியாபம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளும் மோசடிகளும் எவ்விதத் தடங்கலின்றி நடப்பதற்கு ஏற்றவாறு அதன் அதிகாரக் கட்டமைப்புக்குள் தனது தலையாட்டிகளை அமர வைத்தார். இத்திட்டத்தின்படி கல்லூரி விரிவுரையாளர் என்பதைத் தாண்டி வேறெந்த சிறப்பான தகுதிகளுமற்ற இந்தூரைச் சேர்ந்த பங்கஜ் திரிவேதி வியாபமின் தலைமை தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் எந்தெந்த வழிகளில் முறைகேடுகளைச் செவது என்பதற்கான மூளையாகச் செயல்பட்ட திரிவேதி, இதற்கு ஏற்ப வியாபமில் தனக்கு வேண்டப்பட்டவர்களை கீழ் அதிகாரிகளாக நியமித்துக் கொண்டார். இவரால் வியாபமின் கணினித் துறையில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிதின் மொஹிந்திரா, அஜய் சென் ஆகிய இருவரும்தான் இலஞ்சம் கொடுத்த மாணவர்களின் விடைத்தாள்களைச் சட்டவிரோதமாகத் திருத்தியும், ஆள் மாறாட்டம் செவதற்கு ஏற்ப தேர்வு எண்களில் முறைகேடுகளைச் செய்தும் இந்த மோசடிகளைத் தடங்கலின்றி நடத்திச் சென்றனர். சி.கே.மிஷ்ரா என்ற மற்றொரு அதிகாரி வியாபமிற்கும் இடைத்தரகர்களுக்கும் இடையேயான பாலமாகச் செயல்பட்டார்.
கழுத்து நெறித்து கொல்லப்பட்ட வியாபம் ஊழலின் சாட்சிகளுள் ஒருவரும் மருத்துவ மாணவியுமான நம்ரதா தமோர் (இடது) மற்றும் நம்ரதா கொலையை விசாரித்துத் திரும்பும் பொழுது மர்மமான முறையில் இறந்து போன பத்திரிகையாளர் அக்ஷய் சிங்
இலட்சுமிகாந்த் ஷர்மா, சுதிர் ஷர்மா, பங்கஜ் திரிவேதி என மேல்மட்டத்தில் மட்டுமின்றி, கீழேயும் ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. இந்தூரைச் சேர்ந்த அலோபதி மருத்துவர் ஜகதீஷ் சாகரும், சஞ்ஜீவ் ஷில்ப்கரும் அரசியல்வாதிகள், மருத்துவர்கள், வியாபாரிகள், அரசு ஒப்பந்ததாரர்களைக் கொண்ட வலைப்பின்னலை இயக்கும் பொறுப்பில் இருந்தனர். இந்தக் கீழ்மட்ட வலைப்பின்னல் “மார்கெட்டிங் பிரிவு”,- அதாவது இலஞ்சம் கொடுப்பதற்குத் தயாராக உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து, சலித்துத் தேர்ந்தெடுப்பது என்றும், போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்துவதற்கான பிரிவு என்றும் இரு பிரிவுகளாகச் செயல்பட்டது. இந்த ஊழலில் பல கோடி ரூபாய் பெறுமான பணப்புழக்கம் ஏற்பட்டதற்கு ஏற்ப இந்தக் கீழ்மட்ட வலைப்பின்னலின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது.
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்துவதுதான் வியாபம் ஊழலின் பணம் காச்சி மரமாக இருந்திருக்கிறது. எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வில் மோசடிகள் செவதற்கு மட்டும் 15 இலட்சம் முதல் 35 இலட்ச ரூபாய் வரையும், மருத்துவ மேல்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் செவதற்கு 40 இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையும் இலஞ்சம் பெறப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்த ஊழலை விசாரித்து வந்த சிறப்பு அதிரடிப் படை, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதற்கு 80 இலட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை இலஞ்சம் பெறப்பட்டிருப்பதாக ம.பி. உயர்நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் மோசடிகள் நடத்தப்பட்ட விதம் பார்ப்பன-பாசிசக் கும்பலின் கிரிமினல்தனத்தைப் புட்டு வைக்கிறது. இம்மோசடி, “முன்னாபாய் ஸ்டைல், ஆள்மாறாட்டம், ரயில் இன்ஜின்-பெட்டி முறை, விடைத்தாளைத் திருத்துவது” என நான்கு வழிகளில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மாஃபியா கும்பல் ஸ்கெட்ச் போட்டு எதிரியின் கதையை முடிப்பது போல, ஸ்கெட்ச் போட்டு இந்த நான்கு வழிகள் மூலம் நுழைவுத் தேர்வு மோசடியை நடத்தி வந்திருக்கிறது, பார்ப்பன-பாசிச கும்பல். இலஞ்சத்தின் அளவுக்கு ஏற்ப இந்நான்கு வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு வழிகள் குறித்தும், இதனால் பலனடைந்த ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் தொடங்கி சௌஹான் வரையிலான பா.ஜ.க. தலைவர்கள் குறித்தும்; இந்த ஊழலைத் திட்டமிட்டு நடத்திய இந்துமதவெறிக் கும்பலுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள், தனியார் தனிப்பயிற்சி நிறுவன அதிபர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும், இந்த ஊழல் அம்பலமான பிறகு அதனை மூடிமறைக்க சௌஹான் அரசு எடுத்த முயற்சிகள் குறித்தும், இந்த ஊழலின் முக்கிய சாட்சிகளான இலஞ்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும், அம்மாணவர்களுக்கும் மேல்மட்ட அதிகார கும்பலுக்கும் பாலமாக இருக்கும் இடைத்தரகர்களும் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொன்றொழிக்கப்பட்டு வருவது குறித்தும் அடுத்த இதழில் காண்போம்.
“உலக நாடுகள் அனைத்தும் இராணுவத்திற்காக செலவிடும் மொத்த தொகையில் பாதிக்கு மேல் தனது பங்காக செலவிடும் அளவுக்கு தன்னை அமெரிக்கா வளர்த்துக் கொண்டது எப்படி?”
“ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் விற்பனை பொருளாக்கப்பட்டதும், அவர்களது கட்டாய உழைப்பும், அவர்களது துயரமும்தான் அமெரிக்காவின் வல்லாண்மைக்கும் வளத்துக்கும் காரணம். இந்த உண்மையை கேட்பது பலருக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும் அதுதான் உண்மை.”
கார்னல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராபர்ட் பர்ஷோச்சினி அமெரிக்க வல்லரசின் இராணுவ வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தும் தனது பதிவை மேற்கண்ட கேள்வி பதிலுடன் தொடங்குகிறார்.
அமெரிக்காவின் மொத்த இராணுவ செலவீனத்தை ($61,000 கோடி) இரண்டாக பிரித்தாலும் கூட, அதில் ஒரு பகுதி மட்டுமே (அதாவது $30,500 கோடி), உலக நாடுகளில் சீனா ($21,600 கோடி) மற்றும் ரசியா ($8,400 கோடி) அல்லது சவுதி அரேபியாவின் ($8,100 கோடி) ஒட்டு மொத்த இராணுவ செலவீன தொகைக்கு ஈடாகிறது. இதில் சவுதி அரேபியாவின் இராணுவச் செலவுகள் அமெரிக்க ஆதிக்கத்தின் நீட்சிதான் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இதைத்தாண்டி ஐரோப்பிய வல்லாதிக்கங்களான ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி தத்தமது இராணுவ ஆதிக்கத்துக்கு முறையே $4,600 கோடி, $6,000 கோடி, $6,200 கோடி, $3,100 கோடி செலவிடுகின்றன.
வடகொரியாவின் இராணுவ சர்வாதிகாரம் என்று ஊளைச்சவுண்டு விடும் ஊடக பயங்கரவாதிகளுக்கு மத்தியில் அதன் இராணுவ செலவீனம் உலகவரைபடத்தில் தேடிக்கண்டுபிடிக்க இயலாத வண்ணம் திருஷ்டி பொட்டு அளவில் இருக்கிறது. அதற்கு எதிராக நிறுத்தப்படும் ‘ஜனநாயக’ தென்கொரியா தனது இராணுவத்திற்காக ஆண்டுக்கு $3,600 கோடி செலவிடுகிறது.
அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு அடை கொடுக்கும் இலக்கியவாதி.
ஈரானின் இராணுவ செலவீனமோ உலக வரைபடத்தில் குறிப்பிட இயலாத அளவிற்கு மிக மிகச் சிறியதாக உள்ளது. அதாவது 2009 கணக்கின் படி $1,000 கோடி. ஆனால் இவர்கள் தான் ஆயுதங்களை குவித்து உலகை மிரட்டுவதாக $61,000 கோடி செலவு செய்யும் அமெரிக்கா சீன் போட்டது.
போகிற போக்கில் இன்னொரு குண்டையும் போட்டுத்தாக்குகிறார் ராபர்ட் பர்ஷோச்சினி. அதாவது அமெரிக்கா லாவோசில் போட்ட வெடிக்காத குண்டுகளை அகற்றுவதற்கு $1,600 கோடி தேவைப்படுகின்றது. இந்தக் குண்டுகளை அப்புறப்படுத்த முடியாததால் ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக, குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். ஆனால் அமெரிக்கா இன்னமும் லாவோசிற்கு $1,600 கோடி தொகையை வழங்க மறுக்கிறது.
அமெரிக்க வல்லரசின் ரகசியம் இது!
பின் குறிப்பு:
இதை வெண்முரசு வேந்தர் ஜெயமோகனிற்கு சமர்ப்பிக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி போன்ற காமடி பீஸ் அரசர்களின் புகழ்பாடி உண்டி வளர்க்கும் கவிராயர்கள் இல்லாமல் இலக்கியம் இல்லை. அதுவே மோடி, ஹிட்லர், அமெரிக்கா என்றால் இலக்கிய ஆளுமைகள் சிலிர்த்து எழும்; அறம், இலட்சியவாதம், மரபு, வரலாறு என்று கண்டதை உமிழும். அதாவது வேதக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதையே இவர்கள் உள்ளொளி தத்துவமாக இழுத்து விடுவார்கள்.
அர்ஜுன் சம்பத் எனும் கைக்கூலியுடன் அமெரிக்காவில் மேடையேறியது குறித்து கொஞ்சம் வெட்கப்பட்டிருந்தார், ஜெயமோகன். அதற்கே அவரது அமெரிக்க என்.ஆர்.ஐ அம்பிகள் சிலிர்த்து எழுந்து அர்ஜுன் சம்பத் மற்றும் அவரை மேடையேற்றிய தமிழ் பெயரில் இருக்கும் இந்துமதவெறி சங்கத்துக்காக வாதாடினார்கள். உடனே தான் பட்டது வெட்கமே அன்றி, கோபமல்ல என்று மற்றுமொரு இழுப்பை விட்டிருந்தார் ஜெயமோகன். குசுக்கள் கூட சூறாவளி போல சித்தரித்துக் கொள்ளும் இக்காட்சிகளை இதுவரை வரலாறு கண்டதில்லை.
இப்படி பச்சையாக பாசிசத்தை ஆரத்தழுவி வெண்முரசு என்று மச்சகந்தியை பராசரன் சீரழித்த கதையை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்திலும், தான் அமெரிக்க டூர் போனதை முன்னிட்டு ‘அமெரிக்க இலட்சியவாதம்’ எனும் அடையை இலக்கிய உலகிற்கு நல்கியிருந்தார்.
“அது என்ன சார் அமெரிக்க இலட்சிய வாதம்” என்று ஒரு வாசகர் அப்புராணியாய் கேட்கப் போக, கேட்பது ஒருவேளை இடதுசாரியாக இருக்குமோ என்ற ஐயத்தில் கம்யுனிஸ்டுகளை விளாசியிருந்தார். அதாவது ‘கம்யுனிஸ்டுகள் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று சொல்லி பாட்டாளி வர்க்க சவுண்டு விடுகிறார்கள். இந்தக் கூச்சலுக்கு மத்தியில் உனக்கெல்லாம் அமெரிக்க இலட்சியவாதம் குறித்து எதாவது தெரியுமா’ என்ற தொனியில் விளக்கியிருந்தார். அமெரிக்காவை எதிர்க்கும் கம்யூனிச வகைமாதிரிகளுக்கு போலிக் கம்யூனிஸ்டுகளை ஆதாரமாய் குறிப்பிடுகிறார். அமெரிக்கா ஆராதிப்பதே இத்தகைய போலிக் கம்யூனிசத்தைத்தான். இந்த உண்மை இலக்கிய மேதைக்கு தெரியவில்லை.
ஜெயமோகனின் விளக்கத்திற்கு ராபர்ட் பர்ஷோச்சினி வரைபடத்தோடு பொழிப்புரை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். அமெரிக்காவின் புகழ், வளர்ச்சி, தொழில் நுட்பம், சுத்தம், சுகாதாரம், கவர்ச்சி அனைத்திலும் கோடிக்கணக்கான ஏழைநாட்டு மக்களது ரத்தம் கலந்துள்ளது. சுந்தர ராமசாமி தனது இறுதி காலத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே மறைந்தார். ஜெய மோகன் போலவே அமெரிக்காவையும் கொண்டாடினார். சு.ரா வழியில் எழுத்தும் எண்ணமும் அமெரிக்காவில் செட்டிலாவதையே “அமெரிக்க இலட்சியவாதம்” என்கிறார் ஜெயமோகன். பரவாயில்லை, பாணபத்திர ஒணாண்டிகள் மகிழ்ச்சியடைவதையே சோகமுற்றிருப்பதாக காட்டுவதற்கு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிங்கமுத்துவுக்கு கிடைத்தது அ.தி.மு.க. ஜெயமோகனுக்கு கிடைத்தது அமெரிக்கா!
அடக்குமுறையை ஏவும் அரசு! குதறும் காவல் துறை! துணை நிற்கும் நீதிமன்றம்!
மதுரையில் கண்டன கருத்தரங்கம்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் சார்பாக 22-08-2015 சனிக்கிழமை மாலை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.
