Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 715

கொரிய தீபகற்பம் : அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா ?

18

டந்த மார்ச் முதலாக கொரிய தீபகற்பத்தில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. தென்கொரியாவும் அதற்கு ஆதரவாக அமெரிக்காவும் பெரும்படைகளையும் ஆயுதங்களையும் குவித்துப் போர் ஒத்திகைகளை நடத்தி வருவதால், தென்கொரியா மீது போர்ப்பிரகடனம் செய்து வடகொரியாவும் போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவிடமும் அமெரிக்காவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளதால், ஒருக்கால் போர் தொடங்கிவிட்டால் அதன் விளைவுகள் மிகக் கோரமாக இருக்கும் என்பதால் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் பெரும் பீதியில் உள்ளன.

கொரிய தீபகற்பம்வடகொரியா 2006 மற்றும் 2009-இல் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியுள்ளதோடு, கடந்த 2012 செப்டம்பரிலும் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. கடந்த பிப்ரவரியில் நிலத்தடி அணுகுண்டு சோதனையையும், ஏவுகணைச் சோதனையையும் நடத்தியுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை முறியடிப்பதாகவும், அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென்கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்புக்காகவும் என்று கூறிக் கொண்டு அணுகுண்டு வீசும் பி-52 ரக போர் விமானங்களைக் கொண்டு கடந்த மார்ச் முதலாக தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா நடத்தி வருகிறது. இக்குண்டுகள் 1945-இல் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட 75 மடங்கு அதிக ஆற்றல் கொண்டவையாகும். இரண்டு குண்டுகள் வடகொரியா நாட்டின் மீது போடப்பட்டால், அவை அந்நாட்டை மயான பூமியாக்கிவிடும்.

ஏன் இந்தப் பதற்ற நிலை ?

ஜப்பானின் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரிய மக்கள், கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையைக் கட்டியமைத்து அன்றைய சோசலிச சோவியத் படைகளின் உதவியுடன் கொரியாவின் வடபகுதியை 1945-இல் விடுதலை செய்து சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர். தென்பகுதியில் அனைத்து கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ-வூன்- கியூங் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர். ஆனால், ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், தென்கொரியாவை ஆக்கிரமித்துக் கொண்டு தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்கி, லியூ-வூன்-கியூங்கைப் படுகொலை செய்து சைங்மான் ரீ என்ற கம்யூனிச எதிர்ப்புச் சர்வாதிகாரி தலைமையிலான அமெரிக்க விசுவாச பொம்மையாட்சியை நிறுவினர்.

இதனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வடகொரியாவில் சுதந்திர தேசிய அரசும், தென்கொரியாவில் அமெரிக்காவின் பொம்மையாட்சியுமாக 38-வது அட்சரேகைக்கு தெற்காகவும் வடக்காகவும் 1948-இல் தென் கொரியாவும் வடகொரியாவும் பிளவுபட்டன. அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட பொம்மையாட்சி நிலவும் நாடாக உள்ளதால், அதனை ஒரு சுதந்திர நாடாகவே அங்கீகரிக்க முடியாது என்பதால், 1950-இல் “நம் தேசத்தை ஒன்றிணைப்போம்!” என்ற முழக்கத்துடன் தென்கொரிய பொம்மையாட்சியாளர்களை எதிர்த்து வடகொரியா படையெடுத்துப் பல பகுதிகளைக் கைப்பற்றியது. இதற்கெதிராக அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கம்யூனிச அபாயத்தை முறியடிப்பது என்ற பெயரில் போரில் குதித்தன. பல்லாயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட இப்போரைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டு, ஒரே தேசிய இனத்தவரான கொரிய மக்கள் வடகொரியா மற்றும் தென்கொரியா எனத் தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

கொரியா போர் விமானம்
தென் கொரியா மற்றும் ஆசிய,பசிபிக் பிராந்திய நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கானது என்ற பெயரில், தென் கொரியாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் அதி நவீன பி-52 ரக அணுகுண்டு தாக்குதல் போர் விமானம்.

தென்கொரிய சுதந்திர அரசைப் பாதுகாப்பது, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவது என்று பசப்பிக் கொண்டே, இப்பிராந்தியத்தில் தனது போர்க்கப்பல்களையும் போர்விமானங்களையும் கொண்டு அடுத்தடுத்து போர் ஒத்திகைகளை நடத்தி வடகொரியாவையும் சீனாவையும் அமெரிக்கா ஆத்திரமூட்டி வருகிறது. அமெரிக்காவை எதிர்த்து சீனாவும் வடகொரியாவும் நவீன ஆயுதங்களுடன் அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சரிப்பதைக் காரணங்காட்டி, தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிக் கொண்டு அந்நாடுகளில் இராணுவத் தளங்களை நிறுவி, அமெரிக்கா தனது ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. மறுபுறம், வடகொரியாவைப் பயங்கரவாத நாடு, சர்வதேசச் சட்டங்களை மதிக்காத போக்கிரி நாடு என்று குற்றம் சாட்டி, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டைத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்தி வருகிறது.

ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம்

இப்பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதையும் அமெரிக்க நட்பு நாடுகளை இணைத்துக் கொண்டு கூட்டுத் தாக்குதல் தொடுப்பதையுமே அமெரிக்க வல்லரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைக் கப்பல் மூலம் மியான்மர் (பர்மா) வரை கொண்டுவந்து, பின்னர் மியான்மரிலிருந்து நிலத்தடிக் குழாய் வழியாக சீனாவுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இதனைத் தடுப்பதற்காகவே, மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில், அமெரிக்கா தலையிட்டு அந்நாட்டை சீனாவின் செல்வாக்கிலிருந்து மீட்டுத் தன்பக்கம் வளைத்துக் கொண்டது. இதனால் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கான ஒரே வழியாக மலாக்கா நீரிணை மட்டுமே இருப்பதால், இப்பகுதியிலுள்ள நாடுகளைத் தனது கூட்டாளிகளாக மாற்றிக் கொண்டு இராணுவத் தளங்களை அமைத்து சீனாவை அமெரிக்கா எச்சரிக்கிறது.

போலி சோசலிச நாடான வடகொரியா, ஏறத்தாழ இரண்டரைக் கோடி மக்களைக் கொண்ட சிறிய, வறிய நாடு. மறைந்த வடகொரியாவின் தேசியத் தலைவரான அதிபர் கிம்-இல்-சுங் குடும்பத்தின் இளம் வாரிசு அதிபரான கிம்-ஜாங்-உன் தலைமையில், ஒருகட்சி இராணுவ சர்வாதிகாரத்துடன் அதிகாரவர்க்க முதலாளித்துவ ஆட்சியை அந்நாடு பின்பற்றி வருகிறது. அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர்கள், அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் காட்டி நாட்டின் பொருளாதாரத்தையே இராணுவ மயமாக்கியுள்ளனர். போர் அச்சுறுத்தல்கள் மூலம் வடகொரியாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளதால், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளைப் பின்வாங்கச் செய்வதற்காக அணுகுண்டுத் தாக்குதலை நடத்தப் போவதாக எச்சரிக்க வேண்டிய இக்கட்டான நிலைமையில் வடகொரியா உள்ளது.

தனது வணிகத்துக்கும் எரிபொருளுக்கும் சீனாவையே வடகொரியா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே சீனா, வடகொரியாவுக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்க வேண்டும், ஒரு பொறுப்பான உலக சக்தியாக சீனா நடந்து கொள்ள வேண்டும், வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட சீனா ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்திக்கிறது. மறுபுறம், சீனப் பொருளாதாரம் அமெரிக்காவுக்குப் பெருமளவு ஏற்றுமதி செய்வதைச் சார்ந்துள்ளது. அமெரிக்காவின் பொதுக் கடன் பத்திரங்களை 1.6 டிரில்லியன் டாலர் அளவுக்கு சீனா வாங்கி வைத்துள்ளதால், இன்றைய நிலையில் அமெரிக்காவை சீனா பகைத்துக் கொண்டால், சீனாவின் பொருளாதாரம் பெருத்த பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், கொரிய விவகாரத்தை நெளிவுசுழிவாகக் கையாள சீனா முயற்சிக்கிறது. மேலும், போர் மூண்டால் அண்டை நாடான வடகொரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் சீனாவுக்குள் பெருகுவார்கள் என்பதால், சீனா இந்த நெருக்கடியைத் தவிர்க்கவே விரும்புகிறது. வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா வாக்களித்துள்ள போதிலும், வடகொரியாவில் தற்போது நிலவும் அமெரிக்க எதிர்ப்பைக் கொண்ட ஆட்சி கவிழ்ந்தால், அது சீனாவுக்குப் பாதகமாக அமையும் என்பதால், வடகொரியாவை அவ்வளவு எளிதில் கைவிடவும் சீனா தயாரில்லை.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
தென் கொரியாவின் ஜின்ஹே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள “யு எஸ் சான்பிரான்சிஸ்கோ” எனும் அதிநவீன அணுகுண்டு வீசும் திறனுடைய அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்.

ஒரே தேசிய இனத்தவரைக் கொண்ட இரண்டு கொரியாக்களும் ஒரே நாடாக ஐக்கியப்படவும், கொரிய தீபகற்பத்தில் அமைதியும் சமாதானமும் நீடிக்கச் செயவும் இரண்டு கொரிய அரசுகளோடு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003-ஆம் ஆண்டில் ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகள் நடந்தன. வடகொரியா தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதெனவும், இதற்கு ஈடாக பொருளாதாரத் தடைகளை நீக்கி வடகொரியாவுக்கு எரிபொருள் உதவியளிப்பது எனவும் முடிவாகி, அனைத்துலக அணுசக்தி முகமையின் மூலம் வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களைச் சோதனையிட்டு கண்காணிப்பதும் நடந்தது. இருப்பினும், அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் வெளியுறவுச் செயலரான கண்டலீசா ரைஸ் ஆகியோரின் அடாவடிகளால் இப்பேச்சுவார்த்தைகளை வடகொரியா முறித்துக் கொண்டது. அதன் பிறகு அமைதி,சமாதானம் என்ற பசப்பல்களுடன் அதிபர் ஓபாமா ஆட்சிக்கு வந்தபோதிலும், ஆறுநாடுகளின் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, ஏவுகணைத் தாக்குதல், கூட்டுப் போர் பயிற்சிகளை நடத்திக் கொண்டு வடகொரியாவை மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வருகிறார்.

பனிப்போருக்குப் பின்னர் கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் இணைந்ததைப் போல, வட-தென் கொரியாக்கள் இணைய வேண்டுமென்று ஏகாதிபத்தியவாதிகள் பசப்பினாலும், உண்மையில் அது அவர்களின் ஆதிக்க நலன்களுக்கு எதிரானது. இரு நாடுகளும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவினால், அமெரிக்க இராணுவம் இப்பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டியதாகிவிடும். தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக பசிபிக் கடற் பகுதியிலும், குறிப்பாக சீனாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் ஜப்பானின் ஒக்கினவா தீவிலும் நிரந்தரமாகத் தனது படைகளைக் குவித்து வைப்பது அமெரிக்க மேலாதிக்கவாதிகளுக்கு அவசியமாக உள்ளது. மேலும், கொரிய பிரச்சினையை வைத்து தென்கொரியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆயுத வியாபாரம் செய்வதற்கும், ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்வதற்கும் அமெரிக்காவுக்கு கொரிய பிரச்சினை அவசியத் தேவையாக உள்ளது. இவற்றாலேயே இன்னமும் கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பவில்லை. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012-இல் வெளியேறும் என்ற ஒப்பந்தமும் நிறைவேறவில்லை.

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் நாட்டாமை

கிம் ஜாங்-உன்
அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் அச்சுறுத்தலை முறியடிக்க, இராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்-உன்.

உலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடலின் ஊடாக நடப்பதாலும், தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாக இருப்பதாலும், இப்பகுதியானது போர்த்தந்திர முக்கியத்துவம் வாந்த குவிமையமாக உள்ளது. மேலும், தென்சீனக் கடல் பிராந்தியத்தில் ஆளில்லாத் தீவுகளாக 200-க்கும் மேற்பட்ட சிறிய தீவுக் கூட்டங்கள் உள்ளன. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் கடலுணவு வளமும் நிறைந்துள்ளதால் இத்தீவுகளுக்கு உரிமை கோரி வடக்கே சீனா மற்றும் தைவான், கிழக்கே பிலிப்பைன்ஸ், மேற்கே வியட்நாம், மலேசியா மற்றும் புருணை, தென் கிழக்கே இந்தோனேசியா என இவ்வட்டாரத்திலுள்ள நாடுகள் உரிமை கோருகின்றன.

தென் சீனக்கடலில் உள்ள இத்தீவுகள் யாருக்குச் சோந்தம் என்பதை அந்த வட்டார நாடுகள்தான் தங்களுக்குள் பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர, இதில் தலையிட்டு நாட்டாமை செய்வதற்கு அமெரிக்காவுக்கோ அல்லது பிற ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கோ எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால், அவ்வாறு தலையிடுவதற்கான முகாந்திரத்தைத் தேடுவதற்காகவே, தனது நட்பு நாடுகளின் பெயரால் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி வருவதால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது குறி வைத்து, சீனாவின் செல்வாக்கைத் தடுத்து இப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றன.

கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன. எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய உரிமை என்று சீனாவும் தைவானும் ஜப்பானை எதிர்க்கின்றன. பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை வியட்நாமும் தைவானும் உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இன்னும் சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய வல்லரசானது, கடந்த 2010-இல் வோஸ்டாக் எனும் பெயரில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் மிகப் பெரிய போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விசுவாச நாடுகளுக்குத் தனது இராணுவ வல்லமையை வெளிக்காட்டி எச்சரிக்கும் நடவடிக்கையே ஆகும். இதை ஜப்பான் எதிர்த்த போதிலும், அடுத்தடுத்து இது போன்ற போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும், புதிதாக நவீன அணுசக்தி நீர்முழ்கிக் கப்பல்களை இப்பகுதியில் இயக்கப் போவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

தென் கொரியா மக்கள்
“பயங்கரவாத அமெரிக்காவே, கொரியத் தீபகற்பத்திலிருந்து வெளியேறு!” : தென் கொரிய ஆட்சியாளர்களையும் அமெரிக்க வல்லரசையும் எதிர்த்து தென் கொரிய மக்கள் நடத்தும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தென்சீனக்கடல் பகுதியில் பாரம்பரிய உரிமையுள்ள தனது நாட்டின் சில தீவுகளுக்கு வியட்நாம் உரிமை கோருவதால், வியட்நாமுடன் இணைந்து எண்ணெய் துரப்பணப் பணிகளில் இந்தியா ஈடுபடக் கூடாது என்கிறது சீனா. இருப்பினும், கடந்த 2011-ஆம் ஆண்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா வியட்நாமுக்குச் சென்று திரும்பியதோடு, இந்தியாவின் எண்ணெய் எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய் அகழ்வாய்வு மற்றும் துரப்பணப் பணிகளில் வியட்நாமுடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ளார். இவற்றை சீனா தடுக்க முற்பட்டால் பதிலடி கொடுப்போம் என்கிறார், இந்தியக் கடற்படைத் தளபதி. ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கூலிப்படையாக இந்திய இராணுவத்தை அனுப்பியுள்ள இந்திய அரசு, இப்போது அமெரிக்க விசுவாச நாடான வியட்நாமுக்கு ஆதரவாக தனது கடற்படையை அனுப்பி தாக்குதல் தொடுக்கத் துடிக்கிறது.

கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் பதற்றமும் போர்ச்சூழலும் வடக்கே ஜப்பானிலிருந்து தெற்கே ஆஸ்திரேலியா வரையிலான பசிபிக் கடற்பகுதியில் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டா போட்டியின் ஒரு வெளிப்பாடுதான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகள், ரஷ்யா, சீனா, இந்தியா, மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளுடன் சம்பந்தப்பட்டதாக கொரிய விவகாரம் உள்ளதால், இதனை வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சினையாகக் குறுக்கிப் பார்க்க முடியாது.

தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவிலிருந்து அமெரிக்க மேலாதிக்க வல்லரசு வெளியேறாதவரை கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவாது என்பதையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இயற்கை மூலவளங்களைக் கொள்ளையிடுவதிலும் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் ஏகாதிபத்திய வல்லரசுகளிடையே போட்டாபோட்டி நிலவும்வரை போர்களும் பதற்றநிலையும் குறையாது என்பதையும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களின் எடுபிடி ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்து நாட்டு மக்களும் போராட வேண்டிய அவசியத்தையும் படிப்பினையாக உணர்த்திவிட்டு கொரிய தீபகற்பம் தீராத போர்ப் பதற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

– பாலன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

மாணவர்களின் புரட்சிக் கனவைத் தகர்த்த திகார் சிறை !

3

(இந்து நாளிதழில் வெளியான “I found my place in Tihar Jail” என்ற கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)

1983-ம் ஆண்டு. டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் முற்போக்கு அரசியலின் மையமாக திகழ்ந்தது. 1970-களில் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை சட்டத்தை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணனின் தலைமையில் மாணவர்கள் போராடியது, 1977-ல் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது, அஸ்ஸாமில் மாணவர் போராட்டம் போன்றவை மாணவர்கள் மத்தியில் பெரும் மனக் கிளர்ச்சியை உருவாக்கியிருந்தன. மாணவர்களும், பேராசிரியர்களும் ஜனநாயக வழியில், அகிம்சை முறையில், கூட்டு முயற்சி மூலம் உலகை மாற்றி அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்

இந்திரா காந்தி 1980-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டிருந்தாலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர் அமைப்புகள் வலுவாக இருந்தன. டீக்கடை பெஞ்சுகளில் காரல் மார்க்சின் சிந்தனை எப்படி இயங்கியது, இந்திய இடதுசாரிகளில் மார்க்சியத்தை சரியாக புரிந்து கொண்டது யார், கட்டுடைப்பு உண்மையிலேயே கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதுதானா என்று மாணவர்களிடையே பல சூடான விவாதங்கள் நடந்தன. ‘கருத்துக்களும் மக்கள் சக்தியும் அரசியலை மாற்றி அமைத்து விட முடியும். நமது வாழ்க்கையை அரசியல் பாதிக்குமானால், அரசியலை நாம் மாற்றி அமைக்க வேண்டும்’ என்று மாணவர்கள் வீராவேசமாக சபதம் எடுத்துக் கொண்டார்கள்.

சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்தது. பல்கலைக் கழகத்தின் சுவர்களில், “அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்க” போன்ற கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.

டெல்லி மாநகரின் மையத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் விரிந்திருந்த ஆரவல்லி மலைக் காடுகளின் ஒரு பகுதியான பல்கலைக் கழக வளாகத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சில ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தார்கள். காங்கிரசின் மாணவர் அமைப்பும் (NSUI), பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பும் (ABVP) பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. போலி கம்யூனிஸ்டுகளின் SFI, AISF ஆகிய மாணவர்கள் அமைப்புகளின் செல்வாக்கை முறியடித்து 1982-ம் ஆண்டு தேர்தலில் லோகியா சோஷலிஸ்டுகளின் மாணவர் அமைப்பும் ஃப்ரீ திங்கர்ஸ் அமைப்பும் வெற்றி பெற்றிருந்தன.

மாணவர்களின் கருத்துக்களை சோதிக்கும் போராட்டத்துக்கான நாளும் வந்தது. மாணவர் ஒருவரை முறையான விசாரணை இல்லாமல் தங்கும் விடுதியிலிருந்து நீக்கியது பல்கலைக் கழக நிர்வாகம். அதை போர்க் குணத்துடன் எதிர்த்த மாணவர்கள் நிர்வாகம் போட்ட பூட்டை உடைத்து, அந்த மாணவருக்கு அறையை மீட்டுக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, பல்கலைக் கழக துணை வேந்தரும், விடுதிகளின் தலைவரும் முற்றுகை இடப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.

