Tuesday, May 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 632

பயனர்களை ஆட்டுவிக்கும் பேஸ்புக் அல்காரிதம்

3

பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக போடும் நிலைத்ததகவல்கள் அனைத்துமே உங்கள் நட்பு வட்டத்திலிருக்கும் அனைவரின் முகப்பக்கத்திலும் காட்டப்படுகிறதா என்பதையும் உங்கள் நண்பர்கள் அனைவருடைய நிலைத்ததகவல்கள் அனைத்துமே உங்கள் முகப்பக்கத்தில் காட்டுகிறதா என்பதையும் சோதித்து பார்த்திருக்கிறீர்களா?

லைக்வயர்ட் (Wired) இணையதளத்தை சேர்ந்த மேட் ஹோனன் (Mat Honan) என்ற பத்திரிக்கையாளர் சோதனை முயற்சியாக இரண்டு நாட்களுக்கு பேஸ்புக்கில் பிடித்தது, பிடிக்காதது என தான் பார்க்கும் அனைத்தைக்குமே லைக் என்ற விருப்பத்தை தெரிவிப்பது என முடிவெடுத்து செயல்படுத்தியுள்ளார்.

நண்பர்களின் நிலைத்தகவலில் இருந்து செய்தி ஓடையில் வரும் தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் வரை அனைத்திற்கும் அவர் விருப்பம் (Like) தெரிவித்துள்ளார். சோதனையின் ஒரு நாள் முடிவிலேயே அவரது பேஸ்புக் பக்கம் அவருடைய நண்பர்களின் நிலைதகவல்கள் எதையுமே காட்டவில்லை, பக்கம் முழுவதுமே விளம்பரதாரர் மற்றும் செய்தி நிறுவனங்களின் தகவல்களால் நிரம்பி வழிந்துள்ளது. இது மட்டுமல்ல இச்சோதனையின் மோசமான விளைவு மறுநாள் தெரியவந்தது. அவரது பக்கம் மட்டுமின்றி நண்பர்களின் பக்கத்திலும் கூட இவர் விருப்பம் தெரிவித்த விளம்பர மற்றும் செய்தி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அவர்கள் “என்ன நடந்து விட்டது” என்று அவரை தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அதாவது நட்பு வட்டத்திலிருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் பதியும் எல்லா நிலைத்தகவல்களும் உங்கள் நண்பர்களுடைய பக்கத்தில் காண்பிக்கப்படுவதில்லை என்பதையும் நட்பு வட்டத்திலிருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளும் நிலைத்தகவல்கள் அனைத்தும் உங்கள் பக்கத்தில் காட்டப்படுவதில்லை என்பதையும் ஒரு அதிதீவிர – லைக் போடும் சோதனையின் மூலம் நிரூபித்துள்ளார் மேட் ஹானன்.

பேஸ்புக் உங்கள் முகப்பக்கத்தில் எதை காட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க மென்பொருள் படிமுறையை (Algorithm) பயன்படுத்துகிறது. 2014 முதல் பேஸ்புக் செய்தி ஓடை என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. பேஸ்புக்கில் ஒருவர் விருப்பம் தெரிவிக்கும் தகவல்கள் மற்றும் இணையத்தில் பார்க்கும் பக்கங்களின் அடிப்படையில் அவருடைய விருப்பத்தை கணக்கிடுவதன் அடிப்படையில் பிற விளம்பரதாரர் மற்றும் செய்தி நிறுவனங்களின் தகவல்கள் அச்செய்தி ஓடையில் காட்டப்படுகின்றன.

பேஸ்புக்கின் அல்காரிதம் ஒருவர் விருப்பம் தெரிவிக்கும் தனிநபர் நிலைத்தகவல்கள் மற்றும் இணையத்தில் பார்க்கும் பக்கங்களின் அடிப்படையில் அவருடைய ஆர்வத்தை அறிந்து அது சார்ந்த தகவல்களை, செய்திகளை, விளம்பரங்களை காட்டுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நண்பர்களின் நிலைத்தகவல்களுக்கு மட்டும் நீங்கள் விருப்பம் தெரிவித்தாலும் கூட அவற்றில் உள்ள குறிச்சொற்களை கொண்டு அவை சார்ந்தவை செய்தி ஓடையில் காட்டப்படும்.

உதாரணமாக, ஏதோ ஒரு நண்பரின் மொக்கை நிலைத்தகவல்களுக்கு நீங்கள் தொடர்ச்சியாக விருப்பம் தெரிவித்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கொஞ்சம் சீரியசாக பதிவிடும் நண்பரின் நிலைத்தகவல்களை நீங்கள் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அவர் தனது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் உட்பட பதிவிடும் எந்த நிலைத்தகவலையும் உங்கள் பக்கத்தில் பேஸ்புக் காட்டாது.

மேலும், நாம் போடும் எல்லா நிலைத்தகவலும் நண்பர்களுக்கு காட்டப்படுகிறதா என்பதையும் நண்பர்களுடைய எல்லா நிலைத்தகவலும் நமக்கு காட்டப்படுகிறதா என்பதையும் அறிந்து கொள்ள எந்த வசதியும் பேஸ்புக்கில் இல்லை.

நேரடியாக நண்பர்களுடைய பக்கத்திற்கு போய் பார்ப்பதன் மூலம் அவரது நிலைத்தகவல்களை நேரிடையாக அங்கு பார்க்க முடியும் என்றும் சிலர் வாதிடலாம். நாள் முழுவதும் நம் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவரின் முகப்பக்கத்திற்கும் நேரிடையாக சென்று பார்ப்பதை செயல்படுத்த முடியுமா? அதற்கு வேறு வேலையின்றி முகநூல் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க வேண்டி வரும்.

மேற்சொன்ன அல்காரிதத்தை பேஸ்புக் பயன்படுத்த வேண்டிய தேவையையும், அமெரிக்காவின் FTC போன்ற நெறிப்படுத்தும் அமைப்புகள் அதை கண்டுகொள்ளாமல் விடுவதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக் பரீசீலனையில்நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை, கருத்துக்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலமா பேஸ்புக் வணிகரீதியில் லாபங்களை ஈட்டி வருகிறது. பயனரின் பக்கத்தில் காட்டும் விளம்பரங்களும், பயனர் பற்றிய தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாலும் தான் பேஸ்புக் வணிகரீதியில் வெற்றிகரமாக தொடர்கிறது. சுமார் 132 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் பேஸ்புக்கின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ. 12 லட்சம் கோடிக்கும் மேல். ஏற்கனவே பேஸ்புக் தனது பயனர்களின் உணர்ச்சிகளை (லைக்குகளை) வணிக நிறுவனங்களுக்கு விற்பது பற்றிய பதிவை வினவில் வெளியிட்டிருந்தோம்.

மேலும், பேஸ்புக் உள்ளிட்ட பல இணைய சேவை நிறுவனங்கள் தங்களது பயனர்களின் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு அமைப்பிடம் பகிர்ந்து கொள்வது எட்வர்டு ஸ்னோடன் வெளியிட்ட தரவுகளில் அம்பலமாகியிருக்கிறது.

எனவே உலகளாவிய தமது கண்காணிப்புக்கு உதவுவதாகவும், விளம்பர மற்றும் பங்குச் சந்தையில் பெரும் சக்தியாகவும் விளங்கும் பேஸ்புக்குக்கு எதிராக ஏதேனும் செய்துவிடுவார்களா என்ன?

அதையும் மீறி நெறிப்படுத்தும் விதிமுறைகளை விதித்து பேஸ்புக்கை சீர்செய்தால், பேஸ்புக் நீங்கள் விரும்பும் பேஸ்புக்காக இருக்காது. பேஸ்புக்கின் தற்போதைய பரபரப்பு, கிளர்ச்சி (Sensation), அவற்றுக்கான லைக்குகள் இதில் பழக்கப்பட்டுவிட்டவர்களுக்கு வரிசைகிரமமாக வரும் நண்பர்களின் நிலைத்தகவல்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

புரியும்படி சொன்னால், சிறுவர்களுக்கு விற்கப்படும் ஐஸ்கிரீமில் சிறிது போதைபொருளை கலந்து விற்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். சிலகாலத்திற்கு பின் போதையில்லா சுத்தமான ஐஸ்கிரீம் சிறுவர்களுக்கு பிடிக்காது, ஐஸ்கிரீம் இல்லாமல் இருக்கவும் முடியாது. ஏற்கனவே பேஸ்புக்கில் லைக் என்ற விருப்பத்தை பெறுவதே ஒரு ஈகோ-போதையாக நம்மில் பலரை அடிமைப்படுத்தியுள்ளது.

எனவே, பேஸ்புக்கை எதற்காக பயன்படுத்துகிறோம் என்று நாம் நினைப்பதற்கும் நடைமுறையில் பேஸ்புக் யாருக்கு பயன்படுகிறது என்பதற்கும் பாரிய இடைவெளி உள்ளது.

இன்றைய ’நாகரீக’ உலகில் நாம் மேலும் மேலும் தனித் தனித்தீவுகளாக பிரிந்து உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் சமூகத்திடம் பகிர்ந்து கொள்ளுவதற்கான வாய்ப்பை வெகுவாக இழந்து வருகிறோம். மெய் உலகில் சமூக உறவுகளை பேண இயலாதவர்களுக்கு மெய்நிகர் உலகு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் அந்த வாய்ப்பை வழங்குவதாக நாம் நினைக்கிறோம்.

பேஸ்புக் தனிதகவல் பாதுகாப்பு
பேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக பயன்படுத்தாததால் அல்லது புரிந்து கொள்ளாததால் இன்று வரை அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன

பேஸ்புக்கில் ஒருவர் தனது குழந்தைப் பருவம் முதலான பழைய, புதிய நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் என தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரையும் தனது நட்பு வட்டத்தில் வைத்துக் கொண்டு உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற வகையில் பலர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தனிநபரின் தகவல்கள், புகைப்படங்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்களை பகிரங்கப்படுத்துவதுடன், சமூக மற்றும் இணையக் குற்றங்கள் நடப்பதற்கு அடிப்படையாக அமைகின்றன. குறிப்பாக பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் பெண்களின் படங்களை பாலியல் ரீதியில் தவறாக சித்தரித்து பதிவேற்றுவதில் ஆரம்பித்து கடும் மன உளைச்சலை கொடுக்கும் பல அத்துமீறல்கள் நடக்கின்றன.

பேஸ்புக் தனது பயனர்களின் அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு பயனரும் தான் பதிவிடும் ஒவ்வொரு நிலைத் தகவலையும் யார் யார் பார்க்கலாம் என்பதை மட்டுப்படுத்தும் வசதி, தங்களது தனிப்பட்ட விவரங்களையும் நிலைத்தகவல் ஓடைகளையும் (status feed) நட்பு வட்டத்தையும் முன்பின் அறியாதவர்கள் பார்க்க முடியாமல் மட்டுப்படுத்தும் வசதி, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளை (Privacy Settings) கொண்டு வந்தது. ஆனால் பலரும் பேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக பயன்படுத்தாததால் அல்லது புரிந்து கொள்ளாததால் இன்று வரை அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. இந்த வகையான அத்துமீறல்களை மட்டுமே பெரும்பாலான பயனர்கள் பிரச்சனையாக கருதுகின்றனர்.

ஆனால், தனிநபர்கள் மட்டும் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக பயன்படுத்தவில்லை. பேஸ்புக் நிறுவனமே தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றுள்ளது.

பயனர்களின் தனித் தகவல்கள் பகிர்ந்து கொள்வதை மட்டுப்படுத்தும் அமைப்பை (Privacy Settings) அவர்களை அறியாமலேயே மாற்றுவதிலிருந்து தனிநபர் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது வரை பல மீறல்கள் நடந்ததை அடுத்து 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் (FTC) தனிநபர் அந்தரங்கம் தொடர்பாக சில நெறிமுறைகளை நிர்ணயித்து அவற்றை பின்பற்றுமாறும் அவை பின்பற்றப்படுவதை கண்காணிக்க சுயாதீனமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவும் பேஸ்புக்கிற்கு உத்தரவிட்டது.

“என்ன செய்வது, திரும்பவும் புறா வழி தூது என்று மறுபடியும் கற்காலத்திற்கே சென்றுவிடலாமா” என்று அவர்கள் கேட்கலாம். இதற்கு பதிலளிக்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த சட்டக் கல்வி மாணவர் மேக்ஸ் செரிம்ஸ்.

பேஸ்புக்கின் நடைமுறைகள் ஐரோப்பிய தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக குற்றம் சுமத்தியுள்ள மேக்ஸ் செரிம்ஸ், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் வேவு பார்த்ததாகவும், அவற்றை அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ-வுக்கு தருவதாகவும், பயனர்களின் அந்தரங்க தகவல்களை வேவு பார்த்ததற்காக அந்நிறுவனம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தலா ரூ 40 ஆயிரம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் வியன்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் பேஸ்புக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவும், வழக்கிற்கு ஆதரவளிக்கவும் அவர் அழைப்பு விடுத்ததையடுத்து அவருக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேக்ஸ்சுக்கு பெருமளவில் ஆதரவு பெருகியிருப்பதால் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கு பற்றி கருத்து கூறிய மேக்ஸ் “நாம் அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவே விரும்புகிறோம். ஆனால் அந்தரங்கம் பற்றிய கவலையும், அச்சமும் இன்றி பயன்படுத்த விரும்புகிறோம். இப்போது நம் முன்னால் இரண்டு தேர்வுகள் உள்ளன, கற்காலத்திற்கு திரும்பி செல்வது அல்லது எதிர்த்து போராடும் நடவடிக்கையில் இறங்குவது. நாங்கள் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்” என்கிறார்.

முன்னதாக 2011-ம் ஆண்டு முதல் 22 விதிமுறை மீறல் புகார்கள் அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையரிடம் (ODPC) மேக்ஸ் செரிம்சும் அவரது நண்பர்களும் பதிவு செய்திருந்தனர். சென்ற 2013-ம் ஆண்டு பயனர்களின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிசம் (PRISM) திட்டத்திற்கு அளித்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என மேலும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. ப்ரிசம் (PRISM) திட்டத்திற்கு தகவல்களை அளித்த புகாரை நிராகரித்த தகவல் பாதுகாப்பு ஆணையம் மற்ற 22 புகார்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தற்போது அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் முழுமையாக அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தகவல் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று மேக்ஸ் செரிம்ஸ் குழுவினரின் இணையதளங்களுள் ஒன்றான  europe-v-facebook.org தெரிவிக்கிறது. அதனால் தான் இம்முறை தங்களது போராட்டத்தை நீதிமன்றத்தில் மட்டுமின்றி மக்களிடமும் கொண்டு சென்றிருக்கின்றனர்.

முதலாளித்துவ அமைப்பை தக்கவைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும், அமைப்புகளும், அதன் ஆன்மாவான லாபத்திற்கு எதிராகவும், உலகளாவிய கலாச்சார தாக்குதலுக்கும் எதிராக ஒரு துரும்பையும் அசைத்து விடாது. அதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமின்றி நமது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் போன்ற நெறிப்படுத்தும் அமைப்புகள் பேஸ்புக் தனது பயனர்களின் அந்தரங்கத்தை மீறுவதை கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றன. மேக்ஸ் செரிம்ஸ் குழுவினரும் கூட விரைவிலேயே சட்ட வழிமுறிகளில் இதற்கு தீர்வு இல்லை என்பதை புரிந்து கொள்ளக்கூடும்.

இதற்கான தீர்வு பேஸ்புக்கின் மெய்நிகர் உலகிற்கு வெளியே மெய் உலகில் சமூகத்திடம் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதிலும், முதலாளித்துவ லாபவெறியின் அல்காரிதம் நம்மை அடிமைப்படுத்துவதற்கு எதிராக போராடுவதிலும் தான் உள்ளது.

– மார்ட்டின்

தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! பிரச்சார இயக்கம்

0

ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க கும்பலுக்கு அடிபணியாதே!
தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே!

பிரச்சார இயக்கம்

ன்பார்ந்த தொழிலாளர்களே!

nalachattam-bannerஇந்தியாவில் தொழில் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் பாய்கிறது என்றும், அதை தொழிலாளர் நலச்சட்டங்கள் தான் கெடுக்கின்றன என்றும் அச்சட்டங்களைத் திருத்தத் துவங்கியுள்ளது, மோடி அரசு! முதல் கட்டமாக, தொழிற்சாலைகள் சட்டம், அப்ரண்டீஸ் சட்டம், ஆலைகள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் தருதல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல் குறித்த சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சட்டத் திருத்தத்துக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அதன் நகல்களை குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தர வேண்டும் என்பது விதியாக உள்ளது. அந்த விதிகளை மயிராக மதித்து அவசர, அவசரமாக மேற்படி சட்டத் திருத்த மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளது மோடி அரசு. இதுதான் மோடி அரசின் ஜனநாயகம்!

  • ஒவ்வொரு சிப்டிலும் ஆட்களை குறைத்துவிட்டு, எஞ்சி இருக்கின்ற தொழிலாளியை கூடுதல் நேரம் வேலை செய்ய வைப்பதை ஓவர்டைம் என்கின்றனர், முதலாளிகள். இப்படி ஓவர்டைம் செய்வது தொழிலாளியின் உடல்நலத்துக்கு கேடு என்பதால், காலாண்டுக்கு 50 மணி நேரம் மட்டுமே ஓவர்டைம் செய்ய வேண்டும் என்று தொழிற்சாலைகள் சட்டத்தில் வரம்பு இருந்தது. இந்த வரம்பினை 100 மணிநேரமாக உயர்த்தி, சட்டத்திருத்தம் செய்யப்போகிறது, மோடி அரசு. இந்த சட்டத்திருத்தம் செய்யப்படுமானால், 8 மணிநேர வேலை என்பதையே 10, 12 மணி நேரமாக மாற்றி விடுவார்கள். அதற்கு மேல் 2, 3 மணிநேரம் ஓவர்டைம் செய்யவைத்து விடுவார்கள், முதலாளிகள். மொத்தத்தில், நாளொன்றுக்கு 12 – 15 மணிநேரம் வேலை செய்வது கட்டாயமாகி விடும். கட்டாய உழைப்பினால் முதலாளியின் உற்பத்தியும், லாபமும் பன்மடங்கு பெருகிவிடும். தொழிலாளிக்கு என்ன ஆகும்? 30 வயதில் மூட்டு தேய்ந்து, 40 வயதில் நாடி தளர்ந்து, 50 வயதில் சாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். முதலாளியின் லாபவேட்டைக்கு தொழிலாளியை நரபலி கொடுப்பதுதான் மோடியின் இந்த தொழிலாளர் நலச்சட்ட திருத்தம்.
  • சில தொழிற்சாலைகளில், சில வேலைப் பிரிவுகளில் பெண் தொழிலாளர்கள் இரவு சிப்டில் (இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) வேலை செய்வதற்கு தடை இருந்தது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை வேலை செய்தால், வீட்டுக்கு வாகன ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளும் இருந்தன. இவை எல்லாம் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தந்தன. புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டால், இந்த பாதுகாப்புகள் பறிக்கப்படும். பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட குறைவான சம்பளத்தில், எந்தக் கேள்வியும் கேட்காமல் வேலை செய்வார்கள்; சங்கம் அமைக்கவோ, உரிமைகளைக் கேட்கவோ முடியாது; பணிய வைப்பது சுலபம். இந்த காரணங்களுக்காகவே, அவர்களை இரவு சிப்டில் வேலை செய்ய நிர்பந்தம் தருகின்றனர். இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், பெண் தொழிலாளர்களோ வேலைச்சுமை, குறைந்த சம்பளம், பாலியல் வன்கொடுமை, குடும்ப நெருக்கடி போன்ற கொடுமைகளுக்கு ஆளாக நேரிடும்.
  • தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்) சட்டத்தைத் தளர்த்துவது என்பது மற்றொரு திட்டமாகும். தொழில்நுட்பத் தகுதி உள்ளவர் மட்டுமே அப்ரண்டீஸ் பயில முடியும் என்கிற இப்போதைய நிபந்தனை நீக்கப்பட்டு, படித்தவர், படிக்காதவர் யார் வேண்டுமானாலும் அப்ரண்டீஸ் ஆகலாம் என்கிற வகையில் கதவு திறக்கப்படும். இந்த சட்டத்திருத்தம் அமுலுக்கு வருமானால், 10 – 20 நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, எஞ்சிய தொழிலாளர்களை அப்ரண்டீஸ் என்று கணக்கு காட்டிவிடுவார்கள். மலிவான கூலிக்கு தொழிலாளர்களைச் சுரண்டுவதும், நிரந்தரம் செய்யாமலேயே பல ஆண்டுகளுக்கு ஒட்ட ஒட்ட உறிஞ்சுவதும் தான் நடக்கும். இப்போது சட்டவிரோதமான முறையில் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் டிரெய்னி, அப்ரண்டீஸ் என்கிற பெயரில் பல ஆண்டுகளுக்கு சுரண்டப்பட்டு, வேலைநிரந்தரம் இல்லாமலேயே துரத்தப் படுகின்றனர். இந்நிலையில், மேற்படி சட்டத்திருத்தமானது, மேலும் பல இலட்சம் பேரை முதலாளிகள் சுரண்டுவதற்கு சட்ட அங்கீகாரத்தை தந்துவிடும். வேலைநிரந்தரம் என்பதையே குதிரைக் கொம்பாக்கிவிடும்.
  • இந்திய நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் நலன் காக்க 44 சட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டமும் தொழிலாளி வர்க்கத்தின் தீரமிக்கப் போராட்டத்தின் பலனாகப் போடப்பட்டவைதான். ஆனால், ஒரு சட்டமாவது தொழிலாளி வர்க்கத்தைப் பாதுகாத்திருக்கிறதா? இல்லை. 7 பேர் சேர்ந்தால் சங்கம் ஆரம்பிக்கலாம் என்கிற உரிமையை 88 ஆண்டுகளுக்கு முன்பே காலனியாதிக்க காலத்திலேயே நிலைநாட்டி இருக்கிறோம். ஆனால், 700 பேர் சேர்ந்தால் கூட சங்கம் ஆரம்பிக்க முடியவில்லையே, இதைக் கண்டு சந்தோசப்பட முடியுமா? முதலாளிகளது தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக கிரிமினல் வழக்கினை தொடுப்பதற்கு கூட சட்டத்தில் வழியைக் கண்டோம். இந்த சட்டத்தால் ஒரு முதலாளியாவது தண்டிக்கப்பட்டிருக் கிறானா? புகார் கொடுத்த தொழிலாளிக்கு வேலை பறிபோன கொடுமையைத்தான் கண்டிருக் கிறோம். 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் வேலைநிரந்தரம் என்று கூட சட்டப் பாதுகாப்பை பெற்றோம். எல்லா வேலைகளும் காண்ட்ராக்ட் மயமாகி, வேலை நிரந்தரம் என்பதே கேலிக்கூத்தாகிவிட்டது.

தொழிலாளர் நலச்சட்டங்கள் வெறும் காகிதத்தில் இருப்பதைக் கூட முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான், அதை எல்லாம் “திருத்து” என்கிறான். “காலாவதியாக்கிவிடு” என்கிறான்.

தொழிலாளர் நலச் சட்டங்களை கழிப்பறைக் காகிதமாக்கிய கனவான்களில் முதலிடம் பிடிப்பது, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்தான். வேலையைப் பறிகொடுத்த தொழிலாளியிடம் செட்டில்மெண்ட் பேரம் பேசுவது, தொழிற்சங்கப் பதிவுக்கு விண்ணப்பம் கொடுத்த மறுநிமிடமே முதலாளிக்குத் தகவல் தந்து தொழிலாளியைக் காட்டிக் கொடுப்பது, முதலாளிக்கு புரோக்கராக இருந்து சங்கத்தைக் கலைக்குமாறு ‘அதட்டல் அறிவுரை’ தருவது, சட்டப்படியான போராட்டங்களைக் கூட சட்டவிரோதம் என்று அறிவித்து முதலாளிகளுக்கு எடுப்பு வேலை செய்யும் அலுவலகமாக மாறிவிட்டது, தொழிலாளர் துறை. இங்குள்ள அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற மறுதினமே முதலாளிகளது சட்ட ஆலோசகர்களாகி விடுகின்றனர். முதலாளிகளின் கைக்கூலியான மனிதவள (எச்.ஆர்.) அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் சிறந்த கைக்கூலிகளாக இருப்பதாக முதலாளிகள் பாராட்டுகின்றனர். ஒரு கையில் அரசாங்க பென்சன்! மறு கையில் தொழிலாளர்களது கழுத்தை அறுத்ததற்கு முதலாளிகள் கொடுக்கின்ற கமிசன்.

தொழிலாளர் நலச்சட்டங்களை செல்லாக் காசாக்கியதில் நீதித்துறையின் பங்கு அலாதியானது! தப்பித்தவறி ஏதாவது ஒரு வழக்கில் தொழிலாளிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால், முதலாளிகள் அடுத்தடுத்த கோர்ட்டுகளுக்கு மேல்முறையீடு செய்து, தொழிலாளியின் ஆயுள் முழுவதையும் கோர்ட்டு வாசலிலேயே அழித்து விடுவதற்கேற்பதான் கோர்ட்டு நடைமுறையும் உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றமே காண்டிராக்ட் என்கிற கொத்தடிமை முறையைப் பாதுகாத்து தரப்பட்ட தீர்ப்புகள், பணிநிரந்தர உரிமையை நிராகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புகள், சட்டவிரோத வேலைநீக்கத்தை அங்கீகரித்து தரப்பட்ட தீர்ப்புகள் ஏராளம்…ஏராளம். உலகமயமாக்கத்துக்கு ஏற்பத்தான் அரசியல் சட்டத்துக்கு நீதிமன்றம் விளக்கம் கூற முடியும் என்று தீர்ப்புகள் தொழிலாளர்களுக்கு எதிராக களமிறங்குகின்றன. போதாக்குறைக்கு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடி ஆகாது என்று அரசே ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

nalachattam-poster

தொழிலாளர் நலச்சட்டங்கள் இருந்த சுவடு கூட தெரியாமல் அவற்றை அழித்துவிட சொல்கிறது முதலாளிவர்க்கம். எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமைகளை நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது என்பதும் முதலாளிகளின் கட்டளையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கக் கும்பலின் அடியாளாக இருந்து அடுத்தடுத்த தாக்குதல்களைத் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்து முடக்குவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.

இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் என்றைக்கும் நமக்கு விடிவு இல்லை என்பதை உணர்வோம். தொழிற்சங்கங்கள் என்கிற போர்வையில் தரகு வேலை செய்யும் துரோகிகளால் நமது துயரங்களைப் போக்கவோ, உரிமைகளைப் பாதுகாக்கவோ முடியாது. மூலதன கொடுமைக்கு முடிவு கட்டவோ, இவர்களின் அடியாளான அரசைத் தகர்த்தெறியவோ முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையான புரட்சிகர தொழிற்சங்கங்களால் மட்டுமே இதனை சாதிக்க முடியும். போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டியமைத்து தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் காப்போம்! அதற்கு மாற்று அதிகாரத்திற்கான கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!

மத்திய, மாநில அரசுகளே!

  • தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துகின்ற முயற்சிகளைக் கைவிடு!
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மதிக்காத முதலாளிகளைக் கைது செய்! அவர்களது சொத்துக்களை நட்ட ஈடின்றி பறிமுதல் செய்!
  • தொழிலாளர் நலத்துறையை தொழிற்சங்கங்களது கண்காணிப்பில் கொண்டுவர சட்டம் இயற்று!
  • தொழிலாளர் விரோதப் போக்கின்கீழ் தரப்படும் புகார்களை 3 மாதத்தில் விசாரித்து, கிரிமினல் நடவடிக்கை எடு!
  • ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் முதலாளிகளது ஆலோசகர்களாக இருப்பதை தடை செய்! அவர்களது பென்சனை ரத்து செய்!

தொழிலாளர்களே!

  • தொழிலாளர்களது குரல்வளையை நெருக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுவதை முறியடிப்போம்!
  • 8 மணிநேர வேலைக்கு வேட்டு வைத்து, தினசரி 15 மணிநேரம் வேலை செய்வதை நிரந்தரமாக்கும் சட்டத்திருத்தங்களை தகர்த்தெறிவோம்!
  • அப்ரண்டீசுக்கான தகுதிகளை அப்புறப்படுத்தி, காண்டிராக்ட் முறையை  நிரந்தரமாக்கும் சட்டத்திருத்தங்களை அனுமதியோம்!
  • பெண்களை இரவுப்பணியில் அமர்த்தி, அதிக வேலைச் சுமை – குறைந்த கூலி கொடுத்து, வரம்பற்ற சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தங்களை தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
  • வேலைநிரந்தரத்தை அடியோடு மறுத்து , சுரண்டலுக்கு அங்கீகாரம் தருகின்ற சட்டத்திருத்தங்களை எதிர்த்து முறியடிப்போம்!

செப்டம்பர் – 2014

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்
பதிவு எண் 24/KRI
தொடர்புக்கு – 97880 11784 ஒசூர்.

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

அரசுப் பள்ளிகள் : பெற்றோர் சங்கத்தின் நேரடி நடவடிக்கை

1

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் இல்லை
கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பறை இல்லை

என்பதை கண்டித்து 27.8.2014 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மாவட்ட கல்வி துறை அதிகாரி ஒரு வாரகாலத்தில் போதுமான ஆசிரியர்களை நியமிக்கின்றோம் என உறுதி அளித்தார். கோட்டாட்சியர் அன்றே கம்மாபுரம் சென்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து புதிய வகுப்பறை கட்டுவதை துரிதப் படுத்தினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேரணியை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். பேரணியில் பெற்றோர் சங்கத்தினர், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனியினர், பெற்றோர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பேரணி பாலக்கரை, கடலூர் சாலை, காய்கறி சந்தை வழியாக மாவட்ட கல்வி அலுவலகத்தை அடைந்தது. அலுவலகம் முன்பாக மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் செந்தாமரைக்கந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி +2 மாணவிகளுக்கு இதர பள்ளிகளிலிருந்து முதுகலைபட்டதாரி ஆசிரியர்களை தற்காலிக மாற்றம் செய்து ஒருவாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் நியமிக்க உள்ளார் என்றும், கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

பேரணி,ஆர்ப்பாட்டம் போஸ்டர்

விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குறித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் 25-6-2014 அன்று ஆய்வு செய்ததில் கீழ்கண்ட விபரங்கள் தெரியவந்தன.

  • மேற்படி பள்ளியில் 2013-ம் ஆண்டு +2 பொதுத்தேர்வு எழுதிய 479 மாணவிகளில் 212 பேர் பெயிலாகி விட்டனர். 2014-ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய 411 மாணவிகளில் 100 மாணவிகள் பெயிலாகிவிட்டனர். ஆசிரியர் பற்றாக்குறையே இதற்கு காரணம்.
  • இவ்வாண்டு (2014-15) +1 மற்றும் +2 படிக்கும் மாணவிகள், அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பற்றிய விவரம்:
    தமிழ்- 863 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    இயற்பியல்- 650 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    வேதியல் – 651 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    கணிதம் – 331 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு தலா 1 ஆசிரியர் பணியிடம் தான் நிரந்தரமாக அரசு அனுமதித்துள்ளது.
  • போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் ஒரே ஆசிரியர் பல வகுப்பு மாணவிகளை ஒன்றாக கூட்டமாக வைத்து மரத்தடியில் பாடம் நடத்துவதால் மாணவிகளின் கல்வித்தரம் குறைந்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் அதிக மதிப்பெண் பெறாமல் உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படுகிறது. பள்ளியில் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.

போதுமான ஆசிரியர்களை உடன் நியமிக்குமாறு கோரி கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும், சென்னை, பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் எங்களது 9-7-2014 நாளிட்ட கடிதத்தில் முறையீடு செய்யப்பட்டது.

27-7-2014 நாளிட்ட செயற்குழுவில், “மேற்படி பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை 15 தினங்களில் நியமிக்காவிட்டால் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப்படும்” என்று தீர்மானம் இயற்றி அவற்றை கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது.

மேற்படி பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 மாணவிகளின் பெற்றோர் தனித்தனியாக கையொப்பமிட்ட 265 மனுக்கள் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும், சென்னை பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் 7.8.2014 அன்று அனுப்பப்பட்டன.

எந்த நடவடிக்கையும் கல்வித் துறை எடுக்கவில்லை. எனவே, பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 மாணவிகளின் பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம் 16.8.2014 அன்று நடத்தியதில் போராட்டம் நடத்தினால்தான் தீர்வு கிடைக்கும் என பெண்கள் வலியுறுத்தினர். 27-8-2014 அன்று விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

4.8.2014 அன்று கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் பார்வையிட்ட போது அப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்களுக்கு மரத்தடியில் மண்தரையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். மதில் சுவரே கரும்பலகையாக காட்சியளித்தது. இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், விருத்தாசலம் கோட்டாச்சியர், வட்டாச்சியார், என அனைத்து ஆட்சியர்களுக்கும் 6.8.14 நாளிட்ட கடிதத்தில் முறையீடு செய்யப்பட்டது. எந்த அசைவும் இல்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நமது போராட்ட அறிவிப்பிற்கு பிறகு கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட விருத்தாசலம் வட்டாட்சியர் 23-8-14 அன்று தேர்வு செய்து அளவீடு செய்துள்ளார். மேலும் விருத்தாசலம் கோட்டாட்சியர் 26-8-14 அன்று மேற்படி பள்ளிக்கு கட்டிடம் கட்டும் இடத்தை ஆய்வு செய்துள்ளார்.

மது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை எதிர்த்தும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற கல்வி ஆண்டின் இறுதியிலே விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் சந்திப்பினை ஏற்பாடு செய்து தொடர்ந்து பல கூட்டங்களை நடத்தினர்.

இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் 13 ஏக்கரில் அமைந்துள்ள விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமது சங்கத்தினர் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பினை ஏற்பாடு செய்தோம். அந்த பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் புதர்கள் மண்டி கிடந்தது. அதை புகைப்படமாக எடுத்து அப்படியே மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்பினோம். உடனே நகராட்சி ஊழியர்கள் புதரை அகற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் அவர் பங்குக்கும் சுத்தம் செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு 5 அல்லது 10 பெற்றோர் வந்தாலே பெரிய விஷயம் என்றும் அப்பள்ளி ஆசிரியர் நினைத்து இருந்த நிலையில் நமது முயற்சியால் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் வந்தனர்.

நமது சங்கத்தின் சார்பில்  “மாணவர்களின் எதிர்காலம், பெற்றோர்-ஆசிரியர் கையில்” என தலைப்பிட்டு நோட்டீஸ் அச்சிட்டு 10-ம் வகுப்பு மற்றும் +2 மாணவிகள் ஒவ்வொருவரிடமும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு பெற்றோர்கள் அவசியம் வரவேண்டும் என வலியுறுத்தி கூட்டம் நடைபெறும் முதல் நாள் மாலை கொடுத்து அனுப்பப்பட்டது.

பிரசுரத்தில் “அன்பார்ந்த பெற்றோர்களே அனைத்து சுக துக்க காரியங்களுக்கும் தவறாமல் போகிறோம். டி.வி சீரியல் பார்க்க் தவறுவதில்லை. நம் பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை சந்திக்க தவறலாமா? நேரம் இல்லை வேறு வேலை இருக்கிறது என்று காரணம் சொல்லாதீர்கள். உங்கள் பிள்ளைகள் நல்ல மனிதனாக வளர,பொதுத்தேர்வில் வெற்றி பெற அதிக மதிப்பெண் பெற கல்வித்தரம் மேம்பட ஆசிரியர்களை சந்திப்பது அவசியம். அனைவரும் தவறாமல் வாரீர். மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள்” என அச்ச்டித்து விநியோகித்தோம்.

Notice

மறுநாள் கூட்டத்திற்கு 500-க்கும் மேற்பட்டோர் ஆண்கள், பெண்கள் என திரளாக வந்திருந்தனர். பெற்றோர்களிடம் பேசிய ஆசிரியர்கள், உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருகின்றனரா, தினமும் மாலையில் வீட்டில் படிக்கின்றனரா, பள்ளியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா” என்பதை கண்காணித்து அவர்களின் கல்வியில் கவனம் செலுத்துமாறு கூறினர். கைபேசி போன்றவற்றை பிள்ளைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பக் கூடாது என வலியுறுத்தினர்.

ஒரு ஆசிரியர், மாதம் தோறும், வாரம் தோறும் நடைபெறும் தேர்வுகளின் தேர்ச்சி மதிப்பெண்ணை பார்த்து குறையிருந்தால் ஆசிரியரிடம் தெரிவித்தால் தாங்கள் அந்த மாணவியிடம் சிறப்பு கவனம் எடுத்து சொல்லிக் கொடுப்போம் என்றார்.

“பள்ளிக்கு பல மாணவிகள் காலம் தாமதமாக வருகின்றனர். இலவச சைக்கிள்கொடுக்கிறோம். இலவச பஸ் பாஸ் கொடுக்கிறோம். ஏன் தாமதம்?சாப்பிடாமல் பல மாணவிகள் வந்து இங்கு மயங்கி விழுகின்றனர். இதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மதிய உணவு நாங்கள் தருகிறோம். கிராமத்தில் இருந்து வரும் மாணவிகள் சாப்பாட்டிற்காக தாமதமாக வருவதை தவிக்க வேண்டும்” என்பதை பெற்றோர்களிடம் வலியுறுத்தி தலைமை ஆசிரியர் பேசினார்.

“பிள்ளைகள் தவறு செய்யும்பொழுது ஆசிரியர் கண்டித்தால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் ஆசிரியரை புகார் கூறும் போக்கு உள்ளது. அதனை பெற்றோர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

நமது சங்கத்தின் தலைவர் வை.வெங்கடேசன் பேசும் பொழுது, “அரசுப் பள்ளி நமது பள்ளி, அதனை தரம் உயர்த்த போராட வேண்டும் அதுதான் நிரந்தர தீர்வு. நமது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதன் மூலமே தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தை கட்டணக் கொள்ளையை ஒழிக்க முடியும்” என பேசினர்.

இறுதியில் பெற்றோர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். பெற்றோர்கள் பெரும் விழிப்புணர்வு பெற்றதாகவும் தங்கள் பிள்ளைகளின் படிப்பின் மீது முழு கவனம் செலுத்துவதாகவும் கூறி அன்றே நிறைய பெற்றோர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து சங்கத்தின் செயல்பாடுகளில் தங்களையும் இணைத்துக் கொள்வதாக உறுதியளித்தனர்.

நமது தொடர் போரட்டத்தால் முதன்மை கல்வி அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தி ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளுமாறு வாய்மொழி உத்தரவிட்டார். ஆனால் பள்ளியில் போதிய நிதியில்லை. மேலும் +2 விற்கு அனுபவமில்லாத ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை உள்ளது.

நமது பெற்றோர் சங்க போராட்டத்தை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் தூண்டிவிடுகின்றனர் என கல்வி துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதனால் நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். நாங்கள் நிலைமையை சமாளிக்கிறோம் என சங்கத்தினரிடம் தலைமை ஆசிரியர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் நமது சங்கம் தற்காலிக ஆசிரியர் தேவையில்லை, நிரந்தர ஆசிரியர் நியமிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்து நடத்தினோம். இந்நிகழ்ச்சி பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துவதாகவும் சங்கமாக திரண்டு போராடுவதன் வலிமையினையும் உணர்த்துவதாக அமைந்தது.

இது போல் விருத்தாசலம் டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்தினோம்.

மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்தினோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சங்கத்தின் சார்பில் மாணவர்கள் மூலமாக பிரசுரம் கொடுத்து அழைத்தது நல்ல பலனை கொடுத்தது. ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உற்சாகம் அடைந்நதனர். நாங்கள் அழைத்தால் பெற்றோர்கள் வருவதில்லை என நமது சங்கத்தை பாராட்டினர்.

பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு கல்வித்  துறையை, நிர்வாகத்தை சுலபமாக நாம் அணுக பெற்றோர் சங்கத்தில் சேர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம்.

2-9-14 அன்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பிரசுரம் அச்சடித்து மாணவர்களிடம் கொடுத்து உள்ளோம்.

அரசு பள்ளிக்காக மாணவர்களின் கல்வி உரிமைக்காக பெற்றோர் சங்கத்தின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தொடர்கிறது.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு
வை.வெங்கடேசன்,தலைவர்
9345067646

ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!

11

”ப்ரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா – மேரா காத்தா பாக்ய விதாதா” சௌகார் பேட்டை சேட்டு பான் பராக்கை புளிச்சென்று துப்பி விட்டு இந்தியில் ஏதோ திட்டுகிறாரா? குழப்பம் வேண்டாம். இது பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த ஒரு புத்தம் புதிய திட்டம். இப்படித்தான் ஊடகங்கள் அதிசயிக்கின்றன.

பிரதான் மந்த்தி ஜன் தன் யோஜனா - மேரா காத்தா பாக்ய விதாதா
ப்ரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா – மேரா கட்டா பாக்ய விதாதா” சௌகார் பேட்டை சேட்டு பான் பராக்கை புளிச்சென்று துப்பி விட்டு இந்தியில் ஏதோ திட்டுகிறாரா?

மோடி சுதந்திர தின உரையில் பேசும் போது நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளாகியும் 68 சதவீத மக்களுக்குக் கூட வங்கிக் கணக்கு இல்லை என்றும்.. இல்லாத அத்தனை பேர்களுக்கும் உடனடியாக வங்கிக் கணக்கை ஆரம்பித்துக்  கொடுத்து அவர்களை ‘நிதித் தீண்டாமையில்’ இருந்து விடுவிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இதன்படி, கடந்த 28-ம் தேதி ஒரே நாளில் நாடெங்கும் சுமார் 600 நிகழ்ச்சிகளும் 77,852 முகாம்களும் நடத்தப்பட்டு ஒன்றரைக் கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. வழக்கமாக வங்கிக் கணக்குத் துவங்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு அடையாள ஆவணங்கள் வேண்டும் என்கிற விதி முறையை ஒன்றாக தளர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. அதே போல், இது பிரதமரின் செல்லத் திட்டம் என்பதால் குறிப்பிட்ட இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் கணக்குகளுக்கு குறைந்தபட்ச சேமிப்பு ஏதும் வைக்கத் தேவையில்லை.

கணக்குகள் வைத்திருப்போருக்கு முப்பதாயிரம் வரை ஆயுள் காப்பீடும், ஒரு லட்சம் வரை விபத்துக் காப்பீடும் (எதிர்காலத்தில்) வழங்கப்படும், வங்கிக் கணக்கின் வரவு செலவு விவரங்களை ஆறு மாத காலத்திற்கு ஆராய்ந்து விட்டு 5,000 ரூபாய் மிகைப்பற்று (Overdraft) கடன் வசதி கொடுக்கப்படும் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. தொண்டையைச் செறுமிக் கொண்டு இடைபுகும் பேங்க் ஆப் இந்தியாவின் விஜயலட்சுமி ஐயர், ‘அதெல்லாம் முதல்ல ரெண்டாயிரம் தான்… அப்பால பொறவு பார்ப்போம்” என்கிறார்.

ஒரு திட்டம் என்று அறிவித்தால் அதன் பின்னே மக்களை கவரும் வெற்று முழக்கமும், முதலாளிகளுக்கு பயன்படும் நோக்கமும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் மோடி விசயத்தில் முன்னது கூட போதிய அளவுக்கு செட்டப் செய்யப்படவில்லை. எவர் ஆராயப் போகிறார்கள் என்பதனாலும் இந்த அலட்சியம் இருக்கலாம்.

வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டை யார் வழங்குவார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. காப்பீடு வழங்குவதற்கான அடிப்படை நிதியை யார் வழங்குவார்கள் என்றும், அதற்கான ப்ரீமியம் யார் செலுத்த வேண்டும் என்பது பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. நிதி அமைச்சர் மிகைப்பற்று கடனின் அளவு 5000 என்கிறார், வங்கி அதிகாரியோ 2000 என்கிறார். அடுத்து மிகைப்பற்று கடனுக்கான வட்டி விகிதம், கால அளவு குறித்து எந்த விவரங்களுக்கும் சொல்லப்படவில்லை.

எல்லா மக்களும் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காட்டி வங்கிக் கணக்கு துவங்கலாம் என்கிறார்கள் – நாடு முழுவதும் மாநிலம் விட்டு மாநிலம் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்துள்ள கூலித் தொழிலாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏது அடையாளங்கள்?

சி.ஐ.ஐ பின்பாட்டு
மோடிக்கு பின் பாட்டு பாடியுள்ளது தரகு முதலாளிகளின் சங்கமான சி.ஐ.ஐ. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

இத்திட்டம் பற்றியும் நடந்து முடிந்த முகாம் குறித்தும் தனியார் வங்கி ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, இத்திட்டத்தின் படி கணக்கு வைத்திருப்பவர் ஒரு மாதம் பத்து முறைகளுக்கு மேல் பணம் எடுக்க முடியாது என்கிறார். மேலும், எந்த வரைமுறையும் இல்லாமல் போதிய ஆவணங்கள் எதையும் சரிபார்க்காமல், எல்லோருக்கும் வங்கிக் கணக்கு துவங்கி வருவதாகவும், தனியார் வங்கிகள் இதற்கென இலக்கு நிர்ணயித்து மக்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.

அதே போல் மிகைப்பற்று கடன் கொடுப்பதற்கு கொலேட்ரல் எனப்படும் சொத்து ஈடு வைக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிகளைக் குறிப்பிடுகிறார். எனினும், பிரதமரின் செல்லத் திட்டம் என்று சொல்லப்படுவதால், விதிமுறைகளை மீறி எந்த அடையாளங்களும் இல்லாத, திருப்பிச் செலுத்தப்படும் உத்திரவாதம் ஏதும் இல்லாத கடன்களை வழங்குவதும் வங்கிகளைப் பிடித்து புதை குழியில் தள்ளுவதும் ஒன்று தான் என்கிறார். ஆனால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த மிகைப்பற்று காரணமாக வங்கிகள் திவாலாக போவதில்லை. மாறாக இந்த நிதி மறைமுகமாக முதலாளிகளுக்கு பயன்படும் விதத்தைத்தான் நாம் கண்டு பிடிக்க வேண்டும். இன்று ஐ.டி துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் கூப்பன்கள் போல மக்களுக்கும் கொடுக்கப்படலாம்.

“இது புத்தாக்கத்துடன் கூடிய சரியான திசையில் செல்லும் மிகத் தேவையான திட்டம். நாட்டின் மிகப் பெரிய சவாலான வறுமை ஒழிப்பை நிதி ஒருங்கிணைப்பு மூலம் தீர்க்கும் திட்டம்” என்று மோடிக்கு பின் பாட்டு பாடியுள்ளது தரகு முதலாளிகளின் சங்கமான சி.ஐ.ஐ. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

சி.ஐ.ஐ. சொல்லும் “எல்லா மக்களையும் நிதி ஒருங்கிணைப்பின் கீழ் கொண்டு வருதல்” என்கிற வார்த்தையும் (financial inclusion), அதை நடைமுறைப்படுத்துவதற்காக மோடி அறிவித்திருக்கும் திட்டமும் மோடி பக்த ஜனங்கள் பீற்றிக் கொள்வது போல் புத்தம் புது சரக்கல்ல.

உங்களுக்கு வங்கியில் கணக்கு இருக்கிறதா?
உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதே நோக்கத்திற்காக மன்மோகன் சிங் முன் வைத்த திட்டம் தான் ‘உங்கள் பணம் உங்கள் கையில்’. எல்லா மக்களுக்கும் ஆதார் அட்டைகளைக் கொடுப்பது; பல்வேறு திட்டங்களுக்காக அளிக்கப்படும் மானியங்களை ஆதார் அட்டையோடு இணைப்பது; ஆதார் அட்டைகளை வங்கி வலைப்பின்னலோடு சேர்ப்பது போன்றவை மன்மோகன் காலத்திலேயே துவங்கப்பட்ட திட்டங்கள்.

அதாவது அனைத்து மக்களையும் நிதிச் சந்தையில் இணைப்பது தான் நிதி ஒருங்கிணைப்பின் நோக்கம். கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட இத்திட்டங்கள் கூட அவர்களது சொந்த மூளையில் உதித்த திட்டங்கள் அல்ல; உலக வங்கியின் திட்டங்கள் தான் அவை. அதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட வங்கி வலைப்பின்னலுக்கு வெளியே சுய சார்பு பொருளாதார கட்டமைப்பு எதுவும் நிலவக் கூடாது என்பதே இதன் நோக்கம்.

ஏற்கனவே வங்கிகளின் நிதி ஓடைகளின் பாதையில் செயல்பட்டு வந்த தேசிய தொழில்களையும், சிறு குறு தொழில்களையும் சீரழித்து சின்னாபின்னமாக்கிய பின், இதற்கு வெளியே இயங்கும் கிராமிய சிறு வீத பொருளாதார அடிப்படைகளைத் தகர்த்து மொத்த இந்தியாவையும் ஓட்டாண்டிகளாக்க வேண்டும் என்பது உலக வங்கியின் நோக்கம்.

இதற்காகவே கிராமப்புற பொருளாதாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியவர்கள் கிராமப்புற மக்கள் தமது சேமிப்பில் 42%-ஐப் பணமாக வைத்துள்ளனர் என்கிற உண்மையைக் கண்டு பிடித்துள்ளனர்.  இத்தனை காலமாக வங்கிச் சேவையுடன் இணைக்கப்படாமல் இருக்கும் நாட்டின் 60% கிராமப்புற மக்களை உடனே வங்கிச் சேவையுடன் இணைப்பது, கருப்பட்டிப் பானைகளுக்குள் ஒளிந்திருக்கும் பணத்தை கொள்ளயடிப்பது என்கிற திசையில் ஆளும் வர்க்கம் சிந்திக்கத் துவங்கி நீண்ட காலமாகிறது. கூடவே ஏழைகளின் குறைந்த பட்ச வாழ்க்கை பராமரிப்பு கூட முதலாளிகளின் நலனுக்கு உதவிடும் வகையில் மாற்றப்பட வேண்டுமென்பதிலும் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

ஏகாதிபத்திய பொருளாதார நலன்களுக்கு ஏற்ப உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து வெளியிட்டுள்ளார். மோடியின் வாயில் இருந்து வந்து விழும் போது ஜன் தன் யோஜனா என்கிற பெயரில் விழுந்துள்ளது.

ஆதார், மற்றும் உங்கள் பணம் உங்கள் கையில் என்பதெல்லாம் நடைமுறைக்குச் சென்ற போது அவர்களே எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. ஏனெனில், 120 கோடி மக்களையும் நிதிச் சந்தையில் இணைப்பதன் முதல் படியாக வங்கிக் கணக்கு துவங்குவது தான் இருக்கிறது. இதற்கு ஏற்கனவே ரிசர்வ் வங்கி வகுத்திருந்த வழிமுறைகள் தடையாக இருந்தாலும், நீதிமன்றத்தின் தடையும் எதிர்பாராமல் வந்து சேர்ந்தது.

எல்லா மக்களின் தலையிலும் ஒரு வங்கிக் கணக்கை திணிப்பது எதிர்பார்த்த வேகத்தில் நடக்காத காரணத்தை ஆராய அமைக்கப்பட்ட நசிகேத் மூர் கமிட்டி இந்தாண்டின் துவக்கத்தில் சில ஆலோசனைகளை முன்வைத்தது. அந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி, பணம் வழங்கும் வங்கிகள் (payment banks) என்ற புதிய வங்கி முறை ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இப்புதிய வங்கிகள் தங்களுக்கென்று சொந்த கருவூலங்கள் வைத்திருக்கத் தேவையில்லை. நிலையான அலுவலகங்களும் தேவையில்லை. நடமாடும் வங்கிகள். சுமார் 70 ஆயிரம் முகவர்களை நியமித்து ஸ்வைப் கார்டுகள் மூலம் செயல்படும் இந்த வங்கிகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சுயேச்சையான முகவர்கள் மூலம் செயல்படவுள்ள புதிய வகை கந்து வட்டிக் கம்பேனிகளான இவற்றை நடத்த வங்கித் துறையோடு எந்த தொடர்பும் இல்லாத தொலைதொடர்பு நிறுவனங்களும், பெட்ரோலிய நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

மோடி அறிவித்திருக்கும் ஜன் தன் யோஜனா திட்டம் குறைந்தபட்ச பொருளாதாரம் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் சுமார் ஆறு கோடி குடும்பங்களை குறிவைப்பதாகவும், வறுமைக்கோட்டுக்கு மேலே வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கும் சுமார் ஏழரை கோடி குடும்பங்களை பணம் வழங்கும் வங்கிகள் குறிவைப்பதாகவும் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ்.

இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பது மானியங்களை நேரடியாக மக்களின் கையில் ஒப்படைப்பதோடு, ஊழலையும் கட்டுப்படுத்தும் என்கிறார்கள். ஊழலை மட்டுப்படுத்துவோம் என்று அவர்கள் சொல்வதன் பின்னே மானிய வெட்டு என்கிற பெயரில் ரேசன் கடைகளை இழுத்து மூடி பொது விநியோக முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பது உலக வங்கியின் கட்டளை. முதலில் மக்களை வெளிச்சந்தை விலைக்கு பொருட்களை வாங்கப் பழக்குவது, அப்படிப் பழகும் வரை வங்கிக் கணக்குகளில் கொஞ்சம் கூடக் குறைய பணத்தை வரவு வைத்து விட்டு பின் முற்றிலுமாக நிறுத்துவதே அவர்களின் நோக்கம்.

இதை நாங்கள் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் ரேசன் மண்ணெண்ணையை வெளிச்சந்தை விலைக்கு விற்பது, மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது என்கிற திட்டம் முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அரசே நடத்திய இந்த வெள்ளோட்டத்தின் முடிவில் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் குறித்த காலத்தில் மக்கள் மண்ணெண்ணை வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளனர். பலர் விறகு அடுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.

ஒருபக்கம் பொது வினியோக முறையை ஒழித்துக்கட்டுவது; இன்னொரு பக்கம்  இன்னமும் நிதிச் சூதாட்டச் சந்தையில் இணையாமல் தனித்து இயங்கும் கிராமப் பொருளாதாரத்தை நிதிச் சந்தையில் இணைப்பது, ஏழை மக்களின் வியர்வைப் பணத்தை முதலாளிகளின் நிதிச் சூதாட்டக் களத்தில் குவிப்பதே இந்த திட்டங்களின் நோக்கம். வேறு வேறு பெயர்களில் அறிவிக்கப்படும் நிதித் திட்டங்களின் ஒரே இயங்கு திசை இது தான். மோடியென்றாலும் கேடியென்றாலும் வேறுபாடு இல்லையல்லவா அது போல!

–    தமிழரசன்.

பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்

22

ந்து மதம் என்பதில் உள்ள கடவுகளின் எண்ணிக்கை ”எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது,” என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டு இருப்பதும், அத்தனைக் கடவுளுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு – முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை. அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பொருமானமுள்ள நேரங்களும், பலகோடி பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்ககூடிய காரியமல்ல.

பெரியார்இக்கடவுள்களின் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புகொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது.”இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், பிள்ளையார் என்றும், விக்னேஸ்வரன் என்றும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.”

நிற்க. இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தாங்களுடைய எந்த காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக இப்போது அமுலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புகொள்ள கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப்பற்றி சற்று கவனிப்போம்.

ஏனெனில், கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதற் கடவுளைப்பற்றி தெரிந்துகொள்வதுதான் நன்மையானதாகும், தவிர, முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்னமாதிரி என்பதாக தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம்.

ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுளின் கதைகளைப் பற்றி விளக்கப்போவதில் முதல் கடவுள்பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறையாகுமன்றோ! இல்லாவிட்டால், “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும்”. அன்றியும் சமீபத்தில் அக்கடவுளில் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்றும் வரப்போவதால் இந்த சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்.

பிள்ளையார் பிறப்பு

அழுக்கு விநாயகர் சதுர்த்தி
படம் : நன்றி பரிமளராசன் (பேஸ்புக்கில்)

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அது ஒரு ஆண்குழந்தையாகும்படி கீழேபோட்டதும் அது ஆண் குழந்தையாகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து – “நான் குளித்துவிட்டு வரும்வரையில் வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வாயிற்படியில் உட்காரவைத்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருசனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக்கொண்டு இருப்பதால் உள்ளேப் போகக்கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கும் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்த பிள்ளையார் தலையை கீழேத் தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்கு போனதாகவும், பார்வதி சிவனைப்பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கிய குழந்தை வெட்டுண்டதற்காக புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்தது, பார்வதியை திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது, இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் – பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டு கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்று இருக்கையில் ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாக புகுந்து அக்கருசிசுவின் தலையை வெட்டிவிட்டதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகிறது, இது தக்காயகபரணி என்னும் புத்தகத்தில் இருக்கிறதாம்.

இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப்பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளை பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

பிள்ளையார் விசர்ஜன்
பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படி பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்ததால், மற்றக் கடவுள்கள் சங்கதிபற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க.

ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்த தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளை பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புகொள்ள முடியும்? ஆகவே, இந்த கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. இதனை பின்னால் கவனிக்கலாம்)

கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் ”கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும்  “அது ஒரு சக்தி” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களை கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம், சிதம்பரம் கோயிலில் யானை முகம்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாக செய்திருப்பதுடன், இந்த காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது, பல ஆண் – பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகிறார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் குறியில் புகுத்தி அப்பெண்ணை தூக்கிகொண்டு இருப்பது போலவும், அந்த பெண் காலை அகட்டியவாறே அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டு இருக்கின்றது. இவைகளைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்ற ஒரு கடவுள் யுத்தம் செய்ததாகவும்,அந்த யுத்தத்தில் அசுரர்களை எல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவுக்கு அசுரர்கள் (“வல்லபை”) என்னும் அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டு வருவது போல பல லட்ச்சக்கணக்கான அசுரர்கள் வந்துகொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், தனது தும்பிக்கையை அந்த அசுரப் பெண்ணின் பெண்குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் அப்படியே ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாக சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரி காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவைகளை எல்லாம் கடவுள் என்று சொல்லும் ”ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

”எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதிவிட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினம் அவ்வெழுத்துகொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா?அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாக தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்வதனால், இவைகளுக்கு தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்காமல் நின்றுவிட்டதா? யோசித்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும்”, “இப்படி இருக்க வேண்டும்” என்றும், “மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து; கடவுளுக்கு ஆபத்து” என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவென்று அவைகளிடம் “வக்காலத்து” பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றை எல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் ஆராய்ச்சி குறைவதில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாச சங்கங்களை எல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுள்களையும் எந்த சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்லுவோம்.

இனி அடுத்தமுறை அடுத்த கடவுளை பற்றி கவனிப்போம்.

–    தந்தை பெரியார்.
(குடியரசு – கட்டுரை – 26.08.1928)

தேசத்தின் பாதுகாப்பு துப்புரவு தொழிலாளிக்கு இல்லை

0

தெருவில் சென்னை மாநகராட்சியின் அல்லது தனியாருக்குச் சொந்தமான கழிவுநீர் ஏற்றிச்செல்லும் லாரி சென்றால் முகத்தைச் சுழித்துக் கொண்டு மூக்கை மூடிக் கொள்கிறோம். இந்த கழிவுநீர் எல்லாம் எங்கே போகிறது? எப்படி சுத்தப்படுத்தப்படுகிறது? இவற்றை யார் கையாளுகிறார்கள்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

நாம் நமது அழுக்குகளை கழுவி விட்டு, சுத்தபத்தமாக நடமாடுவதை சாத்தியப்படுத்தும் துப்புரவு தொழிலாளர்களின் உயிருக்கு மதிப்பே இல்லாமல் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

வாபாக் சுத்திகரிப்பு நிலையம்
சம்பவம் நடந்த கொடுங்கையூரில் உள்ள, வெளிநாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் மெட்ரோவாட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கூடி நிற்கும் பகுதி மக்கள்.

சென்ற சனிக்கிழமை (ஆகஸ்ட் 30, 2014) சென்னையில் கொடுங்கையூர் அருகில் மணலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு தாக்கியதில் பள்ளர் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் என்ற 21 வயதான தொழிலாளியும், கருமாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயகுமார் என்ற 28 வயதான தொழிலாளியும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களுடன் வேலை செய்த 26 வயதான ராஜூ என்ற தொழிலாளியும், 27 வயதான சத்தியராஜ் என்பவரும் ஸ்டேன்லி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“என்ன சார் இது, டுவென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரியில் இப்படி எல்லாம் நடக்குது. டெக்னாலஜி எங்க போயிட்டிருக்கு, செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பிட்டோம். மோடி நாடு முழுக்க ஒரே நாள்ல கோடிக்கணக்குல வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வைக்கிறார். ஆஃப்டர் ஆல் ஒரு சாக்கடை மேட்டர பாதுகாப்பா கையாள முடியலையே. எல்லாம் கரப்ஷன், இந்த கவர்ன்மென்ட் டிபார்ட்மென்ட் எல்லாம் இப்படித்தான்” என்று நொந்து கொள்ளாதவர் உண்டா? ஆனால் இரண்டு தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய இந்த நிகழ்வு குறித்து பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் விபரங்கள் இதை விட சிக்கலான, மேலும் கொடூரமான சித்திரத்தை அளிக்கின்றன.

மணலியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 8 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் இரண்டு ஆலைகளும், ஒரு நாளைக்கு 11 கோடி லிட்டர் நீரை சுத்திகரிக்கும் கொள்ளளவு கொண்ட ஒரு ஆலையும் உள்ளன. இவற்றில் 11 கோடி லிட்டர் கொள்ளளவிலான ஆலைதான் மிகவும் நவீனமான, தானியங்கி முறையிலான ஆலை என்கின்றனர் மெட்ரோ வாட்டர் பொறியாளர்கள். ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் வால்வுகளை இயக்கி மூடவும் திறக்கவும் வசதி இருக்கின்றது என்கின்றார்கள் அவர்கள்.

அதாவது, மெட்ரோ வாட்டர் நவீன தொழில்நுட்பத்தை வாங்கி சென்னை மாநகரவாசிகளின் கழிவுகளை சுத்தம் செய்ய ஈடுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம், அந்த தொழில்நுட்பத்தை விற்ற அன்னிய நிறுவனத்துக்கும், அதை நிறுவிய ஒப்பந்ததாரருக்கும், ஒப்பந்தத்தை வழங்கிய அதிகாரிக்கும் உடனடி கணிசமான ஆதாயம் கிடைத்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால், சாதாரண உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு அதில் என்ன கிடைக்கிறது?

ஜெயகுமாருக்கும், நந்தகுமாருக்கும் ராஜூக்கும், சத்யராஜூக்கும் அந்த தொழில்நுட்பங்கள் பாதுகாப்பைத் தேடித் தந்து விடவில்லை.

இந்த ஆலையை வடிவமைத்து, நிறுவி 10 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான உரிமத்தை பெற்றிருப்பது விஏ டெக் வாபாக் என்ற நிறுவனம். ஆஸ்திரியா-ஜெர்மனியைச் சேர்ந்த அந்நிறுவனம் சிக்கலான பல கைமாறுதல்கள் மூலம் இப்போது சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்தத் தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்தி சுத்திகரிப்பு தொட்டிகளை பராமரித்து வந்திருக்கிறது. நம் நாட்டு கழிவுநீரை சுத்திகரித்து வெளிவிடுவதற்கு ஜெர்மனியிலிருந்து துரைமார் வர வேண்டியிருக்கிறது, அவர்களோ உள்ளூர் தேசி கூலிகளை ஒப்பந்த முறையில் குறைந்த கூலிக்கு நியமித்து தமது லாபத்தை பெருக்கிக் கொள்கின்றனர். ஜெர்மன் தொழில்நுட்பம் கூட நம் நாட்டு தொழிலாளர் உயிரை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதில்லை; ஜெர்மன் முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்கும் வகையில்தான் வருகிறது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பராமரிப்பு வேலைக்கு நியமிக்கப்பட்ட 6 தொழிலாளிகள் தமது வேலையை தொடங்கியிருக்கின்றனர். சென்னை மாநகரத்தின் லட்சக்கணக்கான மக்கள் தமது படுக்கைகளில் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் நேரம் இந்தத் தொழிலாளர்களுக்கு வயிற்றுப்பாட்டுக்கான வேலை ஆரம்பிக்கும் நேரமாக இருந்திருக்கிறது.

12 அடி ஆழமான கழிவுநீர் தொட்டியில் நந்தகுமார் முதலில் இறங்கியிருக்கிறார். கழிவு நீர் தொட்டியில் விஷவாயு கசிந்து நிரம்பியிருந்ததால் அவர் உடனடியாக மயக்கமாகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து உள்ளே இறங்கிய ராஜூ, சத்யராஜ் இருவரும் மயக்கமடைந்திருக்கின்றனர். மேலே நின்றிருந்த ஜெயகுமார் நிலைமையை உணர்ந்து கொண்டிருக்கிறார். அவர் உயிரைப் பிடித்துக் கொண்டு உதவி கேட்டு இடத்தை விட்டு ஓடி விடவில்லை. தனது சக தொழிலாளர்களை காப்பாற்றுவதற்காக உடனடியாக தானும் தொட்டிக்குள் இறங்கியிருக்கிறார். அவர் தொட்டியில் இறங்கி சத்யராஜ், ராஜூ இருவரையும் மேலே கொண்டு வந்திருக்கிறார். மூன்றாவதாக நநதகுமாரை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கும் போது ஜெயகுமாரும் வாயு தாக்கி மயக்கமடைந்திருக்கிறார்.

உதவிக்கு அழைக்கப்பட்ட தீயணைப்பு மீட்புப் படையினர் இருவரையும் மீட்டு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. சுத்திகரிப்பு தொட்டிக்குள் இறங்குவதற்கு முன்பு பாதுகாப்புப் பட்டையை அணிந்து கொண்டு இறங்கியிருந்தால், நிலைமை மோசமானவுடன் மேலே நிற்கும் தொழிலாளிகள் அவர்களை உடனடியாக இழுத்து வெளியில் கொண்டு வந்திருக்க முடியும் என்கிறார் ஒரு பொறியாளர். சென்ற ஆண்டு கோட்டூர்புரம் சுத்திகரிப்பு ஆலையில் சென்ற ஆண்டு இதே போன்ற விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ வாட்டர் என்ன சொல்கிறது?

நவீன எந்திரங்கள் வாங்கி, நவீன சுத்திகரிப்பு ஆலை நிறுவ பல கோடி ரூபாய் செலவழித்திருக்கும் மெட்ரோ வாட்டர் வாயு கசிவை உணர்ந்து தகவல் தெரிவிக்க தேவையாட உபகரணத்தை பொருத்தி தொழிலாளர்களை எச்சரிக்கும் ஏற்பாட்டை நாங்கள் செய்யவில்லை.

ஆலையின் பராமரிப்பை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் விட்டு பாதுகாப்பற்ற சூழலில் வேலை தொழிலாளர்களை வேலை செய்யும் நிலையை ஏற்படுத்தியிருந்தோம்.

தங்கள் சார்பில் பாதுகாப்பு வசதிகள் கோரி வாதாடவோ, பணி நிரந்தரம் செய்யவோ ஒரு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

எங்களுடைய தவறான கொள்கைகளால், தவறான முடிவுகளால் இரண்டு தொழிலாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இப்படி எல்லாம் ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள். “விபத்து நடந்ததற்கான காரணத்தை விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கின்றனர். காவல்துறை, வளாக பொறுப்பாளர் பாக்யராஜ் மற்றும் ஆலை மேலாளர் ஷ்யாம் ஆகியோர் மீது ‘கவனக்குறைவால் மரணம் விளைவித்தனர்’ என்று வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியிருக்கிறது.

மெட்ரோ வாட்டரின் விசாரணை முடிவுகள் அதற்கேற்ற நேரத்தில் வந்து சேரும், அதன் அடிப்படையில், பன்னாட்டு முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கல்லாவை நிறைக்கும் வகையில் வேறு ஏதாவது திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படலாம்.

கொல்லப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச இழப்பீடு பெறுவது கூட பெரும் போராட்டமாக இருக்கும். மெட்ரோ வாட்டர் அவர்களை வேலைக்கு அமர்த்தியது தனியார் நிறுவனம் என்று தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முற்படும். தனியார் நிறுவனத்துக்கு இன்றைய ‘நவீன’, ‘வளர்ந்து வரும் வல்லரசான” இந்திய சட்டங்களின் படி எந்தப் பொறுப்பும் இருக்காது. லாபத்தை அள்ளிக் கொண்டு ஜெர்மனிக்கு கொண்டு போவது மட்டும்தான் அவர்களது பங்குதாரர்களுக்கு அவர்களது பொறுப்பு.

எங்கும் தனியார் மயம், எதிலும் உலகமயம், எதற்கும் தாராளமயம் என்று தனியார் லாபவெறியை தாராளமாக அனுமதிக்கும் உலகளாவிய முதலாளித்துவ பயங்கரவாதத்தின் இன்னொரு உயிர்ப்பலி ஜெயகுமார், நந்தகுமார் ஆகியோரின் மரணம்.

இதற்கு காரணமான ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், முதலாளிகளும் என்ன தண்டனை பெறப் போகிறார்கள்?

மேலும் படிக்க

கோலார் சுரங்க வரலாறு !

6

கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 3

”சுரங்கத்த மூடினப்போ எனுக்கு மொத்தம் இருவத்தஞ்சி வருசம் சர்வீசு”

“சுரங்கம் மூடப்பட்டது உங்களுக்கு இன்னும் நினைவில் இருக்கிறதா?”

தங்க பிஸ்கட்
“வாராவாரம் ஊரிகான் ஸ்டேசன்ல ட்ரெயின் ஏறும் போதும் இறங்கும் போதும் பாழடைஞ்சி போன பழைய கட்டிடங்கள பார்க்கும் போதும்.. அந்த ஆளுகிட்ட இப்ப கைநீட்டி சம்பளம் வாங்கும் போதும்.. அப்டியே செத்துறலாம்னு தோணும் சார்.”

“நல்லா ஞாபகம் இருக்கு சார். 2001-வது வருசம் மார்ச் 1-ம் தேதி காலைல நாங்கெல்லாம் வழக்கம் போல வேலைக்குப் போனோம். எங்கள கேட்லயே தடுத்து நிப்பாட்டிட்டாங்க. என்ன ஏதுன்னு புரியலை. வெளியே நின்னு பாத்தோம். கேட் திறக்கறா மாதிரி தெரியலை. எல்லாரும் கொஞ்ச நேரத்துல கூச்சல் போட ஆரம்பிச்சோம். சங்க தலைவருங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினோம்”

“அப்புறம் என்ன நடந்தது?”

“ரொம்ப நேரம் கழிச்சி ஆபிசருங்க வந்தாங்க. சுரங்கம் குளோஸ்னு சொல்லிட்டு எல்லாரையும் ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. சங்கத் தலைவருங்க எழுதிக் கொடுக்க சொல்லி கேட்டாங்க. அதுக்கு ஆபீசருங்க, இன்னும் உத்தரவு வரலைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க”

“சுரங்கம் மூடப்போவது பற்றி உங்களுக்கு தெரியவே தெரியாதா?”

“ரொம்ப வருசமா இதோ மூடுவோம், இப்ப மூடுவோம்னு சொல்லினே இருந்தாங்களே ஒழிய மூடலை. எப்ப மூடுவோம்னு தெளிவா சொல்லவும் இல்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச வருசம் ஓடும்னு தான் நாங்க நம்பிட்டு இருந்தோம்”

”அப்புறம் என்ன செய்தீங்க?”

“என்னா செய்யிறது…போராடிப் பார்த்தோம். ஆனா ஒன்னும் நடக்கலை,  பத்து மாசம் வரைக்கும் இப்படியே தெனைக்கும் போயி கையெழுத்து போடறதும், வீட்டுக்கு வார்றதுமா போச்சி. பத்து மாசம் கழிச்சி தான் லாக் அவுட் பத்தி அறிவிப்பே வந்திச்சி..”

“தொழிற்சங்கமெல்லாம்….”

“திருட்டு …….. நாயிங்க சார். எல்லா நாயும் அன்னிக்கு எங்க முன்னாடி சூடா பேசுனானுங்க.. அப்புறம் தான் தெரிஞ்சது எல்லாரும் மேனேஜ்மெண்டு கிட்ட காசு வாங்கிட்டு எங்க கழுத்த அறுத்த விசயம். தோ.. நான் இப்ப பெங்களூர்ல செக்கூரிட்டி வேலை பார்க்கிறனே அப்பார்ட்மெண்டு.. இதுக்கு கூட ஒரு தொழிற்சங்க தலைவரு தான் சார் ஓனரு. தோ.. இங்கெ ஊரிகான்ல தான் அவனும் இருக்கான். இங்க பாத்தா பிச்சக்காரன் மாதிரி சுத்துவான். அந்த ஆறுவிளக்கு ஏரியாவுக்கு அந்தாண்ட போயிட்டான்னா பெரிய கார்ல தான் போறது வர்றது எல்லாம்.. அவனும் நம்பள மாதிரி தொழிலாளின்னு நம்பி தலைவரா கொண்டாந்தோம்.. ப்ச்சு.. எல்லாம் போச்சி சார். இனிமே பேசி இன்னா ஆவப்போவுது?”

”…..”

“வாராவாரம் ஊரிகான் ஸ்டேசன்ல ட்ரெயின் ஏறும் போதும் இறங்கும் போதும் பாழடைஞ்சி போன பழைய கட்டிடங்கள பார்க்கும் போதும்.. அந்த ஆளுகிட்ட இப்ப கைநீட்டி சம்பளம் வாங்கும் போதும்.. அப்டியே செத்துறலாம்னு தோணும் சார். ஆனா.. எனக்கு ரெண்டுமே பொட்ட புள்ளிங்க சார்.. என்னா செய்யறது. அந்த ஆண்டவன் தான் சார் இவனுங்களுக்கு கூலி கொடுக்கனும்”

கோலார் தங்க வயலில் தங்கம் எப்போதிருந்து கிடைக்கத் துவங்கியது என்பது பற்றி மாறுபட்ட தகவல்கள் சொல்லப்படுகின்றன. கி.பி 77-ல் இப்பகுதியில் பயணம் செய்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் ப்ளைனி என்பவர் இங்கே தங்கம் கிடைத்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். வட இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த ஏறக்குறைய அதே காலகட்டத்தைச் சேர்ந்த தங்க நாணயங்களை அசுத்தப் பரிசோதனைக்கு (impurity check) உட்படுத்திய போது அவை கோலாரில் இருந்து வடக்கே சென்றிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சோழர் காலத்திலும், திப்பு சுல்தானின் காலத்திலும் கோலார் பகுதியில் தங்கம் எடுக்கப்பட்டது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.

1880-ல் தான் முதன் முறையாக ஜான் டெய்லர் நிறுவனத்தாரால் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு தங்கம் வெட்டியெடுக்கும் பணி துவங்கியது. அன்று துவங்கி சுரங்கம் மூடப்பட்ட நாள் வரை சுமார் நூற்றி இருபது ஆண்டுகளில் கோலார் தங்க வயலில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 800 டன். இது தற்போது இந்தியா ஒருவருடத்தில் நுகரும் ஒட்டுமொத்த தங்கத்தின் அளவை விட குறைவானது!

எழுதுபொருள் கடை
கோலார் தங்க வயலின் வரலாறு சுரங்கத்தோடும் சுரங்கத்தின் வரலாறு தொழிலாளர்களோடும் பிரித்தறிய முடியாதபடி மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது.

கோலார் தங்க வயலின் வரலாறு சுரங்கத்தோடும் சுரங்கத்தின் வரலாறு தொழிலாளர்களோடும் பிரித்தறிய முடியாதபடி மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது. இதில் எது ஒன்றையும் தனியே பிரித்து புரிந்து கொள்ளவே முடியாது. கோலாரின் மக்கள் இன்றைக்கு வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் பற்றியும், அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொள்ள சுரங்கம் மூடப்பட்டதைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுரங்கம் மூடப்பட்ட பின்னணியில் இருந்து துவங்குவோம். வாருங்கள், துள்ளத் துடிக்க நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை ஒன்றைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள் – இந்தக் கதை எங்கோ யாருக்கோ நடந்தது மாத்திரமல்ல; நம்மைச் சுற்றிலும் நாமே அறியாமல் நமக்கோ, நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நித்தமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இன்றைக்கு எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்திற்கும் என்ன நடந்து வருகிறதோ அதே தான் கோலார் தங்க வயலுக்கும் நேர்ந்தது. இது ஒரே நாளில் நடந்த கொலை அல்ல; ஹிட்லரின் ஜெர்மனியில் இறுக்கமான அறைகளுக்குள் யூதர்களைப் பூட்டி மெல்ல மெல்ல உள்ளே புகையை நிரப்பி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மூச்சுத் திணற வைத்து கொன்ற அதே பாணி தான். 47-ல் ’சுதந்திரம்’ வாங்கிய உடனேயே கோலார் தங்க வயலுக்கு நாள் குறித்தாகி விட்டது.

வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்ததே வியாபாரத்தின் மூலமும் அரசியல் அதிகாரத்தின் மூலமும் இங்குள்ள வளங்களைச் சுரண்டிச் செல்வதற்குத் தான் என்பது நாம் ஏழாம் வகுப்பில் படித்த வரலாறு சொல்கிறது. ஆனால், சிறுவர்களுக்குத் தெரிந்த இந்த எளிய உண்மை அன்றைய தலைவர்களுக்குத் ‘தெரியாமல்’ போய் விட்டது. 47-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும் வெள்ளையர்களின் வியாபார, வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது சுதந்திரத்தை இழக்கவில்லை. கோலார் தங்க வயலை நடத்தி வந்த ஜான் டெய்லர் கம்பேனியார் 1956-ம் ஆண்டு வரை எந்த சிக்கலும் இன்றி தங்கத்தைச் சுரண்டியே வந்தனர்.

1956-ல் ஜான் டெய்லர் நிறுவனம் நிர்வாகப் பொறுப்பை மைசூர் அரசுக்கு கைமாற்றிக் கொடுத்த பின்னரும், வெள்ளைக்காரன் மனம் புண்பட்டு விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவன் காலில் விழுந்து “பொறியியல் ஆலோசகர்” என்ற பொறுப்பு வழங்கப்பட்டு 1971-ம்  ஆண்டு வரை நிர்வாகத்தில் அமர்த்தப்பட்டனர்.

ஜான் டெய்லர்
ஜான் டெய்லரும் ‘குடும்பமும்’

ஜான் டெய்லரின் கையிலிருந்து மைசூர் அரசாங்கத்துக்கு கைமாற்றப்பட்ட சுரங்கம் ஆறாண்டுகளுக்குப் பின் மத்திய அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது, பின்  71-ம் ஆண்டு மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துறையின் கீழும், பின் 72-ம் ஆண்டு பாரத தங்க சுரங்க நிறுவனம் என்ற பொதுத்துறையின் கீழும் செல்கிறது.

ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம். அந்த அதிசயத்தை சுரங்க நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் சாதித்துக் காட்டியது.

