Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 696

திருடனுக்கு கொலை – ஜோசியனுக்கு பரிகாரம் !

98

தினமணியின் இணைப்பாக வெளியாகும் வெள்ளிமணியில் ‘காலம் உங்கள் கையில்’ என்ற ஜோதிட கேள்விப் பதில் பகுதியில் கடந்த 13 செப்டம்பர் அன்று வாசகர் ஒருவர் இரு கேள்விகளை கேட்டுள்ளார்.

ஆயுளும் மரணமும்
ஒருவரது ஆயுளைத்தான் குறிப்பிட முடியுமே தவிர, அவரது மரணம் இன்ன நேரத்தில் சம்பவிக்கும் என சொல்ல முடியாது.

கொள்ளையர்கள் சிலர் அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பேத்தி ஆகிய மூவரையும் வீடு புகுந்து கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆனால் மூவருக்குமே ஜாதகத்தின்படி 70 வயது வரை ஆயுள் இருப்பதாக ஏற்கெனவே ஜோதிடர்கள் கணித்த பிறகும் அத்தையின் மகளும், பேத்தியும் அதற்கு முன்னரே மரணமடைந்தது ஏன்? ஜோதிடர்களின் கணிப்பு தவறா? மற்றும் ஆயுள் முடிவதற்கு முன்னரே அகால மரணமடைபவர்கள் ஆயுள் முடியும் வரை ஆவி உலகில் சுற்றி துன்பம் அடைவார்களா? அவர்களது ஆன்மா சாந்தி அடைய பரிகாரம் என்ன? என்பது தான் அந்தக் கேள்விகள்.

மூன்று பேர் திருடர்களால் கொல்லப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் இதை ஜோதிடத்திற்கு கொண்டு வந்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மேலும் இந்தக் கொலை மூலம் ஜோசியம் எனும் முட்டாள்தனத்தை காறி உமிழ்ந்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டிய அந்த குடும்பம் மீண்டும் அதே ஜோசியக்காரர்களிடம் போய் நிற்பது அடுத்த அதிர்ச்சி. நம் மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். போகட்டும்.

பதில் சொல்ல வந்த தினமணியின் ஆஸ்தான ஜோதிடர் முதலில் வாசகரின் துயரத்தில் சென்டிமெண்டாக பங்கு கொள்கிறார். அப்புறம் பிரம்மன் எழுதிய காலம் முடிந்த பிறகு ஆத்மா எப்படியாவது உடலை விட்டு எஸ்கேப் ஆகிவிடும் என்கிறார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது ஆயுளைத்தான் குறிப்பிட முடியுமே தவிர, அவரது மரணம் இன்ன நேரத்தில் சம்பவிக்கும் என சொல்ல முடியாது என்கிறார். அதாவது ஆயுளுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமே கிடையாதாம். குழப்பமாக இருக்கிறதா? இதற்கு இதிகாசம், புராணங்களிலெல்லாம் உதாரணம் இருக்கிறதாம். இதிலிருந்தே இந்த புராணக் குப்பைகள் மோசடி என்பதையும், அந்த மோசடியை வைத்தே ஜோசியக்காரர்களும் பிழைக்கிறார்கள் என்பது தெரிகிறது.

கருட புராணம் படிப்பதன் மூலம் இறந்து போனவரின் ஆன்மாவுக்கு அடுத்த பத்து நாட்களுக்கு சாந்தி அளிப்பதையும், அதை இழவு விழாத வீட்டில் படிக்க கூடாது என்பதையும் போகிற போக்கில் சுட்டிக் காட்டும் ஜோதிடர், ஓராண்டு காலம் மாதா மாதம் செய்ய வேண்டிய பிதுர்களுக்கான (பெற்றோர்கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினர்) மாசிகம் என்ற சடங்கு பற்றி குறிப்பிடுகிறார். அதாவது மாதமொரு முறை நீர், பிண்டம் போன்றவற்றை பித்ருக்களுக்கு படைக்க வேண்டும். நாம் படைக்கும் இப்பொருட்களை உட்கொண்டுதான் அவர்கள் (ஆன்மா) யமலோகத்தை நோக்கி பயணப்படுவார்கள். இதற்கிடையில் ஆறு மாதம் கழித்து த்ரௌஞ்சம் என்ற நகருக்கு போய் சேரும் ஆன்மா அங்குதான் முந்தைய ஆறு மாத பிண்டத்தை மொத்தமாக சாப்பிட்டு விட்டு அடுத்த ஆறு மாத பயணத்துக்கு தயாராகும். பிறகு யமலோகத்தை ஆன்மா அடைந்து பித்ரு தெய்வமாகி விடுவதால் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கொரு முறை மாத்திரம் திதி கொடுத்தால் போதுமானது என்றும் கூறுகிறார்

சிரார்த்தம்
இந்த பதினைந்து நாட்களிலும் தொடர்ந்து பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் வருடம் முழுவதும் செய்ததற்கு சமமாம்.

இதிலிருந்து ஆன்மா என்பது பிஎஸ்எல்வி ராக்கெட் போல பிண்டம் எனும் எரிபொருளை ஏற்றிக் கொண்டு எமலோகம் எனும் கோளையோ நட்சத்திரத்தையோ நோக்கி போகிறது போலும். இவ்வளவு சுலபமாக விண்வெளியில் சுற்ற முடியும் என்பது ஐஎஸ்ஆர்வோ மற்றும் நாசா அறிவாளிகளுக்குத் தெரியவில்லை. முக்கியமாக இந்த கருடபுராணத்தின் படிதான் ரோட்டில் எச்சி துப்பிய அப்பாவிகளை எண்ணெயில் வறுத்து கொலை செய்தார் இயக்குநர் ஷங்கர்.

புரட்டாசி மாத தேய்பிறையில் (அதாவது முதலில் வரும் பௌர்ணமி முழுநிலவுக்கு அடுத்து வரும் நாட்கள்) சூரிய பகவான் கன்னி ராசிக்கு போய் விடுவாராம். இந்த பதினைந்து நாட்களும் மகாளயம் என அழைக்கப்படுமாம். இந்த பதினைந்து நாட்களிலும் தொடர்ந்து பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் வருடம் முழுவதும் செய்ததற்கு சமமாம். பிரதமை அன்று செய்பவர்களுக்கு செல்வம் கிடைக்குமாம். துவிதைக்கு குழந்தை பாக்கியமும், திருதியைக்கு வளர்ச்சியும் லாபமும், சதுர்த்திக்கு எதிரியின் நாசமும், பஞ்சமிக்கு லாபமும், சஷ்டிக்கு புகழும், சப்தமிக்கு லீடர்ஷிப்பும், அஷ்டமிக்கு நல்ல புத்தியும், நவமிக்கு நல்ல பெண்ணும், தசமிக்கு நினைத்த எல்லாமும், ஏகாதசிக்கு வேதமும், துவாதசிக்கு குல வளர்ச்சியும், மேதைமையும், பசுவும், ஆரோக்கியமும், சுதந்திரமும், அவ்வளவு ஏன் தீர்காயுளும் கூட அமையுமாம்.

சரி இந்த ராசிக்காரர்களை திருடர்கள் தாக்கினால் என்ன கிடைக்கும் என்பதை அந்த ஜோசிய ஐயர்வாள் தெரிவிக்கவில்லை.

இந்த பதினைந்து நாட்களும் பித்ருலோகத்தில் உள்ள நமது முன்னோர்களின் மூன்று தலைமுறையினரும் பூமிக்கு நமது வீட்டுக்கு வருவார்களாம். (நாம் இறந்து போனால் அங்கிருக்கும் சீனியர் புரமோசன் வாங்கி சொர்க்கத்துக்கு போய் விடுவாராம்) வருபவர்களுக்கு தேவையான சாப்பாடு, கருப்பு எள் (திருமாலின் வியர்வையில் தோன்றியதால் அதுதான் சுத்தமானதாம்), அப்புறம் தர்ப்பை (இதில்தான் முப்பெரும் கடவுள்களும் இருக்கின்றனராம். மேலும் இது சுயம்புவாகவே தோன்றுவதாம் – அதாவது ஆன்மா போன்றதாம்) எல்லாம் வைத்து வழிபட வேண்டுமாம். கருப்பு எள்ளுடன், சரியாக ஆட்காட்டி விரலுக்கு நடுவில் வைத்து நீர் ஊற்றா விட்டால் முன்னோர்கள் கோபித்துக் கொண்டு நமது வீட்டுக்கு அழைப்பை ஏற்று வர மாட்டார்களாம். இனி இன்றைய இளைய தலைமுறை பித்ரு லோகம் சென்றால் அவர்களுக்கு பிசாவும், பர்கரும் அளிக்கப்பட வேண்டும் என்று எப்போது மாற்றுவார்கள் தெரியவில்லை.

பண்டாரங்களுக்கு செல்வம்
பார்ப்பன பண்டாரங்களின் வாழ்விலும் செல்வம் குவிய என்னமா பாடுபடுகிறார்.

ஒவ்வொரு நாளும் சடங்கு செய்ய வருகின்ற பார்ப்பனர்களுக்கு துணிமணிகள் முதல் தங்கம் வரை தானம் செய்ய வேண்டுமாம். நாம் நடத்துகின்ற அழகைப் பார்த்து விட்டு நமது முன்னோர்கள் திருப்தியாகும் பட்சத்தில் (இதையும் வருகின்ற புரோகிதப் பார்ப்பனர்கள்தான் உறுதிப்படுத்துவார்கள்) ‘போதும் போதும் போதும்’ என்று மூன்று முறை கும்மியடித்து விட்டு திரும்பவும் யமலோகத்துக்கு சென்றுவிடுவார்களாம். ஆன்மாக்களுக்கு இது காலாண்டுத் தேர்வு விடுமுறை போல வைத்துக் கொள்ளலாம். பரணி நட்சத்திரம் அன்று பண்ணினால் நமது நண்பர்களின் ஆவிகளும் கூட வீடு வந்து போகுமாம். தினமணியின் ஐயர்வாள் ஜோதிடர் மக்களுக்கு மட்டும் தீர்வை அள்ளி விடுவதில்லை, தன்னையொத்த பார்ப்பன பண்டாரங்களின் வாழ்விலும் செல்வம் குவிய என்னமா பாடுபடுகிறார்!

இதுபோக காரூணீக பித்ரு தர்ப்பணம் என்று ஒன்று இருக்கிறதாம். அதில் சிரார்த்தம் பண்ணினால் தேவர்கள் உட்பட நமக்கு தெரியாதவர்களுக்கும் கூட சேர்ந்து பலன் கிடைக்குமாம். இதெல்லாம் சங்கராச்சாரியார் ரேஞ்சுக்கான சிரார்த்தமாம். இந்த தெரியாதவர்களில் கொலை செய்த திருடர்களின் முன்னோர்களும் கூட இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த விளக்கங்களைப் பார்த்தால் கொலையே செய்யப்பட்டாலும் சில பல பரிகாரங்களை செய்து விட்டு ஜம்மென்று சொர்க்கம் சென்று விடலாம் போலும்.

சதுர்தசி அன்று சிரார்த்தம் செய்தால் எந்திரங்களால் இறந்தவர்களுக்கு நன்மை உண்டாகுமாம். இந்நாளுக்கு சஸ்திரஹத மகாளயம் என்று பெயர். அன்று செய்வதால் வெட்டுப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடையுமாம். மகாளய அமாவாசை அன்றும் கட்டாயம் சிரார்த்தம் பண்ண வேண்டுமாம். இப்படி கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கு வழி இருப்பதால் இனி கொலை செய்வதை ஒரு குற்றமாக தண்டிக்க வேண்டியதில்லை போலும்.

இவைதான் அந்த பார்ப்பன ஜோதிடர், வாசகருக்கு வழங்கிய தீர்வு. ஆயுளுக்கும் மரணத்துக்கும் பொறுப்பேற்க தவறும் கடவுள்கள் மீது பக்தனுக்கு எந்த குறையும் இல்லை. அதை புரோக்கராக இருந்து முன்தேதியிட்டு கூறும் மோசடி ஜோதிடர்காரன் மீதும் மக்களுக்கு விமரிசனமில்லை. போகிறபோக்கில் ஒரு ஆன்மீக சுயநம்பிக்கை மொக்கையை ஜோதிடர்கள் எடுத்து விட்டாலே பிரச்சினையை மறந்து பரிகாரங்களை ஏற்கும் மனநிலைக்கு மக்கள் வந்து சேர்கிறார்கள்.

பரிகாரம்
விமான விபத்தில் இறப்பவர்களுக்கும், பாலியல் வல்லுறவால் இறப்பவர்களுக்கும், மதவெறிக் கலவரங்களில் கொல்லப்படுவர்களுக்கும் என்ன சிரார்த்தம்.

விமான விபத்தில் இறப்பவர்களுக்கும், பாலியல் வல்லுறவால் இறப்பவர்களுக்கும், மதவெறிக் கலவரங்களில் கொல்லப்படுவர்களுக்கும் என்ன சிரார்த்தம் செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. நவீன மோசடி ஜோதிடர்கள் இதற்கெல்லாம் தேவையான பரிகாரங்களை உருவாக்கத்தான் செய்வார்கள். அது இன்னும் 365 நாட்கள் போதாது என்ற நிலைமைக்கு இட்டுச் செல்லும்.

சிரார்த்தம் பண்ண ராமேசுவரம், வேதாரண்யம், கும்பகோணம், விஷ்ணு பிரயாக், ருத்ர பிரயாக் என பல இடங்களில் கோவில்களும் உள்ளன. வீட்டில் செய்யும்பட்சத்தில் வரும் பார்ப்பனர்களுக்கு வடை, பாயாசத்துடன் வயிறு நிரம்ப சாப்பாடு போட வேண்டும். இப்போது பெரும்பாலும் நேரமில்லாத காரணத்தால் அதற்கான தொகையை வரும் புரோகிதப் பார்ப்பனர்களிடம் கொடுத்து விட்டு எள்ளும், தண்ணீரும் ஊற்றி காரியத்தை முடித்து அனைவரும் அடுத்த வேலைக்கு கிளம்பி விடுகின்றனர்.

இன்றைய வாழ்க்கைச் சூழலும், பொருளாதார சிக்கல்களும் சேர்ந்து மக்களை விரட்டுகின்ற வேளையில் எதார்த்தமாகவே மக்கள் பித்ருக்களுக்கு சடங்கு செய்ய விரும்புவதில்லை. வளரும் பிள்ளைகளுக்கே நல்ல உணவும், உடையும், கல்வியும் அளிக்க திணறும் பெற்றோர்களுக்கு ஆன்மாக்களின் பசியை தீர்க்க வேண்டிய அவசியம் அவர்ளது வாழ்வில் முன் நிற்கவில்லை. எனவே அதனை நடுத்தர மக்கள் வரை புறக்கணித்தாலும், வாழ்வியல் துன்பங்களுக்காக அவர்கள் அணுகும் ஜோதிடர்கள் பித்ரு தோசம் என்ற வார்த்தையை போட்டு அதையே வாழ்வியல் துன்பங்களுக்கு காரணம் என்று காட்டுகிறார்கள். இந்த மிரட்டலுக்கு பயப்படும் மக்கள்கள் பணத்தை செலவழித்து பரிகாரம் செய்து தீர்க்கிறார்கள்.

வளர்ந்து வரும் விலைவாசி உயர்வு, தனியார்மயமான மருத்துவம், கல்வி என அன்றாடப் பிரச்சினைகள், சம்பள வெட்டு, வேலையிழப்பு என்ற நிகழ்கால பிரச்சினைகளுக்கு மகாளயத்திற்கு சிரார்த்தம் செய்யாதையும், ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களை வழிபடாமல் இருந்ததையும் ஒரு குற்ற உணர்ச்சியாக ஏற்க பழக்கப்படுத்துகிறார்கள். வேறு வழியறியாத மக்களும் இதையும் செய்து பார்ப்போமே என்றுதான் துவக்குகிறார்கள். இடையில் எதாவது மாந்திரீக ஜோதிட வகையறாக்கள் கையில் மாட்டினால் நரபலி வரை இது போகிறது.

பித்ரு தோஷத்திற்கு பரிகாரம் தேட பல எளிய வழிமுறைகளை ஏற்கெனவே ஏழைகள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். வேறு என்ன, மூன்று தலைமுறை முன்னோர்களையும் கூப்பிட்டு ”முன்னோர்களே என் நிலைமை இவ்வளவுதான். பாப்பானுக்கு படியளக்குற அளவுக்கு எனக்கு வசதியில்ல. அதுனால உங்களுக்கு ஏதும் பண்ணலன்னு கோவிச்சுக்காதீங்க” என்று முறையிடும் பட்சத்தில் முன்னோர்கள் அதை மறுக்க முடியுமா என்ன?

வரும் அக்டோபர் 3,4 ஆகிய தேதிகளில் மகாளய அமாவாசை வருகிறதாம். இந்த கேள்வியின் மூலம் மற்றவர்களும் பயன்பெறட்டும் என்றுதான் இதனை விபரமாக பதிவு செய்துள்ளதாக ஜோதிடர் கூறியுள்ளார். ஆக இம்மாதம் பார்ப்பனர்களின் ஒரு பிரிவினருக்கு வியாபாரம் கடை  கட்டும்.

அறிவியல், தொழில்நுட்பங்கள் இன்று உலகை ஒரு கைக்குள் சுருக்கி விட்டதாக பேசிக் கொள்கிறோம். சந்திரனுக்கு ராக்கெட் விடும் நிலைமைக்கு இந்தியா வளர்ந்து விட்டது. சூரிய மண்டலத்திற்கும் வெளியே ஆய்வுகள் விரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதெல்லாம் எங்கள் புராணத்திலேயே இருக்கு என்று பேசும் அம்பிகள் உருவாக்கிய பித்ரு லோகம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைப்பற்றி ஜோதிடர்களுக்கு பயமும் இல்லை, பக்தர்களுக்கு கவலையுமில்லை.

– வசந்தன்

சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330

13

ந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக தமிழ் சினிமா முதலாளிகளுக்கு ஜெயா அரசு கொடுத்திருக்கும் தொகை பத்து கோடி ரூபாய். இது போக பல்வேறு இடங்கள், மண்டபங்கள், பூங்காக்கள், மின்சாரம், அரசு விளம்பரம் என்ற வகையில் அரசு கொடுத்திருக்கும் உதவி இன்னும் அதிகம். பதிலுக்கு இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஜெயா டிவியில் காட்டுவத்தற்கு சினிமா முதலாளிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதன் வர்த்தகம், லாபம் தனி. ஆனால் தமிழக மக்கள் பணத்தில் இருந்து பத்து கோடி ரூபாயை கொடுக்கும் இந்த அரசு துப்புரவுத் தொழிலாளிகளை எப்படி நடத்துகிறது?

இந்திய சினிமாகையால் மலம் அள்ளுவது மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பெடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் பலரும் நோய் தாக்குதல் மூலம் விரைவிலோ அல்லது நச்சு வாயு தாக்கும் விபத்திலோ இறந்து போகிறார்கள். கையால் மலம் அள்ளும் பெண் தொழிலாளிகளில் 96 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்கிறது ஐ.எல்.ஓ அமைப்பின் ஆய்வு ஒன்று.  இந்திய அளவில் 1,18,474 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 11,896 பேர்.

ஐ.நா சபையானது கையால் மலம் அள்ளுவதை மனிதத் தன்மையற்ற செயல் என அறிவித்த பின் 1993-ல் இத்தகைய உலர் கழிவறைகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. இன்னமும் 7 லட்சம் உலர் கழிவறைகள் இந்தியாவில் மீந்துள்ளது. தமிழகத்தில் 53,000 வரை உள்ளது. ஏறக்குறைய இந்தியாவில் உள்ள 657 மாவட்டங்களில் 256-ல் உலர் கழிவறை முறை இன்னமும் நீடிக்கிறது. இந்தப் பெண் தொழிலாளிகளுக்கு முறையான ஊதியமோ, பணி வரைமுறையோ இதுவரை இல்லை. இளம் வயதிலேயே இப்பெண்கள் பெரும்பாலும் மரணத்தை தழுவுகின்றனர்.

பாதாள சாக்கடையில் அடைப்பெடுப்பதற்காக சாக்கடை குழிக்குள் இறங்கும் போது நச்சு வாயுக்கள் தாக்கி இறந்து போகும் இளவயது ஆண் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி ஆபத்தான வேலையில் மனிதர்களை ஈடுபடுத்துவதை எதிர்த்து நாராயணன் என்பவர் நீதிமன்றம் சென்று தடையும் பெற்றுள்ளார். பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் இத்தொழிலில் ஈடுபடுவதால், பெரும்பான்மையாக உள்ள பிற சாதியினர் இதனை ஒரு பிரச்சினையாகவே கருதுவதில்லை. மாறாக இதெல்லாம் அவர்கள் செய்தே ஆக வேண்டிய தொழில் என்றும் கருதுகிறார்கள்.

