Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 721

பத்திரிகையாளர்களே – மிக்சர் சாப்பிடவா சங்கம், காது குடையவா பேனா ?

16
ராஜா கைது

சன் டிவி ராஜான் நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியர் ராஜா, செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்தும், இதற்கு எதிராக துணிவுடன் அகிலா நடத்திவரும் போராட்டம் குறித்தும் அறிந்திருப்பீர்கள். சன் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திகளில் ஒருவராக 15 ஆண்டு காலமாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ராஜா, புழல் சிறையில் சில நாட்களை கழித்துவிட்டு, நிபந்தனை பிணையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினசரி கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். ராஜாவுக்குப் புரோக்கர் வேலைப் பார்த்த வெற்றிவேந்தன் என்ற நிருபர் இன்னமும் காவல்துறையால் தேடப்பட்டுவருகிறார். இது அகிலா என்ற தனியொரு பெண்ணின் பிரச்னை இல்லை. சன் டி.வி. என்ற தனியொரு நிறுவனத்தின் பிரச்னையும் அல்ல. தமிழ் ஊடகங்களின் அவலநிலைக்கு அகிலா ஓர் துலக்கமான உதாரணம்.

ராஜா போன்ற ஊடகப் பொறுக்கிகளுக்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கியிருக்கும் இந்தப் பெண்ணுக்கு அமைப்பு ரீதியாகவும், தனி நபர் என்ற அளவிலும் சிலர் உதவி வருகின்றனர். ஆனால் இதற்காகத் திரண்டு போராடியிருக்க வேண்டிய கடப்பாடுள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் இருந்து  இதுவரையிலும் ஒரு சவுண்டும் இல்லை. இந்தப் பிரச்னை எங்கேயோ சிங்கப்பூர் பக்கம், தாய்லாந்து பக்கம் நடப்பதைப் போலவே மௌனமாக இருக்கிறார்கள். இது அருவெறுப்பான மௌனம்; அச்சம் தரும் அமைதி. தங்கள் சொந்த வலிக்காகக் கூட போராடத் திராணியற்ற இவர்கள்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாம். ஊருக்கு நியாயம் சொல்கிறார்களாம். மக்களுக்கு உண்மைகளை உரக்கச் சொல்கிறார்களாம். என்ன வேடிக்கை இது?

சென்னையில் மட்டும் ஏழெட்டு பத்திரிகையாளர் சங்கங்கள் செயல்படுகின்றன. சென்னை பத்திரிகையாளர் மன்றம், பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் உள்ளிட்ட இந்த சங்கங்களுக்கு சென்னையின் பிரதானமான இடங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. அதற்கு நிர்வாகிகள் இருக்கிறார்கள். குறைந்தது சென்னையில் மட்டும் 500 பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மாநிலம் முழுவதும் கணக்கிட்டால் மாவட்டத்துக்கு ஒரு சங்கம் என வைத்துகொண்டாலும் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும். இந்த சங்கங்கள் மத்தியிலிருந்து இதுவரை ஈனஸ்வரத்தில் கூட ஒரு எதிர்ப்புக் குரல் எழவில்லை. ஏன்?

சன் டி.வி. என்ற பிரமாண்டம் இவர்களை அச்சுறுத்துகிறதா? ஏதாவது பேசினால் எதிர்கால வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று அஞ்சுகிறார்களா? வாய் திறந்தால் இருக்கும் வேலையும் பறிபோய்விடும் என்று அடங்கிக் கிடக்கிறார்களா? விடை எதுவாயினும், கேள்வி ஒன்றுதான். சொந்தத் துறையில், உடன் பணிபுரியும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சிறுகுரல் கூட எழுப்ப முடியவில்லை என்றால், காது குடையவா பேனாமுனை? மிக்சர் சாப்பிடவா சங்கம்?

பத்திரிகையாளர்களுக்கு தன்மானம் இல்லையா?

சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்துக்கும், ‘ஏர்போர்ட்’ பாலு என்ற பத்திரிகையாளருக்கும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் பஞ்சாயத்து ஆனது. பாலுவை ‘நாய், நாய்’ என்று திட்டிய விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?’ என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள். அதற்கும் முன்பாக தினமலரில் சினிமா நடிகைகளை தவறாக சித்தரித்து ஒரு கட்டுரை எழுதினார்கள். அதற்காக சினிமாக்காரர்கள் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தினர். அதில் பேசிய நடிகர் விவேக் பத்திரிகையாளர்களை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்தார். உடனே ஊடக உலகமே சேர்ந்து அதற்கு ஆவேச கண்டனம் தெரிவித்தது.

மிக அண்மையில் சென்னை ஐ.ஐ.டி.யில் ஒரு பத்திரிகையின் புகைப்படக்காரர் தாக்கப்பட்டார். அதற்காக வெகுண்டெழுந்த பத்திரிகையாளர் சங்கத்தினர் சாலை மறியல் செய்து நீதி கேட்டனர். கடந்த வாரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. அப்போது ‘புதிய தலைமுறை’ தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பு வாகனத்தை தள்ளி நிறுத்துமாறு காவல்துறையினர் சொல்ல, அது தொடர்பாக இரு தரப்புக்கும் வாய்த் தகராறு மூண்டது. உடனே அங்கேயே பத்திரிகையாளர்கள் சாலை மறியல் செய்தனர். ‘தூத்துக்குடியில் நடந்த பிரச்னைதானே’ என சென்னை பத்திரிகையாளர் மன்றம் மௌனம் காக்கவில்லை. அதை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டது.

பத்திரிகையாளர் மன்றம் சும்மா இருக்கிறது என்று நாம் “அபாண்டமாக” குற்றம் சாட்ட முடியாத அளவுக்கு அவர்கள் மேற்கண்ட வேலைகளை செய்திருக்கிறார்கள்தான். ஆனால் யாருக்காக? மேற்கண்ட கண்டனங்களும், போராட்டங்களும் பத்திரிகையாளர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்டவையா? வேலை கெட்டு முதலாளிக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது, பத்திரிகையுலக முதலாளிகளின் கெத்துக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவை பேனாமுனையின் வலிமையை நிரூபிக்கும் போராட்டங்களா, பத்திரிகை முதலாளிகளின் வலிமையை ஒரு அரசியல்வாதிக்கும், நடிகருக்கும், போலீசுக்கும் நிரூபித்துக் காட்டும் போராட்டங்களா?

வேறு மாதிரி சொன்னால், வேலை செய்வதில் வெளியார்களால் இடையூறு நேரும்போது கூக்குரல் எழுப்பும் சங்கங்கள், தங்களை வேலையையே முதலாளிகள் பறிக்கும்போது பொத்திக்கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஊடக நிறுவனத்தில் இருந்தும் கொத்து, கொத்தாக பலர் வெளியேற்றப்படுகின்றனர். நீக்கத்துக்கான நியாயமான காரணம் எதுவும் சொல்லப்படுவது இல்லை. முறையான நோட்டீஸ் தரப்படுவதில்லை. ஒரு டீக்கடைக்காரர் தன்னிடம் வேலைபார்க்கும் டீ கிளாஸ் பையனை வேலையை விட்டு நிறுத்துவதாக இருந்தால் கூட நூறு ரூபாயை கையில் கொடுத்து அனுப்புவார். அந்த கருணைகூட ஊடக முதலாளிகளுக்கு கிடையாது. திடீர் என்று ஒருநாள் வேலை பறிபோகும் அவலம் இங்குதான் நடக்கும்.

எல்லோருக்கும் இது பொருந்தும்; பர்மனன்ட், காண்ட்ராக்ட், புரோபேஷனர்.. என்பதெல்லாம் சும்மா பெயருக்குத்தான். தானாக வேலையை விட்டுப் போனாலும் அதுவரையிலான பிடித்தத் தொகையை முறையாக தருவதில்லை. வேறு நிறுவனத்தில் வேலையில் சேர விடாமல் போட்டுக்கொடுக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட நிலைக்கு எதிராக என்றைக்கேனும் பத்திரிகையாளர் சங்கங்கள் பேசியதுண்டா? கொடிபிடித்து கோஷம் போடவேண்டாம். குறைந்தபட்சம் லேபர் கோர்ட்டுக்குப் போகும் திராணியாவது உண்டா? இல்லை. தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படும்போது தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் நடந்து கொள்ளும் சங்கம், முதலாளியின் தொழில் பாதிக்கப்படும்போது மட்டும் கிளர்ந்தெழுகிறது என்றால், அதற்குப் பெயர் தொழிற்சங்கமா?

தங்கள் தொழிலையும் வணிகத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பல்வேறு துறைகளிலும் முதலாளிகள் சங்கம் வைத்திருக்கிறார்கள். டெலிகாம், ஆட்டோமொபைல் போன்ற கார்ப்பரேட் பெருந்தொழில் முதலாளிகளில் தொடங்கி, கோயம்பேடு சந்தையின் காய்கனி வியாபாரிகள் வரையிலான அனைவருக்கும் இது பொருந்தும். பத்திரிகை முதலாளிகள் மட்டும்தான் தங்களுடைய தொழிலைக் காப்பாற்றும் பொறுப்பை பத்திரிகையாளர்களிடம் விட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

கோயம்பேடு முதலாளி தக்காளி விற்கிறார். பத்திரிகை முதலாளி கருத்தை அல்லவா விற்கிறார்! தக்காளி கூடை உடைந்தால், “நசுங்குவது முதலாளியின் இலாபம்தான்” என்று படிப்பறிவில்லாத லோடு மேனுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. ஆனால் பத்திரிகையாளர்கள் படித்தவர்கள் என்பதால், நசுக்கப்படுவது கருத்து என்றும், அதனால் ஏற்படும் இழப்பு தங்களுடையது என்றும் நம்புகிறார்கள். அல்லது அப்படி நம்பிக் கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்றும் கொள்ளலாம்.

சென்னையிலும் சரி, இதர மாவட்டங்களிலும் சரி… நடைமுறையில் பத்திரிகையாளர் சங்கங்கள் என்னதான் செய்கின்றன? லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி பிடிபட்டால் போலீஸுக்குப் போன் செய்து விடுவிப்பது, குடித்துவிட்டு வம்பு செய்தால் சிபாரிசுக்குப் போவது, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஓ.சி. பாஸ் வாங்குவது, புதுப்பட ரிலீஸ் அன்று கியூவில் நிற்காமலேயே டிக்கெட் வாங்குவது, அரசு அலுவலகங்களில் ‘பிரஸ்’ என்று சொல்லி குறுக்கு வழியில் காரியம் சாதித்துக்கொள்வது, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்வது… இவற்றையெல்லாம் செய்யாத ஒரு சங்கமேனும் உண்டா?

சம்பளத்தை குறைவாகக் கொடுத்துவிட்டு ‘கவர்’ வாங்குவதை கண்டுகொள்ளாமல் விடுவது பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் சலுகை அல்ல. அது சுய மரியாதையை மழுங்கச் செய்வதற்கான ஏற்பாடு. “சிரிப்பு போலீசு” போல “சிரிப்பு பத்திரிகையாளன்” என்ற காரெக்டர் இன்னும் சினிமாவில் வரவில்லை. அவ்வளவுதான். அப்படியே வந்தாலும் அதற்காக யாரும் அசரப்போவதில்லை.

கடந்த கருணாநிதி ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் பத்திரிகையாளர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் கொடுத்தார். அதை வாங்குவதற்கு நீ, நான் என அடித்துக்கொண்டார்கள். இப்படி அரசு சலுகைகளை நேர்வழியிலும், குறுக்குவழியிலும் பெறுவதில் மட்டும்தான் அக்கறை காட்டுவோம் என்றால் அதற்கு பெயர் சங்கமா?

சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்ட கட்டடத்தில் ‘எஸ்.ஆர்.எம். மாளிகை’ என்ற பெயரில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் செயல்படுகிறது. இதைக் கட்டிக்கொடுத்தது ‘புதிய தலைமுறை’ முதலாளியும், கல்வி வியாபாரியுமான பச்சைமுத்து. அந்த நன்றி விசுவாசத்தை காட்டவேனும் சன் டி.வி. ராஜா கைது குறித்து பேசியிருக்கலாம். ஆனால் பேசவில்லை. அருகிலேயே இன்னொரு கட்டடடத்தில் இயங்கும் பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டும் கமுக்கமாக இருக்கிறது. ரிச்சி தெருவில் செயல்படும் எம்.யு.ஜே.வும் சைலண்ட் மோடுதான்.

சரி, சங்கங்கள்தான் இப்படி… தனிப்பட்ட வகையில் (ஓரிரு விதிவிலக்குகள் தவிர்த்து) பத்திரிகையாளர்கள் மௌனமாக இருக்கிறார்களே எதனால்? சன் டி.வி.யில் பணிபுரியும் ஒருவர் அந்தப் பெண்ணுக்காக பரிந்துபேசினால் அவரது வேலைக்குப் பிரச்னை வரும; அதனால் அங்கிருப்போர் பேசமுடியாது. மற்ற தொலைகாட்சிகள், செய்தித்தாள்கள், வார இதழ்களில் இருந்தும் சத்தமில்லை. பேசினால் சன் டி.வி.யில் இருந்து அழுத்தம் தந்து வேலையில் இருந்து நீக்கிவிடுவார்களா? நடக்கலாம். சன் டி.வி.யின் தலையீடே கூடத் தேவையில்லை. தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பதைப் போல, என்ன தான் போட்டியாளனாக இருந்தாலும், சக முதலாளிக்காக வர்க்க பாசத்துடன் முதலாளிகள் இப்படிப்பட்ட ஊர் நாயம் பேசும் நபர்களை களையெடுக்கலாம். அது முதலாளிகளின் வர்க்க உணர்வு. பத்திரிகையாளர்களிடம் இல்லாமல் போய்விட்ட உணர்வு.

பல பத்திரிகையாளர்களின் மூளை, ‘இவற்றை பேசினால் நமக்கு ஆபத்து’ என்று “டிஃபால்ட்டாக” சுய தணிக்கை செய்துகொள்கிறது.  ‘தன்னளவில் நேர்மையாக இருப்பது’ என்ற குறைந்தபட்ச அம்சம் கூட இப்போதைய பத்திரிகையாளர்களுக்கு இல்லை. ‘என்னால இந்த நியூஸை எல்லாம் எழுத முடியாது’ என எடிட்டரின் முகத்துக்கு நேரே சொல்லும் துணிவு இன்று யாருக்கும் இல்லை. ‘இந்தப் பிரச்னையை இந்த கோணத்தில் இருந்து அணுகக்கூடாது. இது ஒரு சார்பானது’ என ஆசிரியர் குழு கூட்டத்தில் குரல் உயர்த்தி விவாதிப்பதெல்லாம் அந்தக் காலத்து சினிமாக் காட்சிகளாகிவிட்டன. தனக்கென்று சொந்த கருத்து இருந்தாலும் கூட, அதை அலுவலக வாயில் டீ கடையில் அதிருப்தியாகப் பேசி கலைகிறார்களே தவிர அறவுணர்ச்சியுடன் சண்டையிடுவதில்லை. பத்திரிகையாளர்கள் என்பவர்கள் நிர்வாகத்தின் வசனத்துக்கு வாய் அசைக்கும் நடிகர்களாக மாறி வருகின்றனர்.

அலுவலகத்துக்கு வெளியே ‘நாங்கெல்லாம் பிரஸ்ஸு’ என்று வீராப்புக் காட்டும் இவர்கள், அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் ஓர் அடிமையின் உடல்மொழிக்கு மாறிவிடுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு போலீசு கான்ஸ்டபிளின் காரெக்டர்தான். உயர் அதிகாரிகள் கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும் சகித்துக்கொள்கிறார்கள்.

”நீ எல்லாம் இந்த வேலைக்கு வரலன்னு எவன் அழுதான்? ஊர்லயே மாடு மேய்க்க வேண்டியதானே?”, ”நீ எல்லாம் டீ கிளாஸ் கழுவதான் லாயக்கு”, ”இதை விட வேற என்ன புடுங்குற வேலை?” – இவை எல்லாம் தொலைகாட்சி, பத்திரிகை அலுவலகங்களில் ‘எடிட்டர் சார்’களால் நிருபர்களை நோக்கி, உதவி ஆசிரியர்களை நோக்கி வீசப்படும் வார்த்தைகள். அறிவு இருக்கிறதோ இல்லையோ… தன்மானமும், சுய மரியாதையும் உள்ள யாரும் இந்த வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வேறொரு துறையில் ஒரு ஊழியரைப் பார்த்து மேலதிகாரி இப்படிப் பேசினால் அடுத்த நொடி அதே வார்த்தையில் அந்த ஊழியர் பதிலடி கொடுப்பார் அல்லது அடி கொடுப்பார். இதற்கு படித்திருக்க வேண்டும்; அரசியல் அறிவு இருக்க வேண்டும் என்று அவசியமெல்லாம் இல்லை. தன்மானமும், சுய மரியாதையும் கொண்டவர்களால் இவ்விதம்தான் வினைபுரிய முடியும்.

நீலாங்கரை போராட்டம்
நீலாங்கரை துப்புவுத் தொழிலாளர் போராட்டம்

சமீபத்தில் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை சென்றார். அப்போது மாநகராட்சியின் 185-வது வார்டு துப்புறவுப் பணியாளர் மல்லீஸ்வரி, தீனைய்யா ஆகியோர் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் அம்மாவின் கண்களில் குப்பை பட்டுவிட்டால் கண்கள் அவிந்துவிடும் என பதறிய நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புகழேந்திக்கு டென்ஷன். உடனே அகற்றச் சொல்லி கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க… தீனைய்யா ‘‘அப்படி எல்லாம் பேச வேண்டாம்” என ஆய்வாளரை கண்டித்தார். ‘‘என்னையே எதிர்த்துப் பேசுறியா?” என்று தீனைய்யாவை அடித்து, உதைத்து போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்று அங்கும் அடித்து உதைத்து அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி தொழிலாளர் சங்கம் சார்பாக நீலாங்கரை உதவி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. பத்து நாட்களாகியும் நடவடிக்கை எதுவுமில்லை. ஆத்திரமடைந்த துப்புறவுப் பணியாளர்கள் 500 பேர் ஒன்று சேர்ந்து தங்களது குப்பை லாரிகள் மற்றும் டிரை சைக்கிள்களுடன் நீலாங்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். மூன்று மணி நேரம் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. ‘குப்பை அள்ளுரவனுங்கதானே?’ என இளப்பமாக எடைபோட்ட அந்த போலீஸ் பொறுக்கிக்கு தங்கள் வர்க்கத்தின் போராட்டக் குணத்தைக் காட்டினார்கள் தொழிலாளர்கள்.

தீனைய்யாவிடம் ஆள் அம்பு சேனை இல்லை. தெரிந்தவர்கள் செல்வாக்கான பதவியில் இல்லை. பணம் இல்லை. ஆனால் தன்னை அசிங்கப்படுத்தி பேசுபவன் போலீஸாகவே இருந்தாலும் முகத்துக்கு நேரே எதிர்த்துப் பேசும் தைரியமும், சுய மரியாதையும் அவரிடம் இருந்தது. ‘இப்போ அவசரப்பட்டு கோபப்பட்டுப் பேசினா நாளைக்கு இந்த இன்ஸ்பெக்டர் தொந்தரவு கொடுப்பானே?’ என்று எதிர்காலம் குறித்து காரியவாதமாக அவர் கவலைப்படவில்லை. ஆனால் பத்திரிகையாளர்களோ ‘எதிர்த்து பேசினால் வேலைபோய்விடும்’ என்று அஞ்சுகிறார்கள். அவர்களுடைய அச்சம் பொய்யானது என்று நாம் சொல்லவில்லை. அநீதியானது, நேர்மையற்றது என்கிறோம்.

கிராமப்புறங்களில் ஆதிக்க சாதி வெறியை எதிர்த்துப் பேசும்போது, “நீங்கபாட்டுக்கும் சாதி, அது இதுன்னு பேசிட்டு போயிடுவீங்க. ஊருக்குள்ள இருக்கப்போறது நாங்கதானே?” என்று ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த முதியவர்கள் பேசுவார்கள்.

அதுபோல “நீங்கபாட்டுக்கும் வெளியே இருந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசலாம், எழுதலாம். உள்ளே இருந்துகிட்டு அதையெல்லாம் பண்ண முடியுமா? நாங்க இங்கே தொடர்ந்து வேலைப் பார்க்கனும்ல”  என்று பத்திரிகையாளர்கள் சிலர் கேட்க கூடும்.

இதை எப்படி புரிந்துகொள்வது? இவர்களுக்குள் நடுக்கத்துடன் துடித்துக்கொண்டிருக்கும் நற்குணத்தை பாராட்டிவிட்டு நகர்ந்து செல்வதா? ‘வேறு எதுவும் செய்ய முடியாத கையறு நிலை’ என இதை ஓர் அவலமாக எண்ணி கடந்து செல்வதா? இரண்டும் இல்லை. வெளிப்படையாகப் பேசினால் வரும் இன்னல்களை எதிர்கொண்டு, நேருக்கு நேர் மோதித்தான் இதை தீர்க்க முடியும். இரண்டில் ஒன்று… பொறுக்கி ராஜா… பாதிக்கப்பட்ட பெண்… இருவரில் யாருக்கு ஆதரவு என்று வெளிப்படையாக முடிவெடுக்க வேண்டும். மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு, “வெளியில் இருந்து ஆதரவு” தருவதற்கு இது ஒன்றும் மன்மோகன் சிங்கின் அமைச்சரவை அல்ல. அல்லது தார்மீக ஆதரவு தருகிறோம் என்று தலைமுழுகும் ஓட்டுக்கட்சிகளின் நாடகம் அல்ல.

இது சிந்திக்க வேண்டிய தருணம். மற்ற துறைகளை போலவே ஊடகங்களிலும் ஆட்குறைப்பு அதிவேகமாக நடக்கிறது. மின்னணு ஊடகத்தின் வளர்ச்சி, அச்சு ஊடகங்களின் ஊழியர் எண்ணிக்கையை காவு கேட்கிறது. காட்சி ஊடகங்களில் இளமைத்துடிப்பும், உத்வேகமும் இருக்கும் நாற்பதுகளின் முன்பகுதி வரையிலும் வேலைக்கு வைத்துக்கொண்டு, அதன்பிறகு துரத்தி அடிக்கப்படுகின்றனர். எப்ப்டி சமாளிப்பது இதை? ஒரே வழி சங்கம். ஒரு நேர்மையான, சுயமரியாதையுள்ள, சமரசமற்ற, போர்க்குணம் மிக்க ஊடகவியலாளர் சங்கம்தான் இன்றைய உடனடித் தேவை.

ராஜா கைதுபொறுக்கி ராஜாக்கள் சட்டங்களுக்குப் பயப்படமாட்டார்கள். “சங்கம் இருக்கிறது” என்ற அச்சம் மட்டுமே பொறுக்கி ராஜாக்களை தடுக்கும். வேலை உத்திரவாதமின்மை எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெண் ஊழியர்கள் மீது மேலாளர்களின் பாலியல் தொந்திரவுகள் தீவிரமடையும். ஆண் ஊழியர்கள் மத்தியில் அடிமைகளும் அதிகரிப்பார்கள்.

இன்று பெரும்பாலான பத்திரிகை அலுவலகங்களில் அச்சகப் பிரிவில் உறுதியான சங்கங்கள் செயல்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் நடத்தும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின் பலன்தான் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கிறது. அந்த நெல்லுக்குப் பாயும் தண்ணீர் இல்லை எனில் இந்த புல்லுக்கும் எதுவும் கிடைக்காது. அந்த அச்சக ஊழியர்களிடம் இருக்கும் ஒற்றுமையும், உறுதியும் பத்திரிகையாளர்களிடம் ஏன் இல்லாமல் போனது என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு ஆலைத் தொழிற்சங்கப் போராட்டம் அந்த ஆலைத்தொழிலாளிகளுக்கு மட்டுமே உரிமைகளை பெற்றுத் தரும். பத்திரிகையாளர்களுடைய போராட்டம் வேறு வகையானது. கருத்துரிமை, ஜனநாயகம் என்ற முகமூடிகளின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் முகவிலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம், மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமைகளை இது உடைக்க முடியும்.

ராஜாவின் மீது புகார் கொடுத்த காரணத்தினால், வேறு பொய்க் குற்றங்களை ஜோடித்து, அகிலாவை தற்காலிகப் பணி நீக்கம் செய்திருக்கிறது சன் நிர்வாகம். இழப்புகளை சந்திக்காமல் தொழிலாளர்களின் உரிமைகள் எங்கும் நிலைநாட்டப்பட்டதில்லை. எப்படி யோசித்துப் பார்த்தாலும் கடைசியில் இதுதான் உண்மை. சண்டையில் கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?

அடிவாங்கி அடிவாங்கியே கிழியிற சட்டை, ஒரு வாட்டி சண்டை போட்டுத்தான் கிழியட்டுமே!

தனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி!

2

8 அப்பாவி மாணவிகள் பலியானதற்கும், 40 பேர் படுகாயம் அடைந்ததற்கும் முக்கிய காரணம் ஜெயம், வெங்கடேஷ்வரா கல்வி முதலாளிகளின் லாபவெறியே! கண்டன ஆர்ப்பாட்டம்

1.3.2013 அன்று மாலை 6 மணி அளவில் இண்டூர் அருகே ஜெயம் பொறியியல் கல்லூரியின் பேருந்தும், வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரியின் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 மாணவிகள் இறந்தனர்.

இக்கொடுமையை எதிர்த்து கொதித்தெழுந்த தோழர்கள் பலியான மாணவியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பானுஸ்ரீயின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறி, கல்லூரிகளின் இக்கொடுமைகளுக்கு எதிராக உறுதியாக போராட வேண்டும் என்று முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரை சந்தித்து பேசிய தோழர்கள் இந்த விபத்து தனியார் கல்லூரிகளின் லாபவெறியால் விளைந்தது என்று விளக்கி பேசி இதற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

3-ம் தேதி விவசாயிகள் விடுதலை முன்னணி பென்னாகரம் டெம்போ ஸ்டாண்டில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு கேட்டு கல்லூரி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பென்னாகரம் காவல் நிலையத்தில் விண்ணப்பித்தனர். போலீஸ், “நாளைக்குச் சொல்கிறோம்” என்று கூறிவிட்டு ஆர்ப்பாட்டம் நடக்கும் நாளான 5ம் தேதி காலை 11 மணி வரை அனுமதி கொடுக்கவில்லை.

தோழர்களையும் மாணவ-மாணவியரையும் பெண் தோழர்களையும் அணி திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகிக் கொண்டிருக்கும் போது போலீசார் போன் செய்து ‘உங்களுக்கு இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, 8-ம் தேதி வெள்ளிக்கிழமை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினர். தோழர்கள், “பிரசுரம் அச்சிட்டு தேதி போட்டு பிரச்சாரம் செய்துள்ளோம். போஸ்டர் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளோம். பேனர் அச்சிட்டு கொண்டு வந்து விட்டோம். அதனால் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முடியாது, ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என்று தொலைபேசியிலேயே கூறினார்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிந்த காவல்துறை காவல் துறை தோழர்களை அழைத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருவதாக கூறியது.

கண்டன ஆர்ப்பாட்டம் 12 மணிக்கு தொடங்கியது. ஜெயம் பொறியியல் கல்லூரி, வெங்கடேஷ்வரா கலைக் கல்லூரி ஆகியவற்றின் முதலாளிகளின் லாபவெறிக்கு எதிரான முழக்கங்கள் விண்ணில் காற்றலைகளாக பொதுமக்களின் காதுகளுக்கு பறந்தன.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் பிரகாஷ், “பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சரியாக மருத்துவம் கொடுக்காமல் அவர்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றத் துடிக்கும் கல்நெஞ்சத்தை” அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்து கண்டன உரையாற்றிய தோழர் வனிதா, “இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரண்டு வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கைக்கூலி பேராசிரியர்களைக் கொண்டு 3 இடங்களில் தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளது. அயோக்கியத்தனமில்லையா? இப்படிப்பட்ட பேராசிரியர்களின் தங்கையோ மகளோ இறந்திருந்தால் இப்படி செய்வார்களா” என்று வினவியது வேலை கொடுக்கிறான் என்பதற்காக பச்சை படுகொலைக்கு துணைபோகும் கைக்கூலி பேராசிரியர்களின் கொலைபாதகத்தை, இரக்கமற்றத் தன்மையை அம்பலப்படுத்தியது.

