Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 721

ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !

22
சாதி மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியில் தப்படிக்க மறுத்ததற்காகத் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு தாக்கப்பட்டது குறித்து நடந்த விசாரணை (இடது); இருகூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆதப்பகவுண்டன் புதூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாட்டில் புதைக்கும் உரிமை மறுக்கப்படுவதால், தனிச்சுடுகாடு கேட்டு, அம்மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கீழ் அணிதிரண்டு நடத்திய போராட்டம்
சாதிக் கூட்டம்
ராமதாசு தலைமையில் அணிதிரண்டுள்ள ஆதிக்க சாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்.

ன்றளவும் தமிழக கிராமங்கள் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கும் நிலையில், இரட்டைக் குவளை முறையும் தனிச்சுடுகாடும் இருந்துவரும் நிலையில், கிராமப் பொதுக் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் சென்று வழிபடுவதற்கு ஆதிக்க சாதியினர் தடைபோட்டு வரும் நிலையில், தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால், ஊர் திருவிழாக்களுக்குத் தப்படிக்க மறுத்தால் தண்டிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாகவும், வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ராமதாசு கும்பல் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருகிறது. இது மட்டுமின்றி, ராமதாசும், அவரது புதிய கூட்டாளிகளும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் ஊர்ஊராய்ப் போய்க் கூட்டம் போட்டுத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி கோவையில் நடந்த அனைத்துச் சமுதாயப் பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ரெட்டியார் சங்கத்தைச் சேர்ந்த காமராஜ், “நம்பியூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்து வந்தனர். ஒரு லோடு செங்கல் எடுத்துத் தாக்கினோம். அதோடு வாலைச் சுருட்டிக் கொண்டனர். இனி யாரும் வாலாட்ட அனுமதிக்கக் கூடாது” என வெளிப்படையாகவே ஆலயத் தீண்டாமைக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

அக்கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த பா.ம.க. ராமதாசோ இன்னும் ஒருபடி மேலே போய், “பி.சி.ஆர். சட்டத்தில் புகார் அளிக்கவும், வழக்குத் தொடரவும் இனி ஒருவனுக்கும் தைரியம் வரக்கூடாது. குழந்தைகளிடம் சாதியைப் பற்றிச் சொல்லுங்கள். குறிப்பாக, பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித் தெளிவாகச் சொல்லுங்கள்” எனப் பேசி ஆதிக்க சாதித் திமிருக்கும் வன்கொடுமைக்கும் கொம்பு சீவிவிட்டிருக்கிறார்.

இப்பேரவை நடத்திவரும் கூட்டங்களில் போடப்படும் தீர்மானங்களோ ஒருபுறம் பொய்-அவதூறுகளையும் மற்றொருபுறம் வெறுப்பையும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக உமிழ்கின்றன.

‘‘தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிந்துவிட்டது. ஆனாலும், தாழ்த்தப்பட்டோர் மற்ற சமுதாயத்தினர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப் புகார்களைக் கொடுத்து வருகின்றனர். அதனால், இச்சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களைப் பரிசீலித்து முடிவுசெய்ய மாவட்ட நீதிபதி தலைமையின் கீழ் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்; இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு உடனடியாகப் பிணை கிடைக்கவும்; பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்றவாறும் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.”

‘‘வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பொய்ப் புகார்களுக்கு அடுத்து, காதல் என்ற பெயரில் நடக்கும் நாடகத் திருமணங்களால்தான் தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் கெட்டு வருகிறது. இந்நாடகத் திருமணங்கள் பணம் பறிக்கும் நோக்கத்தோடு நடந்து வருவதோடு, இதனைச் சில தலித் தலைவர்கள் தூண்டிவிட்டு வருகிறார்கள். எனவே, இந்நாடகத் திருமணங்களைத் தடுக்கும் விதத்தில், பெண்ணின் திருமண வயதை 21 ஆகவும், ஆணின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும்; இந்த வயதிற்கு முன்பு திருமணம் நடத்த வேண்டுமென்றால், அத்திருமணங்களுக்கு மணமக்களின் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கும் நடந்துள்ள நாடகத் திருமணங்கள் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.”

‘‘10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தனித்தொகுதிகள் மாற்றப்பட வேண்டும்” என ராமதாசு தலைமையில் திரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் கோருகிறார்கள்.

*********

சாதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், திராவிட விடுதலை இயக்கம் மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடியடி நடத்திக் கலைக்கும் போலீசு

தீண்டாமையை வெளிப்படையாக ஆதரித்துப் பேசி வரும் இந்தப் பிற்போக்குக் கும்பலை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையைத் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்து விடவில்லை. இதிலிருந்தே வன்கொடுமைச் சட்டம் எந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும், அந்தச் சட்டம் எவ்வளவு மொன்னையானது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

வன்கொடுமைச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதைக் காட்டியே இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வாதிடுகிறது, ராமதாசு கும்பல். மேலவளவு முருகேசன் கொலை வழக்கிலும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோரின் வாயில் மலத்தைத் திணித்த வழக்கிலும்கூட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாமல், சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ்தான் தண்டிக்கப்பட்டனர். இவ்வழக்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வராது என்றுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. இந்தத் தீர்ப்புகளைக் காட்டி இவ்வழக்குகளில் வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வாதிடுவது எத்துணை மோசடியானதோ, உண்மைக்குப் புறம்பானதோ, அதைப் போன்றதுதான் ராமதாசின் வாதமாகும்.

சாதாரண மக்கள் தரும் எந்தவொரு புகாரையும் இழுத்தடிக்காமல் போலீசுக்காரர்கள் பதிவு செய்து விடுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை. அதிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் போலீசு நிலையங்களில் நடத்தப்படுவது பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கச் சென்றாலோ, அப்புகாரை போலீசு தனது சாதிப் பற்று மற்றும் ஆதிக்க சக்திகளோடு அதற்குள்ள உறவு ஆகியவற்றின் காரணமாக நிராகரித்துவிடுவதில்தான் அக்கறை காட்டுகிறது. போலீசின் இந்த அலட்சியத்தையும் தாண்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், அதற்கு வெளியிலிருந்து ஓர் அமைப்பின் உதவியைத் தாழ்த்தப்பட்டோர் நாடுவது அவசியமாகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக வரும் இயக்கங்களை, குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளைக் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ஆதிக்க சாதிகள் பழி போடுகின்றன.

இச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர் கொடுக்கும் புகார்கள் போலீசு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதனைச் சாதாரண கீழ் நிலையில் உள்ள போலீசு அதிகாரிகள் விசாரிக்க முடியாது. போலீசு துணைக் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அந்த அதிகாரி இது பொய்ப்புகார் என அறிக்கை அளித்தால், நீதிமன்றம் உடனடியாகவே அப்புகாரைத் தள்ளுபடி செய்துவிடும். இது, ஆதிக்க சாதியினர் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும்.

தேசியக் குற்றவியல் ஆவணத் துறை வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2007 முதல் 2010-ஆம் ஆண்டு முடிய இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்துள்ள வன்முறைக் குற்றங்களில் 67 சதவீதமும், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைத் தாக்குதல்களில் 81 சதவீதமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. உண்மைப் புகாரைப் பதிவு செய்வதே குதிரைக் கொம்பாக இருக்கும்பொழுது, பொய்ப் புகாரை போலீசு பதிவு செய்கிறது என்றால், போலீசு யாருடைய ஆதாயத்துக்காகவோ தாழ்த்தப்பட்டோரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.

சாதி பலியானவர்கள்
வன்னிய சாதிப்பெண்ணைக் காதலித்த ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (இடது); வேறு சாதியைச் சேர்ந்த தனது வகுப்புத் தோழனை காதலித்த விவகாரம் வீட்டிற்குத் தெரிய வந்ததையடுத்து, ‘மர்மமான’ முறையில் தீயில் கருகி இறந்து போன கவுண்டர் சாதியைச் சேர்ந்த நந்தினி.

ஏழு கடல் – ஏழு மலைகளைத் தாண்டிப் பதிவு செய்யப்படும் வழக்குகளிலும்கூட நீதி கிடைத்துவிடுவதில்லை. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 2010-ஆம் ஆண்டு முடிய, கடந்த 21 ஆண்டுகளில் நாடெங்கும் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் (1,26,593), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,00,098. தீர்ப்பு அளிக்கப்பட்ட 25,573 வழக்குகளில் 8,628 வழக்குகளில் மட்டும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 2010-ஆம் ஆண்டு முடிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 3,635. இதில் 30 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன; 2,839 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. தீர்ப்பு அளிக்கப்பட்ட 766 வழக்குகளில் 189 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; 577 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (ஆதாரம்: மைய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரத்துக்கான அமைச்சகம் வன்கொடுமைச் சட்டம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை.)

‘‘இந்தியாவெங்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுகின்றனர்; ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகின்றனர்; இரண்டு தாழ்த்தப்பட்டோர் கொல்லப்படுகின்றனர்; இரண்டு தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் எரிக்கப்படுகின்றன” என்ற புள்ளிவிவரத்தோடு, கடந்த இருபது ஆண்டுகளில் இத்தகைய தீண்டாமைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தாலே, இச்சட்டம் தாழ்த்தப்பட்டோருக்கு எவ்விதப் பாதுகாப்பையும் நீதியையும் வழங்கிவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றளவும் கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக்குடியிருப்பு, தனிக்குழாய், தனிக்கிணறு, தனிச்சுடுகாடு போன்றவை இருப்பதை இச்சட்டம் குற்றமாகப் பார்க்கவில்லை. தீண்டாமையின் இந்த வடிவங்களை அரசும் சட்டமும்கூட ஏதோ சம்பிரதாயமான நடைமுறையாக, காலப்போக்கில்தான் இவற்றை மாற்ற முடியும் என்பது போலவே கருதுகின்றன. இப்படிபட்ட நிலையில் இன்று தீண்டாமையோ புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாகச் சோன்னால், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினால், ஆதிக்க சாதியினரோ தங்களுக்கென தனிக் கோவிலைக் கட்டிக்கொண்டு, அதில் தாழ்த்தப்பட்டோர் நுழைய அனுமதியில்லை என வக்கிரமாக வாதிடுகின்றனர். முன்பு தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணியத் தடை விதித்த ஆதிக்க சாதியினர், இந்த நவீன காலத்திற்கு ஏற்ப அவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டத் தடை விதிக்கின்றனர். இந்திய அரசின் வங்கிகள் பல்வேறு காரணங்களைச் சொல்லி தாழ்த்தப்பட்டோருக்குக் கடன் தர மறுத்துத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக ப.சிதம்பரம் புலம்பியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது போலீசும் அரசு துருப்புகளும் நடத்தும் தாக்குதல்கள் – பரமக்குடி துப்பாக்கிச் சூடு, கொடியன்குளம் தாக்குதல், தாமிரபரணி படுகொலை, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் பழங்குடியின மக்கள் எல்லைப் பாதுகாப்புப் படையால் படுகொலை செய்யப்படுவது போன்றவை இச்சட்டத்தின் கீழ் மட்டுமல்ல, கிரிமினல் சட்டத்தின் கீழும் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ஆதிக்க சாதிவெறியர்களுக்குச் சாதகமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமெனக் கோருவது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இச்சட்டம் வழங்கியிருக்கும் பெயரளவிலான பாதுகாப்பையும் பறித்தெடுப்பது தவிர வேறல்ல. இப்படியொரு கோரிக்கையை முன்வைத்துவிட்டு, “நான் இச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனக் கோரவில்லை” என எகத்தாளமாகப் பகடி செய்கிறார், ராமதாசு.

***********

சாதி புள்ளிவிபரங்கள்சாதி மாறித் திருமணங்கள் செய்வதை அனுமதிக்கவே கூடாது என சாதித் தூமைவாதம் பேசி வரும் கொங்கு வேளாளர் பேரவையைச் சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன், “கடந்த ஓர் ஆண்டில் மட்டும் காதல் திருமணங்களால் 963 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 716 பேர் வாழாவெட்டியாக உள்ளனர். ஏழு ஆண்டுகளில் 300 கோடி ரூபா பணத்தைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நமது சமூகத்தினரிடம் இருந்து கறந்துள்ளனர்” என்றொரு புள்ளிவிவரக் குண்டைத் தூக்கிப் போட்டு வருகிறார் (ஜூ.வி.,30.12.12, பக்.28) அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய தனது கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், “நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 955 காதல் திருமணங்களில் 712 தோல்வியில் முடிந்துவிட்டதாக’’க் கூறுகிறது. ராமதாசு-காடுவெட்டி குரு கும்பல், நாடகக் காதல் திருமணங்களால் 2,000 வன்னியப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்டியல் தங்களிடம் உள்ளதாகக் கூறித் திரிகின்றனர்.

இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா, போலீசில் வழக்குப் பதிவாகியிருக்கிறதா எனக் கேட்டால், இதெல்லாம் பெண் வீட்டாரின் மானப் பிரச்சினை, எங்களுக்கு மட்டும்தான் தெரியும் எனப் பதில் அளித்து, செண்டிமென்டுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கும் நடந்துள்ள நாடகக் காதல் திருமணங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரும் ராமதாசு, அந்த விசாரணைக்கு இணையாக, ஆதிக்க சாதிவெறிக் கும்பல் தங்கள் சாதிப் பெருமையைக் கட்டிக் காப்பதற்காக நடத்தியிருக்கும் கௌரவக் கொலைகள் பற்றிய விசாரணை நடத்தக் கோருவாரா?

அப்படியொரு விசாரணை நியாயமாக நடந்தால், மேல்சாதிப் பெண்களைக் காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றியதாகக் கூறப்படும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையைவிட, ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலையும் மீறி, அச்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; தாழ்த்தப்பட்ட இளைஞர்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் மேல்சாதிப் பெண்களின் எண்ணிக்கையைவிட, தனது குடும்பத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்ட இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதால், தனது பெற்றோர்களால், உறவினர்களால், சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட மேல்சாதிப் பெண்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் என்ற உண்மைகள் அம்பலத்துக்கு வரும்.

‘‘வன்னியன் வீட்டுப் பெண்களை வன்னியன்தான் காப்பாற்ற வேண்டும். கொங்கு வேளாளார் வீட்டுப் பெண்களை கொங்கு வேளாளர்கள்தான் காப்பாற்ற வேண்டும். முதலியார் வீட்டுப் பெண்களை முதலியார்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என வன்னிய சாதிப் பெருமை பேசும் இணையதளமொன்று சூளுரைக்கிறது. ஆனால், வன்னிய சாதிப் பெண்களுக்கு வன்னியனாலும், கவுண்டர் சாதிப் பெண்களுக்கு கவுண்டனாலும்தான் ஆபத்து என்பதை இக்கௌரவக் கொலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

************

சாதி மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியில் தப்படிக்க மறுத்ததற்காகத் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு தாக்கப்பட்டது குறித்து நடந்த விசாரணை (இடது); இருகூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆதப்பகவுண்டன் புதூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாட்டில் புதைக்கும் உரிமை மறுக்கப்படுவதால், தனிச்சுடுகாடு கேட்டு, அம்மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கீழ் அணிதிரண்டு நடத்திய போராட்டம்

தருமபுரியில் வன்னிய சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு மீது நடத்திய தாக்குதலைத் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் கண்டித்துள்ளன என்றாலும், தற்பொழுது ராமதாசு அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற போர்வையில் ஆதிக்க சாதிவெறிக்குத் தூபம் போட்டு வருவதையும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதையும் எத்தனை கட்சிகள் கண்டிக்கவும், அதற்கு எதிராகப் போராடவும் முன்வந்துள்ளன என்பதுதான் இப்பிரச்சினையில் கவனத்தைக் குவிக்க வேண்டிய விடயம்.

இந்த ஆதிக்க சாதிக் கும்பல் கட்டியிருக்கும் பேரவையைத் தடை செய்யாமல், தமிழகத்தின் மூன்றே மாவட்டங்களில் மட்டும் (மதுரை, இராமநாதபுரம், கடலூர்) ராமதாசு நுழைவதற்குத் தடை விதித்து நாடகமாடுகிறார், ஜெயா. இத்தடையை கருணாநிதி எதிர்த்தவுடன், கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதிக்கப்பட்டத் தடை அ.தி.மு.க. அரசால் உடனடியாக நீக்கப்படுகிறது. இப்படியாக அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே ஆதிக்க சாதியினரை அரவணைத்துக் கொள்வதில் ஒரு போட்டாபோட்டி நடந்து வருகிறது.

மற்ற திராவிடக் கட்சிகளும், தமிழின அமைப்புகளும் காரியத்தனமாக மௌனம் சாதிக்கின்றன. சி.பி.எம்., ராமதாசு மீது விதிக்கப்பட்ட தடையை ஆதரிப்பதாக அறிவித்ததோடு முடங்கிக் கொண்டது. காதலைக் கொண்டாடும் மாநாடு நடத்தியதைத் தாண்டி, ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் தெம்பு சி.பி.எம்-க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பிற தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும் மற்றும் பெரியார் திராவிடர் கழகம், ம.க.இ.க., ஆகிய அமைப்புகளும்தான் ராமதாசு தலைமையில் அணிதிரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டம் நடைபெறும் இடங்களில், அதனை எதிர்த்துக் களத்தில் இறங்கிப் போராடி வருகின்றன.

தேசியக் கட்சியானாலும் சரி, திராவிடக் கட்சியானாலும் சரி, அக்கட்சிகள் அனைத்தும் பல காலமாகவே ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பிரமுகர்களைத்தான் கட்சிப் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்து வருகின்றன. இப்பிரமுகர்களில் பலர் நிலவுடமை ஆதிக்க சக்திகள் என்பது ஒருபுறமிருக்க, தற்பொழுது தனியார்மயத்தையும் தங்கள் பதவிகளையும் பயன்படுத்திக் கொண்டு, ரியல் எஸ்டேட், மணல் காண்டிராக்டு, கல்வி வியாபாரம் எனப் புதுவிதமான தரகு முதலாளிகளாகவும் வளர்ந்துவிட்டனர். ஓட்டுக்கட்சிகளில் அண்ணன்களாக, தளபதிகளாக வலம் வரும் இப்பிரமுகர்களுக்கு ஓட்டுப் பொறுக்குவதற்கும், தங்களது சுய இலாபத்திற்கும் சாதியும், சாதி அரசியலும் அவசியமாக உள்ளது. அதனாலேயே இந்தத் தளபதிகளும் சாதி சங்கங்களும் இயற்கையான கூட்டாளியாகப் பொது அரங்கில் நடமாடி வருகின்றனர். இந்தத் தளபதிகள்தான் ஓட்டுக்கட்சிகளின் பணப்பெட்டிகளாக, அடியாட்களைத் திரட்டிக் கொடுப்பவர்களாக, சுருக்கமாகச் சோன்னால் கட்சியின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதால், எந்தவொரு ஓட்டுக்கட்சியும் தமிழகத்தில் தற்பொழுது தூண்டிவிடப்படும் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக நிற்காது; நிற்கவும் முடியாது.

எனினும், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ராமதாசு கும்பலை ஆதரித்து நிற்கவில்லை. வன்னிய சாதி மக்கள் கணிசமாக வாழும் கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதித்த தடையை எதிர்த்து, அம்மாவட்டம் கொதித்துப் போவிடவில்லை என்பதே இதற்கு சாட்சி. இது, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடையே சாதி கடந்த ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும், அவர்கள் மத்தியில் சாதிகளைப் புறக்கணிக்கக்கூடிய ஜனநாயகப் போராட்டங்களைக் கட்டமைப்பதற்குமான வாய்ப்புகள் அருகிப் போய்விடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

– குப்பன்

சரணாகதிதான் திருமாவின் எதிர்வினையா?

வீராணம் ஏரி நீரை விவசாயத்துக்குத் திறந்துவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த ஜனவரி மாதம் சிதம்பரம் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், “இதுவரை நடந்ததை நாங்கள் மன்னித்துவிட்டோம்; மறந்துவிட்டோம். வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறக்கும் பிரச்சினைக்காக பா.ம.க. போராட முன்வந்தால், அவர்களுடன் இணைந்து விடுதைச் சிறுத்தைகள் கட்சியும் போராடும்” எனப் பேசியிருக்கிறார், தொல்.திருமாவளவன்.எதை மறப்பது? யார், யாரை மன்னிப்பது? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ராமதாசு குற்றஞ்சுமத்தி வருவதை மன்னிப்பது, மறப்பது என்றால், அதற்கு திருமாவிற்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு.

ஆனால், தருமபுரி தாக்குதலை மன்னிப்பது என்றால், அந்த உரிமையை திருமாவிற்குக் கொடுத்தது யார்? தருமபுரியில் நடந்த தாக்குதல் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கக்கூடியதா? மன்னிக்கக் கூடியதா?

தருமபுரியில் தமது கட்சியினரும் சாதியினரும் நடத்திய தாக்குதலுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காமல், ஊர்ஊராகக் கூட்டம் போட்டுத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பிச் சாதிவெறியைத் தூண்டி வரும் ராமதாசை மன்னிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகாதா, துரோகமாகாதா? ராமதாசு கூட்டம் போடும் இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அணிகள் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா?

“தருமபுரி தாக்குதலையொட்டி பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் இன்ன பிற ஜனநாயக சக்திகளும் ஆற்றவிருக்கும் எதிர்வினையென்ன?” என்று மற்றவர்களையெல்லாம் கூண்டிலேற்றிக் கேள்வி எழுப்பினார் திருமா. அவருடைய எதிர்வினை “மறப்போம், மன்னிப்போம்” என்று தெளிவு படுத்திவிட்டார்.

திருமாவின் இந்தக் கூற்றுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினை என்ன?

______________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி ?

6

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்:  மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?

  • தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2011ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிராக 2,28,650 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் மட்டும் 24,260.
  • 1971-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2011 வரையிலான நாற்பதாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் 873 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வல்லுறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதவீதத்தினர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.
  • இந்தியாவின் 53 பெருநகரங்களை ஒப்பிடும் போது தலைநகரான டெல்லியில்தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவு குற்றங்கள் நடக்கின்றன.
  • ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் நிலவும் மிக மோசமான நாடுகளில் உலகில் 4-வது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் தாம்சன்-ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது.
  • தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது.
  • தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. இவற்றில் 834 பாலியல் வல்லுறவுக் குற்றங்களாகும்.
  • தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.
  • இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்திலும் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு வரதட்சிணை சாவு நடக்கிறது. பெண்கள் மீதான வன்முறை குற்றங்களாக பதிவாகியுள்ள 93,000 வழக்குகள் இன்னமும் விசாரணைக்கே வரவில்லை.

_____________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

காதலர் தினம் சிறப்புப் பரிசு : விநோதினியின் மரணம் !

17
வினோதினி
விநோதினி
அமில  வீச்சினால் உயிரிழந்த விநோதினி

காதலர் தினத்திற்க்காக ரோஜாப்பூ முதல் பரிசுப் பொருள் அங்காடி வரை காதலை பரிமாறிக் கொள்வதற்காக எண்ணிறந்த பொருட்கள் கடைவீதியினை நிரப்பியிருக்கின்றன. ஒற்றைத் தண்டுடன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்துடன் வரும் பெங்களூர் ரோஜாதான் காதலர்களின் ஏகோபித்த வரவேற்பாம். அமில வீச்சால் கண்ணை இழந்த விநோதினியை பெண் என்பதற்காக ஒரு மலருடன் ஒப்பிட்டு கவிஞர்கள் யாரேனும் கவிதைகள் எழுதியிருப்பார்களா தெரியவில்லை! எனினும் அந்த மலர் நேற்றோடு கருகிப் போனது.

அடித்தோ, விரட்டியோ, துன்புறுத்தியோ அடக்கியாள வேண்டியவள்தான் ஒரு பெண் என்பதை எண்ணிறந்த கதைகளின் மூலம் சொல்லிக் கொடுக்கும் திரைப்படங்கள் ஒருபுறம். அந்த திரைப்படங்களை வைத்தும், அந்தக் கதைகளின் மூலமாகவும் சமூகப் பிரச்சினைகளை செய்திகளாக்கித் தரும் பத்திரிகைள் அனைத்தும் ஒரே மாதிரியான சோகத்தில் விநோதினியின் மரணத்தை அறிவிக்கின்றன, கண்டிக்கவும் செய்கின்றன. சஹானா எனும் கேரளப் பெண்ணை ஊடகத் திமிரால் வன்புணர்ச்சி செய்த தினமலரும் கூட வெட்கமில்லாமல் விநோதினிக்காக வருந்துகிறது. அதை உண்மையென நம்பும் அப்பாவிகளும் வாசகர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

டெல்லி மாணவியின் மரணத்திற்கு பிறகு, வர்மா கமிஷன் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் அவசரச்சட்டத்திற்கு பிறகு அமிலத்தை வீசிய சுரேஷை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை எண்ணிறந்த முறையில் கோரப்படுகின்றது. விநோதியினை அழித்த சுரேஷை தண்டிப்பது கடினமல்ல. ஆனால் சுரேஷ் எனும் ஆணாதிக்க பன்றியினை வடிவமைத்த ஊடகக் குற்றவாளிகள் இங்கே நீதிபதிகளாக தீர்ப்பளிக்கும் கொடுமையினை என்ன செய்ய?

காதலர் தினக் கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நாட்டில்தான் விநோதினி எனும் 23 வயது பெண் ‘காதலின்’ பெயரால் கொல்லப்பட்டிருக்கிறாள், அதுவும் கொடூரமான சித்திரவதைக்குப் பிறகு. பரிசுகள், வாழ்த்துக்கள், சந்திப்புகள் என்பதாக காதலை நுகர்வு கலாச்சார விற்பனைக்குரிய சரக்காக மாற்றி விட்டு அதன் விளம்பரங்களில் கல்லா கட்டும் ஊடகங்கள் இங்கே காதல் என்ற பெயரில் கற்றுத் தருவது என்ன? பெண்ணடிமைத்தனத்தை போற்றும் விதமாக அழகு, உடைகள், அணிகலன்கள், பரிசுகள், வார்த்தைகள் எதற்கும் குறைவில்லை. காதலை எப்படி கவர்ச்சியாக தெரிவிப்பது, பரிமாறிக் கொள்வது என்பதை நீயா நானா அலசுகிறது.

ஆனால் சாதி, மத, ஆணாதிக்க அடக்குமுறைகளுக்குள் சிக்கியிருக்கும் காதலை எப்படி வெற்றி பெறவைப்பது என்பதை ஊடகங்களோ இல்லை திரையுலகமோ பேசத் துணியாது. கலப்புத் திருமணம் குறித்து விவாதம் நடத்தும் விஜய் டி.வி, எந்த சாதியையும் குறிப்பிட்டு பேச மறுக்கிறது. யாராவது தப்பித் தவறி சாதியைக் கூறினால் மியூட் செய்து மறைக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் விருந்தினர் கொங்கு வேளாள முன்னேற்றக் கழகத்தின் ஈசுவரன்.

கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது  போட்டியாளரான சிம்புவோ அனைவரும் தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் மானை வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர். அப்படித்தான் அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு. ஆனால் சுரேஷ் மட்டும்தான் குற்றவாளி என்றால் என்ன செய்வது?

விநோதினியின் மரணத்திற்கு ‘அய்யா’ ராமதாசும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். காதலர்களை வெட்டுவேன் என்று சபதம் புரிந்திருக்கும் காடுவெட்டி குருவும் கூட கண்டித்திருக்கக் கூடும். ஒரு ஆணும் பெண்ணும் சாதி மாறி காதலித்தால் அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து கொண்டு ஒரு ஆண் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்தால் அய்யாவின் அடிப்பொடிகள் வெட்டுவார்கள். மாறாக அந்தக் காதலை குறிப்பிட்ட பெண் மறுத்தால் சுரேஷ் போன்ற ஆண்கள் கொலை செய்வார்கள். கவனியுங்கள் இங்கே காதலை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை. அந்த உரிமையினை அமிலத்தாலும், அரிவாளாலும் மறுக்கும் சுரேசுக்கும் ராமதாசுக்கும் என்ன வேறுபாடு?

காதலர் தினக் கொண்டாட்டங்களை கடுமையாக எதிர்ப்பதில் சங்க பரிவாரங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய மதவாதிகளும் போட்டி போடுகின்றனர். ஆபாசம், வெளிநாட்டுக் கலாச்சாரம், என்று தமது ‘நியாயத்தை’ பேசுவதில் இருவரும் ஒன்றுபடுகின்றனர். அமெரிக்காவைக் காதலிக்கும் சவுதியையும், பாரத மாதாவை அமெரிக்காகாரனுக்கு நேர்ந்து விட்டதையும் ஆதரிக்கக் கூடிய இந்த மதவாதிகள்தான் சாமானியர்களின் காதலை சகித்துக் கொள்ள முடியாது என்கின்றனர். காதல் எனும் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகூட தமது மதங்களில் கிடையாது என்று ஆணையிடும் இவர்கள்தான் இந்து மற்றும் முசுலீம் மக்களின் பிரதிநிதிகள் என்றால் நமது மக்கள் எத்தனை பரிதாபத்திற்குரியவர்கள்?

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஒரு தோழரின் நண்பர் தேவர் சாதியைச் சார்ந்தவர். முதலியார் சாதியைச் சார்ந்த பெண்ணை காதலிக்கிறார். இருவரும் பசையான சம்பளம் வாங்குபவர்கள். ஐந்தாண்டு காதலுக்கு பிறகும் பெண் தரப்பில் ‘மேல்’ சாதி என்பதால் குடும்பத்தினர் மறுக்கிறார்கள். அந்த மறுப்பைத் தாண்டி போராடி வாழ்வதற்கு பெண் தயாராக இல்லை. அந்த இல்லையை இன்னும் பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி நியாயப்படுத்தி விட்டு அந்த ஆண் சொந்த சாதியில் வீட்டார் பார்த்த பெண்ணை மணந்து கொள்கிறார். எனில் இந்தக் கதையில் ‘காதல்’ என்பது என்ன என்று கேட்டால் நமது தோழரிடம் பதில் இல்லை.