இப்போதும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமையகத்தில் ஒரு தேர்வு நடத்தி இந்த வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். அந்த தேர்வில் கழிவுநீர் நிரம்பிய கிணற்றுக்குள் வேலை கேட்டு வந்த மனிதனை கயிற்றால் கட்டி உள்ளே இறக்கி, கழிவுநீரில் மூழ்கிய பிறகு அவனால் எவ்வளவு நேரம் மூச்சுப் பிடித்து இருக்க முடிகிறது என்பதுதான் தேர்வு செய்யும் முறையாம். இப்படி கொடூரமான தேர்வுமுறையின் கீழ் தேர்வாகும் தொழிலாளிகள் அனைவரும் மாநகராட்சிக்கு தினக்கூலி அடிப்படையில்தான் பணியாற்றுகிறார்கள். வேலையின் தன்மைக்கேற்ப தினக்கூலி ரூ.150 முதல் 300 வரை நிர்ணயிக்கப்படுகிறது.

பாதாள சாக்கடை வந்த பிறகு ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைகளைத் தீர்க்க சென்னை மாநகரில் மட்டும் 86 ஜெட் எந்திரங்களும், 94 தூர்வாரும் எந்திரங்களும் இருப்பதாக ஜெயா அரசு சட்டமன்றத்தில் கூறியுள்ளது. ஆனால் ஒரு கோடி மக்கள் கொண்ட சென்னைக்கு இது போதுமானதல்ல. பெரும்பாலும் இந்த எந்திரங்கள் அருகருகே உள்ள 2 அல்லது 3 வார்டுகளுக்கு ஒன்றாக ஒதுக்கப்பட்டு இருப்பதால் கவுன்சிலர்களுக்குள் நடக்கும் போட்டிகளாலும், பகுதிவாழ் பெரிய மனிதர்களின் செல்வாக்கினாலும் சாதாரண மக்கள் குடியிருப்புகள்தான் பெரும்பாலும் கழிவுநீரில் மிதக்கின்றன.

பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பத்திற்கு அரசு எந்தவித நிவாரணத் தொகையையும் வழங்குவதில்லை. மாறாக எந்த வீட்டு உரிமையாளர் வேலைக்கு அழைத்தாரோ அவராக பார்த்து ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. சமீபத்தில் மடிப்பாக்கத்தில் உள்ள அடுக்ககம் ஒன்றின் சார்பாக பாதாள சாக்கடையில் இறங்கி இறந்து போன நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கு அடுக்கக குடியிருப்போர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஒன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கையால் வழங்கப்பட்டது. வங்கிக்கு போன காசோலை அடுக்கக வங்கிக் கணக்கில் பணமில்லை என அவரது விதவை மனைவி பஞ்சராணிக்கு திரும்பி வந்தது. இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் பத்து வயது மகனோடு அந்த தாய் போராடிக் கொண்டிருக்கிறாள்.

துப்புரவுத் தொழிலாளிகள்மாதம் ஒரு கதை இதுபோல சென்னையில் நடந்து கொண்டே இருக்கிறது. பல்லாவரம் தேவராஜ், முன்னா, அண்ணாநகர் தா.பி. சத்திரத்தை சேர்ந்த முனுசாமி மற்றும் அவரது தம்பி, சைதாப்பேட்டை மோகன், வெங்கடாச்சலம், விருகம்பாக்கம் பாஸ்கர் என இந்தப் பட்டியல் மிக நீண்டது. பிரதான சாலைகளில் நடக்கும் பாதாள சாக்கடை வேலைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடப்பதால் கணக்கில் வராத மரணங்களும் உண்டு.

சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளிலும் துப்புரவுத் தொழிலாளிகளின் நிலைமை இப்படித்தான் உள்ளது. அங்கு 299 தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளமே தரப்படவில்லையாம். சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியில் மண்டலங்கள் வாரியான டெண்டர் மூலம் துப்புரவு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தான் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இதுபோக தொகுப்பூதிய அடிப்படையிலும் பலர் மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளிகளாகப் பணியாற்றுகின்றனர். இத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பல துப்புரவுத் தொழிலாளிகள் பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகளை துப்புரவு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு தான் இப்போது ஆறு மாதமாக மாநகராட்சி சார்பில் சம்பளமே தரப்படவில்லை. இவ்வளவுக்கும் அவர்களது மாத சம்பளமே வெறும் ரூ.330 தான்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் நியமனம் செய்யப்பட்ட இவர்களுக்கு அப்போது தரப்பட்ட சம்பளம் ரூ 20. என்றைக்காவது ஒருநாள் தங்களது பணி நிரந்தரமாக்கப்படும் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆண்டுகளும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய அனைவருமே ஓய்வுபெற வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளனர். இதுபற்றி கேட்டதற்கு, சம்பள பாக்கியை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது மாநகராட்சி பள்ளியில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமானால் அரசு ஒதுக்கிய தொகை முதலில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் சேர்ந்து விடுமாம். அங்கிருந்துதான் பிரித்துக் கொடுப்பார்களாம். நிரந்தரமாக்க பேசி முடிவெடுப்போம் என்றும் கூறிவிட்டனர். தனியார்மயம் வந்த பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் அதிலும் குறிப்பாக துப்புரவுத் தொழிலாளிகளின் நிலைமை எவ்வளவு தூரம் மோசமாகி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கடந்த செப்டம்பர் 13 அன்று தமிழகமெங்கும் உள்ள கிராம ஊராட்சிகளில் 16 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க ஜெயா உத்திரவிட்டுள்ளார். அவர்களுக்கு நிர்ணயித்துள்ள ஊதியம் எவ்வளவு தெரியுமா ? தொகுப்பூதியமாக மாதமொன்றுக்கு ரூ 2 ஆயிரம் மற்றும் அகவிலைப்படியாக ரூ 40.

இதனால் அரசுக்கு ரூ 41.81 கோடி செலவு ஏற்படுமாம். தமிழகம் முழுக்க தூய்மையான கிராமங்களை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாம். மூவாயிரம் பேர் வரை மக்கள்தொகை இருப்பின் ஒருவரையும், பத்தாயிரம் வரை இருப்பின் இருவரையும், அதற்கு மேல் இருப்பின் மூவரையும் துப்புரவுத் தொழிலாளர்களாக நியமிப்பார்களாம். நாள் முழுக்க வேலை செய்ய வேண்டும். மாதம் முடிந்த பிறகு ரூ 2040-ஐ இவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாம். நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதன் கொடூரத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அரிசி ஒரு ரூபாய்க்கும், தண்ணீர் பாட்டில் பத்து ரூபாய்க்கும் தந்து விட்டாலே போதும் என்று ஜெயா ஓட்டுக்காக கணக்கிடலாம். ஆனால் காய்கறி, பருப்பு, எண்ணெய், வெங்காயம் என ஒரு குடும்பத்தின் அன்றாட செலவுக்கு வெறும் 70 ரூபாய் எந்த மூலைக்கு பத்தும். சமான்ய மக்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் நிரந்தரமில்லாத, அடிமாட்டு சம்பளத்துக்கு வேலையைத் தரும் ஜெயலலிதா அரசு இதே துப்புரவு வேலையை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு நாளை தாரை வார்க்கும்போது கோடி கோடியாய் பணத்தைக் கொட்டித் தருவதுடன் எத்தனை இலவசங்களை வாரி வழங்க இருக்கிறதோ?

எதிர்காலத்தில் அந்த பன்னாட்டு துப்புரவு கம்பெனிகளுக்கு வேலைக்குப் போனால் தொழிலாளிகளுக்கு ஓரளவு சம்பளம் கிடைக்கும், ஆனால் மனிதத் தன்மையற்ற முறையில் பிழிந்து எடுத்து விடுவான் பன்னாட்டு முதலாளி. முப்பது ஆண்டுகள் துப்புரவுத் தொழிலாளியாக இருக்க முடிந்தவருக்கு அங்கு போனால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள்தான். அதற்குள்ளாகவே தொழிலாளி சக்கையாக உறிஞ்சப்பட்டு விடுவான். தனியார்மயம் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு தரும் இதுபோன்ற எதிர்காலப் பரிசுகளுக்கு இப்போதைய எழுபது ரூபாய் சம்பளத்தின் மூலம் வாழக் கற்றுக்கொள்ளச் செய்வதன் மூலம் பயிற்சி தருகிறார் ஜெயா.

நமது கழிப்பறைகளையும் கழிவுகளையும் சுத்தம் செய்வதோடு இறந்தும் போகும் இந்த தொழிலாளிகள் பல பத்து ஆண்டுகளாக இத்தகைய அடிமாட்டு கூலியைத்தான் பெறுகிறார்கள். இந்த அநீதியை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மிடம் உள்ள அழுக்கு எத்தகையது?

– வசந்தன்.

மேலும் படிக்க

தாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி

12

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர்,
மதுரை – 20, தொடர்புக்கு 9865348163

18.09.2013

பத்திரிக்கை செய்தி

  • தூத்துக்குடி மாவட்ட தாது மணல் கொள்ளை தொடர்பான ககன்தீப்சிங் பேடி விசாரணைக் குழுவின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்!
  • நேர்மையான முறையில் விசாரணை நடக்க வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்னெட் நிறுவன உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் –  சொத்துக்களை முடக்கி அவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

தாது மணல் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையைப் பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடியைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் தாது மணல் எடுக்க இடைக்காலத் தடை விதித்துள்ளார். மேலும் இந்த ஐந்து மாவட்டங்களில் உள்ள 71 பெருங்கனிமக் குவாரிகளில் சிறப்புக் குழு ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆய்வு முடிவுக்குப் பின் பெருங்கனிமக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்துள்ளார்.

ஆனால் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு அளித்த அறிக்கையின் விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை. விசாரணைக் குழு பட்டா நிலங்களில் கூடுதலாக மணல் அள்ளியது தொடர்பாக மட்டும் விசாரித்ததா? புறம்போக்கு நிலங்கள், கடற்கரைகளில் மணல் அள்ளப்பட்டது தொடர்பாக விசாரித்ததா? மக்களிடம் ஏற்பட்டுள்ள புற்று நோ்ய், தோல் நோய், கடல் வாழ் உயிரினங்கள் – மீன்வளம் அழிவு, கடல் அரிப்பு உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள், தாது மணல் கொள்ளைக்கு கடந்த 25 ஆண்டுகளாக உடந்தையாக இருந்த அதிகாரிகள் – ஆட்சியாளர்களின் பங்கு, தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் எடுக்கப்பட்டது, மொத்த கார்னெட் மணல் இருப்பு – தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட மணல் ஆகியவை குறித்தெல்லாம் விசாரித்ததா என்ற விபரங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

கடந்த காலங்களில் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு அமைக்கப்பட்ட பல்வேறு விசாரணைக் குழுக்கள் அரசின் விருப்பத்தை நிறைவேற்றுவனவாகவே அமைந்திருந்தன என்ற நிலையில் கார்னெட் மணல் கொள்ளை தொடர்பான விசாரணை வெளிப்படையாக மக்களுக்குத் தெரியும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்று கோர தமிழக மக்களுக்கு உரிமையுள்ளது. ஆகவே ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

மேலும் கார்னெட் மணல் கொள்ளையின் முக்கிய குற்றவாளியான வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, கடந்த ஆட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. ஆகவே அதிமுக அரசுக்கும் – வைகுண்டராஜனுக்கும் நெருக்கமான உறவிருப்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறான சூழலில் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடத்தும் போது அதே மாவட்டத்தில் வசிக்கும் வைகுண்டராஜன் மணல் கொள்ளையின் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது. கடந்த 17.08.2013 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடற்பகுதிக்கு ஆய்வுக்காகச் சென்றபோது பி.எம்.சி நிறுவன ஊழியர்கள் கழிவுமணலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவரசமாக மூடிக் கொண்டிருந்தனர். மிக ஆழமாக தாது மணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் கழிவு மண்ணைக் கொட்டி மேடாக்கி கற்றாழையை நட்டு வைத்திருந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி சாட்சிகளாக உள்ள மக்களை மிரட்டி சாட்சியங்களை வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்னெட் முதலாளிகள் கலைக்கவும் வாய்ப்புள்ளது. கிரானைட் ஊழல் விசாரணையின் போது பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட இதர கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சாட்சிகளை மிரட்டிய பி.ஆர்.பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் மாவட்ட காவல்துறையால் புகார் முகாம் நடத்தப்பட்டதில் மக்கள் ஓரளவு அச்சமின்றி புகார் அளித்தனர். ஆனால், கார்னெட் முதலாளிகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் குண்டர் சாம்ராஜ்யம் நடத்தி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள்  பெரும் அச்சத்தில் உள்ளனர். ஆகவே மக்கள் அச்சமின்றி சாட்சியமளிக்கும் நிலையை அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும். அதற்கு உடனே வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்டென் நிறுவன உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும். கார்னெட் மணல் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் சொத்துக்களை முடக்க வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளையில் மாநில அரசின் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத் துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் முதல் அணுசக்தித் துறை, கனிமங்கள் மற்றும் சுங்கத்துறை,  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து ஆதாயம் அடைந்துள்ளனர். ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள்  பரிந்துரைக்கும் நேர்மையான அதிகாரிகள்  கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை அனைத்துக் கோணங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

சே வாஞ்சிநாதன்
வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

மோடியை விரட்டியடிப்போம் ! – திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம்

23

காவி பயங்கரவாதி, கொலைகார மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே !
கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி நரேந்திர மோடியை விரட்டியடிப்போம் !

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்
_____________________________________

சிறப்புரை : தோழர். மருதையன்,
மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.

_____________________________________

பிரச்சார இயக்கம் போஸ்டர்-1

_____________________________________

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
மாபெரும் பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி. அடுத்த பிரதமருக்கான தகுதியில் மோடியே முதலிடத்தில் இருப்பதாக காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மன்மோகன் சிங் – சோனியா தலைமையிலான காங்கிரஸ் கும்பல் வரலாறு காணாத ஊழலில் சிக்கித் தவிப்பதோடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை என கடும் பொருளாதார சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் பெருகி வரும் அதிருப்தியை மடைமாற்றி, மோடியை முன்னிறுத்துகின்றன ஆளும் வர்க்கங்கள்.

நரேந்திர மோடி மிகச்சிறந்த நிர்வாகி, குஜராத்தை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றவர், தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றவர்; உறுதியான முடிவுகள் எடுத்து துணிச்சலாக நடைமுறைப்படுத்தி வெற்றிகளைக் குவிக்கும் திறமைசாலி; ஊழலை ஒழித்த உத்தமர்; மொத்தத்தில் ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஸ் புருஷ்) என்று பொய்களை மாலையாக சூட்டி, புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இதயம் உள்ள மனிதர்கள் அனைவரின் இரத்தத்தை உறைய வைக்கும் கொடூர பச்சைப் படுகொலைகளை 2002-ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தி 3000-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை படுகொலை செய்தவர். அதற்கு சாட்சியாக இருந்த ஹரேன் பாண்டியா என்ற தனது சக அமைச்சரையே படுகொலை செய்தவர். இந்த மோடி தனி நபர் அல்ல. சாதி மத வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை மோத விட்டு, பார்ப்பன-இந்து மதவெறி பாசிசத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தலைவன். இந்துத்துவத்தை குஜராத்தில் சோதித்து ருசிகண்ட காட்டுப் பூனை. ஆகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களை திட்டமிட்டு புறக்கணித்து, டாடா, அம்பானி, அதானி, எஸ்.ஆர், ஃபோர்டு, மாருதி என கார்ப்பரேட் முதலைகளுக்கு குஜராத் வளங்களை தாரை வார்த்தது தான் மோடி உருவாக்கிய வளர்ச்சி. அதனால் மேட்டுக்குடி வர்க்கமும், கார்ப்பரேட் முதலாளிகளும் மோடியை உச்சி முகர்ந்து கொண்டாடுகின்றனர். தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் மோடி இங்கே மாருதி சுசுகி தொழிலாளர்கள் தம் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, ஜப்பானுக்கு நேரில் சென்று எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தார். 4.5 கோடி சில்லறை வணிகர்களை அழிக்க வரும் வால்மார்ட் பற்றி இன்று வரை மோடி வாயைத் திறக்கவில்லை. தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தன் முகமூடிகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து வாங்கி பயன்படுத்திய இந்த யோக்ய சிகாமணி தான், சீன ஊடுருவலை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என சவடால் அடிக்கிறார்.

நாடு முழுவதும் அண்மை ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக நடத்திய ஊழல்களில் காங்கிரசின் நிலக்கரி, அலைக்கற்றை ஊழல்கள் முதல் பாஜக-வின் கர்நாடக ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது கொள்ளை வரை அனைத்துமே தனியார்மயத்தின் பெயரால் முதலாளிகள் கொள்ளையடித்த ஊழல்கள் தான். இந்த தனியார்மய கொள்கையில் காங்கிரசுக்கும பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை என்பதோடு அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க தனியாக ஒரு துறையையே ஏற்படுத்தியது வாஜ்பாயின் பாஜக அரசுதான். சுமார் 42 லட்சம் ஏக்கர் அரசு நிலம் பல்வேறு காரணங்களுக்காக டாடா, அம்பானி, எஸ்.ஆர், மிட்டல், அதானி, அமெரிக்க மெக்டோனால் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. பருத்தி, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகிய குஜராத்தின் முக்கிய விவசாய உற்பத்தி கார்ப்பரேட் முதலாளிகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 152 கிராமங்களைப் பிடுங்கி பல்லாயிரம் ஏக்கர் வளமான விலை நிளங்களைப் பறித்து (64 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் தனியார் அணு மின்நிலையத்திற்கு) தாரை வார்க்கப்பட்டுள்ளன.

ஊழல் கறை படியாத உத்தமரான மோடி, ரிலையன்ஸ் குழுமத்திற்கு எரிவாயு திட்டத்தில் காட்டியுள்ள சலுகைகள் அலைக்கற்றை ஊழலை விட முகப்பெரிய ஊழலாகும். சிங்கூரிலிருந்து விரட்டப்பட்ட டாடா நானோ தொழிற்சாலைக்கு ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற குத்தகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் மானியமாக மட்டும் 35 ஆயிரம் கோடி வழங்கினார். குஜராத் அரசிடமிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரித்த முதலாளிகள் பலர் தொழில் தொடங்காமல் வீட்டு மனைகளாக்கி விற்று கொள்ளைடித்துள்ளனர். 56 மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பறித்து முந்திரா என்ற தனியார் முதலாளிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேருக்கு வாழ்வளித்த வெங்காய சாகுபடி நிலத்தைப் பறித்து நிர்மா சிமெண்ட் கம்பெனிக்கு கொடுத்ததும் மோடி தான். ஆனால் வேலை கிடைத்ததோ வெறும் 416 பேருக்கு மட்டும் தான். குஜராத்தின் 52 ஆண்டு கால வரலாற்றில், மோடி ஆட்சியில் தான் அரசு சொத்துக்கள் அதிகம் சூறையாடப்பட்டது என்பதோடு மிகப்பெரிய ஊழல் ஆட்சியும் இது தான் என்பதை பல்வேறு ஆய்வுகளும் தணிக்கை அறிக்கைகளும் அம்பலப்படுத்தியுள்ளன. 2011-ம் ஆண்டு மட்டும் 17 ஊழல்களை தலைமை தணிக்கைத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். வாழ்வாதார அழிப்பு, கார்ப்பரேட் சூறையாடல், ஊழல் இவற்றை தான் மாபெரும் வளர்ச்சி, நாட்டிற்கே முன்மாதிரி என்று கூசாமல் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இருள் கவ்விக் கிடக்கும் குஜராத்

எங்கள் மாநிலத்தில் விவசாயிகள் காரில் செல்லும் அளவிற்கு வசதியாக வாழ்கிறார்கள் என்று மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார் மோடி. ஆனால், 2003 முதல் 2012 முடிய 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையை பதிவு செய்ய வேண்டாம் என மோடி அரசு உத்தரவிட்டிருப்பதாக போலீசு அதிகாரியே அம்பலப்படுத்துகிறார். சுமார் 85 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி நாசமான போது சல்லிக்காசு கூட நிவாரணம் வழங்காமல் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்தவர் தான் மோடி. மின் உற்பத்தியில் உபரி எனப் பீற்றிக் கொள்ளும் மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு 10 மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை.