அடுத்து பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழர் ஆம்பள்ளி முனிராஜ், “எந்த தனியார் முதலாளியும், மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடு செயல்படுவதில்லை. பணம் பறிக்க வேண்டும், அதிக கட்டணம் வாங்கி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கொள்ளை அடிக்க வேண்டும்” என்ற நோக்கத்திலேயே தனியார் பள்ளி-கல்லூரிகளை தொடங்குகின்றனர், நடத்துகின்றனர். மக்களும் பெற்றோர்களும் தனியார் கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்க்காமல் புறக்கணிக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகர் வட்டாரச் செயலாளர் தோழர் கோபிநாத் உரையாற்றும் போது, “குறைவான பேருந்துகளை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு மாணவ-மாணவியரை ஏற்றி அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்ட நிர்பந்தித்ததே கல்லூரி நிர்வாகம்தான். அதனால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது. இதுவரைக்கும் 12க்கும் மேற்பட்ட மாணவிகள் இறந்துள்ளதாக மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம், போலீஸ், கல்லூரி நிர்வாகம், எல்லாம் கூட்டு சேர்ந்து கொண்டு உண்மை விபரத்தை வெளியில் சொல்லாமல் தடுத்து வருகிறனர். அரசும், போலீசும் பலியான-படுகாயமடைந்த மாணவர்கள் பக்கம் நிற்காமல் கல்லூரி முதலாளியின் பக்கம் நின்று கொண்டு சாதகமாக செயல்பட்டு வருவது வேதனையான விஷயமாகும். பலியான மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு பெறும் வரையும், தனியார் பள்ளி-கல்லூரிகளின் படுகொலை கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்று உறுதியளித்தார்.

உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான பானுஸ்ரீயின் தந்தை குமாரவேல் பேசும் போது, “கல்லூரி நிர்வாகம் பணம் என்று கேட்கும் போதெல்லாம் தவறாமல் கொடுத்ததையும், மகளுக்கு தேவைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தையும் கூறும் போது துக்கத்தில் தொண்டை அடைத்தது. மகள் இறந்து விட்டாள் என்று கேள்விப்பட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. இறந்த உடலைக் கூட பார்க்க தான் அலைக்கழிக்கப்பட்டதையும், இதுவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் ஆறுதல் சொல்லக் கூட வரவில்லை” என்பதையும் உருக்கமாக விளக்கினார்.

இறுதியில் முதலாளிகளின் லாபவெறியின் கோரப்பசிக்கு உயிரிழந்த மாணவிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: பு.ஜ. செய்தியாளர், பென்னாகரம்

ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

1

1. திருச்சி

திருச்சியில் ஈழ மக்களுக்கான ஆதரவு குரல், மாணவர்கள் தொழிலாளர்கள், உழைக்கும் மக்களிடம் பெருகி திருச்சி நகரமே ஸ்தம்பித்து போகும் வண்ணம் போராட்டம் தொடர்கிறது.

இதன் ஒரு பகுதியாக மக்களிடம் ஐ.நா தீர்மானத்தின் போலித்தனத்தையும், மன்மோகனின் கபட நாடகத்தையும் தோலுரிக்கும் வண்ணம் திருச்சி பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக 3 பெண் தோழர்களுக்கு மன்மோகன், ராஜபக்சே, ஒபாமா போன்றோரின் முகமூடியை அணிவித்து, நிற்கவைத்து, தமிழினவாதிகளும், அரசியல்வாதிகளும் ஈழமக்களின் கொடுமைக்கு நியாயம் கேட்கும் வண்ணம் மன்மோகனிடம் கையேந்தி கெஞ்சி நீதிகேட்கின்றனர்.

பஞ்சாபில் கருவாகி…
உலகவங்கியில் உருவாகி…
கான்வென்டில் கல்விகற்ற…
எங்கள் இந்திய மேதையே போற்றி போற்றி!

தங்கமே தலைவா வாழ்க!
எங்கள் பிரதமரே போற்றி போற்றி!
ஆட்சியில் உள்ள நாள் மட்டும் போற்றி போற்றி!
பூ தூவி சாம்பிராணி புகை போட்டு, மன்மோகனை…
வாயத் தொறந்து பதில் சொல்லுகள் என கெஞ்சி கேட்கின்றனர்,
இதை கெஞ்சி மன்மோகனிடம் மன்றாடுகின்றனர்,

இந்தக் காட்சியை அம்பலப்படுத்தி ஈழக் கொலையாளிகளில் மன்மோகனும் ஒருவன் ஆக மன்மோகன், ராஜபக்சே ஒபாமாவின் கூட்டுக் கலவாணித் தனத்தை அமைப்பு அரசியல் கருத்துடன் பேசி மக்கள் முன் நடித்து காண்பித்தனர்.

15 பெண் தோழர்கள், 7 குழந்தைகள், சிவப்பு வெள்ளை சீருடையுடன், பறை அடிப்பதும், ஈழத்தின் கொடுமையை விளக்கும் பாடல்களும் என, பேச்சு என பெண்களே செய்தனர், திருச்சி நகர் முழுவதும் காலை முதல் இரவு வரை நடத்தினர், ஒவ்வொரு இடத்திலும் மக்கள் 50 முதல் 100 பேர் கூடி நின்று ஆதரவு கொடுத்தனர்.

இவ்வகையான பிரச்சாரம் மக்களிடையே எளிமையாக கருத்துக்களை எடுத்துச்செல்லவும் நமது நிலைபாட்டை விளக்கவும் ஏதுவாக அமைந்தது.


[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி கிளை

2. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – சத்தியபாமா கிளை

ஈழ மக்களுக்கு ஆதரவாக சோழிங்கநல்லூரில் புஜதொமு ஆர்ப்பாட்டம்.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: பு.ஜ.தொ.மு.

usilai-1

3. உசிலை ஆர்ப்பாட்டம்

சிலம்பட்டி வட்டம்; முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு சார்பாக உசிலை தாலுகா அலுவலகம் அருகில்

குற்றவாளி ராஜபக்சேவோடு துணைநின்ற இந்திய அரசையும் விசாரணைக் கூண்டில் ஏற்றுவோம்!
முல்லைப் பெரியாறு அணைiயை உடைக்க 50 கோடி ஒதுக்கியுள்ள கேரள அரசின் அடாவடித்தனத்தைக் கண்டு கொள்ளாத மத்திய அரசின் மௌனத்தைக் கலைப்போம்!

என்ற தலைப்பின் கீழ் இலங்கையின் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை போட்டு அதனை மக்களின் பார்வைக்கு வைத்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை 22.03.2013 மாலை 5 மணியளவில் நடத்தியது.

2009 முள்ளிவாய்க்கால் இறுதி நாள் இனப்படுகொலையாளி ராஜபக்சேவோடு துணை நின்ற இந்திய அரசையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!
அமெரிக்கா தலைமையிலான விசாரணையை ஏற்க மறுப்போம்!
நூரம்பர்க் போன்ற நீதி விசாரணை கோருவோம்!

என்ற கோரிக்கையோடு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட கேரள அரசு சென்ற வாரம் பட்ஜெட்டில் 50 கோடி நிதி ஒதுக்கி அடாவடித்தனம் செய்வதையும் இ அதனைக் கண்டுகொள்ளாத காங்கிரஸ் மத்திய அரசின் மௌனத்தைக் கலைப்போம் என்றும் தேசிய நீர்க்கொள்கை மக்கள் விரோதமானது என்றும் அது விவசாயத்தை அளிப்பதற்கான திட்டம் என்றும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முல்லைப் பெரியாறு அணைப்பாதுகாப்புக் குழு ஆர்வளர் திரு ஜோதிபாசு தலைமை தாங்கினார். கண்டன உரையாக பொறியாளர் திரு மாயத்தேவர் (வல்லரசு பார்வர்டு பிளாக்) மற்றும் வழக்கறிஞர் ரெட் காசி (தேவர் தேசியப் பேரவை),  தங்கப்பாண்டி, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தென்னரசு மற்றம் வழக்கறிஞர் விநோத்குமார் மற்றும் வி.வி.மு செயலாளரும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் குருசாமி இறுதியல் சிறப்புரையாற்றினார்.

ஆப்பாட்டத்தின் பேசிய அனைவரும் பெரும்பாலும் காங்கிரசை ஒழித்தால்தான் நமக்கும் ஈழத்திற்கும் உண்மையான நீதி கிடைக்கும் என்று பேசினார்கள்.

தோழர் குருசாமி அமெரிக்கா என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? ஏன் அது தமிழர்களுக்கு எதிராக உள்ளது. இந்திய முதலாளிகளின் நலன்தான் தமிழர்களின் நலனை விட இந்திய அரசிற்கு முக்கியமாகப் படுகிறது. இதன் பின்னனியைப் புரிந்து கொண்டு நமது போராட்டம் இருக்க வேண்டும் என்று விளக்கினார்.

இறுதியில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. சுமார் 300 பேர்கள் வரை பார்வையாளர்களாக கலந்து கொண்டு ஆதரவு தந்தார்கள்.

காங்கிரசை ஒழிப்பதில் முதல் கவணம் இருப்பது அவசியம் என்று ஏகமனதாக பேசி முடிக்கப்பட்டது. சுய நிர்ணய உரிமைதான் உண்மையான தீர்வு தரும் அதற்கு 80 களின் எழுச்சியைபோல் மீண்டும் தமிழகத்தை உருவாக்குவோம் என பேசி முடிக்கப்பட்டது.

தகவல் : பு ஜ செய்தியாளர், உசிலை.

4. வலையங்குளம் தெருமுனைக் கூட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக்கிளை, வலையங்குளம் பகுதி சார்பாக ஈழத் தமிழினப் படுகொலைக்குக் காரணமான சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைத் தண்டிக்கவும், ஈழமக்களிடையே தன்னுரிமைக்கான வாக்கெடுப்பு நடத் தவும் கோரி 27.03.13 அன்று மாலை 6.00 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு வலையங்குளம் பகுதி ம.உ.பா.மைய உறுப்பினர் பெ.ரா.பெருமாள் தலைமை தாங்கினார். வலையங்குளம் ஊராட்சித் தலைவரும், ம.உ.பா.மைய உறுப்பினருமான வெ.பிச்சை, திருக்குறள் வளர்ச்சிக் கழக அமைப்பாளர் ஐயா கூ.கிருஷ்ணன், ம.உ.பா.மைய உறுப்பினர் செ.கணேஷ் ம.க.இ.க.மதுரை அமைப்பாளர் தோழர் ப.ராமலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இலங்கையில் 2009ல் நடைபெற்றது இனப் படுகொலை. அதற்குப் பின்பு தமிழர்கள் வதைமுகாம்களில் அடிமைகளாக வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு விடுதலை வழங்கும் முகமாக அங்கே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்காகத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கருத்துக்களை அனைவரும் வலியுறுத்திப் பேசினர்.

சிறப்புரையாற்றிய ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ், ராஜபக்சே ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன், சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஈழத் தமிழர்களின் குருதிக் கடலில் குளித்துக் கொண்டிருப்பவன். அதற்குத் துணை நின்று படு கொலை நடத்தியது இந்திய ராணுவம். இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் ஈழ விடுதலைப் போராளிக் குழுக்களை ஆதரித்து, ஆயுதம். நிதி வழங்கி, பயிற்சியும் கொடுத்து தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயற்சி செய்தனர். தனி ஈழம் கோரிக்கையை நிராகரித்தனர். இலங்கை அரசோடு சேர்ந்து ஈழ மக்களுக்கு துரோகம் இழைத்தனர். அமெரிக்காவும் விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆயுதம் வழங்கியது. ஆனால் விடுதலையை விரும்பவில்லை. இலங்கையில் தங்களது மேலாதிக்கம் மட்டுமே இவர்களது குறிக்கோளாக இருந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று தனது மேலாதிக்கத்தை இலங்கையில் உறுதி செய்து கொள்வதற்காகவும் இந்திய முதலாளிகளின் முதலீடுகளைக் காப்பாற்று வதற்காகவும் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தது.

அந்தத் தீர்மானம் உப்புச்சப்பில்லாத மொன்னையான தீர்மானம். அந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி தான் தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஈழ ஆதரவு மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளும் இயக்கங்களும் போராட்டம் நடத்துகின்றனர். ஐ.நா.சபை அமெரிக்காவின் கைக்கூலி. அது அமெரிக்காவின் நலனுக்கு செயல்படுகிறது. ஐ.நா.விடமும் கோரிக்கை வைப்பது பயனளிக்காது.

27.03.13 அன்று சட்டசபையில் ஜெயலலிதா தான் நிறைவேற்றிய தீர்மானங்களுக் காகத்தான் மாணவர்கள் போராடுகிறார்கள். ஒருமனதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் இனி மாணவர்கள் போராடத் தேவை இல்லை என்று ஜெயலலிதா அறிவிக்கிறார். ஏற்கனவே மாணவர்களின் போராட்டத்தை வரம்புக்குட்பட்டு ஜெயா போலீசு அனுமதித்தது. கட்டுப்பாட்டுக்குள் வைத்தது மட்டும் அல்லாமல், மாணவர்களது கோரிக்கை இவர்களையும் தாண்டி ராஜபக்சே இனப் படுகொலையாளி, தண்டிக்கப்பட வேண்டும். ஈழமக்களின் தன்னுரிமைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின் றனர். அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடிவிட்டு மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று இப்பொழுது கோரிக்கை விடுக்கின்றார் ஜெயலலிதா. இது மாணவர் போராட்டத்தை நேரடியாக ஒடுக்குவதற்கான ஆரம்பம்.

ஈழ விடுதலையை எவ்வாறு சாதிப்பது என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது. ஆனால் முள்வேலி வதைமுகாம்களுக்குள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த தமிழகமும் கொதித்து எழுந்து போராட வேண்டும். 80 களின் எழுச்சியைத் தமிழகத்தின் வீதிகளில் மக்கள் உருவாக்க வேண்டும். அதுவே ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும், இந்தி எதிர்ப்பு போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், ராஜிவ் காந்தி படுகொலையில் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் எழுச்சி பெற்ற தைப் போல ஓட்டுக்கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒருமித்த மக்கள் எழுச்சியே தீர்வாகும் என்று பேசினார்.

வழக்கறிஞர் சி.மன்மதன் நன்றி கூறினார். மக்கள் இறுதி வரை இருந்து ஆதரவளித்தனர்.

தகவல்:- மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளை

அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

56
ஹர்ஷத் மேத்தா

ட விருட்சத்தின் நிழலில்
வேதங்களின் மறைபொருளை
விரல் நுனியில் காட்டியபடி
வீற்றிருந்தான் சங்கரன்-
ஆதி சங்கரன்ஆதி சங்கரர்

பிறவிப் பெருங்கடல் நீந்தி
பிறவாமைப் பேறுபெற,
சத்தியம் உணர்ந்து
முக்தி நிலை பெற- முனைந்த
சீடன் கேட்டான்:

“ஸ்வாமி…!
நான் யார்? அது எது?”
மோனம் கலைந்த
முனிவன் சொன்னான்;

“இரண்டில்லை,
அ-த்வைதம்”

“அர்த்தமாகவில்லை ஸ்வாமி”

மோகனச் சிரிப்புடன்
சங்கரன் தொடர்ந்தான்:
“அகம் பிரம்மாஸ்மி
நானே அதுவாக இருக்கிறேன்
நான் உருவமில்லாதவன்
நான் எங்குமிருப்பவன்
நான் சுதந்திரமானவன்
நானே பிரம்மம்
நானே சத்யம்”

நானே பங்கு மார்க்கெட்!

*

“அதென்ன சார்
பங்கு மார்க்கெட் ஊழல்?”

தம்பி…
ஊழலே பங்குச் சந்தை
பங்குச் சந்தையே ஊழல்.

“புரியலியே”

புரியாது.
உனக்குப் புரிவதற்காக
உண்டாக்கப்பட்டதல்ல
பங்குச் சந்தை.

கதைகேட்டு கதைகேட்டு
கனவில் வளர்ந்த \ அழிந்த தேசமே
நானும் ஒரு கதை சொல்வேன்-
கேள்!

ஒரு ஊரில்
ஒரு கணவன்.
மனைவியையும் கூட்டிக்கொடுக்கும்
கணவன்
ஒருநாள்
வாடிக்கைக் காரனொருவன்
அந்தப் பெண்ணோடு இருப்பதைப்
பண்பாடில்லாத
ஒரு வழிப்போக்கன்
பார்த்துவிட்டான்…

“அப்புறம்”

அநியாயம்…. அநியாயம் – என்று
கத்தினான்.
“புத்திசாலி” புருசன்காரனும்
அவன் கூடவே சேர்ந்து கத்தினான்.
சிக்கிக் கொண்ட வாடிக்கையாளன்
ஹர்ஷத் மேத்தா.

“புருசன்காரன்?”

ஒரு பெயராயிருந்தால்
சொல்வது சுலபம்
அவனுக்கு ஆயிரம் நாமங்கள்
கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்,
வெங்கடரமணன், சீதாராமன்,
கீதகிருஷ்ணன்…

“சரி, வுடுங்க சார்….
ஏதோ ஊழல்…
ஒண்ணும் புரியல
நமக்கு சம்பந்தமில்லை”

சம்பந்தமில்லை!
கோடிக்கு எத்தனை பூச்சியம்
என்று புரியாத
அறுபது கோடியே,
உனக்கு சம்பந்தமில்லை.
திருடனுக்கு
ஊதுபத்தி கொளுத்தவும்
வேசைக்கு மகுடம் சூட்டவும்
புரிந்த
ஓட்டு வங்கியே,
உனக்கு சம்பந்தமில்லை.

சிந்திக்காதபோது
புரிந்து கொள்ளும் தேசம்,
புரியாதபோது
சிந்திக்கச் சுணங்கும் தேசம்.

ஆதிசங்கரனே!
இதோ…
நீ காண விரும்பிய தேசம்.
தம்மின் மெலியாரை
(மெலியாரை மட்டுமே)
தாம் நோக்கித்
தம் நிலைமை
அம்மா பெரிதென்று
அகமகிழும் தேசம்-
கர்மயோகிகளின் தேசம்.
ஊண் இழந்தும்
உடுக்கை அவிழ்ந்தும்
உறக்கம் கலையாத தேசம்-
ஞான யோகிகளின் தேசம்.
இந்தப்
பண்பாடற்ற விதண்டாவாதி
வழிப்போக்கனை மட்டும்
ஒழித்து விட்டால்…

*

என்னே விதியின் விளையாட்டு!
அல்லாடி
ஆச்சாரியார்
சர்.சி.பி.ராமசாமி அய்யர்
ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி..
என்று நெஞ்சை விடைத்த
அக்கிரகாரமே,

அய்யர், அய்யங்கார்
ஆச்சாரியார்
முதலியார்
செட்டியார் – என்று
கம்பீரமாக
வாலை அசைத்த கூட்டமே
எங்கே இப்போது
வாலைக் காணோம்?

ரிசர்வ் வங்கி கவர்னர்
வெங்கட ரமணன் (அய்யர்)
நிதித்துறைச் செயலர்
கீத கிருஷ்ணன் (அய்யர்)
அட்டர்னி ஜெனரல்
ராமசாமி (அய்யர்)
யூ.கோ.வங்கித் தலைவர்
மார்க்க பந்து (முதலியார்)
திட்டக்குழு உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி (அய்யர்)
அமைச்சர்
ப. சிதம்பரம் (செட்டியார்)
ஸ்டேட் வங்கி
சீதாராமன் (அய்யர்)

வாலறுத்த நரிகளே
இதென்ன அஞ்ஞாதவாசம்?
காலதேச வர்த்தமானம்
சரியில்லையோ?
இட ஒதுக்கீட்டு ராகுவை
விழுங்கிய உங்கள்
அனல் கக்கும் நிலவுகள் எங்கே?

இட ஒதுக்கீட்டை
குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த
சுஜாதா அவர்களே (1),
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி
‘கணையாழி’யின்
கடைசிப் பக்கத்திலாவது
நாலு ‘நறுக்’கெழுத்து
எழுதக் கூடாதா?

முதலியார் கண்ணீர் வடித்த
சிந்தனை சந்தர்,
சினா தானா
தென்னை மரமேறிய கதையை
நாலு ரீல் சுற்றலாமே!

ஏன் இந்த மயான அமைதி?
நேற்று முன்தினம் வரை
‘திறமை’யான ஜனாதிபதிக்காக
வாதாடிய உங்கள்
தர்க்கசாஸ்திர சிரோன்மணிகள்
எங்கே?

மண்டலாசுரனை வீழ்த்திய
பிரம்மாஸ்திரம்
பூமராங்காய்த் திரும்பிப் பாய்கிறதோ!

புரிகிறது.
தர்க்க சாத்திரத்தில்
தோல்வி கண்டவர்கள்
தர்ம சாத்திரத்தில்
தஞ்சம் புகுந்து விட்டீர்கள்.
இதுவல்லவோ
சங்கரன் வகுத்த வழி!

சட்டப் பிரிவு -8 உட்பிரிவு -9ன் படி(2)
ஒழுக்க சீலர்களை
விசாரிக்கும் அதிகாரம்
ஒழுக்க சீலர்களுக்கு மட்டுமே
உரியது.

கிருஷ்ணமூர்த்தி அய்யரை
மணிசங்கர் அய்யர்
விசாரிக்கட்டும்

வெங்கட ரமணய்யரின்
தவறுகளை
ஜானகி ராமய்யர் ஆராயட்டும்

ஜானகி ராமய்யரின்
நடத்தைக்கு
நரசிம்மராவ்
(சந்தேகம் வேண்டாம் – நம்மவர்தான்)
உத்திரவாத மளிக்கட்டும்.

நரசிம்மராவின் யோக்யதைக்கு
எல்லாம் வல்ல இறைவன்
(அல்லது ஜார்ஜ் புஷ்)
சான்று பகரட்டும்!

*

“சட்டத்தின் ஓட்டைகளை
ஹர்ஷத் மேத்தா
திறமையாகப்
பயன்படுத்திக் கொண்டார்
அவ்வளவுதான்” –
ராம் ஜேத்மலானி

ஓட்டை…!
பெருச்சாளிகளும்
பன்றிகளும் மட்டுமே
தப்பவியலும்
பிரம்மாண்டமான ஓட்டை.

ஆனால்
எலிகள் எலிகள் மட்டும்
என்றுமே தப்பவியலாத ஓட்டை.

பௌதீக விதிகளை மறுக்கும்
இந்த தெய்வீக ஓட்டைகளை
சிருஷ்டித்தவன் யார்?

மயனா
பிரம்மனா
பரந்தாமனா
அல்லாடியா அல்லது
ஆனந்த பவனத்துக்
குற்றப் பரம்பரையா?

கன்னம் வைப்பதும்
திறமையென்றால்…
நீங்கள் திறமைசாலிகளே.

சட்டப் பிரிவு 10 உட்பிரிவு 84-ன் படி(3)
இரும்பினால் செய்த
கலப்பையைத்தான்
பிராமணன் தொடக் கூடாது
கன்னக் கோலுக்கு
தோஷமில்லை.

மிருச்சகடிகத்தின்
பார்ப்பனத் திருடன் கூறியது போல(4)
பூணூலும்
கன்னக்கோல் சுற்றும்
ஓர் ஆயுதமே.

எது திறமை
எது திருட்டு
என்ன வேறுபாடு?

அ-த்வைதம்!

துவாபர யுகத்தின் திருட்டு
கலியுகத்தில் திறமை

துவாபர யுகத்திலேயே
சகுனியின் நயவஞ்சகம்-
கண்ணனுக்கு லீலாவிநோதம்

துச்சாதனனின் துகிலுரிதல்-
துவாரகா பாலனின் ராசலீலை.

ஆனந்த விகடனின்
கேலிச்சித்திரத் திருடர்கள்
கிருஷ்ணமூர்த்தி அய்யரை
ஒத்திருந்ததுண்டா?

கேடி கந்தன்
பிளேடு பக்கிரி
பத்மவிபூஷன் கிருஷ்ணமூர்த்தி

ஆதி சங்கரனிடம்
நீதி கேட்டுப் பார்ப்போம்.

சாமி!
எது திறமை? எது திருட்டு?

“அத்வைதம்-
கயிற்றரவம்.”
விளங்கலையே சாமி.

“மூடனே கேள்
பகலில் கயிறு
இரவிலே பாம்பு
உன் பார்வையில்தான் பேதம்”

ஆதி சங்கரன்
குழப்புகிறான்
மணி சங்கரனை (ஐயர்)
கேட்போம்.

“கிருஷ்ணமூர்த்தி என் நண்பர்
அவர் குற்றவாளி அல்லர்
குற்றம் சாட்டப்பட்டவர்
அவ்வளவுதான். நண்பனும் நானே
நீதிபதியும் நானே”
பகலில் நீதிபதி
இரவில் நண்பன்
அத்வைதம்!

*

திறமையே திருட்டு
திருட்டே திறமை
அத்வைதம்!

அற்புதம்!
யுக யுகாந்திரங்களாய்
பாரதத்தை இணைத்து நிற்கும்
அந்தப் பண்பாட்டு இழையை,

பாரத மக்களின்
கழுத்தைச் சுற்றிப் பின்னியிருக்கும்
ஹிந்து தர்மம் எனும்
சுருக்குக் கயிற்றை
(மீண்டும் அத்வைதம்)
கண்டு கொண்டோம்.

என்ன ஒற்றுமை!
தத்துவ சாத்திரம்
தவிடு பொடியானவுடன்
தரும (மனு) சாத்திரத்தில்
சரண் புகுந்தான்
அந்த சங்கரன்

“நண்பனே நீதிபதியா?” என்று
ஒழுக்க மரபுகளைச்
சுட்டிக் காட்டினால்
குற்றவியல் சட்டத்தில்
ஒளிகிறான்
இந்த சங்கரன்.

ஒழுக்க சாரதிகளே,
முகத்தில் உதித்த
முதல் வருணத்தோரே,
என்னே உங்கள் அவலம்!

சமூகத்தின்
முகத்தில் விழிக்க அஞ்சி
சட்டத்தின்
பிட்டத்திற்குப் பின்னே
பதுங்குகிறான் உங்கள் சங்கரன்

குற்றவுணர்வுக்குப் பதில்
சட்ட உணர்வு.

சட்டம்!
நீங்கள் வகுத்த சட்டம்.
ஒழுக்கம் ஓரடி பாயுமுன்
பாதாளம் நோக்கி
பதினாறடி பாயும் சட்டம்.

சீரழிவுத் தொடர் ஓட்டத்தில்
ஒழுக்கத்தின் கையிலிருந்து
கட்டையைப் பறித்துக் கொண்டு
பாய்ந்தோடக்
கால் துடிக்கும் சட்டம்.

“குற்றம் சாட்டுபவன்தான்
நிரூபிக்க வேண்டும்-
குற்றம் சாட்டப்பட்டவன்
தன்னை நிரபராதியென
நிரூபித்துக் கொள்ள வேண்டுமென்றால்
அது பாசிசம்”-
மணிசங்கர் அய்யர்.

ஆகா!
அப்பழுக்கற்று ஜொலிக்கும்
இந்த
தூய ஜனநாயகத்தின் ஒளி,
பகல்பூரிலும், வாரணாசியிலும்
காஷ்மீரிலும், பஞ்சாபிலும்
அஸ்ஸாமிலும், தமிழகத்திலும்
…அண்ணாமலை நகரிலும்
படாமல் போனது ஏன்
சாத்தானே?
மன்னிக்கவும்.
தேவரே! பூதேவரே!

சட்டத்தின் முன்
அனைவரும் சமம்
கிருஷ்ணமூர்த்தி அய்யர்
கொஞ்சம் அதிகமாக சமம்.