டாஸ்மாக் சாராயக்கடை எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாய்ப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தீயை மூட்டியவர்கள், மேலும் அதை அணையவிடாமல் பாதுகாப்பதில் முன்னணியாய் இருப்பவர்களை இனம் கண்டு ஒடுக்குவதில் பாசிச ஜெயா அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. புறக்காவல் நிலையங்களாக மாறி, காவல்துறை சொல்வதை வழி மொழியும் இழி செயலில் இறங்கி இருக்கும் நீதி மன்றங்கள். இந்த மக்கள் விரோதக் கூட்டணியை அம்பலப்படுத்தவும், இதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், அறிவுத்துறை சார்ந்தவர்கள் கலகக்குரல் எழுப்ப வேண்டும் என்ற நோக்கில் தான் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
கருத்தரங்கத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் குழுவின் அமைப்பாளர் தோழர் மு.திருநாவுக்கரசு தலைமையேற்றார். கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் ப.திருமலைராஜன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தலைமை ஏற்ற வழக்கறிஞர் மு. திருநாவுக்கரசு பேசும்போது, “ டாஸ்மாக் ஒரு நோய். அரசு மக்களுக்கு நோயைத் தருகிறது . இத்தகைய சூழலில் வாழ்வதே அவலம். பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப் போராடுவதே சரியானது. ஓட்டுப் போடுவதற்கு மட்டும்தான் மக்கள் என்று ஓட்டுக்கட்சிகள் கருதுகின்றன. இலவசங்களை மக்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏய்க்கிறார்கள். உழைப்பின் மூலம் வரும் வருமானத்தில் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும். உரிமைக்காகப் போராடுகிறவர்களை அடக்குமுறையைக் கையாண்டு கைது செய்கிறது அரசு. ஒரு ராஜுவைக் கைது செய்வதால் பல ராஜுக்கள் உருவாகிப் போராடும் நிலை ஏற்பட அனைவரும் போராட வேண்டும்” என்றார்.
டாஸ்மாக் நடத்துவது சட்டப்படியானது, எதிர்த்துப் போராடுவது சட்ட விரோதமானதா? – மூத்த வழக்கறிஞர் ப.திருமலை ராஜன்:
”நீதிபதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது வழக்காடிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர் எங்கிருந்து வந்தார், எப்போது வீடு வாங்கினார்? எப்போது கார் வாங்கினார். எந்தெந்த பேங்குகளில் கணக்கு வைத்துள்ளார் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.
நீதித்துறையில் மேலிருந்து கீழ்வரை லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. வன்னியர் ஜாதிக்கு நீதித் துறையில் அதிக ஒதுக்கீடு கேட்டுப் போராட என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். நீதித்துறையில் இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. ஒன்று யோக்கியர்கள், மற்றொன்று அயோக்கியர்கள். எந்த ஜாதியில் இருந்து வந்தாலும், இந்த இரண்டு ஜாதியில் தான் அடக்கம். இதில் யோக்கியர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அயோக்கியர்கள் சுலபமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றேன்.
நிதி கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மர்க்கண்டேய கட்ஜு சென்னை தலைமை நீதிபதியாக இருந்த போது சில நீதிபதிகள் மீது ஊழல் புகார் கொடுத்தோம். அவர் விசாரணை கமிசன் போட்டார். நாகப்பன், கற்பக விநாயகம், சதாசிவம், ஆகிய மூன்று நீதிபதிகள். அவர்களை நாங்கள் சந்திக்கச் சென்றபோது அவர்கள் மூன்று பேரும் நீதித்துறை அதிகாரி ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தார்கள். அந்த அதிகாரி முதல் தரமான அயோக்கியன். இவர்களிடமிருந்து எப்படி நீதி கிடைக்கும்.?
போரடிப் பெற்ற உரிமைகள் நீர்த்துப் போய் சட்டமே பிற்போக்குத்தனமாக மாறிக்கொண்டு இருக்கிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சட்டப்படி நோட்டீஸ் கொடுத்தால் சட்ட விரோதம் என்கிறார்கள். ரிலையன்ஸ் அம்பானி, அண்ணன் – தம்பி சொத்துப் பிரச்சனைக்கு 3 நாட்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமரசம் பேசுகிறார்கள். எழுத்தாளர் அருந்ததிராய் ”நீதிமன்றங்கள் மக்களுக்காக இல்லை” என்று சொன்னார். சொன்னதை வாபஸ் பெற முடியாது என்றதால் ஒரு நாள் திகார் சிறைக்குள் அவரைத் தள்ளியது நீதிமன்றம். இப்படித்தான் இருக்கிறது நீதிமன்றம்.
தமிழ் நாட்டில் அரசே சாராயக்கடை நடத்துகிறது. டாஸ்மாக்கின் கொடுமைகளைச் சொல்லித் தீராது. அண்மையிலே ஒரு இளம் பெண் குடித்துவிட்டு போதையிலே வீதியில் சுரணையற்று விழுந்து விட்டாள். அவளுடைய கைக்குழந்தை பக்கத்திலே உட்கார்ந்து தாய்ப் பாலுக்காக அழுது அழுது இறந்துவிட்டது. குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டிய தாய் சாராயம் குடித்து சரிந்து விட்டாள். இதற்கு யார் பொறுப்பு ? அரசுதான் பொறுப்பு !
இந்திய தண்டனைச் சட்டம் 324-ன் கடைசிப் பகுதி ’ஒருவரின் உடல்நலத்தைக் கெடுக்கும் ரசாயனப் பொருளும் ஆயுதம்தான்’ என்று வரையறுக்கிறது. டாஸ்மாக் நடத்தும் அரசு சட்டப்படி குற்றவாளி. ஆனால் அதனை எதிர்த்துப் போராடுவது சட்டப்படியானது. அரசியல் சட்டம் 47 மது போன்ற போதைகளை ஒழிக்க வலியுறுத்துகிறது . 750 மிலி ஆல்கஹாலை ஒருவன் ஒரே நேரத்தில் குடித்தால் அவன் செத்துவிடுவான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குடிகாரர்களின் கல்லீரல், மூளை, தசைகள் மெல்ல மெல்லக் கெட்டுவிடும். இதைத் தெரிந்தே அரசு செய்கிறது .
அரசு சாராயம் விற்பதைத் தடை செய்யவேண்டும் என்று வழக்கு போட்டால் அது அரசின் கொள்கை முடிவு என்கிறது நீதிமன்றம். அப்படியானால், உடல் உறுப்புகளை விற்கவும், கஞ்சா, பிரவுன் சுகர், போன்ற போதை வஸ்துக்களையும், விபசாரத்தையும் கூட அனுமதித்து அரசாங்கம் வருமானத்தைப் பெருக்கலாமே. டாஸ்மாக்குக்கு எதிராக உறுதியாகப் போராடிக்கொண்டு இருக்கிறவர்கள் சிறைகளில். வதைபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றும் பொறுப்பு நம் அனைவர் கையிலும் இருக்கிறது.”
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசியது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்துக்கு எதிராகத் தமிழகம் முழுக்க ஆளும் கட்சி போராட்டம் நடக்கிறது. இளங்கோவன் ஒரு கருத்தைச் சொன்னால் அதை எப்படி எதிர் கொள்வது ? கண்டன அறிக்கை, அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம், அவமதிப்பு வழக்கு இப்படித்தான் எதிர் கொள்ள வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது?
அ.தி.மு.க. காலிகள் காங்கிரஸ் அலுவலகங்களை அடித்து நொறுக்குகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள். முச்சந்தியில் கொடும்பாவி கொளுத்துகிறார்கள். தமிழக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர், இந்நாள் நாடளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். நெல்லை மாநகரப் பெண் மேயர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என்று மிரட்டுகிறார். பாதுகாப்புக்கு வரும் போலீசைக் கூட கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றனர் அ.தி.மு.க. காலிகள். இது வன்முறை இல்லையா? சட்ட விரோதமில்லையா?
ஆனால் ஒரு மாதம் முன்பாக டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மாணவர்களை போலீஸ் என்ன செய்தது. இரும்புக் கம்பிகளைக் கொண்டு குறிவைத்துத் தாக்கி மண்டையை உடைத்து இரத்தக் காட்டேரியாகத் தாண்டவமாடியது. மாணவிகளை பூட்ஸ் கால்களால் உதைக்கிறார் சென்னை உதவி கமிஷனர் மோகன்தாஸ். காவல் நிலையத்தில் வைத்தும், உளவுத்துறை போலீஸ் சிறைக்குள் சென்றும் கொடுரமாகத் தாக்குகிறது. பொய் வழக்குகளை அடுக்கடுக்காய்ப் புனைகிறது. யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு அதிகாரம்?
விருத்தாசலம், மேலப்பாளையூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலே டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் மற்றும் ஊர் பொதுமக்களைச் சிறையில் அடைத்து பிணை தர மறுக்கிறது அரசு. மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகளைப் போட்டு குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி செய்கிறது ஜெயாவின் போலீஸ். சாராயத்துக்குப் பாதுகாப்பு, எதிர்த்துப் போராடுபவர்களுக்குச் சிறை வைப்பு. இது என்ன நியாயம்? அவர்கள் ஏற்படுத்திய சட்டத்தை அவர்களே மதிப்பதில்லை.
மக்கள் சாராயம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். குடிக்கத் தண்ணீர், மருத்துவம், கல்வி போன்ற அடிபடைத் தேவைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அரசு சாராயத்தைத் தருகிறது. நீதிமன்றங்களுக்குப் போனால் சாராயம் விற்பது அரசின் முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடாது என்கிறார் தலைமை நீதிபதி. அரசிடம் மக்கள் பல ஆண்டுகளாகக் கெஞ்சுகிறார்கள். ஆனால் அரசு மயிரளவுகூட செவி சாய்க்கவில்லை. உடைப்பதைத் தவிர வேறு என்ன வழி?
அ.தி.மு.க ரௌடிகள் அடித்து நொறுக்கினால் நடவடிக்கை கிடையாது. மற்றவர்கள் போராடினால் காட்டுமிரண்டித்தனமான ஒடுக்குமுறை. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பது உண்மையா?
பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது தருமபுரியில் 3 மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்டனர் . சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்காவை சொல்லக் கூசும் வார்த்தைகளால் வசைமாறிப் பொழிந்த வானரக் கூட்டங்கள் பல நாட்கள் தமிழகத்தையே நிலைகுலையச் செய்தது. இவர்கள் எல்லாம் குவாட்டரும் கோழிப் பிரியாணியும் கூலியும் கொடுத்துக் கூட்டி வரப்பட்டவர்கள் தான். இவை அனைத்தையும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைத் தமிழ் நாடே அறியும்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார் . அங்கே நடந்தது என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு கள்ள ஓட்டு போட்டு வந்ததை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. ஒரு வாக்குச் சாவடியில் மொத்தம் 800 ஓட்டுக்கள்தான். ஆனால் 900 ஓட்டுக்கள் பதிவாகியது எப்படி? தேர்தல் கமிசன் எங்கே இருக்கிறது? என்ன செய்கிறது ? அரசியல் சட்டத்தைக் கழிப்பறைக் காகிதமாகக் கூட மதிப்பதில்லை. ஆனால் மக்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்று சொல்லி மிதிக்கிறது காவல் துறை.
மதுவினால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் ஏழை மக்கள் மடிவதுடன் இப்போது நிமிடம் தோறும் நடைபெற்று வரும் அனைத்துக் குற்றச் செயல்களுக்கும் மதுதான் அடிப்படையாக இருக்கிறது என்று அரசே ஒத்துக்கொள்கிறது. ஆனால் எதிர்த்துப் போராடுகிறவர்களை மண்டையைப் பிளக்கிறது. சிறைக்குள் தள்ளி சித்திரவதை செய்கிறது.
டாஸ்மாக் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தில் தான் நலத்திட்டங்கள் நடக்கின்றது. 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார்கள் சாராயக் கம்பேனி முதலாளிகள், அவர்களின் ஊதுகுழல்கள். இலவசங்கள் எல்லாம் குப்பை; ஒன்றுக்குமே உதவாது என்று சொல்லி மக்கள் வீதியில் வீசுகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணியாக மலிவு விலை உணவகம், மருந்தகம் போன்றவற்றை அரசு நிறைய திறந்து வேலை தரலாமே?
அரசும் காவல்துறையும் இப்படி இருக்கிறது என்றால் ’சுதந்திரமான’ நீதித்துறை எவ்வாறு இருக்கிறது? ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க சென்னை உயர்நீதிமன்றதிற்குள் காவல்துறையினர் சட்டவிரோதமாகப் புகுந்து நீதிபதிகள் முதல் வழக்கறிஞர், பொதுமக்கள் வரை அனைவரையும் அடித்து மண்டையை உடைத்தனர்.அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜரானது செல்லாது என்று சொன்ன உச்ச நீதிமன்றம் குமாரசாமி தீர்ப்புச் சொல்லத் தடை இல்லை என்றது. ஜெயா கும்பலின் ஜாமீன் மனு மீது உடனடி விசாரணை. வழக்கை 6 மதத்திற்குள் முடிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு. குமாரசாமியின் தப்புக் கணக்குத் தீர்ப்பு. 10 சதவீதம் கொள்ளையடிக்கலாம் என்ற அனுமதி. இவையெல்லாம் எந்த சட்டத்தில் உள்ளது. நீதிமன்றங்களை லஞ்ச ஊழல் மற்றும் பார்ப்பனீய மனுதர்ம சாத்திரங்கள்தான் ஆட்சி செய்கின்றன.
இலட்சக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நமது மண்ணின் கனிமங்களைக் கொள்ளையிடும் கூட்டங்களுக்கு ஆதரவாக நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் நிற்கின்றன. கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி ,தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசன், ஆற்று மணல் கொள்ளையர்களிடம் பங்கு வாங்கிக்கொண்டு அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளை ராஜா, சி.எஸ்.கர்ணன், சி.டி.செல்வம் போன்ற நீதிபதிகள் தருகின்றனர். பாதிக்கப்படும் மக்களையும் வழக்காடும் வழக்கறிஞர்களையும் மக்களையும் இந்த நீதியரசர்கள் கேவலப்படுத்துகின்றனர் .
அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றவர்களைச் சட்டவிரோதமாகவும், தார்மீக நெறிமுறைகளை மீறியும், நரித்தனமாகவும் நம்ப வைத்துக் கழுத்தறுத்துக் கொலை செய்வதற்கு நம்முடைய பார்ப்பனீய நீதிமன்றங்கள் அப்பட்டமாக ஒத்துழைத்துள்ளன. இது பார்ப்பனீய இந்து மனசாட்சிக்கு அவர்கள் அளிக்கும் மதிப்பும் மரியாதையும். அரசியல் சட்டத்துக்கு அவமரியாதை. அதே நேரத்தில் 2002-ல் குஜராத்தில் 3000 இசுலாமியர்களைக் கொன்ற மோடியும் ஹரேன் பாண்டியா, செராபுதீன் ஷேக் போன்ற பலரின் கொலைக்குக் காரணமான அமித்ஷாவும் எந்த சட்டத்தாலும் தண்டிக்கப்படவில்லை. இசட் பிளஸ் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்கள். அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்குக் கேரளா கவர்னர் பதவியைப் பரிசாக வழங்கி இருக்கிறது மோடி அரசு.
குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் கான் என்ற நடிகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம் சட்டத்திற்குப் புறம்பாக அவனுக்கு ஜாமீன் வழங்கி வெளியே விடுகிறது. இதுதான் நீதி மன்றத்தின் லட்சணம்.
