Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 714

சத்தீஸ்கர் : ‘அறம்’ பேசும் தலைவர்கள் !

27

த்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் என்று பலரும் பேசி வருகின்றனர். அந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று அவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா, இல்லை பேசுவதற்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.

மன்மோகன் சிங்
நியாயமூர்த்தி, வளர்ச்சி நாயகர் மன்மோகன் சிங்.

“மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது” என்றும் “தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றும் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இராணுவமும், துணை இராணுவமும், பாதுகாப்புக்கென்று வருடா வருடம் செலவாகும் மக்கள் பணம் பல இலட்சம் கோடி ரூபாய்களும் இருக்கும் போது இந்தியா அரசு ‘தீவிரவாதத்துக்கு’ அடிபணியாது என்பது உண்மைதான். ஆனால் சத்தீஸ்கரில் பன்னாட்டு நிறுவனங்களையும், தரகு முதலாளிகளையும் விட்டுக் கொடுக்க முடியாது என்றுதான் இந்திய அரசு பழங்குடி மக்கள் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த உண்மையை ஏன் நேரடியாகச் சொல்லவில்லை?

நீதி முன் நிறுத்துவதாக இருந்தால் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு தில்லியில் நூற்றுக்கணக்கான சீக்கிய மக்களை கொலை செய்த காங்கிரசு தலைவர்கள் மற்றும் குண்டர்களை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் முப்பது வருடம் ஆகியும் அனைத்து கொலைகாரர்களும் விடுதலைதான் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நீதி என்பது காங்கிரசுக்குகாரனுக்கு மட்டும்தான் என்று மன்மோகன் சிங் வெளிப்படையாகவே பேசலாமே?

“இது போன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அமைதிக்கும், இப்பகுதியின் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள்” என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார். சத்தீஸ்கரின் வளர்ச்சியில் ஆதாயம் அடையப்போவது யார்? பழங்குடி மக்களா, இல்லை டாடாவா, ஜிண்டாலா, போஸ்கோவா? சத்தீஸ்கரில் உள்ள நிலக்கரி வயல்களையெல்லாம் முறைகேடாக யாருக்கு ஒதுக்கியிருக்கிறார் மன்மோகன் சிங்? பழங்குடி மக்களுக்கா இல்லை தரகு முதலாளிகளுக்கா? பழங்குடி மக்களின் இடங்களை கைப்பற்றினால்தான் முதலாளிகளின் வளர்ச்சி சாத்தியம் என்பதும் அந்த சாத்தியத்தை தடுக்கக் கூடியவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்பதாலும்தான் மன்மோகன் அரசு அவர்கள் மீது போர் தொடுத்திருக்கிறது.

சோனியா காந்தி
வீரத் திருமகள் சோனியா காந்தி.

“நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்ததில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் வரலாறு படைத்துள்ளனர்” என்றும் பிரதமர் பேசியுள்ளார். நாட்டுக்காக உயிரை விட்ட, கட்சியில் இல்லாத மக்களது தியாகத்தை அறுவடை செய்ததுதான் காலனிய ஆட்சிக்கு முந்தைய காங்கிரஸ் வரலாறு. பிந்தைய வரலாறு காங்கிரஸ் தலைவர்களது வரலாறு காணாத ஊழல்தான். தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஞானதேசிகன், வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனார், இவர்கள்தான் தமிழ்நாட்டில் தியாகம் செய்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் என்றால் சத்தியமூர்த்தி பவனின் செங்கல் கூட சத்தம் போட்டுச் சிரிக்கும்.

இளவரசர் ராகுல்காந்தி பேசும்போது, “இதுபோன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சியை அழித்து விட முடியாது. இத்தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்” என்று கூறியிருக்கிறார். சட்டப்பூர்வமாக சல்வாஜூடும் ஆரம்பித்து பழங்குடி மக்களை அகதிகளாக்குவதுதான் ஜனநாயகம் என்றால் இது ‘ஜனநாயகத்தின்’ மீதான தாக்குதல்தான். மேலும் இத்தகைய ‘ஜனநாயகம்’ இருக்கும் வரையிலும் காங்கிரஸை அழிக்க முடியாது என்பதும் உண்மைதான். என்றைக்கு அந்த பழங்குடி மக்களைப் போன்றவர்களுக்கு ஜனநாயகம் கிடைக்கிறதோ அன்றைக்கு காங்கிரஸ் கட்சி ஒழிக்கப்படும் விதத்தில் அருங்காட்சியகத்தில் மட்டும் இருக்கலாம்.

பிரணாப் முகர்ஜி
ஜனநாயகவாதி பிரணாப் முகர்ஜி

“காங்கிரஸ் கட்சியின் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது” என்று சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார். எது வீரம் என்பதிலிருந்தே எது கோழைத்தனம் என்பதை புரிந்து கொள்ள முடியும். காஷ்மீரில் அடிக்கொரு சிப்பாயை நிறுத்தி முழு காஷ்மீர் மக்களையும் துப்பாக்கிகளின் நிழலில் வாழச்செய்திருப்பது வீரமா? இல்லை, இலங்கை இராணுவத்திற்கு கருத்திலும், களத்திலும் உதவி செய்து பல ஆயிரம் ஈழத்தமிழ் மக்களை கொன்றது வீரமா? அவையெல்லாம் வீரம் என்றால் இது கோழைத்தனம் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.

“நமது ஜனநாயக அமைப்பில் வன்முறைக்கு எந்த வடிவிலும் இடம் கிடையாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். இது போன்ற சம்பவங்களால் நாட்டை எந்த வகையிலும் அச்சுறுத்த முடியாது.” என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். அப்சல் குரு போன்ற அப்பாவிகளை தூக்கிட்டுக் கொன்றதில் தலைமை வகித்தவர், அஹிம்சை குறித்து பேசுகிறார். அமெரிக்க அடிமை அணுசக்தி ஒப்பந்தம், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், போன்ற ‘சாதனை’களாலேயே இந்நாட்டை அச்சுறுத்த முடியவில்லை எனும் போது சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலா பயமுறுத்தும்? ஊழல் பேர்வழிகளும், பாசிசத்தின் தயவில் வீரம் பேசும் தலைவர்களும் ஜனநாயகம் குறித்தும், தைரியம் குறித்தும் சிரிக்காமல் பேசுவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.

நரேந்திர மோடி
மனித உரிமை காவலர் மோடி

“மாவோயிஸ்ட்டுகளின் இந்த செயலானது, இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கும், நாட்டின் சட்ட ஒழுங்குக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கை வேண்டும்” என்று பாஜக கூறுகிறது. ‘ரெட்டி சகோதரர்களும், எடியூரப்பாவும் அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டுதான் கனிம ஊழல், வீடு ஒதுக்கீடு ஊழல் செய்தனர். பாபர் மசூதியை இடித்து இந்தியா முழுவதும் முஸ்லீம்களை நரவேட்டையாடியதெல்லாம் சட்ட ஒழுங்கிற்கு வலுவை ஏற்படுத்திய விசயம். சல்வா ஜூடும் எனும் கொடிய அடக்குமுறைக்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அது மட்டும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது, சட்ட ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது’ என்றால் இந்த சட்டமும், ஒழுங்கும் யாருக்குரியவை?

“சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல். கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் நின்று மாவோயிஸத்துக்கு எதிராக போராட வேண்டும்” என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். என்ன செய்வது சாத்தானெல்லாம் கூட வேதம் ஓதுகிறது. 2002-ல் குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையை எல்லாம் மோடியின் ஜனநாயகம் வாழ்த்தும். ஒரு வேளை மாவோயிஸ்ட்டுகள் அதிகாரத்திற்கு வந்தால் தான் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் மோடிக்கு வந்திருக்கலாம். அதனால்தான் முந்திக் கொண்டு கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்போம் என்கிறார்.

மாவோயிஸ்ட் தாக்குதலை கண்டிக்கும் தலைவர்கள் அனைவரும் ஜனநாயகத்தின் பெயரில்தான் ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களை இழுத்து வந்து மக்களாட்சி எனும் வெளிச்சத்தில் விசாரித்தால்தான் இந்தியாவை அச்சுறுத்துவது இவர்களது கட்சிகளா இல்லை மாவோயிஸ்ட்டுகளா என்ற உண்மை தெரிய வரும்.

ஐபிஎல் – ஃபிக்கி : அந்த 3 இலட்சம் கோடி எங்களுக்குத்தான் !

3

விளையாட்டு உள்ளிட்டு எதிலும் பந்தயம் கட்டி சூதாடுவதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று இந்திய முதலாளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு ஃபிக்கி (FICCI) கூறியிருக்கிறது. அது மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு சமர்ப்பித்துள்ள ஒரு ஆய்வறிக்கையில் “இந்தியாவில் பந்தயம் கட்டி சூதாடுவது சட்ட விரோதமாக இருப்பதால் அதில் ஒவ்வொரு ஆண்டும் ரூ 3 லட்சம் கோடி கருப்பு பணம் புழங்குகிறது” என்று கவலை தெரிவித்திருக்கிறது.

ficci-sports“பந்தயம் கட்டி சூதாடுவதை தடை செய்ய அரசு பெரும் செலவில் முயற்சிகள் செய்தாலும் அது தலைமறைவாக தொடர்ந்து நடைபெறுகிறது; இப்போது பிரச்சனை பந்தயம் கட்டுவது என்பதைத் தாண்டி சதி செய்து போட்டிகளை வளைப்பது என்ற நிலைக்கு போயிருக்கிறது; இதை முறைப்படுத்த வேண்டும் என்றால் பந்தயம் கட்டி சூதாடுவதை சட்டப்படி அனுமதித்து ஒழுங்குபடுத்துவதற்கான வழிகளை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று அது கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஃபிக்கி விளையாட்டு குழுவின் தலைவர் சஞ்சீவ் பால், “புகை பிடிப்பது போல, சூதாடுவது போல பந்தயம் கட்டுவது விரும்பத் தகாத ஒன்றுதான். ஆனால், சட்டப்படி தடை செய்வதன் மூலம் அதை ஒழித்துக் கட்ட முடியாது.” என்று தெரிவித்திருக்கிறார். “இந்த துறையை சட்டபூர்வமாக்கி வரி விதிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ 12,000 கோடி முதல் ரூ 19,000 கோடி வரை அரசுக்கு வருமானம் வரும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் பற்றிய விபரங்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வு ஏற்படுகிறது. சுத்த சுயம்புவான கிரிக்கெட் ரசிகர்களான இந்து நாளிதழ், ஹர்ஷா போக்லே போன்ற நிபுணர்கள், பிஷன் சிங் பேடி போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஐந்து நாள் டெஸ்ட் போட்டி, வெள்ளைச் சீருடை, கனவான்களின் விளையாட்டு என்று கடந்த கால கனவுகளில் மிதக்கிறார்கள். ஐ.பி.எல். வந்து எல்லாத்தையும் சீரழித்து விட்டது என்று நொந்து கொள்கிறார்கள்.

illegal-cricket-bettingஇதையே தஞ்சாவூர் விவசாயி ஒருவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்த்தால், “அடப்பாவிகளா பயிர் செய்ய தண்ணீ இல்லாம வாடுறோம்; பம்புசெட்டு வச்சு இறைக்கலாம்னா கரென்ட் கூட இல்லை. இந்த நிலைமையில இவ்வளவு தண்ணீ விரயமாக்கி, இவ்வளவு கரென்ட் எடுத்துக் கிட்டு என்னடா கூத்து” என்று கரித்துக் கொட்டுவார்.

ஆனால், இந்த ரணகளத்துக்கு மத்தியில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கிளுகிளுப்பு ஃபிக்கிக்கு ஏன் தேவைப்படுகிறது? இவர்கள் கிரிக்கெட் எனும் விளையாட்டின் மீதான காதலிலோ இல்லை அதைக் காப்பாற்றவேண்டும் என்பதாலோ இங்கு தலையிடவில்லை.

சட்டத்தை முழுவதும் புறக்கணித்து தலைமறைவு உலகில் செயல்படும் பந்தயம் வைத்து சூதாடும் துறையினருக்கு அரசின் அங்கீகாரம் இல்லை. சூதாட்ட முதலாளிகள் (dons), அவர்களது வலைப்பின்னலில் இயங்கும் தரகர்கள் (புக்கிகள்), பந்தயம் வைக்கும் சூதாடிகள் (punters), சூதாட்ட பணத்தை வசூலிக்கும் ஊழியர்கள் (ரன்னர்கள்), இவர்களுடன் ஒத்துழைக்கும் விளையாட்டு அணிகளை சேர்ந்தவர்கள் என்று நாட்டு எல்லைகளையும், மொழி வேறுபாடுகளையும், மத வித்தியாசங்களையும் கடந்து உலகெங்கும் கிளை பரப்பி நிற்கிறது இந்த சூதாட்ட உலகம். அவரவர் படிநிலைக்கேற்ப ஐந்து நட்சத்திர விடுதிகளில், சொகுசு பங்களாக்களில், அடக்கமான ரியல் எஸ்டேட் அல்லது பயண முகவர் அல்லது அடகுக் கடை அலுவலகங்களின் பின்புறத்தில், சேரிகளில், சந்துகளில், இடுக்குகளில் அரசின் சட்ட திட்டங்களுக்கு வெளியில் தமது தொழிலை செய்கிறார்கள்.

இவர்கள் பாதுகாப்புக்காக கொடுக்கும் கப்பத் தொகையை தாண்டி, போட்டியாளர் யாராவது போட்டுக் கொடுத்து காவல் துறை நடவடிக்கை அல்லது புலனாய்வு துறையின் விசாரணை நடக்கும் போது பெருமளவு பணம் இழப்பதோடு கூண்டோடு ஆட்களையும் பலி கொடுக்க வேண்டியிருக்கும். அந்த ‘ரிஸ்கோ’டு தொழில் செய்கிறார்கள். ஆனால் இவர்களின் இலாபம் என்பது பல நூறு மடங்கு அதிகமானது என்பதால் ஒரு முறை வென்றாலே பல தடவை அரசு அபாயத்தை எதிர்கொள்ளலாம்.

cricket-bettingஃபிக்கி பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களின் முதலாளிகள் இந்த உலகத்தை எச்சில் ஒழுக பார்க்கிறார்கள். ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து, உற்பத்தி செய்து, சந்தையில் விற்று லாபம் சம்பாதிப்பது எல்லாம் பழைய கால முதலாளிகளின், காலத்துக்கேற்ப முன்னேறாத கட்டுப்பெட்டிகளின் கோட்பாடு. 21-ம் நூற்றாண்டின் உலக மயமான முதலாளித்துவத்தில், பணத்தைப் போட்டு பணத்தை எடுக்க வேண்டும்; அதிக காலம் பிடிக்கக் கூடாது; ரிஸ்க் அதிகம் இருந்தாலும், வெற்றி பெற்றால் பெருமளவு லாபம் வர வேண்டும்; பணம் திரட்டிக் கொண்டால் உற்பத்தி, விற்பனை இதற்கெல்லாம் ஆளை போட்டு வேலை வாங்கிக் கொள்ளலாம்.

இத்தகைய நிதி மூலதன சூதாட்டத்துக்காக பங்குச் சந்தை, அன்னிய செலாவணி சந்தை, சரக்குகள் சந்தை (கமாடிட்டி சந்தை), முதலீட்டு ஆவணங்கள் சந்தை என்று நூற்றுக் கணக்கான சட்டபூர்வமான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தியில் மட்டும் லாபம் சம்பாதிப்பேன் என்று இருக்கும் பழைய பாணி முதலாளிகள் ஒரு ஆண்டில் சம்பாதிக்கும் பணத்தை நிதிச் சந்தைகளில் சூதாடும் முதலாளிகள் ஒரே வாரத்தில் சம்பாதித்து விட, தொழிற்சாலையின் உரிமையே பின்னவருக்கு கை மாறி விடுகிறது. முன்னாள் உற்பத்தி முதலாளிகள் நிதி முதலாளிகளிடம் சம்பளம் வாங்கும் இன்னாள் தலைமை நிர்வாக அலுவலராகி விடுகிறார்கள்.

இந்த நிலையில், பணம் போட்டு பணம் செய்யும் முதலாளிகள் அதே நிலையில் நீடிக்க வேண்டுமானால் பணத்தை பெருக்குவதற்கான புதுப் புது வாய்ப்புகளை தேட வேண்டும். ரூ 3 லட்சம் கோடி புழங்கும் சூதாட்டச் சந்தையில் சட்ட விரோதமாக இறங்குவதற்கு இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் போல ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கிறது. அகப்பட்டுக் கொண்டால் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அப்படி அகப்பட்டுக் கொள்ளாமல் சூதாட்ட உலகில் பணத்தை பெருக்கிக் கொண்டவர்களின் கை அதில் கலந்து கொள்ளாத முதலாளிகளின் கைகளை விட மேலோங்கி விடுகிறது.

இது எல்லோருக்கும் சம வாய்ப்பு (லெவல் பிளேயிங் ஃபீல்ட்) என்ற முதலாளிகளின் அறத்துக்கு விரோதமாக இருக்கிறது. அதனால் ஃபிக்கி சங்க முதலாளிகள், ரூ 3 லட்சம் கோடி புழங்கும் இந்த துறையில் சூதாடுவதற்கு சட்டத்தை மீற தைரியம் உள்ள முதலாளிகளுக்கும் அப்படிப்பட்ட தைரியம் இல்லாத முதலாளிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கும்படி அரசை கேட்டு ஆய்வறிக்கை தயாரித்து அளித்திருக்கிறார்கள். அதில் குறிப்பிட்ட சதவீதத்தை (4% முதல் 6% வரை), அரசுக்கு வரியாக செலுத்தவும் தயாராக இருப்பதாக அரசுக்கு ஆசை காட்டுகிறார்கள்.

ஃபிக்கியின் சஞ்சீவ் பால் சொல்வது போல, சிகரெட் தயாரிப்பதோ, சாராயம் விற்பதோ சமூகத்தை பாதிப்பதாக இருந்தாலும் அதை சட்ட பூர்வமாக்கி, சந்தைப் படுத்தி, லாபம் சம்பாதிக்க முதலாளிகள் ஒரு போதும் தயங்கியதில்லை. அதே போல பந்தயம் வைத்து சூதாடுவதை சட்டபூர்வமாக்கி அதில் ஈடுபட்டு பணத்தை பெருக்கி நாட்டுக்கு சேவை செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.

சரி, பந்தய சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் பிரச்சினை முடிந்து விடுமா? பந்தய பணத்தை மீட்கவேண்டுமானால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மீறி ஆட்டத்தின் போக்கை மாற்றவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். அப்போது வீரர்களையோ இல்லை அணிகளையோ மொத்தமாக விலைபேசி ஆட்டத்தின் போக்கை முன்கூட்டியே நிர்ணயிப்பதும் நடந்தே தீரும்.

ஆகவே இந்திய முதலாளிகளின் உண்மையான நோக்கம் அந்த மூன்று இலட்சம் கோடி தங்களது பாக்கெட்டுக்குள் வரவேண்டும் என்ற வர்த்தக வெறிதான். மற்றபடி இவர்களது சட்டபூர்வ சூதாட்டம் என்பது எதையும் சாதித்து விடாது.

அப்துல்

மேலும் படிக்க
FICCI for legalising sports betting

சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?

25

டாடா மற்றும் எஸ்ஸார் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் உள்ள தாதுப் பொருட்களை எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டிருக்கின்றன.

மாவோயிஸ்ட் vs MOUஸ்ட்
பெரும் போர் – மாவோயிஸ்ட் எதிர் MOUஸ்ட் (பழங்குடி மக்கள் எதிர் கார்ப்பொரேட்டுகள்+அரசு)

மலை இருக்கிறது, காடு இருக்கிறது, மலைக்கு கீழே, காட்டு நிலத்துக்கு அடியில், சந்தையில் பெரும் லாபம் ஈட்ட உதவும் தாதுக்கள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளை சரிக்கட்டி, சட்டங்களை மாற்றி, உரிமங்களை விலைக்கு வாங்கி விட்டால், தாதுக்களை அகழ்ந்து, உலகச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம். இந்த சமன்பாட்டுக்கு இடைஞ்சலாக, குறுக்கீடாக அந்தப் பகுதியில் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்.

பணம், மாற்று இடத்தில் நிலம், வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்ற மோசடி பொருளாதார மந்திரங்கள் அவர்களிடம் எடுபட மாட்டேன் என்கிறது. முதலாளிகள் பாணி ‘நாட்டுப் பற்று’ என்ற பசப்பு வார்த்தையும் அவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. ஒரு கையில் துப்பாக்கி, மறு கையில் பைபிள் அல்லது கஞ்சா கொடுத்து வசப்படுத்தும் 19-ம் நூற்றாண்டு உத்திகளும் செல்லுபடியாகவில்லை. லீனா மணிமேகலை போன்ற படைப்பாளிகளின் “தேஜஸ்வினி” எனும் விஷூவல் வித்தைகளும் அம்மக்களிடத்தில் எடுபடவில்லை.

எங்கள் நிலம், எங்கள் வாழ்க்கை, எங்கள் உரிமை என்பதை டாடா அல்லது எஸ்ஸாரின் ஆதாயத்துக்காக அல்லது மன்மோகன் சிங்/ப சிதம்பரத்தின் ‘வளர்ச்சி’ பார்வைக்காக அந்த மக்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அவர்கள் கார்ப்பரேட்டுகளின் பண பலத்தையும் அரசின் ஆயுத பலத்தையும் எதிர்த்து நிற்க மாவோயிஸ்ட் அமைப்பின் கீழ் அணி திரள்கிறார்கள்.

ஒரு கட்டபொம்மன் பிறந்த அதே மண்ணில் ஒரு எட்டப்பன் பிறக்காமலா போய் விடுகிறான். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நின்ற திப்பு சுல்தானை காட்டிக் கொடுக்க மகாராஷ்டிராவின் பேஷ்வா கிடைக்காமலா போய் விட்டார். சாம, தான முறைகள் எடுபடாமல் போய் தண்டம் சாத்தியப்படாமல் இருக்க முதலாளிகள் பேதத்தில் இறங்குகிறார்கள்.

மகேந்திர கர்மா
மகேந்திர கர்மா

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெருநில உடைமையாளர் குடும்பத்தில் பிறந்த மகேந்திர கர்மா 1990-களிலேயே நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கும் மாவோயிஸ்டு இயக்கத்துக்கு எதிராக ஜன் ஜாக்ரன் அபியான் என்ற படையை உருவாக்க முயற்சித்தார். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு டாடாக்களும், எஸ்ஸார்களும் அவர்களது திட்டங்களுக்காக பழங்குடி பகுதிகளை கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு மாவோயிஸ்டுகள் என்ற தடையை எதிர் கொள்வது வரை அவரது முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

2005-ல் கார்ப்பரேட்டுகள் தேவையான நிதி உதவி வழங்க, மத்திய அரசு மற்றும் மாநில அரசு, ஆயுதங்கள் கொடுத்து பழங்குடி மக்களிடையே, முதலாளிகளின் பணம், இன்சொல்லில் மயங்கும் ஒரு சிறு பிரிவினரை அணி திரட்டுகிறார்கள். அதற்கு சல்வா ஜூடும் அல்லது சுத்திகரிக்கும் வேட்டை என்று பெயர் சூட்டுகிறார்கள்.

2011-ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தால் கலைக்கப்படும் வரையிலான அடுத்த 5 ஆண்டுகளில் தமது எஜமான்களான கார்ப்பரேட்டுகளின் சார்பில் தமது மக்கள் மீதே ஒரு மிகப்பெரும் சுத்திகரிப்பு வேட்டையை நடத்தினர் சல்வா ஜூடும் படையினர். சல்வா ஜூடும் செயல்பட ஆரம்பித்த முதல் இரண்டு ஆண்டுகளில் சுமார் 644 கிராமங்களில் வீடுகளை எரித்து அங்கு வாழ்ந்த சுமார் 3 லட்சம் மக்களை வெளியில் துரத்தினர். சுமார் 1 லட்சம் பழங்குடி மக்கள் தென் சத்திஸ்கரில் உள்ள பல்வேறு முகாம்களில் குடியேற்றப்பட்டனர்.

