Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 636

திருவாரூர் : உழைக்கும் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!

0

மார்ச்– 8 உலக மகளிர் தினம். பெருவாரியான பெண்கள் மகளிர் தினத்தில் வீரம் செறிந்த வரலாற்றைப் பற்றியும் பெண்ணுரிமை என்னும் சொல்லாடலின் ஆழ்ந்த அர்த்தத்தையும் அறியாமலே இருப்பது இன்று நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இன்னொரு பக்கம் ஆளும் வர்க்கப் பிழைப்புவாத அமைப்புகள் இந்நாளைக் கொச்சைப்படுத்திக் கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி, நடனம், குத்தாட்டம் என அறியாமை இருள் நிரம்பிய நுகர்வு கலாச்சார வெறியிலும் ஆழ்த்தி வைக்கின்றன.

17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சியின் போது பாரிசில் பெண்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுவதை எதிர்த்துக் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டனர். பெண்களோடு ஆண்களும் இணைந்து கொள்ள அந்த நாட்டு அரசாங்கமே ஆட்டங்கண்டது. இப்போராட்டம் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. இத்தாலியிலும் பெண்கள் தங்கள் வாக்குரிமைக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அந்நாட்டு அரசு வேறு வழியில்லாமல் 1848 மார்ச் 8 அன்று வாக்குரிமையைக் கொடுத்தது. இது அனைத்துலகப் பெண்கள் தினம் மலர வித்தாக அமைந்தது.

நியூயார்க் நகரில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் 16 மணி நேர வேலை செய்து மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டனர். அதை எதிர்த்து 1857–ல் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் இறுதியாக 1908-ல் வாக்குரிமைக்காகக் கொதித்தெழுந்து போராடியதில் அமெரிக்காவே அதிர்ந்து போனது. இவற்றின் விளைவு அனைத்துலகப் பெண்கள் மாநாடு 1910-ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடி உலக மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, மார்ச் 8-ம் நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடத் தீர்மானித்தனர். 1917-ல் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி நடந்த பின்பு 1920-ல் இருந்து மார்ச் -8 மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு தான் 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, வாக்குரிமை என அனைத்து உரிமையும் போராடித்தான் கிடைத்ததேயொழியே அரசு பாவ – புண்ணியம் பார்த்துக் கொடுக்கவில்லை.

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்
ரசியாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு மார்ச் 8-ம் தேதி, மோசமாகும் வாழ்நிலை, அடிப்படை உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, மற்றும் பற்றாக்குறையை எதிர்த்து பெருமளவு பெண்கள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை நினைவுகூரும் விதமாக சோவியத் யூனியன் 1922 முதல் மார்ச் 8-ஐ உழைக்கும் மகளிர் தினமாக கொண்டாட ஆரம்பித்தது.

இப்படிப் பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் இன்று தனியார்மயம்- தாராளமயம்-உலகமயம் எனும் சேற்றில் மூழ்கடிக்கப்படுகின்றன. ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் நவீனக் கொத்தடிமைகளாக இராப்பகலாகச் சுரண்டப்படுகின்றனர். ஷாப்பிங் மால்கள், ஜெராக்ஸ் கடைகளில் காலை முதல் மாலை வரை நொந்து கிடக்கின்றனர். விவசாயம் அழிக்கப்பட்டு விரட்டியடிக்கப்படும் பெண்களோ சித்தாள் வேலை தேடி வீதி வீதியாக அலைந்து பரிதவிக்கின்றனர். ஆயத்த ஆடைகள்,பஞ்சாலைகளிலும் தங்களின் இளமையை இழந்து விட்டுக் கோடிக்கணக்கான பெண்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இவை ஒருபுறம் போக, அரை நிலப்பிரபுத்துவ சமூகம் தாங்கிப் பிடிக்கும் ஆணாதிக்கப் பிற்போக்குத்தனமும், வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படும் அமெரிக்க நுகர்வு வெறி வக்கிர கலாச்சாரமும், 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகி்ன்றன. பெண்களையும் சிக்கிக் சீரழிக்க வைக்கின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்தில் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு வரதட்சணை சாவு நடக்கிறது. இன்னும் இந்த புள்ளி விவரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அரசே முன்னின்று சாராயத்தை ஊத்திக் கொடுத்து, தமிழச்சியின் தாலியை அறுக்கிறது. அரசு அனுமதியுடன் பரப்பப்படும் ஆபாச இணையதளமும், ஆபாச பத்திரிகைகளும், போதைப் பொருட்களும் பெண்கள் தைரியமாகச் சமூகத்தில் நடமாட முடியாத நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

2013-ம் ஆண்டு டெல்லியில் ‘நிர்பயா’ என்ற மாணவி பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் – மாணவர்கள் போராட்டத்தையொட்டி அரசு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் கமிட்டி அமைத்து, அக்கமிட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இழைக்கும் முதன்மைக் குற்றவாளிகள் சீருடையணிந்த போலீசு, துணை இராணுவம் மற்றும் இராணுவத்தினர் என்று கூறியது.

இவ்வாறு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே தற்போது பெண்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. திரும்பவும் சட்டத்தைக் கடுமையாக்கி இந்தக் குற்றக் கும்பல்களிடமே கொடுப்பதில் என்ன பயன்? உழைக்கும் பெண்கள், போராடும் ஆண்களுடன் வர்க்கமாகத் திரண்டு இந்த அரசுக் கட்டமைப்பையே நொறுக்கித் தகர்த்தெறிந்து, மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே ஒரே வழி. இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

உலக மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!

மத்திய – மாநில அரசுகளே…

  • ஆபாச இணையதளங்களைத் தடை செய்!
  • சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடு!
  • போதைப் பொருட்களைத் தடை செய்!

ஆளும் வர்க்கங்களால் ஏவப்படும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு எதிரான

பேரணி – ஆர்ப்பாட்டம்

தொடக்கம் : நகராட்சி அலுவலகம் எதிரில், திருவாருர் – மாலை 4.00 மணி
நாள் : 07-03-2015 சனிக்கிழமை
இடம் : பேருந்து நிலையம் அருகில், திருவாரூர்மாலை 5.30 மணி

தலைமை :  தோழர் ஆசாத், மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை :
தோழர் கு.ம.பொன்னுசாமி, மாவட்ட அமைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு.
தோழர் நிர்மலா,  மாவட்டத் தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தோழர் காளியப்பன், மாநில இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

தகவல்

புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
திருவாரூர். தொடர்புக்கு : 9943494590

Email: rsyftvr1917@gmail.com
தொடர்புக்கு : 9943495900

மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்

27

ங்கத்து பார்ப்பனரான பிரணாப் முகர்ஜி, மராட்டிய பேஷ்வா பார்ப்பனர்களின் கோரிக்கையை ஏற்று ஏழைகளின் உணவான மாட்டுக்கறியை தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.

மாட்டிறைச்சி அரசியல்
மாட்டிறைச்சி அரசியல் – மோடிக்கு போட்ட ஓட்டு மாட்டுக்கு கொடுத்த வாழ்வு. மக்களுக்கு?

மராட்டியத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதிக்கும் சட்டம் 1976-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதில் எருதுகள் மற்றும் காளைகள் மட்டும் இறைச்சிக்கென்று சான்றிதழ் தரப்பட்டு அனுமதிக்கப்பட்டது. கருப்பு நிறத்திலான எருமை மாடுகள் அதில் எருதோ பசுவோ இச்சட்டத்தில் வராது. அவாளின் புனிதம் என்பது வெள்ளைநிற பசுவுக்கு மட்டும்தான்.

1995-ம் ஆண்டில் பா.ஜ.க-சிவசேனை ஆட்சியின் போது வெள்ளை நிற காளை, எருதுகளையும் தடை செய்யுமாறு மசோதா நிறைவேற்றினார்கள். அப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட மசோதாவுக்கு இப்போதுதான் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்து மக்கள் வயிற்றில் மண்ணள்ளி போட்டிருக்கிறார்.

இனி மராட்டியத்தில் எருமை இறைச்சி மட்டும்தான் கிடைக்கும். மற்ற மாட்டிறைச்சி கிடைக்காது. “இப்புதிய சட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழைப்பார்கள், பிற இறைச்சி விலைகள் உயரும்” என்று மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவின் வணிக தலைநகரமென்று அழைக்கப்படும் மும்பையை தூக்கி நிறுத்தும் கடுமுழைப்பாளிகளுக்கு இனி மாட்டுக்கறி கிடையாது.

பொதுவில் இந்தியாவில் எருமை இறைச்சி அதிகமாக உண்ணப்படுவதில்லை. நாட்டின் ஒட்டு மொத்த மாட்டிறைச்சியில் உள்நாட்டு நுகர்வில் 25 சதவீதம்தான் எருமை இறைச்சி. ஏற்றுமதியில் எருமை இறைச்சிதான் முதலிடம். உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்த பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் இந்தியாதான். இத்தகைய சூழலில் மாட்டிறைச்சி தடை சட்டம் ஏற்படுத்தும் பொருளாதார விளைவுகளைக் கூட பா.ஜ.க.விற்கு முதுகு சொறியும் அறிவாளிகள் பேசமாட்டார்கள்.

எதிர்கால இந்திய நாடாளுமன்றம் - பா.ஜ.க.வின் கனவுத் திட்டம்.
எதிர்கால இந்திய நாடாளுமன்றம் – பா.ஜ.க.வின் கனவுத் திட்டம்.

ஆர்.எஸ்.எஸ் எனும் நச்சும்பாம்பை அளித்த நாக்பூர் நகரம்தான் தற்போதைய மராட்டிய பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸையும் அளித்திருக்கிறது. ஷாகா சென்று பேஷ்வா பெருமையை கற்றுக் கொண்டவர் பின்னர் ஏ.பி.வி.பி, பா.ஜ.க என பரிணாம வளர்ச்சியில் முதல்வராகியிருக்கிறார். பசுக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கனவு நிதர்சனமாயிருப்பதாக டிவிட்டரில் பூரித்திருக்கிறார்.

“1996-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா குறித்து பிறகு வந்த எந்த அரசாங்கங்களும் கவலைப்படவில்லை. நாங்கள்தான் தேர்தல் வாக்குறுதியில் சொன்னவாறு இதைச் சட்டமாக்கியிருக்கிறோம்” என்கிறார் பா.ஜ.க.வின் மும்பை பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி சோமையா. மாட்டுக்கறி தடையில் ஆரம்பித்து இனி கோமியத்தை தேசிய டானிக்காக மாற்றுவதைக் கூட இந்த சோமையாக்கள் செய்யலாம்.

இனி தடையை மீறி மாட்டுக்கறி விற்றால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்த குற்றத்திற்கு பிணை வழங்கக் கூடாது என்றும் சட்டத்தை திருத்தியிருக்கிறார்கள். 1976 சட்டத்தில் சிறை ஆறு மாதங்களாகவும், அபராதம் ரூ 1000 ஆகவும் இருந்தது. இரண்டும் தற்போது பத்து மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

மாட்டுக்கறி தடை
பல மாநிலங்களில் மாட்டுக்கறி தடைச் சட்டமிருந்தாலும், விவசாயத்திற்கு பயன்படாத மாடுகளை வெட்டலாம் என்று அனுமதி அளித்து வருகிறார்கள்.

பார்ப்பனியத்தின் இந்த பசு புனிதம் என்பது ஏதோ உயிர் குறித்த கருணை அல்ல. மாட்டுக்கறியை அதிகம் உண்ணும் தாழ்த்தப்பட்ட மக்களையும், மாட்டுக்கறி வர்த்தகத்தில் அதிகம் இருக்கும் முசுலீம் மக்களையும் குறிவைத்து தாக்குவதற்கே இந்த சட்டத்தினை கையிலெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் மனிதர்கள் மீதான கொலைவெறியே பசுப்புனித போர்வையில் வருகிறது.

பல மாநிலங்களில் மாட்டுக்கறி தடைச் சட்டமிருந்தாலும், விவசாயத்திற்கு பயன்படாத மாடுகளை வெட்டலாம் என்று அனுமதி அளித்து வருகிறார்கள். தற்போது அதையும் ஒழித்திருப்பதால் மராட்டியத்தில் தொடங்கியிருக்கும் பார்ப்பனிய வைரஸ் நாடு முழுவதும் பரவ வாய்ப்பிருக்கிறது.

பெரும்பான்மை மக்களின் மலிவான மாட்டிறைச்சியை தடை செய்வதால் ஆடு, கோழி, போன்ற மற்ற இறைச்சிகளின் விலை உயரும். இதனால் ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கமும் கூட கணிசமாக பாதிக்கப்படுவார்கள். மாட்டிறைச்சி மூலம் மலிவாக கிடைக்கும் புரதச் சத்து இன்றி நமது குழந்தைகள் வாடிப்போவார்கள். ஆட்டிறைச்சி விலையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் மாட்டிறைச்சி இனி இல்லை என்றால் அதன் விளைவுகள் எண்ணிப்பார்க்க முடியாதது.

இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக மாட்டிறைச்சி வணிகர் சங்கத்தை சேர்ந்த ஆரிஃப் சவுத்திரி தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடி அரசின் உத்தரவுகளை தீர்ப்புகளாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பது அரிது.

மாட்டிறைச்சி தடையின் விளைவுகள்
பெரும்பான்மை மக்களின் மலிவான மாட்டிறைச்சியை தடை செய்வதால் ஆடு, கோழி, போன்ற மற்ற இறைச்சிகளின் விலை உயரும். இதனால் ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கமும் கூட கணிசமாக பாதிக்கப்படுவார்கள். மாட்டிறைச்சி மூலம் மலிவாக கிடைக்கும் புரதச் சத்து இன்றி நமது குழந்தைகள் வாடிப்போவார்கள்.

மாட்டிறைச்சி தடையால் விற்பவர்கள், உண்பவர்களுக்கு மட்டுமில்லை விவசாயிகளுக்கும் பேரிடி காத்திருக்கிறது என்கிறார் ஆரிஃப் சவுத்திரி. இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் மராட்டிய மாநிலத்தில்தான் இருக்கிறார்கள். மடிவற்றிய, வயதான, உழைக்க பயன்படாத மாடுகளை இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளும் விற்று வருகிறார்கள். இனி இந்த மாடுகளை விற்கக் கூடாது என்றால் ஏழை விவசாயி என்ன செய்வார்?

மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுகிறது என்ற காரணத்தால்தான் விவசாயிகள் மாட்டிறைச்சி உண்பதில்லை. அதே போன்று விவசாயத்திற்கு பயன்படாது போகும் மாடுகளை வைத்து பராமரிப்பதும் அவர்களால் சாத்தியமில்லை. இனி மராட்டிய மாநிலத்தில், மும்பை அல்லது பூனா, நாக்பூர் நகரங்களில் கைவிடப்பட்ட மாடுகள் இலட்சக்கணக்கில் சுற்றுவது உறுதி. ஜீவ காருண்யம் பேசும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் வேண்டுமானால் இம்மாடுகளை வீட்டில் வைத்து பராமரிக்க தயாரா?

அப்படி பராமரிக்க வேண்டும் என்று சட்டமாக்கினால் இந்தியாவில் அதிகம் மாடுகளை கொல்வது ஆர்.எஸ்.எஸ் கூட்டமாகத்தான் இருக்கும். “அரசு அறிக்கை ஒன்றின்படி மராட்டிய மாநிலத்திற்கு தேவைப்படும் கால்நடை தீவனத்தில் 61 சதவீதம் பற்றாக்குறை இருக்கும் போது இந்த சட்டம் வருகிறது. இதனால் வயதான மாடுகள் கொல்லப்படுவது தடுக்கப்படும் போது ஆரோக்கியமாக இருக்கும் மாடுகளுக்கு கிடைக்கும் தீவனம் குறையும், மாடுகளோடு விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்” என சாங்லியில் மாட்டிறைச்சி கடை வைத்திருக்கும் ராஜேந்திர தாண்டே கூறுகிறார். “இல்லை, இனி ஒரு மாட்டை பராமரிக்க மாதத்திற்கு ரூ 5,000 அளிக்கப்படும்” என்று மோடி கூறத் தயாரா? அப்படி அறிவித்தால் இந்தியா ஒரே நாளில் திவாலாகிவிடும்.

ஆர்.எஸ்.எஸ் கூட்டம்
அப்படி பராமரிக்க வேண்டும் என்று சட்டமாக்கினால் இந்தியாவில் அதிகம் மாடுகளை கொல்வது ஆர்.எஸ்.எஸ் கூட்டமாகத்தான் இருக்கும்.

“முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் கருணையே இல்லாமல் மாடுகள் கொல்லப்பட்டு அதுதான் பிங்க் புரட்சியாக கொண்டு வரப்பட்டது” என்று தேர்தலின் போது மோடி சாடினார். ஆனால் இந்த கேடி ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி முன்னைவிட அதிகமாகியிருக்கிறது. மாட்டுக்கறி என்றால் முசுலீம்கள் கொல்வார்கள், அவர்களே உண்பார்கள் போன்ற தவறான பொதுப்புத்திக்கு மாறாக இந்துக்கள்தான் அதிகம் உண்பது கண்கூடு. ஆனால் பஞ்சம சூத்திரர்களை இவர்கள் இந்துக்களாக ஏற்பதில்லை என்றால், சிறுபான்மையான பார்ப்பன ‘மேல்சாதி’ இந்தக்களுக்காக என்ன எழவுக்கு மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும்?

ஷோபா டே
“மாட்டுக்கறி உண்பவர்களின் உரிமைக்காக தான் ஐந்து வருடம் சிறை செல்லத் தயார்” என்கிறார் எழுத்தாளர் ஷோபா டே

நாய்களுக்காக கண்ணீர் விடும் மேனகா காந்தி போன்ற ராயல் சீமாட்டிகள், “மாட்டிறைச்சி விற்பனையால் வரும் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுகிறது” என்று அறிக்கையே விடுகிறார்கள். முந்தைய நாளில் மணக்க மணக்க கறி சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் காலையில் போகும் மலத்தைத் தாண்டி என்னய்யா இதில் பயங்கரவாதம் இருக்கிறது?

“மும்பையில் இருக்கும் மல்டி கசின் உணவங்களில் இனி மாட்டிறைச்சி இல்லை என்றால் மேற்குலக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார் ஓட்ட சங்க தலைவர். ஒரு வேளை இந்த மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் விலக்கு கொடுப்பார்களோ என்னமோ?

காங்கிரசுக் கட்சி இந்த சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருக்கிறது. என்ன இருந்தாலும் இவர்கள்தானே இந்துமதவெறியர்களின் மூதாதையர்களை உற்பத்தி செய்தவர்கள். இந்தச் சட்டம் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாமல் வெளிப்படையாக அமல்படுத்த வேண்டும் என்கிறது கதர் வேட்டி கும்பல்.

முசுலீம்களை தனிமைப்படுத்தி ஒடுக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் அயோக்கியத்தனத்தினை அம்பலப்படுத்துகிறது பண்டைய இந்திய வரலாறு. இந்திய விவசாயிகளின் மாடுகள் மீதான உறவை கணக்கில் கொண்டே இங்கே பாபர், ஹுமாயூன், அக்பர் போன்ற முகலாய மன்னர்கள் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கின்றனர். கடைசியாக மைசூரின் ஹைதர் அலி, 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய முகலாய மன்னர் பகதூர் ஷா காலம் வரை இந்த நல்லிணக்கம் சாதாரணமாகவே நிலவியிருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆர்ய சமாஜத்தினை நிறுவிய தயானந்த சரஸ்வதி இதை இந்துத்துவ அரசியலாக்கினார். ‘பசுவதை என்பது இந்துத்துவத்தின் மீதான தாக்குதல்’ என்று அப்போதுதான் திசை திருப்பினார்கள். அதே இந்துத்துவம் தான் அக்காலத்தில் பஞ்சம சூத்திர மற்றும் பெண்கள் மீது சொல்லொணாத் துயங்களை நிகழ்த்தியிருக்கிறது. ‘முசுலீம்கள் மாட்டின் தலையை வெட்டி கோவிலின் முன் போட்டார்கள்’ என்று கடந்த நூற்றாண்டில் எண்ணிறந்த கலவரங்களை இந்துமதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்படித்தான் இங்கே சட்டப்படியே பசுவதை தடையை புனிதமாக்கினார்கள். குஜராத்தில் மாடுவெட்டினால் ஏழு ஆண்டு சிறை தண்டனை. பொது இடங்களில் இறைச்சி விற்பனை கிடையாது.

எனினும் மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தளமான டிவிட்டரில் மாட்டுக்கறி தடையை எதிர்க்கும் ஹேஷ் டேக் முன்னிலையில் இருக்கிறது.

“மாட்டுக்கறி உண்பவர்களின் உரிமைக்காக தான் ஐந்து வருடம் சிறை செல்லத் தயார்” என்கிறார் எழுத்தாளர் ஷோபா டே. பாலிவுட் நட்சத்திரங்களான ஃபர்ஹான் அக்தர், அயுஷுமான் குரானா, ரிச்சா சாதா, வீர் தாஸ், ரன்வீர் ஷோரி முதலியோர் இச்சட்டத்தை மனித உரிமைகள் மீதான மீறல் என்று கண்டித்திருக்கின்றனர்.

மும்பை வாழ் தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். கோயம்பேடு கருவாடு விற்பனை தொடர்பாக “தி இந்து” எடுத்த அடக்குமுறைக்கு எதிராக வினவு எடுத்த ஆவணப்படத்தில் இது குறித்த விரிவான பார்வை இடம் பெற்றிருக்கிறது.

பார்ப்பனியத்தின் உணவுத் தீண்டாமையை அகற்றுவோம். பா.ஜ.கவின் பல்லைப் பிடுங்குவோம்!

தொடர்புடைய செய்திகள்:

கருவறை நுழைவு, லஞ்ச ஊழல், தலித் அமைப்புகள் – கேள்வி பதில்

அர்ச்சகர்கள்

கருவறை நுழைவுப் போராட்டம், அரசு பதவிகளில் லஞ்சம் மற்றும் தலித் அமைப்புகள் குறித்து புதிய ஜனநாயகம் பத்திரிகையில் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான கேள்வி-பதில்கள் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் வீறு பெறுவதன் அவசியத்தையும், இந்த அரசியல் அமைப்பே லஞ்ச ஊழலை ஊக்குவிப்பதாக இருப்பதையும், தலித் அமைப்புகளின் அரசியல் செயல்பாட்டு வரம்பையும் விளக்குகின்றன.

கேள்வி: பார்ப்பனர்களே தங்களது தவறைத் திருத்திக் கொண்டு சூத்திரர்களின் கருவறை நுழைவை அனுமதித்தால் உங்கள் போராட்டம் என்னவாக இருக்கும்?

இது நல்ல, வளமான கற்பனை மட்டுமல்ல, காலங்கடந்த கற்பனையும் கூட.

சூத்திரர்களும், பஞ்சமர்களும் கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தடுக்கப்பட்டு வந்தார்கள். இப்போது அத்தடை சட்டப்படி நீக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்றுள்ளது.

ஆனால், சட்டப்படியான அத்தடை நீக்கமும் அனுமதியும் கூட பார்ப்பனர்கள் தாங்களே தவறை உணர்ந்து திருத்திக் கொண்டதன் விளைவு அல்ல. பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் போராட்டங்களின் விளைவும் நிர்ப்பந்தமும்தான்.

அதேபோல் பஞ்சமர்களும், சூத்திரர்களும் கருவறை நுழைவதை அனுமதிப்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது உட்பட சம உரிமை பெறுவது, தாய்மொழி வழிபாடு போன்றவற்றை பார்ப்பனர்கள் தாங்களே உணர்ந்து திருத்திக் கொள்ளமாட்டார்கள் என்பதை நமது போராட்டங்களுக்கு அவர்கள் காட்டும் கொலை வெறி எதிர்ப்பே நிரூபிக்கிறது. ஆகவே, நமது கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது அவர்களாகவே உணர்ந்து திருத்துவதாக இருக்காது; அந்தப் பிரமையும் நம்மிடம் கிடையாது. நமது போராட்டங்களின் விளைவும், நிர்ப்பந்தமும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
பார்ப்பனர்களின் எதிர்ப்பால் நியமனம் பெற முடியாமல் விடப்பட்டுள்ள அனைத்து சாதியினருன் அர்ச்சகராகும் சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் (கோப்புப் படம்)

இந்துக் கோவில் மற்றும் கருவறை நுழைவுப் பிரச்சினையில் இன்னும் விளக்கப்பட வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. பார்ப்பனர்கள் மட்டுமே தமது தவறை உணர்வது, திருத்திக் கொள்வது என்பதோடு இப்பிரச்சினை தீராது. பார்ப்பனரல்லாத – சத்திரிய, வைசிய வழிவந்த மேல் சாதியினரும் தமது தவறை உணர்ந்து திருத்திக்கொள்வது; பஞ்சமர் (தாழ்த்தப்பட்டவர்), சூத்திரர் தமது அடிமை விலங்கோடு அடிமை உணர்வைத் தகர்த்துத் தலை நிமிர்ந்து நிற்பது ஆகியவையும் நமது போராட்டத்தில் அடங்கும். பெரியாரும் தமது இறுதிக் காலத்தில் இந்த அம்சங்களை வலியுறுத்தி இருக்கிறார். இன்றைய சமூக நிலைமைகளும் இவற்றின் அவசியத்தைக் கோருகின்றன.

கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்கிற தடை சூத்திர, பஞ்சம சாதிகளுக்குத்தான் இருந்தது. பார்ப்பனரல்லாத மேல் சாதியினருக்கு இத்தடை எப்போதுமே கிடையாது. சூத்திர, பஞ்சம சாதியினர் கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்கிற தடை சட்டப்படிதான் நீக்கப்பட்டிருக்கிறதே தவிர சமூக நடைமுறைப்படி அல்ல. பார்ப்பனர் மட்டுமின்றி, பார்ப்பனியத்தை ஏற்று ஆதாயம் அடையும் பார்ப்பனரல்லாத மேல் சாதியினரும் சூத்திர, பஞ்சம சாதியினர் கோவிலுக்குள் நுழைவதை இன்னமும் சமூக நடைமுறையின்படி தடுத்து வருகின்றனர்; இதற்கு கர்நாடகாவில் உள்ள பதனவாலு, தமிழகத்தில் உள்ள சிவகங்கை ஆகிய சமீபத்திய நிகழ்ச்சிகள் சான்றுகளாக உள்ளன.

ஆகவே, சூத்திரரும், பஞ்சமரும் சமூகநீதியும, சம உரிமையும் பெறவேண்டுமானால் பார்ப்பனரோடு, பார்ப்பனரல்லாத மேல் சாதியினரது ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தமது போராட்டத்தைத் தொடர வேண்டும். சட்டப்படி பெற்ற உரிமையை நிலைநாட்டுவதற்குத் தமக்குள்ள அடிமை உணர்வைத் தகர்த்துத் தலைநிமிர்ந்து நின்று போராடுவதும் அவசியம்.