மாணவர் சிறை
படம் நன்றி : தி ஹிந்து

போலீஸ் பல்கலைக் கழகத்துக்குள் அழைக்கப்பட்டது. ‘நியாயத்துக்காகவும், நீதிக்காகவும் போராடினோம்’ என்ற பெருமிதத்துடன் நூற்றுக் கணக்கான மாணவர்கள் வீரத்துடன் கைதானார்கள். மண்டபத்தில் வைத்து விட்டு மாலையில் விடுவிப்பார்கள் என்று நினைத்திருந்ததற்கு மாறாக, கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது கொலை செய்ய முயற்சி, கலவரம் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய்யப்பட்டு அவர்கள் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பல்கலைக் கழக வளாகத்திலிருந்து இந்த லட்சியவாத புரட்சியாளர்களை அகற்றுவதாக முடிவு செய்திருந்தது டெல்லி நிர்வாகம்.

மாணவர்களின் புரட்சிகரக் கனவுகள் கலைக்கப்பட்டு விட்டன. சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சோர்வுடன் இருந்தவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிலைமையை பரிசீலனை செய்து கொண்டார்கள். லட்சியவாதத்தின் மலட்டுத்தனம், தமது வீரத்தின் வரம்பு, அரசு அடக்குமுறையின் வீச்சு இவற்றை உணர்ந்து கொண்டார்கள்.

10 நாட்களுக்குப் பிறகு பிணையில் எடுக்கப்பட்டு வெளியில் வந்து படிப்பை தொடர்ந்தார்கள். ஒரு சில ஆண்டுகள் அலைக்கழித்த பிறகு வழக்குகள் கைவிடப்பட்டன.

போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குப் போய் வெளியில் வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமது நடுத்தர வர்க்க வாழ்க்கையின் பாதுகாப்புக்குள் அடைக்கலம் புகுந்தார்கள். இன்று பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு தூதுவர்களாக, பேராசிரியர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, விஞ்ஞானிகளாக, பத்திரிகை ஆசிரியர்களாக பணி புரிகிறார்கள். எந்த அரசியல் அமைப்பை தூக்கி எறிந்து மக்களை விடுதலை செய்வதாக கனவு கண்டார்களோ அந்த அமைப்புக்கே சேவை செய்கிறார்கள்.

பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம்
பாலியல் வன்முறைக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம்

1960-களில் பிரான்சில் ஏகாதிபத்திய, முதலாளித்துவ அமைப்பு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து தன்னெழுச்சியாக நடந்த மாணவர் போராட்டங்கள் அரசு அடக்கு முறை மூலம் முறியடிக்கப்பட்டன. அந்த போராட்டங்களில் பங்கேற்ற மாணவ போராளிகள் இன்று பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்படுகிறார்கள். ஒரு சிலர் அமைச்சர்களாக கூட இன்று வலம் வருகின்றனர்.

1980-களில் அஸ்ஸாம் மாணவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்கள், அசாம் கன பரிஷத் தேர்தல் அரசியலை ஏற்று ஆட்சிக்கு வந்ததும் பரிதாபமாக சீரழிந்து போயின. அதன் பின்னடைவுகளிலிருந்து அசாம் மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

‘மாணவர்கள் போராட்டத்தில் அரசியல் இருக்கக் கூடாது. எந்த அரசியல் கட்சியும் மாணவர்கள் போராட்டத்தில் தலையிடக் கூடாது. மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடுவார்கள்’ என்ற அறிவுஜீவிகளின் முழக்கங்கள் அனைத்தும் மாணவர் போராட்டத்தை மழுங்கடித்து உண்மையான மாற்றத்தை தவிர்ப்பதற்கானதே ஆகும். மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் உறுதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் அரசியல் படுத்தப்பட்ட மாணவர் போராட்டங்கள் மட்டுமே ஆளும் வர்க்கங்களை வீழ்த்தி சமூகத்தை விடுவிக்கும் மாற்றங்களை சாதிக்க முடியும்.

மேலும் படிக்க

ஆண்டைகள் வீட்டில் அடிமைச் சிறார்கள் !

3
வீட்டு வேலை செய்யும் குழந்தை
வீட்டு வேலை செய்யும் ஒரு குழந்தை

வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்துவந்த 13 வயது பியா என்ற சிறுமியின் மீது ஜம்மு காஷ்மீர் போலீஸார் “தற்கொலை முயற்சி” குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜம்முவில் உள்ள கோல் குஜ்ரால் பகுதியில் வசிக்கும் வக்கீல் ஒருவர் வீட்டில் பியா வேலை பார்த்து வந்தாள். மே 8-ம் தேதி அவர்கள் வீட்டில் குளியல் அறையில் உள்ள தண்ணீர் குழாயில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறாள். மிகவும் ஆபத்தான நிலையில் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

இன்ஸ்பெக்டர் அர்விந்த் சாமியல், “பியா வேலை செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்” என்றும். “குளியலறையில் உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த பியாவை, 5 – 7 நிமிஷங்களுக்குள், கதவை உடைத்து வெளியில் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

வழக்கு தொடர்பான விசாரணை துவக்க நிலையில் உள்ளது என்றும், மருத்துவ பரிசோதனை அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். “இதுவரை பாலியல் ரீதியான தாக்குதல் அல்லது பலாத்காரம் நடைபெற்றதாக குற்றப் பதிவு செய்யவில்லை” என்றும், “மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வந்தவுடன் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றும் கூறியுள்ளார்.

பியாவின் எஜமானரின் தந்தை ஜம்முவில் முன்னணி குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார். இரண்டு முறை ஜம்மு பார் அசோசியேஷன் தலைவராகவும், சிட்டிசன் கூட்டுறவு வங்கி மற்றும் ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு வீட்டு வாரிய கார்போரேஷனின் நிர்வாகத் தலைவராகவும் இருந்து வருகிறார். அந்தஸ்தும், அதிகார வர்க்க ஆளுமையும் கொண்ட பெரிய மனிதரின் வீட்டின் விஷயம்தான் 13 வயது சிறுமியான பியா வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததும், அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக சொல்லப்படுவதும்.

இந்த சம்பவத்தை பற்றி செய்திகள் வெளியிடாமல் ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஜம்முவில் உள்ள குழந்தைத் தொழிலாளிகள் நல ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கின்றார். பியா சிகிச்சை பெற்றுவரும் ஐ.சி.யூ பிரிவுக்கு வெளியில் ஜம்மு காஷ்மீர் போலீசின் தலைமை குற்றவியல் விசாரணை அதிகாரி முகாமிட்டு ஊடகங்களை அனுமதிக்காமல் காத்து வருகின்றார்.

சுயநினைவு கூட இல்லாத அந்த சிறுமியின் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள கடமை தவறாத காவல் துறை, சட்டத்தில் புரளும் அந்த குடும்பத்தினர் ஒரு மைனர் சிறுமியை வீட்டு பணியாளராக அமர்த்தியதற்காகவோ, தற்கொலைக்கு தூண்டியதாகவோ வழக்கு பதிவு செய்யவில்லை.

இந்தியா முழுவதும் பியாவை போல் 1.26 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பணக்கார, நடுத்தர, மற்றும் மேட்டுக்குடியினர் வீட்டில் பணியாளார்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். மணிக் கணக்கில் வேலை, வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பிறகு மிஞ்சும் உணவு, சொற்பமான கூலி என்று இந்த குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர்.

நூற்றுக்கணக்கான இத்தகைய சம்பவங்களில் சில மட்டுமே ஊடகங்களில் வெளி வருகின்றன.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, ஜம்முவில், 12 ஆவது வகுப்பு படித்து வந்த மாணவன், தன்னை வேலைக்கு வைத்திருந்த ஓய்வு பெற்ற தலைமை இன்ஜினியர் வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டு இறந்தான். ஏப்ரல் 24-ம் தேதி அஸ்ஸாமைச் சேர்ந்த சமீர் முண்ட என்ற 15 வயது சிறுவன், ஸ்ரீநகரில் அவன் வேலை செய்து வந்த வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளான்.

2011 அக்டோபர் 2-ம் தேதி டோடா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது நிரம்பிய சுபாஷ் என்ற சிறுவன், வேலை செய்து வந்த வீட்டின் குளியல் அறையில் தண்ணீர் குழாயில் தூக்குபோட்டு கொண்டு இறந்துள்ளான்.

நவம்பர் 2011-ல் பல்கலைக் கழக பேராசிரியர் வீட்டில் வேலை பார்த்து வந்த 10 வயது சிறுவன் அவரால் மிக மோசமாக அடிக்கப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி இருக்கிறான்.

நடுத்தரவர்க்க வணிகர் வீட்டில் வேலைபார்த்துவந்த சஞ்சனா என்ற 14 வயது பெண், எஜமானர்களால் முதுகுத் தண்டு உடைக்கப்பட்டு எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாள்.

வட இந்தியாவில் நிலவும் நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் சுவடுதான் வீட்டில் வேலையாட்களை அடிமைகளாக அதட்டி மிரட்டி வேலை வாங்கும் பழக்கம். வீட்டு வேலை, சமையல், குழந்தை பராமரிப்பு, வயதானவர்கள் பராமரிப்பு என்று சகலத்திற்கும் ஒரு வேலையாள் தேவைப்படுகிறது. அவர்கள வீட்டில் உள்ள குழந்தைகளின் வயதை ஒத்த இவர்களை வேலை வாங்குவதைப் பற்றி அவர்களுக்கு எந்த சலனமும் இருப்பதில்லை; குழந்தை பணியாளாக இருந்தால் அடங்கி இருப்பார்கள், விட்டு விட்டு வேறு இடங்களுக்கு போய் விட மாட்டார்கள் என்ற காரணங்களால் இவர்களை தேர்வு செய்கிறார்கள்.

பீகார், ஜார்கண்ட், தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து குழந்தைகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். விவசாயம் பொய்த்துப்போன கிராமங்களில் குழந்தை தொழிலாளர்களை சேகரிக்கும் வேட்டையில், கிராமத்தில் இயங்கும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நகரங்களில் இயங்கும் பணியாட்கள் வழங்கும் ஏஜென்சிகள் செயல்படுகின்றனர். குழந்தைகளின் பெற்றோர் ஒப்பந்தத் தொழிலாளிகளாக குழந்தைகளை விற்கின்றனர்.

மொழி தெரியாமல், வேலை பற்றி எந்த அறிமுகமும் இல்லாமால், தன் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் உயிருடன் திரும்பி வந்து பார்ப்போமா என்ற கேள்விகளுடன் அவர்களது அடிமை வாழ்வு ஆரம்பிக்கிறது.

திருப்பி தாக்க தெரியாத இந்த பிள்ளைகள் மீது அடி உதைகள் முதல் பாலியல் வன்முறை வரையிலான தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. அவர்கள் வீட்டு குழந்தைகளும் வேலையாட்கள் செய்யும் வேலைகளை கேவலமாக கருதி அவர்கள் மீது மரியாதையின்றி வளர்கிறார்கள், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை ஒடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு வீட்டு செல்லப் பிராணிக்கு கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் கூட கிடைக்காத இந்த குழந்தை பணியாளர்கள், பெற்றவர்கள், உறவினர்கள் என்று எல்லாரையும் விட்டு, மொழி தெரியாத ஊரில், கொடுமையான வேலை நிலைமைகளுடன், நிறைவேறாத ஏக்கங்களுடன் வாழ்கின்றனர். கொடுமைகளை தாங்க முடியாத சூழலில் தான் உயிரையும் போக்கிக் கொள்ளத் துணிகின்றனர் அல்லது எஜமானர்களின் தாக்குதல்களால் கொல்லப்படுகின்றனர்.

பல குழந்தைகள் பெற்றவர்களிடமிருந்து கடத்தப்பட்டு, ஒப்பந்த தொழிலாளிகளாக வீட்டு வேலைகளிலும், விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 11 2012-ம் தேதி அன்று ஜார்கண்டில் கடத்தி செல்லப்பட்ட 10 – 14 வயது நிரம்பிய இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு நாட்களுக்குள் டெல்லியில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட ஜோதி என்ற 10 வயது சிறுமியின் சடலத்தை கூட அவளது சொந்த ஊரான ஜார்கண்டுக்கு கொண்டு போக முடியவில்லை. அந்த சிறுமியின் முகத்தைக் கூட கடைசியாக ஒரு முறை அவளுடைய தாயும், கூடப்பிறந்தவர்களும் பார்க்க முடியாமல் டெல்லியில் அவளது தந்தையே இறுதிச் சடங்கை செய்து முடித்திருக்கிறார்.

ஏட்டளவில் இருக்கும் சட்டங்களால் குழந்தை தொழிலாளிகளின் நிலைமை மாறப்போவது இல்லை என்பதை தான் பியாவின் பரிதாப நிலை நமக்கு புரியவைக்கிறது. இந்திய கிராமங்களில் வாழ்வாதாரம் அழிப்பு, நகர்ப்புற மேட்டுக் குடியினரின் பணத் திமிர் இந்த இரண்டும் இருக்கும் வரை பியாக்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

– ஜென்னி

மேலும் படிக்க

கர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் !

32

டத் தெரியாத அல்லது ஆட்டத்தில் தவறிழைத்த பத்மா சேஷாத்ரிக்கள் தெரு கோணல் என்று காலம் தோறும் கலைப் பிரச்சாரம் செய்து வருவதால்தான் இந்த புண்ணான பூமியில், பார்ப்பனியம் இன்னும் பாடைக்கு போகாமல் பல்லக்கில் உலா வருகிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் அன்றும் இன்றும் – ஏன் – என்றும் விவாதங்களில் கலந்து கொள்ளும் சங்க பரிவார – பாஜக வகையறாக்கள் பொய்யை உண்மையாக பேசும் கதாகலாட்சேபத்தை கேட்டிருக்கிறீர்களா? கருத்து ரீதியாக பேச முடியாமல் போகும் போது ஆதிசங்கரன் கற்றுக்கொடுத்த விதண்டாவாதத்தை அண்டம் நடுங்கும் வகையில் இவர்கள் பேசுவதைப் பார்க்க வேண்டுமே! பெங்களூர் ரமணி, உஷா உத்தூப் தோற்றார்கள் போங்கள், அவ்வளவு சவுண்டு வேறு! மற்ற பொதுக்கூட்டங்களில் ஐந்தாறு ஆம்பிளிஃபயர் வைக்கும் மைக் செட்டுக்காரர்கள் இவர்களது கூட்டங்களில் பேச்சாளரே ஆம்பிளிஃபயராக இருப்பதால் அதை வைப்பதில்லை.

கர்நாடகாவில் பாஜக மண்ணைக் கவ்வியதை காங்கிரசு விண்ணதிர கொண்டாடுவதையும், ஊடகங்கள் கேலி செய்வதையும் பொறுக்காத சங்க பரிவார அம்பிகளும், மாமிகளும் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பயங்கரமான புள்ளி விவரங்களை ஏவிவிட்டு முகத்தில் மண் ஒட்டவில்லை என்று ‘அழகு’ காட்டுகிறார்கள். புள்ளிவிவரப் புழுதியை கிளப்பி விட்டு தப்பி ஓட நினைக்கும் இந்த வானரங்களின் வண்டவாளத்தைப் பார்ப்போம்.

பா.ஜ.கவின் தோல்வியை வைத்து காங்கிரசின் வெற்றி அமுல்பேபி ராகுல் காந்தியால் விளைந்த ஒன்று என்று கதர் வேட்டிகள் சொல்வது உண்மையில்லை எனும் அதே நேரத்தில் காவி வேட்டிகள் இது தோல்வியே இல்லை கொஞ்சூண்டு வாக்குகள் மட்டும் குறைந்திருக்கிறது என்று கிசுகிசுப்பதும் ஒரு மோசடியே!

2008-ம் ஆண்டில் பாஜக பெற்ற வாக்குகள் 88,57,340. மொத்த வாக்காளர்களில் இது 33.86 சதவீதம். 2013-தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் வாக்குகள் 62,73,768. சதவீதத்தில் 19.95. ஆக கடந்த தேர்தலில் இருந்து சுமார் 14 சதவீத வாக்குகளை குறைவாக பெற்றிருக்கிறது பா.ஜ.க. இதைத்தான் கடுந்தோல்வி என ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் பா.ஜ.க மட்டும் கடந்த தேர்தலில் இருந்து வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டும் குறைந்திருப்பதாக கரடியாக கத்துகிறது. அதற்கு ஒரு கணக்கையும் சொல்கிறார்கள்.

தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவ அரசின் முதலமைச்சராக இருந்த ஸ்வயம்சேவகரும், ஒழுக்க சீலரும், லஞ்ச லாவண்யங்களை எட்டிப் பார்க்காதவருமான எடியூரப்பா பாஜகவில் இருந்து நீங்கி, தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டார். அவரது கட்சி பெற்ற வாக்கு விகிதம் 9.85 சதவீதம். இத்தோடு கனிம வளங்களை மலை மலையாக ஆட்டையப் போட்ட சுஷ்மா ஸ்வராஜின் செல்லத் தம்பிகளும் கேடிகளுமான ரெட்டி பிரதர்சின் பி எஸ் ஆர் சி பி கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டு 2.71 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறது.

அந்தக் காலத்து வைமானிகா சாஸ்திரத்திலேயே அல்ஜிப்ராவையும், அண்டார்டிகாவையும் கண்டு பிடித்த அறிவாளிகளின் வாரிசுகளல்லவா இவர்கள். அதன்படி ரெட்டி மற்றும் எடியூரப்பாவின் வாக்கு விகிதங்களைக் கூட்டி இந்த ஆண்டு தேர்தலில் பாஜகவின் மொத்த வாக்கு சதவீதம் 32.51 என்று கூறுகிறார்கள். அதன்படி 2008 தேர்தலை விட சுமார் இரண்டு சதவீதம்தம்தான் இந்த தேர்தலில் குறைவு, எனவே மக்கள் பாஜகவை புறக்கணிக்கவில்லை என்று முடிவற்ற டெசிபலில் ஊடகங்களில் கத்துகிறார்கள்.

கர்நாடகா வாக்கு வீதம்
நன்றி : niticentral.com

புள்ளிவிவரங்களே உண்மைகளை கூறிவிடாது. புள்ளிகள் சேர்ந்து எழுப்பும் கோலங்களிலிருந்தே நாம் முழுமையான சித்திரத்தைப் பெற முடியும். ஆனாலும் இங்கே இந்த புள்ளிவிபரங்கள் சேர்ந்து பாஜகவிற்கு அபஸ்வரத்தையே கிளப்புகின்றன.

சென்ற 2008 தேர்தலில் பாஜக பெற்ற 33.86 சதவீத வாக்குகளை விட அதிகமாக காங்கிரசுக் கட்சி 34.76 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போதெல்லாம் இந்த வாக்கு மேட்டரை யாராவது சொன்னால் அதை பாஜக ஏற்றதா என்றால் இல்லை.

தற்போதும் இவர்கள் இப்படி எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்சின் வாக்குகளை அவர்களிடம் அனுமதி வாங்காமல் சேர்த்துச் சொல்வது இருக்கட்டும். இந்த தேர்தல் தோல்வி குறித்து அத்வானி முதல் பொன் இராதாகிருஷணன் வரைக்கும் என்ன சொல்கிறார்கள்? ஊழல் செய்த எடியூரப்பா மற்றும் ரெட்டி காருக்களை நீக்கியதால்தான் இந்த தோல்வி என்றும் கொள்கையில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் இந்த தோல்வி கவுரவமான தோல்வி என்று கௌரவம் சிவாஜி போல ‘கிளிக்கு இறக்கை முளைத்து ஆத்தை விட்டே போயிடுத்து’ என்று சோகப்பாட்டு பாடுகிறார்கள்.

yeddyurappa

இங்கேதான் இவர்களது ஃபிராடுத்தனம் வருகிறது. ஊழல் நடவடிக்கைக்காக வெளியேற்றப்பட்ட எடியூரப்பா தனிக்கட்சி ஆரம்பித்து வாங்கிய வாக்குகள் யாருக்கு விழுந்த வாக்குகள்? அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளை ஏற்றோ ஏற்காமலோ எடியூரப்பா முகத்திற்காக மட்டும் மக்கள் போட்ட வாக்குகள். அதற்கு எடியூரப்பா மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டிய நிலைமையில் பாஜகவின் மொத்த விகிதத்தில் அதை சேர்ப்பது மோசடி இல்லையா?