‘மாவோயிஸ்டுகள் செயல்படுவதற்கு கிராமங்கள் இல்லாமல் செய்வதாகவும், மக்களை மாவோயிஸ்டுகள் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக முகாம்களில் குடியேற்றுவதாகவும்’ கூறி இந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் படு கொலை செய்யப்பட்டனர்; பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு காவலாக சல்வா ஜூடும் படையினர் தம்மைத் தாமே நியமித்துக் கொண்டனர். இலங்கையில் முள்வேலி முகாம்களிலும், தமிழகத்தில் அகதி முகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களைப் போல சல்வா ஜூடும் குண்டர்களின் ஆதிக்கத்தில் அடைபட்டிருந்த பழங்குடி பெண்களும், குழந்தைகளும் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இவற்றை தடுக்க வேண்டிய காவல் துறையும், நீதி மன்றங்களும் கைகட்டி வேடிக்கை பார்த்தன. கொல்லப்படும் அரச படைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல லட்ச ரூபாய் இழப்பீடு, கண்ணீர் அஞ்சலி வழங்கும் அரசு, கார்ப்பரேட்டுகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கொலைவேட்டையை ஊக்குவித்தது.

பழங்குடி மக்கள் மத்தியில் பிரிவு ஏற்படுத்தி, அவர்களது கிராம வாழ்க்கையை அழித்து, பெரும் எண்ணிக்கையிலான மக்களை நாடோடிகளாக மாற்றிய சல்வா ஜூடும் கூலிப்படைக்கு எதிரான பழங்குடியினர் போராட்டங்களும் மாவோயிஸ்ட் தாக்குதல்களும் தீவிரமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர் போராளிகளாக மாறினர். 2008-ம் ஆண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சல்வா ஜூடுமின் பயங்கரவாத பிடி பெருமளவு பலவீனமடைந்தது. மக்கள் தத்தமது கிராமங்களுக்கு மறு குடியேற ஆரம்பித்தனர்.

சல்வா ஜூடும் மக்கள் முகாம்
சல்வா ஜூடும் அடக்குமுறை முகாம்

கூலிப்படை உருவாக்கம், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் அழிப்பு இவற்றுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், திரைக்கதை ஓடி முடிந்த பிறகு, 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சல்வா ஜூடும் அமைப்பை அரசே நடத்துவது சட்ட விரோதமானது என்று நீதிமன்றம் சொன்னது. உடனடியாக சல்வா ஜூடுமை கலைத்து அது செய்த கிரிமினல் செயல்கள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சத்திஸ்கர் அரசை பணித்தது. ஏற்கனவே பல் பிடுங்கப்பட்டிருந்த சல்வா ஜூடுமுக்கான பிணப்பெட்டியின் கதவுகள் இறுதியாக மூடப்பட்டன.

ஆனால், சல்வா ஜூடுமின் 3 ஆண்டுகள் பயங்கரவாத வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட பழங்குடி மக்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்கள், அழிக்கப்பட்ட கிராமங்கள் இவற்றுக்கு சத்திஸ்கர் அரசும், மத்திய அரசும் எந்த விதமான நியாயத்தையும் வழங்கவில்லை. அந்த குற்றங்களை இழைத்தவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டனை வழங்கவில்லை. அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. குற்றவாளிகள் தங்களைத் தாங்களே விசாரித்து தண்டித்துக் கொள்வார்களா என்ன?

மாறாக சல்வா ஜூடுமை உருவாக்கி, கட்டியமைத்து, இயக்கிய மகேந்திர கர்மா சத்திஸ்கர் காங்கிரசின் முக்கிய தலைவராக தொடர்ந்தார். அவருக்கு அரசின் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எந்திர துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் அவரை காத்து நின்றார்கள். ஆனால், பழங்குடி மக்களின் நியாயத் தராசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசின் நியாயங்களுடன் ஒத்து வருவதில்லை.

கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 200 தலைவர்கள் 25 கார்களில் சுக்மா மாவட்டத்தில் ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜக்தால்பூருக்கு அருகில் உள்ள கேஷ்லூர் என்ற இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதை இந்த ஆண்டு வர இருக்கும் தேர்தலுக்கான பரிவர்த்தன் யாத்திரை என்று காங்கிரசு கட்சி அழைக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் வித்யா சரண் சுக்லா, முன்னாள் மாநில அமைச்சர் மகேந்திர கர்மா, மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல், ராஜ்நந்த்கான் சட்ட மன்ற உறுப்பினர் உதய் முதலியார், பூலோ தேவி நேத்தம் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் அந்த கார்கள் அணிவகுப்பில் இருந்தனர். அடர்ந்த வனப்பகுதியான தார்பா பள்ளத்தாக்கு பகுதியில் கார்களை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட சுமார் 250 பழங்குடி மாவோயிஸ்ட் போராளிகள் காங்கிரஸ் தலைவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மகேந்திர கர்மாவை கொல்வது அந்த தாக்குதலின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி மக்களின் எதிரி மகேந்திரா கர்மா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடுமையாக கண்டனம் செய்திருக்கின்றனர். எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களுக்கு எதிரான தனது நாடு தழுவிய போராட்டங்களை தள்ளி வைத்திருக்கிறது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ 5 லட்சம் உதவித் தொகை வழங்கியிருக்கின்றன. ஆனால் பழங்குடி மக்களை இந்திய துணை இராணுவப் படைகள் கொன்றதற்கெல்லாம் இத்தகைய நிவாரணங்கள் ஏதுமில்லை. சொல்லப் போனால் இவர்களின் கொலைகளுக்கு கணக்கே இல்லை.

எனினும் மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை இந்திய அரசு மிருக பலத்துடன் ஒடுக்கவே முனையும். சம்பவம் நடந்த பிறகு கோப்ரா கமாண்டோ பிரிவு அடங்கிய சிஆர்பிஎஃப் படையினர் 600 பேர் சத்தீஸ்கருக்கு அனுப்பப்பட்டனர். பாஜகவைச் சார்ந்த சத்தீஸ்கரின் முதல்வர் ரமண் சிங்கிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை உடன் வழங்கியிருக்கிறது இந்திய அரசு. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட் அமைப்பினரை ஒடுக்குவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் உறுதி பூண்டுள்ளார். வரும் நாட்களில் கணக்கு வழக்கு இல்லாமல் கொல்லப்படும் பழங்குடி மக்களை பார்க்க இருக்கிறோம்.

எனவே பழங்குடி மக்கள் மீது கடுமையான எதிர் நடவடிக்கைகளை அவிழ்த்து விடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாராகின்றன. அவற்றை எதிர் கொண்டு நமது நாட்டையும் இயற்கை வளங்களையும் கொள்ளை போவதை தடுக்கும் சுமை சத்தீஸ்கரின் பழங்குடி மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அந்த பழங்குடி மக்களை ஆதரிக்க வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.

– செழியன்

மேலும் படிக்க
Was Bastar tiger, Mahendra Kumar face of Salwa Judum the real target in Naxal attack

பாமக ராமதாஸ் ஆதரிக்கும் அய்யர் – செட்டியார் அமர காதல் !

20
குருநாத் மெய்யப்பன்
இளம் தொழிலதிபர்

20-ம் நூற்றாண்டில் மெய்யப்ப செட்டியார் என்பவர் ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக சென்னை மாநகரில் ஆட்சி செய்து வந்தார். அல்லி அர்ஜூனாவில் ஆரம்பித்து சபாபதி, ஹரிஷ்சந்திரா, நாம் இருவர், அந்த நாள் போன்ற திரைக் காவியங்களை வழங்கி புகழ் பெற்றிருந்தார். விரைவிலேயே ஏவிஎம் நிறுவனம் தென்னிந்திய சினிமாவில் ஒரு ஏகபோக நிறுவனமாக நிலைபெற்றது. நிமாய் கோஷ் தலைமையில் சினிமா தொழிலாளிகள் சங்கம் கட்டி எதிர்த்து நின்ற போதும் முதலாளிகளின் காவலனாக ஏவிஎம்மே விளங்கியது.

உலக நாயகன் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் களத்தில் இறக்கி சகலகலாவல்லவனில் சூப்பர் ஹீரோவாக அரங்கேற்றம் செய்த பெருமை ஏ.வி.எம்.முக்கு உரியது. முரட்டுக் காளை, பாயும் புலி என்று ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டாராக சலங்கை கட்டியதும் ஏ.வி.எம்மின் பாரம்பரியமே. காலத்துக்கு ஏற்ற சரக்கு என்ற வகையில் குடும்ப நாயகர் விசு, கலாச்சார காவலர் பாக்கியராஜ், பிரும்மாண்ட இயக்குனர் சங்கர் என்று பலதரப்பட்டவர்களின் படைப்புகளையும் கடை பரப்பி வருகிறது ஏ.வி.எம். தற்போது சினிமாவைக் குறைத்துக் கொண்டு சீரியல்கள் எடுத்து வருகின்றனது.

இந்த ஏ.வி.எம். நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறையில் தோன்றியவர் குருநாத் மெய்யப்பன். நடிகர் விவேக்கால் ஒயிட் அண்ட் ஒயிட் சாந்த சொரூபி என்று புகழப்பட்ட ஏவிஎம் சரணவனது தம்பியின் மகன். குடும்பத்தின் தகுதிக்கும் ஸ்டேட்டசுக்கும் ஏற்ற வகையில் லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீர் குடிக்கும் கோல்ஃப், லிட்டர் லிட்டராக பெட்ரோல் குடிக்கும் மோட்டார் பந்தயம் என்று தனது விளையாட்டு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் மெய்யப்பன்.

சீனிவாசன்
விளையாட்டு ஆர்வலர்.

அதே சென்னையில் சங்கரலிங்க ஐயர், டி.எஸ். நாராயணசாமி ஐயர் ஆகியோர் உருவாக்கிய இந்தியா சிமென்ட்ஸ் கம்பெனியின் முதலாளியும் நிர்வாக இயக்குனருமான என் சீனிவாசன் வசித்து வருகிறார். சீனிவாசனும் விளையாட்டுத் துறையில் ஆர்வமுடையவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் தலைவராகி, படிப்படியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி வரை உயர்ந்தார். ஐ.பி.எல். போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவருக்கு சொந்தமானது. இந்தியா சிமெண்ட்ஸ் மூட்டைகளை மற்ற முதலாளிகளோடு சிண்டிகேட் அமைத்து கொள்ளை விலை விற்று ஏராளமான வருமானத்தை ஈட்டிய சாதனையாளர் இவர். இவரது மகள் ரூபா.

சாதி வேறாக இருந்தாலும் குருநாத் மெய்யப்பனும், ரூபா சீனிவாசனும் கோல்ஃப் விளையாட்டு ஆர்வத்தால் தூண்டப்பட்டு காதலிக்க ஆரம்பிக்கின்றனர். பரந்து விரிந்து பச்சைப்பசுமை புல்வெளியாக இருக்கும் கோல்ஃப் மைதானம் இத்தகைய பணக்கார மைந்தர்களது காதல் காவியங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஏழைகளைப்போல நெரிசல் பூங்காக்களிலோ, கடற்கரையிலோ சந்திக்க வேண்டிய அவலம் இவர்களுக்கு இல்லை. இருவரது பின்னணியையும் அறிந்து கொண்டால் இந்த அய்யர் – செட்டியார் காதலின் மகத்துவத்தை புரிந்து கொள்ளலாம். அய்யர் சாதியை சேராத செட்டியார் பையனை தன் மகள் காதலிப்பதா என்று அம்மா சித்ராவின் கடுப்பும் தண்ணி போட்டுக் கொண்டு அப்பா சீனிவாசன் அலட்டிய அலட்டலும் ஏ.வி.எம். சாம்ராஜ்யத்தின் சொத்துபத்துக்களை கணக்கு பார்த்ததும் பணிந்தன.

பாமக ராமதாஸ் நாடகக் காதலை எதிர்த்து விட்டு உண்மையான காதலை ஆதரிக்கிறோம் என்கிறாரே அந்த உண்மையான காதல் இதுதான். மற்றபடி ராமதாஸ் அந்த திருமணத்திற்கு போனாரா என்று தெரியவில்லை, அய்யர் – செட்டியார் திருமணம் இனிதே முடிந்தது. காலப் போக்கில் ரூபா சீனிவாசன் இந்தியா சிமென்ட்ஸின் முழுநேர இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஏ.வி.எம் புரொடக்சனின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்த குருநாத் மெய்யப்பன் சினிமா துறையில் ஆர்வம் காட்டாமல் விளையாட்டுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளர்கள்
சென்னை சூப்பர் கிங்சை ஊக்குவிக்க…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியும் சென்னை ஐ.பி.எல். அணியின் உரிமையும் ஒரே கையில் இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை எதிர் கொள்வதற்காக சென்னை அணியின் நிர்வாகத்தை தனது மருமகனின் கையில் ஒப்படைத்தார் சீனிவாசன்.

சென்னை ஐ.பி.எல். அணியின் சொந்தக்காரராக குருநாத் மெய்யப்பன் தனது தொழில் திறமைகள் அனைத்தையும் காட்டினார். அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு ரூ 49 லட்சம் விலையிலான டுகாட்டி பைக், பைக்கில் உடன் அமர்ந்து போவதற்கும், அணி வீரர்களை ஊக்குவிப்பதற்கும் கோலிவுட் நடிகைகள் என்று தன் பிசினஸ் தொடர்புகளை முழுமையாக அணியின் வெற்றிக்கு பயன்படுத்தினார்.

ஒரு நல்ல பிசினஸ்மேன் போல எல்லா கோணங்களையும் கவர் செய்யவும் அவர் தவறவில்லை. பணம், குடி, பெண்கள், கொண்டாட்டம் மூலம் அணி வீரர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் கிரிக்கெட் சூதாடிகள் மூலம் மற்ற அணிகளையும் பொருத்தமான முறையில் கையாண்டார். மாமனார் சீனிவாசன் வெளிநாடுகளுக்கு போகும் போது அவரது விமானம் துபாயில் தரையிறங்கி பெட்ரோல் போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்தார். கிரிக்கெட் சூதாட்ட உலகின் முக்கிய புள்ளிகளுடன் கோல்ஃப் ஆட வைத்தார். விண்டூ சிங் போன்ற சூதாடிகளை அணிக்குள் அறிமுகம் செய்து வைத்தார்.

ராமதாஸ்
காதலுக்கு அங்கீகாரம் வழங்குபவர்கள்…

சாதி மாறி காதலித்தும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக தொடரும் குருநாத் மெய்யப்பனின் காதல்தான் உண்மையான காதல். இதே போன்று செட்டிநாட்டு அரச குடும்பத்தில் பெண் வழிப் பேரனாக லெட்சுமி ஆச்சி., பழனியப்ப செட்டியார் அவர்களுக்கு மைந்தனாக பிறந்த மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பம் ஸ்ரீநிதியை சாதி மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ரூபா சீனிவாசனும், குருநாத் மெய்யப்பனும் போன்று காதலிக்க வேண்டும் என்றுதான் ராமதாஸ் விரும்புகிறார். இதன்படி காதலிக்க வேண்டுமானால், திரைப்படத் துறையில் ஏகபோகமாய் பல கோடி சம்பாதித்த குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும், அல்லது சிமென்ட் தொழிலில் ஊரை கொள்ளை அடித்து குவித்த கோடிகள் கைவசம் இருக்க வேண்டும், அல்லது தந்தை நாட்டின் முன்னணி அரசியல்வாதியாக இருக்க வேண்டும். இருக்கும் பட்சத்தில் ஐயா ராமதாஸ் ஆசீர்வாதம் செய்வார். மாறாக ஏழை தலித் இளைஞன் பணக்கார வன்னிய பெண்ணை திருமணம் செய்ய நினைத்தால் காடுவெட்டி அரிவாளுடன் விரைந்து வருவார்.

சூது கவ்வும் – வடிவம் கொல்லும் !

24

தையை விட கதை கூறும் முறையை அடிநாதமாகக் கொண்டிருக்கும் சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது ஆச்சரியமல்ல. அதே நேரம் ஆரோக்கியமும் அல்ல.

சூது கவ்வும்விஜய் சேதுபதியின் தலைமையில் மூன்று வேலையிழந்த இளைஞர்கள் சேர்ந்து சின்ன சின்ன ஆள் கடத்தல் செய்து இறுதியில் அமைச்சர் மகனை கடத்துகிறார்கள். அமைச்சர் சிபாரிசில் வரும் என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டரை சமாளித்து வாழ்க்கையில் செட்டிலாவதை ‘நகைச்சுவை’ கலந்த விறுவிறுப்புடன் காட்டும் படம், காய்ந்திருக்கும் ரசிகர்களை குளிர வைக்கிறது. ஆனால் இந்த செயற்கை குளிரூட்டல் உடலுக்கு நல்லதா?

இந்தப் படத்தில் கவர்ச்சி இருப்பதாக கூறினால் அண்ணன் உண்மைத்தமிழனே சண்டைக்கு வந்துவிடுவார். அந்த அளவுக்கு நேற்றிருந்த ‘கவர்ச்சி’ குறித்த பார்வை இன்று மாறியிருக்கிறது. கொஞ்சம் லூசு போலத் தோற்றமளிக்கும் சேதுபதி கடவுளிடம் பேசும் இறைத்தூதர்கள் போல, இல்லாத காதலியுடன் எந்நேரமும் பேசுகிறார். அன்றைய கூத்தில், கதை மீதான எடுப்பு தொடுப்பு விமரிசனங்களை கட்டியங்காரன் செய்வதை இங்கு காதலி செய்கிறார். ரசிகர்கள் ஆடியோவில் சேதுபதியையும் விஷுவலில் காதலியையும் பின் தொடர்கிறார்கள். கட்டியங்காரன் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் கதையில் குறுக்கிடுகிறான் என்றால் இங்கு சஞ்சிதா ஷெட்டி எனும் கவர்ச்சி நடிகை ஆண் ரசிகர்களை வயப்படுத்துவதற்கு குறுக்கிடுகிறார்.

அரை லூசு தமிழ் மற்றும் அமெச்சூர் கிரிமினலுக்கு மும்பை மாடல் நடிகை காம்பினேஷனே தாங்க முடியவில்லை எனும் போது ஷெட்டி “மாமா” என்று விளிக்கும் போது சகிக்க முடியவில்லை. காதலியின் பின்பாட்டு வசனங்களை பார்க்கும் ரசிகர்கள் அத்தோடு நின்றுவிடக்கூடாது என்று எப்போதும் அரை நிக்கர் அல்லது அதற்கும் கம்மியான உடையுடன் காதலியை நடமாட விட்டிருக்கிறார் இயக்குநர். ரசிகர்களின் ஆசையை ஏமாற்ற விரும்பாத காதலியும் தீடீரென்று நீச்சல் உடையுடன் தோன்றுகிறார். கவர்ச்சியையே வித்தியாசமாக காட்டியிருக்கிறார் அல்லவா என்று வெரைட்டி பிராண்ட் ரசிகர்கள் வாதாடக்கூடும். பழைய சோறு எனும் அற்புதத்திற்கு பிசா ஊறுகாய்தான் தொட்டுக் கொள்வேன் என்று வெரைட்டியான காம்பினேஷன்களுக்கு அடம் பிடிப்பவர்களை என்ன செய்ய முடியும்?

சூது கவ்வும்படத்தில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாழும் அமைச்சராக எம்.எஸ். பாஸ்கர் வருகிறார். கட்சிக்காக ஒரு வருடம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ய ஆணையிடும் தலைவரின் விருப்பத்திற்கு இணைங்க, ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மகன் அப்பாவை டம்மி பீசாக்கிவிட்டு அமைச்சராகிறான். சூரியனை கிழக்கே காண்பித்து விட்டு நிழலை ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் காண்பிப்பதாக லாஜிக் மீறலை கண்டுபிடிக்கும் விற்பன்னர்களுக்கு இந்த அமைச்சர் பாத்திரமே ஒரு அபாண்டம் என்று தோன்றவில்லை. கட்சிப் பணம் 2 கோடியை சுருட்ட நினைக்கும் மகனை எதிர்த்து போராடும் அப்பா அமைச்சர் 300 கோடியை வசூலிக்கச் சொல்லும் முதலமைச்சரை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை என்றாலும் அத்தகைய சுருட்டல் கட்சியில் சேர்ந்து எப்படி குப்பை கொட்டுகிறார்?

அதனால்தான் அப்பா பாத்திரத்தை லூசில் விடும் இரசிகர்கள் பிறகு மகன் அமைச்சராகி தேர்தல் பிரச்சாரம், வசூல் என்று பட்டையைக் கிளப்பும் போது மனம் ஒன்றி கைதட்டுகிறார்கள். நேர்மை யதார்த்தமில்லை, ஊழல் யதார்த்தமானது என்பதால் இங்கே இயக்குநரும் இரசிகர்களும் ஒன்றுகிறார்கள். நீதியும் நேர்மையும் விலகிச் செல்கின்றது.

இவையெல்லாம் காமடிக்குத்தானே சொல்லப்பட்டிருக்கின்றன என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு செண்டிமெண்டாக ஒரு கேள்வி. உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா? இதற்கு சற்றும் குறையாத பாத்திரம்தான் படத்தில் வரும் சைக்கோ இன்ஸ்பெக்டர் என்கவுண்டர் பிரம்மா.

தமிழக போலீஸ் போலி மோதலில் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் மாதந்தோறும் நடக்கின்றன. இது அரசு எந்திரம் சட்டம், நீதிமன்றங்களை சட்டபூர்வமாக ஏமாற்றிவிட்டு பாசிசமாகி வருகிறது என்பதற்குச் சான்று. கிரிமினல்களோடு பங்காளிச் சண்டை வலுத்த போதும், சில குற்றங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகவும் நடக்கும் என்கவுண்டர் இங்கே பாதிப்படம் முழுக்க சிரிப்பதற்காக இழுத்து வரப்படுகிறது.

வாய் பேசாமல் துப்பாக்கியுடன் மட்டும் கொடூரமாக பேசும் பிரம்மாவைக் கண்டு இரசிகர்கள் ஆரவாரத்துடன் சிரிக்கிறார்கள். இறுதிக் காட்சியில் ஓட்டைத் திருட்டுத் துப்பாக்கியை பின்புறம் சொருகும் போது தவறுதலாக அவர் சுட்டுக் கொள்கிறார். சேதுபதி கும்பல் என்கவுண்டரிலிருந்து தப்பிக்கிறது. ஒரு வேளை என்கவுண்டர் போலிஸை இப்படி ஒரு காமரா காமடி கவித்துவ நீதியில் காட்டியிருக்கிறார்கள் என்று பின் நவீனத்துவவாதிகள் நியாயப்படுத்தலாம். ஆனால் படம் பார்க்கும் இரசிகர்கள் ஏற்கனவே போலிஸ் என்கவுண்டரை ஆதரிக்கும் பாசிச மனோபாவத்தின் செல்வாக்கு கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் இந்த கிச்சு கிச்சு அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் குற்ற உணர்வையும் கொன்று விடுகிறது.

ஐ.டி துறையில் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும் இளைஞன் பின்னர் வேலை கிடைக்காமல் சேதுபதியிடம் சேருகிறான். இதற்கு காரணம் அவனை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு ஐ.டி பெண் நிர்வாகத்திடம் தவறாக போட்டுக் கொடுத்து வேலையை விட்டு நீக்க வைக்கிறாள். இது பெண்களை இழிவு படுத்தும் மலிவான ஆணாதிக்கம் என்பது போக சுயமரியாதை, பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்கம், இன்னபிற உரிமைகள் இல்லாத ஐ.டி துறை முதலாளிகளது ஆதிக்கத்தை மறைத்து விட்டு அங்கே ஒரு பெண்ணை வில்லனாக காட்டுகிறார் இயக்குநர். ஆண்டான் ஓரத்தில் மமதையுடன் ஒயின் பருக நடுவில் அடிமைகள் தமக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.

நயன்தாராவுக்கு கோவில் கட்டியவனும் சரி, ஜாகுவார் காரை ஓட்டி வேலையிழந்தவனும் சரி, இருவரும் நாள் முழுவதும் குடிப்பதும் சரி, எல்லாம் நகைச்சுவைக்காக சாகாவரம் பெறுகின்றன. இவற்றின் உட்கிடையான நுகர்வு கலாச்சாரம், சினிமா மோகம், ஆடம்பர வாழ்வு நாட்டம், பிறர் காசில் வாழும் ஒட்டுண்ணித்தனம், பொறுப்பற்ற தனம், விட்டேத்தித்தனம் அனைத்தும் நகைச்சுவையோடு என்றாலும் கடிந்துரைக்கப்பட வேண்டும். ஏனெனினல் சமூகத்தில் ஹாயாக உட்கார்ந்து டிவியோ, சினிமாவோ பார்க்கக்கூட நேரமற்று உழைத்தும் அதற்காக குடித்தும் தன்னை அழித்தும் வாழும் பாமரர்களை பார்த்து யாருக்கும் சிரிக்கத் தோன்றுமா? முடியுமெனில் அவர்கள் குடிக்காமலேயே தங்களை அழிக்கும் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். இங்கே இயக்குநர் அதையே செய்கிறார்.