• மாநில மொத்த உற்பத்தி (SGDP) அளவில் குஜராத் 8-வது இடத்தில் இருக்கிறது.
• வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையில் 18-வது இடத்தில் (அதாவது வறுமை ஒழிப்பில்) உள்ளது குஜராத். பின்தங்கிய ஒடிசா, குஜராத்தை விட பல படி மேலே உள்ளது.
• பெண் சிசுக்கொலை இன்னும் தொடர்கிறது. ஆண்-பெண் விகிதம் 1000-க்கு 918 என்ற அளவில் 18-வது இடத்தில் உள்ளது.
• 44% பேர் மட்டுமே காங்கிரீட் கூரையில் வாழ்கின்றனர். பிறர் மோசமான நிலையில் வாழ்கின்றனர்.
• கல்வியில் மிகப் பின்தங்கிய நிலையில் 15-வது இடத்தில் உள்ளது குஜராத்.
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்குவதில் 7-வது இடத்தில் உள்ளது. அதாவது 100 நாட்களுக்கு பதில் 34 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
• குழந்தை மரணத்தைத் தடுப்பதில் 18-வது இடத்திலும், மகப்பேறு கால மரணத்தைத் தடுப்பதில் 5-வது இடத்திலும் இருக்கிறது குஜராத்.
• 50% குழந்தைகள் சத்தான உணவு இன்றியும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 65% பேர் சத்துணவு இன்றியும் வாழ்கின்றனர்.
• பெண்களில் பாதி பேர் ரத்த சோகை கொண்டவர்கள். இது பற்றி கேட்டபோது, குஜராத் பெண்கள் அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி உணவைக் குறைத்து சாப்பிடுவதால் தான் பிரச்சினை என்று மோசடி வாதத்தை முன்வைத்தார் மோடி.
• மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவது முற்றிலும் நின்று போய் விட்டது.
• தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 4-ல் 3 பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று.
• சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்க்கை நிலையில் பீகார் முசுலீமை விட கீழ் நிலையிலேயே உள்ளனர்.
• கிராமங்களில் 16% பேருக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய கடனாளி மாநிலமும் குஜராத்-தான்.
• சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள 88 இந்திய நகரங்களில் 8 குஜராத்தில் உள்ளன.

இதுதான் மோடி நிர்வாகத்தின் யோக்யதை. ‘மோடி நடத்துவது ஆட்சி அல்ல, மளிகைக் கடை; இங்கு லாபம் மட்டுமே வளர்ச்சியின் அளவுகோல்’ என்றார் ஒருவர். இது தான் உண்மை நிலை. ஆர்.எஸ்.எஸ் கும்பல் 2002-ல் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு மூலகர்த்தா மோடி தான் என சஞ்சீவ் பட் போன்ற போலீசு அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். படுகொலை உத்திரவுகளை நிறைவேற்றிய போலீசு அதிகாரி வன்சாரா நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருக்க வேண்டியவர் அல்ல, சபர்மதி சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரும் மோடியை உத்தமர் என்றும், அவர் தான் நாட்டை காக்கக் கூடிய வல்லமை பெற்றவர் என்றும் ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் ஒரே குரலில் பேசக் காரணம் குஜராத் மக்களை ஒடுக்கியது போல, இந்திய மக்களை அனைவரையும் ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான தடைகளை நீக்குவார் என்பதே. மோடியும், ஆர்.எஸ்.எஸ்-ம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானவர்கள் தான். குஜராத்தில் முதலாளிகளின் லாபம் உயரும் அதே வேகத்தில் தொழிலாளிகளின் ஊதியம் வீழ்ச்சி அடைகிறது என்பதே உண்மையான நிலவரம்.

தமிழகத்தில் மோடியின் முகமூடியை அணிந்து வளர்ச்சி, வல்லரசு வாய்ச் சவடாலுடன் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை வீழ்த்த வேண்டியது இன்றை அவசர கடமையாகும். திராவிட இயக்கத்தை விமர்சிப்பது என்னும் பெயரில் தந்தை பெரியார் உருவாக்கிய மதச்சார்பற்ற பண்பாட்டை சீர்குலைக்கவும், கம்யூனிச எதிர்ப்பை நயவஞ்சகமாய் முன்னெடுக்க இனவாதிகளும், முதலாளிகளும் பாஜக பின்னால் அணிவகுக்கும் அபாயகரமான சூழலில் உழைக்கும் மக்களாகிய நாம் ஓரணியில் திரள்வோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கும்பலை வீழ்த்துவதன் மூலம் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க அணி திரள்வோம். வாரீர்.

_________________________________________________________________________

பிரச்சார இயக்கம் போஸ்டர்-2

___________________________________________________________________________

பிரச்சார இயக்கம் போஸ்டர்-3___________________________________________________________________________

 

மின்சாரத்தை சேமிக்க முடியுமா ?

5

ளர்ந்து வரும் மின்னாற்றல் தேவையை ஈடு கட்டவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி போன்ற படிம எரி பொருட்களுக்கும் (Fossil Fuels) கதிர்வீச்சு அபாயம் நிறைந்த அணுவுலைகளுக்கும் மாற்றாகவும் மரபுசாரா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை கொண்டு மின்னாற்றல் உற்பத்திக்கு உலகின் பலநாடுகள் மாற முயன்று வருகின்றன.

மின்னாற்றலின் தேவையும் பயன்பாடும், உற்பத்தியும் ஆண்டு முழுவதும் ஒரே அளவாக இருப்பதில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் மழை, குளிர் காலத்தில் மின்தேவை குறைவாகவும், கோடைகாலத்தில் மின்தேவை அதிகமாகவும் இருப்பதோடு, உற்பத்தியும் கூட காலநிலையைப் பொறுத்து மாறுபடும். ஆனால், புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலங்கள் குறிப்பாக காற்று ஆற்றலும் சூரிய ஆற்றலும் ஒட்டுமொத்த உலகின் மின்தேவையையும் ஈடு செய்யுமளவு கிடைக்கப் பெற்றாலும் அவற்றின் நிலையற்ற தன்மையால் மின்தேவைக்கு முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பியிருக்க முடிவதில்லை. அதாவது காற்றாலை, சூரிய ஆற்றல் மின்சாரம் ஆண்டு முழுவதும் ஒரே சீராக கிடைப்பதில்லை என்பதால் அவற்றை மின் விநியோக அமைப்புடன் நேரடியாக இணைக்கமுடிவதில்லை.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை கொண்டு மின்னாற்றல் தேவையை ஈடுகட்டவும், நிலையற்ற தேவை-பயன்பாட்டை சமன் செய்யவும், அதாவது தேவையைவிட அதிகமாக உற்பத்தியாகும் மின்னாற்றலை சேமித்து, பின்னர் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ள வீடு, அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இன்வெர்ட்டர் போன்ற மின்கல (Battery) அமைப்பு தேவைப்படுகிறது.

fuel-cell-cartoonஉதாரணமாக தமிழகத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் அதிகமாக கிடைக்கும் காலத்தில் மின்வெட்டே இல்லை. ஆனால் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்க சிறப்பான தொழில் நுட்பங்கள் இல்லையென்பதால் அதிகமான காற்றாலைகளை நிறுவ முடியவில்லை.  உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பேட்டரி போன்ற அமைப்பில் சேமித்து வைத்துக் கொண்டு காற்று வீசாத கோடை காலத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால் வருடம் முழுவதும் மின்வெட்டே இருக்காது.

இன்வெர்ட்டரில் மின்வாரியத்திலிருந்து மின்சாரம் கிடைக்கும்போது பேட்டரியினுள் மின்சாரம் பாய்ந்து அதனுள் வேதிவினையை தூண்டி அதன் உட்பொருட்களை வேதி மாற்றமடையச் செய்கிறது. அதாவது மின்னாற்றல் வேதிஆற்றலாக மாற்றி சேமிக்கப்படுகிறது. இது தான் மின்னேற்றம் எனப்படுகிறது. மின்தடையின் போது வேதி மாற்றமடைந்த உட்பொருட்கள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் போது மின்னாற்றல் வெளியாகிறது. இதே செயல் முறைதான் கைபேசி பேட்டரியிலும் நிகழ்கிறது.

ஒரு சாதாரண கைபேசியின் பேட்டரியில் சராசரியாக 0.003 யூனிட் மின்னாற்றலை மட்டுமே சேமிக்க முடியும். நவீன காற்றாலைகளில் ஒரு சுழலியின் மின்திறன் மட்டுமே சராசரியாக 2 மெகா வாட்டாகும். காற்றாலை, சூரியசக்தி போன்றவற்றின் மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரியின் செயல்முறை இன்வெர்ட்டர், கைபேசி பேட்டரிகளின் செயல்முறையை ஒத்ததுதான் என்றாலும், இதற்கென பயன்படுத்தப்படும் மின்கலங்கள் சாதாரண மின்கலங்களை விட அதிக செயல்திறனுடையதாகவும், அதிக ஆற்றலுடையதாகவும் இருக்க வேண்டும். இப்போதைய மின்கலன் நுட்பத்தின்படி இத்தகைய அதிக ஆற்றல் மின்கலன்கள் அளவில் மிகப் பெரியவையாகவும், அதிக செலவு பிடிக்கக் கூடியவையாக உள்ளன.

சாதாரண மின்கலத்தின் கொள்ளளவும், மின்முனைகளின் பண்பியல்புகளும் அது சேமிக்கும் மின்னாற்றல் அளவையும், மின்சாரத்தின் அளவையும் தீர்மானிக்கின்றன. இதனால் அதிக மின்னாற்றலை சேமிக்க, அதிக கொள்ளளவு, அளவில் பெரிய மின்முனைகளைக் கொண்ட மின்கலம் தேவைப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதுடன் மின்முனைகள் பெரிதாக பெரிதாக அது மின்கலத்தின் செயல்திறனையும் குறைத்து விடும். மேலும் ஒவ்வொரு முறை மின்னேற்றம், மின்னிறக்கம் செய்யும் போதும் நிகழும் வேதிமாற்றங்களால் மின்பகுபொருள், மின்முனைகளின் பண்பியல்புகளும் மாற்றமடைகின்றன. இவற்றால் மின்கலம் குறிப்பிட்ட கால பயன்பாட்டிற்கு பின் காலாவதியாகிவிடுகிறது.

இப்பிரச்சனைக்கு தீர்வாக அமெரிக்காவின் மாசூசிட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (எம்.ஐ.டி) ஆய்வாளர்கள் ஹைட்ரஜன்-ப்ரோமைன் மீளாக்கும் திறனுள்ள எரிபொருள் செல்லை (Hydrogen-Bromine Fuel Cell) வடிவமைத்துள்ளனர். இந்த செல்லில் ஒரு சதுர சென்டிமீட்டரிலேயே 0.795 வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இது நடைமுறையில் இருக்கும் மற்ற மின்கலங்களை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

எரிபொருள் செல் என்பது எரிபொருளும், ஆக்சிஜனேற்றியும் வினைபுரியும், வேதிஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடிய அமைப்பாகும். இந்த அமைப்பிற்கு எரிபொருளும், ஆக்சிஜனேற்றியும் கிடைக்கப் பெறும் வரை மின்னாற்றலை உற்பத்தி செய்யும். மேலும், இவ்வமைப்பில் நடக்கும் வேதிவினை மின்முனைகளையோ அல்லது மற்ற சாதனங்களின் பண்பியல்புகளையோ பாதிப்பதில்லை. சான்றாக ஹைட்ரஜன்-ஆக்சிஜன் எரிபொருள் செல்லில், ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் வினையாற்றி, மின்னாற்றலும், வெப்பமும், தண்ணீரும் உண்டாகின்றன. இந்த எரிபொருள் செல்லை மீளாக்க செல்லாக (Regenerative Cell) மாற்றியமைத்தால், அதாவது மின்சாரம் மிகை உற்பத்தியாகும் போது தண்ணீரை ஆக்சிஜனாகவும், ஹைட்ரஜனாகவும் மின்பகுப்பு செய்து சேமித்து, குறைவான உற்பத்தி நாட்களில் அவற்றையே எரிபொருட்களாக பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்ய முடியும். இவ்வமைப்பில் பிரித்தெடுக்கப்படும் எரிபொருட்கள் தனி கலன்களில் சேமிக்கப்படும்.

fuel_cellஆனால், இம்மீளாக்க செயல்பாடு ஹைட்ரஜன்-ஆக்சிஜனில் மந்தத் தன்மை கொண்டதாகவும், குறைந்த செயல் திறனுடையதாகவும் உள்ளதால் மாற்று எரிபொருள் கொண்ட மின்கலங்களுக்கான ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் ப்ரோமின் எளிதாக ஹைட்ரஜனுடன் வினையாற்றக் கூடியதென்பதாலும், அதன் உற்பத்திச் செலவு குறைவென்பதாலும், ஹைட்ரஜன்-ப்ரோமின் எரிபொருளை கொண்ட ஆய்வு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆயினும், இம்மின்கலத்தினுள் ஹைட்ரஜனையும் ப்ரோமினையும் பிரிக்கும் மெல்லிய சவ்வு பயன்படுத்தப்பட்டு வந்தது. இச்சவ்வின் தயாரிப்பு செலவு அதிகமென்பதாலும், மின்கலத்தினுள் நடக்கும் வேதிமாற்றத்தால் உருவாகும் ஹைட்ரோ புரோமிக் அமிலம் இச்சவ்வினை அரித்து விடுவதும் இதன் இடர்ப்பாடுகள், குறைகளாகும்.

இக்குறையினை நிவர்த்தி செய்ய மாசூசிட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (எம்.ஐ.டி) புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. குறைவேகத்தில், இரு நீர்மங்களை ஒரு குழாயிலுள் செலுத்தும் போது அவை ஒன்றோடொன்று கலக்காமல் அடுக்கடுக்காக பாயும் என்ற திரவ இயக்கவியலின் விதிகளின் துணைகொண்டு சவ்வு இல்லாத ஹைட்ரஜன்-ப்ரோமின் பேட்டரியை வடிவமைத்து செய்முறையில் நிருபித்துள்ளனர்.

மேலும் மற்ற மரபு மின்கலங்களை ஒப்பிடும் போது இவற்றால் சுற்றுச் சூழலுக்கு தீங்கும் இல்லை. தற்போதைய திட்ட மதிப்பீட்டின் படி ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிக்க 100 டாலர் (ரூ 6,500) வரை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது மற்ற மின்கல ஆய்வுகளை விட பெருமளவு குறைவு என்பதுடன், இந்த ஹைட்ரஜன் – புரோமின் பேட்டரி காற்றாலை, சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி திட்டங்கள் மேலதிகமாக வளர உதவுமென்றும், தொழில் நுட்பம் வளர்ந்து நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தால் செலவு மேலும் குறையுமென்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரத்தை சேமிக்க பாலிசல்பைடு புரோமைடு, வனேடியம் ரிடாக்ஸ், ஜிங்க்-புரோமின், ஜிங்க்-சீரியம் போன்ற பல்வேறு எரிபொருட்களை கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட பேட்டரி ஆய்வுத் திட்டங்கள் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் நடந்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் தொழில்நுட்பங்களுக்கு பிறநாடுகளை சார்ந்திருப்பதாலும், வெற்று தேசிய பெருமிதத்திற்காக மட்டுமே ஆய்வு-ஆராய்ச்சி நிறுவனங்கள் பராமரிக்கப்படுவதாலும், எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இந்த அரசு 30-க்கும் மேற்பட்ட கதிர்வீச்சு அபாயம் நிறைந்த அணு உலைகளை நாடு முழுவதும் நிறுவும் தீவிரத்துடன் உள்ளது.

பிற நாடுகளிடமிருந்து இத்தொழில் நுட்பத்தை பெற்று கொள்வதன் மூலம் நமது மின்வெட்டை சரிசெய்ய முடிமென்று பலரும் நம்பலாம். ஆனால், ஏற்கனவே தனியார் மின்னுற்பத்திக்கு அனுமதியளிக்கப்பட்டு அவர்கள் நிர்ணயிக்கும் அதிக விலையில் கொள்முதல் செய்துவருவதில் மின்கட்டணம் பெருமளவு உயர்ந்துள்ளதோடு அரசுக்கு பெருமிழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. இந்நிலையில், நவீன மின்னுற்பத்தி, சேமிப்பு தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு வந்தாலும் கூட அவை தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் சேமிப்பு மின்சாரத்திற்கு மேலதிக விலைவைத்து கொள்ளை லாபமீட்டுவதற்கே பயன்படும்.

லாபத்தை அடிப்படையாக கொண்ட சமூக பொருளாதார அமைப்பில் மிகை மின்னுற்பத்தியை சேமிப்பதற்கான தொழில் நுட்ப சாதனைகள் மட்டும் மக்கள் பிரச்சனைகளை தீர்த்து விடப் போவதில்லை. மக்கள் நலன் சார்ந்ததான சமூக அமைப்பை நிறுவ போராடுவதன் மூலமே எரிசக்தி தேவைகளுக்கு சரியான, நிரந்தர த் தீர்வு காணமுடியும்.

– மார்ட்டின்

மேலும் படிக்க

கொலை வெறி சூழ ஐங்கரன் பவனி – ஒரு அனுபவம்

12

காவி ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப் பொட்டு கழுத்தில் காவி துண்டு.. கண்கள் சிவக்க உடலெல்லாம் வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானை முகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.

பிள்ளையாரோடு அமர்ந்திருக்கிற இவர்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அந்த ஆட்டோக்களிலேயே புகை பிடிப்பதும், ஒரு கட்டிங் போடுவதுமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு MOB MENTALITY யோடு வெறித்தனமாக இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

pillayarஒவ்வொரு ஆண்டும் கணபதியை கடலில் கரைக்கிற இந்த சடங்கினை தங்களுடைய ஜபர்தஸ்த்தை ஏரியாவில் பலத்தினை காட்டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டு தோறும் நடத்துகிறார்கள். இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முண்ணனி மாதிரியான இந்துமத முன்னேற்ற அமைப்புகளின் ஆதரவும் பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. அது போதாதென்று எந்த பகுதியில் பிள்ளையார் உட்காரப் போகிறாரோ அப்பகுதி சில்லரை வியாபாரிகளிடம் உருட்டி மிரட்டியும் வசூல் வேட்டை நடத்துவதில் தவறுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏரியாவில் தங்கள் பலமென்ன என்பதை காட்டுவதற்கு விநாயகர் ஒருகருவியாக இருக்கிறார். விரும்பியோ விரும்பாமலோ அவரும் இந்த காவி நாயகர்களோடு ஒற்றை தந்தத்துடன் பயணிக்கிறார். கடல் வரை பயணித்து கரைந்தும் போகிறார்.

இந்தப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு! ஞாயிறன்று காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப்படும் டெம்போ ஆட்டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும் கடற்கரைக்கு பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஏய் ஏய்.. ஆய் ஊய் என்கிற சப்தங்கள் ஒலிக்க அவர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். பிள்ளையார் ஆட்டோவின் மூலையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதினைந்து வயது இருக்கலாம். அவள் அந்த டெம்போவை ஒட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக்கிறாள்… ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் முதலில் விசிலடித்தனர்… பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எரிந்தனர். அதற்கு பிறகு அதில் ஒரு பொறுக்கி பக்தன் தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின் மேல் பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்த பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான்.

அந்தப் பெண் கோபத்தில் ஏதோ பதிலுக்கு ஏதோ திட்ட ஆரம்பிக்க.. ஆட்டோவை அந்த பெண் மேல் ஏற்றுவதைப் போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ டிரைவர். உதயம் தியேட்டர் அருகே நூறடி ரோடு திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப்பது போல ஒடிக்க.. ஸ்கூட்டி பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பஸ் ஸ்டான்ட் அருகே தடுமாறி விழுந்தாள். பெரிய காயமில்லை.. விழுந்ததும் அருகில் பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்து விட்டனர்.

ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள்ளையார் வண்டிகளின் நீண்ட வரிசையில் இணைந்தது.

இவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்ட வரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல்லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர்களைப் பார்க்க ஒரு நீண்ட சண்டைக்காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. மிகச் சிறிய தூண்டுதலிலும் கொலையோ கற்பழிப்பையோ கூட அரங்கேற்றுகிற ஆக்ரோஷத்துடன் இருந்தனர். காவல்துறை நண்பர்களும் கூட இக்கூட்டத்தினரிடம் அடக்கியே வாசிக்கின்றனர்.

இந்த காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும் இவர்கள் எல்லோருமே மூக்கு முட்ட குடிப்பவர்களாக சின்ன தூண்டுதலிலும் ஆகப்பெரிய வன்முறையை நிகழ்த்தி விடுகிறவர்களாக இருப்பதும் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வலுப்படுத்துகிறது.

நேற்று சந்தித்த அந்த டெம்போஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின் மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகிர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத்திலும் பயமுறுத்தக்கூடியது… சாகும்வரை மறக்கவே முடியாதது.

நன்றி : அதிஷா

கிரிக்கெட் கொள்ளை தேர்தலில் காங், பாஜக, பவார் கூட்டணி !

0

காராஷ்டிரா முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான், மாஸ்கான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதி பதவியை ஏற்க முன் வந்திருக்கிறார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவர் முதலான பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. மும்பை கிரிக்கெட் அசோசியேஷனின் விதிகளின் படி அதன் தேர்தலில் போட்டியிட 330 கிளை கிளப்புகளில் ஒன்றின் பிரதிநிதியாக நியமிக்கப்பட வேண்டும்.

பிருத்விராஜ் சவான்
மகாராஷ்டிரா முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான்

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக வருபவர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு குறி வைக்க முடியும் என்பதால் மாஸ்கான் கிரிக்கெட் சங்கம், சவானுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருக்கும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் பிடி தளருவதால் அடுத்த வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்று முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

மும்பை கிரிக்கெட் சங்கத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெருச்சாளியும் மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவார் தலைமை பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். பாஜகவின் கோபிநாத் முண்டே, ஸ்டைலோ கிரிக்கெட்டர் அணியின் பிரதிநிதித்துவத்தை விலைக்கு வாங்கி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் அமைச்சராக இருக்கும் சரத் பவாரை எதிர்த்து முறியடிக்க பாஜகவின் கோபிநாத் முண்டேவுடன் காங்கிரசின் பிருத்விராஜ் சவான் கூட்டணி சேரவிருக்கிறார்.