சம்புகனுக்கு சிரச்சேதம்
அஜமிலனுக்கு சொர்க்கம்(5)

தென்னை மரத்தில்
புல் பிடுங்க ஏறிய
சிதம்பரம் செட்டியார்
இறங்கி விட்டார்.
வெற்றி…! வெற்றி…!
நல்லொழுக்கத்திற்கு வெற்றி!

“என்னுடைய மந்திரிகளை
யாரேனும்
தென்னை மரத்தின் உச்சியில்
கண்டால் சொல்லுமய்யா
இறக்கி விட்டு விடுகிறேன்”-
கர்ஜிக்கிறார் நரசிம்மராவ்

“அபாரம்! என்ன துணிச்சல்!
என்ன கண்டிப்பு!”
புல் அரிக்கிறது தினமணிக்கு.

ஏறிய குற்றத்திற்கு
இறங்குவதே தண்டனை!

எப்படியும் நாம்
சட்டப் பிரிவு – 8 உட்பிரிவு-380 ஐ
மீற இயலாது.(6)

*

ஹர்ஷத் மேத்தா“யார் செய்யவில்லை?
நான் மட்டுமென்ன
பலிகடாவா?”-
ஹர்ஷத் மேத்தா

அப்படிப் போடு!
யார் செய்யவில்லை?

ஆட்டுப் பாலை
பிர்லா மாளிகையில் அமர்ந்து
பருக நேரிட்டதையும்,

வேர்க்கடலையை
பஜாஜ் வீட்டிலிருந்தபடி
(மாட்டுக் கொட்டிலாகத்தான் இருக்கட்டுமே)
கொறிக்க நேர்ந்ததையும் பற்றி

மகாத்மாவை
யாரேனும்
கேள்விக்குள்ளாக்கியதுண்டா?

அவரது
பிரம்மச்சரிய சோதனை பற்றி
குறைந்த பட்சம்
குமுதம் ‘லைட்ஸ் ஆன்’ பகுதியில்
ஒரு வரி
கிசுகிசு செய்தியாவது உண்டா?

தாத்தாவுக்கு ஒரு நீதி
பேரன்
மேத்தாவுக்கு ஒரு நீதியா?

அல்லது
பிரம்ம சூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுதிய
திருக்கரத்தால்
சௌந்தரிய லஹரியும்
கனகதாரா ஸ்தோத்திரமும்(7)
எழுதியதற்காக
ஆதி சங்கரனைக்
குற்றம் சொல்வார்தான் உண்டா?

அன்று முதல்
இன்று வரை
சத்திய சோதனையில்
விஞ்சி நிற்பது
வியவகாரிக சத்யம்தானே!(8)

“இது நம்
அமைப்பு முறையின் தோல்வி
நாம் எல்லோருமே பொறுப்பு”
–மன்மோகன் சிங்

எதிர்மறைகளின்
ஒற்றுமை குறித்த
இயங்கியல் விளக்கத்தை
இதை விடத் துல்லியமாக
யாரால் விளக்க முடியும்?

பறிகொடுத்தவனின் குற்றம்-
அஜாக்கிரதை

பறித்தெடுத்தவனின் குற்றம்-
திருட்டு

இருவருமே தவறிழைத்துள்ளனர்.
மொத்தத்தில் இது
நம் அனைவரின் தவறு.

“திருப்பதி உண்டியலில்
திருடன்
காணிக்கை செலுத்தினால்
அதற்கு
திருவேங்கடத்தானைக்
குற்றம் சொல்ல முடியுமா?”
என்கிறார்
கல்கி – ராஜேந்திரய்யா(9)

முடியாது.
மன்மதக் கலையைக்
கற்றுத் தேற
மாற்றான் மனையைப்
புணர்ந்ததற்காக
அந்த மகானை-
ஆதிசங்கரனை
நாம் எங்ஙனம்
குற்றம் கூறவியலும்?

உவமானங்கள்
உருவகங்கள்
நீதிக் கதைகள்…

கனவான்களே,
இடியாக முழங்கும்
உங்கள் வாதங்கள்
எங்களை
ஒழுக்க செவிடர்களாக்குகின்றன.

வானவில்லாய் ஒளிரும்
உங்கள் அறிவோ
எம்மை
வண்ணக் குருடர்களாக்குகிறது.

என்ன இருந்தாலும்
நீங்கள் படித்தவர்கள்
தர்ப்பைப் புல் முதல்
சூப்பர் கம்ப்யூட்டர் வரை
உங்கள்
மடி சஞ்சியில் அடக்கம்.

நீங்கள்
அறிவாளிகள்
எனவே
திறமை சாலிகள்
எனவே
ஒழுக்க சீலர்கள்

‘சட்டப்படி’
ஒழுக்க சீலர்கள்.

மூடர்களும், தற்குறிகளும்
நிரம்பிய இந்த தேசத்தைப்
பரிபாலிக்க
நீங்கள் சகித்துக் கொண்ட
இன்னல்கள்தான் எத்தனை?
எங்களுடைய கைம்மாறை,
தட்சிணையை,
நீங்கள்
ஏற்றுத்தான் தீர வேண்டும்.

அதற்கு முன்,
அத்வைதிகளே
ஒரே ஒரு ஐயம்!

உங்கள் பட்டங்கள்
வேசியின் அலங்காரத்தை
ஒத்திருப்பதை
நீங்கள் கவனிக்கவில்லையா?

வேதம், புராணம்,
இதிகாசம், உபநிடதம்,
எம்.ஏ, எம்,பி.ஏ,
மின்னணு அறிவியல்
இன்ன பிற… இன்ன பிற…

எதற்கு?
உங்களை விற்றுக்கொள்வதற்கு.

என்றாலும்
தரும சாத்திரத்திலிருந்து
நீங்கள் வழுவுவதில்லை.

தான் கற்ற கல்வியைத்தான்
பார்ப்பனன் – காசுக்கு-
விற்கக் கூடாது.
தன்னையே விற்றுக்கொள்ள
தடையேதுமில்லை.

எங்கள்
கண்ணீரைக் குடித்து,
பெருமூச்சை சுவாசித்து,
பெருங்குடலைத் தின்று
எம் குழந்தைகளின்
அரிச்சுவடியைத் திருடிய,

உங்கள் திறமையின்
கால் தடங்கள்
எப்போது
சொர்க்கத்திலேயே முடிந்தன
இப்போது
அமெரிக்காவில் முடிகின்றன.

உங்கள்
புத்திரர்களும்
பௌத்திரர்களும் (பேரன்கள்)
அமெரிக்காவில்.

உங்கள
வானப் பிரஸ்தமோ(10)
மிலேச்சனின்
உலக வங்கியில்.

நீங்கள்
வெளிநாட்டில் குடியேறிய
இந்தியர்கள்.
நாங்கள்
சுதேசி அகதிகள்.

உங்கள் ஈசானம் டெல்லி
எங்கள் ஈசானம் சுடுகாடு.
உங்கள் மேற்திசை நியூயார்க்
எங்கள் மேற்திசை கட்டுமரம்.

திறமைசாலிகளே,
எங்கள் பாதங்களில்தான்
சீழ் வடிகிறது
உங்களுக்கோ
ஆன்மாவில் சீழ் வடிகிறது.

அதை
அத்தர் புனுகு சவ்வாது என்று
நாங்கள் பூசித்திரிந்த காலம்
முடிந்தது.
முடிந்தது.

தேசத்துரோகிகளே!
மனிதப் பதர்களே!!

“பழிக்குப் பழி என்று முழங்கி
நாங்கள்
வீதிகளில் சீறி வரும்போது

உங்கள்
கருணை மனுக்கள்
மழுப்பலான சமாதானங்கள்
எல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும்.

பிரமுகர்கள், பிரபலங்களின்
சிபாரிசுகள் செல்லுபடியாகாது.

தண்டனையும் பரிசும்
தெருவிலேயே தீர்மானிக்கப்படும்

சொர்க்கமா நரகமா
அங்கேயே முடிவாகி விடும்.

இறுதித் தீர்ப்பின் நாள்
இன்றே, இப்பொழுதே, இக்கணமே!”(11)

கயிறு அல்லது அரவம்.

திறமைசாலிகளே
தெரிவு செய்து கொள்ளுங்கள்!

என்ன துரதிருஷ்டம்!
இரண்டுமே
வியவகாரிக சத்யம்!!

– மருதையன்

அடிக்குறிப்பு

  1. கல்கியில் மத்தியமர் என்ற தொடரில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுஜாதா எழுதிய சிறுகதை. அதிகாரியின் மகளான நவநாகரீக தாழ்த்தப்பட்ட மங்கைக்கு தகுதியில்லாமலேயே வேலை கிடைக்க, தகுதியுள்ள முற்பட்ட சாதி இளைஞன் வாய்ப்பை இழந்து துவண்டு, காசில்லாததால் குழாய்த் தண்ணீரைக் குடித்து விட்டுச் செல்வதாக மேல்சாதி அவலத்தைச் சொல்லும் சிறுகதை.
  2. மனு நீதி நூல்: கொடுங்குற்றம் செய்திருந்தாலும் ஒரு பார்ப்பனனை அரசன் அல்லது வேறு ஒரு படித்த பார்ப்பனன் மட்டுமே விசாரிக்க முடியும்.
  3. மனுநீதி நூல் : எத்தனை வறுமைக்கு உள்ளானாலும் பார்ப்பனன் விவசாயத்தில் ஈடுபடக் கூடாது எனும் விதி.
  4. கி.பி.6-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வடமொழி நாடகம் மிருச்சகடிகம், அதாவது பொம்மை வண்டி. இந்த நாடகத்தில் திருடச் செல்லும் பார்ப்பனன் ஒருவன் கன்னக்கோலின் ஒரு முனையில் முடிந்து சுவற்றில் வட்டமிடுவதற்குத் தேவையான கயிறை எடுத்துச்செல்ல மறந்து விடுவான். கயிறுக்குப் பதிலாகப் பூணூலைப் பயன்படுத்துவான். அப்போது அவன் கூறும் வசனம் ”பார்ப்பனனுக்குத்தான் பூணூல் எவ்வளவு விதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது! முதுகு சொறிய, கன்னம் வைக்க…”
  5. சம்புகன்: சூத்திரனுக்கு தவம் செய்யும் உரிமையில்லை என்ற சநாதன தருமத்தை மீறி இறைவனைத் துதித்ததற்காக ராமனால் கொல்லப்பட்ட சூத்திர வருணத்தவன்.
    அஜமிலன்: பார்ப்பன குலத்தில் பிறந்து, சூத்திரப் பெண்ணை மணந்ததால் சாதி நீங்கம் செய்யப்பட்டவன். சாகும் தருவாயில் தனது மகன் நாராயணனை அழைக்க ”நாராயணா” என்று கூப்பிட்ட ஒரே காரணத்தினால் மோட்சம் பெற்றவன்.
  6. மனுநீதி: மிக மோசமான பாவம் செய்திருந்தாலும் அவன் திருடிய சொத்துக்களுடன் பார்ப்பனனை காயமின்றி நாடு கடத்த மட்டுமே முடியும்.
  7. சௌந்தரிய லஹரி: தேவியின் மீது ஆதிசங்கரன் எழுதிய தோத்திரம். தாயான தேவியை வருணிக்கும் வரிகள் காமசூத்திரத்தை விஞ்சக் கூடியவை.
    கனகதாரா ஸ்தோத்திரம்: கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுவதற்காக ஆதிசங்கரன் எழுதிய பாடல்கள்.
  8. வியவகாரிக சத்யம்: ”உலகமே மாயை (பொய்) என்றால் உனக்கு சோறும், துணியும், பொன்னும், பொருளும் எதற்கடா?” என்று ஆதிசங்கரனை அன்றைய பொருள்முதல்வாதிகள் கேட்டபோது, ஆதிசங்கரன் சொன்னான்: ”இவையெல்லாம் வியவகாரிக சத்யம் (நடைமுறையில் உள்ள தற்காலிக உண்மைகள்) மட்டுமே; இறுதி ஆய்வில் பிரம்மமே சத்யம்; இவையெல்லாம் மாயை” என்றான்.
  9. ராஜீவ் நினைவு அறக்கட்டளைக்கு ஹர்சத் மேத்தா 25 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளான். அதை (சோனியா) வாங்கியது எங்ஙனம் சரி என்ற கேள்விக்கு கல்கியின் பதில்.
  10. வானப் பிரஸ்தம்: இல்லற வாழ்க்கையின் இறுதியில் (பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்) பிராமண, சத்திரிய, வைசிய குலத்தவர்கள் காட்டுக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்கிறது சநாதன தருமம். இந்தக் கட்டத்திற்குப் பெயர் வானப் பிரஸ்தம்.
  11. ஃபெய்ஸ் அகமது பெய்ஸ் கவிதையிலிருந்து.

___________________________________________________
புதிய கலாச்சாரம் அக்கடோபர் 1992
____________________________________________________

பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய போராட்டம்!

0

1. கரூர் சிவகிரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளை கண்டித்து பிப்ரவரி 24ம் தேதி சிவகிரி பாலவிநாயகர் திருமண மண்டபத்தில் யில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

தலைமை :தோழர் கோவிந்தசாமி
வரவேற்புரை : தோழர் புஸ்பராஜ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
சிறப்புரை : தோழர் வாஞ்சிநாதன், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
நன்றியுரை : தோழர் இராஜா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

இக்கூட்டத்தில் பகுதி உழைக்கும் மக்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் கரூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. காட்சி விளக்கப்படமும் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது.

தகவல் : பு.ஜ.தொ.மு.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

2. நல்லம்பள்ளி தெருமுனைக் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி பிப்ரவரி 25ம் தேதி மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் ‘பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தியது.

தலைமை : தோழர் ராமலிங்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி
கண்டன உரை:
தோழர் கோபிநாத், வட்டச் செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணிதோழர் பழனியம்மாள், விவசாயிகள் விடுதலை முன்னணி
தோழர்கள் செல்வராஜ், கீதா, முத்துக்குமார், மாயாண்டி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

3. மனித உரிமை பாதுகாப்பு மையம் திருநெல்வேலியில் நடத்திய கருத்தரங்கம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கருத்தரங்கம் மனித உரிமை பாதுகாப்பு மையத்தால் திருநெல்வெலி ஏ. டி. எம். எஸ் அரங்கத்தில் வைத்து 23.02.2013-ம் தேதி மாலை நடைபெற்றது. கருத்தரங்கில் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கு திருநெல்வெலி மாவட்ட அமைப்பாளர் தோழர் செ. தங்கபாண்டியன், வழக்குரைஞர் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் பேசிய தோழர் இராமச்சந்திரன், தூத்துக்குடி கிளை செயலாளர் பெண்களை போகப் பொருளாக பாவிக்கும் சமூக சிந்தனையை சட்டத்தால் தடுக்கமுடியாது என்பதாலேயே இவ்வாறு தலைப்பிட்டுள்ளோம் என்று உதாரணங்களுடன் பேசினார். பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் போலீஸ் இராணுவத்தை தண்டிக்கக் கூடாது என்பதற்காகவே பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் போலீஸ், இராணுவத்தை சிவில் சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் எனும் பரிந்துரை உட்பட வர்மா கமிசனின் எந்த ஒரு பரிந்துரையையும் அரசு ஏற்கவில்லை என்று பேசினார்.

அடுத்தாக பேசிய தோழர் லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட கிளை செயலர் மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு எவ்வாறு ஏனைய மனித உரிமை அமைப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அரசியல் திசையில் செயல்படுகிறது என்றும் மனித உரிமை பாதுகாப்புமையம் ஏற்று மக்களை திரட்டியும் நீதிமன்றத்திலும் வென்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க சிதம்பரம் கோவில் போராட்டம் முதல் சமச்சீர் கல்வி போராட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று கருணாநிதி இயற்றிய சட்டத்திற்கு மதுரை பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் பெற்ற தடை ஆணையை எதிர்த்து போராட்டம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு எஸ். பி. பிரேம் குமாரை எதிர்த்து நல்லனாமனுடன் நடத்திய போராட்டம், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட குறிப்பான போராட்டங்கள் அனுபவங்களை எளிதாக விளக்கினார்.

அடுத்ததாக பேசிய தோழர் காளியப்பன் ம.க.இ.க இணைப் பொது செயலாளர் காரைக்கால் மாணவி வினோதினி மீது ஏவப்பட்ட வன்கொடுமை பற்றியும், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் பெண்களை ஆண்களுக்கு அடிமையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளன என்றும் பெரும்பாலும் பாலியல் வன்கொடுமை குடும்ப உறவினர் மூலமே நடைபெறுகிறது, பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் தங்களுக்கு அவமானம் என்று கருதி வெளியே கூறாமல் தன்னை தாழ்த்திக் கொள்கின்றனர், ஆனால் அவ்வாறு அல்லாமல் தனக்கு ஏற்பட்ட கொடுமை வேறு பெண்களுக்கு நடக்கக்கூடாது, இது ஒரு சமூகப்பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரிந்த நபர் மீது புகார் கொடுக்கவேண்டும், அப்போது தான் இதை தடுக்க முடியும். மேலும் ஒரு சோசலிச சமூகத்தை நோக்கிய நமது பாதை தான் இதற்கு நிரந்தர தீர்வு என்று பேசினார்.

இறுதியாக வழக்குரைஞர் அப்துல் ஜப்பார், நெல்லை ம.உ.பா உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.

தகவல்
செ. தங்கபாண்டியன், அமைப்பாளர்,
திருநெல்வேலி மாவட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

தருமபுரி

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

4. பி.அக்ரகாரத்திலும், இண்டூரிலும் தெருமுனைக்கூட்டம்

பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமா மது ஆபாசங்களை தடை செய் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் தெருமுனைக்கூடம் நடந்தது.

நாள் : 27.02.2013
தலைமை
: தோழர் சிவா, வட்டக்குழு உறுப்பினர், விவசாயிகள் விடுதலை முன்னணி
உரை : தோழர் பிரகாஷ், தோழர் பழனியம்மாள், தோழர் வனிதா

தோழர்கள் கோபிநாத், தோழர் குயில் ஆகியோல் கலந்து கொண்டனர்.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி

 

 

5. திருமங்கலம் பொதுக்கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமங்கலம் பகுதி அமைப்பாளர் தோழர் வீரணன் தலைமை உரையும் தோழர் ஆசை வி.வி.மு அவர்கள் சிற்றுரையும்,  தோழர் சி.ராஜூ மாநில அமைப்பாளர் மனித உரிமை பாதுகாப்பு மையம் அவர்கள் சிறப்புரையும் ஆற்றினார்கள்.

சிறப்புரைக்குப்பின் தோழர் வீரணன் திருமங்கலம் பகுதி அமைப்பாளர் அவர்களின் மகன் மணமகன் ராஜாவிற்கும் மணமகள் ஜோதிலட்சுமிக்கும் பொதுக்கூட்ட மேடையில் சீர்திருத்தத் திருமணம் தோழர் சி.ராஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு தோழர் மோகன் வி.வி.மு அமைப்பாளர் தேனி மாவட்டம்,  உசிலை வி.வி.மு செயலர் தோழர் குருசாமி, திரு மு.சி.சோ.முருகன், தி.மு.க திருமங்கலம் மற்றும் பெ.லெட்சுமணன் தி.மு.க திருமங்கலம் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியில் ம.க.இ.க வின் புரட்சிகரக் கலைநிகழ்ச்சி எழுச்சியூட்டும் படி அமைந்தது.

தகவல் : வி.வி.மு.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

6. பென்னாகரம் பொதுக்கூட்டம்

01.03.2013 அன்று மாலை 6 மணிக்கு பென்னாகரம் டெம்போ ஸ்டேண்ட் அருகில் நடைபெற்றது.

தலைமை: தோழர் சிவா, வட்டக் குழு உறுப்பினர், விவசாயிகள் விடுதலை முன்னணி
உரை : தோழர் வனிதா, தோழர் பழனியம்மாள், தோழர் பிரகாஷ்,
சிறப்புரை
: தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்

தோழர் காளியப்பன் தன் உரையில்

“இரண்டு நாளைக்கு முன்பு பென்னாகரம் அருகே 8 வயது லோகேஷ் என்ற சிறுவன் தனியார் பள்ளி வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியாளியுள்ளான். இன்று மாலை இண்டூர் அருகே ஜெயம் பொறியியல் கல்லூரி பேருந்தும் வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி 8 பேர் வரை உயிரிழந்ததாக சொல்கிறார்கள். ஒரு தனியார் பள்ளி – கல்லூரியின் லாபவெறிக்காக பெற்றோர்கள் தங்களின் அன்புச் செல்வங்களை இழந்து வருவது தினசரி நடக்கிறது.

அதே போலத்தான் பத்திரிகை, டிவி, சினிமா, இன்டர்நெட் முதலாளிகளின் லாபவெறிக்காக விளம்பரங்களில் பெண்களை ஆபாசமாக காட்டி வருகிறனர். முதலாளிகள் சமூகத்தை சீரழிப்பதன் மூலம் வாழ்ந்து வருகிறார்கள்.” என்று விளக்கினார்

இறுதியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏன்னா நா ஒரு ஆம்பள
திண்ண தட்ட கழுவ மாட்டேன்
தண்ணி மொண்டு குடிக்க மாட்டேன்
படுத்த பாய சுருட்ட மாட்டேன்
உடுத்த துணிய துவைக்க மாட்டேன்
ஏன்னா நா ஒரு ஆம்பள

என்ற பாடல் ஆணாதிக்கத் திமிரை சாடியது.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

7. சிவகங்கை

பெண்கள் மீதான வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசலில் பிரச்சாரக்கூட்டம் தொடங்கியது. புஜதொமு தோழர் கணேசன் தலைமை தாங்க தோழர்கள் தோழர் மோகன், தோழர் ஆனந்த், தோழர் குருசாமிமயில்வாகனன் ஆகியோர் உரையாற்றினார்கள். முடங்காதே! முடங்காதே! பெண்ணினமே முடங்காதே! / திருப்பி அடி! திருப்பி அடி! ஆணாதிக்கப் பொறுக்கிகளைப் பெண்ணினமே திருப்பியடி! என்று பகுதியை அதிரவைத்தன முழக்கங்கள். ஆங்காங்கே நின்று சற்று நேரமே கேட்டுக்கொண்டிருந்த சில பெண்களின் முகத்தில் தோன்றியது வியப்புணர்வு!

மறுநாள் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அரசு போக்குவரத்துப் பணிமனையின் எதிரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு புஜதொமு தோழர் சுரேஷ் கண்ணன் தலமை தாங்கினார். தோழர் கணேசன், தோழர் ஆனந்த், தோழர் குருசாமிமயில்வாகனன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சி முடிந்ததும் கூட்டத்தைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார், “இருந்தாலும் நீங்களும் ஆம்பிளைகளா இருந்துக்கிட்டு இப்பிடி ஆம்பிளைகளையே ரொம்பத் தாக்கிப் பேசக்கூடாது.” இன்னொருவர் சொன்னார், “ப.சிதம்பரத்தின் 2013 பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து துவங்கி அது இன்றைய ஆணாதிக்கப்பொறுக்கித்தனத்தின் அடிப்படையாக எப்படி இருக்கிறது என்பதை விளக்கிய தோழர்களின் உரை மிகவும் புதிது.”

banner-1

தகவல் : பு.ஜ.தொ.மு.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

த.நா தமிழனுக்கு 1ரூபாய் இட்லி! ஈழத்தமிழனுக்கு இலவச ஈழம்!

56

தா-பாண்டியன்“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது நாம் அறிந்த முதுமொழி. வலது கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்று கூறப்படும் தா.பாண்டியன்தான் யானையின் கழுத்தில் தொங்கும் மணி.

மார்ச் 20 ஆம் தேதியன்று, இராஜபக்சேவின் இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்துக்கும் எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த சூழலில் தா.பா ஒரு அறிக்கை விட்டிருந்தார். “மாணவர்கள் இப்படி தனித்தனியாகப் போராடுவதால் பயனில்லை, எல்லோருடைய போராட்டத்துக்கும் முதல்வர் தலைமை தாங்கி நடத்த வேண்டும்” என்ற விசித்திரமான கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.

“மணி தானாக ஆடாதே” என்று நாம் யோசித்து முடிப்பதற்குள் சீனுக்கு யானை வந்து விட்டது. “ஐ.பி.எல் போட்டியில் இலங்கை ஆட்டக்காரர்கள் சென்னைக்கு வரக்கூடாது. இலங்கையை நட்பு நாடாக இந்தியா கருதக்கூடாது. தனி ஈழம் குறித்த வாக்கெடுப்பை ஈழத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நடத்த வேண்டும்.” என்று அடுக்கடுக்கான அம்மாவின் தீர்மானங்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சுவர்கள் அதிர்ந்து விரிசல் விடத் தொடங்கி விட்டன.

அம்மாவுடைய சட்டமன்ற உரையின் கடைசி வரிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை. மாணவர் போராட்டத்துக்குப் பயந்துதான் கருணாநிதி ராஜினாமா செய்து விட்டார் என்று எல்லோரும் கருணாநிதியை கலாய்த்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த தீர்மானமும் மாணவர்களுக்குப் பயந்து கொண்டு அம்மா போட்ட தீர்மானம் என்று யாராவது எண்ணி விட்டால்? குறிப்பாக மாணவர்களிடம் அப்படி ஒரு ஆணவம் வந்துவிடக்கூடாதே என்பது தாயுள்ளத்தின் கவலை. எனவேதான், “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாணவ மாணவியரின் போராட்டம் அமைந்திருந்தது” என்ற உண்மையைத் தனது உரையில் அவர் அழுத்தம் திருத்தமாகவும் அதே நேரத்தில் பணிவுடனும் சுட்டிக் காட்டியிருந்தார்.

“அம்மாதான் சத்யம், தமிழகம் மாயை ; தமிழகம்தான் அம்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தமிழகத்தை அம்மா பிரதிபலிக்க முடியாது. இந்த பிரம்மஞானம் கைவரப் பெற்றவர்கள் தமிழகத்தில் ஓ.ப, தா.பா போன்ற வெகுசிலர்தான். (ஓ.ப = ஓ. பன்னீர் செல்வம்)

“பிரதிபலித்தது போதும், போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றும் தனது சட்டமன்ற உரையில் அம்மா அன்புடன் உத்தரவிட்டிருக்கிறார். “அம்மா தலைமை தாங்கவேண்டும்” என்று தா.பா சொன்னதன் உட்பொருளும் இதுதான். தோளில் “சிவப்பு” துணியைத் தொங்கவிட்டிருக்கும் ஒரு மனிதர், “போதும், போராட்டத்தை முடியுங்கள்” என்று “பச்சை”யாக சொல்ல முடியாதல்லவா?

போராட்டம் இப்படியே தொடர்ந்து, எங்காவது ரெண்டு ஊரில் தடியடி-கைது என்று ஏடாகூடமாகிவிட்டால், “செக்கா சிவலிங்கமா என்று வித்தியாசம் தெரியாத மாணவர்கள் ஜெயலலிதாவுக்கும் ஒரு கொடும்பாவி தயார் செய்து பற்ற வைத்து விடுவார்கள்; புரட்சித்தலைவியின் கொடும்பாவி என்பதால் போலீசார் அதனை மிதித்து அணைப்பதற்கும் அஞ்சுவார்கள்; இதெல்லாம்  “களம் பல கண்ட கம்னிஸ்டான” தா.பாவுக்கு தெரியாதா என்ன? அதனால்தானே கொண்டை தெரிந்தாலும் பரவாயில்லை என்று அவரைத் தன்னுடைய ஒற்றர் படையின் தலைமைத் தளபதியாக அம்மா நியமித்திருக்கிறார்.