மனித குலத்தின் மிகவும் அன்னியோன்னியமான உறவு என்று போற்றப்படும் காதலே இத்தனை தரமிழந்து காணப்படுகிறது என்றால் ஏனைய உறவுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஜனநாயகம், ஆண் – பெண் சமத்துவம், சாதி மத பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பது போன்றைவையெல்லாம் நமது இந்தியக் காதலில் பெருமளவு கிடையாது. இருப்பதெல்லாம் நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் சரக்குக் காதல்தான். இத்தகைய அபாயரகமான சமூக சூழலில்தான் சுரேஷ் போன்ற வெளிப்படையாகத் தெரியும் கொலைகாரர்களிடம் விநோதினி போன்ற பெண்கள் உயிரை இழக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக போராட்டங்கள் என்ன வகை தரத்தினைக் கொண்டிருக்கிறதோ அதுதான் காதலிலும் பிரதிபலிக்கும். சமூக அக்கறையில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் காதலை எந்த அளவுக்கு சமூக மதிப்பீடுகளின் பால் கொண்டு வருகிறோமோ அந்த அளவு இங்கே கண்ணியமான காதலை உருவாக்க முடியும். அது வரையிலும் விநோதினிகள் காதல் பலிகளாக தமது உயிர்களை துறக்க வேண்டியிருப்பது வெட்கக் கேடு. சமூக அக்கறையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.

ரஜத் குப்தா : திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!

17
ரஜத் குப்தா
ரஜத் குப்தா

ப்படி ஒரு நல்ல மனிதரை நான் நீதிமன்றத்தில் எதிர்கொண்டதேயில்லை” குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கும் ஒருவரைப் பார்த்து நீதிபதி சொன்ன வார்த்தைகள் இவை.

“இவர் குற்றம் செய்திருப்பாரென்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் சாட்சியங்களின் வலுவால் குற்றவாளி என்று உறுதி செய்கிறோம்” – நீதிமன்றத்தின் ஜூரிகள் உதிர்த்த வார்த்தைகள் இவை. அவர்களில் சிலருக்கு சொல்லும்போதே கண்களில் நீர் கோர்த்து விட்டது.

குற்றவாளியின் சார்பில் ஆஜராகி வழக்காடிய வழக்கறிஞரோ, “இது காப்பிய நாயகர்களின் வீழ்ச்சிக்கு நிகரானது” என்கிறார். மேலும், “இவரைச் சிறைக்கு அனுப்பாமல் ருவாண்டாவுக்கு சமூக சேவை செய்ய அனுப்புங்கள்” என்றும் மன்றாடுகிறார்.

இந்தக் காட்சிகள் நடப்பது அமெரிக்காவில் என்பதால், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனில் இருந்து மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் வரை குற்றவாளிக்குக் கருணை காட்ட வேண்டுமென நீதிமன்றத்துக்கு வேண்டுகொள் விடுவிக்கின்றனர்.

சரி, ‘குற்றவாளியின்’ கருத்து என்ன? அவர் இன்னமும் தான் செய்த காரியம் தவறானது என ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், “நடந்த விவகாரத்தில் என் நண்பர்களுக்கும், நெருக்கமான அமைப்புகளுக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நினைத்து வருந்துகிறேன்” என்று மட்டும் தெரிவிக்கிறார்.

கேட்பதற்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் திரைக்கதை போல் இருக்கிறதா? இல்லை நண்பர்களே, இவையனைத்தும் உண்மையில் நடந்தேறிய காட்சிகள் தான். நடந்தது இங்கேயல்ல – அமெரிக்காவில். கதையில் வரும் ‘குற்றவாளி’ கோடீஸ்வர அமெரிக்க இந்தியர் ரஜத் குப்தா.

ரஜத்தின் குற்றம் என்னவென்கிற விவரங்களுக்குள் செல்லும் முன், அவரைப் பற்றியும் அவரது வளர்ச்சி பற்றியும் முதலில் பார்த்து விடுவது அவசியம். ஏனெனில், அவருடைய வளர்ச்சி என்பதும் அவர் செய்ததாகச் சொல்லப்படும் ‘குற்றம்’ எனப்படுவதும் பிரித்துப் பார்க்கவியலாதபடிக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.

ரஜத் குப்தா தில்லி ஐ.ஐ.டியில் பொறியியலும், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மையும் பயின்றவர். 1973ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிர்வாக ஆலோசனை (Management Consulting) நிறுவனமான மெக்கின்சியில் சேர்கிறார். 1994ம் ஆண்டு அதன் நிர்வாக இயக்குநராக உயரும் ரஜத் குப்தா, 2003ம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் தொடர்கிறார். 2003க்குப் பிறகு மூத்த ஆலோசகராக மெக்கின்சியுடனான தொடர்பை பராமரித்துக் கொள்கிறார். பணி ஓய்வு பெற்ற பின்பு, 2006 முதல் 2010 வரை நிதி மூலதன சூதாடியான கோல்ட்மேன் சாக்ஸிலும், 2007 முதல் 2011 வரை நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பிராக்டர் – கேம்பிளிலும், 2008 முதல் 2011 வரை விமான சேவை நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸிலும் இயக்குநர் குழுவில் பணியாற்றுகிறார்.

ரஜத் குப்தா பணியாற்றிய நிறுவனங்கள் சாமானியப்பட்டவை அல்ல. புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள், தேசங்கடந்த தொழிற்கழங்கங்கள் அவை. பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கே நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் தான் மெக்கின்சி. அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் என்ரானில் இருந்து பெப்சி, வோடஃபோன் வரை உலகளவில் பிரபலமாக அறியப்பட்ட பல்வேறு பன்னாட்டு கம்பெனிகளின் செல்வாக்கான பதவிகளில் அமர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி, மெக்கின்சி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அமெரிக்காவின் நிதித்துறை, கருவூலத் துறை மற்றும் மத்திய ஃபெடரல் வங்கியின் தலைமைப் பதவிகளையும் அடைந்துள்ளனர்.

இவர்கள் தான் வால்வீதியின் அசைவுகளையும், உலக முதலாளித்துவ அமைப்பின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள். பல்வேறு நாடுகள் எடுக்க வேண்டிய முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பதும், அது தாமதமாகும் போது அந்நாடுகளைத் தர வரிசைப் பட்டியலில் கீழிறக்கி அச்சுறுத்துவதும் இந்நிறுவனங்கள் தாம். இன்றைய தேதியின் இந்தப் புவிப்பரப்பையே ஆட்டிப் படைக்கும் நிதிமூலதனத்தின் கருவறை வால்வீதி என்றால், அங்கே பூசாரிகளாய் நிற்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நிறுவனங்களில் இவையும் உண்டு.

ஒரு பக்கம் பெரும் கார்ப்பரேட்டுகளின் உயரிய பதவிகளை அனுபவித்த அதே நேரத்தில், பில் கேட்ஸூம், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் நடத்தும் சில அறக்கட்டளைகளிலும் ரஜத் குப்தா பதவி வகிக்கிறார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்படுத்திய உலக ஆலோசகர் குழுவிலும் 2012 வரை உறுப்பினராக இருக்கிறார். மேலும் மெக்கின்சியில் வெலை பார்த்த இவரது சீடரான அனில் குமாருடன் சேர்ந்து இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்ற பன்னாட்டு மேலாண்மை கல்லூரியை ஹைதராபாத்தில் ஆரம்பித்திருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் ரஜத் குப்தா இந்த முதலாளித்துவ பரமபதத்தில் அடைந்த இடம், அவருக்குக் கீழே உள்ள மற்ற அனைவரும் தமது கற்பனையிலும், கனவிலும் அடைய ஏங்கும் இடமாகும். அவர் உலக முதலாளித்துவத்தின் மணிமகுடத்தின் ஒளிவீசும் வைரக்கற்களில் ஒருவராக இருந்தார். இந்தப் பின்னணியில் வைத்துத் தான் ரஜத் குப்தா மேல் சுமத்தப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட குற்றங்களைப் பார்க்க வேண்டும்.

ரஜத் குப்தா செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் – உள்வட்ட வியாபார மோசடி (insider trading). 2008 காலகட்டத்தில் அமெரிக்க நிதிமூலதன வங்கிகள் ஒவ்வொன்றாக பொருளாதார நெருக்கடியெனும் புதைகுழியில் மூழ்கிக் கொண்டிருந்தன. அப்போது கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி கிட்டத்தட்ட முற்றிலுமாக நொறுங்கிப் போகும் நிலையிலிருந்த சமயத்தில்தான் வாரன் பப்பெட் என்ற உலக கோடீசுவரன் அதில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முன்வந்திருந்தார்.

அந்த சமயத்தில் கோல்ட்மேனின் சேர்மன் போர்டில் அங்கம் வகித்த ரஜத், இந்த முக்கியமான உள்தகவலை ராஜரத்தினம் என்பவருக்கு கடத்துகிறார். அதே நாளில் பங்குவர்த்தகம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் நிலையில் ரஜத் அளித்த உள்தகவல்களின் அடிப்படையில் 43 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ராஜரத்தினம், அதன் மூலம் 1 மில்லியன் டாலர்கள் லாபமாக சம்பாதிக்கிறார்.

ஏறக்குறைய அதே காலகட்டத்தில் ப்ராக்டர் – கேம்பிள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்த ரஜத், அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதன் விவரங்களை ராஜரத்தினத்துக்கு அளித்துள்ளார். மேலும், அந்நிறுவனம் கையகப்படுத்த உத்தேசித்துள்ள நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும் ராஜரத்தினத்திற்கு அளித்து அந்நிறுவனங்களின் பங்குகளிலோ ப்ராக்டர் – கேம்பிள் நிறுவன பங்குகளிலோ முதலீடு செய்து லாபம் பெற ராஜரத்தினத்துக்கு உதவி புரிந்துள்ளார்.

மேலும், ரஜத் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்த பிற நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்த ஒவ்வொரு சமயமும் அதில் விவாதிக்கப்பட்டவைகள் பற்றி ராஜரத்தினத்துக்கு தொலைபேசியில் தகவல் அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

’பங்குச்சந்தை சூதாட்டம் நியாயமாக செயல்பட வேண்டுமானால் எந்த ஒரு தனிநபரும் பொதுவில் அனைவருக்கும் கிடைக்காத நிறுவனங்களைப் பற்றிய உள் தகவல்களை வைத்துக்கொண்டு பங்குகளை வாங்கி விற்கக் கூடாது’ என்று ஒரு விதி உள்ளது. குறிப்பாக, பில்கேட்ஸ், டாடா, அம்பானி போன்ற முதலாளிகள் மற்றும் அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு, தமது கம்பெனி லாபமாக நடக்கிறதா, புதிய தொழில்கள் மூலம் எக்கச்சக்கமாக லாபம் ஈட்டும் வாய்ப்பு இருக்கிறதா என்பன போன்ற விவரங்கள் தெரிந்திருக்கும். இந்த விவரங்கள் தெரிந்ததன் அடிப்படையில் அவர்கள் தமது சொந்த கம்பெனியின் பங்குகளில் சூதாடக் கூடாது, அல்லது இந்த ரகசியங்களைத் தமக்கு வேண்டியவர்களுக்கு கசிய விட்டு, அவர்கள் மூலம் பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடையக் கூடாது என்பது விதி. இதை மீறுவது குற்றம்.

நடுத்தர வர்க்க மக்கள் தமது சேமிப்புகளை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம், எந்தக் குதிரை (கம்பெனி) ஜெயிக்கும், எந்தக் குதிரை தோற்கும் என்று ஊகித்து அறியும் திறமை கொண்டவர்கள் இதில் பெரும் லாபம் ஈட்டலாம் என்பதுதான் பங்குச்சந்தை சூதாட்டத்தின் அடிப்படை விதி.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர்மட்டப் பொறுப்புகளிலோ அல்லது அதன் உள் விவகாரங்களைத் அறிந்துகொள்ளும் இடத்திலோ இருப்பவர்கள் இவ்விதியை மீறுவது சட்டவிரோதம். அமெரிக்காவில் இது தண்டனைக்குரிய குற்றம்.

ரஜத் குப்தா 2008ம் ஆண்டில் மூன்று தருணங்களில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் பற்றிய உள் விவரங்களை வேலியிடப்பட்ட நிதிய (Hedge Funds) சூதாடி ராஜரத்தினத்தின் காலியோன் நிறுவனத்திற்கு கடத்தியதன் மூலம் அந்நிறுவனம் $23 மில்லியன் லாபம் சம்பாதிக்க உதவி செய்துள்ளார். மேலும் ப்ராக்டர் – கேம்பிள் நிறுவனம் பற்றிய உள் விபரங்களையும் அவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் பகிர்ந்து கொண்டு பங்குச்சந்தை சூதாட்டத்தில் அவர் கொழுத்த லாபத்தை அறுவடை செய்ய உதவியுள்ளார்.

இந்த வழக்கில் நடந்த விசாரணைகளின் இறுதியில் ரஜத் குப்தா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு ஐந்து மில்லியன் டாலர் அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வாசிப்பதற்கு சற்று முன்பாக நடந்த சென்டிமெண்ட் காட்சிகளைத் தான் கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோம். ரஜத் குப்தாவின் வீழ்ச்சிக்காக நீதிபதியும், ஜூரர்களும் மாத்திரம் இழவு கொண்டாடவில்லை. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே ‘ரஜத்தின் நண்பர்கள்’ எனும் பெயரில் ஒரு இணையதளம் துவங்கப்படுகிறது.

இதில் முகேஷ் அம்பானியிலிருந்து ஆதி கோத்ரேஜ் வரையிலான இந்திய தரகு முதலாளிகளும், பல்வேறு பன்னாட்டு முதலாளிகளும் ரஜத் குப்தாவுக்கு நேர்ந்து விட்ட சங்கடத்துக்காக கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களில் பலரும் செவாலியே சிவாஜி கணேசனே பொறாமை கொள்ளும் அளவுக்கு “நம்ப முடியவில்லை.. வில்லை.. வில்லை…” என்று நீட்டி முழக்குகிறார்கள். ரஜத் குப்தாவின் தர்ம சிந்தனைகளை நினைவு கூர்ந்து மெய்சிலிர்க்கிறார்கள். இவர்களே இப்படியென்றால், முதலாளித்துவ ஊடகங்கள் வடித்த கண்ணீரின் அளவு பற்றி தனியே சொல்ல தேவையில்லை.

ரஜத் குப்தாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை இவர்களை அசைத்து விட்டதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனெனில், இவர்களனைவருக்கும் ரஜத் குப்தா ஒரு முன்மாதிரி. ஏனெனில், இந்தியாவில் நடக்கும் உள்வட்ட வியாபார மோசடிகளை கடந்த அக்டோபரில் விசாரித்த செபி, ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இதே போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக கண்டுபிடித்து தலா 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அந்த வகையில் ரஜத் குப்தாவுக்காக அம்பானியின் தசையாடுவது புரிந்துகொள்ளத் தக்கதே.

இது ஒருபுறமிருக்க, மெக்கின்சியில் இருக்கும்போது நாள்தோறும் தான் அலுவல் ரீதியாக செய்த அதே வேலையை தனிப்பட்ட முறையில் செய்ததற்காக தான் கைது செய்யப்படுவோம் என்று ரஜத் எதிர்பார்க்கவில்லை. அல்லது அப்படி நடிக்கிறார்.

ஏதோ நடக்கவே வாய்ப்பற்ற ஒன்று நடந்து விட்டதைப் போல் இவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் ஆபாசமான மிகை நடிப்பாகப் பல்லிளிக்கின்றன. ஏனெனில், ரஜத் எந்த ஏணியில் ஏறி சிகரத்தைத் தொட்டாரோ அதே ஏணியின் பல்வேறு படிநிலைகளில் தான் இவர்களனைவருமே ஏறிக் கொண்டுள்ளனர்.

முதலாளித்துவம் பரமாத்மா என்றால் அதன் சேவகர்கள் அனைவரும் ஜீவாத்மாக்கள். இவர்களனைவரும் பிரிக்கவொண்ணாத படிக்கு ஒன்று கலக்கும் ஆத்மசாகரப் பெருவெளி தான் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரமும், அதன் இயக்கு சக்தியாக இருக்கும் நிதிமூலதனமும்.

அந்த நிதிமூலதனத்தின் கருவறையில் ரஜத் குப்தா ஒரு தலைமைப் பூசாரி; ‘துண்ணூறு’ வாங்க வந்த அம்பானிகள் அவர் ‘தேவநாத’ கோலத்தில் நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். ஆனால் அந்த அதிர்ச்சியில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை; ஏனெனில், ரஜத் சிறிய அளவில் தனிப்பட்ட முறையில் செய்ததைத் தான் அவர் பணியாற்றிய நிறுவனங்களும், வால்வீதியின் பிற நிறுவனங்களும் தங்கள் நடைமுறைகளாகக் கொண்டுள்ளன என்பதை இவர்கள் அறியாதவர்களல்ல.

சந்தை பங்குஎந்தவிதமான உற்பத்தியிலும் ஈடுபடாத கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிதிமூலதன வங்கிகள், உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் அதில் முதலீடு செய்கின்றன. பின்னர் அவற்றின் மதிப்புகளை வெறும் ஊகங்களின் அடிப்படையிலேயே அதிகரிக்கச் செய்கின்றன. இவ்வாறான ஊகங்களை முதலீட்டு வங்கிகளின் நிர்வாக ஆலோசனைப் பிரிவுகளைக் கொண்டே சந்தையில் உற்பத்தி செய்து உலவ விடுகின்றன. இதன் மூலம் பங்குச்சந்தையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மதிப்பு உயரும் போது, மொத்தமாக கையில் உள்ள பங்குகளை விற்று லாபம் ஈட்டுவது நிதிமூலதன வங்கிகளின் வழக்கமான நடைமுறை.

மேலும், வீட்டுக்கடன் பத்திரங்களின் மேல் சூதாட்டம், வேலியிடப்பட்ட நிதியத்தின் மேலான சூதாட்டம், உணவுப் பொருட்களின் மேல் முன்பேர சூதாட்ட வர்த்தகம், காப்பீட்டின் மேல் சூதாட்டம், ஓய்வூதியத்தை வைத்து சூதாட்டம், நிலத்தின் மேல் சூதாட்டம் என்று கண்ணில் பட்ட சகலத்தின் மேலும் சூதாடி, பொருளாதாரத்திலிருந்து பொருளுற்பத்தியையே அந்நியமாக்கி அதனிடத்தில் சூதாட்டத்தை அமர வைத்த நிறுவனங்களின் பதவிப் படிநிலைகளில் தான் ரஜத் குப்தா தாவித் தாவி ஏறியுள்ளார். அவ்வாறு ஏறி அவற்றின் உச்சபட்ச பொறுப்புகளில் அமர்ந்தது தான் முதலாளித்துவ ஊடகங்கள் விதந்தோதும் அவரது ‘வளர்ச்சி’. தன்னை ஏற்றி விட்ட ஏணிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்பது தான் அவர் செய்த குற்றம்.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவது ரஜத் குப்தாவின் இயல்புக்கே மீறிய ஒன்று என ‘ரஜத்தின் நண்பர்கள்’ இணையதளத்தில் பலரும் ஆச்சரியத்தோடு கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், ரஜத் மோசடி செய்ததல்ல – செய்யாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம். வால்வீதியின் சூதாடிகள் தாமே வகுத்துக் கொண்ட சூதாட்ட விதிகளையும் தங்களுக்கு வேண்டிய மட்டும் வளைத்துக் கொண்டனர் – போலிப் பத்திரங்கள் தயாரித்து சக சூதாடிகளையே கழுத்தறுத்தனர். எந்த முகாந்திரமும் இன்றி அளிக்கப்பட்ட வீட்டுக்கடன் பத்திரங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்து, அதன் மேல் சூதாடி, ஒட்டுமொத்த முதலாளித்துவ கட்டமைப்பையே நெருக்கடிக்கு உள்ளாக்கினர். இந்தக் கழுத்தறுப்புப் போட்டியில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டிருந்தவர் தான் ரஜத் குப்தா.

டாட் காம் குமிழி வெடித்து ஒவ்வொரு நிறுவனங்களாக விழுந்து கொண்டிருந்த தொன்னூறுகளின் இறுதியில் மெக்கின்சியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் ரஜத் குப்தா ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். அதாவது, நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கான கட்டணமாக அவற்றின் பங்குகளைப் பெறும் முறையை அறிமுகம் செய்கிறார். இப்படிச் செத்த மாட்டிடம் திறமையாக பால் கறந்த ‘தகுதியின்’ அடிப்படையிலேயே அவரது வளர்ச்சி அமைந்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும், அமெரிக்க மக்களையும், தனது சொந்த ஊழியர்களையுமே ஏமாற்றி, அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஏப்பம் விட்ட என்ரான் நிறுவன முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளைக்கு ரூட் போட்டுக் கொடுத்து, நிர்வாக ஆலோசனைகள் வழங்கிய மெக்கின்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில், இந்த அயோக்கியத்தனம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றியவர்தான் ரஜத் குப்தா.

வால்வீதி சூதாட்டங்கள் இரண்டாயிரங்களின் இறுதியில் ஓரு மாபெரும் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடியை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து வீடு, வேலை, சேமிப்பு, ஓய்வூதியம், காப்பீடு என்று சகலத்தையும் இழந்த அமெரிக்கர்கள் தெருவிலிறங்கிப் போராடி வருகிறார்கள். அமெரிக்காவையும் தாண்டி, ஐரோப்பிய கண்டமெங்கும் போராட்டத் தீயினால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளிலோ இந்த சூதாட்டப் பொருளாதாரம், ஊழல்களாகவும், இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முயற்சிகளாகவும் அதைத் தாங்கி வரும் அரச பயங்கரவாதமாகவும் வெளிப்பட்டு, மக்களைத் தெருவுக்கு இழுத்து வந்துள்ளது. வாழ்விழந்த மக்களைத் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுத்து தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாய் அவர்களை வீசியெறிந்துள்ளது.

இந்நிறுவனங்கள் எடுத்த ஒவ்வொரு சின்னச் சின்ன முடிவுகளும், தீர்மானங்களும் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சொல்லவொண்ணாக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த முடிவுகளை ஆத்மார்த்தமாக எடுக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவரின் அறம் என்னவாயிருக்கும்?

இவர் அலுவலகத்தில் செய்யும் ஒவ்வொரு ‘சட்டப்பூர்வமான’ செயல்பாடும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையைப் பறிக்கும் என்பதை அறிந்தே அதைத் திறமையாகச் செய்துள்ளார் என்றால், அவரது மனச்சாட்சி அவரைக் குத்திக் கிழித்திருக்காதா? இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மையாய் இருக்க முடியும். அதைத் தான் அவர் தண்டனை பெற்ற பின் நீதிமன்றத்துக்கு வெளியே உதிர்த்த வார்த்தைகளும் மெய்ப்பிக்கின்றன.

ரஜத்திடம் அமெரிக்க முதலாளித்துவம் எதிர்பார்த்து ஏமாந்த நேர்மை என்பது, அம்பானி போன்றோரிடம் அண்ணா ஹசாரேக்கள் எதிர்பார்க்கும் அதே நேர்மை தான். விபச்சாரத் தரகன் வள்ளலாராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று பசப்புகிறார்கள்.

ரஜத் குப்தா புறங்கையை நக்கி விட்ட நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முதலாளித்துவத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பொருட்டு, ‘இந்த ஒரு கனி மட்டுமே கெட்ட கனி; எனவே பொறுமையாக நல்ல கனியைத் தேடுவீராக’ என்று முதலாளித்துவம் உலக மக்களுக்குத் தனது சுவிசேஷத்தை அருளுகிறது.

சூதாட்ட சந்தை விதிகள் எனும் நஞ்சை அருந்தி வளரும் நச்சு மரங்கள் நல்ல கனிகளையே தரும் என்று நம்ப வைக்கும் முயற்சி தான் இந்த வழக்கும், தண்டனைகளும், அதைத் தொடர்ந்து நடக்கும் சென்டிமெண்ட் நாடகங்களும். குற்றவாளிக் கூண்டில் முதலாளித்துவம் நிறுத்தப்படாமல் தவிர்ப்ப்பதற்காக, முதலாளித்துவத்தை குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, தமது நாயகர்கள் சிலரைக் கூடக் காவு கொடுப்பதற்கு முதலாளித்துவம் எப்போதும் தயாராகவே இருக்கிறது.

உள்வட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையில் வால் வீதி முதலீட்டு நிறுவனங்களுக்குள்ளும், புனிதமான அமெரிக்க கார்ப்பரேட் இயக்குநர் குழுக்களுக்குள்ளும் தனது விசாரணை வலையை வீசுகிறது, நீதிமன்றம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட வர்த்தகர்களும், கார்ப்பரேட் மேலாளர்களும், வங்கி அதிகாரிகளும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுகின்றனர். அந்த வரிசையில் மாட்டிக் கொண்ட திமிங்கலம் தான் ரஜத் குப்தா.

‘உலகத்துக்கும், தனி மனிதர்களுக்கும் அர்ப்பணிப்பு மிகுந்த இது போன்ற ஒரு பிரதிவாதியை இந்த நீதிமன்றம் சந்தித்ததில்லை என்று சொன்னால் அது மிகையாகாது‘ என்றார் நீதிபதி ஜெட் ராக்கோப். ‘அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் இந்த உலகின் வரலாறு நல்ல மனிதர்கள் செய்த கெட்ட செயல்களின் வரலாற்றால் நிரம்பியிருக்கிறது’ என்று வருத்தப்பட்டுக் கொண்டே தண்டனைத் தீர்ப்பை வாசிக்கிறார். வாழ்ந்து கெட்ட பண்ணையாராக ரஜத் குப்தா நீதிமன்றத்திலிருந்து வெளிப்படுகிறார்; அவரது துயரத்தை தங்கள் துயரமாக வரித்துக் கொள்ளும் முதலாளித்துவ ஊடகங்கள் அதை மக்களின் துயரமாகவும் மாற்றும் விதமாக சோக ரசம் பொங்கும் கட்டுரைகளை எழுதிக் குவிக்கின்றன.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ரஜத் குப்தாவின் பெயரை தனது பதிவுகளிலிருந்தே நீக்கி விட்டது மெக்கின்சி. அவர்களைப் பொறுத்த வரை, ரஜத் குப்தா அங்கு வேலை செய்யவே இல்லை, அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே இல்லை.

“ரஜத் குப்தாவுடன் எங்கள் நிறுவனத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை‘ என்கிறது மெக்கின்சி. ’இதற்கு மேல் அவருடன் எந்த பரிமாற்றங்களும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று மெக்கின்சியின் உலகளாவிய வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ’எங்கள் புனிதத் தன்மை இப்படி நிரூபிக்கப்பட்டு விட்ட பிறகு, இனிமேல் எங்களை நம்பி வழக்கமான செயல்பாடுகளைத் தொடரலாம்’ என்று அவர்களை நம்பச் சொல்கிறார்கள்.

ரஜத் குப்தாவின் குற்றத்திற்கு தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது; முதலாளித்துவத்திற்கு எதிரான வழக்கு மக்கள் மன்றத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

_________________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
_________________________________________________________________________________________________________________

கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

12

கம்பீரம்

“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.

நாங்கள் மொத்தம் பதினைந்து பேர். நான் உட்பட மற்றவர்களும் அப்போதுதான் பட்டயப் படிப்பை முடித்திருந்தோம். சிலருக்கு இன்னும் மீசை கூட அரும்பியிருக்கவில்லை. எனக்கு இடதுபுறமாக நின்று கொண்டிருந்த சபாபதி என்பவனின் வாய் லேசாக முணுமுணுத்தது.

“குமார்…” நடுங்கும் காற்றுக் குரலில் இரகசியமாய் அழைத்தான்.

“ஷ்ஷ்ஷ்… சும்மா இருங்க. எனக்கும் கெதக்குன்னுதான் இருக்கு”. ஆம். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அச்சமாகத்தானிருந்தது.

எங்கள் கிசுகிசுப்புகள் கங்காதரைக் கலைத்தன. சட்டென்று விரைப்பாய்த் திரும்பினார். ஒரு மயான அமைதி அந்த அறையைச் சட்டென போர்த்திக் கொண்டது. அது ஒரு பயிற்சி வகுப்பறை. பெங்களூருவில் இருந்த பன்னாட்டு கணினி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. நாங்கள் படிப்பை முடித்து விட்டு கேம்பஸ் தேர்வில் தேர்வாகி பயிற்சிக்காக வந்திருந்தோம். அன்றுதான் பயிற்சியின் முதல் நாள்.

அது RISC சர்வர் வகைக் கணினிகளைத் தயாரிக்கும் நிறுவனம். சர்வர் எனப்படுவது பல நூறு கணினிகள் சேர்ந்தால் கிடைக்கும் ஆற்றலை ஒரே பெரிய கணினிக்குள் அடக்கியதைப் போன்றது. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சிக்கலானவை என்றும், புரிந்துகொள்வது சிரமம் என்றும் எங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தது. பயிற்சியாளர் வரும் முன் அதைப் பற்றி எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போதுதான் திடீரென அந்த அறைக்குள் இராணுவம் ஊடுருவியிருந்தது.

கங்காதர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அட்டேன்ஷனில் நான் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி நகரத் துவங்கினார். எனது தொடைகள் எடை குறைந்து போல லேசானது. முழங்காலுக்குக் கீழே பஞ்சு போல் உணர்ந்தேன். தொண்டைக்குள் கசந்தது. இதயத்துடிப்பு எகிறியது. ‘என்னாங்கடா இது! பேசினதெல்லாம் ஒரு குத்தமாடா’ மனதிற்குள் தாறுமாறான சிந்தனைகள் துள்ளிக் குதித்தன.