திருட்டையும் நகைச்சுவையையும் சேர்த்து புனையப்படும் ஒரு காட்சி ஒரு படத்தில், ஓரமாக வரும் வடிவேலு காமடியாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே முழுநேரக் கதையாக இருந்தால்? மிகுந்த பொறுப்புணர்வோடு கையாளப்படவேண்டியதை இங்கே இப்படத்தின் படைப்பாளிகள் மிகுந்த அலட்சியத்தோடு கையாண்டிருக்கிறார்கள்.

சார்லி சாப்ளின்யாருக்கும் ஆபத்தில்லாத வகையில், ஆயுதம் இல்லாமல், துன்புறுத்தல் இல்லாமல் ஆட்களைக் கடத்தி சம்பாதிக்கலாம் என்று சேதுபதி மற்ற மூவருக்கும் எடுக்கும் வகுப்பே யதார்த்தத்தின் நினைவுகளோடு எரிச்சலூட்டுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து செலவுக்கு வழியில்லாக கல்லூரி இளைஞர்கள் காமடியாக ஆள்கடத்திலில் ஈடுபட்டு பின்னர் உண்மையான குற்றவாளிகளாக காலந்தள்ள நிறையவே வாய்ப்பிருக்கின்றது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள்தான் முதலில் அமெச்சூர் திருடர்களாக ஆரம்பிக்கிறார்கள். பின்னர் ஈவு இரக்கமற்ற பக்கா கிரிமினல்களாக மாறுகிறார்கள். சமயத்தில் கொலையும் செய்கிறார்கள். சென்னையிலேயே மேட்டுக்குடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டி முதல் முறையாக ஆள்கடத்தல் செய்த பல மாணவர்கள், இளைஞர்கள் கொலையே செய்திருக்கிறார்கள். அது குறித்து வினவிலும் நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன.

இத்தகைய சமூக விகாரங்களின் மத்தியில் காமடித் திருடர்கள் என்பது எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விசயம் என்று இயக்குநருக்குத் தெரியவில்லை. அவர் தெரிந்து கொள்ள விரும்பினால் நூறாண்டுகளுக்கு முந்தைய சார்லி சாப்ளினது படங்களை “பார்க்க” வேண்டும்.

இந்தப் படத்தில் வரும் சுய எள்ளல்கள் வெறுமனே சலிப்பூட்டும் சந்தானம் பாணியிலிருந்து கொஞ்சம் மேம்பட்ட வார்த்தை அலங்கார நகைச்சுவையாக மட்டும் இருக்கின்றன. உண்மையில் ஒரு சுய எள்ளல் என்பது ஒருவர் தன்னைக் குறித்த சுயவிமரிசனத்தின் நேர்மையில் நடக்கும் நகைச்சுவையாகும். அதனால் இங்கே நகைச்சுவை என்பது குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு வருகிறது. படத்தில் அத்தகைய சுயமோ இல்லை சுய விமரிசனமோ இல்லை என்பதோடு இருக்குமளவு அந்தப் பாத்திரங்களும் மண்ணில் நடமாடவில்லை.

ஒரு திரில்லர் வகைப்படங்களின் ஆன்மாவை கூரிய சமூக பார்வையோடு புரிந்து கொண்டவர்கள் இயக்கினால் அது பல்வேறு கணக்குகளோடு சேர்ந்தும், பிரிந்தும், மறுத்தும், தொடுத்தும், தவிர்த்தும் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப் பெருவெளியின் மர்மத்தை வியப்பூட்டும வகையில் இழுத்துக் கொண்டு வரும்.

ஸீக்ஃப்ரீட் லென்ஸ்
ஸீக்ஃப்ரீட் லென்ஸ்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ் எழுதிய “நிரபராதிகளின் காலம்” அத்தகையது. நாசிச ஜெர்மனியின் மக்கள் ஹிட்லரை கருத்து ரீதியாக ஆதரிக்கும் போக்கில் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். அதை ஒரு கற்பனைக் கதை மூலம் நிஜத்தின் விசாரணையோடு தம்மைத்தாமே மக்களை கேள்வி கேட்க வைக்கிறார் ஸீக்ஃப்ரீட். இதன் தமிழ் மொழிபெயர்ப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருந்தாலும் இந்த இலக்கியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. யார் கொலை செய்தார்கள் என்ற கேள்வியுடன் அதை கண்டு பிடித்தோ இல்லாமலோ போவதற்கு எதை இழந்தோம் என்று பாத்திரங்களின் விசாரணையில் விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நாடகம். ஒரு நேர்த்தியான த்ரில்லர் என்ற வகையிலும் பரந்து விரிந்த மனித குலப் போராட்டத்தின் உந்து விசையை குறிபார்த்தும் எழுதப்பட்ட இத்தகைய இலக்கியங்களை நமது நாளைய இயக்குநர்கள் படித்தார்களா தெரியவில்லை. படித்திருந்தாலும் அதில் அவர்களை எது ஈர்த்திருக்கும் என்று யூகம் செய்தால் விரக்தியே மிஞ்சுகிறது.

ஏதோ ஒரு கதையை எடுத்துக் கொண்டு எள்ளலான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், முடிச்சுக்கள், வித்தியாசமான பாத்திரச் சித்தரிப்புகள், காட்சிக்கொரு மர்மம் என்பன போன்ற சமாச்சாரங்கள்தான் ஒரு சினிமாவிற்கு போதுமானது என்று இந்த இயக்குநரும் இவரைப் போன்றவர்களும் இத்தகைய படங்களை ரசிப்பவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைப் பெருவெளியில் மையம் கொள்ளாத இந்த அலங்காரங்கள் தோன்றும் போது வேண்டுமானால் கவரலாம். விரைவிலேயே இவையும் சலித்துப் போய்விடும். கதையை விட கதையை கூறும் முறை நேர்த்தியாக பின்னப்படுவதால் கிச்சு கிச்சு வேண்டுமானால் மூட்டலாமே தவிர சிந்திக்க வைக்க முடியாது. சிந்தனையில் தங்காத படைப்புகளால் ஒரு சமூகத்தை கிஞ்சித்தும் பண்படுத்த முடியாது.

எல்லாக் கதைகளும் சரியாகவோ தவறாகவோ சமூகக் களத்தை பிரதிபலிப்பதிலிருந்தே உதிக்கின்றன. காமடிக்கும் கவர்ச்சிக்கும் பாத்திரச் சித்தரிப்புக்கும் வேகத்திற்கும் எளிய முரண் உரையாடல்களுக்கும் அளவு கடந்து மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அவை இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப்பாத்திரத்தை கிஞ்சித்தும் சட்டை செய்யவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் இது நமது நாளைய இயக்குநர்கள் அறியாதது, அறிய வேண்டியது.

கிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !

12

“அந்தப் பெண் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கலாம். எங்கள் விமானத் தாக்குதலால் பாதிப்படைந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவள் அவள். நட்ட ஈடு வாங்குவதற்காக எமது இராணுவ முகாமுக்கு வந்த மக்கள் கூட்டத்தில் அவளும் இருந்தாள். நான் அந்தக் குழந்தையை ஏறிட்டுப் பார்த்தேன். அவளது உடல் அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது . என்னைக் கண்டதும் அடக்க முடியாமல் அழுதாள். எனது இராணுவச் சீருடை அவளை அச்சுறுத்தியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவள் மனதில் என்ன சிந்தனைகள் ஓடியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை”.

“பெயர் தெரியாத அந்தக் குழந்தையின் முகம் எனது பிள்ளைகளை நினைவூட்டுவதாக இருந்தது. அவளைக் கட்டியணைத்து ஆறுதல் கூற விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியாது என்பதையும் அறிந்தேயிருந்தேன்”

–  கிம்பெர்லி ரெவேரா (கடந்த மாதம் 23-ம் தேதி அளித்த பேட்டியிலிருந்து).

கிம்பெர்லி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மெஸ்க்வெய்ட் பகுதியைச் சேர்ந்தவள். ஏழ்மையான குடும்பப் பின்னணி. வால்மார்ட்டில் பணிபுரிந்து வந்த கிம்பெர்லி, அங்கே உடன் பணிபுரிந்து வந்த மரியோ ரெவேராவைக் காதலித்து மணம் புரிந்து கொண்டாள். காதல் மணம் என்றாலும் அவளது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவில்லை.

தொடர்ந்து அதிகரித்து வரும் குடும்பச் செலவினங்களால் அந்தத் தம்பதியினர் பொருளாதார ரீதியில் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். காதல் மண வாழ்வில் சில மகிழ்ச்சியான தருணங்களும் அவளுக்கு வாய்த்தது; அழகான இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள் கிம்பெர்லி. கணவன் மனைவி இருவருமே பணிபுரிந்தாலும், வால்மார்ட் கொடுத்த சொற்ப சம்பளம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. பொருளாதார நெருக்கடி அந்தக் குடும்பத்தை சுற்றி வளைத்து நெருக்குகிறது. இதைச் சமாளிக்க இருவரில் ஒருவர் இராணுவத்தில் சேர்வதென முடிவு செய்கிறார்கள். என்றாலும், இருவருக்குமே உடற்பருமன் பிரச்சினை இருந்ததால் உடல் எடையைக் குறைக்க பயிற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

இருவரில் யாருக்கு முதலில் எடை குறைகிறதோ அவர் இராணுவத்தில் சேர்வது என்று முடிவு செய்கிறார்கள். மரியோவை விட கிம்பர்லியின் எடை வேகமாகக் குறைகிறது. 2006–ம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் கான்டிராக்டு நிறுவனம் ஒன்றின் மூலம் இராணுவத்தில் சேரும் கிம்பர்லி, ஈராக் அனுப்பி வைக்கப்படுகிறார். பாக்தாத்தில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் நான்காம் காலாட்படை அணியின் முகாமுடைய வாயில் காவலாளி வேலை அவருக்கு அளிக்கப்பட்டது.

காவலாளி வேலையில் சிப்பாய்களைப் போல் நேரடியாக யுத்தத்தில் பங்கேற்க வேண்டிய தேவையில்லை. என்றாலும், போரால் பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்களும், உறவுகளை இழந்த அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் நிவாரணம் கோரி இராணுவ முகாம்களை மொய்ப்பது வழக்கம். எனவே, போரால் வாழ்விழந்த அப்பாவி சிவிலியன்களை அவள் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருந்தது. நிவாரணம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்க இராணுவம், ஈராக் மக்களை விலை பேச இயலவில்லை. அவர்களுடைய பதிலடித் தாக்குதல்களை நிறுத்த முடியவில்லை. அமெரிக்க வீரர்கள் எல்லோரும் ஈராக்கிய குழந்தைகளைக் கூட எதிரிகளாகவே கருத வேண்டுமென்பதுதான் இராணுவத் தலைமையின் உத்தரவு.

02-riverasஇந்த உத்தரவை கிம்பெர்லியும் அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. பல நாட்களாகத் தொடர்ந்த வலி நிறைந்த இந்தப் பணி, அவளை தீராத மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் உள்ளாக்குகிறது. ஊரில் அன்றாடத் தேவைகளுக்காக அல்லாடும் தனது குடும்பமும் குழந்தைகளும் அவள் நினைவுக்கு வருகின்றன. தனது சொந்தக் குழந்தைகளின் ஏக்கத்தை ஈராக்கியக் குழந்தைகளின் முகத்தில் காண்கிறாள். ஒரு கட்டத்தில் கிம்பெர்லியின் மனசாட்சி மேலெழுகிறது; இதற்கு மேலும் தன்னால் ஈவிரக்கமற்ற இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று முடிவு செய்கிறாள்.

தனது முடிவை மேலதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகிறாள் கிம்பெர்லி.

அமெரிக்க இராணுவத்தில் கிம்பெர்லியின் நிலை அவளுக்கு மட்டுமே ஏற்பட்டதல்ல. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இராணுவம் நவீன தொழில்நுட்பங்களை வரித்துக் கொள்வதில் முன்னணியில் இருக்கிறது, அந்த வகையில் வெளித்தோற்றத்தில் வெல்லப்படவே முடியாது என்கிற பிம்பம் அதனைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், ஈராக், ஆப்கான் என்று ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கு அனுப்பப்படும் வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும், தற்கொலைகளும் தொடர் நிகழ்வாகவே உள்ளது.

இதைச் சமாளிக்க படையெடுத்துச் செல்லும் தனது இராணுவத்துக்கு நவீன ஆயுதங்களோடு கிருஸ்தவ மதகுருமார்களையும் (chaplain) அனுப்பி வைக்கிறது அமெரிக்க அரசு. எப்போதெல்லாம் வீரர்களுக்கு மனசாட்சி உறுத்துகிறதோ அப்போதெல்லாம் அதை ஆன்மீக ரீதியாக தடவிக் கொடுத்து, மனச்சாட்சியை மரத்து போக வைக்கும் குரு‌ஷேத்திர கிருஷ்ணனின் பாத்திரம் தான் இந்த மதகுருமார்களுக்கும்.

கிம்பெர்லியின் மேலதிகாரிகள் அவளை முகாமில் இருக்கும் மதகுருவிடம் அனுப்புகிறார்கள். மதகுருவோ, கிம்பெர்லியின் மனக் குழப்பத்தைக் கேட்டுக் கொண்டு, ‘அனைத்தையும் சகித்துக் கொண்டு தேவனின் பெயரால் கடமையைத் தொடர்வது’ குறித்து நற்செய்திப் பிரசங்கம் செய்து அனுப்புகிறார். ஒருபக்கம் கிம்பெர்லியின் தாய்மை உணர்ச்சி அவளது மனசாட்சியை அறுக்கிறது. தனது குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை விட அப்பாவி ஈராக்கியர்களின் அச்சம் தோய்ந்த முகங்கள் அவளது மனசாட்சியைப் பிடித்து உலுக்குகின்றன. பெற்றோரை இழந்து, உறவினர்களை இழந்து நிர்க்கதியாக வீசியெறிப்பட்ட ஈராக்கியக் குழந்தைகளின் ஓலம் அந்த அமெரிக்கத் தாயின் உள்ளத்தைக் குத்திக் குதறுகின்றது.

இன்னொரு பக்கம் அவளது மேலதிகாரிகளின் உத்தரவு அச்சுறுத்துகிறது. இந்த மனப்போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதென தீர்மானிக்கிறாள். 2007–ம் ஆண்டின் துவக்கத்தில் விடுமுறைக்காக அமெரிக்கா திரும்பும் கிம்பெர்லி, தனது கணவரோடு அமெரிக்க எல்லையைக் கடந்து கனடாவில் அடைக்கலமாகி அங்கே அரசியல் அகதியாக தஞ்சம் கோருகிறாள். இராணுவ வேலையை ஒப்பந்த காலத்துக்கு முன்பாகவே துறக்கிறாள்.

2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்திரிகை ஒன்றிற்காக பேட்டியளித்த கிம்பெர்லி, இவ்வாறு சொல்கிறாள் – “போரை பிரத்யட்சமாகக் கண்ட எனக்குள் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நமது தேசத்தின் பேராசைகளுக்காக மக்கள் அநியாயமாக உயிரிழக்கிறார்கள். போரிலிருந்து ஊர் திரும்பும் வீரர்கள் மனச்சோர்வினாலும், மன அழுத்த நோயினாலும் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் போதைப் பழக்கத்துக்கும் மதுவுக்கும் அடிமையாகிறார்கள். சிலர் உடல் ஊனமாகித் திரும்புகிறார்கள்; இன்னும் சிலரோ திரும்புவதேயில்லை…”

கிம்பெர்லி ரெ வேராகனடாவின் டொரான்டோ பகுதியில் கணவரோடு தங்கிய கிம்பெர்லி, அந்நாட்டு அரசிடம் அதிகாரபூர்வ குடியுரிமை கோரி விண்ணப்பிக்கிறாள். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவளது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதை எதிர்த்து செய்த மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறாள், கிம்பெர்லி.

“செய்யும் காரியங்களின் மேல் அறம் சார்ந்த ஆட்சேபணைகளும் விருப்பமின்மையும் இருந்தாலோ, இன்னொரு மனிதரை தாக்கிக் காயப்படுத்துவதை ஒருவரின் மனசாட்சி ஏற்கவில்லையென்றாலோ அந்த வேலையிலிருந்து வெளியேற மக்களுக்கு வாய்ப்புகள் இருக்க வேண்டும்” – அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபடுத்தப்பட்டதால் மன அழுத்த நோய் மற்றும் பல்வேறு காரணங்களால் இராணுவ வேலையைக் கைவிடுவோருக்காக துவங்கப்பட்டுள்ள “மறுப்பதற்கான வீரம்” (courage to resist) என்கிற அமைப்பிடம் பேட்டியளித்த கிம்பெர்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட கிம்பெர்லி இராணுவ விசாரணையை எதிர்கொள்கிறாள். அந்த இடைப்பட்ட காலத்தில் கார்ஸன் கோட்டையிலிருக்கும் இராணுவ முகாமில் பணியமர்த்தப்படுகிறாள். மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட தனது அனுபவம் குறித்து சொல்லும் கிம்பெர்லி, “ஆயுதங்களைத் துடைத்து சுத்தம் செய்யும் தற்காலிக வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். என்னால் ஆயுதங்களைத் தொடவோ பார்க்கவோ கூட முடியவில்லை. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் மனக் கொதிப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் நான் ஆயுதங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்து விட்டேன்” என்கிறாள்.

கடந்த மாதம் 29-ம் தேதி இராணுவ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது நான்கு குழந்தைகளின் தாயாகவும், கருவில் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டும் இருக்கும் கிம்பெர்லிக்கு பத்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது அடுத்த குழந்தையை சிறையில் பெற்றெடுக்க காத்திருக்கிறாள் அந்தத் தாய்.

கிம்பெர்லி ஈராக்கில் சந்தித்த தருணங்கள் நமக்கு அந்நியமானவையல்ல. நமது பணியிடங்களில், அலுவலகங்களில், ஆலைகளில் நாள் தோறும் நம் மனசாட்சியை உரசிப் பார்க்கும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பிட்ட சம்பவத்தின் பாதிப்பின் தன்மை நமது எதிர்வினையைத் தீர்மானிக்கிறது. சில சந்தர்ப்பங்களில் மெளனமாய் முணுமுணுக்கிறோம் அல்லது சகித்துக் கொண்டு கடந்து விடுகிறோம் அல்லது அபூர்வமான தருணங்களில் எதிர்த்து போராடவும் செய்கிறோம். பெரும்பாலும், சகித்துக் கொண்டு கடந்து செல்வதே நடக்கிறது.

குடிநீர் வினியோகம் நடக்கவில்லை என்பதற்காகவோ, மின் தட்டுப்பாட்டை எதிர்த்தோ போராடும் மக்களை ஒடுக்குவதற்காக ஆளும் வர்க்கம் ஏவி விடும் காவல் துறையின் தாக்கும் முனை, அதன் கீழ்மட்டப் பணியிடங்களில் அமர்ந்துள்ள உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட காவலர்கள் தான். அன்றாடம் நிலப்பறிப்புக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, வளங்கள் கொள்ளை போவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை அடக்கி ஒடுக்க முன்வரும் கீழ்மட்டக் காவலர்களும், துணை ராணுவப்படை, ராணுவம் உள்ளிட்ட அரசின் அதிகாரப்பூர்வ குண்டர்படைகளில் பணிபுரிபவர்களும் சாமானிய குடும்ப பின்னணி கொண்டவர்கள் தான். காஷ்மீரிலும், வடகிழக்கு இந்தியாவிலும், சட்டீஸ்கரிலும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையாக நிற்பவர்கள் இவர்கள்தான்.

மக்களைக் கிள்ளுக்கீரையாக நடத்துவதையும் வாய்ப்புக் கிடைக்கும் போது பூட்ஸ் காலின் கீழ் போட்டு நசுக்குவதையும் எவ்வாறு நியாயப்படுத்திக் கொள்ள முடிகிறது இவர்களால்? இது சம்பளத்துக்காக செய்யும் வேலை. இதில் மனசாட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் இவர்கள் அனைவரும் கூறும நியாயம்.

ஆனால், தனது ஏழ்மையின் காரணமாக இராணுவப் பணியில் சேரும் கிம்பெர்லியோ, தனது செயலின் பின்விளைவு குறித்து எண்ணி அஞ்சிப் பின் வாங்கவில்லை. வேலை இழப்பினால் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடிகளை அவள் எண்ணிப் பார்க்கவில்லை. தனது குழந்தையின் வயிற்றை நிரப்ப வேண்டும் என்பதற்காக, இன்னொரு தேசத்தின் இன்னொரு தாயின் குழந்தை செத்து மடியட்டும் என்று கருதவில்லை. பிறருடைய துன்பத்தையும் தன்னுடையதாக கருதினாள். தனது மனசாட்சிக்கும் தாய்மை உணர்ச்சிக்கும் நேர்மையாக நடந்து கொண்டாள்; இந்த நேர்மைக்கான விலை சிறைத் தண்டனை என்றாலும் கூட அவள் கலங்கவில்லை.

ஒரு வேளை அவள் அறிவுஜீவியாக இருந்திருந்தால், இராக்கில் பத்து குழந்தைகளை துப்பாக்கிக்கு இரையாக்கி விட்டு, அமெரிக்காவுக்கு திரும்பி வந்து தனது மன அவஸ்தையை புத்தகமாக்கி விற்றிருப்பாள். அல்லது, கொலை என்பது அறம் கொன்ற செயல் அல்ல, அது என் பிழைப்பு என்று பின் நவீனத்துவ தத்துவ விளக்கம் அளித்திருப்பாள். ஆனால் கிம்பர்லியோ மிகவும் சாதாரணமான ஒரு பெண்.

செய்யும் வேலையும் ஏற்றுக் கொண்ட கொள்கையும் நேருக்கு நேர் முரண்பட்டு நின்றாலும், அவை இரண்டும் இருவேறு பாதைகளில் சிக்கலின்றி பயணிக்க முடியும் என்று பலர் கருதுகிறார்கள். அல்லது இந்நிலையை எதிர்த்துப் போராடுவது சாதாரணர்களால் முடியாது என்றும் அதெல்லாம் விதிவிலக்கான மனிதர்களின் சாதனை என்பதாகவும் சமாதானம் கூறிக் கொள்கிறார்கள்.

கிம்பெர்லி வெகு சாதாரணமான பெண்மணி தான். அவளிடம் வெளிப்பட்டிருக்கும் பண்பு உழைத்துப் பிழைக்கும் எளிய மக்களிடம் வெளிப்படும் பண்பு. அதனால் தான், மொழி தெரியாத நாட்டில், அந்நிய இனத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் கண்ணீரில் தனது குழந்தையின் கண்ணீரை கிம்பெர்லியால் காண முடிந்தது.

கிம்பெர்லி தனது இதயத்தை வயிற்றுக்கு மேல் வைத்திருந்தாள். இதயத்தின் மீது வயிறு அமையப் பெற்றவர்களால் அவள் அனுபவித்த வேதனையைப் புரிந்து கொள்ள இயலாது.

– நாசர்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

ஐபிஎல் : சூதாட்டத்தின் பின்னணியில் அணி முதலாளிகள் ?

28
குரு மெய்யப்பன்
குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன்.

பிஎல் சூதாட்டம், ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக பாலிவுட்டின் நடிகர் விண்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய செல்பேசி அழைப்புகள் பதிவின் படி சூதாடி ரமேஷ் வியாஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்சின் முதன்மை நிர்வாகியான குருநாத் மெய்யப்பனோடும் அடிக்கடி பேசியிருக்கிறார். இந்த மெய்யப்பன் யார்? சென்னை அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன்.

முதலில் விண்டூவின் ஜாதகத்தை பார்க்கலாம். இவர் மறைந்த நடிகர் தாராசிங்கின் மகன். அவரது பிரபலத்தை வைத்து நடிகரானவர். அந்த பிரபலத்தை வைத்து சூதாடிகளுடன் தொழிலையும் தோழமையையும் வளர்த்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் இவர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் மட்டும் சுமார் 17 இலட்சம் ரூபாய் சுருட்டியிருக்கிறார்.