அதாவது ஊழல் நபர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த நபர்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தை மட்டும் தனது மொத்தத்தில் கூட்டிக்கொண்டால் இது திருட்டு மட்டுமல்ல, பாஜகவும் ஊழலை ஆராதிக்கிறது என்றுதானே பொருள்? சூத்திரனைத் தொடமாட்டேன், ஆனால் அவனது கைகளிலிருந்து வரும் காந்தி நோட்டை மட்டும் தொடுவேன் என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் மோசடிக்கு இணையானது இது.

அடுத்து இது பாஜகவிற்கு விழுந்த வாக்கு என்று சொல்லும் பட்சத்தில் இது ஏன் உண்மையில் பாஜகவிற்கு விழாமல் எடியூரப்பாவிற்கு விழுந்தது என்று விளக்க வேண்டும்? இல்லை இது எடியூரப்பாவிற்கு விழுந்த ஓட்டு என்றால் அதை தனது சொந்தக் கணக்கில் சேர்க்காமல் இருக்க வேண்டும்.

மேலும் எடியூரப்பா ஊழல் செய்ததையும் அங்கீகரித்துக் கொண்டுதான் ஒன்பது சதவீத மக்கள் அவருக்கு வாக்குகள் அளித்திருக்கிறார்கள். அதை அபேஸ் செய்தால் பாஜகவும் ஊழல் தண்ணியில் விளைந்த தாமரைதான் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாஜகவில் கட்சி, கொள்கைக்காக யாரும் வாக்களிப்பதில்லை என்பதையும் இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. எடியூரப்பா என்ற தனிநபரே ஒன்பது சதவீத வாக்குகளை வாங்கியிருக்கிறார் என்றால் சென்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கும் இவரது தனிப்பட்ட செல்வாக்கே காரணம் என்று பொருள்.

அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவா அரசு என்பது எடியூரப்பா போட்ட பிச்சை என்று அவரது அடிப்பொடிகள் பேசினால் யாரால் மறுக்க முடியும்?

மேலும் வேறுபட்ட கட்சி, வித்தியாசமான கட்சி, என்று வெட்கம் கெட்ட முறையில் பாஜக இனி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லா ஓட்டுப்பொறுக்கி கட்சிகளைப் போல இங்கும் தனிநபர் வழிபாட்டில்தான் கட்சி ஓடுகிறது. சான்றாக நரவேட்டை மோடியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் குஜராத்தில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க டெபாசிட் வாங்காது என்பதை சரக்கே இல்லாமல் சவுண்டு விடுவதில் ஆய்வாளரான அரவிந்தன் நீலகண்டன் கூட மறுக்க முடியாது. அதனால்தான் எடியூரப்பா வைத்த முள்ளை முழுங்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறது பா.ஜ.க

ஆக “நாங்கள் ஊழலை ஆதரிக்கவில்லை” என்றால் எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்சின் வாக்கு விகிதத்தை ஏற்கக் கூடாது. ஆனால் மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை என்று நைசாக அந்த இருவரது வாக்கு விகிதத்தை சேர்த்தால் “நாங்கள் ஊழலை ஆதரிக்கிறோம்” என்று ஒத்துக் கொள்ள வேண்டும். பச்சரிச் சோற்றில் பருப்பு நெய்யுடன் உப்புப் போட்டு சாப்பிடும் ஸ்வயம் சேவக குஞ்சுகள் யாராவது பதில் தருவார்களா?

பசுமை வீடுகள்: ‘அம்மாவின்’ கருணையா, அதிமுகவின் கொள்ளையா ?

6
பசுமை வீடு
பசுமை வீடு : நன்றி தினமலர்
பசுமை வீடு
பசுமை வீடு : நன்றி தினமலர்

சுமை வீடு எனும் திட்டத்தை, கிராமப்புற மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த கொண்டு வந்ததாக சொல்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

2011-ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா பசுமை வீடு திட்டத்தை அறிவிக்கும் போது, ‘‘கிராம ஊராட்சிகளும், ஊராட்சி ஒன்றியங்களும் இந்திய மக்களாட்சியின் அடித்தளமாக அமைந்துள்ளன. கிராம ஊராட்சிகளையும், ஊராட்சி ஒன்றியங்களையும் நாம் வலுப்படுத்தவில்லை எனில், நமது மக்களாட்சி அமைப்பு வலுவானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்க முடியாது என்று எனது தலைமையிலான அரசு ஊரக பகுதி வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது இந்த பசுமை வீடு திட்டம்” என்று கூறினார்.

ஒவ்வொரு பயனாளிக்கும் பசுமை வீடு கட்டுவதற்காக ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில் ரூ 1.50 லட்சம் பணமாகவும், ரூ 30,000 சூரிய ஒளி மின்சாரம் அமைக்க தகடுகளாகவும் கொடுக்கப்பட்டது. கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் இந்த தொகை ரூ 2.10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஏழைகளிலும் ஏழையை தேர்வு செய்ய வேண்டும்; கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; எச்.ஐ.வி எய்ட்ஸ் / காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் (துணை இயக்குநரிடம் சான்று பெற வேண்டும்), தீ, வெள்ளம் போன்ற சீற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்கு தகுதிகளாக, ஊராட்சி பகுதியில் குடியிருக்க வேண்டும்; வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்; 300 சதுர அடிக்கு குறையாமல் இடம் இருக்க வேண்டும்; குடும்பத் தலைவர் பெயரில் (அ) குடும்ப உறுப்பினர் பெயரில் தெளிவான பட்டா இருக்க வேண்டும்; வேறு எங்கும் கான்கிரீட் வீடு இருக்க கூடாது; வேறு வீடு கட்டும் அரசு திட்டத்தில் பயனடைந்திருக்கக் கூடாது; என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்; அந்த தீர்மானத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; பயனாளிகள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுக்க வேண்டும்; திட்டத்தின் கீழ் பலன் பெறுவது உறுதி செய்யப்பட்ட பின் பயனாளியே வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும்; வீடு கட்டப்படுவதன் வளர்ச்சி ஆய்வு செய்யப்பட்டு நான்கு தவணையாக பணம் வழங்கப்படும். இதுதான் திட்டத்தின் செயல்பாடு.

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

எங்கள் ஊரில் பயனாளர்களின் பட்டியலில் தனது பெயரை சேர்ப்பதற்கு பஞ்சாயத்து தலைவருக்கு அல்லது பஞ்சாயத்து உறுப்பினருக்கு ரூ 75,000 வரை கொடுக்க வேண்டும். ஊருக்கு ஊர் இந்த தொகை வேறுபடுமென்பதால் ஐந்தாயிரம், பத்தாயிரம் கூட குறைய இருக்கலாம். அரசு அறிவித்துள்ள ஏழைகள், ஆதரவற்றோர், பாதிக்கப்பட்டவர்கள் போன்ற வழிகாட்டல்களுக்கெல்லாம் இங்கு இடமே இல்லை. காசுதான் எல்லாம்.

பயனாளிகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள் அடிப்படையிலும் பசுமை வீடு திட்டம் செயல்படுவது இல்லை. ஏற்கனவே வீடு வைத்துள்ளவர்கள் மறுபடியும் இந்தத் திட்டத்தில் வீடு கட்டுகிறார்கள். முறையான பட்டா இல்லாதவர்கள் ஊராட்சித் தலைவரை உரிய முறையில் கவனித்து பயனடைகிறார்கள்

எப்படியோ முட்டி மோதி, காசு கொடுத்து விவசாயக் கூலிவேலை செய்யும் ஏழை திட்டத்தில் ஒருவர் தனது பெயரை சேர்த்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மேல் வீட்டுக்கு மின்சார ஒயரிங், தண்ணீர் குழாய் அமைப்பு இவற்றுக்கு பொருள் வாங்கிக் கொடுக்க வேண்டும். நிலைவாசல், கதவு, ஜன்னல், அலமாரி, ஸ்லாம் இவற்றிற்கு கம்பி, மரம் வாங்கிக் கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகு குடும்ப உறுப்பினர்கள் கட்டிடம் கட்டுவதற்கு சித்தாள் வேலை செய்ய வேண்டும்.

பட்டியலில் சேர்ப்பதற்கான ‘கட்டணத்தை’ ஊர் பஞ்சாயத்து தலைவர் முதலிலேயே மொத்தமாக வாங்கி கொள்கிறார். தவணையில் வாங்குவதாக இருந்தால் பணம் கொடுக்க முடியாத நிலை வந்தால் வீடு பாதியிலேயே நின்றுவிடும். முழு பயனையும் அடைய முடியாது இல்லையா?

இதற்கு மேல், வீடு கட்டுவதில் பயன்படுத்தப்படும் பொக்லைன், டிராக்டர், மண் அள்ளும் இயந்திரம், எல்லாம் பஞ்சாயத்து தலைவரே வைத்துள்ளார். இத்தகைய திட்டங்களுக்கு வாடகைக்கு விடுவதற்காக சொந்தமாக வாங்கியிருக்கிறார். பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வெளியில் யாரிடமிருந்தும் இவற்றை வாடகைக்கு எடுக்க முடியாது. பசுமை வீடு கட்ட அரசு கொடுக்கும் பணத்திலிருந்து உத்தரவாதமான தனது வியாபாரத்தை நடத்திக் கொள்கிறார்.

இந்த பஞ்சாயத்து தலைவர் ஆளும் கட்சியை சேர்ந்தவர். பசுமை வீடு திட்டத்தை அருகில் இருந்து செயல்படுத்துவதாக வீடு கட்டி முடியும் வரை ‘பயனாளிகளை’ விட்டு விலகுவதில்லை.

பக்கத்து ஊரில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் ஊராட்சித் தலைவர். அவர் கொஞ்சம் அடக்கமாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கமிஷன் தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு விலகி விடுகிறார். வீடு கட்டுபவர்களை சுரண்டுவதற்கு மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த அளவில் எதிர்க்கட்சி ஆளும் கிராமத்தில் ‘ஜனநாயகம்’ கொஞ்சம் அதிகம்தான்.

26.4.2013 அன்று தினமலரில் வந்த செய்தியில், “இடைப்பாடியில் தமிழக அரசு வழங்கும் பசுமை வீடுகள், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கொங்கணாபுரம் ஒன்றியத்தில், பசுமை வீடுகளுக்காக ஓராண்டுக்கு முன்பே பணம் கொடுத்து, அப்பாவி மக்கள் ஏமாந்து வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. அதை படித்த பிறகுதான் நம்ம ஊர் மட்டுமில்லை, தமிழ்நாடு முழுவதும் இதே நடைமுறைதான் என்று புரிந்து கொண்டேன்.

கிராமங்களையும், ஏழை மக்களையும், வளமை பெற செய்வதாக சொல்லும் இந்தத் திட்டம் உண்மையில் ஏழை மக்களை மேலும் வறுமையிலும், கஷ்டத்திலும் தள்ளுகிறது. ஆரம்பத்தில் கப்பம் கட்டுவதற்கும், கட்டிட பொருட்கள் வாங்கி கொடுப்பதற்கும் உள்ளூர் பணக்காரர்களிடம் வட்டிக்கு வாங்கி அந்த கடனை அடைக்க அவர்களிடமே அடிமைகளாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தினக் கூலியான ஒருவர் ஒரு லட்ச ரூபாய் கடனை 5 பைசா வட்டி போட்டு எப்போது அடைக்க முடியும்?

ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு அரசு வீடு கட்டி கொடுக்கும் என்று ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி ஏழையை கடனாளியாக்குகிறது அரசு. முன்பு மண் குடிசையானாலும் உழைத்த களைப்பில் ஆனந்தமாக தூங்கினார்கள் மக்கள். இப்பொழுது கடனாளியாக தூக்கமில்லாமல் துன்பப்படுகிறார்கள். பணம் இல்லாதவர்களுக்கு வட்டிக்கு கொடுப்பது, கட்டிடம் கட்டுவதில் காண்டிராக்ட் எடுத்து சம்பாதிப்பது, தமக்கு வேண்டியவர்களின் பெயரை பட்டியலில் சேர்த்து ஆதாயம் பெறுவது என்று அந்தந்த ஊர் ஆளும் வர்க்க பணக்காரர்கள்தான் இந்தத் திட்டத்தை அறுவடை செய்து கொள்கின்றனர்.

உழைக்கும் நிலையில் உள்ளவர்களே பணம் புரட்டுவது கஷ்டமாக இருக்கும் போது. மாற்றுத் திறனாளி, விதவை, காசநோய், எய்ட்ஸ் நோயாளி இவர்கள் நிலையை நினைத்துப் பாருங்கள், எப்படி முடியும்?

முதலமைச்சர் சட்டசபையில் திட்டத்தை அறிவித்து விட்டார். அரசு பணம் ஒதுக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டப்பட்ட வீடுகளின் கணக்கு எப்படியோ காட்டப்படுகிறது. யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்களுக்கு போய் சேர்கிறது, பயனாளி என்ற தகுதி. பலன்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், உள்ளூர் ஆளும் வர்க்க பணக்காரர்களுக்குமே போய் சேர்கிறது.

கல்லா கட்டுவது ஊர் பஞ்சாயத்து தலைவர்கள், கடனாளி ஆவது ஏழை மக்கள். மக்கள் பணத்தை கட்சிக்காரர்கள் அள்ளுவதற்காக திட்டம் தீட்டிய அம்மா ‘கருணைத் தலைவி’!

– வேணி

கம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம் !

5

ந்திய ராணுவம் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் கவலைப்படுகின்றன. சுமார் 11 லட்சம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய ராணுவத்தில் வேலைக்குச் சேர இளைஞர்கள் தயங்குவதாகச் சொல்கிறார்கள். இராணுவத்தில் சுமார் 10,500 அதிகாரிகள் மட்ட பணியிடங்களும், 32,500 கீழ்மட்ட வீரர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25,000 வீரர்கள் விருப்ப ஓய்வு பெற்று விலகி விட்டனர். இளைஞர்களிடையே இராணுவப் பணி மதிப்பிழந்து போயிருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ விளம்பரம்
இராணுவத்திற்கு ஆளெடுக்கும் விளம்பரம்

சரிந்து போயிருக்கும் இராணுவத்தின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக ஐந்து அம்ச திட்டம் ஒன்றை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே அந்தோனி 2009ம் ஆண்டு முன்வைத்துள்ளார். ‘பணிக்கால மற்றும் ஓய்வுகால சலுகைகளைக் கூட்டுவது, புதிய இராணுவ பயிற்சி நிலையங்களைத் துவக்குவது, இராணுவம் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுப்பது‘ உள்ளிட்ட இந்த திட்டங்கள் இன்று வரை நடைமுறைக்கே வரவில்லை என்று ப்ரன்ட்லைன் பத்திரிகை தெரிவிக்கிறது. ‘படை வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டும்‘ என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆள் பற்றாக்குறை தவிர தற்போது இராணுவ அதிகாரிகள் மற்றும் படையணியினரிடையே தற்கொலைகளும் கலகங்களும் அதிகரித்து வருகின்றன. காஷ்மீரில் மட்டும் 2009-2011 க்கு இடையில் 2000 சிப்பாய்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறுகிறது காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு. இராணுவம் தற்கொலை குறித்த விவரங்களை எப்போதுமே வெளியிடுவதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் 20,000 பேர் காஷ்மீரில் மட்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பர் என்பது காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் பஷீர் அகமது தப்லாவின் மதிப்பீடு. வட கிழக்கு இந்தியாவுக்கும் மற்ற பகுதிகளுக்குமான தற்கொலைக் கணக்கு தனி.

மேலும் பல்வேறு முகாம்களில் இராணுவ அதிகாரிகள் வழங்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிய மறுத்து படைச் சிப்பாய்கள் கலகம் புரிந்து வரும் செய்திகளும் அதிகரித்துள்ளன. ஜம்முவில் நிலை கொண்டிருக்கும் 16ம் படைப்பிரிவில் கடந்த ஆண்டு தோன்றிய கலகத்தைக் குறிப்பிடலாம்.

1772-ம் ஆண்டு அங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியால் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் படையணியில் பல்வேறு உயரதிகாரிகள் பணிபுரிந்துள்ளனர். போர்காலங்களில் எண்ணற்ற தியாகங்களையும் வீரதீரங்களையும் வெளிப்படுத்தி பெருமைக்குரிய அணியாக கருதப்படும் இந்தப் பிரிவின் வீரர்களிடையே கலகம் மூண்டது இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மத்தியிலும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் முரண்பாடுகளுக்கும் கூட ஆள்பற்றாக்குறையே காரணம் என்று ஊடகங்கள் எழுதுகின்றன. விரையில் இந்தப் பணியிடங்களை நிரப்பா விட்டால் மீள முடியாத பெரும் சிக்கலில் இந்திய இராணுவம் சிக்கிக் கொள்ளும் என்று இவர்கள் கவலைப்படுகிறார்கள்.

படையினருக்குக் கூடுதலாக சில சலுகைகளை அளிப்பது, சம்பளத்தை உயர்த்துவது, இராணுவம் பற்றிய விளம்பரம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமே இந்தச் சிக்கலைத் தீர்த்து விட முடியும் என்று அரசு நம்புகிறது. ஆனால் எதார்த்தம் அத்தனை எளிமையாக இல்லை.

இராணுவத்தில் கீழ்மட்டப் படைவீரர்களாகச் சேரும் பெரும்பான்மையினர் சிறுநகரங்கள் அல்லது கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள். நிலத்தோடும் விவசாயத்தோடும் பிணைக்கப்பட்டவர்கள். கிராமப் பொருளாதாரக் கட்டமைப்பைச் சார்ந்து வாழ்பவர்கள். தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்து ஆளும் வர்க்கத்தால் அமுலாக்கப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால் திட்டமிட்ட ரீதியில் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் விவசாயத்தின் அழிவும் கிராமப் பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்து போயிருப்பதும் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

முதலாவதாக விவசாயம், நெசவு மற்றும் விவசாயம் சார்ந்த பிற தொழில்களைப் பிரதான பொருளாதார உற்பத்தியாகக் கொண்டிருக்கும் மாநிலங்களில், கிராமப்புற மக்கள் மத்தியில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படுவது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்தக் காரணத்துடன் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சாதிவாரியான அகமண முறையின் விளைவான பூஞ்சையான இந்திய உடலமைப்பும் சேர்ந்து கொள்கிறது. விளைவு – சமீபத்தில் நடந்த இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் வேலைக்காக விண்ணப்பித்திருந்த 40,000 பேரில் நாற்பதுக்கும் குறைவானவர்களே தேர்வாகியிருக்கிறார்கள். இராணுவ வேலைக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச உடல் திறனைக் கூட இவர்களால் வெளிப்படுத்த இயலவில்லை.

இராணுவ வீரர்
ரியல் ஹீரோக்கள் சாகசம் செய்கிறார்களோ இல்லையோ, தற்கொலை செய்கிறார்கள்.

இரண்டாவதாக, படையில் கீழ்மட்ட சிப்பாய்களாகச் சேர்பவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் 35லிருந்து 40 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றுச் செல்கிறார்கள். தேசபக்தி கொழுந்து விட்டு எரிவதாலோ லட்சிய ஆவேசத்தாலோ இவர்கள் இராணுவத்தில் சேர்வதில்லை – நடுத்தர வயது வரை ஒரு அரசாங்க வேலை, வயதான பின் ஓய்வூதியம் என்பதே படைவீரர்களாகச் சேர்பவர்களின் அதிகபட்ச லட்சியம். பட்டாளத்தில் சேர்ந்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் பிறகு கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதே அநேகமாக பலரது திட்டமாக உள்ளது.