மொத்தம் மூன்று வரிசைகளாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நடுவில் இருந்த வரிசையில் இரண்டாவதாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். மிகச்சரியாக என்னை நோக்கி வந்த கங்காதர், கருவிழிகளை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். எனக்கு நேர் பின்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வடிவேலுவைப் போல் உணர்ந்தேன்.

சற்று நேரத்திலேயே பயிற்சியாளர் ராகேஷ் வந்தார். முதலில் அறிமுகப் படலம். இராணுவத்தையும் சேர்த்து மொத்தம் பதினேழு பேர். இராணுவம் தன்னை முழுமையாக அறிமுகம் செய்து முடித்த போதுதான் எங்களுக்கு விசயமே புரிந்தது. இவர்கள் இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று.

கங்காதர் சவுத்ரி என்று அறிமுகம் செய்து கொண்டவர், இராணுவத்தின் ஏதோவொரு படைப்பிரிவில் கீழ்நிலையில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, இப்போது காப்டனாகி இருக்கிறார். நாற்பதுகளின் இறுதியில் அல்லது ஐம்பதுகளின் துவக்கத்தில் இருந்தார். அந்த நிறுவனம் இராணுவத்துக்கு கணினிகளை விற்கும்போது அதோடு சேர்த்து அதை எப்படி இயக்குவது எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றிய பயிற்சிக்கும் இரண்டு சீட்டுகளை இலவசமாய் கொடுத்து விடும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக கங்காதரும் அவரது உதவியாளர் நிதின் ஷர்மா என்பவரும் தேர்வாகியிருந்தனர். இதற்காகவே டெஹ்ராடூனில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர்.

அந்தப் பயிற்சி பத்து நாட்களுக்கு நடந்தது. அந்த நாட்களில் நாங்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டதோடு, இராணுத்தினர் பற்றியும் கொஞ்சம் போல் அறிந்து கொண்டோம் – உபயம் கங்காதர். அவர் எங்களிடம் இராணுவம் என்பதைப் பற்றிய உயர்வான பிம்பம் ஒன்றை உருவாக்க நிறைய மெனக்கெட்டார். ஓசிச் சோறின் விளைவாகவோ, ஓசிச் ‘சரக்கின்’ காரணமாகவோ அவர் பருத்த வயிற்றைப் பெற்றிருந்தார்.

ஆனால், தானொரு மிடுக்கான அல்லது விரைப்பான பேர்வழி என்பதை உலகுக்கு உணர்த்த கஷ்டப்பட்டு அடிவயிறை எக்கிப் பிடித்துக் கொள்வார். இதன் விளைவாய் இடுப்பு கொஞ்சம் போல் முன்னே இழுத்துப் பிடித்தது போல் நிற்கும். இந்தக் கஷ்டத்தோடு மார்புக்கூட்டை தூக்கலாக வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனை சித்திரவதைகளுக்கிடையே சிரமமின்றி சுவாசிப்பதைப் போல் நடிக்கவும் வேண்டும். கங்காதர் திறமைசாலிதான்… என்றாலும் மூன்றாவது நாளே கவனக்குறைவான ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பெரும் தொந்தியர் என்பதை சபாபதி கண்டுபிடித்து, எல்லோருக்கும் ரகசியமாய்ச் சொல்லி விட்டான்.

அவர் சாதாரணமாக நடக்கும்போது கூட கால் மூட்டு மடங்காமல் அட்டேன்ஷனில்தான் நடந்தார். அதேபோல் பயிற்சி நடந்த நாட்களில் அவர் எப்போதும் அறையின் குறுக்குவாக்கில் நடந்ததே இல்லை; நுழைவாயிலில் இருந்து நூல் பிடித்தது போல் நேராக பத்து தப்படிகள், அப்புறம் மின்னல் போல ஒரு ‘ரைட்டர்ன்’; மீண்டும் நூல் பிடித்தாற் போல் பத்து தப்படிகள் நடை; ஒரு ‘அபவுட்டர்ன்’; அப்புறம் இரண்டு தப்படிகள் பக்கவாட்டில் நகர்ந்து நாற்காலியில் அமர்வார்.

உட்கார்ந்த பின் அவரது முதுகில் மட்டக்கோலை வைத்துப் பார்த்தால் முதுகெலும்பு நறுக்கென்று கச்சிதமாக நேர்கோட்டில் இருக்கும். பக்கவாட்டில் எதையாவது அல்லது யாரையாவது பார்க்க வேண்டுமென்றால் கூட ஸ்கேல் வைத்து அளந்தது போலத்தான் தலையைத் திருப்புவார்.

கங்காதர் நிறைய சந்தேகப்படுவார். யாரையும், எதையும் நம்ப மாட்டார். ‘இன்றைக்கு செவ்வாய்க் கிழமை’ என்று அவரிடம் யாராவது சொல்லி விட்டால் கூட அவராக ஒரு முறைக்கு இரண்டு முறை நாள்காட்டியைப் பார்த்து, சரிபார்த்து விட்டுதான் ‘அப்படியா! சரிதான்’ என்று ஒத்துக்கொள்வார். அவ்வளவு முன்னெச்சரிக்கை. ராணுவம் என்றால் சந்தேகப்பட வேண்டும்; நாட்டையே காப்பாற்றுவது என்றால் சும்மாவா என்பதுதான் அதிலிருந்த செய்தி.

இராணுவம் பற்றி எங்களுக்கு உருவான சித்திரம் எந்த வகையானது என்று அன்றைய நிலையில் எங்களால் சரியாக கணிக்க முடியவில்லை. ஒரு வேளை அது கேலிச்சித்திரமாக இருக்குமோ என்று கங்காதரே எங்களை சந்தேகப்பட வைத்தார். அதற்கு அவரது உடல் மொழி மட்டும் காரணமல்ல.

தொழில்நுட்பத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதைத் தீர்த்துக்கொள்ள அவர் கேட்கும் கேள்விகளும் விநோதமானவை. உதாரணமாக, “மிஸ்டர் ட்ரைனர், உங்களது இந்த கணினியை நேர்மட்டமாகத்தான் நிறுவ வேண்டுமா? கிடைமட்டமாக நிறுவினால் வேலை செய்யாதா?” அல்லது, “மிஸ்டர் ராகேஷ், இந்தக் கணினி வேலை செய்து கொண்டிருக்கும் போது அதன் எலக்ட்ரிகல் வொயரை வெடுக்கென்று பிடித்து இழுத்தால் என்னவாகும்?”

‘கேள்விகள்’ இந்த ரகத்தில் படுபயங்கரமான மொக்கைகளாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு முறை கேள்விகளைக் கேட்கும்போதும் கையிலிருக்கும் கோப்பு ஒன்றிலிருந்து எதையோ சரிபார்த்துக் கொள்வார். அந்தக் கோப்பை அவர் பயிற்சி நடந்த பத்து நாட்களும் இராணுவ ரகசியம் போல் பாதுகாத்து வந்தார். பயிற்சி இடைவேளைகளில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதோ அல்லது யாரோடாவது கைகுலுக்க வேண்டுமென்றாலோ கூட அந்தக் கோப்பை பத்திரமாக கக்கத்தில் அதக்கிக் கொள்வார். யாரும் அதைப் பிரித்துப் பார்த்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இராணுவமும் ரகசியமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நாங்கள் நம்பினோம்.

கங்காதரின் மேலதிகாரிகள் தினசரி ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்து அனுப்பியிருப்பார்களோ என்று சபாபதி சந்தேகப்பட்டான். பயிற்சி நடந்த பத்து நாட்களிலும் இதே பாணியில் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்தார். பயிற்சிக்கு வந்த மற்றவர்களோடு சேர்ந்து நாங்கள் உதடு பிரியாமல் சிரித்துக் கொள்வோம். ஆனால், பயிற்சியாளர் ராகேஷ் சிரிக்கவில்லை. கங்காதரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார்.

எதாவது எடக்கு மடக்காகப் பதில் சொல்லி, அதனால் கங்காதர் ஆத்திரமடைந்து, அதனால் அவரது மேலதிகாரிகள் அதிருப்தியடைந்து, அதனால் அடுத்தமுறை ஆர்டர் கிடைக்காமல் போனால்? அந்த நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் இராணுவம் ஒரு பொன் முட்டையிடும் வாத்து. இதைக் கொன்று விட்டால் இன்னொரு வாத்துக்கு எங்கே போவார்கள்? எனவே ராகேஷுக்கு தெளிவான உத்திரவுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று இஞ்சுகள் அதிக உயரம் கொண்ட கங்காதரின் ஈகோவை எந்த சேதாரமும் இல்லாமல் பவுனைப் போல் பாதுகாத்து, பத்திரமாய் முகாமுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் ராகேஷ் தெளிவாக இருந்தார்.

கங்காதர் ஒவ்வொரு முறை கேள்வி கேட்கும் போதும் விரைப்பாக எழுந்து நிற்பார். கங்காதர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிதின்ஷர்மாவும் எழுந்து கொள்வார்; அவர் உட்காரும் வரை உட்கார மாட்டார். அதிகாரியல்லவா? அவர் நிற்க, இவர் அமர…. அதெல்லாம் நிதினின் கற்பனையிலேயே இல்லை.

கங்காதர் தினசரி இரண்டு முறை நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்வார். காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளின் போது கங்காதரால் சொல்லப்படும் ‘ஜோக்குகள்’ அவரது கேள்விகளை விடப் படுபயங்கர மொக்கைகளாக இருக்கும். அந்த ஜோக்குகள் அவருக்கு அவரது மேலதிகாரிகளால் சொல்லப்பட்டவை. அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி, அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி என்று இது பின்னோக்கி நீண்டுகொண்டே போய் ராபர்ட் க்ளைவின் காலத்தைத் தொடும் அளவுக்கு அரதப்பழசான ஜோக்குகள்.

இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க வேண்டுமென்பதுதான் கங்காதரின் எதிர்பார்ப்பு. இந்த இராணுவ சர்வாதிகாரத்துக்கு ராகேஷையும், நிதினையும் தவிர மற்றவர்கள் யாரும் உட்படவில்லை. சிரிப்பதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென்று கங்காதர் எதிர்பார்த்தார். சுமாரான நகைச்சுவை என்றால் மூன்று முறை “ஹஹ்ஹஹ்ஹா” சொல்ல வேண்டும்; சுமாருக்கு மேல் என்றால் நான்கு முறை சொல்ல வேண்டும்.

இப்படிச் ‘சிரிப்பதை’ நிதின் அளவுக்கு ராகேஷால் நேர்த்தியாகச் செய்ய முடியவில்லை. என்னயிருந்தாலும் இராணுவப் பயிற்சியல்லவா? பயிற்சிக்கு வந்த மற்றவர்கள் கங்காதரின் இந்த எதிர்பார்ப்பைக் கூட மிகுந்த சிரமத்துக்கிடையே சகித்துக் கொண்டார்கள். அவருக்கிருந்த இன்னொரு எதிர்பார்ப்பைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அதாவது, அவர் தன்னை அனைத்தும் அறிந்த மேதாவி என்று கருதிக் கொண்டார். வானத்தின் கீழ் பூமிக்கு மேல் இருந்த சகலத்தைப் பற்றியும் அவருக்கென்றே பிரத்யேகமாக ஏதாவதொரு ‘கருத்து’ இருக்கும். சில சமயம் வானத்தைக் கடந்தும் பூமியின் ஆழத்திலும் இருப்பனவற்றைப் பற்றிக் கூட ‘கருத்து’ சொல்வார். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். நிதின் அவரது கீழ்நிலை அதிகாரி என்பதால் வேறு வழியில்லை; ராகேஷ் அனுபவசாலி என்பதால் சமாளித்துக் கொண்டார்.

ஆனால் நாங்களோ அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவர்கள். முழுப் பொய்யையும், முழு உண்மையையும் எதிர்கொள்வது எளிது. பாதி உண்மை – பாதி பொய் என்றால் கொஞ்சம் சிரமம். ஆனால் முழுப் பொய்யை உண்மை என்று ஏற்றுக்கொள்வது போல் நடிக்க வேண்டுமென்றால்? நாங்கள் சொல்லவொண்ணா கொடுமைகளுக்குள்ளானோம்.

ஒரு வழியாக அந்த பத்து நாட்களும் ஒரு முடிவுக்கு வந்தது. பத்தாவது நாளில்தான் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பதை நாங்கள் நேரடியாகப் புரிந்து கொண்டோம். அதாவது, கங்காதரை பயிற்சிக்காக தேர்வு செய்து அனுப்பிய அவரது மேலதிகாரிகள், அவரிடம் தினமும் பயிற்சியில் கலந்துகொண்ட மற்றவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பயிற்சிக்காக என்று வந்துவிட்டு ஒழுங்காக அதில் கலந்து கொள்ளாமல் மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றி விடுவார்களோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். இந்த ராணுவத்தினர் யாரையும் நம்புவதேயில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கங்காதர் இந்த புகைப்பட சமாச்சாரத்தை ஒன்பது நாட்களாக மறந்து விட்டார் என்பது பத்தாம் நாளில் மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று மூளையைப் போட்டு கசக்கி, கடைசியில் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.

அதாவது, கங்காதரும், நிதினும் இராணுவச் சீருடை அணிந்தபடி எங்களோடு பத்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாங்களெல்லாம் வரிசை மாறி நிற்க வேண்டும். அதோடு எங்கள் தோற்றத்திலும் எதாவது ஒரு மாற்றம் செய்துகொள்ள வேண்டும். சட்டையை இன் செய்திருந்தால் எடுத்து விட வேண்டும். தங்களுக்குள் சட்டைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தலைமுடியை மாற்றி வகிடெடுத்து சீவிக்கொள்ள வேண்டும். இப்படி சில ‘மரு’ வேஷங்கள் போட்டு சமாளிக்க வேண்டும். வேறு வழியின்றி இந்திய இராணுவத்துக்காக இந்தத் தியாகத்தையும் செய்தோம்.

இந்த புகைப்படக் கூத்தோடு பயிற்சி ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் ராணுவம் பற்றி என்னில் உருவாகி வந்த மனச்சித்திரம் அப்போதைக்கு முழுமை அடைந்திருக்கவில்லை; ஏதோவொன்று குறைவது போலவே இருந்தது. பயிற்சிக்குப் பின் அந்தக் குழுவிலிருந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போஸ்டிங் போடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நான் தில்லிக்குச் சென்றேன்.

தில்லியின் தால் ரொட்டிக்கும், ஆலு பரோட்டாவுக்கும், அனல் காற்றுக்கும், கடுங்குளிருக்கும் பழக்கப்படத் துவங்கியிருந்த நான்காம் வருடத்தின் முதல் மாதத்தில் எனக்கு எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு மின்மடல் வந்தது. எங்கள் நிறுவனம் தயாரித்து சந்தைக்கு அனுப்பியிருந்த குறிப்பிட்ட மாடல் கணினியில் சில பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனால் உலகெங்கும் அந்த மாடல் கணினி எங்கெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனைச் சரிசெய்ய அதன் மென்பொருளில் சில திருத்தங்கள் (bug fix) சேர்க்க வேண்டும் என்றும் அந்த மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மடலின் பின்னிணைப்பாக நாங்கள் திருத்தங்கள் சேர்க்க வேண்டிய கணினிகளின் பட்டியலும், அது நிறுவப்பட்டிருக்கும் முகவரியும், தொடர்புகொள்ள வேண்டிய வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அகர வரிசைப்படியிருந்த பட்டியலில் முதலாவதாக “ஆர்மி ரிசர்ச் சென்டர் – டெஹ்ராடூன்” என்று குறிப்பிடப்பட்டு, அதற்கு நேராக தொடர்புகொள்ள வேண்டி கங்காதரின் பெயரும், அவரது தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்து கங்காதரைப் பிடித்தேன்.

“ஹலோ! கப்தான் கங்காதர் சௌத்ரி” மறுமுனையில் அதே விரைப்போடு மிரட்டல் கேட்டது.

என்னை நினைவூட்டி அறிமுகம் செய்துகொண்ட பின், கணினியில் கண்டறியப்பட்டுள்ள குறைபாட்டை விளக்கி அந்த வார இறுதியில் டெஹ்ராடூன் வருவதாகத் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டேன். திட்டமிட்டபடி அந்த வார இறுதியில் கங்காதர் சொன்ன நேரத்துக்கு சரியாக அங்கே இருந்தேன். நேரம் தவறாமையில் கங்காதர் கறார் பேர்வழி. பயிற்சியின் போது ஒரு நாள் கூட அவர் தாமதமாக வந்ததே இல்லை. நிதின் ஷர்மா இன்னமும் உதவியாளராகத்தான் இருந்தார். அவர்தான் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.

“சார்! கணினியை எங்கே நிறுவி இருக்கிறீர்கள்?” வேலையைத் தவிர வேறு அநாவசியமான கேள்விகளை இராணுவம் விரும்புவதில்லை.

“முதல் தளத்தில்” கேட்ட கேள்விக்கு ஒரு வரி பதிலைத்தான் இராணுவம் அளிக்கும்.

முதல் தளத்தின் சந்து பொந்துகளைத் தாண்டி ஒரு கண்ணாடி அறையின் முன் அமர்த்தப்பட்டோம். உள்ளே பெரிய பெரிய சர்வர்கள் நிறுவப்பட்டிருந்தன. அங்கே இருந்த சர்வர்கள் ஒவ்வொன்றும் நம் வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு பீரோக்களின் உயரத்தில் இருந்தன.

“கொஞ்சம் பொறுங்கள்! காப்டன் சார் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்” குளிரூட்டப்பட்ட அறையில் கங்காதரின் வருகைக்காக காத்திருந்தேன். சரியாக ஒன்பது நிமிடம் ஐம்பத்தொன்பதாவது நொடியில் பழக்கப்பட்ட அந்தக் குரல் கேட்டது,

“ஹல்லோ யெங்மென்! எப்படிஇருக்கிறீர்கள்?” ஆரவாரமாக அந்த அறைக்குள் நுழைந்த கங்காதர், எனது கையை வலுவாகப் பற்றிச் சுளுக்கினார்.தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் கணினியில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி விரிவாக விளக்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

“ஓக்கே! இதோ இந்த அறையில்தான் நீங்கள் சப்ளை செய்த கணினி இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு நிதின் இருப்பார்”

ஒரு வழியாக ஏழு மலை ஏழு கடல் தாண்டி அரக்கனின் அரக்கு மாளிகையில் சிறைவைக்கப்பட்ட லைலாவைக் காணும் சிந்துபாத்தைப் போல் அந்த அறைக்குள் பாய்ந்தேன். நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே உறைந்தேன். அங்கே அந்தக் கணினி மாலைகளெல்லாம் அணிந்து சந்தனம் குங்குமம் அப்பிக் கொண்டு அய்யனார் கோவில் பூசாரியைப் போல் கம்பீரமாய் நின்றது. அந்த மாலைகள் காய்ந்திருந்தன. ஆனால் அதிர்ச்சிக்கு அது காரணமில்லை.

“இதெல்லாம் நாங்க ஆயுதபூசை கொண்டாடும்போது போட்டது” நிதின் கேட்காமலேயே பதில் சொன்னார்.

“அது பரவாயில்லை.. ஆனால், கணினி இயக்கப்படாமல் ஒட்டடை படிந்துபோய்க் கிடக்கிறதே?” அதிர்ச்சிக்கு இதுதான் காரணம்.

“அதுவா… இந்தக் கணினியால் எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பதால் வாங்கிய நாளிலிருந்து இயக்காமலே வைத்திருக்கிறோம். நீங்கள் அதை இயக்கி வேலையை முடித்தபின் பழையபடி அணைத்து வைத்து விடுங்கள். வேண்டுமானால் ஆட்களை அனுப்பி இதில் படிந்திருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்யச் சொல்லவா?” நிதின் பதறாமல் கேட்டார்.

“அதுக்கில்லை சார்! இது இயங்காமல் நின்றால் நிறைய உற்பத்தி இழப்பு ஏற்படுமே?”ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன்.

“உற்பத்தியா? அதான் சொன்னேனே! வாங்கினதுலேர்ந்து பயன்படுத்தவே இல்லையென்று?” புன்முறுவல் மாறாமல் பேசினார்.

“ரெண்டு கோடிக்கும் மேல கொடுத்து வாங்கியதை இப்படியா வீணா போட்டு வைப்பீங்க? இந்த மாதிரி கணினிகளை வாங்குகிறவர்கள் இதிலேர்ந்து முடிந்தவரை வேலை வாங்குவாங்க சார்! யாரும் இப்படி சும்மா நிப்பாட்டி வைக்க மாட்டாங்களே!?”

“குமார்.. நீங்க டிபென்ஸ் செக்டாரை இப்பத்தான் பாக்கறீங்கன்னு நினைக்கிறேன்! சரியா?”

“ஆமா… ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

நிதின் சிரித்துக் கொண்டார். பின் தொடர்ந்தார், “குமார்! இங்க இருக்கிற மற்ற பெரிய சர்வர்கள் எல்லாமும் சாதாரண முப்பதாயிரம் ரூபா கணினிகள் செய்யும் அதே வேலைகளைத்தான் செய்யுது.. நீங்க சப்ளை செய்ததைத்தான் என்ன செய்ய வைக்கிறதுன்னு தெரியாம போட்டு வச்சிருக்கோம். கவர்மெண்ட் செக்டார்ல இதெல்லாம் சாதாரணம்… வருஷா வருஷம் எங்களோட கணினி பிரிவுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்வாங்க. அதை எதுக்காச்சும் நாங்க பயன்படுத்தியாகணும். ஒரு வருஷம் முழுமையா பயன்படுத்தலைன்னா அடுத்த வருஷம் ஒதுக்கீட்டை குறைச்சிடுவாங்க. அதனால நாங்க வாங்கற கருவிகள் எல்லாத்தையும் அந்த வகையிலேயே காஸ்ட்லியா என்ன இருக்கோ அதைத்தான் வாங்குவோம். நீங்க புதுசில்லே! அதான் திகைச்சுப் போயிட்டீங்க. சரி! வந்த வேலையைப் பாருங்க!”

ஒரு வழியாக அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டு, அந்தக் கணினியை இயக்கி அதில் சேர்க்க வேண்டிய மென்பொருள் நிரலை சேர்த்துவிட்டு, மீண்டும் பழையபடி அணைத்து வைத்தேன். அந்தக் கணினி அறைக்குள் இரும்பு பீரோக்கள் போல் நிமிர்ந்து நின்ற மற்ற எல்லா கணினிகளுமே பிச்சையெடுக்கும் கோவில் யானைகளைப் போல் பரிதாபமாய் நின்றன. எத்தனை பொருட்செலவு? அத்தனையும் வீண் விரயம். மாதாமாதம் சம்பளத்திலிருந்து கேட்காமலேயே பிடித்தம் செய்துகொள்ளப்படும் வருமான வரிப்பணம் இப்படி பெருமாள் கோவில் பிச்சைக்கார யானைகளைப் பராமரிக்க வீணடிக்கப்படுவதைக் கண்டு, நீண்ட பெருமூச்சு எழுந்தது. அதற்குள் நிதின் கையில் ஒரு கோப்போடு வந்தார். அதே பழைய கோப்பு. இராணுவ ரகசியமாய் கங்காதர் போற்றிய கோப்பு.

“குமார்! இப்ப என்ன செய்தீங்களோ அதை அப்படியே ரிப்போர்ட்டா எழுதி இந்தக் கோப்பில் சேர்த்துடுங்க. ஆடிட் வர்ற மேலதிகாரிங்க இதையெல்லாம் கறாரா சரி பார்ப்பாங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” கையில் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

ஆர்வத்தோடு திறந்து பார்த்தேன். உள்ளே, அந்தக் கணினி வாங்குவதற்காக வெளியிட்ட டெண்டர் பற்றிய அறிவிப்பிலிருந்து, கங்காதர் மற்றும் நிதினின் பெங்களூரு வருகைக்கான அனுமதிக் கடிதம், ரயில் டிக்கெட்டுகளின் நகல்கள், தங்கிய ஹோட்டலில் கொடுத்த பில்கள் வரை தேதி வாரியாக அடுக்கப்பட்டிருந்தது. இறுதியில் அந்த பத்து புகைப்படங்கள்.. சுத்தமாக வாயடைத்துப் போனேன்.

இதற்காகவா அத்தனை ஆர்பாட்டங்கள்? பயிற்சிக் காலத்தில் இராணுவம் பற்றி உருவாகத் துவங்கியிருந்த முற்றுப்பெறாத சித்திரம் இப்போதுதான் முழுமையடைந்தது. அதை உற்றுப்பார்த்ததில், நன்கு உருண்டு திரண்டு கொழுத்துப் போன பங்களா நாய் ஒன்று அந்த சித்திரத்தினுளிருந்து முறைத்துப் பார்த்தது.

ஆம்! இது ஒரு பிரமாண்டமான பங்களா நாய். பங்களா நாய்கள் தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் செல்லத்தின் விளைவாய் அதீதமாய்க் கொழுத்துப் போய்விடும். தெரு நாய்களைப் போன்றோ, வேட்டை நாய்களைப் போன்றோ ஓட முடியாது. தன் கொழுத்த உடலை அசைக்க முடியாமல் அப்படியே கிடையாய்க் கிடக்கும். அவ்வப்போது போகிற வருகிறவர்களைப் பார்த்துக் குரைத்தோ அருகில் அகப்பட்டவர்களைக் கடித்தோ தன் எஜமானனைக் குஷிப்படுத்தும். இது வெறும் அலங்காரம்தான். பயனற்றது – ஆனால் ஆபத்தான ஒட்டுண்ணி. மொத்த சமூகத்தின் இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்துக் கிடக்கிறது.

இவற்றின் எஜமானர்கள் கற்பனை செய்து கொள்வதைப் போல் இவை காவலுக்கும் கூடப் பயன்படாது. என்றைக்காவது தெரு நாய்களோடு சண்டை வந்தால் பரிதாபமாய் செத்துப் போகும். ராணுவம் என்பது ஒரு பங்களா நாயைப் போல் இந்தியாவின் மேல் அழுத்திக் கொண்டிருப்பதே என்பதுதான் அந்த சித்திரம் சொல்லும் செய்தி என்பது அன்றைக்கு எங்களுக்குப் புரிந்தது.

-மாடசாமி

______________________________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________________

பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !

11
பாலியல் வன்முறைக்கு எதிராக
ஆணாதிக்க சமூகத்தின் இழிவைச் சாடி, "வல்லுறவை ஏவாதே என்று ஆண்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகாதே என்று பெண்களுக்குத்தான் சமூகம் பாடம் நடத்துகிறது" என்ற முழக்க அட்டையுடன் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம்.
state-01-delநாடாளுமன்ற ஆர்ப்பாட்டம்hi-demo
“பிப்ரவரி 23,1991-இல் காஷ்மீரின் குனான் போஷ்போரா கிராமத்தில் இந்திய இராணுவப் படையினர் 53 பெண்களைக் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடூரத்தை நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை!” என்ற பதாகையுடன் இந்தியாவின் 64-வது ‘குடியரசு’ தினத்தன்று நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

பாலியல் வல்லுறவுத் தலைநகரான டெல்லியில், துணை மருத்துவ மாணவி மீதான கும்பல் பாலியல் வல்லுறவுக் கொடூரத்தைத் தொடர்ந்து, உழைக்கும் மக்களும் பெண்களும் இளைஞர்களும் ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க வீதிகளில் திரண்டு போராடினார்கள். இப்போராட்டங்களாலும், பொதுக்கருத்தும் பொதுமக்களின் நிர்ப்பந்தங்களும் பெருகியதாலும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், டெல்லியில் பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் பெண்கள் இதுபற்றி புகார் கொடுக்க 181 என்ற தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது.

பாலியல் கொடூரத்துக்கு எதிரான சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் செம்மைப்படுத்தவும் அமைக்கப்பட்ட ஓவு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி, தனது அறிக்கையை அண்மையில் மைய அரசிடம் அளித்துள்ளது. ஆனால், அக்கமிட்டி தனது பரிந்துரைகளைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அரசாங்கத்தின் உறுப்புகளாக உள்ள – குற்றத்தைத் தடுப்பதற்கான பொறுப்பில் உள்ளவர்கள் இவை எதையுமே ஏற்க மறுக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் முதன்மை எதிரி யார்?

ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சட்டமும் நீதித்துறையும் போலீசும் அதிகார வர்க்கமும் அடங்கிய அரசு எந்திரத்துக்கு வெளியே, கணநேரப் பாலியல் தூண்டுதலால் வெறிகொண்டு வல்லுறவை ஏவும் சிவில் சமுதாயத்திலுள்ள உதிரி கிரிமினல்களால்தான் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராகத்தான் உள்ளது. வங்கிக்குப் பொறுப்பான காசாளரே, கொள்ளையில் ஈடுபடுவதைப் போலத்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தில் உள்ளவர்களே, ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்டவர்களே அத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர். பெண்கள் மீதான இந்துத்துவ, சாதிய, ஆணாதிக்க அடக்குமுறைகளைப் பாதுகாப்பதாகவே அரசின் உறுப்புகள் உள்ளன. இத்தகைய நிறுவனங்களால் பெண்களுக்கு வரும் ஆபத்துதான் மிகக் கொடியது. வரம்பற்ற அதிகாரம் பெற்றதாக, அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டதாக, சீருடை அணிந்த கிரிமினல்களைக் கொண்டுள்ள இத்தகைய அதிகார அமைப்புகளே முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அவற்றை யாரும் தட்டிக்கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாது.