அன்னா ஹசாரே, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்கள் லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினால் லஞ்ச ஊழல் முறைகேடுகள் ஒழிந்து நாடு முன்னேறிவிடும் என்று சொல்கிறார்கள். கர்நாடக மாநிலத்திலே லோக் ஆயுக்தா நீதிபதியின், மகன் அரசு அதிகாரிகளை மிரட்டியே 180 கோடிகளை லஞ்சமாகப் பெற்றுள்ளான். எனவே இந்த அமைப்பு முறையே தோற்றுப் போய் மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக மாறிவிட்டது என்பதே உண்மை.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர் தேர்வு, உயர்கல்வித் தேர்வுகளில் நடைபெற்றுள்ள பல்லாயிரம் கோடி ஊழலில் இதுவரை 48பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்புடைய முதலமைச்சர்,அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார்கள் இவற்றையெல்லாம் பார்க்க மறுக்கின்ற விழிகண் குருடாக நீதிமன்றங்கள் இருந்து வருகின்றன.
இந்தச் சூழலில் தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து வருகின்ற மக்களால் என்ன செய்ய முடியும்? அதற்கு மாற்று வழி சொல்லுங்கள்.” இவ்வாறு தோழர் வாஞ்சிநாதன் பேசினார் .
கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் அனைவருக்கும் நன்றி சொல்ல கருத்தரங்கம் நிறைவடைந்தது.
கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ்
தென்மாவட்டங்களில் இருந்தும் மதுரை நீதிமன்றங்களிலிருந்தும் கணிசமான அளவில் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அறிவுதுறையினர், பெண்கள், சிறுவர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கீழைக்காற்று வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
கருத்தரங்கம் நடைபெற்ற செய்தியாளர் அரங்கத்தைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட உளவுத் துறையினர் குவிந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். கிளைச் செயலாளர் அவர்களை அணுகிக் கேட்டபோது ஒருவரும் பதில் சொல்லாமல் முகத்தை மறைத்துக் கொண்டனர். டாஸ்மாக்கை வாழவைப்பதில் அவர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை.
ஜெயா அரசு இரண்டை நம்பிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்று போலீஸ், இரண்டாவது டாஸ்மாக். டாஸ்மாக்கில் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட அம்மாவுக்குக் கிடைக்கும் கமிஷன்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் மறுநாள் 23-8-2015 ஞாயிறன்று மதுரை உளவுத்துறை சப் இன்ஸ்பெக்டர் சுந்தர் என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒருவர் கிளைச் செயலாளர் வீட்டுக்கு வந்துவிட்டார். மக்கள் அதிகாரம் பற்றி விபரம் வேண்டுமாம் அவருக்கு. ”யாரைக் கேட்டு வீட்டுக்குள் வந்தீர்கள் ? எந்த அனுமதியும் ஆதாரமும் இல்லாமல் ஒருவரின் வீட்டுக்கு வந்து விசாரிப்பதற்கு எந்த சட்டத்தில் இடமிருக்கிறது” என்று கேட்டபோது “சாரி சாரி” என்று மழுப்பி விட்டுச் சென்றுள்ளார் அந்த உளவுத் துறை.
அதோடு நில்லாமல் ம.உ.பா மையத்தின் உறுப்பினர் தோழர் கணேசன் வீட்டுக்கும் உளவுத்துறை சென்றுள்ளது. மக்கள் அதிகாரம் பற்றியும் ஆகஸ்ட் 31 கெடு பற்றியும் அவரிடம் கேட்டுள்ளனர். மேலும் அவரைப் புகைப்படம் எடுத்துள்ளார். உளவுத் துறையினரை புகைப்படம் எடுக்க தோழர் முயன்ற போது இல்லை உங்கள் படத்தை அழித்து விட்டோம் நீங்கள் எங்களை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுச் சென்று இருக்கின்றனர்.
இது போல தோழமை அமைப்புத் தோழர்களிடமும் உளவுத்துறை “மக்கள் அதிகாரம், ஆகஸ்ட் 31 கெடு” பற்றி துழாவிக் கொண்டு இருக்கிறது.
ஜெயாவின் கொத்தடிமைகளான இவர்கள் ஈடுபடும் இவ்விதமான சட்டவிரோத அச்சுறுத்தலுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளை 98653 48163, 9443471003
ஜனநாயகம் என்ற கருதுகோளை உலகிற்கு வழங்கிய கிரேக்கமும், ஜனநாயகத்தின் தொட்டிலாகச் சித்தரிக்கப்பட்ட அதன் தலைநகர் ஏதென்சும் இன்று ஜனநாயகத்தின் கல்லறையாக மாற்றப்பட்டுள்ளன. அனைத்துலக நிதி நிறுவனங்களின் ஆணைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று கிரேக்க நாடே கிளர்ந்தெழுந்து வாக்களித்த போதிலும், அந்த ஜனநாயக முடிவை ஏற்க மறுத்து அந்நாட்டை அடிமையாக்கியுள்ளன ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள். ஏற்கெனவே வேலையின்மை, ஊதியவெட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் கிரேக்க மக்கள், தற்போது ஏகாதிபத்தியங்கள் விதித்துள்ள நிபந்தனைகளால் ஓட்டாண்டிகளாகி கஞ்சித்தொட்டிகளின் முன்னே உணவுக்காக கையேந்தி நிற்கும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கிரீஸ் நாடானது இந்தியா போன்ற பின்தங்கிய ஏழை நாடல்ல. ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கட்டமைப்பிலுள்ள முதலாளித்துவ நாடுதான். இருப்பினும் அந்த நாட்டில் ஏன் இந்த அவலநிலை?
சமூகரீதியான உற்பத்தியும், உற்பத்தியின் பலன்களை தனிநபர் சுவீகரிப்பதுமான முதலாளித்துவக் கட்டமைப்பானது, இந்த அடிப்படையான முரண்பாட்டின் காரணமாக முதலாளித்துவத்தின் நெருக்கடியாக அவ்வப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நெருக்கடியில் சிக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவக் கட்டமைப்பைத் தூக்கிநிறுத்த, மறுகாலனியாதிக்கம் என்ற புதியதொரு காலனியாதிக்க வடிவத்தைக் கொண்டு உலகை மேலாதிக்கம் செய்து கொள்ளையிடுவதை ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கை, இம்மறுகாலனியாதிக்கத்தின் பொருளாதாரக் கொள்கையாகப் பின்பற்றப்படுகிறது. உலகளாவிய அளவில் மூலதனத்தை மையப்படுத்தி ஒன்றுகுவிப்பது, உழைப்பை உச்சபட்சமாகச் சுரண்டுவது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் செல்வாக்கு மண்டலங்களைக் கைப்பற்றிக் கொள்வது, மூலதனத்தையும் வளங்களையும் கைப்பற்றிக் கொண்டு மேலாதிக்கம் செலுத்துவது – என்ற திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய வல்லரசுகள் இந்நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முயன்றன. இதற்காக காட் ஒப்பந்தத்தை திணித்து, உலக வங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தகக் கழகம் முதலானவற்றை ஆயுதங்களாகக் கொண்டு உலகமயமாக்கலைப் பிரம்மாண்ட பரிமாணம் கொண்டதாக மாற்றி, புதிய உலகப் பொருளாதார ஒழுங்கமைவைக் கட்டியமைத்தனர். இந்த உலகமயமாக்கத் திட்டத்துக்குப் பொருத்தமாக அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப திட்டத்தை வகுத்தனர். மேலாதிக்க வல்லரசுகளின் இத்திட்டங்களுக்கு ஏற்ப உலக நாடுகளின் அரசியல் – பொருளாதாரங்கள் மறுவார்ப்பு செயப்பட்டன. இவற்றை ஏற்காத நாடுகளின் அரசுகள் கவிழ்க்கப்பட்டு, விசுவாச அரசுகள் ஏகாதிபத்தியவாதிகளால் நிறுவப்பட்டன.
கிரீஸ் நாட்டின் வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாலும், ஓய்வூதியக் குறைப்பினாலும் வாழ வழியின்றி வங்கி வாசலில் கதறியழும் முதியவர் கியார்கஸ்
ஐரோப்பிய கண்டத்திலுள்ள கிரேக்க நாட்டில் அதன் சுயசார்பு பொருளாதாரத்தை வீழ்த்தி, ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது, யூரோ பொது நாணயமுறையின் கீழ் அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பிணைத்து, மூலதனத்தைத் திரட்டிக் கொண்டு உலகமயமாக்கலை விரிவுபடுத்துவது; ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்க வல்லரசாக உள்ள ஜெர்மனியின் திட்டத்துக்கு ஏற்ப கீரீசை மறுவார்ப்பு செய்வது, இதனை வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்துவது – என்பது ஏகாதிபத்தியவாதிகளின் திட்டமாக இருந்தது. இதற்கான கருவிகளாக “டிராய்கா” எனப்படும் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐ.எம்.எஃப். ஆகிய மும்மூர்த்திகளைக் கொண்டு கிரீசில் மேலாதிக்கம் செலுத்தும் திட்டத்தை ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்தினர். இத்தகைய உலகமயமாக்கம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் ஒருங்கிணைந்து வருவதாகவும், இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்க நாடும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையும், வேலைவாப்பு பெருகும், வாழ்க்கைத்தரம் உயரும், இதுதான் வளர்ச்சிக்கான பாதை என்றும் கதையளந்தனர்.
இருப்பினும், இந்தப் பாதையில் கடந்த 2001 முதலாகப் பயணப்பட்ட போதிலும் கிரேக்கப் பொருளாதாரம் எந்த வளர்ச்சியையும் சாதிக்க முடியாமல் போனதோடு, கடன் சுமை எனும் தீராத நெருக்கடியால் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆதிக்க சாதியினரின் ஊரும் தாழ்த்தப்பட்டோரின் சேரியுமாக கிராமங்கள் ஏற்றத்தாழ்வுடன் பிளவுபட்டுள்ளதைப் போலவே, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வளர்ச்சியடைந்த ஏகாதிபத்தியங்களாகவும், கிரீஸ் போன்ற நாடுகள் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளாகவும் ஏற்றத்தாழ்வாக ஐரோப்பிய ஒன்றியம் பிளவுபட்டுப் போயுள்ளது. இருப்பினும் தாராளமய – உலகமய மறுசீரமைப்புத் திட்டங்களை முழு வீச்சில் நடைமுறைப் படுத்தாததால்தான் இந்த ஏற்றத்தாழ்வும் நெருக்கடிகளும் ஏற்பட்டதாகவும், அவற்றைத் தீர்க்கப் போவதாகக் கூறிக்கொண்டு மனிதவளத்தையும், இயற்கை வளங்களையும் வரைமுறையின்றி ஏகாதிபத்திய வல்லரசுகள் சூறையாடின.
ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்களின் நிபந்தனைகளுக்கு அடங்க மறுத்து கிரேக்க மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.
கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் அதன் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டதுதான். ஏற்கெனவே கிரீசின் அரசியல்வாதிகள் நடத்திய வீட்டுமனை ஊழலும், முதலாளிகள் நடத்திய வரி ஏய்ப்பும் அரசின் கஜானாவைக் காலி செய்து விட்டன. தனது பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள சர்வதேச நிதிச் சந்தையில் கடன் பெறுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு கிரீஸ் விழுந்தது. பட்ஜெட் பற்றாக்குறையை மூடிமறைத்து, அந்நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக வெளியுலகுக்குக் காட்ட கிரீஸ் அரசும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் வங்கியும் இணைந்து தில்லுமுல்லுகளில் ஈடுபட்ட விவகாரம் அம்பலமானதும், தனது கடன் பத்திரங்களை விற்கக் கூட முடியாத நிலைக்கு கிரீஸ் தள்ளப்பட்டது. இவற்றின் காரணமாக அந்நாடு மீண்டும் “டிராய்கா” மும்மூர்த்திகளிடம் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்கம் செலுத்தும் ஜெர்மனி, கிரேக்கத்துக்குக் கடனாகக் கொடுத்த தொகையை, அந்நாட்டுக்குப் போர் ஆயுதங்களை விற்று பறித்துக் கொண்டது. கிரேக்கத்துக்கு எவ்வித போர் அச்சுறுத்தலும் இல்லாத போதிலும், உலகிலேயே அதிகமாக ஆயுத இறக்குமதி செயும் நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு கிரேக்கம் மாற்றப்பட்டது. கிரேக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வைத்தும், சுற்றுலாத்துறையில் பெருமளவு முதலீடு செய்ய வைத்தும் அந்நியக் கடன்களை ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் திணித்தன. கடனையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமல் கிரேக்கம் நிதி நெருக்கடியால் தடுமாறிய நிலையில், ஓய்வூதியம் குறைப்பு, அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகள் அதிகரிப்பு, கல்வி-மருத்துவம் உள்ளிட்டு பல்வேறு மக்கள்நலத் திட்டங்களுக்கான மானியம் வெட்டு உள்ளிட்டு பல்வேறு தாக்குதல்களை அந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் மிருகத்தனமாகத் திணித்தன. அதன் பிறகே ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எப்.பும் பற்றாக்குறை நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கிரீசுக்குக் கடன் கொடுத்தன. அந்தக் கடனில் 85 சதவீதம் பழைய கடன்களுக்கும் அதற்கான வட்டியுமாகப் பறித்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக, கிரேக்கம் மேலும் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கத் திட்டத்தின்படி, கடன் பொறியில் சிக்கவைக்கப்பட்ட கிரேக்கம் இவ்வாறுதான் திவாலாக்கப்பட்டது.
தமது வாழ்வுரிமை பறிப்புக்கும் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடி வந்த கிரேக்க மக்கள், அப்போராட்டத்தின் ஊடாக சிரிசா கட்சியைத் தெரிவு செய்து ஆட்சியில் அமர்த்தினார்கள். முந்தைய கிரேக்க ஆட்சியாளர்கள் வாங்கிய கடனை அசலும் வட்டியுமாக திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடையும் கடன் ஒப்பந்தத்தை நீட்டிக்குமாறும், திவாலாகிவிட்ட பொருளாதாரத்தை மீட்க புதிதாக 29.1 பில்லியன் யூரோ டாலர் கடன் தருமாறும் சிரிசா ஆட்சியின் பிரதமர், “டிராய்கா”விடம் கோரினார். கிரேக்க அரசாங்கத்துக்கு மீண்டும் கடன் தருவதற்கு, “டிராய்கா” மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து கிரேக்கத்தின் சிரிசா கூட்டணி அரசு, மக்களின் கருத்துக் கணிப்பைக் கோரும் தேர்தலை அறிவித்தது.