கோவில் கருவறைக்குள் நுழைவதற்கு பார்ப்பனருக்கு மட்டுமே இப்போது சட்டப்படிக்கு அனுமதி உண்டு; பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினருக்கும் இதற்கு அனுமதி கிடையாது; தடையும் தீண்டாமையும் தான் நிலவுகிறது. ஆகவேதான் பார்ப்பனர் மட்டுமே இத்தடை, தீண்டாமையைக் காப்பதற்கு மூர்க்கமாகப் போராடுகின்றனர். அதோடு நமது கருவறை நுழைவுப் போராட்டத்திற்கு பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினரிடமிருந்தும் பரவலான ஆதரவு கிடைக்கிறது.

பார்ப்பன- பனியா கும்பலால் தலைமை தாங்கப்படும் இந்து மதவெறி பாசிச சக்திகளைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டியது நமது உடனடி அரசியல் கடமையாகவும் உள்ளது. இக்காரணங்களால் இப்போதைக்குக் கருவறை நுழைவுக் கோரிக்கைக்குப் போராடுகிறோம்.

அதேசமயம் “திருவரங்கம் கருவறை என்ன? எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்குள் நுழைவதைக்கூட பார்ப்பனரல்லாத மேல் சாதியினர் தடுத்துத் தாக்கினரே? இதுதான் சமூகநீதியா? சம உரிமையா?” என்று பஞ்சமர் (தலித்துகள்), சூத்திரர் கேட்பது முற்றிலும் சரியே, நியாயமே. அவற்றுக்குப் பதில் சொல்வதும், தீர்வுகாணப் போராடுவதும் அனைத்துப் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களின் கடமையும் ஆகும்.

நமது போராட்டத்தில் இந்த அம்சமும் இணைந்திருப்பதால்தான் தி.க.–வின் வீரமணி போன்றவர்கள் ஆத்திரப்படுகிறார்கள்; அவதூறு பொழிகிறார்கள்.

கேள்வி: பதவிக்கு வருவதற்குமுன் ‘’நேர்மையாகவும், ஊழல் செய்யாமலும், கொள்கை உறுதியோடும் இருப்பேன்’’ என்று சொல்பவர்கள் பதவிக்கு வந்தவுடன் கொஞ்சநாள் கழித்து ஊழல், லஞ்சம் வாங்கி மக்களுக்கு எதிராக மாறிவிடுகிறார்கள் அதற்குக் காரணம் அவர்களது கொள்கையில் இருக்கும் பலவீனமா? அல்லது நமது அரசியல் மற்றும் அதிகார முறையில் இருக்கும் கோளாறா?

நேர்மையாகவும் லஞ்ச ஊழலில் ஈடுபடாமலும், கொள்கை உறுதியோடும் இருப்பவர்கள் இன்றைய அரசியல் மற்றும் அதிகார முறையில் பதவிக்கு வரமுடியாது; அப்படியே தப்பித்தவறி பதவிக்கு வந்தால் ஒன்று நேர்மை, கொள்கை உறுதியைக் கைவிட்டு லஞ்ச ஊழலில் ஈடுபட்டு மக்களுக்கு எதிராகத் திரும்ப வேண்டும் அல்லது அப்பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவர்; நேர்மையான, தூய்மையான கொள்கை உறுதி கொண்டவர்களைக் கூட ஆசையூட்டி, மாசுபடுத்தி சீரழித்துவிடக் கூடியதாக இன்றைய அரசியல் மற்றும் அதிகார முறையும் சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பும் உள்ளன.

ஊழல் இரட்டையர்
‘ஓடறான் பாடு பிடி’ என்று ஓடும் திருடர்கள்.
http://truthdive.com/2012/09/04/corrupt-duo.html (கோப்புப் படம்)

‘தவிர்க்க முடியாது எந்த அமைப்பிலும் இக்குறை நிலவவே செய்யும்’ என்று மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்யுமளவுக்கு இது புரையோடிப்போயிருக்கிறது. அதாவது பதவிக்கு வரவும், பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவுமே நேர்மை, கொள்கை உறுதியைக் கைவிட்டு லஞ்ச ஊழலிலும், மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை இன்றைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பு அவசியமாக்கியுள்ளது.

ஆகவே, இந்த அமைப்பையை தூக்கி எறிந்துவிட்டு ஒரு புதிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பு முறையை ஏற்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த லட்சியத்தை உத்திரவாதப்படுத்தும் அமைப்பும் கொள்கையும் இல்லாமல் வெறுமனே நேர்மை, ஒழுக்கம், கொள்கை உறுதி, கறைபடியாத கைகள், மக்கள் நல்வாழ்க்கை போன்ற வாக்குறுதிகளைப் பிரகடனப்படுத்துபவர்களின் கொள்கை பலவீனமானதாக மட்டுமல்ல, பெரும்பாலும் பித்தலாட்டமாகவே உள்ளது.

அதோடு அந்த லட்சியம், கொள்கையை நேர்மையாகவும், உறுதியாகவும் பின்பற்றக் கூடியதுதான் என்று வாழ்விலும் செயலிலும் நடந்து காட்டி சோதித்தறியப்பட்ட தலைமை வேண்டும். அவற்றில் இருந்து விலகிச் சரிந்துபோகும் தலைமையை எதிர்க்கவும் கலகம் செய்யவும் தேவையான ஜனநாயக அமைப்பும் துணிச்சல்மிகு அணிகளும் வேண்டும். தமது சொந்த உழைப்பால் வாழும் உழைக்கும் மக்கள், குறிப்பாக பாட்டாளிகளுக்கே அத்தகைய துணிச்சலும், வீரமும் இருக்க முடியும். இப்படிப்பட்டவர்களை முதுகெலும்பாகக் கொள்ளாமல் பிழைப்புவாதப் பிரமுகர்களையும், பொறுக்கி (உதிர்) வர்க்க அணிகளையும் கவர்ச்சிவாத அரசியல் கொள்கைகளையுமே இன்றைய அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன. ஆகவே அவர்கள் பதவிக்கு வரும் முன்பு ஒன்றாகவும், வந்தபின் வேரொன்றாகவும் நடந்து கொள்வதில் வியப்பில்லை.

கேள்வி: தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மீட்கப் பாடுபடுவதாகச் சொல்லி அமைப்பு நடத்தும் டி.பி.ஜ. (தலித் சிறுத்தைகள் இயக்கம்) திருமாவளவன் போன்ற தோழர்களைப் பற்றிய தங்கள் மதிப்பீடு, கருத்து என்ன? இப்படியான அமைப்புகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?

தாழ்த்தப்பட்டவர்கள், தலித்துக்களுக்கானவை என்கிற பெயரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான அமைப்புகள் தமிழ் நாட்டில் மட்டும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வை.பாலசுந்தரம், சுந்தரராஜன், ஜான்பாண்டியன், இளையபெருமாள், தமிழரசன் போன்ற பிழைப்புவாத, ஆளும்வர்க்க (மேல்சமூக)க் கைக்கூலிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. இவை அதிகபட்சமாகச் சாதிப்பதெல்லாம் அம்பேத்காருக்கு சிலைவைப்பதும் விழா நடத்துவதும், நன்கொடைகளை வசூலிப்பதும், அறிக்கைகள் பிரசுரங்கள் வெளியிடுவதும், தங்களுக்குச் சொந்த ஆதாயம் தேடிக் கொள்வதும்தான்.

கூடவே, நடுத்தர வர்க்கத்தினராக மாறிவிட்ட தாழ்த்தப்பட்ட சில தனிநபர்களின் நலன்களுக்காக நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு போன்ற சலுகைகள் பெறுவதற்கான அரசியல் தரகு வேலை பார்க்கின்றன. மற்றபடி கிராமப்புறங்களில் கூலி ஏழை விவசாயிகளாகவும், நகரப் புறங்களில் உதிரிப் பாட்டாளிகளாகவும் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பெருமளவில் திரட்டி, முறைப்படியான அமைப்பைக் கட்டுவதற்கு அவர்கள் முயலுவதுமில்லை; அம்மக்கள் அன்றாடம் சந்திக்கும் சாதி ஒடுக்குமுறை, சுரண்டல்களுக்கு எதிராக, நேரடியாகக் களத்தில் இறங்கித் தலையீடு செய்து போராடியதும் இல்லை. ஆகவே தாழ்த்தப்பட்டவர் விடுதலைக்கான போராட்டங்களில் அவற்றை நம்பிக் கூட்டுச் சேர முடியாது என்று கருதுகிறோம்.

ஆனால், மேற்கண்ட அமைப்புகளின் போக்குகள், நடைமுறைகளுக்கு மாறாக தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி களத்தில் இறங்கி அரசியல், சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட உறுதி பூண்டு தலித் சிறுத்தைகள் இயக்கம், இம்மானுவேல் பேரவை போன்ற சில புதிய அமைப்புகள் தோன்றியுள்ளன. இத்தகைய நடைமுறையில் உறுதியோடிருக்கும் பட்சத்தில் இப்புதிய அமைப்புகளை ஜனநாயக சக்திகளாகக் கருதி நேர்மறையில் அணுகி, போராட்டங்களில் ஐக்கியப்படுவதுதான் சரியானது என்று கருதுகிறோம்.

புதிய ஜனநாயகம், ஜூலை 1993

நீலமலையில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி – நேரடி ரிப்போர்ட்

1
கொல்லப்பட்ட மகாலட்சுமி

நீலமலை தேயிலைக்கு மட்டுமல்ல எஸ்டேட் கொடுமைகளுக்கும் புகழ் பெற்றது. தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு இன்றும் கூலி மிகக் குறைவு என்பதோடு இப்போது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. நகர மயமாதலின் விளைவாகவும், கார்ப்பரேட் சாமியார்கள் மற்றும் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களின் வன ஆக்கிரமிப்புகளினாலும் அடிக்கடி என்பதைவிட ஏறத்தாழ தினமுமே மக்கள் வசிக்கும் பகுதிக்கு வனவிலங்குகள் வருகின்றன.

ஒரு நாளைக்கு தேயிலை பறித்தால் கிடைக்கும் ரூ 170 கூலியில் வாழ்க்கை நடத்தும் இம்மக்கள் கார்ப்பரேட்டுகளைப்போல் கரண்டு வைத்த கம்பி வேலியா வைக்க முடியும்? இல்லை மோடி முதல் லேடி வரை பயன்படுத்தும் கருப்பு பூனை கமாண்டோக்களை வைத்தா உலா வர முடியும்?

கொல்லப்பட்ட மகாலட்சுமி
கொல்லப்பட்ட மகாலட்சுமி

மகாலட்சுமி மூன்று குழந்தைகளுக்குத் தாய். பல வருடங்களாக உழைத்து தளர்ந்தவர். அவரது கணவர் சிவக்குமாரும் அவ்வண்ணமே. இடிந்து விழும் நிலையில் சிறிய வீடு. அதிலும் கூட்டுக் குடும்பம் என கிட்டதட்ட அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

14-02-2015 சனிக்கிழமை அன்று வழக்கம் போல் 5 கி.மீ. தொலைவில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். காலை 11.15 மணிக்கு தேநீர் இடைவேளை. அன்று சனிக்கிழமை ஆதலால் விரைவாக வேலையை முடித்து விடலாம் என எண்ணி தேநீர் குடித்த கையோடு மீண்டும் தோட்டத்திற்கு விரைந்துள்ளார். சக தொழிலாளி மஞ்சுளா சிறிது தொலைவில் இருந்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அப்போது அங்கு பதுங்கி இருந்த புலி ஒரே பாய்ச்சலில் மகாலட்சுமியின் பின் கழுத்தை கவ்வியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு மஞ்சுளா ஒடிச்சென்று பார்க்கையில் மகாலட்சுமியின் கழுத்தை கவ்வி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அவரின் அலறலைக் கேட்டு சுற்றியுள்ள தொழிலாளர்கள அனைவரும் கூடியுள்ளனர். கிட்டதட்ட 100-லிருந்து 150 பேர் வரை கூடியும் புலி அசராமல் அங்கேயே இருந்திருக்கிறது.

வனக்காவலர்கள் சிலரும் அப்போது துப்பாக்கி சகிதம் அங்கே உடன் வந்தனர். அவர்களில் ஒருவர் புலியைச் சுட முனைய மற்றொருவர் அதிகாரி, “ஒப்புதலின்றி சுடக்கூடாது” எனக்கூறி தடுத்துள்ளார். அங்கேயே நெடுநேரம் சுற்றிக் கொண்டிருந்த புலி பின் ஓடிவிட்டது. பின்னர் வந்த வன அதிகாரி (சோமசுந்தரம்), “இந்தக் காயங்களைப் பார்த்தால் புலி கடித்தாற் போல் தெரியவில்லை. ஏதோ நாய் கடித்தாற் போல் இருக்கிறது” எனத் திமிருடன் பேச,அவ்வளவு நேரம் அங்கே இருந்து புலி பாய்வதையும் உறுமுவதையும் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், ஆத்திரத்தின் உச்சிக்கே செல்ல, அந்த அதிகாரி நையப் புடைக்கப்பட்டார். மக்கள் கூட்டம் அடித்தவாறே கீழே இழுத்து வந்து,

“சொல்லு, இப்ப சொல்லு என்ன கடிச்சது?” எனக் கேட்க

“புலிதான், புலிதான்” எனக்கூறிய வார்த்தைகளில் உயிர்தப்பினார். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். புலி குதறுவதை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்தும் இந்த அதிகாரி இவ்வளவு திமிராக நாய்தான் கடித்தது என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது?

கூடலூர் மக்கள் போராட்டம்
கூடி போராடிய மக்கள்

பின், மகாலட்சுமியின் உடலை கீழே கொண்டு வந்து வைத்து சாலை மறியலையும் போராட்டமும் துவங்கியது. கேரள தொலைக்காட்சிகள் வந்து நேரலையை துவங்கிவிட்டன.நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகரித்தது; சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து மக்கள் அலை அலையாய் வரத் துவங்கியுள்ளனர். காவல் துறையால் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்றுள்ளது. கடை வைத்திருப்போர் அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவாக கடையடைப்பு செய்துள்ளனர்.

காவல் துறையினர் தந்திரமாக செல்பேசிக்கான சிக்னல்களை நிறுத்தியுள்ளனர். உணர்வுரீதியில் திரண்ட மக்கள் படையின் முன் இந்த அரசு அடியாட் படையின் தந்திரங்கள் எவ்விடம்!

இஸ்லாம் மக்கள் பள்ளி வாசலிலும்,கிறிஸ்தவ மக்கள் தேவாலயத்திலும் அறிவிப்பு கொடுத்து தத்தம் சமுதாய மக்களை திரட்டியுள்ளனர். இதர பிரிவு மக்களும் காரில் மைக்கை கட்டி ஊர் ஊராக சென்று மரண அறிவிப்பையும் போராட்ட அறைகூவலையும் ஒரு சேர செய்து முடித்தனர். இரவு ஆக ஆக கூட்டம் அதிகமாகியே வந்துள்ளது.

கூடலூர் மக்கள் போராட்டம்உணவு, குடிநீர் என இந்தப்படை கலைந்துவிடாமல் இருக்க கணிசமாக உள்ள இஸ்லாமிய மக்களும் இதரரும் சேர்ந்து அனைவருக்குமே கிட்டத்தட்ட 5,000 பேருக்கு உணவும் தேநீரும் இரவு முழுவதும் வழங்கியுள்ளனர். கொட்டகை போட்டு ஆண்கள் பெண்களும் அங்கேயே தங்கியுள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் வேறு வழியில்லாமல் வந்த கலெக்டர் சங்கரிடம் பொதுமக்கள் ரூ. 10 லட்சம் நிவாரணமும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் புலியை உடனே சுட உத்தரவிடவும் கோரினர். அதற்கு முன்பே இந்தப் போராட்டத்தில் ஆதாயம் தேட வந்த ஓட்டுக் கட்சி அரசியல் முதலைகளை விரட்டியுள்ளனர். குறிப்பாக, ஏற்கனவே யானையால் இறந்த ஒருவர் சாவில் பொறுக்கித் தின்ற பகுதி அ.தி.மு.க. வினரை செருப்பால் அடிக்காத குறையாய் விரட்டியுள்ளனர்.

கலெக்டர் சங்கர், “காலை 6 மணிக்கு முன் வெளியேவராதீர்கள். உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன்” எனக்கூற,

“யோவ்,அந்தப் பொம்பள செத்தது காலை 11.30 க்கு இதுக்கு பதில் சொல்லு” எனக்கூற கலெக்டர் செய்வதறியாது நின்றிருக்கிறார்.

“நாளைக்கு நீ வாயா, காட்டுக்குள்ள நாங்க தைரியமா போறோம். நீ வருவியா” என பெண்கள் கேட்க, கலெக்டர் அமைதியாய் நின்றிருக்கிறார்.

“பயம் இருக்குல்ல, அப்ப மரியாதையாய் சுட உத்திரவு இடு” எனக் கூறியுள்ளனர்.

இரவு 2 மணிக்கு மேல் கலெக்டர் சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிறகு, போலீசும் வனத்துறையும் திருட்டுத்தனமாக மகாலட்சுமியின் உடலை எடுத்துச் செல்ல முயன்றிருக்கிறது. பொதுமக்கள் விழிப்பாக இருந்து கல், கம்புகளுடனேயே தடுத்துள்ளனர்.

இரண்டாம் நாள் காலையும் அனைவருக்கும் உணவும், டீயும் வழங்கப்பட்டிருக்கிறது. காலையில் கலெக்டர் வராததால் கடுப்படைந்த மக்கள் வன அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளனர். காலை 11 மணியளவில் கறுப்புக் கொடிகளுடன் சுமார் 1000 பேர் சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இவை அனைத்தும் தன்னெழுச்சியாக நடந்ததும் சாதி, மத பேதமற்ற இந்த அசாத்தியமான ஒற்றுமையுமே இந்த போராட்டத்தின் சிறப்பு. பின் முற்றுகையின் முற்றிய வடிவமாக மக்களின் வீரியமான வெளிப்பாடாக ஒருவர் ஜீப்பை உடைக்க உடனே அது மொத்தக் கூட்டத்தின் திட்டமாக பரிணமித்து அனைவருமே ஜீப்களையும், அலுவலகத்தையும், லேப்டாப்புகளையும், அடித்து உடைத்தனர். கோப்புகளும் மிச்சமுள்ள ஜீப்புகளும் கொளுத்தப்பட்டன. அங்கிருந்த ஒன்றிரண்டு அதிகாரிகளும் காட்டுக்குள் ஒட்டமெடுத்தனர். இவையெல்லாம் கூட்டம் கூடியதால் நடந்த “மாஸ் வயலன்ஸ்” அல்ல. ஒரு தொழிலாளியின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியத்துடனும், திமிருடனும் நடத்திய அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒரு சாமானியனின் கோபமே இந்த வெளிப்பாடு.

பின்பு, மக்கள் போராட்டப் பந்தலுக்கு திரும்பினர். இதன்பின்னரே அங்கு வந்த வருவாய் அதிகாரி நிவாரணம் தருவதையும், புலியை சுட்டுக்கொள்ள உத்திரவிடப் போவதையும் உறுதிப்படுத்தினார்.

தமிழக வனத்துறையும், கேரள வனத்துறையும் இணைந்து சுமார் 500 பேர் துப்பாக்கிகள் சகிதம் காட்டுக்குள் இறங்கி சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு கடைநிலை வனக்காவலரால் இறுதியில் புலி சுடப்பட்டிருக்கிறது. இப்புலி சுமார் 325 கிலோ  எடையுள்ளது. இதை கண்டுபிடிக்க வைத்த கேமராவில் இதே போல் சுமார் 6,7 புலிகள் தென்பட்டுள்ளன.

மக்கள் மத்தியில் உள்ள கருத்து என்னவெனில், “வனத்தை வளர்க்க புலிகளை வனத்துறையே கொண்டுவந்து விடுகிறது” என்பதே. இது உண்மையெனில், வனத்தை பராமரிக்க, கார்ப்பரேட் சாமியார்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வக்கில்லாத அரசாங்கம் இதுபோன்ற வழிகளில் மக்களின் உயிர்களை காவு வாங்குகிறது. காட்டில் புலிகளை கணக்கு காட்டி சுற்றுச்சூழல் மனிதாபிமானிகளாக காட்டிக் கொள்ளும் தந்திரமும் இதில் இருக்கிறது. இப்படி புலியையும், மக்களையும் ஒருசேர பணயம் வைக்கிறது அரசு.

mahalakshmi-killed-by-tiger-8“புலியை சுட உத்திரவிடப்படும்” என்ற உத்திரவாதத்துக்கு பின்னரே மகாலட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

புலியை வேட்டையாடிய அரசு அடுத்ததாக போராடிய மக்களை வேட்டையாட தயாராகி வருகிறது. குறிப்பாக, முற்றுகையில் ஈடுபட்ட மக்களை வன அலுவலகத்தில் உள்ள கேமராவில் பதிவுகளின் மூலம் கண்டறிந்து உள்ளூர் வன காவலர்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சக நண்பர்களை வேட்டையாட உள்ளது.

கூடலூர் மக்கள் போராட்டம்

இடையில் நீலமலை ஆர்ப்பாட்டத்தை நடத்தியது கடத்தல்காரர்கள் எனும் கதையை என்ஜிவோக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மூலம் அவிழ்த்து விட்டுள்ளார்கள். கடத்தலுக்கு தடையாக இருக்கும் வனத்துறைக்கு ஒரு பாடம் கற்பிக்கவே கடத்தல்காரர்கள் இப்பிரச்சினையில் மக்களை தூண்டி விட்டுள்ளதாக கூசாமல் பொய்யுரைக்கின்றனர். இத்தகைய சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தைரியமிருந்தால் மகாலட்சுமியின் குடியிருப்பு பகுதிக்கு வந்து சொல்லிப் பார்க்கட்டும். ஒரு வேளை கடத்தல் தொழில் அங்கே நடக்கிறது என்றால் அது வனத்துறை மற்றும் ஒட்டுப் பொறுக்கி கட்சி தலைவர்கள் இன்றி சாத்தியமில்லை.

எல்லா அபாயங்களோடும், குறைந்த பட்ச ஊதியத்தோடும் வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளி கொல்லப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையை புலி செய்திருந்தாலும் புலியை ஏவிவிட்டது இந்த அரசும் அதிகார வர்க்கம்தான். வனத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், விடுதிகளுக்கும் அள்ளிக் கொடுத்தால் புலி மட்டுமல்ல யானை சிறுத்தை அனைத்தும் மக்கள் குடியிருப்பிற்குத்தான் வரும்.

குடிகெடுத்த அரசுக்கெதிரான நீலமலை மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம். அடக்குமுறையை கண்டிப்போம்.

– செய்தி, புகைப்படங்கள் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை

______________________________________

இதனைத் தொடர்ந்து,  27-02-2015 காலை 10.30 மணியளவில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் – கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புலி கடித்து அப்பாவிப் பெண் பலியானதை தொடர்ந்து நியாயம் கேட்டு போராடிய மக்களை போலிசு பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையிலடைத்து வருகின்றது.

அவர்களை விடுதலை செய்யக் கோரியும், வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், போராடும் மக்களை கைது செய்வதை நிறுத்தக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும், வனவிலங்குகள் வாழ்விடங்களான காடுகளை அழித்து ஆக்கிரமித்துள்ள பெருநிறுவனங்களிடமிருந்து பிடுங்கி அரசுடைமையாக்கக் கோரியும், மக்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வாழ்க்கை சூழலை உருவாக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பட்டத்திற்கு தோழர் விஜயன் தலைமேயேற்று நடத்தினார். தோழர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். தோழர் ராஜா நன்றியுரை வழங்கினார். தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

  • இறந்த தொழிலாளிக்கு ஆதரவாக போராடிய மக்களை கைது செய்வதை உடனே நிறுத்து
  • கைது செய்தவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்
  • உரிமைக்காக போராடிய மக்களை போலீசை ஏவி அடக்குமுறை செய்வதை உடனை நிறுத்து.
  • மக்களின் வாழ்விடத்திற்கு வந்து வனவிலங்குகள் மக்களை தாக்குவதற்கு காரணமான காடுகளை ஆக்கிரமித்துள்ள பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை உடனே நிறுத்து

தகவல்
இரா ஆனந்தராஜ்,  தலைவர்,
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்,
ஜீப் நிலையம் மார்க்கெட், கோத்தகிரி

ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்

1

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் (ESIC-Employees State Insurance Corporation) கீழ் இயங்கி வரும் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தமது வாழ்வையே நிர்கதியாக்கியிருக்கும் இந்திய அரசை எதிர்த்து நாடு தழுவிய பல முனைப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இஎஸ்ஐக் கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம்
இஎஸ்ஐக் கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம்

“இனி ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள், மருத்துவம் சார்ந்த படிப்புகளை அளிப்பதில் இருந்தும் மருத்துவக் கல்லூரி நடத்துவதில் இருந்தும் விலகிக்கொள்ளும்” என தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் தனது திட்ட குழுவில் முடிவெடுத்து அறிவித்திருக்கிறது. இதனால் நாடெங்கிலும் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் இழுத்து மூடப்படும் அவசரகால நிலையில், அவற்றில் பயிலும் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள் என்பவை 1948 தொழிலாளர் காப்பீட்டு சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் பணத்தை வைத்தே நடத்தப்படுகின்றன. இத்தகைய மருத்துவமனைகளில் தொழிற்சாலைத் தொழிலாளிகளும், சிறுவணிகத் தொழிலாளிகளும் தங்களது சொந்த செலவில் மருத்துவவசதி பெற்று வருகின்றனர்.

இலாபம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மருத்துவர்களின் தரம் மோசமாக இருந்து வரும் சூழலில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறையை தீர்க்கவேண்டுமெனில் பொதுத் துறையின் உதவியோடு மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுதான் இந்த அரசு முன் இருந்த குறைந்தபட்ச தற்காப்பு உத்தியாக இருந்தது.

ஈ.எஸ்.ஐ கொள்கை
ஈ.எஸ்.ஐ கொள்கை

ஆகையால், மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளிலேயே மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான சட்டத் திருத்தம் 2010-ம் ஆண்டு ஈ.எஸ்.ஐ சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. மேலும், இச்சிறப்புச் சட்டத்தின் 59-வது உட்பிரிவு ‘பி’ன் படி, “ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகளிலேயே ஐந்து ஆண்டு காலம் பணிபுரிய வேண்டும்”. இதனால் ஒரு ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆண்டுக்கொன்று 100 மருத்துவர்களை உருவாக்கி பணியமர்த்திக்கொள்ள முடியும்.

தற்பொழுது நாட்டில் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் கீழ் 12 முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான நிறுவனங்களும், 18 இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்லூரிகளும் 9 பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய நிலையில் தான் ‘பொற்காலம் வந்துவிட்டது’ என்று கூவும் பா.ஜ.க அரசு, மாணவர்களின் தலையில் இடியை இறக்கும் விதமாக, “ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளை மேற்கொண்டு நடத்த முடியாது” என்றும், “மருத்துவக் கல்லூரிகள் நடத்துவது தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல” என்றும் திமிராக அறிவித்து தனது பொறுப்பை கைகழுவி இருக்கிறது.