சவானுக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம் என்றும் கிரிக்கெட்டுக்கு சேவை செய்யவே அவர் மாஸ்கான் சங்கத்தின் பிரதிநிதியாக மும்பை கிரிக்கெட் சங்கத்தில் பங்கேற்க இருக்கிறார் என்றும் மாஸ்கான் கிரிக்கெட் சங்கம் மற்றும் ஸ்டைலோ கிரிக்கெட் சங்கம் இரண்டிற்கும் அதிகாரபூர்வ செயலாளரான (ஒப்பமிடுபவர்) ஷா ஆலம் ஷேக் தெரிவித்திருக்கிறார். தன் கட்டுப்பாட்டில் இருக்கும் மாஸ்கான், ஸ்டைலோ சங்கங்கள் மூலம் ஆலம் உருவாக்கியிருக்கும் வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஏற்பட்டிருப்பது போலவே, எதிர்த் தரப்பில் சரத் பவார் பாஜகவின் மும்பை தலைவர் ஆஷிஷ் ஷேலருடன் கூட்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

மாஸ்கான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை பிடித்தவர்களில் இப்போதைய முதல்வர் சவானுக்கு முன்னோடி, காலம் சென்ற முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக்.  சென்ற மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தேர்தலில் சரத்பவாரின்  வேட்புமனு முகவரி குளறுபடி காரணமாக நிராகரிக்கப்பட்டதால் விலாஸ் ராவ் தேஷ்முக்கை ஆதரித்து தலைவர் பதவியில் அமர்த்தினார் சரத் பவார். இப்போது அதே கிரிக்கெட் கிளப்பின் பிரதிநிதியாக சரத்பவாரை எதிர்க்கத் திட்டமிடுகிறார் சவான்.

சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெருச்சாளியும் மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவார்

தேசிய அளவில் எதிரிக் கட்சிகளாக அடித்துக் கொள்ளும் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் யோக்கியதையை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். கிரிக்கெட் வாரியம் முதலான கணிசமான ஆட்டையை போடும் வாய்ப்புள்ள இடங்களில் தங்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து கூட்டணி அமைத்துக் கொள்வது இவர்களின் வாடிக்கை. நிலக்கரி வயல், தொலைத்தொடர்பு என்று பல துறைகளிலும் இவர்களது கூட்டணி இருப்பதைப் போன்று கிரிக்கெட்டிலும் உள்ளது.

பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கடந்த சில ஆண்டுகளில் ஒரு கிளப்புக்கு ரூ 1 கோடி முதல் ரூ 2.5 கோடி வரை கொடுத்து மும்பை கிரிக்கெட் அசோசியேஷனின் கிளை கிளப்புகளை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். ஒரு உள்ளூர் கிரிக்கெட் கிளப் பிரதிநிதி பதவிக்கே கோடிகளில் செலவழித்து இந்த முதலைகள் இடம் பிடிக்கின்றன என்றால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் புரளும் பணத்தின் அளவை புரிந்து கொள்ளலாம். எனில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதாக மாயையை உருவாக்கும் “சச்சின்” போன்ற படங்களின் அபத்தத்தை என்னவென்பது?

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி எம்எல்ஏ நிதின் சர்தேசாய் தாதரைச் சேர்ந்த பார்சி சோராஷ்ட்ரிய சங்கத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிவசேனாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷியும், சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாயும் கிரிக்கெட் சங்க  பிரதிநிதித்துவத்தை வாங்கியிருக்கும் அரசியல் தலைவர்கள்.

ஸ்ரீசாந்த்
வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த்

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே, உத்தவ் தாக்கரேயின் தனிச் செயலர் மிலிந்த் நார்வேகர், சிவசேனாவின் ராஜ்யசபை உறுப்பினர் அனில் தேசாய், மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் ஜிதேந்திர அவ்கத் மற்றும் இன்னொரு அமைச்சர் சச்சின் அஹிர் ஆகியோரும் பல்வேறு கிளப்புகளின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்று பிற மாநிலங்களில் பாஜக ராஜ்யசபைத் தலைவர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சுக்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, பீகாரின் ராஷ்ட்ரீய ஜனதா தள் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரும் மாநில கிரிக்கெட் சங்க பதவிகளை பிடித்திருக்கிறார்கள்.

இப்படி பல கோடி ரூபாய்கள் கைமாறும் கீழ் மட்ட கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர்களைக் கொண்டதுதான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

அந்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்ட புரோக்கர்களிடம் காசு வாங்கிக் கொண்டு விளையாடியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த கேரளாவின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோரை வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்திருக்கிறது. அதே ஐபிஎல் போட்டியில் சூதாடியதாக கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனின் மாமனாரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்தக்காரருமான இந்தியா சிமென்ட்ஸ் முதலாளி சீனிவாசன் மேற்பார்வையில்தான் இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது என்பதிலிருந்து இந்திய கிரிக்கெட்டின் லட்சணத்தை புரிந்து கொள்ளலாம்.

கிரிக்கெட் என்பது வெறும் மட்டை, பந்து, விக்கெட் மட்டுமல்ல. பில்லியன் ரூபாய்களில் புரளும் ஒரு கொள்ளை என்பது இந்த கிரிக்கெட் தேர்தல்களை வைத்து புரிந்து கொள்ளலாம். அந்தக் கொள்ளையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதம் இல்லாமல் இவர்கள் நடத்தும் கூட்டணியையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

இண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி

18

“நரேந்திர மோடியை ஏன் நிராகரிக்க வேண்டும்?” – இது விடை கூற முடியாத கடினமான கேள்வி அல்ல. 2002-ம் ஆண்டில், குஜராத்தில் மோடி நடத்திய கொலை வெறியாட்டமும், அதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் எதுவுமே நடக்காதது போல நரேந்திர மோடி மறுபடியும் அரசியல் அரங்கில் தோன்றி, கார்ப்பரேட் ஊடகங்கள் மற்றும் சங்க பரிவாரங்களால் இன்று கதாநாயகனாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.

ஞாநி
ஞாநி

இந்த ஆபத்தான இந்து மத வெறியனை பிரதமர் வேட்பாளராக பொருத்தமாகத்தான் அறிவித்திருக்கிறது, இந்துமதவெறி பாசிசத்தை சித்தாந்தமாக கொண்ட பாரதிய ஜனதா கட்சி. ஒருவேளை மோடி என்ற ஆபத்தான மதவெறியன், இந்த நாட்டின் பிரதமரானால் நாடு என்னவாகும்? இந்த அச்சத்தில் இருந்துதான் நரேந்திர மோடிக்கான எதிர்ப்புகள் பிறக்கின்றன. நரேந்திர மோடியை நிராகரிக்கக் கோருவோரின் குரல்களும் இந்த பின்னணியில் இருந்தே ஒலிக்கின்றன.

ஆனால் பத்திரிகையாளர் ஞாநி இதில் இருந்து மாறுபடுகிறார். அவரும் மோடியை நிராகரிக்கத்தான் சொல்கிறார். ஆனால் பலவீனமான குரலில். “தி இந்து” தமிழ் நாளிதழில் “பிரதமர் வேட்பாளர் என்று உண்டா? என்ற தலைப்பில் பத்தி எழுதியிருக்கிறார் ஞாநி. அதில் அவர் சொல்வது… “இந்திய ஜனநாயகத்தின்படி பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. மக்கள், கட்சி அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யவே வாக்களிக்கின்றனர். அப்படி, அதிக உறுப்பினர்களை பெறும் கட்சி, தங்களுக்குள் ஒருவரை பிரதமராக முன்னிருத்தும். அவரை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பார். இதில் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க சட்டத்தில் இடமில்லை” என்கிறார் ஞாநி. ஆனாலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சி வாஜ்பேயி, அத்வானி, நரேந்திர மோடி ஆகியோரை பிரதமர் வேட்பாளர்களாக முன்கூட்டியே அறிவித்து வருகிறது என்றும், இது கட்சியல்லாமல் தனி நபரை முன்னிருத்தி வாக்குக் கோரும் அமெரிக்காவின் ஆபத்தான முன்மாதிரி என்றும் எச்சரிக்கிறார் ஞாநி.

படிப்பதற்கு வேடிக்கையான இந்த கருத்தை மிகவும் தீவிரத் தன்மையுடன் அவர் எழுதுகிறார். முக்கியமாக, கட்டுரை முழுக்க, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும் தொனி தீவிரமாக வெளிப்படுகிறது. “ஓ” போட்டு ஓட்டு போட்டால் எல்லாம் ஓ.கே.வாகிவிடும் என்று சொல்பவர் அல்லவா? அந்த மரபின் தொடர்ச்சி இது. என்றாலும், இது ஓர் அறிவார்ந்த வாதம் போல் முன்வைக்கப்படுவதால் இதை உடைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கட்சிகள், தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே மக்களுக்குத் அறியத் தருவது இது முதல் முறையல்ல. அது நேரு காலத்தில் இருந்தும் அண்ணா காலத்தில் இருந்துமே தொடங்கிவிட்டது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் நேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரதமராவார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் மக்களுக்குப் புரியுமா?

“நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக” என்று கருணாநிதி சொன்னதை எந்த வகையில் சேர்ப்பது? எம்.ஜி.ஆர். தலைமையேற்று எதிர்கொள்ளும் தேர்தலில் எஸ்.டி.எஸ்ஸையா முதலமைச்சர் ஆக்குவார்? வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவர்தான் முதலமைச்சர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போல சென்ற சட்டசபை தேர்தலில்ல “நான் வெற்றி பெற்று முதலமைச்சராக ஆனால் ஈழம் தருவேன், லேப்டாப் தருவேன்” என்றெல்லாம் ஜெயலலிதா முழங்கிய போதெல்லாம் ஞாநி என்ன செய்து கொண்டிருந்தார்?

இந்திராகாந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா
அறிவிக்கப்படாத பிரதமர்/முதல்வர் வேட்பாளர்கள்

ஒருவேளை யார் பிரதமர்/முதல்வர் என்பது தெரியாது என்றே வைத்துக் கொள்வோம். மன்மோகன்சிங் முதல் முறை பிரதமராக வரும்வரையிலும் அவர் பிரதமராக வரப்போவது மக்களுக்குத் தெரியாதுதான். ஆனால் தன் கடையின் கல்லாவில் யாரை உட்கார வைப்பது என்று உலக வங்கியும், அமெரிக்காவும் முன்பே முடிவு செய்ததுதானே?!  தேவைப்படுவது எல்லாம் அது “ஜனநாயகப்பூர்வமாக” நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான சடங்குகள் மட்டுமே. இதில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது மக்களுக்குத் தேர்தலுக்கு முன்பு தெரிந்தால் என்ன, பின்பு தெரிந்தால் என்ன? கழுதை விட்டையில் முன், பின் விட்டைகளுக்கு என்ன முக்கியத்துவம்?

“யார் நடிக்கும் படம் என்று தெரியாமல் எப்படி டிக்கெட் வாங்குவது?” என்று ஞாநி கட்டுரையின் பின்னூட்டத்தில் பலர் கேட்டுள்ளனர். அவர்களின் ஆதங்கம் நடுத்தர வர்க்கத்தின் அப்துல் கலாம் வகையாக வெளிப்படும் ‘ஜனநாயகம்’ பற்றிய பாமரத்தனமான கருத்து. ஆனால் அவர்களுக்குப் புரிய வேண்டிய உண்மை என்னவெனில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திரையரங்கின் உள்ளே ஒரே ஹீரோவின் படம்தான் ஓடப்போகிறது. தலைகள் மாறலாம்; அங்க அடையாளங்கள் மாறலாம். அடிமையின் உடல்மொழியும், எட்டப்பனின் குயுக்தியும், இன்னபிற எஜமான விசுவாசங்களும் அப்படியேதான் இருக்கப்போகின்றன. ஆகவே அவர்களின் ஆவல் நியாயம் போலத் தோன்றினாலும் அது பொருளற்றது.

தேர்தலில் வாக்கு கேட்கும்போது ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். அப்போது “ஜெயலலிதாதான் முதலமைச்சர்” என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். இப்படி மக்கள் நினைத்து வாக்களிக்க முடியாது என்று வாதாட முடியுமா? இந்த உரிமையை யாரும் சட்டப்படியே தடுத்து விட முடியாது. ஆனால் வெற்றி பெற்று வந்ததும் சொத்துக் குவிப்பு நீதிமன்றத் தீர்ப்பினால் முதல்வர் பதவி பறிக்கப்படுகிறது. உடனே ஓ.பி.எஸ். என்ற டக்ளஸை முதலமைச்சராக்குகிறார் ஜெயலலிதா.

“நாங்கள் ஜெயலலிதாவுக்குதான் ஓட்டுப் போட்டோம். ஓ.பி.எஸ்ஸை எங்களுக்குப் பிடிக்கவில்லை” என்று மக்கள் கேட்க முடியுமா? இதையும் சட்டப்படி பார்த்தால் அந்தக் கருத்தை சொல்லவேனும் மக்களுக்கு உரிமை உண்டா? கிடையாது. ஏன் கிடையாது என்றால் இதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம். சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை தெரிவு செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் முதலமைச்சராகவோ இல்லை பிரதமராகவோ வரலாம். சட்டம் கோருவது இதை மட்டுமே. மாறாக மக்கள் நினைப்பது, நினைத்து வாக்களிப்பது இவையெல்லாம் சட்ட மொழியிலும் சரி, ஜனநாயக முறையிலும் சரி வெறும் பரபரப்பு மட்டுமே. இங்கு மக்கள் ஓட்டு போடலாம்; ‘ஓ’ போடலாம்; உரிமையை எல்லாம் கேட்க முடியாது.

மோடி
“மோடியை எங்கள் நாட்டுக்குள் விடமாட்டோம்”

“மோடியை எங்கள் நாட்டுக்குள் விடமாட்டோம்” என்று கறாராக அவருக்கான விசாவை தொடர்ந்து மறுத்து வருகிறது அமெரிக்கா. “நீயே உலகம் முழுக்க படுகொலைகளைப் புரிகிறாய். ஈராக், வியட்நாம், ஆப்கானிஸ்தான், சிரியா என உலகம் எல்லாம் இனப் படுக்கொலைகளை செய்யும் நீ, ‘வெறும் 3,000 முஸ்லிம்களை’ கொலை செய்த எங்கள் மோடியைப் பார்த்து படுகொலையாளன் என்று எப்படிச் சொல்லலாம்?” என்று ‘தார்மீக உரிமை’யுடன் இந்துத்துவ வாதிகள் கோபப்படவில்லை. ‘‘நீயும் முஸ்லிம்களை கொல்கிறாய்… எங்கள் மோடியும் அதைத்தான் செய்தார். அதனால் நாம் இருவரும் ஒன்று’’ என்று ‘உரிமை’யுடனும் கேட்கவில்லை. மாறாக, ‘என் வீட்டுக்குள் வராதே’ என்று விரட்டி அடிக்கும் அமெரிக்காவின் வாசல் படியில் வீழ்ந்து, ‘எப்படியாவது உள்ளே விடுங்கள்’ என்று மன்றாடுகிறார்கள்.

தன்மானம் என்பது சிறிதும் இல்லாத இந்த அமெரிக்க அடிமைகள் நரேந்திர மோடியை வீரத்தின் அடையாளமாக முன்னிருத்துவது எவ்வளவுப் பெரிய நகைமுரண்? இந்த கொலைகார மோடியை ஞாநியின் தொழில்நுட்பக் காரணங்களுக்காக நிராகரிப்பதன் மூலம், மோடி இழைத்த குற்றத்தின் அடர்த்தி குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஒருவகையில் இது மோடிக்கே நன்மையாக முடிகிறது. இத்தகைய பொருத்தமற்றதும், பலவீனமானதுமான எதிர்ப்புகள் பொதுவெளியில் உலா வருவதை இந்துத்துவ கும்பல் நிச்சயம் ஆதரிக்கவே செய்யும். இந்த வகையில் ஞாநி, மோடிக்கு உதவுகிறார்.

இந்தியாவில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. அத்தகைய சூழலில், குறிப்பிட்ட பிரச்னையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டி அந்த கொள்கை முடிவுக்கு தடை கோரலாம். அதாவது கொள்கையை எதிர்க்க முடியாது. அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை எதிர்க்கலாம். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இத்தகையதுதான்.

தற்போது மோடியை கொள்கைப் பூர்வமாக எதிர்த்து நிராகரிப்பதில் ஞாநிக்கு எந்த மனத் தடையும் இருக்கப்போவதில்லை. ஆனாலும் அவர் “பிரதமர் வேட்பாளர் என்று உண்டா?” என்று ஜனநாயகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள தொழில் நுட்பக் கோளாறுகளை முன்வைத்து மோடியை நிராகரிக்கிறார். ஏன் இப்படி செய்ய வேண்டும்? ஏனெனில் ஞாநி போன்ற தன்னைத்தானே நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கடப்பாடு உள்ளவர்களாக நியமித்துக் கொண்டு வாழும் அறிவுஜீவிகளால் ஒரு பிரச்னைக்கான அரசியல் தீர்வுகளை, நடைமுறையின் பொருத்தப்பாட்டுடன் முன்வைக்க முடியாது. அவர்களின் சிந்தனை வரம்பே இவ்வளவுதான்.

மோடி
இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எந்தக்காலத்திலும் ஜனநாயகம், நீதி மன்றம், சட்டசபை, பாராளுமன்றம், அரசியல் சட்டம் போன்ற புனிதப் பசுக்களை மதிப்பதில்லை.

மேலும் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எந்தக்காலத்திலும் ஜனநாயகம், நீதி மன்றம், சட்டசபை, பாராளுமன்றம், அரசியல் சட்டம் போன்ற புனிதப் பசுக்களை மதிப்பதில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள். மட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பு, மும்பை – குஜராத் கலவரங்கள் மூலம் அதை நடைமுறைப்படுத்தியும் இருக்கிறார்கள். இந்த புனிதப்பசுக்கள் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்து வந்தால் ஓகே. இல்லையென்றால் சம்ஹாரம்தான். எனில் இத்தகைய மதவெறி பாசிஸ்ட்டுகளை எதிர்த்த போராட்டம் தெருவிலும், மக்கள் களங்களிலும் சித்தாந்த ரீதியிலும், போர்க் குணமிக்க முறையிலும் நடக்க வேண்டும். இதன்றி இவர்களை வேரறுக்க வேறு வழியில்லை. அப்படி இருப்பதாக ஞாநி போன்றவர்கள் காட்டும் ‘ஜனநாயக’ நம்பிக்கைதான் அபாயகரமானது.

இந்துமதவெறியர்களை சட்டபூர்வமாக எதிர்த்து வீழ்த்துவதாகத்தான் போலிக் கம்யூனிஸ்டுகள் முந்தைய ஆட்சிக்காலத்தில் காங்கிரசு கூட்டணி அரசை ஆதரித்தார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சங்க பரிவாரங்கள் வளர்ந்து இன்று மோடியை முன்னிறுத்தி இறந்து போன ஆவிகளை உயிர்க்கச் செய்ததுதான் மிச்சம். காங்கிரசே ஒரு மிதவாத இந்துத்துவாக் கட்சி எனும் போது, சட்ட, நீதிமன்ற, அதிகாரத்துவ அமைப்புகளெல்லாம் அவாளின் அஜெண்டாவிற்கு அடிபணியும் போது நாம் உழைக்கும் மக்களை போர்க்குணமிக்க முறையில் அணிதிரட்டி அவர்களுடன் சண்டை போடவேண்டும். அதை விடுத்து மரபு, ஜனநாயகம் என்ற பெயரில் சிண்டை இழந்து விடுவது அறிவீனம்.

ஏதோ இந்திய ஜனநாயகம் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது போலவும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முன்னே சொல்வதா பின்னே சொல்வதா என்பதில் மட்டும்தான் சிக்கல் வந்துவிட்டதைப் போலவும் ஞாநி எழுதுகிறார். இந்த ஜனநாயகம் என்பது, அனைத்து அம்சங்களிலும் உடைந்து நொறுங்கி விட்டக் குட்டிச்சுவர். இந்த ஜனநாயகம்தான் நாட்டை சேரி என்றும், ஊர் என்றும் பிரித்து வைத்திருக்கிறது. இந்த ஜனநாயகம்தான் ‘அனைவருக்கும் வழிபாட்டு உரிமை உண்டு’ என்று சட்டம் இயற்றிவிட்டு, கோயிலுக்குள் நுழையும் தலித்துகளை ‘பொது அமைதிக்குக் கேடு விளைவித்ததாக’ கைது செய்கிறது. இந்த ஜனநாயகம்தான், கல்விக்கடன் பெற்ற மாணவனின் புகைப்படத்தை வங்கி நுழைவுவாயிலில் ஒட்டிவைத்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிக்கு மானியம் வழங்குகிறது.