இந்நிபந்தனைகளை ஏற்க மாட்டோம் என்று வாக்களிக்குமாறு சிரிசா கூட்டணிக் கட்சியினரும் பல்வேறு இடதுசாரிகளும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதற்கெதிராகத் திரண்ட ஏகாதிபத்தியவாதிகளும் வலதுசாரி பிற்போக்குக் கட்சிகளும் அவற்றின் ஊடகங்களும், “வேண்டாம் என்று வாக்களித்தால் நாடு திவாலாகிவிடும்; எல்லோரும் பிச்சைக்காரர்களாகிவிடுவோம்; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கம் வெளியேற்றப்பட்டுவிட்டால் அதோகதிதான்” என்றெல்லாம் பயபீதியூட்டும் பிரச்சாரத்தை வெறியோடு நடத்தி கிரேக்க மக்களை எச்சரித்தன. ஆனால், அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, பட்டினி கிடந்து செத்தாலும் ஏகாதிபத்திய கட்டளைக்கு அடிபணிய மாட்டோம் என்று கடந்த ஜூலை 5-ம் தேதியன்று நடைபெற்ற கருத்துக் கணிப்புக்கான தேர்தலில் “டிராய்கா”வின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து ஏறத்தாழ 62 சதவீத மக்கள் வாக்களித்து உரத்த குரலில் முழங்கினர்.
இத்தேர்தல் முடிவுகளின் மூலம் “டிராய்கா” மூம்மூர்த்திகளால் திணிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், நாட்டின் இறையாண்மையும் ஜனநாயகமும் பாதுகாக்கப்படும் என்றும் கிரேக்க மக்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனாலும் கிரேக்க மக்களின் ஜனநாயக முடிவையும், கிரேக்க அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சலுகைகளுக்கான பரிந்துரைகளையும் நிதியாதிக்க கும்பல்கள் கடுகளவும் ஏற்க மறுத்தன. “டிராய்கா”வைப் பொருளாதாரப் பயங்கரவாதிகள் என்று சாடி, யூரோ பொது நாணயத்துக்குப் பதிலாக கிரேக்க நாடு சொந்த நாணயமுறையை உருவாக்க வேண்டுமெனக் கோரிவந்த கிரேக்க நிதியமைச்சர் கட்டாயமாக பதவியிலிருந்து விரட்டப்பட்டார். “கடன் கட்ட முடியவில்லை என்றால் நாட்டை அடமானம் வை” என்று கட்டளையிட்டு, கிரேக்கத்தின் இறையாண்மையையும், கிரேக்க மக்களின் அரசியல் உரிமைகளையும் காலனியாதிக்க முறையில் பச்சையாகவே நசுக்கி ஏகாதிபத்தியவாதிகள் அந்நாட்டை அடிமைப்படுத்தியுள்ளனர்.
“மதிப்புக் கூட்டு வரியை மேலும் உயர்த்த வேண்டும்; அரசுத்துறை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதோடு, முதியோர்களின் ஒவூதியத்தையும் குறைக்க வேண்டும்; விமான நிலையங்களும் துறைமுகங்களும் மின்துறையும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட வேண்டும்; பொருளாதாரத்துறையில் ஐரோப்பிய ஒன்றியம் நியமிக்கும் குழுக்கள் மற்றும் ஐ.எம்.எப்.பின் அதிகாரத்தையும் கண்காணிப்பையும் நிறுவ வேண்டும்; தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்; ஐம்பது பில்லியன் யூரோ டாலர் அளவுக்கான அரசின் சொத்துக்களை பிணைத்தொகையாக ஐரோப்பிய ஏகபோக முதலாளிகளின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்; கடந்த 6 மாதங்களில் சிரிசா அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முற்றாக ரத்து செய்ய வேண்டும்” – என்றெல்லாம் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு சிரிசா அரசாங்கம் சரணாகதி அடைந்துள்ளது. கிரேக்க மக்களுக்கு இது பேரழிவு மட்டுமின்றி பெருத்த அவமானமுமாகும்.
நிதியாதிக்கக் கும்பல்களுக்கு எதிரான போராட்டத்தில் கிரேக்க மக்கள் வெற்றி பெற்றுவிட்டால், அது பிற நாட்டு உழைக்கும் மக்களிடம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துவிடும் என்று ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுகின்றனர். ஏனெனில், கிரீசுக்கு அடுத்ததாக ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் எப்போது வேண்டுமானாலும் இதேபோல கலகங்கள் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் விலகினால், அதைத் தொடர்ந்து இதர ஐரோப்பிய நாடுகளும் விலகி ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பே கலகலத்துப் போவிடும் என்று அஞ்சும் ஏகாதிபத்தியவாதிகள், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் விலகிச் செல்வதைத் தடுத்து, கிரேக்க மக்களின் அடங்க மறுக்கும் போர்க்குணம் ஐரோப்பிய கண்டத்தில் பரவி விடக் கூடாது என்ற வெறியோடு மிருகத்தனமாக ஒடுக்கியுள்ளனர்.
நிதியாதிக்க பயங்கரவாதிகளை எதிர்த்து கிரேக்க மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களும், ஆகப் பெரும்பான்மையான மக்களின் பேராதரவும் சாதகமாக இருந்த போதிலும், சிரிசா கட்சியின் 149 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் இச்சரணாகதி ஒப்பந்தத்தை எதிர்த்த போதிலும், இடதுசாரிகளாகச் சித்தரிக்கப்படும் சிரிசா கட்சியானது, வலதுசாரி கட்சிகளின் ஆதரவோடு இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் துரோகமிழைத்துள்ளது. ஏகாதிபத்தியங்களின் நிதிக் கொடுங்கோன்மைக்கு எதிராக சவடால் அடித்த போதிலும், கிரேக்கத்தில் சுயசார்பான பொருளாதாரத்தைக் கட்டியமைத்துப் போராடுவதற்கான எந்தத் திட்டத்தையும் சிரிசா கொண்டிருக்கவில்லை. முந்தைய அரசுகள் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன்கள் எவையும் நாட்டின் உற்பத்திக்காகவோ, மக்களின் நலன்களுக்காகவோ பயன்படுத்தப்படாத முறையற்ற கடன்கள் என்று அம்பலமாகியுள்ள போதிலும், ஆட்சிக்கு வந்த சிரிசா அரசாங்கம் இவற்றைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பில் நீடித்துக் கொண்டே ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள், பேரங்கள் மூலம் சலுகைகளைப் பெற்று இக்கடன் சுமையை நீக்கிவிடலாம் என்று கனவு கண்டது. நிலவுகின்ற கட்டமைப்பில் ஏகாதிபத்தியங்களுடன் சமரசமாகச் சென்று மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்க இப்போலி இடதுசாரிகள் மேற்கொண்ட முயற்சியும் படுதோல்வியில் முடிந்துள்ளது.
கிரீசில் ஏகாதிபத்திய நிதிநிறுவனங்கள் நடத்தியுள்ள தாக்குதலை ஆக்கிரமிப்புப் போருக்கு நிகரானது என்றும், அதிர்ச்சியானது, அநியாயமானது என்றும் புலம்பும் முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும் பொருளாதார மேதைகளும், ஏகாதிபத்திய வல்லரசுகளால் முன்வைக்கப்பட்ட இந்த ‘வளர்ச்சிப் பாதை’யும் முதலாளித்துவக் கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி தோல்வியடைந்துள்ளதைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஆனால், கிரேக்கத்தில் முற்றிய இந்த நெருக்கடியானது சங்கிலித்தொடர் போல பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்களை ஆட்டங்காணச் செய்துள்ளதோடு, 7 சதவீத வளர்ச்சியில் உள்ளதாக காட்டிக் கொள்ளும் சீனாவின் பங்குச் சந்தையையும் உலுக்கி வீழ்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 2008-ல் அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார பொது நெருக்கடியாக முற்றி அதிலிருந்து மீண்டெழுவதற்கான வாய்ப்பே அறவே இல்லாமல் போய்விட்டது. இந்த உண்மையை, கடந்த ஜூன் 26 அன்று லண்டன் வர்த்தகக் கல்வி மாநாட்டில் உரையாற்றிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜன், “1930-களில் நிலவிய பெருமந்தத்தைப் போன்றதொரு நெருக்கடியான நிலைக்கு நாம் வீழ்ந்து கொண்டிருக்கிறோம். இது தொழில்துறையில் முன்னேறிய அல்லது சந்தையில் வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கவ்வி நிற்கும் நிலைமையாகும்”என்று எச்சரிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரேக்கத்தில், கடந்த 2010-லிருந்தே ஓய்வூதியம் ஏறத்தாழ பாதியளவுக்கு வெட்டப்பட்டு மாதத்துக்கு 700 யூரோ அளவுக்கே ஒரு ஓவூதியதாரருக்குக் கிடைத்து வந்தது. இது அந்நாட்டின் வறுமைக் கோட்டுக்கும் கீழான வருவாயாகும். ஏற்கெனவே வேலையின்மை 30 சதவீதமாக உள்ள நிலையில், குடும்பத்திலுள்ள இளைய தலைமுறையினர் வேலையின்றித் தவிக்கும் போது முதியோர்களின் ஓய்வூதியத்தை நம்பித்தான் கிரேக்கத்தின் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. டிராய்காவின் மறுகாலனியாதிக்கக் கட்டளைப்படி, இப்போது இந்த அற்ப அளவுக்கான ஓய்வூதியத் தொகையும் குறைக்கப்பட்டதால், வங்கிகளின் முன்னே ஓய்வூதியதாரர்களான முதியவர்கள் வாழவழியின்றிக் கதறியழுதுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்பட்டு கடந்த கால் நூற்றாண்டு காலமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த ‘வளர்ச்சிப் பாதை’யானது உலகெங்கும் பல நாடுகளைத் தீராத பொருளாதார நெருக்கடியில் சிக்கவைத்துள்ளதோடு, கிரேக்க நாட்டையும் மக்களையும் கையேந்தும் நிலைக்குத் தள்ளி தோல்வியைத் தழுவிவிட்டது என்பதையும், ஏகாதிபத்தியங்களுடன் சமரசமாகச் சென்று தீர்வைத் தேடும் போலி சோசலிசப் பாதையானது துரோகத்தையும் பேரழிவையுமே விளைவிக்கும் என்பதையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, மாற்றுத் தீர்வாக புரட்சிகர கட்சியின் வருகையையும் சோசலிசப் புரட்சியையும் எதிர்பார்த்து கிரீஸ் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் போது இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கின்ற தொழிலுறவு சட்டங்களை பரிந்துரை செய்தது, ராயல் கமிசன். இந்த கமிசனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி, இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்கு விழிப்புணர்வை ஊட்டினார், பகத்சிங். கேளாத செவிகளை கேட்க வைக்க பகத்சிங் தூக்கு மேடை ஏறினார்.
இது போன்ற எண்ணற்ற தியாகிகளது இரத்தத்தில் எழுதப்பட்டவைதான் தற்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் அனுபவத்து வருகின்ற தொழிலாளர் நலச் சட்டங்கள். இந்த சட்டங்கள் அனைத்தையும் முதலாளிகளின் நலனுக்காக காவு கொடுத்து வருகிறார், மோடி. இதன் உச்சகட்டம்தான் ஏப்ரல் மாத இறுதியில் மோடி அரசு கொண்டு வந்த தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா, 2015 (Labour Code on Industrial Regulations, 2015).
இந்தியாவில் இருக்கின்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றனவாம். இந்த சட்டங்களைப் பார்த்து இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் பயந்து நடுங்குகின்றனராம். எனவே, மேற்படி 44 சட்டங்களையும் கலைத்துப் போட்டு, ஒவ்வொரு சட்டத்திலும் உள்ள சில பிரிவுகளை முதலாளிகளுக்கு சாதகமான முறையில் வடிவமைத்து, ஒரு தொகுப்பாக கொண்டு வந்தால், நாட்டின் தொழில் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் பாய்ந்துவிடும் என்கிறார், மோடி!
தொழில் வளர்ச்சி என்று மன்மோகன் சிங் – சிதம்பரமும் என்ன சொன்னார்களோ அதைத்தான் மோடி சொல்கிறார். ஆனால், வெறித்தனமாக அமுல்படுத்துகிறார். அந்நிய, பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் தாராளமாக முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கவும், இந்தியாவின் தொழிலாளர்களை கட்டுப்பாடின்றி சுரண்டிக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கின்ற எல்லா சட்டங்களையும் திருத்த வேண்டும அல்லது ஒழித்துக் கட்ட வேண்டும். இங்கு உள்ள இயற்கை வளங்களையும் தொழிலாளார்களையும் சுரண்டி பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு வரிச்சலுகையோடு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளைத்தான் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரசு கட்சி அமல்படுத்தி வந்தது. அப்போதுதான் இந்தியாவில் பல லட்சம் பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பைத் தந்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள், தொலைத் தொடர்பு, இன்சூரன்ஸ், மின் தயாரிப்பு போன்ற தொழில்களில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கபட்டன. நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, காண்டிராக்ட் மற்றும் தினக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். அதே நேரத்தில், விவசாயமும், கைத்தொழில்களும் அழிக்கப்பட்டு பல லட்சம் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் நகர்ப் புறங்களை நோக்கி துரத்தப்பட்டனர். இவர்கள் தினக்கூலி வேலையாவது கிடைக்காதா என்று பரிதவித்து வருகின்றனர்.
நிரந்தர வேலை என்பதே இல்லை என்கிற நிலையில் வேலை நிரந்தரம், உழைப்புக்கேற்ற கூலி, 8 மணி நேர வேலை, பாதுகாப்பான வேலை நிலைமை, தொழிற்சங்க உரிமை, கூட்டுப் பேர உரிமை என்பதெல்லாம் பெயரளவிலும் இருக்கக் கூடாது என்கின்றனர், முதலாளிகள். இதனடிப்படையில், “தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக் கட்டு” என்று அரசுக்கு உத்தரவு போடுகின்றனர் முதலாளிகள்! இதைத்தான் விழுந்து விழுந்து நிறைவேற்றுகிறார், மோடி!
இதன் முதல் கட்டமாக தொழிற்சங்கச் சட்டம், தொழிற்தகராறுகள் சட்டம், தொழிலக நிலையாணைகள் சட்டம் ஆகியவற்றின் சில பிரிவுகளை தொகுப்பாக்கி மேற்படி மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத் தொகுப்பானது தொழிற்சங்கம் அமைக்கின்ற உரிமையையும், தொழிற் சங்கத்துக்கு வெளித் தலைவர்களை வைத்துக் கொள்கின்ற உரிமையையும் பறித்துக் கொள்கிறது. முதலாளி நீட்டுகின்ற பேப்பரில் கையெழுத்து போடுபவனை வைத்து ஒரு கமிட்டியை உருவாக்கி, அந்த கமிட்டி மூலமாகவே தொழிலாளர்களது வாயை அடைக்க வழி செய்கிறது, புதிய சட்டம்.
முதலாளிகள் தங்கள் நிறுவனங்களின் நிலையாணைகளுக்கு சான்று பெறுவதற்கு இனி தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, அதனிடம் அனுமதி பெறவோ தேவையில்லை. தொழிலாளர்களின் ஏஜெண்ட் என்கிற பெயரில் ஒருவரை முதலாளிகளே நியமித்து அவரது ஒப்புதல் பெற்றால் போதுமானது. இதனால், தொழிலாளி அல்லது தொழிற்சங்கத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, தொழிலாளியின் ‘விதி’யை முதலாளி தீர்மானிக்க முடியும்.