1956-ல் இருந்து 62-ம் ஆண்டு வரை சுரங்கத்தில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் அளவிடப்பட்டது – ஆனால், இதிலிருந்து சல்லிக் காசு கூட சுரங்கத்தைப் பராமரிக்க திருப்பி விடப்படவில்லை. ஜான் டெய்லரின் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் தங்க படிமங்கள் அதிகமாக உள்ள பல பகுதிகளை முறையான காரணங்கள் ஏதும் குறிப்பிடாமல் முத்திரையிட்டு மூடிச் (Sealed off) சென்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நிர்வாகத்திற்கு வரும் இந்திய அதிகார வர்க்கமோ, அவை முத்திரையிடப்பட்டதற்கு என்ன காரணம் என்று ஆராயவும் இல்லை அதற்கான முயற்சிகளையும் எடுக்கவில்லை.

அடுத்ததாக, கோலாரின் மேற்கே 40 கிமி தொலையில் இருந்து கோலார், குப்பம், தர்மபுரி வழியாக சேலம் வரை பூமிக்கடியில் தங்கப் படிமங்கள் வேர் போல் பரவிச் செல்வதை ஆங்கிலேய சர்வேயர்கள் ஆராய்ந்து மதிப்பிட்டு வைத்திருந்தனர். மேலும், கோலாரைச் சுற்றிலும் உள்ள  பகுதிகளில் குறிப்பாக எந்தெந்த இடங்களில் எவ்வளவு அடர்த்திக்கு தங்க படிமங்கள் இருக்கின்றன என்பது குறித்தும் ஓரளவுக்கு ஆராய்ந்து சர்வே ரிப்போர்ட்டுகளாக தயாரித்து வைத்திருந்தனர்.

பொதுத்துறை
சுதந்திரத்திற்கு பின் பொதுத்துறை என்ற பெயரில் படிப்படியாக சுரண்டப்பட்ட கேஜிஎஃப்

ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நிலத்தடி சர்வே பழைய வகைப்பட்டது என்பதோடு அவர்கள் எடுத்திருந்த சர்வே பரந்து பட்ட அளவில் பொதுவானதாகவே இருந்தது. எந்தெந்த இடத்தில் படிமங்களின் அடர்த்தி அதிகம் அதை அடைவதற்கான வழிவகைகள் என்ற குறிப்பான அம்சங்கள் பருண்மையான அளவில் நவீன விஞ்ஞான முறைகளின் அடிப்படையில் செய்யப்படவில்லை. கோலார் தங்க வயல் பகுதியில் மட்டும் ஓரளவுக்கு விவரங்களை சேகரித்து சர்வே ரிப்போர்ட்டுகளாக வைத்திருந்தனர்.

’சுதந்திரத்திற்குப்’ பின் அதிகாரத்திற்கு வந்த இந்திய அதிகாரிகளோ, நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி மீண்டும் சர்வே எடுக்கவும் இல்லை, ஆங்கிலேய அதிகாரிகள் சர்வே செய்யாத இடங்களை சர்வே செய்யவும் இல்லை. கனிம வளங்களை பூமியிலிருந்து வெட்டியெடுக்கும் சுரங்கத் தொழிலின் அடிப்படையே அறிவியல் ரீதியிலான சர்வேக்கள் தான். இது இந்திய நிர்வாகத்தின் கீழ் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டாக படிப்படியாக ஒரு டன் மூலப் பொருளில் இருந்து சுத்திகரிக்கப்படும் தங்கத்தின் அளவு குறைந்து கொண்டும் நட்டத்தின் அளவு கூடிக் கொண்டும் வந்துள்ளது. சுரங்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து பத்தே ஆண்டில் கொள்கை அளவில் ’நட்டத்தை’ காரணம் காட்டி மூடி விடுவது என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்து விட்டது.

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து சுரங்கத்தை மூடுவது குறித்த விவாதங்கள் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரிடையே துவங்கி விட்டது. இந்த தகவல் கீழ்மட்ட தொழிலாளிகளை எட்டிய போது அவர்கள் கொந்தளித்து எழுந்தனர். தங்களுக்கு வாழ்வளித்த சுரங்கம் தங்கள் கண் முன்னே கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அனல் கக்கும் போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினர்.

கோலார் நகரமே சுரங்கத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான். சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் ஏதாவது ஒரு வகையில் சுரங்கத்தோடு நெருக்கமான இணைப்பைக் கொண்டது. அவர்களது படியளக்கும் ஒரே மூலம் என்ற வகையிலும் நகரத்தின் பெரும்பான்மையினரான தலித்துகளின் சமூக இழிவைத் துடைக்க கைகொடுத்தது என்ற வகையிலும் அந்த மக்களுக்கு சுரங்கத்தோடு உணர்வு ரீதியிலான பிணைப்பு இருந்தது.

மக்களின் கோபாவேசத்தைத் தணிக்க மத்திய அரசு வழக்கம் போல மூன்று வெவ்வேறு கமிட்டிகளை அமர்த்தியது. மத்திய சுரங்கத் துறை உயரதிகாரி கே.எஸ்.ஆர் சாரி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும், சுசீலா கோபாலன் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும், ராமதாஸ் அகர்வால் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும் 1985-லிருந்து தொண்ணூறுகளின் இறுதிக் கட்டம் வரையில் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தக் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. மத்திய அரசைப் பொறுத்த வரையில் இந்தக் கமிட்டிகள் என்பவை சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியங்கள்.

சுரங்கத்தில் நட்டம் ஏற்படுத்திய காரணிகளையும், அவற்றைக் களைந்து கொள்ளும் வழிமுறைகளையும் ஆராய ஏற்படுத்தப்பட்ட இக்கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாராம்சம் – அதிகார வர்க்க நிர்வாக சீர்கேடு.

மறுகாலனியாக்கம்
1990-களுக்குப் பிறகு சுரங்க வேலைகளை இழுத்து மூடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டு கொடுக்க திட்டம்…

சாரி கமிட்டியின் பரிந்துரைகளின் படி, கோலாரில் அறவிடப்படும் தங்கம் வெளிச் சந்தையின் விலைக்கு கொள்முதல் செய்யாமல் லண்டன் உலோகச் சந்தையின் மதிப்பில் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு பண நோட்டுகள் அச்சிடப்படுவதற்கான பின்புல ரிசர்வாக பயன்படுத்தப்படுவது சுரங்கத்தின் நட்டத்திற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் கோலாரில் இருந்து சில பத்து கிலோமீட்டர்கள் தொலைவில் கருநாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டி தங்க சுரங்கத்திலிருந்து அறவிடப்படும் தங்கமோ வெளிச்சந்தை விலையில் கொள்முதல் செய்யப்பட்டு லாபத்தில் இயங்கி வந்ததையும் சாரி சுட்டிக்  காட்டியிருக்கிறார்.

மேலும், ஜான் டெய்லர் சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய பழைய தொழில்நுட்பங்களையே இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தங்க மகசூலின் அளவு அதிகரிக்காமல், சையனைடு கழிவுகளில் அதிக தங்கம் கலந்து வெளியேறுவதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். பின்னர் அமைக்கப்பட்ட இரண்டு கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாரமும் இவைகளே. இந்த மூன்று கமிட்டிகளின் பரிந்துரை அறிக்கைகளின் காகிதங்களையும் வடிவாக வெட்டிய அதிகார வர்க்கத்தினர், அவற்றை தில்லி சுரங்கத் துறை அலுவலகத்தின் கழிவறையில் மலம் துடைப்பதற்காக தொங்க விட்டனர்.

கழிப்பறையிலிருந்து வெளியேறிய கையோடு அதிகாரிகள் செய்த அடுத்த வேலை, சுரங்கத்தை மூடுவதற்கான கோப்புகளை மத்திய தொழிற்சாலைகள் மற்றும் நிதி விவகாரங்கள் மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு (BIFR – Board for Industrial and Financial Reconstruction) அனுப்பி வைத்தது தான். மேற்படி ஆணையம், தொழில் தகறாறு சட்டத்தின் கீழ் சுரங்கத்தை மூடுவதற்கான நிர்வாக ரீதியிலான ஈமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை காலம் கடத்தாமல் உடனடியாக செய்யத் துவங்கியது.

இதற்கிடையே, மத்திய அரசால் சுரங்கத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு நியமித்து அனுப்பப்பட்ட அதிகாரிகளும் தங்கள் எஜமானர்களின் விருப்பத்தை குறிப்பாலறிந்து செயலாற்றத் துவங்கினர்.

பூமியைக் குடைந்து தங்கத்தைத் தேடி முன்னேறும் போது நீரோட்டப் பகுதிகளையும் கடந்து செல்ல வேண்டும். இதன் காரணமாக சுரங்கத்தின் உள்ளே பல இடங்களில் நீர்க் கசிவு இருக்கும். இதைச் சமாளிக்க சிறு சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும். இந்த அணைகள் தொடர்ச்சியாகவும் முறையாகவும் பராமரிக்கப்பட வேண்டும். என்பதுகளில் இருந்தே நிர்வாகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் இந்தப் பணியைத் திட்டமிட்டுப் புறக்கணித்தனர். 94 – 96 காலகட்டத்தில் பல அணைகள் சதித்தனமாக உடைக்கப்பட்டன.

இதன் காரணமாக சுரங்கத்தின் ஆழமான பகுதிகள் நீரில் மூழ்கி விலை மதிப்பு வாய்ந்த பல கருவிகள் மீட்கப் படவியலாத படிக்கு நிரந்தரமாக மூழ்கிப் போயின. வேலை செய்யத் தகுந்த ஆழத்தின் அளவும் படிப்படியாக சுருங்கி ஒரு கட்டத்தில் 2500 அடிகளுக்கு மேல் தொழிலாளர்களால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

கேஜிஎப் தொழிலாளர்கள்
தண்ணீரிலிருந்து தரையில் எடுத்து வீசப்பட்ட மீன்களைப் போல் சுரங்கத்திலிருந்து பிய்த்தெறியப்பட்ட தொழிலாளர்கள் தவித்துப் போனார்கள்.

சுரங்கத்தை உள்ளிருந்தே கருவருக்கும் வேலை இதோடு நிற்கவில்லை. சுரங்க நிர்வாகத்தின் உயிராதாரமான சர்வே ரிப்போர்ட்டுகள் படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டன. பெரும் புகழும் பழமையும் வாய்ந்த சேம்பியன் ரீஃப் சுரங்கத்தின் பதிவேடுகளும், சர்வே வரைபடங்களும் கைவிடப்பட்ட சர்குலர் ஷாஃப்ட் சுரங்கத்தினுள் தேங்கியிருந்த நீரில் வீசப்பட்டு அழிக்கப்பட்டன. கோலார் தங்க வயலில் இருந்த இன்னொரு பெரிய சுரங்கமான மைசூர் சுரங்கத்தின் பதிவேடுகள் ஆவணக் காப்பகத்தோடு சேர்த்து மொத்தமாக கொளுத்தப்பட்டன.  இவையணைத்தும் மக்கள் காண அவர்கள் கண் முன்னே போலீசின் துணையோடும், அதிகாரிகளின் முன்னிலையிலும் நிகழ்ந்தேறின.

இதற்கிடையே மீள்கட்டமைப்பு ஆணையம் சுரங்கத்தை லாபகரமாக நடத்தும் மாற்று வழிகள் இருப்பின் அவற்றை அறிக்கையாக சமர்ப்பிக்க சுரங்க நிர்வாகத்தையும் தொழிலாளர் தரப்பில் தொழிற்சங்கங்களையும் கோரியது. சுரங்கத்தை மூடுவது என்று முடிவெடுத்த பின், இந்தக் கோரிக்கையே கூட வெறும் சம்பிரதாயமான நடவடிக்கை தான் என்றாலும், அன்றைக்கு சுரங்கத் தொழிலாளர்களிடையே செயல்பட்டு தொழிற்சங்கங்கள் தமக்குள் மோதிக் கொண்டு மீள்கட்டமைப்பு ஆணையத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்காமல் விட்டன.

தொழிலாளர்கள் தரப்பில் இருந்து பதில் இல்லை என்பதையே சுரங்கத்தை மூடுவதற்கு போதுமான காரணமாக காட்டி தொழில் தகராறு சட்டத்தின் கீழ் ஈமக் கிரியைகளைத் துவக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடியது மீள்கட்டமைப்பு ஆணையம்.

சுரங்க நிர்வாகமும் கைவிட்டு தொழிற்சங்கங்களும் துரோகமிழைத்து விட்ட நிலையில் தொண்ணூறுகளின் இறுதியில் சுரங்கம் முதுகில் குத்தப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டது.  எந்த நேரமும் சுரங்கம் மூடப்படலாம், எந்த நேரமும் தொழிலாளிகள் தெருவில் வீசியெறியப்படலாம் என்கிற நிலையில் தொழிலாளிகள் தங்கள் உயிருக்கு நிகரான சுரங்கத்தைக் காப்பதற்கான இறுதி முயற்சி ஒன்றை எடுத்தனர்.

இரண்டாயிரமாவது ஆண்டின் துவக்க மாதங்களில் மாதாந்திர சுத்திகரிக்கப் பட்ட தங்கத்தின் உற்பத்தி அளவு 45 கிலோவாக இருந்த நிலையில் தொழிலாளர்கள் தங்களால் முடிந்த அசுர உழைப்பையே இறுதி ஆயுதமாக ஏந்திக் களம் புகுந்தனர்.  தங்க ரிசர்வ் குறைந்ததால் உற்பத்தி குறைந்தது; உற்பத்தி குறைந்ததால் லாபமில்லை; லாபமில்லாததால் மூட வேண்டும் என்கிற பச்சைப் பொய்யை தங்கள் உழைப்பால் தவிடு பொடியாக்கினர் தொழிலாளிகள். அடுத்த சில மாதங்களில் மாதாந்திரம் ஐந்து கிலோ என்கிற வகையில் உற்பத்தியை பெருக்கி அதிகபட்சமாக 86 கிலோ என்கிற அளவை எட்டிப் பிடித்தனர்.

இத்தனைக்கும் படிப்படியாக சுரங்கங்கள் மூடப்பட்டு செயல்பட்டில் இருந்த சுரங்கத்தின் வேலைத் தளமும் 2500 அடி ஆழமாக சுருங்கிப் போய், நிர்வாகத்தின் எந்த ஒத்துழைப்பும் இல்லாத நிலையிலேயே இதைச் சாதித்தனர் தொழிலாளிகள்.  கிட்டத்தட்ட செத்த மாட்டில் பால் கறந்த சாதனை அது. துரோக அரசியலின் சூது வாது அறியாத அந்த எளிய அப்பாவிகளால் தங்கள் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி எழுதிக் காட்டிய உன்னதமான வீரகாவியம் அந்த 86 கிலோ தங்க உற்பத்தி.

சுரங்கத்தை நட்ட கணக்கு காட்டி மூடி விட்டு சர்வதேச டெண்டர் என்கிற பெயரில் அதைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்தே தீருவது என்று ஏற்கனவே ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் முடிவு செய்து விட்ட பின் தொழிலாளிகளின் உழைப்பையும் அது உணர்த்திய செய்தியையும் மலத் தொட்டியில் போட்டு அமிழ்த்தினர் மக்கள் விரோதிகள். தங்கள் கையாட்களாக சுரங்க நிர்வாகத்தில் அமர்த்தி வைத்திருந்த அதிகாரிகளை வைத்து கடைசியாக பிழைத்தெழ சுரங்கம் காட்டிய உயிர்மூச்சை திட்டமிட்டு நிறுத்தினர்.

கேஜிஎப் தொழிலாளர்கள்
பெருமழை பொழிந்து புற்றில் வெள்ளம் சூழப் போவதை உணர்ந்த நச்சரவங்கள் பாதுகாப்பாக நீங்கிச் செல்ல, பாடுபட்டு புற்றைக் கட்டி உண்டாக்கிய எறும்புகளோ வெள்ளத்தில் மூழ்கிச் செத்தன.

பணியில் இருந்த தொழிலாளிகளுக்கு வெடி மருந்து சப்ளையை முதலில் நிறுத்தி வைத்தனர்; தொழிலாளிகளோ ஏற்கனவே உடைக்கப்பட்ட பாறைப் படிவங்களைச் சேகரித்து உற்பத்தி சரியாமல் பார்த்துக் கொண்டனர். பணிக்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்களை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுத்தனர்; இருப்பதைக் வைத்து சமாளித்துக் கொண்டு தொழிலாளர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். கடைசி அஸ்திரமாக செயற்கையாக மின் தடைகளை உருவாக்கினர் – உடலின் ஒவ்வொரு பாகமாக வெட்டப்பட்டு வந்த போதும் தங்கியிருந்த உயிர், இறுதியில் தலையை வெட்டிய பின் பிரிந்தது, உற்பத்தி குலைந்து போனது.

அதிகார வர்க்கம் திட்டமிட்டு சதித்தனமாக வீழ்த்திய உற்பத்தியையே நட்டத்திற்கான காரணமாக மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு காட்டிய சுரங்க நிர்வாகம், ஆலை மூடலுக்கு உத்தரவிடக் கோரி பரிந்துரையும் செய்தது. இறுதியில் ஆளும் வர்க்க வஞ்சக சூழ்ச்சிகள் வென்று தொழிலாளிகள் வீழ்த்தப்பட்டனர்; சுரங்கம் மூடப்பட்டது.

பெருமழை பொழிந்து புற்றில் வெள்ளம் சூழப் போவதை உணர்ந்த நச்சரவங்கள் பாதுகாப்பாக நீங்கிச் செல்ல, பாடுபட்டு புற்றைக் கட்டி உண்டாக்கிய எறும்புகளோ வெள்ளத்தில் மூழ்கிச் செத்தன. சுரங்கத்தோடு எந்த விதமான உணர்வு ரீதியான பிணைப்பும் இல்லாமல், தில்லியிலிருந்து நியமிக்கப்பட்டு நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் அனைவரும் முன்கூட்டியே விருப்ப ஓய்வை அறிவித்து கணிசமான தொகையுடன் வெளியேறியிருந்தனர். சுரங்கத்தையே நம்பிப் பிழைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கையோ சொல்லொணாத் துயரத்தில் விழுந்தது.

தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிக்காமலேயே 2001-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சுரங்கம் மூடப்பட்டது. வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக வேலை செய்த இடத்துக்குள் இனிமேல் தங்களால் நுழைய முடியாது என்கிற யதார்த்தத்தை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லாத நிலையில் வேறு எந்த வேலைகளுக்கும் செல்லாமல் மூடப்பட்ட சுரங்கத்தின் வாயிலை கைவிடப்பட்ட குழந்தைகள் போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருந்தனர்.

சுரங்கம் மூடப்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2008-ம் ஆண்டு கருநாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பு வரும் வரையில் அவர்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. எண்பதுகளின் துவக்கத்திலிருந்தே படிப்படியாக சுரங்கம் மூடப்பட்டும் பணிப் பரப்பளவு சுருக்கப்பட்டும் வந்ததன் விளைவாக முப்பதாயிரத்துக்கும் மேல் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மூடப்பட்ட போது வெறும் மூவாயிரமாக சுருங்கியிருந்தது.

Historical_Photos_KGF_Mine_015தொழிலாளர்களில் பலர் தங்களது நடுத்தர வயதைக் கடந்திருந்தனர். சுரங்கப் பணிகளைத் தவிற வேறு எந்த வேலையும் தெரியாத அவர்கள் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திகைப்பில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் அந்த ஏழாண்டுகள் அனுபவித்த துன்பம் என்பது இது வரை யாருமே எழுதாத, இனிமேலும் எவராலும் எழுதப்பட முடியாத, நாம் யாரும் கண்டும் கேட்டுமிராத கொடும் துயரங்கள்…

நாங்கள் வேலு என்ற தொழிலாளியிடம் பேசிக் கொண்டிருந்தோம்

“வேலை போச்சி.. யார்ட்ட போயி என்னா வேலை கேட்கறதுன்னே தெரியலை அப்டியே சுத்தினு இருந்தோம்..”

“நீங்க எப்படி வேற வேலைக்கு முயற்சி செய்தீங்க”

“இன்னா முயற்சி செய்யிறது? யார்னா பெங்களூருக்கு போனா சொல்லி அனுப்பிட்டு காத்திருப்போம். எனக்கெல்லாம் பெங்களூர்ல எவனையும் தெரியாது வேறெ..”

”சாப்பாட்டுக்கு…?

”ஊட்ல உலை கொதிச்சி வாரக் கணக்குல ஆகிருக்கும். அக்கம் பக்கத்துல கைநீட்டி எப்படியோ புள்ளைங்கள பட்டினி போடாம காப்பாத்தினோம்… வேலைக்கு சொல்லி வச்ச எவனாவது வந்து எதுனா நல்ல சேதி சொல்லுவானான்னு கூரைய பாத்துனே குந்தினு இருப்போம்”

“அதுவரைக்கு எப்படி சமாளிச்சீங்க?”

“ஏதோ கெடச்ச வேலை.. கெடச்ச கூலி..”

தண்ணீரிலிருந்து தரையில் எடுத்து வீசப்பட்ட மீன்களைப் போல் சுரங்கத்திலிருந்து பிய்த்தெறியப்பட்ட தொழிலாளர்கள் தவித்துப் போனார்கள்.

இனி தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து, அந்த மக்களின் தற்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்கால நம்பிக்கைகள் குறித்தும்…

(தொடரும்)

கருப்பு வெள்ளை புகைப்படங்கள் 1970-களுக்கு முந்தைய சுரங்க வரலாற்றோடு தொடர்புடையவை.  நன்றி M. DEVA KUMAR

முந்தைய பகுதிகள்

  1. கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
  2. உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

ஐடிபிஐ வங்கிப் பணம் மல்லையாவின் பாக்கெட் மணியா ?

1

கிங்பிஷர் நிறுவனத்திற்கு ரூ 950 கோடி கடன் கொடுத்ததில் ஊழல் நடந்திருப்பது தொடர்பாக ஐடிபிஐ வங்கிக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் மல்லையா
மல்லையா தனது காலண்டர் வெளியீட்டு விழா ஒன்றில்.

“ஐடிபிஐ வங்கியைப் பொறுத்த வரை அதுதான் மல்லையாவுக்கு தனியாக கொடுக்கப்பட்ட முதல் கடன். ஏற்கனவே கிங் ஃபிஷர் ஏர்லைன்சுக்கு மற்ற வங்கிகள் கொடுத்த கடன்கள் பிரச்சனைக்குள்ளாக்கியிருந்த நிலையில், வங்கிகளின் கூட்டமைப்புக்கு வெளியில் ஐ.டி.பி.ஐ தனியாக கடன் கொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை” என்கிறார் ஒரு மூத்த சி.பி.ஐ அதிகாரி. ஐ.டி.பி.ஐ-ன் அதிகாரிகள் தயாரித்த உள்சுற்றுக்கான அறிக்கை மல்லையாவுக்கு கடன் கொடுப்பதை எதிர்த்து பரிந்துரைத்திருந்தது.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் மீதான சி.பி.ஐ விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.டி.பி.ஐ மல்லையாவுக்குக் கொடுத்த கடன் மீது விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக முறையே ரூ 50 லட்சம், ரூ 3.5 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு பூஷன் ஸ்டீல் மற்றும் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக கடன் உச்சவரம்பை உயர்த்தி கடன் கொடுத்ததோடு, திருப்பிச் செலுத்தத் தவறிய கடன்களுக்கு போலி கணக்கு காட்ட உதவியதாக சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜெயின் கைது செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்தது தொடர்பாக ஐடிபிஐ வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாகவும், இது குறித்து தகவல் கோரி அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு வங்கி முறையான பதில் தரவில்லை என்றும் சி.பி.ஐ கூறியிருக்கிறது. ரூ 950 கோடி கடன் கொடுக்கப்படுவதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு ரூ 150 கோடி கடன் விண்ணப்பத்தை நிராகரித்து வங்கி முடிவெடுத்திருந்தது.

கிங் ஃபிஷர் விமான சேவை
மூழ்கிக் கொண்டிருந்த கிங் ஃபிஷருக்கு நிதியை கொட்டிய வங்கிகள்

ஏற்கனவே, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளின் கூட்டமைப்பு  மல்லையாவுக்கு ரூ 7,000 கோடி கடன் கொடுத்திருந்தன. அதில், பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ 1,600 கோடி தாரை வார்த்திருந்தது. இந்நிலையில் ஐடிபிஐ தனியாக கடன் கொடுத்திருப்பது  ஊழல் நடந்திருப்பதாக பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் ஒரு சி.பி.ஐ அதிகாரி.

சந்தையில் மோசமான நிலையில் இருந்த கிங் பிஷர் நிறுவனத்தின் மீதான எதிர்மறை மதிப்பீடு, எதிர்மறை நிகர மதிப்பு போன்றவற்றை அலட்சியப்படுத்தி அந்நிறுவனத்துக்கு பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் கடனை வாரி வழங்கியிருக்கின்றன வங்கிகள்.

கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்தின் சொந்த நிதிநிலை அறிக்கையின் படியே 2005-ம் ஆண்டு முதல் அது சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ 5,960 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அது தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.

முன்னதாக, ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஐ.டி.பி.ஐ, பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பிஎன்பி ஆகிய வங்கிகள் கடன் பணத்தை பகுதியளவு சரிக்கட்ட கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தன. இதில் ஐ.டி.பி.ஐ ரூ 109 கோடி மதிப்பில் 1.7 கோடி பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.

கடந்த மே மாதம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம், 2008-ல் 39,000 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2013-ம் ஆண்டு இறுதியில் 5,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடம் (ரூ 4,022 கோடி) வகிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள முதல் 5 நிறுவனங்களில் வின்சம் டயமண்ட்ஸ் (ரூ 3,243 கோடி), எலக்ட்ரோதெர்ம் இந்தியா ரூ (2,653 கோடி), கார்ப்பரேட் பவர் (ரூ 2,487 கோடி), ஸ்டெர்லிங் பயோடெக் (ரூ 2,031 கோடி) ஆகியவை அடக்கம். ஆயிரக்கணக்கான வங்கிப் பணத்தை கொள்ளை அடித்த இத்தகைய நிறுவனங்கள்தான் தொழில் முனைவு மூலம் இந்தியாவை முன்னேற்றப் போகிறவர்களாம். இந்நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தன என்பது மட்டுமில்லை, இவை வாங்கிய கடன்கள் எதற்கு பயன்பட்டன என்பது கூட கேள்விக்குரியது.