தாபா வாக இருக்கட்டும், பிற ஐந்தாம் படைத் தளபதிகளான வைகோ, பழ. நெடுமாறன், சீமான், டி.கே. ரங்கராஜன் போன்றோராக இருக்கட்டும். ஒரே நேரத்தில் எட்டுத் திக்குகளிலிருந்தும், வெவ்வேறு கட்டையில், நாளுக்கொன்றாகப் புரட்டிப் பேசும் இவர்களை அம்பலப் படுத்துவதென்பது மிகமிகக் கடினம். அது ரோலர் கோஸ்டரில் சவாரி செய்பவன் மீது குறி பார்த்து எறிவதற்கு ஒப்பானது.

“போரில் இலங்கையின் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது என்ற உண்மையை ராஜபக்சே சொல்லிவிடுவார் என்பதால்தான் இந்திய அரசு ஐ.நா விசாரணையை எதிர்க்கிறது” என்று முழங்கினார் தா.பா – இது மார்ச் 6-ம் தேதி.

இந்திய அமைதிப்படைக்கு டவாலி வேலை பார்த்தவரான தா.பா,  இப்படி “அநியாயத்துக்கு”  நியாயமாகப் பேசுகிறாரே, என்று நாம் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள், “அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இலங்கை அரசுக்கு புத்தி புகட்டும் வரையில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்கிறார். இது 12 ஆம் தேதி.

“திருத்தமாவது ஒண்ணாவது, இந்தியாவே தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்” என்று ஆங்கில சானல்களில் சீறுகிறார் தேசிய செயலர் டி. ராஜா. சி. மகேந்திரனோ, சன் டிவி விவாத மேடையில், “சுயநிர்ணய உரிமை, தேசிய இனப்போராட்டம்” என்று ஏ.கே 47 துப்பாக்கியாய் வெடிக்கிறார்.

“செய்த பாவத்துக்கு இந்தியா பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்” என்கிறார் நெடுமாறன். “அதெல்லாம் முடியாது, இந்தியாவின் டவுசரைக் கழட்டாமல் விடமாட்டேன்” என்று மேல் ஸ்தாயியில் ஒரு சவுண்டு விட்டு, அப்படியே மத்திய ஸ்தாயிக்கு இறங்கி வந்து, “தமிழக சட்டமன்றத் தீர்மானம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்கிறார் வைகோ.

இன்னொரு பக்கம் மார்க்சிஸ்டு எம்.பி டி.கே ரங்கராஜன். அவர் அம்மாவின்  முதுகுப் பக்கம் முளைத்திருக்கும் கை. “ராஜபக்சேவை ராஜபக்சேவே விசாரித்தால் போதும், என்பதும், வாக்கெடுப்பு கூடாது என்பதும்தான் அவர் கொள்கை. மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கையும் அதுதான். 2009 ஏப்ரல் வரையில் ஜெயலலிதா பேசியதும் இதைத்தான். காங்கிரசு அரசின் கொள்கையும் அதுதான். ஆனால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதை, நாடகம் என்று சாடிய ரங்கராஜன், சட்டமன்றத்தில் ஜெ போட்டிருக்கும் தீர்மானத்தை நாடகம் என்று சாடவில்லை. கட்சி மட்டும் சம்பிரதாயமாக தனது கருத்து வேறுபாட்டை தெரிவித்திருக்கிறது.

தேசிய இனப்பிரச்சினையைப் பொருத்தவரை “இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலும் எந்த தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிக்க முடியாது” என்பதுதான் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை. இப்படி ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் காஷ்மீரை எதிர்த்தும், ஈழத்தை ஆதரித்தும் எப்படி இவர்களால் வாள் சுழற்ற முடிகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதென்ன பிரமாதம், ஒரே நேரத்தில் ஈழத்தை ஆதரித்தும், எதிர்த்தும் அம்மா கம்பு சுற்றி வூடு கட்டவில்லையா?

“ராஜீவைக் கொன்ற புலிகளை கருணாநிதி ஆதரிக்கிறாரே, சோனியா ஏன் மவுனம் சாதிக்கிறார், அவர் ராஜீவின் பெண்டாட்டிதானே?” என்று ஏப்ரல் 2009 இன் முற்பகுதியில் பேசிய ஜெயலலிதா, அதே ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் “இராணுவத்தை அனுப்பி ஈழம் வாங்கித் தருவேன்” என்று தேர்தல் கூட்டங்களில் முழங்கவில்லையா?”

“இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது” என்று அக்டோபர் 2008 இல் பேசிய ஜெயலலிதா, இன்று ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடவில்லையா?

“இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் பிடித்து வைத்துக் கொண்டு, விடுதலைப் புலிகள் அவர்களைப் ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி ஜனவரி 2009 இல் ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கிய ஜெயலலிதா, இன்று ராஜபக்சே மீது இனப்படுகொலைக் குற்ற விசாரணை கேட்கவில்லையா?

இத்தனை தகிடு தத்தங்களையும் மறைத்து அம்மாவை ஈழத்தாயாக காட்டுவதென்பது, பச்சை ஆடை ஜெயலலிதாவை வெண்ணிற ஆடை ஜெயலலிதாவாக காட்டுவதற்கு ஒப்பான சவால். இதனை சாதிப்பதற்கு வைகோ, தாபா, சீமா, நெடுமா உள்ளிட்ட ஒப்பனைக் கலைஞர் சங்கமே களத்தில் இறங்கியிருக்கிறது. எனினும், இது சும்மா அரிதாரத்தை மாற்றிப் பூசும் வேலை மட்டுமல்ல என்பதால், கிராபிக்ஸ், அனிமேசன், ஈவென்ட் மானேஜ்மென்ட், மீடியா மேனேஜ்மென்ட், பிராண்ட் புரமோசன் வல்லுநர்களான ஃபீரீலான்ஸ் போராளிகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.

000

ட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை வழங்கிய சென்னைத் தமிழனுக்கு அம்மா ஒரு ரூபாய் இட்டிலி வழங்கவில்லையா? 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டையும் அம்மாவுக்கு வழங்கியிருந்தால் அன்றைக்கே அம்மா ஈழம் பெற்றுத் தந்திருக்க கூடும். “வரவிருக்கும் தேர்தலில் 40 எம்.பி தொகுதிகளையும் பெற்றுத் தந்தால், இலவச ஈழம் உறுதி” என்று சொல்வதற்குத்தான் இந்த சட்டமன்றத் தீர்மானம்.

ஆனால் இலவச ஈழத்தை வழங்கவிருக்கும் மஞ்சள் பையில், புலி படத்தை அச்சிட அம்மா சம்மதிக்க மாட்டார். அம்மா படத்தை மட்டும் போட்டு, புலி படத்தை புறக்கணிப்பதற்கு புலி ஆதரவாளர்களுக்கு மனம் ஒப்பாது. புலி மேல் அம்மா சவாரி செய்வது போல போடலாம். நல்ல கருத்துப் படமாகவும் இருக்கும்.

–   தொரட்டி

 

திருச்சியில் மகளிர் தின ஆர்ப்பாட்டம்!

4

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்க திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலணியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்கிற தலைப்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் காலை 10.30 மணி அளவில் விண்ணதிரும் பறை முழக்கத்துடனும், பெண் தோழர்களின் அரசியல் முழக்கத்துடனும் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

தலைமை உரையாற்றிய பெ.வி.மு தலைவர் தோழர்.நிர்மலா மார்ச்-8 பெண்கள் தினத்தை போராட்ட தினமாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், பெ.வி.மு, திருச்சியில் எடுத்த போராட்டங்கள் பற்றியும் அதில் சில வகையான, கம்பியூட்டர் எஞ்சினியர் லியாகத் அலியின் ஆபாச பொறுக்கித் தனத்தை கண்டித்தும், வரதட்சணைக் கொடுமைக் கெதிராகவும், பேருந்தில் பெண்களை இழிவுபடுத்தும் ஓட்டுனர், நடத்துனரின் ஆணாதிக்க பொறுக்கி தனத்திற்கு எதிராகவும், 4 வயது சிறுமியை பாலியல் வன்முறைக் குள்ளாக்கிய காமப் பொறுக்கியை கண்டித்து போராட்டம் நடத்திய பெண்கள் விடுதலை முன்னணியின் செயல்பாடு பற்றியும் விளக்கி பேசினார்.

கண்டன உரையாற்றிய பெ.வி.மு தோழர் மலர், ஆரம்ப காலங்களில் பெண் என்பவள் மதிப்புக்குரியவளாக கருதப்பட்டாள், தனிச் சொத்துடைமை வந்த பின்னரே, ஆணாதிக்கம் வந்தது, மார்ச்-8 என்பது போராட வேண்டிய ஒரு தினம், ஆனால் இன்று கோல போட்டி, சமையல் போட்டி என போராட்ட நாளை சிதைக்க கூடிய வகையில் தான் நடத்துகின்றனர். இந்த தினத்தை கொண்டாடும் வகையில் பெண்கள் இல்லை, ஏனெனில் மறுகாலனியாக்க விளைவால் பாலியல் சுரண்டல், உழைப்பு சுரண்டல், உரிமையை மறுக்கும் ஆணாதிக்க சுரண்டல் என பல்வேறு சுரண்டல்களால் சிக்குண்டு கிடக்கின்றனர், அவர்களுடைய போராட்ட குணமென்பது கூடங்குளம், முல்லை பெரியாறு சம்பவங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது, ஆனாலும் இந்த போர்க்குணம் மழுங்கடிக்கப்படும் விதமாக டிவி சீரியல்கலும் நுகர்வு வெறியும் திட்டமிட்டு புகுத்தப்படுகிறது. இதிலிருந்து மாறி பெண்கள் அமைப்பாக திரள வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினார்.

இறுதியில் சிறப்புரையாற்றிய ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சிறப்பு தலைவர் தோழர்.தர்மராஜ் பெண்கள் தினமான மார்ச்-8 இந்த தினத்தை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலையிலா பெண்கள் இருக்கிறார்கள். டெல்லி பாலியல் வன்முறை பற்றிய பிரச்சினையில் ஆண்கள் சும்மா இருந்தாலும் பெண்களின் உடை நடை ஆண்களின் உணர்ச்சியை தூண்டும் விதமாக உள்ளது, பெண்களின் உடை சரியில்லை போய் தொடலாம் எனும் உரிமையை யார் கொடுத்தது. இப்படி சொல்வது ஆண்களின் ‘கெத்து’ அல்ல பொறுக்கிதனம், எனக்கு கிடைகலன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாதென்கிற ஆணாதிக்க திமிர், சமூகம் முழுமைக்கும் இதுதான் ஆதிக்கம் செய்கிறது. கருணாநிதி, அண்ணா இருவரும் பெண்களைப் பற்றி இழிவாக பேசியவர்களே, முல்லை பெரியாறு, கூடங்குளம் போராட்ட மக்கள் அடக்கக் கூடிய இந்த அரசால் காமப் பொறுக்கிகளை அடக்கமுடியாதா? அடக்க கூடாது என வளர விடுவதே அரசுதான், இந்த சமூக அமைப்பே அநீதியானது இதை மாற்றியமைப்பதன் மூலம் பெண்களுக்கான விடுதலை கிடைக்கும் என உணர்த்தினார்.

இடையிடையே ம.க.இ.க மையக் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு பாடல்கள் பாடப்பட்டன. பெண்கள், தோழர்கள் 100 பேர் அளவில் கலந்து கொண்டனர்.

[படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]

செய்தி: பெ.வி.மு.திருச்சி

 

கோவை மாணவர்களின் எழுச்சி!

32

கோவை மாணவர்களின் எழுச்சி

ஜெனிவாவில் கூட இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தின் மூன்றாவது நாள் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களின் போராட்டமும் கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். அதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்தனர். சட்டக்கல்லூரிக்கு உள்ளேயே போராட்டத்தை நடத்தினால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்பதால் நகரத்தின் மையத்தில் இடம் தேடினர். இடம் கிடைக்காததால் ம.தி.மு.க. அலுவலகத்தில் அனுமதி பெற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.

மாணவர்கள் எதிர்பார்த்தபடியே ஊடகங்களின், மக்களின் கவனத்தை ஈர்த்தது. சமூக ஆர்வலர்கள் அமைப்புகள் தலைவர்கள் என பலரும் வந்து வாழ்த்தி உற்சாகமூட்டினர். இதே வேளையில் தமிழகம் முழுவதும் அரசு சட்டக்கல்லூரி கலைக்கல்லூரி மாணவர்கள் வீச்சாக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதை தடுக்க இயலாத தமிழக அரசு அனைத்து அரசு சட்டக்கல்லூரிக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை விட்டது.

விடுமுறை விட்டால் போராட்டம் பிசுபிசுத்துப்போய்விடும் என்று தமிழக அரசு மனப்பால் குடித்த வேளையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். முதலில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களும் அவர்களுடன் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்களும் வந்தனர். இரண்டு கல்லூரி மாணவர்களும் இணைந்து ஒரு பேரணி நடத்தினர் பின் இதில் திருப்தியடையாத மாணவர்கள் வீரியமான போராட்டத்தில் இறங்கும் விதமாக ரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

இதே வேளையில் சட்டக்கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டத்தை தீவிரபடுத்தும் விதமாக விமான நிலையத்தை முற்றுகையிட்டு அங்குவைத்தே ராஜபக்சேஷவின் உருவபொம்மையை எரித்தனர். இப்போராட்டம் எளிதில் நடந்துவிட வில்லை. விமானநிலையத்தில் இருந்த மாணவர்களை தடுக்க முயல அதை மீறி மாணவர்கள் உள்ளே நுழைய போலீசார் தாக்க துவங்கியுள்ளனர். மாணவர்கள் அதை முறியடித்து உள்ளே நுழைய வட இந்திய போலீஸ் துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவோம் என்று மிரட்டியும் பணியாமல் உள்ளே நுழைந்து அமெரிக்க அரசு, இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இந்த வேளையில் அனைத்து தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்துவிட்டனர்.

ஆங்காங்கே சாலைமறியல், உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம், வகுப்பு புறக்கணிப்பு, பாரதியார் பல்கலைகழகத்தின் தொடர் உண்ணாவிரத போராட்டம் என போராட்டம் தீவிரமடைந்ததை கண்டு பீதியுற்ற தமிழக அரசு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டது. ஆனால் மாணவர்கள் இதற்கெல்லாம் பின்வாங்குவதும் இல்லை. உடனடியாக மாணவர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

மாணவர்கள் கூட்டமைப்பு துவக்கம்

தமிழீழ விடுதலைக்காக மாணவர்கள் கூட்டமைப்பு கோவை பகுதியை மையமாக முன்வைத்து மாணவர்களின் முன்முயற்சியில் துவக்கப்பட்டது. கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் தலைமையின் கீழ் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் பல்வேறு பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறத் துவங்கின. மாணவர்கள் ஓர் அமைப்பாக ஒருங்கிணைந்தபின் போராட்டம் முன்னிலும் பலமடங்கு வீரியத்துடன் நடைபெறத்துவங்கியது. குறிப்பாக நேரு மாணவர்கள் நடத்திய போராட்டம்.

நேரு கல்லூரி மாணவர்களின் எழுச்சி

முந்தைய நாள் இரவு திட்டமிட்டு குறைந்தது நூறில் (100) இருந்து இருநூறு(200) பேர் பங்கேற்பர் என்ற எதிர்பார்ப்புடன் மறுநாள் காலை அணிதிரட்ட ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டது மாணவர்களின் உணர்வையும் வளர்ச்சியையும் காட்டுகிறது. இதில் பெருமகிழ்ச்சிக்குறிய மற்றொரு செய்தி என்னவென்றால் கலந்து கொண்டவர்களில் பாதிபேர் மலையாளிகள் மேலும் கணிசமான அளவு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள்.

இனவெறி, மொழிவெறி, மாநில மனோபாவத்தையும் கடந்து மாணவர்கள் ஓர் வர்க்கமாய் ஒன்றிணைந்து போராட்ட களத்திற்கு வந்தனர். துவக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பது அல்லது அடையாள போராட்டம் நடத்துவது என்ற எண்ணத்தில் வந்தவர்கள் பின்பு போராட்டத்தை தீவிரப்படுத்த எண்ணினர். எனவே அருகில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மதுக்கரையில் உள்ள மத்திய அரசின் இராணுவ ஆயுதக்கிடங்கை முற்றுகையிடக் கிளம்பினர். கல்லூரியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கரைக்கு பேரணியாகவே முழக்கமிட்டபடி கிளம்பினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுச்சியுடன் கிளம்ப நான்கு இடங்களில் காவல்த்துறை தடுத்து நிறுத்த முயன்றது.

தடுப்புகளை வீசி எரிந்துவிட்டு போலீசையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறியது மாணவர் பட்டாளம். ஆயுதக்கிடங்கை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சுமார் இரண்டுமணி நேரம் போராட்டம் தொடர்ந்தது. இந்திய  ராணுவம் துப்பாக்கியை காட்டி மிரட்டிப்பார்த்தனர், போலீஸ் லத்தியை காட்டி மிரட்டி பார்த்தது எதற்கும் அஞ்சாமல் மாணவர்கள் துணிந்து நின்றபோது துப்பாக்கிகளும், லத்திகளும் பணிந்தன. மாணவர்களிடம் கெஞ்சின. மாணவர்கள் எழுச்சியுற்று வீதிக்கு வந்தால் அரசின் அடக்குமுறைக் கருவிகள் அஞ்சி நடுங்குவதையும் கெஞ்சிப்பணிவதையும் நேரில் பார்க்க வேண்டுமே அந்தக் காட்சி வீரியமான போராட்டங்களின் மூலம் அதிகார வர்க்கத்தை பணிய வைக்கமுடியும் என்பதை மாணவர்கள் தங்கள் போராட்ட அனுபவத்தின் மூலம் உணர்ந்தனர்.

பின் போராட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய மாணவர்கள் மன நிறைவு இன்றி பிரிந்து சென்று சென்று சாலைமறியல் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். மாணவர்களை கைது கூட செய்ய முடியாமல் விட்டு சென்றது போலீஸ்.

என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போர் !

மறுநாள் போராட்டச் செய்திகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்டே இருந்தன. எஸ்.என்.ஆர். கல்லூரி, சி.எம்.எஸ்., பி.எஸ்.ஜி. மாணவர்களின் போராட்டம், பள்ளி மாணவர்கள் +2 தேர்வெழுதிவிட்டு தொண்டாமுத்தூர் சாலைமறியல், ஆலாந்துறை பள்ளி மாணவர்களின் போராட்டம், குனியமுத்தூர் பள்ளி மாணவர்களின் போராட்டம், கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி கிராமப்புறங்களில் தன்னெழுச்சி போராட்டம், ஈரோடு, திருப்பூர் மாணவர்களின் போராட்டம் என பரவிக்கொண்டிருந்தது. இவ்வேளையில் என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆயத்தமாகி போராட்ட கமிட்டிக்கு அழைப்பு விடுத்தனர்.

போராட்டகமிட்டி பிரதிநிதி சென்று பேசிய போது ஏதாவது பிரச்சினை வருமா? போலீஸ் அடிக்குமா? கொஞ்சம் பயமாக இருக்கிறது இயல்பாக தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். இவ்வேளையில் நூற்றுக்கணக்கில் போலீஸ் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றிருந்தது. இதை உடைத்துக் கொண்டு எப்படி வெளியேறுவது. நாம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம்.என்பதை உணர்ந்து அருகாமை கல்லூரி மாணவர்களை துணைக்கு அழைத்தனர். மாணவர் கூட்டமைப்பும் மாணவர்களை அழைத்து வந்தது.

கல்லூரிக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்வது போல் வெளியேறி விமானநிலையத்தை நோக்கி சென்றனர். விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மாணவர்கள் வருவார்கள் என எதிபார்த்து போலீஸ் படை காத்திருந்தது. திடீரென்று முழக்கமிட்டு உள்ளே நுழைந்த மாணவர்களை தடுப்புகளை வைத்து (பேரிகார்டு) தடுக்க முயன்றது. ஒல்லியான மாணவன் ஒருவன் எட்டி உதைக்க பேரிகார்டு எகிறியது.

தடுப்பை உடைத்துக் கொண்டு மாணவர்கள் உள்ளே செல்ல பின்னே போலீஸ் ஓட போர்க்களமானது விமானநிலையம். ஒரு வழியாக மாணவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து நிறுத்தியது போலீஸ். ஒரு மாணவனை பிடிக்க மூன்று போலீஸ் நான்கு போலீஸ் என தேவைப்பட்டது. ஒரு வழியாக தடுத்து நிறுத்தி விட்டோம் என போலீஸ் நினைத்து பெருமூச்சு விட எங்கிருந்தோ வந்த மற்றொரு மாணவர் பட்டாளம் விமானநிலையத்துக்குள் பாய்ந்து முன்னேற செய்வதறியாது நிலைகுலைந்து போனது போலீஸ் படை. “போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் எங்களால் முடியவில்லை என்று கெஞ்சத் துவங்கி விட்டார்கள்”.

கமிஷனர் போலீசின் அதிகாரம் மாணவர்களின் காலைப் பிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தது. “நாங்கள் உடனே நிறுத்தமாட்டோம் பதினைந்து நிமிடம் முழக்கமிட்டபின் செல்வோம்” என்றனர் மாணவர்கள். வேறு வழியின்றி அனுமதித்தது போலீஸ். போராட்டத்திற்கு பின் கைதான மாணவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற போது வழிநெடுக முழக்கமிட்ட படியே மாணவர்கள் சென்றனர்.

மாணவர்களை கைது செய்து வைத்திருந்த மண்டபத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் விஷயத்தை கேள்விப்பட்டு மாணவர்களை சந்திக்க வந்தனர். வரும் போது பலகாரம், உணவு, தேநீர் போன்றவற்றை கொடுத்து தங்களின் ஆதரவையும் வாழ்த்துதளையும் தெரிவித்தனர். உங்களின் போராட்டம் சிறப்பானது நீங்கள் இத்துடன் நிறுத்தக்கூடாது நாட்டையே நீங்கள் மாற்ற வேண்டும் என்று வாழ்த்தினர்.

பேரணிக்கு  திட்டமிடல்

மாணவர்கள்  போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மாணவர்களை ஒருங்கிணைந்து  மாணவர் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் இதற்கு தலைமை தாங்கிய கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.

பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்தேறின குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மார்ச் 19 அன்று  காவல் துறையின் அனுமதி மறுத்த நிலையில் தான் ஏற்பாடுகள் நடந்தேறின. தடையை மீறி நடத்துவது என்று மாணவரகள் உணர்வு பூர்வமாக தீர்மானித்திருந்தனர். மாணவர்களின் உறுதியை கண்டு அஞ்சிய காவல்துறை மார்ச் 18 அன்று இரவு அனுமதியளித்தது.

வெற்றிகரமான பேரணி:

மார்ச் 19 அன்று  காலை முன்னணியாளர்கள் பேரணி துவங்கும்  இடத்திற்கு வந்தனர். உளவுத் துறை அவர்களை கேமராவில் படமெடுத்து. அதன் மூலம் மிரட்ட முயன்றது. மாணவர்கள் அதற்கு அஞ்சாமல் படம் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். முந்தைய நாள் பத்திரிகையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பெயர், முகவரிகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னாளில்  அரசு வேலைகளில் சேரும்போது அரசுக்கு எதிராக போராடியது தெரிந்தால் வேலை கிடைக்காது என்ற செய்தியை வெளியிட்டு மாணவர்களை பயமுறுத்த முயன்றது.

இவை அனைத்தையும் மீறி மாணவர்கள் பேரணி துவங்கும் இடத்தில் குவியத் துவங்கினர். சுமார் 6,000 மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி எழுச்சியுடன் துவங்கியது. இந்திய அரசையும் அமெரிக்க தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் மோசடியையும் அம்பலபடுத்தியும், தேசிய கட்சிகள், ஒட்டு கட்சிகளின் துரோகத்தையும் தோலுரித்தும் முழக்கங்கள்  எழுப்பினர்.   பறை இசை முழக்கத்துடன் பேரணி துவங்கியது. சாலையின் இரு பக்கத்திலும் கூடி நின்று கவனித்தனர். “வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதிக்கு வந்து போராடு என்ற முழக்கம் அவர்களையும் போராட அழைத்தது.

போலீஸ் ஏற்படுத்திய தடையை முறியடித்த மாணவர்கள்:

மாணவர்கள் போராட்டம் பிரதான சாலையில் முன்னேறிச் சென்ற போது, போலீஸ் வழிமறித்து. தடுப்புகளையும், 2 தனியார் பேருந்துகளையும் நிறுத்தி வைத்து எதிரே போலீஸ் பட்டாளத்தையும் நிறுத்தி வைத்து ஆள் அரவமற்ற மாற்று பாதையில் செல்லச் சொன்னது. மாணவர்கள் மறுத்தனர். “முன்னேறுவோம் முன்னேறுவோம் தடைகளை உடைத்து முன்னேறுவோம் என்ற தொடர் முழக்கம் மாணவர்களை எழுச்சியுறச் செய்தது. மாணவர்களிடமிருந்து கற்கள் பறந்தன. பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கியது, உடனே பேருந்தை எடுத்து விட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு, போலீஸ் படையை விலக்கிக் கொண்டு மாணவர் படை வெற்றி முழக்கமிட்டு முன்னேறியது.

போலீஸ் படையோ எதுவும் செய்ய இயலாமல் கையை பிசைந்து கொண்டு விலகி நின்றது. காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு பின் உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று சட்டக் கல்லூரி மாணவர்களின்  உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.  உண்ணாவிரதப் போராட்டம் அரசை நிர்பந்திக்காது எனவே தீவிர போராட்டதிற்கு தயராகும் விதமாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை  கைவிட்டு தீவிர போராட்டத்திற்கு  மாணவர்களை அரை கூவி அழைத்து பேரணியை நிறைவு செய்தனர்.

சுமார் மூன்று மணிநேரம் நடந்த பேரணி மாணவர்களையும் மக்களையும் எழுச்சியுற செய்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு உணர்வூட்டியது.

பேரணி முடித்து சென்ற மாணவர்களில் ஒரு பிரிவினர் ரயிலை மறித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். மறுநாளும் போராட்டங்களும் தீவிரமடைந்தன. தற்போதைய போராட்டங்கள் அனைத்தும் போர்குணமான, துணிச்சலான போராட்டங்கள் ஆகும்.  மாணவிகள் மட்டுமே பங்கேற்ற ஆர்பாட்டம், 14 மாணவிகள் மட்டும் பங்கேற்று காட்டூர் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை போராட்டம், ராணுவ பயிற்சி கல்லூரி முற்றுகைப் போராட்டம் அதை வீடியோ படம் எடுத்த மத்திய உளவுத் துறைக்கு அடி உதை அவருடைய பேண்ட் கிழிந்து போனது, சொட்டைத் தலையிலேயே அடித்துள்ளனர். இதர சீருடை போலீசார் வந்து காப்பாற்றி செல்லவேண்டி வந்தது. அதன் பின் போலீஸ் தரப்பில் யாரும் போட்டோ பிடிக்கவில்லை. தந்தி அலுவலகம் முற்றுகை, வருமானவரி அலுவலகத்தை கைப்பற்றி 1 ½    மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வங்கி பி.எஸ்.என்.எல்., முற்றுகை என மத்திய அரசின் நிர்வாக அதிகார மையங்கள் அனைத்தையும் இலக்கு வைத்து போராடினர். போலீஸ் துறையோ வெந்து நொந்து போனது.

தொடர்ச்சியான இந்த போராட்டம் மாணவர்களை  வெகுவாக பயிற்றுவித்துள்ளது.

  • ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது.
  • அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
  • சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கறையும் கொள்ள செய்தது.
  • போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க கூடாது என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தானும் இதில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற சமூக பண்பை விதைத்துள்ளது.
  • குறிப்பாக சமூகம் சார்ந்த எந்த போரட்டத்திலேயும் பங்கேற்காத மருத்துவக் கல்லூரி மாணவர்களையும், விவசாய கல்லூரி மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும் வீதிக்கு வரவைத்தது.
  • பெண்களை கணிசமான அளவு ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது.
  • பல மாணவ தலைவர்களை, போராளிகளை, கவிஞர்களை, பேச்சாளர்களை உருவாக்கி சமூகத்துக்கு அளித்துள்ளது.
  • நீண்ட நேரம் அமர்ந்து அரசியல் சார்ந்த சொற்பொழிவுகளை கவனிக்க, விவாதிக்க வைத்துள்ளது.
    ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளை தானும் நம்பாது சமூகத்துக்கும் போதிக்க வைத்துள்ளது.
  • கல்லூரி நிர்வாகத்தை கண்டு, போலீசை கண்டு, அதிகாரிகளை கண்டு அஞ்சாமல் அடக்குமுறைகளை தன் வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம் எதிர்கொள்ள பயிற்றுவித்தது.
  • கல்லூரி விட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்றாலும் அங்கும் எழுச்சிகளை ஏற்படுத்த முனைவது.