இஎஸ்ஐக் கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம்
இஎஸ்ஐக் கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம்

இவ்வறிவிப்பு வெளிவந்த 05-01-2015 முதலே நாடெங்கிலும் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நமது சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பேரணி, வகுப்புகளை புறக்கணித்து போராட்டம், மனிதச் சங்கிலி, டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கெடுத்தல், மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்தல் என தமக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் போராடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 24-02-2015 செவ்வாய்க் கிழமையன்று சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தை நடத்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகளையும், அவர்களது கோரிக்கைகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

சென்னை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டத்துக்கு (எம்.பி.பி.எஸ்) படிக்கும் 191 மாணவர்களும் முதுகலை (எம்.எஸ்.) பட்டத்துக்கு படிக்கும் 38 மருத்துவ மாணவர்களும் இருக்கின்றனர். இதில் முதுகலை படிப்பு நான்காண்டுகளுக்கு முன்பும் இளங்கலை படிப்பு இரண்டாண்டுகளுக்கு முன்பும் ஆரம்பிக்கப்பட்டன.

ஏற்கனவே தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவமனையில் முதுகலை படித்து முடித்த மாணவர்களின் பட்டங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் இன்றி முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள் தமிழ் நாட்டில் வேறு எந்த மருத்துவமனைகளிலும் பணிபுரிய இயலாது. ஏற்கனவே படித்து முடித்த மாணவர்களின் நிலை இவ்வாறிருக்க, முதுகலை படித்துக்கொண்டிருக்கிற மாணவர்கள் நிலை தற்போதைய அறிவிப்பால் என்னவாகும் என்பதை விளக்கித் தெரிய வேண்டியதில்லை.

தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவதற்கான சுற்றறிக்கை நகல்.
தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவதற்கான சுற்றறிக்கை நகல்.

இளங்கலையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகளை தொடர்வதற்கான அனுமதியை மட்டுமே இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியிருக்கிறது. ஐந்தரை ஆண்டு படிப்பை முடித்து முதல் அணி மாணவர்கள் வெளியேறிய பிறகுதான் இளங்கலைப் பட்டத்திற்கான அங்கீகாரம் மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்கும். ஆனால் தற்பொழுதோ இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலேயே மருத்துவப் படிப்புகளை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது, அரசு. இதனால் இருதரப்பு மாணவர்களும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.

தீர்வு என்ற வகையில் முதல் கருத்தாக, “ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாநிலங்களின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவர்” எனவும், “இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்” எனவும் அறிவித்திருக்கிறது, மத்திய அரசு.

நாங்கள் சந்தித்த சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடமாற்றம் செய்வது பித்தலாட்டம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.

சென்னை இஎஸ்ஐக் கல்லூரியில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள்
சென்னை இஎஸ்ஐக் கல்லூரியில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள்

இரண்டாண்டுகள் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டால் படிப்பை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இது மாணவர்களுக்கு இழைக்கின்ற அப்பட்டமான துரோகமாகும். ஒரு வேளை, அப்படி இடமாற்றம் செய்யப்பட்டாலும் கூட இம்மாணவர்களுக்கான இடங்கள் அடுத்தாண்டு பொதுப்பட்டியலில் சேரும் மாணவர்களைக் குறைப்பதன் மூலமே சாத்தியப்படுத்தப்படும். ஆக இடமாற்றம், மறுசேர்க்கை என்பதைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக மாணவர்கள் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இரண்டாவதாக, “மாநில அரசே இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்த வேண்டுமென்கிற கோரிக்கை” வைக்கப்படுகிறது. இப்படி ஏற்றுநடத்தும் பட்சத்தில் ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவக் கல்லூரியின் மொத்த செலவுகளையும் மாநில அரசே ஏற்கவேண்டுமென ‘அச்சே தீன்’ மோடி மஸ்தான் அரசு மாணவர்களை கைகழுவி விட்டு விட்டு தரகுமுதலாளிகளுக்கு கால்கழுவிக் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக தற்பொழுது நடைபெற்று வரும் அனைத்து பேச்சுவார்த்தைக் கூத்துகளும் ஒரு உண்மையை திட்டமிட்டு மறைக்கின்றன. அதாவது இது ஏதோ மத்திய – மாநில அரசுகளுக்கிடையிலான சண்டை, ஒரு நிர்வாகப் பிரச்சினை அல்லது ஒரு நிர்வாக மாற்றம் என்றே உணரப்படுகிறது.  ஆனால் தொழிலாளர்களின் நலனுக்கான உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பை கலைக்கும் முகமாக செய்யப்பட்டிருக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை என்பதை அனைவரும் மறைக்கின்றனர். தொழிலாளர் உரிமைக்கும் போராட்டங்களுக்கும் பெயர் போன மேற்கு வங்கத்தில் இதை உணர்ந்து ஓரளவு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொல்கொத்தாவில் நடந்த போராட்டத்தில் “தீதி” (மமதா பானர்ஜி) அரசு, தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்மாநிலத்தில் மாணவர்களின் வீச்சான போராட்டங்களைச் சமாளிக்கும் பொருட்டு அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோலாய் கட்டக், ஜோட்காவில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்திருக்கிறார். தமிழ் நாட்டில் அப்படி எல்லாம் நடக்கும் வாய்ப்பில்லை; அ.தி.மு.க அடிமைகள் அம்மாவின் பிறந்தநாள் உற்சவ பரவசத்தில் இருப்பது ஒருபக்கம் என்றாலும் தமிழ் நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் யார் என்பது அ.தி.மு.க காரனுக்கே தெரியாது!

“மேற்கு வங்கத்தில் தனியார்-பொதுத்துறை கூட்டின் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும்” என தரகுமுதலாளிகளுக்கு ஆதரவு அளிப்பதில் முனைப்பாக இருக்கும் “தீதி” அரசு ஈ.எஸ்.ஐ மருத்துவமனைப் பிரச்சனையை பீ துடைத்த குச்சியாகவே கருதுகிறது. எனினும் எப்படியாவது மாணவர்களின் போராட்ட உணர்வைத் தணித்து நிலைமையை சுமூகமாகவே முடிக்க “தீதி” அரசும் முயல்கிறது. அம்மா அரசுக்கு அந்த முயற்சி கூட தேவையில்லை.

“தேவைப்பட்டா நீ நடத்து” என்பதாக மத்திய அரசு பிரச்சனையில் இருந்து ஒதுங்கி ஒன்றரை மாதங்களாகிறது. இன்னும் 11-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.

நாங்கள் சந்தித்த சென்னை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாணவர்கள் சுட்டிக்காட்டினர். தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் படிப்பிற்கு மட்டும் அனுமதி அளித்துவரும் இந்திய மருத்துவக் கவுன்சில், முந்தைய ஆண்டுக்கான பரிந்துரைகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், நிறைவேற்றப்பட்ட பிறகே அடுத்த ஆண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கும். ஒருவேளை இதுவே தனியார் கல்லூரிகளாக இருந்தால் ககன் தேசாய் போன்ற ஆட்களுக்கு படியளந்தால் போதுமானது என்கிற மாற்று உலகத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது.

மாநில அரசுகளைப் பொறுத்தவரை மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்குவதற்கு ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்துவது ஒரு வாய்ப்பு என்றாலும் தொழிலாளர் காப்பீட்டு கழகம் மருத்துவக் கல்லூரியை மட்டுமே மாநிலங்களின் வசம் தள்ளிவிடுகிறது. மருத்துவமனை தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் வசமே இருக்கும் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின் படி மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் அருகாமையில் 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்கட்டமைப்பு கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிற பொழுது கட்டுமான பணிகளை மேற்கொண்டு தொடர மைய அரசோ மாநில அரசோ தயாராக இல்லை. இரண்டுமே நிதிப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளை குளிப்பாட்டி இளநீர் கொடுத்து சாகடிக்க தயாராகிவிட்டன.

தமிழ் நாட்டைப்பொறுத்தவரை ஓமந்தூரார் வளாகத்தில் இருக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையோடு மருத்துவக் கல்லூரி ஒன்றை கொண்டு வருவது கருத்துரு அளவில் இருப்பதாக போராட்ட மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஈ.எ.ஸ்ஐ மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் மேற்கொண்டிருப்பதாக அதன் இயக்குநரக தலைவர் (Director general) தெரிவித்திருக்கிறார்.

என்.டி.டிவி வெளியிட்ட செய்திக் குறிப்பு மைய-மாநில அரசுகளிடம் நடைபெற்றுவரும் பேரத்தை கோடிட்டு காட்டி, பேரம் படிவது மாணவர்களிடையே கவலை உருவாக்கியிருப்பதாக பிரச்சனையை தெரிந்தே பூசி மொழுகுகிறது. உதாரணமாக, “தொழிலாளர் நல அமைச்சகம் தமிழக அரசிடம் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்துவதற்கும் உபகரணங்கள் வாங்குவதற்கும் ரூ 376 கோடி தேவைப்படும் “என்று கூறியிருப்பதாகவும் “அ.தி.மு.க அரசு இதுகுறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” எனவும் கூறியுள்ளது. ஏற்கனவே, “புதிய மருத்துவக் கல்லூரியை கட்டுவதற்கு 186 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் மேற்கொண்டு இழுபறியான பேரங்கள் நடைபெறலாம்” என்று இரு அரசுகளும் துண்டு போட்டு கைகுலுக்கி இருப்பதைப் படம்பிடித்திருக்கிறது!

மாணவர்களே இப்பிரச்சனையை பொது அரங்கில் கணிசமாக அம்பலப்படுத்தியிருக்கின்றனர். சான்றாக, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு, “அரசுக் கட்டமைப்புகளை ஒழித்துக்கட்டுவதன் நோக்கமே ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவதற்கான நோக்கம்” என்பதை தன் கண்டன அறிக்கையில் பதிவு செய்திருக்கிறது.

“ஈ.எஸ்.ஐ. கழகம் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பது என்ற முடிவெடுத்த பொழுதே அதற்காக 12,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. மேலும் ஈ.எஸ்.ஐ யின் உபரி கையிருப்பு 34,000 கோடியாகும். இவையனைத்தும் தொழிலாளர்களின் பணமாகும். மேலும் ஆண்டொன்றுக்கு தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் காப்பீடு தொகை 14,000 கோடியாக இருக்கிறது. இது இனி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்” என்கிறது அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை.

நிலைமை இப்படியிருக்க, குறிப்பாக 2014-2015 பட்ஜெட்டில் பொற்கால மோடி அரசு, சுகாதாரத்துறைக்கான பட்ஜெட்டை 20% சதவீதம் வெட்டிச் சரித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாயாகும். மேற்கொண்டு பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு அடகுவைத்திருக்கிறது. இந்நிலையில், ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகள் இயங்குவதற்கு நிதிப்பற்றாக்குறை காரணம் என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமின்றி வேறென்ன?

மொத்த ஈ.எஸ்.ஐ நிதியில் 1/8 பங்கைத் தவிர நயா பைசா கூட மைய அரசு, தொழிலாளர்களுக்காக ஈ.எஸ்.ஐ விசயத்தில் கிள்ளிப்போடவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் 163 குழுக்கூட்டத்தின் அறிக்கையோ மருத்துவக் கல்லூரியின் பல்வேறு செலவுகளை (capital cost, recurring cost and revenue cost ) சமாளிக்க முடியாது என்று புளுகியிருக்கிறது. தொழிலாளர்களின் பணத்தை தொழிலாளர்களுக்கு அல்லாமல் வேறு எதற்கு மடைமாற்றுகின்றனர் என்ற கேள்வியும் இங்கு இயல்பாகவே எழுகிறது.

தொழிலாளர் அமைச்சகத்தால் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை நடத்த முடியவில்லையென்றால் சுகாதார அமைச்சகமே இக்கல்லூரிகளை ஏற்று நடத்த வேண்டுமென டெல்லி மாணவர்கள் குழு கோரிக்கை வைத்திருக்கிறது. இதுவரை உள்கட்டமைப்பிற்காக செலவழிக்கப்பட்ட 5,000 கோடி ரூபாய், மக்களின் பணம் என்பதையும் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிற சென்னை ஈ.எஸ்.ஐ கல்லூரி மாணவர்கள் அரசின் நிலைப்பாட்டைக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையில் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் நடைபெற்று வருவதை கவனிக்க முடிந்தது.

“இளங்கலை மாணவர்களின் மாற்று இடத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஈ.எஸ்.ஐ. நிர்வாகம் வழிவகை செய்யும்” என்றும், “தேவைப்பட்டால் நீதிமன்றங்களை நாடலாம்” என்றும், “அதுவரை வகுப்பைப் புறக்கணிக்க வேண்டாம்” என்றும் இளங்கலை மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வலியுறுத்துவதாக தற்போதைய களச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்களின் இத்தகைய நிலைப்பாட்டை முதுகலை மாணவர்கள் முற்றாக நிராகரித்திருக்கின்றனர்.

கர்நாடகாவைப் பொறுத்தவரை மாணவர்கள் ஏதாவது ஒரு அரசு ஏற்று நடத்தினால் போதுமானது என்ற அளவில் போராட்டத்தை சுருக்கியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் மாணவர்கள் ரிட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

டெல்லியின் கள சூழ்நிலை ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.

  • மருத்துவக் கல்லூரிகளை கைவிடுகிற ஈ.எஸ்.ஐ யின் 163 குழுக்கூட்டத்தின் முடிவை இரத்து செய்!
  • மருத்துவக் கல்லூரிகளை மைய அரசே ஏற்று நடத்தும் என சுற்றறிக்கை அனுப்பு!
  • உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரங்களைப் புதுப்பிக்கிற பணிகளை தொடர்ந்து நடத்து!
  • ஒரு வேளை ஈ.எஸ்.ஐ கழகம் மருத்துவமனைகளை ஏற்று நடத்த முடியாவிட்டால் சுகாதார அமைச்சகத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்து! தனியார்மய முயற்சிகளைக் கைவிடு!
  • கற்றுத் தரும் மருத்துவப் பேராசியர்களை கல்விஅல்லாத பணிக்கு மாற்றுவதை கைவிடு! ஏற்கனவே வணிகமயமாக்கப்பட்டிருக்கும் சுகாதாரத்துறையை மேலும் நீர்த்துப்போகும் பொருட்டு மருத்துவக் கல்லூரியின் அறிவு வளங்களைச் சூறையாடாதே!
  • மாணவர்களின் மேற்கண்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை ஆதரிக்கிற நேரத்தில் பிரச்சனையின் மைய அரசியலையையும் நாம் தொட்டுச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

மருத்துவக் கல்லூரியை கைவிடுகிற மைய அரசின் செயல்பாட்டில் மாணவர்களுக்கான பாதிப்பு மட்டும் இல்லை என்பதை போராட்டக் குழுவோடு நாமும் உணரவேண்டியது அவசியமாகும். தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல! ஏற்கனவே தொழிலாளர் நலச்சட்டங்கள் காயடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே மோடி அரசு ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் இருந்து கல்லூரிகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

தொழிலாளர்களின் உரிமைகளை கேள்வி கேட்பாரின்றி ஆணையங்கள், கழகங்கள் என்பதன் பெயரில் ஒரே ஒரு சுற்றறிக்கை மூலம் நிர்மூலமாக்குவதும் மாணவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதும் மைய மாநில அரசுகள் கேள்விக்கு அப்பாற்பட்டவையாக அதிகார துஷ்பிரோயகத்தின் உச்சாணிக்கொம்பில் அம்மணமாக அமர்ந்திருப்பதையும் குறிப்பாக அரசின் ஒட்டுமொத்த தோல்வியையுமே இம்மாணவர்களின் போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்க கூடிய பிரச்சினைகளுக்கு, தொழிலாளிகளுடன் இணைந்து போராட வேண்டிய தேவையை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் பொது வெளிக்கு கொண்டு வந்திருக்கின்றன.

கடைசியாக, நாங்கள் போராட்ட வளாகத்தைவிட்டு வெளியே வரும் போது, ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்கு வந்த தொழிலாளிகள் மற்றும் அவர்தம் குடும்பங்களிடம் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்திக்கொண்டிருந்தனர். தனியார்மய முதலாளித்துவ சீரழிவில் சிதறிப்போயிருக்கும் அறிவுத்துறையினர் தற்பொழுது பாட்டாளிவர்க்கத்திடம் கையெழுத்துக்காக நிற்பதை ஓர் கனிந்த சூழல் என்றே கருதுகிறோம்.

இந்த கனிந்த சூழல் கனலாய் எழுந்து நாட்டை விற்று வரும் அரசையும், அந்த அரசை நடத்தி வரும் மோடி கும்பலையும், வீழ்த்தட்டும்!

செய்தி, புகைப்படங்கள் – சென்னை செய்தியாளர்கள்

இது தொடர்பான செய்திகள்

ஓம் சீமான் ! ஜெய் சீமான் !

18

ரு வேளை இன்றைக்கு முருகன் தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு மலையேறியிருந்தால் அவரது காஸ்ட்யூம் எப்படியிருந்திருக்கும்? அதிகம் போனால் அவரது கோவணம் ஜாக்கி ஜட்டியாக பரிணமித்திருக்கும், அவ்வளவுதான். ஆனால் முருகப்பெருமானின் கொள்ளுப்பேரன் சீமான் அப்படி சென்சார் விதிகளுக்கு முரணாக நடந்துகொள்பவரல்ல. அவர் தனி ஈழத்துக்காக முழங்குகையில் கருப்பு தேநீர் சட்டையும் தமிழக மக்களின் விடுதலைக்காக முழங்குகையில் வெள்ளை ஆடையும் பச்சை துண்டும் அணிந்தாரேயன்றி தன் முப்பாட்டனைப்போல கலாச்சாரத்தை சிதைக்கும் சிற்றாடையை அணியவில்லை.

சீமான் - முருகன்
ஆடை மட்டுமல்ல அரசியல் இலக்குகளிலும் முருகனைக் காட்டிலும் பெரிய அளவில் சிந்திப்பதே அண்ணனின் சிறப்பு

ஆடை மட்டுமல்ல அரசியல் இலக்குகளிலும் முருகனைக் காட்டிலும் பெரிய அளவில் சிந்திப்பதே அண்ணனின் சிறப்பு. சிவக்குமார் போன்ற தயிர்சாத கதாநாயகர்கள் மட்டும் முருகனாக நடித்திருப்பதால் முருகனை வீரமான கடவுள்களின் பட்டியலிலேயே தமிழன் வைத்திருக்கவில்லை. தன்னை முருகனின் பேரனாக அறிவித்ததன் மூலம் முருகனை ஒரே இரவில் வீரனாக்கியிருக்கிறார் சீமான்.

பிரணவ மந்திரத்தை மறந்த தன் மாமா பிரம்மனை சிறைவைத்தான் முருகன். ஆனால் அண்ணனோ அதைவிடவும் கறாரானவர், அவர் தன் மாமாவையே (மாமனார்) ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துதான் தெரிவு செய்தார். தன் காதலியைக் கூட தமிழ்தேசிய நிலைப்பாட்டின் வழியே முடிவு செய்த தலைவன் சீமானன்றி வேறொருவர் இருப்பதாக வரலாறும் இல்லை, இன்னொருவர் வருவார் என்று சொல்லும் துணிவுள்ள சோதிடரும் இவ்வுலகில் இல்லை.

அண்ணன் தன் காதல் மனைவியை பாலச்சந்திரனின் படுகொலையை கண்டித்து களமாடியபோதுதான் கண்டடைந்தார் என்று தமிழ் என்சைக்ளோபீடியாக்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன. காதல் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு அந்த துயர நிகழ்வின் தொடர்ச்சியாக சீமான்ஜி தன் மதுப்பழக்கத்தையே விட்டுவிட்டதாக வரலாறு சொல்கிறது.

அண்ணனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் தமிழ் தேசியத்தின் கூறுகளோடு இணைந்தே வெளிப்படுகின்றன. அவரது ஆனந்தவிகடன் பேட்டி (04/03/2015) நாம் தமிழரின் கொள்கை ஆவணத்தைக் காட்டிலும் அழுத்தமானது. அந்த பேட்டியில் காட்டியிருக்கும் புகைப்படமோ அதைவிட அழுத்தமானது. அண்ணன் வேல் பிடித்த காட்சியையும், அண்டாவில் கறிக்குழம்பு சமைக்க கரண்டி பிடித்த காட்சியையும் கண்டவர்கள், அவர் கையில் ஏ.கே 47 இருந்திருந்தால் 29 நிமிடத்தில் ஈழம் கிடைத்திருக்கும் என்பதை 100 சதம் நம்பியிருப்பார்கள். இத்தனை திறமையிருந்தாலும் ’ஐநா சபையில் 30 நிமிடம் பேச அவகாசம் கிடைத்திருந்தால் ஈழம் வாங்கியிருப்பேன்’ என அவர் சொன்னது எத்தனை தன்னடக்கமான பதில் பாருங்கள்.

சீமான் மதம்
தன் ஹனிமூன் பயணமாக கூடங்குளத்துக்கும், இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் பயணித்த ஒரு தலைவனை இல்லையில்லை தொண்டனையாவது உங்களால் அடையாளம் காட்ட இயலுமா?

வலது கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம், எம்.ஜி.ஆரின் அதிமுகவிற்காக எழுதிய ‘சோசலிசம்தான்’ அண்ணாயிசம் எனும் புதுத் தியரி. அதேபோல முருகனின் கொள்ளுப்பேரனாகிய சீமான் சமூக வலைத்தளங்கள் எனும் வதைமுகாமில் சிக்கி சின்னாபின்னமான வேளையில் ஒரு புது தியரியை உருவாக்கியிருக்கிறார். தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பி பதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான் ”வீரத்தமிழர் முன்ணணி”. தமிழனுக்கென்று ஒரு மதம் “தமிழம்”, அவன் மறைநூல் திருக்குறள், அவன் கடவுள் முருகன். அதுமட்டுமல்ல மொத்த தமிழினத்துக்கும் இனிஷியலாக ‘ரா’ வை அறிவித்திருக்கிறார் (ராவணனை தமிழ் இனத்தின் அப்பனாக அங்கீகரித்திருக்கிறார் சீமான், உளவுத்துறையான ”ரா” என புரிந்துகொண்டு வாண்டடாக வந்து வடுக வந்தேறி ஜீப்பில் ஏறாதீர்கள்).

இப்படியொரு அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்தான். இதுமட்டுமல்ல இன்னும் பல விடயங்களில் அவரே முதலானவராக இருக்கிறார். தான் கலந்துகொள்ளும் எல்லா போராட்டங்களுக்கும் மனைவியை உடன் அழைத்துச்செல்லும் தலைவர் யார்? தன் ஹனிமூன் பயணமாக கூடங்குளத்துக்கும், இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் பயணித்த ஒரு தலைவனை இல்லையில்லை தொண்டனையாவது உங்களால் அடையாளம் காட்ட இயலுமா? அதுகூட தேவையில்லை அண்ணனைவிட வலுவானவர் என “ஆர்ம்ஸை” மடக்கிக் காட்டி நிரூபிக்கும் வல்லமை கொண்ட ஒரே ஒரு தலைவரையாவது உங்களால் காட்ட முடியுமா? இவ்வளவு ஏன், டிவியில் காம்பியரிங் செய்த ஒரே ஒரு உலகத்தலைவரை காட்டுங்கள்… அதை நிரூபித்தால் அடுத்த நொடியே தம்பிகள் அனைவரும் களமாடுவதை விட்டுவிட சித்தமாயிருக்கிரார்கள்.

இவ்வளவு விடயங்களில் அவர் முதல்வராக இருந்தும், அவரை முதல்வர் வேட்பாளர் என்று அவரே அறிவித்துக் கொண்டால் இந்த வடுக வந்தேறிகள் எள்ளி நகையாடுகிறார்கள். ஜதியும் சுதியும் சேர்ந்து நடத்திய சதிராட்டத்தால் அவர் சமீபகாலமாக அமைதி காப்பதாக சில வந்தேறிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மையில் அச்சமல்ல, தமிழ் தேசியத்தின் அடிப்படை விதி. கருவாடு மீனாகி கறந்த பால் மடிபுகுந்தாலும் ஒரு தமிழ்தேசியவாதி ஜெயாவை எதிர்த்து எதையும் பேசமாட்டான். அந்த விதியின் மீதான மரியாதை காரணமாகவே செந்தமிழன் (தற்போது பச்சைத்தமிழன்) சீமான் ஜெயாவை எதிர்த்து எதையும் பேசுவதில்லை. அதனால் அவரை கோழை என்றோ பச்சோந்தி என்றோ யாரும் கருதிவிடவேண்டாம்.

சீமான் வீரம்
இந்தியாவில் காங்கிரஸ் தோற்கவும், தமிழகத்தில் தி.மு.க தோற்கவும், இலங்கையில் ராஜபக்சே தோற்கவும், கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானிடம் ஸ்காட்லாந்து தோற்கவும் அண்ணனின் வீரம்தானே காரணம்!!!

இந்தியாவில் காங்கிரஸ் தோற்கவும், தமிழகத்தில் தி.மு.க தோற்கவும், இலங்கையில் ராஜபக்சே தோற்கவும், கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானிடம் ஸ்காட்லாந்து தோற்கவும் அண்ணனின் வீரம்தானே காரணம்!!! அண்ணனின் அந்த அமைதியிலும் ஒரு வீரம் இருக்கிறது… ஈழத்தாயின் எண்ணப்படி தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராகும் தகுதி அவர் ஒருவருக்கு மட்டுமே இருக்கிறது. அந்தச் சூழலிலும் தன்னை ஒரு முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டிருக்கிறார் தமிழ்தேசியவாதியான சீமான். இவ்வளவு துணிச்சலான தமிழ்தேசியவாதியை நீங்கள் முப்பாட்டன் முருகன் காலத்தில்கூட பார்த்திருக்க முடியாது.

தற்சமயம் களத்தில் இருக்கும் நூற்று சொச்சம் முதல்வர் வேட்பாளர்களிடையே சாட் பூட் திரீ போட்டாலோ அல்லது டம்புள்ஸ் எடுக்கும் போட்டி வைத்தாலோ ஜெயிக்கும் வாய்ப்பு அண்ணனுக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் அவர் எந்த நம்பிக்கையில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டிருக்கிறார் என்பதை சொல்ல வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு.

இணையத்தில் சீமான் விமர்சிக்கப்படும்போதெல்லாம் அவரது தொண்டர்கள் நான்கு நாட்களுக்கு தலைமறைவாவார்கள். அதன் பிறகு ஒரு விளக்கத்தோடு வருவார்கள் பாருங்கள், அந்தக் கோணம் சீமானாலேயே சிந்திக்க முடியாததாக இருக்கும். புலி பதுங்குவது பாய்வதற்காகவே, பூனை ஒதுங்குவது பிராண்டுவதற்காகவே எனும் பழமொழிக்கேற்ப ஒளிந்திருந்து திடீரென தாக்கும் கொரில்லாப்படையாக செயல்படும் இத்தகைய தம்பிகள் இருக்கும் நம்பிக்கையில்தான் அண்ணன் தமிழக முதல்வராகும் முடிவை எடுத்திருக்கிறார். தமிழனுக்கென்று ஒரு நாடு என்று சொல்லிவிட்டு இப்போது முதல்வர் பதவியை இலக்கு வைப்பதா என கேட்போருக்கு ஒரேயொரு பதில்தான் சொல்ல முடியும்… ”இது தமிழ் தேசியத்தின் போர்த்தந்திரம், தமிழ்ப்பிள்ளைகளின் சமையல் மந்திரம்”.