இனிமேல் ஏழு பேர் சேர்ந்து சங்கத்தை ஆரம்பிக்க முடியாது. குறைந்த பட்சம் 100 பேர் அல்லது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் தொழிலாளர்கள் இருந்தால்தான் சங்கத்தை துவங்க முடியும். அவ்வாறு துவங்கப்படுகின்ற சங்கத்தின் பதிவும் நிரந்தரமானதல்ல. அதை எப்போது வேண்டுமானாலும், எந்த ஒரு அற்ப காரணத்தைக் காட்டியும் ரத்து செய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. சங்கத்தின் முகவரியைக் குறிப்பிடும் போது, கதவு எண் தவறுதலாகப் போடப் பட்டாலோ, உறுப்பினர் எண்ணிக்கையில் கூட்டல் கழித்தல் பிழை இருந்தாலோ, ஒரு உறுப்பினரின் இனிஷியல் தவறாக இருந்தாலோ கூட தொழிற்சங்கத்தின் பதிவு ரத்து செய்யப்படும். அரசுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகள் உரிய காலத்திற்கு அனுப்பாவிட்டால் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை நிலை நாட்டிட வேலை நிறுத்தமும் செய்ய முடியாது. எந்த ஒரு வேலை நிறுத்தத்தையும் சட்டவிரோத வேலை நிறுத்தம் என்று அரசு அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட சட்ட விரோதமான வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்தனியே அபராதம் விதிக்கப்படும். தொழிற்சங்கத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். நிதி உதவி அளித்தவர்கள் மீதும் இச்சட்டம் பாய்ந்து தண்டனை அளிக்கும்.
வேலை நிறுத்தம் என்கிற போராடும் உரிமைக்கு சமாதி கட்டுகின்ற அரசு, முதலாளிகள் ஆலை மூடல் செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது. 100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால் தற்போதுள்ள சட்டப்படி அரசின் முன் அனுமதி பெற வேண்டும். அந்த எண்ணிக்கையை 300 ஆக உயரித்தியுள்ளது, புதிய சட்டம். தற்போதுள்ள பெரும்பலான ஆலைகளில் 300-க்கும் குறைவான தொழிலாளர்களே இருப்பதால், ஆலைமூடல் என்கிற மிரட்டலை வைத்தே தொழிலாளர்களை அடக்குவது சுலபமாகிவிடும்.
முதலீட்டாளர்களின் நலன் தான் நாட்டின் நலன், முதலாளிகள் எல்லையற்ற இலாபம் சம்பாதிக்க வேண்டும். அவர்களின் முதலீடு நாடு முழுவதும் தங்கு தடையின்றி பாய வேண்டும். இதற்கு தடையாக உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. உண்மையில் சொல்லப்போனால், தற்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. எத்தனை கோர்ட்டுக்கு வேண்டுமானாலும் போ என்றுதான் தொழிலாளர்களை விரட்டுகின்றனர். வேலை நிரந்தரம் கேட்காதே; கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஓடிப் போ என்று தொழிலாளியை நைச்சியமாக மிரட்டுகிறது, தொழிலாளர் துறை. தொழிலாளர் நீதி மன்றங்களோ வாய்தாக்களைப் போட்டே தொழிலாளியின் ஆயுளைப் பறித்துவிடுகின்றன. ஆனாலும், பெயரளவில் கூட சட்டப் பாதுகாப்பு இருக்கக் கூடாது என்று கழுத்தைப் பிடிக்கின்றனர், முதலாளிகள்!
“தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்ததே” என்று இந்த அரசிடம் கையேந்தி நிற்க முடியுமா? அப்படித்தான் கையேந்தி நிற்கின்றன, பிற தொழிற்சங்க அமைப்புகள். இதன் பொருட்டு எதிர்வரும் செப்டம்பர் 2-ம் தேதியன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஒன்றையும் அறிவித்துள்ளனர். காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி-யும், பா.ஜ.க.வின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ். சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்காளிகள்! இதுவரை ஆட்சியதிகாரத்தில் இருந்த காங்கிரசு கட்சி, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைப் பறித்தது. தற்போது மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு இரட்டிப்பு வேகத்தில் அதையே செய்து வருகிறது.
காங்கிரசு, பி.ஜே.பி. கட்சிகள் மட்டும் தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமானதல்ல. அவற்றின் தொழிற்சங்கங்களும்தான். இவர்களுடனான பகை சாதாரண பகை அல்ல, இணக்கம் காணவே முடியாத வர்க்கப் பகை! இதையெல்லாம் மறைத்துவிட்டு தொழிலாளர்களது உரிமைக்காகப் போராடுவதைப் போல நடிக்கின்றனர். “மானோடு சேர்ந்து ஓடுவது, புலியோடு சேர்ந்து வேட்டையாடுவது” என்கிற கபட வேடதாரிகளே பி.எம்.எஸ்.-ம், ஐ.என்.டி.யு.சி.-யும்.
இந்த கபட வேடதாரிகளுக்கு ‘இடதுசாரி’ சங்கங்கள் வால் பிடிக்கின்றன. ‘இடதுசாரி’ தொழிற்சங்கங்கள் செல்வாக்கு செலுத்துகின்ற பொதுத்துறைகளில் தனியார்மயம் புகுத்தப்பட்ட போது, வேலை பாதுகாப்பு இருந்தால் போதும் என்று துரோகம் செய்தார்கள். காண்டிராக்ட், தினக்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்த போது அவர்களது முதுகில் சவாரி செய்து சுகம் தேடிக் கொண்டனர். தற்போது வர்க்கப் பகைவர்களான காங்கிரசு, பி.ஜே.பி. கும்பலுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். துரோகம், கயமை, பித்தலாட்டம், இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் ஆகிய அனைத்தும் இங்கே ஒளிந்துள்ளது. துரோகிகளான ஐ.என்.டி.யு.சி.-யையும் பி.எம்.எஸ்.-ஐயும் விரட்டியடித்தாக வேண்டும். சமரசவாதிகளான ‘இடதுசாரி’ சங்கத் தலைமைகளைப் புறக்கணிக்க வேண்டும். புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும். போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
தாங்கள் போட்ட சட்டத்தினை கிஞ்சிற்றும் மதிக்காமல் தொழிலாளர்களுக்கு எதிராக ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பே செயல்படும் நிலையில் இனியும் நம் பிரச்சனைகளை இந்த அரசு அதிகாரம் தீர்த்து வைக்கும் என நம்ப முடியுமா? மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வக்கற்ற நிலையில் உள்ளது, இந்த அரசு கட்டமைப்பு. தானே வகுத்த சட்டங்கள், விதிமுறைகள், நீதி பரிபாலன நடவடிக்கைகள் என அனைத்திலும் தோற்றுப்போய், அதற்கு எதிராக செயல்படுகின்றது. மொத்தத்தில், ஆளும் அருகதையற்றுப் போய்விட்டது, இந்த அரசமைப்பு!
உரிமை கொடு என போராடிய காலம் போய்விட்டது. நமக்குத் தேவை அதிகாரம். தொழிற்சாலைகளையும், நாட்டையும் நிர்வகிக்கும் அதிகாரம். தொழிலாளர் அதிகாரக் கமிட்டிகளை நாம் உருவாக்குவோம். நம்மை ஒடுக்கும் அரசு அதிகாரத்திற்கும், கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் சவால் விடுவோம். தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டங்களை பரவச் செய்வோம். இதன் முன்னோட்டமாக, செப்டம்பர் 2-ல் தொழிலுறவு சட்டத் தொகுப்பினை தீயிட்டுக் கொளுத்துவோம்! தீ பரவட்டும்!!
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
தொழிலாளர்களே…!
☀ தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது சட்டத் தொகுப்பு மசோதா!
☀ செப்.2 வேலை நிறுத்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டமாக முன்னெடுப்போம்!
முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற
தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! 2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்
– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள், பதிவு எண்: 24/KRI,
முகவரி: L 416 ASTC பழைய அட்கோ, ஒசூர்.
தொடர்புக்கு: 97880 11784.
ஜெயாவிடம் எகிறிய சு.சாமிக்கு இந்துஞான மரபின்படி அ.தி.மு.க. மகளிரணியை வைத்து கொடுத்த `வரவேற்பு’ இப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைத்திருக்கிறது. “நாயே.. பன்றி.. ..மவனே!” இன்ன பிற ஜெயார்ச்சனைகள் தமிழகம் முழுவதும் எதிரொலித்து வந்தன. பிறகு போரடித்து விட்டதோ என்னமோ போதும் என்று அம்மாவே ஜாடை காட்ட ரத்தத்தின் ரத்தங்கள் நிறுத்தியுள்ளன.
சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேசனில் பத்மினி என்ற பெண் காக்கி மிருகங்களால் குதறப்பட்டபோது “அந்தப் பெண் நடத்தை சரியில்லாதவர்” என்று கூறியவர் மாண்புமிகு அம்மா. அப்பேற்பட்டவர்கள் அறத்துக்காக சினமடைந்தனர் என்பதை அ.தி.மு.க அடிமைகளே கேலி செய்வர்.
பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கள்ள உறவு வைத்திருக்கிறது எனும் இளங்கோவனின் ஒரு வசனத்துக்காகத்தான் பெண்ணினத்தயே தரக்குறைவாக்கிவிட்டார் என்று பெட்ரோல் குண்டு வீசி, கட்சி ஆபிசை கல்லால் அடித்து, சாலைகளை மறித்து கொடும்பாவி எரித்து, நெல்லை மேயர் பாலத்திலிருந்தே குதித்துவிடுவேன் என்று போலீசு பாதுகாப்புடன் `அறவழியில்’ போராடியது அ.தி.மு.க அடிமைக் கூட்டம்.
பெட்ரோல் குண்டு வீசும் காலிகளை தடவிக் கொடுக்கும் தமிழகப் போலீசின் கைகள்தான் டாஸ்மாக் பாட்டிலை உடைத்த மாணவர்களின் கழுத்தை நெறித்து, சட்டம் ஒழுங்கை பாதுகாத்தது என்பதை மறந்துவிட வேண்டாம்!
“உன்னை பத்தி தெரியாதா? உன் கதைய எடுத்து விடவா? எங்க அம்மாவ சொன்ன… உங்க அம்மாவ சொல்லுவேன்? ” என்ற வசனங்கள்தான் ஓட்டுக்கட்சிகளின் கொள்கை முழக்கங்கள். இந்த கொடுக்கல் வாங்கல்தான் இவர்கள் மக்களுக்கு வழங்கும் பரபரப்பு அரசியல். இந்தக் கலாச்சாரத்தில் ஓட்டுக்கட்சிகள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.
ஜானகி அணியிலிருக்கும் போது வளர்மதி பேசாத பேச்சா?
இருந்தாலும் இழித்துப் பேசப்பட்டவர் ‘அம்மா’ என்பதால் சும்மா இருக்குமா சட்டம்- ஒழுங்கு அது இஷ்டத்துக்கு அங்கங்கே ரோட்டில் வைக்கோல் பொம்மையாய் எரிய, அன்றாடப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட டீசன்டான நடுத்தரவர்க்கத்தின் மனசாட்சிக்கு பதில் சொல்லும் பொறுப்பும், சுமையும் ஊடகங்களை பற்றிக்கொண்டன. ஜனநாயகம் கருகும் வாசனை வரும்போது அதன் காவலர்களான நான்காவது தூண் வாளாயிருக்குமா?
என்ன இருந்தாலும் “அநாகரிமாக பேசுவதும் தவறு” ” அதற்காக ஆளும் கட்சியே சட்டம் – ஒழுங்கை சீர்குலைப்பதும் தவறு” என்று இரட்டை நாயனத்தால் காதுகளை கிழித்துவிட்டன காட்சி ஊடகங்களின் விவாத கச்சேரிகள். கொடும்பாவியையும் கொளுத்தி, அந்த ஆள் மேலேயே ஒரு கொலை மிரட்டல் கேசையும் கொளுத்திப் போட்டு, இளங்கோவனின் தீர்த்தயாத்திரை இப்போது தல்லாகுளத்தில்!
இளங்கோவனின் பேச்சு அதற்கு ஜெயா கும்பலின் பதிலடி என்ற பரபரப்பின் மூலம் தமிழகத்தின் தெருக்களில் ஒலிக்கும் டாஸ்மாக் ஒழிப்புக் குரலை பின்னுக்குத் தள்ளுவதில் அனைத்து ஊடகங்களும் தன்னியல்பாக பங்காற்றின. டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்தின் வீச்சை உழைக்கும் பத்திரிகையாளர்களும், ஊடகவியல் உழைப்பாளிகளும் தொடர்ந்து ஆவணப்படுத்தினாலும், “இப்போதைக்கு இதுதான் பெரிய பிரச்சனை” என்று வோறொன்றின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்புவதில் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் ஒரு அனிச்சை செயலைபோல அவர்களின் பல்வேறு உறுப்புகளுக்குள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதை இந்தப் பிரச்சனையும் எடுத்துக்காட்டியது.
அதுமட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களுக்கு இவர்கள் விவாதப்பொருளாக்கும் விசயத்திலும் “முதலாளித்துவ ஜனநாயகம்” என்ற வரம்புக்குள்ளாகவே எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள வலியுறுத்துவதும்தான், இவர்கள் நடந்ததாய் காட்டும் தரக்குறைவான அரசியலை விட தரம் தாழ்ந்ததாக உள்ளது.
உதாரணத்திற்கு இளங்கோவன் பேசியதை வைத்து ஜெயா கும்பல் உருவாக்கிய பரபரப்பை வைத்து இவர்கள் மக்களுக்கு சொல்ல வந்த அரசியல்தான் என்ன? முதலாவதாக முதல்வரையும், பிரதமரையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது சரியா? தனி நபர் தாக்குதல் ஆரோக்கிய அரசியலல்ல, இது நாகரிகமா?” என்றெல்லாம் செத்துப் போனவன் தலையில் பேன் பார்த்த கதையாய் இந்த இத்துப்போன ஜனநாயகத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக குழப்பினர்.
முதலாளித்துவ அரசியலுக்கும், நாகரிகத்திற்கும் துளியும் சம்மந்தம் கிடையாது என்பதை கோமாவில் கிடப்பவனே குறிப்பாக ஒத்துக்கொள்வான். அம்மா – ஐயா, கேப்ட்டன், மோடி என்று தன்னை மட்டுமே அரசியலாக முன்னிறுத்தும் தனிநபர்வாத அரசியல் கதாநாயகர்கள் தாக்குதல் வரும்போது மட்டும் தனிநபராக தாக்குவதா என அலறுவதற்கு முதலில் அவர்களுக்கு யோக்கியதை இல்லை. இதை பகிரங்கமாகப்பேச இந்த ஜனநாயக தினக்கூலிகள் தயாராயில்லை.
அமைச்சர் அடிமைகளில் ஆபாசமாக பேசாவர் யாரேனும் உண்டா?