எனினும் இத்தகைய எழுச்சி பெற்ற மாணவர் வர்க்கம் இனவாத கண்ணோட்டத்தில் பீடிக்கப்பட்டும், அரசியல் அறியாமையுடனும் சரியான அமைப்பை தேர்ந்தெடுக்க தெரியாமலும் குழப்பத்தில் இருப்பது ஒரு யதார்த்தம். எனினும் தனக்கான புரட்சிகர கடமையை விரைவில் உணர்ந்து தயாராகும் என நம்பலாம் ஏனெனில் தேசத்தின் எதிர்காலம் அவர்கள் கையில்.

பின்குறிப்பு: 1.  நாம் தமிழர் கட்சியின் தலையீடு காரணமாக மாணவர்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் உணர்ந்து மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

2. இனி போராட்டம் நடைபெறாது என்ற தைரியத்தில் கல்லூரியை திறந்தது சி.எம்.எஸ். கல்லூரி நிர்வாகம். மீண்டும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம், ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் வளர கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தடைகளை கடந்து தொடர்கிறது மாணவர்கள் போராட்டம்…. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்

பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்!

1

ந்துத்துவ மனசாட்சியைத் திருப்திப்படுத்த அப்சல் குருவைத் தூக்கில் போட்டதை மறைத்து, சட்டத்தின் ஆட்சிப்படியே அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்று காட்டுவதற்காகவே, இப்போது வீரப்பன் கூட்டாளிகள் எனப்படுவோரை அவரசமாகத் தூக்கில் போடத் துடிக்கிறது இந்திய அரசு.

1993-இல் மேட்டூரை அடுத்த பாலாறு பகுதியில் வீரப்பனால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் வனத்துறையினர், போலீசார் உள்ளிட்டு 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 124 பேர் மீது வழக்கு பதிவு செயப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூர் தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் 117 பேர் குற்றமற்றவர்கள் என்று அப்போதே விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், போலீசைத் திருப்திபடுத்துவதற்காகவே 7 பேர் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. பின்னர், அப்பாவிகளான அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அதில் மூவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

வீரப்பன் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்ட எஞ்சிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், 2004 ஜனவரியில் கொலைவெறி பிடித்த உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு, ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தித் திமிராகத் தீர்ப்பளித்தது. பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்நால்வரும் ஏழைகள், சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே அதிகாரத் திமிரோடு நீதிபதிகள் அவர்களைத் தூக்குமேடையில் நிறுத்தினர்.

இதையடுத்து கர்நாடகத்தின் பெல்காம் சிறையிலுள்ள இந்நால்வரும் அரசுத் தலைவரிடம் கருணை மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் கடந்த 9 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. இந்தக் கருணை மனுக்களை, கடந்த பிப்ரவரி 11 அன்று அரசுத் தலைவர் “தூக்குத்தூக்கி” பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.

தடா சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீரப்பன் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்ட இந்நால்வர் மீது நான்கு வழக்குகள் பதிவாகியிருந்தன. அவற்றில் 3 வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வழக்கில் மட்டுமே அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும், இந்நால்வரையும் வீரப்பனுடன் பார்த்ததாக ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று போலீசு வெறியர்களால் புகழப்படும் எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் கூறியதை எந்த விசாரணையுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் அநியாயமாகத் தீர்ப்பு எழுதியுள்ளனர். அதேசமயம், நீதிபதி சதாசிவம் கமிசன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த அதிரடிப்படையின் அட்டூழியங்களுக்குப் பொறுப்பான போலீசு அதிகாரிகள் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க அந்நீதிபதிகள் முன்வரவில்லை.

பயங்கரவாத தடா சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை நிராபராதி என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும். அங்கு போலீசு கூறுவதுதான் சாட்சியமாகும். இதுதான் தடா பயங்கரம். இக்கொடிய தடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதாலேயே அச்சட்டம் காலாவதியாக்கப்பட்டுள்ளது. தடா சட்டமே அநீதியானது எனும்போது, காலாவதியான அச்சட்டத்தின்கீழ் நடந்த விசாரணையின்படி தண்டிப்பது அதைவிடப் பெரிய அநீதி.

பாலாறு வழக்கு
நீதிமன்ற பயங்கரவாதம் : தூக்குக் கயிற்றின் நிழலில் நிறுத்தப்பட்டுள்ள பிலவேந்திரன், சைமன், மாதைய்யா, மற்றும் ஞானப்பிரகாசம்.

வீரப்பனுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவிகளான இவர்களை, அவர்களது வீடுகளிலிருந்தும், பொது இடத்திலிருந்தும்தான் போலீசு இழுத்துச் சென்றுள்ளது. தோமையார்பாளையம் சர்ச்சில் வேலை பார்த்து வந்தவரான ஞானப்பிரகாசத்தை மாதாகோயிலிலிருந்து அதிரடிப்படையினர் இழுத்துச் சென்றதாக பாதிரியார் வின்சென்ட் டிசோசா பகிரங்க வாக்குமூலமே கொடுத்துள்ளார். “பாலாறு வெடிகுண்டுத் தாக்குதலில் எஸ்.பி. கோபாலகிருஷ்ணனுக்குக் காலில் அடிபட்டு மயக்கமாகிவிட்டார். மயங்கிய நிலையில் இருந்த அவர் எப்படி நான்குபேரை அடையாளம் கண்டிருக்க முடியும்? மேலும், நீதிமன்றத்தில் கோபாலகிருஷ்ணனைத் தவிர வேறு எவரும் இந்நால்வரையும் பார்த்ததாகச் சொல்லவுமில்லை. ஒருவரது சாட்சியை வைத்துதான் இப்படி அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்று பாலாறு தாக்குதலின்போது வீரப்பனுடன் காட்டில் இருந்த அவரது மனைவி முத்துலட்சுமி குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்கள் மைசூர் உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும்போதே, உச்ச நீதிமன்றம் அநியாயமாகத் தூக்குத் தண்டனையை விதித்துள்ளது. இவர்களது கருணை மனுவும் 9 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 19 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதாலும், அதிலும் கடந்த 9 ஆண்டுகளாக கருணை மனு மீதான முடிவு தெரியாமல் அவர்கள் காத்திருந்ததால், இது அவர்களின் உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது என்ற அடிப்படையில் தூக்கு தண்டனையை ரத்துசெது ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புல்லரும் கருணை மனு மீது முடிவெடுக்க பல ஆண்டுகள் தாமதமாவதைச் சுட்டிக்காட்டி நீதி மன்றத்தை நாடியுள்ளனர். இது தொடர்பான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பை எதிர்பார்த்து ஆறு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

சமூகத்தின் கூட்டுத்துவ மனசாட்சி என்று கூறி அப்சல் குருவைத் தூக்கில் போட்டது போல, போலீசின் மனசாட்சியைத் திருப்திபடுத்தவே வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறி அப்பாவிகள் நால்வரைத் தூக்கில் போடத் துடிக்கிறது இந்திய அரசு. பாசிச ஜெயாவோ, வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு பணமும், பரிசுகளும் பதவி உயர்வும் அளித்து போலீசின் அட்டூழியங்களை உறுதிப்படுத்துகிறார். இதுதான் சட்டத்தின் பெயரால் நடக்கும் காட்டுதர்பார் ஆட்சியின் மகிமை.

– குமார்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!

14

ன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தை அவசியம் கருதி இங்கே தனிப்பதிவாக வெளியிடுகிறோம். இவர் ஒரு பெண் பத்திரிகையாளர். பொறுக்கி ராஜாக்களால் ஊடகத்துறையில் வளர முடியாமல் மட்டுமல்ல, தொடர்ந்து செயல்பட முடியாமலேயே துரத்தப்பட்டவர்களில் ஒருவர். இன்றைக்கு அகிலா துணிந்து போராடி வருவதிற்கு பின்னே நியாயம் கிடைக்காத பல பெண் பத்திரிகையாளர்களின் கதை மறைந்திருக்கிறது.

வினவின் கட்டுரையை சில ஆயிரம் பேர் படித்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில விதிவிலக்குகளைத்  தவிர பத்திரிகையாளர்களிடமிருந்து திட்டமிட்ட மௌனத்தையே காண்கிறோம். பலர் முகநூலில் அமெரிக்கா முதல் ஈழம் வரை அனைத்தையும் விமரிசிக்கும் போராளிகளாக வலம் வருகின்றனர். வெள்ளியன்று ரிலீசாகும் படங்களுக்கு வியாழனன்றே விமரிசனங்கள் எழுதுகின்றனர். கட்சி சார்பாகவோ இல்லை கருத்து சார்ந்தோ பகிரங்கமாக விவாதிப்பவர்களாகவும் காட்டிக் கொள்கின்றனர். பத்திரிகையாளர்களே அகிலாவின் பிரச்சினைக்காக அமைதி காக்கிறார்கள்  என்றால் இவர்கள் வேலை செய்யும் தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இந்த பத்திரிகை போராளிகள் சக பத்திரிகையாளரான அகிலாவுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்கோ, சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்? ஈழத்திற்காக மாணவர்கள் போராடும் இந்தக் காலத்தில்அகிலாவிற்காக ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தாதது ஏன்? தமது பத்திரிகைகளில் செய்தி வருமாறு குரல்கொடுக்காதது ஏன்?

நேற்று சன் டிவியிலிருந்து அகிலா தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.விசாரணை இனிமேல்தான் நடக்குமாம். ஒரு பொறுக்கியை எதிர்த்துப் போராடிய பெண்ணுக்கு சன் டிவி அளித்திருக்கும் பரிசு இது.

பத்திரிகையாளர்களே, பதிவர்களே இன்னும் அமைதி காக்கதீர்கள்.

பேருந்தில் வைத்து ஒரு பெண்ணை  பலரும் வல்லுறவுக்கு ஆளாக்குவது மட்டும்தான் பாலியல் வன்முறையா?

இதோ பெயர் வெளியிட விரும்பாத இந்த பெண் பத்திரிகையாளர் கேட்கிறார். பதில் சொல்லுங்கள்!

ஊடக உலகில் நிலவும் இத்தகைய வன்முறைகளை எதிர்ப்பதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அகிலாவுக்கு தேவையான ஆதரவை வழங்குவோம். அவரது போராட்டத்திற்கு துணை நிற்போம்!

வினவு

________________________________

யா ரொம்ப வருஷத்துக்கு முன்னமே நீங்க செஞ்சிருக்க வேண்டிய விஷயம்… ரொம்ப லேட்டா வந்திருந்தாலும் உங்ககிட்டேயிருந்து ஆதரவு வர்றது என்னைய மாதிரி ஒடுக்கப்பட்ட, ஆதரவற்ற ஊடகப் பெண்களுக்கு அவசியம்தாங்க.

நான் இப்போ ஊடகத்துல இல்லீங்க. ஆனா நீங்க கட்டுரையில சொல்ற ‘சாரு’ங்களால பாதிக்கப்பட்டு மீடியாவை விட்டே ஓடிப்போன பல பெண்கள்ல நானும் ஒருத்தி. ‘பராசக்தி’ல கலைஞர் ஐயா எழுதின ஒரு ஃபேமஸான வசனம்தான் ஞாபகத்துக்கு வருது. ‘ஓடினாள், ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’னு வருமே… அந்த வசனம் எங்களைப் போல நேர்மையா, உண்மையா இருக்கணும்னு நினைக்கிற ஊடகப் பெண்களுக்கு ரொம்பவே பொருந்தும்.

சிறுபத்திரிகை, பெரும் பத்திரிகை, டிவி.ன்னு எல்லா விதமான மீடியாக்கள்லேயும் எங்களைத் தொறத்தறதுக்கு இவிங்க காத்திருக்காய்ங்க. எஸ்எம்எஸ் அனுப்பணும், நேரங்காலம் தெரியாம போன்ல கூப்ட நேரத்துக்கு பேசணும், பாத்ரூம் போறதுக்குக்கூட சாருங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு போகணும், இந்த ஸ்டெப்ஸ்ல எல்லாம் தாண்டி வந்தா வேலை ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம். வேற ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.

எழுதத் தெரியுமா? பத்திரிகை அறம் தெரியுமா? சரிப்பா…உனக்கு ஒரு பேட்டி எடுக்கத் தெரியுமான்னு சாருங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. சாருங்க வெச்ச டெஸ்ட் எல்லாம் பாஸ் பண்ணா நீங்க அடுத்தடுத்து போய் கிட்டே இருக்கலாம்.

ஐயா எங்க குடும்பத்துல நான்தான் முதல்ல காலேஜ் வரைக்கும் படிச்ச பொண்ணு. பெரிய சாதியோ, அதிகாரம் உள்ள சாதியோ கிடையாது. பணமா? வாழ்க்கை ஃபுல்லா  கடனாளிங்கதான். கடன் வாங்கித்தான் படிச்சேன். நல்ல எழுதறேன்னு தான் பத்திரிகைல வேலை கிடைச்சது. பத்திரிகைகாரி ஆகணும்னு எனக்கு எந்த லட்சியமும் கிடையாது. 15 வயசு வரைக்கும் பத்திரிகையே படிக்காத குடும்பத்திலிருந்த வர்றங்களுக்கு அந்த லட்சியம் எல்லாம் வராதுங்க.

ஆனா நான் செய்ற வேலை எப்படிப்பட்டதுங்கற தெளிவு எனக்கு இருந்துச்சு. நேர்மையா இருந்தேன், எனக்கு வாய்ப்பு கிடைச்ச வரைக்கும் ஒரு பொண்ணு எதையெல்லாம் எழுத முடியாதுன்னு சொல்வாங்களோ அதையெல்லாம் எழுதினேன். ஆனா சாருங்களுக்கு அதெல்லாம் தேவையில்லாத விஷயம். சாருங்களுக்கு இணங்கி நடக்கலைன்னு பல சோதனைகள், பல வேதனைகள். எல்லாமே மறைமுகமான தாக்குதல்கள்தான். மனரீதியாக ஒடுக்கி, அடக்க நினைக்கிறது சாருங்களுக்கு கைவந்த கலை.

சன் டிவி

இதுல புள்ளி ராஜா சாரு பண்ணதுதாங்க என்னைய மீடியாவைவிட்டே தொரத்தி விட்டது. என்னை ஆறு மாசம் சும்மாவே ஒக்காத்தி வெச்சு சம்பளம் கொடுத்த மவராசன் அவரு. ஏதோ போகட்டும்னு கொடுத்த வேலையிலேயும் எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழையெல்லாம் கண்டுபிடிச்சு கேப்பாரு பாருங்க அடுக்கடுக்கான கேள்வி… ஆத்தாடி! சாருக்கு ஒரு தப்புகூட வந்துடக்கூடாது அவ்வளவு தமிழ் பற்று. அதனாலதான் திராவிடப்பற்று உள்ள மற்ற பத்திரிகைகாரங்க அவரை காப்பாத்தி விடறாங்க போலிருக்கு. (ஈழப்பிரச்னைக்கு ஆதரவு கொடுத்த சாருங்க பத்து பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணியிருந்தாலும் நாங்க தோள்கொடுத்து காப்போம்னு பல பத்திரிகை தோழர்கள் காப்பாத்துவாங்க. ஐயா தோழர் மாரே நாங்களும் தமிழச்சிங்கதான். அங்க சிங்களவன் எங்களைத் தொறத்தரான்னா, இங்க சாரு மாறு தொரத்தராங்க. அங்கேயும் நாங்க நாசமாப் போறோம், இங்கேயும் போறோம். எங்களுக்காகவும் கொஞ்சம் கருணைக் காட்டுங்க. உங்க கண்ணு, மனசு எல்லாத்தையும் கொஞ்சம் தொறந்து வையுங்க.)

ஐயா எனக்கு அடிமேல் அடிபட்டு ஒரு கட்டத்துல சாதி, பணம், அதிகாரம் எந்த பின்னணியும் இல்லாத நாம பத்திரிக்காரியா இருக்கவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டு, சும்மா வேலைக்குன்னு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். சாருங்க நீ போய் மாடு மேய்ன்னு திட்டினாக்கூட சிரிச்சிக்கினேதான் நிப்பேன். சாருங்களைப் பார்த்து பல்லை இளிக்கறதுன்னு இதுக்கு அர்த்தம் எடுத்துக்காதீங்க. நீ எதுக்காக என்னை திட்டறேன்னு தெரியும்டாங்கிற திமிருதான். இந்த திமிருதாங்க என்னை பலப் பல ஊடக சாருங்கக்கிட்டேயிருந்து காப்பாத்துச்சு.

ஆனா அப்பாவி பொண்ணுங்க என்ன பாடுபட்டாங்க தெரியுமா? எல்லார் முன்னாடியும் கதறி கதறி அழுவாங்க. அவமானத்தால கூனிக்குறுகி போவாங்க. சில மாதத்துல பெரிசா கூம்பிடு போட்டுட்டு போயிடுவாங்க. அந்த வெறுப்புலதான் நானும் விலகிட்டேன்.

ஆனா இப்போ எனக்கிருக்கிற கேள்வியெல்லாம்… சுதந்திரமா ஒரு பொண்ணு மீடியாவுல வேலைப் பார்க்கவே முடியாதா? தன் சொந்த திறமையில முன்னுக்கு வரவே முடியாதா? மீடியாவுக்கு பெண்கள் வர்றது வேலைப் பார்க்கறதுக்கா, இல்லை விபச்சாரம் பண்றதுக்கா? சாருங்களுக்கு என்னதான் வேணும்? ஐயா வினவுக்காரங்களே கேட்டு சொல்றீங்களா?

ஐயா என் எழுத்தை சாருங்கள்லாம் சேர்ந்து தற்கொலை பண்ணவெச்சுட்டாங்க. அதனால கொஞ்சம் கோபமா எழுதிட்டேன். மத்தபடி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, துரத்தப்பட்ட என்னைய மாதிரி பொண்ணுங்களால வேற எதையும் செய்ய முடியாதுங்க.

– ஒரு பெண் பத்திரிகையாளர்.

இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!

11

ணைய உலகில் கோலோச்சி வந்த கூகுள் இணையதளத்தின் சேவையான கூகுள் ரீடர் (கூகுள் படிப்பான்) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.

கூகுள் ரீடர் சன்செட்இணயத்தில் நாம் விரும்பும் வாசிக்கும் இணையதளத்தின் புதிய கட்டுரைகளையும் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்துப் படிக்க வசதியாக கூகுள் ரீடர் இணைய பக்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது இலவச சேவை. ஆனால் சில நாட்களுக்கு முன் கூகுள் ரீடரில் நுழைந்த வாசகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, நுழைந்தவுடன் ஒரு சேதி “கூகுள் ரீடர் வரும் ஜூன்-30 தேதியுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளும்”.

‘கூகுள் ரீடர் பெரும் எண்ணிக்கையில் புதிய வாசகர்களை ஈர்க்கவில்லை. அதனால் அதை இழுத்து மூடுகிறோம்’ என்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது கூகுள் நிர்வாகம்.

கூகுள் ரீடர்க்கு பழக்கப்பட்ட வாசகர்கள் பிற படிப்பான் சேவைகளை (குறிப்பாக இலவச) தேடுவதும், இதுதான்  சாக்கு என்று பிரபல படிப்பான் சேவை தரும் இணையதளங்கள் தங்கள் சேவைகளை கட்டண சேவைகளாக்குவதும் நடந்து வருகிறது. அறிவிப்பு வெளிவந்த 48 மணி நேரத்தில் பிற இணைய படிப்பான் சேவைகளுக்கு 5 லட்சம் வாசகர்கள் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பலர் கூகுள் ரீடரை மூடக் கூடாது என்று கூகுள் நிர்வாகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார்கள்.

‘கூகுள் ரீடர் சேவையை நிறுத்திக்கொள்கிறது, அவ்வளவு தானே மாற்று சேவைகளுக்கு செல்லலாமே, அதில் விவாதிக்க என்ன இருக்கிறது’ என்று பலர் நினைக்கிறார்கள். விவாதிக்க நிறையவே இருக்கிறது.

இணைய சேவைகள், இணையம் என்பது 21-ம் நூற்றாண்டின் தகவல் தொடர்பு புரட்சிக்கான களம் என்று பலராலும் நம்பப்படுகிறது, அதனால் இணையத்தில் ‘போராளி’களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஃபேஸ்புக் புரட்சி, டிவிட்டர் புரட்சி, இணைய சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்று பலரும் மல்லுக்கட்டி வாதாடிக் கொண்டிருக்கும் சுதந்திரங்களை பற்றித் தான் நாம் பேச வேண்டும்.

ஆனால் ‘புரட்சிக்கு வாய்ப்பையும், கட்டற்ற சுதந்திரத்தையும்’ கொடுக்கும் மெய்நிகர் உலகில் தாங்கள் விரும்பிய படிப்பானை தக்க வைத்துக் கொள்வதற்குக் கூட இணைய போராளிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இதிலிருக்கும் சோகம்.

இணையத்தை இயக்கி ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும், நுழைந்தவுடனே “ஏ கருணாநிதியே..” “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என ஸ்டேட்டஸ்கள் போட்டு லைக்குகளுக்காக தவம் கிடப்போர் நாளை வருமானமில்லை என்று இந்த வசதியை ஃபேஸ்புக் மூடிவிட்டால் என்ன செய்வர்?

ஆர்குட்டில் இருந்து ஃபேஸ்புக்கிற்கு மாறியது போல், ப்ளாகில் இருந்து கூகுள் பஸ்ஸுக்கு போய், கூகுள் ப்ளஸ்ஸுக்கு மாறியது போல் பரதேசியாய் இன்னொரு இணைய சேவையை தேடி செல்ல வேண்டியதுதான்.

இணைய சேவைகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அவர்களுக்கு லாபம் வரும் வரையில் அவை தொடர்கின்றன, லாபமில்லை என்றால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழிக்கப்படுகின்றன. கட்டற்ற சுதந்திரம், பேச்சுரிமை, சுதந்திர சந்தையில் வாடிக்கையாளர்தான் ராஜா என்றெல்லாம் முழங்கும் இணைய முற்போக்குவாதிகள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்?

ஃபேஸ்புக்கில் போராளிகள் போடும் ஸ்டேடஸுக்கும், பகிரும் ‘சே குவாரா’ படங்களுகாகவுமா அந்த இணைய தளம் நடத்தப்படுகிறது? ஒவ்வொரு ஃபேஸ்புக் பயனருக்கும் தெரியும் விளம்பரங்களும், பயனர் பற்றிய தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதிலும் தான் அந்த இணைய சேவை தொடர்கிறது.

ஒரே ஒரு வலைப்பதிவு பக்கத்தை தொடங்கி அதில் 100 ஹிட்டுகள் வந்தவுடன் கூகுள் விளம்பரத்தை சந்தில் போட்டு, 2000 ஹிட்டுகளுக்கு பின் வீட்டுமனை விளம்பரத்தை சைடில் போடும் பதிவர்களுக்கு இப்படி ஒரு நப்பாசை என்றால் இந்த சேவையை வைத்து பல லட்சங்களை லாபம் ஈட்டத் திட்டமிடும் பன்னாட்டு முதலாளியின் ஆசை எவ்வளவு இருக்கும்?

கூகுளின் ஆசைக்கு ரீடர் சம்பாதிக்கவில்லை, காலி. நாளை கூகுள் மெயில் சம்பாதிக்கவில்லை என்றாலும் காலி. இவை காலி என்பதால் வருமானம் தரும் வேறு சேவைகளை ஆரம்பிப்பார்கள். இத்தகைய சேவைகளை ஏற்கனவே வேறு முறைகளில் பயன்படுத்தி இயங்குபவர்கள் எல்லாம் வேறு வழியின்றி அவர்களது நிபந்தனைக்கு உட்பட்டால்தான் இணைய சேவை வசதிகள் கிடைக்கும். இப்படி இணைய உலகமே முதலாளிகளின் லாப வேட்டையின் வெற்றி தோல்விகளில்தான் இயங்குவதாக மாற்றப்பட்டிருக்கிறது.

இணையம் என்பது அவர்கள் லாபமீட்ட உதவும் வங்கியாகவும், இணைய பயனர்களின் அந்தரங்கத்தை திருடி காசு பார்க்கும் புரோக்கராகவும் தான் இருக்கும். அது விடுவிக்கப்படும் போது தான் உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த தகவல் தொடர்பு புரட்சியை அது சாதிக்கும். அந்த நிலைமையை இணையத்தின் வளர்ச்சி சாதித்துவிடாது. ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் உலகமயத்திற்கும் எதிராக உலக மக்கள் அரசியல் களத்தில் நடத்தும் போராட்டத்தின் வெற்றியே உண்மையில் அத்தகைய தகவல் தொடர்பு புரட்சியை கொண்டு வரும். அதுவரை இணையம் என்பது அவர்களின் கையில் கிடைத்திருக்கும் அமுதசுரபி. நாமெல்லாம் அதை தலையில் சுமந்து கொண்டு திரியும் விளம்பர அடிமைகள். அவ்வளவுதான்.

– ஆதவன்

சிஐஏ சித்திரவதைக்கும் என்.ஜி.ஓக்களின் மனித உரிமைக்கும் என்ன உறவு?

2
சி.ஐ.ஏ. சித்திரவதை
அமெரிக்க இராணுவத்தால் குவான்டினாமோ பே சிறைச்சாலைக்குக் கடத்திச் செல்லப்படும் பரிதாபத்திற்குரிய ஒரு கைதி

எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?

“பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., உலகெங்கும் இரகசியமாக ஆட்கடத்தல்- சித்திரவதைகளை நடத்தியிருப்பதை, நியூயார்க்கைச் சேர்ந்த “ஓப்பன் சோசைட்டி பவுண்டேசன்” என்ற ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனத்தின் புலனாய்வு அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டுள்ள “சித்திரவதையின் உலகமயமாக்கம்” என்ற இந்த அறிக்கை, உலகின் 54 அரசுகள், தமது நாட்டு சட்டங்களுக்கே விரோதமாக, தம் நாட்டுக் குடிமக்களையே கைது செய்து சி.ஐ.ஏ.விடம் ஒப்படைத்ததோடு, அவர்களைச் சித்திரவதை செய்யவும் கடத்தவும் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்படி சி.ஐ.ஏ. வுக்கு ஒத்துழைத்த நாடுகளின் பட்டியலில் ‘ஜனநாயகம் தழைத்தோங்கும்’ ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க், கனடா போன்ற நாடுகள் முதல் அமெரிக்காவால் “தீய சக்திகளின் ஆணிவேர்” என சித்தரிக்கப்படும் சிரியா, இரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் வரை பலரும் அடக்கம்.

அதிர்ச்சியூட்டும் செய்தி இது மட்டுமல்ல; சி.ஐ.ஏ.வை அம்பலமாக்கும் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பவர், அமெரிக்காவில் வசிக்கும் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங். புருவத்தை உயர்த்த வேண்டாம். அது பற்றி ஆராய்வதற்கு முன், அம்ரித் சிங்கின் அறிக்கை கூறும் விவரங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

சி.ஐ.ஏ. சித்திரவதை
அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு நடத்தி வரும் இரகசிய சிறை.