டெல்லி பேருந்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்குக்கூட உள்ளூர ஒருவித அச்சம் இருந்திருக்கும். எந்தத் தடயமும் இல்லாமல் தப்பிவிட வேண்டும் என்ற பதற்றமும் இருந்திருக்கும். ஆனால், போலீசுக்கும் இராணுவத்துக்கும் அப்படி எந்த அச்சமோ, பதற்றமோ இருப்பதேயில்லை. சமுதாயத்திலுள்ள கிரிமினல்களுக்கு இல்லாத இந்தச் சிறப்பு அதிகாரத்தைக் கொண்டுள்ள இந்தச் சீருடை அணிந்த கிரிமினல்கள், எவ்வித அச்சமுமின்றி அட்டூழியங்களில் ஈடுபடுவதோடு, எவனும் எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்ற ஆணவத்தோடு கொட்டமடிக்கின்றன.

காஷ்மீர் பெண்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியப் பெண்களின் முதல் எதிரி யார் என்பதை உலகுக்கு உணர்த்திய போராட்டம்: “ஐ.நா. மன்றமே, இந்திய இராணுவப் படைகளின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ள காஷ்மீரின் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!” என்ற பதாகையுடன் காஷ்மீர் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

டந்த 2006 மார்ச் மாதத்தில், காஷ்மீர் மாநிலத்தில் சிறீநகர் புறநகரப் பகுதியின் 15 வயதான பள்ளி மாணவி யாஸ்மினா, வேலை வாங்கித் தருவதாகக் கூறித் தன்னை அழைத்துச் சென்று, போதை மருந்து கொடுத்து நிர்வாணப்படுத்திப் படம் எடுத்து, அதைக் காட்டி மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சபீனா பேகம் என்ற பெண் மீது குற்றம் சாட்டியதோடு, போலீசு -இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தான் இரையாக்கப்பட்டதையும், தன்னைப் போலவே 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பயங்கரவாதக் கும்பலிடம் சிக்கித் தவிப்பதாகவும் சாட்சியமளித்தார். அதைத் தொடர்ந்து விபச்சார தாதாவான சபீனா பேகத்தைக் கைது செய்து, அவளது விபச்சார விடுதியிலிருந்து இளம்பெண்களை மீட்டுச் சூரத்தனம் காட்டிய போலீசார், இந்த விவகாரத்தை மூடிமறைத்து போலீசு மற்றும் இராணுவ அதிகாரிகளைத் தப்புவிக்க முயற்சித்தபோது, சிறீநகர் மக்கள் ஆவேசமாகி சபீனாவின் விபச்சார விடுதியையும் போலீசு நிலையங்களையும் தாக்கினர். இது காஷ்மீர் மாநிலம் முழுவதுமான போராட்டமாகப் பற்றிப் படரத் தொடங்கியதும், மாநில உயர்நீதி மன்றம் இந்த வழக்கை மையப் புலனாவுத் துறையிடம் ஒப்படைத்தது.

விபச்சார குற்றக் கும்பல்களின் அட்டூழியங்கள் அடுத்தடுத்து வெளிவந்த போதிலும், இவை எல்லாவற்றிலுமே அரசு உயர் அதிகாரிகள், போலீசு -இராணுவ அதிகாரிகள், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள், நீதித்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ள போதிலும், அவர்கள் தண்டிக்கப்படவில்லை. துறைசார்ந்த விசாரணை, இடமாற்றம், தற்காலிகப் பணிநீக்கம் என்பதுதான் நடந்தது.

காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மீது பொதுமக்கள் எவரும் அச்சீருடை அணிந்த கிரிமினல் கும்பல்கள் நடத்திவரும் பாலியல் வன்கொடுமைகளை, மனித உரிமை மீறல்களைப் பற்றி வாய்திறக்கக் கூடாது என்பதற்காகவே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமும், கலவரப்பகுதி தடைச் சட்டமும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களும் போடப்பட்டுள்ளன. தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முறியடிப்பது என்ற பெயரில் இம்மாநிலங்களில் போலீசும் இராணுவமும் நடத்திவரும் காமவெறி – கொலைவெறியாட்டங்கள் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றன. போலீசின் வன்முறை ஆயுதங்களில் ஒன்றாகக் கேள்விமுறையின்றி பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் தொடர்கின்றன. இக்கொடுமையை எதிர்த்து மணிப்பூர் தாய்மார்கள் இராணுவத் தலைமையகம் அருகே நடத்திய நிர்வாணப் போராட்டத்தைப் போல, இவற்றில் ஒரு சில விவகாரங்கள் மெதுவாகக் கசிந்து அம்பலமானாலும், இக்காமவெறி பயங்கரவாதக் கும்பல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

டந்த ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதியன்று இரவில் பேருந்துக்காகக் காத்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான வசந்தி என்ற பெண்ணை, கடமலைக்குண்டு போலீசு நிலையத்துக்கு இழுத்துச் சென்று, போலீசு ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமாரும் சிறப்புத் துணை ஆய்வாளரான அமுதனும் அப்பெண்ணிடம் தமது காமவெறியைத் தீர்த்துக் கொண்டனர். பின்னர், அவரிடமிருந்த 6,700 ரூபாயையும் பறித்துக் கொண்டு, வசந்தியின் மீது திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த வசந்தி நடந்த உண்மைகளை வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காக போலீசாரால் தொடர்ந்து மிரட்டப்பட்டதால், விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து, பின்னர் காப்பாற்றப்பட்டார். இந்த உண்மைகள் மெதுவாகக் கசிந்து, ஜூனியர் விகடன் இதழ் இக்கொடுமையை அம்பலப்படுத்தியது. ஆனால், அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளரான பிரவீன் குமார் அபினயு, திருட்டு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே வசந்தி பொய் சொல்கிறார் என்று கிரிமினல் போலீசாருக்கு நற்சான்றிதழ் அளித்தார்.

சட்டபூர்வ கிரிமினல்களான போலீசின் காமவெறியாட்டத்துக்கு, பாதிக்கப்பட்ட வசந்தி மீதான பாலியல் வல்லுறவுக் கொடூரமே சான்று கூறப் போதுமானது. போலீசு உயரதிகாரிகள், தமது துறைசார்ந்த கீழ்நிலை போலீசாரைக் காப்பதற்காகவே இப்படி செய்துள்ளார்கள் என்று இந்த விவகாரத்தை குறுக்கிச் சுருக்கிப் பார்க்க முடியுமா? கீழ்நிலைப் போலீசுதான் ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாதவர்கள்; ஆனால், போலீசு உயரதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.பி.எஸ். படித்தவர்கள், கண்ணியமான மேட்டுக்குடியினர், அவர்கள் நேர்மையுடன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பத்தான் முடியுமா?

அரியானா மாநிலத்தின் ஐ.ஜி.யான எஸ்.பி.எஸ்.ரத்தோர், 14 வயது சிறுமியான ருச்சிகாவை 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதியன்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, அவனிடமிருந்து தப்பிய அச்சிறுமி போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ருச்சிகா, தான் படித்து வந்த பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவரது தம்பி மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் ரத்தோரின் போலீசாரால் அச்சுறுத்தப்பட்டுத் தொல்லைக்குள்ளாக்குள்ளாக்கப்பட்டனர். இக்கொடுமைகளைக் கண்டு மனமுடைந்த ருச்சிகா,1993-இல் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோனாள். அதேசமயம், காமவெறியன் ரத்தோருக்கு அரியானா அரசு பதவி உயர்வு அளித்தது. 1999-இல் அவன் மாநிலத்தின் போலீசு தலைமை இயக்குனராக்கப்பட்டு, சிறந்த சேவைக்கான அரசுத் தலைவர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டான். 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 2009-இல் ரத்தோர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, பிணை வழங்கவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்த போதிலும், 2010-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அவனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கியது.

நாங்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற திமிரோடு தனிவகை சாதியாக இருந்து கொண்டு சமூகத்தையே போலீசும் இராணுவமும் அச்சுறுத்துவதை இந்த விவகாரமும், போலீசு பாதுகாப்புடன் நடந்து வந்த திண்டிவனம் விபச்சார சந்தையில் தள்ளப்பட்டு, தப்ப முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் செஞ்சி சிறைக்காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ரீடாமேரி விவகாரமும் நிரூபித்துக் காட்டுகின்றன. சிதம்பரம் பத்மினி மற்றும் சின்னாம்பதி பாலியல் கொடூர வழக்குகளை விசாரித்த விசாரணைக் கமிசன்கள், இந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யவும் பாலியல் குற்றங்களை மூடிமறைக்கவும் போலீசு அதிகாரிகள் செய்துள்ள தகிடுதத்தங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. இத்தனைக்குப் பின்னரும் போலீசும் அதிகாரவர்க்கமும் சட்டங்களை முறைப்படி செயல்படுத்தி, குற்றவாளிகளைத் தண்டித்து, பெண்களைப் பாதுகாக்கும் என்று நம்பத்தான் முடியுமா?

நீதித்துறையும் மையப் புலனாவுத்துறையும் பெண்களைப் பாதுகாக்குமா?

காவல் நிலையத்தில் பெண்இந்தியாவின் முதலாவது நீதிபதியாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட நீதிபதி முத்துசாமி அய்யர், கணவன் தனது மனைவியை அடிப்பது தவறல்ல என்று கடந்த நூற்றாண்டில் தீர்ப்பு கூறினார். ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை மாறிவிட்டதா? மாமியார் தனது மருமகளை அடித்தாலோ, அல்லது தனது மகன் அவளை விவாகரத்து செய்துவிடுவான் என்று மிரட்டினாலோ அது சட்டப்படி குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.பி.சின்காவும் சிரியாக் ஜோசப்பும் கடந்த 2009-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்துள்ளனர். நீதிபதிகள் மட்டுமல்ல, நீதிக்காக வாதிடும் வழக்குரைஞர்களும் இத்தகைய ஆணாதிக்க அணுகுமுறையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். ஜெசிகாலால் கொலை வழக்கில், அவரை நடத்தை கெட்டவராகக் காட்டும் கோணத்தில் வாதாடி குற்றவாளியைத் தப்புவிக்க பிரபல வழக்குரைஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.க. தலைவர்களுள் ஒருவருமான ராம் ஜெத்மலானி எத்தனித்தார்.

டெல்லியில் தனது இச்சைக்கு இணங்க மறுத்த சட்டக் கல்லூரி மாணவி பிரியதர்சினி மட்டூவை, அதே கல்லூரியின் மாணவனும் மாநில இணை போலீசு ஆணையரின் மகனுமாகிய சந்தோஷ்குமார் சிங் என்பவன் அம்மாணவியின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்முறையை ஏவிய பின்னர் கோரமாகக் கொன்றான். அதே டெல்லியில், சாராய விடுதியில் விற்பனை முடிந்த பிறகு சாராயம் பரிமாற மறுத்த மாடல் பெண் ஜெசிகாலால் என்பவரை அரியானா மாநில அமைச்சரின் தறுதலைப் பிள்ளையான மனு சர்மா சுட்டுக் கொன்றான். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விரு வழக்குகளில் சாட்சியங்களை போலீசும் மையப் புலனாவுத்துறையும் மூடிமறைத்து வழக்கை நீர்த்துப் போக வைத்தன. இதை அறிந்திருந்த போதிலும், டெல்லி அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது. செய்தி ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இந்த அநீதியை எதிர்த்துக் கூச்சலிட்ட பிறகு, டெல்லி உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளிகள் பின்னர் தண்டிக்கப்பட்டனர். நாடே அதிர்ச்சிக்குள்ளான பிரபல வழக்குகளுக்கே இதுதான் நிலைமை.

1972-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மதுரா என்ற 16 வயதான விவசாயக் கூலிப் பெண், தேசா கஞ்ச் போலீசு நிலையத்தில் இரு போலீசுக்காரன்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 1974-இல் மகாராஷ்டிர உயர் நீதிமன்றம் அளித்த ஐந்தாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து, காமவெறி போலீசாரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. மதுரா ஒரு கன்னிப் பெண் அல்ல, அவள் பாலியல் வல்லுறவை எதிர்த்ததற்கான காயங்கள் எதுவும் அவளது உடலில் இல்லை – என்றெல்லாம் காரணங்களைக் காட்டி விடுதலையை நியாயப்படுத்தியது உச்ச நீதிமன்றம்.

1992-இல் ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரிதேவி என்ற மிகவும் பிற்பட்ட சாதிப் பெண், குஜ்ஜார் ஆதிக்க சாதிவெறியர்கள் 5 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 1995-இல் தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம், தாழ்த்தப்பட்டவரை மேல்சாதியினர் தீண்டவே மாட்டார்கள் என்பதால் பாலியல் வல்லுறவு நடந்ததாகக் கூறுவது பொயானது என்று தீர்ப்பு கூறி ஆதிக்க சாதிவெறியர்களான காமவெறி பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.

ஒரிசாவின் போலீசு தலைமை இயக்குனர்களில் ஒருவரான வித்யபூஷண் மொகந்தியின் மகனாகிய பிட்டி மொகந்தி என்பவன், 2005-ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் ஒரு ஜெர்மானியச் சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமையை ஏவிய குற்றத்துக்காக 2006-இல் கைது செய்யப்பட்டான். பின்னர், அந்த போலீசு உயரதிகாரி தனது தாயார் மரணப்படுக்கையில் கிடப்பதால் அவரைத் தனது மகன் ஒருமுறை பார்க்க அனுமதி கேட்டு, பரோலில் வந்த பின்னர் அவன் தலைமறைவாகிவிட்டதாகப் பசப்பி, தனது அதிகாரத்தைக் கொண்டு குற்றவாளியான தனது மகனை தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு பாதுகாத்ததோடு, போலீசையும் அதற்காகப் பயன்படுத்தியுள்ளான். ராஜஸ்தான் போலீசு, ஒரிசா மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்ட போதிலும், 7 ஆண்டுகளாகியும் அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை என்கிறது ஒரிசா போலீசு. பின்னர் குற்றவாளியைப் பாதுகாத்து வைத்திருந்த போலீசு இயக்கு னர் 2008-இல் கைது செய்யப்பட்ட போதி லும், அவரது மகன் இன்னமும் தலைமறைவாகத்தான் இருந்து வருகிறான்.

தமிழ்நாட்டை உலுக்கிய சிதம்பரம் பத்மினி கற்பழிப்பு வழக்கை விசாரித்த பழனியப்பன் விசாரணைக் கமிசன், பத்மினி மானபங்கப்படுத்தப்பட்டாரே தவிர, வல்லுறவு நடக்கவேயில்லை என்று அபாண்டமாகத் தீர்ப்பு எழுதியது.

இப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் வழக்குகளையும் அரசாங்கத்தின் உறுப்புகளே குற்றவாளிகளைப் பாதுகாப்பதையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் கடந்து ஒரு பெண் துணிவுடன் சட்டம், போலீசு, நீதித்துறையை அணுகினால், விட்டால் போதும் என்று தாங்களே வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும் வகையில் இந்த நிறுவனங்கள் பெண்களை மேலும் தொல்லைக்குள்ளாக்கி இழிவுபடுத்துகின்றன. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் அருவருப்பான வக்கிரமான பல்வேறு சோதனைகளையும் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்பெண்களின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நீதிமன்றங்களில் அவர்கள் படும் துன்பமும் மனவேதனையும், பாலியல் வல்லுறவுக்கு ஆளான பொழுதில் ஏற்பட்ட துயரைவிட மோசமானதாக இருக்கிறது.

பெண்களுக்கு எதிராக நிற்கும் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்புகள்

போலீஸ், ஜெயலலிதா கார்ட்டூன்ஒரு பெண் எந்தக் குற்றமும் செய்ய வேண்டியதில்லை. அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள் என்பதற்காகவே வன்முறை – கிரிமினல் குற்றங்கள் ஏவிவிடப்படுகின்றன. ஒரிசாவில் கணவனின் கொடுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளான அஞ்சனா மிஸ்ரா என்ற மேட்டுக்குடி பெண், அவனிடமிருந்து தப்பி பெண்கள் காப்பகத்தில் குழந்தைகளுடன் தங்கியிருந்து, அவரது கணவனாகிய வனத்துறை அதிகாரி மீது புகார் கொடுத்தார். 1997 ஜூலையில் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞரிடம் இவ்வழக்கு தொடர்பாக சந்தித்த போது, அவன் அஞ்சனா மீது பாலியல் வல்லுறவுக் கொடூரத்தை ஏவ முயற்சித்தான். ஆடைகள் கிழிக்கப்பட்டு உடலெங்கும் காயங்களுடன் அவனிடமிருந்து தப்பிய அவர், போலீசில் புகார் செய்தார். ஆனால் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் அஞ்சனாவுக்கு எதிராகச் செயல்பட்டன. பின்னர் மையப் புலனாவுத்துறை விசாரணை நடந்து, அரசுத் தலைமை வழக்குரைஞர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அன்றைய காங்கிரசு முதல்வர் பட்நாயக் தலைமையிலான அரசு, அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வாடகைக் காரில் சென்று கொண்டிருந்த அஞ்சனாவை துப்பாக்கி ஏந்திய கும்பல் வழிமறித்து, புகார் கொடுத்ததற்கு இதுதான் தண்டனை என்று பாலியல் வன்கொடுமையை ஏவியது. வரம்பற்ற அதிகாரத்தைக் கொண்டு ஆட்டம் போடும் அரசாங்கத்தின் உறுப்புகளுக்கு எதிராக யார் நின்றாலும், அவர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும்என்று மிரட்டி எச்சரிக்கும் வகையில் நடந்துள்ள இந்த அட்டூழியம், ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பே பெண்களுக்கு எதிராக நிற்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியது.

அரசு வழக்குரைஞர், போலீசு, நீதிபதி – ஆகிய இம்மூவரில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக நடந்து கொண்டால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் நாகஷைலா. இதனாலேயே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வரதட்சிணைக் கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் வாழ்வுரிமைக்கான சட்டங்கள், பெண்களின் பணியிடப் பாதுகாப்புச் சட்டங்கள் என பெண்களுக்காகவே பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் பெண்களின் நிலை இன்னமும் அதல பாதாளத்தில்தான் இருக்கிறது.

ஓட்டுக்கட்சிகளின் யோக்கியதை என்ன?

போலீஸ் காப் பஞ்சாயத்து

ஆணாதிக்க குடும்ப – சமூக அமைப்பு முறையும், அதற்கேற்ற சட்டம், நீதி மற்றும் அமலாக்கத்துறையும் நீடிக்கும் போது, பெண்களைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்கான இப்படிப்பட்ட சீர்திருத்தச் சட்டங்களால் மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியாது. இருப்பினும் பெயரளவிலான சில சீர்திருத்தச் சட்டங்களைக்கூட ஏற்க மறுத்து, இதனால் இந்தியாவின் பாரம்பரியமும், குடும்ப உறவுகளும் பாதிக்கப்பட்டு சிதைந்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ். முதலான இந்துத்துவ பிற்போக்கு அமைப்புகள் வாதிட்டுத் தடுக்கின்றன. பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்துத்துவ ஆணாதிக்க சிவில் சட்டத்தைத் திணிக்கவே எப்போதும் இந்துத்துவ பரிவாரங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது நிலவும் மத ரீதியான திருமணச் சட்டத்தில் சிறிய சீர்திருத்தங்களைச் செய்வதைக்கூட கிறித்துவமயமாக்கும் முயற்சி என்று இக்கும்பல் எதிர்க்கிறது. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களும் சீர்திருத்தங்களும் செய்தால், இவற்றைப் பெண்கள் தங்களது கணவருக்கும் குடும்பத்திலுள்ள ஆண்களுக்கும் எதிராகப் பயன்படுத்திக் குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடுவார்கள் என்று இந்து சனாதன ஆணாதிக்க வெறியுடன் துக்ளக் சோ, குருமூர்த்தி வகையறாக்கள் கூப்பாடு போடுகின்றனர். இந்துத்துவ பரிவாரங்கள் பார்ப்பனிய ஆணாதிக்கத்துக்காக நிற்கின்றன என்றால், பிற்படுத்தப்பட்டோராகக் காட்டிக் கொள்ளும் நிலப்பிரபுக்களான ஜாட், யாதவ் சாதிய அரசியல்வாதிகள் அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு ஆணாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றனர்.

ஜனநாயகத்தின் அறிவார்ந்த பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்படும் ஓட்டுக்கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலோர் ஆணாதிக்கவாதிகளாகவே உள்ளனர். இவர்களின் காமவெறிக் களியாட்டங்களும் சின்னவீடு சமாச்சாரங்களும் பாலியல் குற்றவழக்குகளில் சிக்கியுள்ள சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலும் ஏற்கெனவே வெளிவந்து நாடெங்கும் நாறிப் போயுள்ளன.

மே.வங்கத்தில், ஒரு பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் ஒரு பூங்காவில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய விவகாரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த போது, அந்தப் பெண்ணுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பணப்பட்டுவாடாவில் தகராறு வந்ததால், அவர்கள் தன்னை வல்லுறவு கொண்டதாக அப்பெண் பொய்ப்புகார் கொடுத்துள்ளார்” என்று கூச்சநாச்சமின்றி பேசியுள்ளார், திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் நாடாளுமன்ற பெண் உறுப்பினருமான டாக்டர் கோகோலி கோஷ். இந்த விவகாரம், தனது அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்டுள்ளது என்றார், அம்மாநிலத்தின் பெண் முதல்வரான மமதா பானர்ஜி.

டாக்டர் ராணி என்பவரை இரண்டாம் திருமணம் செய்தவரான பரஞ்சோதி, அப்படியொரு திருமணமே நடக்கவில்லை என்று புளுகியதை ஏற்றுக் கொண்டு அ.தி.மு.க. தலைவியான ஜெயலலிதா அவரைத் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட வைத்து அமைச்சராக்கினார். தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக டாக்டர் ராணி போலீசில் புகார் கொடுத்ததால், வேறுவழியின்றி பரஞ்சோதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும், அவர் போலீசைக் கொண்டு டாக்டர் ராணியைத் தொடர்ந்து மிரட்டிய விவகாரம் வெளிவந்துள்ள போதிலும், தனது கட்சியின் எம்.எல்.ஏ.வான பரஞ்சோதி மீது பெண் முதல்வரான ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த லட்சணத்தில் அவர், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதி மன்றங்களை அமைப்பது, இத்தகைய வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பது என்பது உள்ளிட்ட 13 அம்சத் திட்டத்தை அறிவித்து சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்.

கடுமையான சட்டங்கள் அல்ல, ஜனநாயகப் புரட்சிதான் தேவை!

பாலியல் வன்முறைக்கு எதிராக
ஆணாதிக்க சமூகத்தின் இழிவைச் சாடி, “வல்லுறவை ஏவாதே என்று ஆண்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகாதே என்று பெண்களுக்குத்தான் சமூகம் பாடம் நடத்துகிறது” என்ற முழக்க அட்டையுடன் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம்.

இவையனைத்தும் இது ஜனநாயக அரசு அல்ல, பெண்களைச் சமத்துவமாக நடத்தும் அரசியலமைப்பு முறையுமல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. இருப்பினும், இந்த அரசு நடுநிலையானதாகவும் ஜனநாயகமாகவும் நடப்பதாகக் கருதிக் கொண்டு சட்டங்களைக் கடுமையாக்கி, போலீசுத் துறையிலும் நீதித்துறையிலும் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுத்துவிடலாம் என்று சிலர் நம்பச் சொல்கின்றனர். போலீசாருக்குப் போதனைகளை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க வந்தால், அவரை மரியாதையோடும் பரிவோடும் போலீசார் நடத்த வேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகளைக் கூறுகின்றனர்.

ஆனால், மனித உரிமைகள் பற்றி போலீசாருக்குப் பல ஆண்டுகளாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்குப் பின்னரும் போலீசாரின் அணுகுமுறையில், அவர்களது சிந்தனையில் மயிரளவுகூட மாற்றம் ஏற்படவில்லை என்பதை அன்றாடம் போலீசை எதிர்கொள்ளும் சாமானிய மக்கள் நன்கறிவார்கள். ஆண்களாகிய உயர் அதிகாரிகளால் பெண் போலீசாரே பாலியல் வன்கொடுமைக்குள்ளாவதும், அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி அவர்களைப் பாலியல் இச்சைக்கு ஆண் அதிகாரிகள் பயன்படுத்துவதும் பற்றி நக்கீரன் இதழில் பலமுறை அம்பலமாகியிருக்கும்போது, பெண் போலீசாரை அதிகமாக நியமித்தால், பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்களைத் தடுத்துவிட முடியுமா? வேலைவாப்பிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு, பெண் போலீசு, பெண் நீதிபதிகள், மகளிர் போலீசு நிலையம் – முதலானவற்றால் இன்றைய அரசியலமைப்பு முறையின் கீழ் தொடரும் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்துவிடத்தான் முடியுமா?

இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிரானதாக உள்ளது. அது பெயரளவிலான ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும்கூடச் செயல்படுத்த வக்கற்று தோல்வியடைந்து செல்லரித்துப் போக் கிடக்கிறது. இன்றைய தந்தை வழி ஆணாதிக்க – இந்துத்துவ சாதியாதிக்க அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு, புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதே இன்றைய அவசர-அவசியத் தேவையாக உள்ளது. மாறாக, போலீசுக்கு இன்னும் அதிகாரங்களைத் தருவதும், தண்டனைகளைக் கடுமையாக்குவதும் பாம்புக்குப் பால்வார்த்த கதையாகவே முடியும்.

– பாலன்
________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக – நாட்றாம்பாளையம்

2

சாதி வெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைப்போம்!

என்ற தலைப்பின்கீழ் 23.01.2013 மாலை 5.00 மணியளவில் தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை
நாட்றாம்பாளையம் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் சரவணன்

கண்டன உரை
தோழர் மாரியப்பன் (வி.வி.மு),
தோழர் வெங்கடேசன் (பு.ஜ.தொ.மு),
தோழர் சுரேஷ் (வி.வி.மு),
தோழர் ஜானகிராமன் (ம.உ.பா.மையத்தின் மாவட்ட செயலாளர்)

சிறப்புரை
தோழர் கோபி (வி.வி.மு வட்ட செயலர், பென்னாகரம்)

திரளான மக்கள் கூடி நின்று கண்டு உணர்வோடு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். கூட்டத்தின் கடைசியில் போலீசு அதிகாரிகளின் அருகில் பாதுகாப்போடு நின்றுகொண்டு மூன்று அஇதிமுகவைச் சேர்ந்த வன்னிய சாதியை சேர்ந்தவர்கள் தகறாறு செய்ய முற்பட்டபோது அதே சாதி சமூகத்தை சேர்ந்த நண்பர்கள் அவர்களை தடுத்து விரட்டியடித்தனர்.

புரட்சிகர கலை நிகழ்சியை காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களும் இறுதிவரை ஆர்வமுடன் கேட்டனர். தோழர்கள் துண்டேந்தி நிதிகேட்டு வந்த போது உழைக்கும் மக்களின் உணர்வோடு சில காவல் நண்பர்களும் நிதி தந்தும் வாழ்த்து தெரிவித்து சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. இறுதியில் பிரச்சினை செய்ய முயற்சித்து தோற்றுச் சென்ற மூவரில் ஒருவர் ஓடிவந்து கலைக்குழு தோழர்களில் ஒருவரிடம் கைகுலுக்கி, “நீங்கள் எல்லா சாதித் தலைவர்களையும்தான் திட்டுகிறீர்கள்! நான் வன்னிய ராமதாசை மட்டும்தான் திட்ட கூட்டம் போடுகிறீர்கள் என்று தவறாக நினைத்துக்கொண்டேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !

15
டச் போன்

சம்பவம் – 1

சேகர் கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவன். சுமதி நடுத்தர வயதை எட்டிய திருமணமனவர் – இரண்டு பிள்ளைகளின் தாய். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரின் குடும்பத்தாரும் நட்பாகப் பழகக் கூடியவர்கள். சுமதியின் செல்பேசி எண் தற்செயலாக சேகருக்குக் கிடைக்கிறது. சுமதியின் செல்போனுக்கு ஆரம்பத்தில் நலம் விசாரிக்கும் குறுந்தகவல்களை அனுப்பத் துவங்கும் சேகர், கொஞ்சம் கொஞ்சமாக நகைச்சுவைத் துணுக்குகளை அனுப்புகிறான். ஒரு கட்டத்தில் சேகரின் செல்பேசியிலிருந்து ஆபாசமான நகைச்சுவைத் துணுக்குகள் அனுப்பப்படுகின்றன. இந்த ‘நட்பு’ ஒரு சில மாதங்களிலேயே மணிக்கணக்கில் செல்போனில் பேசிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறுகிறது.

சாதாரணமாகத் துவங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசமான உரையாடல்களாகவும், தனிப்பட்ட பாலியல் உறவாகவும் மாறுகிறது. ஒரு நாள் கணவனுக்குத் தெரியாமல் சுமதி சேகரோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மனைவியைக் காணாத சுமதியின் கணவன் போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஒரு வாரம் கழித்து பக்கத்து நகரத்தில் இருவரும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இன்று இரண்டு குடும்பத்தாரும் மானம், மரியாதையைத் தொலைத்து விட்டு வதையுடன் வாழ்கின்றனர்.

சம்பவம் – 2

குமார் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன். கவிதா திருமணமான பெண் – இதற்கு மேல், சம்பவம் ஒன்றில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை அப்படியே பெயர்த்தெடுத்து இங்கும் பொருத்திக் கொள்ளலாம். ஒரே வித்தியாசம், இங்கே கதையின் முடிவில் போலீசு வரவில்லை. கவிதா வீட்டிலிருந்து களவாடிச் சென்ற காசும், இருவரின் காமமும் தீர்ந்து போன பின் ‘காதல்’ ஜோடிகள் தாமே திரும்பி வந்து விட்டனர்.

(குறிப்பு : இந்த சம்பவங்களில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

டச் போன்சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சந்தித்து மாணவர்களிடையே செல்பேசிகள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் கலாச்சார தாக்கத்தின் விளைவுகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். உரையாடலின் போது அவர்கள் தெரிவித்த சம்பவங்கள் அனைத்தும் இந்த ரகம்தான்.