இவ்வளவு விளக்கியபிறகும், சீமானால் எப்படி முதல்வராக முடியும் என கேள்வி எழுப்புபவர்கள் வரலாறு தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். சாதாரண டிவி தொகுப்பாளராக இருந்த அர்ஜுன் ”முதல்வன்” படத்தில் முதல்வராகவில்லையா? சாதாரண சுகாதாரப் பணியாளராக இருந்த கே.ஆர்.விஜயா ”மேயர் மீனாட்சி’ படத்தில் மேயர் ஆகவில்லையா? கல்லூரி மாணவனாக இருந்த அஜ்மல் ”கோ” படத்தில் தமிழக முதல்வராகவில்லையா? என்ன தம்பி பேசுறீங்க நீங்க??

சரி, முதல்வரானால் அவர் என்னதான் செய்வார் என்று கேட்பவர்களுக்கான பதில்… அவர் என்ன செய்தார் என்று பாருங்கள் என்பதுதான். தமிழனுக்கென்று புதிய மதத்தை உருவாக்கினார், சாதியைப்பற்றி ஒரு வார்த்தையேனும் சொல்லியிருப்பாரா?. அதிலிருந்தே அவரது பண்பாட்டுப் பற்று விளங்கவில்லையா?

வீரத்தமிழர் முன்னணி
தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பிபதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான் ”வீரத்தமிழர் முன்ணணி”.

கிரானைட் மாஃபியா பி.ஆர்.பி.யால் வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தில் உண்டு. அப்படிப்பட்ட பி.ஆர்.பியையே அய்யா என விளித்து, “அவரிடமே வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா” என கேட்கும் கருணையுள்ளம் சீமானைத்தவிர யாருக்கு வரும்? ஜெயா இருக்கும் திசைநோக்கி எழும் அவரது இந்த அறச்சீற்றம் உங்கள் இதயங்களைத் தொடவில்லையா அல்லது அப்படி நடிக்கிறீர்களா?

அவர் வைகுண்டராஜன், பி.ஆர்.பழனிச்சாமி போன்ற தமிழ்தேச முதலாளிகளை மட்டும்தான் ஆதரிக்கிறார். வேதாந்தா, ரிலையன்ஸ் போன்ற கம்பெனி முதலாளிகள் வீட்டு திருமணத்துக்கு போனதாகவோ இல்லை அவர்களை தனது திருமணத்துக்கு அழைத்ததாகவோ ஒரு செய்தியையேனும் உங்களால் காட்ட முடியுமா! இப்படியொரு மறத்தமிழன் தமிழகத்தை ஆள்வதுதானே தமிழனுக்கு நல்லது!!.

முப்பாட்டன் முருகன், பாட்டன் வள்ளுவன், அப்பன் ராவணன் என விகடன் பேட்டியிலேயே தமிழனின் இனிஷியல் உறவுகளை தந்தவர் ஆட்சிக்குவந்தால் சித்தப்பா, மச்சினன், ஓர்ப்படியாள் என எண்ணற்ற உறவுகளை உங்களுக்குத் தரமாட்டாரா?? தமிழனுக்கென்று ஒரு மதம், தமிழனுக்கென்று ஒரு கடவுள், தமிழனுக்கென்று ஒரு சரக்கு, தமிழனுக்கென்று ஒரு சைடு டிஷ் வேண்டுமென உங்கள் உள்ளம் கேட்கவில்லையா? வீரநடை, இனியவளே போன்ற சூப்பர்ஹிட் படங்களை எடுத்து இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூனாக இருந்திருக்க வேண்டியவர் இன மீட்சிக்காக களமாடுகிறார், அவரை முதல்வராக்குவது தமிழனின் கடமையில்லையா? ஆகவே ஒரேயொரு முறை அவரை முதல்வராக்குங்கள். ஆடுமாடு மேய்ப்பது அரசு வேலையாகும். புளிசாதம் தேசிய உணவாகும். இன்னும் தமிழ் மதத்தின் மீட்சிக்கான எல்லா வேலைகளும் செய்யப்படும்.

லெக் பீசுக்காக கட்சி மாறும் வடுகனாக இல்லாமல், பரோட்டாவுக்காக தனித்து களம் காணும் தமிழனாக ஒன்றிணைவோம்.

“2021 ஆம் ஆண்டின் முதல்வர் அண்ணன் வாழ்க!!”

“2021 ஆம் ஆண்டின் மக்கள் முதல்வர் அண்ணி வாழ்க!!”

– வில்லவன்

KGF – BEML தொழிலாளர் போராட்டம் வெல்க!

0

KGF – BEML தொழிலாளர் போராட்டம் வெல்க!

தொழிலாளர்களே!

  • BEML நிர்வாகம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த 1,200 தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம், பணிபாதுகாப்பை வழங்க மறுப்பது பொதுத்துறை தனியார்மயமாக்கத்தின் ஒருபகுதி!
  • பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக BEML தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் வெற்றி பெற துணை நிற்போம்! பொதுத்துறை தனியார்மயத்திற்கெதிராக வீறுகொண்டு போராடுவோம்!
  • சட்டபூர்வமான உரிமைகள் பறிக்கும் இந்த அரசுக்கு எதிராக, சட்ட வரம்புகளை மீறி போராட தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியப்போம்!

KGF-ல் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிட்டெட் நிறுவனம் (BEML) செயல்பட்டு வருகிறது.

beml-struggle-2இதில் EMD என்பது (புல்டோசர் போன்றவை தயாரிப்பது) முதன்மை பகுதி. இங்கு 3,000 நிரந்தரத் தொழிலாளர்கள் வரை பணிபுரிகின்றனர். RC2 ரயில்கோச் யூனிட் 2 என்பது ரயில் பெட்டி தயாரிக்கும் இடம். HFU என்பதும் ஹைட்ராலிக் தொடர்பான பாகங்கள் தயார் செய்கின்ற பகுதி. H&P, R&P ஆகிய பிற பகுதிகளும் உள்ளன. இவற்றில் மொத்தமாக 1,200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

இவர்கள் எல்லோரும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த தொழிலாளர்கள். இவர்களை ஆலை நிர்வாகமே நேரடியாக பணியில் அமர்த்தியது. தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு, தங்க சுரங்கத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முதன்மை முக்கியத்துவம் என்ற அடிப்படையில் இவர்கள் எல்லோரும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஒரு நாள் கூலி ரூ 90 – ரூ 120 வரை மட்டுமே.

சில ஆண்டுகளுக்கு RC2 பகுதி தொழிலாளர்கள் போராடிய போது கூட இந்த நிறுவனம் ஊதிய உயர்வு வழங்கவில்லை. மாநில அரசின் மூலம் ரூ 30 மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இவர்களை ஒப்பந்ததாரர் மூலம் எடுத்ததாக கணக்கு காட்டியுள்ளது, நிறுவனம். மேலும், இவர்கள் எல்லோரும் நேரடி உற்பத்தியில் ஈடுபடுவர்கள். இத்தொழிலாளர்கள் இல்லையென்றால் ஆலையே இயங்காது என்ற நிலைமை உள்ளது.

இவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஹெல்மெட், கிளவுஸ், பாதுகாப்பு கவசங்கள் என எதுவும் கிடையாது. ஆனால், BEML-க்கு தொழிலாளர் பாதுகாப்புக்கான சிறந்த நிறுவனம் என்ற விருது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது!

beml-struggle-1வேலைக்கு எடுக்கும் போது பணிநிரந்தரம் செய்வதாக சொல்லி வேலையில் எடுத்தது, நிறுவனம். ஆனால், இதுநாள் வரை மிகச் சிலரே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, இத்தொழிலார்கள் எல்லோரும் 8 – 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள். இவர்களில் இதுவரை 150 பேருக்கு 4 ஆண்டுகள் பயிற்சிக்காலம் (டிரையினிங்) என்ற பெயரில் பணிநிரந்தர ஆணை வழங்கினர். ஏற்கனவே பல ஆண்டுகள் வேலை செய்திருந்தாலும் 4 ஆண்டுகள் பயிற்சிக்காலம் (டிரையினிங்) முடிக்க வேண்டும். இதையும் தொழிலாளர்கள் தீவிரமாக போராட்டத்தில் இறங்குவார்கள் என்ற நிலைமை ஏற்படுவதிலிருந்து திசைத் திருப்பும் நடவடிக்கையாகவே 20, 30 பேர் என பல தவணைகளில் செய்துள்ளது BEML நிர்வாகம்.

பண்நிரந்தர ஆணை, நியாயமான ஊதியம், மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இவ்வளவு நாள் எப்படியும் பணிநிரந்தரம் கிடைத்துவிடும் என்று காத்திருந்தனர். ஆலை நிர்வாகம் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்காத வகையில் தொழிலாளர்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்து தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை திருடி வந்தது. இந்த முறை தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினால் தான் தீர்வு என்ற நிலையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஆலை வாயில் முழக்கம் போடுவது, மதிய உணவு புறக்கணித்தல், கருப்பு பேட்ஜ் அணிதல் போன்ற எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த தொழிலாளர்கள் பிப்ரவரி 27-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். 5 பிரிவுகளில் வேலை செய்யும் 1,200 தொழிலாளர்களும் ஒற்றுமையாக இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

beml-poster-4

இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஆலையின் முன்னால் பந்தல் போட அனுமதி மறுத்து வருகிறது போலீசு. “ஆலை முன்பாக கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை” என்கிறது ஆலை நிர்வாகம். இதற்கு போலீசு, “உள்ளூரில் திருவிழா நடப்பதால் பாதுகாப்புக்கு போலீசு இல்லை” என்று சப்பைக் காரணத்தை சொல்கிறது. இதனையே உள்ளூர் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் கூறுகிறார். ஆலையின் முன்பு கூட்டம் கூடுவதற்கு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள தொழிலாளர்கள் ஆலையின் முன்பாக கூடுவதை நிறுத்தியுள்ளனர்.

மொத்தத்தில் சட்டபூர்வ உரிமைகளைக் கூட அனுமதிக்க இந்த அரசு தயாராக இல்லை. குறைந்த பட்ச ஜனநாயகம் என்ற ஒன்றும் இன்று இல்லை என்பது தெளிவாக உள்ளது. தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க அரசின் அனைத்து அங்கங்களும் கைகோர்த்து இருப்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். ஆகையால், சட்டத்திற்கு உட்பட்ட போராட்டம் என்பது தற்கொலைக்கு சமமானது. இந்த சட்டவரம்புகளுக்கு வெளியே தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டிமையத்து போராடுவது மிகவும் அவசியமானது.

[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

இத்தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்கள் இன்னும் நேரடியாக ஆதரவு தெரிவிக்காத நிலைமை இருப்பதால் ஆலையில் ஓரளவிற்கு உற்பத்தி நடக்கிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். போராட்டம் தொடர்ந்தால் இது நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியிலும் மாற்றத்தைக் கொண்டுவரும். அதுவரை தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்.

மற்றொருபுறம், BEML-ஐ தனியார்மயமாக்கும் வேலை வெகுதீவிரமாக நடக்கிறது. இத்தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்யாமல் வைத்திருப்பது என்பது பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கத்தின் ஒருபகுதி. அவ்வாறு பொதுத் துறை தனியார்மயமாக்கத்திற்கு எதிராக போராடுகின்ற சக்திகளுடன் இணைந்து போராட முன்வரவேண்டும். தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாக இப்போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.

மத்தியில் ஆட்சி புரிகின்ற மோடி அரசு, இயற்கை வளங்களை சூறையாடி நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது. இதற்கேற்ப அனைத்துப் பிரிவு மக்களின் உரிமைகளையும் கடுமையாக நசுக்கி வருகிறது. தொழிலாளர்களுக்கு இருக்கும் ஏட்டளவிலான சில உரிமைகளையும் பறித்து தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்குகிறது.

இவற்றை உணர்ந்து BEML தொழிலாளர்களின் போராட்டத்தை அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஆதரிக்க புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவுகிறது. தனியார்மயமாக்கத்திற்கு எதிராகவும் தொழிலாளர் உரிமைப் பறிப்புக்கு எதிராகவும் தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்! உரிமைகளை மீட்டெடுக்க வீதியில் இறங்கிப் போராடுவோம்!

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு:
97880 11784 –  ஒசூர்
98459 38763 – கே.ஜி.எஃப்

காஷ்மீர் முதல்வர் உரை : வா ரே வா.. கொன்னுட்டீங்க பாய் !

19
முப்தி கொடுத்த அடிக்கு முன்னாடி ஒரு கட்டிப்பிடி
கொன்னுட்டீங்க பாய்!
கொன்னுட்டீங்க பாய்!

“ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்ததற்கு பாகிஸ்தான், போராளி அமைப்புகள், ஹுரியத் ஆகியோர்தான் காரணம்… அவர்கள் ஏதாவது செய்திருந்தால் நாம் அமைதியாக தேர்தலை நடத்தியே இருக்க முடியாது. நான் இதை பிரதமரிடம் தெளிவாக கூறிவிட்டேன் என்பதை இங்கே அதிகார பூர்வமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.”

நேற்று மாலை ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முப்தி முகமது சயீத், ஆற்றிய உரை இது. முப்தி இதைப் பேசும்போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த துணை முதல்வரான பாஜக வின் நிர்மல் சிங், மூச்சு கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை முதல்வர் முப்தி வெளியிடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு முகமெல்லாம் பெருமை பொங்க 56 இஞ்ச் மார்பழகன் சூப்பர்மேன் மோடியும், 55 இஞ்ச் அஞ்சா நெஞ்சன் அமித் ஷா வும், பதவியேற்பு விழா மேடையில் முப்தி முகமது சயீதை கட்டித் தழுவினார்கள். ஜோக்கடித்து மகிழ்ந்தார்கள்.

அத்வானி, ஜோஷி இரண்டு பேரையும் வரவழைத்து பதவியேற்பு விழா மேடையில் ஒரு குரங்கு குல்லாயை மாட்டி உட்கார வைத்திருந்தார் மோடி; வேறெந்த உயர்ந்த நோக்கமும் இல்லை. ஏற்கெனவே பா.ஜ.க.வின் திண்ணையில் உட்கார வைத்து கஞ்சி ஊற்றப்படும் அந்தக் கிழடுகளுக்கு, மொய்யை திரும்பச் செய்கிறார் மோடி, அவ்வளவுதான்.

அல்லல் பட்டு ஆற்றாது அழுத அத்வானியின் கண்ணீரைத் துடைத்து, அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில், மோடிக்கு ஆழமாக ஆப்பு வைத்து விட்டார் முப்தி பாய். மோடியை சும்மா அடித்தாலும் பரவாயில்லை. “இந்த மேட்டரை நான் பிரதமரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன்” என்று சொல்லி அடித்திருக்கிறார்.

போனமாசம் கேஜ்ரிவால் ஆப்பு. இந்த மாசம் முப்தி ஆப்பு. இன்னும் எத்தனை ஆப்புகள் மோடியின் மீது இறங்கினால் அத்வானியின் ஆன்மா சாந்தியடையுமோ, அது நமக்குத் தெரியாது.

அத்வானி கதை இருக்கட்டும். 56 இஞ்ச் மார்புள்ள பிரதமரால் வழிநடத்தப்படும் பாரத தேசத்தை, பாரத மண்ணில் நின்று கொண்டே ஒரு முசல்மான் இவ்வளவு கேவலமாகப் பேசுவதைக் கேட்டு அங்கே கூடியிருந்த எழுச்சி பெற்ற ஹிந்துக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அனைவரும் எஸ்கேப்.

‘அடுத்த 6 வருசத்துக்கு அதிகாரத்தில் அமர்ந்து ஆட்டையப் போடலாம்’ என்று இதமான கனவில் மிதந்து கொண்டிருந்த காக்கி அரை டவுசர்களின் முகத்தில், சுளீர் என்று ஐஸ் வாட்டரை அடித்து விட்டார் பாய்.

“காஷ்மீர் மக்களுக்கு நன்றி சொல்லவில்லை, தேர்தல் கமிசனுக்கு நன்றி சொல்லவில்லை, போலீசுக்கும் ராணுவத்துக்கும் நன்றி சொல்லவில்லை. பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் நன்றி சொல்கிறாரே முதல்வர் இது அடுக்குமா? ஓபனிங்கே சரியில்லையே இந்த கூட்டணி நீடிக்குமா?” என்று பலவாறாக நோண்டுகிறார்கள் மீடியாக்காரர்கள்.

காங்கிரசின் குலாம் நபி ஆசாத் மடக்குகிறார். டிவிட்டரில் ஓமர் அப்துல்லா பா.ஜ.க.வை கலாய்க்கிறார். ஜம்மு பாந்தர்ஸ் கட்சி “மோடியின் பதில் என்ன” என்று உறுமுகிறது. “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே, அதென்னாச்சு, இதென்னாச்சு” என்று கூகிளில் புகுந்து தேடியெடுத்து தேதிவாரியாக பா.ஜ.க. வினர் பேசியதையெல்லாம் எடுத்துப் போட்டு, என்.ஆர்.ஐ ஹிந்துக்கள் டார்ச்சரை தொடங்குகிறார்கள். “அதெல்லாம் சும்மனாச்சிக்கும் சொன்னதுப்பா” என்று தனித்தனியே அவர்களை ஆஃப் பண்ணலாமென்றால், அதுக்குள் விசயம் அனுமார் வாலில் வைத்த தீ மாதிரி இணையம் முழுவதும் பற்றி எரிகிறது.

இதற்கிடையில், பிரதமர் வடிவேலுவின் நிலைமை புரியாமல், ஜம்முவில் பஜ்ரங் தள் அரைக்கிராக்குகள் முப்திக்கு கொடும்பாவி கொளுத்தி, சவால் விட்டு சண்டைக்கு கூப்பிடுகிறார்கள். எம்.எல்.ஏ சீட் கிடைக்காத அதிருப்தி ஹிந்துக்கள், கொடும்பாவிகளுக்கு மண்ணெண்ணெய சப்ளை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் டி.வி.காரர்கள் தீவிரவாதியை விரட்டும் விஜயகாந்த் போல பா.ஜ.க.வினரை தேடித்தேடி துரத்துகிறார்கள். இருந்த போதிலும், யாராலும் ஒரு ஆளைக்கூடப் பிடிக்க முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு பயங்கரமான தலைமறைவு இயக்கம், என்பது மீடியாக்காரர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

முப்தி பேசிமுடித்த அடுத்த 4 மணி நேரத்துக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் யாரையும் காணவில்லை. எல்லோரும் “சுவிட்சுடு ஆஃப்”. இந்த இக்கட்டான சூழ்நிலையில் காஷ்மீரில் தேர்தலை நடத்திய தேர்தல் கமிசன், “தேர்தலை நடத்தியது நாங்கள், நன்றி பாகிஸ்தானுக்கா? “முதல்வர் இப்படி பேசியிருப்பது எங்களுக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்று அறிக்கை விட்டு விட்டது.

இதற்கு மேல் ஒரு ஆளும் கட்சி எப்படி வலிக்காத மாதிரி நடிக்க முடியும்? ஒரு அறிக்கையை ரெடி பண்ணி விட்டார்கள். “தேர்தல் வெற்றிகரமாக நடந்ததற்கு தேர்தல் கமிசனுக்கும், ராணுவத்துக்கும் இந்திய அரசியல் சட்டத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் நன்றி சொல்கிறோம்” என்று அறிக்கை விட்டார் பா.ஜ.க செயலர் ஸ்ரீகாந்த் சர்மா.

“அது நீங்க சொல்றது. அவரு சொன்னதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க, அதைச்சொல்லுங்க” என்று திரும்பத் திரும்ப கேட்டுப் பார்த்து விட்டார்கள் மீடியாக்காரர்கள். “நாங்க என்ன சொல்றோம்னா” என்று தொடங்கி “இதுதான் அந்த இன்னொரு வாழைப்பழம்” என்று முடிக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

ஆனானப்பட்ட டைம்ஸ் நௌ அப்பாடக்கர்கள், பா.ஜ.க.வினரின் தொண்டை வரை மைக்கை திணித்து நோண்டிப் பார்த்து விட்டார்கள். முடியவில்லையே. முப்தி முகமதுக்கு எதிராகவோ, ஹூரியத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராகவோ ஒரே ஒரு வார்த்தையைக் கூட பா.ஜ.க.வினரின் வாயிலிருந்து மட்டுமல்ல வயிற்றிலிருந்து கூட வரவழைக்க முடியவில்லை.

“ஹூரியத், தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆகியோருடன் பேசக்கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலை. ‘அவர்களுடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமரிடம் சொல்லி விட்டேன்’ என்கிறார் முப்தி. பேசுவீர்களா, மாட்டீர்களா? உங்கள் நிலை என்ன? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று பா.ஜ.க. தலைவர்களைக் கேட்கிறார்கள் நிருபர்கள்.

முப்தி கொடுத்த அடிக்கு முன்னாடி ஒரு கட்டிப்பிடி
முப்தி கொடுத்த அடிக்கு முன்னாடி ஒரு கட்டிப்பிடி

“சமாதானம், முன்னேற்றம், நல்லாட்சி இதுதான் எங்கள் நிலை – ஆமென்” என்று தமிழ் சினிமா பாதிரியாரைப் போல சாந்த சொரூபியாக பதிலளிக்கிறார்கள் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்கள்.

“காஷ்மீர் பிரச்சினை நாட்டின் உயிராதாரமான பிரச்சினை ” என்றும், “நேரு துரோகம் செய்து விட்டார்” என்றும், “சியாமா பிரசாத் முகர்ஜி கொலை செய்யப்பட்டு விட்டார்” என்றும், “காஷ்மீரை மீட்காமல் ஓயமாட்டோம்” என்றும் பாரதிய ஜனதாவினர் தொண்டை நரம்பு புடைக்க கத்தி வருவதும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது- பா.ஜ.க.வின் மூலமுதல் கொள்கைகளில் ஒன்று என்பதும் எல்லோருக்கும் தெரியும். மொத்தத்தில் பா.ஜ.க.வின் பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு தேச வெறி அரசியலுக்கு ஏவுதளமே காஷ்மீர்தான்.

பல ஆயிரம் உயிர்களையும் பல இலட்சம் கோடி மக்கள் பணத்தையும் அழித்தும், அங்கே ஒரு அங்குலம் வெற்றியைக் கூட சாதிக்க முடியவில்லை. இனிமேலும் சாதிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அயோத்தி முதல் காஷ்மீர் வரை அனைத்துமே தமது பாசிச அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுக் கொள்வதற்கு இவர்கள் பயன்படுத்தும் துருப்பு சீட்டுகள். அவ்வளவே. அதனால்தான் இவர்கள் பதுங்குகிறார்கள், பம்முகிறார்கள்.

இந்த விசயத்தில் பாரதிய ஜனதாவினர் பாசிஸ்டு நரிகள் என்றால், முப்தி முகமது சயீதோ ஒரு கிழட்டுப் போக்கிரி. “பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து விட்ட துரோகி” என்று காஷ்மீர் மக்கள் தன்னை ஏசுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். தீவிரவாத அமைப்புகளோ, ஹுரியத்தோ தன்னைக் குற்றம் சாட்ட முடியாத வண்ணம் தப்பிக்க வேண்டுமானால், தன்னை இந்து மதவெறியர்கள் தாக்குவதற்கு வழி செய்து கொள்ள வேண்டும் என்பதே முப்தியின் திட்டம். அது நிறைவேறிவிட்டது.

காஷ்மீர் மக்கள் தன் மீது காறி உமிழாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறார் முப்தி. டில்லியிலிருந்து காஷ்மீருக்கு மோடியை வரவழைத்தார்; மேடையில் நடு சென்டராக உட்கார வைத்தார்; அப்புறம் பொறுமையாக தொண்டை வரை காறி, மோடியின் முகத்தில் துப்பியிருக்கிறார். முப்தி உமிழ்ந்த எச்சில் மோடியின் முகத்தில் இன்னும் வழிந்து கொண்டுதான் இருக்கிறது.

துடைத்துக் கொள்ளலாம்தான். துடைத்துக் கொண்டால், மறுகணமே பார்ப்பவர்கள் “முப்தி துப்பிய எச்சிலுக்கு உங்கள் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்புவார்களே! அதனால்தான் முப்தி முகமது தனது மூஞ்சியில் துப்பியதே தெரியாதவர் போல பாவ்லா பண்ணுகிறார்.

“ஏண்டா, உனக்கெல்லாம் வெக்கமே கெடயாதா?“ என்றொரு வசனத்தை அடிக்கடி கேட்டிருப்பீர்களே, அதை சந்தானத்தின் குரலில் கேட்டுக் கொள்ளவும். அதுதான் இந்தக் கட்டுரையின் கடைசி வரி.

பின்குறிப்பு:

முப்தி முகமது சயீதின் மகள் மெகபூபா முப்தியை பேட்டி கண்டார் என்.டி.டிவி யின் பர்க்கா தத். மெகபூபாவின் வாயிலிருந்து ஒரு சின்ன வருத்தத்தை வரவழைத்து பிரச்சினையை சுமுகமாக முடிக்கும் தரகு வேலையாகவே இருந்தது பர்க்காவின் முயற்சி. ஆனால் மெகபூபா மசியவில்லை. “முப்தி சொன்னது நூற்றுக்கு நூறு சரி” என்றே வாதிட்டார். மொத்தத்தில் மோடியை இன்னொரு மூத்திர சந்தில் கொண்டு போய் அடித்த கதையாகி விட்டது பேட்டி.

இதற்கிடையில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தேசபக்த எதிர்க்கட்சிகள் பொங்குகிறார்கள். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளும் சேம் சைட் கோல் அடிக்கிறார்கள். எல்லோரும் பிரதமரை பதில் சொல்லச் சொல்கிறார்கள். எழுந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். “நான் பிரதமர் மோடியிடம் பேசிவிட்டுத்தான் பதில் அளிக்கிறேன். முப்தி தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து” என்றார். அவரு சொன்னது அவரோடு கருத்துங்கிறதுதான் மோடி சொன்ன கருத்தாம். இது மோடியிடம் ஏற்கெனவே ஊமைக்காயம் பட்ட ராஜ்நாத் சிங், மோடியின் அல்லையில் குத்தியிருக்கும் உள்குத்து.

இரயில்வே பட்ஜெட் : மோடி பிராண்டு ஓட்டை வாளி !

1

ந்தாண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கையை இந்து பத்திரிகை உள்ளிட்ட தேசிய, பிராந்திய, ஆங்கிலம் என அனைத்து ஊடகங்களும் போற்றி புராணம் பாடுகின்றன. “புதிதாக இரயில்களை அறிவிப்பது, கட்டணக் குறைப்பு என்று கவர்ச்சி திட்டங்கள் இல்லாமல் முன்னேற்றத்திற்கான ஒரு தொலை நோக்கு பார்வை கொண்டாதாக இருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை” என்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார மேதைகள்; “இதை அரசியலற்ற பட்ஜெட், நுகர்வோருக்கான பட்ஜெட்” என்கிறார்கள். அதாவது, ரயில்வே மக்களுக்கான பொது சேவைக்கானது என்பதை மாற்றி முதலாளிகளுக்கான லாப வணிகத்துக்கானது என்பதை கொண்டாடுகிறார்கள்.

சுரேஷ் பிரபு - ஜீ தொலைக்காட்சி
நாட்டை விற்பதற்கான மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை கொண்டாடும் ஊடகங்கள்.