மட்டுமல்ல இந்தியாவின் பிரபலமான எல்லா சூதாடிகளோடும் நெருக்கமான உறவைப் பேணியிருக்கிறார். தற்போதைய ஐபிஎல் மோசடிகள் வெளியான பிறகு சஞ்செய் ஜெய்ப்பூர், பவான் ஜெய்ப்பூர் எனும் இரண்டு சூதாடிகள் துபாய்க்கு தப்பி ஓடுவதற்கு இவர் உதவி செய்திருக்கிறார். இத்தகைய மோசடி ஆள் எதற்கு மெய்யப்பனோடு அடிக்கடி பேச வேண்டும்? நிச்சயம் அந்தப் பேச்சு மாதம் மும்மாரி மழை பொழிந்ததா என்றா இருக்கப் போகிறது?

இவரைப் போன்ற பிரபலங்கள் அணி முதலாளிகளுக்கும் சூதாடிகளுக்கும் பாலமாக பணியாற்றி இருக்கலாம். தற்போது சீனிவாசனது மருமகன் மெய்யப்பன் நேரடியாக சூதாடினாரா, இல்லை ஸ்பாட் பிக்சிங் செய்தாரா என்பெதெல்லாம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று போலீஸ் கூறினாலும் அதற்கான முகாந்திரம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஸ்ரீசாந்த் அண்ட் கோ மாட்டியது கூட ஏதோ உள் குத்து விவகாரம் என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில் எல்லா போட்டிகளிலும் பெட்டிங், ஸ்பாட் பிக்சிங் இருக்கும் போது அதில் எல்லா அணிகளும், வீரர்களும் சம்பந்தப்பட்டிருக்கும் போது ராஜஸ்தான் ராயல்சின் மூன்று வீரர்கள் மட்டும் எப்படி மாட்ட முடியும்?

அடுத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் சில பல ஆயிரங்கள் கோடி ரூபாய் வர்த்தகம் இருக்கும் போது இதை ஏன் சில சில்லறை சூதாடிகள் மட்டும் செய்ய வேண்டும்? தாவூத் இப்ராஹம்மின் டி கம்பெனிதான் இந்தியாவில் சூதாட்டத்தை பல ஆண்டுகளாக நடத்துகின்றது என்று ஊடகங்கள் இதற்கு மர்மக்கதை எழுதி விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இந்திய அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளி அவ்வளவு வெளிப்படையாக, விரிவாக இந்த மோசடி சாம்ராஜ்ஜியத்தை நடத்துவது கடினம். அல்லது அவருக்கு இந்திய தரகு முதலாளிகள், அரசியல்வாதிகள் ஆதரவும், கூட்டும் அவசியம் தேவைப்படும். எனில் பின்னதற்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

ஒரு போட்டியில் ஒரு வீரர் எத்தனை நோபால், வைடு, போட வேண்டும், ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும், எத்தனை ரன்னில் ஆட்டமிழக்க வேண்டும், அல்லது எப்படி ஆட்டமிழக்க வேண்டும் என்பெதல்லாம் ஒரு அணி நிர்வாகம் சொல்லி யாரும் செய்து விடக்கூடிய விசயங்கள்தான். இவையும் கூட ஆட்டத்தின் முடிவை பாதிக்காமலேயே செய்யலாம் எனும் போது இயல்பாகவே அணி முதலாளிகள் சூதாடிகளோடு தொடர்பு கொண்டு ஸ்பாட் பிக்சிங் செய்ய வாய்ப்பிருக்கிறது. தேவையும் இருக்கிறது.

ஒவ்வொரு அணியையும் பல நூறு கோடிக்கு வாங்கியிருக்கும் நிர்வாகங்கள் அதை எப்படி இரகசியமாக மர்மமாக வைத்திருக்கின்றனவோ, அப்படி மர்மமாகத்தான் வைத்திருக்க வேண்டும் என்று ஐபிஎல் விதிகள் கூறுகின்றனவோ அதன்படி ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு சுருட்டலாம் என்று ஏன் ஒரு இரகசிய விதி இருக்கக்கூடாது? சசிதரூர் தனது பினாமி மூலம் கொச்சி அணியை வாங்கியதும், ஐபிஎல்லின் முந்தைய சேர்மன் லலித் மோடி ராஜஸ்தான் அணியை அப்படி பினாமி பேரில் வாங்கியதும் இருவரது சண்டையால் வெளியானது. அப்போதுதான் இவர்கள் மொரிசியஸ் தீவு எனும் வரி இல்லா சொர்க்கத்தின் மூலம் பணம் வரவழைத்து அணிகளை வாங்கியது அம்பலமானது.

தற்போது ஐபிஎல்லில் ஆடும் ஒரு வீரரது உடையைப் பாருங்கள். ஒரு இன்ச் விடாமல் உடை முழுக்க நிறுவனங்களது முத்திரைகள். இது போக தலைக்கவசம், மட்டை, உறை என அனைத்திலும் நிறுவன விளம்பரங்கள். இதன்படி ஒரு வீரர் தனது முன்பாகத்தை அதிகம் கேமராவில் காட்டினால் அதிக பணம் என்று அந்த நிறுவனங்கள் ஒரு டீல் போட்டால் அதை யார் தடுக்க முடியும்? போட்டி நடக்கும் போது அவர் ஏன் பின்பகுதியை அடிக்கடி ஆட்டி ஆட்டிக் காண்பிக்கிறார் என்றா கேட்க முடியும்? அல்லது அவர் அடிக்கடி மட்டையை தூக்கி காக்காய் விரட்டுவது போல செய்கிறார் என்று கிண்டலா செய்ய முடியும்?

இவையெல்லாம் லீகல் என்றால் ஒரு ஓவரில் நான்கு 4குகளை கொடுப்பது மட்டும் சட்டவிரோதம் ஆகிவிடுமா? போட்டிகளின் விறுவிறுப்புக்கேற்பவே நேரடி ஒளிபரப்பின் போது வரும் விளம்பரங்களுக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றால் அந்த் விறுவிறுப்பை அணி முதலாளிகளும் வீரர்களும் பேசி வைத்துக் கொண்டு செய்தால் யார் தடுக்க முடியும்? ஆக ஐபிஎல்லும் சூதாட்டமும் ஸ்பாட் பிக்சிங்கும் யாரும் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கிறது. ஒரு நேர்த்தியான சூதாட்ட அழகியலின் குழந்தைதான் ஐபிஎல்.

இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்

ஸ்ரீசாந்த் அண்ட் கோ மாட்டியதும் இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசன் சென்னையில் கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தை கூட்டி நாங்களும் கச்சேரி செய்கிறோம் என்று பாடினார். ஆனால் அதில் சுருதி ஒட்டவே இல்லை.

இந்த சூதாட்ட மோசடியை விசாரிக்க ஒரு நபர் விசாரணையைப் போட்டு விசாரிக்கிறோம் என்றார். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே “எங்களுடைய வரம்பு குறைவு, யாருடைய போனையும் ஒட்டுக் கேட்க முடியாது, கைது செய்ய முடியாது, சூதாட்டத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை, எல்லா வீரர்களையும் கண்காணிக்கும் அளவுக்கு எங்களுக்கு ஆள்பலம் இல்லை” என்றார்.

இதிலிருந்து தெரிவது என்ன? இவர்கள் விசாரணை என்பது ஒரு கண்துடைப்பு மோசடி! ஊடகங்களுக்கும் ஊருக்கும் நாங்களும் யோக்கியவான்கள் என்று காட்டிக்கொள்ள ஒரு நடிப்பு, அவ்வளவுதான். இந்தியாவில் பொதுத்தேர்தல் வருவதால் ஐபிஎல்லை இங்கு போலிஸ் பாதுகாப்புடன் நடத்த முடியாது என்றதும் லலித் மோடி ஆட்டத்தையே தென் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்று நடத்தினார். சர்வதேச கிரிக்கெட் வாரியமும், ஏனைய நாடுகளின் வாரியமும் கண்டு நடுங்குமளவு பணபலமும், வருமானமும் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சூதாட்ட மோசடியை கண்டுபிடிக்க துப்பில்லை என்பதை நாம் நம்ப வேண்டுமாம்.

அடுத்து ஆந்திரத்து ராஜசேகர ரெட்டியுடன் ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் சீனிவாசன் தமிழகத்தில் ஏனைய சிமெண்டு முதலாளிகளுடன் சிண்டிகேட் அமைத்து அநியாயமாக கொள்ளை அடித்து வரும் ஒரு முதலாளி. இதனால்தான் என்னவோ ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் வீரர்கள் சட்டத்தால் நிரூபிக்கப்படும் வரை அப்பாவிகள்தான் என்று நற்பத்திரம் வாசிக்கிறார். இதுதான் குற்ற உணர்வு குறுகுறுக்கும் என்பார்களோ?

சரி, ஐபிஎல்லின் அனைத்து இரகசியங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வெளியிடுங்களேன், அதன் மூலம் வெளிப்படைத்தன்மை மூலம் அதை திருத்தலாமே என்றால், நாங்கள் தனியார் அமைப்பு அந்த சட்டத்தின் கீழ் வரமாட்டோம் என்கிறார் சீனிவாசன். கூடவே அப்படி அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தாலும் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்கிறார். இதற்கு பொழிப்புரை என்ன? நாங்களும் திருட்டுத்தனமாகத்தான் செயல்படுவோம், வெளியே நடக்கும் திருட்டுத்தனங்களையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான்.

இத்தகைய பின்னணியில் இவரது மருமகன் மெய்யப்பன், நடிகர் விண்டூவுடன் என்ன பேசியிருப்பார்? ஸ்பாட் பிக்சிங்கில் அணிகளின் முதலாளிகளே இருப்பார்கள் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

ஒரு சிலர் பெட்டிங்கை சட்டபூர்வமாக்கிவிடலாம் என்கிறார்கள். பாலியல் வன்முறையை குறைக்க விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பதற்கு ஒப்பானது இது. இதன்படி குழந்தைகளையும் சட்டபூர்வமாக விபச்சாரம் செய்ய அனுமதித்தால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையையும் தடுத்து நிறுத்தலாமோ?

ஒரு விளையாட்டை, போட்டியை விளையாட்டு உணர்வோடு அணுகுவது, இரசிப்பதுதான் ஆரோக்கியம். சூதாட்டமும், ஸ்பாட் பிக்சிங்கும் அதை வர்த்தக உணர்வாக்குகிறது. அதன்படி விளையாட்டு என்பது உடலின் சாத்தியங்களை போட்டியுடன் இரசிக்கச் செய்யும் ஒரு கலை என்பது போய் அதன் விதிகளை பணத்தால் கட்டுப்படுத்தப்படும் தொழில் என்றாக்கிவிடும்.

பிறகு ஸ்ரீசாந்த் ஒரு ஓவரில் 13 ரன் கொடுக்கிறேன் என்று ஒப்பந்தம் போடத்தான் செய்வார், பரவாயில்லையா?

தமிழகத்தின் கோவில்கள் பார்ப்பன ஆதிக்கசாதியினரிடம் இருந்த வரை மக்கள் பணம் கேட்பாரின்றி கொள்ளையடிக்கப்பட்டது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணமே நீதிக்கட்சி காலத்தில் கோவில்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. அது போல கிரிக்கெட்டும் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். அளப்பரிய அதன் பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவழிக்கப்பட வேண்டும். கிரிக்கெட்டை அரசு எடுப்பதால் சீரழிந்து விடுமே என்று கவலைப்படுவர்களுக்கு இப்போதைய சீரழிவை விட அது மேல் என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகிறோம்.

தரமான தண்ணீர் வேண்டுமா ? விடாது போராடு !

13

பாட்டில் தண்ணீர்சுட்டெரிக்கும் கத்திரி வெயில் கொளுத்தும் கோடைக்காலம் தான் தண்ணீர் வியாபாரிகளுக்கு அடைமழைக் காலம். பாக்கெட் தண்ணீர், பாட்டில் தண்ணீர், கேன் தண்ணீர், வாட்டர் மெஷின் என்று தண்ணீர் வியாபாரம் கோடிகளில் கொழிப்பது இந்த கோடைக்காலத்தில் தான். சென்னையில் மட்டும் ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் தண்ணீர் வியாபாரம் நடக்கிறது.

தண்ணீர் என்கிற அற்புதத்தை யாராவது உற்பத்தி செய்ய முடியுமா ? முடியாது, ஆனால் விற்கலாம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலையில் முதலாளி எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சுருட்டுகிறாரே என்று கேட்டால், அவர் மூளை உழைப்பில் ஈடுபடுகிறார் என்று கூறுவார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். அது ஒரு பொய். எனினும் அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அந்த மூளை உழைப்பு கூட இந்த தண்ணீர் வியாபாரத்தில் இல்லை. தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையின் கொடை. அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.

தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையுடையது. அத்தகைய நீரை, அனைவருக்கும் உரிமையுள்ள இயற்கையை முதலாளிகள் கடைச்சரக்காக்கி காசு பார்ப்பது எவ்வளவு பெரிய கொள்ளை? அந்த கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பது எத்தகைய அயோக்கியத்தனம்!

மக்களுக்கு தரமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மக்கள் சாவிலும் கூட வரியை பிடுங்க மறக்காத அரசு, தனது கடமைகள் ஒவ்வொன்றில் இருந்தும் விலகிக்கொண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இலாபவெறி பிடித்த முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்து வருகிறது. அப்படித்தான் மக்களின் அடிப்படை உரிமையான குடிநீர் பெறும் உரிமையும் தனியார் முதலாளிகளின் கைகளில் கிட்டத்தட்ட ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

பாட்டில் தண்ணீர்டந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முறையாக அனுமதி பெறாமலும், சுகாதாரமற்ற முறையிலும் குடிநீரை கேன்களில் அடைத்து விற்று வந்த 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் கம்பெனிகள் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் சீல் வைக்கப்பட்டன. இதை கண்டித்து சீல் வைக்கப்படாத தண்ணீர் கொள்ளையர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நான்கு நாட்களுக்கு கடுமையான (கேன்) தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீர் வியாபாரிகள் இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு கேன் ஒன்றுக்கு 100 ரூபாய் என்று கொள்ளையடித்தனர்.

பல இடங்களில் மக்கள் என்ன செய்வது, யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவித்தனர். சில இடங்களில் கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது போன்ற நெருக்கடியான நேரங்களில் எல்லாம் ஒரு கேன் நூறு ரூபாய் என்றால் கூட இவர்கள் வாங்கத் தயங்குவதில்லை. தண்ணீரை முற்றிலும் தனியார்மயமாக்கிவிடும் ஆளும் வர்க்கத்தின் கொள்கை எந்த பிரச்சினையும் இன்றி மக்களாலேயே ஏற்று அங்கீகரிக்கப்பட்டு அமுலாக்கப்படுவதை நாம் இதில் பார்க்கலாம்.

தண்ணீரை தனியார்மயமாக்கும் கொள்கை எவ்வளவு வக்கிரமானது, கொடூரமானது, அநீதியானது என்பதை உணரமுடியாதபடி தண்ணீர் தனியார்மயத்தை எந்த வன்முறையும் இன்றி அரசும் முதலாளிகளும் கடந்த இருபது ஆண்டுகளில் சிறிது சிறிதாக மக்களை ஏற்க வைத்துவிட்டனர். தண்ணீர் என்றாலே தனியார் தண்ணீர் தான் என்பதை மூளையில் பதிய வைப்பதில் உண்மையில் அவர்கள் வெற்றி கண்டுவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

மெட்ரோ வாட்டர் சுத்தமானது இல்லை என்று கூறுபவர்கள் டாடா வாட்டர் பிளஸ் சுத்தமானது மட்டுமல்ல சத்தானதும் கூட என்று அங்கீகரித்து அதற்காக பிரச்சாரமும் செய்கிறார்கள். தனியார் தண்ணீர் தான் தரமானது என்கிற கருத்து எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதையும், அதை எத்தனை இலட்சம் பேர் பயன்படுத்துகின்றனர் என்பதையும் தற்போது ஏற்பட்ட தண்ணீர் (கேன்) தட்டுப்பாட்டின் போது நாம் காண முடிந்தது.

சென்னை நகரில் கணிசமான மக்கள் தனியார் நிறுவனங்களின் குடிநீரையே பயன்படுத்துகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இருபது லட்சம் வீடுகளில் இதுபோன்ற பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீரைத் தான் பயன்படுத்துகிறார்கள். குடிநீர் வாரியத்தின் நீர் சுகாதாரமற்றது என்பதால் தான் இது போன்ற தனியார் தண்ணீரை வாங்குகிறோம். இது கூடுதல் செலவு தான் ஆனால் வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். இவர்களைத் தவிர கை நிறைய சம்பாதிக்கும் பிரிவினருக்கு இது ஒரு காரணம். இதைவிட பெரிய காரணம் கை கொள்ளாத அளவுக்கு காசு இருக்கும் போது நம்ம ஸ்டேட்டசை காட்ட வேண்டாமா. மற்றவர்களும் நாமும் ஒன்றா. நாம் எதற்காக மெட்ரோ வாட்டரை குடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அக்வாஃபினாஇவர்கள் மோசமான குடிநீர் என்று கூறும் மெட்ரோ வாட்டரைத் தான் பெரும்பாலான மக்கள் அருந்துகின்றனர். அரசிடம் குடிநீரை வழங்குவதில் பல குறைபாடுகள் இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் மெட்ரோ வாட்டரில் சேர்க்கப்படும் குளோரினின் அளவு சரியாக இருந்தால் நீரில் உள்ள அனைத்து நோய்க்கிருமிகளும் செத்து விடும் என்பது நிச்சயம். ஆனால் சுத்தமான தண்ணீர் என்று கருதப்படும் தனியார் கம்பெனிகளின் தண்ணீர் உண்மையில் சுத்தமாகவா இருக்கின்றன ? கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை வியாபாரம் செய்வதால் இவர்கள் கேன்களையே முறையாக கழுகுவதில்லை. பாசியும் அழுக்கும் படிந்த நிலையிலேயே அடுத்த கேனை நிரப்பி வண்டிகளில் ஏற்றுகின்றனர். இது கூட பெரிய பிரச்சினை இல்லை. இதற்கடுத்ததுதான் முக்கியமானது.

நீரின் சுவையை செயற்கையான முறையில் கூட்டுவதற்காக இந்த தண்ணீர் கொள்ளையர்கள் பல்வேறு தாதுப் பொருட்களையும் அளவுக்கு அதிகமாக நீரில் கலக்கின்றனர். இத்தகைய தாதுப் பொருட்கள் அதிகமாக சேர்க்கப்பட்ட நீரை குடிப்பவர்களுக்கு நிச்சயமாக ரத்த அழுத்தமும், சிறுநீரகத்திலும் பித்தப்பையிலும் கற்கள் உருவாவதையும் யாராலும் தடுக்க முடியாது. தாகமும் அடங்காது. அடுத்து அதை சரி செய்ய மெட்ரோ வாட்டரைப் போலவே சில பல குறைபாடுகளுடன் இயங்கும் அரசு மருத்துவமனையை தரமானது இல்லை என்று கூறி தனியார் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை கொட்டி அழுவார்கள். இன்னும் நாலு பிரச்சினைகள் அதிகமாகும்.

“பிஸ்லரி, டாடா வாட்டர் போன்ற பிராண்டட் கம்பெனி தண்ணி எல்லாம் அப்படி இல்லை அவை எல்லாம் நல்ல தண்ணி” என்று தனியார் தண்ணீர் பிரியர்கள் நினைக்கலாம். அவை சுவையான தண்ணீரே தவிர நல்ல தண்ணீர் அல்ல. இயற்கையான படைப்பிலேயே தண்ணீர் தன்னளவில் தரமானதுதான். அதை எந்தக் கொம்பனும் மாற்றி அமைக்க முடியாது. நிறம், சுவை போன்றவற்றை மாற்றலாமே அன்றி தண்ணீரின் இயல்பை யாரும் மாற்றம முடியாது. மெட்ரோ உள்ளிட்ட பொது வழிகளில் கிடைக்கும் நீரை காய்ச்சி குடித்தால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர தண்ணீருக்கு வேறு எந்த பாதுகாப்பும் தேவையில்லை.

தனக்கு மட்டும் நல்ல உணவு, நல்ல தண்ணீர், நல்ல வாழ்க்கை என்று சகலமும் தரமாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற நடுத்தர வர்க்கம் தான் கேன் தண்ணீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கச் சொல்லி போராட்டத்திலும் குதித்திருக்கிறது. அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை என்றோ, அனைவருக்கும் நல்ல தண்ணீரை வழங்கு என்றோ இவர்கள் போராடவில்லை. மாறாக தடை இல்லாமல் கேன் தண்ணீரை வழங்கு என்று போராடியுள்ளனர். இதற்கு பொருள் என்ன என்றால் தடை இல்லாமல் தண்ணீரை தனியார்மயமாக்கு என்பதாகும்.

பிஸ்லெரிஅரசுத்துறைகள் சரியில்லை, தரமில்லை, எல்லாவற்றையும் தனியார்மயமாக்கு என்று பேசும் இவர்கள்தான் தரமற்ற தண்ணீர் என்றாலும் தனியார் கேன் உற்பத்தியாளர்கள் பின்னால் எந்தக் கேள்வியுமின்றி ஓடுகிறார்கள்.

இது போல நெருக்கடியான நேரங்களில் தண்ணீர் இல்லை என்றால் நூறு ரூபாய்க்கு கூட இவர்களால் வாங்க முடிகிறது என்பதை தண்ணீர் கம்பெனிகள் இந்த சீல் வைப்பு நடவடிக்கையின் போது நேரடியாகவே கண்டுகொண்டார்கள். அதன் விளைவாக இப்போது கேனுக்கு ஐந்து ரூபாயை உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்விற்கு எதிராக எந்த முணுமுணுப்பும் இல்லை. நாளையே ஒரு கேன் இருநூறு ரூபாய் என்றால் இவர்களால் என்ன செய்ய முடியும், விலையை குறைக்கச் சொல்லி அரசிடம் கோரிக்கை வைப்பார்களா ? அப்படியும் செய்யலாம். ஏனெனில் தரமான தண்ணீர், தரமான தண்ணீர் என்று தேடி அலையும் இவர்கள் தனியார் தண்ணீருக்கு அடிமைகளாகிவிட்டனர். ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்த விரும்பும் தண்ணீர் தனியார்மய கொள்கைக்கு இவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. இது தண்ணீரை சரக்காக்கத் துடிப்பவர்களுக்கு கிடைத்த வெற்றி.

தென் அமெரிக்க நாடுகளில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் ஒரு போரையே நடத்திக்கொண்டிருக்கின்றனர். தண்ணீர் வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறி தனியார் தண்ணீர் கம்பெனிகளின் பைப் லைன்களை அடித்து நொறுக்குகிறார்கள். ஆனால் இங்கோ தனியார் தண்ணீரை தடை இல்லாமல் வழங்கு என்று ரோட்டில் உட்கார்கிறார்கள். இது சாதாரண தண்ணீரை குடிக்கும் ஏழைகளின் தாகத்தையும் தனியார் கம்பெனிகளிடம் விற்பதற்கு ஒப்பான செயலாகும்.

தண்ணீர் மட்டுமல்ல கல்வி, மருத்துவம் வேலை உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசால் முதல் தரமாக வழங்க முடியும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்த டாடா வாட்டர் பிளஸ் இருந்தது ? அனைத்தையும் இந்த அரசு தானே வழங்கியது. அதன்பிறகு உலகமயமாக்கல் கொள்கையால், உலக வங்கியின் உத்தரவால் தான் அரசு தன் கடைமைகள் ஒவ்வொன்றில் இருந்தும் விலகிக்கொண்டு அவற்றின் இடத்தில் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்துவிட்டது. முதலாளிகளுக்காக திட்டமிட்டே தான் அரசின் சேவையும் தரமும் குறைக்கப்பட்டது. அரசு கல்வி தரமாக இல்லை, அரசு மருத்துவம் தரமாக இல்லை, அரசு தண்ணீர் தரமாக இல்லை என்றால் அதற்கு இவை தான் காரணம்.

எனவே அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்க இந்த அரசால் முடியும். அனைவருக்கும் தரமான தண்ணீரை வழங்கு தண்ணீர் கொள்ளையர்களை தடை செய் என்கிற கோரிக்கையை வைத்து போராடுவதன் மூலம் தான் அரசை அடிபணிய வைக்க முடியும். அவ்வாறு அரசை அடிபணியவைத்தால் தரமான குடிநீரையும் பெறலாம் தண்ணீர் வியாபாரிகளையும் ஒழித்துக்கட்டலாம்.

– வையவன்

உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும் !