இன்று அமெரிக்க மனித உரிமைத் தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அரசு, சி.ஐ.ஏ.வின் ஆட்கடத்தலுக்கு உதவியுள்ளது. 2003-இல் சி.ஐ.ஏ.வின் ஆட்கடத்தலுக்காக உபயோகப்படுத்தப்படும் ரிச்மோர் ஏவியேஷன் நிறுவனத்தின் விமானம், பாங்காக்கிலிருந்து ரித்வான் இசாமுதீனைக் கடத்துவதற்கு முன் இலங்கையில் தரையிறங்கியிருக்கிறது. இவர் பின்னர் மூன்றாண்டுகள் சி.ஐ.ஏ.வின் பல்வேறு இரகசிய முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு, 2006-இல் குவாண்டினாமோ பே சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2004-ஆம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரிய நாட்டுப் பெண் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே உருவாக்கப்பட்ட இரகசிய அறையில் அமெரிக்க உளவுத்துறையினால் பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார். நான்கரை மாத கர்ப்பமாக இருந்த பவுச்சர், சங்கிலியால் கட்டப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் பிடிக்கப்பட்ட அகமது அல்-தீமா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறையின் இருண்ட சிறையில் 77 நாட்கள்அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்தப்பட்டு கூரையில் கட்டித் தொங்கவிடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களை பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடு வலியால் அலறும் சத்தத்தைக் கேட்க வைப்பது என்று 40 நாட்களுக்குச் சித்திரவதை செயப்பட்டிருக்கிறார்.

-இவை சில எடுத்துக்காட்டுகள். இது போல பல விதமாக அமெரிக்கா நடத்திவரும் மனிதத்தன்மையற்ற, மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு 54 நாடுகள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளன.

சி.ஐ.ஏ. சித்திரவதை
அமெரிக்க இராணுவத்தால் குவான்டினாமோ பே சிறைச்சாலைக்குக் கடத்திச் செல்லப்படும் பரிதாபத்திற்குரிய ஒரு கைதி.

சி.ஐ.ஏ. செய்த இத்தகைய கொடூரங்கள் வெளியாவது இது முதல்முறையல்ல. “சி.ஐ.ஏ.வின் கருந்தளங்கள்” என அறியப்பட்ட இரகசிய சித்திரவதைக் கூடங்களைப் பற்றியும் அதற்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஒத்துழைப்பு பற்றியும் 2005-இல் சில அமெரிக்கப் பத்திரிகைகள் செதிகளை வெளியிட்டன. அப்போது ஐரோப்பிய சபை நடத்திய விசாரணையில் ஏறத்தாழ இருபது நாடுகள் சி.ஐ.ஏ.வுக்குத் துணைபுரிந்தது அம்பலமாகியது. 2006 ஜனவரியில் ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த மற்றொரு விசாரணைக் குழு அளித்த அறிக்கை, 2001-2005 காலகட்டத்தில் ஐரோப்பிய விமான வழித்தடத்தின் ஊடாக மட்டுமே சி.ஐ.ஏ. 1245 தடவை விமானங்கள் வழி ஆட்கடத்தலில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியது. 2012-ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சி.ஐ.ஏ. ஆப்கான் ஆக்ரமிப்பின் போது “வாட்டர் போர்டிங்” என்ற கொடூர தண்ணீர் சித்திரவதையை கைதிகள் மீது ஏவியதாகக் குற்றம் சாட்டியது. ஆனால், “இந்தச் சித்திரவதைகள் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, அமெரிக்க நலனுக்காகவே நடந்தது” என்பதால், அதன் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டிருக்கும் அம்ரித் சிங், “சி.ஐ.ஏ. வின் இத்தகைய நடவடிக்கைகள் மீது அமெரிக்க அரசு ஒரு சுயேச்சையான விசாரணை நடத்தி, இந்தச் சித்திரவதை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சி.ஐ.ஏ. அதிகாரிகள் யார் என்பதை அம்பலமாக்க வேண்டும்; நடந்துள்ள இந்த முறைகேடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி, மற்ற நாடுகளும் பொறுப்புதான் என்ற போதிலும், இவ்வாறு சர்வதேச சட்டங்களை மீறி நடந்து கொள்வதன் விளைவாக, உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவு குறைவதுடன், அமெரிக்காவின் தார்மீகத் தகுதியும் பாதிக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிடுகிறார்.

அம்ரித் சிங்கின் அறிக்கை, “அமெரிக்க அரசு வேறு; அதன் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வேறு” போலவும், சி.ஐ.ஏ. என்பது நாட்டாமைக்கு தெரியாமல் ரவுடித்தனம் செயும் தறுதலைப் பிள்ளை போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சி.ஐ.ஏ. வுக்கு கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதற்கான சுதந்திரமும் சுயேச்சைத்தன்மையும் அமெரிக்க அரசால் திட்டமிட்டேதான் வழங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளில்”டேர்டிவொர்க்ஸ்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை போன்ற இரகசிய வேலைகளில் தொடங்கி, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் வரையில் எல்லா நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டிருப்பது மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்களுக்காக, மற்ற நாடுகளின் வணிக நடவடிக்கைகள், ஒப்பந்தங்களை வேவு பார்ப்பது வரையிலான முறைகேடுகளிலும் அது ஈடுபட்டிருக்கிறது.

அம்ரித் சிங்
“சித்திரவதையின் உலகமயமாக்கம்” அறிக்கையைத் தொகுத்து வெளியிட்ட அம்ரித் சிங்.

இவையெல்லாம் அம்ரித் சிங் அறியாதவையல்ல. சர்வதேச சட்டங்களை மீறி அப்பட்டமான ஆக்கிரமிப்புகளை அதிகாரபூர்வமாகவே அமெரிக்க அரசு அரங்கேற்றி வரும் சூழலில், சி.ஐ.ஏ. இரகசியமாக செய்த சட்டவிரோத சித்திரவதைகளைத் தேடிக் கண்டுபிடித்து, ‘அமெரிக்காவின் தார்மீகத் தகுதியைக் காப்பாற்றுவதற்காக’ விசாரணை கோருகிறார் அம்ரித் சிங். ஏனென்றால், அவர் “ஓபன் சொசைட்டி பவுண்டேசன்” என்ற ஏகாதிபத்திய தொண்டு நிறுவனத்தின் “தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்திற்கு” பொறுப்பு வகிக்கும் தலைமை சட்ட அதிகாரி.

ஓபன் சொசைட்டி பவுண்டேசன் என்பது உலகப் பெரும் கோடீசுவரனும், நிதி மூலதனச் சூதாடியுமான ஜார்ஜ் சோரோஸ் என்பவனால் நடத்தப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம். 1980-களில் போலந்தில் போலி கம்யூனிச ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை சாலிடாரிட்டி என்ற எதிர்ப்புரட்சி இயக்கத்துக்கு ஆதரவாகத் திருப்புவதில் சோரோஸின் இந்த அமைப்பு முக்கியப் பாத்திரம் ஆற்றியது. மாசிடோனியா, பெலாரஸ், குரோசியா எனப் பல கிழக்கு ஐரோப்பிய போலி சோசலிச நாடுகளில் முதலாளித்துவத்தை நிறுவியதும், ஜார்ஜியாவில் ரோஜாப் புரட்சியை பின்நின்று இயக்கியதும் சோரோஸின் தொண்டு நிறுவனங்கள்தான்.

ஜார்ஜியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதும் ஓபன் சோசைட்டி பவுண்டேசனின் பொறுப்பில் இருந்தவர்கள் அமைச்சர்களாயினர். அந்நாட்டின் துறைமுகம், மின்சாரம், ரயில்வே ஆகியவை சோரோஸின் கைக்கு மாறின. மிலோசோவிச்சை ஆட்சியிலிருந்து இறக்கி, யூகோஸ்லாவியாவைப் பிளந்தது மட்டுமல்ல, கொசாவோ விடுதலைப் படை என்ற இசுலாமியப் படைக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து, பதிலுக்கு அந்நாட்டின் தங்கம், வெள்ளி, காரீயச் சுரங்கங்களைக் கைப்பற்றிக் கொண்டார் சோரோஸ். “முன்னாள் சோவியத் சாம்ராச்சியத்தை இனி சோரோஸ் சாம்ராச்சியம் என்று அழையுங்கள் ” என்று திமிராக அறிவிக்கும் அளவுக்கு சோரோஸின் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விளையாடின.

ஜார்ஜ் சோரஸ்
ஓப்பன் சொசைட்டி பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் அமெரிக்கப் பெருமுதலாளி ஜார்ஜ் சோரஸ்.

சோரோஸின் “இன்டர்நேசனல் கிரைசிஸ் குரூப்” என்ற தொண்டு நிறுவனத்தில், தாலிபானையும் பின் லாடனையும் உருவாக்கிய முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பிரசென்ஸ்கி, நேட்டோ படைத் தளபதி வெஸ்லி கிளார்க், யுகோஸ்லேவியாவில் ஆட்சித் தகர்வை முன்னின்று நடத்திய அமெரிக்க முன்னாள் தூதர் வாரன் சிம்மெர்மென் போன்றவர்கள் கவுரவப் பதவி வகிக்கின்றனர். 1998-இலேயே இராக் மீதான தாக்குதலுக்கு அரசியல், இராணுவ வழிகாட்டுதல்களை கிளிண்டனுக்கு வழங்கியவர்கள் சோரோஸின் ஆலோசகர்கள்தான். ஆயுத பேரங்கள் வழி பெரும் இலாபமீட்டும் கார்லைல் என்ற நிதிச் சூதாட்ட நிறுவனத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கும் சோரோஸுக்கு சீனியர் புஷ், முன்னாள் அமெரிக்க அரசுச் செயலர்கள், பின் லாடனின் உறவினர்கள் ஆகியோர் தொழில் கூட்டாளிகள்.

சோரோஸ் கடைப்பிடிக்கும் உத்தி எளிமையானது. எந்த நாடுகளில் சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்கள் அதிருப்தி நிலவுகிறதோ, அங்கே சோரோஸின் மனித உரிமை மீட்பர்கள் களமிறங்குவார்கள். அதன் பின்னர் அந்த நாடுகள் பற்றிப் பத்திரிகைகள் வெளியிடும் தலைப்புச் செய்திகளை சோரோஸின் பணம் தீர்மானிக்கும். அரசுக்கு எதிரான மக்கள் கோபத்தை சோரோஸின் அரசியல் மற்றும் அறிவுத்துறை கூலிப்படை தன்வயப்படுத்திய பின்னர், பொருத்தமான நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை கண் சிமிட்டும். அந்த நாட்டில் ‘புரட்சி’ அல்லது ‘ஆட்சிக்கவிழ்ப்பு’ அரங்கேறும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாக்க நடவடிக்கைகளும், சோரோஸின் தொழில் சாம்ராச்சியமும், அவரது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணக்கமான முறையில் பிணைந்திருக்கின்றன.

இதன் பொருள் பிணக்கே இல்லை என்பதல்ல. முதலாளித்துவத்தையும் அமெரிக்க மேலாதிக்கத்தையும் நாசூக்காக, நயவஞ்சகமாக மக்கள் ஆதரவோடு நிலைநாட்ட வேண்டும் என்பது சோரோஸின் அணுகுமுறை. இதை விடுத்து மூர்க்கத்தனமான முறையில் இராக் மீது படையெடுத்த காரணத்தினால் ஜூனியர் புஷ்ஷை வெளிப்படையாக எதிர்த்து பரபரப்பைக் கிளப்பினார் சோரோஸ். அப்போதே சோரோஸின் உண்மை முகத்தை ‘நியூ ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் நீல்கிளார்க் என்ற பத்திரிகையாளர் தோலுரித்தார்.

சோரோஸ் வெளியிட்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எத்தகையதோ, அத்தகையதுதான் தற்போது மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் வெளியிட்டிருக்கும் சித்திரவதை எதிர்ப்பு. அப்பன் அமெரிக்க அடிவருடி என்றால், மகள் எதிர்ப்பை நிறுவனமயமாக்கிக் காயடிக்கும் தொண்டு நிறுவன நிர்வாகி. எது கொடியது? சி.ஐ.ஏ. வின் சித்திரவதையா, தொண்டு நிறுவனங்கள் பேசும் மனித உரிமையா?

– அன்பு

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!

1

ஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட நினைவு மறையும் முன்பே, அப்சல் குருவையும் தூக்கிலேற்றிவிட்டது, காங்கிரசு கூட்டணி அரசு. அப்சல் குரு பிப்ரவரி 9 அன்று காலையில் இரகசியமாகத் தூக்கிலிடப்பட்டதை, “ஒரு தீவிரவாதிக்கு அளிக்கப்பட்ட நியாயமான, சட்டப்படியான தண்டனை” எனக் கூறி நியாயப்படுத்தி வருகிறது, காங்கிரசு கும்பல். ஆனால், அப்சல் குருவைக் குற்றவாளி என நம்புவோரிலும் கூட ஒரு சாரார், மிகவும் கயமைத்தனமான, வெட்கக்கேடான முறையிலும் சட்ட நடைமுறைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் விதத்திலும் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டிருப்பதைக் கண்டித்து வருகின்றனர். அப்சல் குருவைத் தூக்கிலிட்டதில் சட்டநடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, இத்தூக்கே காங்கிரசு கூட்டணி அரசு நடத்தியிருக்கும் அரசியல் படுகொலையாகும்; போலீசு நடத்தும் போலி மோதல் கொலைக்கு ஒப்பானதாகும். தீவிரவாத அபாயம் குறித்து அனைத்து ஓட்டுக்கட்சிகளும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பதால், பா.ஜ.க., சி.பி.எம். உள்ளிட்ட மற்ற ஓட்டுக்கட்சிகளும் இப்படுகொலைக்கு வக்காலத்து வாங்கி வருகின்றன.

அப்சல்குரு
இந்து-இந்திய தேசிய வெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட முகமது அப்சல் குரு

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேவேந்திர் பால் சிங் புல்லரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் தமது கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க நீண்ட காலமானதால், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் புல்லரின் மனு மீது விசாரணை நடத்தியபோதே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், கருணை மனு அளித்தவர்களின் விவரங்களைக் கேட்டுப் பெற்றிருப்பதோடு, அவ்வழக்கின் தீர்ப்பையும் ஒத்தி வைத்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி இவ்வழக்கின் தீர்ப்பு வரும்வரை பொறுத்திருக்கவில்லை என்பதோடு, தன்னிடம் நிலுவையில் இருந்த 14 கருணை மனுக்களில் அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குரு ஆகிய இருவரின் கருணை மனுக்களை மட்டும் தேர்வு செய்து நிராகரித்திருக்கிறார். காங்கிரசு தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளும் நோக்கில்தான் அவரை அரசுத் தலைவராக்கியது. அந்த நம்பிக்கையை முகர்ஜி பொய்ப்பித்துவிடவில்லை என்பதைத்தான் கசாப் மற்றும் அப்சல் குரு விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

“தூக்கு தண்டனைக் கைதியின் கருணை மனு நிராகரிப்பட்டால், அதற்கான காரணங்களை அக்கைதிக்குத் தெரிவிக்க வேண்டும்; கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கும், தூக்கிலிடும் தினத்திற்கும் இடையே 14 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டும். இக்கால அவகாசத்தின்பொழுது அக்கைதி தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடருவதற்கு உரிமை உண்டு. தூக்கிலிடும் தினத்தைக் கைதியின் உறவினர்களுக்கு முன்னரே தெரிவித்து, அவர்கள் கடைசியாகத் தண்டனைக் கைதியைச் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்ற சட்ட நடைமுறைகள், உரிமைகள் அனைத்தும் அப்சல் குரு விவகாரத்தில் மீறப்பட்டுள்ளன; மறுக்கப்பட்டுள்ளன. மேலும், அப்சல் குருவின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல், திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. அவரது உடலைத் திருப்பித் தருமாறு கோரிய அப்சல் குருவின் மனைவியின் கோரிக்கை மனிதாபிமானமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டது.

இந்த அநீதி அப்சல் குரு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், காஷ்மீரத்தைச் சேர்ந்த ஒவ்வொரு முசுலீம் மீதும் இழைக்கப்பட்டிருக்கிறது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் எந்தவொரு அரசியல் ஆர்ப்பாட்டமும் நடப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே, அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாள் தொடங்கி ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவின் கீழ் கொண்டுவரப்பட்டது; இதையும் மீறி நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட இராணுவ நடவடிக்கையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர்; கைபேசி, இணைய தளம், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி சேவைகள் மட்டுமின்றி, உள்ளூர் பத்திரிகைகள் வெளிவருவதும் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்டன.

அப்சல் அஞ்சலி
காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் அப்சல்குருவுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனைக் கூட்டம் (மேலே); அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கக் கோரி, உ.பி. அலிகார் பல்கலைக் கழகத்தில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட டெல்லிப் பல்கலைக்கழக உருது பேராசிரியரும் காஷ்மீரைச் சேர்ந்தவருமான எஸ்.ஏ.ஆர். கீலானி, அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட அன்று டெல்லி போலீசாரால் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டார்.

காஷ்மீரில் இயங்கிவரும் ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானியின் மருமகனும் (டெல்லியிலிருந்து வெளிவரும்) டி.என்.ஏ., என்ற ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியருமான இஃப்திகார் ஜிலானி, அவரது மனைவி, பள்ளி செல்லும் வயதுடைய அவரது இரண்டு குழந்தைகள் அனைவரும் டெல்லி போலீசாரால் அவரது வீட்டிலேயே ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டனர்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீது இந்து மதவெறிக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதற்கு டெல்லி போலீசும் உடந்தையாக இருந்தது.

காங்கிரசு கட்சியின் தலைமை மிதவாத இந்துத்துவா அரசியலுக்குப் பதிலாக, இந்து மதவெறி அரசியலைக் கையிலெடுத்திருப்பதைத்தான் இத்தூக்கு தண்டனைகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நடவடிக்கைகளின் மூலம் காங்கிரசு தன்னைப் பலமான அரசாகக் காட்டிக் கொண்டு, இந்து நடுத்தர வர்க்கத்தின் ஓட்டுக்களைக் கவர்ந்துவிடவும் திட்டம் போடுகிறது. அதேசமயம், அப்சல் குரு அரசியல் நோக்கங்களுக்காகத் தூக்கில் தொடங்கவிடப்படவில்லை எனக் காட்டுவதற்காகவே, பாலாறு குண்டுவைப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் கருணை மனுக்களையும் அவசர அவரசமாக ரத்து செய்து, அவர்களையும் தூக்கு மேடையில் கொண்டுவந்து நிறுத்தியது, காங்கிரசு கும்பல்.

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஓட்டுக்கட்சிகள், பத்திரிகைகள் மட்டுமல்ல; சாதாரண பொதுமக்கள்கூட உச்ச நீதிமன்றமே அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்திருக்கிறது என வாதிட்டு வருகின்றனர். “உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் இருக்க முடியாது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் என்பது புனிதமான, சட்ட நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்த, கறைபடியாத நீதிபதிகளைக் கொண்ட அமைப்பு” என்றவாறு பொதுமக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள பிம்பம்தான் இந்த வாதத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

அப்சல் கை
இட்லரில் நாஜிக் கும்பல் ஜெர்மன் நாடாளுமன்றத்தைத் தானே எரித்து விட்டு, அந்தப் பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டது. ஆனால், அங்கு நீதிமன்ற விசாரணையின் போது உண்மை வெளியே வந்து விட்டது. இங்கோ, நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியது யார்? அதன் முழுப்பின்னணி என்ன? என்ற உண்மைகள் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்படும் முன்னரே, அப்சல் குரு கொல்லப்பட்டு விட்டார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் ஒருதலைப்பட்சமான முறையில், நியாயத்துக்குப் புறம்பாக காவிரி நதிநீர்ப் பங்கீடு, நர்மதா அணைக்கட்டு உள்ளிட்டுப் பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியிருக்கிறது. பெரியாறு அணை வழக்கில் 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கலாம் எனத் தான் வழங்கிய தீர்ப்பையே மறுத்த கோமாளித்தனத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரங்கேற்றியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்திருக்கும் பல தீர்ப்புகள் வழிகாட்டியாகக் கொள்ளமுடியாதபடி சுயமுரண்பாடு உடையதாக இருப்பதையும் மறுக்கமுடியாது. பல்வேறு தூக்கு தண்டனை வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்ட அறியாமையின் காரணமாக மனம்போனபடி தீர்ப்பளித்திருப்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கிலோ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்ட பாயிண்டுகளைக் கொண்டு அப்சல் குருவின் தூக்கை உறுதி செயவில்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் டிசம்பர் 13, 2001 அன்று, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்பொழுது, அக்கூட்டணி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குண்டுத் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் நடந்தது. இத்தாக்குதலை நடத்த வந்த ஐந்து பேரும் தாக்குதலின்பொழுதே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த மறுநாளே, இந்தச் சதியில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பலரைக் கைது செய்துவிட்டதாக அறிவித்தது, டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு. தாக்குதல் நடந்த 17-வது நாளே இவ்வழக்கின் புலன் விசாரணையும் முடிவுக்கு வந்துவிட்டது.

இவ்வளவு விரைவாகத் தாக்குதலின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதற்கு டெல்லி போலீசின் திறமை காரணமா அல்லது தாக்குதல் நடத்த வந்த ‘தீவிரவாதிகளின்’ சிறுபிள்ளைத்தனம் காரணமா என்பதுதான் இன்னும் விளங்காத மர்மமாக உள்ளது. ஏனென்றால், தாக்குதல் நடத்தவந்த ஐந்து பேரும் தாம் வந்த காரின் முகப்புக் கண்ணாடி மீதே, “நாங்கள் இந்தியாவை அழிக்க விரும்புகிறோம்; முட்டாள் வாஜ்பாயியையும் அத்வானியையும் நாங்கள் கொல்வோம்” என்றவாறு பல தீவிரவாத வாசகங்கள் அடங்கிய “ஸ்டிக்கரை” ஒட்டியிருந்தனர்; தீவிரவாதிகளுள் ஒருவனெனக் கூறப்படும் முகம்மது, தாக்குதலுக்குச் சற்று முன்பாக, அப்சல் குருவைக் கைபேசி வழியாக மூன்று முறை அழைத்து, “எல்லாம் திட்டப்படி நடந்துவருவதாக”க் கூறியதை போலீசு கண்டுபிடித்திருக்கிறது. இவ்வளவு சாட்சியங்களையும் போலீசுக்குக் கொடுத்துவிட்டுத்தான் அந்த ஐந்து பேரும் மாண்டு போயுள்ளனர்.

இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் முட்டாள்தனமாகத் திட்டம் தீட்டினார்களா, இல்லை நாடாளுமன்றத் தாக்குதலே பா.ஜ.க. ஆட்சியில் நடத்தப்பட்ட நாடகமா என்ற சந்தேகம் இன்றுவரையிலும் தீரவில்லை. போலீசும் இராணுவமும் அப்பாவி முசுலீம்களைப் பிடித்துப் போலி மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டுத் தீவிரவாதிகளைக் கொன்றதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். அரசும் நீதிமன்றமும்கூட பலசமயங்களில் இந்தப் போலி மோதல்கொலைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன. மாலேகான், சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்புகளை இந்து தீவிரவாதிகள் நடத்திவிட்டு, பழியை முசுலீம் தீவிரவாதிகள் மீது சுமத்தினார்கள். இந்தியா, பாகிஸ்தானுக்குள் உளவாளிகளை அனுப்புவதும், அங்கிருக்கும் அரசு எதிர்ப்பாளர்களுக்கு உதவுவதும்; பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் அனுப்புவதும் சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. முசுலீம் தீவிரவாதப் பிரச்சினை இவ்வளவு சிக்கல் நிறைந்ததாக மாற்றப்பட்டிருப்பதால், நாடாளுமன்றத் தாக்குதலை இந்த இரண்டு தரப்பில் யார் வேண்டுமானாலும் நடத்தியிருக்கக்கூடும்.

ஆனால், ஒரு பாரபட்சமற்ற விசாரணை தொடங்கும் முன்பே, இத்தாக்குதலின்போது கொல்லப்பட்ட ஐந்து பேரும் வைத்திருந்த அட்டைகள், இன்ன பிற சாட்சியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி “அவர்கள் ஐந்து பேரும் பாகிஸ்தானியர்கள்” எனக் கொளுத்திப் போட்டார். இந்த பாகிஸ்தான் பின்னணிக்கு வலு சேர்க்கும் விதமாக, பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற முசுலீம் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆஸார், தாரிக் அகமது மற்றும் காஸி பாபா ஆகிய மூவரும் இத்தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டுள்ளனர் என டெல்லி போலீசாரால் குற்றஞ்சுமத்தப்பட்டனர். சதியிலோ, தாக்குதலிலோ பங்கேற்காத, அதேசமயம் தாக்குதலுக்கு உதவியதாகச் சொல்லப்பட்ட அப்சல் குரு, எஸ்.ஏ.ஆர். கீலானி, ஷௌஹத் ஹுசேன், ஷௌஹத்தின் மனைவி அஃப்சான் குரு ஆகிய நால்வர் மட்டுமே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அப்சல் குருவின் இளைய சகோதரன் ஹிலாலைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டுதான், போலீசார் அப்சலிடம் விசாரணை நடத்தினர்; வாக்குமூலத்தைப் பெற்றனர். இது மட்டுமின்றி, டெல்லி சிறப்பு போலீசு வழக்கத்துக்கு மாறான மற்றும் சட்டவிரோதமான முறையில் அப்சல் குருவைத் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நேரடி பேட்டி அளிக்க வைத்து, அந்நேர்காணலில் நாடாளுமன்றத் தாக்குதலில் தனக்குப் பங்கிருப்பதாகச் சாட்சியம் அளிக்கவும் வைத்தது.

அப்சல் குருவை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது என்பது பச்சையாகவே அம்பலமாகியிருந்ததால், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. எனினும் உச்ச நீதிமன்றம், “இது போன்ற சதித் திட்டங்களிலும், தீவிரவாதத் தாக்குதல்களிலும் நேரடி சாட்சியங்களும் சதித் திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கிடைப்பது இயலாத ஒன்று” எனக் கூறிவிட்டு, கிடைத்திருக்கும் சாட்சியங்களும் சூழ்நிலைகளும் அப்சல் குருவிற்கும் நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதை நிரூபிக்கின்றன எனத் தீர்ப்பெழுதியது.

“நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும், கைபேசி சிம்கார்டையும் அப்சல் குருதான் தீவிரவாதிகளுக்கு வாங்கிக் கொடுத்தார்; அவரது மடிக்கணினியில் நாடாளுமன்றத்திற்குள் தீவிரவாதிகள் நுழைவதற்காகத் தயாரிக்கப்பட்ட போலியான அடையாள அட்டைகள், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றதாகக் காட்டும் போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன; தாக்குதலின்பொழுது கொல்லப்பட்டவர்களை அப்சல்தான் அடையாளம் காட்டினார்” என்பவை அப்சல் குருவுக்கு எதிராக போலீசு முன்வைத்த முக்கிய சாட்சியங்கள்.

இந்த சாட்சியங்களுக்கும் அப்சல் குருவுக்குமான தொடர்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை; மேலும், விசாரணையின்பொழுது அப்சல் குருவுக்கு எதிராகக் கூண்டில் நிறுத்தப்பட்ட சிம் கார்டை விற்றவர், காரை விற்றவர் போன்ற சாட்சியங்கள் போலீசால் தயாரிக்கப்பட்டவை என்பதும் பளிச்செனத் தெரிந்தது.

நாடாளுமன்றத் தாக்குதல் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என ஊதிப் பெருக்கப்பட்டு, பாக். மீது போர் தொடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தது பா.ஜ.க. கூட்டணி அரசு. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகள் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டனர். இந்தச் சூழ்நிலைகளுக்கு இடையே நடந்துவந்த விசாரணையிலோ, எஸ்.ஏ.ஆர். கீலானியும் அஃப்சான் குருவும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்; ஷௌகத் ஹுசேனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையைப் பத்தாண்டு தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் இப்பொழுது எஞ்சியிருப்பது அப்சல் குரு மட்டும்தான்.