தற்போது பெருநகரங்களின் மாணவர்களிடையே செல்பேசி ஒரு அத்தியாவசியப் பொருளாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்துள்ளனர். வசதி படைத்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்திருக்கின்றனர். செல்பேசிகள் என்றால் சாதாரணமாக பேசுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் கருப்பு வெள்ளைக் கருவிகள் அல்ல – இணையப் பயன்பாடு மற்றும் வீடியோக்களை காண்பதற்கு ஏதுவாக சந்தையில் விற்கப்படும் விலை அதிகமான தொடுதிரை செல்பேசிக் கருவிகள் (touch phones).

வசதி படைத்த மாணவர்கள் தங்கள் பெற்றோரை நச்சரித்து, விலையுயர்ந்த செல்பேசிகளை வாங்கிக் கொள்கிறார்கள். வசதியற்ற மாணவர்களோ இது போன்ற செல்பேசிக் கருவிகளை வாங்க பள்ளி, கல்லூரி நேரம் போக சின்னச் சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்கள். காலையில் பேப்பர் போடுவது, மாலையில் கொரியர் கம்பெனிகளில் வேலை செய்வது என்று கிடைக்கும் வேலைகளைச் செய்து சேர்க்கும் காசில் செல்பேசிகளை வாங்குகிறார்கள். இந்தளவு மெனக்கெடத் தயாரில்லாத சில கல்லூரி மாணவர்களோ, இதற்காகவே சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவது, வேறு கல்லூரிகளில் படிக்கும் வசதியான மாணவர்களிடம் அடித்துப் பறிப்பது, செயின் அறுப்பது என்று எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர்.

உலகம் புரியாத விடலைப் பருவம்; உணர்ச்சிகளைக் கையாளப் பழகியிராத இரண்டுங்கெட்டான் வயது; சமூகப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிராத பொறுப்புணர்வற்ற வளர்ப்பு முறை; பொருளாதார பிரச்சினைகளைச் சமாளிக்க வேலையைத் துரத்தும் பெற்றோரால் கவனிக்கப்படாமல் விடப்படுவது; அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தனிநபர் வாதம் – இவற்றோடு சேர்த்து கையில் அதிநவீன தகவல் தொழில்நுட்பம். இந்தக் ரசாபாசமான கூட்டுக்கலவை என்பது தவிர்க்கவியலாதபடிக்கு மாணவ சமுதாயத்தை திறந்து வைக்கப்பட்டிருக்கும் அசிங்கமான உலகம் ஒன்றின் வாசலுக்குள் தள்ளி விடுகிறது.

இம்மாணவர்களில் அநேகமானோர் முக நூல் (facebook) கணக்கு வைத்துள்ளனர். செல்பேசியில் கிடைக்கும் இணையத்தை அறிவைத் தேடித் தெரிந்து கொள்வதற்காகவோ, கல்வி சம்பந்தப்பட்ட துறை வாரியான தகவல்களைத் தேடிப் படிப்பதற்காகவோ இவர்கள் பயன்படுத்துவதில்லை. முக நூலில் பெண்களை நட்பாக்குவது, அவர்களோடு ஆபாசமாக உரையாடுவது (chat), ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்வது போன்றவைகளுக்காகவே பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். அவ்வகையில் செல்பேசி என்பது மலிவான “போர்னோ” (pornography – பாலியல் வெறியைத் தூண்டும் படங்கள் — இலக்கியம்) கிடைக்கும் கருவியாகிவிட்டது.

செல்பேசியில் இணைய வசதி மிக மலிவாகக் கிடைக்கிறது. ஒரு நாள் முழுவதும் செல்பேசியில் இணையம் பயன்படுத்த வகைசெய்யும் ஐந்து ரூபாய் ரீசார்ஜ் கூப்பன்களை பெரும்பாலான செல்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன. பெற்றோர் பேருந்துக் கட்டணத்திற்காகவும், கைச் செலவுகளுக்காகவும் கொடுக்கும் காசை மிச்சப்படுத்தினால இணையச் செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளலாம். ஆபாச இணையதளங்களில் இருந்து வீடியோக்களைத் தரவிறக்கம் செய்யும் இம்மாணவர்கள், அவற்றை நண்பர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள். வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே மேஜைக்கடியில் வைத்து இது போன்ற வீடியோக்களைப் பார்க்கவும் தயங்குவதில்லை.

இணையத்தின் மெய்நிகர் அனுபவங்களில் தோய்ந்தெழுவது அலுத்துப் போகும் போது, அதையே செயல்முறையில் பரீட்சித்துப் பார்க்க முற்படுகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமது பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களின் செல்போன் எண்களை எப்படியோ அறிந்து கொள்ளும் மாணவர்கள், அதை இந்த நட்பு வட்டத்திலிருப்பவர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள்.

முதலில் அந்த எண்ணுக்கு ஏதாவது அநாமதேயமான தொலைபேசி இலக்கத்திலிருந்து சாதாரண குறுந்தகவல்கள் போகும். அதற்கு என்னவிதமான எதிர்வினை வருகிறது என்பதைப் பொறுத்து மேற்கொண்டு தொடர்கிறார்கள். நல விசாரிப்பு குறுந்தகவல்கள், மெல்லிய நகைச்சுவைக் குறுந்தகவல்கள், மெல்லிய ஆபாச நகைச்சுவைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் மணிக்கணக்காக பேசுவது, ஆபாச நகைச்சுவைகளைச் சொல்வது, ஆபாசப் பேச்சு என்று வளர்த்து விடுகிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு ‘நட்பாகும்’ பெண்களைத் தமது பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களோ, பிரதானமாக மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இதில் ஈடுபடுகிறார்கள். தனது செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வது, அதிலேயே சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வாங்குவது, ஆடம்பரமான துணிமணிகள் வாங்கிக் கொள்வது, குடிப்பதற்கு காசு வாங்குவது என்று பணம் கறப்பதற்கான தேவைகள் நீள்கிறது. புதுப்புது பாணிகளில் முடிவில்லாமல் குவியும் நகரத்து வசதிகளை துய்ப்பதற்கான குறுக்கு வழியாக இத்தகைய விபரீதங்களை மாணவர்கள் செய்கிறார்கள்.

சக வயது மாணவிகளைக் ‘காதலிக்கும்’ ஒரு சில மாணவர்கள், அந்தக் காதலியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லவும், பரிசுப் பொருட்களை வாங்கித் தரவும், இன்னும் வேறு ‘காதல்’ நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளையும் கூட தனது ஆபாசப் பேச்சுக் கூட்டாளியிடமிருந்து பெற்று சமாளித்துக் கொள்கிறார்களாம். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண்களோடு பேசுவது சலித்துப் போனால், தம்மிடம் உள்ள எண்களை நண்பர்களிடம் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு எண்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆபாசப் பேச்சுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருக்கும் மாணவர்கள் இதன் ஆபத்தான தொடர் விளைவுகள் பற்றிய பிரக்ஞையற்று இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாழ்க்கை முறை, பொறுப்புகளுக்காக வயதுக்கேற்ற கடமைகளை ஆற்றுவது, சமூகரீதியான ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவது எல்லாம் பழங்கதைகளாகவும், கட்டுப்பெட்டித்தனங்களாகவுமே இவர்களால் நகைக்கப்படுகின்றன. மாணவர்களின் ஆதர்சங்களாய் வெள்ளித்திரையில் தோன்றும் நாயகர்கள் காட்டும் விட்டேத்தித்தனமும், சில்லறைத்தனமும், ஆணாதிக்க பொறுக்கித்தனமும் பொதுக் கலாச்சாரங்களாய் திரைக்கு வெளியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பழைய பாணி செல்பேசிகளை வைத்திருப்பவர்களைப் பார்த்து சூர்யாவும், மாதவனும் விளம்பரங்களில் எள்ளி நகையாடுகிறார்கள். செல்பேசி வைத்துக்கொள்ளாத மாணவர்கள் ‘நவ நாகரீக’ உலகத்தின் அங்கமாக மதிக்கப்படுவதில்லை. உடன் படிக்கும் மாணவர்களில் வசதியுள்ளவர்கள் ஆடம்பர நுகர் பொருட்களைத் துய்ப்பதன் மூலம் ஏற்படுத்தும் ‘முன்னுதாரணம்’ வாய்ப்பற்றவர்களிடம் ஏக்கத்தையும், வாய்ப்பை மறுக்கும் வரம்புகளை உடைத்தெறியும் வெறியையும் தோற்றுவிக்கிறது. விளைவாக, செல்போன் வாங்க செயின் அறுப்பும் – அதை ரீசார்ஜ் செய்ய ‘ஆண்டிகள்’ (ச்தணtதூ – அவர்களது மொழியில் நடுத்தர வயதுப் பெண்) தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் இவர்களிடம் எந்தவிதமான குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.

மறுகாலனியாக்க நுகர்வு மோகத்தின் – தக்கை மனிதர்கள்..!

செல்பேசிகள் வழியே தொடர்ச்சியான இணையத் தொடர்பும், முகநூலில் மூழ்கிக் கிடப்பதும், அதில் கிடைக்கும் தொடர்புகளோடு ஆபாசமாகப் பேசிக் களிப்பதும் என்று சதா சர்வகாலமும் எதார்த்த உலகிலிருந்து விலகி சஞ்சரிக்கும் இம்மாணவர்களின் பண்புக் கூறுகள் பாரிய அளவில் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. மாணவப் பருவத்துக்கே உரித்தான புதுமைகளை சிருஷ்டிக்கும் படைப்பூக்கத்தை வெளிப்படுத்துவது, குழு உணர்ச்சியையும் அதன் வழியே ஒரு சமூக உணர்ச்சியையும் ஏற்படுத்தும் விளையாட்டுகளில் ஈடுபடுவது, சிக்கலானவைகளைச் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் இளமைத் துடிப்புள்ள மூளைச் செயல்பாடுகள் போன்ற நேர்மறை அம்சங்களை மெல்ல மெல்ல அவர்கள் இழந்து வருகிறார்கள்.

செல்பேசி இணையத் தொடர்பு மூலம் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும், அதையே பேச்சிலும் செயலிலும் விரித்துச் செல்லும் செல்பேசி நட்புகளும் இம்மாணவர்களின் மிருக உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்து, ஹார்மோன்களைத் தாறுமாறாக இயக்கி சிந்தனையின் சமன்பாட்டையே குலைக்கின்றன. மலிவான பாலியல் உணர்ச்சித் தூண்டுதல்களுக்கு மட்டுமே வினையாற்றிப் பழகிப் போன மூளையின் நரம்புகள் இவர்களின் கவனத்தை கல்வியிலிருந்தும், விளையாட்டிலிருந்தும், சமூகப் பொறுப்புணர்விலிருந்தும் விலக்கி நிறுத்துகின்றன.

தனியார்மயத்தின் விளைவாய் மணவர்களிடமிருந்து அந்நியமாக்கப்பட்டிருக்கும் கல்வி, உயர்ந்து வரும் கல்விக் கட்டணங்கள், புறக்கணிக்கப்படும் கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகள், வேலையின்மை என்று மாணவர் சமுதாயத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய எந்த விசயத்திலும் இது போன்ற கலாச்சார சீரழிவுக்குள்ளாகும் மாணவர்கள் கவலை கொள்வதோ, எதிர் வினையாற்றுவதோ இல்லை. இறுதியில் விட்டேத்தித்தனமும், சமூகவிரோத தனிநபர்வாதமுமே எஞ்சி நிற்கிறது. இவர்கள் கல்லூரித் தேர்வுகளில் இயல்பாகவே தோற்றுப் போகிறார்கள் என்பதைத் தனியே விளக்கத் தேவையில்லை.

முதலாளித்துவ நுகர்வு வெறியின் அடிப்படை விதியான, ‘எப்போதும் புதியவைகளைத் தேடித் துய்ப்பது’ ‘எந்த வழியிலாவது நுகர்ந்து விடுவது’ என்பது இவர்களை ஆவலுடன் அலைய வைக்கிறது. மூன்று இஞ்ச் அகலத் தொடுதிரை வசதி கொண்ட செல்பேசிகள் அளிக்கும் காட்சி இன்பத்தை விட அதிகமான இன்பத்தை புதிதாக சந்தையில் இறங்கியிருக்கும் நான்கு இஞ்ச் அகலத் தொடுதிரை செல்போன்கள் வழங்கவல்லது என்றால், அதை அடைய எந்த எல்லைக்கும் செல்ல இம்மாணவர்கள் துணிகிறார்கள். அதற்காக சில்லறைக் குற்றங்களில் ஈடுபடுவது என்பது நினைத்ததை சாதித்து முடிக்கப் பயன்படும் சாகச நடவடிக்கையாக வியந்தோதப்படுகிறது. இவர்களுடைய நட்புவட்டத்தில் இந்த சாகசங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் நாயக பிம்பத்துக்குக் கிறங்கிப் போகிறார்கள் – தங்களது பொறுக்கித்தனத்தை சாகசம் என்ற பெயரில் தொடரவும் செய்கிறார்கள்.

மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

பொருள் நுகர்வின் மேல் உண்டாகும் மோகத்திற்கும் – அந்த மோகத்தைத் தணித்துக் கொள்ள குற்றச் செயலில் ஈடுபவதற்கும் இடையேயான எல்லைக் கோடு என்பதே கற்பனையானது தான். சமூக நியதிகள் முந்தையதைக் குற்றமற்றதாகவும், பிந்தையதை தண்டனைக்குரியதாகவும் வரையறுக்கிறது. சம்பாதிக்காத வயதில், படிக்கும் காலத்தில் இது போன்ற ஆடம்பர நுகர்பொருட்களைப் பாவிப்பது குற்றமல்ல – ஆனால் அதை அடைவதற்கு யாருடைய கழுத்துச் செயினையாவது அறுத்தாலோ, பிக்பாக்கெட் அடித்தாலோ மட்டும் குற்றம் என்றாகிறது. மேலும் ஆபாசப் படங்கள் பார்த்தாலோ யாரிடமாவது ஆபாசமாகப் பேசினாலோ குற்றம் இல்லை. ஈவ் டீசிங்கில் வரம்பு மீறாத வரை குற்றம் இல்லை என்று சொல்வது போல மாணவர்களின் இந்த சீரழிவுக் கலாச்சாரத்திற்கும் அப்படி சில வரம்புகளை கற்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் இரண்டையும் பிரிக்கும் கோடு என்பது தற்போது மங்கி வருகிறது.

பாதை எதுவாயிருப்பினும் இலக்கு என்னவாயிருக்கிறது என்பதே முக்கியமானதாகி விட்ட இந்நிலையில், மேற்கொண்டிருக்கும் ‘பாதையில்’ தடுமாறி ஏதேச்சையாக மாட்டிக் கொள்பவர்கள் குற்றவாளியாகிறார்கள் – மாட்டாதவர்களின் கெட்டிக்காரத்தனம் போற்றப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகள் இந்தச் சின்ன வயதிலேயே இணையதளங்கள், செல்பேசிகள் என்று நவீன தொழில்நுட்ப சாத்தியங்களில் புகுந்து விளையாடுவதைப் பார்த்து புளங்காகிதம் அடைகிறார்கள். தமக்கு வாய்க்காத அறிவெல்லாம் தமது பிள்ளைகளுக்கு வாய்த்திருப்பதைப் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். எதேச்சையான சந்தர்ப்பத்தில் குட்டு வெளிப்படும் போது திகைத்துப் போகிறார்கள். நடந்த காரியத்துக்காக மனம் நொந்து போகிறவர்கள் கூட அதன் பின்னே ஒளிந்திருக்கும் காரணத்தைத் காணத் தவறுகிறார்கள். ஓரளவு விபரம் தெரிந்த நடுத்தர வர்க்கத்தினரோ, இவறையெல்லாம் ஒரு வரையறையோடு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்றே கருதுகிறார்கள்.

போதை பொருட்கள்

புழுத்து நாறும் ‘நவீன’ கலாச்சாரம் : உலகமயமாக்கல் வழங்கும் பரிசு..!

“அந்தக் காலத்துல சார்… ஒரு போன் பண்ணனும்னா டிரங்கால் புக் பண்ணனும். அப்பால எப்படா கூப்பிட்டு கனெக்சன் கொடுப்பான்னு தேவுடு காக்கனும். ஒரு வழியா கனெக்சன் கிடைச்சா ஒரே கொர்ர்ர்னு கேட்னு இருக்கும். இப்ப பாருங்க. எல்லார்ட்டயும் செல்போன் இருக்கு. அட, கூலி வேலைக்குப் போறவன் கூட வச்சிருக்கான் சார். இந்த வசதிகளையெல்லாம் அனுபவிக்கனும் சார்” – பேருந்திலோ, தொடர்வண்டியிலோ, தெருமுனை தேநீர்க் கடையிலோ அல்லது வேறு எங்காவதுமோ பொருளாதார உலகமயமாக்கலைப் பற்றிய பேச்சை எடுத்தவுடன் பாடமெடுக்கும் நடுத்தர வர்க்கத்தினரை எங்கும் காணலாம்..

ஆம், தொழில்நுட்பம் உலகமயமாகியுள்ளது. கணினி, இணையம், கைபேசி என தகவல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் மிகப் பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ளது. கைபேசியிலேயே இணையம் பார்க்கும் வசதியும் வளர்ந்துள்ளது. மொத்த உலகமும் தகவல் தொழில்நுட்பக் கண்ணியில் இறுக்கமாகவும், நெருக்கமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தில் மிஷேல் ஒபாமா வடித்த சென்டிமெண்ட் கண்ணீர் அவரது கன்னங்களினூடே வழிந்து ஆண்டிபட்டியில் விழுவதை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதித்துள்ளது. உலகின் கடைக்கோடியில் நிகழும் சம்பவங்கள் கை சொடுக்கும் நேரத்தில் அதன் மறுபக்கத்தின் மக்களைச் சென்று சேர்கின்றன.

பொருளாதார உலகமயமாக்கம் தொழில்நுட்பத்தை மட்டும் உலகமயமாக்கவில்லை – அதோடு சேர்த்து நுகர்வு வெறியையும், அதற்கு ஏதுவான முதலாளித்துவ தனிநபர் கலாச்சாரத்தையும், அது உண்டாக்கும் சமூகச் சீரழிவுகளையும் சேர்த்தே உலகமயமாக்கியுள்ளது. ஆபாசப் படங்கள் தரவிறக்கம் செய்யும் இணைய தளங்கள் இந்தியாவில் சட்ட விரோதம் – ஆனால் மேற்கின் பல்வேறு நாடுகளில் அது சட்டப்பூர்வமானது. கூடவே தொழில்நுட்ப சாத்தியங்கள் தேசங்களின் எல்லைக் கோடுகளைத் தகர்த்தெறிந்துள்ளது. இணைய வெளியில் பாரவிக் கிடக்கும் ஆபாசக் குப்பைகளை எவர் நினைத்தாலும், எந்த நேரத்திலும், எந்த நாட்டிலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்வதை அது சாத்தியப் படுத்தியுள்ளது.

செல்போன் நிறுவனங்கள் சந்தைப் பொருளாதாரம் தோற்றுவித்திருக்கும் கழுத்தறுப்புப் போட்டியைச் சமாளிக்கவும், உலகப் பொருளாதார பெருமந்தம் தோற்றுவித்திருக்கும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் எந்தளவுக்கும் இறங்கிப் போகத் தயாராய் உள்ளன. ஒரு பக்கம் லாப வெறியோடு அலையும் செல்போன் நிறுவனங்கள்; இன்னொரு பக்கம் வெட்டி அரட்டைக் கலாச்சாரத்துக்கும் இணையத்தின் கசடுகளுக்கும் அடிமையாக்கப்பட்ட இளைஞர் கூட்டம். இவர்களிருவரும் ஒருவருக்கொருவர் பொருந்திப் போகிறார்கள்.

இந்தப் பண்பாட்டை மேலும் வளர்த்தெடுத்து கல்லா கட்டும் விதமாகவே விதவிதமான ரீசார்ஜ் கூப்பன்கள், மலிவான விலையில் சிம்கார்டு, மலிவான விலையில் கொரியன் செல்போன்கள், மலிவாக இணைய வசதி என்று செல்போன் நிறுவனங்கள் தங்களிடையே போட்டி போடுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவியுள்ள ஆபாசக் கலாச்சாரத்தில் கால் நனைக்கும் அளவிற்கு ‘துணிச்சல்’ இல்லாதவர்களுக்காகவே இதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக சில நிழல் நிறுவனங்கள் நடத்துகின்றன. செல்போன் நிறுவனங்களும் இதைக் கண்டும், காணாமலும் தொடர அனுமதிக்கின்றன.

மாதச் சம்பளத்துக்காக அமர்த்தப்படும் பெண்கள், குறிப்பிட்ட சில எண்களில் அழைத்தால் மலிவான பாலுணர்ச்சியைத் தூண்டுவது போல் பேசுகிறார்கள். இதற்காகவே, ‘நட்புக்காக அழைக்க வேண்டிய எண்கள்’ ‘தனிமையைத் தீர்த்துக்கொள்ள அழைக்க வேண்டிய எண்கள்’ என்று சம்பந்தப்பட்ட நிழல் நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் செய்கின்றன – மட்டுமின்றி, செல்போன் நிறுவனங்களே குறுந்தகவல்கள் மூலமும் விளம்பரங்கள் செய்கின்றன. இந்த எண்களை அழைத்தால், சாதாரண தொலைபேசிக் கட்டணங்களை விட பல மடங்கு அதிகளவில் செலவாகும். சில நிமிடங்கள் பேசுவதற்கே பல நூறு ரூபாய்களைக் கட்டணமாக வசூலிக்கின்றன. வசூலாகும் கட்டணத்தில் செல்போன் நிறுவனங்கள் கமிஷன் பெற்றுக் கொண்டு அனுமதியளிக்கின்றன. இவை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் சூழலில் பெண்களை பேசி பயன்படுத்த நினைக்கும் மாணவர்களின் செயல் எங்ஙனம் குற்ற உணர்வை ஏற்படுத்தும்?

கலாச்சாரச் சீரழிவு என்பது சூறைக்காற்றில் பரவும் விசம் போல் ஒட்டுமொத்த சமூகத்தின் மேலும் படர்ந்து வருகின்றது. அற்றது நீக்கி உற்றதைப் பருகும் அன்னப் பறவை போல உலகமயமாக்கலின் ‘நற்பயன்களை’ மாத்திரம் பெற்றுக் கொண்டு, அதன் தீமைகளில் இருந்து எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால், தனது பிள்ளை வழி தவறிச் செல்வதை தற்செயலாகவோ அல்லது விசயம் முற்றி விவகாரமாக வெடிக்கும் போதோ அறிய நேரும் பெற்றோர் அவ்வாறு முடியும் என்று இன்னமும் நம்புகிறார்கள்.

ஒரு படையெடுப்பைப் போல் கலாச்சார அரங்கில் நிகழும் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டுமெனில், புறநிலையில் இதற்கு மாற்றான ஒரு புதிய கலாச்சாரத்தை நிறுவ சமூக, பொருளாதாரத் தளத்தில் போராடுவதும், அதை சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த அக நிலையில் போராடுவதுமே உதவி செய்யும். மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதன் ஊடாகத் தான் இந்த மாற்றுக் கலாச்சாரத்தை வரித்துக் கொள்வதும் சாத்தியமாகும். எளிமையாகச் சொல்வதாக இருந்தால் சமூக உணர்வு, பொறுப்பின் மூலமே நுகர்விலும், வருமானத்திலும் தனிநபர் வாதத்தை முன்வைத்து வரும் இந்த கலாச்சார சீர்கேடுகளை அகற்ற முடியும்.

-தமிழரசன்.
_____________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________________________

பெண் விடுதலை கானல் நீரல்ல !

4
புரட்சியில் மகளிர்
பிரெஞ்சு புரட்சியில் பெண்கள்

லைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போதைக்கு ஓய்ந்துவிட்டன. ஆனால் பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன. தூக்கில் போடுவது, ஆணுறுப்பை வெட்டுவது – எனத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியபோதிலும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கான காரணம், இன்றைய சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியலமைப்பில் உள்ளது. இந்தியச் சமூகமானது ஜனநாயகத்துக்கான அரசியல் போராட்டங்களின் ஊடாக உருவாகி வளர்ந்த சமூகமல்ல. நீண்ட நெடுங்காலமாக நீடித்துவரும் சாதி, மத, ஆணாதிக்கம் நிறைந்த நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பும், அதற்கு அக்கம்பக்கமாக தரகு முதலாளித்துவ உற்பத்திமுறையும், அதற்கேற்ற அரசியல், பண்பாட்டு நிறுவனங்களும் காலனிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு நிலைநாட்டப்பட்டன.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கப் பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு-பாலியல் தாக்குதலுக்கு ஆணிவேராக இருக்கும் அதேநேரத்தில், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயமாக்கம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் கண்டிராத வகையில் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம், பெண்களை நுகர்வுப் பண்டமாக்கி எவ்வித விழுமியங்களுமின்றி பாலியல் வன்முறைகளைத் தீவிரமாக்கியிருக்கும் உலகமயமாக்கம்; மறுபுறம், ஆதிக்க சாதி மற்றும மத அமைப்புகள் பெண்கள் மீது கேள்விக்கிடமற்ற முறையில் தொடுக்கும் தாக்குதல்கள், கட்டுப்பாடுகள், கௌரவக் கொலைகள்- என இத்தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

சாதியானாலும், பாலியல் வன்கொடுமையானாலும் இரண்டுக்குமே அடிப்படையாக உள்ள அரசியல்- பொருளாதார கட்டமைவை இன்றைய அரசு பாதுகாக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராக உள்ளது. அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை முதலான அரசின் உறுப்புகளே பெண்களுக்கு எதிரான முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அதை யாரும் தட்டிக் கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாதபடி சட்டத்துக்கு மேலானதாக, தனிவகைச் சாதியாக இருந்துகொண்டு சமூகத்தையே அச்சுறுகின்றன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கொண்டு பெண்கள் மீது கேள்விமுறையற்ற வன்முறைகளில் ஈடுபடும்இராணுவத்தினரை சிவில் கோர்ட்டுகளில் கிரிமினல் சட்டங்களின்கீழ் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்த முக்கியமான சில சீர்திருத்தங்களைக்கூட ஏற்க மறுக்கிறது அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்துள்ள போதிலும், மாநில போலீசு இயக்குனர் முதல் மகளிர் நல அமைச்சகம், வாரியங்கள் உள்ளிட்ட எந்த அரசாங்க உறுப்புகளும் தமது பரிந்துரைகளை வர்மா கமிஷனுக்குக் கொடுக்கவுமில்லை.

வரதட்சிணை தடுப்புச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைத் தாக்குதல்களை தடுக்காத நிலையில், சட்டங்களை அமலாக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிராக உள்ள நிலையில், கடுமையான சட்டங்களாலும் தண்டனைகளாலும் பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்டிவிட முடியாது. நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் – எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.

இவ்விரு நுகத்தடிகளையும் கட்டிக்காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணினத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

பொது வழித்தடத்திற்காக ஒரு போராட்டம் !

0

பொதுவழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!
பெண்கள் உட்பட 100 பேர் கைது!!

DIGITAL CAMERAபொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், பொதுவழித்தட உரிமைக்காகவும் பெரும்பாலை பேருந்து நிலையத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுப்பிரமணி, விவசாயிகள் விடுதலை முன்னணி – காவாக்காடு தலைமை தாங்கினார்.

காவாக்காடு, பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேரி வழித்தடம் மூலமாக விவசாயம் செய்யவும், ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றும், விறகுக்கும் சென்று வரவும் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர். இவ்வழித்தடத்தை காவாக்காடு கிராமம் ஐயண்ணன் மகன் குமாரசாமி கல்நட்டு கம்பிவேலி போட்டு ஆக்கிரமித்துள்ளான். அதற்கு எதிராக பலமுறை பெரும்பாலை காவல்நிலையத்திலும் பெண்ணாகரம் வட்டாட்சியரிடமும் முறையிட்டும் பொதுவழித் தட உரிமையை பெற்றுக் கொடுக்கவில்லை.

அப்பகுதி மக்களின் நியாயமான உரிமைக்கு ஆதரவாக விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு பெரும்பாலை காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் கடைசிநாள் வரை அனுமதி பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

ஏற்கனவே அனுமதி கோரியிருந்த 11.2.2013 அன்று திட்டமிட்டபடி பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் நூற்றுக்கணக்கான மக்கள், பெண்கள் உட்பட முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் போது பெரும்பாலை போலீஸ் அவர்களை கைது செய்தது.

போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதை கவனித்து பெரும்பாலான மக்கள் அங்கு கூடினர். அதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறையும், வருவாய்த் துறையும் பொதுவழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள ஐயண்ணன் மகள் குமாரசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பொது வழித்தடத்தை மீட்டுக் கொடுக்காததால் காவாக்காடு பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு, விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் பின்னணியை விளக்கும் துண்டறிக்கை:

காவாக்காடு மக்களுக்கான இட்டேரி வழித்தடத்தை அபகரிக்க முயலும் முன்னாள் சாராய வியாபாரி இந்நாள் நிலமோசடித் திருடன் குமாரசாமியின் கொட்டத்தை முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் :11-02-2013
நேரம் : காலை 11.00 மணியளவில்
இடம் : பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில்
தலைமை : தோழர் சுப்பிரமணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, காவக்காடு
கண்டன உரை :
தோழர் முருகன், வட்டக்குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
தோழர் ஜானகிராமன், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மாவ செயலாளர், தருமபுரி
தோழர் கோபிநாத், வட்டார செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

வறட்சி போன்ற இயற்கை சீற்றத்தாலும் அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருவதாலும் விவசாயம் அழிந்து வருகிறது. எனினும் தம் நிலங்களை இரத்த உறவுகளாகக் கருதும் விவசாயிகள் உழைத்து உழைத்து பண்படுத்திய நிலங்கள் மீது கொண்ட பாசத்தால் அதை தரிசாக விட மனமின்றி விவசாயம் செய்து வருகிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்தான் காவக்காடு வாழ் விவசாயிகள்.