ஜால்ரா கச்சேரி களை கட்டிக் கொண்டிருக்கும் போது வழக்கம் போல் காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள், திரிணாமூல் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சம்பிரதாயமான முறையில் “இது பயனற்றது” என்று ஜால்ராவைத் திருப்பித் தட்டியுள்ளன. எதிர் லாவணி பாடியுள்ள எதிர்க்கட்சிகளும் தாங்கள் விட்ட ‘காட்டமான’ கண்டன அறிக்கைகள் மறுநாள் பத்திரிகைகளில் வந்ததா இல்லையா என்று கூட கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது தனி கதை.

ஒவ்வொரு ஆண்டும் இரயில்வே துறைக்கான நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் சடங்கு நடந்தேறும் போதும் செய்யப்படும் அறிவிப்புகள் என்ற மோசடியைப் பார்த்து ஈமு கோழி நிறுவன அதிபர்களே வெட்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதற்கு முந்தைய ரயில்வேத் துறை அமைச்சர்கள் பறக்கவிட்ட குமிழிகளின் நிலை என்னவென்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா – மர்ச்சாலா பகுதிகளுக்கு இடையிலான இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட ஆண்டு – 1997. மேற்படி திட்டத்திற்காக பதினெட்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பிடிக்கும் இந்த திட்டத்திற்கு இப்போது ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய கோடிகளை ஒதுக்கி, அதில் ஒப்பந்ததாரர் தின்று கழித்தது போக மிஞ்சிய தொகையில் வேலை நடந்து, இடைப்பட்ட காலத்தில் பணிகளின் மறுமதிப்பீட்டில் அதிகரித்த தொகைக்கான ஒப்புதல் கிடைத்து, அதற்கான நிதி ஒதுக்கீடு நடந்து, ஒரு வழியாக வேலை முடியும். மர்ச்சாலா மக்கள் இந்த இருப்புப் பாதையில் ஓடும் இரயிலில் ஏறி பத்து நூற்றாண்டுகள் கழித்து நல்கொண்டா வந்து சேர்ந்திருப்பார்கள்.

இந்திய ரயில்வே உழைக்கும் மக்களின் போக்குவரத்து தேர்வு
சாலைப் போக்குவரத்துக் கட்டணம் வானத்து மேகங்களைக் கிழித்து அதற்கும் மேலே பறக்கும் நிலையில் சாதாரண மக்களின் மலிவான போக்குவரத்துத் தேர்வாக இருப்பது இரயில் பயணம் ஒன்று தான்.

கடந்த இருபதாண்டுகளில் இரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட சுமார் ரூ 6 லட்சம் கோடி மதிப்பிலான 362 திட்டங்கள் நிதி நெருக்கடியின் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன என்று கடந்த ஜனவரி 15-ம் தேதி ஜீ தொலைக்காட்சியில் நடந்த ராஜ்நீதி என்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் சுரேஷ் பிரபு. ஒவ்வொரு நாளும் சுமார் 2.3 கோடி பயணிகள் இரயில்வே சேவையைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 2.4 கோடி டன் அத்தியாவசிய சரக்குகள் இரயில்வே சேவையைப் பயன்படுத்தி நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் பாரதிய ஜனதாவின் அப்போதைய இரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரெயில்கள் இப்போது எங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன என்கிற தகவல் தெரியவில்லை.

சாலைப் போக்குவரத்துக் கட்டணம் வானத்து மேகங்களைக் கிழித்து அதற்கும் மேலே பறக்கும் நிலையில் சாதாரண மக்களின் மலிவான போக்குவரத்துத் தேர்வாக இருப்பது இரயில் பயணம் ஒன்று தான். சாதாரண மக்களுடைய அன்றாடப் பிழைப்பின் பிரிக்க முடியாத அங்கமாகவும் அத்தியாவசிய சரக்குகளை தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சேர்க்கும் இரத்த நாளங்களாகவும் விளங்கும் இரயில்வே துறையில் இத்தனை நாட்களாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை வெறும் வாயில் சுட்ட வடைகள் தான். நிறைவேறிய சொற்ப திட்டங்களும் ஆமை இனமே வெட்கித் தலைகுனியும் வேகம் கொண்டவை. அதில் நடக்கும் லஞ்சம், ஊழல், கமிஷன் போன்ற லாகிரி வஸ்துக்களை இங்கே கணக்கில் சேர்க்கவில்லை.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.
தனியார் மயத்துக்கு “புளூ பிரின்ட்” – ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் உரையில் முன்வைக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் –

–    இரயில் நிலையம் சுத்தமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்க சி.சி.டி.வி கேமரா

–    இன்பச் சுற்றுலாவை ஊக்கப்படுத்த பிரத்யேகமான சுற்றுலா இரயில்கள்

–    மும்பை அகமதாபாத் இடையே புல்லட் இரயில்

–    முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ’வைர நாற்கர’ இருப்புப் பாதைத் திட்டம்

–    இரயில் நிலையங்களில் வைஃபை மூலம் இணைய இணைப்பு

–    இரயில்களில் தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதி (infotainment)

–    இரயில் கோச்சுகளில் விமானங்களில் உள்ளது போன்ற கழிவறை

–    இரயில் நிலையங்களில் உயிரிக் கழிவறை

–    இரயில் கோச்சுகளில் செல்போன்கள் ரீசார்ஜ் செய்யும் வசதி

–    இரயில் நிலையங்களைச் சுத்தமாக பராமரிக்க 50,000 பேர்கள் கொண்ட தனி(யார்) படை

இன்னும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு சுமார் ரூ 8.56 லட்சம் கோடி தேவைப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஒரு புறம் ஏற்கனவே உள்ள இருப்புப் பாதைகளை முறையாகப் பராமரித்து விபத்துகளைத் தடுக்கவே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இன்னொரு புறம், ஏற்கனவே உள்ள இரயில்கள் போதாமல் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கிறார்கள். ஊரகப் பகுதிகளில் இருந்து பெருநகரங்களுக்குத் தொழிலாளிகளைச் சுமந்து வரும் இரயில்கள் ஒவ்வொன்றும் பிராய்லர் கோழிகளைச் சுமந்து செல்லும் டி.வி.எஸ் மொப்பட்டைப் போல் காட்சியளிக்கிறது. சாதாரண மக்கள் பயணிக்கும் முன்பதிவு தேவையில்லாத பொதுக் கோச்சுகளோ பன்றிகளே நுழைய சங்கடப்படும் கோலத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இரயில் பயணம் என்பது மக்களின் தலையில் எழுதப்பட்ட மோசமான விதி என்ற நிலையில், “கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை” என்கிறார் இரயில்வே அமைச்சர்.

வாலாஜாபேட்டையில் இருந்து நெஞ்சாங்கூடு நசுங்க காலை ரெயிலில் பயணித்து சென்னைக்கு வேலைக்கு வரும் சாதாரண மக்களுக்குத் தேவை குத்துப் பாட்டுக்களோ, செல்போன் ரீசார்ஜோ அல்ல – மேலும் புதிய இரயில்களும், இணைக்கப்படாத பகுதிகளை இணைப்பதும், புதிய வழித்தடங்களில் மலிவான சேவையுமே மக்களுக்குத் தேவை. ஆனால், முட்டையிடும் கோழியின் பிட்டி வலியைப் பற்றி ஐந்து நட்சத்திர ஓட்டலில் ‘புல்ஸ் ஐ’ தின்னும் சுரேஷ் பிரபுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதே ஐந்து நட்சத்திர ‘புல்ஸ் ஐ’ பார்ட்டிகளுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுப்பதுதான் அவருக்கு இடப்பட்ட கட்டளை.

அத்தியாவசியத் திட்டங்களுக்கே காசு இல்லை என்று ஒரு மாதத்திற்கு முன் புலம்பியவர், இந்தப் புதிய ஆடம்பரங்களுக்கு எங்கே இருந்து நிதி திரட்டப்போகிறார்?

மோடி அரசு பதவியேற்ற உடனேயே டீசல் விலையேற்றத்தைக் காரணமாகச் சொல்லி இரயில்வே பயணிகள் கட்டணம் 14.2 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டது. தற்போது சர்வதேச எண்ணைச் சந்தையில், இரசியாவின் பொருளாதாரத்தைச் சீரழிக்க அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் கச்சா எண்ணை கடுமையாக வீழ்ந்துள்ளது – விளைவாக, டீசலின் விலை கணிசமாக குறைந்துள்ளது. டீசல் விலை உயர்ந்தபோது உயர்த்தப்பட்ட பயணிகள் கட்டனம், பின்னர் குறைந்த போது குறைக்கப்படவில்லை. இந்த வகையில் சேமிக்கப்பட்ட ரிசர்வ் தொகையை புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு.

இது தவிர, “உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் வாங்குவது குறித்துப் பேசி வருவதாகவும் ஓய்வூதிய நிதியில் இருந்து கணிசமான தொகையை இரயில்வே துறைக்குத் திருப்பி விடுவது குறித்து அலோசனைகள் நடந்து வருவதாகவும்” சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உள்ளே நுழைகிறது என்றாலே தனியார் முதலாளிகள் உள்ளே நுழைவதற்கான முன்னோட்டமாக அதைப் புரிந்து கொள்ளலாம். கூடுதலாக, ஓய்வூதிய நிதியை இரயில்வேத் துறையை நோக்கித் திருப்பி விடும் பாரதிய ஜனதாவின் யோசனையையும் இணைத்துப் பார்த்தால் புதிருக்கான விடை தெளிவாகிறது.

ஓய்வூதிய நிதியை இரயில்வேயில் கொட்டுவது, மக்களின் இரத்தப் பணத்தில் வைஃபை இணையம், குளு குளு சொகுசுப் பெட்டிக்குள் குத்தாட்டப் பாடல்கள் என்று மக்களுக்கான சேவையாக இயங்க வேண்டிய இரயில்வே துறையை பணக்காரர்களுக்கான விற்பனை பொருளாக மாற்றுவது, பின் இரயில்வே துறையை மொத்தமாகத் தூக்கி பன்னாட்டு முதலாளிகளின் கையில் ஒப்படைப்பது, உள்ளே நுழைந்த தனியார் முதலாளிகள் கட்டணக் கொள்ளை அடிப்பதற்கு விளக்குப் பிடிப்பது என தனியார் மயத்துக்கான விரைவு தடத்தை போடுவதுதான் மோடி அரசு வழங்கியிருக்கும் இந்த ரயில்வே பட்ஜெட்டின் நோக்கம்.

மோடி சொல்லும் “அச்சே தின்”, இரயில்வே துறையைப் பொறுத்த வரை வெகு சீக்கிரத்தில் வரப் போகிறது – “அச்சே தின”ங்களை அள்ளிக் கொள்ள முதலாளிகளும் மேட்டுக்குடியினரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.

இது தொடர்பான செய்திகள் :

உயரும் மின்கட்டணம் – பொறியாளர் காந்தியின் விளக்கம்

7

டந்த 2013-14-ம் நிதி ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் ரூ 13,985 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது, முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ 2,305 கோடி அதிகம். மேலும், மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ 74,113 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது மாநிலத்தின் மொத்தக் கடன் சுமையில் சரி பாதி.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை கருத்தரங்கில் காந்தி
கோப்புப் படம்

இது தொடர்பாக, பொறியாளர் காந்தி அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏறத்தாழ ரூ 16,000 கோடி அளவிற்கு மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், மின்வாரியத்தின் நட்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே, இதற்கு என்ன காரணம்?

2012-13, 14 ம் ஆண்டுகளில் முறையே ரூ 7,874 கோடி, ரூ 937 கோடி மற்றும் ரூ 4,225 அளவுக்கு கட்டண உயர்வு வந்துள்ளது. ஒரே காரணம் தனியார் மின்சாரம் மட்டுமே.

1997-98-ல் வெறும் 99.8 கோடி யூனிட் ஆக இருந்த தனியார் கொள்முதல் (அதுவும் காற்றாலை போன்ற மின்சாரமே கொள்முதல் செய்யப்பட்டது) 2007-08-ல் 2392 கோடி யூனிட் என அதிகரித்திருக்கிறது. இன்று மொத்தத் தேவையில் 30.35 சதம்வரை உயர்ந்து தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது.

அரசு மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திச்செலவு யூனிட் ரூ 3 என்றளவில் இருந்தாலும் தனியாரின் உற்பத்தி விலை ரூ 5.50-லிருந்து ரூ 14.00 வரை வேறுபடுகிறது. 30.35 சத பங்கு தனியார் கொள்முதலும் அதிக விலையும், மின் வாரியத்தின் நட்டத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றது.

தனியார் மின்சாரம்
30.35 சத பங்கு தனியார் கொள்முதலும் அதிக விலையும், மின் வாரியத்தின் நட்டத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றது.

எஸ்.டி.சி.எம்.எஸ் எலெக்ட்ரிக் நிறுவனம், அபான் பவன் நிறுவனம், பென்னா எலெக்ட்ரிசிடி ஆகிய தனியார் நிறுவனங்கள் யூனிட் ஒன்று ரூ 5 விலையில் மின்சாரத்தை வழங்கிவரும் நிலையில் , ஜி.எம்.ஆர் பவர் கார்ப்பரேஷன், சாமல்பட்டி பவர் கார்ப்பரேஷன், பிள்ளை பெருமாள் நல்லூர் பவர் கார்ப்பரேஷன், மதுரை பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ 14 வரை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதன் பின்னணி என்ன?

அபான் பவன், பென்னா ஆகியவை எரிக்காற்றையும், எஸ்.டி.சி.எம்.எஸ். பழுப்பு நிலக்கரியையும் எரிபொருளாய் கொண்டவை. மற்ற நான்கு நிறுவனங்களும் எச்.எப்.ஓ. (ஹெவி ஃபர்னஸ் ஆயில்) என்ற நீர்ம எரிபொருள் அதாவது டீசல் போன்றவற்றை எரிபொருளாகக் கொண்டவை. அவற்றின் விலை கடுமையானதுதான்.

தற்பொழுது சந்தித்து வரும் மின்பற்றாக்குறை எவ்வளவு? இதனை அரசே தனது சொந்த முறையில் பூர்த்தி செய்து கொள்ள முடியாதா?

கோடைக் காலத்தில் தோராயமாக 2,000 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. புதிய உற்பத்திக்காக கட்டுமானத்தில் இருந்தவற்றை குறைந்தபட்சம் 2012-ல் கொண்டுவந்திருந்தால் அந்த ஆண்டு முதல் மின்வெட்டைத் தவிர்த்திருக்கலாம். புதிய நிலையங்கள் துவங்குவதிலும் தேவையில்லாமல் மூன்றாண்டுகள் வீணடிக்கப்பட்டன. துவங்கிய புதிய நிலையங்கள் முழு உற்பத்தியின்றி, பழுதடைந்து பகுதித்திறனாக முடங்கியுள்ளன. (மேட்டூர் 200 மெகாவாட், வட சென்னை 600 மெகாவாட், வல்லூர் 500 மெகாவாட், வழுதூர் 100 மெகாவாட்)

powerதி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதாலேயேதான், பல மின்திட்டங்கள் முடக்கப்பட்டிருக்கிறதா? இல்லை, இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கையா?

தனியார் மின்சாரக் கொள்முதல் என்பது கொள்ளை லாபம் தரும் ஊழல் வழி. இதனை யாரும் தவிர்க்கமாட்டார்கள். (2400 கோடி யூனிட்  கொள்முதலில் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கமிசன் கூட நல்ல இலாபம்தான்)

மின்வாரிய நட்டம், ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் மின்கட்டண உயர்விலிருந்து மீள, தாங்கள் முன்வைக்கும் மாற்றுத்திட்டம் (அ) ஆலோசனை என்ன?

அ) அடிப்படையில் மின்சாரம் சேவைப்பொருளாக மீண்டும் கொள்ளப்பட்டு அரசே அளிக்க வேண்டும்.
ஆ) இடை மானியம், சமுதாய நோக்கில் தொடர வேண்டும்.
இ) புதிய உற்பத்தி முழுவதும், அரசுத்துறையில் இருக்க வேண்டும்.
ஈ) மின்சாரம், உணவுக்கு அடுத்த அடிப்படை வளம். இதில் எல்லா குடிமக்களுக்கும் பங்களிக்கப்படுவதே ஜனநாயக கடமை.
உ) அடிப்படையில் ”சந்தைப் பொருளாதாரம்” மாற்றப்பட வேண்டும்.

– நேர்காணல்: இளங்கதிர்

கோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு

0

கோவை நகரம் நாளுக்கு நாள் முற்றி வரும் மக்கள் போராட்டங்களை தினந்தோறும் எதிர் கொண்டு வருகிறது. தன்னியல்பில் பாசிசமயமாகி வரும் அரசக் கட்டமைப்பில் இதர மாவட்டங்களுடன் ஒப்பு நோக்கின் இன்னும் ஒரு படி மேலே இருக்கும் நகரம் இது. இந்துத்துவ சில்லறை லெட்டர் பேட் அமைப்புகளின் கொட்டம் வேறு ஒரு பக்கம். புரட்சிகர அமைப்புகள் இத்தகைய அசுத்தங்களை அகற்றி புதுக் குருதி ஏற்றும் வேலையை செய்து வரும் வேளையில், அதற்கு அவ்வப்போது எதிர் வரும் வேகத் தடைகளை அகற்றும் தருணங்கள் சுவாரசியமானவை.

கடந்த வாரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த நமது தோழர்கள் கோவை அரசுக் கலைக் கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். கலைக் கல்லூரி கோவையின் மையப் பகுதியில் இருக்கிறது. மாணவர்கள் இளைஞர்களின் பிரதான பிரதேசமாதலால் இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிள் போல எப்போதும் துடிப்புடன் இருக்கும் பகுதி.

வழக்கம் போல் சிறிய தட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் உறுப்பினர் அட்டைகள் சகிதமாக மாணவர்களுடன் அரசியல் பேசியவாறு காலையில் துவங்கிய வேலை மதியம் வரை சுமுகமாகவே போனது.

மதியம் 12:30 போல ஒரு ஆட்டோ ஓட்டுனர் நம்மை அணுகி, ஆஞ்சநேயர் கோவிலில் பிரசாதம் வாங்கும் உடல் மொழியில் மிக பவ்யமாக, “ஒரு நோட்டீஸ் தருவீங்களா…?” எனக் கேட்டார். அப்போதே பட்சி சொல்லிற்று; ஒன்றிற்கு இரண்டாகக் கொடுத்து அனுப்பினோம்.

சரியாக 3 நிமிடங்களில் 5 காக்கி போலீஸும் ஆறேழு மஃப்டி போலீஸும் (ரகசிய போலீசாமா…!) ஸ்பாட்டுக்கு வந்து எங்களை  மறித்து நின்றனர்.

போலீஸ் : “என்ன பண்ணிக்கிட்டுருக்கீங்க…? இங்க இதெல்லாம் செய்யக் கூடாது.”

புமாஇமு : “ஏன் செய்யக் கூடாது..?”

போலீஸ் : “பர்மிஷன் வாங்காம இதெல்லாம் செய்யக் கூடாது.”

புமாஇமு : “யார்கிட்டயும் பர்மிஷன் வாங்கத் தேவையில்ல சார்.”

போலீஸ் : “நீங்க மாணவர்களை பிரெய்ன் வாஷ் பண்ணுறீங்க”

புமாஇமு : “நாங்க ஒண்ணும் சாதி மத பிரச்சினைய கிளப்பல…. சார்.”

போலீஸ் : “நீங்க வந்தா எல்லா கட்சிக் காரங்களும் கேட்பாங்க…! த.மா.கா கேட்டாங்க., அவங்களுக்கும் நாங்க விடல. அதனால நீங்களும் பண்ணக் கூடாது; பொது மக்களுக்கு இடையூறு ஆகுது”

புமாஇமு : “என்ன இடையூறு ஆகுது..? இப்ப நீங்க வந்தவுடன் தான் இங்க கூட்டம் அதிகமாகியிருக்கு மக்கள் இங்க என்னவென்றே வேடிக்கை பார்க்கறாங்க…! நாங்க இதுவரை எங்களிடம் பேசுகின்ற மாணவர்களிடம் தான் பேசுறோம். யாரையும் கட்டாயப் படுத்தல.”

போலீஸ் : “இல்லைன்னா இல்ல தான். நீங்க பண்ணக் கூடாது.”

புமாஇமு : “இல்லைன்னு எந்த செக்சன்ல் சொல்லிருக்குன்னு தெளிவா சொல்லுங்க சார். பொத்தாம் பொதுவா இல்லைன்னு சொன்னாலாம் நாங்க போக முடியாது. இது எங்க உரிமை.”

சி‌ஆர்‌பி‌சி, சி‌பி‌சி என நாம் பேசத் துவங்க இவங்க ஏதோ நமக்கு சம்பந்தமில்லாததை பேசுறாங்க போல “என்னமோ போடா மாதவா” என்ற தொனியில் சட்டம்&ஒழுங்கு காவல் துறையினர் பேந்தப் பேந்த விழித்தவாறே நின்றிருந்தனர்.

சீனியர் போலீஸ் சிரிப்பு போலீஸாக மாறியது கண்டு அறச் சீற்றம் கொண்டார் ஒரு பெண் போலீஸ்,

“என்னம்மா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போற., சொன்னா கேக்க மாட்டியா நீ.” என்று கூறியவாறே தோழர்களை போட்டோ எடுக்க முனைந்தது போலீஸ்.

புமாஇமு : “நிறுத்துங்க.. ஃபோட்டோ எடுக்காதீங்க….” எனத் தடுக்கையில்,

அந்த போலீஸ், “ஏய், என்ன” எனக் கூற, அவ்வளவு தான் ஆக்ரோஷமானார்கள் தோழர்கள்.

புமாஇமு : “என்ன ‘ஏய்’ னு சொல்ற.,? எங்கள பார்த்தா எப்பிடி தெரியுது? நாங்க உங்கள போட்டோ எடுத்தா சும்மா இருப்பியா…?”

என நமது தோழர் எகிற, அவர்களும் பதில் பேச நமது தோழரும் ஏகத்துக்கும் எகிறத் துவங்க சுற்றியிருந்த மாணவர்களோ படு உற்சாகத்துடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிலைமை கை மீறுவதை உணர்ந்த காக்கிகள் பின் வாங்கினர். சமாதானமாக பேச முயன்றனர். “இன்ஸ்பெக்டர் கூப்ட்டாரு” என காக்கிகள் கிளம்பிவிட்டனர். ஆனாலும் மஃப்டி போலீஸ்கள் விடாமுயற்சியுடன் சிலர் தன்மையாகவும் நாசூக்காக பேசியும் அங்கேயே உலாத்திக் கொண்டும் இருந்தனர் சூடுபட்ட பூனைகளாக.

புமாஇமு : “சார்., நாங்க கிளாஸ்க்குள்ள போயி பசங்கள டிஸ்டர்ப் பண்ணல. வெளிய நின்னுதான் பேசுறோம். உள்ளயே இந்த வேலைய செஞ்சுகிட்ருக்க பி‌ஜெ‌பி ய நீங்க எதுவும் கேட்கல ஆனா எங்கள கேட்குறீங்க..?”

(இப்படியான சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மறு புறம் மாணவர்கள் ஆர்வமாக வந்து உறுப்பினரானார்கள்)

போலீஸ் : “அவங்க பண்ணது புகாரா வரலயேப்பா.. நீங்க செய்றது தான் வந்திருக்கு.”

புமாஇமு : “யார் அப்படி புகார் சொன்னாங்க…?”

போலீஸ், “பசங்க தான்” எனக் கூறினர். எந்த பசங்க எனும் போது கூற மறுத்து விட்டார்.

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் கணிசமான அளவு தி.க. வினரும் ஏ‌.பி.வி.பி. யினரும் இருக்கின்றனர். இதில் ஏ‌.பி.வி.பி. யினரின் சில்லுண்டித்தனங்கள் மோசமானவை.

அவ்வமைப்பின் முன்னணியினர்

  • தமது வகுப்பு மாணவர்களின் ஃபோனை வாங்கி கனவு பெண்ணை கண்டுபிடிக்க இந்த நெம்பருக்கு அழையுங்கள் என அலைபேசி கம்பெனிகள் செய்யும் மாமா வேலையை போன்றே ‘உறுப்பினர் ஆகணுமா, இந்த நெம்பருக்கு கூப்பிடுங்க’ என விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் பி‌ஜே‌பி யின் நெம்பருக்கு இவர்களே மிஸ்டு கால் கொடுப்பது
  • வகுப்பில் மிக சொற்பமாக இருக்கும் இஸ்லாமிய மாணவர்களை மிக மோசமாக கிண்டல் செய்வது
  • கல்லூரிக்குள்ளேயே ஆங்காங்கே கூட்டங்களை போட்டு மினி மதவெறி ஷாகா நடத்துவத
  • இதை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு சில மாணவர்களையும் அடக்குவது

என்பன போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்று மத முனைவாக்கம் (Polarizing) செய்து கொண்டிருக்கும் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பின் தொடுப்புகளை (Outfits) மிக மென்மையாக கையாள்கிறது பார்ப்பன ஏவல் துறை. இதன் எதிர்முனையாக இருக்க வேண்டிய தி.க. வினரோ, பு.மா.இ.மு வளர்ச்சியை பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனரே அன்றி, காவிக்கூட்டத்தை எதிர்த்து ருத்ர தாண்டவம் ஆடுவதில்லை.   இப்படியான நிலைமை இங்கிருக்கிறது.

சுமார் இரண்டு மணி நேரம் நம்மிடம் என்ன பேசியும் முடியாமல், மஃப்டிகளும் போலீஸ்களும் கிளம்பும் போது அதில் ஒரு பெண் காக்கி “வாங்க சார்., நாம HOD கிட்ட புகார் எழுதி வாங்கிட்டு இவங்கள பாத்துக்கலாம்” என அப்பட்டமாக கூறுகிறார். ஒரு பொய்ப் புகார் எழுதி வாங்கப் போவதை அப்படி கூறிவிட்டு போகிறார்.

நாமும், “நீங்க முடிஞ்சத பாத்துக்கங்க சார்” எனக் கூறி அவர்களை வழியனுப்பி விட்டு வந்து நமது வேலையை தொடர்ந்தோம். அதன் பின்னர் பல மாணவர்கள் மிக ஆர்வமாக உறுப்பினராக இணைந்தனர். அது வரை, நாம் யாரு என்ன விஷயம் எனப் பேசியவாறு சேர்க்க வேண்டியிருந்தது. ஆனால் இதன் பின் வேலை கொஞ்சம் எளிதாகியது என்னவோ நிஜம்.

ஒரு முதுகலை மாணவர் வந்து “எனக்கொரு கார்டு போடுங்க..” என உரிமையாகக் கேட்டார்.

“என்னங்க., நோட்டீஸ் படிச்சிங்களா..? எதுவுமே கேட்கலயே நீங்க…” என நாம் கூறுகையில் அதற்கு அவர்,

“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க….! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்” எனக் கூறினார்.

அதன் பின், மாலை ஆறு மணி வரை தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்தது உறுப்பினர் சேர்க்கை. இது தொடரும்….