2

உங்களைப் பற்றிய விபரங்கள், விரைவில் விற்பனைக்கு  – உஷா ராமநாதன்

கவல்களை பதிவு செயவதற்கும், தொகுப்பதற்கும், இணைப்பதற்கும், தேவைப்படும் போது எடுப்பதற்கும், அகழ்வதற்கும், பகிர்வதற்கும், ஒருவரை அடையாளம் குறிப்பதற்கும், இன்னும் வேறு வழிகளில் தகவல்களிலிருந்து மதிப்பை உருவாக்குவதற்கான சாத்தியங்களை நவீன தொழில் நுட்பம் உருவாக்கியிருக்கிறது.

இந்திய மக்கள் அனைவரையும் பட்டியலிடும் முயற்சியின் ஆரம்ப கட்டங்களில் நிதி ஆதாரங்களை வழங்குவதையும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை தரவு தளத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. ஆனால், அது ஒரு திடமான செயல்படு நிலையை அடைந்த பின்னர் தகவல்களை தனியார் லாபத்துக்காக ஒப்படைக்கப் போவதன் அறிகுறிகள் வெளியாகியிருக்கின்றன.

தனியாரை அனுமதித்தல்

adhaar-1ஜனவரி 28, 2009 தேதியிட்ட நிர்வாக ஆணை ஒன்றின் மூலம் இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குத் தேவையான “நடைமுறை வசதிகளையும், திட்டமிடுதலையும், நிதி ஆதாரங்களையும் வழங்கி, ஆரம்பத்தில் செயல்படுவதற்கான அலுவலகமும் நிதி ஆதரவும் வழங்கும்” பொறுப்பு மத்திய திட்ட கமிஷனிடம் தரப்பட்டது. அடையாள ஆணையம் தனது “பங்களிப்பு மற்றும் பொறுப்புகளின்” ஒரு பகுதியாக, “தகவல் தொகுப்புகளை உருவாக்கும் துறைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்குதல், திரட்டப்பட்டு கணினி மயமாக்கப்படும் தகவல்களை தகுதரப்படுத்துதல், தனிப்பட்ட அடையாள எண்/ஆதார் தகவல்களை பிற தகவல் தொகுப்புகளுடன் இணைத்து ஒத்திசைவு செய்தல்” ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். “தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தனித்துவ அடையாள எண் தகவல்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும். அடையாள எண் தகவல் தொகுப்பின் உரிமையாளர் என்ற முறையில் இதனை செயல்படுத்த வேண்டும்.”

குடிமக்களுடனான தனது பரிமாற்றங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை பாதுகாவலர் என்ற முறையில்தான் ஒரு அரசு வைத்திருக்க வேண்டும். அவை அரசுக்கு சொந்தமானவை அல்ல.

நந்தன் நீலகேணி தலைமையிலான தனித்துவ திட்டங்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழுவினால் தகவல்களின் உரிமை பற்றிய கோட்பாடு வரையறுக்கப்பட்டது. அந்த குழு ஜனவரி 2011-ல் தனது அறிக்கையை வழங்கியது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான வலையமைப்பு, வரி தகவல்களுக்கான வலையமைப்பு, செலவுகள் பற்றிய தகவல்களுக்கான வலையமைப்பு, தேசிய கரூவூல மேலாண்மை ஆணையம், புதிய ஓய்வீதிய திட்டம் ஆகிய 5 திட்டங்களை மட்டும் நேரடியாக குறிப்பிட்டிருந்தாலும், “இந்திய பொது நிர்வாகத்தில் அதிகரித்துக் கொண்டு வரும் தகவல் தொழில்நுட்பம் விரிவாக பயன்படுத்தப்படும் அனைத்து அமைப்புகளுக்கும் தனது கோட்பாடு பொதுவாக செல்லுபடியாக வேண்டும்” என்று நீலகேணி குழு பரிந்துரைத்தது.

நீலகேணி குழுவின் புரிதலின்படி, அரசுக்கு கொள்கை வகுத்தல் செயல்படுத்தல் ஆகிய இரண்டு முக்கிய பணிகள் உள்ளன. செயல்படுத்தல் பலவீனமாக உள்ளது, அதை சரி செய்வதற்கான முறைகளை தேடாமல் அதில் தனியார் வணிக நலன்களுக்கான வாய்ப்பை அந்தக் குழு தேடியது. அதன் விளைவாக தேசிய தகவல் சேவையகங்களை உருவாக்கும்படி பரிந்துரைத்தது.

“தேசிய தகவல் சேவையகங்கள் பொது நோக்கத்துடனான தனியார் நிறுவனங்களாக இருக்கும். அவை லாபம் ஈட்டுபவையாக இருந்தாலும், அதிக பட்ச லாபம் தேடுபவையாக இருக்காது.” அவற்றின் மீது அரசிற்கு “நீண்டகால கட்டுப்பாடு” இருக்கும். அதாவது, அரசு தனது நோக்கங்களை அடைவதிலும், விளைவுகளிலும் மட்டும் கவனம் செலுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தகவல் சேவையகங்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். அவற்றில் குறைந்தது 51 சதவீதம் பங்குகள் தனியார் வசம் இருக்க வேண்டும். அரசாங்கத்திடம் குறைந்தது 26 சதவீத பங்குகள் இருக்க வேண்டும். சேவையகம் திடமான நிலையை அடைந்த பிறகு அரசு அதன் பணம் கொடுக்கும் வாடிக்கையாளராக மாறி விடும். பணம் கொடுக்கும் வாடிக்கையாளராக “அரசாங்கம் தனது வணிகத்தை இன்னொரு தகவல் சேவையகத்துடன் நடத்திக் கொள்ளலாம்”; ஆனால், “பெருமளவிலான ஆரம்ப முதலீடு, பரந்த அளவில் செயல்படுவதன் ஆதாயங்கள், சூழலிலிருந்து கிடைக்கும் வலையமைப்பு ஆதாயங்கள் (இதன் பொருள் என்ன என்று மேலும் விளக்கப்படவில்லை) இவற்றின் காரணமாக தகவல் சேவையகங்கள் அடிப்படையில் இயற்கை ஏகபோகங்களாக உருவாக்கப்படும்”. அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கு, “அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள்” சேவையகங்களில் அமர்த்தப்படுவார்கள். சம்பளத்தில் 30 சதவீதம் அவர்களுக்கு கூடுதல் படியாக வழங்கப்படும்.

அரசு ஒரு வாடிக்கையாளராக

“செயல்பாடு ஆரம்பித்த பிறகு அரசின் பங்களிப்பு ஒரு வாடிக்கையாளராக உரு மாறும்,” என்று நீலகேணி குழு பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது.

aadhar-2மொத்தத்தில், நீலகேணி குழுவின் அறிக்கையிலிருந்து தெரிய வருவது இதுதான்: தேசிய தகவல் சேவையகங்களை உருவாக்குவதன் மூலம் அரசிடம் சேரும் தகவல்களும் தகவல் தொகுப்புகளும் தனியார்மயமாக்கப்படும். தகவல் சேவையகங்கள் தகவல்களின் உரிமையாளராக இருக்கும். அவை இயற்கையான ஏகபோகங்களாக விளங்கும். அவை தகவல்களையும் தகவல் தொகுப்பையும் லாபம் ஈட்ட பயன்படுததும், ஆனால் அதிகபட்ச லாபம் ஈட்ட பயன்படுத்த மாட்டா. (லாபம் ஈட்டுதல், அதிக பட்ச லாபம் ஈட்டுதல் ஆகியவற்றின் வரையறைகள் இதுவரை தெளிவாக இல்லை).

தகவல் சேவையகங்கள் திடமான செயல்பாட்டு நிலையை அடைவது வரை நிதி உதவி அளித்து அரசு அவற்றை ஆதரிக்கும். தகவல்களை திரட்டவும் தகவல் தொகுப்பை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்கும். சேவையகங்களில் அரசு அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டு சம்பளத்துக்கு மேல் 30 சதவீதம் கூடுதல் படியாக பெறுவார்கள். அறிக்கை வெளிப்படையாக குறிப்பிடா விட்டாலும், அதன் மூலம் அவர்களது விசுவாசமும், சேவையகத்தின் நலன்கள் மீதான பற்றுதலும் உறுதி செய்யப்படும். குடிமக்களின் தகவல்களை பாதுகாவலராக அரசு வைத்திருக்கும் கோட்பாடு கைவிடப்பட்டடு, அரசை வாடிக்கையாளராக கொண்ட ஒரு தனியார் அமைப்புக்கு குடிமக்களைப் பற்றிய தகவல்களின் உரிமை வழங்கப்படும்.

தனியார் நிறுவனங்கள் நமது தரவுகளை சொந்தமாக்கிக் கொள்வது பற்றிய அந்த கோட்பாடு மாநில அரசுகளுடனோ, தகவல்கள் திரட்டப்படும் மக்களுடனோ விவாதிக்கப்படவில்லை.

விளக்கம் இல்லாத கோட்பாடுகள்

நீலகேணி குழு அறிக்கையை எதிர்காலம் இல்லாத இன்னொரு அறிக்கை என்று நாம் ஒதுக்கி தள்ளியிருக்கலாம். ஆனால், மார்ச் 2012-ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில், “பொருட்கள், சேவைகள் வரி வலையமைப்பு ஒரு தேசிய தகவல் சேவையகமாக” உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தகவல் சேவையகம் என்றால் என்ன என்பது நாடாளுமன்றத்தில் விளக்கப்படவில்லை, யாரும் அதைப் பற்றி கேள்வி எழுப்பியதாகவும் தெரியவில்லை.

தகவல் சேவையகங்களுக்கான அடிப்படையை இந்திய தனித்துவ அடையாளஎண் ஆணையம் வழங்கியது என்பதற்கு பல கவலை தரும் ஆதாரங்கள் உள்ளன. தகவல் சேவையகங்கள் பற்றிய அறிக்கையில் அடையாள ஆணையமும் அது எப்படி தகவல் சேவையகங்களுக்கு முன் மாதிரியாக செயல்படுகிறது என்பதும் பரவலாக குறிப்பிடப்படுகின்றன. செப்டம்பர் 2009-ல் அடையாள ஆணையம் உருவாக்கிய உயிரிஅளவீட்டு தகுதர குழு தனது அறிக்கையை டிசம்பரில் வழங்கியது. அடையாள ஆணையம், “குடிமக்களின் அடையாள விபரங்களை முதலில் திரட்டுவதற்கும்; அதைத் தொடர்ந்து அடையாளங்களை சரிபார்ப்பதற்கான் சேவையை அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கும் ஒரு தளத்தை உருவாக்கும்” என்று அது அறிவித்தது. ஏப்ரல் 2010-ல் வெளியிடப்பட்ட “அடையாள ஆணையத்தின் நீண்டகால திட்ட மேலோட்டத்தில்” ஆணையம் நிலையான செயல்பாட்டை எட்டியதும் ஆண்டுக்கு ரூ 288.15 கோடி வருமானத்தை ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. புதிய தொலைபேசி இணைப்புகள், வருமான வரி கணக்கு அட்டைகள், சமையல் வாயு இணைப்புகள், கடவுச் சீட்டுகள், ஆயுள் காப்பீட்டு ஆவணங்கள், விமான பயண பதிவுகள் போன்றவற்றிற்கு முகவரி சரிபார்த்தலுக்கும் உயிரி அடையாள விபரங்களை சரிபார்த்தலுக்கும் வசூலிக்கும் கட்டணம் மூலம் அந்த வருமானம் ஈட்டப்படும். அப்படி வருமானம் வரும் காலம் வரை, அதற்கு அரசின் நிதி உதவி அளிக்கப்பட வேண்டும். அந்த நிலையை அடைந்த பிறகு, அது ஒரு தனியார் லாபம் ஈட்டும் அமைப்பாகவும், அரசு அதன் வாடிக்கையாளர்களில் ஒருவராகவும் மாறும்.

தகவல் விலைக்கு

திரு நீலகேணி தகவல் தொகுப்பை “வெளிப்படையான கட்டமைப்பு” அன்று அழைக்கிறார். அதாவது, வணிகம் வளர வளர அதிலிருந்து புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அது பயன்படுத்தப்படுவதற்கு எந்த ஒரு வரைமுறையும் எல்லைகளும் இல்லை. ஆதார் எண்ணை சகலமும் தழுவிய, எங்கெங்கும் பயன்படுத்தப்பட வேண்டிய தனித்துவ எண்ணாக அவர் மீண்டும் மீண்டும் விளக்கியிருக்கிறார். விருப்பத்தின் அடிப்படையிலானது என்று சொல்லப்பட்டாலும் எல்லோருக்கும் எல்லா சேவைகளும் நடவடிக்கைகளும் தனிப்பட்ட அடையாள எண்ணை சார்ந்தே இருப்பதாக உருவாக்கும் நோக்கம் அரசுக்கு உள்ளது. அதன் மூலம் தகவல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியான வருமானம் வருவது உறுதி செய்யப்படும். அடையாள எண் சேர்ப்பு படிவத்தில், “தகவல் பகிர்வுக்கான ஒப்புதல்” என்ற ஒரு கட்டம் உள்ளது. அடையாள ஆணையம் வாழ்நிலை தகவல்களையும் உயிர்அளவீட்டு தகவல்களையும் விலைக்கு விற்பதை அது அனுமதிக்கிறது. இது தொடர்பான சட்டம் ஒன்றை உருவாக்குவதில் மிகக் குறைவான ஆர்வமே இருப்பது ஏன் என்பதை இது விளக்குகிறது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 2011-ல் நாடாளுமன்ற நிலைக்குழு அந்த மசோதாவையும் திட்டத்தையும் நிராகரித்த பிறகு சட்டம் குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டது.

தேசிய தனித்துவ அடையாள ஆணையம், நிறுவனங்கள் சட்டத்தின் படி நடத்தப்படும் ஒரு வணிக நிறுவனம். அடையாள ஆவணம் அல்லது எண் இல்லாத ஒரு குடிமகனை தண்டிக்காமல் அவருக்கு வாய்ப்பு அளிப்பதான அரசின் பாதுகாவலர் பங்களிப்பை அங்கீகரிக்கும் சட்டத்தால் நடத்தப்படப் போவதில்லை.

இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையத்தை உருவாக்குவதற்கான 2009-ம் ஆண்டு அரசாணையில் அந்த ஆணையம் “தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் தனித்துவ அடையாள எண்ணையும் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குடிமக்கள் சட்டம் மற்றும் குடிமக்கள் விதிகள் 2003-ன் கீழ் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். உயிரிஅளவீடுகளை திரட்டுவது தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் பொறுப்பாக இல்லா விட்டாலும் நடைமுறையில் மக்கள் தொகை கணக்கீட்டின் போது போது அவையும் சேகரிக்கப்பட்டன. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக வாங்கப்பட்ட தகவல்கள் அடையாள ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு அதன் சொத்தாக மாறுவது குறித்து அந்த தகவல்களுக்கு சொந்தக்காரர்களான மக்களுக்கு தெரிவிக்கப்படக் கூட செய்யவில்லை.

(உஷா ராமநாதன் ஒரு சுதந்திரமான சட்ட ஆய்வாளர். இந்திய அடையாள அட்டை ஆணையத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் 2009 முதலாகவே கண்காணித்து வருபவர்.)

இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.
தமிழாக்கம்: அப்துல்
படங்கள் :
நன்றி இந்து நாளிதழ்

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !

6

டந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மரணமடைந்ததும், அதற்கெதிராக நாடெங்கும் போராட்டங்கள் பெருகியதைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னராவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா? அல்லது இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசாரும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? அல்லது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பொறுக்கிகள் இச்சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? எதுவுமே கிடையாது. உலகமே காறி உமிழும் அளவுக்கு முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

டெல்லி போராட்டம்
சிறுமி குடியா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் உதவி போலீசு ஆணையர் பானி சிங்.

டெல்லியில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி குடியா எனும் 5 வயது சிறுமி அண்டைவீட்டில் குடியிருந்தவனால் அடைத்து வைக்கப்பட்டுக் கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ளாள். இக்கொடூரம் நடந்து 40 மணி நேரத்துக்குப் பிறகே, அச்சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் மீட்டுள்ளனர். கன்னம், உதடுகளில் காயங்கள் காணப்பட்டதோடு, கழுத்தில் கயிற்றினால் இறுக்கி கொலை செய்ய முயற்சித்ததற்கான காயங்களும் உள்ளன. அவளது பிறப்புறுப்பில் 200 மி.லி. எண்ணெய் பாட்டிலும் மெழுகுவர்த்தித் துண்டுகளும் காணப்பட்டுள்ளதை அறிந்து, இப்படியொரு காட்டுமிராண்டித்தனத்தை தாங்கள் இதுவரை கண்டதேயில்லை என்று மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர். டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அந்தச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

அடுத்த இரு நாட்களில் நாக்பூரில் மற்றொரு குழந்தை இதேபோன்று சிதைக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மீண்டும் தெற்கு டெல்லியில் பொதுக் கழிப்பறையில் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது. அதே டெல்லியில் பர்ஷ்பஜார் பகுதியில் 13 வயது தலித் சிறுமியை அவளது தம்பியுடன் கடந்த மார்ச் 15 அன்று எட்டு பேர் கொண்ட கும்பல் உ.பி. மாநிலத்துக்குக் கடத்திச் சென்று, ஒரு வாரத்துக்கு அச்சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடூரம் அண்மையில் வெளிவந்துள்ளது. உடலாலும் மனதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அச்சிறுமி மருத்துவமனையிலேயே இருமுறை தற்கொலைக்கு முயற்சித்துக் காப்பாற்றப்பட்டுள்ளாள்.

சிறுமிகள் மீதான இத்தகைய கொடூரங்கள் ஒருபுறமிருக்க, சட்டத்தை அமலாக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள போலீசின் வக்கிரமும் திமிர்த்தனமும்தான் அதைவிடக் கொடூரமாக இருக்கிறது. தற்போது டெல்லி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குடியா என்ற சிறுமி காணாமல் போனதைப் பற்றி அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தபோது, வழக்கைப் பதிவு செய்யாமல் அலட்சியப்படுத்திய போலீசு, பின்னர் அச்சிறுமியின் புகைப்படத்தைக் கொடுக்குமாறு மேலும் ஒருநாள் இழுத்தடித்துள்ளது. பின்னர் இக்கொடூரம் வெளியே தெரிந்ததும், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இதைப் பற்றி ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அப்பெற்றோரிடம் போலீசார் ரூ. 2,000 இலஞ்சம் கொடுத்து இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்துள்ளனர்.

06-children-2சிறுமி குடியா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறான் உதவி போலீசு ஆணையர் பானி சிங். அவன் ஓங்கி அறைந்ததில் வயதான பெண்மணி ஒருவரது செவிப்பறை கிழிந்து போயுள்ளது. போலீசின் இக்கொடூரத் தாக்குதல் அனைத்தும் கண்காணிப்புக் கேமிராவில் பதிவாகி பின்னர் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியதும், போலீசின் அத்துமீறலையும் அட்டூழியத்தையும் எதிர்த்து டெல்லியில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதைத் தொடர்ந்து, அந்த உதவி போலீசு ஆணையர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் 144 தடையுத்தரவு போடப்பட்ட போதிலும், அத்தடையை மீறி டெல்லி போலீசு தலைமை ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரியும், சிறுமிகள் மீது தொடரும் பாலியல் தாக்குதல்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று டெல்லி முதல்வரைப் பதவி விலகக் கோரியும், பிரதமர், உள்துறை அமைச்சர் வீடுகளை முற்றுகையிட்டும் பெருந்திரளாகப் போராட்டங்கள் தொடர்ந்தன.

கடந்த டிசம்பரில், டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின்போது டெல்லி போலீசுத் தலைமை ஆணையராக இருந்த நீரஜ் குமார், இப்போதும் அதே பதவியில்தான் இருக்கிறார். நடந்துள்ள கொடூரத்துக்குக் குறைந்தபட்சம் உதட்டளவில்கூட வருத்தம் தெரிவிக்க முன்வராத அவர், “நான் ஒருக்காலும் பதவி விலக மாட்டேன்” என்று திமிராகக் கொக்கரிக்கிறார். “சிறுமி காணமல் போனதைப் பற்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் எந்தத் தாமதமும் இல்லை. சம்பவம் நடந்த அன்றே பதிவாகிவிட்டது” என்று கூசாமல் புளுகுகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் ரூ. 2,000 இலஞ்சமாகக் கொடுக்க முயற்சித்த விவகாரத்தை, “இது வழக்கை மறைப்பதற்காகக் கொடுக்கப்படவில்லை. அந்தக் குடும்பத்துக்கு உதவுவதற்காகவே கொடுக்கப்பட்டது” என்று ஆணவத்தோடு கூறுகிறார், அந்த போலீசு ஆணையர்.

திருப்பூர் போராட்டம்
திருப்பூரில் காமவெறியர்களால் எட்டு வயது சிறுமி சிதைக்கப்பட்ட கொடூரத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்தும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம்.

இப்படி வக்கிரமாகவும் தங்களை எவரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற ஆணவத்தோடும், இதைவிடக் கொடூரமாகவும் திமிராகவும்தான் எல்லா மாநிலங்களிலும் போலீசு நடந்து கொள்கிறது. உ.பி மாநிலம் மீர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயதான சிறுமி கடந்த ஏப்ரல் 7 அன்று ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். மறுநாள் அச்சிறுமியுடன் அவளது பெற்றோர்கள் புலந்த்ஷெகரிலுள்ள மகளிர் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது அதை ஏற்க மறுத்து அலட்சியப்படுத்தியதோடு, தொடர்ந்து வலுயுறுத்தியதால் ஆத்திரமடைந்த பெண் போலீசார், அச்சிறுமியைக் கொட்டடியில் அடைத்து வைத்து அப்பெற்றோரை மிரட்டினர். புகாரைக்கூடப் பதிவு செய்ய மறுக்கும் போலீசு, சட்டவிரோதமாக ஒரு சிறுமியைக் கொட்டடியில் அடைத்து வைக்கிறது என்றால், இதைவிடக் கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இக்கொடுமையை ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும், உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தானே முன்வந்து தலையிட்டு உ.பி. அரசுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டது. அதன் பின்னரே புலந்த்ஷெகர் மகளிர் போலீசு நிலைய உதவி ஆவாளர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு, அச்சிறுமியைச் சீர்குலைத்த பாலியல் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

அதே உ.பி. மாநிலத்தில் ஏப்ரல் 11 அன்று காணாமல் போன 16 வயதான சிறுமி அடுத்த நாளில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அச்சிறுமியை இரண்டு இளைஞர்கள் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதை அறிந்து அப்சல்கார் மகளிர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகார் கொடுத்தபோதிலும், அதைப் பதிவு செய்ய போலீசார் மறுத்ததோடு, அச்சிறுமியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். இக்கொடூரம் அம்பலமானதும் தேசிய மனித உரிமைக் கமிசனே தலையிட்டு உ.பி. அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

06-children-4பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் 90 சதவீதக் குற்றங்கள் மிக நெருங்கிய, நன்கறிந்த நபர்களாலேயே செய்யப்படுகின்றன என்று கூறும் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை, இந்தியாவில் 2001-லிருந்து 2011-க்குள் சிறுமிகள், குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 336 மடங்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளிக்கிறது. தமிழகத்தில் 2011 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 484 பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2012- இல் இது 528 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 75 சதவீதத்துக்கும் மேலான குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்நிலையில், பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தமிழகத்தில் பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில், சிறீவைகுண்டம் அருகே பள்ளிக்குச் சென்ற 7-ஆம் வகுப்பு மாணவி புனிதா, மர்ம நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே பாலக் கோம்பை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஏப்ரல் முதல் வாரத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 12 அன்று திருப்பூரில் 8 வயதான கேரளச் சிறுமி வீட்டிலே தனியாக இருந்தபோது, ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளார். இக்கொடுமையை அறிந்து அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்த போதிலும், அதனை அலட்சியப்படுத்திய போலீசு, உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகே புகாரைப் பதிவு செய்து குற்றவாளிகளான நால்வரைக் கைது செய்திருக்கிறது.

இக் கொடுமையை அறிந்து கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டியும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் அச்சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் உரையாடி ஆறுதல் கூறியுள்ள நிலையில், இப்பாலியல் வன்முறை நடந்துள்ள தமிழகத்தின் பெண் முதல்வரான ஜெயலலிதாவோ, அ.தி.மு.க. அமைச்சர்களோ, உள்ளூர் ஆளுங்கட்சியினரோ அச்சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி உதவி செய்யக்கூட முன்வராமல் இந்த விசயத்தை அலட்சியப்படுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏப்ரல் 22 அன்று இக்கொடுஞ்செயலை எதிர்த்து சாலை மறியல், கடையடைப்புப் போராட்டம் நடந்தபோது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடித் தாக்குதல் நடத்தியதோடு, 37 பேரை வன்முறையில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர்.