மற்றொரு புறம் வறட்சி (ம) விவசாய அழிவை பயன்படுத்திக் கொண்டு ரியல் எஸ்டேட் கும்பல்களும், உள்ளூர் ஆதிக்க சக்திகளும் விளைநிலங்களை பறித்து வருகிறார்கள். அந்த வகையில், காவாக்காடு பகுதியில் முன்னாள் கள்ளச்சாராய வியாபாரியும், இன்னாள் நிலமோசடித் திருடனுமான குமாரசாமி விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகிறான்.

இட்டேரி வழித்தட உரிமை பறிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு செய்யும் குமாரசாமி தலைமையிலான திருட்டுக் கும்பல்

காக்காடு, பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேரி வழித்தடம் மூலமாக தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் காடுகளுக்குச் சென்று வந்தனர். ஆடு, மாடுகளை இந்த வழியாக மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தை தடுத்து அராஜகமாக பிரச்சனையை தொடங்கினான் ஐயண்ணன் மகன் குமாரசாமி. இதற்கு துணை நின்றது பெரும்பாலை முனுசாமி செட்டி மகன் கோவிந்த செட்டி. இவ்வளவுக்கும் இட்டேரி வழித்தடம் செங்கம் என்பவரின் நிலத்தில்தான் உள்ளது. இதை மூடி மறைத்து தன் நிலத்தில் உள்ளதாகக் கூறி அடாவடியாக தடுத்தான் குமாரசாமி. இதற்காக சேலத்தில் இருந்து ரௌடிகளை கூட்டிவந்து சாராயம் கறி விருந்து வைத்து ரௌடித்தனம் செய்தான். துப்பாக்கி, வெடிகுண்டு, அரிவாள் போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்டு மக்களை தாக்கினான். காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வு செய்து இந்த ரௌடிகள் மீது வழக்கு தொடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த குமாரசாமி, தன் குடும்ப பெண்ணை கற்பழிக்க முயன்றதாக தாழ்த்தப்பட்டோர் மீது பொய் வழக்கு தொடுத்தான். ஆதாரமில்லாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பிறகு, தள்ளாடும் முதியோர்கள் உள்ளிட்ட 54 பேர் மீது தங்களை தாக்க வந்ததாக பொய்வழக்கு போட்டான். இதனால் மூன்று ஆண்டுகளாக பிழைப்பு கெட்டு 54 பேரும் வாய்தா, வாய்தா என்று நீதிமன்றங்களில் படிக்கட்டுகள் ஏறி இறங்குகின்றனர்.

மேலும் இது தொடர்பாக காவக்காடு கீழ் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவரது தாயார் வெள்ளை மூஞ்சு, சுந்தரம் ஆகியோரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளனர். பின்னர் மரத்தில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதற்கு குமாரசாமி மீது பி.சி.ஆர். வழக்கு தொடுக்கப்பட்டு நடந்து வருகிறது.

மாதையன் சொத்தை ஆட்டையைப் போட்ட குமாரசாமி.

காவக்காடு மாதையன் – சிவலிங்கம் ஆகியோரது பாட்டனாரின் 10 ஏக்கர் நிலத்தை அரசு அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு பொய் பட்டா தயாரித்து கோவிந்த செட்டியும், குமாரசாமியும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். இவர்களிடையே போட்டி ஏற்படவே, இந்த நிலத்தின் மதிப்பை குறைக்கவும், கோவிந்த செட்டியை தன் வழிக்கு கொண்டு வரவும் இட்டேரி வழித்தடத்தை தடுத்தான் குமாரசாமி. இதன் மூலம் அந்நிலத்தை தன் பெயரில் வாங்க அக்ரிமென்ட் பட்டா பெற முயன்றான்.

இந்நிலையில் சென்ற ஆண்டில் குமாரசாமியின் புகாரின் பேரில் நிலமோசடி செய்ததாக மாதையன் – சிவலிங்கம் மீது வழக்கு தொடுத்து சிவலிங்கம் மற்றும் மாதையன் மனைவியை கைது செய்து சிறையில் தள்ளியது பெரும்பாலை போலீஸ். தானும் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சிய மாதையன் தனது வீட்டிற்கு வராமல் தலைமறைவாக இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி 3 ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு மாதையன் வீட்டையும் காட்டையும் இடித்து நிரவி ஆக்கிரமிப்பு செய்து கொண்டான் குமாரசாமி. இதைத் தடுக்க வந்த மாதையனின் தாய், மகள்களை அடித்து துரத்தினான்.

தொடரும் குமாரசாமியின் அக்கிரமங்கள்

குமாரசாமி சொத்து சேர்த்த வரலாறு காவக்காடு சுற்றுப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். இதை அவனே பலமுறை பெருமைபட பேசி வருகிறான். “பெரும்பாலை போலிஸ் நிலையம் என் சட்டை பாக்கெட்டில்” என்று மக்கள் மத்தியிலேயே பேசி வருகிறான். இட்டேரி பொது வழித்தடப் பிரச்சனையிலும் இதே எண்ணத்தில்தான் துணிவோடு ஆக்கிரமித்து வருகிறான்.

இட்டேரி சம்பந்தமாக 90/12, 8/13 என்ற குற்ற எண்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் போலீசை தன் சாராய பணத்தைக் கொண்டு சமாளித்து விடலாம் என்ற பணத்திமிரில் 28-12-2012 அன்று ஜே.சி.பி. மூலம் இட்டேரி வழித்தடத்தை அழிக்க முயன்றான். சட்டவிரோதமாக செயல்படும் குமாரசாமியை கைது செய்யாமல் இதை எதிர்த்துப் போராடிய பெண்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு போட்டு 4 பேரை சிறையில் அடைத்தது பெரும்பாலை போலீஸ்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை என்று போலீசும் வட்டாட்சியரும் அழைத்தனர். பிறகு 2 நாள் கழித்து வருவதாகவும் அதுவரை குமாரசாமி வேலி போடக்கூடாது என்று கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் இதற்கிடையில் அதிகாரிகள் கூறியதை ஏற்காமல் திடீரென ரவுடிகளை அழைத்து வந்து 1-2-2013 அன்று நள்ளிரவில் சட்டவிரோதமாக கம்பிவேலி போட்டு விட்டான். இதன் பிறகு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை அறிந்து ரௌடிகளை வீட்டிலேயே வைத்துக் கொண்டான். 4-2-2013 அன்று அவ்வழித் தடத்தில் ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை குமாரசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அந்த ரௌடிகள் கொடிய ஆயுங்களுடன் வந்து வெறியுடன் தாக்கியியுள்ளனர். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரசாமி தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமல்ல தன்னுடை வன்னி சாதி மக்களின் சொத்துளையும் இவ்வாறே ஆக்கிரமித்தும், அவர்களுடைய வழி உரிமையை பறித்தும், அவர்கள் மீது பொய் வழக்கு போட்டும் தொல்லை கொடுத்து வருகிறான்.

சமூக விரோதிகளின் விருட்சம் தனியார்மயம்!

வன்னிய சாதியை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று மக்களின் தாலியறுத்த குமாரசாமி இன்று தனியார்மயம் வந்த பிறகு அதிகாரிகள்-ஆட்சியாளர்கள் என எங்கும் லஞ்சம், ஊழல் புழுத்து நாறத் துவங்கியது. நேர்மை, நீதியெல்லாம் பணத்தால் வாங்கப்படும் சரக்காகி விட்டது. தன் சாராய பணத்தால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இன்று பெரும் ஆதிக்க சக்தியாக வளர்ந்துள்ளான். இப்பணத்தை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டியும் வருகிறான். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கண்டு அஞ்சிய இவன் இன்று ஆதி சக்தியாக வாழ்வதற்கு தனியார்மயம் என்ற முதலாளித்துவ கொள்கையே காரணம்.

வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே குமாரசாமியை மண்டியிடச் செய்ய முடியும்!

ஒரு காலத்தில் சாராய வியாபாரியாக இருந்த பொழுது உள்ளூர் மக்களே குமாராசாமியை அடித்து உதைத்து உள்ளீர்கள். இன்று இவனது பணபலம் பொய்வழக்கு போடுவதை பார்த்து அஞ்சுகிறீர்கள். உங்களது அச்சம் என்ற சிறையினால்தான் குமாரசாமி ஆதிக்கத் திமிர் தொடர்கதையாகிறது. நீங்கள் அச்சத்தை தூக்கி எறிந்தால் மறுகணமே அவனது ஆதிக்கம் முடிவுக்கு வரும். சட்டரீதியாக போராடுவது மட்டுமின்றி வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே குமாரசாமிக்கு பாடம் புகட்ட முடியும்.

தமிழக அரசே!

  • விவசாயிகளின் நிலங்களை அபகரித்து தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து வரும் குமாரசாமியை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
  • விவசாயிகளிடமிருந்து அபகரித்த நிலங்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு திருப்பி வழங்கு!
  • விவசாயிகளை அச்சுறுத்தும் சமூக விரோதிகளுக்கு துணை போகாதே!

உழைக்கும் மக்களே!

  • குமாரசாமி போன்ற சமூக விரோதிகளுக்கு வீதியில் இறங்கி பாடம் புகட்ட ஒன்றிணைவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம்.
தொடர்புக்கு 9943312467

தகவல்:  செய்தியாளர், பென்னாகரம்

கிரானைட் ஊழல் : பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது !

4

கிரானைட் ஊழல் : பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது! புஸ்வாணம் ஆகின அரசு நடவடிக்கைகள்!

நூற்றுக்கணக்கான வழக்குகள், விதவிதமான தனிப்படைகள், கிரானைட் குவாரிகளில் ரெய்டு, சிறிய விமானம் மூலம் கற்களை அளவிடுதல், வங்கிக்கணக்குகள் முடக்கம், மக்களிடமிருந்து புகார் பெறும் முகாம்கள், கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வரின் அறிவிப்பு என ஊடகங்களில் விஸ்வரூபமாய பெரிதாக்கி காட்டப்பட்ட பல லட்சம் கோடி கிரானைட் மெகா ஊழல் ஜெயா அரசின் பேரத்திற்கான நாடகம்தான் என தற்போது ஊரறிய அம்பலமாகியுள்ளது. கிரானைட் முதலாளிகள்-அனைத்து ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் – அரசு உயர் அதிகாரிகள்-நீதிபதிகள் கொண்ட கொள்ளைக் கூட்டம்   சேர்ந்து நடத்திய கிரானைட் ஊழல் மீதான நடவடிக்கைகளை ஊத்தி மூடுவதற்கான வேலைகள் தேர்ந்த முறையில் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன. கிரானைட் முதலாளிகளுக்கும் ஊழலில் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கும் ஆதரவாக சட்டச் சிக்கல்கள் இன்றி எவ்வாறு முடிப்பது என்பதே தமிழக அரசின் முன் தற்போதுள்ள பிரச்சனை. இவ்வாறு முதலாளிகளுக்கும் அரசுக்கும் வழக்கை முடிக்கும் தேவை வரும் போதெல்லாம் அவர்கள் நம்பிக்கையோடு அணுகுவது நீதி மன்றங்களைத்தான். அந்த வகையில் கிரானைட் வழக்குகளுக்கு சமாதிகட்டும் திருப்பணியை மதுரை உயர்நீதிமன்றம் சட்டப்படி செவ்வனே செய்து முடித்து விட்டது.

ஊடகங்களின் பொய்யுரை

‘ஜெயலலிதா ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற திறமையான, நேர்மையான நிர்வாகம் நடக்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என்று தினமலர், துக்ளக், தினமணி, ஆனந்தவிகடன், இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்களில் பரப்பி வந்த கருத்தும் கிரானைட் ஊழல் விவகாரத்தில் பொய் என்றாகி விட்டது.

பி.ஆர்.பி.க்கு தேர்ந்த முறையில் கொள்ளையடிக்கச் சொல்லிக் கொடுத்தவர்கள் என்பதுடன் அதற்காக மாதச் சம்பளமும் பெற்றவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக கிரானைட் ஊழலில் பங்காளிகளாக இருந்த அதிகாரிகளைக் கொண்டே, இந்த ஊழல் மீதான நடவடிக்கை என்ற நூதன நாடகம் தொடங்கப்பட்ட போதே இது கதைக்குதவாது எனத் தெரிந்து விட்டது. கிரானைட் ஊழல் தொடர்பான ஆவணப்படம் தயாரிக்க மக்களிடம் நாங்கள் சென்ற போது “அரசாங்கம்-போலீசு-நீதிமன்றத்தை நம்ப முடியாது. நேற்று வரை பி.ஆர்.பி.யிடம் வாங்கித் தின்றவர்கள்தான் இவர்கள். பணம் கொடுத்து மீண்டும் பி.ஆர்.பி. வந்து விடுவார்” என்பதே அனைத்து மக்களின் கருத்தாகவும் இருந்தது. அக்கருத்து, 100 சதவீதம் சரியென இப்போது நிரூபித்திருக்கிறது ஜெயா அரசு.

அரசுதான் குற்றவாளி

  • இந்திய நீதித்துறையில் இதுவரை இல்லாத வகையில் வழக்கு எண், புகார்தாரரின் பெயர் இல்லாமல், 5 காவல் நிலையங்களின் பெயரைக் குறிப்பிட்டு மேற்படி காவல் நிலையங்களில் எந்த வழக்கிலும் பி.ஆர்.பி. மற்றும் குடும்பத்தினரைக் கைது செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் சட்டவிரோத உத்தரவை பிறப்பித்தார். அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.
  • கிரானைட் கொள்ளைபி.ஆர்.பி. மீது போடப்பட்டுள்ள 32 வழக்குகளில் 17-ல் மட்டும் கைது செய்து விட்டு, மீதி வழக்குகளில் முன் ஜாமீன் வாங்க அரசே அனுமதித்தது.
  • வாழ்வுரிமைக்காக போராடிய அப்பாவி இடிந்தகரை மூதாட்டி 63 வயதான ரோசலின் மேரிக்கு ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்து, கூடங்குளத்துக்கு மாறுதல் செய்ய நீதிபதி சி.டி.செல்வம் மறுத்ததால் அப்பெண்மணி மதுரையில் இறந்தே போனார். ஆனால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு வசதி கொண்ட பி.ஆர்.பி., துரைதயாநிதிக்கு குற்றம் நிகழ்ந்த இடத்திலேயே கையெழுத்திட அனுமதி. ஒரு வாரத்திலேயே துரை தயாநிதிக்கு நிபந்தனை ரத்து. இது எப்பேர்ப்பட்ட அநீதி!
  • கண்மாய்கள், பெரியாறு பாசனக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, மாவட்ட ஆட்சியர், உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஒப்புக் கொண்ட பின்பும் இன்றுவரை ஆக்கிரமிப்புகளில் ஒரு கல்லைக் கூட அசைக்கவில்லை.
  • 15 ஸ்டான்டர்டு ஏக்கருக்கு மேல் ஒருவர் நிலம் வைத்திருக்கக் கூடாது என சட்டம் உள்ள போது, 23 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பி.ஆர்.பி. குடும்பத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. சட்டம் என்ன செய்கிறது? யாருக்குச் சலாம் போடுகிறது?
  • பி.ஆர்.பி. வழக்கிற்கு முன்பு சாதாரண மக்கள் தாக்கல் செய்த ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பி.ஆர்.பி.யின் ரிட் மனுவிற்கு தீர்ப்பு, ரிட் அப்பீல் மனுவிற்கு விசாரணை முடிவடைந்துள்ளது. பல லட்சம் பணம் இருந்து உச்ச-உயர்நீதின்ற மூத்த வழக்கிறஞர்களை நியமித்தால் வழக்கு முடிவுறும் என்றால் காசுள்ளவனுக்கே நீதி. இந்திய நீதித் துறையில் நிலவும் மிகப்பெரிய அநீதி இது!
  • கடந்த ஆறு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் களத்தில் இறங்கி கிரானைட் கற்களை அளவிட்டு முடித்த பின், மறுபடியும் அளவிட மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ஒப்புக் கொண்டது ஏன்? விசாரணையை இழுத்தடிக்கத்தான்.
  • ‘திறமையான’ போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட தமிழக போலீஸ் துரைதயாநிதியை இரண்டு மாதங்களாகப் பிடிக்க முடியவில்லை என்பது நம்புகின்ற கதையாக இல்லை.
  • இக்கொள்ளையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அரசு உயரதிகாரிகளில் ஒருவரைக் கூட ஜெயா அரசு கைது செய்யவில்லை.
  • கிரானைட் முதலாளிகளின் ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை இல்லை.
  • ஒரு பஸ் கண்ணாடியை உடைத்தாலே ரூ 5000/- டெபாசிட் வாங்கிவிட்டு ஜாமீன் வழங்கும் உயர்நீதிமன்றம் அரசு கணக்குப்படியே ரூ 16 ஆயிரம் கோடி கொள்ளைக்கு ஒரு ரூபாய் கூட டெபாசிட் இன்றி பி.ஆர்.பி., அழகிரி மகன் துரைதயாநிதிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு கூட வழங்கப்படவில்லை.
  • 8 மாதங்களாகியும் எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

பேரம் படிந்தது, நாடகம் முடிந்தது…!

கிரானைட்: மெகா கூட்டணி மகா கொள்ளையில் இவ்வாறாகத்தானே கொள்ளைக்காரர்களுக்கும் கொள்ளைக்காரிக்கும் இடையிலான பேரம் படிந்தது, நாடகம் முடிந்தது. வழக்குகள் வாய் பிளந்து விட்டன. அதிகாரிகள் மாறுதலை (டிரான்ஸ்பர்) எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நீதிபதிகள் செஞ்சோற்றுக் கடன் தீர்த்ததற்காக புத்தம் புதிய நோட்டுக் கட்டுகளுடன் பரிசு (சூட்கேஸ்) பெற்றுக் கொண்டு விட்டனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்கின்றன. ஓட்டு போடும் இயந்திரங்கள் (மக்கள்) அதுவரைக்குமா நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள். சேச்சே, அதெல்லாம் இருக்காது. இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது நமது நாட்டின் அரசியல் பொருளாதார மெகா சீரியல்கள்.

ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் இரும்பு, நிலக்கரி சுரங்க ஊழலில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்கள் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பி.ஆர்.பி., துரை தயாநிதி ஜாமீனை, மீன்கடையில் வாங்குவதைப் போல் வாங்கி விட்டனர். தமிழ்நாட்டில் நீதித்துறையின் மாண்பு இதுதான். இந்த லட்சணத்தில் இவர்களெல்லாம் மைலார்டுகளாம்; ஹை பிராடுகள் என்று மக்கள் சொல்கின்றனர்.

ஊழலில் புழுத்து நாறும் அரசு-நிர்வாகம்

மேற்கண்ட உண்மைகளெல்லாம் தமிழக அரசாலோ நீதித்துறையாலோ மறுக்க முடியாதவை. இவ்வாறு கொள்ளையர்களான முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும் இடமாக பாராளுமன்றம், சட்டமன்றங்களும், அதை செவ்வனே அமல்படுத்தும் நடவடிக்கையில் நிர்வாக, நீதித்துறைகளும் என ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு முறையே ஊழலில் அழுகி நாறியுள்ளது. நிலவி வரும் முதலாளிகளுக்கு ஆதரவான இந்த அமைப்பு முறையின் மூலம் ஊழல் குற்றவாளிகளைத் தண்டிக்கவே முடியாது என்பது நிதர்சனம்.

கிரானைட், அலைக்கற்றை, நிலக்கரி, இரும்பு, தண்ணீர், மணல் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களும், பொதுச் சொத்துக்களும் முதலாளிகளுக்கு அப்படியே தாரை வார்க்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் அரசே நடத்த முடியாது என்று சொல்லி விட்டு, முதலாளிகளின் தொழில்களைப் பாதுகாப்பதற்காக அரசால் செலவழிக்கப்படும் பல ஆயிரம் கோடிகளும், பல லட்சம் கோடி வரிச்சலுகைளும் அரசு சொல்வது பொய் என்பதை அம்பலப்படுத்துகின்றன.

ஊழலுக்கு அஸ்திவாரமாய் இருக்கும் அதிகார வர்க்கத்தை மறைத்து விட்டு அரசியல்வாதிகளை மட்டும் ஊழல் பெருச்சாளிகளாகக் காட்டுவது, ‘நாட்டின் பொதுச்சொத்துக்களை ஏன் தனியாருக்கு கொடுக்க வேண்டும்?’ என்று கேள்வியெழுப்பாமல் அதில் வெளிவரும் ஊழல், முறைகேடுகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டி மக்களை திசை திருப்புகின்றன ஊடகங்கள். ஏனெனில் ஊடகங்களும் முதலாளிகளுக்குச் சொந்தமானவையே.

எனவே முதலாளிகளுக்கு ஆதரவான, அவர்களைப் பாதுகாக்கும் சட்டம், நீதித்துறை, அதிகாரவர்க்கம், ஆட்சிமுறையைக் கொண்டு முதலாளிகளை எந்தக் காலத்திலும் தண்டிக்க முடியாது. ஊழலையும் ஒழிக்க முடியாது. முதலாளிகளைத் தண்டிக்கவும், ஊழலை ஒழிக்கவும் வேண்டுமென்றால் மக்களைப் பாதுகாக்கும் சட்டம், ஆட்சிமுறையை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கேற்ற அதிகாரம் வேண்டும். இதை இன்றைய ஓட்டுச் சீட்டு, பாராளுமன்றம் மூலம் அடைய முடியாது. புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே மக்களைப் பாதுகாக்கும் சட்டம், ஆட்சி முறையை ஏற்படுத்த முடியும். ஊழல் பேர்வழிகள், மக்கள் விரோதிகளைத் தண்டிக்க முடியும். நம்மையும், நாட்டையும், பாதுகாக்க புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

மதுரை மாவட்டம்

தொடர்புக்கு : –
ந. குருசாமி (விவிமு) 98943 12290
ப.ராமலிங்கம் (மகஇக) 97916 53200

கிரானைட்: மெகா கூட்டணி-மகா கொள்ளை (DVD) ஆவணப்படம் (இப்போது விற்பனையில்)

— தகவல் : மதுரை மாவட்ட புரட்சிகர அமைப்புகளின் துண்டறிக்கை

கருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் !

29

அர்ச்சகர்கள்
னைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தொடர்பான வழக்கு வரும் 20-2-13 அன்று உச்சநீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்கு வருகிறது.

நீதிபதிகள் லோதா, செல்லமேஸ்வர் ஆகியோர் வழக்கறிஞர்களிடம் “ஒரு தேதியை சொல்லுங்கள் அன்று முழுமையாக வாதத்தை கேட்கிறோம்” என்று கேட்டனர். சிவாச்சாரியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்களிடமும் அரசு தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் அவர்களிடமும் அர்ச்சக மாணவர்கள் தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனா,  காலின் கான்சால்வேஸ் மற்றும் வழக்கறிஞர் கோவிலன் பூங்குன்றன்அவர்களிடமும் அவர்களிடமும் உறுதிப்படுத்தி இந்த தேதியை குறித்தனர்.

பெரியார் அறிவித்த கருவறை போராட்டக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு கோவிலில் வாரிசுரிமை அர்ச்சகர் நியமன முறை ஒழிக்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இன்றுவரை பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் அர்சச்கராக முடியவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2006ம் ஆண்டு அதற்கான சட்டத்தை  தமிழக அரசு கொண்டு வந்த வேகத்தில் மதுரை பார்ப்பன சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். பெரியாரின் போராட்டம் நடந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதே பிரச்சினை நேரடியாக நம்முன் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு

  • ‘பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும்’ என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் முக்கிய வழக்கு.
  • சாதித் தீண்டாமையை பாதுகாக்கும் ஆகமம் பெரிதா? தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் அமைப்பு சட்டம் பெரிதா? என்பதை தீர்மானிக்கவிருக்கும் முக்கிய வழக்கு.

அன்று அரசும் பார்ப்பன அர்ச்சகர் தரப்பும் மட்டுமே வழக்கை நடத்தியதால் 1970ல் வெற்றி பெற்றும் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டோம். இன்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தரப்பில் நாம் மூன்றாவது தரப்பாக வாதிட உள்ளோம். கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது வாதம்.

அரசு ஒரு நாளும் பார்ப்பனர்களுக்கு எதிராக இந்த வாதத்தை முன்வைக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தகுதி உடையவர்கள் யாராக இருந்தாலும் சாதி பார்க்காமல் அர்ச்சகர் பணி நியமனம் வழங்க வேண்டும்; அர்ச்சகர் வேலையும் பொது வேலைவாய்ப்புதான்; அதில் பிறப்பை மட்டும் தகுதியாக பார்ப்பது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு என்பதையும் வாதிட உள்ளோம்.

வழக்கு செலவுகளுக்காக நிதி வழங்கி அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

நெட்பாங்க்கிங் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

0

புதிய-ஜனநாயகம்-பிப்ரவரி-2013

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. ”சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்” தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-போராட்டம்
  2. பெண் விடுதலை கானல் நீரல்ல!
  3. பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!- அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணும்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.
  4. ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!
  5. தனியார்மயம் – தாராளமயம் : வன்முறை வக்கிரப் பண்பாட்டை வளர்த்து விடும் விஷக்கிருமி!
    உலகமயம் பெண்கள் மீது உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல் என்ற இரண்டு விலங்குகளைப் பூட்டியிருக்கிறது.
  6. பெண்கள் மீதான வன்முறை : தீர்வு அளிக்கும் திசை எது?
    சட்டச் சீர்திருத்தங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், பெண் விடுதலைக்குப் புரட்சிகரப் போராட்டங்களே ஒரே மாற்று.
  7. அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் : யார் குற்றவாளி?
  8. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்: பார்ப்பன ஜெயா அரசின் சூழ்ச்சி
  9. விஸ்வரூபம்: பாசிச ஜெயாவுக்கு ஒளிவட்டம் சூட்டிய இசுலாமிய அமைப்புகளின் போராட்டம்!
  10. ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அடுக்கமாட்டாத அவதூறுகள்
    ராமதாசு கும்பல் துணிந்து பரப்பும் ஆதிக்க சாதிவெறியைக் கண்டித்துப் போராட ஓட்டுக்கட்சிகளுக்குத் துப்பில்லை.
    சரணாகதிதான் திருமாவின் எதிர்வினையா?
  11. இப்போது விற்பனையில்:
    சாதி, தீண்டாமை ஒழிப்பு : என்ன செய்யப் போகிறீர்கள்?
    சாதி : ஆதிக்க அரசியலும், அடையாள அரசியலும்
    முதலாளித்துவ ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் – லெனின்
    முதலாளித்துவம் ஒரு பேய்க் கதை – அருந்ததி ராய்
    தொழிற்சங்கங்கள் பற்றி சில கட்டுரைகள் – லெனின்
    மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் – லெனின்
  12. அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்: மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?

 புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

உலக நாடுகள் ஆதரவுடன் சிஐஏ சித்திரவதை !

3
சுதந்திர தேவி

டந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ.  நடத்திய சட்ட விரோத, மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை குறித்த  ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற பெயரில் சி.ஐ.ஏ.வால் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட நபர்களைப் பற்றிய விபரங்களும், சி.ஐ.ஏ.வுடன் ஒத்துழைத்து தம் நாட்டு குடிமக்களை அமெரிக்காவிடம் கையளித்த நாடுகளின் பட்டியலும் முதல் முறையாக தொகுக்கப்பட்டுள்ளன.

நியூயார்க்கைச் சேர்ந்த ஓப்பன் சொசைட்டி பவுண்டேசன் அமைப்பின் ஒரு பகுதியான ஓப்பன் சொசைட்டி ஜஸ்டிஸ் பவுண்டேசன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

’54 நாடுகள் தமது நாட்டு சட்டங்களுக்கும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்களுக்கும் விரோதமாக அமெரிக்க உளவுத் துறையின் சிறைப்படுத்தல், சித்திரவதை நடவடிக்கைகளில் பங்கேற்றன’ என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பொதுவில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 136 நபர்களைப் பற்றிய விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  ‘இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்’ என்றும் ‘அமெரிக்க அரசும் பங்கேற்ற மற்ற அரசுகளும் தகவல்களை வெளியிடுவது வரை பாதிக்கப்பட்ட மற்றவர்களைப் பற்றிய விபரங்கள் மர்மமாகவே நீடிக்கும்’ என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்று அமெரிக்க அரசு போட்டுக் கொடுக்கும் பாதையில் நடைபோடும் உலக நாட்டு அரசுகள், அமெரிக்க அரசு ‘உம்’ என்று சொன்னால் தமது நாட்டின் சட்டங்களையும், நாட்டு மக்களின் நலன்களையும், பன்னாட்டு மனித உரிமை சட்டங்களையும் உதறி விட்டு அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் காலில் விழுந்து விடுகின்றன என்பதை இந்த அறிக்கை ஆதாரங்களுடன் நிறுவுகிறது.

‘உலகளாவிய இசுலாமிய பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்’ என்று சவுண்டு விட்டு உலகெங்கும் போர்களை நடத்தும் அமெரிக்க அரசுதான் மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதி என்பதை இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள விபரங்கள் தெளிவாக்குகின்றன.