மல்லையா
வங்கிப் பணத்தை விழுங்கிய மல்லையா – ‘மகிழ்ச்சியான தருணங்களின் அரசன்’

தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்துள்ள நிறுவனத்திற்கு வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? முதலாளிகள் தமது தகிடுதித்தங்களின் மூலமாகவோ, லஞ்சம் மூலமாகவோ அல்லது லாபியின் மூலமாகவோ விதிமுறைகளை வளைத்து தேவையான கடனை பெற்றுக் கொள்கின்றனர்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வேறு தொழில்களுக்கு திருப்பிவிடுவது மல்லையாவுக்கு இது முதல் முறை அல்ல. கொள்ளையடிப்பதிலும் அதற்கு ஆளும் வர்க்கங்களை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு வரலாறே இருக்கிறது.

தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பெனியைத் துவக்கி, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியைத் தருவதாக வாக்களித்தார் மல்லையா. இதை நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்த அப்பாவி மக்களின் பணத்தை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்டு, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாத்தினார். இதற்கு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் ஆளும் அதிகாரவர்க்கம் உடந்தையாக இருந்தது. மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் எந்தத் திசையில் எங்கே போய் சேர்ந்ததென்று தெரிந்தும் இன்றுவரை அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் மௌனம் சாதித்து வந்திருக்கின்றன.

இப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையனை சிறையில் அடைத்து அவனது சொத்துக்களை பறிமுதல் செய்து அதன் மூலம் வங்கிகளின் கடனை அடைத்திருக்க வேண்டும். ஆனால், ஐ.பி.எல் அணி, ஃபோர்ஸ் இந்தியா பார்முலா கார் அணி என ஊதாரித்தனமாக இருப்பதோடு கிங்பிஷர் நிர்வாண காலண்டர் தயாரிப்பில் அழகிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டு திரிந்தார் விஜய் மல்லையா. இந்த கிரிமினல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்ற, சட்டமன்றங்கள் இப்படிப்பட்ட பிளேடு பக்கிரிகள், அவர்களுக்கு சேவை செய்வோரின் கூடாரமாக இருக்கிறது.

முதலாளிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுக்கும் இதே பொதுத்துறை வங்கிகள் தான் சிறிய கடனுதவிக்காக சாதாரண மக்களை விதிமுறைகளைக் காட்டி பயமுறுத்துகின்றன, நடையாய் நடக்க வைக்கின்றன. வேலை கிடைக்காததால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன.

சாராய மல்லையா போன்ற பெருமுதலைகளுக்கு கடன் கொடுத்து வாராக்கடன்களால் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கின்றன பொதுத்துறை வங்கிகள். அதே நெருக்கடியை காரணம் காட்டி அரசுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

மக்கள் பணத்தை முதலாளிகளின் பாக்கெட்டுக்கு திருப்பிவிடுவதையே முதலாளித்துவ அரசுகள் தம் தலையாய கடமையாக செய்யும் போது இந்த போலி ஜனநாயக முறைகளை கொண்டு மல்லையா போன்ற கொள்ளையர்களை தண்டிக்கவோ, அவர்களது சொத்தை பறிமுதல் செய்யவோ முடியாது.

மேலும் படிக்க

கருவாடாற்றுப்படை!

10
பூனையும் கருவாடும்
கோயம்பேடு கருவாடு விற்பனைக்கு தடைபோடு! என கவுச்சி வெறுத்த பூனைகள் கத்துகின்றன

கோயம்பேடு கருவாடு
விற்பனைக்கு தடைபோடு!
என
கவுச்சி வெறுத்த பூனைகள்
கத்துகின்றன,
சந்திலிருந்தும்
‘தி இந்து’ விலிருந்தும்.

மச்ச அவதாரம் எடுத்த
மகா விஷ்ணுவின்
மறு அவதாரமல்லவோ
கருவாடு!
மிச்ச அவதாரமாக
பன்றி வரை
பகவான் அவதரிக்க
இனிய கருவாட்டின் மேல்
இந்துவுக்கென்ன நோக்காடு!

வேதகாலத்தில்
நீங்கள் தின்று தீர்த்த
உயிரினம் போக
எங்களுக்கு எஞ்சியிருந்தது
இந்தக் கருவாடு,
அதுக்குமாடா
உங்கள் இடையூறு!

காய், கனிச் சந்தையில்
கருவாடு விற்கலாமா? என
வக்கணை பேசும் அக்கிரகாரமே!

தி இந்து அலுவலகத்தில் அசைவம் தடை
அலுவலகத்தில் யாருக்கும் அசைவமே கூடாதென அடுத்தவன் வயிற்றிலும் ‘நாமம்’ போடலாமா?

செய்திப் பத்திரிகை என்று
அரசு சலுகையை அள்ளிக் கொண்டு
விளம்பரத்திலும்
விலைக்கு செய்தி போட்டும்
நீ கடை நடத்தலாமா?

ஹோண்டா கார் விளம்பரத்துக்காக
பிள்ளையாரை டான்ஸ் ஆட விட்டு
நீ மட்டும்
‘ இந்துக்கள்’ மனதை
புண்படுத்தலாமா?

அனைத்துக்கும் மேலே
போதுமான அளவுக்கு
உன்னிடம்
புளிசோறு ‘ஸ்டாக்’ இருப்பதாலே
அலுவலகத்தில் யாருக்கும்
அசைவமே கூடாதென
அடுத்தவன் வயிற்றிலும்
‘நாமம்’ போடலாமா?

எதையுமே
அவாள் செய்தால் அனுபூதி
அடுத்தவன் செய்தால்
அதோ கதி!

அவர்கள் குலத்தையே அழித்தாலும்
வேள்வி,
நாம் கொஞ்சம் தின்றாலும் என்.வி.!

மற்றவர் ஆடினால்
சதிராட்டம், தாசியாட்டம்
அவர்கள் ஆடினால்
பரத நாட்டியம்!

அவர்கள் வயிற்றில் மலர்ந்தால்
கடல் புஷ்பம்,
நம் சட்டியில் மிதந்தால் மீன்!

பரத நாட்டியம்
மற்றவர் ஆடினால் சதிராட்டம், தாசியாட்டம் அவர்கள் ஆடினால் பரத நாட்டியம்!

சைவம் புழங்குமிடத்தில்
அசைவம் கூடாதெனில்
தமிழ் புழங்கும்
எம் தமிழ்நாட்டில்
சமஸ்கிருத புழக்கம் மட்டும்
மொழிக் கவிச்சியில்லையா?

‘தமிழால் இணைவோம்’ என்று
மொழியைக் காட்டி
காசைப் பறிப்பது,
‘கருவாட்டால்
பிரிவோம்’ என
சுத்தத்தைச் சொல்லி
இனத்தைப் பிரிப்பது,
இரண்டிலும்
இந்துவின் சங்கு, சக்கர லாவகம் பார்த்து
பெருமாளுக்கே கை நடுங்குது!

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின்
“அக்கார வடிசிலிலும்”
திருவரங்கரத்து நாச்சியாருக்கு
படைக்கப்பட்ட ரொட்டியிலும் மட்டுமல்ல
நாலாபுறத்திலும் காவிரிக்கரையின்
கருப்பஞ்சாறு புகையிலும்
கருவாட்டுக்குழம்பு மணத்திலும்
திளைத்துக் கிடந்தவன் திருவரங்கன்!

கருவாட்டுக் குழம்பு
காவிரிக்கரையின் கருப்பஞ்சாறு புகையிலும் கருவாட்டுக்குழம்பு மணத்திலும் திளைத்துக் கிடந்தவன் திருவரங்கன்!

குறிஞ்சி நிலக்கடவுள் முருகனுக்கு
காட்டுப் பன்றி படையல் போட்டது
திணைவாழ்க்கை,
பாண்டிக்கோயில் கறிசோறும் தின்று
அழகர்கோயில் துளசி தீர்த்தமும் குடித்து
கருவாட்டுக்குழம்பும், சுருட்டும்
கருப்பண்ணசாமிக்கு படைப்பது எம் வழக்கம்.

முறுக்கும், சீடையும் தின்றுவிட்டு
ஒரு வேலையும் இல்லாமல்
சும்மா உட்கார்ந்து
குடல் நாறுவது உன்சாமி,
முழு ஆட்டையும் தின்றுவிட்டு
மூலைக்கு ஒருவராய்
வேலைக்குப் போறவருடன்
வேட்டைக்குப் போவது எம்சாமி!

சிறுபாணாற்றுப் படையா
பெரும்பாணாற்றுப் படையா
இல்லை கருவாட்டுக் கடையா என
வியக்குமளவுக்கு
வெண்சோறும், எயினர் வீட்டு
கருவாட்டு புளிசாறும்
மணக்கும் காட்சிகள்
இலக்கிய சாட்சிகள்.

இறைச்சி
சுத்த அசைவமாய் சத்தானது சங்க இலக்கியம்!

நண்டும், நத்தையும்
மீனும், கருவாடும்
உடும்பும், பன்றியும்,
கோழியும், மடையானும்

ஆடும், மாடும், உரித்துத் தின்று
சுத்த அசைவமாய்
சத்தானது சங்க இலக்கியம்!

ஆமை புழுக்கியும்
சாமை வதக்கியும்
ஆய்ந்து வளர்ந்தது அகநானூறு
நற்றிணை, நல் குறுந்தொகை
திணைக்களம் ஏற்ற தெரிவால்
உணவுப்புனிதம் ஒழித்தது
எங்கள் வரலாறு!

பொருநராற்றுப்படை சீரில்
நாங்கள்
பொரித்து எடுத்த இறைச்சியின்
ஓசையும் உள்ளது
அர்த்தசாஸ்திரத்திலேயே
இறைச்சிக்கேற்ற எண்ணெய் அளவு பற்றிய
பக்குவம் உள்ளது!
‘பாரத விலாஸ்’ பருப்பெல்லாம்
இங்கே வேகாது
வேதங்களின் அசைவ உணவை
அடுக்கினால்
பாரில்
முனியாண்டிவிலாசே பத்தாது!

மீன்கள்
மீன்கள் துள்ளிடும் எம் பட்டினப்பாலை

அயிரை, ஆரல், இரால்
சுறா, விறால், வாளை
குரவை, கெண்டை என
மீன்கள் துள்ளிடும்
எம் பட்டினப்பாலை

தாழை முள்ளும்
வாளை முள்ளும்
தரித்தது எங்கள்
நெய்தல் சாலை.

”திருக்கண்ணபுரத்து செங்கண் மாலுக்கு
தன் காதலைச் சொன்னால்
இரு நிலத்தில் உன் பேடையோடு
இன்பம் எய்த
மீன் கவர்ந்து நான் தருவேன்” என
திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்
மீன் வாடை உண்டு!

மூலஸ்தானத்தில் மூத்திர நெடி
மூலஸ்தானத்தில் உங்கள் மூத்திர நெடிதாங்காமதானே பெருச்சாளி கூட கோயிலை விட்டே ஓடுது!

சைவம் சுத்தம்
அசைவம் அசுத்தமென்று
எவன்டா சொன்னது?
எங்கள் சாமிகளில் பெரும்பான்மை
கருவாடு தின்பது.

மூலஸ்தானத்தில்
உங்கள்
மூத்திர நெடிதாங்காமதானே
பெருச்சாளி கூட
கோயிலை விட்டே ஓடுது!

பெரும்பான்மை படி
இது இந்து நாடல்ல,
கருவாடு!

பார்ப்பான் சுத்தம்
சூத்திரன் அசுத்தம்!
சமஸ்கிருதம் சுத்தம்
தமிழ் அசுத்தம்!
பால் சுத்தம்
மாட்டுக்கறி அசுத்தம்!
பரம்பரை
அர்ச்சகர் சுத்தம்
இடஒதுக்கீடு அசுத்தம்!
தட்சணை சுத்தம்
தரும் தாழ்த்தப்பட்டவர் அசுத்தம்!

பார்ப்பனியம்
கட்டுக்கதைகளும் கட்டளைகளுமே பார்ப்பனிய மொத்தம்!

இப்படி – கட்டுக்கதைகளும்
கட்டளைகளுமே பார்ப்பனிய மொத்தம்!

அம்பிகளே
உங்களுக்கு கருவாடுதான் நாறுது
எங்களுக்கு
பார்ப்பன கலாச்சாரமே நாறுது!
‘மோருஞ்ஜா’ நக்கும் ஓசையில்
தயிர்கவுச்சி தாங்காமல்
பசுமாடு மூக்கைப் பொத்தும்,

பளபளக்கும்
உங்கள் ”லெதர்பேக்கு, செருப்பு
பர்சின் வெறிகொண்ட வேட்டையைப் பார்த்து
பிறந்த கன்றுக்குட்டியும்
பீதியில் கத்தும்

இனிய திருக்குறள்
பொதுவில் இருக்க
வலிய பகவத்கீதையை
வாரிசுகளின் வாயில் திணிக்கும்
சாதிய நாற்றம்
சகிக்கக் கூடியதா?
முகநூலில் உலகமே
முகம் காட்டும் காலத்திலும்
பூணுலில் அகம் காட்டும்
பொல்லாத சாதிவெறியை
கருவாடும் தாங்குமோ?

கருவாடு வகைகள்
நெஞ்சனைய வஞ்சிரம், நினைத்ததும் நா சுரக்கும் காரப்பொடி, ஓட்டாம்பாறை, சூரையும், மாசியும் யாரையும் இழுக்கும்.!

ஜனநாயக சுத்தம்
சற்றாவது உண்டா?
”தமிழ் நீசபாஷை
தமிழன் சூத்திரன்” என்று
தாளித்துக் கொட்டினாலும்
சங்கராச்சாரி படத்தை வைத்திருக்கும்
சர்சூத்திரன் இன்னும் உண்டு,
பார்ப்பன சர்வாதிகாரத்தை திருத்திய
பெரியார், அம்பேத்கர் படம்
ஒரு பார்ப்பனர்
வீட்டிலாவது உண்டா?

கோயம்பேட்டில்
கருவாடு விற்பதே
அபச்சாரமென்றால்
எங்கள் கோயில்களில்
சமஸ்கிருதம் விற்பது
அநீதியன்றோ!

கத்திரிக்காய் மட்டுமல்ல
நெத்திலியும்
எமக்கு சுத்தமாய்ச் சேரும்
இன்னும் எத்தனை வகை வேண்டும்
எங்கள் உழைப்பவர் தாழ்வாரம்
‘இந்துவே’ எட்டிப்பாரும்,
நெஞ்சனைய வஞ்சிரம்,
நினைத்ததும் நா சுரக்கும்
காரப்பொடி, ஓட்டாம்பாறை,
சூரையும், மாசியும்
யாரையும் இழுக்கும்.!

ஒழுங்காக நடந்து கொள் தி இந்து
கண்ணெரிச்சல் தாங்காத ‘இந்துவே’ கொஞ்சம் சங்கு சதையும் வயல் நத்தையும் தின்று பார் உன் மூலச்சூடும் அடங்கும்!

கானாங்கெழுத்தியும்,வவ்வாலும் வேண்டாம்
என்குமோ மனம்?
கெட்ட பார்ப்பனியம் பழகியதால்
சுட்ட கருவாடானது இனம்!

திவலைகள் உரசும்
மழைக்கால இரவில்
கவலை மீனில் உயிர்
கரையும், சிலிர்க்கும்!
சுறாவும், திருக்கையும்
எம் இரத்தத்தில் கலந்து
பிள்ளைபெற்ற பெண்ணின் மார்பில் சுரக்கும்!

சென்னாகுன்னி கருவாட்டுப்பொடிக்கு
இட்டலி ஆவி பறக்கும்,
கெளுத்தி, உளுவை
கண்ணாடிக்கெண்டையைப் பார்த்தால்
சுவை மொட்டுகள் வாய் திறக்கும்!
உடும்பும், நண்டும்
உலை கொதிக்க
உழைப்பின் வலிகள் அடங்கும்,
கண்ணெரிச்சல் தாங்காத ‘இந்துவே’
கொஞ்சம் சங்கு சதையும்
வயல் நத்தையும் தின்று
பார்
உன் மூலச்சூடும் அடங்கும்!

-துரை.சண்முகம்

மக்களுக்காக போராடினால் கிரிமினல் போலீசுக்கு பிடிக்காது !

3

தோழர். அசோக் என்பவர் DR. சந்தோஷ் நகர் பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயலாளர். இவர் இப்பகுதி மக்களில் ஒருவராக இருந்து பகுதியின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காகவும், பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடி வரும் தோழர். இதன் காரணமாக அப்பகுதி மக்களிடம் புமாஇமு செல்வாக்கு கூடி வருகிறது. இதனால்அப்பகுதியில் உள்ள F2 எழும்பூர் போலீசுக்கு ரவுடித்தனம் செய்ய இயலவில்லை. இதற்கு பழிவாங்கும் நோக்குடன்  தோழர் அசோக் மீது  F2 எழும்பூர் போலீசு பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைத்துள்ளது.

திரைக் கதை வசனம் எழுதி பொய் வழக்கு ஜோடித்த ஆள் கடத்தல் போலீசு

சந்தோஷ்நகர் மக்கள் போராட்டம்
சந்தோஷ்நகர் மக்கள் போராட்டம் (கோப்புப் படம்)

கடந்த 19-ம்தேதி காலை 10.30 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகம் வழியே வேலைக்குச் சென்றிருக்கிறார் தோழர் அசோக். அப்போது சீருடை அணியாத 3 உளவு போலீசார் அவரை பின் தொடர்ந்து வந்து வழி மறித்து “நீதான வினோத்” என்று கேட்க, அதற்கு “என் பெயர் வினோத் இல்லை, அசோக்” என்று பதில் சொல்லியுள்ளார். உடனே அவர்கள் “எல்லாம் எங்களுக்கும் தெரியும்டா தே ……………….. பையா” என்று கூறி அடித்து இழுத்து தயாராக வைத்திருந்த ஒரு ஆட்டோவுக்குள் தள்ளி கடத்திச் சென்றுள்ளனர்.

அசோக்கை கடத்திச் சென்ற உளவு போலீசார், அவரை நேராக போலீசு நிலையம் கொண்டு செல்லவில்லை. பதிலாக எழும்பூர் அருங்காட்சியகத்திலுள்ள ஒரு அறையில் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு பேப்பரில் கையெழுத்து போடுமாறு மிரட்டியுள்ளனர். அதன்பின்னர் தான் F2 எழும்பூர் போலீசு நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணனிடம் ஒப்படைத்து வழிப்பறி உள்ளிட்டு 5 பிரிவுகளின் கீழ் பொய்யாக வழக்கு ஜோடித்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

ஆள் கடத்தல் செய்தது, அசோக்கின் செல்போன், இரு சக்கர வாகனத்தை பறித்தது, சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது, கற்பனையாக திரைக்கதை வசனம் எழுதி பொய் வழக்கு ஜோடித்தது என அனைத்து குற்றங்களையும் செய்தது, உளவுத்துறை போலீசார் மற்றும் F2 எழும்பூர் போலீசு நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் ஆகியோர்தான். கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டைபஞ்சாயத்து, பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் குவிந்து கிடக்கும் குற்றவாளிகள் கூடாரமே போலீசு நிலையம்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், இந்த யோக்கிய சிகாமணிகள் மக்களுக்காக போராடி வந்த தோழர் அசோக்கை குற்றவாளிபோல் சித்தரிக்கிறார்கள். பீதியூட்டும் நோக்கில் யாரும் நம்பமுடியாத பொய்வழக்கை ஜோடித்து கைது செய்து சிறையிலடைத்துள்ளார்கள்.

புமாஇமு தோழர் மீது ஏன் இந்த பொய் வழக்கு?

அசோக்குக்கும் போலீசாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இருந்தது இல்லை. சமூக மாற்றத்திற்காக போராடும் புமாஇமுவின் பகுதி செயலர் என்ற முறையில் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி போராடியதுதான் குற்றம் என்கிறது போலீசு.

பல்நோக்கு கட்டிடம் கட்ட வலியுறுத்தி கவுன்சிலரை பார்க்க பகுதி மக்களை திரட்டிச் சென்ற போது ‘’ நீ என்ன இந்த ஊர்த் தலைவரா? ஏன் இவங்களுக்கு வழிகாட்டிவிடுற, உனக்கு என்ன வேணும்னு சொல்லு?’’ என்று கவுன்சிலர் பேரம் பேசியதற்கு பணியாமல் தொடர்ந்து போராடியது; இந்த ஊர் பிள்ளைங்களுக்கு நல்ல கல்வி கிடைக்காத சூழலில், பணம் கொடுத்து ட்யூசன் படிக்க முடியாத நிலையில் இரவு பாடசாலை நடத்தி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் இரவு பாடசாலைக்காக மேயருடன் சலியாது போராடி சாதித்தது; கண்முன்னால் நடந்த ரவுடித்தனத்தைத் தட்டிக்கேட்டது; போலீசார் ஊருக்குள் அத்துமீறி புகுந்து இளைஞர்களைத் தாக்கி வந்த அராஜகத்தை எதிர்த்து கேள்வி எழுப்பும் துணிச்சலை இளைஞர்களுக்கு உருவாக்கியது இவைகள் எல்லாம்தான் போலீசு பார்வையில் மாபெரும் குற்றமாம்.

எமது புமாஇமு தோழர்கள் இரவு பகலாக மக்களுக்காக உழைப்பதை பார்த்து பலர் “சின்ன வயது பிள்ளைங்க உங்க வாழ்க்கையையும் பாருங்கப்பா” என்று பாசத்தோடு சொன்ன போது,  “உங்களுக்காக உழைத்தால் எங்க வாழ்க்கையை நீங்க பாத்துக்க மாட்டீங்களா” என்று கூறி மக்கள் நலன்தான் முக்கியம் என்று போராடியதற்காகத்தான் இந்த பொய் வழக்கை போட்டுள்ளது போலீசு.

F2 எழும்பூர் போலீசின் கனவை தகர்ப்போம்!

போலீசின் யோக்கியதை என்ன என்று உங்களுக்கே தெரியும். சமீபத்தில் ஊருக்குள்ளேயே ஒரு கருங்காலியை உருவாக்கினார்கள், பொய்யாக ஒரு புகார் பெற்றார்கள். எந்தவித விசாரணையும் இல்லாமல் ஊருக்குள் புகுந்து அசோக்கையும் பிற தோழர்களையும் கொலை வெறியோடு தாக்கி கைது செய்ய முயன்றார்கள். அப்போது எங்களின் பாசத்திற்குரிய உழைக்கும் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போலீசு மிருகங்களிடம் இருந்து தோழர்களை காப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு பீனிக்ஸ் பறவை போல் புமாஇமுவின் அரசியல் உறுதிகொண்ட இந்த தோழர்கள் மீண்டும் களமிறங்கி மக்கள் பணியாற்றி வந்ததை இவர்களால் ஏற்க முடியமா என்ன? இதனை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இப்போது ஒரு அபாண்ட புளுகை வழக்காக ஜோடித்து பழிவாங்குகிறார்கள். இதன் மூலம் இப்பகுதியில் மக்கள் செல்வாக்கோடு இயங்கி வரும் எமது புமாஇமு தோழர்களின் செயல்பாட்டை முடக்கவும், இதனைத் தொடர்ந்து பழையபடி இப்பகுதியில் கேள்வி கேட்பாரின்றி போலீசு அரஜாகத்தை கட்டவிழ்த்துவிடவும் கனவு காண்கிறது போலீசு.

உழைக்கும் மக்களின் உற்ற தோழன் புமாஇமு

அடிப்படை வசதிகள் கோரி ஊர்வலம்
அடிப்படை வசதிகள் கோரி ஊர்வலம் (கோப்புப் படம்)

இப்பகுதி கடந்த காலங்களில் எப்படி இருந்தது ? மாநகராட்சியும், அரசும் இப்பகுதியை தீண்டத்தகாத சேரியாகவே நடத்தியது, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்தது. இக்கொடுமைகளுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்ற லட்சியத்தோடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இப்பகுதியில் கிளை தொடங்கிய பின்னர்தான் அடிப்படை பிரச்சனைகள் ஒவ்வொன்றாக போராடி தீர்க்கப்பட்டு வருகிறது.

ஊரை இடித்து தரைமட்டமாக்க குடிசைமாற்று வாரியம் எடுத்த முயற்சியை தடுத்து நிறுத்தினோம். பராமரிப்பு இன்றி கிடந்த பொது கழிவறை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. குடிநீர் வீணாகாமல் தடுக்க வால்வு, குடிநீர் பற்றாக்குறையை போக்க தண்ணீர் தொட்டிகள், ஊரை சுகாதாரமாக வைத்திருக்க குப்பைக் கூடைகள், அவ்வப்போது மருத்துவ முகாம்கள், ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த இரவுபாட சாலை. இவை எல்லாம் இந்த பகுதி கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி, மாநகராட்சி மேயர், சென்னை கலெக்டர், மற்றும் பிற அதிகாரிகள் ஆகியோர்களின் கருணையினாலா நடந்தது? இல்லையே. புமாஇமுவின் இப்பகுதி செயலர் தோழர் அசோக் மற்றும் பிற தோழர்கள் தலைமையில் அப்பகுதி மக்கள் அனைவரையும் திரட்டி போராடியதன் மூலம்தான் கிடைத்தது.

ஆனால், இதெல்லாம் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமைதானே, அதற்கு ஏன் போராட்டம், போலீசு கேசு என்று சிலர் கேட்கலாம். இது மக்கள் நலனுக்கான அரசாக இருந்தால் அப்படி நினைக்கலாம். இது முழுக்க முழுக்க முதலாளிகளின் நலன் கொண்ட அரசு என்பதை உங்கள் சொந்த அனுபவங்களில் இருந்தே நீங்கள் பார்க்கலாம். நமக்கு கல்வி , மருத்துவம், குடிநீர், சாலை, சுகாதார வசதி செய்து கொடுக்க காசு இல்லை என்று மறுக்கும் அரசுதான், ஃபோர்டு, ஹூண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கும், அம்பானி, டாடா போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் சலுகைகள், மானியங்களுக்காக நமது வரிப்பணத்தில் இருந்து லட்சக்கணக்கான கோடிகளை ஆண்டு தோறும் வாரி இறைக்கிறது. பணம் இல்லையென்றால் இது எப்படி முடிகிறது? இது நமக்கான அரசு இல்லை, முதலாளிகளுக்கான அரசு. இப்படிப்பட்ட அரசிடம் போராடாமல் எப்படி நமது உரிமைகளைப் பெற முடியும். இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களைத் திரட்டி போராடுவதால்தான் குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற முடிகிறது. இதைத்தான் இந்த அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்படியே போனால் மக்கள் விழிப்படைந்துவிடுவார்கள், இந்த கேடுகெட்ட மக்கள் விரோத அரசுக்கு முடிவுகட்டிவிடுவார்கள். இதெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் முதலில் போராடுகின்ற புரட்சிகர அமைப்புகளை ஒடுக்குவது, பின்னர் போராடும் மக்களையே கேள்விகேட்பாரின்றி அடக்கி ஒடுக்குவது என்ற சதித் திட்டத்தோடு வெறிகொண்டு அலைகிறது இந்த அரசு.