முதலாளித்துவ நிறுவனங்கள் ஒரு பொருளை சந்தைப்படுத்துவது போல எப்போதும் பவுசுபவுசாக தன் மூஞ்சியைக்காட்டுவதும், தினுசு தினுசாக தன் பெயரை காட்டுவதையுமே கவர்ச்சி அரசியலாக பரப்பிவிட்டு சீரழிப்பவர் யார்? இந்த ஜனநாயகத்தின் தரத்தில்தான், இவர்கள் தாக்குதல்களும் இருக்கும் என்ற அரசியல் உண்மையை பேசுவதற்கு எண்ணமின்றி, இதெல்லாம் சில தனி நபர்களின் தனிப்பட்ட பண்புகளால் வருவதுதான், மற்றபடி நமது ஜனநாயகம் மதிப்பு வாய்ந்தது என்று மாஞ்சா போட்டு கழுத்தறுப்பதுதான் ஆளும் வர்க்க அறிவாளிகளின் இலக்கு.
இந்த இடுக்கில் கடுக்கன் கழட்டுவது போல இந்த தரக்குறைவான அரசியலை தொடங்கி வைத்ததே திராவிடக்கட்சிகள்தான் , அதுவும் தி.மு.க. தான் என்று பார்ப்பன ஊடகக்கிருமிகள் நேரம் பார்த்து காதைக் கடிக்கின்றன. ரீலை பாதியிலேந்து ஓட்டும் இந்த பார்ப்பன பண்பாட்டாளர்களின் வரலாற்று யோக்கியதை என்ன? மனுவின் காலத்திலேயே உழைக்கும் மக்களின் பிறப்பை இழிவுபடுத்தியும், பகவத்கீதையில் பெண்களை தரக்குறைவாக ( பாவயோனி! ) பேசியும்; எதிர்க்கும் திராவிடப் பெண்களை பூதகிகள், ராட்சசிகள் என்று அநாகரிகமாக வருணிப்பதும் ‘அவாள்’ தொடங்கி வைத்த அரசியல் நாகரிகமாயிற்றே!
இடையில் உங்கள் ‘தகுதிக்கு’ வளர்ந்தவர்களை மட்டும் பாவிகளாக்கினால் எப்படி? சட்டமன்றத்திலேயே உங்கள் ‘தீரர்’ சத்தியமூர்த்தி தேவதாசி ஒழிப்பை முன்வைத்த டாக்டர் முத்துலட்மிரெட்டியை பார்த்து பேசாதா பேச்சா! முன்னேறியதாய் சொல்லும் முதலாத்துவ ஜனநாயகத்திற்கே கெட்ட வார்த்தைகளை வாரி வழங்கிய வேத கடாட்சம் இந்து கலாச்சாரமல்லவா?
எனவே, “அரசியல் நாகரிகம், தரம்” என்பதை தமிழகப் பார்ப்பனக் கும்பல் வருணபேதத்தால் வரையறுப்பதுபேல திராவிட இயக்கம் வந்துதான் இப்படி ஆனது என்பது புழுத்துப் போனவன் புண்ணைப் பார்த்து சிரித்த கதைதான். தனிநபரின் பண்புகளும், குறிக்கோளும் சேர்ந்து பண்பாட்டில் வெளிப்படுகிறது என்பது ஒரு உண்மை, என்றாலும் அது முதலாளித்துவச் சூழலின் மூலத்திலிருந்து வேறுபட்டதல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஒரே முதலாளித்துவ அரசியலில் இருப்பவர்களின் வேறுபட்ட மாற்றங்கள் , நடத்தைகளை வைத்து அவர்களை முதலாளித்துவ அரசியலிலிருந்தே வேறுபட்டவர்கள் என்று கருதுவது தவறானது. மாறாக இப்படி விதவிதமான, வேறுபட்ட ஒழுக்ககேடுகளின் தன்னிறைவுதான் முதலாளித்துவ அரசியலே. முதலாளித்துவத்தின் குரலை அதானி ஒரு மாதிரி பேசினால், ‘அம்மா’ ஒரு மாதிரி பேசுவார்! மோடியின் வாயிலிருந்து பிகாரின் டி.என்.ஏ. பற்றி வருவது ஒரு வகை, இளங்கோவன் வாயிலிருந்து வருவது இன்னேரு வகை, இவர்களுக்கு வாய்கள் வேறு, ஆனால் வர்க்கம் ஒன்று!
இந்த ஜனநாயகமே இப்படித்தான் என்ற முடிவுக்கு மக்கள் எதார்த்தமாக வருவதை தடுத்து இது தனிநபர்களின் வெளிப்பாடு என்பதாக மட்டும் பார்க்க பழக்கும் முதலாளித்துவ அறிவாளிகளின் வரம்பைக் கடந்து இந்த ஜனநாகத்தின் தரக்குரைவை நாம் விவாதிக்க முன் வர வேண்டும். சுரண்டல், அடக்குமுறை என்ற தரக்குறைவான உள்ளடக்கத்தையே கோட்பாடாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து ஆரோக்கியமான அரசியல் பிறப்பது முடியாது. தனிநபரின் இயல்புகள் இந்த விகாரத்தை வீரியப்படுத்தலாம். ஆனால் தோற்றுவித்து தொற்று நோய் போல பரப்புவது முதலாளித்துவ ஜனநாயக அரசியல் என்பதே உண்மை.
அடுத்தவனை ஒழித்துவிட்டு ஆதாயத்தைப் பார் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த ஜனநாயகத்தின் தரத்தை விவாதிக்காமல், வெறுமனே தனிநபரின் தரமாக இதை வெட்டிச் சுருக்குவதும் அநாகரிக அரசியல்தான்.
பெண்ணை இழிவுபடுத்தும் பிரச்சனை மட்டுமல்ல, இந்த மண்ணையே இழிவுபடுத்தும் அன்னிய – கார்ப்பரேட் தரகுமுதலாளிகளின் அநாகரிக ஆக்கிரமிப்பிலிருந்தும் நாட்டை மீட்க இந்தப் போலி ஜனநாயகத்தால், குறிப்பாக முதலாளித்துவ ஜனநாயகத்தால் முடியாது என்பதுதான் நடைமுறை காட்டும் உண்மை. மக்களை அமைதியாக வளர்ச்சிப் பாதையில் வாழவைக்கும் என்று நம்பிக்கை ஊட்டிய உலக முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகி தோல்வியுற்று பல்லைக் காட்டி நிற்கிறது. இந்தியாவில் இந்த ஜனநாயகத்தின் அனைத்து அரசமைப்பு உறுப்பும் எதிர்சக்திகளாக மாறி தான் செய்வதாய் சொன்ன வேலைகளையே செய்ய லாயக்கற்றதாகி மக்களுக்கு பகை சக்தியாக பரிணமித்து விட்டது. சாராயத்தை ஒழிக்க வேண்டிய போலீசு சாராய கடைக்கு காவல் இருக்கிறது.
உச்சபட்சமாக நீதித்துறையே நீதியை விலைபேசும் துறையாக மாறியும் ‘மக்களுக்காக’ என்ற பெயரளவிலான திரைகளையும் களைந்துவிட்டு பச்சையாக முதலாளிகளின் அடியாளாக அரசு நிற்கிறது. இதுதான் இன்று நாம் காணும் ஆளும் வர்க்கத்தின் தரம்!
சுயமரியாதையே இல்லாத கூட்டத்திற்கு நாகரீகம் குறித்து ஏன் கவலை?
இது இனி மக்களுக்கு உதவாது என்பது அன்றாட நடப்பாக ஆன பிறகு இதையே நிரந்தரமாக மக்கள் மீது திணிக்க ஆளும்வர்க்க உறுப்புகள், அதன் ஒரு பிரிவான ஊடகங்கள் முயலுகின்றன. தானே வகுத்துச் சொன்ன கடமையிலிருந்து தரமிழந்து, விலகிய இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் இனி மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே இதற்கு வெளியே மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் அடுத்த கட்ட அரசியலுக்கு முன்னேறுவதுதான் வரலாற்று வளர்ச்சி விதி.
இதை சட்டவிரோதம் ஜனநாக விரோதம் என்று சொல்லுவதற்க்கு தனக்குத்தானே விரோதமான இந்த அரசமைப்பிற்க்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் உலகத்திலேயே இறுதியான வடிவம் இன்று இருக்கும் முதலாளித்துவ ஜனநாகயகம்தான் என்று வரம்பிடுவதும் முட்டாள்தனமானது. இதுவே மாறதது, மாற்றக்கூடாதது என்பது அரசியல் தற்குறித்தனமும், வர்க்க நலனும் சார்ந்தது.
சமுதாய அமைப்பு, வரலாற்றில் பல வடிவங்களை கடந்துதான் முதலாளித்துவ ஜனநாயக அரசும் வந்துள்ளது. மன்னர் காலத்தில் மன்னர் ஆட்சிகூட மாறாதது மாற்ற முனைந்தால் சட்டவிரோதமானது என்றுதான் நிலைமை இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சிகாலத்திலும் அரசமைப்பை எதிர்பதை சட்டவிரோதம் என்றுதான் சொன்னது. ஆனால் மக்களின் ஜனநாயக வேட்கை முதலாளித்துவ அடக்கு முறைகளோடு முடிந்துவிடுவதில்லை. அது தங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட, வர்க்க நலன் சார்ந்த ஒரு அரசமைப்பை நோக்கி முன்னேறியே செல்லும்.! இந்த திசையில் ஆளும் வர்க்க வரம்பையும் , முதலாளித்துவ சர்வாதிகார இழிவையும் தாண்டி சிந்திப்பது்தான் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவும் அரசியல் ஆரோக்கியத்தின், தரம் நோக்கிய முன்னேற்றத்திற்கான முதல்படி.!
இதை எதிரிவர்க்கம் தானாக வழங்காது . அன்றாட நடைமுறை பிரச்சனைகளின் வெளிப்பாட்டிலிருந்து மக்களுக்கு இந்த சிந்தனையை வழங்கும் அரசியல் நாகரிகத்தை உழைக்கும் வர்க்கமாகிய நாம் வழங்குவோம்.
“மூடு டாஸ்மாக்கை!” இயக்கத்துக்கு வழக்கு நிதி தாரீர்..!
தமிழகத்தில் அரசே குடிவெறியைத் திட்டமிட்டு மக்களிடம் திணித்து இளைஞர்களை, மாணவர்களைச் சீரழித்து மனிதப் பேரழிவுக்கு இட்டுச் செல்வதை இனம் கண்டு, இதற்கு எதிராக ‘மூடு டாஸ்மாக்கை! கெடுவிதிப்போம் ஆகஸ்ட் 31” என்ற இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகமெங்கும் நடத்தி வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக எமது அமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேலான இடங்களில் சுவர் எழுத்துக்கள், பல லட்சம் துண்டறிக்கைகள், பேருந்து, ரயில், தெருமுனைப் பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் எனப் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைமையில் திரண்டு சென்று அருகிலிருந்த ஷெனாய் நகர் டாஸ்மாக் கடையை உடைத்து நொறுக்கினர். உடனே கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி அவர்களில் 15 மாணவர்களை மட்டும் கைது செய்து பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்டு 10 பிரிவுகளில் வழக்குப் பதிந்தது, போலீசு.
புழல் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள இம்மாணவர்கள் அங்கும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இவர்களை ஆட்கொணர்வு மனு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யக் கோரினோம். ஆட்கொணரும் உத்தரவை ஏற்று மாணவர்களைக் கொண்டுவரச் செய்வதற்கு பதிலாக, மாவட்ட நீதிபதி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர் நீதிமன்றம். மாவட்ட நீதிபதி சிறைக்கு சென்று விசாரணை நடத்தி, தாக்குதல் நடத்தப்பட்டதை வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாலும் மேம்போக்கான அறிக்கை ஒன்றைத் தந்துள்ளார்.
இதற்கிடையே மேற்படி சிறையில் வாடும் மாணவர்களைக் கொச்சைப்படுத்தி, “அவர்கள் மாணவர்களே அல்ல, கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்‘ என்ற பொய்ப் பிரச்சாரத்தை அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பதால், தாங்கள் பிணை கோரப் போவதில்லை என்று மாணவர்கள் அறிவித்து புழல் சிறையிலேயே உள்ளனர்.
சட்டவிதிகளுக்கு விரோதமாக புழல் பெண்கள் சிறைக்கு சென்ற ஆண் உளவுத்துறை அதிகாரி, அங்கு அடைக்கப்பட்டிருக்கும் மாணவிகளை தரக்குறைவாகப் பேசி மிரட்டி உளவியல் ரீதியான சித்திரவதை செய்தார். இதை வெளியில் கொண்டுவர தனியாக ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. உளவுத்துறை அதிகாரி மீதான புகாரை மறுத்த அரசுத் தரப்பு, போலீசு சிறைக்குச் சென்றது உண்மைதான் என்றும், ஆனால் மாணவிகளை சந்தித்து, மிரட்டவில்லை என்றும் சாதிக்கிறது. இதுகுறித்து உண்மையை அறிந்திட வீடியோ பதிவுகளைத் தரும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் ஆட்கொணர்வைச் செய்யாமல் இழுத்தடிக்கிறது.
மாணவர்களின் பதினைந்து நாட்கள் காவல் முடிந்தபின்னர் அடாவடியாக காவலை நீட்டித்து உத்தரவிட்டார், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி. இதனை ஆட்சேபித்து நீதிமன்றத்துக்கு எதிரே எமது தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் நீதிபதி அசைந்து கொடுக்கவில்லை. இந்த அநீதியான உத்தரவுகளுக்கும் பிணை மறுப்புகளுக்கும் எதிரான சட்டப் போராட்டத்தில் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களின் உதவியுடன் இறங்கியுள்ளோம்.
விருத்தாச்சலம் நகரில் ஒரு டாஸ்மாக் கடைக்கு எதிராக மாணவர்கள் போராடியது, விருத்தாச்சலம் வட்டம் மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடை மூடச் செய்து முற்றுகையிட்டது ஆகிய இரு வழக்குகளிலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜூவையும் பிற தோழர்களையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு பிணை தர அரசு கடுமையாக எதிர்க்கின்றது. அத்துடன் நில்லாமல் மணல் கொள்ளையர்களுக்கு எதிராகவும், கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி தோழர் ராஜூ போராட்டங்களை நடத்திய போது போடப்பட்ட வழக்குகளைக் காரணங்காட்டி அவரை குண்டர் சட்டம் / தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரசு திட்டமிட்டது. இதனை உணர்ந்து கொண்ட நாம், சென்னை உயர் நீதிமன்றத்தில் போராடி அரசின் இம்முயற்சிக்கு தடை வாங்கியுள்ளோம்.