இவையனைத்தும் போலீசைக் கொண்டு சட்டத்தைக் கடுமையாக அமலாக்கினால், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுத்துவிட முடியும் என்ற மோசடியைத் திரை கிழித்துக் காட்டுகின்றன. போலீசானது ஆணாதிக்கத் திமிருடன்தான் பாலியல் குற்றவழக்குகளை அணுகுகிறது. பாலியல் குற்றங்களை அது குற்றமாகவே கருதாமல் அலட்சியப்படுத்துகிறது. ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவரும் போலீசு, ஆணாதிக்கத்திமிருடன் அதிகாரத் திமிரும் சேர்ந்து கொள்ள இத்தகைய குற்றங்களைத் தடுக்க முன்வராததோடு, குற்றங்களை மூடிமறைப்பதிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும்தான் குறியாக இருக்கிறது.

ஏற்கெனவே ஆணாதிக்கமும், சாதி-மத ஆதிக்கமும் கொண்ட பிற்போக்கு சமூகம் பெண்கள் மீது அடக்குமுறையே ஏவிவரும் நிலையில், தனியார்மயமும் தாராளமயமும் பெண்களை நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதால், நாடு முழுவதும் பாலியல் வக்கிரங்கள் தீவிரமாகி வருகின்றன. பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை உருவாக்கப்பட்டு, விதவிதமாக நுகர்வதே வாழ்க்கையின் நோக்கமாகி எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்ற சீரழிவுப் பண்பாட்டினால் இன்று சமூகமே புரையோடிப்போய் கிடக்கிறது. பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், இதுவரை கண்டிராத கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு சிறுமிகள் அடுத்தடுத்து ஆளாகின்றனர்.

இத்தகைய சீரழிவுக் கலாச்சாரத்துக்கும் அதைக் கட்டிக்காக்கும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கு எதிராகவும், குற்றங்களைத் தடுக்காததோடு புகார் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தும் போலீசுக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடுவதே இன்றைய அவசர அவசியத் தேவையாக உள்ளது. இச்சீரழிவுகளை முறியடிக்க சமூகத்தையே புரட்டிப் போடக்கூடிய போராட்டங்களை – குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட முடியும். இத்தகைய போராட்டங்களில் மக்கள் ஈடுபடுத்தப்படுவதன் மூலம்தான், இத்தகைய சீரழிவுகளைக் கட்டிக்காக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்தி, அதிகாரத்தை மக்கள் தமது கையில் ஏந்துவதன் மூலம்தான் ஆண் – பெண் உறவில் ஜனநாயகக் கூறுகள் வலுப்பெறும்.

– தனபால்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?

41

டலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதை காந்தி பெயரை வைத்துக் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் காங்கிரசும், பலான விசயம் மற்றும் பயங்கரவாதம் இரண்டையும் விடாது செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் கண்டித்துள்ளன.

யாசின் மாலிக்
யாசின் மாலிக்

“வெளிநாடுகளின் தொடர்பு இருப்பதாக யாசின் மாலிக் பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின் இறையாண்மையை கேள்வி கேட்டு காஷ்மீரத்தை துண்டாடத் துடிக்கும் அவர், கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு அழைத்து வர உதவிய இயக்கங்கள் எவை? இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தமிழகத்தின் அமைதியைக் குலைக்க விரும்பும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தூவும் விஷவித்துக்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து தேசபக்தியுள்ள எல்லா கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம் என்று கூறி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை பங்கேற்கச் செய்திருப்பது தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலைகுனியச் செய்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஜாதி, மதம் என்ற வேறுபாடுகள் இன்றி ஈழத் தமிழர் என்ற அடையாளத்துடன் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட அதிக சலுகைகள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் 370 என்ற சிறப்பு விதியே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி சலுகைகள் வழங்கினாலும் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும் என இந்துக்களை துரத்தியடித்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் யாசின் மாலிக். எனவே, இலங்கைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு இணைத்துப் பார்ப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மரக்காணம், தருமபுரி போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டபோது அங்குச் செல்ல தமிழகத் தலைவர்கள் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைத் துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை தமிழகத்தில் அனுமதித்தது அபாயகரமானது” என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பேசவில்லையே தவிர அவர் இவர்களை விட இன்னும் ஒருபடி அதிகம் உறுமக்கூடியவர். மேற்கண்ட அறிக்கைகளின் படி காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் நாங்கள் பாசிச கட்சிகள்தான் என்பதை ஒரே குரலில் உறுதி செய்கின்றன.

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்கக் கூட அனுமதி இல்லை” என்று பாரதீய ஜனதா தலைவர்கள் புலம்பியிருக்கின்றனர்.

இந்திய இராணுவம் காஷ்மீரில்
காஷ்மீரில் இந்திய இராணுவம்

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் சிறப்பு சலுகை என்று புளுகுகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக யாசின் மாலிக் ராஜஸ்தான், காஷ்மீர், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். யாசின் மாலிக்கின் அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜம்மு காஷ்மீரை இந்திய, பாகிஸ்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மத வேறுபாடுகள் அற்று, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து மக்களையும் காஷ்மீர் என்ற அடையாளத்துடன் இணைத்து இந்திய/பாகிஸ்தானிய அரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது ஜே.கே.எல்.எப்.

இந்திய அரசால் காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜக்மோகனால் தூண்டப்பட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளையும் திரும்ப காஷ்மீரில் குடியேற்ற வேண்டும் என்று பேசி வருபவர் யாசின் மாலிக்.

1983 தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், 2002 கலவரத்தில் குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.

சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடும் போது இந்திய அரசால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களே நமது நேச சக்தியாக இருக்க முடியும். ஆனால் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஈழத்தமிழரின் உரிமைகளை ஒடுக்கி ஆட்டம் போடும் சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பவர்கள். புலி ஆதரவாளர்கள், தமிழின ஆர்வலர்கள் பலரும் கூட பாரதிய ஜனதா கட்சி காங்கிரசுக்கு தேவலாம் என்ற சந்தர்ப்பவாத பார்வை கொண்டவர்களே. அப்படிப்பட்டவர்கள் பாஜகவின் காஷ்மீர் குறித்த ஒடுக்குமுறைப் பார்வையை பார்த்தாவது திருந்தட்டும்.

போர்க்குற்றவாளியும், இனப்படுகொலை செய்தவருமான ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து உபசரிக்கும் காங்கிரசும், பாஜகவும்தான் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே அன்றி யாசின் மாலிக் அல்ல.

புதிய கலாச்சாரம் – மே 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

3

புதிய கலாச்சாரம் மே 2013புதிய கலாச்சாரம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்

  1. உறவு ஒன்றுதான் ! – துரை சண்முகம் கவிதை
  2. மங்காத்தாவே இனி பாரதமாதா ! – தலையங்கம்
  3. பாட்டில் தேசம் – அட்டைப் படக் கட்டுரை
  4. கிம்பெர்லி ரெ வேரா – ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !
  5. ஹெர்பாலைஃப் – குண்டு ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !
  6. வர்க்கம் – சிறுகதை
  7. ஒப்பந்தத் திருமணத்தின் பெயரில் ஷேக்குகள் விபச்சாரம் !
  8. கான்ஸ்டபிள் அய்யம் பெருமாள் கதை ! – சிறுகதை
  9. நினைவுகூர்தல் – தோழர் சீனிவாசனின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் உரை.
  10. சத்யசாய் அபார்ட்மெண்ட்ஸ் – சிறுகதை.
  11. இழப்பு –  துரை சண்முகம் கவிதை

புதிய கலாச்சாரம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 1.6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !

39

ராஜீவ் காந்தி கொலை

(1991-ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை)

டையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும் பீரங்கித் திருடனும் ஏகாதிபத்திய அடிவருடியும் கொலைகார பாசிஸ்டுமான ஒரு நபர் இப்படி சாகடிக்கப்படுவது பொருத்தமானதுதான். அதைக் கண்டிப்பதோ, அதற்காக அனுதாபப்படுவதோ அவசியமில்லை. அதேவேளையில், ஒரு தனிநபரைக் கொன்று விடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையோ, அதன் வர்க்கத் தன்மையையோ மாற்றிவிட முடியாது; அவ்வமைப்பை அம்பலப்படுத்தி, பரந்துபட்ட மக்களை அரசியல்படையாக திரட்டி மட்டுமே ஒழிக்க முடியும் என்பதே வரலாற்று அனுபவமாகும்.

ராஜீவ் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர்; அவரது பரம்பரையே தியாகப் பரம்பரை; சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்; அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது என்றெல்லாம் அரசின் ஊதுகுழல்களான வானொலி, வானொளி முதல் அனைத்து வோட்டுக் கட்சிகளும் தரகு முதலாளித்துவ, பார்ப்பன-பனியா பத்திரிகைகளும் ராஜீவை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன. இறுதி ஊர்வலம், அஸ்தி கலச ஊர்வலம் ஆகியவை பிரமாதமாக விளம்பரம் செய்யப்படுகின்றன. இவைகளின் மூலம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட மாபெரும் தலைவர் ஒருவர் மறைந்து விட்டதைப் போன்ற பிரமை ஊட்டப்பட்டு வருகின்றது.

விமான ஓட்டியாக இருந்த ராஜீவ்காந்தி அரசியலுக்கு கொண்டு வரப்பட்டதே பரம்பரை சர்வாதிகார ஆட்சியை நீட்டிக்கத்தான்; அவர் பிரதமர் ஆனதும் தாயின் பிணத்தைக் காட்டித்தான்; ஏழாண்டு கால அவரது அரசியல் வாழ்க்கை ராஜீவை மாபெரும் தேசியத் தலைவராக காட்டுகிறதா? இல்லவே இல்லை; மாறாக ராஜீவை பின்வருமாறே காட்டுகின்றன.

  • ஒரு பாசிஸ்ட் கொடுங்கோலரே ராஜீவ். 1975 அவசர நிலை பாசிசத்தை நியாயப்படுத்தி பேசியதோடு தேவைப்பட்டால் அப்படி ஒரு ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர்; தன்னைச் சுற்றி ஒரு பாசிச கும்பலை உருவாக்கி மக்களை அடக்கி ஒடுக்க பல கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்தவர்; தனது ஆட்சியை நிரந்தரமாக்கிக் கொள்ள பாசிச ஆட்சியைக் கொண்டு வரவும் தயாராக இருந்தவர்; அதற்கான தயாரிப்புகளைச் செய்தவர்.
  • பாசிச இந்திராவின் கொலையைத் தொடர்ந்து டெல்லியிலும் வட இந்தியத் தலைநகரங்களிலும் 5000-க்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கியர்களைக் கொன்று ஆட்சிக்கு வந்தவர். அக்கொலைக் குற்றவாளிகளுக்கு அமைச்சர் பதவிகள் அளித்து பாராட்டியவர். பெற்ற தாயின் முன்னே மகனை உயிரோடு கொளுத்தியது; மனைவி முன்னே கணவனை வெட்டிக் கொன்றது, கற்பழித்தது போன்ற கொடுமைகளை செய்யத் தூண்டிப் பேசியவர்; ‘ஒரு பெரிய மரம் விழும் போது சில இழப்புகள் ஏற்படுவது இயல்பே’ என்று அதை நியாயப்படுத்திய கிரிமினல் குற்றவாளிதான் ராஜீவ். பழிவாங்கும் வெறியோடு இந்திரா கொலைக்கு அறவே தொடர்பில்லாத நிரபராதி கேஹார்சிங்கை தூக்கிலிட்டு சிம்ரஞ்சித்சிங் மான், அதீந்தர் பால்சிங் ஆகியோர் மீது சதிக்குற்றம் சாட்டி வழக்கே இல்லாமல் தனிமைக் கொட்டடியில் அடைத்து சித்திரவதை செய்த அரக்கர்தான் ராஜீவ்.
  • ஒரு இலட்சம் மக்களை நிரந்தர நோயாளிகளுக்கி 10,000 பேரை காவு கொண்ட போபால் விஷவாயு ‘விபத்து’க்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் இரகசிய பேரங்கள் நடத்தி குற்றவாளிகளை தப்புவிக்கச் செய்த மக்கள் விரோதிதான் ராஜீவ்காந்தி; நட்ட ஈடு கேட்டு போராடிய மக்களை அடக்கி ஒடுக்கியவர்தான் ராஜீவ்.
  • சீக்கிய சமுதாயத்தையே பழிவாங்கும் வெறியோடு பஞ்சாபில் அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, உளவுப்படை “ரா” மூலம் பல சதிகளையும் கொலைகளையும் அரங்கேற்றி பழியை சீக்கிய தீவிரவாதிகள் மீது சுமத்தி பஞ்சாபையே இரத்தக்களறியாக்கிய ராட்சசன்தான் ராஜீவ்காந்தி. பஞ்சாபிலும் காஷ்மீரிலும் கிரிமினல் கேடிகளையும் போலீஸ் ரவுடிகளையும் கொண்ட இரகசிய கொலைப்படைகளைக் கட்டி மாதத்திற்கு இவ்வளவு பேரைக் கொல்ல வேண்டும் என்று இலக்கு வைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொன்றொழித்த கொடுங்கோலரே ராஜீவ்காந்தி. திரிபுரா இனவெறி தீவிரவாதிகளுடன் கள்ளக் கூட்டு சேர்ந்தும் அசாம், போடாலாந்து கிளர்ச்சியை சீர்குலைத்தும் உளவுப்படை “ரா” மூலம் சதிகளையும் இனப்படுகொலைகளையும் தனது குறுகிய அரசியல் ஆதரவுக்காக கட்டவிழ்த்து விட்டார் ராஜீவ்.
  • தனது பதவியைப் பாதுகாத்துக் கொள்ள இந்து – முஸ்லீம் மதவெறியர்களுடன் கள்ளக் கூட்டுச் சேர்ந்து மதவெறியைக் கிளறி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை பலியிட்டார். இதேபோல குஜராத்திலும், ஆந்திராவிலும் இடஒதுக்கீடு சாதிக் கலவரங்களை திட்டமிட்டே தூண்டினார்.
  • போபார்ஸ் பீரங்கி ஊழலில் கோடிகோடியாக பணம் கொள்ளையடித்தவர்; போபார்ஸ் ஊழல் வெளியானதும் அதை மூடி மறைப்பதற்காக எண்ணற்ற சதிவேலைகளை ஸ்வீடன் அரசுடன் உடன்பாடு செய்து கொண்டு ஊழலை அமுக்கியதோடு பொய்யான ஆதாரங்கள், வதந்திகளை அயோக்கியத்தனமாக பரப்பினார்.
  • நாடாளுமன்றத்தில் தனது மிகை பலத்தை வைத்து எதிர்க்கட்சியினரின் ஊழல் குற்றச்சாட்டுக்களை விவாதிக்கவே விடாமல் ரௌடித்தனமாக நடந்து கொண்டார். ஊழலில் ஊறித் திளைக்கும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான “லோக்பால்” மசோதாவை காலாவதியாக்கியதோடு ராஜீவ் கும்பலின் ஊழலை அம்பலப்படுத்தி பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்க அவதூறு தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தும் பத்திரிகை காகிதத்தின் விலையை அநியாயமாக ஏற்றியும் அடக்கத் துடித்தார்.
  • அவசரநிலை பிறப்பிக்கும் 59-வது சட்ட திருத்தம், பயங்கரவாத தடைச்சட்டம், கலவரப்பகுதி தடைச் சட்டம் முதலான பல கருப்பு சட்டங்களைக் கொண்டு வந்தவர்தான் ராஜீவ்.
  • ஏகாதிபத்திய, பன்னாட்டு கம்பெனிகளுக்கு நாட்டைச் சூறையாட கதவுகளை அகலத் திறந்து விட்டும், தரகு அதிகார முதலாளிகள் கூடுதல் கொள்ளை அடிக்க கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் விசுவாச ஊழியம் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைந்தவர்.
  • தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பத்துக்கு மேற்பட்ட தடவை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதில் முன்னின்றவர்; இந்தித் திணிப்பை என்றுமில்லாத அளவுக்கு புகுத்தியவர்.
  • தரகு முதலாளி அம்பானிக்கு அரசு நிதி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி தாராள உதவி செய்ததோடு, அம்பானியின் பங்கு மார்க்கெட் மோசடிக்கு உடந்தையாகவும் ராஜீவ் காலத்தில் செயல்படுத்தப்பட்டன. அரசின் சட்டங்களும் கொள்கைகளும் இம்மோசடிக்கு வளைந்து முறுக்கப்பட்டதோடு, நீதிமன்றமே அதை நியாயப்படுத்தியது.
  • ராஜீவ்காந்தி குடும்பத்தினரும் அவரது இத்தாலிய உறவினர்களும், அமிதாப்-அஜிதாப் குடும்பத்தினரும் மக்களின் சொத்தை சூறையாடி குவித்து ரூ 650 கோடி மூலதனத்தில் இத்தாலியில் தொழில் துவங்கியுள்ளனர்.
  • ராஜீவ் பாசிச கும்பலின் கள்ளக் கூட்டுடன் ஏராளமான அளவு வரிஏய்ப்பு, அன்னிய செலாவணி மோசடிகள் நடந்துள்ளன. இவைகளின் மூலம் இந்திய தரகு முதலாளிகள், பெரும் வியாபாரிகள் மற்றும் பாசிச ராஜீவ் கும்பலின் முக்கிய புள்ளிகளால் சுவிஸ் வங்கிகளில் 20,000 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 15,000 கோடி ரூபாயும் குவிக்கப்பட்டுள்ளது. இப்படி நாட்டையே சூறையாட உதவியவர்தான் ராஜீவ்காந்தி !
  • ஊதாரி பிரதமர் என்று முதலாளித்துவ பத்திரிகைகளே தூற்றுமளவிற்கு பெயரெடுத்தவர்; அடிக்கடி வெளிநாடுகளுக்கு தனிச்சிறப்பான விமானங்களில் சென்று ஊர் சுற்றியவர். ஆடம்பர உல்லாச வாழ்க்கை நடத்தியவர்; இலட்சத் தீவில் அவர் விடுமுறையை அனுபவித்த போது கேரளாவிலிருந்து தனி விமானத்தில் அவருக்கு பாயாசம் கொண்டு செல்லப்பட்டது; அவரது மனைவி சோனியாவிடம் 6,000 பட்டுப் புடவைகள் இருப்பது ஆகியவை இதற்கு சில உதாரணங்கள்.
  • சர்வதேச ‘மாமா’ சந்திராசாமி, சர்வதேச ஆயுதபேர தரகன் ஆதனன் கஷோகியின் நெருங்கிய கூட்டாளியானவர் ராஜீவ்.
  • ஏர்பஸ் ஏ-320 விமானங்கள் ரூ 2,500 கோடிக்கு ராஜீவ் அரசு வாங்கியதில் ஊழல் செய்தவர்; அவற்றில் 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகி 250 பேருக்கு மேல் மாண்டுள்ளனர்.
  • இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் உள்நாட்டு வெளிநாட்டுக் கடன் ஒவ்வொன்றும் இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தாண்டின.
  • பிராந்திய மேலாதிக்கத்தை காப்பாற்ற அண்டை நாடுகளை மிரட்டியவர்; அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டவர்; நேபாளத்தை நெருக்கி இந்தியாவின் ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வர முயன்றவர்; இலங்கையில் நடக்கின்ற ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையை பிராந்திய மேலாதிக்கத்திற்குள் கொண்டு வர முயன்றவர்; இந்திய – இலங்கை ஒப்பந்தம் போட்டு இந்திய இராணுவத்தை அனுப்பி 20,000 தமிழர்களைக் கொன்று குவித்தவர்; ஈழத்துரோக அமைப்புகளை “ரா” மூலம் உருவாக்கி ஈழத்தமிழர்களின் போராட்டங்களை சீர்குலைத்தவர்.

இவ்வாறு ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல; இவை மன்னிக்க முடியாத அரசியல், பொருளாதாரக் கிரிமினல் குற்றங்கள்; தேசத் துரோக, மக்கள் விரோத படுபாதகங்கள்; தலைமுறை தலைமுறையாக வடுக்களை ஏற்படுத்திய குற்றங்களாகும். மேலும் தனது கிரிமினல் குற்றங்களை மறைக்கவும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அரசு எந்திரத்தையே தனது விசுவாச படையாக மாற்றி ஆட்டம் போட்ட அரக்கர் ஆவார். சொந்தத் தேசத்தை சூறையாடிய மார்க்கோஸ் – டுவாலியர் வகையைச் சேர்ந்தவர்தான் ராஜீவ்.

சொந்தநாட்டு மக்களைக் கொன்று இரத்தம் குடித்த காட்டேரிதான் ராஜீவ்காந்தி; சொந்த நாட்டையே சூறையாடியவர்; பஞ்சாப், அசாம் மாநிலத்து மக்கள், ஈழத்தமிழர்கள் – இப்படி தனது உயிருக்கு குறி வைக்கும் பல கொலைகாரர்களை உருவாக்கிக் கொண்டார். இது தவிர்க்க முடியாதது; அவர் திட்டமிட்டுக் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்ததுதான்; எனவே ‘வசீகரமானவர், இளையவர், இனிமையானவர், அன்புக்குரிய தலைவன் கொடியவர்களின் குண்டுக்கு இரையாகி விட்டார்’ என்று குட்டி முதலாளித்துவ கூட்டம் புலம்புவது கடைந்தெடுத்த அயோக்கியத் தனமாகும்.

கொலைவெறியின் குறியிலிருந்து தப்பிக்கவே குண்டு துளைக்காத கார், குண்டு துளைக்காத கண்ணாடி மேடை, குண்டு துளைக்காத கோட்டு, அதிரடிப்படை, உலோக கண்டுபிடிப்புக் கருவி என்றெல்லாம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடிக் கொண்டிருந்தார். இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் தான் கொல்லப்படலாம் என்ற நிரந்தர அச்சத்திலேயே அவர் காலம் தள்ளிக் கொண்டிருந்தார்; ஆனால், இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் இனி என்றைக்குமே அவரது அரசிய்ல வாழ்வு அஸ்தமித்து விடும் என்ற நிலையில் இருந்தது. ஆகவே இந்த கடைசி வாய்ப்பில் எப்பாடுபட்டாலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி மக்களிடையே சென்று மாலைகள் வாங்கினார்; கை குலுக்கினார்; சிரித்துப் பேசினார்; இதன் மூலம், தான் கடந்த காலத்தில் புரிந்த கிரிமினல் குற்றங்களை மக்கள் மறந்து விட்டு தனக்கு வோட்டளிப்பர் என்று நம்பினார்; இதுவே அவரைக் கொல்ல சாதகமாக இருந்தது.

ராஜீவின் அந்த அழித்தொழிப்பு, வோட்டுப் பொறுக்கி முதலாளித்துவக் கட்சித் தலைவர்களின் முதுகெலும்பை சில்லிட வைத்துள்ளது. இனி இவர்கள் மிருகங்களைப் போல கூண்டுகளில் இருந்துதான் பேசுவார்கள்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில்தான் உலா வருவர்; சிறு சிறு சலசலப்பு கண்டு எல்லாம் நடுங்கிச் சாவர்; ஆனாலும் அவர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் கிசுகிசு பத்திரிகைகளும் பாசிச ராஜீவை அழித்தொழித்த செயல் கோழைத்தனமானது என்று சொல்வது வேடிக்கையானது; நிச்சயமாக இது கோழைத்தனமான செயல் அல்ல; ஒரு பாசிஸ்டைக் கொல்ல தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது கோழைத்தனமானதா? தனது அம்மா கொல்லப்பட்ட பின்னும் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்த பின்னும் நாட்டுக்காக பணியாற்ற முன் வந்தவர் என்று ராஜீவைப் புகழ்கின்றனர். ஆனால், பரம்பரை சர்வாதிகார ஆட்சியை தொடரும் பேராசையுடன் பாசிஸ்டுகளுக்கே உரிய ‘தன்மையுடன்’தான் ராஜீவ் உலவி வந்தார் என்பதே உண்மை !

எனவே, இப்படிப்பட்ட ஒரு பாசிஸ்ட் கொடுங்கோலன், இந்திய மார்க்கோஸ் கொல்லப்பட்டதில் பரிதாபப்படவோ, பசப்புவதற்கோ இடமில்லை. ராஜீவ் தமிழக மண்ணில் கொல்லப்பட்டது தமிழ்நாட்டுக்கு அவமானம் என்று மா.பொ.சி போன்ற செல்லாத ‘நோட்டு’களும் அரசியல் சீக்கு ஜெயலலிதாவும் குட்டி முதலாளித்துவ பெரிய மனிதர்களும் பிதற்றி வருகிறார்கள். பாசிஸ்டும் தேசவிரோதியுமான ராஜீவ் தமிழ்நாட்டில் கொல்லப்பபட்டது குறித்து தமிழர்கள் அவமானப்படவோ, வெட்கப்படவோ என்ன இருக்கிறது?