DR. சந்தோஷ் நகர் பகுதியில் இன்று மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைக்கிறது போலீசு. இதன் மூலம் அமைப்பு, போராட்டம் என்றாலே போலீசு பொய் கேஸ் போடும், சிறையிலடைக்கும் என்று மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிக்கிறது.

உழைக்கும் மக்களே இவர்கள் நினைப்பதைப் போல் நடந்தால் என்னாகும் என சற்று யோசித்துப் பாருங்கள். இப்போதே ஊருக்குள் உளவு போலீசார் அத்துமீறி நுழைந்து மக்களிடையே இல்லாதது பொல்லாததை சொல்லி பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நம்மிடையே இருந்து சில போலீசு உளவாளிகளை உருவாக்க நினைக்கிறார்கள், ஊரின் ஒரு பகுதி மாணவர்கள் இளைஞர்களிடையே சில சலுகைகளை செய்து தருவதாகக் கூறி ஊழல்படுத்த முயலுகிறார்கள்.

மற்றொரு புறம் இதுவரை நம்பகுதிக்குள் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மதவெறியர்கள் கால் எடுத்து வைக்க நாம் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது அவர்கள் நம்மிடையே உள்ள கடவுள் நம்பிக்கையை பயன்படுத்திக்கொண்டு விநாயகர் சிலை வைக்கப்போவதாக நாங்கள் கேள்விபடுகிறோம். இதன் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுவார்கள், மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பார்கள். அப்போதும் போலீசு அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கும்.

இறுதியாக, சிங்காரச் சென்னைக்காக மாநகரில் பல குடிசைப்பகுதிகளை அகற்றியதைப் போல் நாளை நம் பகுதியையும் அரசு அகற்றும். அப்போது அதை எதிர்த்துப் போராட புரட்சிகர அமைப்பும் இருக்காது, மக்களிடையே ஒற்றுமையும் இருக்காது.

இந்த நிலைமை நம்பகுதிக்கு வர வேண்டுமா? அக்கறையோடு சிந்தித்துப் பாருங்கள் நிச்சயம் வரவே கூடாது என்றால் மக்கள் ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியுடன் கரம் சேருங்கள். போராடுகின்ற அமைப்புத் தோழர்கள் மீது பொய் வழக்குப் போட்டு தனிமைபடுத்தவும், மக்களை பீதியூட்டவும் நினைக்கும் போலீசின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்போம் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து புமாஇமு வின் டாக்டர் சந்தோஷ் நகர் பகுதி செயலர் தோழர் அசோக் மீதான பொய் வழக்கை முறியடிக்கும் போராட்டத்தை மக்கள் ஆதரவோடு நடத்தி வருகிறது புமாஇமு.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை.

ஆன்மீகக் கண்காட்சியில் அரசியல் பேசக் கூடாதாம் !

25

ஹிந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நுழைவாயிலில் எந்த ‘தீவிரவாதி’யும் நுழையாமல் தடுப்பதற்காக, காவல்துறை அதிநவீன பாதுகாப்பு கருவிகளுடன் அனைவரையும் ஸ்கேன் செய்து அனுப்பிக் கொண்டிருந்தது. தீவிரவாதிகளே கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது போலீசு வெளியே ஸ்கேன் செய்து என்ன பயன்?

பரிசோதனை முடிந்து உள்ளே நுழைந்தால் வலப்பக்க அரங்கில் வந்தே மாதர்ர்ரம்……… என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். அரங்கிற்கு கீழே பலர் அந்த பாடலுக்கு விரைப்பாக நின்று கொண்டிருந்தனர். அதில் ராணுவ உடை அணிந்த ஒரு அணியும் உண்டு. ஒருவேளை மோடிஜி இந்திய ராணுவத்தை அனுப்பி கண்காட்சிக்கு பாதுகாப்பு கொடுத்திருப்பாரோ என்று பார்த்தால், ராணுவ உடையில் வந்து நிற்பது பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்தோம். இந்தியாவின் அநீதியான காஷ்மீர் ஆக்கிரமிப்பு காரணமாக உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அந்த மாணவர்கள், கார்கில் சவப்பட்டி ஊழல் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

நாளைய பாரதம்ஆர்.எஸ்.எஸ் அரங்கத்துக்குள் ஹெட்கேவார், சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்து ‘தலைவர்களின்’ படங்களை வைத்திருந்தார்கள். ஏதோ பாரிமுனை மொத்த சேட்டு வியாபாரிகள் போன்றிருந்த அந்த படங்களுக்காக, அரங்கத்தை கடந்து சென்றவர்களை எல்லாம் கையை பிடித்து இழுக்காத குறையாக, “வாங்கஜி புஷ்பாஞ்சலி செலுத்துவோம்” என்று உள்ளே இழுத்தார்கள்.

உள்ளே சென்றவர்களை “நமஸ்தேஜி, உள்ளே வாங்க”. “நீங்க எந்த ஊருஜி? எங்கள மாதிரி தேஷபக்தர்களை உங்க பகுதியில சந்திக்க விரும்புறீங்களா” என்று கேட்டு நச்சரித்தனர். அதாவது, அந்த பகுதியில் ஷாகா(ஆர்.எஸ்.எஸ் கிளை) ஆரம்பிக்க முயற்சிக்கிறார்களாம், “வேண்டாம்” என்று மறுத்தவர்களை “சரி, பூவாவது போடுங்கஜி” என்று புன்னகையுடன் கட்டளை இட்டனர். அவர்களெல்லாம் பிரிட்டீஷ் காலனியாதிக்கவாதிகளின் ரசிகர்கள் என்பதறியாத சிலர் ஏதோ பொட்டு வைத்த மகான்கள் என்று கடனுக்கு ரெண்டு பூ போட்டார்கள். ஆக அந்த பூ மரியாதை என்பதே ஒரு வித பரிதாபமான முறையில் வரவழைக்கப்பட்டதே.

பள்ளிக் குழந்தைகளுக்கு போட்டி நடத்துகிறோம் என்கிற பெயரில் சிறுவர்களை தனியே ஒதுக்கி வேதம் ஓதச் செய்து கொண்டிருந்தனர். ‘தமிழில் வேதம் ஓதினால் சாமி தீட்டாகிவிடும்’ என்பதால் ஓதுதலில் தமிழ் இல்லை போலும். அதே போல ‘பெண்கள் வேதம் ஓதினால் வேதமே தீட்டாகிவிடும்’ என்பதால் மாணவிகளும் இல்லை. ஆயினும் வேத மந்திர உச்சாடனம் கம்பீரமாகவே ஒலித்தது.

ராஷ்ட்ரியா சேவிகா சமிதிவேதத்திற்கு லாயக்கற்ற பெண் பிள்ளைகளுக்கு கோலம் போடுவது, கும்மி அடிப்பது, பல்லாங்குழி விளையாடுவது என்று தனி விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இது தவிர குடும்பப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறார்களாம். அது என்ன? விளக்கு பூஜைதான். குத்து விளக்கு ஏற்றும் பயற்சி மூலம் பெண்கள் தமது அடிமைத்தனங்களையும், பிரச்சினைகளையும் சடுதியில் களைந்து கொள்ளலாமாம். ஏன், நீண்ட கூந்தலை தலை வாருவது, மருதாணி, நகப் பூச்சு, பூ சூடுதல், நகை அணிதல் போன்ற சிருங்காரங்களையும் பயிற்சியாக கொடுத்து பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்திருக்கலாமே?

அடுத்து, அடக்கம் செய்து பல நூற்றாண்டுகளாகிப் போன சமஸ்கிருதத்திற்கு ஒரு ஸ்டால். நவீன அறிவியல் அனைத்துமே வேதங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்பட்டிருப்பதாக புளியைப் போட்டு விளக்கிகொண்டிருந்தது சமஸ்கிருத பாரதி என்கிற அந்த அரங்கு. சில்வர் நைட்ரைட்டுகே சவால் விடும் வகையில் தங்களது யாக வலிமையின் மூலமாக மழையை வரவழைப்பதாக கூறி வடிவேல் பாணியில் வசூல் செய்து கொண்டிருந்தனர் சில கனவான்கள்.

சங்க பரிவாரம்“இது சமஸ்கிருதத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் முயற்சி. நமது முன்னோர்கள் என்ன சொன்னார்கள், ஒரு கண்ணில் தமிழையும், மற்றொரு கண்ணில் சமஸ்கிருதத்தையும் வைக்கச் சொன்னார்கள். ஆனால் நாம் ரெண்டு கண்களையுமே மூடிவிட்டு இங்கிலீஷில் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ளாததால் தான் கோவிலில் உச்சரிக்கும் மந்திரத்திற்கு அர்த்தம் புரியவில்லை. அது தான் பிரச்சினைக்கு காரணம்” என்று பேசிக் கொண்டிருந்தார் ஒரு அறிஞர். சம்ஸ்கிருதம் படித்து, மந்திரம் கற்று பயிற்சி முடித்து அர்ச்சக மாணவர்கள் சாதியில் பார்ப்பனர்கள் இல்லை என்பதற்காக வேலையற்று நிர்க்கதியாக இருக்கிறார்களே, ஏனென்று கேட்பதற்கு வந்த மக்களுக்கு தெரியாது. இந்த தெரியாததுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் பலம்.

செத்துபோன சமஸ்கிருதத்தை சூத்திரர்களோ பஞ்சமர்களோ கொல்லவில்லை. அடிமைகளுக்கு ஏது நீதிபதி பதவி? பெரும்பான்மை மக்கள் பேசக்கூடாது என்று தடைவிதித்து சம்ஸ்கிருதத்தின் சாவை துரிதப்படுத்தியவர்களே இன்று அதை பேசுமாறு கோருவது வேடிக்கை. தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் பேசும் தமிழை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தீட்டு என்று ஒதுக்குகின்ற பார்ப்பனிய தீண்டாமைக்கு எதிராக போராடாமல், இவர்களே வழக்கொழியச் செய்த சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் இவ்வளவு முக்குகிறது என்றால் இது யாருக்கான அமைப்பு?

விவேகானந்தா கேந்திரத்தின் கடையில் உயரமாக ஒரு பாத்திரம் வைத்து சமையலறை கழிவுகளை கரைத்து ஊற்றினால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஒருவர். அந்த பாத்திரத்தில் ஊற்றுவதற்கு தேவையான அளவு சமையலறைக் கழிவுகள் சாதாரண மக்கள் வீடுகளில் ஒரு போதும் கிடைக்காது. பெரும் பண்ணையார்கள், முதலாளிகள், மடங்கள், பணக்காரர்கள் வீடுகளில்தான் தின்றது போக, கழித்தது போக நிறைய கழிவுகள் இருக்கும். எனவே, இத்தகைய குப்பை சேவை கூட சாதாரண ‘இந்துக்களுக்கு’ கிட்டிவிடாது. எளிய மக்களுக்கு சேவை செய்தால் கணக்கில் கம்மியாகத்தான் வருமென்பதால் விவேகானந்தா கேந்திரம் காஸ்ட்லியான ஹிந்துக்களுக்கு மட்டும் சேவை செய்கிறது போலும்.

கன்னியாகுமரிக்கு அருகில் மீனவர் பகுதிகளில் பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த கேந்திரம் மீனவ மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று விசாரித்ததும் உள்ளே அழைத்துப் போனார் அரங்கத்தில் இருந்தவர்.

ராமேஸ்வரத்தில் மீனவர் வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்திக் கொடுப்பதாக புகைப்படங்களைக் காட்டினார். “சரி, மீனவ மக்களுக்கு என்ன செய்கிறீர்கள், கடலில் மீன் பிடிக்கப் போகும் போது இலங்கை கடற்படையினரால் சுடப்படுகிறார்கள், மீன் பிடி தடைக்காலத்தில் உதவி தேவைப்படுகிறது. இதற்கு என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டால், “அவர்கள் வீடுகளுக்குப் போய் வீடுகளையும், தெருக்களையும் சுத்தமாக பராமரிக்க சொல்லிக் கொடுக்கிறோம்” என்றார். இவர்களைப் பொறுத்த வரை மீன் என்றாலே நாத்தம், குப்பை, கழிவு. மீனவர் வீடுகள் என்றாலே ஏதோ அநாகரிகமான குடியிருப்புகள். உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதாக கிளம்பும் அம்பிகள் எவ்வளவு வன்மத்துடன் நமது மக்களை பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சோறு.

அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து என்று ஒரு பெரிய கடை விரிக்கப்பட்டிருந்தது. அமைப்புக்கு ஒரு தமிழ் பெயர் கூட வைக்காமல் தமிழ்நாட்டில் கடை விரித்திருந்தார்கள். க்ராஹக் என்றால் நுகர்வோர் என்று பொருளாம்.

“நாங்க பல ரிட்டையர்ட் ஆபிசர்ஸ் எல்லாம் இதில இருக்கோம். உங்களுக்கு என்ன பிரச்சனைன்னாலும் நாங்க கையில எடுத்து தீர்த்து வைப்போம். அதுக்காக, உங்க வீட்டில மிக்சி ஓடலை, ஃபேன் ரிப்பேர் போல இல்லாம, கணிசமான பேருக்கான பிரச்சனையா இருக்கணும்” என்று கொள்கை விளக்க பிரகடனம் செய்தார் அங்கு இருந்த பெருசு ஒருவர். பதவியில் இருக்கும் போது அதிகார வர்க்கமாக மக்களை கசக்கிப் பிழிந்த இந்த ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்கிறார்கள் என்று கேட்டால்,

சென்னை மாநகர பேருந்துகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தினார்களாம், சென்னை மாம்பலம் காய்கறி சந்தையில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத எடைக் கற்களை பறிமுதல் செய்து தவறிழைத்தவர்களை தண்டித்தார்களாம், தாம்பரத்தில் நில்லாது சென்ற சோழன் எக்ஸ்பிரசை நின்று செல்லுமாறு உத்தரவிட வைத்தார்களாம், சேலம் இரவு ரயிலை சூப்பர் ஃபாஸ்ட் வகையிலிருந்து எக்ஸ்பிரஸ் வகைக்கு மாற்றினார்களாம் (அதன் மூலம் டிக்கெட்டுக்கு ரூ 20 பயணிகளுக்கு மிச்சமானதாம்). இப்படி இவர்களது நுகர்வோர் நலன்கள் எல்லாம் மாம்பலத்து ‘மக்களுக்காக’ தாம்பரம் ‘சான்றோர்களுக்காக’ மட்டுமே இருந்தன.

கிராஹக் பஞ்சாயத்து
அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து

மேலும் நடவடிக்கைகளும் சாதாரண சிறு வணிகர்கள் மேல் இருந்தன. அம்பானி, டாடா, அதானி போன்ற முதலைகள் மீது நடவடிக்கைகள் எடுப்பீர்களா என்று கேட்டால் அவர் முறைத்து பார்த்தார். மக்கள் சேவையில் அரசியலை கலக்காதீர்கள் என்று பேசினார். கோயம்பேடு கருவாடு விற்பனை கூட இவர்களால் புகார் எழுதி தி இந்து பத்திரிகையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

கூடவே, சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த ஏற்பாடு செய்ததும் இவர்கள்தானாம். “நாங்க ஆர்ப்பாட்டம், போராட்டம்னெல்லாம் போக மாட்டோம். நேரா மினிஸ்டரா பார்த்து பேசினோம். மீட்டர் இல்லாம ஆட்டோ ஓடறதால கஷ்டங்களை பத்தி அமைச்சர் செந்தில் பாலாஜிகிட்ட எடுத்துச் சொன்னோம். ஆட்டோகாரங்க எதிர்ப்பாங்களேன்னு கேட்டார். கடைசியில, அவர சம்மதிக்க வச்சி மீட்டர் கொண்டு வர வைத்து விட்டோம்”, என்றார்கள். இது மட்டும் ‘அம்மா’ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அடுத்த ஆண்டு கண்காட்சிக்கு இடமே கிடைக்காது. பொதுப் போக்குவரத்தின் கஷ்டங்களை சொல்லி அதை தீர்த்து வைத்தால் ஆட்டோவுக்கு அவசியமே இல்லையே, ஏன் அமைச்சரை பார்க்கவில்லை என்றதும் அவர் பதிலேதும் சொல்லவில்லை. பொதுவில் கண்காட்சியில் கேள்வி கேட்பவர்களை அவர்கள் எங்கேயும் விரும்புவதே இல்லை.

வெளியே வந்த போது ஆடிட்டர் குருமூர்த்தி எதிரில் வேகமாக வந்து கொண்டிருந்தார். பேசலாம் என்று அருகில் சென்றோம்.

குருமூர்த்தி
“வேறு வேலை இருக்கு இப்ப அதைப்பத்தி பேச முடியாது”

“உங்க கட்டுரைகளை எல்லாம் ரெகுலரா படிப்பேன், ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதின தினமணி கட்டுரையை கூட படித்தேன். ஒரு சின்ன சந்தேகம்.” என்ன என்று கூட கேட்கவில்லை சொல்லுங்க என்பதை போல தலையை மட்டும் ஆட்டினார்.

“பொருளாதார கொள்கையில் காங்கிரஸ் என்ன செய்ததோ அதையே தான்  பா.ஜ.க-வும் இப்போது செய்கிறது, ஆனால் நீங்க காங்கிரசை மட்டும் எதிர்த்துவிட்டு பா.ஜ.கவை ஆதரித்து எழுதுவது வாசகர்களை ஏமாற்றுவதாகாதா,” என்றதும்,

“வேறு வேலை இருக்கு இப்ப அதைப்பத்தி பேச முடியாது” என்று விறுவிறுவென்று நடந்தார். அரங்கங்களில் இருக்கும் சாதா அம்பிக்களாவது பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில்தான் முறித்துக் கொண்டனர். ஆனால் ஸ்பெஷல் அம்பியான குருமூர்த்தியோ துவக்கத்திலேயே முன்னறிந்து துண்டித்தார். பேசி, எழுதுவதில் மட்டுமல்ல, பேச்சை துண்டிப்பதிலும் ஒரு சாமர்த்தியம் வேண்டுமல்லவா?

கண்காட்சியை நிர்வாக அலுவலக கடையில் ஒருவர் நோட்டிஸ்களுடன் நின்றிருந்தார். “என்ன சார், கண்காட்சியில சாதி சங்கங்களை எல்லாம் சேர்த்திருக்கீங்க, இந்துக்களை பிளவுபடுத்தறத நீங்க ஆதரிக்கிறீங்களா?” என்று கேட்டதும்,

“அப்படி உங்களுக்கு கருத்து இருந்தா தாராளமா சொல்லுங்க, நம்ம குருமூர்த்தி சார் இருக்காரே, அவருதான் இந்த கண்காட்சிய ஏற்பாடு செய்றவரு”

“ஓ, இந்த சுதேசி இயக்கம் எல்லாம் நடத்துவாரே”

“ஆமாமா, நான் கூட அதிலே எல்லாம் வேலை செஞ்சிருக்கேன்”

“என்ன பலன் சார், இப்போ மோடி அரசு வந்ததும் அன்னிய முதலீடுதான் வளர்ச்சின்னு நாட்டை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுறாங்களே, அதை எதிர்த்து குருமூர்த்தி போராடலையே, ஆதரிக்கிறாரே?”

“அதெல்லாம் உடனே செய்ய முடியாது சார். நேரம் பார்த்து தேவைப்படும் போது அதை ஆரம்பிப்போம்.” என்றார். நாட்டு மக்களுக்கு நேரம் சரியில்லை, அவர்களது உணர்வு மட்டம் வளர்ந்து நேரத்தை நல்லதாக்க முனைந்தால் இவர்கள் கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பார்கள் போலும்! அதைத்தான் உடனே செய்ய முடியாது என்று அவர் கூறியிருக்கலாம்.

முந்தைய ஆண்டு கண்காட்சி புகைப்படங்களை ஆல்பமாக வைத்திருந்தார்கள். அதைப் புரட்டி பார்த்தால் தினமலர் பத்திரிகை செய்திகள் நிறைய இருந்தன.

“என்ன சார், தினமலர கொஞ்சம் தட்டிக் கேட்கக் கூடாதா. அவன் போடற ஆபாச படங்கள்லாம் இந்து ஆன்மீக இமேஜூக்கு நல்லதா, கெட்டதா?.”

“ஆமா சார், அவங்க அப்படித்தான். இப்போ ரெண்டு மூணு குரூப்பா பிரிஞ்சிட்டாங்க. அதனால நமக்கும் சப்போர்ட் குறைவுதான். தினமணி, இந்து பத்திரிகை எல்லாம் நல்லா கவர் பண்றாங்க” என்று பார்ப்பனிய ஊடக தருமத்தை விளக்கினார்.

ரதம்
ஹவானா தீவு காக்டெயில் போக கலந்து அடித்திருந்தனர். என்றாலும் எங்கும் ‘இந்து’ உணர்வு ஓடிக் கொண்டிருந்தது.

இந்து ஆன்மீக கம்பெனிகளை ஒரு சுற்றுச் சுற்றினால் சாதி சங்கங்கள், கார்ப்பரேட் மடங்கள், கல்வி நிறுவனங்கள், என்ஜிவோக்கள் தவிர ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்த ராஸ்ட்ரிய சேவிகா சமிதி, லிங்க பைரவி, வேத விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம், அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத், ஹிந்து ஜன ஜாக்ருதி ஸமிதி, ஸனாதன் ஸன்ஸ்தா, சமஸ்கிருத பாரதி, சேவாலயா, பாரத் விகாஸ் பரிஷித், வனவாசி சேவா கேந்திரம் என்று ஹவானா தீவு காக்டெயில் போக கலந்து அடித்திருந்தனர். என்றாலும் எங்கும் ‘இந்து’ உணர்வு ஓடிக் கொண்டிருந்தது.

சரி சந்தைக் கடைகளை பார்த்துவிட்டோம் அடுத்து சந்தைக்கு வந்தவர்களை சந்திக்கலாம் என்று வாயிலருகே வந்தோம். நடுத்தரவர்க்கத்தை தவிர வேறு எந்தப் பிரிவும் இந்த கண்காட்சிக்கு வரவில்லை என்று சொல்லலாம். எதிரே ஒருவர் வந்தார், அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம்.

“கண்காட்சியை பத்தி என்ன நினைக்கிறீங்க சார், இது எந்த வகையில் இந்து மதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்”.

இவர் அக்ரஹாரத் தமிழர் எனவே அவரின் தாய் மொழியான ஆங்கிலத்தில் தான் துவங்கினார்.

“நீங்க பாத்தீங்கன்னா, எனக்கு இந்த நாட்ல வாழவே பயமா இருக்கு, போன வாரம் கூட பாருங்க அம்பத்தூர்ல ஒருத்தரை துடிக்கத் துடிக்க வெட்டி கொன்னுருக்காங்க பாவிங்க, ஆனா போலீஸ் வேற ஏதோ காரணம் சொல்லுது, நேராவே சொல்றனே, ஐ வோட் பார் பி.ஜே.பி, நான் ஆர் எஸ் எஸ் கருத்துக்களோட உடன்படுறேன். நான் பதினஞ்சு வருஷம் குஜராத்ல இருந்தேன். ரெண்டாயிரத்து ரெண்டுக்கு முன்னால நான் இருந்த ஏரியா பூரா முஸ்லீம்ஸ் தான் அதிகம். அங்க இருக்கவே பயமா இருக்கும்! ஆனா அதுக்கப்புறம் பாருங்க அங்க எந்த பிரச்சனையும் இல்ல. இங்க இன்னும் அஞ்சு வருஷத்துல இந்த மாதிரி ஈவேன்ட்லாம் நம்மால நடத்த முடியுமான்னு சந்தேகமா இருக்கு.”

“ஏன் சார் ? ஏன் அப்டி சொல்றீங்க…”

“நோ, ஐ எம் சீரியஸ்லி டெல்லிங், குறிப்பா தமிழ்நாடு அண்ட் கேரளால முஸ்லீம்ஸ் அதிகமாய்டே வர்றாங்க நான் சென்னைக்கு வந்தப்புறம் எய்ட் டைம்ஸ் என்ன மதம் மாத்த ட்ரை பண்ணங்க. நாம தான் நம்ம மதத்தையும் கல்ச்சரையும் காப்பாத்தணும். ஒற்றுமையா இருக்கணும்.”

“ஒரே மதம்னு சொல்றீங்க, ஒத்துமையா இருக்கணும்னு சொல்றீங்க ஆனா உள்ளே பார்த்தால் ஐம்பது சாதி சங்கங்கள் ஸ்டால் போட்ருக்காங்க, இதிலேயே இந்து ஒற்றுமை இல்லையே சார் ?”

“ஸீ, அப்படிதான் இருப்பாங்க ஆனா முஸ்லீம்சுக்கு எதிரா ஒரு பிரச்சனைன்னா ஒன்னா சேர்ந்துப்பாங்க, நீங்க முசாபர் நகர்ல இதை பாத்திருக்கலாம். நமக்கு எதிரிகள் முஸ்லீம்ஸ் அண்ட் கிருஸ்டியன்ஸ் தான். இந்த சாதிகளில் ஒரு சாதி அழிஞ்சு போனாலும் இன்னொரு சாதி மூலம் நம்ம மதம் இருக்கும்ல அதனால சாதி நல்லது தான், பட் அன்டச்சப்ளிட்டி தப்பு.”

“தமிழ்நாடும் கேரளாவும் மட்டும் ஏன் இப்படி இருக்குன்னு நினைக்குறீங்க ?”

அம்பேத்கர் ஸ்டால்
“இந்த சாதிகளில் ஒரு சாதி அழிஞ்சு போனாலும் இன்னொரு சாதி மூலம் நம்ம மதம் இருக்கும்ல அதனால சாதி நல்லது தான்”

“இங்க இருக்குற ஷத்ரியா கேஸ்ட், எல்லாம் ச்சப்பாஸ், இங்க இருக்குற லோ கேஸ்ட் கூட சண்ட போடுவானுங்க, ஆனா முஸ்லீம்ஸ்சை ஒன்னும் பண்ண மாட்டானுங்க. இங்க ஆட்சி பன்றவங்க எல்லாம் டெரர்ரிஸ்ட் சார், கருணாநிதி ஈவன் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரும் எல்லா தீவிரவாதிகளுக்கும் சப்போர்ட் பண்ணுறாங்க. இந்த ரெண்டு மாநிலமும் முஸ்லிம் கொடுமையில் இருந்து தப்பிச்சுட்டாங்க அதனால் அவங்களைப் பத்தி தெரியல! “

“பீஜேபீ…” என்று ஆரம்பிப்பதற்குள் பதில் சொல்லத் தொடங்கி விட்டார்.