அப்சல் குரு தனது ஏழ்மை நிலை காரணமாக, தடா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபொழுது திறமையான வழக்குரைஞர்களை வைத்து வாதாட முடியாமல் இருந்தார். அவருக்காக வாதாட அரசு நியமித்த நீரஜ் பன்சால் என்ற வழக்குரைஞர் அனுபவமில்லாதவர் என்பதோடு, அவர், கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அப்சல் அடையாளம் காட்டியதை – அப்சலுக்கு எதிராக போலீசு முன்வைத்த இந்த முக்கிய சாட்சியத்தைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார். போலீசின் இந்த சாட்சியத்தை உடைக்காமல் ஏற்றுக் கொண்டதன் மூலம் அப்சலின் கழுத்தில் சுருக்கு விழுவதற்குப் பாதை போட்டுக் கொடுத்தார், அந்த இளம் வழக்குரைஞர். இவருக்குப் பதிலாக வேறு சில வழக்குரைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுள் ஒருவரைத் தனக்கு நியமிக்கும்படி அப்சல் கோரினார். ஆனால், அப்சலுக்காக வாதாட முன்வந்தால், இந்து மதவெறிக் கும்பல் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர்களுள் ஒருவர்கூட அப்சலின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்ட அறிவோ, அனுபவமோ இல்லாத அப்சல், தனக்கு எதிரான சாட்சியங்களைத் தானே குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்.

“காஷ்மீரின் சிறப்பு அதிரடிப் படையுடன் நெருங்கிய தொடர்புடைய தாரிக் என்பவன்தான், தாக்குதலில் கொல்லப்பட்ட முகம்மதுவை என்னிடம் அறிமுகப்படுத்தினான். அப்படையைச் சேர்ந்த திராவிந்தர் சிங் என்ற அதிகாரியும் தாரிக்கும் கூறியபடிதான் முகம்மதுவை டெல்லிக்கு அழைத்துவந்து வீடு பார்த்துக் கொடுத்தேன்; கார் வாங்கிக் கொடுத்தேன்; எனது குடும்பத்தாரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியதையடுத்துதான், நான் கொல்லப்பட்டவர்களை போலீசு சொல்லிக் கொடுத்தபடி அடையாளம் காட்டினேன்” என அப்சல் கதறியதை எந்தவொரு நீதிமன்றமும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த வழக்கில் அப்சலுக்கு எதிராக வலுவான, நேரடியான சாட்சியங்கள் இல்லை. சந்தர்ப்ப சாட்சியங்களோ அவருக்குத் தாக்குதலில் நேரடித் தொடர்பு இருப்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை. மேலும், அச்சாட்சியங்கள் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. இந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செவதற்கு உச்ச நீதிமன்றம் சட்டத்திற்குப் பதிலாக செண்டிமென்டுக்குள் புகுந்து கொண்டது. “இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும்” எனத் தீர்ப்பெழுதினார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

அப்சல் மற்றவர்கள்
கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலதாமதமானதையடுத்து, தமது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுத்திருக்கும் (இடமிருந்து) தேவேந்தர் பால் சிங் புல்லர், முருகன், பேரறிவாளன், சாந்தன்.

இட்லரின் நாஜிக் கும்பல் ஜெர்மன் நாடாளுமன்றத்தைத் தானே எரித்துவிட்டு, அந்தப் பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டது. ஆனால், அங்கு நீதிமன்ற விசாரணையின்பொழுது உண்மை வெளியே வந்துவிட்டது. இங்கோ, நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியது யார்? அதன் முழுப் பின்னணி என்ன? என்ற உண்மைகள் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்படும் முன்னரே, அப்சல் குரு கொல்லப்பட்டுவிட்டார்.

1980-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த பச்சன் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில், “அரிதினும் அரிதான வழக்கிலும்கூட, வேறு தண்டனை வழங்க முடியாது என்பதைக் கேள்விக்கிடமற்ற முறையில் நிரூபித்த பிறகுதான், தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 1980-க்கு முன்பு வரை கொலைக்குக் கொலைதான் தண்டனை என்ற வகையில் கொலைக் குற்றங்களுக்கெல்லாம் தூக்குத் தண்டனையை மட்டுமே அளித்து வந்த இந்திய நீதிமன்றங்கள், அதன் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு பச்சன் சிங் வழக்கின் தீர்ப்பைத்தான் முன்மாதிரியாகக் கொள்வதாகக் கூறிவருகின்றன.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டு, ஒருவரின் தண்டனை பத்தாண்டாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அப்சல் குருவிற்கு பச்சன் சிங் வழக்கு தீர்ப்பின்படிதான் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?

ஒரு குற்றவாளிக்கு தண்டனை அளிப்பது மட்டும்தான் சட்டப்படி நடக்கிறது; ஆனால், ஒருவனைக் குற்றவாளியாகத் தீர்மானிப்பது எல்லா நேரத்திலும் சட்டப்படி நடப்பதில்லை. நீதிபதியின் மனதில் மறைந்திருக்கும் அரசியல் கருத்துக்கள், ஒருதலைப்பட்சமான அவரின் சோந்த விருப்பு-வெறுப்புகள், கேள்வி கேட்கமுடியாத அவரது சிறப்பு அதிகாரம் ஆகியவையும் குற்றவாளியைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.

நாடாளுமன்றத் தாக்குதலில் அப்சல் குருவுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்பது நிரூபணமான பிறகும் அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது; உறுதி செயப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கிலோ, அச்சதியில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தலைவர்களுக்கு நேரடிப் பங்கிருப்பது உலகிற்கே தெரிந்திருந்தும், அலகாபாத் உயர் நீதிமன்றம் அவர்களைச் சதி வழக்கிலிருந்து விடுதலை செய்கிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிலோ, “நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாதவரை, பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தேசிய சதிச்செயல் எனக் கூறக் கூடாது” எனக் கூறும் அளவிற்கு நீதிபதிகளிடம் இந்து மதவெறிப் பாசம் பொங்கி வழிகிறது.

ஒரிசா மாநிலத்தில் இந்து மதவெறிக் கும்பல் ஸ்டேன்ஸ் பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களையும் உயிரோடு கொளுத்திய வழக்கில், முதன்மைக் குற்றவாளியான தாரா சிங்குக்கு விசாரணை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஒரிசா உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. உச்ச நீதிமன்றம் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு, “ஸ்டேன்ஸ் பாதிரியார் ஒரிசாவின் மனோகர்பூர் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்; அதற்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகத்தான் இக்குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது” எனக் கூறியதோடு, மத மாற்றத்தை இந்துத்துவா நோக்கிலிருந்து கண்டித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, குற்றத்தின் தீவிரத்தன்மையையே நீர்த்துப் போகச் செய்தது.

குஜராத் முசுலீம் படுகொலைகளின்பொழுது நடந்த நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், அப்படுகொலையின் முதன்மைக் குற்றவாளியும் மோடிக்கு நெருக்கமானவருமான கோத்நானிக்குத் தூக்கு தண்டனை அளிக்க மறுத்தது, சிறப்பு நீதிமன்றம். “உலகெங்கும் தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்து மேலோங்கி வருவதால், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை அளிக்க முடியாது” என விளக்கமளித்தார், நீதிபதி. இந்த விளக்கம் அப்சல் குருவுக்குப் பொருந்தாமல் போனதற்குக் காரணம், அவர் முசுலீம் என்பது தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

சந்தோஷ்குமார் பரியார் வழக்கு மற்றும் சங்கீத் வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வு மன்றங்கள், 1980-க்குப் பின் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்புகளை ஆராந்து, “அரிதினும் அரிதான வழக்கு என்பதற்கு மனம்போன போக்கில் பொருள் கொள்ளப்பட்டு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக” தமது தீர்ப்புகளில் கூறியுள்ளன. சந்தோஷ்குமார் பரியார் வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள ஏழு வழக்குகளின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, இவ்வேழு தீர்ப்புகளும் நீதிபதிகளின் சட்ட அறியாமையால் அளிக்கப்பட்ட தவறான தீர்ப்புகள் எனக் கூறியிருக்கிறது, உச்ச நீதிமன்ற அமர்வு. தவறாக அளிக்கப்பட்ட இத்தீர்ப்புகளின் அடிப்படையில் ஏற்கெனவே இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டுவிட்டனர்.

சட்ட அறியாமை என மெலிதாகக் கண்டிக்கப்படும் நீதிபதிகளின் இந்த மனப்பாங்கு, அவர்களின் தன்னிச்சையான அதிகாரத் திமிர் தவிர வேறல்ல. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாபண்ணா என்பவருக்கும்; பாலாறு குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட சைமன், ஞானப்பிரகாசம், மாதையன், பிலவேந்திரன் ஆகிய நால்வருக்கும் கீழ்நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் மரண தண்டனையாக உயர்த்தியதை, இந்த அதிகாரத்திமிருக்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

குறிப்பாக, பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறது. அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அமர்வால் தள்ளுபடி செயப்படுகிறது. அதேசமயம், அவ்வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தீர்ப்பை எதிர்த்து முறையிட்ட வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கிறது.

அ.தி.மு.க. குண்டர்கள் கோயமுத்தூர் விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளை எரித்துக் கொன்ற வழக்கிலோ உச்ச நீதிமன்றம் வேறொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. இவ்வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று பேரும் இத்தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செயப்பட்ட உடனேயே அக்குற்றவாளிகள் இதனை எதிர்த்தும் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செதனர். இம்மறுஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அரிதினும் அரிதான அப்பயங்கரவாத வழக்கை விரைவாக விசாரிக்காமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.

கொடைக்கானல் விடுதி வழக்கில் பார்ப்பன ஜெயாவை நீதிமன்றம் தண்டித்ததைக் கண்டிப்பது என்ற பெயரில்தான் இப்படுகொலையே நடந்தது. அப்சல் குரு, அஜ்மல் கசாப் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆதரிக்கும் பா.ஜ.க., சோ ராமஸ்வாமி உள்ளிட்ட பார்ப்பன-பாசிசக் கும்பல், இந்த மூவருக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் எனக் கோர முன்வருமா? இந்த மூன்று குற்றவாளிகளுக்குச் சட்ட, பண உதவிகளைச் செய்துவரும் அ.தி.மு.க. தலைமையை அம்பலப்படுத்தத் துணியுமா?

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவராக இருந்த நீதிபதி கே.டி. தாமஸ், தான் பணி ஓய்வுபெற்ற பிறகு செப்.2, 2011 அன்று “தி ஏசியன் ஏஜ்” என்ற நாளிதழைச் சேர்ந்த செய்தியாளரிடம், “தான் அவ்வாறு மரண தண்டனை வழங்கிய ஆயத்திற்கு தலைமை தாங்க நேர்ந்தது கெடுவாய்ப்பானது” என நொந்து கொண்டதோடு, “கொலையுண்டவர் புகழ்பெற்றவராக இருந்தால், அவ்வழக்கில் மரண தண்டனை வழங்குவது அடிக்கடி நடக்கிறது. அக்கொலையை அரிதிலும் அரிதான ஒன்றாகச் சித்தரித்துத் தங்களது முடிவை நியாயப்படுத்துவது நடக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.

குற்றவாளி ஏழையாக இருந்தால், தாழ்த்தப்பட்டவராக, சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவராக இருந்தால், முசுலீம் தீவிரவாதி எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால், அதிகபட்ச தண்டனை; குற்றவாளி பணக்காரனாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவனாக, இந்து தீவிரவாதியாக, அரசியல் செல்வாக்கு மிக்கவனாக இருந்தால் அவனுக்கு வேறு மாதிரியான தீர்ப்பு என ஆளுக்குத் தக்கபடியும் சட்ட அறிவு இல்லாமலும்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிக்கிறார்கள் எனும்பொழுது; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்தியிலும் பெட்டி வாங்கிக்கொண்டு தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகள் இருப்பது அம்பலமாகியிருக்கும்பொழுது இந்நீதிமன்றத்தை எப்படி உயரியதாகவும் அம்மன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது என்றும் சொல்ல முடியும்? இந்த உண்மைகள் யாவும் சாதாரண மாஜிஸ்டிரேட் கோர்ட் நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை அல்லவா நிரூபிக்கின்றன.

நீதிமன்றங்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற சட்டப் பாதுகாப்பின் கீழ்தான் அவற்றின் ‘புனிதம்’ பாதுகாக்கப்படுகிறதேயொழிய, அரசின் மற்ற உறுப்புகளைப் போலவே நீதிமன்றங்களும் சீரழிந்து, தீர்ப்பளிக்கும் தார்மீக பலத்தை இழந்துதான் நிற்கின்றன.

– மு செல்வம்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

4

ழத் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
நூரம்பர்க்போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!

என்ற மைய முழக்கத்தின் கீழ் புரட்சிகர அமைப்புகள்  நடத்திய போராட்டங்கள் பற்றிய விபரங்கள்.

1. திருச்சி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் 20.3.2013 காலை 10மணிக்கு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தை ம.க.இ.க, பு.ஜ.தொ.மு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தின. திருச்சி மாவட்டசெயலர் தோழர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த
இலங்கை அதிபர் ராஜபக்சே,
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும்
தூக்கில் போடு! தூக்கில் போடு!

நம்பாதிங்க! நம்பாதிங்க!
ஜ.நா. தீர்மானத்தை நம்பாதிங்க!

என்ற எழுச்சி மிகு முழக்கத்துடன் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிங்கள இன வெறியன் ராஜபக்சே அப்பாவி ஈழத்தமிழ் மக்களை கொத்து குண்டுகளை போட்டு கொடூரமாக கொலை செய்ததை அம்பலப்படுத்தி பெண்கள் விடுதலை முன்னணித் தோழர்.பவானியும், அடுத்து இளம் பெண்களை துப்பாக்கி முனையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தி நிர்வாணமாக்கி கொன்ற இழி செயலை சாடி உணர்ச்சியூட்டும் விதமாக பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் தோழர்.நிர்மலாவும் பேசினர். அடுத்தபடியாக சிறுவன் என்று கூட பாராமல் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து தின்ன வைத்து துப்பாக்கி குண்டுகளால் கொன்ற கொடுஞ்செயலை அம்பலப்படுத்தி பெண்கள் விடுதலை முன்னணி தோழர்.கலா உரை நிகழ்த்தினார். ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் தோழர்.மணலிதாஸ் ஈழப் போராட்ட வரலாற்றில் இந்திய அரசின் சதி திட்டத்தை விளக்கி பேசினார். அடுத்து அனைத்து தரைக் கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர்.சேகர் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்பதே மோசடி பித்தலாட்டம் என்றும் ஈழத்தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தி தராது என்றும் அம்பலப்படுத்தி பேசினார்.

இறுதியாக சிறப்புரை நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய கழக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கோவன் ஈழ மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுக்கிறது. எங்கு, எப்படி, எந்த நேரத்தில் மாணவர்கள் போராடுவார்கள் அதை எப்படி சமாளிப்பது என்பதே தெரியாது. காவல் துறையினர் திகைத்து நிற்கின்றனர். அது மட்டுமல்ல எதற்கும் போராட முன் வராத அன்னை தெரசா என்ற மகளிர் அமைப்பினர் கூட கொலை வெறியன் ராஜபக்சே, மன்மோகன் சிங் ஆகியோரது உருவப் பொம்மையை எரித்து போராட வேண்டிய அளவுக்கு நிலைமை உணர்ச்சி பூர்வமாக உள்ளது என்றார்.

ஆனால், ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் சாரம் 2009ல் நடந்த ஈழப் போரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதா என இலங்கை அரசே விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்பதேயாகும் என்றும், அதாவது, குற்றவாளியே தனது குற்றத்தை விசாரித்து தண்டனை வழங்கி கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த தீர்மானம் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சேவை தண்டிக்கவோ, ஈழத்தமிழர்கள் நலனை நிலைநாட்டவோ கொண்டு வரப்படவில்லை. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நோக்கில் இலங்கை அரசை மிரட்டிப் பணிய வைக்கும் சூழ்ச்சியே என்று தீர்மானத்தை சாடி பேசினார்.

இன்று ஈழத் தமிழர் நலனுக்காக அமைச்சர் பதவிகளைத் துறந்து கூட்டணியிலிருந்து விலகியதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் தி.மு.க 2014ல் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே நாடகமாடுகின்றனர். உண்மையிலேயே ஈழத்தமிழர் நலனில் அக்கரையிருந்தால் 2009ல் மாநிலத்திலும், மத்தியிலும் அதிகாரத்திலிருந்த போதே போராடி இருக்கலாம். ஆனால் பதவி சுகத்தில் திளைத்தனர் போராட முன்வரவில்லை என்றார். ‘ ஆக எந்த ஒட்டுக் கட்சியும் ஈழத்தமிழர் நலனுக்காக செயல்படவில்லை என்றார்.

ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சே கும்பலையும் அதற்கு துணைபோன இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரையும் தண்டிக்க 2வது உலகப் போரில் போர் குற்றவாளிகளை நூரம்பர்க் என்ற இடத்தில் விசாரித்து தண்டனை வழங்கியதை போல தண்டனை வழங்க போராட வேண்டும் என்றும், பொது ஜன வாக்கெடுப்பு நடத்தி சுய நிர்ணய உரிமை பெற போராட வேண்டும் என்றும், அதற்கு ஈழத் தமிழ் மக்கள் சிங்கள உழைக்கும் மக்களோடும, ஜனநாயக சக்திகளோடும் இணைந்து போராட முன் வர வேண்டும் என்றும் தனது உரையை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிங்கள ராணுவம் செய்த கோரக் கொலைகளை பிணக்குவியல்களை விளக்கும் படக்காட்சிகளும், இளம் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை செய்ததோடு நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியதை விளக்கும் படக்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன. இவை கல் நெஞ்சக்காரர்களையும் கலங்க வைக்கும் விதமாக இருந்தன.

இவை ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு தீர்வு சொல்வதாகவும் ஈழத்தமிழர்களின் நண்பர்கள், எதிரிகள், துரோகிகளை அடையாளம் காட்டுவதாக அமைந்து இருந்தது. இவ்வார்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இலக்கிய கழகம், திருச்சி.

2. சேத்துப்பட்டு

தகவல் : மக்கள் கலை இலக்கிய கழகம், சேத்துப்பட்டு

3. உசிலை

ஆர்ப்பாட்டம்: உசிலம்பட்டியில் 20.03.2013 புதன்கிழமை மாலை 5 மணியளவில் தாலுகா அலுவலகம் அருகில்

தமிழக உழைக்கும் மக்களே! தீரமிக்க மாணவர்களே!

ஈழத்தமிழனப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி
ஜ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

நூரம்பர்க் (ஜெர்மன் பாசிஸ்டுகளுக்கு எதிரான)
போன்ற போர்ககுற்ற விசாரணைக்கு
குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!

தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!

– என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னனியின் சார்பாக மக்களின் பார்வையில் படும்படியாக ராஜபக்சேவின் உருவப்படத்திற்கு செருப்புமாலை அணிவித்தும் தூக்கிலேற்றியும் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சந்திரபோஸ் வி.வி.மு தலைமை தாங்கி உரையாற்றினார். அடுத்து தோழர் கோட்டை வி.வி.மு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து காய்கறி சங்கத்தைச் சேர்ந்த வியாபாரி நாகராசன் காங்கிரசின் பித்தலாட்டத்தைப் பற்றி பேசினார்.

உசிலைஅடுத்து வழக்கறிஞர் ரெட் காசி அவர்கள் ஓட்டுக்கட்சி அல்லாத புரட்சிகர அமைப்பான வி.வி.மு சரியான நேரத்தில் சரியான பிரச்சனையை கையில் எடுத்து மக்களிடம் கொண்டுசெல்வதால் இதுதான் மக்களுக்கான இயக்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை தூக்கிலிடக்கூடிய சர்வதேசிய நீதிமன்ற விசாரணை வேண்டும் எனப் பேசினார்.

நிறைவு உரையாக தோழர் குருசாமி வி.வி.மு வட்ட செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக நிறைவுசெய்கையில் மக்களுக்குத் தேவையான அரசு வேண்டும் என்றால் நாம் நமக்கான அதிகாரம் உள்ள அரசை அமைக்க வேண்டும் எனவும் அப்படி அமைக்கப்படாத அரசு நமக்கு சேவை செய்யும் என்று எதிர்பாhப்பது தவறு என்பதை அருமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் “நாய் நமக்கு சேவை செய்ய வேண்டுமானால் நாம்தான் நல்ல நாயை தேர்ந்தெடுத்து நாய்க்கு உணவு அளித்து வளர்க்க வேண்டும் அப்படி இல்லாமல் ஆளும் வர்க்த்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட சீமை சரக்கு நாயான இந்திய அரசு உழைக்கம் மக்களாகிய நமக்கு எப்படி சேவை செய்யும்? மாறாக அந்த நாய் அதன் எஜமானனான ஆளும் வர்க்கத்திர்க்குத்தான் சேவை செய்யும்” என்ற உதாரணம் மிகவும் பொருத்தமாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பினர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

தகவல் : பு.ஜ.செய்தியாளர், உசிலை.

4. மதுரை வழக்கறிஞர்களின் விமான நிலைய முற்றுகை போராட்டம்

தகவல் : மனித உரிமைகள் பாதுகாப்பு மையம்

4. பென்னாகரத்தில் பெண் தோழர்கள் போராட்டம்

ஈழத்தமிழின படுகொலைக்கு நீதிகேட்டும், ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் வி.வி.மு. பெண் தோழர்களும் – ஆதரவான பெண்களும் போலீசின் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம்!
பென்னாகரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாழ்த்து!

ஈழப்பகுதியில் ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள இனவெறியன் ராஜபக்சே – கோத்தபயா – பொன்சேகா கும்பலை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க உலகநாடுகள் ஐ.நா.வை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும் எனில் இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் வி.வி.மு.வைச் சேர்ந்த பெண் தோழர்கள் கைக்குழந்தைகளுடன், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், சிறுவர்கள் என்ற 50க்கும் மேற்பட்டோர் 21.3.2013 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு போலீசின் அனுமதியின்றி பென்னாகரம் பேருந்து நிலையத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டம் என்று பேனரைக் கட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்த ஆரம்பித்தனர்.

பேருந்து நிலையத்திற்குள் பெண்கள் – சிறுவர்கள் திடீரென்று முழக்கமிட்டதும் சுற்றி நின்றிருந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பெண்கள் முழக்கமிட்ட கால் மண இநேரத்தில் காவல்துறையினர் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் வந்து ‘யாரைக் கேட்டு இங்கு வந்து உட்கார்ந்து இருக்கீங்க, அனுமதி பெறாமல் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று செய்யக் கூடாது, கிளம்புங்கள்’ என்று பேசினார். அதற்கு பெண் தோழர்கள் எழுந்து வந்து, “சார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வாங்கணும்னு எங்களுக்கு தெரியாது என்றும் அனுமதி வாங்கித்தான் உண்ணாவிரதம் இருக்கணும்னா அனுமதி கொடுங்கள் என்றும் பேசினர். அனுமதி கேட்காமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் அதனால் உங்களை கைது செய்றோம் என்று ஒரு போலீஸ்காரர் எஸ்.ஐ. அந்த பஸ்ஸை கூப்பிடுங்க என்று கூறினார். அவ்வாறு மிரட்டிப் பார்த்தால் தோழர்கள் கலைந்து போய் விடுவார்கள் என்று பேசியும் தோழர்கள் அச்சப்பட்டு கலையாமல் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டக் கொண்டே இருந்தனர்.

இதனைப் பார்த்த போலீஸ் கலைந்து செல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அருகில் நின்று கொண்டு இருந்த வட்டச் செயலாளர் தோழர் கோபிநாத்தை பார்த்து உங்க நல்ல பெயரை (வி.வி.மு.ன் பெயரை) நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று தலையாட்டிக் கொண்டு கோபமாக பேசினார். அதற்கு கோபிநாத் பெண்கள் செய்கிறார்கள் சார், நாங்க என்ன செய்ய முடியும், உண்ணாவிரதம்தானே செய்யட்டும் விடுங்க என்று தோழர்களுக்கு ஆதரவாக பேசினார். ஒரு புறம் எஸ்.ஐ. தனது மேலதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார். தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டு இருக்கின்றனர் மறுபுறம். போலீஸ் வந்து தோழர்களிடம் பேசியதிலிருந்து பொதுமக்கள், கடைக்காரர்கள் அனைவரும் அடுத்து என்ன நடகும் என்ற எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் கூட்டமாக இருந்து ஆவலாக கவனித்துக் கொண்டு இருந்தனர்.

பின்னர் தனது மேலதிகாரிகளிடன் தொலைபேசியில் உண்ணாவிரதப் போராட்டம் பற்றி தகவல் தெரிவித்து விட்டு வந்த எஸ்.ஐ. தோழர்களிடம் உண்ணாவிரதப் போராட்டம் என்று பேனரில் போட்டிருக்கிறீர்கள். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கிறேன், முழக்கம் போடக் கூடாது. முழக்கம் போட்டால் அது ஆர்ப்பாட்டம் போல் உள்ளது என்று கூறி விட்டு, பொதுமக்களுக்கு தொந்தரவு என்று எங்களுக்கு கம்ப்ளைன்ட் வரக்கூடாது. யாரையும் விருப்பமின்றி அழைத்து உட்கார வைக்கக் கூடாது என்று கூறி விட்டுச் சென்றார். பின்னர் மாலை 4 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் முடித்து வைக்கும் வரை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

தோழ்ரக்ள போராட்டத்தின் உறுதியைப் பார்த்த டீக்கடைக்காரர்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க என்ற போது காசு வாங்க மறுத்து இலவசமாக கொடுத்தனர். மாங்காய் கடைக்காரர் ஒருவர் தட்டில் உள்ள அனைத்து மாங்காயையும் கொடுத்து ஆதரித்தார். ஒரு பெட்டிக் கடைக்காரர் பெண்கள் உறுதியாக போராடி ஜெயிச்சுட்டாங்க, இப்படித்தான் இருக்கணும், பரவாயில்லீங்க என்று பெருமையாக பேசினார்.

போலீசின் அனுமதியின்றி ஆரம்பித்து நடத்திய பராட்டம் போலீசை தன் இடத்திற்கு வரவழைத்து அனுமதியை கொடுக்க வைத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் போராட்ட உணர்வை ஊட்டுவதாக அமைந்தது. போலீஸ் தோழ்ரகளையும் வாக்குவாதத்தின் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வி.வி.மு. ஆதரவாளர் ஒருவர் என் உயிரே போனாலும் பெண்களை போலீஸ் அப்புறப்படுத்த விட மாட்டேன் என்று கூறியது உறுதியை மேலும் அதிகரித்தது.

தகவல் : செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம் 23.03.2013.

5. பென்னாகரம் முடி திருத்தும் தொழிலாளர்கள்

பென்னாகரம் முடி திருத்தும் தொழிலாளர்கள்ஜெனிவா மாநாட்டில் இனப்படுகொலை – போர்க்குற்றம் என்று தீர்மானத்தில் குறிப்பிடாததைக் கண்டித்து பென்னாகரத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டம்.

இலங்கையின் தமிழ்ஈழப்பகுதியில் 2009-ன் இறுதிப் போரில் இலங்கை அரசு தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை செய்தது. அது பற்றி சமீபத்தில் நடந்த ஜெனீவாவின் மனித உரிமை கவுன்சிலின் மாநாட்டில் இலங்கையின் போரில் இனப்படுகொலை – போர்க்குற்றம் நடந்துள்ளது என்று குறிப்பிடாததைக் கண்டித்து பென்னாகரத்தில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களின் கடைகளை அடைத்து 22.3.2013 அன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சத்தியமூர்த்தி தலைமைதாங்கி நடத்தினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை வரவேற்று – வாழ்த்தி பென்னாகரம் வழக்கறிஞர்கள் ஜானகிராமன், ரமேஷ்வர்மா, மகாலிங்கம், தேவேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ராஜபக்சேவிற்கு எதிராகவும், ஜெனீவா மாநாட்டுத் தீர்மானத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் இடப்பட்டன. இறுதியில் தோழர் மணி நன்றி உரை கூறினார்.  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முருகன், கிருஷ்ணன், வெங்கடேசன், குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் : செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம்

6.  புதுச்சேரியில் பு.ஜ.தொ.மு சார்பாக ” ஈழ மக்களின் படுகொலைக்கு துணைப்போன இந்திய அரசைக் கண்டித்து ” தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சாரம்.