04-rajiv-indiraநேரு பரம்பரையைச் சேர்ந்தவர்; ஆசியஜோதியின் பேரன்; முன்னாள் பிரதமர், தியாகப் பரம்பரை என்றெல்லாம் சிலர் ராஜீவின் பெருமையைப் பேசுகின்றனர். ஆனால், நேரு பரம்பரையே தேச துரோகமானது; மக்கள் விரோதமானது; நாட்டையை கொள்ளையடித்த பரம்பரையாகும். மேலும் பிரதமர் பதவி என்பதற்கும் வர்க்கத் தன்மை உண்டு. அது எல்லோருக்கும் பொதுவான பதவி அல்ல. தரகுப் பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்கள், அதிகார வர்க்கம் ஆகியோருக்கு சேவை செய்த, அவர்களது பிரதமராகத்தான் ராஜீவ் செயல்பட்டார். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு பிரதமரல்ல; பிணந்தின்னியே; ஆளும் வர்க்கங்களில் காவல் நாயே; எனவே, அவரது மரணத்திற்கு உழைக்கும் மக்கள் அஞ்சலி செலுத்த முடியாது; கூடாது.

ராஜீவ் காந்தியின் அழித்தொழிப்பை ஒட்டி அகில இந்திய அரசியல் நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி என்ற பாசிஸ்ட் கிரிமினல் ஒழித்துக் கட்டப்பட்டது உழைக்கும் மக்களுக்கு சாதகமானதுதான்; சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க இறுதியாக மறுத்து நரசிம்மராவ் தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’. சோனியா மறுத்ததற்கு முக்கிய காரணம் தானும் கொல்லப்படலாம் என்பதாகும். எனவே, நேரு பரம்பரை ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த பெருமையும், காங்கிரஸ் சிதற அடியெடுத்துக் கொடுத்த பெருமையும் ராஜீவ் கொலைகாரர்களுக்கு போய்ச் சேருகிறது. நாமும் இப்படி அழிக்கப்படலாம் என்ற அச்சத்தை வோட்டுப் பொறுக்கித் தலைவர்களிடம் ராஜீவின் மரணம் ஏற்படுத்தியுள்ளது. எனினும், தானே நேர்மறையான அடிப்படையில் இது உழைக்கும் மக்களுக்கு நன்மையை கொண்டு வராது. ஏனெனில் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி பலவீனமாக இருக்கின்ற இன்றைய நிலையில் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றே அல்லது கூட்டுச் சேர்ந்தோ, அவைகளே பதவியில் அமரும். மேலும் காங்கிரசு பதவிக்கு வர சாதகமாக அனுதாப அலை ஒன்றையும் ராஜீவ் மரணம் உருவாக்கியுள்ளது.

ராஜீவின் மரணத்தால் அவர் தலைமை தாங்கிய கும்பல் நிலைகுலைந்து போயுள்ளது. சோனியாகாந்தி தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்ட நிலையில் ஒரு குழுவாகவே நீடிக்க வாய்ப்பில்லை; வெகு விரைவில் அது சிதறும்; மேலும் காங்கிரஸ் சிதறுவதும் உறுதி; பதவிக்கு வராவிட்டால் விரைவிலும், பதவிக்கு வந்தால் சற்று காலம் தள்ளியும் சிதறுவது உறுதி. தான் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று மார் தட்டிய காங்கிரசு, இன்று அதன் தலைவர் இறந்தவுடனேயே நிலைகுலைந்து போய் விட்ட பரிதாப நிலையைப் பார்க்கிறோம். நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட கட்சி, காந்தி-நேரு போன்ற ‘மாபெரும்’ தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இன்று உடைந்து சிதறுவது உறுதியாகி விட்டது.

மூழ்குகிற கப்பலில் அள்ளுவது வரை ஆதாயம் என்று காங்கிரஸ் கோஷ்டிகளை தம்பக்கம் இழுக்க வி.பி.சிங், சந்திரசேகர், பி.ஜே.பி ஆகியோர் நாக்கில் எச்சில் வடிய சதிவலை பின்ன ஆரம்பித்து விட்டனர். இதனால் கட்சித் தாவல்கள், குதிரை வியாபாரம் எப்போதையும் விட அப்பட்டமானதாக, அருவெறுப்பானதாக நடைபெற போகின்றது. இன்றைய சூழ்நிலையில் ஒன்று, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்குநிலை பாராளுமன்ற நிலை வரலாம்; அல்லது காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று பதவிக்கு வரலாம்; காங்கிரஸ் பதவிக்கு வந்தாலும் வெடித்து சிதறுமாதலால், குதிரை வியாபாரமும் நாடாளுமன்ற அரசாஜகமும் தலைவிரித்தாடப் போவது நிச்சயம். இதனால் நாடாளுமன்ற ஆட்சிமுறை மேலும் நாறி அம்பலப்படுவது என்ற போக்கே நடக்கும்.

இந்த குழப்ப நிலையை எதிர்பார்த்து பாரதீய ஜனதா கட்சி தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள உடனடியாக செயலில் இறங்கி விட்டது. ‘பாராண்ட ராமனுக்கு கோயில்; பரதேசி ராமனுக்கு ரொட்டி’ என்ற தனது பழைய கோஷத்தை தூக்கி எறிந்து விட்டு ராஜீவின் கோஷமான நிலையான ஆட்சியை தான் மட்டுமே தர முடியும் என்று முழங்கத் தொடங்கி விட்டது. பிராந்திய கட்சிகள் சிலவற்றைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டும் காங்கிரசிலிருந்து சிலரை விலைக்கு வாங்கியும் எப்படியாவது இந்த வாய்ப்பில் பதவியில் அமர்ந்துவிட பகீரத பிரயத்தனங்களில் இறங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக, ஜெயலலிதாவை தன்பக்கம் கொண்டுவர தூதுவரை அனுப்பியுள்ளது.

காங்கிரசு கட்சிக்குள்ளேயும் இந்துமத வெறி சக்திகள் கணிசமாக உள்ளன; இந்திராவின் கடைசி காலத்திலும் ராஜீவ்காந்தி காலத்திலும் இந்துக்களின் வோட்டைக் கவர இந்துமதவெறி நிலைப்பாடுகள் காங்கிரசால் மேற்கொள்ளப்பட்டன. மீரட் போன்ற இடங்களில் திட்டமிட்டு முஸ்லீம்கள் மேல் கலவரங்கள் தூண்டிவிட்டது; ஜம்மு காஷ்மீர் தேர்தலின் போது இந்துமத ஆதரவு நிலை எடுத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது போன்றவைகள் எடுத்துக்காட்டுகள். ‘காங்கிரசு கோஷ்டிகளாக சிதறும்போது ஆதாயம் அடைய அல்லது அதை உடைக்க பி.ஜே.பி.க்கு இந்த அம்சம் சாதகமாக உள்ளது.

போபால் விஷவாயு கசிவு
போபால் விஷவாயு கசிவு

எனவே, பாசிச ராஜீவ் கும்பல் சிதறியுள்ள இந்த நாடாளுமன்ற அராஜகத்தைக் காட்டியே இந்து மதவெறி பாசிசத்தைக் கொண்டு வர துடிக்கின்றன, இந்துமத வெறி அமைப்புகள்; அவைகளே பிரதான அபாயமாக மாறியுள்ள இன்றைய நிலையில் இந்த அமைப்புகள் பற்றி விரிவாகும் கூர்மையாகவும் பரவலாகவும் புரட்சியாளர்கள் பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்; இந்த சக்திகளை முறியடிப்பதை முதன்மையான பணியாக எடுத்து தீவிரமாக செயலாற்ற வேண்டும்.

ராஜீவின் அழித்தொழிப்பை பூதாகரமாக்கி எல்லா இலங்கை தமிழரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று டெல்லி காங்கிரசின் தமிழக பொதிமாடு இராமமூர்த்தியும் அரசியல் சீக்கு ஜெயலலிதாவும் ஊளையிட்டுள்ளனர்; விடுதலைப் புலிகள் தமது எஜமானர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப் போன எரிச்சலும் மீண்டும் அதை தமது எஜமானனின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசியல் நிர்ப்பந்தமும்தான் வேண்டுமென்றே இவர்கள் விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்து அவதூறு செய்து வருவதன் நோக்கமாகும்; அதன் ஒரு பகுதியாகத்தான் எல்லா இலங்கைத் தமிழர்கள் மீதும் இவர்கள் தமது ஆத்திரத்தைக் கக்கியுள்ளனர்.

ராஜீவ் கொலையை கருவியாக்கி வோட்டுப் பொறுக்க ஜெயலலிதா – வாழப்பாடி கோஷ்டிகள் ஏற்கனவே களத்தில் இறங்கி விட்டன. திட்டமிட்டு தி.மு.க. தேசிய முன்னணி-‘இடது’ சாரி கட்சிகளின் விளம்பர தட்டிகள், பேனர்கள், அலுவலகங்கள் ஆகியவைகளை ஒன்று விடாமல் தமிழகம் முழுவதும் கொளுத்தி விட்டனர். தி.மு.க., ஜனதா தள, ‘இடது சாரி’ கட்சி வேட்பாளர்களின் வீடு புகுந்து தாக்கியும் சூறையாடியுள்ளனர். பிரச்சார வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் இக்கட்சிகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளை ஊக்ககுவித்ததன் மூலம் ராஜீவ் கொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று பொய்யையும் அவிழ்த்து விட்டனர். வாழப்பாடி இன்னும் ஒரு படி மேலே சென்று ராஜீவை கொலை செய்தது கருணாநிதி – தி.மு.க.தான் என்றே புளுகியுள்ளார். இவைகளின் மூலம் அக்கட்சிகளை தனிமைப்படுத்துவதில் கணிசமான அளவு வெற்றி ஈட்டியுள்ளனர். மேலும் ராஜீவின் பிணப்பெட்டியைக் காட்டி அனுதாப அலையை எழுப்பி வோட்டு கேட்டு வருவர்.

ராஜீவின் கொலையையொட்டி அ.தி.மு.க.-காங்கிரஸ் காலிகள் நடத்திய வெறியாட்டத்தையும், தி.மு.க. மீதான திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தையும் தி.மு.க.-தே.மு.-‘இடது சாரி’ தலைவர்கள் போர்க்குணத்துடன் எதிர்த்து முறியடிக்கவில்லை; மாறாக பீதி கொண்டு செயலற்ற தற்காப்பு நிலையை எடுத்துள்ளனர்; ‘இராணுவத்தை வரவழைத்தாவது அமைதியை நிலைநாட்டுங்கள்’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓலமிட்டது பீதியினால்தான்; இதனால், அவர்களது அணிகள் சோர்வுற்று போயுள்ளனர்; அல்லது ஆத்திரமுற்று ஆங்காங்கே எதிர்த்துத் தாக்குகின்றனர்.

ஆனால், காங்கிரசில் ஏற்படும் பிளவுகள் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். மூப்பனார், வாழப்பாடி கோஷ்டிகள் தனித்தனியே செல்ல வாய்ப்புண்டு. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவரான மூப்பனாருக்குத்தான் தமிழக காங்கிரசில் அதிக செல்வாக்கு உண்டு. எனவே வாழப்பாடி ஓரம் கட்டப்படலாம்; மேலும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் சிதறி பலவீனமடையது பாரதீய ஜனதா கட்சி வலுப்பெற்றால், பார்ப்பன ஜெயலலிதா தனது விசுவாச வாழப்பாடியை உதறி விட்டு பாரதீய ஜனதா படகில் ஏறிக் கொள்ளலாம். அந்நிலையில் மூப்பனார் பிரிவு காங்கிரசு – தி.மு.க. கூட்டு கூட ஏற்படலாம்.

இந்த மாதிரி அரசியல் விசுவாசங்கள் உடைதல்; புதிய விசுவாசங்கள் அடிப்படையில் புதிய சந்தர்ப்பவாத கூட்டணிகள் ஏற்படுதல்; மீண்டும் அவை உடைதல்; மீண்டும் உருவாதல்; குதிரை வியாபாரம்; ஆட்சிக் கவிழ்ப்புகள் நடக்கும்; நாடாளுமன்ற அராஜகம் இப்படி தலைவிரித்தாடும். இதுதான் அண்மை எதிர்காலத்தில் நடக்கப் போகின்றது.

நாடாளுமன்ற போலி ஜனநாயகம் நடைமுறையில் இப்படித்தான் இழிந்து போகும். அதற்கு விதிக்கப்பட்ட விதி இதுதான்; இதற்கு மாற்று புதிய ஜனநாயகப் புரட்சியில் மலரும் மக்கள் ஜனநாயக அமைப்பே; இதன் அவசியமும் தேவையும் என்றுமில்லாத அளவுக்கு இன்று முன்னணிக்கு வந்துள்ளது.
_____________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 1991
____________________________________________________

2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !

5

08-2g-12 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ, “அந்த முறைகேட்டிற்கான மொத்தப் பழியையும் ஆ.ராசா மீது சுமத்தியும், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரை அப்பழுக்கற்ற யோக்கியர்களாகச் சித்தரித்தும்” நகல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார். இந்த அறிக்கை கூட்டுக் குழு உறுப்பினர்களின் கைகளுக்கு வரும் முன்பே பத்திரிகைகளில் கசியவிடப்பட்டது. “இது குழுத் தலைவர் பி.சி.சாக்கோவின் கைங்கர்யம்” என பா.ஜ.க., தி.மு.க., போலி கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

இந்த வரைவு அறிக்கை, “முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவரை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறது. இது ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற குற்றச்சாட்டு மட்டுமல்ல; அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்துள்ள பல்வேறு உண்மைகளை – ஆ.ராசா மட்டுமின்றி, அந்த முறைகேட்டில் யார் யாருக்கு என்னென்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து அம்பலமாகிவரும் உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆ.ராசாவை மட்டும் பலிகிடாவாக்கும் அயோக்கியத்தனமான குற்றச்சாட்டுமாகும்.

08-2g-22 ஜி ஊழல் வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள ஆ.ராசா, “அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட சமயத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, மைய அரசின் சோலிசிட்டர் ஜெனரலாக இருந்த கூலம் வாகன்வாதி ஆகியோருடன் ஒதுக்கீடு தொடர்பாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டுத்தான், அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. இம்முடிவுகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிவிக்கப்பட்டு, அவரின் ஒப்புதலோடுதான் நடைமுறைப்படுத்தப்பட்டன” எனக் கூறிவருவதோடு, இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் சாட்சியம் அளிக்கத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் உள்ள 30 உறுப்பினர்களுள் தி.மு.க., பா.ஜ.க., மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள், ஆ.ராசாவைச் சாட்சியம் அளிக்க அழைக்க வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். இக்கோரிக்கையைக் குழுவின் தலைவரான சாக்கோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, ஒருவரைச் சாட்சியமாக அழைப்பதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், ஆ.ராசாவைச் சாட்சியாக அழைப்பதைத் தன்னிச்சையான முறையில் ஒதுக்கித் தள்ளிவருகிறார்.

கடந்த மார்ச் மாத மத்தியில் ஷாலினி சிங் என்ற பத்திரிகையாளர் இந்து நாளிதழில், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்பும், அதன் பின்பும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அப்பொழுது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவிற்கு இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருந்த குறிப்புகளையும் வெளியிட்டு, அலைக்கற்றை ஒதுக்கீடு பிரதமருக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என நிறுவியிருந்தார். இந்த உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், 2 ஜி வழக்கில் முதல் குற்றவாளியான ஆ.ராசாவின் சாட்சியம் எவ்வளவு முக்கியத்துவம் வாந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, ஆ.ராசாவை நேரடியாக அழைத்து விசாரிப்பதற்குப் பதிலாக, குழு உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே ஆ.ராசாவிற்குச் சில கேள்விகளை அனுப்பி, அவரிடம் விசாரணை நடத்திவிட்டதைப் போல நாடகமாடுகிறார்.

08-2g-3

ஆ. ராசாவைச் சாட்சியம் சொல்ல அழைத்தால், அவர் மன்மோகன் சிங்கின் கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்திவிடுவார் என்பதாலேயே, அவரை அழைக்க மறுக்கும் சாக்கோ, ராசாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்ல தயாராக இருப்பவர்களை அல்லது அப்படிச் சொல்ல தயாரிக்கப்பட்டிருப்பவர்களை வெற்றிலை, பாக்கு வைத்து சாட்சியம் சொல்ல அழைக்கிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள முன்னாள் சோலிசிட்டர் ஜெனரலும், தற்போதைய அட்வகேட் ஜெனரலுமான வாகன்வாதி; அலைக்கற்றை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் சாட்சியம் சொல்ல அழைக்கப்பட்டதற்கும், ஆ. ராசாவிற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதற்கும் இந்த உள்நோக்கமும், பாரபட்சமான அணுகுமுறையும்தான் காரணம்.

அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி, முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் பெஹுரா போன்றவர்கள் ஆ.ராசாவிற்கு எதிராகச் சாட்சியம் அளித்திருக்கும்பொழுது, தனது தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கு ஆ.ராசாவிற்கு வாய்ப்பளிப்பதுதான் இயற்கையான நீதியாகும். ஆனால், மன்மோகன் சிங்கையும் ப.சிதம்பரத்தையும் அப்பழுக்கற்றவர்களாகக் காட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே விசாரணையை நடத்தி, சாட்சிகளை அழைப்பதிலும், விசாரிப்பதிலும், சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதிலும் பாரபட்சமான முறையில் நடந்துகொண்டு, மோசடியான அறிக்கையைத் தயாரித்துக் கசியவிட்டிருக்கிறது, காங்கிரசு.

மன்மோகன் சிங் ஏதுமறியா அப்பாவியா?

08-2g-4

“ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் விட மறுத்து, அவற்றை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலே விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார்; அலைக்கற்றைகளை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்க முடிவு செய்த ஆ.ராசா, அதற்கான வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நாளைத் திடீரென மாற்றியமைத்து, சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்.” – இவைதான் ஆ.ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுள் முக்கியமானவை. இந்தக் குற்றங்களையெல்லாம் ஆ.ராசா, பிரதமருக்குத் தெரியாமலும், அவருடைய அறிவுரைகளை மீறியும், தன்னிச்சையாகவும், மனம்போன போக்கிலும், பொதுநலனுக்கு விரோதமாகவும் செய்திருப்பதாகத் தேசிய ஊடகங்கள்; அ.தி.மு.க., பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்; சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் திரும்பத்திரும்பக் கூறி வருகின்றனர். ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மார்ச் மாத மத்தியில் இந்து நாளிதழில் வெளியாகியிருக்கும் ஆதாரங்கள், ஆ.ராசா மீது

சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்திலும் மன்மோகன் சிங்கிற்கும் முக்கிய பங்கிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன. “பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலோடுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்தது” என ஆ.ராசா திரும்பத்திரும்பக் கூறிவருவதையும் நிரூபிக்கின்றன.

ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, நவ.2, 2007-க்கும் ஜூலை 2, 2010-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏழு கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் இருவருக்கு இடையேயும், அவர்கள் இருவரின் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு இடையேயும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகப் பலமுறை பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. இவற்றுள் நவ.2, 2007 அன்றும், டிச.26, 2007 அன்றும் ஆ.ராசா, பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதங்களும், அவை தொடர்பாக பிரதமர் அலுவலகம் எடுத்த முடிவுகளும் முக்கியமானவை.

நவ.2, 2007 அன்று எழுதப்பட்ட கடிதத்தில், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தேதியை அக்.1, 2007-க்குப் பதிலாக, செப்.25, 2007 என மாற்றப் போவதாக ராசா தெரிவித்திருந்தார். இந்த மாற்றத்தைச் செய்தால் பல நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பது தெரிந்திருந்த போதும் பிரதமர் அலுவலகம் இந்த மாற்றம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல், அலைக்கற்றைகளின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும், அலைக்கற்றைகளை ஏலத்தில் விடுவது குறித்தும் பட்டும்படாமல் பொத்தாம் பொதுவாக அறிவுரை வழங்கி, ராசாவிற்குப் பதில் கடிதம் அளித்தது.

08-2g-5

2 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் அல்லாமல், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும், 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும்தான் வழங்க வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், ராசா இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ள மறுப்பார் எனத் தெரிந்துதான், பிரதமர் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் என்பதை டிச.26, 2007-க்குப் பின் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

ஆ.ராசா டிச.26, 2007 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் முறையில் சில மாற்றங்களைச் செய்யப் போவது பற்றித் தெரிவித்திருந்தார். இந்த மாற்றத்தைக் காட்டித்தான், ஆ. ராசா சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் யோக்கியவானாக நடந்து கொண்டார் எனக் கூறப்படுவது உண்மையென்றால், அவர் இந்த மாற்றத்தைச் செய்யக்கூடாது எனத் தெளிவாக ராசாவிற்கு உத்தரவிட்டுத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு.

பிரதமரின் அறிவுரைப்படி, அச்சமயம் பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ. நாயரும், பிரதமர் அலுவலகத்தின் மற்றொரு செயலராக இருந்த புலோக் சட்டர்ஜியும் ராசாவின் டிச.26, 2007-ஆம் தேதியிட்ட கடிதத்தை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விவாதித்து, இம்மாற்றம் தொடர்பாக சில ஒப்பீடுகளைச் செய்து, நான்கு பக்க அளவிற்கு அட்டவணைகளைத் தயாரித்து, ஆ.ராசா எடுக்க உத்தேசித்திருந்த நான்கு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளலாம் என எழுத்துப்பூர்வமாகக் குறிப்புகளைத் தயாரித்து பிரதமருக்கு அனுப்பினர். இது மட்டுமின்றி, ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒப்புதல் கடிதங்களை அளிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக, அச்சமயத்தில் தொலைத்தொடர்புத் துறை செயலராக இருந்தவரும், 2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பவருமான சித்தார்த் பெஹுராவுக்கும் பிரதமர் அலுவலகச் செயலர் புலோக் சட்டர்ஜிக்கும் இடையே இம்மாற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

மேலும், புலோக் சட்டர்ஜி தயாரித்த குறிப்பில், “ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளுக்கு (6.2 மெகாஹெர்ட்ஸ்) அப்பாலுள்ள அலைக்கற்றைகளைத்தான் ஏலத்தில் விட வேண்டும்; ஆரம்பகட்ட அலைக்கற்றைகளுக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்த வேண்டியதில்லை” எனப் பரிந்துரைத்துள்ளார். மேலும், “அலைக்கற்றைகளைப் பெற 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ஏலமுறையைப் பின்பற்றுவதுதான் கொள்கைப்படி சரியாக இருக்கும் என்றாலும், முதலில் வருபவருக்கு முன்னுரிமையைத் தொடரலாம்” எனக் குறிப்பிட்டு ஆ.ராசாவின் முடிவை ஆதரித்துள்ளார். புலோக் சட்டர்ஜி தயாரித்து அளித்த இந்தக் குறிப்புகளை அங்கீகரித்து, பிரதமரின் முதன்மைச் செயலர் டி.ஏ.கே. நாயர் ஜனவரி 6, 2008 அன்று – ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒப்புதல் கடிதங்களைக் கொடுப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகக் கையெழுத்திட்டார்.

08-2g-6

ஆ.ராசா ஜனவரி 10, 2008 அன்று அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் ஒப்புதல் கடிதங்களைக் கொடுத்துவிட்டதை அறிந்துகொண்ட பிரதமர், “அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப இது தொடர்பான குறிப்புகளை மாற்றித் தனக்கு அனுப்புமாறு” தனது செயலர்களுக்கு உத்தரவிடுகிறார். இந்த உத்தரவின் அடிப்படையில், “முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதில் செய்யப்பட்ட மாற்றங்கள்; ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது மற்றும் ஆரம்பநிலை அலைக்கற்றைகளுக்கு அப்பாலுள்ள அலைக்கற்றைகளை ஏலத்தில் விடுவது” ஆகிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அனுமதிக்குமாறு கோரி, ஜனவரி 15, 2008 அன்று மீண்டும் குறிப்புகளை அனுப்பினார், புலோக் சட்டர்ஜி.