“ஒரே மாசத்துல இத செய்யல அத செய்யல அப்டீன்னா எப்டி சார்… ஹி இஸ் நாட் சூப்பர் மேன்…”

“சார் நாங்க அதை கேட்கவில்லை அவங்க ஆட்சில மத்த மதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?”

“ஆகாதுங்க, சீ, வோட் பாலிடிக்ஸ்னு வந்துட்டாலே, எல்லார் வோட்டும் வேணும் அதனால அவங்க கூட ஒன்னும் பண்ண முடியாது, காங்கிரஸ் மாதிரி ஒரு தேசதுரோக கட்சிக்கு மோடி எவ்வளவோ பரவாயில்லை.“

தேசபக்தர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பு துறையில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட இருப்பதை பற்றி கேட்ட போது சத்தியமா எனக்கு விசயமே தெரியாதே, என்று சூடத்தை தேடினார்.

“உங்க பசங்களை கூட்டிட்டு வந்திருக்கீங்களா?”

“பையனை கூப்பிட்டேன், வந்தான் ஆனா அவனுக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல அதனால பாதியிலேயே போய்ட்டான். இப்ப எம்.எஸ்.சி பயோடெக் பண்றான்.”

“இந்து ஆன்மீக கண்காட்சின்னு பெயர் வச்சுருக்காங்க ஆனா உள்ளே மதத்தை பத்தி ஒண்ணுமே இல்லையே நிறைய கடைங்க தான் இருக்கு, இதை எப்படி பாக்குறீங்க ?”

சற்று யோசித்தவர், தனது பையை திறந்து காட்டுகிறார். “நானே சில மெடிசின்ஸ் வாங்கத்தான் வந்தேன். அண்ட் எக்கோ டூரிசம் பத்தி விசாரிச்சுட்டு போலாம்னு, பாருங்க எல்லாத்துலயும் இப்டி நெகட்டிவே பார்க்கக் கூடாது. எதோ நாலு விஷயம் மதத்தை பத்தி மக்களுக்கு போய் சேர்ந்தா அதுவே போதும்.”

அவர் தெரிந்து கொண்ட அந்த நாலு விஷயங்கள் என்னவாக இருக்கும்? சாதி வெறி, முசுலீம் எதிர்ப்பு, மோடி ஆதரவு, பார்ப்பனிய சடங்கு போன்றவை அன்றி வேறென்ன?

பள்ளி வேன்
பல்வேறு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கில் சீருடைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அன்று விடுமுறை என்பதால், பல்வேறு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கில் சீருடைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆன்மிகத்தின் பெயரில் மதவெறி எப்படி சுலபமாக பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு செல்லப்படுகிறது? நடுத்தர வர்க்கத்திடம் மட்டுமல்ல பிஞ்சு நெஞ்சங்களிலும் இந்து பாசிசத்தை விதைப்பது இப்படித் தான். இது தமிழகம் தானா என்று ஒரு கணம் கிள்ளிப்பார்த்துக்கொள்ளும் அளவிற்கு குழந்தைகளை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஸ்டாலிலும் குழந்தைகளுக்கேற்ற மொழியில் மதவெறி நஞ்சை ஊட்டிக்கொண்டிருந்தனர்.

கண்காட்சி என்கிற பெயரில் நடத்தப்பட்ட இது, சங்கப்பரிவார பாசிச கும்பலுக்கு ஒரு விசிட்டிங் கார்ட். பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், இந்து நடுத்தர வர்க்கத்தின் மனதிலும் மதவெறியை விதைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு வாய்த்த களம். இந்த கண்காட்சி முழுவதும் மதவெறியை தூண்டும் வாசகங்களும், காட்சிகளும், படங்களும், விளக்கவுரைகளும் நிரம்பி வழிந்தன. ஒன்றுமே தெரியாத ஒருவன் இந்த அரங்குகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினாலே அவன் இந்துவெறியனாக மாறி விடுவான்.

ஆதிக்க சாதி வெறி சங்கங்களை திரட்டி, ஒன்றுபடுத்தி அதை முசுலீம் எதிர்ப்பாக மாற்றி, நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு கலாச்சாரத்தை மனதில் கொண்டு ‘சேவை’ செய்து அவர்களையும் மதவெறிக்குள் கொண்டு வந்து மொத்தத்தில் தமிழகத்தில் ஒரு கலவரத்திற்கான மனத்தயாரிப்பை கருத்துக்கள் காட்சிகள் பேரில் செய்கிறது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி.

பாஜக ஆட்சி நடைபெறுவதால் வரும் ஆண்டுகளில் இதே அணுகுமுறை இன்னமும் தீவிரமாக நடைபெறும். தமிழகம் அமைதிப்பூங்காவாக நீடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அதை களத்தில் காட்டாவிட்டால் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்தி பேசும் மாநிலங்களின் பிற்போக்குத்தனம் பிரச்சினைகள் அனைத்தும் இங்கேயும் அமலாக்கப்படும். என்ன செய்யப் போகிறோம்?

–    முற்றும்.

–    வினவு செய்தியாளர் குழு.

  1. ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
  2. வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
  3. ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி
  4. ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

சிஸ்கோ – இலாபம் வேண்டுமா ஊழியர்களை தூக்கி எறி !

0

ணினி வலையமைப்பு (நெட்வொர்க்) துறையில் முன்னணி நிறுவனமான சிஸ்கோ 6,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. இணைய வலைப்பின்னலுக்கு உதவும் வழிச்செயலிகளையும், (ரவுட்டர்கள்), நிலைமாற்றிகளையும் (சுவிட்சுகள்) தயாரிக்கும் நிறுவனமான சிஸ்கோ சமீபகாலங்களில் தொலைக்காட்சி வாங்கிகள் (செட்டாப் பாக்ஸ்கள்), கணினி பாதுகாப்பு, தொலைத் தொடர்பு உரையாடல் (வீடியோ கான்பரன்சிங்) போன்ற துறைகளிலும் தனது தொழில்களை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியக் கிளையில் சுமார் 10,000 பேர் வேலை செய்கின்றனர். இவர்களும் இந்த வேலை இழப்பினால் பாதிக்கப்படலாம்.

சிஸ்கோ
சிஸ்கோ 6,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது

2014-ம் ஆண்டு ஜூலையுடன் முடிவடைந்த காலாண்டில் கிட்டத்தட்ட ரூ 13,200 கோடியை ($220 கோடி) லாபமாக மட்டும் ஈட்டியுள்ளது சிஸ்கோ; வருவாய் $1240 கோடியாகஉள்ளது. ஆனால் இவை கடந்த ஆண்டுகளை விட முறையே 1% , 0.5% குறைந்துள்ளதால் ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளது சிஸ்கோ. அதாவது நிறுவனத்திற்கு நயா பைசா அளவுக்குக் கூட நஷ்டமில்லை, அவர்கள் எதிர்பார்த்த அளவை விட 0.5% லாபம் குறைந்துவிட்டது, அவ்வளவுதான்.

வேலை இழப்பவர்களில் 15% நிர்வாக பிரிவில் இருக்கும் துணைத்தலைவர் போன்ற உய ர்பதவிகளில் இருப்பவர்கள் என்று கூறியுள்ளது சிஸ்கோ. அதாவது, 85% பேர் சாதாரண ஊழியர்கள்.

பொருளாதார தேக்கநிலை காரணமாகவும், கணினி வலையமைப்பு துறையில் புதிய போட்டி நிறுவனங்களின் வரவினாலும் சிஸ்கோவின் சந்தை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் முதலாளித்துவ வல்லுநர்களும், பத்திரிகைகளும் ஆட்குறைப்பு நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். இதன் மூலம் சிஸ்கோ சுமார் $100 கோடி வரை வரை செலவுகளைக் குறைக்க முடியும் என்று மனம் மகிழ்ந்துள்ளனர்.

“பலருக்கு வேலை இழப்பு துருதிருஷ்டமாக இருக்கலாம். ஆனால், சிஸ்கோ போட்டியில் முன்னேறுவதற்கு இது அவசியம் என்று கருதுகிறேன். சிஸ்கோ சரியான நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார் முதலீட்டு ஆய்வாளர் மார்ஷல்.

சிஸ்கோவின் முதன்மை செயல் அலுவலர்  சாமபர்ஸ் “சந்தை யாருக்காவும் காத்திருக்காது, நாங்கள் சந்தைப் போக்கை எதிர்நோக்கி செயல்படுவோம். அதற்கு சில கடினமான முடிவுகளை தேவையாக இருக்கிறது.“ என்று கூறி இந்த வேலைநீக்கத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

நிறுவனம் லாபம் சம்பாதிக்கும் போது ஆதாயம் அனைத்தையும் முதலாளிகள் ஒதுக்கிக் கொள்ளலாம்; சந்தையில் இன்னொரு நிறுவனம் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், அதன் பாதிப்பை தொழிலாளர்கள் மீது சுமத்தி வேலையை வீட்டு நீக்கலாம் என்பதுதான் முதலாளித்துவ சந்தை முன்வைக்கும் வளர்ச்சி சூத்திரம்.

இவ்வாறு, ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு சக்கையாக துப்பி எறிவது, ‘வெற்றிகரமான’ முதலாளித்துவ நிறுவனங்களின் வாடிக்கை. சிஸ்கோ இதை கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு கோடைக் காலத்திலும் செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறு நிறுவனங்களை வாங்கி தன்னுடன் இணைத்துக் கொள்வதும், அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் தனது லாபவேட்டையின் செயல் முறையாக வைத்துள்ளது. கடந்த ஆண்டு 4,000 ஊழியர்கள், 2012-ல் 1,300 ஊழியர்கள், 2011-ல் 6,500 ஊழியர்கள் என ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.

முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கு லாபம் இல்லை என்றால் தொழிலை நடத்தாது. குறைவான லாபத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

“10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும்.
20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது.
50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்ய துணிவு கொள்கிறது.
100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது.
300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும்.
தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும்.”

என்று மூலதனம் நூலில் மார்க்ஸ் குறிப்பிடுவதன்படி தங்கள் லாபத்தில் 1% குறைவதைகூட பொருத்துக்கொள்ள இயலாமல ஊழியர்களின் வயிற்றில் அடித்து அதை ஈடுகட்ட முயற்சிக்கிறது சிஸ்கோ.

இதே போன்று கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 18,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மைக்ரோசாஃப்ட் பங்கு வைத்துள்ள “இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ்” என்ற நிறுவனம் 19% ஆட்குறைப்பை அறிவித்துள்ளது. இத்தனைக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்பார்த்ததைவிட அதிக லாபமாக $570 கோடி டாலர் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் சமீபத்தில் இணைத்துக்கொண்ட நோக்கியா நிறுவனத்தில், சந்தைப்படுத்தல் பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் ஆயிரக்கணக்கானவர்களை வேலை நீக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் இயங்கிவரும் நோக்கியா நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஏற்கனவே விருப்ப ஓய்வு என்ற பெயரில் மோசடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சென்னை நோக்கியா, பல ஆண்டுகளாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ 21,153 கோடியையும், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ 2,400 கோடியையும் செலுத்தாமல் ஏய்ப்பு செயதிருக்கிறது.

இத்தனைக்கும் மதிப்புக் கூடுதல் வரியாகவும், மத்திய விற்பனை வரியாகவும் நோக்கியா எவ்வளவு தொகையைச் செலுத்துகிறதோ, அந்தத் தொகையை தமிழக அரசு நோக்கியாவுக்குத் திருப்பிக் கொடுத்து வந்தது. அந்த வகையில் 2005 துவங்கி 4 ஆண்டுகளில் மட்டும் நோக்கியாவின் உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் தமிழக அரசு நோக்கியாவுக்கு கொடுத்திருக்கும் தொகை 650 கோடி ரூபாய். நோக்கியா தனது தொழிற்சாலையில் போட்டிருக்கும் முதலீடும் ஏறத்தாழ 650 கோடி ரூபாய்தான். 2010 நிலவரப்படி தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ 1020 கோடி.

இப்படி வேலை உத்தரவாதமின்றி ஊழியர்களை சுரண்டுவது, பலவித வரிச்சலுகைகள் மூலம் மக்கள் பணத்தை விழுங்குவது என கொழுத்து வரும் முதலாளித்துவ நிறுவனங்கள், தமது லாபத்திற்கு பங்கம் வரும் போது ஊழியர்களை தூக்கி எறிந்து ஆட்குறைப்பை அறிவிக்கின்றனர். சென்னை உள்ளிட்ட உலகின் எந்த பகுதியில் எத்தனை பேர் நீக்கப்பட உள்ளார்கள் என்ற தகவலை இன்னும் மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சீனாவில் மைக்ரோசாப்ட்டுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறர்கள்.

மைக்ரோசாஃப்ட்டின் தலைவராக இந்தியரான சத்திய நாதெல்லா என்பவர் நியமிக்கப்பட்டவுடன் இந்தியாவிற்கு பெருமை என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்த ஊடகங்களும், தேசபக்தர்களும் நோக்கியா வேலை பறிப்பு குறித்து கருத்து தெரிவிக்காமல் சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார்கள்.

வேலைநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் தான் 15 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு திறமையாக  வேலை செய்து வருவதாகவும், பணிதிறனில் குறைபாடு இல்லாத தன்னை எந்த காரணமும் கூறாமல் பழைய கணினியை தூக்கி எறிவது போல எறிந்து விட்டதாக வேதனையுடன் கூறுகிறார். வேலை இழப்பைவிட நிறுவனம் தன் குழந்தைக்கு வழங்கி வந்த காப்பீடு இனி இல்லை என்பது அவரை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

சிஸ்கோ
நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்கள் ஈவு இரக்கமின்றி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.

இதே போன்று கடந்த மே மாதம் எச்.பி நிறுவனம் 16,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் கூறும் வேலைகளை தன் சொந்த வேலையாக எடுத்துக்கொண்டு திட்டமிட்ட தேதிக்குள் பணியை முடிக்கவேண்டும் என்று தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் இராப்பகலாக உழைத்த ஊழியர்கள், அடுத்த ஆண்டு நல்ல சம்பள உயர்வு தருகிறோம் என்று ஆசைகாட்டி உழைப்பை பிழிந்து எடுக்கப்பட்ட ஊழியர்கள், அமெரிக்க சொர்க்கம் செல்லும் ஆசைகாட்டி உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாட்டு தொழிலாளிகள் என பல ஆண்டுகளாக நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்கள் ஈவு இரக்கமின்றி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.

இந்த வேலையை நம்பி வாங்கிய கடனட்டை கடன்கள், கடன் தவணைகள், வீட்டு செலவுகள், வீட்டுக் கடன், கார் கடன், திருமண செலவுகள், தான் திறமையில்லாதவனோ என்ற உளவியல் சிக்கல், அடுத்த வேலை எப்போது கிடைக்கும், கிடைக்குமா என்ற நிச்சயமின்மை என பலவித பிரச்சனைகளுடன் விசிறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

இதுபோன்ற நிறுவனங்களை தான் வேலைவாய்ப்பை பெருக்கும் அடசய பாத்திரம் என்று நம்பச்சொல்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறிதான் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நியாயப்படுத்துகிறது அரசு. அந்த வேலைவாய்ப்பின் லட்சணம் இது தான். சட்டபூர்வ உரிமை கூட கொடுக்காமல் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டிவிட்டு நடுத்தெருவில் நிறுத்துவதுதான் அவர்கள் உருவாக்கும் வேலைவாய்ப்பின் லட்சணம்.

முதலாளிகளின் மதமான சந்தையின் புனித நூல்களில் லாபத்தை பெருக்குவதுதான் அறம். அதற்காக எதையும் செய்யலாம் என்பது தான் இவர்களின் புனிதவிதிகள். இதை எதித்து போராட வேண்டுமென்றால் தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சங்கமாக திரள்வதை தவிர வேறு வழியில்லை.

–    ரவி

மேலும் படிக்க

ஆகஸ்டு-15: கொரியாவின் கொடி பறக்குது !

1

“சுதந்திர தினம்” என்றழைக்கப்படும் ஆகஸ்டு 15-ம் தேதியன்று, சங்கம் அமைக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட தொழிலாளர்கள், தென்கொரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக, காஞ்சிபுரத்தில் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

“இது சட்டவிரோதக் காவல் என்பதால் உடனே விடுவிக்க வேண்டும்” என்று தாக்கல் செய்யப்பட்ட மனு 17-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. 19-ம் தேதியன்று காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றமும் தொழிலாளர்களை பிணையில் விடுவிக்க மறுத்தது. பிறகு 22-ம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்றம் தொழிலாளர்களை பிணையில் விடுவித்திருக்கிறது. தொழிலாளர்கள் பிணையில் வெளியே வரவே முடியாமல் செய்வது என்ற நோக்கத்தில் வெறித்தனமாக இருந்தது நிர்வாகம். தற்போது பிணையில் வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு தென்கொரிய கம்பெனியின் தொழிலாளர் பிரச்சினை அல்ல, எல்லா கம்பெனிகளும் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் திரண்டு நின்று தொழிலாளி வர்க்கத்தை நசுக்கும் பிரச்சினை. எனவே, நாம் இதன் பின்புலத்தை அறிவது அவசியம்.

000

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் இயங்கி வரும் கெஸ்டாம் சுங்வூ ஹைடெக் (GSH) என்ற என்ற தென்கொரிய நிறுவனம் ஹூண்டாய் கார்களுக்கு கதவுகளை தயாரித்து கொடுக்கிறது. இங்கு பணிபுரியும் 3000 பேரில் 300 பேர் கூட நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை.

ஊதியம் குறைவு என்பது மட்டுமல்ல, 8 மணி நேரத்தை தாண்டி எத்தனை நேரம் சொன்னாலும் வேலை செய்யவேண்டும். லீவு நாட்களில் வரச்சொன்னால் வர வேண்டும், அடுத்தடுத்து ஷிப்டுகள் தொடர்ந்து வேலை செய்யச் சொன்னால் மறுக்க முடியாது. வேலை நிரந்தரம் கிடையாது. சங்கமும் கூடாது. இந்த தொழில் நிறுவனத்தில் மட்டுமல்ல, எல்லா பன்னாட்டு நிறுவனங்களிலும், இந்திய தரகுமுதலாளிகளின் நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை.

இவ்வாறு தொழிலாளிகளின் ரத்தத்தைப் பிழிவதை, சட்டபூர்வமாக நியாயப்படுத்துவதற்கு இந்நிறுவனம் ஒரு அயோக்கியத்தனமான தந்திரம் செய்துள்ளது. தொழிலாளி என்ற வரையறையில் வந்தால்தான், “சங்கம், தொழிற்தகராறு சட்டம், வேலைநேரம்” போன்ற பிரச்சினைகளெல்லாம் வரும் என்பதால் தொழிலாளர்களையெல்லாம், “அலுவலக ஊழியர்கள்” (ஸ்டாஃப்) என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறது. தென்கொரிய கம்பெனி மட்டுமின்றி பல நிறுவனங்களும் கடைப்பிடித்து வரும் தந்திரம் இது – ஐ.டி துறையில் எல்லா ஊழியர்களுக்கும் “எக்சிகியூடிவ்” என்று பெயரிட்டிருப்பது போல!

புதிய ஜனநயாகத் தொழிலாளர் முன்னணி இதனை எதிர்த்து விடாப்பிடியாக போராடியதன் விளைவாக, “இவர்களெல்லாம் தொழிலாளர்களே” என்று தொழிலாளர் துறை துணை ஆணையர் அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்குரிய உரிமைகளைக் கேட்டு பு.ஜ.தொ.மு வழக்குகள் போட்டிருக்கிறது, போராட்டமும் நடத்தி வருகிறது.

மாவட்ட ஆட்சியருக்கு மனு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இது மட்டுமல்ல, நிரந்தரத் தொழிலாளிகள் என்று 10% பேரை வைத்துக் கொண்டு, 90% பேரை காண்டிராக்ட் தொழிலாளிகளாக வைத்து சுரண்டி வந்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் பு.ஜ.தொ.மு முடிவு கட்டியது. காண்டிராக்ட் தொழிலாளிகளுடன் நிரந்தரத் தொழிலாளிகளையும் ஒன்றுபடுத்தி சங்கம் கட்டியது. வரவிருக்கும் “அபாயத்தை” புரிந்து கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் GSH உடன் சேர்ந்து சதியாலோசனையில் இறங்கின.

GSH நிர்வாகம், சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் 43 பேரை வேலை நீக்கமும், 12 பேரை தற்காலிக வேலை நீக்கமும் செய்தது. தொழிலாளிகள் பணியவில்லை. இதற்கெதிரான வழக்கு விசாரணை 2014 ஜூலையில் முடிந்து, நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தகுதியானவை என்று நிரூபிக்கப்பட்டன. இருப்பினும் தொழிலாளர் துறை ஆணையர் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

நிர்வாகம் மீண்டும் பழிவாங்கும் என்று எதிர்பார்த்து, “வழக்கு முடிவதற்கு முன் புதிதாக யாரையும் வேலைநீக்கம் செய்யக்கூடாது” என்று உயர் நீதிமன்றத்தில் பு.ஜ.தொ.மு தடையாணை பெற்றது. நீதிமன்ற தடையாணையை மீறி, 2014 மே மாதம் 12 பேரை தற்காலிக வேலை நீக்கம் செய்தது நிர்வாகம்.

மேற்கூறிய நிர்வாகத்தின் எல்லாவிதமான குற்றங்களையும், நீதிமன்ற உத்தரவு மீறல்களையும் காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க கோரினார்கள் தொழிலாளர்கள். இல்லையேல் “ஆகஸ்டு 15 அன்று போராடுவோம்” என்று அறிவித்தார்கள். நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியர், “போராடுவது உங்கள் உரிமை” என்று பதிலளித்தார். அந்த உரிமையை அமல்படுத்தியதற்குத்தான் தொழிலாளிகள் மீதும் பெண்கள் குழந்தைகள் மீதும் தடியடி, சிறை!

000

தொழிலாளிகளை விடுவிப்பதற்காக ஒரு வாரமாக நீதிமன்றத்தில் நடந்த போராட்டம், அரசையும் போலீசையும் பற்றிய உண்மையை பலருக்கும் புரிய வைத்திருக்கிறது.

17 -ம் தேதியன்று உயர்நீதிமன்ற விசாரணையின்போது “சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்தி சுதந்திர தினம் கொண்டாடுவதை தடுக்கிறார்கள் மை லார்டு” என்று ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு நீதிபதியிடம் குமுறினார், தென்கொரிய GSH நிறுவனத்தின் வக்கீல். அப்புறம், “தென்கொரியாவின் சுதந்திர தினமும் ஆகஸ்டு 15-ம் தேதிதான் மைலார்டு” என்று கொரியாவின் சார்பிலும் கூவினார் அந்த வக்கீல். கொரிய முதலாளிகள் மட்டும் இதை நேரில் பார்த்திருந்தால், “கொடுத்த காசுக்கு மேல கூவுறான்டா ங்கொய்யால” என்று கண் கலங்கியிருப்பார்கள். மேற்படி வக்கீலின் பெயர் சந்திர சேகரன். தொழிலாளர் தரப்பு வழக்குகளை நடத்தும் லேபர் லாயர்கள் நிறைந்த ராவ் அண்டு ரெட்டி என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து தொழில் கற்றுக்கொண்டு, தற்போது தொழிலாளர்களுக்கு எதிராக கோடரிக்காம்பாக “தொழில்” செய்பவர்.

19-ம் தேதி காஞ்சிபுரம் செசன்சு நீதிமன்றத்தில் தொழிலாளர்களின் பிணை மனு விசாரணைக்கு வந்தது “மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன் சட்டவிரோதமாக கூடினார்கள், அரசு ஊழியர்களை தாக்கினார்கள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள்” என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை நடத்த வேண்டியவர் அரசு வழக்குரைஞர். ஆனால் தென்கொரிய கம்பெனி வக்கீல்தான் அவரை முந்திக் கொண்டு, வழக்கை நடத்தினார். “இந்த சங்கத்துக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல, இதோ டி.வி.எஸ் காரர்கள் (ஆக்சில் இந்தியா) வந்திருக்கிறார்கள், அவர்களையும் கேளுங்கள், யுவர் ஆனர்” என்று கூட்டணி அமைத்துக் கூவினார் GSH நிறுவனத்தின் வக்கீல். அரசை நடத்துவதே பன்னாட்டு கம்பெனிகள்தான் எனும்போது, வழக்கையும் அவர்கள் தானே நடத்தவேண்டும்!

காக்கிச் சட்டையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. கம்பெனியின் சம்பளப் பட்டியலில் உள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கோர்ட்டா, போலீசு ஸ்டேசனா என்று சந்தேகப்படும் அளவுக்கும், நீதிபதியை மிரட்டும் அளவுக்கும் காக்கிக் கூட்டம். ஆகஸ்டு 15 அன்று நடைபெற்ற போராட்டத்தை புகைப்படம், வீடியோ எடுத்த உளவுத்துறை போலீசார் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். அங்கே திரண்டிருந்த பல்வேறு கம்பெனிகளின் எச்.ஆர் அதிகாரிகளிடம் கொடுத்து “இவன் உங்க கம்பெனியா பாருங்க” என்று ஆள்காட்டி வேலை செய்து கொண்டிருந்தனர். ரிட்டையர்டு உளவுத்துறை அதிகாரிகளும் கிளம்பி வந்து விட்டார்கள். பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் தாங்கள் பணிக்காலத்தில் சேமித்து வைத்திருந்த பு.ஜ.தொ.மு பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற “தொல்லியல் ஆவணங்களை” நகல் எடுத்து எச்.ஆர் அதிகாரிகளுக்கு விநியோகித்துவிட்டு, தலையைச் சொரிந்து பல்லிளித்துக் கொண்டிருந்தனர்.

காலையில் விசாரணைக்கு வந்த பிணை மனு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், காக்கிகள் அனைவருக்கும் அருகிலுள்ள பெரிய லாட்ஜ்களில் கறிசோறும், ஓய்வெடுக்க ஏ.சி ரூமும் ஏற்பாடு செய்திருந்தார்கள் கொரிய முதலாளிகள். ஒரே நாளில் விசாரித்து உத்தரவிடவேண்டும் என்று உயர்நீதி மன்றத்திடம் உத்தரவு வாங்கியிருந்த காரணத்தினால், வழக்கு மறுநாளைக்கு ஒத்திவைக்கப்படவில்லை. மறுநாளும் வழக்கு நடந்திருந்தால், ஏட்டு முதல் டி.எஸ்பி வரையிலான அனைவருக்கும் தேவைப்பட்ட அனைத்தையும் நிர்வாகம் சப்ளை செய்திருக்கும். காஞ்சி அமர்வு நீதிமன்றம் அன்று மாலை தொழிலாளிகளின் பிணை மனுவை நிராகரித்து விட்டது.