கோவையில் டாஸ்மாக் கடை நொறுக்கப்பட்ட வழக்கில் எட்டு தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம், மேலப்பாளையூர் டாஸ்மாக் கடை உடைப்புகளில் ஈடுபட்டதாக 30 க்கும் மேற்பட்ட புமாஇமு தோழர்களும், ஊர்ப் பொதுமக்களும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பிணை வழங்கிட அரசு கடுமையாக எதிர்ப்புக் காட்டி வருகின்றது.
கரூர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டி ஒட்டியதற்காக, வழக்குப் பதிவு செய்து சுவரொட்டி ஒட்டிய தோழர்களையும் சிறையில் அடைத்தது, அரசு. இவர்களைப் பிணையில் வெளியில் எடுத்துள்ளோம். டாஸ்மாக் கடை முற்றுகை நடத்தி சிறை சென்ற பென்னாகரம் தோழர்களையும் பிணையில் எடுத்துள்ளோம்.
சிறை சென்றுள்ள தோழர்களைப் பிணையில் எடுக்கவும் இவர்களின் மீதான பொய்வழக்குகளை எதிர்கொள்ளவும் பெருமளவில் நிதி தேவைப்படுகின்றது.
அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும் நோக்கில் எங்களோடு தோள் கொடுத்து வழக்கு நிதி தரும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
பின்வரும் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Name: Vetrivel Chezhiyan Account Number: 62432032779 Bank Name: State Bank of Hyderabad Branch: Pozhichalur, Chennai IFSC Code: SBHY0021334
– இவண் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு: 99623 66321
பெரியார், வழக்கறிஞர் அருள்மொழி, வீரமணி, சுப.வீர பாண்டியன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசும் ஹெச் ராஜா அதற்கான தண்டனை விவரங்களையும் தெரிவிக்கிறார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆபாசமாக பேசியதாக கண்டனம் தெரிவிக்கும் இந்த கிரிமினல் பேர்வழிதான், தண்டிக்கப்படவேண்டிய நெ 1 கிரிமினல் என்பதை நிரூபிக்கிறது இந்த வீடியோ – பாருங்கள், பகிருங்கள்!
“நாங்கள் மனிதர்கள் இல்லையா? – ஆம்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட போலீசார் வேதனை” என்று தலைப்பிட்டு “தி இந்து” தமிழ் நாளிதழ் (ஜூலை, 22) ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. காயம்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண் போலீசாரைப் பற்றி விவரித்து விட்டு, கலவரத்துக்குக் காரணமான முக்கியப் புள்ளிகள் கைது செயப்படவில்லை என்று போலீசார் மனம் குமுறுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
பவித்ரா என்ற பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது என்ற இளைஞரை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் லாக் அப் கொலை செய்ததுதான் இப்பிரச்சினைக்குக் காரணம். கொலைக் குற்றவாளி மார்ட்டின் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், இதன் எதிர்வினையாக நடந்த “ஆம்பூர் கலவரம்” முதன்மைக் குற்றமாக்கப்பட்டுவிட்டது.
சட்டவிரோதமாக அடைத்து வைத்து போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஷமீல் அகமது.
இப்பிரச்சினை தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகள் போன்ற அனைத்தும் போலீசை நிரபராதியாக்கி விட்டு, ஆம்பூர் முஸ்லிம் மக்களையும், ஷமீலையும், பவித்ராவையும் குற்றவாளியாகக் காட்டுகின்றன. நம் கண் முன்னே நடைபெற்ற ஒரு சம்பவம் எப்படியெல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, ஆம்பூர் கலவரம் என்று அழைக்கப்படும் இந்தச் செய்தியின் விவரங்களைப் பார்ப்போம்.
***
பள்ளிகொண்டாவுக்கு அருகில் உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் பவித்ரா, கடந்த மே 24 அன்று காணாமல் போகிறார். பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்த அவளது கணவன் பழனி, பின்னர் உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார். ஜூன் 5-ம் தேதி விசாரணைக்கு வந்த அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், போலீசுக்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுத்து வழக்கைத் தள்ளி வைக்கின்றனர். 19-ம் தேதி இந்த வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஷமீல் அகமது என்ற இளைஞரை பள்ளி கொண்டா போலீசு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார். பவித்ராவைக் கண்டுபிடிக்க மேலும் அவகாசம் வேண்டும் என்று போலீசு கேட்க, மீண்டும் அவகாசம் தருகிறார்கள் நீதிபதிகள்.
பவித்ராவும் ஷமீல் அகமதுவும் 6 மாதம் முன்பு வரையில் ஆம்பூரில் ஒரே தோல் தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள். சமீபத்தில்தான் திருமணமான ஷமீல், தன் மனைவியோடு ஈரோட்டில் குடியேறிவிட்டார். வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோடு சென்று ஷமீலைத் தொடர்பு கொண்டிருக்கிறார். பவித்ராவிடம் வழிச்செலவுக்கு காசு கொடுத்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு புத்திமதி சொல்லி, பவித்ராவின் வீட்டுக்குத் தனது செல்பேசியிலிருந்தே போன் செய்து அவள் ஊருக்கு வந்து கொண்டிருப்பதாகத் தகவலும் சொல்லியிருக்கிறார் ஷமீல். இருப்பினும் ஈரோட்டிலிருந்து கிளம்பிய பவித்ரா வீட்டுக்குத் திரும்பவில்லை.
தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறிய போதிலும் நடத்தை கெட்டவள் என்று முத்திரை குத்தப்பட்ட பவித்ரா.
ஜூன் 16-ம் தேதி ஷமீலை விசாரணைக்கு வருமாறு அழைத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ். தவ்கீத் ஜமாத்தின் மாவட்டத்தலைவரும் ஷமீலின் மாமனாருமான முகமது கவுஸ், விசாரணைக்காக ஷமீலை ஒப்படைத்திருக்கிறார். 24 மணி நேரத்திற்குப் பின் ஷமீலை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் 19-ம் தேதி வரை வெவ்வேறு இடங்களில் வைத்து ஷமீலை கொடுரமான முறையில் சித்திரவதை செய்திருக்கிறார் மார்ட்டின். மாமனார் முகமது கவுஸ் அந்த நான்கு நாட்களில் பல முறை போலீசு நிலையத்துக்கு நடையாய் நடந்தும், போனில் விசாரித்தும் யாரிடமிருந்தும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை.
இன்ஸ்பெக்டர் மார்ட்டின் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் கைதேர்ந்த போக்கிரி. மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடிய சிவலிங்கம் என்பவரை லாரி ஏற்றிக் கொல்ல முனைந்த கிரிமினல். இரண்டாண்டுகளுக்கு முன் ரியாஸ் கான் என்ற இளைஞரை அடித்தே கொலை செய்தவர். இவையெல்லாம் அந்த வட்டாரம் முழுவதும் தெரிந்த விசயங்கள் என்பதால் செய்தி அறிந்தவர்களிடையே பதற்றம் பரவுகிறது.
ஷமீலை 19-ம் தேதியன்று விடுவிக்கிறார் மார்ட்டின். நடை பிணமாக வீடு திரும்பிய ஷமீல், உடனே ஆம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். உடல்நிலை மோசமடைந்ததால், 23-ம் தேதி வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஷமீல் 26-ம் தேதி மாலை மரணமடைகிறார்.
இது லாக் அப் கொலை என்றே போலீசு ஒப்புக்கொள்ளவில்லை. ஷமீலை ஜூன் 16 அன்றே வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும், மறுபடியும் 19 அன்று அழைத்து விசாரித்துவிட்டு மீண்டும் திருப்பி அனுப்பி விட்டதாகவும் அப்பட்டமாகப் புளுகினார் வேலூர் மாவட்ட எஸ்.பி.செந்தில்குமாரி.
“என்ன வேண்டுமானாலும் செயலாம்” என்ற போலீசின் இறுமாப்புக்கும் திமிருக்கும் சூடு வைக்கும் விதத்தில், 26-ம் தேதி இரவே ஆயிரக்கணக்கில் ஆம்பூர் போலீசு நிலையத்தின் முன் திரண்டார்கள் முஸ்லிம் மக்கள். இரண்டு போலீசு வாகனங்கள் எரிக்கப்பட்டன. 8 பெண் போலீசார் உள்ளிட்ட 38 போலீசாருக்கு காயம். போலீசு படை சிதறி ஓட வேண்டியதாயிற்று. இதனைத் தொடர்ந்து சுமார் 115 பேர் மீது கொலை முயற்சி, சதி, கலவரம் செய்தல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தீவைத்தல் – எனப் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கும் போடப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் மார்ட்டினோ அன்றைக்கே தலைமறைவாகிவிட்டார்.
கொட்டடிக் கொலைக்கு எதிராக போலீசு நிலையத்தின் முன் திரண்டு போராடிய ஆம்பூர் மக்கள்.
“பவித்ராவைத் தேடிய தனிப்படைப் போலீசார், ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து கொண்டு, அம்பத்தூரில் ஒரு மகளிர் விடுதியில் பதுங்கியிருந்த பவித்ராவை வளைத்துப் பிடித்தனர்” (தினமலர்). தனக்கும் ஷமீலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், தன்னைத் தவறான பெண்ணாகச் சித்தரிப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார் பவித்ரா. பவித்ராவின் கணவன் பழனி கொடுத்த புகாரில்கூட ஷமீலின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா.
இருந்த போதிலும், ஷமீல் கொல்லப்பட்டு விட்டார். கொலை செய்த மார்ட்டினை சி.பி.சி.ஐ.டி தனிப்படை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான், கலவரத்தில் பாதிக்கப்பட்ட போலீசாரின் “கண்ணீர்க்கதை” வெளியிடப்படுகிறது.
***
கணவனுடன் வாழப்பிடிக்காத ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறினால் அது ஏன் ஒரு கலவரத்தில் வந்து முடிய வேண்டும்? பவித்ரா என்ற பெண்ணுக்கு பழனியுடன் வாழப் பிடிக்கவில்லை. பழனிக்கு பவித்ராவை விடுவதற்கு மனமில்லை. இதில் யார் தரப்பில் நியாயம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வாழப்பிடிக்காத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி ஒரு மண உறவில் இருத்தி வைப்பது முறையற்றது, சாத்தியமற்றதும் கூட.
இன்று ஆயத்த ஆடை நிறுவனங்கள், தோல் தொழிற்சாலை முதல் பல்வேறு தொழிற்சாலைகளில் இளம் ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுகின்றனர். இங்கெல்லாம் காதல் திருமணங்கள் அதிகமாக நிகழ்வது இயல்பே.
பல இளம்பெண்கள் திருமணத்துக்குப் பின் கைவிடப்பட்டு பிள்ளையுடன் நிராதரவாக நிற்கின்றனர். சிலர் வேறு துணையுடன் சேர்ந்து வாழ்கின்றனர். கணவனையும் பிள்ளையையும் கைவிட்டு வேறு ஒருவருடன் செல்லும் பெண்களும் உண்டு. கணவன் குடிகாரனாகவோ, பொருந்தா மணமாகவோ இருக்கும் பட்சத்தில், திருமணமான பெண்கள் பழைய மண உறவை ரத்து செய்ய விரும்புகின்றனர்.
நகரமயமாதல் காரணமாக பெண்கள் ஒரே நேரத்தில் ஜனநாயக விழுமியங்களுக்கும் பண்பாட்டு சீர்கேடுகளுக்கும் அறிமுகமாகின்ற சிக்கலானதொரு சமூகச் சூழலையும், அது தோற்றுவிக்கும் முரண்பாடுகளையுமே பவித்ரா – பழனி விவகாரம் பிரதிபலிக்கிறது.
தன்னை யாரும் கடத்தியதாக பவித்ரா கூறவில்லை. எனவே, இந்த வழக்கில் போலீசு தலையிடுவதற்கான முகாந்திரமே இல்லை. ஒரு வேளை ஷமீலுக்கும் பவித்ராவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாக ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அது பவித்ராவும் பழனியும் நீதிமன்றத்திலோ, தமது உறவினர்கள் – நண்பர்கள் முன்னிலையிலோ வைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினையே அன்றி, போலீசு தலையிடவேண்டிய பிரச்சினை அல்ல.
இருப்பினும், போலீசு சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளிலும் தலையிடுவதை நாம் காண்கிறோம். கடன் வசூல், வீடு காலி செவது போன்றவற்றில் தொடங்கி, காதல், கணவன்-மனைவி தகராறு வரையிலான அனைத்து சிவில் விவகாரங்களிலும் சட்டவிரோதமாகத் தலையிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்வதுதான் போலீசின் அன்றாட நடவடிக்கையாக இருக்கிறது.
பழனியின் புகார் மீது இன்ஸ்பெக்டர் மார்ட்டின் எடுத்த நடவடிக்கை இத்தகையதுதான். வாங்கின காசுக்காகவோ, முஸ்லிம்கள் மீதுள்ள விசேடமான வெறுப்பின் காரணமாகவோ, அல்லது போலீசுத் திமிரின் விளைவாகவோ ஷமீல் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார். ஆம்பூர் மக்களிடம் வெடித்த கோபம் இந்த ஒரு கொலையினால் மட்டும் தோற்றுவிக்கப்பட்டதல்ல.
செம்மரக் கடத்தல் மற்றும் கொலை செய்த டி.எஸ்.பி. தங்கவேலு முதல் மார்ட்டின் வரை பல அராஜகங்களை எதிர்கொண்டு சகிக்க முடியாத நிலையில்தான் போலீசுக்கு எதிரான இந்தக் கலகம் வெடித்திருக்கிறது. ஆனால் ஊடகங்களோ, போலீசின் குற்ற வரலாற்றைத் துருவுவதற்குப் பதிலாக, பவித்ரா “ஓடிப்போன” கதையைத் துருவி ஆராந்து, அதன் விளைவுதான் இந்தக் கலவரம் என்ற கோணத்திலேயே செய்தி வெளியிட்டனர். “பவித்ராவின் பழைய காதலர்கள் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை” என்று வக்கிரமாக செய்தி வெளியிட்டது தினமலர்.
ஆனால், உயர்நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பவித்ராவோ , தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியதுடன், தனக்கு பழனியுடன் வாழ விருப்பமில்லாததால் மணவிலக்கு வேண்டும் என்று மட்டும்தான் கோரினார்.
“இந்தப் பெண்ணால் ஆம்பூரில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் உயிரிழந் துள்ளார்” என்று கூறி கொலைப்பழியை பவித்ராவின் மீது போட்டார் அரசு வக்கீல் தம்பித்துரை.
நீதிபதிகள் தமிழ்வாணனும் சி.டி. செல்வமும் அரசு வக்கீலின் இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்காதது மட்டுமல்ல, “உன்னால்தான் பிரச்சினை. திருமணமானவருடன் நட்பு வைத்ததால்தான் மதக்கலவரம் ஏற்படுகிறது. இதற்கு நீதிமன்றம் துணை போகாது. தமிழகம் அமைதியான மாநிலமாகத் திகழ்கிறது. இது போன்ற பிரச்சினையால்தான் தேவையில்லாத கலவரம் நிகழ்கிறது” என்று ஆம்பூரில் நடந்த பிரச்சினையை இந்து-முஸ்லிம் கலவரமாகத் திரித்ததுடன், பவித்ராவின் மீது நடத்தை கெட்டவள்” என்ற முத்திரையையும் குத்தி விட்டனர்.