  • 2004ம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரிய நாட்டுப் பெண் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அறையில் அ மெரிக்க உளவுத் துறையினால் பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார்.  நான்கரை மாத கர்ப்பமாக இருந்த பவுச்சரை சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து நாட்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
  • ஈரானில் பிடிக்கப்பட்ட வேசம் அல்துல்ரஹ்மான் அகமது அல்-தீமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத் துறையின் இருண்ட சிறையில் 77 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்தப்பட்டு தூங்க விடாமல் செய்வது, கூரையில் கட்டித் தொங்க விடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களை பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடு வலியால் அலறும் சத்தத்தைகேட்க வைப்பது என்று 40 நாட்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்.
  • ‘அமெரிக்க மீதான விமான தாக்குதல்களை திட்டமிட்டவர்’ என்று குற்றம் சாட்டப்பட்டு குவான்டனாமோ பே சிறையில் விசாரிக்கப்பட்டு வரும் காலித் ஷேக் மொகமது பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டவர். சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க உளவுத் துறையிடம் ஆப்கானிஸ்தானில் ரகசியமாக ஒப்படைக்கப்பட்டு, போலந்துக்கு கடத்தப்பட்டார். அங்கு அவர் 183 முறை தண்ணீர் சித்திரவதை செய்யப்பட்டார்.

இசுலாத்தின் புனித பூமியான சவுதி அரேபியாவை ஆளும் மன்னர்களிலிருந்து பாகிஸ்தான், மலேசியா, சிரியா, லிபியா, ஜோர்டான், இந்தோனேஷியா போன்ற இசுலாமிய குடியரசுகளும்,  ஆப்கானிஸ்தான், எகிப்து,  ஜோர்டான், சிரியா, துருக்கி போன்ற அமெரிக்க கூட்டாளி அரசுகளும் அமெரிக்க உளவுத் துறையின் உள்ளூர் கிளைகள் போல செயல்பட்டிருக்கின்றன.

‘மனித உரிமைகளின் உன்னத காவலர்கள்’, ‘புனிதமான முதலாளித்துவத்தின் உறைவிடங்கள்’ என்று தூக்கிப் பிடிக்கப்படும் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளும், ஆஸ்திரேலியா,  கனடா போன்ற சுதந்திரத்தின் விளக்குகளும், ஆஸ்திரியா, பெல்ஜியம்,  ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல்,  ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற முன்னேறிய ஐரோப்பிய நாடுகளும் திரைமறைவில் சி.ஐ.ஏ.வுக்கு செய்து கொடுத்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க உளவுத் துறைக்கு தம் நாட்டில் சிறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உளவுத் துறை பிடிக்க விரும்புபவர்களை பிடிக்கவும் கடத்தவும் உதவி செய்தல், ரகசிய விமானங்கள் தம் நாட்டுக்குள் வந்து போக அனுமதித்தல் என்று பல வகையில் அமெரிக்க உளவுத் துறைக்கு ஊழியம் புரிந்திருக்கின்றன இந்த நாடுகள்.

  • டிசம்பர் 2012ல் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ‘மாசிடோனிய அரசு அமெரிக்க உளவுத் துறையுடன் ஒத்துழைத்தது மூலம் காலித்-எல்-மஸ்ரியின் மனித உரிமைகளை மீறியது’ என்று தீர்ப்பளித்தது. அமெரிக்க உளவுத் துறை காலித்தை சித்திரவதை செய்ததையும் அது உறுதி செய்தது.
  • ‘எகிப்து நாட்டைச் சேர்ந்த அபு ஓமரை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கடத்திச் சென்றனர்’ என்று இத்தாலிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
  • இது போன்ற பல வழக்குகள் போலந்து, லித்துவேனியா, ரோமேனியா, இத்தாலி நாடுகளில் உள்ள ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்திலும், ஆப்பிரிக்க மனித உரிமைகள் கழகத்தின் முன்பும், எகிப்து, ஹாங்காங், இத்தாலி, இங்கிலாந்து நாட்டு உள்ளூர் நீதிமன்றங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் மீதான விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ‘அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுப்பதாக’ அறிவித்தார்.  ‘நீங்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும்’ இல்லை என்றால், ‘நீங்கள் எதிரிகளின் பக்கம் என்று எடுத்துக் கொள்வோம்’ என்று வெளிப்படையாக அனைத்து உலக நாடுகளையும் மிரட்டினார்.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் தொடர்ந்து நடக்கும், பல வடிவங்களில் நடக்கும், சில வெளிப்படையான நடவடிக்கைகளாக நடக்கும், பல தாக்குதல்கள் பற்றிய விபரங்கள் வெளியில் வரவே போவதில்லை’ என்றும் அமெரிக்க மக்களிடமும் உலகத்தின் முன்னும் தாம் செய்யவிருக்கும் எல்லா சட்ட விரோத, மனித விரோத செயல்களுக்கும் முன் தேதியிட்ட ஒப்புதல் வாங்கியிருந்தார்.

அதைத் தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்களாக கருதப்பட்ட, அமெரிக்க விரிவாக்கத்தை எதிர்ப்பவர்களாக அடையாளம் காட்டப்பட்ட நூற்றுக் கணக்கான நபர்களை சட்ட விரோதமாக சிறை பிடிப்பது, உள்ளூரிலேயே அடைத்து வைத்து சித்திரவதை செய்வது, சட்டத்துக்கு புறம்பாக கடத்திச் செல்வது,  அமெரிக்காவுக்குச் சொந்தமான கியூபாவில் இருக்கும் குவான்டாமோ பே சித்திரவதை மையத்தில் குவித்து வைப்பது என்று பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விட்டது அமெரிக்க உளவுத் துறை.

ஜார்ஜ் புஷ்ஷின் இரண்டு நான்காண்டு ஆட்சிக் காலங்கள் முடிந்து 2009ல் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் இது போன்ற கடத்தல் நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை. 2009ம் ஆண்டு உலக மக்களின் கருத்து தமக்கு எதிராக திரும்புவதை தவிர்ப்பதற்காக சித்திரவதையை சட்ட விரோதமாக்குவதாகவும், உளவுத் துறை நடத்தி வரும் சிறைகளை மூடுவதாகவும் ஒபாமா அறிவித்தாலும், உளவுத் துறையின் குறுகிய கால சிறைபிடித்தலையும் விசாரணைகளையும் அமெரிக்க அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது. சட்டவிரோதமான கடத்தல்கள் பற்றிய இப்போதைய அமெரிக்க அரசின் கொள்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க அரசும் அதனுடன் சேர்ந்து செயல்பட்ட மற்ற நாட்டு அரசுகளும் தமது குற்றங்களை ஒத்துக் கொண்டு, உலகம் முழுவதும் அமெரிக்க உளவுத் துறை நடத்திய கொடுமைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது. ரகசியம் என்ற திரைக்குள் மறைந்து கொண்டு தமது ஆட்களின் செயல்களுக்கு பொறுப்பேற்காதது வரை சித்திரவதை முதலான கொடுமைகளுக்கான குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது“ என்கிறார் இந்த அறிக்கையின் ஆசிரியர் அம்ரித் சிங்.

“இந்த சட்ட விரோத செயல்களில் 54 நாடுகளை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டதன் மூலம் அமெரிக்கா நீண்ட நாட்களாக பின்பற்றப்படும் பன்னாட்டு மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டங்களை மீறியிருக்கிறது” என்கிறார் அம்ரித் சிங். இந்த அமெரிக்காவும் அதன் தலைமையிலான சர்வதேச சமூகமும் தான், ஈழப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரித்து நியாயம் வாங்கித் தரும் என்று தமிழ் தேசிய வாதிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆய்வு அறிக்கைகளும் நீதிமன்ற வழக்குகளும் அமெரிக்காவின் விரிவாக்க நடவடிக்கைகள் மீது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது நிதர்சனம். இராணுவ மற்றும் அரசியல் வலிமைகளைப் பயன்படுத்தி உலக நாட்டு அரசாங்கங்களை மிரட்டி தனது நோக்கங்களுக்கு பணிந்து போக வைக்கும் அமெரிக்க அரசு ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் இது போன்ற மனித உரிமை மீறல்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.
___________________________________________
அப்துல்
____________________________________________

மேலும் படிக்க

ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !

16

“விசுவரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா?” என்ற கோணத்தில் மட்டுமே இப்பிரச்சினை குறித்த விவாதம் நடந்திருக்கிறது. அந்தப் படம் யாருக்கு ஆதரவானது என்பது குறித்த விவாதம் நடைபெறவில்லை. “இது  அமெரிக்க ஆதரவுத் திரைப்படம்; ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்க கைக்கூலித்தனம் செய்திருக்கிறார் கமலஹாசன்” என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இந்தப் பதில் சராசரி முஸ்லிம் வாசகர்களை மேலோட்டமாக திருப்திப் படுத்தலாம்.

சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், பாக் அதிபர்களும், கமலஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைகாண இக்கட்டுரை உதவும்.

நேற்று வெளியிடப்பட்டிருக்கும் இசுலாமிய சர்வதேசியம் குறித்த கட்டுரையையும், இந்தக் கட்டுரையையும், மத நம்பிக்கையுள்ள இசுலாமிய வாசகர்கள் படிப்பதுடன், இக்கட்டுரைகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன என்று முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களிடம் கேட்குமாறும் கோருகிறோம்.

இக்கட்டுரைகள் இரண்டும் 2001 டிசம்பரில் வெளியிடப்பட்டவை என்பதையும் மனதிற்கொண்டு படிக்க கோருகிறோம்.

– வினவு

________________________________

ஆப்கான் – மத்திய ஆசியா எண்ணெய் – இசுலாமிய தீவிரவாதம் !

ஒரு வேளை உலக வர்த்தக மையம் தகர்க்கப்படாதிருந்தால் அமெரிக்கா ஆப்கானில் கால் வைத்திருக்காதா ?  ‘ஆம்’  என்று பலரும் சொல்லக்கூடும்.

‘ஆஸ்திரிய இளவரசனை ஒரு செர்பிய தீர்விரவாதி சுட்டுக்கொல்லாமலிருந்தால் முதல் உலகப் போரே மூண்டிருக்காது, ஒரு கோடி மக்களின் மரணமும் தவிர்க்கப்பட்டிருக்கும்’ என்று நம்புபவர்கள் இதையும் நம்பலாம். உலகை மறுபங்கீடு செய்யத் துடித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு போரைத் துவக்குவதற்கு அந்த தோட்டாச் சத்தம் அன்று ஒரு முகாந்திரம். அந்தக் கொலையின் முக்கியத்துவம் அவ்வளவு தான்.

உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதல் என்பது கோப்பை நிரம்பி வழிவதற்கு தேவையான கடைசித்துளி. அவ்வளவுதான். ஒருவேளை இந்தத் தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் ஆப்கானில் தலையிடுவதற்கான முகாந்திரம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கியிருக்கும் என்பது தான் இக்கட்டுரை முன்வைக்கும் வாதம்.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சில நாட்களுக்கு பின் நீனா பர்லே என்ற பிரபல அமெரிக்க நிருபர் இணைய இதழொன்றில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.

“சமீபத்தில் மேன்மக்கள் பங்கு பெறும் வாஷிங்டன் விருந்தொன்றிற்குச் சென்றிருந்தேன். பிரிட்டீஷ் கனவான்களும் அமெரிக்கப் பிரபலங்களும் அங்கே நிறைந்திருந்தார்கள். சவூதி அரேபியாவின் தூதர் இளவரசர் பந்தர் அவர்களுக்கும் புஷ் குடும்பத்தினருக்கும் உள்ள நெருக்கமான நட்பு பற்றியது தான் அன்றைய விருந்து மண்டபத்தின் கிசு கிசு…. சிறிது நேரத்தில் பேச்சு மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்களை நோக்கித் திரும்பியது.”

“6000 அமெரிக்கர்கள் செத்தது எண்ணெய் வயல்களுக்காகவா, சவூதி இளவரசர் குடும்பத்துக்காகவா இரண்டுக்கும் சேர்த்தா என்று சிந்தித்தபடியே நான் மண்டபத்தை விட்டு வெளியேறினேன்”…. என்கிறார் நீனா பர்லே.

இப்படித்தான் 1991 – ல் சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்த போது குவைத் மருத்துவமனையிலிருந்து ஒரு நர்சை அமெரிக்க நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்தார் இன்றைய அதிபர் புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ்.

‘மருத்துவமனையிலிருந்து அப்போது தான் பிறந்த பிஞ்சு குழந்தைகளை ஈராக் சிப்பாய்கள் எப்படித் தூக்கிக் கடாசினர்’ என்பதைக் கண்ணீர் மல்க விவரித்தார் அந்த நர்ஸ். வளைகுடாப் போரில் அணுக்கழிவு ஆயுதங்களை ஏவி, பிறக்கப்போகும் ஈராக்கியக் குழந்தைகளையெல்லாம் கொல்ல அந்த சென்டிமெண்ட் பயன்பட்டது. நர்சின் கண்ணீர் ஒரு மோசடி நாடகம் என்பது பின்னர் தான் அம்பலமானது.

ஆனால், ஈராக்கின் பிரம்மாண்டமான ருமைலா எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்து குவைத்துடன் இணைக்க வளைகுடாப் போர் பயன்பட்டது. இவை அமெரிக்க, பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இது வளைகுடப் போரின் பொருளாதார ஆதாயம்.

சந்தர்ப்ப சாட்சியங்கள் பின்லாடன் தான் குற்றவாளி என்று காட்டுவதால், அத்தகைய பயங்கரவாதிக்கு புகலிடம் அளித்திருக்கும் ஆப்கான் மீது போர் தொடுப்பதாக கூறுகிறது அமெரிக்கா. போர் தொடுக்கின்ற இந்த அமெரிக்க பயங்கரவாதிகளுக்கெதிரான சந்தர்ப்ப சாட்சியங்களை நாம் பார்ப்போம்.

புஷ் குடும்பத்தின் வரலாறு

அமெரிக்க அதிபர் புஷ்ஷை பற்றி அமெரிக்க ஆளும் வர்க்கமே மறுக்க முடியாத மூன்று உண்மைகள் உள்ளன.

ஒன்று – மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்கள் அரசியல் அறிவற்ற ஒரு மாங்காய் மடையன். இந்த போர் தொடங்குவதற்கு முன்பு வரை ஆப்கானிஸ்தான் என்பது ஒரு நாடா, ஊரா, கண்டமா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது நைஜீரியாவை ஒரு கண்டம் என்று குறிப்பிட்டு தனது பூகோள அறிவுக்காக உலகப் புகழ் பெற்றவர்.

அவரது தேர்தல் செலவுக்கு நிதியளித்தவர்களில் முதன்மையானவர்கள் அமெரிக்க எண்ணெய் கம்பெனி முதலாளிகள் என்பது இரண்டாவது உண்மை. கருப்பின மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஓட்டு போட விடாமல் தடுத்ததுத்தான் ‘மயிரிழைப் பெரும்பான்மை’ யில் அவர் அதிபர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார் என்பது மூன்றாவது உண்மை.

  • துணை அதிபர் டிக் செனி, ஹாலி பர்ட்டன் என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும், இராணுவத்துறைச் செயலாளராகவும் இருந்தவர்.
  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கண்டோலசா ரைஸ் அம்மையாரும் இன்னொரு எண்ணெய்க் கம்பெனியின் இயக்குனர். ரசிய விவகாரங்கள் குறித்த வல்லுனர்.
  • தற்போதைய இராணுவத்துறைச் செயலர் டொனால்டு ரம்ஸ்பீஃல்டு சியர்லே என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி.
  • இன்றைய அரசுச் செயலர் காலின் பாவெல் ராஜதந்திரி ( Diplomat ) அல்ல, ஈராக் போரைத் தலைமையேற்று நடத்திய தலைமை இராணுவத் தளபதி.
  • சென்ற மே – 2000 த்தில் நடந்த ரசிய – அமெரிக்க முதலாளிகள் சங்க கூட்டத்தில் டிக் செனி, ரம்ஸ்ஃபீல்டு ஆகிய இருவரும் முக்கியப் பேச்சாளர்கள்.
  • இன்றைய அதிபர் புஷ்ஷின் தந்தையான முன்னாள் அதிபர் சீனியர் புஷ் அவர்கள் அதிபராவற்கு முன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ – இன் இயக்குனர். பல அமெரிக்க எண்ணெய் நிறுவங்களில் முக்கிய முதலீட்டாளர், பங்குதாரர்.அது மட்டுமல்ல, கார்லைல் என்ற அமெரிக்க ஆயுதக் கம்பெனியின் ஆசியாவுக்கான அதிகார பூர்வமான தரகர். இன்றைய புஷ் நிர்வாகத்திலுள்ள பிரமுகர்கள் பலரும் இதில் பங்குதாரர்கள். ஜார்ஜ் சோரோஸ் என்ற பிரபல யூத முதலாளியும் பங்குதாரர். கடைசியாக, பின்லாடன் குடும்பத்தினரும் இதில் பங்குதாரர்கள் என்கிறார் பத்திரிகையாளர் நீனா பர்லே.

பின்லாடன் குடும்பத்திற்கு அப்பன் தரகு வேலை செய்கிறார். மகனோ பின்லாடன் மீது போர் தொடுக்கிறார். இதற்கு பெயர் பயங்கரவாதத்திற்கெதிரான உலகப்போர் !

இந்த அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு எதிரான மேற்கண்ட சந்தர்ப்ப சாட்சியங்களைத் தொகுத்துப் பார்த்தால் சி.ஐ.ஏ. – ஆயுத வியாபாரம் – எண்ணெய் வியாபாரம் – முன்னாள் சோவியத் ஒன்றியம் என்று முடிகிறது.

அதாவது முன்னாள் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த உஸ்பெக்கிஸ்தானில் அமெரிக்கா தற்போது அமைத்துள்ள இராணுவத் தளத்துக்கு நாம் வந்து சேருகிறோம்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஆப்கானையும் மத்திய ஆசியாவையும் காலனியாக்குவதற்கு ஜாரின் ரசியாவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் நடத்திய மோதலை “மாபெரும் ஆட்டம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவர். இன்றைய மறுகாலனியக்கக் காலத்தில் இந்த அழுகுணி ஆட்டத்தின் இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது.

மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்கள்

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கில் துர்க்மேனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான், தாஜிகிஸ்தான், வட கிழக்கில் சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றால் சூழப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான்.

இன்று ஆப்கானில் பின்லாடனைத் தேடி அமெரிக்க இராணுவம் படையெடுப்பதற்கு முன்னமே, மத்திய ஆசிய நாடுகளின் இயற்கை வளங்களை –  குறிப்பாக எண்ணெய், எரிவாயுவைத் தேடி அமெரிக்க நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.

2000 மைல் நீண்டு அகன்ற ஸ்டெபி புல்வெளிகளும், பனிபடர்ந்த நெடிய மலைத் தொடர்களும் கொண்ட மத்திய ஆசிய நாடுகள் அமெரிக்க முதலாளிகளின் நாக்கில் எச்சில் ஆறாய்ப் பெருகுமளவுக்கு இயற்கை வளங்களை கொண்டிருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் உஸ்பெக்கிஸ்தானிலிருக்கிறது. உலகிலேயே மிக அதிகமான வெள்ளி தாஜிகிஸ்தானின் மண்ணில் புதைந்திருக்கிறது. உலகின் நான்கில் ஒரு பங்கு யுரேனிய தாது கஜாக்ஸ்தானில் இருக்கிறது.

வளைகுடாவிற்கும் மேற்கு சைபீரியாவிற்கும் அடுத்தபடியாக மிக அதிகமான எண்ணெய் இருப்பு கஜாக்ஸ்தானிலும், துருக்மேனிஸ்தானிலும், அஜர்பைஜானிலும் உள்ளன. இந்த மத்திய ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் (66 லட்சம் கோடி)  கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.

சோவியத் ஒன்றியம் உடைகிறது. எண்ணெய் முதலாளிகள் நுழைகிறார்கள்

சோவியத் ஒன்றியம் உடைந்து இவையனைத்தும் தனி நாடுகளானவுடனே, என்ரான், பிரிட்டீஷ் பெட்ரோலியம், மொபில் எக்ஸான், அமோகோ, செவ்ரான், யூனோகால் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாடுகளை நோக்கி படையெடுத்தன. இந்த எண்ணெய் நிறுவனங்களுக்காக அந்நாடுகளுடன் வர்த்தக பேரம் பேசியவர்கள் இன்றைய அமெரிக்க ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், குறிப்பாக இன்றைய துணை அதிபர் டிக் செனி.

எண்ணெய் எடுப்பதற்கான பேரங்கள் படிந்தாலும் எண்ணெய் எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்களெல்லாம் ரசியா வழியே தான் செல்கின்றன என்பதால் ரசியா கோருகிற வாடகையை கொடுக்க வேண்டும். அல்லது எண்ணெய் எரிவாயுவை ரசியாவுக்கு விற்றுவிட வேண்டும்.

‘கஜாக்ஸ்தானிலிருந்து பிரிட்டீஷ் காஸ் எடுக்கின்ற எரிவாயுவை ஆயிரம் கன மீட்டர் 8.74 டாலருக்கு ரசியாவுக்கு விற்க வேண்டியிருக்கிறது’ என்றும் ‘உலகச் சந்தையில் இதையே 80 டாலருக்கு விற்று அதிக லாபம் பார்க்க முடியும்’ என்றும் கூறி வயிறெரிந்தது அந்த நிறுவனம். (எண்ணெய் எரிவாயு விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையை இதிலிருந்து வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்)

1993 – இல் அமெரிக்காவின் செவ்ரான் நிறுவனம் கஜாக்ஸ்தானிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு 10 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால் ரசியாவோ கஜாக்ஸ்தானிலிருந்து கருங்கடல் வரை புதிய குழாய் அமைக்கத் திட்டமிட்டது. செவ்ரானின் திட்டம் நொறுங்கியது (நியூஸ் வீக், ஏப்ரல் 1995 )

அமெரிக்க முதலாளிகளின் ஆத்திரத்தை உடனே பிரதிபலித்தது கிளின்டன் அரசு. “யாருடைய செல்வாக்கு மண்டலத்தையும் அமெரிக்கா அங்கீகரிக்காது. அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக உரிமைகளை அரசு பாதுகாக்கும்” என்று எச்சரித்தது.

என்ன தான் எச்சரிக்கைகள் விடுத்தாலும் புவியியல் ரீதியாக மத்திய ஆசியாவைச் சூழ்ந்திருக்கும் ரசியாவைத் தவிர்த்து – ஐரோப்பிய சந்தைக்கு குழாய் பாதை அமைக்க வேண்டுமானால் ஈரான் அல்லது ஜார்ஜியாவின் வழியே துருக்கியை இணைக்கும்படி பாதை அமைக்கப்பட வேண்டும்.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. மேலும் வளைகுடாவில் ஈரானை தனிமைப்படுத்துவதே அமெரிக்காவின் அரசியல் தந்திரம். ஈரானையும் துருக்கியையும் குழாய் மூலம் இணைப்பதன் மூலம் அந்நாடுகளிடையே நட்புறவு தோன்றிவிடக்கூடும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அஞ்சுகின்றன. ஜார்ஜியாவிலோ ஆயுதந்தாங்கிய மாஃபியாக் குழுக்களின் அபாயம் !

எண்ணெய்க் குழாய் – ஆப்கான்

இந்தச் சூழ்நிலையில் தான் எண்ணெய் நிறுவனங்களின் பார்வையில் ஆப்கானிஸ்தான் முக்கியத்துவம் பெறுகிறது. பிரச்சினைக்குரிய பல நாடுகளுக்கும் காஸ்பியன் கடலுக்கும் குறுக்கே எண்ணெய்க் குழாய் அமைப்பதைக் காட்டிலும், தூரம் குறைந்த, பாதி செலவு மட்டுமே ஆகக்கூடிய பாதை ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் எனும் குழாய்ப் பாதை.

அரபிக்கடலிலிருந்து இந்தியாவையும் பிற ஆசிய நாடுகளையும், வளைகுடாவையும் ஐரோப்பாவையும் எளிதாகச் சென்றடைய முடியும். மேலும் பாகிஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் கணிசமான அளவு எரிவாயு இருப்பதாகவும் ஒரு பிரெஞ்சுப் பத்திரிகை தெரிவிக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியமளித்த யூனோகால் நிறுவனம் “ஆப்கானில் அமைதியை நிலைநாட்டாமல் குழாய் பதிக்கும் வேலையை நாங்கள் துவங்க முடியாது” என்று வலியுறுத்துகிறது. ஐரோப்பாவைக் காட்டிலும் ஆசியாவின் எண்ணெய் எரிவாயுச் சந்தை தான் வேகமாக வளர்கிறதென்றும், 2010 ஆம் ஆண்டுக்குள் சந்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறி அமெரிக்க அரசுக்கு நிலைமையின் அவசரத்தை உணர்த்துகிறது.

இதுவரை மத்திய ஆசிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முடக்கியிருக்கும் மூலதனம் 59 பில்லியன் டாலர்கள். அதாவது சுமார் 3 லட்சம் கோடி ரூபாய். பத்தாண்டுகளாகப் பாதை கிடைக்காமல் அவர்கள் தவிக்கையில் கஜாக்ஸ்தானிலிருந்து ரசியா புதியதொரு எண்ணெய்க் குழாயை அமைக்கத் தொடங்கியிருக்கிறது. இது அமெரிக்காவின் வயிற்றெரிச்சலை மேலும் கூட்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.

அமெரிக்க நிறுவனங்களின் எண்ணெய்த் தாகம் என்பது இந்த பிரச்சினையின் பொருளாதார முகம். அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் பசியும், மத்திய ஆசியாவை விழுங்குவதற்கான அதன் அரசியல் இராணுவ வெறியும் இந்த பிரச்சினையின் பிற முகங்கள்.

ரசியா – மத்திய ஆசியா – சீனா

1991லேயே சோவியத் ஒன்றியத்திலிருந்து மத்திய ஆசிய நாடுகள் பிரிந்துவிட்ட போதிலும், இன்னமும் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பல விதங்களில் அவை ரசியாவுடன் பிணைக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்ளிட்ட அவற்றின் பெரும்பான்மையான வர்த்தகங்கள் இன்னமும் ரசியாவுடன் தான்.

உஸ்பெக்கிஸ்தான் தவிர்த்து எல்லா நாடுகளிலும் ரசிய இராணுவம் இருக்கிறது. உஸ்பெக்கிஸ்தான் இராணுவத்திலும் அதிகாரிகளில் பலர் ரசியர்கள். பனிப்போர் காலத்து அணு ஆயுதங்களும் எங்கும் இருக்கின்றன. கஜாக்ஸ்தானின் இராணுவத்தை ரசிய இராணுவத்துடன் இணைத்து விடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடக்கிறது.

இப்போது “இசுலாமியக் குடியரசு” என்று இந்நாடுகள் தம்மை அழைத்துக்கொண்டாலும் ஷரியத் சட்டங்கள் போன்றவை அங்கே அமலில் இல்லை. தேர்தல்கள் நடத்தப்பட்ட போது நாட்டை ஆளும் அதிபர்கள் முன்னாள் ரசிய போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தான். பழைய மரபின் தொடர்ச்சியாக எண்ணெய் வயல்கள் எல்லாம் அரசுடைமையாகவே உள்ளன. ஆனால் இந்த அதிபர்கள் அனைவரும் ஊழல் சர்வாதிகாரிகள்.

பன்னாட்டு நிறுவனங்கள் வாரி வழங்கும் இலஞ்சத்தையும் வாங்கிக்கொண்டு, ரசியாவுடனான உறவுகளையும் துண்டித்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் சர்வாதிகாரிகள் இவர்கள்.

ரசியாவோ போலி கம்யூனிசம் வீழந்து முதலாளித்துவ சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டுவிட்ட நாடு என்ற போதிலும், ஒரு அணு ஆயுத வல்லரசு என்ற முறையிலும், இராணுவ வலிமையிலும் அமெரிக்காவின் உலக இராணுவ மேலாதிக்கத்தை இன்னமும் அச்சுறுத்துகிறது. தேசிய வெறியனான ஜெரினோவ்ஸ்கி முதல் அதிபர் புடின் வரை ரசியாவின் முதலாளித்துவ அரசியல்வாதிகள் யாரும் தங்கள் உலக மேலாதிக்கக் கனவைக் கைவிட்டுவிடவில்லை என்பதையும் அமெரிக்கா அறிந்தே இருக்கிறது.

பல மத்திய ஆசிய நாடுகளுடன் பொது எல்லையை கொண்டுள்ள சீனா, அமெரிக்காவுடன் விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்த போதும் அதன் இராணுவ வல்லமையையும், தென்கிழக்காசியப் பொருளாதாரத்தில் அதன் செல்வாக்கையும் குலைப்பது அமெரிக்க உலகத் திட்டத்தின் நோக்கம்.  மத்திய ஆசிய நாடுகளுடன் வளர்ந்து வரும் சீன வர்த்தகம், சீனா அமைத்திருக்கும் சீனா –  காஜக்ஸ்தான் ரயில் பாதை ஆகியவை அமெரிக்காவை உறுத்தும் கூடுதல் பிரச்சினைகள்.

அமெரிக்காவின் மத்திய ஆசியத் திட்டம்

இந்த புவியியல் –  அரசியல் சூழலிலிருந்து தான் அமெரிக்கா மத்திய ஆசியாவுக்கான தனது கொள்கையை வகுக்கிறது. “சோவியத் பிடியிலிருந்து மத்திய ஆசிய நாடுகளை விடுவித்து,  அமெரிக்க முதலாளிகளுக்கு அங்கே வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் நமது மத்திய ஆசியக் கொள்கையின் நோக்கம்” என்று அமெரிக்க நாடாளுமன்ற துணைக் குழுவின் ஆவணம் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறது.

அது மட்டுமல்ல, மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்களை கைப்பற்றுவதன் மூலம் எண்ணெய் உற்பத்தியில் வளைகுடா நாடுகள் பெற்றிருக்கும் ஆதிக்கத்தை உடைப்பது, உலக எண்ணெய் விலையை தீர்மானிப்பதில் தனது ஏகபோக அதிகாரத்தை நிறுவுவது, ‘ஒபெக்’ என்ற எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஒன்றியத்தை பிளப்பது ஆகியவை அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டங்கள்.

தெற்காசியா, சீனா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள் என ஆசியா முழுவதையும் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.