புஜதொமு வின் மேல்முறையீட்டு மனு 21-ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி தேவதாசன் முன் விசாரணைக்கு வந்தது.

நிர்வாகத்தின் வக்கீலான மேற்படி சந்திரசேகரன், “சுதந்திர தினத்தன்று முழக்கமிட்டார்கள் மைலார்டு” என்று தொடங்கினார்.

“நீங்கள் கொண்டாடுகிறீர்கள், அவர்கள் கஷ்டம், அவர்கள் போராடுகிறார்கள்” என்றார் நீதிபதி.

“வேலை போய்விடும் என்று பயந்து வீட்டு முகவரியை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் யுவர் ஆனர்” என்றார் அரசு வக்கீல்.

“பயப்படுவது நியாயம்தானே” என்றார் நீதிபதி.

“முகவரி பொய்யாக இருந்தால், புலன் விசாரணை நடத்த முடியாது மைலார்டு” என்றார் சந்திரசேகரன்.

“அதை விசாரணை அதிகாரி பார்த்துக் கொள்வார், நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்று மூக்கறுத்த நீதிபதி,

“இது மூலதனத்துக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான போராட்டம்; போலீசார் தொழிலாளிகளை கிரிமினல்கள் போல நடத்தக்கூடாது” என்றும் கூறி, தொழிலாளர்கள் அனைவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

கஸ்டு 23 சனிக்கிழமையன்று, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களும், அவர்களது மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள், பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனப் பெருந்திரளாக கூடிய அனுபவப் பகிர்வுக் கூட்டம் நடைபெற்றது. உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, சிவக்குமார் ஆகியோரும், மனித உரிமைப் பாதுகாப்பை மையத்தின் வழக்குரைஞர்களும் போராட்டத்தின் நியாயத்தையும், இதில் பன்னாட்டு நிறுவனமும் அரசும் போலீசும் அமைத்திருக்கும் கூட்டணியையும், இத்தகைய போராட்டங்கள் குறித்த வரலாற்றையும் விளக்கிப் பேசினர். புஜதொமு பொருளாளர் தோழர் விஜயகுமார் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வழக்குகள் குறித்து விளக்கிப் பேசினார். சிறை சென்ற தொழிலாளர்களில் சிலர் கவிதை வாசித்தனர். தொழிலாளர் வீட்டுப் பெண்கள் தமது பார்வையில் இந்த போராட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“வீட்டுக்காரர் ஜெயிலுக்குப் போவதெல்லாம் குடும்பத்துக்கு அவமானம் என்றுதான் முதலில் நினைத்தோம். இப்போது பெருமையாக இருக்கிறது. பெயில் கிடைக்கவில்லை என்றவுடன் ஒவ்வொருத்தரும் பத்து முறைக்கு மேல் போன் பண்ணி சங்கத்து தோழர்களிடம் பேசியிருப்போம். ஆயிரம் ரெண்டாயிரம் போன் வந்திருக்கும். அத்தனைக்கும் அலுத்துக் கொள்ளாமல் பதில் சொன்னார்கள். குடும்பங்களை தனித்தனியாக விசாரித்து கவனித்துக் கொண்டார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர் பெண்கள். கூடியிருந்த தொழிலாளர்களிடையே குடும்பம் என்ற எல்லையைத் தாண்டி, தோழமை ஒரு புதிய பரிமாணத்துக்கு விரிவடைவதைக் காண முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

000

கஸ்டு 15 போராட்டம் GSH நிறுவனத் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாகத்தான் நடத்தப்பட்டது என்ற போதிலும், இதில் கலந்து கொண்டவர்கள் அந்தக் கம்பெனி தொழிலாளர்கள் மட்டுமல்ல. டி.வி.எஸ் உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பெற்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்கள். ஏசியன் பெயின்ட்ஸின் ஏ.ஐ.சி.சி.டி.யு தொழிற்சங்கம் பொன்றோர் போராட்டத்தை வாழ்த்தி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த வர்க்க ஒற்றுமை எதிரிகளை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது.

இப்போராட்டம் திருப்பெரும்புதூர் தொழிலாளிகள் மத்தியில் அகஸ்டு 15 சுதந்திரம் பற்றிய மாயையை அகற்றத் தொடங்கியிருக்கிறது. “என்ன இருந்தாலும் சுதந்திர தினத்தன்று போராடலாமா?” என்று பேசிக் கொண்டிருந்த தொழிலாளிகள் கூட, “எத்தனை பிரச்சினை இருந்தால் பெண்டாட்டி பிள்ளைகளுடன் போராட வருவார்கள்?” என்று அதன் நியாயத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள். “சங்கம் வைக்கவே சுதந்திரம் இல்லை, அப்புறம் என்ன வெங்காய சுதந்திரம்?” என்றும் “கொரியா கம்பெனிக்காரனுக்குத்தான் சுதந்திரம் இருக்கு, நமக்கு எங்கடா இருக்கு?” என்ற தெளிவு தொழிலாளிகளிடையே பரவத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தெளிவு எதிரிகளைத் திகிலடைய வைத்துள்ளது.

ஆகஸ்டு-25 திங்கட்கிழமை :

பிணையில் வெளியே வந்த தொழிலாளர்கள் திருப்பெரும்புதூர் ஆலைக்கு பணிக்கு செல்கின்றனர். திருப்பெரும்புதூர் போலீசு, உளவுத்துறை போலீசார், விஷ்ணு காஞ்சி சட்டம் ஒழுங்கு போலீசு என ஒரு பெரும்படையே ஆலை வாயிலில் நிற்கிறது. தொழிலாளிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அனைவருக்கும் பணிநீக்க உத்தரவு வழங்கப்படுகிறது. எதிர்காலம் குறித்த பயம், பட்டினி குறித்த அச்சம்! இதுதானே தொழிலாளி வர்க்கத்தை மிரட்டிப் பணிய வைப்பதற்கு முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் ஆயுதம்!

இதே ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிப்பாகம் செய்து தரும் ஒய்.எஸ்.ஐ ஆட்டோமோடிவ் என்ற கம்பெனியில் 6 ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து, பணி நிரந்தரம் செய்யவிருப்பதாக நிர்வாகம் சொன்னதை நம்பி திருமணம் செய்தார், பாலாஜி என்ற தொழிலாளி. குழந்தையும் பிறந்துவிட்டது. திடீரென்று சென்ற மே 8-ம் தேதியன்று, ஆட்குறைப்பு என்ற பேரில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். “இனி நான் எங்கே போவேன்” என்று கெஞ்சிய பாலாஜியை “எங்கேயாவது போய் செத்துத்தொலை” என்று எச்.ஆர் கூறவே, ஆலையில் இருந்த தின்னரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சக தொழிலாளிகள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி விட்டனர். “இது தற்கொலை முயற்சியல்ல நாடகம்” என்று கூறி, மருத்துவ செலவைக் கூட ஏற்க மறுத்து விட்டது நிர்வாகம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட 55 தொழிலாளிகளைப் பணியமர்த்தக் கோரியதற்காக GSH நிர்வாகம் வழங்கியிருக்கும் தண்டனை – அத்தனை பேருக்கும் பணி நீக்கம்! சங்கம் அமைக்கும் சுதந்திரம் கேட்டதற்காக சிறை! மாருதி தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று மிரட்டிய குர்கான் போலீசைப் போலவே, தற்போது சிறை சென்ற தொழிலாளர் குடும்பத்தினரை வீடு வீடாகச் சென்று மிரட்டி வருகிறது போலீசு. ஆனால் எதிரிகள் எதிர்பார்ப்பதைப் போல தொழிலாளிகள் அஞ்சவில்லை. இந்த அச்சமின்மைதான் எதிரிகளை அச்சுறுத்துகிறது. மாருதி போராட்டத்தைத் தொடர்ந்து குர்கான் வட்டார முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக கூட்டு சேர்ந்ததைப் போலவே, இங்கேயும் முதலாளிகள் “மகா பஞ்சாயத்து” அமைக்கிறார்கள்.

இதை எதிர்கொள்ள வேண்டுமானால், பாலாஜியைப் போன்ற தொழிலாளிகளின் தற்கொலை முயற்சியைத் தடுக்க வேண்டுமானால், அவர்களது குழந்தைகள் அநாதைகளாகாமல் காப்பாற்ற வேண்டுமானால் தொழிலாளிகள் ஒன்றுபடவேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சாத்தியமாக்குவோம்!

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,

இந்தப் போராட்டம், கைது, பிணை தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும், வழக்குகளை நடத்துவதற்கும், போலீசும் நிர்வாகமும் செய்து வரும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிப்பதற்கும் சில லட்சங்கள் செலவாகியிருக்கின்றன. மேலும் பல செலவுகள் காத்திருக்கின்றன. நீங்கள் செய்யும் நிதி உதவி என்பது இந்தப் போராட்டத்துக்குச் செய்யும் பேருதவியாகும். உங்கள் நன்கொடைகளை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பக் கோருகிறோம்.

பெயர் : Sudesh Kumar.M.J

வங்கிக் கணக்கு விபரங்கள்

A/C.No.: 30080252767
State Bank Of India ( SBI)
Janapanchatram Branch
Sholavaram
Thiruvallur Dist
IFSC Code: SBIN0007594
Branch Code : 007594

அலைபேசி : 94444 42374

நன்றி

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

ஜானகிராமனைக் கொன்றது யார் ?

4

விபத்தில் இறந்த தொழிலாளியை மறைத்து விட்டு, ஒரு நிறுவனம் சுதந்திர தின விழாவை கொண்டாடியதோடு, தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியதை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா?

அன்றாடம் 1,730 கார்களை உற்பத்தி செய்யும் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, சென்னை இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் தொழிற்சாலைதான் அது.

ஹூண்டாய்
ஹூண்டாய் தொழிற்சாலை

ஆனந்த சுதந்திரத்தை கொண்டாடிய பிறகு தான் முந்தைய இரவு துப்புரவு பணியினை செய்யச் சென்ற ஜானகிராமன் (வயது 52) என்ற தொழிலாளி எதிர்பாராத விபத்தால் இறந்து போனதாக அறிவித்தார்கள். ஆனால் ஏற்கெனவே 2010 விபத்தில் சில பொறியியலாளர்கள் இறந்த போது, செய்தியாக வெளியானதைப் போல இந்தமுறை அதிகம் கசியாமல் இருக்க ஊடகங்களை நல்ல முறையில் ‘கவனித்து’க் கொண்டார்கள் முதலாளிகள். அதையும் மீறி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியை வைத்தும், நேரடியாக தொழிலாளிகள், தொழிற்சங்க தலைவர்களிடம் தொலைபேசி வழியாக பேசியும் இப்பதிவு எழுதப்படுகிறது.

ஜானகிராமனுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பட்டயப் படிப்பு முடித்து அங்கு ஒப்பந்தத் தொழிலாளியாகவும், இன்னொருவர் சாதாரண தொழிலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர். இப்போது நட்ட ஈடாக பட்டயப் படிப்பு முடித்திருக்கும் அவரது மகன் தன்ராஜ் தன்னை பணி நிரந்தரம் செய்யக் கோருகிறார். அதற்கு கூட ஹுண்டாய் தயாராக இல்லை.

“சுதந்திர தினமென்பதால் எல்லோருக்கும் விடுமுறை அளித்திருந்தோம். அதனால் அவர் இறந்து கிடந்தது எங்களுக்கு தெரியாது” என்கிறார் ஹூண்டாய் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி சாய் கணேஷ். “ஜானகிராமனுக்கு மாத்திரம் விடுமுறையன்று சிறப்பு பணி தரப்பட்டிருந்ததா?” என்ற கேள்விக்கு “அவருக்கு பேக்டரிக்கு உள்ளே வேலை கிடையாது. கார் உற்பத்தியாகும் பகுதிக்கு அருகில் உள்ள தோட்டத்தில்தான் வேலை” என்று பதில் சொல்லியிருக்கிறார். பதிலுக்கும் கேள்விக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? ஹூண்டாய் வாளகத்தை விட்டு வெளியே ஹூண்டாய்க்காக வேலை செய்தால், ஹூண்டாய் கணக்கில் வராதாம்.

1996 மே மாதம் தனது முதலாவது பகற் கொள்ளையாட்சி மூலம் தமிழகத்தையே மொட்டையடித்த ஜெயா கும்பல் கடைசியாக போட்ட சில கையெழுத்துகளின் கீழ் ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனம் தமிழகத்திற்கு வந்தது. 17 மாதங்களில் அது தனது முதல் காரை தயாரித்த போது நேரடியாக 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றார் கருணாநிதி. இன்றைக்கு வரையிலும் 1500 பேர் கூட அங்கே நிரந்தர தொழிலாளர்கள் இல்லை. அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகே கை கூடியிருக்கிறது. அவர்களுக்கே கடைசியாக போட்ட ஒப்பந்தப்படி மாத வருமானம் அதிகபட்சம் ரூ 13 ஆயிரம் தான்.

மீதமுள்ள எட்டாயிரம் ஒப்பந்த தொழிலாளிகளை அழைத்து வர கங்காணி நிறுவனங்கள் பல வெண்டார்கள் என்ற பெயரில் சென்னையில் நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் லேப்கான் நிறுவனம். அந்நிறுவனம் தரும் மாதச் சம்பளம் ரூ 4 ஆயிரத்தை தாண்டாது. லாஜிஸ்டிக் பிரிவில் டிவிஎஸ் கம்பெனியும் வென்டார் சேவையை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்த லேப்கான் கம்பெனியின் தொழிலாளிதான் தற்போது மரணமடைந்துள்ள அல்லது பாதுகாப்பு அற்ற பணிச்சூழல் காரணமாக கொல்லப்பட்டுள்ள தொழிலாளி ஜானகிராமன். ஏனெனில் கழிவுநீரை அகற்றுவது மட்டும்தான் அவரது வேலை. ஆனால் உற்பத்தி, பெயிண்ட் அடித்தல் போன்றவற்றின் போது வெளிவரும் ரசாயனக் கழிவுகளை அகற்றுவது அவரது பணியல்ல. அதனை செய்வதற்கு இளங்கலை வேதியியல், அல்லது வேதி பொறியியல் படிப்பு படித்தவர்கள் தான் ஈடுபடுத்தப்பட வேண்டும். அவர்களால் தான் இதன் தாக்கத்தை ஓரளவு புரிந்துகொண்டு தேவையான போது தப்பிக்க முடியும்.

அன்று வேலையில் இருந்த மேலாளர்கள் ஒன்றும் நடந்து விடாது என்று சாதாரண தொழிலாளியான ஜானகிராமனையும் இந்த வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்தக் கழிவுகளில் மீத்தேன் வாயு இருக்கும். பாதாள சாக்கடையில் அடைப்பு எடுக்கப் போகும் பலரையும் காவு வாங்கும் அதே வாயு.

சாதாரண காற்றை விட மீத்தேன் அடர்த்தி குறைவாக இருப்பதால் இதனை சுவாசிப்பது எளிதாக இருக்கும். ஆனால் அதனை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டே இருந்தால் உயிர் வாயுவை (ஆக்சிஜன்) எடுப்பது குறைய ஆரம்பிக்கும். உயிர் வாயுவின் அளவு நீங்கள் சுவாசிக்கும் காற்றில் 12 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது ஆரோக்யமான ஒருவருக்கு கூட மயக்கமும், சுயநினைவிழத்தலும், இதயம் நின்று போவதும், வயிற்றோடு போவதும், அதனூடாக சிறுநீரகம் செயலிழந்து போவதும் என பல செயல்கள் ஒரே நேரத்தில் நிகழும். முறையாக அதற்கான படிப்புகளை படித்தவர்களுக்கே இதைப் புரிந்து சுதாரிப்பதற்குள் மரணம் வாசல் படியில் வந்து நிற்கும். 2010-ல் இறந்த பொறியாளர்கள் நால்வரும் வேதி பொறியியலில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள். அவர்களுக்கே அந்தக் கதியென்றால் எதுவுமே தெரியாத ஜானகிராமன் தான் செத்துப்போவது தெரியாமலேயே மரணத்தை தழுவியிருக்கிறார்.

அப்பாவின் மரணத்திற்கு பிறகு குடும்பத்தை தூக்கி நிறுத்த தனக்கு நிரந்தர வேலை கிடைக்காதா என்று ஏங்குகிறார், தன்ராஜ். அதனாலேயே தந்தையின் மரணத்துக்குக் காரணமானவர்களிடம் எதிர்த்து கேள்வி கேட்பதை கூட அவர் செய்யவில்லை. ஆனால் அவரது நம்பிக்கை நிறைவேறும் நிலைமை அங்கு இல்லை. மறைக்கப்பட்ட முந்தைய விபத்துக்களைப் போல இதற்கும் நிர்வாகம் பணம் தர முன்வரக் கூடும். ஏனெனில் இந்த விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை எண்ணை ஜானகிராமனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் காவல்துறையினர் எழுதவேயில்லை. உண்மையில் பிணத்தை எரித்து விட்ட காவல்துறையினர் புதைத்து விட்டதாக அதில் பதிவு செய்திருக்கின்றனர். இப்போது கூட யாராவது ஜானகிராமனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று உயர்நீதி மன்றத்தில் மனுப் போட்டால் தோண்டி எடுக்க பிணமில்லை.

இரண்டாவது, போஸ்ட் மார்ட்டம் செய்தது சுதந்திர தினத்தன்று. அப்படி பொதுவாக அரசு மருத்துவமனையில் அரசு விடுமுறையன்று பிரேத பரிசோதனை செய்ய மாட்டார்கள். மாவட்ட அளவிலான மாஜிஸ்டிரேட் தகுதியுள்ள அரசு அதிகாரியிடம் அதற்கு உத்திரவு பெற்றுத் தந்தால் தான் செய்வார்கள். அதுவும் இங்கே நடக்கவில்லை. இவையெல்லாம் ஜானகிராமன் மரணத்தை மறைப்பதற்காக அல்லது அதற்கு நிறுவனம் பொறுப்பல்ல என்று காட்டுவதற்காக திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்.

ஜானகிராமனது மரணத்துக்கு நீதி கேட்க யாரும் இப்போது தயாராக இல்லை. ‘ஹூண்டாயை தமிழகத்திற்கு கொண்டு வந்தது நான்’ என்று பெருமிதம் பாராட்டுகிறார் ஜெயா. ‘கையெழுத்து மட்டும் தான் நீ போட்டாய். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அமல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்டவன் நான்’ என்கிறார் கருணாநிதி.

இந்த விபத்து பற்றி ஜானகிராமனை வேலைக்கு அனுப்பிய வெண்டார் நிறுவன அதிபர் வர்தன் குமார் என்பவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘இன்னமும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை. கிடைத்த பிறகு பேசுகிறேன்’ என்று பொய் பேசுகிறார். ‘இல்லைங்க, என்ன நடந்தது என்றாவது சொல்லுங்கள்’ என்றதற்கு ‘அதெல்லாம் சொல்ல முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

ஒரு காலத்தில் ஹூண்டாய் நிறுவனம் ஆரம்பித்த போது ஒரு தேநீர்க்கடை வைத்திருந்தவர், இன்று அந்நிறுவனத்துக்கு வேலையாட்களை சப்ளை செய்யும் முக்கியமான வெண்டார்களில் ஒருவர். ஏறக்குறைய நான்காயிரம் தொழிலாளிகளை இவர் கம்பெனிக்கு அனுப்பி வருகிறார். முதலில் நான்கு விதமான துணைத் தொழில்களை இணைத்து இவரும், சில நண்பர்களும் ஹூண்டாயின் உயரதிகாரிகளின் ஆசியுடன் இன்போடெக் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதிலிருந்து பிரிந்தவர் உலோக, ரசாயன கழிவுகளை ஒப்பந்த அடிப்படையில் ஹூண்டாயிடம் இருந்து வாங்குவது, அதற்கு அடிமாட்டு விலையில் தொழிலாளர்களை பதிலுக்கு ஹூண்டாய்க்கு தருவது, வங்கிகளுக்கு கடனை வசூலித்து கொடுப்பது என தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி விட்டார். இவரைப் போல பல பத்து ஜாம்பவான்கள் சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடுவில் ஒட்டுண்ணியாக ஆண்டு வருகின்றனர்.

ஹூண்டாய் கார்
ஹூண்டாய் இறக்கும் ஒவ்வொரு அழகான காருக்கும் பின்னே இப்படித்தான் நரபலிகள் செய்யப்படுகின்றன.

இந்த ஒட்டுண்ணிகள் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதோடு, அவர்களது மருத்துவ காப்பீட்டு உரிமை, சங்கம் கட்டும் உரிமை, பணிப் பாதுகாப்பு போன்ற உரிமைகளைத் பறிப்பதை எந்த குற்றவுணர்ச்சியுமில்லாமல் செய்கின்றனர். இனி இந்த வர்தன் குமாருக்கு சில ஆண்டுகளில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் விருது பாரிவேந்தராலோ அல்லது புரட்சித் தலைவியின் பொற்கரங்களாலோ, விஜய் டிவியாலோ வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆக ஜானகிராமன் மரணம் இங்கே சட்டபூர்வமாக கூட பதியப்படவில்லை. சமூகங்களில் நடக்கும் கொலைகளில் கூட குற்றவாளிகள் தப்பித்தாலும் சட்டப்படி அதை நியாயப்படுத்த மாட்டார்கள். ஆனால் தொழிலாளிகளைக் கொல்லும் நிறுவனங்களில் அதை சட்டப்படியே செய்து தப்பிக்கிறார்கள்.

இலாபவெறியால் போதுமான நிரந்தர தொழிலாளிகளை எடுக்காமல், ஒப்பந்த தொழிலாளிகளை வேலைக்கெடுத்து, பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்ததன் காரணமாகவே ஜானகிராமன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஹூண்டாய் இறக்கும் ஒவ்வொரு அழகான காருக்கும் பின்னே இப்படித்தான் நரபலிகள் செய்யப்படுகின்றன.

–    கௌதமன்.

குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !

1

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நெருப்புக்குத் தம் பிள்ளைகளைச் சாகக் கொடுத்த பெற்றோரின் மனம் இன்னொருமுறை வெந்து துடிக்கும்படி வந்திருக்கிறது நீதிமன்றத் தீர்ப்பு. மாவட்டக் கல்வி அதிகாரி முதல் தொடக்கக் கல்வி அதிகாரி வரையிலான அதிகாரிகள், பள்ளி ஆசிரியைகள், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளி நிறுவனருக்கு மட்டும் ஆயுள் தண்டனை, நிறுவனரின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சத்துணவு உதவியாளர், கல்வித்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள், கட்டிடப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் என்று தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பெற்றோர்
தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பெற்றோர் (படம் : நன்றி http://www.justknow.in/Tiruvarur/News/kudanthaipallivazhakkilthiirppu/ )

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளை ஒரே கட்டிடத்தில் நடத்த அனுமதி கொடுத்ததும், தப்பிக்க வழியில்லாத ஆபத்தான அந்தக் கூரைக் கட்டிடத்திற்குள் பன்றிகளைப் போல பிள்ளைகளை அடைத்து வைத்திருந்ததும் இலஞ்சப் பேகளான அதிகாரிகளின் உதவியோடுதான் நடந்திருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். அவ்வாறிருக்க கீழ்நிலை ஊழியர்களைத் தண்டித்திருக்கும் நீதிமன்றம், அதிகாரிகளை விடுவித்திருக்கிறது. எனவே, இத்தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டுமென்று கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கோரியிருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கை, பெற்றோரின் கோபத்திலிருந்தும் ஆதங்கத்திலிருந்தும் பிறக்கிறது. எனினும், மூலமுதல் குற்றவாளியும், குற்றவாளிகளின் காவலனும் அரசுதான் எனும்போது, நீதி வேண்டி அரசிடம் மன்றாடுவதில் என்ன பயன் இருக்கிறது? 2004-ல் நடந்த இந்தப் படுகொலை 2007-ல்தான் நீதிமன்றத்திற்கே வந்திருக்கிறது. பிறகு குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் தங்களை இக்குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று மனுச்செய்திருக்கின்றனர். “முடியாது” என்று கூறுவதற்கு நீதிமன்றம் 3 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. பிறகு 2012-ல்தான் குற்றச்சாட்டு பதியப்பட்டிருக்கிறது. 2014 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. அரசு 3 அதிகாரிகளை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. கூடுதல் இழப்பீடு கோரிய பெற்றோரின் மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று, “கூடுதல் இழப்பீடு தரமுடியாது” என்று நெஞ்சில் ஈரமின்றி வாதாடுகிறது ஜெ அரசு.

ஆகவே, தற்போதைய தீர்ப்பு மட்டுமின்றி, கடந்த பத்து ஆண்டுகளில் அதிகாரிகள், போலீசு, ஆளும் கட்சிகள், நீதிபதிகள் ஆகிய அனைவருமே குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையைத்தான் செய்திருக்கின்றனர். தப்பிக்க வழி தெரியாமல், தீயில் வெந்து கருகிய அந்த 94 குழந்தைகளின் துடிப்பையோ, பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் உள்ளக் குமுறலையோ அவர்கள் கடுகளவும் பொருட்படுத்தவில்லை. “சட்டம் சரியாக இருக்கிறது, அமல் படுத்துபவர்கள்தான் சரியில்லை” என்ற கருத்து ஒவ்வொரு அநீதி நிகழும்போதும் நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், கும்பகோணம் வழக்கு விசாரணையின் காலதாமதத்தில் தொடங்கி, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது வரையிலான அனைத்தும் சட்டப்படிதான் நடந்திருக்கின்றன. எந்தத் தனியார் கல்விக் கொள்ளையின் ரத்த சாட்சியமாக 94 குழந்தைகள் வெந்து மடிந்தார்களோ, அதே தனியார் கல்விக் கொள்ளை அரசு ஆதரவுடன், நீதித்துறை அங்கீகாரத்துடன் இன்று கொடி கட்டிப் பறக்கிறது.

“ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்” என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல; வாழ்வின் எல்லாத் திசைகளிலும் இந்த அரசியல் சமூக அமைப்பினால் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் உள்ளக் குமுறல்! இம்மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வல்லது மேல்முறையீடல்ல, இவ்வரசமைப்புக்கு எதிரானதோர் மக்கள் எழுச்சி!
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________