ஏற்கனவே விவசாயம் அழிக்கப்பட்டு, விளைநிலங்கள் நகரங்களால் விழுங்கப்பட்டு வருகின்றன. ஆக, வாழ்வின் மத்தியப் பகுதியில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வரும் போது சொற்ப ஓய்வூதியத்தையும் செத்துப் போன விவசாயத்தையும் வைத்துக் கொண்டு பிழைக்க முடியாது என்கிற எதார்த்தமே இவர்களை இராணுவ வேலையிலிருந்து விலக்கி வைக்கிறது. இராணுவப் படைவீரர்கள் மத்தியில் எடுக்கப் பட்ட ஆய்வு ஒன்றின் படி, பெரும்பான்மையான தற்கொலைகள் விடுப்புக்காக தமது கிராமங்களுக்குச் சென்று திரும்பிய சில நாட்களிலேயே நடப்பதாகத் தெரியவந்துள்ளது.

இராணுவத்தில் அதிகாரிகள் மட்டத்திலான வேலைகளுக்கு பெரும்பாலும் படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களே முன்வருகிறார்கள். ஏற்கனவே இராணுவத்தில் அதிகாரிகளாக இருப்பவர்களின் வாரிசுகளோ அரசின் காசில் தின்று விட்டு அமெரிக்க வேலைகளைத் துரத்திச் சென்றுவிடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இராணுவம் சார்ந்த வேலைகளுக்கு அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு முதலாளித்துவ ஊடகங்களும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் சொல்வதைப் போல் சம்பளம் ஒரு பிரதான காரணம் இல்லை.

ஏனெனில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ 3 லட்சம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும் இந்திய ராணுவம் உலகிலேயே ஏழாவது பணக்கார ராணுவம் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் அந்நிய நாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஊழலுக்கும் செலவானது போக, கணிசமான தொகை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் சம்பளத்துக்காகவும் பிற சலுகைகளுக்காகவும் செலவிடப்படுகிறது. சம்பளம் தவிர்த்து ஒரு இராணுவ அதிகாரிக்குக் கிடைக்கும் சலுகை எண்ணிலடங்காதவை. பயிற்சிக்காலத்திலேயே 21,000 ரூபாய் வரை சம்பளமாகப் பெரும் ஒரு அதிகாரி அவரது தகுதிக்கேற்ப சுமார் ரூ 39,000 வரை துவக்கச் சம்பளமாகப் பெறுகிறார்.

மாதச் சம்பளம் தவிர்த்து பல்வேறு படிகள், சலுகைகள், குறைந்த வட்டிக் கடன், இலவச பயணச் சீட்டுகள், மலிவு விலையில் பொருட்கள் வாங்குவதற்கான கேண்டீன், குடியிருப்பு வசதிகள், உயர் கல்வி பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய விடுப்பு என்று ஏராளமான சலுகைகளை இராணுவ அதிகாரிகள் அனுபவித்து வருகின்றனர். இத்தனை சலுகைகளையும் வருமான வாய்ப்புகளையும் தாண்டி இராணுவத்தில் அதிகாரிகளாகச் சேர நடுத்தர வர்க்க இளைஞர்கள் முன்வருவதில்லை.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வெளியே இராணுவ சம்பளத்துக்கு இணையாகவோ அதைவிட அதிகமாகவோ சம்பளம் கிடைக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் ஏற்பட்டிருக்கும் ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த சேவைத்துறை ஒரு சிறிய பிரிவினருக்கு வளமான வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளது. நகர்ப்புற நடுத்தரவர்க்கம் மட்டுமின்றி கிராமப்புறங்களைச் சேர்ந்த நடுத்தர விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இது கவர்ந்திழுக்கிறது. இராணுவத்தோடு ஒப்பிடும் போது இந்த விதமான வேலைகளே, தற்போதைய நவீன கலாச்சாரத்துக்கும் அதைச் சார்ந்த தீவிர நுகர்வியத்துக்கும் ஏதுவானதாக இருக்கிறது.

நினைத்த நேரத்தில் நினைத்தபடி அனுபவிப்பது, வார இறுதியில் குடித்துக் கும்மாளமிடும் பப் கலாச்சாரம்,  விதவிதமான பைக்குகள், செல்போன்கள், உடைகள், என்று நீளும் இந்த ‘வண்ணமயமான’ வாழ்க்கையை இராணுவ  முகாம்களில் கற்பனை செய்து பார்க்க முடியாது. நாளையைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாமல், எந்த இலட்சியத்துக்காகவும் கேளிக்கைகளைத் தியாகம் செய்யாமல், இளமையைக் கொண்டாடவேண்டும் என்கிறது பரவி வரும் மறுகாலனியாக்க நுகர்விய கலாச்சாரம்.  தொடர்ச்சியான முனைப்பையும், உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் கோரும் எந்த வேலையும் இந்தப் பிரிவினரிடையே செல்வாக்கிழந்துள்ளது. இதற்கு இராணுவம் மட்டும் விதிவிலக்காகி விட முடியாது.

காஷ்மீர் தாய்
காணமல் போனவர்களின் படத் தொகுப்பில் தன் மகனை முத்தமிடும் காஷ்மீர் தாய்.

மேலும் இந்திய இராணுவம் எதிரி நாட்டோடு நேரடியான யுத்தத்தில் பங்கேற்று பல ஆண்டுகளாகி விட்ட நிலையில், தேசத்தின் நிகழ்ச்சி நிரலில் எல்லையில்லா தேசபக்தி கரைபுரண்டு ஓடச் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவ்வப்போது எல்லையில் நிகழ்ந்து வரும் சில்லறைச் சண்டைகளும் அமெரிக்காவின் மனம் கோணாத வகையில் சில ‘ஷெல்’ வீச்சுக்களோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, இன்றைய நிலையில் இராணுவம் அதன் முழு பலத்தோடு உள்நாட்டு மக்களின் மேல் தான் திருப்பி விடப்பட்டுள்ளது. காஷ்மீர், வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் துணை இராணுவப் படைகளை மக்கள் வெறுப்பதால், மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பது, மக்களால் வெறுக்கப்படுவது, அதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப் படுவது ஆகிய அனைத்தும் சேர்ந்து சிப்பாய்களை தற்கொலை எனும் மனநிலைக்கு தள்ளுகின்றன.

அதிகாரிகள் பற்றாக்குறை தான் படைவீரர்களின் தற்கொலைகளுக்குக் காரணம் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்றன. ஆனால் மக்களுக்கோ ஜனநாயகப் பூர்வமான வேறு எந்த நிறுவனங்களோ பதிலளிக்கத் தேவையற்ற ஒரு வெட்டிப் புனிதம் இராணுவத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ளதன் விளைவாக அதன் உள்ளடுக்குகளில் உயரதிகாரிகள் மட்டத்தில் எதேச்சாதிகாரப் போக்கு தோன்றியுள்ளது. இதோடு சேர்த்து, முடிவற்ற தாழ்நிலைப் போர்களில் சொந்த நாட்டு மக்களின் மேல் பாய்ந்து குதறும் கூலி கும்பலாகச் செயல் படுவதன் உளவியல் அழுத்தங்களும் பணி ஓய்வுக்குப் பின் சொந்த கிராமத்தில் காத்திருக்கும் மரித்துப் போன பொருளாதார வாய்ப்புகள் ஏற்படுத்தும் விரக்தியுமே படையினரிடையே தற்கொலைகளாகவும் உத்தரவுகளுக்குக் கட்டுபட மறுக்கும் கலகங்களாகவும் வெளிப்பட்டுக் கொண்டுள்ளன.

தரகு அதிகார வர்க்கத்தினரின் அடியாள் படையான இராணுவம் பற்றி ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ச்சியாகச் செய்து வரும் பிரச்சாரங்களும், அர்ஜூன் விஜயகாந்த் படங்களும், தேசியப் பெருமிதத்தை உருவாக்குவதற்கு செய்யப்படும் செயற்கையான முனைப்புகளும் எதையும் ஏற்படுத்தாது என்பதைத் தான் இந்த நெருக்கடிகள் உணர்த்துகின்றன.

வடகோடி காஷ்மீரிலிருந்து தென்கோடி கூடங்குளம் வரை அன்றாடம் நிகழும் போராட்டங்கள் அறிவிக்கும் செய்தி இது தான் –  தேசத்தின் பெரும்பான்மையான மக்களான ஏதுமற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேசமே வர்க்க ரீதியில் பிளவுண்டு வருகிறது. இதில் ஆளும் கும்பலின் அடியாள் படையாக தலையிடும் இராணுவம் சொந்தமுறையில் மதிப்பிழந்து போகிறது. இன்னொரு புறம், ஒரு வேலை என்கிற அளவிலும் இராணுவத்தை மக்கள் அண்டி விடாதவாறு அரசின் பொருளாதாரக் கொள்கைகளே நேரடியாக அடித்தட்டு வர்க்கத்து மக்களையும், மறுகாலனியாக்க கலாச்சாரம் என்கிற வகையில் நடுத்தர வர்க்கத்தினரையும் அந்நியப்படுத்தி நிறுத்துகின்றன.

தேசம், இறையாண்மை போன்ற சொற்களையே மறுகாலனியாக்க கொள்கைகள் பொருளிழக்கும்படி செய்து கொண்டிருக்க, பன்னாட்டு மூலதனத்தின் கூலிப்படையாகவே நாடுகளின் இராணுவங்கள் மாறிக் கொண்டு வருகின்றன. ஆளும் வர்க்கத்தின் புனிதக் குண்டாந்தடியான இராணுவத்திடமிருந்து, அதன் சொல்லிக் கொள்ளப்படும் புனிதத்தன்மையும் உதிர்ந்து வருகிறது. தேசம், தியாகம் என்ற பரவச உணர்ச்சியை இனிமேலும் இராணுவம் சந்தைப்படுத்த முடியாது.

– வெற்றிவேல்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

தடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

19

க்கள் கலை இலக்கிய கழகத்தின் பொருளாளர் தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

மக்கள் பணியில் கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கை, தடுமாற்றங்களுடனான போராட்டம், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு, இறப்பதற்கு முன்பு செய்து முடிக்க விளையும் பணிகள், அவர்களது மறைவுக்குப் பின் மக்கள் நினைவு கூர்தல் இவற்றைப் பற்றிய விரிவான இந்த உரை ஒரு மனிதனாக வாழ்வது எப்படி என்பதை விளக்குகிறது.

உரையின் ஒலிக் கோப்பை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்.

கோப்பு 60 MBக்கு மேல் உள்ளதால், டவுன்லோட் ஆக நேரம் ஆகலாம். கிளிக் செய்து காத்திருக்கவும்.

ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !

9

நூற்று முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா கடந்த வருட இறுதியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு ஆறு பதக்கங்களுடன் திரும்பியது. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் இந்திய அளவிலான ஊடகங்களில் இதற்காக வைக்கப்படும் ‘ஒப்பாரி’ இந்த முறை சிறு முனகல்களோடும் வழக்கமான சடங்குகளோடும் முடிந்து விட்டது. பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற மேரி கோமின் உருக்கமான வாழ்க்கைப் பின்னணி பற்றிய நெகிழ்வூட்டும் விவரிப்புகளோடு ஆங்கில ஊடகங்களின் சம்பிரதாயமான கடமைகள் ஓய்ந்தன.

இருப்பினும் இந்தியாவுக்கு ஆறு பதக்கம் என்பது நிச்சயம் அதிகம்தான். சமீபத்திய ஒலிம்பிக் எதிலும் இத்தகைய ’சாதனை’ இல்லை. எனினும் இந்த சாதனைச் செய்திகள் பேசப்படும் போதே இந்திய விளையாட்டுத் துறையின் அசிங்கமான முகத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அம்பலப்படுத்திக் காட்டியது. இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தை, அதன் தேர்தல்களில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக தடைசெய்திருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தேர்தல்களில் அரசியல் தலையீடு இருப்பதும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் கீழ் 39 விளையாட்டுக்களுக்கான தனிச்சிறப்பான சங்கங்கள் உள்ளன. ஒலிம்பிக் கனவுகளுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியைத் தின்று கொழுக்கும் இவற்றில் சில சங்கங்களின் விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளிலேயே இடம்பெறாதவை. பல்வேறு சங்கங்களின் வாக்குகளைப் பெற்றுத் தான் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் பதவிகளைப் பெற முடியும். இதற்காகவே ஒலிம்பிக்கில் இல்லாத மேட்டுக்குடி துக்கடா விளையாட்டுக்களான ஸ்நூக்கர், பௌலிங் போன்ற விளையாட்டுக்களுக்குக் கூட சங்கங்களை அமைத்து அதை இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் கீழ் இணைத்துள்ளனர்.

கல்மாடி கார்ட்டூன்
காமன்வெல்த் ஊழல் புகழ் கல்மாடிக்கும் விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம்?

தற்போது சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் அபய் சவுதாலா, ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மகன். இவர் இதற்கு முன் இந்திய குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். பின் அதே பதவியை தனது மைத்துனரும் பி.ஜே.பி எம்.எல்.ஏவுமான அபிஷேக் மல்ஹோத்ராவுக்கு கொடுத்துள்ளார். அபய் சவுதாலாவின் சகோதரர் அஜய் சவுதாலா டேபிள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர். இவ்விரு சங்கங்களும் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தேர்தல்களில் அபய் போட்டியிட்ட போது அவருக்குச் சாதகமாக ஓட்டளித்துள்ளன.அண்ணன் அபய் சவுதாலாவும், அப்பா ஓம்பிரகாஷ் சவுதாலாவும் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இப்போது உள்ளே இருக்கின்றனர். கல்வியில் விளையாடிய இந்தக் குடும்பம்தான் விளையாட்டிலும் விளையாடுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். தின்ட்ஸா தற்போது பஞ்சாப் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்; இவரது மகன் சைக்கிள் சங்கத்தின் தலைவர். படகுப் போட்டிகளுக்கான சங்கத்தின் தலைவராக 2008 வரை இருந்த கே.பி.சிங் தியோ என்கிற முன்னாள் காங்கிரஸ் அமைச்சர், தனது பதவிக் காலத்துக்குப் பின் அந்தப் பதவியை தனது மச்சானிடம் கொடுத்து வைத்தார்; அவரது பதவிக் காலத்துக்குப் பின் தற்போது கே.பி. சிங்கின் மனைவிடம் உள்ளது.

39 சங்கங்கள் – 33 மாநிலங்கள்;  சகலமும் செல்வாக்கான அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் ஜமீன்தாரிகளான பழம் பெருச்சாளிகளின் குடும்பத்தினரின் பிடியில். இந்தச் சங்கங்களெல்லாம் தேர்தல் நடத்தி இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? காமென் வெல்த் போட்டிகளில் கொழுத்த தேட்டையடித்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டிருக்கும் லலித் பென்னாட் இந்தத் தேர்தல்களின் மூலம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக தேர்வாகியிருக்கிறார் என்பதிலிருந்தே அதைப் புரிந்து கொள்ள முடியும்.

இவர்களெல்லாம் இத்தனை முனைப்பாக விளையாட்டுச் சங்கங்களின் பதவிகளைப் பெற முண்டியடிப்பது விளையாட்டை ஊக்குவிப்பதற்கோ வளர்ப்பதற்கோ இல்லை. இவர்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வேறு எதற்காகச் செய்கிறார்கள்?

இந்தியச் சமூகமும் அதன் அரசியல் அரங்கும் இன்னமும் நிலவுடமை மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களால்தான் ஆதிக்கம் செய்யப்படுகின்றன. இந்திய அளவிலும் மாநில அளவிலுமான அரசியல் அதிகாரப் போட்டிகளில் தலைவர்களின் வாரிசுகளே கோலோச்சுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பழைய மன்னர்கள், ஜமீன்தார்கள் மற்றும் முதலாளிகளின் வாரிசுகளுமே அரசியல் பீடங்களை அலங்கரித்து வருகின்றனர். இவர்களுக்கு விளையாட்டு என்பது ஒரு அந்தஸ்து. கிராமப்புரங்களின் வாழ்ந்து கெட்ட பண்ணையார்கள் இன்றளவும் ரேக்ளா பந்தைய மைதானங்களின் மேடைகளையும் ஜல்லிக்கட்டு மைதான மேடைகளையும் அலங்கரிக்கிறார்கள் என்றால் இவர்களில் இருந்து செல்வாக்குப் பெற்று அரசியல் மையங்களின் அடுக்குகளின் பல்வேறு படிநிலைகளைக் கைபற்றி அமர்ந்திருப்பவர்களோ விளையாட்டுச் சங்கங்களின் பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

அந்தக்காலத்து ஜமீன்தாரிகளின் வீடுகளில் அவர்களின் ‘வீரத்தைப்’ பறைசாற்ற உரித்துப் பதப்படுத்தப்பட்ட புலித்தோல்களும் கரடித்தலைகளும் அலங்கரித்ததென்றால், அவர்களின் நவீன கால பிரதிநிதிகளின் வாரிசுகளான யுவராஜ் சிங்குகளும் அபிநவ் பிந்தராக்களும் தமது பங்களாக்களை பதக்கங்களால் அலங்கரிக்கின்றனர். அன்றைய மன்னர்களின் அரண்மனை மைதானத்தில் மல்லர்கள் போட்டியிட்டு தங்கச் சங்கிலிகளைப் பிச்சையாகப் பெற்றுச் சென்றனரென்றால், அந்த மன்னர்களின் வழித்தோன்றல்களான இன்றைய அரசியல்வாதிகள் விளையாட்டுச் சங்கங்களின் தலைவர்களாயிருந்து சான்றிதழ்களை வழங்குகின்றனர். திறமை உள்ள எந்த ஒரு விளையாட்டு வீரரும் கூட இந்த சங்கத் தலைவர்களின் ’ஆசி’ பெற்றிருப்பது அவசியம்.

மேற்கத்திய நாடுகளில் விளையாட்டு என்பது மனித உடலின் சாத்தியங்களைக் கடப்பது  பற்றிய அறிவியலாக ஓரளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தியாவிலோ அது பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.

மேற்கத்திய விளையாட்டு
விஞ்ஞானத்தோடு வளரும் மேற்கத்திய விளையாட்டு

முதலாளித்துவ நாடுகளில் வர்த்தக நலனுக்கு உட்பட்டு ஒரு விளையாட்டு வீரனின் உருவாக்கத்தில் நவீன விஞ்ஞானத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்றால், அவனது உடலின் தன்மை, தசை நார்களின் தன்மை, மரபணுக்களின் தன்மை என்பவற்றை அறிவியல்பூர்வமாக ஆய்ந்தறிந்து அதற்கேற்ற உணவுத் திட்டங்களையும் பயிற்சித் திட்டங்களையும் வகுக்கிறார்கள்.

வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக அமைக்கப்படும் ஓடுகளங்கள் விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்படுகின்றன. இவ்வீரர்களின் பாத அமைப்பு, கால் அமைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டு இவர்களுக்காகவே பிரத்யேகமாக காலணிகள் மற்றும் காலுறைகள் தயாரிக்கப்படுகின்றன. விளையாட்டின் மேம்பாட்டுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் தமது விளம்பர நோக்கத்திற்காக ஒதுக்கும் தொகைதான் பயன்படுகிறது என்றாலும் ஏதோ ஒரு வகையில் அங்கே விளையாட்டு வளர்கிறது. மேலும் அரசால் ஒதுக்கப்படும் நிதி இது போன்ற விளையாட்டு அறிவியலின் ஆராய்ச்சிகளுக்காகவும் பிற உள்கட்டமைப்புகளுக்காகவுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆளும் கும்பலின் வெட்டிப் பெருமிதங்களால் பீடிக்கப்பட்ட இந்தியாவிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.

சமீபத்தில் நடந்த காமென்வெல்த் போட்டிகளின் உள் கட்டுமானப் பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 2,500 கோடி ரூபாய்களில் சுமார் 1,325 கோடி ரூபாய்கள் தில்லி நகரை அழகுபடுத்தவும் சுவர்களுக்கு வெள்ளையடிக்கவும் துவக்க நிகழ்ச்சியிலும் இறுதி நிகழ்ச்சியிலும் பாலிவுட் நடிகைகளின் கவர்ச்சி நடனங்களுக்காகவுமே செலவிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் நடந்த ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சி நடனத்திற்காக சுமார் 75 லட்சம் செலவு செய்துள்ளார்கள். கோடிக்கணக்கான மக்கள் நாளுக்கு 20 ரூபாய் வருமானத்தோடும் பட்டினியோடும் பரிதவித்துக் கிடக்கும் போது, காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்வைத்து இந்திய அதிகார வர்க்கத்தினரின் அரசவைக் கோமாளிக் கூத்துகளுக்காக மக்களின் ரத்தப்பணம் அள்ளி இறைக்கப்பட்டது.