“கோடு போட்டு நிற்கச் சொன்னான், சீதை நிற்கவில்லையே, சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே” என்று விளக்கப்படுகிறது ஆம்பூர் விவகாரம். போலீசு, ஊடகங்கள், அரசு, நீதிமன்றம் ஆகிய அனைவரும் வெவ்வேறு அளவில் வெவ்வேறு கோணத்தில் இந்தக் கருத்துக்கு வலுச் சேர்த்திருக்கின்றனர்.
இந்து மதவெறியர்கள் மட்டும்தான் ஆம்பூர் பிரச்சினையை லவ் ஜிகாத் என்று பிரச்சாரம் செய்தனர். பவித்ரா மதம் மாற்றப்பட்டதாக திடுக் தகவல் என்று தலைப்பிட்டு தினமலர் மட்டும்தான் செய்தி வெளியிட்டது. காஷ்மீரில் கூட போலீசார் இப்படித் தாக்கப்பட்டதில்லை என்று இராம.கோபாலன் மட்டும்தான் அறிக்கை வெளியிட்டார்.
இவர்கள் மட்டும்தான் என்று மதிப்பிடுவது உண்மைதானா? முசாபர் நகரிலிருந்து ஆம்பூர் வெகு தொலைவில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறோமே, அது உண்மைதானா?
பொற்காலமென்று ஜெயா அடிமைகளால் போற்றப்படும் அ.தி.மு.க அரசின் யோக்கியதை என்ன? திவாலாகிப் போன அரசுக் கட்டமைப்பிலிருந்து மக்கள் அதிகாரம் எப்படி எழுந்து வரும்? தோழர் ராஜுவின் நேர்காணல் – இறுதி பாகம்!
இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய தங்களது திட்டத்தை அரசரிடம் விளக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; அதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” என்று கேட்பான் அரசன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில், ஜெயாவைப் பொருத்திப் பாருங்கள்; சற்றேறக்குறைய அதே காட்சிதான் தமிழகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.
பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. வசூலித்தக் கப்பம், முழுமையாக போயஸ் கார்டனுக்குப் போய்ச்சேரவில்லை என்பதற்காகத்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய சான்று.
சூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளு்ம தமிழக முதல்வர் ஜெ. மற்றும் அதானி குழுமத்தின் அதிகாரிகள்.
பொதுவில், தமக்குச் சேரவேண்டிய கமிசனைக் கொடுத்தால் நாட்டையே எழுதிக் கொடுக்கத் துணியும் நாலாந்தரமான கொள்ளைக்கும்பலின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது, தனியார் மின்சாரக் கொள்முதலில் நடைபெறும் கொள்ளையும் ஊழலும்.
“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு.
அதானியிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி கருணாநிதி தொடங்கி ராமதாசு, இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. என்றாலும், இவை எவற்றையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அம்மாவின் அரசு.
கமிசனுக்காகவே ஆட்சியை நடத்திவரும் அம்மாவின் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லுமா, என்ன? “மின்பற்றாக்குறையைச் சமாளித்து தடையற்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமானால், அதிக விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது.
அம்மாவைப் பொறுத்தவரையில் மின்துறை என்பது பொன்முட்டையிடும் வாத்து. பொதுப்பணித்துறையில் 100 டெண்டர்கள் ஒதுக்கி 10 கோடி ரூபாய் கமிசன் பார்ப்பதற்குள், மின்துறையில் ஒரே கையெழுத்தில் 100 கோடிகளில் கமிசனாகத் தேற்றிவிடலாம் என்பதுதான் யதார்த்தம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட் ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அம்மாவுக்கு கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.
தமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.
திட்டப்படி, 2008-ல் வேலையைத் தொடங்கி 2011-ல் முடிவடைந்திருக்க வேண்டிய, வடசென்னை அனல்மின் நிலையம் (தலா 500 மெகாவாட் வீதம் – இரண்டு யூனிட்கள்) மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் (500 மெகாவாட் – மூன்றாவது யூனிட்) ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப்பிறகு 2014-ல்தான் உற்பத்தியைத் தொடங்கின.
எண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்); உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களை தொடங்கிட வேண்டிய நிலையில்தான் 2011-ல் இருந்தது. இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. பேரத்திற்கான தாமதங்கள்தான் இவையென்பது சொல்லாமலே விளங்கும்.
2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றே, மின்துறையில் நிலவும் பகற்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும்.
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக, முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி மின்திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிசனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயா. பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் புது டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் பெல் நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. சீன அரசு நிறுவனமும், எஃப்.கே.எஸ். என்ற இந்திய நிறுவனமும் இணைந்து இன்னொரு டெண்டர் தாக்கல் செய்தன. அதன்பிறகும், ஜெ. அரசு எதிர்பார்த்த பேரம் படியாததால், இவ்விரு நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதையே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போட்டு வந்தது. பின்னர், இந்த டெண்டரையும் ரத்து செய்வதாக அறிவித்தது ஜெ.அரசு.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளோடு முரண்படும் அவ்வாணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.
“டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விசயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியும் சேர்ந்து, 2015-ம் ஆண்டு மார்ச்-13-ந்தேதி அந்த டெண்டரையே ரத்து செய்ய வைத்தது.” என்று ஆனந்த விகடனே (29-07-2015) அங்கலாய்க்கும் அளவிற்கு அம்மாவின் கமிசன் விவகாரம் நாறிக்கிடக்கிறது.
அரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தையும் தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்கட்டணங்களை உயர்த்திய போதிலும், மின்வாரியத்தின் கடன் அதிகரித்துச் செல்வதோடு, மாநிலத்தின் மொத்தக் கடனில் சரிபாதி அளவாக உயர்ந்திருக்கிறது.
நாம் செலுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கும் சேர்த்தேதான் செலுத்திவருகிறோம் என்பதில் உண்மையில்லையா, என்ன?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தொடர்ந்து பல நாட்கள் கூச்சல், குழப்பம், அமளியில் மூழ்கடித்து முடக்கி வைப்பது என்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் அதே அரசியல் உத்தியை இப்போது காங்கிரசுக் கட்சி கையிலெடுத்துக் கொண்டுள்ளது. மற்ற பிற எதிர்க்கட்சிகளோ இரண்டு தரப்புகளுக்கும் மாறிமாறி ஒத்தூதிக் கொண்டிருக்கின்றன. இதனால் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் மேலும் சீரழிந்து போயுள்ளதோடு, நீண்டகாலமாகவே நெருக்கடியையும் தேக்க நிலையையும் எட்டிவிட்டது. மோடி தலைமையில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைந்தபோதும் இந்தநிலைக்கு விடிவொன்றும் ஏற்பட்டுவிடவில்லை. உலகின் மிகச் சிறந்த அரசியல் அமைப்புமுறையாகச் சொல்லப்படும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள தோல்விதான் என்று சொல்ல வேண்டும்.
இது அமைச்சரவைக் கூட்டமா? அல்லது விசாரணைக் கூடமா? (கோப்புப் படம்)
உறங்கிக் கொண்டிருந்த கிழட்டுச் சிங்கமான பா.ஜ.க.வின் அத்வானி, யாரோ தன்னை இடறி விட்டது போலத் திடீரென்று தனது ஓரக்கண்ணைத் திறந்து ஒருமுறை உறுமிவிட்டு, மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது. “நாட்டில் அவசரநிலை போன்ற சூழ்நிலை மீண்டும் வராது என்ற நம்பிக்கை எனக்கில்லை. இன்றைய இந்திய அரசியலில் தலைசிறந்த தலைமைக்குரிய பண்புக்கான அறிகுறிகள் எதையும் என்னால் காணமுடியவில்லை. அரசியல் தலைமை முதிர்ச்சி அடைந்ததாக இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதன் பலவீனங்கள் காரணமாக அதன் மீது எனக்கு நம்பிக்கையில்லை” என்று கடந்த மாதம் ஒரு நேர்காணலின்போது அத்வானி கூறியுள்ளார். அவர், 1975-1977 ஆண்டுகளில் இந்திரா காந்தியின் அவசரகாலப் பாசிச ஆட்சியின் விளைவுகளை நேரில் அனுபவித்த முதன்மைப் பிரமுகர்களில் ஒருவர். அத்வானியின் மேற்கண்ட கருத்து மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள அவசரநிலைப் பிரகடன ஆபத்து குறித்ததா, இல்லையா – என செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் காரசாரமாக விவாதித்தன.
பா.ஜ.க.வின் மோடி தலைமையால் அவசரநிலைப் பிரகடன ஆபத்து குறித்து அத்வானி அப்படிக் கூறவில்லை; எதிர்த்தரப்பினரால்தான் அவ்வாறான ஆபத்து வளர்ந்துள்ளதாக அத்வானி பேசியதாக பா.ஜ.க.வினர் அபத்தமாகப் புளுகித் தள்ளினர்; மறுபுறம், கட்சியில் தான் தனிமைப்பட்டுவிடும் பயபீதியிலும் அடுத்த குடியரசுத் தலைவர் பதவியும் கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்திலும் அத்வானியே தான் முதலில் பேசியதை மழுப்பித் திரித்து விளக்கமளித்தார். இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. கும்பலின் அரசு அனைத்தும் தழுவிய தோல்வியை அடைந்து வருகின்றது. அக்கும்பல் தனது அதிகாரத்தைத் தக்கவைத்து கொள்ள ஒரு அவசரநிலைப் பிரகடனம் மூலமாகவோ, வேறுவகையிலோ இந்துத்துவா பார்ப்பன பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதையே அதன் எத்தணிப்புகள் காட்டுகின்றன.
பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது என்ற பெயரில் மோடி அரசு மேற்கொண்ட கண்துடைப்பு நடவடிக்கைகள் எதுவும் ஒரு சிறுஅளவு கூடப் பலன் அளிக்கவில்லை. புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லுகள் செய்து, நாட்டின் தொழில் வளர்ச்சியும் மொத்த/நிகர உள்நாட்டு உற்பத்தியும் முன்னேற்றமடையத் தொடங்கி விட்டதாக புளுகித் தள்ளியது. வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து கூவிக்கூவி விற்க முயன்ற ‘மேக்-இன் இந்தியா’ என்ற சரக்கு விலை போகவில்லை. நான்குமுறை முயன்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நீதிமன்றங்களில் தனது எடுபிடிகளை நீதிபதிகளாக நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் உச்சநீதி மன்றத்தில் தடைகோரும் வழக்கில் சிக்கித் தொங்கலில் கிடக்கிறது. அந்த வழக்கில் வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி “தனிமனித அந்தரங்கம் ஒரு அடிப்படை உரிமை கிடையாது; அதை யாரும் அரசியல் சட்ட அடிப்படை உரிமையாகக் கோர முடியாது” என்று வாதாடி மோடி – அமித் ஷா கும்பலின் மனப்போக்கை அப்பட்டமாகவே அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் “வீட்டோ” அதிகாரத்தைப் பறித்து ஒரு குழுவிடம் கொடுக்கவுள்ளது, மோடி அரசு. அதற்குக் காரணம் நாட்டின் வளர்ச்சியில் நான்குகால் பாய்ச்சலை ஏற்படுத்திவிடும் என்ற மோடி வெறுமனே ஊதிப்பெருக்கிய மேக்-இன் இந்தியா பலூனை பஞ்சர் செய்துவிட்டார், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். தான் நியமித்துள்ள அரசின் செய்தித்தொடர்பு உயர் அதிகாரி தவிர, வேறு அரசு அதிகாரிகள் யாரும் செய்தியாளர்களிடம் பேசக்கூடாது தடைவிதித்துள்ளது மோடி அரசு. அரசின் இரகசியங்களை மக்களும் ஊடகங்களும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. மோடி கும்பல் தனது ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாளில் ஊழலற்ற அரசு நடத்தியதாகப் பீற்றிக்கொண்டது. இந்த அண்டப் புளுகை அம்பலப்படுத்தும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, இராஜஸ்தான் முதல்வர் வசுந்திரா, ம.பி. முதல்வர் சிவராஜ் சௌகான் ஆகியோர் சிக்கிய ஊழல்-அதிகாரமுறைகேடுகளில் அடுத்தடுத்து வெளிவந்து நாடே நாறுகிறது. இவற்றில் ம.பி.யில் நடந்துள்ள வியாபம் முறைகேடுகளில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் நேரடியாக முன்னின்று நடத்தியுள்ளது. அளவிலும் தன்மையிலும் மிகப்பெரிய இம்முறைகேடுகள் நாட்டின் அரசியல் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன.
மோடியின் ஆட்சியில் சர்வ வல்லமை பொருந்தியதாக மாற்றப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் (இடமிருந்து) நிருபேந்திர மிஸ்ரா, பிரமோத் குமார் மிஷ்ரா, அஜித் குமார் தோவல்.
நாட்டின் விளையாட்டு, சினிமா-தொலைக்காட்சி, கல்வி, கலாச்சாரம், அறிவியல், வரலாற்று ஆய்வு அமைப்புகள் முதல் உச்சநீதி மன்றம் வரை அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் எடுபிடிகளைத் திணித்து வருகிறார்கள். இவை மட்டும் போதாதென்று சி.பி.ஐ., பிரதமர் அலுவலகம் ஆகிய உயர்ந்த அதிகார அமைப்புகளில் அதன் விசுவாசிகளை நியமித்துக்கொண்டுள்ளனர். வெவ்வேறு துறைக்கான அமைச்சகங்கள், அவற்றின் கூட்டுப் பொறுப்பாகவுள்ள அமைச்சகம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின் தலைமையைத் தாண்டி, கோப்புகளை அனுப்பிப் பிரதமரும் அவரது அலுவலகமும் முடிவுகள் எடுக்கும் வகையில் அதிகாரம் குவிக்கப்படுகிறது. 1975-1977-ம் ஆண்டு அவசரநிலை பாசிச ஆட்சிக்குத் தலைமை தாங்கியதே பிரதமர் அலுவலகம் என்ற அரசியல் சட்டத்துக்குப் புறம்பான ஒரு அதிகார மையம்தான். அதன் மூலம் அதிகாரத்தை முழுமையாகக் குவித்துக்கொண்ட பிரதமர் இந்திரா காந்தி பாசிச ஆட்சியை நடத்தினார்.
மீளமுடியாத அரசியல் – பொருளாதார நெருக்கடியிலும், தப்பிக்க முடியாத இலஞ்ச-ஊழல் முறைகேடு குற்றசாட்டுகளிலும் சிக்கி, அனைத்தும் தழுவிய தோல்வியிலும் சிக்கிகொண்டுள்ள மோடி அரசும் அவ்வாறான ஏற்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.