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

பு.மா.இ.மு போராட்டம்
சென்னை ராயபுரத்தில் மாணவர் உரிமைக்காக போராடும் பு.மா.இ.மு (கோப்புப் படம்)

நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் நேர்காணல்

5

சினிமா நேர்காணல் – 4

ஜூலை 2014-ல் எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஒலிப்பதிவு கோப்பை கேட்டு எழுதி, தொகுப்பதற்கு உடன் நேரம் கிடைக்கவில்லை என்பதால் இந்த தாமதம். சினிமா தொழிலாளிகள் மற்றும் துணை நடிகர்கள் அதிகம் வாழும் சாலிக்கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்கிறார் அமிர்தலிங்கம். சென்னையில் குடியேறி பல வருடங்கள் ஆகியிருந்தாலும் நெல்லை வழக்கு மொழியே அவருக்கு சரளமாக வருகிறது. பேச்சில் மட்டுமல்ல, இன்னமும் நகரத்து மனிதர்களின் செயற்கைத்தனம் அண்டாத எளிய கிராமத்து மனிதராகவும் இருக்கிறார். அவர் பா.ஜ.கவில் இருப்பதாக கூறினாலும் அது இன்னமும் அவருக்கு ஒட்டாத வேடமாகவே எங்களுக்கு தோன்றியது.

நேர்காணலை படியுங்கள்.

_____________

னக்கு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு அருகில் உள்ள நாடார் குடியிருப்பு தான் சொந்த கிராமம். விவசாய பின்னணி. 1970 ல் சென்னைக்கு வந்து பலசரக்கு கடை வைத்திருந்த எனது அண்ணனிடம் அம்மாவால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டேன்.

கோடம்பாக்கம் பகுதியில் கடை திறந்த போது சினிமா மற்றும் நாடகத் துறை தொடர்பு கிடைத்தது. சிறுவயதியேலேயே நாடகத்தில் ஆர்வம் உண்டு. அதன் தொடர்ச்சியாக இங்கே அமெச்சூர் வகை நாடகங்களை மேடைகளில் நடிக்க ஆரம்பித்தேன்.

பூக்கடை காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சௌந்தரி மகால் என்ற இடம் தான் எனக்கு முதல் மேடை. அதில் தியாராஜ பாகவதர் போன்றவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள். சென்னை அருங்காட்சியக அரங்கம், நடிகர் சங்கம், வாணி மகால் என தொடர்ந்து பல இடங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம்
நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம்

வினவு : முதல் நாடகம் என்ன? என்ன பாத்திரத்தில் நடித்தீர்கள்?

அமிர்தலிங்கம் : நீண்ட காலமாகி விட்டதால் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் எனக்கு முதலில் சினிமாவில் கிடைத்த பாத்திரம் பிச்சைக்காரன். (சிரிக்கிறார்) அப்படி ஒரு பாத்திரம் முதல் படத்திலேயே கிடைப்பது அதிர்ஷ்டம் என்றுதான் சொன்னார்கள். அதாவது நமக்கும் அந்த கலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக அர்த்தமாம். ஆனால் காலப்போக்கில் சினிமாவில் ஒன்றும் சம்பாதிக்கவில்லை. ஆனாலும் அது ஒரு வேடம்தானே.

வினவு : நாடகத்திலிருந்து சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?

அமிர்தலிங்கம் : 1980-ல் வந்தேன். கே.ஏ கிருஷ்ணன் என்ற இயக்குநர் அப்போது அசோகன் அண்ணன், நம்பியார் அண்ணன், என்னத்த கண்ணையா அண்ணன் ஆகியோரை வைத்து தஞ்சாவூர் மேகம் என்று ஒரு படம் பண்ணினார். அவர் பழம்பெரும் இயக்குநர் சாந்தாராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இதுல அசோகன் அண்ணனுடைய கையாளாக நடிச்சேன்.

அப்போது மெய்வழிச் சாமி என்று ஒரு கடத்தல் தொழில் செய்யும் சாமியார்கள் இருந்து வந்தனர். அசோகன் அண்ணன் சித்து வேலையெல்லாம் செய்வார். நம்பியார் அண்ணன் அதெல்லாம் செய்ய மாட்டார். இரண்டு பேருமே சாமியார்கள்.

வினவு : வில்லன் பாத்திரம் என்பதால் உடம்பை நன்றாக பராமரிப்பீர்களா?

அமிர்தலிங்கம் : அப்படியெல்லாம் இல்லை. அந்தப் படத்திலேயே காமெடி சீன்தான் எனக்கு. படமே காமெடி படம் தான். அப்போதெல்லாம் மீசையெல்லாம் வளர்க்கல. திருமணமும் ஆகவில்லை. 1992-லதான் கல்யாணம் செய்தேன்.

வினவு : அந்தக் காலத்துல நீங்க சினிமாவுக்கு வந்ததை உங்க வீட்டுல எப்படிப் பார்த்தாங்க?

அமிர்தலிங்கம் : என்னோட அண்ணன்மார்கள் எல்லாரும் விரட்டி விரட்டி அடிச்சாங்க. நமக்கு சம்பந்தமில்லாத துறை எதுக்குடான்னு கேட்டாங்க. எங்க அம்மா மட்டும் தான் எல்லோரும் கடை வியாபாரம்னு போறாங்க, நீ போய் முயற்சி செஞ்சு ஜெயிச்சுக் காட்டுன்னாங்க.

வினவு : மத்தவங்க சினிமாவ அப்படி வெறுக்க காரணம் என்ன?

அமிர்தலிங்கம் : பணத்தை போட்டு இழந்து விடக் கூடாதுன்னு ஒரு பயம். வீண் பழக்க வழங்கங்களுக்கு உள்ளாகி நடத்தை மாறி விடக் கூடாதுன்னு இன்னொரு பயம். அப்போ சினிமாவில் இருப்பவர்களை கூத்தாடிகள்ன்னுதான் பொதுவாக நடத்துவாங்க. எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகுதான் இந்த துறைக்கு மதிப்பு வந்தது. நடிகர்களை ஒரு ஆளாக மதிக்கிறது அப்புறம்தான். முன்னாடி கிராமப்புறங்கள்ல சினிமா, நாடகத்துல நடிக்கப் போனா, கூத்தாடப் போறானா, ஆடப் போறானா, நடிக்கப் போறான்னு கேவலமாத்தான் பார்த்தாங்க.

வினவு : ஆரம்பத்துல சினிமாவுல நீங்க கஷ்டப்பட காரணம் வாய்ப்புகள் நிறைய இல்லேன்னா?

அமிர்தலிங்கம் : ஆமா. அப்போ சினிமா ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருந்தது. இப்போது தான் வீதி வீதியாக வந்து விட்டது. ஏவிஎம், ரோகிணி போன்ற ஸ்டூடியோக்களை தாண்டி உள்ள போக முடியாது.

படிப்பு, தகுதியை விட நாடக அனுபவத்தைத்தான் எதிர்பார்ப்பாங்க. வசனங்களை பாவனையோடு உச்சரிக்கணும். கூச்சத்துடன் நடிச்சா ஃபிலிம் விரயம். ஒவ்வொரு அடியும் நூற்றுக்கணக்கான ரூபாய்கள். அவ்வளவு சீக்கிரம் அதனை வீணடிக்க மாட்டாங்க.

அதனால் மேடை அனுபவங்களை எதிர்பார்த்தாங்க. எனக்கு முதலில் ஓரிரு டயலாக்குகளை தருவார்கள். ஒரே டேக்கில் அதனை சிறப்பாக செய்து முடித்து விட்டால், அடுத்த சீன் வரும்போது ‘ஏம்பா! இவன் வசனத்தை சரியாக பேசுவான்’ என்று சொல்லி வாய்ப்பு தருவாங்க. வந்தவுடனே யாருக்கும் வாய்ப்பு கிடையாது.

இன்றைக்கு டிஜிட்டல் வந்த பிறகு எத்தனை தடவை வேண்டுமானாலும் அழித்து அழித்து எடுத்துக் கொள்ளலாம். ஒரே சிப் தான்.

வினவு : வாய்ப்பில்லாம வாழ்க்கையை எப்படி நடத்துனீங்க?

அமிர்தலிங்கம் : அப்ப ஐம்பது ரூபாய் சம்பளம் கிடைத்தாலே பெரிய விசயம். ஒரு நாள் சம்பளம் அது. அதுவும் உடனே கிடைக்காது. முன்னாடி சூட்டிங்கிறது பத்து பதினைந்து பேருடன் முடிந்து போகும். இப்போ அந்த நாடக பாணியைத் தாண்டி விரிவடைந்து விட்டதால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு உண்டு. முன்னர் கல்யாண சீன் என்றால் இரண்டு பொம்மைக்கு மாலையை மாந்நி, நேரா படுக்கையறை காட்சிக்கு போயிருவாங்க. கல்யாண சூழலை காட்ட மாட்டாங்க. இப்ப அதை காட்டுவதால் 300 பேருக்கு வேலை கிடைக்கிது. அப்போதுள்ள படங்கள் ஒரு வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி இப்ப உள்ள சீரியல் மாதிரி இருக்கும்.

இதுக்கு செலவு குறைவாக இருக்கணும்கிறது ஒரு காரணம். இரண்டாவது, ஊடகங்கள் அதிகமாக இல்லை. பெரிய நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி இவங்கல்லாம் அவுங்க படத்துல நடிக்க வைக்க தனி குழுவையே வெச்சிருப்பாங்க. மத்தவங்க நடிக்க முடியாது. இத விட்டா மத்த சிறு நடிகர்கள் படங்களில் தான் நடிக்க முடியும்.

எண்பதுகளில் எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு மார்க்கெட் போய், ரஜினி, கமல், விஜயகாந்த்ன்னு அடுத்த தலைமுறை வந்துவிட்ட காரணத்தால் நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

வினவு: எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் தங்களுக்கென தனியான நடிகர் கோஷ்டிகளை வைத்திருந்தது ஏன்? ஏதேனும் ரகசியங்களை பாதுகாக்கவா?

அமிர்தலிங்கம் : உண்மையில் சினிமாவை ரகசியமா இருட்டுலதான் பராமரிக்கணும். இருட்டுல ஜோலிப்பது தான் சினிமா. அதுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டால் ஒன்னுமில்லைன்னு ஆகிரும். ‘நடிகர்களை தெருவிலே போய் உட்கார வைத்து படப்பிடிப்பு நடத்தாதீர்கள்’ ன்னுதான் எம்ஜிஆரே சொல்வார். ஏன்னா படத்தில் ஆஜானுபாகுவாக தெரியும் பல நடிகர்கள நேரில் பாத்தால் அப்படி இருக்க மாட்டாங்க.

உதாரணமாக நான் கொஞ்சம் குள்ளம். அசோகன் அண்ணன் ஆறடி உயரம். அவரது தோள்பட்டை உயரத்துக்குத்தான் இருப்பேன். எம்ஜிஆரும் என் உயரம் தான். ஆனா எம்ஜிஆரையும் அசோகன் அண்ணன் உயரத்துக்கு இருக்குமாறு வசதியான கோணத்தில் இருந்து கேமராவில் படம் பிடிப்பாங்க. அதுதான் ரகசியம். அந்த ரகசியத்தை வெளியே கசிய விட்டா மக்களுக்கு சினிமா கவர்ச்சியே போயிரும்.

வினவு : இப்படி அவர்கள் தனியாக குழுக்களை வைத்திருப்பதால் சினிமாத் துறையில் ஜனநாயகமே இருக்காதே? உங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காதே!

அமிர்தலிங்கம் : இதனால் தான் சினிமாவுல எல்லாருக்கும் தனித்தனியா சங்கம் துவங்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு துணை நடிகருக்கும் தினசரி மூன்று ரூபாய் அல்லது நான்கு ரூபாய் என கணக்கிட்டு படப்பிடிப்பு முடியும்போது பணத்தை செட்டில் பண்ணி விடுவார்கள். அப்போதே பதினைந்தாயிரம் பேர் வரை உறுப்பினர்களாக இருந்தார்கள். நான்கு மொழிகளிலும் இங்குதான் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இங்கு யூனியன் பலமாக இருந்தது.

மூவாயிரம் பேர் வரை ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் வரை இருந்தனர். கம்பெனிகள் ஒவ்வொன்றும் தலா நூறு இருநூறு பேர் வரை எடுத்துக் கொள்வார்கள். இதுபோக நாடக நடிகர்கள் வேறு இருந்தனர். டயலாக் பேசுவதற்கும், சூழலில் நடிப்பதற்கும் என்று தனித்தனியாக பிரித்து எடுத்து விடுவார்கள்.

டயலாக் பேசும் ஆர்ட்டிஸ்டுகளான நாங்கள் சம்பளம் இவ்வளவு என்று பேசி முடிவுசெய்து விட்டு அதன் பிறகுதான் போவோம். சூழலுக்கு (அட்மாஸ்பியர் நடிப்பு – கூட்டத்தோடு மட்டும் காட்சியளிப்பது, வசனம் பேசவேண்டியிருக்காது) நடிப்பவர்களுக்கு யூனியன் முடிவு செய்திருக்கும் சம்பளம் தான் கிடைக்கும். இப்போது 300 அல்லது 350 ரூபாய் ஒரு கால்ஷீட்டுக்கு சம்பளம் வைச்சிருக்காங்க. ஒரு கால்ஷீட்டுன்னா எட்டு மணி நேரம்.

டயலாக் ஆர்ட்டிஸ்டு வேறு, சூழல் ஆர்ட்டிஸ்டு வேறு, கேரக்டர் ஆர்ட்டிஸ்டு வேறு. இப்போது நானே ஒரே நாளில் இரண்டு மூன்று சீன்கள் நடிக்க நேர்ந்தால் அதற்கு சம்பளம் பேசிக் கொண்டு, கம்பெனிக்கு ஏற்ப தொகையை நிர்ணயம் செய்து பெற்றுக் கொள்வோம்.

வினவு : நீங்கள் என்ன நோக்கத்திற்காக திரைப்படத் துறைக்கு வந்தீர்கள்?

அமிர்தலிங்கம் : நான் இத்துறைக்கு வந்தது நடிப்பதற்காக வரவில்லை. கதை, பாட்டு எழுத வேண்டும் என்ற படைப்பாற்றல் ஆர்வம் காரணமாகத்தான் வந்தேன்.

வினவு : கதை, கவிதை எல்லாம் ஆரம்பத்தில் எழுதியிருக்கிறீர்களா?

அமிர்தலிங்கம் : ஆம், அந்த நோக்கத்தில் தானே சினிமாவுக்கு வந்தேன். ஆனால் அந்த கதை கவிதையெல்லாம் தூக்கிச் சுமந்து கொண்டு செல்ல கஷ்டமாக இருந்தது. ஏனெனில், அப்போது கதை இலாகா என்று ஒன்றை வைத்திருந்தார்கள். கதையை விலை கொடுத்து வாங்கி அவர்கள் வசனம் எழுதிக் கொள்வார்கள். அதற்கு பிறகு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் ஒருவரே செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்போது நான் போன இடங்களிலெல்லாம் இயக்குநர்கள் ‘என்னிடமே நாற்பது கதைகள் இருக்கின்றன. இதை விட்டுவிட்டு நான் உன்னிடம் எப்படி வாங்குவது?’ என்று சொல்லி விட்டனர்.

அப்புறம் கதைகள் அவ்வளவு சீக்கிரம் விலை போகாது என்று தெரிந்த பிறகு, சினிமாவில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறித்தனம் இன்னமும் இருக்கவே, கே.ஏ. கிருஷ்ணன் அவர்கள் தான் ‘நான் எடுக்கும் படத்தில் அசோகனோடு ஒரு ஆளாக உன்னைப் போட்டு விடுகிறேன். உன் தலையெழுத்து நல்லாயிருந்தா அதிலும் பிரகாசிக்கலாம்’ என்று அந்த வாய்ப்பைக் கொடுத்தார்.

வினவு : உங்களைப் போன்ற கிராமப்புற பின்னணி கொண்டவர்கள் ஏன் சினிமாவில் கதாநாயகர்களாக மாற முடியவில்லை?

அமிர்தலிங்கம் : பாரதி ராஜா இதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். மதுரையிலிருந்து பாண்டியனை கொண்டு வந்தார். சந்திரசேகர் கூட தெற்கேயிருந்து கிராம்புறத்திலிருந்து வந்தவர்தான். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டத்தில் மாற்றம் வரும் சார். இப்போது அரசியலைப் போலவே சினிமாவிலும் வாரிசு முறை வந்து விட்டது. வாரிசு மட்டுமின்றி, பணபலமும் அவசியம்.

என்னைப் போன்றவர்கள் ஜெயிப்பது கஷ்டம். எனக்கு கூட வாரிசு இருக்கிறான். ஆனால் வசதியுள்ள மகனாக இருப்பதுதான் முன்நிபந்தனை. என் பையனை வைத்து படமெடுக்க பத்து கோடி ரூபாய் தேவை. அது என்னிடம் இல்லை. அடுத்து யாருடைய பிள்ளை என்ற லேபிளை மக்களும் எதிர்பார்க்கிறார்கள். முதலீட்டுக்கும் இது முன்நிபந்தனை

வினவு : திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் சொல்வார்களே?

அமிர்தலிங்கம் : உதாரணமா ரஜினிகாந்த் ஒரு பெரிய ஸ்டாராகினார் என்றால், ஓரிரு காட்சிகளில் பாலசந்தர் வாய்ப்பை கொடுத்தார். அவரிடம் ஒரு தனித்திறமை இருந்த காரணத்தால் தான் சின்ன பாத்திரத்தில் சிகரெட்டை லாவகமாக தூக்கிப் போட்டு பிடித்து ஸ்டைல் காட்டினார்.

வினவு : அந்த திறமை பெங்களூருவில் நடத்துனராக இருந்து ஒரு தொழிலாளியாக இருந்து வளர்த்துக் கொண்டது. இன்றைக்கு வாரிசுகளுக்கு என்ன திறமை இருக்கிறது என்று பத்து கோடி ரூபாய் வரை முதலீடு செய்கிறார்கள்?

அமிர்தலிங்கம் : இன்றைக்கு பணம் தான் முன்னால் நிற்கிறது. அன்றைக்கு டயலாக் பேசி நடிப்பவர்களை நாடக கம்பெனிகளில் இருந்து தேர்ந்தெடுத்து சினிமாவில் நடிக்க வைத்தார்கள். சிவாஜி கணேசன் இப்படி உயிரோட்டமாக, உரத்த குரலில் பேசி நாடகங்களில் நடித்து அதன் மூலம் தான் சினிமாவுக்கு வந்தார். நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே வெறும் கணேசனாக இருந்த அவரைப் பாராட்டி சிவாஜி பட்டத்தை கொடுத்தவர் பெரியார்.

இன்றைக்கு நாடகம் என்பதே இல்லை. பார்க்கவும் ஆட்கள் இல்லை. நாடகத்தில் நடிப்பது சினிமாவை விட கஷ்டம். அதில் கட் எல்லாம் கொடுக்க முடியாது. பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்வதோடு, அதன் குணாதிசயங்களையும் உள்வாங்கி நடிக்க வேண்டும். எதிரே உள்ளவன் ஏதாவது வசனத்தை விட்டுவிட்டாலும் சாமர்த்தியமாக பேசி நடிக்க வேண்டும். அப்படி திறமையானவர்களைத்தான் அப்போது சினிமாவுக்கு நாடகம் மூலமாக எடுத்தார்கள். இப்போதுள்ள சினிமாவில் அத்தகைய திறமையில்லாதவர்களையும் திறமையுள்ளவர்கள் போல காட்ட முடியும்.

வினவு : பெரியார் கூட்டங்களை நேரில் கேட்டிருக்கிறீர்களா?

அமிர்தலிங்கம் : நான் சென்னைக்கு வந்த ஓரிரண்டு ஆண்டுகளில் பெரியாரும் ராஜாஜியும் இறந்து விட்டார்கள். எனவே அவர்களது கூட்டங்களை கேட்ட அனுபவம் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு 75ல் இறந்த காமராசரையே சந்திக்க முடியாமல் போய் விட்டது.

வினவு : இதுவரை எத்தனை படங்களில் நடித்திருப்பீர்கள்?

வடிவேலுவுடன் நடிகர் அமிர்தலிங்கம்
வடிவேலுவுடன் நடிகர் அமிர்தலிங்கம்

அமிர்தலிங்கம் : கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. 450 முதல் 500 படம் வரை பண்ணியிருப்பேன். சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறேன். கவுண்டமணி, செந்தில் உடன் நிறைய படங்களில் நடித்தேன். பிறகு வடிவேல் சாருடன் நடித்தேன். அவர் வந்த பிறகு தான் காமடி சேனல் என்றே ஒன்று வந்தது.

வினவு : வடிவேல் போன்ற காமெடி நடிகர் திமுக-வுக்கு பிரச்சாரம் செய்த காரணத்தால் பட வாய்ப்பு மறுக்கப்படுகிறதே. அதே நேரத்தில் பெரிய கதாநாயகர்கள் அரசியல் கட்சி எனப் போனால் ஏற்றுக் கொள்கிறார்களே! ஏன் இந்த பாகுபாடு?

அமிர்தலிங்கம் : அவருக்கு உள்ளுக்குள் நிறைய பிரச்சினை இருந்தது. காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இது. அவருக்கு கொஞ்சம் சொத்துப் பிரச்சினை இருந்தது. ஏமாற்றியதாகவும், நீதிமன்ற வழக்கு என்று வந்து விட்ட காரணத்தால், உட்கார்ந்து இரண்டு ஆண்டுகளில் இவற்றை சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததாக என்னிடம் சொன்னார். நடிப்பு நடிப்பு என்று போய்விட்டதால் பணம் எங்கே போகிறது, அதன் பிறகு என்ன ஆகிறது, தெரியவில்லை என்று கவலைப்பட்ட அவர் அவற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டார்.

அதன் பிறகும் வந்து தனியாக காமெடி டிராக் பண்ணுவதற்கு பதிலாக கதாநாயகனாக முதலில் இரண்டு படங்கள் பண்ணிய பிறகு அதனை தொடரலாம் என்று தான் முடிவெடுத்தார். தெனாலிராமன் படம் கூட பண்ணினார். அப்போதே நிறைய கம்பெனிகள் அவரிடம் அணுகிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்தான் மறுத்து வந்தார். ஆனால் வெளியே அவருக்கு படமில்லை என்றவுடன் மக்கள் இப்படி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நான் கூட பாஜக உறுப்பினர்தான். அவர்களது மேடைகளில் கூட ஏறியுள்ளேன். அரசியல் என்பது கருத்துப் பரிமாற்றம் தானே. யாரைப் பற்றியும் தப்பாக பேசக் கூடாது. அவ்வளவுதானே! கொள்கையை, கருத்தை சொன்னால் பிரச்சினை வராது.

வினவு : பெரிய நடிகர்கள் உங்களைப் போன்ற துணை நடிகர்களை எப்படி பார்க்கிறார்கள்? எப்படி நடத்துகிறார்கள்?

அமிர்தலிங்கம் : நான் யாரிடமும் காசு எதிர்பார்த்து இதுவரை போனதில்லை. சகஜமாக பழகுவார்கள். என்னை எல்லோரும் நன்றாக மதிப்பார்கள். மற்றபடி அவர்கள் கோடி கோடியாக சம்பாதிப்பார்கள். பிறருக்கு போதுமா போதாதா என்றெல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். மற்றபடி ஈகை என்பது இயற்கையாக உள்ளுக்குள் இருந்து வர வேண்டும்.

மற்றபடி சகஜமாக பேசினால் தான், இயக்குநர் டயலாக்கை ஒன்றாக உட்கார வைத்து பேசினால் தான், அனைவரும் ஒத்துழைத்தால் தான் காட்சி நன்றாக அமையும்.

வினவு : தற்போது உங்கள் சினிமா வாழ்க்கை எப்படி போகிறது?

அமிர்தலிங்கம் : எனக்கு மாதத்தில் பதினைந்து நாட்கள் வரை வேலை இருக்கும். சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் தான் வேலை இருக்கும். சில சமயம் இல்லாமலும் இருக்கும். அப்படி இல்லாத காலங்களில் டப்பிங் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளை ஒருங்கிணைத்து காண்டிராக்டு எடுத்து வேலை செய்து கொடுப்பேன். தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களுக்கும் இந்த வேலைகளை 1995 முதல் செய்து வருகிறேன். இரண்டுக்குமே ஒரே யூனியன்தான்.

நான் வரும்போது யூனியனில் சேருவதற்கு ரூ.100 தான் கட்டணம். இப்போது ஒரு லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனெனில் டப்பிங் பேசுவதற்கு இப்போது ஒரு கால்ஷீட் சம்பளம் ரூ.3000. எட்டு மணி நேரம் தான் என்ற போதிலும், முன்னர் போல ஐந்து மைக் வைத்து லூப் முறையில் ரிக்கார்டு செய்த காலம் போய் இப்போது தனித் தனியாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து பேசி விட்டு போய் விடலாம் என்று ஆகி விட்டது. எனவே வேலை விரைவில் இப்போது முடிந்து விடும். ஆனாலும் அரை மணி நேரத்தில் வேலை முடிந்தாலும் மூவாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விடலாம்.

ஒரே நாளில் மூன்று நான்கு கால்ஷீட் கூட கிடைக்குமென்றால் அது உங்களது அதிர்ஷ்டம் தான். ஏனெனில் நிரந்தரமற்ற ஒரு துறையில் இருந்து கொண்டு நிரந்தரமாக வருமானம் நன்றாக பெற முடியுமெனில் அது கட்டாயம் இறைவன் அளித்த அதிர்ஷ்டம்தான்.

amirthalingam (6)வினவு : டப்பிங்கிற்கு என்ன தகுதி?

அமிர்தலிங்கம் : அதில் கொஞ்சம் திறமை வேண்டும். அதாவது உயிரற்ற பொம்மைக்கு உயிர் கொடுக்கும் கலை அது. மாடுலேசனில் பேச வேண்டும். வசனங்களை மூளையில் உள்வாங்கி தன்னை மறந்து அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். திறமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும். பேச்சில் ஏற்ற இறக்கும் மிகவும் முக்கியம். வட இந்தியாவில் இருந்து வரும் பல நடிகர்களையும் பின்னால் இருந்து பேசி வாழ வைத்தவர்கள் தமிழ் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் தான். இவர்களைப் பற்றி மக்களுக்கு எதுவும் பெரிதாக தெரியாது.

வினவு : வாய்ப்புகளை நீங்களே தேடிப் போவீர்களா?

அமிர்தலிங்கம் : ஒரு காலத்தில் நாங்கள்தான் தேடி அலைந்தோம். அப்போதெல்லாம் படபூஜை என்றால் ஏவிம், வாகிணி எல்லாம் பயங்கர அலங்காரமா இருக்கும். செய்தித் தாளில் விளம்பரமும் நிரம்பியிருக்கும். சினிமா இப்போது எங்கே என்றே தெரியவில்லை. காரணம் ஸ்டுடியோவும் இல்லை. இப்போது ஏவிஎம் இன் பூமி உருண்டை மட்டும் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது, சினிமா இருந்த்து என்ற தடயத்திற்காக. கற்பகம், அருணாச்சலம் எல்லாம் இடித்து பிளாட் கட்டி விட்டார்கள். வாஹிணியும் இல்லாமல் போய் விட்டது. ஏவிஎம் மட்டும் தான் இருக்கிறது. பிரசாத்தில் கூட இரண்டு தளங்களில் மட்டும் தான் சினிமா.

வினவு : ஆனால் தொழில் வளர்ந்துள்ளதே!