ஹாக்கி விளையாட்டுப் பயிற்சிகளில் பந்து வீசுவதற்காகப் பயன்படுத்தப்படும் கருவி பழுதடைந்து விட்டதால் கோல்ப் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தை வைத்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடந்த விபத்தில் கோல் கீப்பர் பல்ஜித் சிங்கின் கண்ணில் அடிபட்டது. சுமார் இரண்டாண்டு காலம் போராடியும் அவரது பார்வையை முழுமையாக மீட்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டு இன்று அவர் எங்கேயிருக்கிறார் என்னவானார் என்கிற தகவலே இல்லை.

ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளின் படியளப்புகளால் கிரிக்கெட் கொழித்துக் கிடக்கும் நிலையில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் பெற்றுத் தந்த ஹாக்கியின் நிலை இன்று கோயில் பிச்சைக்காரனை விடக் கீழ்தரமானதாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதோடு தேசிய அணி வீரர்களுக்கே அடிப்படையான பாதுகாப்பு உபகரணங்கள் கூட போதுமான அளவுக்கு இல்லை. ஹாக்கி உள்ளிட்ட எந்த விளையாட்டுக்களுக்கும் விஞ்ஞானபூர்வமாக பயிற்சியளிக்கத் தகுதியான பயிற்சியாளர்களும் இல்லை.

சீனா டேபிள் டென்னிஸ்
லண்டன் ஒலிம்பிக்சில் டேபிள் டென்னிஸில் வென்ற சீன வீரர்கள்.

சுமார் நூற்றுமுப்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 1577 பயிற்சியாளர்களே உள்ளனர். இவர்களும் பழைய பாணியிலான பயிற்சி முறைகளை மட்டுமே கற்றறிந்தவர்கள். மாறாக சீனாவிலோ சுமார் 3.5 லட்சம் பயிற்சியாளர்களை அந்நாட்டின் அரசு உருவாக்கியுள்ளது. எழுபதுகளின் இறுதியில் இருந்து விளையாட்டை ஒரு அறிவியலாகக் கற்கும் பொருட்டு ஆண்டு தோறும் சுமார் 2000 தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பயிற்சியாளர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி திட்டமிட்ட ரீதியில் அவர்களை தயார்படுத்தியுள்ளனர்.

இன்றைய நிலையில் சுமார் 48 கோடி சீனர்கள் (மக்கள் தொகையில் 37 சதவீதம்) ஏதாவது ஒரு விளையாட்டோடு இணைந்திருக்கின்றனர். இதன் விளைவு 84-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 32 பதக்கங்கள் பெற்ற சீனா, கடந்த ஆண்டு 88 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியாவின் அரசியல் அதிகார வர்க்கத்தினரின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் விளையாட்டுத் துறையில் சாமானிய நடுத்தர வர்க்கக் குடும்பப் பின்னணியிலிருந்து வரும் ஒரு வீரர் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பது என்பது குருட்டு முடவன் இமயமலையில் ஏறுவதற்கு ஒப்பான சாதனை. தலித்துகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கோ இந்தக் கனவுகள் கற்பனைக்கெட்டாதவை. அன்றாட பிழைப்பும் வாழ்வும் மூன்று வேளை உணவுமே போராட்டமாக இருக்கும் ஒரு நாட்டில் விளையாட்டுக்களில் பங்கேற்க நேரமோ மனமோ எப்படியிருக்கும்? இவ்வளவோடும் சேர்த்து மொத்த சமூகமும் பார்ப்பனிய ஆணாதிக்க விழுமியங்களில் ஊறிப் போயிருக்கும் நிலையில் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் விளையாட்டுக்களில் பங்கேற்பது என்பதே கற்பனைக்கும் எட்டாத விசயம்.

இத்தனை தடைகளையும் தாண்டி விளையாட்டுக்களில் அபூர்வமான நட்சத்திரங்களாய் ஒளிவீசத் துவங்கும் சாதாரண குடும்ப பின்னணி கொண்ட ஒரு சிலர் தமது வாழ்வின் மிக முக்கியமான இளமைப் பருவத்தை மூன்றாம் தர மைதானங்களில் விரயமாக்கி விட்டு மாநில அளவிலோ அதிகபட்சம் தேசிய அளவிலோ சில பதக்கங்களுடனும் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலையுடனும் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்களிடம் இயல்பாக இருக்கும் திறமைகளை இந்த அமைப்பு முறையே ஒரு கட்டத்திற்கு மேல் அழித்தொழித்து விடுகிறது.

மானியங்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் நடையாய் நடந்து சலிப்பும் சோர்வுமுற்று விளையாட்டிலிருந்தே விலகுகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த தேசிய அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான ஓட்டப்பந்தையத்தில் 11.85 நொடிகளில் நூறு மீட்டர் தூரத்தைக் கடந்த ஆஷா ராய் இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிக வேகமான பெண். ஆஷா ராய் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூர் மாவட்டத்தில் உள்ள ஞான்ஷாம்பூர் கிராமத்தில் சாதாரண குடிசை வீட்டில் வசிக்கிறார். இவரது தந்தை போலாநாத் ராய் வீடு வீடாக காய்கறிகள் விற்று மாத வருமானமாக ஈட்டும் 3,000 ரூபாயில் தான் ஆறு பேர் கொண்ட அவர்கள் குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு தரமான டென்னிஸ் மட்டையின் விலை 12,000 ரூபாய்கள். விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் காலணியின் விலை சுமார் 3,000. இவை போக, சரிவிகித ஊட்டச்சத்து உணவு, சிறப்பு உணவுகள், பயிற்சிக் கட்டணம், சர்வதேச வசதிகள் கொண்ட மைதானங்களுக்கு நுழைவு கட்டணம் என்று அத்தியாவசியமாகச் செய்யப்படும் செலவுகளே விளையாட்டின் தரத்தைப் பொறுத்து மாதம் ஒன்றுக்கு பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள் வரை ஆகலாம். இது போக, ஒரு மாவட்ட அளவிலான அணியிலோ மாநில அணியிலோ இடம் பிடிப்பதற்கு தேவைப்படும் சிபாரிசுகளும் அளிக்கப்படும் லஞ்சங்களும் தனி.

ஆக, இந்த வாய்ப்புகளும் சாத்தியங்களும் மேட்டுக்குடியினருக்கும் நகர்ப்புற மேல் நடுத்தர வர்க்கத்தினருக்குமே சாத்தியம். இத்தனை முதலீடுகள் செய்து தேசிய அளவிலான போட்டிகளுக்கான அணிகளில் தமது பிள்ளைகளைத் திணித்து விடும் பெற்றோர் போட்ட காசை எடுக்க வேண்டுமென்றால் அது இந்தியாவைப் பொருத்தவரையில் கிரிக்கெட்டில் மாத்திரமே சாத்தியம்.

தன்ராஜ் பிள்ளை
தன்ராஜ் பிள்ளை

இந்தியாவில் வேறு விளையாட்டுக்களே இல்லையெனும் வகையில் ஆளும் வர்க்கமும் அதன் ஊடகங்களும் கிரிக்கெட்டை ஒரு போதையைப் போல் பரப்பியுள்ளனர். இதற்குக் கிடைக்கும் அங்கீகாரமும் வருமானமும் இந்தியாவில் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைப்பதில்லை. கிரிக்கெட்டிலும் சச்சின், தோனி போன்ற ஒருசில விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலானோர் வசதியான குடும்ப பின்னணியில் இருந்தே வருகின்றார். இதற்கு விதிவிலக்கானவர்களும், அவர்களின் தோற்றப் பொலிவின் தன்மைக்காக முதலாளிகளது விளம்பரங்களை வைத்து முன்னேறுகிறார்கள். பலர் காணாமல் போகிறார்கள்.

சர்வதேச போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஏதும் புரிந்திராத சானியா மிர்ஸாவுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் அவரை ஒரு  கவர்ச்சியான பெண்ணாக விளம்பரங்களில் காட்டமுடியும் என்பதற்க்காகத்தான். ஹாக்கி மைதானங்களில் சூறாவளியாய்ச் சுழன்றடித்து இந்திய ஹாக்கியின் மதிப்பை சர்வதேச அளவில் நிலைநாட்டிய தன்ராஜ் பிள்ளை இன்று காணாமல் போனது ஏன்? ஏனெனில், கார்ப்பரேட்டுகளுக்குத் தேவைப்படும் விற்பனைப் பிரதிநிதிகளாக இருக்கத் தேவையான முகவெட்டுடைய வீரர்கள் தவிர்த்து பிறருக்கு அங்கீகாரமோ புகழோ கிடைப்பதில்லை.

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை விளம்பர ஒப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்டுப் பிரகாசிக்கிறது. பிற விளையாட்டுக்களோ கார்ப்பரேட்டுகளின் வியாபார நோக்கிற்குப் பயன்படாத குப்பைகளாக கருதப்பட்டு அரசினாலும் புறக்கணிக்கப்படுகின்றன; திறமையான வீரர்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாமல் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்படுகின்றனர். இந்த வீரர்கள் தங்கள் சாதனை வாழ்வின் உச்சத்திலிருந்த போதும் சரி ஓய்வு பெற்ற பின்னும் சரி, புறக்கணிப்பு எனும் துயரத்தை மட்டுமே ருசித்துள்ளனர். மேற்குலகில் தொழில் முறை விளையாட்டுக்களில் கார்ப்பரேட்டுகளின் வியாபார நலன் இருந்தாலும் கீழ் மட்டத்தில் விளையாட்டு வீரர்கள் உருவாவதற்கான கட்டுமான வசதிகளை அந்நாட்டு அரசாங்கங்கள் உத்திரவாதப்படுத்தியுள்ளன; விளையாட்டு என்பது அடிப்படை ஆரோக்கியம் என்பதோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது.

இவையனைத்தோடும் சேர்ந்து இந்தியாவுக்கே உரித்தான பிரத்யேகமான பார்ப்பனிய சாதி சமூகமும் சேர்ந்து கொள்கிறது. ஒருபுறம் பார்ப்பன சாதியவாதத்தின் வேர் அகமண முறைகளால் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு மக்களை நோஞ்சான்களாகப் பெற்றுத் தள்ளுகிறது; இன்னொருபுறம் ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில் என்று வாழ்வின் சகல அம்சங்களில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டின் அடிப்படையே குழு உணர்வையும் அதன்வழி சமூக உணர்வையும் உண்டாக்குவதே. இங்கே சமூகமே பெட்டி பெட்டியாகப் பிளவுண்டு கிடக்கும் போது விளையாட்டு உணர்வு மட்டும் அந்தரத்திலிருந்து உருவாக முடியாது.

இந்திய விளையாட்டுத் துறையைப் பீடித்து ஆட்டும் பக்கவாதம் என்பதை வெறும் அரசியல் லஞ்ச ஊழல் என்பதோடு மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது. விளையாட்டுத்துறை மேட்டுக்குடியினரின் பெருமிதமான பொழுது போக்காகவும், அதில் பதவிகள் பெறுவது நிலபிரபுத்துவ கால அந்தஸ்தின் நவீன அடையாளமாகவும் நீடிக்கும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது வெறும் நிர்வாக ரீதியிலான சில்லறைப் பிரச்சினையல்ல. மொத்த சமூகமும் வர்க்கம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரிந்து அதன் கீழடுக்குகளில் உள்ளோர் பிழைக்க வழியின்றித் தவித்து வரும் நிலையில் நூற்று முப்பது கோடி மக்களுக்கும் ஆறு பதக்கங்கள் என்பதே இமாலய சாதனை.

இந்திய சமூகம் கீழிருந்து மேல் வரை முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு எளிய மக்களுக்கும் ஜனநாயகம் சென்றடைந்து அவர்களின் அடிப்படையான வாழ்க்கைக்கு ஒரு உத்திரவாதம் கிடைக்கும் போது தான் கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நம்மால் சாதனைகளைப் படைக்க முடியும். சாதனையாளர்களை அடையாளம் காண முடியும். அதுவரையில் ஆஷா ராய் பி.டி உஷா பல்ஜித் சிங் தன்ராஜ் பிள்ளை போன்ற அடையாளமற்ற எண்ணற்றோரின் உழைப்பும் அவர்கள் சிந்தும் வியர்வையும் விழலுக்கு இறைத்த நீர் தான்.
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!

38

‘சொல்வதெல்லாம் உண்மை’ –  இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

சொல்வதெல்லாம் உண்மைஅடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முதல் அபாயம். அரசல் புரசலாகவும், தாங்கள் ஒரு தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வுடனும் புரணி பேசும் மக்களை, அந்த மனத் தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல் பஞ்சாயத்துகள், குடும்ப சிக்கல்கள்… இவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் ‘தான் மட்டும் தவறிழைக்கவில்லை; ஊரே இப்படித்தான் இருக்கிறது’ என எண்ணுகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என இதை எடுத்துக்கொள்வது ஒரு வகை. மாறாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் மனம் தன் கணவனை, தன் மனைவியை, உறவுகளை, சுற்றங்களை சந்தேகிக்கிறது. புதிய குடும்பச் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வகைகளையும் தாண்டி, ‘எல்லாரும் செய்யுறான்.நாமளும் செய்வோம்’ என எண்ண வைத்து ஒழுக்கக்கேட்டுக்கு ஓபன் பாஸ் கொடுக்கிறது.

முதலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் யார்? பார்வையாளர்கள் யார்? தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள். தங்கள் வீட்டின் ரகசியங்கள் வாசல் வரையிலும் கூட சென்றுவிடக்கூடாது என அப்பார்ட்மென்டின் கதவுகளை இறுக மூடிக்கொண்டு முடைநாற்றத்தை அடைத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை இரவு நேர பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பு வழங்கிய; வழங்கும் லஷ்மி, நிர்மலா பெரியசாமி, லஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர்… இந்த இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களும் அல்ல. அவர்கள் அசல் மேட்டுக்குடிகள். ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவத்தில் அல்ல… கேள்வி ஞானத்தில் கூட அறிந்துகொள்ள விரும்பாத இவர்கள்தான் ஏழைக் குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். அதுவும் அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிவார்ந்த தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பேசுகின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை நடுத்தர வர்க்கம் பார்த்து ரசிக்க, மேட்டுக்குடிகள் தொகுத்து வழங்க, முதலாளிகள் கல்லா கட்டும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் கூட கலந்துகொண்டது இல்லை.

ஆனால் தங்கள் சொந்தப் பிரச்னைகளை கேமராவின் முன்பு மக்கள் எப்படி கூச்சமின்றிப் பேசுகின்றனர்? நீங்களும், நானும் பேசுவோமா?ஆனால் இவர்கள் பேசுகிறார்களே, எப்படி? “அவங்க காசு வாங்கியிருப்பாங்க”  என்றோ, “எல்லாம் செட்-அப்” என்றோ பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விடை காண ’சொல்வதெல்லாம் உண்மை’ எப்படி உருவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமாதானம், சண்டை, பேச்சுவார்த்தை, போலீஸ் புகார்… என பல வழிகளிலும் தங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தேடி முயற்சித்து, எதிலும் தீர்வு கிடைக்காமல் உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கும் மக்கள்தான் இவர்களின் இலக்கு. ‘ஏதேனும் ஒரு வழியில் பிரச்னை தீராதா?’ என ஏங்கிக் கிடப்பவர்களை அணுகி, ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என ஆசைகாட்டி அழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்து, தங்களுக்கு டி.ஆர்.பி. தரக்கூடிய செய்திகளை கண்டறிவதுதான் இவர்களின் அதிகப்பட்ச ஆய்வுப்பணி. அடுத்த கட்டமாக அந்தந்த ஊரில் இருக்கும் அவர்களின் நிருபர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தேன் ஒழுகப் பேசுவார். மனைவியை மடக்கிவிட்டால் போதும், கணவனை அழைத்து வருவது எளிது.

‘உங்க மனைவி எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் உங்களை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார். நீங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை எனில் அவர் சொல்வது மட்டும்தான் வெளியே வரும். டி.வி. பார்ப்பவர்களுக்கு அதுதான் நியாயம் என்று தோன்றும்’ என்று தர்க்கப்பூர்வமாக மடக்குவார்கள். ‘எங்கள் நிகழ்ச்சியில் வந்து பேசிவிட்டால் உங்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று ஆசை காட்டுவார்கள். ‘படித்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்’ என்று நம்பி வரும் ஏழைகளை திட்டமிட்டு உணர்ச்சிவசப்படச் செய்து, அறிவின் தந்திரத்தால் அழ வைத்து… அனைத்தையும் படம் பிடிப்பார்கள். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடைவேளையில், பங்கேற்பாளர்களின் நடவடிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினரால் உளவியல் உத்திகள் வகுக்கப்படும். குறைந்த பட்சம் கண்ணீர், அதிக பட்சம் அடிதடி… எதுவும் சிக்கவில்லையா? ஒரு சென்டிமெண்ட் டிராமாவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் தயாரிப்புக் குழுவுக்கு நிம்மதி. அதன்பிறகு அந்த குடும்பம் சேர்ந்ததா, பிரிந்ததா, நடுத்தெருவில் நிற்கிறதா என்பதை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

சொல்வதெல்லாம் உண்மை
‘ சொல்வதெல்லாம் உண்மையில் ‘ கலந்து கொண்ட ஒரு பெண் ! ஜீ டி.வி.யின் விற்பனைப் பொருள்.

பொதுவாக உங்கள் வீட்டில் யாராவது அடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச்சென்று விலக்குவீர்கள். அதையும் மீறி சண்டை நடந்தாலும் ‘நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம்’ என்று கண்டிப்பீர்கள். இது மனிதர்களின் பொதுப் பண்பு. ஆனால் இவர்களை பொருத்தவரை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அடித்துக்கொண்டால் உற்சாகம் அடைகிறார்கள். முடிந்தவரை அதை உசுப்பேற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என நம்பி வருபவர்கள் நிகழ்ச்சி முடியும்போது பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு வருவதால் பிரச்னை தீர்வதில்லை; அதிகமாகிறது என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. கொட்டிய வார்த்தைகளும், அழுத கண்ணீரும் நாளை தொலைகாட்சியில் வரப்போகிறது என்ற எண்ணமே அவர்களை அச்சுறுத்துகிறது. தாங்கள் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியதைப் போல உணர்கிறார்கள். “சார், டி.வி.ல போட்றாதீங்க சார். பேசுன வரைக்கும் பேசுனதா இருக்கட்டும். இப்படியே விட்ருங்க சார்” என்று கெஞ்சிக் கதறினால் அதையும் படம் பிடிப்பார்களேத் தவிர நீதி கிடைக்காது. மாறாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்வரை கருணை முகம் காட்டியவர்களின் உண்மை முகம் அப்போதுதான் வெளியே வரும். இதுதான் “தி மேக்கிங் ஆஃப் சொல்வதெல்லாம் உண்மை”.

ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா?

பஞ்சாயத்துக்கு வருகின்ற பிரச்சினைகள் ஒரே விதமாக இருந்தபோதும், பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது எப்படி என்பதே இவர்களது பிரச்சினை. எனவே, தனியே அழைத்துப் போய் உசுப்பேற்றிவிடுவதும், மோதலை உருவாக்குவதும் இத்தகைய நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமானது. இதை கேமராவுக்குப் பின்னே சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சியிலேயேப் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு விடலைப் பையனும், பெண்ணும் காதல் பஞ்சாயத்துக்கு வந்திருந்தனர். பெண்ணின் அம்மா எதிரே அமர்ந்திருக்கிறார். தன் அம்மா ஒரு விபச்சாரி என்று பட்டவர்த்தனமாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். உடனே நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் ஒளிபரப்பப்படுகிறது. இனி சாகும் வரையிலும் அந்த அம்மாவும், மகளும் சேரப் போவது இல்லை.

இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், டி.வி-யில் ஒளிபரப்பான பிறகு என்னவாகிறது என்பதை யாரும் பேசுவதில்லை. என்.டி.டி.வி-யில். ’ராக்கி கா இன்சாப்’ என்ற பெயரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு பெண், தன் கணவனை ஆண்மையற்றவன் என்று கூறியதால் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

நிர்மலா பெரியசாமி
மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார் !

இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக, சாதாரண மக்கள் நெறிகெட்டவர்கள் போலவும், நாட்டாமை செய்யும் வர்க்கத்தினர் பெரிய ஒழுக்க சீலர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் நீதிபதிகளாக செயல்படுகின்றனர். அதனால்தான் பல வீடுகளில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அதில் கலந்துகொள்ளும் மனிதர்களுடன் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர். ‘அவன் மேலதான் தப்பு’ என்றோ, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு’ என்றோ திரையில் விரியும் காட்சிகளுக்காக உண்மையாகவே மனம் இறங்குகின்றனர்.  கற்பனைக் கதைகளே பார்வையாளர்களின் கருத்தையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கும் என்னும்போது ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.

சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.

ஆனால், உண்மையான மனிதர்கள், உண்மையான பிரச்னைகள் என்பது வரைதான் இது உண்மை. அந்த உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அது நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு தூண்டப்பட்டு மிகையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு போர்னோகிராபி. இதைப் பார்க்கும் ரசனையும் சாவித்துவாரம் வழியே பார்க்கும் அதே ரசனைதான்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்கம் மட்டுமே அலசப்படுவதாக தெரியலாம். ஆனால் ஊடக வியாபாரத்தில் பணக்காரர்களின் அந்தரங்கமும் தப்புவதில்லை. பத்திரிகைகளின் சினிமா கிசுகிசு, மேற்குலகின் டயானா விவகாரம் போன்றவை இத்தகையவைதான்.

விஜய் டி.வி.
விஜய் டி.வி. ஷோக்கள் !

’ராக்கியின் சுயம்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் அப்பட்டமாக ஒத்திகை பார்க்கப்பட்டு, திரைக்கதை எழுதப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. பணத்துக்காக சினிமாவில் ஆடைகளை அவிழ்த்து ஆபாச நடனம் ஆடும் ராக்கி சாவந்த், தனது திருமணத் தெரிவையும் டி.வி.யில் லைவ் ஆக நடத்தினார். ‘யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற அறிவிப்பு பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டதே தவிர அது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்பதை யாரும் பேசவில்லை. சபலத்துடன் பலர் விண்ணப்பித்தார்கள். முடிவில் ராக்கி ஒரு கனடா தொழிலதிபரை தெரிவு செய்தார். திருமணம் தள்ளிப்போடப்பட்டு, கடைசியில் ‘நடிக்கக்கூடாது என்று சொன்னதால் திருமணம் ரத்து’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் இது நாடகம் என்றும், இதில் பணத்துக்காக தானும், பிரபலத்துக்காக தொழிலதிபரும் நடித்ததாகவும் ராக்கி கூறினார். கோடிக் கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை வைத்து இவர்கள் கொள்ளையடித்த பணத்துக்கும் கணக்கில்லை.

2009-ம் ஆண்டு இந்தியத் தொலைகாட்சிகளின் மொத்த வருமானம் சுமார் 5.5 பில்லியன் டாலர். இதில் ரியாலிட்டி ஷோக்களின் வருமானம் கணிசமானது. இவர்களுக்கு 70 கோடி இந்திய செல்போன் வாடிக்கையாளர்கள்தான் முக்கிய இலக்கு.  ‘உங்கள் மனம் விரும்பிய போட்டியாளர் இவர் என்றால் … என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.ஸில் இருந்துதான் ரியாலிட்டி ஷோக்களின் 30 முதல் 40 சதவிகித வருமானம் வருகிறது. இந்த வருமானத்தின் அளவு குறைந்தால் ரியாலிட்டி ஷோக்களுக்காக இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களும் அதிகரிக்கும்.

solvethellam-2
மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!

இன்றைய நிலையில் தொழில்முறை ஆபாசப் படங்களைக் காட்டிலும் செல்போன்களில் எடுக்கப்பட்ட ‘கேண்டிட் வீடியோக்களுக்குதான்’ மவுசு அதிகம். யூ-டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் இத்தகைய ஒரிஜினல் 24 கேரட் வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் சர்வ சாதாரணமாக லட்சங்களைத் தொடுகிறார்கள். பள்ளி மாணவர்களின் செல்போன்களில் கூட இத்தகைய கேண்டிக் கேமரா காட்சிகள் இருக்கின்றன. இதற்கும் ’ரியாலிட்டி ஷோ’க்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

எப்போதுமே, நிலவும் டிரெண்டை பயன்படுத்தி கல்லா கட்டும் நிறுவனங்கள் ‘உண்மையை’ விரும்பும் மக்களின் மனநிலையை மட்டும் விட்டுவைக்குமா? பல தொலைக்காட்சி விளம்பரங்கள் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டதைப் போல திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. பஞ்சாராஸ் அழகு சாதனப் பொருள், இந்துலேகா எண்ணெய், ஆரோக்கியா பால் உள்பட பல விளம்பரங்கள் இப்படி ஒளிபரப்பாவதை காணலாம். இதை ‘ஒரு விளம்பர யுத்தி’ என்றோ, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை ‘ஒரு கிரியேட்டிவ் கான்செப்ட்’ என்றோ சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மை வேறு. டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

இவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு செட் போட்டு, கான்செப்ட் பிடித்து ரியாலிட்டி ஷோ நடத்தத் தேவையில்லாமல் சொல்ல வேண்டிய நடைமுறை உண்மைகள் ஏராளமாக நாட்டுக்குள் இருக்கின்றன. சாதித் தீண்டாமை முதல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை ‘உண்மைகளுக்கா’ பஞ்சம்? இவற்றை சொல்வதற்கு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இடம் இல்லை. எனில் இவற்றை ‘ரியாலிட்டி ஷோ’ என்ற சொல்லால் அழைப்பதே தவறானது. உண்மையில் இவற்றின் ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திரைக்கதை எழுதப்படுகின்றன. வட இந்திய சேனல்களில் இது இன்னும் பச்சையாக நடக்கிறது.

solvethellam-1பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை. தமிழ் சேனல்களை பொருத்தவரை இந்த ரசிகர்களை பிடித்து வருவது அந்தந்த ரியாலிட்டி ஷோவின் புரடியூசரின் வேலை. வட இந்தியச் சேனல்களில் இத்தகைய பணி அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. அங்கு டி.வி. நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை சப்ளை செய்வதற்கு என்றே தனிப்பட்ட ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன.

இத்தகைய ஆடியன்ஸ் சப்ளை சர்வீஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் பெற்ற ராஜீ கபூர், “ரசிகர்களாக வருபவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஓர் அறிவிப்பு வெளியிட்டால் கூட்டம் வரும்தான். ஆனால் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்பு நேரம் மிக, மிக அதிகம். சாதாரண பார்வையாளர்கள் அவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். எந்த நேரமும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். அது மிகக் குறைந்த தொகைதான் என்றபோதிலும், சிலிர்ப்புமிக்க ரசிகராக நடிப்பதற்கு அவர்களுக்கு அந்தத் பணம் கொடுக்கப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த இடத்தில் அழ வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும், எப்போது கை தட்ட வேண்டும் என்ற அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. ஹிட்லர் காலத்தில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அவரது ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் கை தட்டுவார்களாம். அதைப் பார்த்து மற்றவர்களும்  தட்டவேண்டும்; தட்டுவார்கள். அதற்குப் பெயர் பாசிசம். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரமாம்!

– வளவன்
_______________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

கொள்ளையில் கொள்ளை : ஊழலுக்குள் ஊழல் !

3

நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள் என்று அறியப்பட்டிருக்கும் 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு வழக்குகளில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீளமுடியாது கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குதூகலிக்கின்றன. பெரும்பாலான செய்தி ஊடங்களும் அவ்வாறுதான் சித்தரிக்கின்றன. மீளமுடியாத கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பது ஆளும் கூட்டணி மட்டுமல்ல; நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார அமைப்பும்தான்.

சி.பி.ஐ. நாய் வால்
திருத்த முடியாத சி.பி.ஐ. (அரசு அமைப்பு)

இவ்விரு வழக்குகளிலும் பொதிந்துள்ள அடிப்படை உண்மைகள் மூடிமறைக்கப்பட்டு, பரபரப்பூட்டும் அரசியல் மற்றும் சட்டநுட்ப விவரங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடுகளில் நடந்த ஊழல் முறைகேடுகளால் மூன்றரை இலட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுவிட்டதாக இந்தியப் பொதுத் தணிக்கையாளர் கூறுகிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை நமது நாட்டில் புகுத்தப்பட்டபோது அரசு பொதுத்துறைத் தொழில்களும் பொதுத்துறை அடிப்படைக் கட்டமைப்புகளும்தாம் அனைத்து அரசு இழப்பீடுகள், ஊழல்கள், திறமைக் குறைவு, பின்னடைவு, தேக்க நிலை, பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் என்று கூறப்பட்டது. இதற்குத் தீர்வாக, பலப்பல இலட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புடைய அரசு பொதுத்துறைத் தொழில்களும் பொதுத்துறை அடிப்படைக் கட்டமைப்புகளும் அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ற பெயரில் பழைய, புதிய தரகுமுதலாளிகளும் அனைத்து ஓட்டுக் கட்சி அரசியல் தலைவர்களும் அரசுப் பொதுச்சொத்துகளைச் சூறையாடினார்கள். நிலபுலன்களை வளைத்துப் போட்டு வீடு- வீட்டுமனைத் தொழில்களில் பணத்தைக் குவித்தார்கள்.

இரண்டாவது சுற்றில், காடுகள்-மலைகள், விவசாய விளைநிலங்கள், ஆறுகள்-நீர்நிலைகள், கல்-பாறை-மணல், ஆகாயம்-பூமி, இரும்பு-நிலக்கரி, செம்பு-அலுமினியம் முதலிய தாதுப்பொருட்கள், மின்சாரம்-தொலைத்தொடர்பு மற்றும் மக்கள் வாழ்வாதாரங்கள் எல்லாம் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டன. இவற்றைக் கொண்டு மக்களுக்கு வாக்களித்தபடி உற்பத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்கும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, முக்கியமாக அந்நிய நாடுகளுக்கு விற்றுச் செல்வத்தைக் குவிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது ஊழல், மோசடி, அதிகார முறைகேடுகள் வெளியே வந்து நாறுகின்றன. பொதுச்சொத்துக்களைச் சூறையாடுவதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசியல் கொள்ளையர்களுக்கும் வெறிபிடித்துப்போய், ஊழல் தலைவிரித்தாடுகிறது.

இயற்கை வளங்களையும், அரசுப் பொதுச்சொத்துக்களையும் கொள்ளையடிப்பது, அவர்களுக்கிடையே கூறுபோட்டுக் கொள்வது என்பது எழுதப்படாத, அறிவிக்கப்படாத அரசுப் பொதுக்கொள்கையாக ஆகிவிட்டது. அதுவே ஊழல், கொள்ளைதான். அதை எப்படிச் செய்வது, யார்யாருக்கு என்னென்ன பங்கு என்பதில்தான் நாய்ச் சண்டை. ஆகவே, நடந்தது, நடப்பது வெறுமனே ஊழல் அல்ல, ஊழலுக்குள் ஊழல், கொள்ளையில் கொள்ளை.

எப்போதெல்லாம் மிகப் பெருமளவிலான மோசடிகள், பாரிய அதிகார முறைகேடுகள், மிகக்கொடூரமான அநீதிகள், மிக மோசமான குற்றங்கள் நடந்திருப்பதாகக் கருதப்படுகிறதோ, எப்போதெல்லாம் அதிகாரபலமும் பணபலமும் மிக்கவர்களுக்கெதிராக சாதாரணமான முறைகளினால், முயற்சிகளினால் உண்மைவெளிவராது என்று நம்பப்படுகிறதோ அப்போதெல்லாம் முறைமையான, வரிசைக்கிரமமான அதிகார அமைப்புகளின் வழக்கமான விசாரணை போதாது; சி.பி.ஐ. விசாரணை வேண்டும்; ஓய்வுபெற்ற அல்லது பதவியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகின்றது.

இதற்குக் காரணம், வேறெல்லாக் கீழ்நிலை அதிகார அமைப்புகளிடமும் நேர்மையான, உண்மையான, சரியான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அறவே அற்றுப்போய்விட்டது. ஆனால், சி.பி.ஐ. மற்றும் உச்சநீதி மன்றம் ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதும் கூட அவ்வாறான நம்பிக்கை கொள்ளமுடியாது. இதற்கு ஆதாரமாக, குஜராத்தில் ஆயிரக்கணக்கான இசுலாமியர் களைப் படுகொலை செய்த இந்துமதவெறி பாசிச பயங்கரவாதி மோடியிடம் அவை காட்டும் பாசம், உ.பி., பீகார் முன்னாள் முதல்வர்கள் முலாயம், மாயாவதி, லல்லு முதலானோர் வழக்குகளில் மத்திய அரசு அரசியல் நிலைப்பாட்டிற்கேற்பவும் ஆணைக்கேற்பவும் சி.பி.ஐ. நடந்துகொள்வது, அந்நிய-உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்குச் சாதகமாவே உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்குவது போன்ற எடுத்துக்காட்டுக்கள் பலவும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, தமது சரிந்துகொண்டிருக்கும் நம்பகத் தன்மைக்கு முட்டுக் கொடுக்கும் முகமாக, 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்குகளை எடுத்துக்கொண்டு, தமது நேரடி மேற்பார்வையில் கறாராகவும், நடுநிலையாகவும் நடத்துவதாகக் காட்டச் சில சவடால் நாடகங்களை அரங்கேற்றியது, உச்சநீதி மன்றம்.

சி.பி.ஐ.-யை நோக்கி அது ஏதோ தன்னதிகாரம்கொண்ட, சுயேட்சையான அமைப்பாகக் காட்டிக்கொண்டு, சி.பி.ஐ. விசாரணையில் வேறுயாரும் தலையிடக்கூடாது; விசாரணை விவரத்தை அரசிடம் கூடக்காட்டக் கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளைப் போட்டு, சாட்டையைச் சுழற்றியது. அதையெல்லாம் கால்தூசாகவே மதித்த சி.பி.ஐ., தனது விசாரணை விவரங்களை மைய அரசின் சட்ட அமைச்சர், அரசுத் தலைமை வழக்கறிஞர், நிலக்கரி அமைச்சக மற்றும் பிரதமர் அலுவலக அமைச்சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அவர்கள் திருத்தம் போட்ட இடைக்கால விசாரணை அறிக்கையாக, நடந்த உண்மைகளையும் மூடிமறைத்து உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்தது. சி.பி.ஐ. நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாவும், அந்நிய, அரசியல் சக்திகளின் பிடியிலிருந்து அதை விடுதலை செய்யப் போவதாகவும், சி.பி.ஐ.யின் சார்பற்ற நிலையை மீண்டும் நிறுவப்போவதாகவும் “பெருங்கூச்சல்” போட்டது, உச்சநீதி மன்றம்.

உச்சநீதி மன்றத்தின் நீதிவழுவா மாட்சிமையை வியந்த ஊடகங்கள் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு விட்டதாகவும் அரசியல் சுயநலமிகளின் பிடியிலிருந்து சி.பி.ஐ. யை மீட்டே தீரும்மென்றும் பரபரப்புக் காட்டின. என்ன நடக்குமோவென்று அரசியல் விமர்சகர்கள் திகைத்து நின்றனர். “ஆம், அப்படித்தான் செய்தேன்; அதற்கென்ன, இப்போது?” என்று சிலுப்பிக்கொண்டு நிற்கும் தறுதலைப் பிள்ளையைப்போல, சி.பி.ஐ. நிற்கிறது. “சி.பி.ஐ. தனித்து நிற்கும் அமைப்பு அல்ல; நாங்கள் ஒரு(அரசுக்) கட்டமைப்பின் அங்கம். சில சமயங்களில் (அதனுடன்) கலந்தாலோசித்து கருத்துப்பெற வேண்டும்தான். நாட்டின் சட்ட அமைச்சருக்குத் தானே காட்டினோம்; வேறு வெளியாள் யாருக்கும் காட்டவில்லையே” என்று நேரடியாக முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டார், சி.பி.ஐ. இயக்குநர். அதாவது ஊழலில் முதன்மைக் குற்றவாளிகளான பிரதமர் மற்றும் அவரது அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் வழக்கை நடத்துவோம் என்கிறது, சி.பி.ஐ. சி.பி.ஐ. க்குப் பதிலாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நாடகத்தை உச்சநீதிமன்றம் நடத்தும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் யோக்கியதையைக் குஜராத் மதவெறிப் படுகொலைகள் விவகாரத்தில் கண்டோம்.

இனி, இதுதான் பகிரங்கமான அரசு நியதியாகிவிடும். குற்றவாளிகளே விசாரணையாளர்களாகவும் நீதிபதிகளாகவும் இருப்பார்கள். (போர்க்குற்றவாளி இராஜபக்சேவுக்கும்கூட இது பொருந்தும்) தேர்தல் ஆணையம், உச்ச, உயர் நீதிமன்றங்கள், மையக் கண்காணிப்பு ஆணையர் போன்ற அரசியல் சட்டப்படியான சுயஆட்சி அமைப்புகள் என்று இதுவரைப் பம்மாத்துக் காட்டப்பட்டவை கூட அரசுக் கட்டமைப்பின் அங்கங்கள்தாம் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு செயல் படும். இனி, ஜனநாயகப் பம்மாத்துக்கள் எல்லாம் கலைந்து, அரசின் ஆளும் வர்க்க பாசிசம் பகிரங்கமாகவே கோலோச்சும்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

அற்ற குளத்தின் ஒற்றை பசும் புல்லாய் !

2

தியாகிகள்

தோழர் சீனிவாசனுக்கு கவிதாஞ்சலி  !

லவும் முகங்கள்
ஆயிரம்… ஆயிரம்…
நம் நினைவில் நிற்பவை சிலவே!
மறையினும் கூட,
செயல்கள் நிறைந்த முகங்கள்
மறுபடி… மறுபடி வருமே!

உழைக்கும் வர்க்கத்திற்காய்
உழைத்தவர் நினைவுகள்
மரணம் தோற்கும் இடமே…

கம்யூனிஸ்டுகளுக்கு சாவு
உடலில் இல்லை
உணர்வில் உள்ளது.
வர்க்க உணர்வை
இழக்கும் போதெல்லாம்
ஒருவன் வாழா வெட்டி! – பாட்டாளி
வர்க்கத்திற்காய் வாழ்ந்து இறப்பினும்
அவன், வர்க்கப் போரின் உயிர்ப்புச் சக்தி!

முகம் பார்க்கும் முன்பே
கருவினில் வளரும்
பிள்ளைகள் செயலை
கற்பனை செய்து
உயிர் வாழும் லட்சியம் போல,
கல்லறையில்
தோழனே… உன் முகம் புதைத்த போதும்
எம் செயல்களில் பிறக்கும்
உன் லட்சியத்தின்
முகம் பார்த்து சிலிர்க்கின்றோம்!

சீனிவாசனின் பாச முத்தம் – அவர்
பேத்தியின் கன்னத்தில் மட்டுமா?
உழைக்கும் வர்க்க அரசியலுக்காய்
ஒட்டப்படும்
ஒவ்வொரு சுவரொட்டியிலும்
அந்த.. பாசத்தின் ஈரம் சுரக்கிறது

சீனிவாசனின் இரத்தம்
உடலோடு நிற்கவில்லை
உயிரனைய நம் செங்கொடியில்
உலராத கனவோடு
பிடிவாதம் பிடிக்கிறது!