08-2g-7

நியாயமாகப் பார்த்தால் விவாதித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முடிவுகளுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்து, அதனை எழுத்துப்பூர்வமாக ஆ.ராசாவுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ மிகவும் கைதேர்ந்த கிரிமினல்களுக்கே உரிய நரித்தனத்தோடு, “இந்த முடிவுகளை சாதாரணமாகத் தெரிவித்தால் போதும். கடிதம் எழுதி முறையாகத் தெரிவிக்க வேண்டியதில்லை. மேலும், இந்த முடிவுகளோடு தன்னைச் சம்பந்தப்படுத்தாமல், சற்று எட்ட நிறுத்துமாறு” ஜனவரி 23, 2008 அன்று, தனது தனிச் செயலர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் மூலம் உத்தரவிடுகிறார். “இந்த உத்தரவிற்கேற்ப தொலைத்தொடர்புத் துறையிடம் முடிவுகள் தெரிவிக்கப்பட்டதாக” புலோக் சட்டர்ஜி கோப்பில் குறிப்பு எழுதி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துக் கொள்வதற்கும், ஒருவேளை அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினையானால், ஆ.ராசாவைப் பலியிட்டு தான் தப்பித்துக் கொள்ளும் முன்யோசனையோடுதான், பிரதமர் மன்மோகன் சிங் இந்த முடிவுகளிலிருந்து எட்ட இருக்க விரும்பியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த எட்ட இருக்கும் விருப்பம் கிரிமினல் சட்டத்தின்படி சாட்சியங்களை அழிப்பதற்குச் சமமாகும். தொழில்முறைக் குற்றவாளிகளால் மட்டுமே இது போன்று சிந்திக்க முடியும்.

இந்த விசயத்தில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அலைக்கற்றை ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்கிற்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் அனைத்தும் இன்றும் உயிரோடு உள்ளன. ஆனால், நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, தன்வசம் தரப்பட்ட இந்த சாட்சியங்களை, பிரதமர் மன்மோகன் சிங்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு புறக்கணித்து விட்டு, ஆ.ராசாவைப் பலிகிடா ஆக்கியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 122 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து அளித்த தீர்ப்பில், இந்த சாட்சியங்கள் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், நடந்துள்ள முறைகேட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்துவிட்டது.

ப.சிதம்பரத்தின் பங்கு

08-2g-8

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2ஜி அலைக்கற்றைகளை 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில்தான் 2008-இலும் வழங்க வேண்டும் என மைய அரசிற்கு அறிவுறுத்தியிருந்தாலும், இதனை தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது. இந்தத் தொலைதொடர்பு கமிஷனின் உறுப்பினர்களுள் இருவர் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவொருபுறமிருக்க, 2ஜி அலைக்கற்றைகளுக்கான விலையைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் மட்டுமே தீர்மானித்துவிட முடியாது; நிதியமைச்சகத்துடன் விவாதித்து, அந்த அமைச்சகத்தின் ஒப்புதலுடன்தான் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று 2003-ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படிருந்தது. இந்த இரண்டு நிபந்தனைகளும் 2ஜி அலைக்கற்றைக்கான விலையைத் தீர்மானிப்பதில் நிதியமைச்சருக்குள்ள பொறுப்பை எடுத்துக் காட்டுகின்றன.

2 ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த சமயத்தில் நிதியமைச்சகத்தின் செயலராக இருந்த டி. சுப்பாராவ், “2ஜிஅலைக்கற்றைகளை 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலையின்படி விற்பனை செய்யக்கூடாது; இந்த விற்பனையை உடனே நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டு, நவ.22, 2007-இல் தொலைத்தொடர்புத் துறைக்குக் கடிதம் எழுதினார்.

டி. சுப்பாராவ் தனது கடிதத்தில் குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளித்தபொழுது, “கைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பொதுநலன் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், ஒதுக்கீட்டில் நட்டமேற்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது” எனப் பிறழ் சாட்சியமளித்தது தனிக்கதையாகும்.

“தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தல் மற்றும் விலையைத் தீர்மானிப்பதில் அமைச்சகத்தின் உரிமை” ஆகியவற்றைக் குறிப்பிட்டு, டி.சுப்பாராவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்துக் கடிதம் எழுதினார், ஆ.ராசா. இந்த இரண்டு கடிதங்களும் அப்பொழுது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆனால், அவரோ இந்தக் கடிதங்கள் குறித்து எந்த முடிவையும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்தார்.

2 ஜி அலைக்கற்றைகளின் விலையைத் தீர்மானிப்பது குறித்து 2007-ஆம் ஆண்டு தொடங்கி கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துவந்த போதும், அதன் விலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தொலைத்தொடர்பு கமிசனின் கூட்டம், ஆ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கிக் கடிதங்களைக் கொடுத்த நாள் (10.1.2008) வரை கூட்டப்படவேயில்லை. குறிப்பாக, 9.1.2008 அன்று கூடுவதாக இருந்த தொலைத்தொடர்பு கமிசனின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பின், 15.1.2008 அன்று கூடிய தொலைத்தொடர்பு கமிசன் அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

08-2g-9

ஆ.ராசா 10.1.2008 அன்று அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதல் கடிதங்களை மட்டுமே தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கியிருந்தார். அலைக்கற்றைகள் பின்னர்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொலைத்தொடர்பு கமிசனின் எதிர்ப்பை பிரதமர் அலுவலகமோ, நிதியமைச்சகமோ உண்மையாகவே மதித்திருந்தால், அந்த ஒதுக்கீட்டை உடனடியாகவே ரத்து செய்திருக்க முடியும். ஆனால், ப.சிதம்பரமோ அலைக்கற்றைகளுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து இரண்டு ஆண்டுகளாக மௌனமாக இருந்துவிட்டு, 15.1.2008 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த காலம் முடிந்து போனதாக இருக்கட்டும்” என ஒருபுறம் பட்டும்படாமல் எழுதிவிட்டு, இன்னொருபுறம், “ஆரம்பகட்ட அலைக்கற்றைகளை சந்தை விலையில் விற்கத் தேவையில்லை” என்றும் கூறியிருந்தார்.

இதன் பிறகு, 4.7.2008 அன்று அலைக்கற்றைகளுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் ப.சிதம்பரம் ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளுக்கு அப்பாலுள்ள அலைக்கற்றைகளைக் கூடுதல் விலையில் விற்பது குறித்துத்தான் பேசியிருக்கிறார். “ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளை 2001-ஆம் அண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பது தொடர்பாக ப.சிதம்பரத்திற்கும் ஆ.ராசாவிற்கும் இடையே ஒத்த கருத்து இருந்ததை அன்று நான் அறிந்துகொண்டதாக” பிரதமர் மன்மோகன் சிங் இந்தக் கூட்டம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இவை அனைத்தும், “அலைக்கற்றையை ஏலத்தில் விட வேண்டும் என நிதியமைச்சகம் கூறி வந்தது” என்று ப.சிதம்பரம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளெல்லாம் வெறும் பம்மாத்து என்பதை நிரூபிக்கின்றன. ப.சிதம்பரமும், பிரதமர் மன்மோகன் சிங் போலவே ஆ.ராசாவை முன்னிறுத்தி, தன்னைக் காத்துக்கொள்ளும் நரித்தனத்தோடுதான் இந்தக் காலக்கட்டம் முழுவதும் நடந்துகொண்டு வந்திருக்கிறார். எனினும், அவரது கள்ள மௌனம் அலைக்கற்றைகளைக் குறைந்த விலையில் விற்று அரசுக்கு நட்டமேற்படுத்திய குற்றத்தில் அவருக்குள்ள பங்கை ரத்து செய்துவிடாது. இந்தப் பங்கை ஒத்துக் கொண்ட சி.பி.ஐ. நீதிமன்றம், 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அலைக்கற்றைகளை 2008-இல் விற்பனை செய்தது தம்மளவில் குற்றமாகாது எனக் கூறி, ப.சிதம்பரத்தைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துவிட்டது. ஆனால், ஆ.ராசா விசயத்திலோ அலைக்கற்றைகளைக் குறைவான விலையில் விற்றது பொதுநலனுக்கு விரோதமான குற்றமாகிவிட்டது.

வாகன்வாதி – நரி பரியான கதை

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பது விண்ணப்பித்த தேதியை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறையாகும். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில், நிறுவனங்கள் விண்ணப்பித்த தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பான கடிதம் (Letter of Intent) வழங்கப்படும். “அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து வரும் நிறுவனங்களின் பட்டியல் மீண்டும் வரிசைப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில்தான் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்படும்” என்ற மாற்றம் புகுத்தப்பட்டது. இந்த மாற்றத்தை ஆ.ராசா ஏதோ தன்னிச்சையாகச் செய்ததைப் போல குற்றஞ்சுமத்தப்படுகிறது. ஆனால், இம்மாற்றத்தைப் புகுத்தியதில் ஆ.ராசா, பிரணாப் முகர்ஜி, கூலம் வாகன்வாதி ஆகிய மூவருக்குமே பங்குண்டு.

அலைக்கற்றை விற்பனை அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி இம்மாற்றத்தை மட்டுமின்றி, 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தேதியை அக்.1, 2007-க்குப் பதிலாக, செப்.25, 2007 என மாற்றியது ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார். நவம்பர் மற்றும் டிசம்பர் 2007- களில் பி08-2g-10ரணாப் முகர்ஜி, ஆ.ராசா, வாகன்வாதி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டங்கள் நடந்ததை யாரும் மறுக்கவில்லை என்றாலும், அக்கூட்டங்கள் குறித்த கூட்டக் குறிப்புகள் பதியப்படவில்லை. கூட்டக் குறிப்புகள் பதியப்படாதது தற்செயலானதா அல்லது இக்கூட்டங்கள் குறித்த எந்தப் பதிவுகளும் இருக்கக் கூடாது என்பது திட்டமிடப்பட்ட முறையில் நடந்த சதியா என்பது விசாரணைக்கு உரியதாகும்.

இந்த மாற்றத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையாக ஆதரித்துப் பேசி வந்த வாகன்வாதி, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் அளித்த சாட்சியத்தில், “ஆ.ராசா இம்மாற்றத்தைப் பத்திரிகைகளுக்கு அளித்த சமயத்தில், அவர் அதில் தன்னிச்சையாக சில திருத்தங்களைச் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாக”க் குற்றஞ்சுமத்தினார். அதேசமயம், வாகன்வாதியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பிரணாப் முகர்ஜி, ஆ.ராசா, வாகன்வாதி ஆகியோர் கூடி முடிவெடுத்த பிறகு, அம்முடிவில் ஆ.ராசா தன்னிச்சையாக என்ன திருத்தங்களைச் செய்தார் என்பது ஒருபுறமிருக்கட்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்ததே தவறு எனத் தீர்ப்பளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம். இந்த மாற்றத்தைச் செய்தவர்களுள் ஒருவரான ஆ.ராசா மீது சதிக் குற்றச்சாட்டைப் புனைந்துள்ள சி.பி.ஐ., வாகன்வாதி நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறி, அவருக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

வாகன்வாதி காங்கிரசிற்குச் சாதகமாக ராசாவிற்குக் குழிபறித்ததால், அவருக்கு நற்சான்றிதழ் மட்டும் வழங்கப்படவில்லை. சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த அவர் அட்வகேட் ஜெனரலாகப் பதவி உயர்வினையும் பெற்றார். மற்றொரு காங்கிரசு விசுவாசியும் பார்ப்பன நரியுமான பிரணாப் முகர்ஜி, வழக்கு, வாய்தா, விசாரணை போன்றவை அணுக முடியாத இடத்தில், இந்தியாவின் அரசுத் தலைவராக உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங் அரசு தயாரித்த பொய்சாட்சிகள்08-2g-11

ŽŽŽநாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் சொல்ல அழைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரே மாதிரியாகச் சாட்சியம் அளிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்ட சதிகளும் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த வகுப்புகள் ஜனவரி 2011 முதல் ஜூலை 2011 வரை நடத்தப்பட்டிருப்பதும், இந்த வகுப்புகளை அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர் ஒருங்கிணைத்து நடத்தியிருப்பதும் ஓர் ஆவணமாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

“அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்றால் அரசுக்கு 35,000 கோடி ரூபா நட்டமேற்படும்” என எச்சரித்த யோக்கியவானும் இதே சந்திரசேகர்தான். இவர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளித்தபொழுது, “அரசின் எந்தவொரு கொள்கையும் அலைக்கற்றைகளை அதிக விலையில் விற்க வேண்டும் எனக் கூறவில்லை; எனவே, இதில் வழக்குப் புனைய எந்தவொரு முகாந்திரமும் இல்லை” எனப் பிறழ் சாட்சியம் அளித்தார்.

போலீசு பொய் சாட்சிகளைத் தயார் செய்து கூண்டில் ஏற்றுவது போல, அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லுமாறு தயார்படுத்தப்பட்டுள்ளனர். “2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான முழு உண்மைகளும் வெளிவந்துவிடக் கூடாது; ஆ.ராசா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் இவ்ழக்கில் பலிகிடாவாக்கி, இம்முறைகேட்டில் தொடர்புடைய மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற முதலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் காங்கிரசு கூட்டணி அரசு எவ்வளவு கவனமாக உள்ளது” என்பதைத்தான் இந்த பொய்சாட்சி தயாரிப்புகளும்; கே.எம்.சந்திரசேகர், டி.சுப்பாராவ் போன்ற அதிகாரிகள் அளித்துள்ள பிறழ் சாட்சியங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த குருதாஸ் தாஸ் குப்தா இந்தப் பொய் சாட்சிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்ததை, குழுவின் தலைவர் சாக்கோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தனது உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இது போன்ற சாட்சியங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி அறிக்கையினைத் தயாரித்திருக்கிறார்.

“அலைக்கற்றைகளை ஏலத்தில் விடாமல், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கியது; தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைப்படி அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு விலையில் ஒதுக்கியிருப்பது; அலைக்கற்றையைப் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை அந்நிய நிறுவனங்களுக்கு விற்றது – இவை அனைத்தும் சட்டப்படியும், 1999-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தொலைபேசித் தொடர்பு கொள்கைப்படியும், தொலைத்தொடர்புத் துறையை அடிக்கட்டுமானத் துறையாகக் கருத வேண்டும் என்ற பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட முடிவின்படியும்தான் நடந்திருப்பதால், இதில் குற்றம் காண முடியாது; எனவே, அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் நட்டமேற்பட்டுள்ளது என்ற தலைமைக் கணக்குத் துறையின் முடிவு தவறானது. மற்றபடி, முதலில் வருபவருக்கு முன்னுரிமையில் செய்யப்பட்ட மாற்றங்கள்; அதனால் விண்ணப்பித்த 575 நிறுவனங்களுள் 122 நிறுவனங்கள் மட்டுமே பலன் அடைந்திருப்பது ஆகியவை கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளேயன்றி, குற்றமல்ல” என கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி எதுவுமே தவறில்லை, குற்றமில்லை என்று ஆகிவிட்ட பிறகு, ஆ.ராசா மன்மோகன் சிங்கை ஏமாற்றிவிட்டார் என்று

பழிபோடுவதற்கு எங்கே இடமிருக்கிறது?

பிரதமர் மன்மோகன் சிங்கையும் அ08-2g-12வரது அரசையும் அப்பழுக்கற்றவராகக் காட்டுவதற்காக சாக்கோ முன்வைத்துள்ள வாதங்கள் எதுவுமே புதிதல்ல. ஆ.ராசா நீண்டகாலமாகக் கூறிவருவதுதான். மேலும், ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் பிரதமருக்குத் தெரிந்துதான் எடுக்கப்பட்டன என்றும் நீண்டகாலமாகக் கூறிவருகிறார். ஆ.ராசாவுக்கும் பிரதமருக்கும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த கடிதப் போக்குவரத்துக்கள், ஆ.ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் இந்து நாளிதழில் வெளியான பிறகும்கூட, அ.தி.மு.க., பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்த்தரப்பு மட்டுமல்ல, நீதிமன்றங்களும், தேசிய ஊடகங்களும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் அனைத்திற்கும் ராசாவின் மீதே பழிபோட்டன. “கூட்டணி நிர்பந்தங்களால் இந்த முறைகேட்டினை மன்மோகன் சிங்கால் தடுக்க முடியாமல் போவிட்டது; ஆ.ராசாவால் அவர் ஏமாற்றப்பட்டுவிட்டார்” என மன்மோகன் சிங்கைக் காப்பாற்றும் நோக்கில்தான் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, ஜெயா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், தி.மு.க.வைத் தீய சக்தியாகக் காட்டவும், தேர்தல்களில் அதனைத் தோற்கடிக்கவும் இந்த முறைகேட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். ஜெயா கும்பலின் இந்த அரசியல் சதிராட்டத்திற்கு ஜூனியர் விகடன், தினமணி உள்ளிட்ட தமிழகப் பார்ப்பன ஏடுகள் துணை நின்றன. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட நட்டம் குறித்துப் பல்வேறுவிதமான மாறுபட்ட மதிப்பீடுகள் இருக்கும்பொழுது, தலைமைக் கணக்கு அதிகாரியும்கூட அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கு

புலேக் சட்டர்ஜி, டிஏகே நாயர்
புலேக் சட்டர்ஜி, டிஏகே நாயர்

றித்து நான்கு வேறுபட்ட மதிப்பீடுகளைக் கொடுத்திருந்தபொழுது, இந்த முறைகேட்டைப் பிரம்மாண்டமானதாகக் காட்டுவதற்காகவே 1.76 இலட்சம் கோடி ரூபாய் நட்டம் என்பதை மட்டும் ஊதிப்பெருக்கி, அந்தப் பணம் முழுவதையும் தி.மு.க. சுருட்டிக் கொண்டுவிட்டதாக அவதூறுப் பிரச்சாரம் நடத்தியது, ஜெயா கும்பல்.

பிரதமர் மன்மோகன் சிங் இந்த முறைகேடு குறித்து தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், “தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில்விட வேண்டாம் என அறிவுறுத்தியது. அலைக்கற்றைகளைக் குறைந்தவிலையில் விற்பதில் ஆ.ராசாவுக்கும் ப.சிதம்பரத்துக்கும் இடையே ஒத்தபுரிதல் இருந்தது; ஆ.ராசா எல்லாம் முறையாக நடக்கும் என வாக்குறுதி அளித்தார். இதைத்தாண்டி எனக்கு எதுவுமே தெரியாது” எனச் சாதித்தார்.

தற்பொழுது வெளிவந்துள்ள ஆதாரங்கள் மன்மோகன் சிங் அளித்த வாக்குமூலம் எத்துணை பெரிய இமாலயப் பொய் என்பதை அம்பலப்படுத்திவிட்டன. ஆ.ராசா மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் மன்மோகன் சிங் மீதும் போடுவதற்கு முகாந்திரம் இருப்பதை நிரூபித்துவிட்டன. ஆனாலும், எதிர்த்தரப்போ,” நாடாளுமன்றக் கூட்டுக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைக்க வேண்டும்; குழுத் தலைவரை மாற்ற வேண்டும்” என அடக்கியே வாசிக்கிறார்கள். பல்வேறு பிரச்சினைகளில் மைய அரசோடு முரண்பட்டு மோதிக் கொண்டிருப்பதாகக் காட்டி வரும் பார்ப்பன ஜெயா கும்பலோ இப்புதிய ஆதாரங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறது.

நாட்டையும் மக்களையும் ஏமாற்றிவரும் ஒரு மோசடிப் பேர்வழி பிரதமர் பதவியில் அமர்ந்திருப்பதுதான் நாட்டிற்கு அவமானம். ஆனால், மன்மோகனோ ஊழல் குறித்து நடைபெறும் பிரச்சாரத்தால் உலக நாடுகளின் முன் இந்தியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாக வெட்கமின்றிப் பழி போடுகிறார்!

– திப்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம் !

1
சிறீகாந்தன்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சிறீகாந்தன்.

ழ அகதிகளுக்குத் தமிழகத்தில் 112 திறந்தவெளி முகாம்களும், 2 சிறப்பு முகாம்களும் உள்ளன. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் 7 ஈழத்தமிழர்களும், செங்கல்பட்டு முகாமில் 39 தமிழர்களும் 4 நைஜீரியர்களும் வைக்கப்பட்டிருக்கின்றனர். பூந்தமல்லியில் 7 பேரைப் பாதுகாக்க 160 ஆயுதம் தாங்கிய காவலர்கள், அவர்களுக்கான செலவு மாதம் ரூ.34 இலட்சம். ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கோ ஒரு நாளுக்கான படி 70 ரூபாதான். அதற்குள் உணவு, பாத்திரம், எரிபொருள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி, அவர்களே சமைத்துத்தான் சாப்பிடவேண்டும்.

இந்தச் சிறப்பு முகாம்கள் 1990 – இல் பல்வேறு ஈழ இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் அடைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவை. பின்னர், ராஜீவ் கொலை தொடர்பாகப் பல கைதிகள் இங்கு விசாரிக்கப்பட்டனர். அதற்குப் பின், தமிழகத்தின் முகாம்களிலும், வெளியிலும் இருக்கின்ற ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கும், பணம் பிடுங்குவதற்குமான இடங்களாக இந்த இரண்டு சிறப்பு முகாம்களும் கியூ பிரிவு போலீசால் பயன்படுத்தப்படுகின்றன. 2009-க்குப் பின் தங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர், சிறப்பு முகாம் அகதிகள்.

சிறப்பு முகாம் என்பது சட்டப்படி சிறை அல்ல. “வெளிநாட்டவர் சட்டம், 1946” இன் 3(2)e- பிரிவின் படி இந்தியாவுக்கு வந்திருக்கும் ஒரு வெளிநாட்டவரை, அவருக்கு நிலையான முகவரி இல்லாத காரணத்தினால், தனது கண்காணிப்பின் கீழ் ஒரு மாவட்ட ஆட்சியர் தடுத்து வைப்பதற்கான ஒரு இடம்.

ஆனால், இரு சிறப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் அனைவரும் முகவரி பதிந்தவர்கள். மேற்கண்ட வரையறைகள் எதிலும் வராதவர்கள். சொல்லப்போனால், ஒரு ஈழ அகதிக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விட்டாலும், அவரை வெளியில் விடாமல் தடுத்து வைப்பதற்கான இடமாகவே இதனை கியூ பிரிவு போலீசு பயன்படுத்துகிறது. இதற்காகவே பொய் வழக்கு போடுகிறது. வெறும் 2000 ரூபாய் ஏமாற்றி விட்டதாக பொய்வழக்குப் போட்டு, 6 மாதமாக முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் உண்டு. செங்கல்பட்டு முகாமில் இதுவரை அடைக்கப்பட்ட 3600 பேரில், 6 பேர் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறார் செங்கல்பட்டு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் ஈழ நேரு என்பவர்.

உண்ணாவிரதம்
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யக் கோரி செங்கல்பட்டு முகாமில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப் படம்).

ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 12 நாட்களாக இவரும். சிறீகாந்தன், செல்வகுமார் ஆகியோரும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தன் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட சிலரை ஆஸ்திரேலியா அனுப்ப முயற்சித்தார் என்பதுதான் காந்தன் மீதான குற்றச்சாட்டு. ஒரு கால் ஊனமான இவரை “ஈழ அகதி நாயே, எங்க சோத்த தின்னுட்டு எங்க காலுக்கு கீழ கிடக்கறத விட்டுட்டு சட்டம் பேசிறியா, இன்னொரு காலையும் உடச்சாதான் சரியாகும்” என்று கூறித் தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்து வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். நீதிமன்றம் பிணை கொடுத்தும் வெளியே விடாமல், அப்படியே சிறப்பு முகாமுக்கு மாற்றியிருக்கின்றனர். இவர் மனைவி மற்றும் பிள்ளைகளை கடந்த 9 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சசிகரன் என்ற இளைஞர் ஆஸ்திரேலியா செல்ல முயன்று 2012 அக்டோபரில் கைது செய்யப்பட்டவர். சிறுவனாக இருந்ததால், புழல் சிறை அதிகாரிகள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். கஷ்டப்பட்டு உயர் நீதிமன்றம் போய் பிணை உத்தரவு வாங்கியிருக்கிறார் இவரது தாய். அதற்குள் இவரைச் சிறப்பு முகாமில் அடைத்து அம்மாவைப் பார்க்க விடாமல் செய்து விட்டது கியூ பிரிவு போலீசு. தாயைப் பார்க்க முடியாமல், எப்போது வெளியே வருவோம் என்ற உத்திரவாதமும் இல்லாத நிலையில், மனம் நொந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் சசிகரன்.

இப்படி ஈழ அகதிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அபூர்வ சிந்தாமணிதான், தனி ஈழம் வாங்கித் தரவிருக்கும் தாயாம்!

– அஜித்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________