இந்த ஜனநாயகம்தான் இசுலாமிய மக்களை போலி என்கவுண்டர்களில் கொன்று நியாயப்படுத்துகிறது. செய்தவர்களை பிரதமராகவே முன்னிறுத்துகிறது. ஆகவே இதன் மீது நம்பிக்கை வைப்பதற்கு இனிமேலும் எதுவும் இல்லை. அர்ஜுன் கூட தேசபக்தி படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார். ஞாநி மட்டும் இந்த தேசத்தின் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்! அந்த நம்பிக்கையை தும்பிக்கையாகக் கொண்டு, மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டது மரபிற்கு விரோதம் என்று மெனக்கெட்டு வாதிடுகிறார். நமக்கு மோடியும் வேண்டாம், இந்த மரபும் வேண்டாம்.

– வளவன்

தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !

0

ருமபுரி சம்பவத்தைப் போலவே, பீகாரில் நிகழ்ந்துள்ள இன்னொரு சம்பவம், சாதி வெறியின் கோர முகத்தை அம்பலமாக்கியிருக்கிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் (பிற்படுத்தப்பட்ட) சாதியான குர்மி சாதிவெறியர்கள் (சத்திரிய குல குர்மிக்கள்) ரிது குமாரி என்ற தலித் பெண்ணின் மீது, மாநிலத் தலைநகர் பாட்னாவிலேயே இழைத்திருக்கும் வன்முறை இது.editorial

குர்மி சாதியைச் சேர்ந்த சிங் என்பவரின் பெண்ணான கல்லூரி மாணவி, தன்னுடன் படித்த தலித் மாணவனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார். உடனே அந்தப் பெண்ணின் தாயார் முனிகா தேவி, பெண்ணின் தம்பி சிந்து சிங் மற்றும் மச்சான் அசுவினி குமார் சிங் ஆகியோர் அடங்கிய கும்பல், போலீசு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களுடன் அந்த தலித் மாணவனின் தங்கை ரிது குமாரியை வீடு புகுந்து தூக்கிச் சென்றிருக்கிறது. “அண்ணன் ஒளிந்திருக்கும் இடம் உனக்குத் தெரியாமல் இருக்காது” என்று கூறி அந்தப் பெண்ணை சுமார் 70 கி.மீ தூரம் கடத்திச் சென்று இடத்தைக் காட்டுமாறு துன்புறுத்தியிருக்கிறது போலீசு. போலீசு ஜீப்பில் போலீசோடு சேர்ந்த அந்த சாதிவெறியர்களும் சென்றிருக்கின்றனர்.

அது மட்டுமின்றி, போலீசின் கண் எதிரிலேயே அசுவினி குமார் சிங், ரிது குமாரியின் மேலாடையைக் கிழித்து மானபங்கம் செய்து, சிகரெட்டாலும் சுட்டு சித்திரவதை செய்திருக்கிறான். அந்தப் பெண்ணின் கண் எதிரிலேயே பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டு பாட்டில் சாராயத்தையும் போலீசுக்கு லஞ்சமாக கொடுத்திருக்கிறாள் முனிகா தேவி. “என் தங்கைக்கு என்ன நடந்ததோ அதை உனக்கு செய்வேன்” என்று கூறி சிந்து சிங் ரிது குமாரியை சித்திரவதை செய்வதை, முழு போதையில் இருந்த போலீசு பார்த்து ரசித்து சிரித்திருக்கிறது.

அன்றிரவு இரண்டு மணிக்கு “ஓடிப்போன” காதலர்கள் பிடிபட்டு விட்டனர். இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இருந்த போதிலும், “அவனும் (காதலனும்) நான்கு இளைஞர்களுமாகச் சேர்ந்து தன்னைக் கடத்திச் சென்று விட்டதாக அந்த குர்மி பெண் (காதலி) மாஜிஸ்டிரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள் என்று சொல்கிறது போலீசு. காதலித்த தலித் இளைஞன் கடத்தல் குற்றத்துக்காக கைது செய்து சிறை வைக்கப்பட்டு விட்டான். 12 ஆம் வகுப்பு படித்து வந்த ரிது குமாரி படிப்பை நிறுத்தி விட்டாள். அந்தக் குடும்பமே உயிருக்கு அஞ்சி ஊரை விட்டு ஓடி விட்டது. தன் மீது போலீசாரே இழைத்த வன்கொடுமை குறித்து ரிது குமாரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. “சம்மந்தப்பட்ட போலீசார் மீது ஏன் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை?” என்று செய்தியாளர் கேட்டதற்கு “அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்?  அவர்கள் ரிது குமாரிக்கு உதவியல்லவா செய்திருக்கின்றனர்” என்று பதிலளித்திருக்கிறார் போலீசு எஸ்.பி.

பிகாரிலிருந்து தருமபுரிக்கு வருவோம். திவ்யா பிரிக்கப்பட்ட பின், இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தான் என்ற “உண்மையை” திவ்யா-இளவரசன் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவைத் தோண்டி எடுத்து நிரூபிக்கிறது போலீசு. கூடுதலாக திவ்யாவிடமிருந்தும், இளவரசனின் நண்பர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு இந்த “உண்மை” உறுதி செய்யப்படுகிறது. கடைசியாக, “இளவரசன் மரணம் ஒரு தற்கொலைதான்” என்று விசாரணையில் தெரிய வருவதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டார் தருமபுரி மாவட்ட எஸ்.பி.

இப்படி தோண்டியெடுக்கும் தேவையே இல்லாமல் மாமல்லபுரம் மேடையிலும், நத்தம் காலனியிலும், உயர்நீதி மன்ற வளாகத்திலும் தொலைக்காட்சி காமெராக்கள் முன்னிலையிலும் அரங்கேறிய சாதிய வன்முறை குறித்த உண்மைகள் இந்த மரணத்துடன் தொடர்பற்ற சாட்சியங்கள் ஆகி விட்டன. இந்திய ஜனநாயகம், பிகார் தலித் இளைஞனை கடத்தல் குற்றத்துக்காக சிறை வைத்து விட்டது. இளவரசன் “தற்கொலை” செய்து கொண்டு விட்டதால், அவனுக்கு சிறை செல்லும் வாய்ப்பை இந்திய ஜனநாயகத்தால் வழங்க இயலவில்லை.

-தலையங்கம்
__________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________

மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !

12

குறிப்பு: தற்போது ஜெயா அரசு தூத்துக்குடியைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுக்க ‘தடை’ விதித்துள்ளது. எனினும் துத்துக்குடி தவிர இதர மாவட்டங்களில் சிறப்புக் குழு ஆய்வு எடுக்கும் வரை தடை இருக்குமாம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் போட்ட இடைக்காலத் தடை குறுகிய காலத்திலேயே நீர்த்துப் போய் அந்த ஆலை தற்போது சுமூகமாக இயங்கி வருவது தெரிந்ததே. மதுரை பிஆர்பி கிரானைட் ஊழலும் இத்தகைய தடை என்னும் நாடகத்தால் மறைக்கப்பட்டதை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வைகுண்டராஜன் கொள்ளை முழுவதும் அம்பலப்பட்ட பிறகு அவர் மீது தடை என்பது வேறு வழியின்றி செய்யப்படும் நாடகம். முக்கியமாக அதிமுகவின் தேர்தல் செலவு, ஜெயா டிவியின் பங்குதாரர் என்ற அளவில் அவரது முக்கியத்துவம் எவ்வாறு இருக்கும் என்பதை வாசகர்கள் அறியலாம்.

– வினவு

ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற, திறமையான, நேர்மையான நிர்வாகம் நடப்பதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாகவும் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கும் சித்திரம் எவ்வளவு மோசடியானது என்பதை கார்னெட் மணற்கொள்ளை விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டது.

வைகுண்டராஜனின் சூறையாடல்
வைகுண்டராஜன் கும்பலின் சூறையாடல் : இயற்கை அரணாக இருந்த மணற் குன்றுகளும், சவுக்கு மரங்களும் அழிக்கப்பட்டு தீவிரமாகி வரும் கடல் அரிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரை முழுவதையும் கையில் வைத்துக் கொண்டு கார்னெட் மணல் ஏற்றுமதி செய்யும் தொழிலில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் இருந்து வருகிறார், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைகுண்டராஜன். ‘அம்மா’வின் ஆதரவோடு தொழில் நடத்திவரும் அவர், ஜெயா டி.வி.யின் பங்குதாரராக உள்ளதோடு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ‘அம்மா’வுக்குப் பெரிதும் உதவியாக நின்றதை அனைவரும் அறிவர். அப்பேர்ப்பட்ட கோடீசுவர வைகுண்டராஜனின் நிறுவனம், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டிச் சட்டவிரோதமாகத்  தாது மணலை அள்ளி ஏற்றுமதி செய்துள்ளதா என்று ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வைகுண்டராஜன் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் தனி அரசாங்கமே நடத்தி வருகிறார் என்பது நாடறிந்த உண்மை. கடற்கரைப் பகுதியிலுள்ள செந்நிற மணலில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் முதலான விலைமதிப்பற்ற அரிய கனிமங் கள் கிடைக்கின்றன. மணலிலிருந்து அவற்றைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் வைகுண்டராஜனின் தொழில். இந்திய சுரங்கக் கழகம் அனுமதி அளித்துள்ள 111 கார்னெட் மணல் குவாரிகளில் 96 அவருக்கும் அவரது பினாமிகளுக்கும் சோந்தமானது. மைய அரசால் அனுமதி தரப்பட்டுள்ள 44  இல்மனைட் குவாரிகள் அனைத்தும் அவருக்கே சொந்தமானது. மைய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம், வனத்துறை – எனப் பல்வேறு துறைகளின் விதிகள், கட்டுப்பாடுகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, கடற்கரையையும் அதையொட்டியுள்ள பகுதிகளையும்  தனது பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமித்து தாதுமணல் கொள்ளையை இக்கும்பல் நடத்தி வருகிறது.

தாது மணலிலுள்ள கனிமங்களைச் சேகரிக்கும், பிரிக்கும் நடவடிக்கைகளால் கதிரியக்கம் அதிகமாகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஏற்கெனவே குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அரசின் அருமணல் தொழிற்சாலைகளில் பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் இருந்த போதும், சுற்றுப்புற கிராமங்களில் ஏறத்தாழ 500 பேருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆனால் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல், விளைவுகளைப் பற்றிய அக்கறையும்  இல்லாமல், ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளனைப் போல வைகுண்டராஜன் கும்பல் இச்சூறையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது.

தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையாகவே அமைந்திருந்த மணல் குன்றுகள் இக்கும்பலின் சூறையாடலில் தரைமட்டமாகி விட்டன. இதனால் பல ஊர்களில் கடல் நீர் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி, குடிநீருக்காக மக்கள் தவிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகளால் நடப்பட்ட ஆயிரமாயிரம் சவுக்கு மரங்களும், இயற்கையின் கொடையாகக் கருதப்படும் கடலோர அடையாளச் சின்னங்களாக நின்றிருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. கடலோர மணலிலிருந்து தாதுப் பொருட்களைப் பிரித்தெடுத்த பிறகு, கழிவு நீரையும் மணலையும் அதே பகுதியில் கொட்டுவதால், பல இடங்களில் கடல் நீரின் நிறமே சிவப்பாக மாறி விட்டது. கடலையொட்டி அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதால் மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது.

கழிவுகளால் நாசமான கடலோரம்
தாது மணலிலிருந்து கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் வெளியேற்றப்படும் கழிவுகளால் நாசமாக்கப்பட்ட கடலோரப் பகுதி

தான் சார்ந்துள்ள நாடார் சாதியினரைச் சமூக அடித்தளமாகப் பயன்படுத்திக் கொண்டும், எல்லா ஊர்களிலும் பிழைப்புவாதிகளைக் கையாட்களாகக் கொண்டும் வைகுண்டராஜன் தனது மாஃபியா சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். இச்சூறையாடலை யாராவது எதிர்த்தால் அடுத்த நிமிடமே வைகுண்டராஜனின் அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குவதோடு, வீடுகளின் மீது வெடிகுண்டுகளை வீசுவதும் நடந்துள்ளன. இதனால் உயிருக்கு அஞ்சி பல குடும்பங்கள் ஊரை விட்டே ஓடி விட்டன. பண பலம், சாதிய பலம், அதிகார பலத்தைக் கொண்டு சூறையாடலை நடத்தி வந்த கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி. கும்பலைப் போலவே,  அதையும் விஞ்சும் வகையில் தாது மணற் கொள்ளையன்  வைகுண்டராஜன் கும்பலின் ஆட்சி கேள்வி முறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தனி மாவட்டமாகப் பிரிக்கப்படாமல் நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடியும் இருந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரம், வைகுண்டராஜனுக்குப் போட்டியாக கார்னெட் மணல் அள்ளும் தொழிலில் உள்ள தயா தேவதாஸ் என்பவரது நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். வைகுண்டராஜனின் கொள்ளைக்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதைப் பற்றியும், சட்டவிரோதமாக அள்ளப்பட்டுள்ள கனிம வளமிக்க மணலின் மதிப்பு உத்தேசமாக ரூ. 96,120 கோடிகளாக இருக்கும் என்றும் கடந்த ஜனவரி 2013-ல் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தொழில் போட்டியின் காரணமாக வைகுண்டராஜனின் கொள்ளையையும் மோசடிகளையும் அவர் அம்பலப்படுத்தியுள்ள போதிலும், அவரது குற்றச்சாட்டுகள் மறுக்க முடியாதவை. மேலும், சமூக ஆர்வலர்களும் இப்பகுதிவாழ் மீனவர்களும் வைகுண்டராஜனின் சூறையாடலையும் அடாவடிகளையும் பற்றி அரசுக்குப் பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.

இத்தகைய புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டும் நோக்கத்தில் கண்துடைப்பு விசாரணை, ஆய்வு  நடத்துவதென்பது வழக்கமான அதிகார வர்க்கச் சடங்கு. அதன்படியே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஸ் குமார் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேம்பார் பகுதியில் ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்பியதோடு,  அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்த கணக்கீட்டிற்கு உத்தரவிட்டதும் அடுத்த நாளே அவர் பணிமாற்றம் செயப்பட்டுள்ளார்.

மணற்கொள்ளையால் வெடித்த நிலம்
தாது மணற்கொள்ளையால் நாசமாகி வெடித்துக் கிடக்கும் நிலம்

மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றப்பட்ட விவகாரம், தனது ஆட்சியின் மீதான அதிருப்தியாக மாறிவிடாதிருக்க,  தாது மணற்கொள்ளை குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்துத் தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொள்கிறது ஜெயா கும்பல். ஆனால், வைகுண்டராஜனுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்துக் கொள்ளையடிக்கக் கற்றுக் கொடுத்தவர்களே இத்தகைய அதிகார வர்க்கக் கூட்டம்தான்.  கடந்த பல ஆண்டுகளாக இந்த ஊழல் கொள்ளையின் பங்காளிகளாக இருந்த அதிகார வர்க்கத்தைக் கொண்டே இப்போது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப் போவதாக நாடகமாடுகிறது ஜெயா கும்பல். ஜெயலலிதா அமைத்துள்ள அதிகாரிகளின் சிறப்புக் குழுவைப் பற்றி எழுதிய கருணாநிதி, ”அந்தக் குழுவுக்குத் தலைவராக வைகுண்டராஜன் என்பவரை நியமிக்கலாம் என்று நம்முடைய ஆபீஸ் பையன் சிபாரிசு செய்கிறான்” என்று எள்ளி நகையாடுகிறார். இருப்பினும், ”ஜெயா கண் சிவந்தார், அ.தி.மு.க.வினர் உடந்தையாக இருப்பதை அறிந்ததும் அதிர்ந்தார்” என்று ஏதோ ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் தாது மணற்கொள்ளை நடந்திருப்பதைப் போலவும், அவர் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதைப் போலவும் பார்ப்பன ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன.

தனியார்மயம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே அரசிடம் குறிப்பிட்ட இடத்தில் தாதுமணல் அள்ள உரிமம் பெற்றுக் கொண்டு, அதைக் காட்டியே வைகுண்டராஜனின் நிறுவனம் பல இடங்களில் சட்டவிரோதமாகத் தாதுமணலைச் சூறையாடி வந்தது. மறுபுறம், 2002-ஆம் ஆண்டிலேயே அன்றைய ஜெயா அரசாங்கத்துக்கும் டாடா நிறுவனத்துக்குமிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அதன்படி  சாத்தான்குளம், திசையன்விளை முதலான செந்நிற மணல் மிகுந்த தேரிக்காடுகளில் என்னென்ன அரிய உலோகங்கள் உள்ளன என்பதற்கான சோதனைகளை செய்து முடித்திருந்த டாடா நிறுவனம், தேரிக்காட்டில் கிடைக்கும் இல்மனைட் மணலைப் பிரித்தெடுத்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாரித்து, அதிலிருந்து டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஆலை தொடங்குவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருந்தது. ஆண்டுக்கு 2 லட்சம் டன் இல்மனைட் தாதுவைப் பிரித்து 50 ஆயிரம் டன் தாதுவை டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கப் பயன்படுத்திவிட்டு, மீதி 1.5 லட்சம் டன் தாதுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டாடா தீர்மானித்தது. ஆனால், ஜெயா கும்பலுக்கும் டாடா நிறுவனத்துக்குமிடையே திரைமறைவு பேரங்களில் உடன்பாடு ஏற்படாததால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் அரிய கனிமங்கள் டாடா நிறுவனத்தின் மூலம் வெளிநாடு செல்வதைத் தடுக்க இத்திட்டம் கைவிடப்பட்டது என்று அறிவித்தார், அப்போதைய அமைச்சரான நயினார் நாகேந்திரன். வைகுண்டராஜன் கும்பலோ வழக்கம்போலவே தனது சூறையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

பின்னர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் டாடாவுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் 2007 ஜூன் மாதத்தில் போடப்பட்டது. இதன்படி, தாது மணல் நிறைந்த 10,500 ஏக்கர் நிலத்தை அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்துக்கு வழங்குவதென்றும், நிலம் வழங்கியவர்களுக்கு டாடாவின் டைட்டானியம் ஆலையில் வேலை கொடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கெதிராக, தென்மாவட்ட கடலோரப் பகுதிவாழ் மக்களின் விவசாய நிலங்களைப் பறித்து டாடாவுக்குத் தாரை வார்க்கும் திட்டம்தான் இது என்று ஜெயா கும்பலும், அதன் கூட்டணிக் கட்சிகளும், வைகுண்டராஜன் வகையறாக்களும் போராட்டங்களை நடத்தத் தொடங்கின. இதனால், மக்களின் கருத்தறிந்த பின்னரே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று தி.மு.க. அரசு பின்வாங்கியது. டாடா நிறுவனமும் இத்திட்டத்திலிருந்து விலகிக் கொண்டது. வைகுண்டராஜன் கும்பலோ கேள்வி முறையின்றி சூறையாடலைத் தொடர்ந்தது. ”கார்னெட் கனிமத்தைத் திருட்டுத்தனமாக எடுத்து, சட்டவிரோதமாக நாட்டு நலனுக்கு எதிராகக் கடத்தி விற்பனை செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் ஒரு‘தாதா’வுடன் ஜெயலலிதா செய்து கொண்ட ஒப்பந்தமே, இத்திட்டத்தை ஜெயலலிதா எதிர்ப்பதற்குக் காரணம்” என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார் அன்று முதல்வராக இருந்த கருணாநிதி. ஆனாலும் அந்த தாதாவைக் கைது செய்து தண்டிக்கவோ, தாது மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்தவோ அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வளவுக்கும் பின்னர், கார்னெட் மணல் கொள்ளை பற்றி இப்போதுதான் தெரிய வந்துள்ளதைப் போல ஜெயா அரசு ஆய்வுக் குழுவை அமைத்து சோதனை நடத்துவதே அயோக்கியத்தனமானது. இன்று நேற்றல்ல, பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இப்பகற்கொள்ளை பற்றி பல்வேறு தரப்பினரும் அரசிடம் முறையிட்டுள்ள போதிலும்,  தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நிறுவனங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கும் போது, வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு 72 நாட்களில் அனுமதி தரப்பட்டுள்ள முறைகேட்டையும், அந்நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்பாடுகளையும்  அம்பலப்படுத்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரம், வைகுண்டராஜனை ”மணல் மாஃபியா” என்று வெளிப்படையாகச் சாடுவதோடு, அவரது அரசியல் சார்புதான் அவரைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார். பாபா அணு ஆராச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் சி.எஸ்.பி. அய்யர் என்பவர், ”இந்திய கனிமவளக் கழகம் மற்றும் அணுசக்தித் துறை உயரதிகாரிகள் இத்தகைய தனியார் நிறுவனங்களின் ஆலோசகர்களாக இருப்பதோடு, அரசாங்கம் தரும் சம்பளத்தைவிடப் பத்து மடங்கு அதிகமான சம்பளத்தை இந்நிறுவனங்களிடமிருந்து பெறுகிறார்கள்” என்கிறார்.