நிறைவேறாத நம் வேலைகளில்
அவரின்
கணையப் புற்றுநோய் வலி மிகும்.
நிறைவேறும் நம் லட்சியங்களில்
சீனிவாசன் புன்னகை மலரும்

மின்சார ரயில் பெட்டிகளின்
தடம் அதிரும் இரைச்சல்களில்,
பார்வையும் நுழைய முடியாத
மக்கள் கூட்டத்தின் நெருக்கடியில்,
எதிர்த்திசை காற்றைக் கிழித்து
எழும்பும்
நமது அமைப்புப் பிரச்சாரத்தில்
அதோ…
தெளிவாகக் கேட்கிறது
சீனிவாசனின் குரல்!

காலை முதல் மாலை வரை
கால்கள் ஊன்றி
அரசியல் முளைக்கும்,
அடுத்தடுத்தப் பேருந்தில்
ஏறி இறங்கும்
தோழர்கள் உடலில்
வியர்க்கிறது சீனிவாசனின் நினைவு!

தெருமுனைக் கூட்டங்களில்
வர்க்கப் பகையை எட்டி உதைத்து
வரும் போலீசு தடையை
தெருப்புழுதியாய் எத்தி நடந்து…
உழைக்கும் மக்களை
அரசியல் சூடேற்றும் உரைகளில்
துடிக்கிறது
சீனிவாசனின் உணர்ச்சி!

குறைகள், பலகீனங்களையே
குறிக்கோளாக்கி…
குறுக்கு வழியில்
திரும்ப நினைக்கும் மனநிலையை,
தடுத்து நிறுத்தி
விவரிக்கும் இடங்களிலெல்லாம்
வெளிப்படுகிறார் சீனிவாசன்!

மடல்விரித்த வாழைகளின்
உடல் சாய்த்த சூறை போல்,
மடி நிறைந்த தாய்ப்பாலை
இடி விழுந்து கருக்கியது போல்
மனம் நிறைந்த தோழர்களை
மரணத்தால் இழப்பதுவோ?!

மறுகாலனியம் எதிர்த்து நிற்கும்
இதயத்தின் இடி முழக்கில்
நாம் மறுபடியும் பிரசவிப்போம்!
அற்ற குளத்தின்
ஒற்றை பசும் புல்லாய்
வெறுமையின் தருணத்திலும்
வேர்பிடித்த நம்பிக்கையாய்
எத்தனைத் தோழர்கள்…
எத்தனை தியாகங்கள்!

கொளுத்தும் கொடிய
கோடையைப் பிளக்கும்
புரட்சி மழை
வேண்டும் சீக்கிரம்!
பொழியும் துளியில்
தோழனே நீயும் இருப்பாய்…
சீனிவாசா செயல்களில் பிறப்பாய்!

– துரை.சண்முகம்
5/5/2013

மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு கலகம் !

7

மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கணிப்பு நாடகத்தை கண்டனக் கூட்டமாக மாற்றிய ம.க.இ.க.

திருச்சியில், மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒன்று மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் 08.05.2013 அன்று நடத்தப்பட்டது. ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதன் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்த தீர்மானித்தோம்.

trichy-pala-photo-1கடந்த ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மின் வாரிய ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள், நுகா்வோர் அமைப்புகள், ஓட்டுப் பொறுக்கி கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஜால்ரா கோஷ்டிகள் புடை சூழ நாடகம் நடத்தி ரூ 7784 கோடி கட்டண உயர்வு அறிவித்தது. கடந்த ஆண்டு போல நேரடியாக மக்கள் தலையில் சுமத்தாமல் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்க வேண்டியிருப்பதால் விவசாயத்திற்கும், குடிசை இணைப்புகளுக்கும் மட்டும் கட்டணத்தை உயர்த்தி, அவ்வாறு உயர்த்தப்பட்ட ரூ 973 கோடி கட்டணத்தையும் அரசே மானியமாக செலுத்துவதாகவும் தீர்மானித்துள்ளார்கள். அவ்வாறு முன்கூட்டியே தீர்மானித்து விட்டு கருத்துக் கேட்டுதான் கட்டண உயார்வை அமல்படுத்தப் போகிறோம் என்று நாடகமாடினர்.

இலவச புழுத்த அரிசி வழங்குவதை நாளிதழ்களில் பத்துப் பக்கம் விளம்பரம் போடும் அரசு மக்களின் உயிராதாரமான பிரச்சனையான மின் கட்டண உயார்வு பற்றிய கூட்டத்திற்கு கண்ணுக்கே தென்படாத அளவுக்கு செய்தி வெளியிட்டிருந்தது. தலை கணக்குக்கு மின் வாரிய ஊழியர்களையே கொண்டுவந்து மண்டபத்தை நிரப்பியிருந்தார்கள். போதாக் குறைக்கு போலீஸ் வேறு. கடந்த ஆண்டைப் போல ஜால்ராக் கோஷ்டியினரும் தயாராக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் பேச அழைக்கப்பட்ட ஒருவர், ”எல்லாப் பொருட்களும் விலை உயார்ந்துவிட்டது. அதனால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க முடியாது. படித்த அதிகாரிகளான தாங்கள் மக்களை ரொம்ப பாதிக்காமல் மின் கட்டணத்தை உயர்த்துங்கள்”, என்று பிள்ளையார் சுழி போட்டு (மின்சார ஒழுங்கு முறை ஆண்டைகளிடம் பிச்சை கேட்டு) ஆரம்பித்துவைத்தார். அதன் பின்னர் பேசிய மின்சார வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர்,”மின் கட்டணத்தை உயர்த்தி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்க வேண்டும் ”,என்று கேட்டுக்கொண்டார். இப்படியாக மின் கட்டண உயர்வுக்கு ஆதரவான கருத்துக் கேட்புக் கூட்டம் ஆரம்பித்தது .

அடுத்து மனித உரிமைப் பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட தலைவர் காவிரிநாடன் பேச அழைக்கப்பட்டார். அவர், ” ஊழியர்கள் ரிடையர்மெண்ட் ஆகும் போதுதான் இவ்வளவு ஊழியர்கள் ஒன்றாக திரள்வார்கள். இந்த கருத்துக் கேட்பு கூட்டம் பணிநிறைவு விழாக் கூட்டம் போலத்தான் உள்ளது”, என்று நக்கலாக ஆரம்பித்தார். வந்திருந்த ஆணைய உறுப்பினர்கள் முதல் அனைவரும் சிரித்துவிட்டனர். தொடர்ந்து பேசிய காவிரிநாடன் வந்திருந்த மின்சார வாரிய ஊழியர்களைப் பார்த்து, ”2003 வரையில் நம்முடைய மின்சார வாரியம் லாபகரமாகத்தான் இயங்கி வந்தது. அதற்கு காரணம் உங்களுடைய உழைப்புதான்” என்று கூறியவுடன் அரங்கத்தில் மின்சார வாரியம் தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திரட்டி வைத்திருந்த மின் வாரிய ஊழியர்களின் கைதட்டல் அடங்க நீண்ட நேரமானது. அதிகாரிகளோ சேம்சைடு கோல் காரணமாக அதிர்ந்து போயினர். பின்னர் மின்வாரியம் நட்டத்தில் இயங்குவதற்கு காரணம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளை நம் அரசுகள் அமல்படுத்தி அரசுத் துறை மின் திட்டங்களைத் தடுத்து தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஆரம்பித்த பின்னர்தான் நட்டம் ஏற்பட்டது என்று ஆதாரபூர்வமாக விளக்கினார்.

பின்னர் பேசிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சிக் கிளை செயலாளர் ஆதிநாராயணமூர்த்தி, ”கடந்த ஆண்டு நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய அனைவரும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றுதான் சொன்னார்கள். ஆனால் 33 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தினீர்கள். அதே போலத்தான் இந்த ஆண்டும் நடக்கிறது இந்த கருத்துக் கேட்பு நாடகம். இப்போதும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று மக்கள் கருத்தாக நாங்கள் சொல்கிறோம். கேட்பீர்களா நீங்கள்? மின் கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்துவிட்டு இங்கு எதற்கு இந்த ஜனநாயக நாடகம்? அரசு மின்னுற்பத்தி நிலையங்களை முடமாக்கிவிட்டு தனியாரிடம் மின்சாரம் வாங்கிய பின்னர்தானே நட்டம் ஏற்பட்டது. அதனால் தானே மின்கட்டண உயர்வு. அதுவும் குடிசைகளுக்கும், விவசாயத்துக்கும் மின்கட்டண உயர்வு. நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்க மின்கட்டண உயர்வை மானியம் என்ற பெயரில் அரசே ஏற்றுக் கொள்கிறது. அந்த மானியப் பணம் மட்டும் யாருடையது நம் வரிப் பணம்தானே? நம் கையை வெட்டி நமக்கே சூப்பு வைத்து தரும் கொடுமை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம். நமக்கு 16 மணிநேர மின்வெட்டு. சமச்சீர் மின்வெட்டை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அதிகாரம் உண்டுதானே, அமல்படுத்துங்கள் பார்ப்போம். தனியார்மயத்தை, உலகமயத்தை ஒழிக்காமல் இந்த கொடுமையிலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு. பவரை கையிலெடுத்தால் உடனடியாக பவர் வரும் ”என்று கூறியவுடன் அரங்கு முழுவதும் நம் கருத்தை ஆதரிக்கும் வகையில் கைத்தட்டி ஆதரித்தார்கள்.

அடுத்து பேசிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்,”நான் இந்த மேடையில் பேசும் பொழுது ஜாக்சன் துரைக்கு எதிராக கட்டபொம்மன் பேசுவது போல உணர்கிறேன். தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கொள்முதல் விலை என்ற பெயரில் அள்ளி கொடுத்துவிட்டு எங்களுக்கு ஏன் மின்கட்டணத்தை உயர்த்துகிறீர்கள். இந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு அல்ல. ஓட்டு பொறுக்க வீடுவீடாக வந்தவனெல்லாம் எங்கே போனார்கள். மின்கட்டண உயர்வை மாற்றி அமைப்பதற்கான இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பதே பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது. மக்கள் மத்தியில் இந்த கூட்டத்தை நடத்தி பார்க்கட்டும். உயிரோடு ஒருவனும் திரும்ப முடியாது”, என்று உரையாற்றினார். ஆணையர்கள் வாயடைத்து போயினர்.

தொடர்ந்து சி.பி.எம்–ஐ சேர்ந்த வயதான ஓருவர், ”இதற்கு முன்னர் கட்டபொம்மன் பேசினார். இப்பொழுது பாரதியாக நான் பேசுகிறேன்”, என்று அவரும் நம் கருத்தையே வழிமொழிந்தார்.

பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் நிர்மலா, ”வீட்டில் கணவன், குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்துவிட்டு, விலைவாசி உயர்வை சமாளிக்க வேறு வழியின்றி வேலைக்கு போகும் உழைக்கும் பெண்களிடம் போய் கேளுங்கள் மின்வெட்டைப் பற்றி… கட்டண உயர்வைப் பற்றி. அவர்கள் என்ன சொல்வார்கள். அவர்கள் மின் கட்டணத்தை குறைக்க சொன்னால் குறைப்பீர்களா? விவசாயிகள் பாசன நீரும் இல்லாமல் நிலத்தடி நீரை பயன்படுத்த மோட்டாருக்கு கரண்டும் இல்லாமல் பட்டினி சாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்”, என்று நிலையை விளக்கினார்.

அடுத்து பேசிய தோழர் ஒருவர், ”சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து விஜயகாந்த் கேட்கிறார் மின்வெட்டை குறையுங்கள் என்று. அதற்கு பதிலளித்து பேசிய ஜெயலலிதா, மின் கட்டணத்தை உயர்த்துவது மாநில அரசு அல்ல. அந்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மின்சார ஒழுங்கு முறை ஆணையம்தான் மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் கொண்டது. அதில் மாநில அரசு தலையிட முடியாது. இது கூட தெரியவில்லை விஜயகாந்துக்கு -என்று கிண்டலடித்தார். மாநில முதலமைச்சருக்கே கட்டுப்படாத மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எங்கள் கருத்துக்களையெல்லாம் கேட்டு அமுல் படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் பன்னிரண்டு மணி நேரம் வேகாத வெயிலில் உழைத்துவிட்டு இரவு வீட்டில் வந்து படுத்தால் மணிக்கு ஒருமுறை கரண்டை கட் பண்ணுறீங்க. தூங்க கூட முடியாமல் வியர்வையிலும் கொசுக்கடியிலும் நாங்க சாகிறோம். ஆனால் மின்சார ஒழுங்கு முறை ஆணைய ஆணையர்களுக்கு தலைக்கு மேலே இரண்டு ஃபேன், பக்கத்தில் இரண்டு ஃபேன், உங்களை சுற்றி ஐந்து ஏர் கூலர்கள். உங்களுக்கெல்லாம் எங்க கஷ்டம் எப்படி தெரியும்”, என்று சொன்னவுடன் நெளிய ஆரம்பித்துவிட்டார்கள். பின்னர், ”மின்சார வாரியமே கட்டணத்தை உயர்த்தவில்லையென்றாலும் மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் உயர்த்தத்தான் போகின்றீர்கள்”, என்று சாடினார்.

இடைமறித்த ஆணைய உறுப்பினர் மட்டம் தட்டும் நோக்கில், ”மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு மின்சார கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் இல்லை”, என்று சொன்னார். மற்றொரு தோழர் குறுக்கிட்டு, ” பொய் சொல்லாதீர்கள். மின்சார ஒழுங்கு முறை ஆணைய சட்டம் 2003-ன் படி மின் கட்டணத்தை வாரியம் உயர்த்தாத போது ஒழுங்கு முறை ஆணையமே மின் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அதிகாரமளிக்கிறதா இல்லையா?” என்று ஆணையரின் பொய்யை கூட்டத்தினர் முன் போட்டுடைத்த பின் அமைதியானார்.

ம.உ.பா.மையத்தின் செயற் குழு உறுப்பினர் கிளர்ச்சியாளன் தனது பேச்சில் மின் வாரிய, மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளைக் காட்டி, ”தோழர் லெனின் அப்போதே சொன்னார். அரசு அதிகாரிகள், ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மக்களின் துயரத்தை உணரமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் எருமைத் தோல் கொண்டவர்கள்.” என்று அம்பலப்படுத்தினார். சிரிப்பலை எழுந்தது.

பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த மணிமாலை, ”விவசாயிகளான எங்களுக்கு மூன்று மணி நேரம்தான் கரண்ட் வருது. அதுவும் ராத்திரியில்தான் கரண்ட் வருது. மோட்டார் போடப் போய் நாங்களெல்லாம் பாம்பு கடிச்சு சாகிறோம். நீங்க இங்க உட்கார்ந்து சவடால் பேச்சு பேசுறீங்க. மின்சாரத்தை ஒழுங்கா கொடுங்க. அப்புறம் மின் கட்டணத்தை உயர்த்துவதைப் பற்றி பேசுங்க”, என்று கூறினார்.

அடுத்து பேசிய பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த பவானி மின்சார ஊழியர்களைப் பார்த்து, ”மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்று அமைத்து மின்னுற்பத்தியை தனியாருக்கு தாரை வார்க்குது அரசு. மின்சார வாரியத்தை மூன்றாக பிரித்து நட்டமுன்னு சொல்லி தனியாருகிட்ட கொடுக்கப் போகிறான். அதிக விலை கொடுத்து தனியாருகிட்ட மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையில்லாம கொடுக்கிறான். மக்களை மின்வெட்டு செஞ்சு கொல்லுறானுங்க. நீங்களும் மக்கள்தானே வாயை மூடிக்கிட்டு சும்மா உட்கார்ந்திருக்கீங்க. நீங்களும் போராட வாங்க” என்று இடித்துரைத்து போராட அழைத்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் அப்பு, ஓவியா இரண்டு பேரும், “ஷாப்பிங் மால்களுக்கு பட்டப்பகல் போல மின் விளக்கு அலங்காரம், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஐ.டி நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கும் மின் வாரியமும், மின்சார ஒழுங்கு முறை ஆணையமும் மக்களுக்கு மின்சாரத்தை வெட்டுகிறது, மாணவர்களுக்கு இரவு நேரங்களில் படிப்பதற்கு முடியவில்லை. சின்னஞ்சிறு குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும், முதியவர்களும் தூக்கமின்றி நோயுற்றுள்ளனர். இந்த நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை”, என்று கூறினார்கள்.

அதிகாரிகளிடம் மிகவும் மரியாதையாகவும், பணிவுடனும் பேச வேண்டும் என்று கலந்து கொண்டவர்கள் கருதியிருக்க கூடும். ஆனால் நம் தோழர்கள் மின் வாரியம் மீதும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மீதும் அரசு மீதும் தனியார்மய, உலகமயக் கொள்கைகள் மீதும் தொடுத்த விமர்சனங்கள், தாக்குதல்கள் அந்த கருத்தை மாற்றிவிட்டது. கலந்துகொண்ட ஏனைய மக்களும் கட்சி, சங்க பிரதிநிதிகளும் மின்வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அரசையும் தங்களால் இயன்ற அளவுக்கு காய்ச்சி எடுத்தனர். சிலர் மட்டுமே டிரான்ஸ்பார்மர் ரிப்பேரை சரிசெய்ய சொல்லியும், மும்முனை மின்சாரம் வழங்க சொல்லியும் கேட்டுக்கொண்டனர். மற்றபடி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை கலைக்க வேண்டும் என்றும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று தான் அனைவரும் கோரினார்கள்.

மின்சார ஒழுங்கு முறை ஆணையர் நாகல்சாமி, ”இது ஒரு கோர்ட். மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த மனு கொடுத்துள்ளது. அதில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் கூறலாம். மற்றபடி யாரையும் குறை கூறுவது கூடாது” என் பலமுறை கூறியதை யாரும் ஏற்கவில்லை.

மின்சார வாரியத்தின் சார்பில் பேசிய நிதித்துறை இயக்குநர் ராஜகோபால் இந்த வருடத்திற்குள் மின் வெட்டு சரிசெய்யப்படும் என்று கூறினார். நம் தோழர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்பினோம்.

2003ம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நட்டமின்றி நடந்த மின்சார வாரியம், இப்பொழுது ஏன் நட்டத்தில் இயங்குகிறது? அரசு மின் உற்பத்தி நிலையங்களை இயக்காமல் முடக்கிவிட்டு கூடுதல் விலை கொடுத்து உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிடமிருந்த பன்மடங்கு விலை அதிகமாக மின்சாரம் வாங்குவதன் மர்மம் என்ன? மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சார வாரியத்திற்கு ஜி.எம்.ஆர்., சாமல் பட்டி., பி.பி.என்., மதுரை ஆகிய தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கக்கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளதே, அதனை ஏன் மின்வாரியம் மீறியது? அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பிள்ளைப் பெருமாள் நல்லூரிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரமே வாங்காமல் நாளொன்றுக்கு 1 கோடி ரூபாய் வீதம் சுமார் ஒரு வருட காலத்திற்கு நிலைக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதே, ஏன்? உள்நாட்டு மக்கள் சாகும் போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை காட்டப்படுகிறதே ஏன்? என்றெல்லாம் கேள்வி கேட்ட போது பதிலளிக்க முடியாமல் அவர் திணறினார். சில பொய்யான புள்ளிவிபரங்களை சொன்ன போது தோழர்கள் பொய் சொல்லாதீர்கள் என்று சொல்லி சரியான புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டினார்கள்

மொத்தத்தில், மின்சார ஒழுங்கு முறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் நம் அமைப்புகளின் பிரச்சாரக் கூட்டமாக மாறியிருந்தது. இனி வரும் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு ஆணையம் பிரச்சாரம் செய்யவில்லையென்றாலும் நாம் பிரச்சாரம் செய்யலாமென தீர்மானித்துள்ளோம். மண்டப வாடகை, மைக்செட் செலவில்லாமல் பிரச்சாரம் செய்யவும் அதிகாரிகளை எதிர்க்கும் போர்க்குணத்தை மக்களிடம் பரப்பவும் வாய்ப்பாக அமையும் அல்லவா?

தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி.

நிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் !

12

நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திவரும் மையப் புலனாய்வுத் துறை, கடந்த மார்ச் 8 அன்று அவ்விசாரணை குறித்த அறிக்கையொன்றை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அப்பொழுதே, “சட்ட அமைச்சரிடம் விசாரணை அறிக்கையின் வரைவு காட்டப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது” என இவ்வூழல் குறித்து வழக்கு தொடர்ந்திருக்கும் பொதுநல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டன. அச்சமயத்தில் சி.பி.ஐ.-யின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், “அரசைச் சேர்ந்த யாரிடமும் வரைவு அறிக்கை காட்டப்படவில்லை” என அடித்துக் கூறினார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக பிரமாண பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

பிரதமர் மன்மோகன் சிங் - சட்ட அமைச்சர் அஸ்வனி குமார்
அம்பை எய்த குற்றவாளிகள் : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் .

இந்தச் சதியை மூடிமறைத்துவிட காங்கிரசு செய்த முயற்சிகள் மண்ணைக் கவ்விவிட்ட நிலையில், நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய விசாரணை நிலை அறிக்கையைக் கடந்த மார்ச் 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திடம் அளிப்பதற்கு முன்பாகவே, அந்த அறிக்கையின் வரைவை மைய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் விருப்பத்தின் பேரில், அவருடன் சி.பி.ஐ. பகிர்ந்து கொண்டது; “சட்ட அமைச்சர் மட்டுமின்றி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய நிலக்கரி அமைச்சகத்தைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகளுடனும் வரைவு விசாரணை அறிக்கை அந்த அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது” என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கடந்த ஏப்ரல் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்தார்.

வரைவு விசாரணை அறிக்கையைச் சட்ட அமைச்சரிடமும், மற்ற இரு அதிகாரிகளிடமும் காட்டியதை ஒப்புக் கொண்டுள்ள சி.பி.ஐ., “அவர்களிடம் காட்டிய பிறகு அறிக்கையில் ஏதாவது திருத்தம் செயப்பட்டுள்ளதா?” என்பது குறித்துத் தனது பிரமாணப் பத்திரத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. முழுக்க நனைந்த பிறகும் முக்காடு போட்டுக் கொள்ளும் சி.பி.ஐ.-யின் இந்த அசட்டுத் துணிச்சல் நம்மை விக்கித்துப் போக வைக்கிறது.

இதுவொருபுறமிருக்க, “விசாரணை அறிக்கைகளை இனி மேற்கொண்டு அரசைச் சேர்ந்த யாரிடமும் காட்டமாட்டோம்; ஏப்ரல் 26 அன்று நீதிமன்றத்திடம் அளித்துள்ள விசாரணை அறிக்கை அரசைச் சேர்ந்த யாருடனும் எந்தவிதத்திலும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை” என்றும் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறது, சி.பி.ஐ

ஒரேயொரு அறிக்கையின் மூலம் மகாகனம் பொருந்திய கோர்ட்டார் அவர்களைக் கேலிப்பொருளாக்கிவிட்ட சி.பி.ஐ.-க்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நெற்றிக்கண்ணைத் திறக்கவும் இல்லை; சி.பி.ஐ.யின் பெயரால் தாக்கல் செய்யப்பட்ட காங்கிரசின் அறிக்கையை அவர்கள் உடனடியாகத் தள்ளுபடி செயவுமில்லை. மாறாக, மைய அரசு, சி.பி.ஐ.-க்கு எதிராக வழக்கமான கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளை எழுப்பி, அதற்குப் பதில் அளிக்குமாறு கூறிவிட்டு, இந்த விசாரணையை மே 6-ந் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டனர்.

சி.பி.ஐ., விசாரித்து வரும் இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் அனைத்தும் 1993-க்குப் பிறகு, அதாவது தனியார்மயம்-தாராளமயத்தின் பிறகு ஆரம்பித்து 2010 வரை, தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடந்துள்ளன. இந்தப் பதினேழு ஆண்டுகளில், பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த 2004-2008 காலக்கட்டத்தில்தான் முறைகேடுகள் முழு வேகத்தில் நடந்தன. கடந்த பதினேழு ஆண்டுகளில் ஒதுக்கீடு செயப்பட்ட 195 சுரங்க வயல்களுள், 160 வயல்கள் அந்த நான்கு ஆண்டுகளில்தான் ஒதுக்கப்பட்டன.

“அலைக்கற்றைகளை ஏலத்தில் விட வேண்டும் என நான் அறிவுறுத்தியதை ஆ.ராசா ஏற்றுக் கொள்ளவில்லை” எனப் புளுகி வரும் மன்மோகன் சிங், நிலக்கரி வயல்களை ஏலத்தில் விட வாய்ப்பிருந்தும் அதனைத் திட்டமிட்டே புறக்கணித்துவிட்டு, விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினார். முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட அலைக்கற்றைகளைப் பெறுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள் வரிசையில் நிற்கவாவது வேண்டியிருந்தது. நிலக்கரி வயல்களைப் பெற அந்தச் சிரமம்கூட இல்லை. அமைச்சர்கள்-அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு யார்யாருக்கெல்லாம் வயல்களை ஒதுக்கலாம் என விரும்பியதோ, அவற்றுக்கெல்லாம் நிலக்கரி வயல்களை மலிவு விலையில் வாரிக் கொடுத்தார், மன்மோகன் சிங்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்நிலக்கரிச் சுரங்க வயல்களை இந்தியச் சந்தை மதிப்பின்படி ஒதுக்கீடு செய்யாததால், அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது, கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை. ஏறத்தாழ 1,700 கோடி டன் கொண்ட நிலக்கரி வயல்கள் தனியாருக்குத் தரப்பட்டிருப்பதாகவும், அதன் மதிப்பு 42,50,000 கோடி ரூபாய் என சி.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது. இந்த ஊழலோடு ஒப்பிட்டால் அலைக்கற்றை ஊழல் சுண்டைக்காய்தான்.

2 ஜி ஊழல் வழக்கில் பலியிடுவதற்கு ஆ.ராசா கிடைத்ததைப் போல, நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மன்மோகனைக் காப்பாற்றுவதற்கு யாரும் கிடைக்காததால், விசாரணை அறிக்கையைத் தனக்குச் சாதகமாகத் திருத்தியிருக்கிறது, காங்கிரசு கும்பல். தலைமைக் கணக்கு அதிகாரி இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு மாட்டிக் கொண்ட சம்பவத்தின் நினைவு மறைவதற்கு முன்னதாகவே, அடுத்த மோசடி வேலையில் கூச்சநாச்சமின்றி இறங்கி மாட்டிக் கொண்டுள்ளார், பிரதமர் மன்மோகன் சிங். அதிகாரம் கையில் இருக்கும் துணிவில், “அறிக்கையில் இருந்த இலக்கணப் பிழைகளைத்தான் சட்ட அமைச்சர் சரி செய்தார்” என மிதமிஞ்சிய கொழுப்போடு அறிவித்து, இந்தச் சதியை நியாயப்படுத்துகிறார், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத். இப்பொழுது இம்மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து மன்மோகனைக் காப்பாற்றுவதற்காகக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் முதல் களப்பலியாக்கப்பட்டுள்ளார்.

ஹரேன் ராவல் தான் பதவி விலகிய கையோடு அட்வகேட் ஜெனரல் கூலம் வாகன்வாதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தான் வாகன்வாதி சொல்லித்தான் சி.பி.ஐ.யின் அறிக்கையைப் பார்த்து அதில் திருத்தங்களைச் சொன்னதையும்; வாகன்வாதி சொல்லித்தான் உச்ச நீதிமன்றத்தில் அரசைச் சேர்ந்த யாரும் அறிக்கையைப் பார்க்கவில்ல என வாதாடியதையும்” குறிப்பிட்டிருக்கிறார். அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி அடுத்தவர்களை மாட்டிவிடும் வேலையைக் கூச்சமின்றிச் செயக்கூடியவர்தான் என்பது 2 ஜி ஊழல் வழக்கிலேயே அம்பலமாகியிருக்கிறது. இது மட்டுமல்ல, காங்கிரசு தலைமைக்காக அவர் எதையும் செய்யத் துணிந்தவர். மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட பொழுது, முலாயம் சிங் அவரது அரசைக் காப்பாற்றினார் என்பதற்காகவே, முலாயமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டவர்தான் அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி.

சோனியா, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கூலம் வாகன்வாதி ஆகியோரைக் கொண்ட ஆளும் கும்பல் நீதி, நேர்மை, நாணயம், அறம், சட்டம், மக்கள் நலன் என எந்த விழுமியங்களையும் ஒரு பொருட்டாக மதிக்காத, கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரகு வேலை பார்ப்பதையே முழுமூச்சாகக் கொண்ட, அதற்காக எப்படிபட்ட கிரிமினல் வேலைகளிலும் இறங்கத் தயங்காதவர்கள் என்பதைத்தான் இந்த இரண்டு ஊழல் விவகாரங்களும் எடுத்துக்காட்டுகின்றன. மற்றொரு ஆளும் வர்க்கக் கட்சியான பா.ஜ.க.வும் காங்கிரசுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதை கர்நாடகாவில் நடந்துள்ள சுரங்க ஊழல் அம்பலப்படுத்தியிருக்கிறது.

– குப்பன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

புதிய ஜனநாயகம் – மே 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

2

புதிய ஜனநாயகம் மே 2013

புதிய ஜனநாயகம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

தலையங்கம் : கொள்ளையில் கொள்ளை; ஊழலுக்குள் ஊழல்!

ஸ்டெர்லைட் தீர்ப்பு: நீதி கொன்ற உச்ச நீதிமன்றம்!
நிலக்கரி ஊழல்: மன்மோகனின் தகிடுதத்தங்கள்
2 ஜி ஊழல்: மன்மோகனின் சாயம் வெளுத்தது!

ஈழ அகதிகள்: தமிழகத்தின் முள்வேலி முகாம்கள்!
சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம்!

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: ஆணாதிக்க வக்கிரத்தின் உச்சம்!
கொரிய தீபகற்பம்: அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா?

புதிய ஜனநாயகம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள் !

8

ப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் குமுறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குறிப்பிட்ட சில போலீசு அதிகாரிகள் தன்னை சிக்க வைத்து விட்டனர் என்ற அப்சல் குருவின் குற்றச்சாட்டு விசாரிக்கப்படாமலேயே கள்ளத்தனமாகவும் இரகசியமாகவும் அவர் தூக்கிலிடப்பட்டு விட்டார். அப்சல் குருவின் வழக்கு நாடறிந்த கதை. ஆனால் போலீசாலும் இராணுவத்தாலும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞர்களின் கதைகள் காஷ்மீரில் ஏராளம். பொய் வழக்கு, சிறை, சித்திரவதை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், தலைமறைவாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை காஷ்மீரின் இளைஞர்களுக்கு போலீசும் இராணுவமும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. பல இளைஞர்களை கொடுமைப்படுத்தி போராளிகளாக மாற்றுவதே அரசின் அடக்குமுறைதான் என்கிறார்கள் காஷ்மீர் மக்கள்.

காஷ்மீரின் இளைய தலைமுறை போராளிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்ற சித்திரத்தை கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

1. சித்திரவதையும் அவமானமும் உருவாக்கிய போராளி

பெயர் : முசாமில் அகமது தர்
வயது : 24
ஊர் : சோப்போர்
தொழில் : மருத்துவ உதவியாளர்

காஷ்மீர் கல் எறிதர்
காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கல்லெறிய வைத்து பின்னர் போராளியாக்கி கொல்கிறார்கள்.

2009-ம் ஆண்டு மருத்துவ உதவியாளர் பட்டம் பெற்று சோப்போர் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார் முசாமில். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்  ஏ.கே.47 துப்பாக்கியை காதலிக்க ஆரம்பித்திருந்தார். ’முசாமில் ஒரு தலைமறைவான லஷ்கர்-ஈ-தொய்பா போராளி’ என்று அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் என்று அறிவித்தார். 2012-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதியன்று ஸ்ரீநகருக்கு வடக்கே 66 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோப்போர் நகரத்தில் பாதுகாப்பு படையினருடனான என்கவுண்டரில் முசாமில் கொல்லப்பட்டார்.

இடையில் என்ன நடந்தது? நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த முசாமில் ஒரு காலத்தில் ராஜீவ்காந்தி எழுத்தறிவு இயக்கத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் கொல்லப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வெள்ளைத் தொப்பி தரித்த குறுந்தாடி வைத்த நம்பிக்கையான முகத்துடன் காட்சியளிக்கிறார். “மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து குடும்பத்தின் கடன்களை அடைக்க உழைத்துக் கொண்டிருந்தார்” என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

ஆனால், நவம்பர் 17, 2010-ல் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது. அன்று போலீசிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த யாரோ இரண்டு பேர் ஒரு மூட்டையை முசாமில் வீட்டு தோட்டத்தில் தூக்கி எறிந்து விட்டு போனார்கள். அதைப் பார்த்து பயந்து போன அவரது அம்மா, யாருக்கும் தெரியாமல் அதை கிணற்றில் தூக்கி போட்டு விட்டார். அந்த செயலில் ஆரம்பித்த தொடர் நிகழ்வுகள் முசாமிலின் உயிரை பறிப்பதில் கொண்டு விட்டன.

விரைவிலேயே போலீசும் பாதுகாப்பு படையினரும் முசாமில் வீட்டுக்கு வந்தனர். முசாமிலின் அப்பா மொகமது அமீன் தர், முசாமில் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களையும் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் முசாமில் சித்திரவதை செய்யப்பட்டார். அவரை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து சகோதரர்கள் இருவரையும் இரண்டு கால்களையும் இரண்டு பக்கம் இழுக்கும்படி செய்தனர். அவர்களது தந்தை இதைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். முசாமிலின் கதறல்களை கேட்டு போலீஸ்காரர்கள் கிண்டல் செய்தார்கள். “மிகவும் அவமானமான மறக்க முடியாத சம்பவம்” என்கிறார் மொகமது அமீன் தர்.

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு முசாமில் 10 மாதங்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இறுதியில் வழக்கு ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு முசாமில் ஒரு தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட போது அவரது குடும்பத்தினரின் உலகமே இடிந்து போனது. “போலீசின் சித்திரவதையும் கொடுமைகளும் துப்பாக்கி தூக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் செய்து விட்டன” என்கிறார் முசாமிலின் தந்தை.

2. குறைவாக அடிப்பதற்காக போலீசுக்கு லஞ்சம் கொடுத்த சிறுவன்

பெயர் : அதீர் அகமத் தர்
வயது : 19
ஊர் : சோப்போர்
பணி : கல்லூரி முதலாமாண்டு மாணவர்

கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில்  குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு என்பது வெகு காலத்துக்குப் பிறகுதான் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்தது.

சோபோரின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அதீர் ஒரு லஷ்கர் போராளியாக மாறியது, காஷ்மீர் இளைஞர்களின் கதைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கடந்த டிசம்பர் மாதம் சோப்போரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சைத்புரா கிராம மக்கள் அதிகாலையில் துப்பாக்கிச் சத்தத்தால் எழுப்பப்பட்டனர். பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 5 பாகிஸ்தானி ஊடுருவலாளர்களும் ஒரு உள்ளூர் தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட உள்ளூர் போராளிதான் அதீர்.

கால்பந்து ரசிகனான அதீர், கிறிஸ்டினோ ரொனால்டோவின் சிகையலங்காரத்துடன் கறுப்புக் கோடு போட்ட ஸ்வெட்டர் அணிந்திருக்கும் புகைப்படம் மட்டும்தான் அவனது குடும்பத்தின் பொக்கிஷமாக இருக்கிறது. “போலீஸ் பொய்யான வழக்குகளில் அதீர் போன்ற இளைஞர்களை சிக்க வைத்து அவர்களது குடும்பங்களையும் சேர்ந்து தண்டிக்கின்றனர்” என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2011-ல் நடந்த ஒரு கல் எறிதல் சம்பவத்தில் அவனுக்கும் தொடர்பு உண்டு என்று ஒத்துக் கொள்ளுமாறு அதீர் போலீஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டான். நான்கு வாரங்களுக்கு இரக்கமில்லாமல் அடித்து துவைத்த பிறகு அவனை பிணையில் வெளியில் விட்டனர். அடிவயிற்றில் உதைப்பது, கம்பால் அடிப்பது, பெல்டுகளால் விளாசுவது என்று சித்திரவதை செய்யப்பட்டதாக அதீர் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறான்.

பிணையில் வந்த பிறகும் சித்திரவதையும் கொடூரங்களும் தொடர்ந்தன. அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கும் சிறப்பு படையினர் முகாமுக்கும் அடிக்கடி அழைக்கப்பட்டு அவன் சித்திரவதை செய்யப்பட்டான். அதை போலீஸ் உயர் அதிகாரிகள் மேற்பார்வை இட்டனர்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் அதீர் தலைமறைவாகி விட்டான். “விடாமல் தொடரும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவனுக்கு வேறு வழியே இருக்கவில்லை” என்கிறார் போலியாவால் பாதிக்கப்பட்டவரான அதீரின் சகோதரர் தவ்ஹீத் அகமது தர்.

அதீரின் குண்டு பாய்ந்த உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான போதுதான் குடும்பத்துக்கு அவனைப் பற்றிய கடைசி செய்தி வந்து சேர்ந்தது.

3. மீண்டும் போராளியாக மாறிய பையன்

பெயர் : ஆஷிக் அகமது லோன்
வயது : 22
ஊர் : ஷோப்பியன்
பணி : கல்லூரி முதலாண்டு மாணவன்

10-ம் வகுப்பில் படிக்கும் போது ஆஷிக் போராளி அமைப்பு ஒன்றில் சேர்ந்தான். ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிலிருந்து விலகி போலீசில் சரண்டைந்தான். வெளியில் வந்ததும் ஒரு மளிகைக் கடை நடத்த ஆரம்பித்ததோடு உள்ளூர் கலைக் கல்லூரியில் படிப்பதற்கும் பதிவு செய்தான்.

ஆனால், அதன் பிறகுதான் சோதனைகள் ஆரம்பித்தன. ஷோப்பியனில் உள்ள போலீஸ் முகாமுக்கு அவன் அடிக்கடி அழைக்கப்பட்டான். ஒவ்வொரு முறையும் அவன் வருவதற்கு முன்பு அவனது இரத்தம் தோய்ந்த உடலுக்கு ஒத்தடம் கொடுப்பதற்கு சுடுநீரை அவனது 45 வயதான அம்மா ஜரீபா அக்தர் தயாராக வைத்திருப்பார். “அப்போதெல்லாம் குறைந்தது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்‘ என்கிறார் அவர். ஆனால் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஊரை விட்டு ஓடி போய் விட்ட அவன் எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்படலாம் என்ற பயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவனது அம்மா.

ஆஷிக் சரணடைந்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக போலீஸ் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறது. “அவனை போராளி அமைப்பில் சேர வைத்ததே இவர்கள்தான், இப்போது வேலை வாங்கித் தருவதாக பசப்புகிறார்கள்” என்று குமுறுகிறார் ஜரீபா.

********

இந்த மூன்று பேரின் குடும்பத்தினர் கூறுவதையுமே பொய் பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறது காஷ்மீர் போலீசு.

2012ல் மட்டும் 40 சிறுவர்கள் ஹிஜ்புல் முஜாகிதினீலும், லஷ்கர்-ஈ-தொய்பாவிலும் சேர்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள். வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள். … அரசைப் பொருத்தவரை இது போராளிகளின் புள்ளிவிவரக் கணக்கில் ஒரு சேர்க்கையாக இருக்கலாம். ஆனால் காஷ்மீர் மக்களை பொறுத்த வரை இவர்கள், இராணுவமும் போலீசும் நிகழ்த்தும் கொடுமைகளால் உருவாக்கப்படும் தியாகிகள்.

நன்றி: தெகல்கா – 19.1.2013
தமிழாக்கம் : செழியன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________