பு.ஜ.தொ.மு சார்பாகவும் அதன் இணைப்பு சங்கங்கள் கோத்ரேஜ் சாராலி ஒருங்கிணைந்த தொழிலாளர் சங்கம், இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்கர்ஸ் யூனியன், ரானெ பிரேக் தொழிலாளர் சங்கம், மதர் பிளாஸ்டிக் தொழிலாளர் சங்கம்  சார்பாகவும் நான்கு இடங்களில் நகர பகுதியில் ”தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்” மற்றும் கிராமங்களிலும் இப்பிரச்சாரத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 16 கிராமங்களில் சைக்கிள்  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர் முழக்க கண்டன ஆர்ப்பட்டம் நடந்த அனைத்து இடங்களிலும் இனவெறியன் ராஜபக்சே உருவ பொம்மையை தூக்கிலிட்டும், செருப்பால் அடித்தும், எரித்தும் நடத்தப்பட்டது. குறிப்பாக ஈழத்தமிழனத்தின் படுகொலைக்கு ராஜபக்சே மட்டும் குற்றவாளியல்ல  இப்போருக்கு அடிப்படை காரணமானவர்கள்  இந்திய ஆளும் வர்க்கமான டாட்டா, பிர்லா, அம்பானி, மிட்டல் போன்ற கும்பலும் அதன் கைக்கூலி இந்திய அரசும் அதன் ஆட்சியாளர்களும்தான். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆரம்பகால கைக்கூலியான இந்திராகாந்தி அரசு அன்றைக்கு ஈழ போராளி குழுக்களுக்கு ஆயுத உதவி செய்தது, ஆதரித்தது. அனைத்தும் இந்திய தரகு முதலாளிகளின் மூலதனத்தை இலங்கையில் கொட்டி கொள்ளையிடுவதற்கும், அதற்கு
இலங்கை அரசை அடிபணிய வைப்பதற்கும்தான். இன்றைக்கு சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்து இனப்படுகொலைக்கு துணைசென்று ஈழ விடுதலையை எதிர்ப்பதும், இலங்கையில் உள்ள இந்திய ஆளும் வர்க்க கும்பலின் மூலதனத்தை தக்க வைத்துக்கொள்ளவும் அதை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளவும்தான். எனவே இந்திய அரசு எப்போதும் ஈழ விடுதலையை ஆதரித்ததில்லை, எப்போதும் எதிரிதான். இந்த எதிரி  இந்திய அரசிடமே ஈழ விடுதலைக்கு கோரிக்கை வைப்பதும் அல்லது அவர்களது ஆதரவோடு விடுதலை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கில் போராட்டம் தொடர்ந்ததும், இதே நோக்கில் தமிழகத்தில் ஈழ ஆதரவு அமைப்புக்கள் செயல்பட்டதும்தான், 30 ஆண்டுகால ஈழ விடுதலை போராட்டம் இப்படி ஒரு கசப்பான நிலைக்கு வந்து முடிந்ததும், லட்சகணக்கான மக்கள் ஆனாதைகளாக நிற்பதற்கும் காரணம். இத்தவறான நிலைப்பாட்டுக்கு சென்றது வர்க்கப்பார்வையற்ற அரசியல் கொள்கைதான். இந்திய மேலாதிக்க அரசை எதிர்க்காமல், சுரண்டலை எதிர்க்காமல்,ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளை எதிர்க்காமல் எந்த ஒரு தேசிய இனமும் விடுதலை பெற முடியாது என்கிற வகையில் இப்பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது.

தகவல் : பு.ஜ.தொ.மு., புதுச்சேரி

7. ரெட்ஹில்ஸ்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில் 21.3.2013 அன்று மாலை 4.30 மணி அளவில் செங்குன்றனம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

இணைப்பு சங்கத் தோழர்களும் உழைக்கும் மக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம், நடைபாதை கடை வியாபாரிகளிடமும், பாதசாரிகளிடமும், ஆட்டோ, வேன் ஓட்டுனர்களிடமும் ஒரு பதிவை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தகவல் : பு.ஜ.தொ.மு., திருவள்ளூர் மாவட்டம்

8. திருச்சி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

திருச்சியில் பு.மா.இ.மு சார்பாக சட்டக்கல்லூரியிலும் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியிலும் உள்ளிருப்பு போராட்டம், ரயில் மறியல், கலெக்டர் அலுவலக முற்றுகை, கொடும்பாவி எரிப்பு போன்ற போராட்டங்களை முன்னெடுத்து செய்தோம். இதில் 20.3.2013 அன்று அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட வேண்டும் என ஒருங்கிணைந்தனர். நம்மை தொடர்பு கொண்டு அழைத்தனர். நாம் அவர்களை பேரணியாக அழைத்து சென்று மறியல் மற்றும் காங்கிரசு அலுவலகம் முற்றுகை என போராட்டங்களில் ஈடுபட்டோம். அறிமுகமான மாணவர்களைக் கொண்டு திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். இதனடிப்படையில் 23.3.2013 அன்று பேரணி நடத்த திட்டமிட்டதில் 15 கல்லூரி மாணவர்கள் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ள நாட்களில் மாணவர்கள் போராட முன்வந்தது பாராட்டுக்குரியதாகும்.

இந்த அடிப்படையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை நகரின் முக்கியமான சாலைகளின் வழியே பேரணியாக சென்றோம். பேரணியின் முதல் வரிசையில் ஈழத்தமிழ் மக்களை ஒபாமாää மன்மோகன்சிங், ராஜபக்சே மூவரும் கூட்டுசேர்ந்து சித்ரவதை செய்வது போல காட்சிப்படிவம் செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதிகளில் மாணவர்கள் இருபுறமும் நின்று விளக்கி பேசியதை மக்கள் கைதட்டி வரவேற்றனர். பேரணி செல்லும் வழிகளில் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.

பேரணி துவங்கும் முன்பே காவல் துறையினர் “இன்று எதை உடைக்க போகிறீர்கள்” என்று கேட்டனர். “சார் எங்க நோக்கம் அது இல்ல நாங்க பிரச்சாரம் தான் செய்யப்போறோம்” என்று விளக்கி பேசியதும் “இப்படியே எல்லாரும் செஞ்சா எப்படி பா எங்க பொழப்பு என்ன ஆகுறது” என்று சலித்துக்கொண்டு இறுதிவரை போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர்.

போகும் வழிநெடுக தலைமை தபால் நிலையம், காங்கிரஸ் அலுவலகம் போன்ற இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் அதை பொருட்டாக கருதாமல் விண்ணதிர முழக்கமிட்டு கம்பீரமாக நடந்து சென்றனர். இறுதியாக பேரணி முடியும் போது அனைத்து கல்லூரிகளின் மாணவர் தலைவர்கள் பொதுமக்களிடம் மாணவர் போராட்டங்களுடன் தங்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசி பொதுமக்களுக்கு  அழைப்பு விடுத்தனர்.

சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!

15
சன் டிவி ராஜா
சன் நியூஸ் புள்ளி ராஜா. படம்: சவுக்கு
சன் டிவி ராஜா
சன் நியூஸ் புள்ளி ராஜா. படம்: சவுக்கு

சன் நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியர் ராஜா வாசுதேவன், ஒரு பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். அந்த டி.வி.யின் செய்தி வாசிப்பாளர் அகிலா என்ற பெண் கொடுத்த புகாரில் இந்த கைது நடந்திருக்கிறது. இது பத்தோடு பதினொன்றாக வந்து செல்லும் பாலியல் குற்றச்சாட்டு அல்ல. ஊருக்கெல்லாம் உபதேசிக்கும் ஊடகங்களின் யோக்கியதையை அப்பட்டமாக வெளியே கொண்டு வந்திருக்கிறது இந்தப் புகார்.

இதில் சிக்கி அம்பலப்பட்டிருக்கும் ராஜாவை தாங்கிப் பிடிக்கவும், காப்பாற்றவும் ஏராளமானோர் முயல்கின்றனர். ஆனால் எந்தவித பின்னணியும் இல்லாமல் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறலுக்கு எதிராக மாபெரும் ஊடக சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார் அகிலா. இந்த நிலையில் இந்தப் பிரச்னையின் பன்முகப் பரிமாணங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

சன் நியூஸ் தொலைகாட்சிதான் தமிழ்நாட்டின் முதல் 24 மணி நேர செய்தி சேனல். ஆரம்ப காலத்தில் இருந்து இதற்கு ஆசிரியராக செயல்பட்டு வரும் ராஜா வாசுதேவன் குறித்து தமிழ் ஊடகங்களில் இயங்கும் யாரும் அறிந்திராமல் இருக்க முடியாது. ராஜா என்ற பெயர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபலம். தன்னிடம் வேலை பார்க்கும் நிருபர்களை, உதவி ஆசிரியர்களை, ஒளிப்பதிவாளர்களை எல்லோருக்கும் மத்தியில் கேவலமாக திட்டுவதிலும், அசிங்கப்படுத்துவதிலும் ராஜா கை தேர்ந்தவர். அதை தனது ஸ்டைலாகவே நிலைநாட்டிக் கொண்டவர். தன்னுடைய தகுதிக் குறைபாடுகளை மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பது பலருக்கு புரிந்தாலும் அவரை எதிர்த்துப் பேச அங்கு ஆள் இல்லை. அவரது செல்வாக்கு அப்படி.

சன் டிவிக்கு முன் “பூமாலை” வீடியோ இதழ் நடத்தி வந்த காலத்தில் இருந்தே மாறன் சகோதரர்களுடன் இருக்கும் ராஜா நினைத்தால் யாரையும் வேலைக்கு வைத்திருக்க முடியும், தூக்கியெறிய முடியும். இவரது மனிதத் தன்மையற்ற செயல்களால் வேலை இழந்தவர்கள் ஏராளம். இது ராஜா என்ற தனிநபரின் குணாதிசயம் மட்டுமல்ல. சன் டிவி நிறுவனமே ஊழியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் “நாட்டாமை” நிறுவனம்தான்.

வெளித்தோற்றத்துக்கு பல்லடுக்கு கார்ப்பரேட் அலுவலம் போலத் தோற்றமளிக்கும் சன் டி.வி., நெட்டுக்குத்தாக நிற்கும் ஒரு  டீ எஸ்டேட். அங்கே பணியாற்றுபவர்களின் உடை நவ நாகரீகமாக இருந்தாலும்,  உத்தியோகம் கங்காணி வேலை அல்லது அடிமைப் பணிதான்.  ஆணோ பெண்ணோ நீங்கள் யாராக இருந்தாலும், தலைமையில் உள்ளவரை காக்கா பிடித்தால்தான் வேலையில் பிரச்னை இல்லாமல் தொடர முடியும். தனிநபர்களின் விருப்பங்களும், செல்வாக்குமே அந்த தொலைகாட்சியை இயக்குகின்றன. மேல் அதிகாரி, தனக்கும் கீழ் உள்ளவரை கைநீட்டி அடிப்பது எல்லாம் கூட அவ்வப்போது நடக்கும். சம்பளத்தை பொருத்தவரை மிக, மிக குறைவான ஊதியம்தான். இந்த சென்னை நகரில் 7 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் அங்கு உண்டு. 20 ஆயிரம் ரூபாய் என்பது சன் டி.வி.யில் மிகப்பெரிய சம்பளம்.

வெளியே கார்ப்பரேட்தனம்; உள்ளே பண்ணையார்தனம்’ என்ற இந்த சிஸ்டம் பல கோடிகளை மிச்சம் பிடித்துத் தருவதால் கலாநிதிமாறன் விரும்பியே இதை அனுமதித்திருக்கிறார். இந்த வேலையை அவருக்கு சரியாக செய்து தரும் பொருட்டு, சன் நெட்வொர்க்கின் ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு கங்காணி இருக்கிறார். அந்த வகையில் சன் நியூஸ் சேனலின் கங்காணிதான் இந்த ராஜா.

ராஜா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரு வதந்தி போல அவ்வப்போது வந்து செல்வதுண்டு. அவை புகாராகவோ, வழக்காகவோ இதுவரை மாறியதில்லை. செய்தி வாசிப்பாளர் அகிலா இந்த திருட்டுப் பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்.

கீழ் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை சேர்ந்த ஏழைப் பெண்ணான அகிலா, சன் நியூஸ் தொலைகாட்சியில் வேலைக்குச் சேர்ந்து ஏறக்குறைய ஓர் ஆண்டுகாலம் ஆகிறது. மணவிலக்கு வழக்கு நிலுவையில் உள்ள,  ஓர் ஆண் குழந்தையை வைத்திருக்கும் அகிலாவின் குடும்ப சூழலை நேர்முகத்தேர்வின் போதே தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்ட ராஜா, அதன்பிறகு பொருத்தமான சந்தர்ப்பம் பார்த்து வக்கிரத்திற்கு நூல் விடுகிறார். எல்லோரிடமும் இஞ்சி தின்ற குரங்கு போல காரணமே இல்லாமல் சிடுசிடுக்கும் அவர், அகிலாவிடம் ஒரு விடலைப் பையனைப் போல வழிகிறார். இவை அனைத்தும் அந்தப் பெண்ணால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு புகாருடன் கொடுக்கப்பட்டுள்ளன. (சவுக்கு இணையதளத்தில் இதன் ஆடியோ பதிவை கேட்க முடியும்).

இந்தப் புகாரின் உண்மைத் தன்மை என்ன என்பதை போலீஸ் விசாரிக்கிறது. அது ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால் ஒரு சாதாரண பாலியல் புகார் என்றாலே முந்திக்கொண்டு பரபரப்பை கிளப்பும் தமிழ்நாட்டு ஊடகங்கள் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கும் ஒரு நபர் மீதான ஆதாரப்பூர்வமான புகாரைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. குமுதம் ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், தினமலரின் திருச்சி பதிப்பு,           தி இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய அச்சிதழ்கள் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டன. அவர்களும் கூட பெண்ணின் நியாயத்தில் இருந்து அல்லாமல், ‘ராஜாவை அசிங்கப்படுத்த இது ஒரு வாய்ப்பு’ என்ற தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் கோணத்தில் இருந்து மட்டுமே செய்தியை வெளியிட்டார்கள். மாறன் சகோதரர்கள் மீதுள்ள கோபமும் இதை வெளியிடுவதற்கான முக்கியக் காரணம். ஒரே ஒருமுறை ஜெயா ப்ளஸ் தொலைகாட்சியில் இந்த செய்தி வெளியானது. அத்தோடு சரி.

மற்றபடி ‘தமிழ்நாட்டின் நாடித்துடிப்பு’ என்று பஞ்ச் டயலாக் பேசும் ஜூனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழும இதழ்கள் ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி எழுதவில்லை. விகடன் டெலிவிஸ்டாஸின் சார்பாக சன் குழுமத்தில் வந்துகொண்டிருக்கும் சீரியல்கள், ஒவ்வொரு நாளும் லட்சங்களை அள்ளிக் கொட்டும்போது அவர்கள் நாடி எப்படித் துடிக்கும்?
சரி… இவர்களுக்கு நேரடி வர்த்தக நலன் இருக்கிறது, அதனால் எழுதவில்லை.

தினந்தந்தி, தினமணி, தினமலர், தி. ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இண்டியா, நக்கீரன், டெக்கான் கிரானிக்கல் என வேறு யாரும் எழுதவில்லையே ஏன்? சன் நியூஸ் தொலைகாட்சியின் நேரடிப் போட்டியாளரான புதிய தலைமுறை தொலைகாட்சிக் கூட இந்த உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லவில்லையே எதனால்? சன் குழுமத்தை அசிங்கப்படுத்த இது ஒரு நல்வாய்ப்பு என்றபோதிலும் ஜெயா டி.வி. அடக்கி வாசிப்பதற்கு என்ன காரணம்?

ஏனெனில் இவர்கள் கூட்டுக்களவாணிகள். “இன்று ராஜாவை பற்றி நாம் செய்தி வெளியிட்டால், நாளை நம் மீது ஒரு குற்றச்சாட்டு வரும்போது அவர்கள் செய்தி வெளியிடுவார்கள்”  என இவர்களின் ‘கூட்டு மனசாட்சி’ நினைக்கிறது. இதை, ‘ஒரு மீடியா பத்தி இன்னொரு மீடியாவுல நியூஸ் போடக்கூடாது. இது ஒரு எத்திக்ஸ்’ என்று அறம் பேசுகிறார்கள்.

“ஒரு திருடன் சக திருடனை காட்டிக் கொடுக்கக்கூடாது’ என்ற கட்டுப்பாடுதான் இவர்கள் கூறும் அறம். இன்று ராஜா சிக்கிக்கொண்டார். ஆனால் ஒவ்வொரு ஊடகத்திலும் சிக்காத ராஜாக்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கி, பணியிடத்தில் கடும் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அடுப்பங்கரைக்கே துரத்தப்பட்ட பெண்கள் எத்தனையோ பேர்.

ஊடகங்களின் மௌனத்தை மட்டுமல்ல… ஊடக கருத்து சொல்லிகளின் மௌனத்தையும் இங்கு நாம் அம்பலப்படுத்த வேண்டும். அ முதல் ஃ வரை அனைத்து பிரச்னைகளின் மீதும் ஆவேசமாக அறவுணர்ச்சிப் பொங்க கருத்து சொல்லும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஒரு ஏழைப் பெண்ணுக்கு மிகப்பெரிய அதிகாரத்தினால் இழைக்கப்படும் அநீதி குறித்து எந்தக் கருத்தையும் சொல்லவில்லையே ஏன்? ‘நேர்படப்பேசு’ முதல் ‘விவாத மேடை’ வரை எல்லா இடங்களிலும் அவர் பேசும் கருத்துக்கு அவர் நேர்மையாக இருப்பாரேயானால் இந்த பாலியல் அத்துமீறல் குறித்து எழுதியிருக்க, பேசியிருக்க வேண்டும். இப்போதேனும் அதை செய்ய வேண்டும். மாணவர் போராட்டங்கள் குறித்து சன் நியூஸ் நேரலையில் பல மணி நேரம் உட்கார்ந்து கருத்து சொன்ன அ.மார்க்ஸ், அதே சன் நியூஸில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்திருக்கும் அத்துமீறல் குறித்து ஒரு வார்த்தையும் எழுதவில்லை. இவர்கள் இருவர் மட்டுமல்ல… இவர்களைப் போன்ற பல நிலைய வித்வான்களும், வித்வான் வாய்ப்புக்கு காத்திருக்கும் அறிவு சீவிகளும் வாய் திறக்கவில்லை.

டாடாவுக்கு ‘கவிதை’ எழுதிய லீனா மணிமேகலையின் ‘கருத்து சுதந்திரத்திற்காக’ டாஸ்மாக் கடைகள் முதல் எல்லோ பேஜஸ் டைரக்டரி வரையிலான சகல இடங்களிலும் படைப்பாளிகளைச் சல்லடை போட்டு சலித்து கூட்டம் சேர்த்த கருத்துரிமைக் காவலர்கள்; ஜனநாயகம், மனித உரிமை, பெண்ணுரிமை உள்ளிட்ட சகலவிதமான உரிமைகளின் ஆசான்களும் அத்தாரிட்டிகளுமாகிய பீஷ்ம பிதாமகர்கள், துரோணாச்சாரிகள் .. எங்கே? அவர்களுடைய மவுனத்திற்கு காரணம் என்ன?

அதற்கு காரணம் அவர்களுடைய சுயநலமோ அடுத்த “படத்தில்” நமக்கு சான்ஸ் கிடைக்காமல் போய், தமிழகத்தின் முதல் பத்து அறிவுஜீவிகளில் ஒருவராக இல்லாமல் தொலைந்து போய்விடுவோமோ என்ற கவலையோ அல்ல. அவர்களுடைய மவுனத்துக்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. Greater common cause! அகிலா என்ற ஒரே ஒரு பெண்ணின் நியாயத்துக்காக அவசரப்பட்டு குரல் கொடுப்பதன் மூலம், ஈழத்தின் ஆயிரக்கணக்கான பெண்களுக்காகவும், அங்கே கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோமே என்ற கவலையின் காரணமாகத்தான் அவர்களால் தொண்டைக்குள்ளிருந்து வார்த்தையைத் துப்ப முடியவில்லை. ஒன்று பெரிதா ஆயிரம் பெரிதா என்று தீவிரமான ஆராய்ச்சியில் கடந்த சில நாட்களாகவே மூழ்கி, கடைசியில் ஆயிரம்தான் பெரிது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த இலட்சணத்தில் அரசியல்வாதிகள் மட்டமானவர்களாம். அறிவுசீவிகள் உத்தமர்களாம். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் தயவை நம்பி, அறிக்கை விட்டும், தொலைக்காட்சியில் மூஞ்சியைக் காட்டியும் தான் உயிரோடு இருப்பதை அன்றாடம் உறுதி செய்து கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் “ஊடகங்களின் மீதும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் பெருமதிப்பு வைத்திருப்பது” இதற்காகத்தான். தற்போது சன் டிவி புள்ளிராஜாவின் சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரத்திற்குள் வந்து விட்டது போலும்! எனவேதான் அறிவுஜீவிகள், இனமானக் காவலர்கள், புரட்சிப்புயல், உலகத்தமிழர் தலைவர்கள், தமிழ் மானத்தின் மொத்த குத்தகைதாரர்கள் மற்றும் உள் குத்தகைக்காரர்கள் உள்ளிட்ட யாரும் பேசவில்லை.

அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை அநீதிகளை எதிர்த்து நாகரீகமாக அறிக்கை விடும் போலிக் கம்யூனிஸ்டுகள் எங்கே போனார்கள்? சிதம்பரம், வாச்சாத்தியில் உரிமைக்கு குரல் கொடுத்த வரலாறே நாங்கள்தான் என்று பொங்குபவர்கள் என்ன செய்கிறார்கள்? சன் டிவி என்றால் அத்தனை பயமா? இல்லை செய்தி அரங்கத்தில் நம்மையும் மதித்து முகம் காட்டுகிறார்களே என்ற நன்றி விசுவாசமா? ஆமென்றால் உங்கள் ஜனநாயக மாதர் சங்கத்தையும், சம்மேளனத்தையும் கலைத்து விடுங்கள்!

பத்திரிகையாளர்கள் சங்கம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பெண் பத்திரிகையாளர்களுக்கு வேறு தனி சங்கம் இருக்கிறதாம். இவர்கள் யாரும் ஏன் பேசவில்லை. பேசினாலே தங்கள் நிறுவனத்தில் தன்னை கட்டம் கட்டி விடுவார்கள் என்ற பயமா? அகிலாவும் இப்படி பயந்து பணிந்துவிடுவார் என்பதுதான் ராஜாவின் கணக்காக இருந்திருக்கிறது. தற்போது பத்திரிகையாளர் உலகில் நிலவும் மவுனத்தைப் பார்க்கும்போது, ராஜாவின் கணக்கில் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. அகிலாவின் விசயத்தில் மட்டும் ராஜாவின் கணக்கு பிசகிவிட்டது.

ஒருவேளை, ‘அந்தப் பெண் புகார் கொடுத்திருக்கிறார். அது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் எப்படி எழுதுவது?’ என கேட்கலாம். எனில், புகாரின் உண்மைத்தன்மை குறித்து யாரிடமேனும் விசாரித்தீர்களா? குறைந்தப்பட்சம் அந்தப் பெண்ணிடம் பேச முயன்றீர்களா? யாரும் எதையும் செய்யவில்லை. டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைக்காக இங்கே எழுந்த குரல்களில் ஒன்றை கூட இப்போது காணவில்லை. அரசு சலுகைகள் வாங்குவதற்கு மட்டுமே இயங்கும் பத்திரிகையாளர் சங்கங்கள், அகிலாவுக்கு ஆதரவாக சிறு முயற்சியையும் எடுக்கவில்லை.

அகிலா, என்ன தைரியத்தில் இப்போது புகார் கொடுத்திருக்கிறார்? அவருக்கு என்ன பின்னணி? எதுவுமில்லை. தன்னை துன்புறுத்தியவன் தண்டனை பெற வேண்டும் என்ற நியாயமான கோபம். தன்மான உணர்ச்சி. இதே கோபம் சக பத்திரிகையாளர்களாளுக்கும் வர வேண்டும். தமிழ் ஊடக உலகில் நிலவும் இந்த மோசமான மௌனம் கலைக்கப்பட்டாக வேண்டும். இப்படிப்பட்ட அச்சம் மிகுந்த மௌனமும், உதிரிகளாக பிரிந்துகிடக்கும் அவலமும்தான் ராஜா போன்ற ஊடகப் பொறுக்கிகளின் பலம். இதுதான் பத்திரிகை முதலாளிகளின் பலமும்.

இப்போது அகிலா தனித்துவிடப்பட்டிருக்கிறார். அவரது ஒழுக்கத்தை பற்றிய அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறிழைத்த பொறுக்கியின் மீது புகார் கொடுத்தேன். இதற்காக நான் ஏன் வேலைக்கு வராமல் இருக்க வேண்டும்?’ என்ற நியாயமான கோபத்துடன் மறுபடியும் வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கிறார் அகிலா. ஆனால் முன்பே திட்டமிடப்பட்ட செய்தி வாசிப்பு அட்டவணையில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்துப் போடும் வகையில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருக்கும் ராஜா, இனிமேல் பழைய மாதிரி சன் நியூஸ் ஆசிரியராக செயல்படுவாரா, இல்லையா என்பது தெரியவில்லை. அது கலாநிதிமாறனின் ‘கருணயை’ப் பொருத்தது. ஒருவேளை ராஜா அலுவலகம் வந்தால் அப்போது என்னவும் நடக்கலாம். நிர்வாக ரீதியாக அகிலா வேறு ஊருக்கு பந்தாடப்படலாம் அல்லது மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகலாம்.

இது பொதுவாகப் பேசுவதற்கான தருணம் அல்ல. குறிப்பாக செயல்பட வேண்டிய தருணம். ராஜா என்ற நபரின் பாலியல் குற்றமாக மட்டும் இதனைப் பார்க்க கூடாது. இது தமிழகத்தின் ஊடக முதலாளித்துவ உலகம் நிலைநாட்டியிருக்கும் கொடுங்கோன்மையின் ஒரு வெளிப்பாடு. எங்கே தொழிற்சங்க உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அங்கே இத்தகைய தவறுகள் நடப்பதற்கான வாய்ப்பு வெகு வெகு குறைவு. எங்கே பத்திரிகையாளர்கள் உண்மையான பத்திரிகையாளர்களாக நடந்து கொள்கிறார்களோ அங்கே இத்தகைய இழிபிறவிகள் நடமாடுவதற்கான வாய்ப்பே அரிது.

பிழைப்புவாதம், காரியவாதம், தொழில் நேர்மையற்ற அடிமைத்தனம், அறிவையும் மனச்சான்றையும் சொந்த ஆதாயத்துக்காக எவ்வித தடுமாற்றமும் இன்றி அடகு வைக்கும் பண்பு, நிர்வாகத்தின் உத்தரவுக்கு ஏற்ப உண்மையை மாற்றி பொய் எழுதக் கூசாத கைகள், பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் இவை எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.

அகிலா என்ற பெண் தொடங்கியிருக்கும் இந்தப்போராட்டத்தை தமிழகப் பத்திரிகையாளர்கள் உடனே பற்றிக் கொள்ளவேண்டும் என்று கோருகிறோம். ஒரு பெண்ணின் கவுரவப் பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி பத்திரிகையாளர்கள் அனைவரின் கவுரவம், பணி சார்ந்த உரிமைகள் ஆகியவற்றை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டமாக இதனை விரித்துச் சொல்ல முடியும்.

மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டாம். பத்திரிகையாளர்களே கிளர்ந்தெழுங்கள்.

மேலும் படிக்க:

சவுக்கு கட்டுரை: குட்டி ஆடுகளும் குள்ளநரிகளும்.