இப்பூமியிலுள்ள கனிம வளங்கள் அரசுக்கு – அதாவது சமுதாயத்துக்குச் சொந்தமானது என்பது நேற்று வரை இருந்த பொது நியதி. ஆனால் அரிய வகைக் கனிமங்கள் குறித்த விதிகள், தனியார்மயமாக்கலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன. கனிம வளமிக்க பகுதிகளை விலைக்கு வாங்கியோ, குத்தகைக்கு எடுத்தோ கார்னெட் மணலைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்வது தனியார்மயத்தின் கீழ் சட்டபூர்வ நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. ஏற்கெனவே சட்டவிரோதமாக தாது மணற்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வைகுண்ட ராஜன் கும்பல், இதைச் சாதகமாக்கிக் கொண்டு இச்சூறையாடலைப் பல மடங்கு விரிவாக்கியுள்ளதோடு, திடீர் பணக்கார கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்து கொட்டமடிக்கிறது.

வைகுண்டராஜனின்  நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி தாதுமணலை அள்ளியுள்ளதா? அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமாக அள்ளப்பட்டுள்ளதா? முறைகேடுகள் நடந்துள்ளதா – என்பதுதான் இப்போது நடக்கும் ஆய்வும் விசாரணையும். அனுமதி பெறாத இடத்தில் நடந்துள்ள சூறையாடல்களைப் பற்றியோ, சட்டவிரோத கடத்தல் பற்றியோ எவ்வித விசாரணையுமில்லை.

மணற்கொள்ளையன் வைகுண்டராஜன்
தாது மணற்கொள்ளை மாஃபியா தலைவன் வைகுண்டராஜன் : ‘அம்மாவின்’ ஆதரவோடு தொழில் நடத்தும் ‘மண்ணாதி’ மன்னன்

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில்தான் வைகுண்டராஜன் கும்பல் மிகப் பெரிய சூறையாடலை நடத்தியுள்ளது. ஆனாலும் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நடந்துவரும் சூறையாடலைப் பற்றி எந்த விசாரணையும் இல்லை.

இருப்பினும், தூத்துக்குடியில் இந்த சிறப்பு ஆய்வுக் குழு கறாராக விசாரணை நடத்துவதாகவும், பல பகுதிகளில் திடீரென ஆய்வு நடத்துவதாகவும் ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. கார்னெட் மணல் உள்ளிட்டு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாட்டின் பொதுச் சோத்துக்களை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்ற மையமான கேள்வியை விட்டுவிட்டு, அதில் அம்பலமாகும் ஊழல் – முறைகேடுகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டியும், அரசு நடவடிக்கை எடுப்பதாகப் பரபரப்பூட்டியும் மக்களைத் திசை திருப்பும் பணியைத்தான் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் எனும் மாஃபியா கும்பல் இரும்புக் கனிமங்களைச் சூறையாடியதைப் போலவே, மதுரையில் மலைக்கள்ளன் பி.ஆர். பி. கும்பல் கிரானைட் கொள்ளையை நடத்தியதைப் போலவே, மண்ணாதி மன்னன் வைகுண்டராஜன் கும்பல் தாதுமணற் கொள்ளையை நடத்தி வந்துள்ளது. பொதுச் சொத்தான கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் இத்தகைய மாஃபியாக்களின் – கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இத்தகைய ஊழல்கள் அனைத்துக்கும் அடிப்படை.

தனியார்மயம்  என்பதே ஊழல்மயம்தான். ஊழலற்ற தனியார்மயம் என்பதே இல்லை. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டு போராடுவதன் மூலமே வைகுண்டராஜன் வகையறாக்களையும், இக்கிரிமினல் மாஃபியாக்களின் கூட்டாளிகளான ஆட்சியாளர்களையும் தண்டிக்க முடியும்; தனியார்மயக் கொள்ளையைத் தடுத்து நிறுத்திடவும் முடியும்.

– மனோகரன்.
__________________________

பெட்டிச் செய்தி :

அரிய வகை கனிமங்களின் பயன்பாடுகள்

கார்னெட் என்பது கனசதுர உருவில் உள்ள உறுதியும் பளபளப்புமிக்க கனிமம்.  உறுதியான தரை அமைப்பதற்கும், கண்ணாடி – சலவைக்கல் முதலானவற்றைத் துண்டிப்பதற்கும், பளிங்குக் கற்களைப் பாலீஷ் செவதற்கும்,மோதிரம் முதலான அணிகலன்களில் முத்துக்களாகப் பதிக்கவும் கார்னெட் பயன்படுகிறது.

இல்மனைட் என்பது அரிதாகக் கிடைக்கும் கனிமம். பெயிண்ட், பிளாஸ்டிக் ஆலைகளிலும், உலைகளின் உள்கட்டமைப்பு, விளையாட்டு, மருந்து பொருட்கள் தயாரிப்பு ஆலைகளிலும் பயன்படுகின்றது.

ரூட்டைல் என்ற கனிமம் இலேசானதாக இருப்பினும் வைரத்தைவிட உறுதியானது. பெயிண்ட், பிளாஸ்டிக், அதிக உறுதி தேவைப்படும் கட்டுமானங்களில்வெல்டிங் செவதற்கான வெல்டிங் ராடுகள் தயாரிக்க, விண்வெளி உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் முதலானவற்றில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சிர்கான் என்பது கண்ணாடி போன்ற தோற்றம் கொண்ட உறுதியான கனிமம். வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. இதன் உறுதித் தன்மை காரணமாக பீங்கான் தரை ஓடுகள், பீங்கான் தட்டுகள் – கோப்பைகள் தயாரிப்பிலும், உருக்கு – வார்ப்பு தொழிற்சாலைகளிலும்  பயன்படுத்தப்படுகிறது.
______________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
______________________________________

சிரியா : அடுத்த இராக் ?

1

சிரியா மீது ஒரு அநீதியான, ஆக்கிரமிப்புப் போரைத் தொடுப்பதற்கான தயாரிப்புகளை அமெரிக்காவும் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன.  “இராக் மீது நடத்தப்பட்டதைப் போன்று இல்லாமல், இது ஒரு சிறிய தாக்குதலாக இருக்கும்” என அமெரிக்க அதிபர் ஒபாமா பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறார்.  இங்கிலாந்தும், பிரான்சும் தங்கள் நாடுகளின் இராணுவ கவுன்சில்களைக் கூட்டி ஆலோசனை நடத்துகின்றன.  இன்னொரு புறமோ, சிரியாவிலிருந்து 160 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சைப்ரஸ் நாட்டின் அக்ரோதிரி இராணுவ விமான தளத்தில் இங்கிலாந்து நாட்டு இராணுவ விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.  மத்திய தரைக் கடல் பகுதியில் அமெரிக்கா தனது நான்கு போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

சிறுவர்கள் பிணங்களாக
ஆகஸ்டு 21 அன்று சிரிய அரசு நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுவர்களின் சடலங்கள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரசியாவும் சீனாவும் இந்தப் போர் முஸ்தீபுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ” நாங்கள் எதிர்த்துப் போரிடுவோமே தவிர, சரணடைய மாட்டோம்” என அறிவித்திருக்கிறது, சிரியாவின் அல்-அஸாத் அரசு.  சிரியா மீது போர் தொடுப்பதில் அமெரிக்காவை விஞ்சும் அளவிற்கு வெறியோடு திரியும் இங்கிலாந்து அரசுக்கு எதிராகவும், போருக்கு எதிராகவும் இலண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

இராக் மீது போர் தொடுப்பதற்கு, “சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தமது நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக” ஒரு பொய்யான குற்றச்சாட்டை அமெரிக்காவும் இங்கிலாந்தும் திட்டமிட்டு உருவாக்கி பரப்பின. சிரியா மீதான ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்துவதற்கு,  ‘அஸாத் அரசு கடந்த ஆகஸ்டு 21 அன்று சிரிய நாட்டின் தலைநகரான டமாஸ்கஸிலுள்ள அல்-கௌதா என்ற பகுதி மீது இரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், அதில் சிக்கி குழந்தைகள் – சிறுவர்கள் உள்ளிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாகவும்” குற்றஞ்சுமத்துகின்றன.

அஸாத் அரசிற்கு எதிராக ஆயுதத் தாக்குதல்களைத் தொடுத்துவரும் அல்-நுஸ்ரா என்ற முசுலீம் அடிப்படைவாத அமைப்புதான் இக்குற்றச்சாட்டை முதலில் தெரிவித்தது.  இத்தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போனதாக முதலில் கூறப்பட்டு, பின்னர் சாவு எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது.  இப்படியொரு  தாக்குதல் நடந்திருப்பதும் சாவு எண்ணிக்கையும் உண்மைதானா?  உண்மையென்றால், இத்தாக்குதலை நடத்தியது அஸாத் அரசா அல்லது ஆயுதந் தாங்கிய எதிர்த் தரப்பா என்ற கேள்விகளுக்கெல்லாம் இதுவரை நம்பத்தகுந்த பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பஷார் அல் அசாத்
சிரிய அதிபர் பஷார் அல்-அஸாத்

அஸாத் அரசின் அனுமதியுடன் சிரிய நாட்டிற்குச் சென்றுள்ள ஐ.நா. குழுவொன்று இத்தாக்குதல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த ஆய்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், ‘அந்தத் தாக்குதலை அஸாத் அரசுதான் நடத்தியது; அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன’’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டன.

இத்தாக்குதலில் பலியானதாகக் கூறப்படும் குழந்தைகளின் புகைப்படம் உலகெங்கும் பரவலான அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  அந்த அனுதாபத்தைச் சூட்டோடு சூடாகத் தமது தீயநோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைந்துள்ளன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள். ‘இந்தத் தாக்குதலுக்காக சிரிய அதிபரைக் கண்டிக்க வேண்டும்; சிரிய மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கத் தங்களை அனுமதிக்க வேண்டும்” எனக் கோரும் தீர்மானமொன்றை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அளித்திருக்கிறது, அமெரிக்காவின் கைத்தடியான இங்கிலாந்து.

மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு சிரியா மீது போர் தொடுப்பது அவசியமானது என நியாயவான்களைப் போலப் பேசுகின்றன மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.  ஜனநாயகம், மனித உரிமைகள், தீவிரவாத எதிர்ப்பு – எனக் கூச்சல் போட்டுக்கொண்டு இக்கும்பல் நுழைந்த ஆப்கான், இராக், லிபியா ஆகிய நாடுகளின் நிலைமை இன்று எப்படி உள்ளது தெரியுமா?  ஆப்கான் பல்வேறு யுத்தப் பிரபுக்களின் போர்க்களமாக இன்று மாறி நிற்கிறது.  அங்கு அமைதியை ஏற்படுத்த, தாலிபான் தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவின் சம்மதத்தோடு நடந்து வருகின்றன.  சதாம் உசேன் ஆட்சியின் கீழ் ஓரளவு மத நல்லிணக்கம் நிலவிய இராக், இன்று மத, இன மோதல்களில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் காரணமாகவும், மத-இன மோதல்களின் காரணமாகவும் இராக்கில் கடந்த பத்தாண்டுகளில் 1,25,000-க்கும் மேற்பட்டோர் இறந்து போது நாடே சுடுகாடாகி விட்டது.  அன்று இராக்கில் இல்லாதிருந்த அல்-காய்தா,  அமெரிக்க திணித்த ‘ஜனநாயகம்’ காரணமாக இன்று இராக்கில் உருவாகியிருப்பதோடு, அங்கிருந்து ஜிஹாதிகளை சிரியாவுக்குள் அனுப்பி வைக்கும் அளவிற்கு வலுவாக உள்ளது.  லிபியாவோ பல்வேறு ஜிஹாதி குழுக்களின் பதவி வேட்டைக்கான பூமியாகி விட்டது.

சிரியாவில் அஸாத்தின் ஆட்சிக்கு எதிராக ஆயுதத் தாக்குதல்களை  நடத்திவரும் குழுக்களுள் பெரும்பாலானவை கூலிப்படை போன்றவைதான்.  இக்குழுக்களிலேயே மிகப்பெரிய அமைப்பான அல்-நுஸ்ரா, இராக்கிலுள்ள அல்-காய்தாவின் கைத்தடி அமைப்பாகும்.  இக்குழுவிற்குத் தேவையான பணம் மற்றும் ஆயுதப் பயிற்சியை கத்தார் நாட்டின் மன்னர் பரம்பரை அளித்து வருகிறது.  அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்தியங்களால் ஆதரிக்கப்படும் ‘சுதந்திர’ சிரிய இராணுவத்திற்கு சிரியாவில் வேரோ விழுதோ கிடையாது.  ஆப்கான், செசன்யா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செயப்பட்டுள்ள அல்-காய்தா ஜிஹாதிகளைக் கொண்டு இந்த இராணுவம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.  சன்னி மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சியை சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பம் ஆதரித்து வருகிறது.

அல்-காய்தா உள்ளிட்ட சன்னி மத அடிப்படைவாத அமைப்புகள் தங்களை அமெரிக்க எதிர்ப்பாளர்களைப் போலக் காட்டிக் கொள்வதெல்லாம் பம்மாத்து; உண்மையில் அம்மதவெறி அமைப்புகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்பதைத்தான் சிரியாவிலும் லிபியாவிலும் நடந்துள்ள, நடந்து வரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதனால்தான் பெரும்பாலான சிரிய மக்கள், குறிப்பாக அந்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினரான ஷியா பிரிவு முசுலீம்களும், கிறித்தவர்களும், குர்து இன மக்களும் அமெரிக்காவின் தொங்குசதையான இந்த எதிர்த்தரப்பை, அஸாத்தின் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சிக்கு மாற்றாகக் கருத மறுக்கிறார்கள். எதிர்த்தரப்பு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட்டால், அஸாத் ஆட்சியின் கீழ் காணப்படும் மத நல்லிணக்கமும் சமூக இணக்கமும் ஒழிந்துபோய், சவூதி அரேபியா வகைப்பட்ட சலாபிகளின் மதவெறி சர்வாதிகாரம் சிரியாவிலும் கோலோச்சும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அகதிக் குடும்பம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு அகதிகளாக ஓடிவந்த சிரிய குடும்பம், நடைபாதையோரத்தில் தங்கியிருக்கும் அவலக் காட்சி

அஸாத் அரசிற்கும் எதிர்த்தரப்புக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் கடந்த மூன்றாண்டுகளாக நடந்துவந்த போதும், எதிர்த்தரப்பு பெரிய வெற்றி எதையும் சாதிக்கவில்லை.  குறிப்பாக, அக்கும்பலின் பிடியில் இருந்த சில பகுதிகளைக் கூட அரசுப் படைகள் மீண்டும் கைப்பற்றி விட்டன.  இந்த நிலையில் சிரியாவில் நேரடியாகத் தலையிட்டால் அன்றி ஆட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என முடிவெடுத்த மேற்குலக ஏகாதிபத்திய அரசுகள், அதற்கு ஏற்றபடி சிரிய அரசு வசமுள்ள இரசாயன ஆயுதங்கள் குறித்துப் பீதியூட்டத் தொடங்கின.  இதன் தொடர்ச்சியாக, அலெப்போ நகரை இரசாயன ஆயுதங்களைக் கொண்டு சிரிய அரசு தாக்கியதாக அல்-நுஸ்ரா குற்றஞ்சாட்டியது.  ஐரோப்பிய யூனியன் இதைச் சாக்காகக் காட்டி,  எதிர்த்தரப்புக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த பெயரளவுக்கான தடைகளையும் நீக்குவதாக அறிவித்தது.  சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து நடைபெறவிருந்த ஜெனிவா பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது, அமெரிக்கா.

அலெப்போவில் கடந்த ஜூனில் நடந்த இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தத் தாக்குதலை எதிர்த்தரப்புதான் நடத்தியது என்பது அம்பலமான பிறகும் அமெரிக்காவும் எதிர்த்தரப்பும் சற்றும் அசராமல் அடுத்த குற்றச்சாட்டை அஸாத் அரசு மீது வீசியுள்ளன. ”சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. குழுவை அனுமதித்துள்ள நேரத்தில், எதிர்த்தரப்பின் வசமுள்ள அல்-கௌதா பகுதி மீது தாக்குதலை நடத்துவோமா?” எனக் கேள்வி எழுப்புகிறது, அஸாத் அரசு.  ஆனால், அமெரிக்கா ஏகாதிபத்தியமோ இத்தாக்குதல் குறித்த ஐ.நா. ஆய்வின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில், ”ஐ.நா. தனது ஆய்வை மிகவும் தாமதமாகத் தொடங்கியிருப்பதாகவும், அஸாத் அரசு ஏற்கெனவே ஆதாரங்களை அழித்துவிட்டதாகவும்” அடித்துக் கூறிவருகிறது.  ஐ.நா. ஆய்வு முடிவு எப்படியிருந்தாலும், சிரியா மீது தாக்குதல் தொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற தொனியில் இங்கிலாந்தும் பிரான்சும் சவால் விடுகின்றன.

இராக்கில் சிரிய அகதிகள்
ஆகஸ்டு 15 அன்று இராக்கிற்கு அகதிகளாக தப்பியோடிய பல்லாயிரக்கணக்கான சிரிய மக்களுள் ஒரு பகுதி

மேற்காசியாவில் இரானின் செல்வாக்கை மட்டுப்படுத்தி, அதைத் தனிமைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதை முதல்படியாகக் கருதுகிறது, அமெரிக்கா.  இதனால்தான் எந்தவிதமான சமாதான முன்னெடுப்புகளுக்கும் அமெரிக்கா ஒத்துழைக்க மறுக்கிறது.

அமெரிக்காவின் இந்த மேலாதிக்க வெறியின் காரணமாக, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ஆயுத மோதல்களில் சிக்கிக்கொண்டு ஏறத்தாழ ஒரு இலட்சம் சிரிய மக்கள் உயிரிழந்துள்ளனர்.  கிறித்தவர்கள், குர்து இனத்தவர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 10 இலட்சம் சிரிய மக்கள் லெபனானிலும், இராக்கிலும், ஜோர்டானிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.  சிரியாவில் ஒரு மிகப்பெரும் மனிதப் பேரழிவு நடந்து கொண்டிருப்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாத அமெரிக்கா, போருக்குத் தயாராவது எத்துனை பெரிய அயோக்கியத்தனம்!  முசுலீம் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவே அவதாரமெடுத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முசுலீம் அடிப்படைவாத அமைப்புகளோடும், அல்-காய்தாவோடும் கூட்டுச் சேர்ந்திருப்பது எத்துனை பெரிய மோசடி!  ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய அமெரிக்கா, வியட்நாம் மீது ஏஜெண்ட் ஆரஞ்ச் என்ற இரசாயன ஆயுதத்தை வீசிய அமெரிக்கா, இராக் மீது செறிவு குறைந்த அணு ஆயுதங்களைப் பிரயோகித்த அமெரிக்கா, அஸாத்தின் வசமுள்ள இரசாயன ஆயுதங்களிலிருந்து சிரிய மக்களைக் காப்பாற்றுவதற்குத்தான் போர் தொடுக்கப் போவதாகக் கூறுவது வக்கிரம் நிறைந்த வரலாற்று முரண் அல்லவா!

– செல்வம்.

_____________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013

_____________________________________________

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு !

1

நேற்று 16.9.2013 அமெரிக்க நேரப்படி காலை சுமார் 8.20 மணிக்கு தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையகக் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 8 பேர் காயமடைந்தனர்.

அலெக்சிஸ் ஆரோன்
அலெக்சிஸ் ஆரோன்

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கட்டிடம் கடற்படையின் கட்டளை மையத்தின் தலைமையகமாகும். கடற்படைக்குத் தேவையான கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வடிவமைப்பது, வாங்குவது, கட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகள் இந்த வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த கட்டளை மையத்தின் வருடாந்திர செலவுத் தொகை $3,000 கோடி (சுமார் ரூ 1.8 லட்சம் கோடி). இந்த வளாகத்தில் கப்பற்படையின் உயர் அதிகாரிகளும், சுமார் 3,000 கப்பற்படை மற்றும் சிவில் ஊழியர்களும் பணி புரிகின்றனர். அந்த வளாகத்துக்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளே செல்பவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகிறார்கள். உரிய அனுமதி அட்டை இல்லாமல் யாரும் நுழைய முடியாது.

அலெக்சிஸ் ஆரோன் என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக கடற் படையில் மூன்றாம் கிரேடு, கடைநிலை ஊழியராக பணி புரிந்து, 2011-ல் விடுவிக்கப்பட்டார். அவர் இப்போது அமெரிக்க கடற்படையின் கணினி அமைப்பை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள எச்பி (ஹியூலெட் பாக்கார்ட்) நிறுவனத்தின் உப ஒப்பந்ததாரர் “தி எக்ஸ்பர்ட்ஸ்” நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடற்படையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனுமதி அட்டை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. கடற்படை அலுவலக வளாகத்துக்குள் தனது அனுமதி அட்டையை பயன்படுத்தி நுழைந்த ஆரோன் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு 197 எண் கட்டிடத்திற்கு போயிருக்கிறார். தரைத்தள நடைபகுதிக்கும், உணவகத்துக்கும் மேல் எழுப்பப்பட்டுள்ள தளத்துக்குப் போய் அங்கிருந்து கீழ் நோக்கி கண் மூடித் தனமாக சுட்டிருக்கிறார்.