அமிர்தலிங்கம் : உண்மைதான். இப்போது யாரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சேர்வதில்லை. காரணம் இப்போது படப்பிடிப்பு என்பதே மதுரை, பொள்ளாச்சி எனப் போய் விட்டது. அங்கிருப்பவர்களை நடிக்க வைத்து படமெடுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விவசாய கூலிகள். அங்கே 75 ரூபாய் சம்பளம். ஆனால் இங்கே நூற்றியம்பது ரூபாய் சம்பளத்துடன் சாப்பாடும் கிடைப்பதால் இதற்கு எளிதில் போய் விடுகிறார்கள். இதனை எதிர்த்து யூனியன் ஒன்றும் பண்ண முடியாது. சிதறிப் போய்விட்ட தொழிலை ஏரியா தாண்டி போய் அதிகாரம் பண்ண முடியாது.

வினவு : ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து கொண்டு குடும்பம், இரண்டு பிள்ளைகள் என குடித்தனமாக வாழ்வது சாத்தியமா?

அமிர்தலிங்கம் : அது மிகவும் கஷ்டம். இன்றைய பொருளாதார வளர்ச்சி நிலைமையில் மாதம் குறைந்தது ஒரு முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் தான் வாடகை, குழந்தைகள், படிப்பு என குடும்பம் ஒன்று வாழ முடியும். ஆனால் சினிமாவில் முப்பதாயிரம் சம்பாதிப்பது என்பது அசாத்தியமானது.

எனவே துணை நடிகர்கள் அனைவரும் சூட்டிங் இல்லாத காலங்களில் கல்யாண காலங்களில் பந்தி பரிமாறுவது, காய்கறி வெட்டுவது என்ற வேலைகளுக்கு போய்விடுவார்கள். எல்லாக் காலங்களிலும் சூட்டிங் இருப்பது எப்படி சாத்தியமில்லையோ அது போலத்தான் கல்யாணம் இருப்பதும் சாத்தியமில்லை. அப்போது என்ன வேலை கிடைக்கிறதோ அதற்கு போய்க் கொள்ள வேண்டியது தான். இன்றைய நிலைமையில் நான்கு வகையான வேலைகள் செய்தால் தான் பிழைக்க முடியும்கிறது நிலைமை.

வினவு : கோச்சடையான் போன்ற திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகிறது. 50 கோடி 100 கோடியில் தமிழ் சினிமா வியாபாரம் நடக்கிறது. இது நீங்கள் சொல்வதற்கு எதிராக இருக்கிறதே?

அமிர்தலிங்கம் : அது வேற. திரையரங்கிற்கு செல்வது. எத்தனை கோடி ரூபாய் யார் சம்பளம் வாங்கினாலும் அதனை யாரும் யாருக்கும் பகிர்ந்து தரப் போவதில்லை. அவர்கள் வாங்கிய பணமூட்டையைக் கொண்டு உலக நாடுகளை சுற்றி வருவார்கள். நமக்கு தர வேண்டும் என்று ஏதும் கட்டாயமிருக்கிறதா என்ன? அப்படி யாரும் தருவதில்லை.

யாராவது கடைகோடி நடிகர்கள் பெரிய நடிகர்களுக்கு பரிச்சயமாகி இருந்தால் மாத்திரம் ஏதாவது பிள்ளைகள் படிப்பதற்கு உதவி கேட்டால் கிடைக்கும். எல்லோருக்கும் அது கிடைத்து விடாது.

என்னை விட வெளிச்சத்திற்கு வராத சிறு நடிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஓடிவிட்டால் தப்பித்துக் கொள்வார்கள். மற்றபடி அவர்களது வாழ்க்கையை பற்றி சொல்ல என்ன இருக்கிறது (கையை விரித்து பெருமூச்சு விடுகிறார்). இன்றில்லாவிட்டாலும் நாளைக்கு ஒரு வழி கிடைக்காதா என்ற நம்பிக்கைதான் இத்தனையாண்டுகளையும் ஓட்டி விட்டது. இனிமேல் வேறு துறைக்கும் போக முடியாது. சரி இதையே தொடர்ந்து முயற்சி செய்து பார்ப்போம் என்று தொடர்கிறேன்.

வினவு : இன்றைக்கு கம்ப்யூட்டர் ஆபீசு, பெரிய கட்டிடம், அபார்ட்மெண்ட் என சென்னையே மாறி விட்ட நிலைமையில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளே சுத்தமாகவும், சிவப்பாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைமை தானே. அப்படியானால் தமிழர்களது நிறத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் இல்லையா?

அமிர்தலிங்கம் : ஆமாம். கிராமபுறங்களுக்கு போகின்றவர்கள் அங்கிருக்கும் ஜனங்களை வைத்தே படம் எடுத்து விடுகிறார்கள். நகரம் சார்ந்த கதை பண்ணும் போது தான் சேட் மற்றும் இந்திப் பசங்களை தேடுகிறார்கள். இப்போது வரும் கதாநாயகர்களே அப்படி கிளாமராக முடியெல்லாம் வைத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த சேட் பசங்களுக்கு சம்பளமும் அதிகம். சங்கத்தில் உறுப்பினராக இல்லாவிடிலும் அண்டர்டேக்கனில் தான் வருகிறார்கள். ரிச் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர்.

பெரிய நட்சத்திர விடுதியில் பல தரப்பட்ட மக்கள் இருப்பதாக அட்மாஸ்பியரை காட்ட வேண்டுமானால் அப்படி செய்து தான் ஆக வேண்டும். அங்கு போய் சாதாரண ஆட்களை நீங்கள் வைக்க முடியாது.

வினவு : நகரம் சார்ந்த திரைப்படங்கள் அதிகமாக வருவதால் மாநிறமாக இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் சினிமாவில் இனி இடமில்லை என்று சொல்லலாமா?

அமிர்தலிங்கம் : அது ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். இன்று வரை தமிழ் கதாநாயகர்கள் எத்தனை பேர் வந்துள்ளார்கள்.? ஆரம்பத்திலிருந்தே வெளியில் இருந்து தான் வந்துள்ளார்கள். ஆனால் அப்படி வந்தவர்களும் நன்றாக துறையில் நடித்து பிரகாசித்துள்ளார்கள்.

வினவு : இத்துறைக்கு வந்து எத்தனை வருடம் ஆனது? என்ன சம்பாதிச்சிருக்கீங்க?

அமிர்தலிங்கம் : நாற்பது ஆண்டுகள் ஆகிறது. மூன்று பசங்களை படிக்க வைத்திருக்கிறேன். வாடகை வீடுதான். இன்றைக்கு விலைவாசி எங்கேயோ போய் விட்டது. அன்றைக்கு வாங்கிய ஐம்பது ரூபாயின் மதிப்புதான் இன்றைக்கு ஐயாயிரம் ரூபாய்க்கும். ஆனால் அந்த ஐயாயிரம் ரூபாய் பெரிதில்லை. வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. இந்த வீட்டின் வாடகை 7200 ரூபாய்.

வினவு : உங்களது மாத செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அமிர்தலிங்கம் : மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை தேவை. நான்கு பேருக்கு போனை போட்டு தேடினால் இந்த தொகை தேறும். உட்கார்ந்தால் எல்லாம் கதை வேகாது. கடனும் வாங்கித்தான் ஆக வேண்டும். கடனில்லாமல் யார் இருக்கிறார்கள். இந்தியாவே கடன்கார நாடாக இருக்கிறது. அப்புறம் ஒரு சாதாரண இந்தியன் கடன் வாங்காமல் இருக்க முடியுமா?

வினவு : இத்தனையாண்டு கால போராட்டத்திற்கு பிறகும் குறைந்தபட்ச தேவைக்காக வாய்ப்பு தேடி அலைய வேண்டியிருப்பது உங்களுக்கு கோபத்தை தூண்டவில்லையா?

அமிர்தலிங்கம் : அதான் முதலிலேயே சொன்னேன். ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று முதலிலேயே போயிருக்க வேண்டும். எதையாவது பண்ணி பிக் அப் ஆகியிருக்கலாம். ஆனால் அந்தப் பழத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே குதித்து குதித்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

வினவு : நேற்று வந்த ஹீரோ பத்து கோடி சம்பாதிக்கிறாரே!

அமிர்தலிங்கம் : ஒரு விசயம் சார். அம்பானியை பார்த்து எல்லோருமே அம்பானியாக ஆசைப்படுவது தப்பு. ஒரு எம்ஜியார் வந்தார், ஒரு சிவாஜி வந்தார் என்பதற்காக எல்லோரும் அப்படி ஆக முயற்சிக்க முடியுமா? ஒரு நாட்டுக்கு ஒருவன் தான் தலைவன். எல்லோரும் தலைவனாக முடியுமா? அந்த அதிர்ஷ்டம், வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறதோ அவன் வாழ்கிறான்.

நீங்க ஏன் அவன் போல வரவில்லை என யாரையும் கேட்காதீர்கள். கடவுள் இருக்கிறானோ இல்லையோ நம் நாடு கேப்பிடலிச நாடு, கம்யூனிச நாடு இல்லை. பத்து முதலாளி இருந்தால் தொன்னூறு வேலைக்காரன்கள் தான் இருப்பார்கள். முதலாளிகளின் ஆதிக்கத்தில் தான் இந்நாடு வாழ்கிறது. ஏன் அந்த பத்து முதலாளிகளில் தொன்னூறு பேர் வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

வினவு : உங்களுக்கு எப்போது திருமணம் ஆனது ? இந்த துறையில் நீங்கள் இருப்பதை உங்களது துணைவியார் ஏற்றுக் கொண்டார்களா?

அமிர்தலிங்கம் : 1992 ல் நடைபெற்றது. நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதை சொல்லி தான் திருமணம் நடைபெற்றது. அவளும் பெரிய பணக்கார பின்னணி உடையவள் அல்ல. நம்மைப் போன்ற சாதாரண பின்னணிதான். இதுவரை முகம் சுழிக்காமல் என்னுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

வினவு : பிள்ளைகளை படிக்க வைக்கின்றீர்களா? அவர்களை சினிமா துறைக்கு அனுப்புவீர்களா?

அமிர்தலிங்கம் : இல்லை. நான் அவர்களை படிக்க வைக்கிறேன். எனக்கு சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டதால் படிப்பு கிடைக்காமல் போய் விட்டது. எனது மகளை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படிக்க வைக்கிறேன். ஒரு மகன் 12, இன்னொருவன் 11 படிக்கிறான்.

வினவு : பாஜகவில் எப்போது சேர்ந்தீர்கள்?

அமிர்தலிங்கம் : 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் போய் சேர்ந்தேன். ஏனெனில் பாஜக என்பது கொள்கை ரீதியாகவே ரொம்ப காலமாகவே பிடிக்கும்.

வினவு : பாஜக வின் எந்த கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?

அமிர்தலிங்கம் : பொது சிவில் சட்டம் வேண்டும் என்பது எனக்கு பிடிக்கும். இந்து, முசுலீம், கிறிஸ்தவன் என்று தனித்தனியாக பிரித்து இருப்பதால் அது தான் நம்மை அடிமைப்படுத்துகிறது. ஒரு நாட்டில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்.

இந்து மதத்தில் மனைவி உயிரோடு இருக்கையில் இன்னொரு கல்யாணம் பண்ண முடியாது. ஆனால் இசுலாமியன் தலாக் சொன்னாலே போதும் என்றுதானே இருக்கிறது. அப்படியில்லாமல் பொதுச் சட்டம் வேண்டும் என்கிறோம்.

இது முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் நாடு. கம்யூனிச நாடு இயற்கையானதல்ல. ஆளானப்பட்ட ரசியாவே உடைந்து போய் விட்டது. உங்களுக்கு தெரியாத விசயமா.

வினவு : இந்து மதத்திற்குள்ளேயே அக்ரகாரம், சேரி என்ற பிரிவினை இருக்கிறது. முன்னொரு காலத்தில் தென்மாவட்டங்களில் கோவில் நுழைவு சாணார்களுக்கு மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் அய்யா வழி தோன்றியது. பொது சிவில் சட்டம் வந்தால் இந்த ஏற்றத் தாழ்வெல்லாம் இந்து மதத்தில் ஒழிக்கப்படுமா?

அமிர்தலிங்கம் : ஒரு காலகட்டத்தில் அப்படியான அடிமைத்தனம் இருந்திருக்கலாம். கல்விதான் இதனை நீக்க முன்வர முடியும். குருகுலம் வைத்து பிராமணர்கள் அன்று படிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் செய்த சிலையோ, அவன் வடித்த கோவிலோ இருக்கிறதா? ராணித் தேனீ போல உள்ளே உட்கார்ந்து கொண்டு தங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆட்சியதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவனிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டார்கள். இன்று அந்த அடிமைத்தனத்தை கல்வி வந்து உடைத்திருக்கிறது. அந்தப் புண்ணியம் காமராசருக்கும் சேரும். வெள்ளைக்காரன் காலத்திலும் அவன்தான் ஆட்சி நடத்தினான். கீழ்குடி மக்களால் அப்போது எந்திரிக்க முடியவில்லை.

வினவு : பா.ஜ.கவில் யாராவது சொல்லிப் போய் சேர்ந்தீர்களா? அல்லது நீங்களாகவே போய் சேர்ந்தீர்களா?

அமிர்தலிங்கம் : இல்லை. நானாகத்தான் போய் சேர்ந்தேன். தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தேன். நான் அங்கு ஒரு மேடைப் பேச்சாளனாக இருக்கிறேன்.

amirthalingam (2)வினவு : 2011 தேர்தல் பிரச்சாரத்தில் எத்தனை கூட்டங்களுக்கு போனீர்கள்? எவ்வளவு தொகை கொடுத்தார்கள்?

அமிர்தலிங்கம் : ஒரு பத்து பதினைந்து கூட்டங்கள் போயிருப்பேன். எவ்வளவு கொடுத்தார்கள் என்று வெளியில் சொல்ல முடியாது. சம்பளம் கொடுத்தார்கள். ஒரு கலைஞன் என்ற முறையில் மதித்து சம்பளம் கொடுத்தார்கள். பாஜக வில் சம்பளம் என்று ஒரு முறை கிடையாது. அது ஒரு சேவை மையம் என்பதால் பணத்தை எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொல்லி விடுகிறார்கள். வெளியில் தான் தப்புதப்பாக பேசுகிறார்கள்.

வினவு : பா.ஜ.க தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினீர்கள்?

சென்னையில்தான் பேசினேன். நான் ஒரேயொரு விசயத்தைதான் எடுத்து எல்லா கூட்டங்களிலும் பேசினேன். அதாவது திராவிடம் பாரம்பரியம் என்று சொல்வது பொய். அப்படி எந்த மலையாளியும், தெலுங்கனும், கன்னடனும் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர்கள் என்று சொல்ல வேண்டும். திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர் அவ்வளவுதான். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு பதிலாகத்தான் தனது கடைசி திருவாரூர் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர் ‘திராவிடம் என்பது தேசிய கீதத்தில் உள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தில் உள்ளது’ என்று பதிலாக சொன்னார். இதுவே ஒரு ஏமாற்று தான். மொழிவாரியாக சொல்ல வேண்டியது தானே. உங்களைத் தவிர யாரும் சொல்லவில்லை. திராவிடம் என்று நீங்கள் சொல்ல காரணம் இந்த மக்களை அடிமைப்படுத்தி உங்களது காலடிக்குள் வைத்திருக்க நினைப்பதால் தான்.

வினவு : உங்களை விட பெரிய நடிகர்களுக்கு உங்களுக்கு தெரிந்த அளவுக்கு அரசியல் விபரங்கள் ஓரளவுக்காவது தெரியுமா?

அமிர்தலிங்கம் : எல்லோருக்கும் அரசியல் பிடிக்காது. விஜயகாந்த் உடன் விருத்தகிரி என்ற படத்திற்கு டப்பிங் பண்ணப் போகும் போது பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரிடமும் என்னென்ன கட்சி என்று கேட்டுக் கொண்டிருந்தார். நான் பாஜக என்றவுடன், ‘அது மதவாத கட்சி இல்லையா?’ என்றார். ‘அது மதவாத கட்சி என்று பறைசாற்றப்பட்ட கட்சி. அவ்வளவுதான். முசுலீம் லீக் மதவாத கட்சி இல்லையா? கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி மதவாத கட்சி இல்லையா? அவரவர் மார்க்கத்துக்கு ஒரு கட்சி வைத்துக் கொள்ளும்போது இதை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘நீங்கள் சொல்வது சரிதான். மக்களுக்கு அது தெரிய மாட்டேங்குதே’ என்றார் அவர். பிறகு அவரே கூட்டணிக்கும் வந்தார்.

வினவு : அதிமுகவில் கூப்பிட்டால் போய் பேசுவீர்களா?

அமிர்தலிங்கம் : ஒரேயொரு விசயம் தான். பச்சையாக பேசினாலும் அது நியாயமாகவும், தர்மமாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். இந்த நாடு நாசமாகப் போனதற்கு முக்கிய காரணம் திராவிட கழகங்கள். 1970 ல் கருணாநிதி கள்ளுக்கடையை திறந்து 74-ல் மூடி விட்டார். குதிரை பந்தயத்தை ஒழித்தார். பெண்களின் தாலியை அறுத்து நடந்த அதனை மூடிய அவர், கள்ளுக்கடையையும், சாராயக் கடையையும் மூடினார். ஆனால் பிராந்திக் கடை வைத்திருந்தார். அதனை ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார். பர்மிட் இருந்தால் தான் பிராந்தி தருவார்கள். அதற்கு இவனுக்கு இத்தனை அவுன்சு பிராந்தி தேவை என மருத்துவர் சான்றிதழ் தர வேண்டும். சும்மா போய் எல்லாம் வாங்க முடியாது.

கள்ளச் சாராயம் என்பது மது ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அதில் வெட்டு குத்து நடப்பது தனிக்கதை. 1983-ல் தரும்புரியில் 165 பேர் கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போனார்கள். அந்த மாவட்டத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சுண்டு விரல் போன்ற தரும்புரியின் காயத்திற்கு தமிழகம் என்ற உடம்பு முழுக்க பேண்டேஜ் சுற்றினார் எம்ஜிஆர். தருமபுரியில் செத்தது 165 பேர்தான். ஆனால் நீங்கள் திறந்த சாராயக் கடை வாசலில் செத்துக் கிடந்தவர்களின் எண்ணிக்கைக்கு எதாவது உங்களிடம் கணக்கிருக்கிறதா? அப்படியே சுருங்கி செத்துக் கிடப்பான். போலீசுக்காரன் வருவான். அங்க அடையாளங்களை குறித்துக் கொள்வான், ரிக்ஷாக்காரனை கூப்பிட்டு பத்து ரூபாய் கொடுத்து ‘டே! இத ஜி.எச்-ல் போய் போடு!’ என்பான்.

அந்தக் கணக்குதான் இன்றைக்கு பாட்டிலாக க்யூவில் வந்து நிற்கிறது. மும்பையில் விபச்சாரம் இருக்கிறது, கொல்கத்தாவில் இருக்கிறது என்பதற்காக இங்கும் திறக்க முடியுமா?

நமது அரசியல் கட்சிகள் எல்லாம் குறுகிய வட்டத்திற்குள் அரசியல் பண்ணுவதால் மதுவிலக்கை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள். மற்றபடி ஒன்றும் இல்லை.

________________________________________________

வங்கதேசம் – அவ்ஜித் ராயைக் கொன்ற முசுலீம் மதவெறியர்கள் !

18
அவ்ஜித் ராய்
அவ்ஜித் ராய்

ங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், நாத்திகருமான அவ்ஜித் ராய், நேற்று வியாழன் – 26.02.2015 அன்று இரவு சிலரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இவரது மனைவி ரஃபிதா அகமதுவும் தாக்கப்பட்டு, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

டாக்கா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர் அஜய் ராயின் மகனான அவ்ஜித் ராய் பிரபலமான முக்தோ மோனா எனும் வங்க மொழி இணைய தளத்தின் நிறுவனராவார். நாத்திக சிந்தனைகளையும், மதவெறியர் – மத அடிப்படைவாதத்தை எதிர்த்தும் இந்த இணைய தளம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் தஸ்லிமா நசுரீன் நாடு கடத்தப்பட்டு அதை வங்க நீதித்துறை அனுமதித்த போதெல்லாம் இவர் அதை கண்டித்து குரல் கொடுத்திருக்கிறார். பிறப்பால் இந்துவாக இருந்தாலும் வங்க மொழியையும், கலாச்சாரத்தையும் நேசித்தவர். அதனாலேயே மதவெறியர்களை எதிர்த்து எழுதி வந்தார். வங்க தேச மரபில் மதவெறிக்கு இடமில்லை.

பெரிய கத்திகளைக் கொண்டு இருவர் தாக்கியதாக மருத்துவமனையில் இருக்கும் இவரது மனைவி தெரிவித்திருக்கிறார். டாக்கா புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இருவரையும் அக்கும்பல் கொடுரமாக தாக்கியிருக்கிறது.

காவல்துறை அதிகாரியான சிராஜுல்,”இந்தக் கொலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால் பேராசிரியர் ஹுமாயூன் ஆசாத்தை தாக்கிய கும்பல்தான் இதை செய்திருக்க கூடும்” என்று தெரிவித்திருக்கிறார்.

படுகாயத்துடன் அவ்ஜித்தின் மனைவி
படுகாயத்துடன் அவ்ஜித்தின் மனைவி

பிப்ரவரி 17, 2004 அன்று இதே போல புத்தகக் கண்காட்சி சென்று திரும்பிய ஆசாத்தை இப்படித்தான் தாக்கினார்கள். பிறகு அவர் அதே வருடம் ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் இறந்தார். அவரது நாவல் ஒன்றில் இசுலாமிய மதவாதிகளை அம்பலப்படுத்தியும், கேலி செய்தும் எழுதியிருந்தார் என்று பல்வேறு இசுலாமிய மதவெறிய அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பையும், மிரட்டலையும் தெரிவித்திருந்தன. வங்கதேச பாராளுமன்றத்திலேயே இவரை கைது செய்து புத்தகத்தை தடை செய்ய வேண்டுமென்று மதவாதிகள் குரல் கொடுத்திருக்கின்றனர். இறுதியில் ஒரு மதவெறியரால் தாக்கப்பட்டு பிறகு அதன் பாதிப்பால் இறந்தும் போனார். இந்த வழக்கின் இன்றைய நிலை குறித்து தெரியவில்லை.

2013-ம் ஆண்டு துவக்கத்தில் 1971 போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் இ இசுலாமி மதவெறியர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென்று ஷாபாக் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக எழுதிய ரஜீப் ஹைதர் எனும் நாத்திக வலைப் பதிவரை ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி குண்டர்கள் 2013 -பிப்ரவரி 15ம் தேதி படுகொலை செய்தனர். ரஜீபின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மத பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

தற்போது அவ்ஜித் ராயின் மரணத்திற்கு பிறகும் பல்வேறு மக்கள் உடன் திரண்டு டாக்கா மருத்துவமனையின் முன் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேராசிரியர் அன்வர் ஹுசைன் பேசும் போது,” நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், கருத்து சுதந்திரம் அனைத்தையும் எதிர்ப்பதோடு, ஹுமாயூன் ஆசாத் போன்றோரை கொன்றவர்களுமே இந்த கொடூரத்தை செய்திருக்கின்றனர்” என்று பேசினார்.

கொலை செய்யப்பட்ட நாத்திக பதிவர் ரஜீப் ஹைதர்
கொலை செய்யப்பட்ட நாத்திக பதிவர் ரஜீப் ஹைதர்

டாக்கா பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்க தலைவரான லிடன் நந்தி, விரைவில் இந்தக் கொலையைக் கண்டித்து தீப்பந்த ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் ரொபாயத் பெர்டோஸ் பேசும் போது, ஆசிரியர்களும் மாணவர்களும் வெள்ளியன்று ஊர்வலம் போக இருப்பதாக கூறினார். இன்னும் பல்வேறு மாணவர் சங்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் கொலையைக் கண்டித்து போராடி வருகின்றனர்.

வங்கதேசத்தில் செயல்படும் இணைய புத்தக விற்பனை நிறுவனமான ரோகோமாரி, 2014 ஆரம்பத்தில் அவிஜித் ராயின் புத்தகங்களை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டது. ஃபேஸ்புக்கில் ஃபாரபி ஷைஃபர் ரஹ்மான் எனும் ஜமாத் ஏ இசுலாமி இயக்க மதவெறியர் மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்த விற்பனை தடை. அவிஜித் ராய் இசுலாமையும், நபியையும் இழிவுபடுத்துவதாகவும், ரோக்மாரி நிறுவனம் இத்தகைய நாத்திக புத்தகங்களை விற்றுவருவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார். ரோக்மாரி அலுவலகத்தின் முகவரியை கொடுத்து இசுலாமிய நண்பர்கள் அதை தாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அகமது ராஜிப் ஹைதருக்கு நடந்தது அவிஜித்துக்கும் நடக்குமென்றும் கூறினார். இத்தனைக்கும் பிறகும் கொலையை யார் செய்தார்கள் தெரியவில்லை என்று போலீஸ் தெரிவிக்கின்றது.

பொறியியலாளரான அவிஜித் ராய் அமெரிக்கா சென்று செட்டிலானவர். தத்துவம், அறிவியல் சிந்தனைகள், மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். (Among his books are Biswas and Bigyan (Belief and Science), Abishwasher Darshan (philosophy of atheism), Samakamita: Baigyanik ebong Samajmanastattik Anusandhan (Homosexuality: Scientific and socio-psychological intervention), Satantra Bhabna o Buddir Mukti (individual thoughts and freedom of thoughts) etc. )

இந்த வருடம் டாக்கா புத்தகக் கண்காட்சியில் அவரது இரு புத்தகங்கள் வெளிவருவதை ஒட்டி அவர் வங்கதேசம் வந்திருந்தார். வந்தவருக்கு மதவெறியர்கள் சமாதி எழுப்பி விட்டனர்.

சென்னை புத்தகக் கண்காட்சியின் போது எழுத்தாளர் பெருமாள் முருகனது நாவலை எரித்து, அவரை முடக்கி இந்துமதவெறியர்களும், கவுண்டர் சாதிவெறியர்களும் ஆட்டம் போட்டனர். தற்போதும் கரூரில் புலியூர் முருகேசன் எனும் எழுத்தாளரை தாக்கி அடவாடி செய்து வருகின்றனர்.

ஹூமாயூன் ஆசாத்
ஹூமாயூன் ஆசாத்

தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பொதுவுடமை, பெரியார் கருத்து தாக்கத்தினால் இன்னும் கொலை அளவுக்கு போகவில்லை. ஆனால் வங்க தேசத்தில் இத்தகைய முற்போக்கு மரபு இருந்தாலும் மதவெறியர்கள் இன்னும் இத்தகைய அடாவடிகளை செய்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர். இவையெல்லாம் இசுலாத்தில் இல்லை, குர் ஆன் அப்படிச் சொல்லவில்லை, நபிகள் அப்படி போதிக்கவில்லை என்று சலீப்பூட்டும் வாதத்தை இப்போதும் கேட்கலாம்.

ஆனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையுடன் வாழும் ஒரு இடத்தில் ஒரு நாத்திகருக்கோ இல்லை ஒரு கம்யூனிஸ்டுக்கோ இடமில்லை, அவர்கள் தமது கருத்துக்களை பேசக்கூடாது என்பதில் மிதவாத முசுலீம்கள் கூட ஏற்றுக் கொள்வர். இவர்கள் ஆயுதம் எடுத்து அடுத்தவரை தாக்குவதில்லை. ஆனால் கருத்தளவில் மதவெறியர்களுக்கு களம் அமைத்து கொடுக்கின்றனர். எப்படி குஜராத்தில் இந்துமதவெறியர்கள் முசுலீம்களை தாக்கும் போது பெரும்பான்மை இந்துக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தார்களோ அது போலத்தான் மிதவாத முசுலீம்களும் மதம் சார்ந்து ஜனநாயகத்தை எதிர்க்கின்றனர்.

வங்கதேசம் எனும் ஏழை நாடு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது. வால்மார்ட் ஏற்படுத்திய தீ விபத்தின் புகை மூட்டம் கூட இன்னும் அணையவில்லை. இத்தகைய சூழலில் இசுலாமிய மதவெறியர்கள் வங்கதேசத்தின் அறிவுச் செல்வங்களை, மண்ணின் மைந்தர்களை ஒவ்வொருவராக கொலை செய்கின்றனர்.

1971 போரில் வங்கதேச இளைஞர்களைக் கொன்று, பெண்களை வன்புணர்ச்சி செய்து ஆட்டம் போட்டதும் இதே மதவெறியர்கள்தான். இன்று அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பி வரும் வங்க தேசம் இன்னும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.

பிறப்பால் முசுலீம்களாக இருக்கும் ஒருவர் அவர் சமூகத்திலேயே நாத்திக பிரச்சாரம் செய்யும் உரிமையை பெற்றிருக்க வேண்டும், மற்ற மதத்தினரை காதலித்து மணமுடிக்கும் உரிமை வேண்டும், இசுலாமிய சடங்குளை தவிர்க்க நினைத்தால் அனுமதிக்க வேண்டும் போன்ற மதச்சார்பற்ற, ஜனநாயக உரிமைகளுக்காக போராட வேண்டும்.

இதன்றி இது இசுலாத்தில் இல்லை, குர்ஆன் பேசவில்லை என்று பேசினால் அவர்கள்தான் முசுலீம் மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்து சித்ரவதை செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள்.

வங்கதேச எழுத்தாளர் கொலைக்கு கண்டனம் தெரிவிப்போம். இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்துவோம்.

தொடர்புடைய செய்திகள்:

Writer Avijit Roy hacked to death 

A Statement from Mukto-mona : Stop Muzzling Taslima Nasrin a la Bangladeshi style

Humayun Azad

Ahmed Rajib Haider

இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா!

15

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்திலுள்ள அம்பரப்பர் மலையில்தான் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. இதற்காக மலையின் பக்கவாட்டில் இரண்டு கிலோ மீட்டர் நீள குகைப்பாதை வெட்டி அதற்குள் 130 மீ நீளம் 26மீ அகலம் 30 மீ உயரத்தில் ஒரு குகையை அமைத்து, அதனுள் உணர்கருவியை வைத்து ஆய்வுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், குகைக்கு வெளியில் 66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. இதில் முள்வேலி அமைத்து நீர் தேக்க தொட்டி, துணை மின்நிலையம், 300 குடும்பத்திற்கு தேவையான குடியிருப்புகள், ஆய்வு செய்யவரும் மாணவர்கள், விஞ்ஞானிகளுக்கு தனித்தனி விடுதிகளும், அலுவலகங்களும் அமைய உள்ளன. இன்றுவரை தமிழக மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெறாத நிலையிலும், ஆரம்பகட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையிலுள்ள சலீம்-அலி என்ற பறவைகளைப் பற்றி ஆய்வு நிறுவனம் மூலம் சுற்றுச்சூழல் அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஐ.என்.ஓ திட்டப் பணியிடம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்திய நியூட்ரினோ ஆய்வகம் அமையும் இப்பகுதிவாழ் மக்களின் நீண்ட்நாள் கோரிக்கைகளில் சாக்குலூத்து மெட்டுசாலை மற்றும் ராமக்கல் மெட்டுசாலை ஆகியவை முக்கியமானவை. இந்த சாலைகள் அமைக்கப்பட்டால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் கேரள எஸ்டேட்டுகளுக்கு, வெறும் 6 கிலோமீட்டரில் சென்றுவிடலாம். நூற்றுக்கணக்கான விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளும் பயன்பெறும் இத்திட்டத்திற்கு வனத்துறை இன்றுவரை அனுமதி தர மறுத்து வருகிறது. “வனவிலங்குகள் அழிந்து விடும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி” என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால் 6 கிலோமீட்டர் சாலை அமைத்து மக்களுக்கு உதவ மறுக்கும் அரசின் கொள்கைகள் இதே வனப்பகுதியில் 5,000 டன் வெடிமருந்தை பயன்படுத்தும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்கு அனுமதியளித்திருக்கின்றன.

மக்கள் கேள்விகளும் – விஞ்ஞானிகளின் பதிலும்

lbne-collabபெரும் பொருள் செலவிலான இந்த ஆய்வின் மூலம் “பிரபஞ்சம் உருவான விதம், அதன் வயது போன்ற நுணுக்கமான கேள்விகளுக்கு துல்லியமான விடை கிடைக்கும். நிலநடுக்கம், சுனாமி அபாயங்களை முன்னரே தெரிந்துகொள்ளலாம். நம் நாட்டின் மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் முன்னேறலாம். உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயரும். உலக வரைபடத்தில் பொட்டிப்புரம் கிராமம் முக்கிய இடம் பெறும்’’ என்று நியூட்ரினோ ஆய்வுத்திட்ட விஞ்ஞானிகள் விளக்கக் கூட்டத்தில் கூறுகிறார்கள்

ஆனால் பகுதிவாழ் மக்களோ, “இப்பவே அடிவாரக் காடுகளை வேலிபோட்டு அடைத்து விட்டார்கள். ஆடு, மாடு மேய்ச்சல் பறிபோய்விட்டது. காட்டுக்குள் போனால் வனத்துறை அதிகாரிகள் விரட்டுவார்கள், ஆடு மாடு வளர்க்கவே முடியாது. நாளைக்கு வெடிவைத்து மலையைத் தோண்டினால் நிலத்தடி நீரோட்டம் மாறிவிடும். பாறை தூசிகளால் பயிர்களும் நாசமாகிவிடும். கிராம மக்களின் சுகாதார வாழ்வு சீர்கேடாகி விடும். பிழைப்புக்கு வழியில்லாத ஊரில் எப்படி குடியிருக்க முடியும்?” என்று பீதியில் உறைந்து மவுனமாகி நிற்கிறார்கள்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, “மூன்று வருடம், நடக்கும் சுரங்கக் கட்டுமான வேலைகளால் இப்பகுதியின் பல்லுயிர்வளம் சிதைந்து போகும். 5000 டன் வெடிமருந்துகளை பயன்படுத்துவதால் பாறை அடுக்குகளில் அதிர்வு ஏற்பட்டு 15 கி.மி சுற்றளவிலுள்ள (இடுக்கி, பெரியாறு, வைகை அணை உட்பட) பல அணைகள் சேதமடையும். மேலும், எதிர்காலத்தில் இம்மலைக்குகையை அணுக்கழிவுகளை பாதுகாக்கும் இடமாக மத்திய அரசு பயன்படுத்தும் அபாயமும் உள்ளது.” என்று எதிர்கால ஆபத்துகளை பட்டியலிடுகிறார்கள்.

ஃபெர்மிலேப் கண்காணிப்பகம்
ஃபெர்மிலேப் கண்காணிப்பகம்

மேற்கண்ட சந்தேகங்களுக்கு பதிலாக விஞ்ஞானிகள் தரப்பில், ‘’பொட்டிப்புரம் மலையில் கிரானைட் பாறைகள் இருப்பதால் பெரும்பாறைகளாக எடுக்கும் வகையில்தான் குகை வெட்டும் பணி இருக்கும். மேலும் நவீன தொழில் நுட்பக் கருவிகளையும் பயன்படுத்துவதால் பெரும் சப்தமோ, நில அதிர்வோ ஏற்படாது. இது கடினப் பாறையாக இருப்பதால் அதனுள் நீரோட்டம் இருக்க வாய்ப்பே இல்லை. இது ஒரு அடிப்படை ஆராய்ச்சிதான். இதில் அணு சம்பந்தமானது எதுவும் இல்லை. அணுக்கழிவு, அணுக்கதிர் வீச்சு என்பதெல்லாம் பொய், புரளி. மக்கள் பயப்படத்தேவை இல்லை. வேலிக்கு வெளியே ஆடுமாடு மேய்ப்பதில் நாங்கள் தலையிடமாட்டோம்.’’ என்று வாக்குறுதி தருகின்றனர்.

மக்கள் மத்தியில் இவ்வளவு ஆரவாரம் நடந்துகொண்டிருந்தாலும் மத்திய- மாநில அரசுகள் இதில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கின்றன. ‘மக்களின் முதல்வர்’ மீண்டும் அரியணை ஏறுவதற்காக பல்வேறு மாநில அரசுத் திட்டங்கள் காத்துக்கிடக்கும் போது, நியூட்ரினோ திட்டவேலைகள் மட்டும் தொடங்கிவிட்டன. அம்மாவோ அமைதி காக்கிறார்.

ஆனால் சி.பி.ஐ, சி.பி.எம்.கட்சியினர் இத்திட்டத்திற்கு திடீர் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அடுத்த நாளே இவர்களின் ‘அறிவியல் இயக்கம்’ விஞ்ஞானிகளைக் கூட்டிவந்து ஊர்ஊராக விளக்கக்கூட்டம் நடத்தத் தொடங்கி விட்டது.

ஃபெர்மிலேப் இந்திய விஞ்ஞானிகளுடன் கலாம்.
ஃபெர்மிலேப் இந்திய விஞ்ஞானிகளுடன் கலாம்.

“தோழர்களே’ தலையிடுவதால் காரியம் இல்லாமல் இருக்குமா?” என்ற கேள்வியுடன் நாம் விசயத்தை தோண்டித் துருவியதில் கிடைத்த தகவல்களை தொகுத்து தருகிறோம்.

நியூட்ரினோ துகள்:

நவீன அறிவியலின்படி அணுவினுள், நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய மூன்று துகள்களோடு கூடவே இருக்கும் ஒரு நுண்துகளுக்கு ‘என்ரிகோ பெர்மி’ என்ற இத்தாலிய விஞ்ஞானி 1933-ம் ஆண்டு ‘நியூட்ரினோ’ எனப் பெயரிட்டார். (இவருக்கு “அணுகுண்டின் தந்தை”  – Father of Atom bomb என்ற பட்டமும் உண்டு).  ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்க விஞ்ஞானி அண்ட வெளியிலிருந்து வந்து சேரும் நியூட்ரினோக்களை அடையாளம் காணும் பணிக்காக 2002-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

நியூட்ரினோ என்பது ஒரு மின்னூட்டமில்லாத நுண்துகள். எனவே பிற துகள்களின் மீது எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஒளியின் வேகத்துக்கு இணையாக பயணம் செய்யும் நியூட்ரினோதுகள் அனைத்து பருப்பொருள்களையும் எளிதாக ஊடுருவி பாய்ந்து விடுகிறது. அண்ட வெளியிலிருந்து ஒரு நொடிக்கு பல லட்சம் கோடி நியூட்ரினோக்கள் பூமியை நோக்கி வருவதாகவும், நம் உடலையும் கூட, ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற நியூட்ரினோக்கள் (எவ்வித பாதிப்புமில்லாம்ல) ஊடுருவிச் செல்வதாகவும் நவீன அறிவியல் கூறுகிறது.

ராபர்ட் வில்சன்
ராபர்ட் வில்சன்

இதன் எதிர்வினையற்ற தன்மையாலும், பிற காஸ்மிக் கதிர்களின் இடையூறாலும் இதனை கண்டறிவது சவாலானதாக உள்ளது. எனவே காஸ்மிக் கதிர்கள் ஊடுருவ முடியாத மலைக்குகைக்குள் ஆய்வகம் அமைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர், விஞ்ஞானிகள். நியூட்ரினோ குறித்த இவ்வகை ஆய்வுகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மன், ஜரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இவ்வரிசையில் இந்தியாவும், சமீபத்தில் சீனாவிலும் சேர்ந்துள்ளன.

நார்வே நாட்டின் இயற்பியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்துவரும் திரு விஜய் அசோகன் என்பவர், “உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் நியூட்ரினோ ஆய்வின் ஒரு அங்கமாகவே இந்திய நியூட்ரினோ ஆய்வு நடக்க உள்ளது. இதற்காக அமெரிக்காவின் ‘ஃபெர்மிலேப்’ உடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.” என்று இந்தத் தகவலை வெளிப்படுத்துகிறார்.

ஆனால், INO விஞ்ஞானிகளோ, “ஃபெர்மிலேப் க்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இது இந்திய விஞ்ஞானிகள் மட்டுமே செய்லபடும் திட்டம்’’ என்று இரண்டு வரி பதிலைச் சொல்லி, இதை இல்லவே இல்லை என மறுத்து வருகிறார்கள்.

கொலைகாரனின் வீச்சரிவாள் ‘ஃபெர்மிலேப்’

வில்சன் ஹால்
வில்சன் ஹால்

சிகாகோ நகரில் சுமார் 68,000 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள ‘ஃபெர்மிலேப்’தான், உலகின் முன்னணி நியூட்ரினோ ஆய்வகம். ‘அணுகுண்டின் தந்தையான என்ரிகோ ஃபெர்மி என்ற விஞ்ஞானியின் நினைவாகத்தான் அமெரிக்கா தனது தேசிய ஆய்வகத்திற்கு ‘ஃபெர்மிலேப்’ – எனப் பெயர் சூட்டியுள்ளது. ஹிரோசிமா, நாகசாகியில் விசிய அணுகுண்டு தயாரிக்க, அமெரிக்க செயல்படுத்திய ‘மன்ஹட்டன் திட்டத்தின்’ திட்டத்தலைவராக இருந்தவர் டாக்டர்- ராபர்ட். ஆர்.வில்சன். பெர்மிலேப் –ன் முகப்பு அடையாள கட்டிடம் இவரது பெயரால் ‘வில்சன் ஹால்’ என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க அரசின் பில்லியன் (100 கோடி) டாலர் முதலீடு, 1000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், உலகெங்கிலுமிருந்து வரும் பல்லாயிரக் கணக்கிலான ஆய்வு மாணவர்கள், விடுதிகள், சூப்பர்மால், கோல்ஃப் மைதானம், கார்ப்பரேட் அலுவலக வசதி, தொழில்வர்த்தக உறவு, பட்ஜெட் நிதிக்குழு என பகாசுரக்கம்பெனிகளின் கட்டுமானத்துடன் இயங்கும் நிறுவனம்தான் ஃபெர்மிலேப். தனது ஏகாதிபத்திய நோக்கத்தை கச்சிதமாக சாதித்துக் கொள்ள அமெரிக்கா ஏந்தியிருக்கும் ஒரு நவீன அறிவியல் கருவி இது.

நியூட்ரினோ ஆய்வில் ஃபெர்மிலேப்!

ஃபெர்மி லேப் வான் பார்வை
ஃபெர்மி லேப் வான் பார்வை

உயர் ஆற்றல் இயற்பியல் (High Energy physics) என்ற இயற்பியல் துறையின் பல்வேறு ஆய்வுகள் ஃபெர்மிலேபில் நடந்து வந்தாலும், நியூட்ரினோ ஆய்வுதான் பிரதானமாக உள்ளது. 1950 முதல் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டுவரும் ஃபெர்மிலேப், நியூட்ரினோ ஆய்வுக்குரிய பல உயர்தொழில்நுட்பக் கருவிகளை வடிவமைத்து, சோதனை செய்து வருகிறதுத. ஆனாலும் நியூட்ரினோ பல செயல்பாடுகளை இன்னமும் துல்லியமாக கண்டறிய முடியவில்லை.

நியூட்ரினோக்களில், எலக்ட்ரான் நியூட்ரினோ, மியுவான் நியூட்ரினோ (muon), டவ் நியூட்ரினோ என்று மூன்றுவகை உண்டு ஒரு உணர்கருவியில் எலக்ட்ரான் நியூட்ரினோ தன்னை வெளிப்படுத்திவிட்டு போகும் பாதையின் இடையிலேயே மியூவான் நியூட்ரினோவாக மாறிவிடுகிறது. பிறகு எலக்ட்ரான் நியூட்ரினோவாக பழைய நிலைக்கு திரும்பிவிடுகிறது. இந்த நிலையற்ற தன்மையினால்தான் நியூட்ரினோவை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எனவே நியூட்ரினோ ஆய்வை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுப்பதற்காக LBNE (Long baseline Neutrino Exporiment) என்ற புதியதிட்டத்தை ஃபெர்மிலேப் வகுத்துள்ளது. அதாவது, அண்டவெளியிலிருந்து வரும் நியூட்ரினோக்களுக்கு மாற்றாக, செயற்கையாக நியூட்ரினோக்களை உற்பத்தி செய்வது, (Neutrino Factry) இந்த நியூட்ரினோக்களை கற்றையாக, அடர்த்தியானதாக மாற்றுவது (Neutrino beam), இவ்வாறு அடத்தியூட்டப்பட்ட நியூட்ரினோக்களை உலகின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள உணர்கருவிகளில் (Observatory) செலுத்தி ஆய்வுகள் செய்வது. இதுதான் LBNE ன் சுருக்கமான திட்டவிளக்கம்.

ஏற்கனவே நியூட்ரினோ தொழிற்சாலைகளும், நியூட்ரினோ பீம்களும் தயார்நிலையில் உள்ளன. இவற்றிலிருந்து 700 கி.மீ. தூரத்திலுள்ள உணர்கருவிக்கு அடர்த்தி நியூட்ரினோக்களை அனுப்பி வெற்றிகரமாக 5000, 10,000 கி.மீ தூரத்துக்கு சோதித்தறிந்துள்ளனர். இதனை மேலும் வீரியப்படுத்தி LBNE திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

ஃபொமிலேப்பும் – இந்தியாவும்

மேற்கண்ட அதிநவீன திட்டத்தை செயல்படுத்த அமெரிக்க தேசிய ஆய்வுகழகமான பெர்மிலேப், உலக நாடுகளின் விஞ்ஞானிகள், ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஃபெர்மி லேபில் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள்
ஃபெர்மி லேபில் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள்

இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்துபல்கலைக்கழகம், கொச்சி, ஹைதராபாத், ஜம்மு பல்கலைக்கழகங்கள் மற்றும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், தவிர ஹைதராபாத் ஐ.ஐ.டி.யும், இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கடந்த 2009 முதல் இணைந்துள்ளன. டாக்டர் கிரி, குரோவர் குமார், ராஜிவ், மொகந்தா, ருக்மணி போன்ற 13 இந்திய இயற்பியல் விஞ்ஞானிகளும் இணைந்துள்ளதாக ஃபெர்மிலேப் இணையதளம் கூறுகிறது.

மேலும், ஆகஸ்ட் 2014 நிலவரப்படி இந்த கூட்டு ஆய்வுத்திட்டத்தில் இந்தியா உட்பட இத்தாலி, பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளும், பல நாடுகளைச் சேர்ந்த 525 விஞ்ஞானிகளும், 190 ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளதாக அந்த இணையதளம் தெரிவிக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் பரஸ்பர ஒப்பந்தப்படி சில இந்திய விஞ்ஞானிகள் பெர்மிலேப்பில் சில ஆண்டுகள் தங்கியிருந்து படிப்பும், பயிற்சியும் பெற்று வருகிறார்கள். இதுபோல ஃபெர்மிலேப் விஞ்ஞானிகளும் இந்திய ஆய்வகத்தில் பணிபுரியவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.

ஐ.ஐ.எஃப்.டி குழு
ஐ.ஐ.எஃப்.டி குழு

இதன் ஒரு அங்கமாகத்தான் டெல்லி பல்கலைக்கழகத்தின் தலைமையில் இந்திய நியூட்ரினோ திட்டத்திற்காக பெர்மிலேப் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள அதே பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்திய நியூட்ரினோ ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த LBNE திட்டத்தை அடுத்த வருடத்திற்குள் முடிப்பதற்கான P5 (Particle Physics Project Priortization Panel ) என்ற செயல்திட்டத்தை அமெரிக்க அணுசக்திதுறை கடந்த 2014 தயாரித்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த மொத்த நீண்டகாலத் திட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக டெல்லி பல்கலைக்கழகம் பெர்மிலேப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திலும் (INO) ஈடுபட்டு வருகின்றனர்.

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும்..டும்…டும்

டாக்டர் G.ராஜசேகரன்
டாக்டர் G.ராஜசேகரன்

டாக்டர் G.ராஜசேகரன் என்பவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து பின்பு பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும், டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிலைத்திலும் பயிற்சி பெற்று, 1976-ல் சிகாகோ பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையிலுள்ள இந்திய கணித அறிவியல் துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்தவர்.

இவர் கடந்த 2003 ஜூன் 5-11-ம் தேதிகளில் அமெரிக்காவின் கொலம்பியா யுனிவர்சிட்டியில் நடந்த “சர்வதேச நியூட்ரினோ தொழிற்சாலைகள்’’ (ஆங்கிலம்) குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ‘இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டம்’ குறித்த 5 பக்க அறிக்கை வாசித்துள்ளார்.

இது, பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை தேர்வு செய்வதற்க்கு முன்பு சிங்காரா மற்றும் டார்ஜலிங் ஆகிய இடங்கள் பரிசீலனையில் இருந்த போது தயாரித்த அறிக்கை.

அதில், இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் என்பது “எதிர்காலத்தில் நியூட்ரினோ தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் அடர்த்தியூட்டப்பட்ட நியூட்ரினோக்களை பெறும் நோக்கத்தோடுதான் 30-50 டன் எடையுள்ள உணர்கருவி அமைக்கப்படுவதாகவும், LBNE திட்டத்திற்கு ஒத்துழைப்பாக இருக்கும்” என்று மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய – அமெரிக்க கூட்டு முயற்சியை விளக்கும் காட்சித் திரை படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும் நியூட்ரினோ தொழிற்சாலைகள் அமையும் இடங்களான ஃபெர்மிலேப், CERN, KEK (ஜப்பான்) ஆகியவற்றிலிருந்து ஐ.என்.ஓ அமைவிடம் எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்பதை வரைபடமாகவும் வெளிப்படுத்தி உள்ளார். இதைவிட வெளிப்படையான ஒப்புதல் வாக்கு மூலத்தை யார் தர முடியும்?

நியூட்ரினோ ஆராய்ச்சியால் யாருக்கு பயன்?

“நிலநடுக்கம், சுனாமிகளை முன்னறிந்து பேராபத்தை தடுக்கலாம், உலக நாடுகள் பொட்டிப்புரத்தை திரும்பிப் பார்க்கும்” என்று இந்திய விஞ்ஞானிகள் ஜோசியம் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்க கப்பல் படைப் பிரிவு கற்றைகளைப் பயன்படுத்தி, 400 கி.மீ.தூரத்திலுள்ள ஆணு ஆயுத நீர்மூழ்கி கப்பலுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வெற்றிகரமாக சோதித்துவிட்டார்கள். தகவல் தொடர்புதுறையில் ஈடுபட்டுள்ள பன்னாட்டுக் கம்பெனிகள் இப்போதே அங்கு ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

ஜப்பானிய விஞ்ஞானிகள், “எதையும் எளிதாக ஊடுருவிப் பாயும் நியூட்ரினோக்களை கொண்டு இதுவரை கண்டிராத அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கலாம்” என்று அறிவித்துள்ளனர். அதிநவீன நுண்ணோக்கி தயாரிப்பிலும், மருத்துவத்துறையில் பெரும்புரட்சி ஏற்படுத்தலாம்! பால்வெளியில் பிற உயிர்வாழும் கிரகங்களுக்கு தகவல் செய்திகளை அனுப்பி, புதிய கிரகங்களை கண்டறியலாம். என்று அடுத்தடுத்த புதிய இரைகளைத்தேடி, நாக்கை சுழட்டிக் கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகள் புறப்பட்டுவிட்டன.

இறுதியில் நியூட்ரினோ ஆராய்ச்சி என்பது ஏகாதிபத்தியங்களின் இராணுவ நலன்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் இலாப சுரண்டலுக்குமே பயன்படப் போகிறது. இதற்கு இத்தகைய பெரிய அளவு இந்திய மக்களின் பணத்தை செலவு செய்வது என்ன நியாயம்?

அடுத்த வேளை கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் மக்களின் அடிப்படை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தர முடியாமல், அவர்களது வாழ்வாதாரங்களை அச்சுறுத்தி அமெரிக்க திட்டத்தின்படி விஞ்ஞானத்தை வளர்க்க சேவை செய்யப் புறப்பட்டிருக்கின்றனர் இந்திய அரசும், இந்திய விஞ்ஞானிகளும்.

கடந்த நூறு ஆண்டுகளாக நடத்தப்பட்ட அடிப்படை அறிவியல் ஆய்வுகள் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் எந்த விதமான மேம்பாட்டையும் கொண்டு வந்து விடாத நிலையில், அவர்களுக்குப் புரியாத, எதிர்காலத்தில் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படும் ஆய்வகளுக்காக அவர்களது வாழ்விடங்களை அழிப்பது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது?

அப்படியே, அடிப்படை அறிவியல் புரட்சிகள் நடந்தாலும், அதனால் சாதாரண மக்களுக்கு என்ன பலன் என்பதை யாரும் விளக்குவதில்லை. இன்றைய, சந்தைப் பொருளாதார கோட்பாடுகளின்படி இந்த ஆய்வுகளின், அறிவின்  இறுதிப்பலன் பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாப வேட்டைக்குத்தான் போய்ச் சேரும்; அவர்கள் சம்பாதிப்பதற்கு அறிவியல் சிகப்பழகு கிரீம், ஐ-ஃபோன் தொடு திரைகள் என திருப்பி விடப்படுமே தவிர, கிராமப்புற மக்களுக்கு தேவையான வாழ்வுக்கு போதுமான விவசாய நுட்பம்,  குறைந்த செலவில் வீடு கட்டுதல், வெப்ப மண்டல நோய்களை ஒழித்தல், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிப்படுத்துதல் போன்ற துறைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் என்ற நிலைதான் உள்ளது.

அமெரிக்க எஜமானின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் இந்திய அரசோ, தனது விசுவாசத்தை மேலும் வேகமாக வாலாட்டிக் காட்டுவதற்குத் தான் இந்திய நியூட்ரினோ திட்டத்தை இங்கு நிறைவேற்றத் துடிக்கிறது. ஒரு டாக்டர் பட்டத்திற்கு ஆசைப்பட்டு சில இந்திய விஞ்ஞானிகள் இதற்குப் பலியாகி கிடக்கின்றனர்.

இவ்வாறு அனைத்து வகையிலும் மக்கள் நலனைப் புறக்கணித்து விட்டு, அமெரிக்க விருப்பத்தின்படியிலான அறிவியல் வளர்ச்சிக்காக ஆய்வகம் அமைக்கிறார்கள்.

– மாறன், விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம் வட்டாரம்.