அவரது தாக்குதலில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர், வாஷிங்டன் மாநகர போலீஸ் வளாகத்தைச் சூழ்ந்து திருப்பிச் சுட்டதில் அலெக்சிஸ் ஆரோனும் கொல்லப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ ஒப்பந்த ஊழியர்கள். மைக்கேல் அர்னால்ட் (59), சில்வியா ஃபிரேசர் (53), கேத்தி கார்டே (62), ஜான் ரோஜன் ஜான்சன் (73), ஃபிராங்க் கோலர் (50), கென்னத் பெர்னார்ட் புராக்டர் (46) ஆகியோருடன் இந்தியாவைச் சேர்ந்த 61 வயதான பாதுகாப்புத் துறை காண்டிராக்ட் ஊழியர் விஷ்ணு பண்டிட்டும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார். வீடியோ பதிவுகளின் அடிப்படையில் இன்னும் இரண்டு நபர்களை சந்தேகிப்பதாக அறிவித்த போலீஸ் இறுதியில் இந்த சம்பவத்துக்கு அலெக்சிஸ் ஆரோனை மட்டும் பொறுப்பாக்கியுள்ளது.

மக்கள்
பயந்து ஓடும் மக்கள்.

34 வயதான அலெக்சிஸ் ஆரோன் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஃபோர்ட் வொர்த் என்ற இடத்தைச் சேர்ந்தவர். புத்த மதத்தை பின்பற்றுபவர். 2001, செப்டம்பர் 11 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் கோபத்தை கையாள்வதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவரது தந்தை கூறியிருக்கிறார்.

2004-ம் ஆண்டு சியாட்டிலில் ஒரு கட்டிடத் தொழிலாளரின் கார் டயர்களை சுட்டு சேதப்படுத்தியதாகவும், 2010-ம் ஆண்டு ஃபோர்ட் வொர்த்தில் தன் வீட்டுக் கூரையில் சுட்டதாகவும் அலெக்சிஸ் ஆரோன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2004-ம் ஆண்டு சம்பவத்தின் போது தொழிலாளர் இவரை இன ரீதியாக திட்டியதால் ஆத்திரத்தில் சுய நினைவு இழந்து விட்டதாகவும், சுட்டதாக நினைவில்லை என்றும், 2009-ல் துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது அது தற்செயலாக வெடித்து விட்டதாகவும் ஆரோன் கூறியிருக்கிறார்.

அலெக்சிஸ் ஆரோன் 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கடற்படையில் மின்சார வேலைகள் செய்யும் கடைநிலை ஊழியராக பணி புரிந்தார் என்று அமெரிக்க கடற்படை அமைச்சர் ரேய் மாபுஸ் தெரிவித்திருக்கிறார். பல்வேறு சிறு முறைகேடுகளைத் தொடர்ந்து பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக கடற்படை கூறுகிறது.

போலீஸ்
தளத்தை சூழ்ந்து கொண்ட போலீஸ்.

அதைத் தொடர்ந்து தி எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் ஆரோன். கடந்த சில மாதங்களில் பல்வேறு கடற்படை அலுவலகங்களில் பணி புரிந்த அலெக்சிஸ் ஆரோன் சென்ற வாரம் கடற்படை வளாகத்தில் வேலை செய்ய ஆரம்பித்ததாக தி எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் ஹோமஸ் ஹொஷ்கோ கூறியிருக்கிறார்.

தி எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம், “தகவல் தொழில்நுட்பம், பொறியியல், தொலை தொடர்பு மற்றும் நிறுவன செயல்பாடு தொடர்பான சேவைகளை வழங்குவதாகவும், வெளிநாடுகளில் போர்களுக்கும் உள்நாட்டில் பாதுகாப்புக் கொள்கைக்கும் தேவையான சேவைகளை வழங்குவதாகவும்” அதன் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

டெக்சாசில் ஆரோனின் நண்பர் மைக்கேல், ஆரோன் பண விவகாரமாக ஒப்பந்த நிறுவனத்திடம் கோபமாக இருந்ததாகவும் ஆனால் இது போன்ற வன்முறை செயலில் ஈடுபடும் போக்கு அவரிடம் தென்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறார். இணையத்தில் துப்பாக்கி வீடியோ கேம்கள் விளையாடுவது ஆரோனின் பொழுதுபோக்காக இருந்துள்ளது.

பாதுகாப்பு வளையம்
தளத்தைச் சுற்றிய பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

தாக்குதலின் போது கடற்படை வளாகத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த கடற்படை தளபதி ஜொனாதன் கார்னெட் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். 197-ம் எண் கட்டிடத்தில் பணி புரியும் கேப்டன் மார்க் வாண்ட்ரோஃப் அவருடன் பணி புரிபவர்களுடன் விவாத அறையில் இருந்ததாகவும், நிலைமை பாதுகாப்பானதுதான் என்று தெரிவது வரை தரையில் மண்டியிட்டு பதுங்கியிருந்ததாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். தரையில் பதுங்கியிருந்த போது பயமாக இருந்தாலும் அவரும் சக ஊழியர்களும் அமைதியாக இருந்ததை நினைத்து பெருமைப் படுவதாக கூறியிருக்கிறார். அந்த இடம் பாதுகாப்பானது என்றும் போலீஸ் வந்து நம்மை மீட்டு விடும் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க செனட் கட்டிடங்களும், அருகில் உள்ள 6 பள்ளிகளும் சீல் செய்யப்பட்டன. ரீகன் உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது சிறிது நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. வெள்ளை மாளிகையின் வெளிச் சுவருக்குள் பட்டாசு கொளுத்திப் போட்டவரை கைது செய்த பாதுகாப்புப் படையினர் வெள்ளை மாளிகையின் முன் பகுதியை சீல் செய்தனர். கப்பற்படை வளாகத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டது.

அரசு முறை துக்கம்
அமெரிக்க அரசு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஒபாமா உத்தரவிட்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆரோனின் செயலை கோழைத்தனமானது என்று கண்டித்திருக்கிறார். கொல்லப்பட்டவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்கக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

“அமெரிக்காவில் இன்னும் ஒரு படுகொலை நிகழ்வை நாம் சந்திக்கிறோம். இந்த முறை அது நாட்டின் தலைநகரில் உள்ள ராணுவ தளத்திலேயே நடைபெற்றிருக்கிறது. ராணுவ வீரர்களும், பாதுகாப்புத் துறை ஊழியர்களும் வெளிநாட்டில் பணி புரிவதில் உள்ள அபாயங்களை புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால், இன்று அவர்கள் சொந்த நாட்டிலேயே நாம் நினைத்துப் பார்த்திருக்காத வன்முறையை எதிர் கொண்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்கப் பேரரசின் கையறு நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹாலிவுட் உளவு திரைப்படங்களில் வருவது போன்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன, அலெக்சிஸ் ஆரோன் கொல்லப்பட்டது ஏன் போன்றவை குறித்த உண்மை விபரங்கள் வெளிவரப் போவதில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும், சிரியாவிலும் உலக மக்களை பாதுகாக்க தனது இராணுவ வல்லாதிக்கத்தை பயன்படுத்துவதாக முழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, தனது சொந்த நாட்டில் இத்தகைய ‘எதிரிகளை’ சமாளிக்க முடியாமல் அபாயத்தால் சூழப்பட்டிருக்கிறது.

ஏகாதிபத்திய இராணுவங்களிலும் அரசு அமைப்புகளிலும் பணியாற்றுவோர் இத்தகைய மனப்பிழற்வை கொண்டிருப்பது என்பது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்களின் சிக்கலோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆரோன் ஒரு கருப்பினத்தவர் என்றாலும் இத்தகைய உளவியல் சிக்கல்களை வெள்ளையின சிப்பாய்களும் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்களது தற்கொலை விகிதங்கள் காட்டுகின்றன. அதே நேரம் ஒரு கருப்பினத்தவர் அமெரிக்காவின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பால் தீவிரவமாக பாதிக்கப்படுவதும் உண்மையே.

ஆக்கிரமிப்பு இராணுவம், அரசுகளில் பணிபுரிவோர் தமது நடவடிக்கைகளால் ஏழை நாடுகளில் கொல்லப்படும் மக்கள் குறித்து கவலைப்படமாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, இத்தகைய போர் நடவடிக்கைகளும் காரணங்களற்ற ஆக்கிரமிப்பு கொலைகளும் அவர்களை என்றாவது ஒரு நாள் அசைத்து விடுகிறது. விளைவு இத்தகைய துப்பாக்கி சூடுகளாகவோ இல்லை தற்கொலைகளாகவோ இருக்கின்றது.

இதை இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் தமது மேலதிகாரிகளை சுடுவதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம். சுருங்கக் கூறின் எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனும்  நிம்மதியாக இருந்து விட முடியாது. ஏழை நாடுகளின் மக்களை குறிபார்க்கும் அவர்களது துப்பாக்கி சில நேரங்களில் அவர்களையே சுட்டு விடுவது நடந்தே தீரும்.

மேலும் படிக்க

சொத்துக்காக திருமணம் – ஆதிக்க சாதிகளின் அயோக்கியத்தனம் !

3

ள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கப்பட்ட ஒரு 17 வயது மாணவிக்கு, திடீரென்று ஒரே வாரத்துக்குள் கல்யாணம் செய்து வைத்தால் அவளால் எப்படி தடுத்து நிறுத்த முடியும்? கிராமம், கிராமத்தில் உள்ள பள்ளியில் படிப்பு, ஆடு, மாடு, வயல் என்றும், அம்மா, அப்பா, தம்பி, தங்கை, உறவினர்கள் என்றும் ஒரு வட்டத்துக்குள் சுற்றி வந்தவள் பட்டணத்து கல்லூரியை கண்டு எப்படி சந்தோசப்பட்டிருப்பாள். படிப்புதான் முக்கியம் என்று தோன்றினாலும், எதையும் தைரியமாக சொல்லவோ, முடிவெடுக்கவோ உரிமை இல்லாத கிராமத்து குடும்பப் பெண் எப்படி மறுத்து பேசுவாள்? எனக்கு இந்த திருமணம் வேண்டாம், என்னை படிக்க வையுங்கள், நான் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று எதிர்த்து போராடத்தான் முடியுமா? படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு குழந்தைக்கு கல்யாணம் செய்கிறோமே என்ற எண்ணமோ, அறிவோ இல்லாத பிற்போக்கான குடும்பம், அந்த குழந்தையின் மனதில் உள்ள ஆசையை, ஏக்கத்தைப் புரிந்துக் கொள்ளத்தான் நினைப்பார்களா?

பெண் அடிமைத்தனம்தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் நடந்த்துள்ளது இந்த திருமணம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த 17 வயதே ஆன அந்த மாணவியை 35 வயதுக்கு மேலே உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள். “சொந்தக்கார மாப்பிள்ளை, அதுவும் பணக்கார மாப்பிள்ளை, படிச்சுருக்காரு இதவிட நல்ல மாப்பிள்ளை கிடைக்காது” என்பதுதான் மாப்பிள்ளைக்கு தகுதி. குடும்பத்தில் மூத்த பெண்தான் இந்த கல்யாணப் பெண். ஆண் வாரிசு ஆசையில் இவளுக்கு கீழே வரிசையாக இன்னும் மூன்று பெண்களும், அதற்கு பிறகுதான் ஒரு ஆண்பிள்ளையும் உள்ளது. இந்த குடும்பத்தினர் அந்த ஊரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பணக்காரர்கள். இருந்தாலும் சொத்தின் அளவுக் குறையாமல் நான்கு பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதுவும் இவர்கள் அளவுக்கு குறையாத, பணக்காரர்களாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கல்யாண வயது ஆகி விட்டதா, ஆண் பெண்ணுக்கு பொருத்தமானவரா என்பதெல்லாம் முக்கியமில்லை. பணம் பணத்தோடு சேர வேண்டும். முக்கியமாக இனத்தோடும் சேர வேண்டும். இதை தாண்டி பெண்ணின் திருமணத்தில் இவர்களுக்கு எதுவும் முக்கியமானதாக படவில்லை.

இரண்டு குடும்பத்தார்களிடையே உள்ள சொத்து பிரச்சனையில் தான் இந்த திருமணம் நடந்துள்ளது. “பொண்ணைக் கொடு இல்லையேல் சொத்தை பற்றிய விவகாரத்தை தீர்த்துக் கொள்வோம்” என்பதுதான் பிரச்சனை. பணக்காரர்களின் விவகாரம் என்பதால் யார் சொத்து யாரிடம் இருக்கு என்பது வெளியில் தெரியவில்லை. இந்த சொத்துக் கணக்கு வழக்கை முடித்துக் கொள்ளத் தான் இந்த அவசர திருமணம். சொத்து பத்து அதிகம் உள்ள மாப்பிள்ளை, பெண்ணுக்கு வயது ஆகலையேன்னு விட்டுட்டா நாம தேடுறப்ப பணக்கார மாப்பிள்ளை கிடைப்பானா. அதுவும் தவிர சொத்தும் நமக்குள்ளேயே ஒன்னுக்குள் ஒன்னாக இருக்கும் என்ற அடிப்படையில் நடந்து முடிந்துவிட்டது இந்த திருமணம்.

இதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெண்ணை இது போலவே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி பதினாறு வயதிலேயே, அதிக வயசு வித்தியாசம் உள்ள தாய் மாமாவுக்கு சொத்துக்காக திருமணம் செய்து வைத்தார்கள். நல்லாப் படிக்கக் கூடிய அந்த பெண் படிப்பில் அதிகம் ஆர்வமுடன் இருந்தால். திருமணம் முடிந்தாலும் பரவாயில்லை நான் படிக்கிறேன் என்றாள். அதை மறுத்து அந்தப் பெண்ணை இல்லற வாழ்க்கையில் ஈடுபடும்படி குடும்பத்தார் வழியுறுத்தினர். தனியாக வீடு பார்த்து இருவரும் சேர்ந்திருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினர். கொஞ்சமும் விருப்பம் இல்லாத அந்த பெண் மனதளவில் பாதிக்கப்பட்டு பிரமைப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள். அவள் வாய் திறந்து பேசும் சொற்பமான பேச்சும் படிப்பை பற்றியே இருக்கும். திருமண வாழ்க்கையால் மன உளைச்சலில் இருந்தவள் இப்போது மன நோயாளியாகவே ஆகிவிட்டாள். இருந்தும் மீண்டும் அதே குடும்பத்தை சேர்ந்த இன்னும் ஒரு பெண்ணை கொஞ்சமும் பயம் இல்லாமல் சொத்துக்காக துணிந்து கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள்.

அதிகாலை நான்கு மணிக்கு வெளியூரில் உள்ள கோவிலில் வைத்து இந்தத் திருமணம் நடந்திருக்கிறது. பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் சில பேர் காவல் துறையில் உள்ளவர்கள். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த திருமணத்தில் சொந்தக்காரராக முன்னிருந்து அனைத்து வேலைகளையும் பொறுப்பாக கவனித்துள்ளார்கள். சட்டப்படி தடுக்கவில்லை என்றாலும் உறவினராக இருந்து பெண்ணின் பெற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி தடுத்திருக்கலாம். அனைவரும் சேர்ந்தே இந்த சின்னப் பெண்ணுக்கு கல்யாணம் எனும் விலங்கை பூட்டிவிட்டார்கள். இனி அவள் ஒரு ஆயுள் கைதியாக இருக்க வேண்டியதுதான்.

படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? எதுக்கு கல்லூரிக்கு படிக்க அனுப்பினார்கள்? நல்லா படிக்க வைத்து பெண்ணின் லட்சியத்தை நிறைவேற்ற அல்ல. படித்த மாப்பிள்ளை வந்தால் கல்யாணச் சந்தையில் விலைபேசத் தோதுவாக இருக்கும் என்பதற்காக ஒரு டிகிரி படிப்பு அவ்வளவுதான். பெண்ணைக் கல்லூரிக்கு அனுப்பிய பிறகு காதல், கீதல் வந்துவிடும் என்றப் பயத்திலேயே பெற்றவர்கள் இருப்பார்கள். இது போல் மாப்பிள்ளை வந்தால் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, பெண்ணின் எதிர்காலம் குறித்து சிறிதளவும் சிந்திக்காமல் கல்யாணப் புதைகுழிக்குள் தள்ளிவிடுவார்கள்.

செங்கல், ஜல்லி, மணல் வியாபாரம் செய்றவர் ஒருவர் சொன்னார். “எனக்கு இரண்டு பொண்ணு பாத்துருக்காங்க. ஒரு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு, ஆனா எந்த லாபமும் இல்ல. இன்னொரு பொண்ணைக் கொஞ்சமா புடிச்சுருக்கு. ஆனா நல்ல லாபம், அவங்க வீட்டுல தருசு நிலம் இருக்கு செங்கல் காளவா போட்டுக்கலாம், பொண்ணோட தம்பி சிவில் இஞ்சினீயர் முடிக்கப் போறான், பணமும் கைவசம் வச்சுருக்காங்க, வியாபாரத்துல நெருக்கடின்னா உதவுவாங்க, அதனால இந்த பொண்ண புடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்.” மனது ஒத்துப் போகுதா என்பதெல்லாம் பாக்காம, இந்த திருமணத்தில் என்னென்ன லாபம் இருக்கு அப்படிங்கறதத்தான் பாக்றாங்க.

லெனின்கிராமத்துலப் புருசன் வீட்டில் வாழப்போற பொண்ணுக்கு நல்லது, கெட்டது சொல்லியனுப்புவாங்க. ‘’வீட்டுல உனக்குக் கீழ இன்னும் பொண்ணுங்க இருக்காங்க, அத மனசுல வச்சுகிட்டு மாப்பிள்ளை வீட்டுலப் பாத்து நடந்துக்கணும். எடுத்ததுக்கெல்லாம் கோபப்படக் கூடாது. மாப்பிள்ளக் கை நீட்டற அளவுக்கு நீ நடந்துக்கக் கூடாது. ஆன்னா, ஊன்னா, பொசுக்கு பொசுக்குன்னு அம்மா வீட்டுக்கு வந்துறக் கூடாது. எது நடந்தாலும் அனுசரிச்சுப் போகணும்.” இந்த வார்த்தைகளைப் புத்திமதிங்கற பேர்ல சொல்லி, புருசன் வீட்டுக்குப் போற பெண்கள அடிமைகளாக இருக்கணுங்கறதத் தான் வலியுறுத்துறாங்க. பிறகென்ன சுயமரியாதையை விட்டுட்டு, சம்பளம் இல்லாத வேலக்காரியா இருக்க வேண்டியதுதான்.

இந்த அறிவுரை எனும் பயமுறுத்தலான வார்த்தைகள் எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு வடிவில் பெண்களை பின்தொடர்ந்தே வரும். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் சொல்லத் தயக்கமாக இருக்கும். நமக்குள்ளேயே மறைக்க தோணும். சந்தோசம் இல்லையென்றாலும் இருப்பது போல் நடித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் வாழப் பழகிடும். நம்மால் பெற்றவர்கள் குடும்பம் நிம்மதி இல்லாமல் போய்விடும் என்ற பயத்தால சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழவேண்டிவரும்.

ஆயிரம் ஆசையுடனும், கனவுகளுடனும் மனதார விருப்பப்பட்டு ஒருவரை திருமணம் செய்து கொள்ளத்தான் ஒரு பெண் ஆசைப்படுவாள். ஆனால் ஆசை ஆசையாகத்தான் இருக்குமே தவிர நடைமுறை வேறாகத்தான் அமையும். அதுவும் கிராமத்து பெண் என்றால் விருப்பு வெருப்பு எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவள். உயிர் உள்ள எந்திரம் போல இருக்க வேண்டியதுதான். அவளைப் பற்றிய எந்த ஒரு முடிவானாலும் ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்களை பொருத்த வரையில் பெண் என்பவள் மனுசி அல்ல. எஜமானன் சொல்லுக்குக் கட்டுப்படும் ஆடு, மாடுகளைப் போல் அவளும் ஒரு விலங்கு.

என்று மாறும் இந்த அவல நிலை?

– சரசம்மா

உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !

8

ஆயத்த ஆடைகள் – ஒப்பந்தப் பணிகளும் தொழிலாளர் பற்றாக்குறையும் – 2

மூன்றாண்டுகளுக்கு முன்னால் திருப்பூர் நகருக்கு சென்றிருக்கிறீர்களா? சென்றிருந்தால், குறிப்பிட்டு சொல்லமுடியாத ஒரு பரபரப்பை நகரின் சகல திசைகளிலும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அந்த இயல்புக்கு மாறான வேகம்தான் அந்த நகரின் வளர்ச்சிக்கான ஆதாரம். தினசரி 50 விழுக்காடு கூடுதல் உழைப்பு என்பது அங்கே கட்டாயம். உங்களது சுற்றத்தில் யாரேனும் ஒருவர் அல்லது பலர் திருப்பூருக்கு சென்று வசதியாக வாழ்வதை பார்த்திருக்கக்கூடும் (வசதி என்பதை உள்ளூரில் இருந்ததைக் காட்டிலும் வசதியாக என்று மட்டும் பொருள் கொள்ளவும்). குறைவான ஊதியம் கிடைக்கும் வேலையில் கூடுதலான உழைப்பைக் கொடுப்பதன் மூலம் பெறப்பட்ட வசதி அது.

வங்க தேச தொழிலாளர்மும்பையிலும் சென்னையிலும் இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த பெருமளவுக்கான ஆடைத் தொழிற்சாலைகள் இப்போது இல்லை. பெங்களூரின் பெரிய ஆடைநிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மாண்டியா,  ஹசன்,  தொட்பெளாபூர்,  தும்கூர் போன்ற சிறுநகரங்களுக்கு இடம் மாற்றுகின்றன. மராட்டிய எல்லையில் இருக்கும் நகரத்துக்கு தொழிற்சாலையை மாற்றிய நிறுவனங்களும் உண்டு. உற்பத்தி தொலைவில் இருந்தால் பொருட்களை நகர்த்தும் செலவு கணிசமாக அதிகரிக்கும், ஆனாலும் பெரிய நிறுவனங்கள் தங்கள் புதிய தொழிற்சாலைகளை சிறு நகரங்களுக்கு மாற்றுகின்றன.

வங்கதேசத்தில் 36 லட்சம் மக்கள் ஆயத்த ஆடைத்துறையில் பணியாற்றுகிறார்கள். அந்நாட்டின் ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு மட்டும் 78 சதவிகிதம். இத்தனைக்கும் அந்த நாடு ஆடையுற்பத்திக்கான சகல பொருட்களையும் இறக்குமதி செய்தாக வேண்டும். இந்த அசுர வளர்ச்சி இருபத்தைந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. அப்படியெனில் ஆடையுற்பத்திக்கேற்ற ஏதோ ஒரு சிறப்பியல்பு அங்கே இருந்தாகவேண்டும் இல்லையா? அது என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? மிகக்குறைவான ஊதியம் எனும் தகுதி மட்டுமே அதற்கான அடிப்படை. ஒரு வங்கதேச தொழிலாளி ஒரு மணி நேரத்துக்கு 0.15 அமெரிக்க டாலருக்கு இணையான தொகையை ஊதியமாக பெறுகிறார். இதே வேலையை செய்ய ஒரு துருக்கி நாட்டு ஊழியருக்கு 7.3 டாலர்கள் ஊதியம் தரவேண்டும். (2010- ம் ஆண்டின் தரவுகள், ஊதியம் இதர சலுகைகளையும் உள்ளடக்கியது). பிற நாட்டு ஊதிய விகிதம் கீழே,

ஜெர்மனி – 25 $
தென் கொரியா : 5 $
இந்தியா : 0.35 $
தாய்லாந்து: 1.75 $

ஆயத்த ஆடைத்துறையின் வளர்ச்சியை கவனித்தால் அது ஒரு நாடோடியைப்போல இடம் மாறுவது புரியும். அத்துறைக்கான தேவை மலிவான் ஊழியர்கள் மட்டுமே. அதற்காக எந்த இடத்துக்கும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கின்றன பெரிய நிறுவனங்கள்.

தொழிலாளர்களுக்கான நிதியை குறைப்பதற்கான ஒரு உத்தியாகவே ஒப்பந்தத் தொழிலாளர் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. எல்லா தொழிலாளிக்கும் ESI, PF கொடுக்கும் ஒரு நிறுவனத்தைக்கூட நான் திருப்பூரில் பார்த்ததில்லை. மிகச்சிலரை நிறுவனத்தின் தொழிலாளியாக வைத்துக்கொண்டு மற்ற எல்லோரும் சில கான்ட்ராக்டர்களின் கீழ் பணியாற்ற வைக்கப்படுகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர் முறையில் நிறுவனத்துக்கும் தொழிலாளிக்கும் யாதொரு பந்தமும் இல்லை.

இடம் பெயரும் தொழிலாளர்கள்கோவை பயனீயர் மில்லில் நான் பயிற்சியில் இருந்தபோது அங்கே பணியாற்றிய பலர் தினக்கூலிகள், அவர்களில் பெரும்பாலானவர்கள் அருகேயிருக்கும் ராதாகிருஷ்ணா மில்லில் நிரந்தரத் தொழிலாளியாக இருந்தவர்கள். ராதாகிருஷ்ணா மில் மூடப்பட்டதால் வேறுவழியில்லாமல் அவர்கள் தினக் கூலியானார்கள். திருப்பூரில் கதை கொஞ்சம் வித்தியாசமானது. அங்கே கூடுதல் ஊதியத்துக்கான ஒரு வழியாக இந்த ஒப்பந்தத் தொழில்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய சூழலில் திருப்பூர் உற்பத்தி மலிவானதாக இருந்ததால் பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைத்தன. அதே நேரத்தில் தஞ்சை மதுரை வட்டாரங்களில் விவசாயம் லாபமற்ற தொழிலானதால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வேலைக்காக அங்கே இடம் பெயர்ந்தார்கள்.

எதேச்சையான இந்த இரட்டை வாய்ப்பு திருப்பூரில் ஒப்பந்த தொழில் முறையை கேள்விகள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ள வைத்தது. நம்மால் கற்பனை கூட செய்யவியலாத கடுமுழைப்பைக் கோரும் திருப்பூரின் பணிச்சூழலுக்கு காரணங்கள் மூன்று. அங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பை பறி கொடுத்தவர்கள், ஆகவே திருப்பூர் வாழ்வு அவர்களுக்கு ஒரு நிர்ப்பந்தம். இரண்டாம் காரணி, மற்ற ஊர்களைக் காட்டிலும் திருப்பூரில் வாழ்கைக்கான செலவினங்கள் அதிகம். ஒரு சராசரி வாழ்க்கைக்கே நாம் அங்கே அதிகம் செலவிட்டாக வேண்டும். ஆகவே கூடுதல் உழைப்பைத் தருவதன் வாயிலாக மட்டுமே நீங்கள் அங்கே வாழ்வதற்கான ஊதியத்தைப்பெற இயலும். மூன்றாம் காரணி, முதலிரண்டு காரணிகளால் அதீத உழைப்பு இங்கே ஒரு வாழ்க்கைமுறையாகி விட்டிருக்கிறது. உங்களுக்கு அதிக பணம் அவசியமில்லா விட்டாலும் இங்கே பணியாற்ற வேண்டுமென்றால் இந்த வாழ்க்கை முறைக்கு உங்களை பொருத்திக் கொண்டாக வேண்டும்.

ஒப்பந்த தொழிலின் மூலம் ஒரு முதலாளி தனது தொழிலாளிகளின் எதிர்காலம் மற்றும் உடல் நலனுக்காக நிறுவனத்தின் சார்பாக செய்ய வேண்டிய செலவில் இருந்து தப்பிக்கிறார். ஒரு வேலைக்கான கூலியை பேரம் பேசி கொடுக்கும் வாய்ப்பை பெறுகிறார். தொழிலாளிகள் தங்கள் உரிமையை கேட்பதற்கான அனேக வழிகளை அடைக்கிறார். ஆகவே முதலாளிகளை இது பெரிதும் வசீகரிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், கேரளாவில் இருந்து ஆட்களை (பெருமளவில் பெண்கள்) கூட்டி வரும் தரகர்கள் திருப்பூரெங்கும் இருந்தார்கள். தமிழக தொழிலாளர்களுக்கும் கேரள தொழிலாளர்களுக்கும் பெரிய சம்பள வேறுபாடு இல்லை. ஆனால் கேரள பெண்களை கடுமையாக வேலை வாங்க இயலும் (தொடர்ந்து 48 மணி நேரம் கூட வேலை இருக்கும். பண்டிகை விடுமுறையிலும் வேலை வைக்க முடியும். குடும்பத்தோடு வசிக்காதவர்கள் என்பதால் கேட்க ஆளிருக்காது). ஆகவே அப்போது கேரள பெண்களுக்கு பெரிய வரவேற்பு அங்கே இருந்தது.

இப்போது அந்த மவுசு வடமாநில தொழிலாளர்களுக்கு திரும்பியிருக்கிறது. பாதி சம்பளத்துக்கு வேலைக்கு வரத் தயாராயிருக்கும் அவர்களை கொண்டு வரும் புரோக்கர்களின் காலம் இது. அடுத்து, இரண்டு வேளை சோற்றுக்கு எந்த நாட்டிலாவது ஆட்கள் கிடைத்தால் வடமாநில தொழிலாளர்கள் வீதியில் வீசியெறியப்படுவார்கள் (சென்னை சில்க்ஸ் குழுமம் நேபாளத்தில் இருந்து தொழிலாளர்களை கொண்டுவந்திருக்கிறது).

கடும் உழைப்புநான்காயிரம் ஊசிகளுக்கு நூல் கோக்கும் வேலையை உங்களால் யோசிக்க மட்டுமாவது இயலுமா? இதையொத்த ஒரு வேலை நெசவாலைகளில் வழக்கமான பணி. இரண்டு கிலோ எடையுடைய கத்திரியால் உங்களால் எவ்வளவு நேரம் துணி வெட்ட முடியும்? இது ஆடைத் துறையில் நாள் முழுக்க செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று. முகத்துக்கு கீழும் முதுகுக்கு பின்னும் நீராவியை கக்கும் அயர்ன் பாக்ஸ்கள் இடையே நின்றுகொண்டு உங்களால் எத்தனை சட்டைகளுக்கு இஸ்திரி போட இயலும்? இங்கே ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு சட்டைக்கு இஸ்திரி போட்டாக வேண்டும். ஒரு நூற்பாலையின் பேரிரைச்சலிலோ அல்லது சாயப்பட்டறையின் ரசாயன நெடியிலோ நம்மால் வேலை செய்ய மட்டுமல்ல, வெறுமனே ஒரு மணிநேரம் நிற்கக்கூட முடியாது.

இத்தகைய கடுமையான மனித உழைப்பைக் கொண்டுதான் நாம் அணியும் ஆடைகள் உற்பத்தியாகின்றன. இந்த மனித உழைப்பை எப்படி இன்னும் மலிவாக பெற முடியும் என்பதில் மட்டும்தான் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. மற்றபடி எந்த நவீன மாற்றமும் கடந்த பதினைந்தாண்டுகளில் இங்கே வந்து விடவில்லை. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதோ ஒரு இடத்தில் பெருந்தொகையான மக்களை இந்த தொழில் சக்கையைப்போல தூர எறிந்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்கிறது.

ஜவுளித்துறை என்றில்லை, நாம் வாழ்வின் தவிர்க்கவியலாத எல்லா பொருட்களும் அயல் பணிகள் வாயிலாகவோ அல்லது உப ஒப்பந்தங்கள் மூலமோதான் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றன. அரசாங்கத்தால் நடத்தப்படும் பல நிறுவனங்களிலும் ஒப்பந்தப் பணியாளர் முறை நடைமுறைக்கு வந்தாயிற்று. முன்பணம் கொடுத்தால் மாத்திரை மருந்தை தயாரித்து கொடுக்கும் தொழிற்சாலைகள் கூட பாண்டிச்சேரியில் இருக்கின்றன. மனிதாபிமானமற்ற இந்த வியாபார உலகம் வெறுமனே தொழிலாளிக்கு மட்டும் எதிரானதில்லை.

புற்றுநோயை உண்டாக்கவல்ல குழந்தைகள் பவுடரை தயாரித்த ஜான்சன் &ஜான்சன், சுற்றுச்சூழலுக்கு பாதகமான ஒரு லட்சம் தவேரா வாகனங்களை தயாரித்த ஜெனரல் மோட்டார்ஸ், ஆறு குழந்தைகளைக் கொன்று, 80000 சிறார்களின் உடல்நலனை பாதிப்படைய வைத்த சீனாவின் பால் பவுடர் நிறுவனம் போன்ற எண்ணற்ற உதாரணங்கள் சொல்வது யாதெனில், முதலாளித்துவத்துக்கு தொழிலாளி மட்டுமல்ல வாடிக்கையாளனும் மயிருக்கு சமானமே. ஆகவே இன்றைய உற்பத்தி முறையை எதிர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும் இருக்கிறது. சுரண்டலுக்கு எதிரான தொழிலாளியின் குரல் எங்கேனும் கேட்டால் நினைவில் வையுங்கள்  “அவனது வெற்றியில்தான் நமது நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது”.

– வில்லவன்

பெரியார் பிறந்த நாள் – பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !

94

செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாள், பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !

பெரியார்

  • கந்த சஷ்டி கவசமின்றி
    தமிழனால்,
    காலைக் கடனும்
    கழிக்க முடியாத அவலம்,
    உட்கார்ந்து எழுந்தால் கூட
    சிவ,சிவா … ராமா சுலோகம்
  • ஒரு பக்கம்… பார்ப்பன மதர்ப்பு
    மறுபக்கம்… சைவக் கொழுப்பு
    அறிவின் வழியெங்கும்
    ஆரிய அடைப்பு.
  • வெள்ளாமை எங்கும்
    வெள்ளாள, முதலி, பார்ப்பன சவுக்கு
    எதிர்த்துக் கேட்டால்
    மனுதர்மத்தால் ஆளைத் தூக்கு!
  • மூடத் தனத்தால் மூளை கருகி
    சாதித்தமிழன் நெற்றியெங்கும்
    சாம்பல் மேடுகள் …பிராமண வாயுவை
    சுவாசித்து, சுவாசித்து
    ‘ஒரிஜினல்’ தமிழன் குருதிக்குள்ளும்
    பூணூல் கோடுகள்…
  • பெரியார்இதுதான் நிலைமை…
    இனி யாரால் மாறும்? என
    இறுமாந்த பார்ப்பனியத் தலையில்
    இடியாய் விழுந்தார் பெரியார் !”எவன்டா இந்து?
    எல்லோரும் ஒன்று எனில்
    எங்களையும் கருவறையில் விடு!” – என
    பெரியார் போட்ட போடில்
    துடியாய் துடித்தது தர்ப்பை,
    சாதியம் தான் பார்ப்பனியம் – என
    சரியாய் பிளந்தார் பெரியார் !
  • அறிவாளிகள் எல்லாம்
    ஆராய்ச்சியில் இருந்த போது,
    “நீ வேலை செய்தால்
    அவன் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பான்
    அதான்டா பார்ப்பான்”!
    சுரண்டல்தான் பார்ப்பனியம்
    என சுறீரென்று கொடுத்தார் !”சட்டையைக் கழற்றி விட்டு பாத்தா
    எந்த சாதிக்கும் வித்தியாசமில்ல” – என
    பொட்டில் அடித்தது போல்
    பெரிய விசயங்களை
    எளிதாக எடுத்துப் போடுவதில்
    பெரியாருக்கிணை பெரியார்!
  • பார்ப்பனப் பெண்ணாயினும்
    வேலைக்குப் போய், சுயசார்பு வேண்டுமென
    அறிவுறுத்தியவர் பெரியார்,
    வேலைக்குப் போகும் பெண்கள் சுத்தமில்லை – என
    காவாயைத் திறந்தவன் ‘பெரியவா’
    உரியவா! சொல்லுங்கள்
    யார்? பெரி…யார்?
  • பலரும்
    பயந்து பயந்து
    தொட்டு வைத்த எதையும்,
    பெரியார் விட்டு வைக்கவில்லை,
    பார்ப்பன குதர்க்கம்
    பார்த்த இடமெங்கும் குட்டு வைத்தார்,
    பாருங்கள்,
    சோவின் தலையில்
    இன்னும் பெரியார் வீக்கம்,
    ஜெயமோகன் கிளையில்
    பெரியார் புழுக்கம்…
    பகுத்தறிவுக் கொவ்வா
    தமிழ் பிழைப்புவாதம் பார்த்து
    காட்டுமிராண்டியே பதில் சொல் – என
    கேட்டு வைத்தார் !
    இதோ ஈழத்தாயின்
    பார்ப்பன பிராதுகளோடு இன்று
    ஆஜராகிறார் சீமான்.
  • உயிரோடிருக்கும் கருணாநிதியிடமும், கனிமொழியிடமும்
    உரையாடி ஒரு முடிவுக்கு வாராமல்,
    போயசு மாமியிடமும் ஒரு எட்டு வைத்து
    கட்டுப்பட்ட சிறுத்தை ரவிக்குமார்
    கட்டுடைக்கிறாராம் பெரியாரை.கேட்பவர்களின் யோக்கியதை
    பெரியாரின் போதாமையை விட
    பின் தங்கியிருப்பதால்
    உண்மையில்,
    தமிழியம், தலித்தியம், இந்தியம் என
    பல வண்ண  பார்ப்பனியர்களை
    பெரியார் இன்னும் புட்டு வைக்கிறார்.

    புராணம், இதிகாசமென
    தடித்துப் போன தோளில்
    சுயமரியாதை உணர்ச்சியெழுப்ப
    தமிழனை தட்டி வைத்தார் பெரியார்.

    பார்ப்பன பாசியில்
    வழுக்கிய விதைகளை
    அவர்தான் மான உணர்ச்சியில்
    நட்டு வைத்தார்!பெரியார்அடிமை நாக்கு
    பார்ப்பனர் சுவை
    படர்ந்த நாட்களில்,
    பகுத்தறிவு சுவையை
    பழக்கியவர் பெரியார்
    பகுத்தறிவுக்கு சுவையுண்டா?
    நான்றியேன்,
    ஆனால் பெரியார்
    பார்ப்பானுக்கு கசக்கிறார்
    பாட்டாளி சூத்திரனுக்கு இனிக்கிறார்.

    பார்ப்பன கடுப்பு கூட
    பெரியார் கடவுளை மறுத்ததல்ல,
    பார்ப்பன ஆதிக்கத்தை மறுத்தது தான்,
    “கருவறைக்குள் சூத்திரன் நுழைந்தால்
    பார்ப்பானே கடவுள் இல்லை என்று
    பிரச்சாரம் செய்வான்” – என்று
    சரியாகத்தான் சொன்னார் பெரியார்.

  • தமிழினச் சுருக்கம்,
    தகர்த்த முதுமை,
    எவரெதிர்த்தாலும் எதிர்த்திசை நடந்த
    முதிர்ச்சியின் இளமை,
    எதிரிகள் பேணா(த)
    ஒழுக்கத்தின் தகைமை.
    இனிப்பிறக்கும் பார்ப்பன கிருமிக்கும்
    தீரா பகைமை!பகுத்தறியாமல்
    தான் சொன்னதை அப்படியே ஏற்க வேண்டாம் – என
    விமர்சனத்துக்கு வழி விட்ட பெருமை !
    இதுவன்றோ பெரியார்!
  • சுயமரியாதைக்கென்றே
    ஒரு இயக்கம் தொடங்குமளவுக்கு,
    சுரணையற்ற தமிழக நிலைமை
    கணினி உலகால் மாறி விட்டதா?
    பிறவி இழிவைத் துடைக்க
    பெரியார் சிந்தனை தேவை இன்றும்!
  • பெரியார்சூத்திரனென்றால்
    ஆத்திரம் கொண்டு அடிக்க
    சலவைத் தொழிலாளியால் முடிந்தது,
    முன்னேறியதாய் பீற்றிக் கொள்ளும்
    கணினித் தொழிலாளிக்கோ,
    சுயமரியாதை என்ன
    அவமரியாதையும்
    மவுசுக்குள் அடக்கம்
    நிமிர்ந்து பார்த்தால்
    கனவுகள் முடக்கம்.பாப்பார கம்பெனி
    ஆதிக்கத்திற்கெதிராக மட்டுமல்ல
    பன்னாட்டு கம்பெனி ஆதிக்கத்திற்கெதிராகவும்
    போராடுவதுதான் சுயமரியாதை,
    அதிகாரம் மனுதர்மமாக மட்டுமல்ல
    சாஃப்ட்வேராகவும் எழுதப்படும்கட்டுன  ‘இன்ஸ்டால்மென்ட்டின்’
    கவுரவத்தை ‘கணபதி ஹோமத்தால்’ காப்பாற்ற முடியாது.
    பெரியாரின்
    “மனித வாழ்வின் பெருமை எது? ” நூலைப் படி
    ஐ.டி. அவலத்தை பகுத்தறிவால் முடி !

    பார்ப்பனக் கொலைகாரன் ராமனை
    செருப்பாலடித்து,
    பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை
    தேங்காய்க்கு உடைத்து
    தமிழகத்தை இந்துத்துவத்தின்
    கல்லறையாக்கினார் தந்தை பெரியார்

    பார்ப்பனப் பகைமை முடிந்தபாடில்லை,
    போராட்ட மரபினைத் தொலைத்த
    தமிழக வீதியில்
    பிள்ளையார்கள் ஊர்வலம்.
    உரிமை மறுக்கப்பட்ட
    தமிழன் வாயில் ‘பாரத் மாதாகீ ஜெய்!’

    பிள்ளையார் கையில்
    பிச்சுவா கத்தி
    பெரியார் மண்ணில்
    நரேந்திர மோடி,
    கார்ப்பரேட் தர்மத்தை காப்பாற்ற
    தேசவளத்தை அந்நியன் சூறையாட
    மறுகாலனியாக்க ராமனாய்
    மறுபடியும் அடியாளாய் அடிவைக்கும்
    பார்ப்பன கொலைகாரன் மோடி,
    தமிழகத்தில் கால் வைப்பதை எதிர்ப்பதே
    பெரியார் பிறந்தநாளின்
    சுயமரியாதைக் கொண்டாட்டம் !

– துரை சண்முகம்