“ஆசியா ஒரு விமானம் என்றால் அதில் விமான ஓட்டியின் அறை ஆப்கானிஸ்தான்” என்றான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதி கர்சன். இப்போது விமான ஓட்டியின் அறையில் நின்று கொண்டிருக்கிறார்கள் –  அமெரிக்க பயங்கரவாதிகள்.

ரசியாவின் ஆப்கான் போர்

1979 – இல் இதே இடத்தில் ரசிய ராணுவம் நின்று கொண்டிருந்தது. ஆப்கானின் போலி கம்யூனிஸ்டு ஆட்சியை காப்பாற்றவும் அதன் மூலம் தெற்காசியாவில் தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் ஆப்கானில் நுழைந்தது ரசியா.

ரசியாவுடனான பனிப்போரை (Cold War) பதிலிப் போராக மாற்றும் வாய்ப்பை (Proxy War) இது அமெரிக்காவுக்கு வழங்கியது.

கம்யூனிசத்திற்கும், தேச விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக இசுலாமிய பழமைவாதத்தை பயன்படுத்தும் தந்திரம் அமெரிக்காவுக்கு புதியதல்ல. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் அராபிய நாடுகளில் தோன்றிய கம்யூனிஸ்டு எழுச்சியையும், மன்னர்களுக்கும் முல்லாக்களுக்கும் எதிரான ஜனநாயகப் போராட்டங்களையும், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நசுக்குவதற்கு இசுலாமிய மதவாதத்தை தான் அமெரிக்காவும், பிரிட்டனும் பயன்படுத்தின.

ஆப்கானில் ஆட்சியிலிருந்த போலி கம்யூனிஸ்டுகள் பெண் கல்வி, வேலை வாய்ப்பு, நிலச்சீர்திருத்தம், மதச்சீர்திருத்தம் போன்றவற்றை அமல்படுத்தத் தொடங்கியவுடனே பண்ணையார்களும், பழங்குடித்தலைவர்களும், முல்லாக்களும், பழமைவாதிகளும் அவற்றை எதிர்க்கத் தொடங்கினர். ஜனநாயகம் என்ற சொல்லுக்கே எதிரான இந்த சக்திகளை அமெரிக்கா திட்டமிட்டே உக்குவித்தது.

மதத்தால் இசுலாமியர்களாக இருந்தாலும் புஷ்டுன், தாஜிக், உஸ்பெக் என்று இன உணர்வால் பிளவுபட்டிருந்த மக்கள், ரசிய எதிர்ப்பு ஆப்கானிய தேசிய உணர்வுக்கு ஆட்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டது அமெரிக்கா. ஆப்கான் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு இசுலாத்தின் மீதான நாத்திக –  கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பாகச் சித்தரிக்கப்பட்டது.

அமெரிக்கா உருவாக்கிய இஸ்லாமிய சர்வதேசியம்

“இசுலாம் என்பது வெறும் மதமல்ல, அது ஒரு சமூக அரசியல் தத்துவம். அத்தகைய புனிதமான இசுலாத்தின் மீது நாத்திகர்களான ரசியர்கள் போர் தொடுத்திருக்கிறார்கள்”  என்பதே சி.ஐ.ஏ நடத்திய பிரச்சாரத்தின் மையக் கருத்து. எனவே ஆப்கான் போராட்டம் என்பது “கம்யூனிஸ்டுகளுக்கெதிரான இசுலாமிய சர்வதேசியத்தின் புனிதப் போர்” (Pan Islamic Jahad)  ஆகிவிட்டது.

இன்று அமெரிக்கத் தாக்குதலை “இசுலாத்திற்கெதிரான போர் ” என்று தாலிபானும் பின்லாடனும் கூறியவுடனே “நாங்கள் பயங்கரவாதத்தை தான் எதிர்க்கிறோம் இசுலாமை அல்ல” என்று டோனி பிளேரும் புஷ்ஷும் ஊர் ஊரகச் சென்று கதறுகிறார்கள்.

ரசியா என்ற சொல் இருந்த இடத்தில் அமெரிக்கா என்ற சொல்லை பின்லாடன் பயன்படுத்துகிறாரே தவிர, மற்றபடி இந்த வசனத்துக்குரிய “அறிவுச் சொத்துடைமை”  அமெரிக்காவையே சாரும். 1980 களில் ரேடியோ லிபர்டி, ரேடியோ ஃப்ரீ யூரோ ஆகிய வானொலிகள் ரசியாவின் மத்திய ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கான ஒலிபரப்பில் இசுலாமிய சர்வதேசியத்தை தான் பிரச்சாரம் செய்தன.

ரசியாவுடனான பனிப்போரில் இசுலாமிய நாடுகளை தன் பக்கம் இழுக்கவும், மத்திய ஆசிய நாடுகளில் இசுலாமிய மதவெறியை உருவாக்கவும், சி.ஐ.ஏ பயன்படுத்திய சித்தாந்த ஆயுதம் தான் இசுலாமிய சர்வதேசியம்.

வெறும் கருத்துப் பிரச்சாரத்துடன் இது நிற்கவில்லை. 1982  – இலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில், 40 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் முசுலீம் இளைஞர்கள் பாகிஸ்தானின் மதராஸாக்களில் இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டனர். சித்தாந்த பயிற்சி மட்டுமின்றி ஆயுதப் பயிற்சியையும் வழங்கியது அமெரிக்கா.

சி.ஐ.ஏ. – ஐ.எஸ்.ஐ. கூட்டணி

பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. மூலம் கொரில்லாப் பயிற்சி, நகரங்களைத் தாக்கி சீர்குலைத்தல், ரகசியத் தகவல் தொடர்பு முறைகள், சர்வதேச வங்கிகளில் இரகசியமாகப் பணப் பரிமாற்றம் செய்வது ஆகிய அனைத்தும் முஜாகிதீன்களுக்குக் கற்றுத் தரப்பட்டன.

சிறப்பு பயிற்சிக்காக இந்த முஜாகிதீன்களில் ஒரு பிரிவினர் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிகராகுவாவின் சாண்டினிஸ்டா ஆட்சியை ஒழிப்பதற்கு “காண்ட்ராஸ்”  என்ற கிரிமினல் கொலைப்படையை சி.ஐ.ஏ. எங்கு பயிற்றுவித்ததோ, அதே பயங்கரவாதப் பயிற்சிப் பள்ளியில் இவர்களும் பயிற்றுவிக்கப்பட்டனர். ஆப்கானியர்கள், அராபியர்கள், ஜோர்டானியர்கள், எகிப்தியர்கள் மட்டுமின்றி கருப்பின முசுலீம்கள் பலரும் வர்ஜீனியாவில் பயிறுவிக்கப்பட்டதை ஜான்கோலி என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் தனது நூலில் (Unholy Wars : Afganistan, America and International Terrorism) குறிப்பிடுகிறார்.

ஆண்டுக்கு 65,000 டன் நவீன ஆயுத தளவாடங்களையும், வெடி மருந்துகளையும் ஆப்கானில் கொண்டு வந்து இறக்கியது சி.ஐ.ஏ.

ஜனநாயக உனர்வுக்கும் தேசிய உணர்வுக்கும் எதிராக மதராஸாக்களில் அளிக்கப்பட்ட இசுலாமிய சர்வதேசியக் கல்வி, சதிகாரக் கிரிமினல்களை உருவாக்குவதற்கென்றே சி.ஐ.ஏ நடத்திய பள்ளியில் போர்ப்பயிற்சி, இவற்றுடன் போதை மருந்து கடத்துவதற்கும் முஜாகிதீன்களை பயிறுவித்தார்கள் சி.ஐ.ஏ – ஐ.எஸ்.எஸ். உளவாளிகள்.

1979 – இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கஞ்சா உற்பத்தி இரண்டே ஆண்டுகளில் பல்கிப் பெருகியது. புனிதப் போரின் செலவுகளுக்காக கஞ்சா பயிரிடுமாறு விவசாயிகளுக்கு உத்தரவிட்டார்கள் முஜாகிதீன்கள்.

ஐ.எஸ்.ஐ. யின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான ஹெராயின் தயாரிப்புக் கூடங்கள் உருவாயின. 1981இலேயே அமெரிக்காவின் 60 சதவீதம் போதை மருந்துத் தேவையை ஆப்கான் நிறைவு செய்தது. 1985இல் பாகிஸ்தானில் 12 இலட்சம் ஹெராயின் அடிமைகள் உருவானார்கள்.  ஆப்கான் ‘விடுதலை’  பெற்றது.

1989  -இல் ரசிய இராணுவம் ஆப்கானை விட்டு வெளியேறிவிட்டது. ஆனால் சி.ஐ.ஏ.  உருவாக்கிய இசுலாமிய சர்வதேசியமும், சர்வதேச போதை மருந்து வியாபாரமும் ஆப்கானை விட்டு வெளியேறவில்லை.

“இதற்காக நாம் வருந்தத் தேவையில்லை.  ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு துணை விளைவு உண்டு. போதை மருந்து ஒரு துணை விளைவு. அவ்வளவுதான். நமது முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது. ரசியர்கள் வெளியேறிவிட்டார்கள்” என்று போதை மருந்து வியாபாரத்தை நியாயப்படுத்தினார் அன்றைய சி.ஜ.ஏ. இயக்குனர் சார்லஸ் கோகன்.

“உலக வரலாற்றிற்கு எது முக்கியமானது?  தாலிபானா, அல்லது சோவியத் சாம்ராச்சியத்தின் வீழ்ச்சியா?  சில கிறுக்குப் பிடித்த முசுலீம்களா அல்லது மத்திய கிழக்கு ஜரோப்பாவின் விடுதலையா?”  என இன்றைக்கும் கேள்வி எழுப்புகிறார் 1980இல் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரெசென்ஸ்கி.

உண்மையில் இசுலாமிய சர்வதேசியமும், போதைமருந்து வியாபாரமும் விரும்பத்தகாத துணை விளைவுகள் அல்ல, தனது உலக மேலாதிக்க போர்த்தந்திரத்திற்குப் பயன்படும் வகையில் அமெரிக்காவே உருவாக்கிய செயல் தந்திரங்கள் தான் அவை.

போலி கம்யூனிச ஆட்சி வீழ்ந்து பனிப் போர் முடிந்து விட்டதனால் அமெரிக்காவின் உலக மேலாதிக்க திட்டமும் முடிந்துவிடவில்லை. எதிர்காலத்தில் தனக்குச் சவால் விடக்கூடிய முதலாளித்துவ வல்லரசாக வளர்ந்துவிடக்கூடாது என்றால் சோவியத் ஒன்றியத்தை உடைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அடுத்த இலக்கு.

ஆப்கானில் ரசிய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்திலேயே இந்த ‘எதிர்த் தாக்குதலை’ அமெரிக்கா தொடங்கிவிட்டது. மத்திய ஆசிய நாடுகளுக்குள் ஜ.எஸ்.ஜ. உளவாளிகளை அனுப்பி அங்கே முசுலீம் தீவிரவாதக் குழுக்களை உருவாக்கும் பணியை 1980 இலேயே தொடங்கி விட்டார் பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல் ஹக்.

தாலிபானை உருவாக்கியது பாகிஸ்தான் மட்டுமா?

ஆப்கானை விட்டு சோவியத் ஒன்றியம் வெளியேறிய பின் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்திருந்த நஜிபுல்லா ஆட்சி, அமெரிக்க- பாக் உதவியுடன் தாக்கிய முஜாகிதீன்களை எதிர்கொள்ள இயலாமல் வீழ்ந்தது.

அதன்பின் பாகிஸ்தான், ரசியா, ஈரான் ஆகிய நாடுகளின் பின்பலத்தில் ஹெக்மத்யார், தோஸ்தம், மசூத் குழுவினரிடையே அதிகாரப் போட்டியும் உள்நாட்டுப் போரும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், ஒரு உறுதியான ஆட்சியை (எண்ணெய்க் குழாய்க்கு தேவையான அளவு உறுதி)  ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் தாலிபான் குழு. “அமெரிக்காவும், பிரிட்டனும்தான் தாலிபான்களைப் பயிற்றுவிப்பதற்கான செலவை ஏற்றுக் கொண்டனர்” என்று அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான பெனாசிர் புட்டோ தி நேஷன் நாளேட்டிற்கு 1997இல் அளித்த பேட்டியில் ஒப்புக் கொள்கிறார்.

இன்று பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் ஜமாத்-உல்-உலேமா-இ-இசுலாம் (JUL)  என்ற அமைப்புதான் அன்று தனது மதரஸாக்களில் தாலிபானைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் எச்சில் காசை வாங்கியது.

1996 செப்டம்பரில் தாலிபான் படை காபூலைக் கைப்பற்றியவுடன் அடுத்த சில மாதங்களிலேயே காண்டகாரில் தனது அலுவலகத்தைத் திறந்தது அமெரிக்க யூனோகால் நிறுவனம்.

தாலிபான் நடத்திய கொலைவெறியாட்டமும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் ‘உலகப் புகழ்’ பெற்றுவிட்டதால், தானே சோறு போட்டு வளர்த்த தாலிபான் அரசை அங்கீகரிக்க முடியாமல் தவித்தது அமெரிக்க அரசு.  ஆனால் அமெரிக்காவின் பினாமியான சவூதி அரசும், அடியாளான பாகிஸ்தான் அரசும் தாலிபானை உடனே அங்கீகரித்தன.

வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் போர்த் தந்திரத்திற்கும் சவூதி-பாக்-தாலிபான் கூட்டணிக்கும் நெருங்கிய உறவு உண்டு.  ஈரானைத் தனிமைப்படுத்துவது மட்டுமின்றி ஈரான் ஆட்சியை கவிழ்ப்பதற்கென்று 20  மில்லியன் டாலரை அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகவே ஒதுக்கியுள்ளது.  இந்தப் பணம் ரகசியமாகத் தாலிபானுக்கு தரப்பட்டுள்ளதாக ஈரான் அமெரிக்காவைக் குற்றம் சாட்டுகிறது.

இது ஒருபுறமிருக்க, சவூதி மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான “டெல்டா ஆயில்” நிறுவனம் அமெரிக்காவின் யூனோகால் நிறுவனத்தில் ஒரு முக்கியப் பங்குதாரார். மேலும் ஷியா முசுலீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுடன், சுன்னி முசுலீம் நாடுகளான சவூதி, மற்றும் பாகிஸ்தானுக்குப் பகை. எனவே சவூதி ஷேக்குகளும், பாகிஸ்தான் உளவாளிகளும், தாலிபான்களும் சுன்னி முசுலீம்கள் என்ற முறையில் மட்டுமின்றி அமெரிக்காவின் கூட்டாளிகள் என்ற முறையிலும் ஒன்று சேர்ந்தனர்.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

எனவே தான் தாலிபான் ஆட்சிக்கு வந்தவுடன் காண்டகாரைச் சுற்றிலுமே கஞ்சா உற்பத்தி 50% அதிகரித்த போதும், பெண்கள் மீதும் மக்கள் மீதும் கொடூரமான அடக்குமுறை ஏவப்பட்ட போதும் அமெரிக்கா அதை கண்டிக்கவில்லை.

ஐ.நா. மதிப்பீட்டின்படி உலக போதை மருந்து வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு –  அதாவது சுமார் 200 பில்லியன் டாலர் – ஆப்கான் மற்றும் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. 1980 முதல் சி.ஐ.ஏ ஒருங்கிணைத்து நடத்தும் இந்த போதை மருந்துக் கடத்தலை அமெரிக்க அரசு கண்டு கொள்ளாததில் வியப்பில்லை.

ஆனால் வியப்புக்குரிய வேறொரு நாடகம் தொடங்கியது. 1996 மே மாதம் சூடானிலிருந்து ஆப்கானிஸ்தானில் குடியேறிய பின்லாடன்,  தீவிரவாதப் பயிற்சிப் பள்ளிகளை அமைத்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப் போர் தொடுக்குமாறு உலக முசுலீம்களுக்கு அறைகூவல் விட்டார். 1996 ஆகஸ்டில் இந்த பேட்டி வெளியானது.

ஆனால் 1996 நவம்பரில் நடைபெற்ற ஐ.நா. மன்றத்தின் கூட்டமொன்றில் “தாலிபானைத் தனிமைப்படுத்துவது ஆப்கானுக்கும் நல்லதல்ல, நம் யாருக்கும் நல்லதல்ல” என்று கூறி  தாலிபானை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டுமென வாதாடினார் தெற்காசியாவுக்கான அமெரிக்க அரசின் துணைச் செயலர் ராபின் ரபேல்.

1997 மே மாதம் மசார்-ஏ-ஷெரிப் நகரின் மீது படையெடுத்த தாலிபான், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஷியா முசுலீம்களைக் கொன்று குவித்தது. பதினோரு ஈரானிய அதிகாரிகளையும், ஒரு ஈரானியப் பத்திரிகையாளரையும் கொலை செய்தது.

தொடர்ந்து நடக்கும் உள்நாட்டுப் போரால் எண்ணெய்க் குழாய் கனவு தள்ளிப் போனாலும், தாலிபானின் ஈரான் எதிர்ப்பு வெறியை அமெரிக்கா புன்னகையுடன் ஆமோதித்தது.

1997 நவம்பரில் தாலிபானின் முல்லாக்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற யூனோகால், தாலிபான் அரசுக்கு அமெரிக்க அரசின் அங்கீகாரத்தை பெற்றுத் தர முயன்றது.

1998 – இல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னர் ஜாகிர் ஷாவின் ஆதரவாளருமான ரோரா பேச்சர் ” தாலிபான் உருவாக்கத்தில் அமெரிக்க அரசின் பங்கு”  பற்றிய ஆவணங்களைத் தகவல் பெறும் உரிமையின் கீழ் (Right to information) சட்டப்படி தனக்கு காட்ட வேண்டும் என்று கடுமையாகப் போராடினார். 1996 – க்கு முந்தைய ஆவணங்களை (அதாவது தாலிபானை சி.ஐ.ஏ. உருவாக்கிய இரகசியத்தைத்) தர மறுத்தது கிளிண்டன் அரசு.

1998 ஆகஸ்டில் கென்யாவிலும் டான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தாக்கப்படன. “இது பின்லாடனின் சதி” எறு கூறி ஆப்கானிலுள்ள பயிற்சி முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தது கிளிண்டன் அரசு.

பின்லாடனுக்கு தஞ்சமளிப்பது, மனித உரிமை மீறல், கஞ்சா பயிரிடுதல் போன்ற குற்றங்களுக்காக அக்டோபர் 99 முதல் பொருளாதாரத் தடை விதித்தது ஐ.நா.

இருந்த போதும் தனது கையாட்களான பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய எமிரேட்டுகள் ஆகிய நாடுகள் தாலிபான் அரசுடன் தூதரக உறவு வைத்திருப்பதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தாலிபானுக்கு கதவை மூடினாலும் சமரசத்திற்கு சன்னலைத் திறந்து வைத்திருந்தது.

மே, 2001 இல் 34 மில்லியன் டாலர் நிதியைக் கொடுத்து கஞ்சா பயிரிடுவதைக் கட்டுப்படுத்தியதற்காக தாலிபானைப் பாராட்டி, மேலும் உதவி தருவதாக ஆசையும் காட்டியது அமெரிக்க அரசு.

ஆனால் அடுத்த உதவியைத் தருவதற்குள் செப்டம்பர் 11 முந்திக்கொண்டு விட்டது. தான் பெற்றெடுத்த கம்யூனிசத்திற்கெதிரான “இசுலாமிய சர்வதேசியம்” என்ற பேய்க்கு ஞானஸ்நானம் செய்வித்து “பயங்கரவாதத்திற்கெதிரான உலகப் போர்” என்று புதுப் பெயர் சூட்டியிருக்கிறது அமெரிக்கா. இசுலாமியத் தீவிரவாதத்திற்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவு இத்துடன் முடிந்தது என்று நம்பலாமா ?

“என்னை நம்புங்கள். எங்கள் கொள்கை ரசியாவின் நலன்களுக்கு எதிரானதல்ல, மத்திய ஆசியாவிலிருந்து ரசியாவை வெளியேற்றும் திட்டம் எதுவும் எங்களுக்குக் கிடையாது” என்று பொய்ச் சத்தியம் செய்து ரசியாவின் ஆதரவைக் கோருகிறார் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கண்டோலசா ரைஸ். (ஆதாரம் : இஸ்வெஸ்தியா எனும் ரசிய நாளிதழ்)

சீனா, ஈரான் எல்லா அரசுகளிடமும் துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் டோனி பிளேர். உண்மைகளோ வேறு விதமாக இருக்கின்றன.

உலக மேலாதிக்கக் கருவியாக இஸ்லாமிய சர்வதேசியம்

மேற்கு சீனாவில் தொடங்கி மத்திய ஆசியாவைக் கடந்து ஐரோப்பா வரையில் அமெரிக்காவின் சதி வலை விரிந்திருக்கிறது. சீன, ரசிய நகரங்களில் குண்டு வைக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும், உஸ்பெக்கிஸ்தான் தலைநகரின் பெயரை இசுலாமாபாத் என்று மாற்றக்கோரும் இசுலாமிய அமைப்புகளும் சவூதி பாக் சி.ஐ.ஏ. முகாமினால் பயிற்றுவிக்கப்பட்டவை என்று அந்நாட்டு அரசுகள் குற்றம் சாட்டுகின்றன.

1995 இல் செசன்யாவில் தாக்குதல் தொடுத்த ஷமில் பசயேவின் 35,000 பேர் கொண்ட இசுலாமியப் படை ஆப்கானில் பயிற்றுவிக்கப்பட்டது. ரசியாவின் எண்ணெய்க் குழாய்களை உடைப்பது, போதை மருந்துக் கடத்தல் ஆகியவை அவர்களது ‘அமைதிக்கால பணிகள்’

“தீவிரவாத ஒழிப்பு” என்ற பெயரில் செசன்யா மக்கள் மீது ரசிய இராணுவம் நடத்திய கொலைவெறியாட்டத்தை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டி “மனித உரிமை மீறல்” என்று அமெரிக்கா குற்றம் சாட்டியதை ரசியா மறக்கவில்லை.

“ஆப்கான், பாகிஸ்தான் முகாம்களில் பயிற்றுவிக்கப்பட்ட செசன்யாவின் இசுலாமியத் தீவிரவாதியான ஷமில் பசயேவ், அல் கடாப் ஆகியோருடன் பின்லாடனும் கலந்து கொண்ட இரகசியக் கூட்டமொன்று 1996 – இல் சோமாலியாவில் மொகாடிஷீ நகரில் நடத்தப்பட்டது. ரசிய அரசுக்கெதிரான போரைத் திட்டமிடுவதற்கு நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தை ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்தது” என்று கூறுகிறார் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் இயக்குநர் ஒய். பெடொன்ஸ்கி

இதே நேரத்தில் அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எப்.பி.ஜ. (FBI) இன் தேடப்படுவோர் பட்டியலில் பின்லாடன் இருந்தார்.

யூகோஸ்லாவியா மீதான நேட்டோ தாக்குதலுக்குக் காரணமாக இருந்த போஸ்னிய முசுலீம்கள் மீதான செர்பிய வெறியர்களின் தாக்குதல், இனப்படுகொலை ஆகியவற்றில் அமெரிக்காஇஸ்ரேல் கூட்டணியின் சதியும் இப்போது அம்பலமாகியிருக்கிறது.

ஒருபுறம் குரேசிய கிறித்தவ, நாஜி வெறியர்களுக்கு அமெரிக்க ஆயுத வியாபாரிகள் ஆயுத சப்ளை செய்தனர், இன்னொருபுறம் அமெரிக்கா, ஜெர்மனி, இசுரேல் ஆகிய நாடுகள் முசுலீம் தீவிரவாதிகளுக்கும் ஆயுத சப்ளை செய்திருக்கின்றனர்.

முசுலீம்களுக்கு இசுரேல் ஆயுதங்களை சப்ளை செய்ய முடியுமா என்று அதிசயிப்பவர்கள், இந்தப் போரின் விளைவிலிருந்து அதைப் புரிந்து கொள்ளலாம். பிரபல அமெரிக்க வர்த்தகச் சூதாடியான ஜார்ஜ் சோரோஸ் என்ற யூத ஏகபோக முதலாளிதான் இன்று கொசாவாவில் உள்ள சுரங்கங்களின் உரிமையாளன். (American Free Press.net – 14.10.2001)

முன்னாள் இசுரேலிய உளவுத்துறை அதிகாரியும் இந்நாள் முதலாளியுமான யூசுப் மைமைன் என்பவன் தான் துர்க்மேனிஸ்தான் அதிபரின் வர்த்தக ஆலோசகர். துர்க்மேனிஸ்தானிலிருந்து காஸ்பியன் கடல், அஜர்பைஜான் வழியே துருக்கிக்கு குழாய் அமைத்து ஈரானை ஒதுக்குவது மைமனின் திட்டம். குழாயை துருக்கியிலிருந்து ஐரோப்பாவிற்குள் கொண்டு செல்லத் தோதாக பால்கன் நாடுகள் அமெரிக்கப் பிடியில் கொண்டு வரப்படுகின்றன.

“மத்திய ஆசியாவில் நமது அரசியல் புவியியல் லட்சியங்களை எட்டுவதற்கு அமெரிக்க இசுரேல் அரசுகளால் சாதிக்க முடியாதவற்றை நாங்கள் சாதித்திருக்கிறோம்” என்கிறான் மைமன்.

சோவியத் ஆப்கான் போரின் காலம் முதல் வாஷிங்டனுக்கு தேவையான பதிலி யுத்தங்களை நடத்துவதற்கு முஜாகிதீன்களை பயன்படுத்துவது அமெரிக்க வெளியுறவுக் கொளையின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. “போஸ்னியாவை இசுலாமிய தீவிரவாதத்தின் தளப்பகுதியாக மாற்றுவதற்கு உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான முஜாகிதீன்களைத் திரட்டுவது என்று அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் அறிக்கை இதைக் கூறுகிறது” என்கிறார் சோசுடோவ்ஸ்கி.

“இப்போது மாசிடோனியாவிலும் இதுதான் நடக்கிறது. போரிடும் இரண்டு தரப்பினரையும் (அரசு Vs முசுலீம் தீவிரவாதம்) அமெரிக்க இராணுவத்தின் உளவுத்துறை ஆட்டுவிக்கிறது.” (மைக்கேல் சோசுடோவ்ஸ்கி, ஆகஸ்டு, 2001 உலகமயமாக்கல் குறித்த ஆய்வு மையம், கனடா)

மேற்கூறிய விவரங்கள் கூறும் முடிவு இது தான். பனிப்போர்க் காலத்தில் ரசியாவை வீழ்த்துவதற்கான ஆயுதமாக இசுலாமிய சர்வதேசியத்தை பயன்படுத்திய அமெரிக்கா பனிப்போருக்குப் பின் அதையே தனது உலக மேலாதிக்கத்தை நிறுவ உதவும் இரகசிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

இனி என்ன?

“செப் 11 க்கு முன்பு வரை இது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை இனியும் தொடர்வது தனக்கே ஆபத்து என்பதை அமெரிக்கா உணர்ந்திருக்குமல்லவா” என்று கேட்கலாம்.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்பதனால் இனி கடா வளர்ப்பதே இல்லை என்று அமெரிக்கா முடிவு செய்யப் போவதில்லை. ஏற்கெனவே நொரிகோ, சதாம் உசேன் போன்ற கடாக்களைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவுக்கு பின்லாடன் தாலிபான் அனுபவம் புதியதல்ல. அதே நேரத்தில் சுலபமானதும் அல்ல.

வியத்நாமில் 65,000 அமெரிக்கச் சிப்பாய்களை காவு கொடுத்து, உள்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும், உலக அரங்கில் அவமானத்தையும் சந்தித்ததன் காரணமாக “இனி அடுத்த நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதில்லை” என அமெரிக்கா முடிவு செய்யவில்லை.

தனக்கு தேவையான இடங்களில் அரசுகளை கீழிருந்து நெம்பிக் கவிழ்ப்பதற்கான கடப்பாறையாக இசுலாமிய பயங்கரவாதத்தை பயன்படுத்தி வரும் அமெரிக்கா, மேலிருந்து அரசுகளைத் தகர்க்கும் உலக்கையாக இப்போது ‘பயங்கரவாத எதிர்ப்பை’ பயன்படுத்துகிறது. பயங்கரவாதத்தை ‘ஆதரிக்கும்’ எல்லா நாடுகளின் மீதும் போர் தொடுப்பதாக மிரட்டுகிறது.

பின்லாடனைப் பிடிப்பது, மத்திய ஆசியாவின் எண்ணெய்க் குழாய்க்கு வழி தேடுவது, ஆப்கானில் பொம்மை ஆட்சி அமைப்பது, மத்திய ஆசியாவில் இராணுவதளம் நிறுவுவது, இசுலாமிய தீவிரவாதத்தையும், போதை மருந்துக் கடத்தலையும் முறைப்படுத்தி சி.ஐ.ஏ. வின் கட்டுப்பாட்டை நிறுவுவது, ஒத்துவராத அல்காய்தா போன்ற குழுக்களை ஒழித்துக்கட்டுவது, பயங்கரவாத அபாயத்தைக் காட்டி உலக நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் உரிமை பெறுவது என்ற பல நோக்கங்களை உள்ளடக்கிய போர் இது.

“ஊசியை தேடுவதற்காக வைக்கோல் போருக்குத் தீ வைக்கலாமா பின்லாடனைத் தேடுவதற்காக ஆப்கானை ஆக்கிரமிக்கலாமா?” என்று போர் தொடங்கு முன்னரே எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்கா பதில் சொல்லவில்லை.

இப்போது நான்காவது வாரமாக போர் தொடர்கின்ற நிலையில் “பின்லாடனைத் தேடுவதென்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதற்கு ஒப்பானது” என்கிறார் ரம்ஸ்பீல்ட்.

“இது தோல்வியை ஒப்புக்கொள்ளும் வசனம்” என்று எண்ணிக் குதூகலிப்பது முட்டாள்தனம். போரை இப்போதைக்கு முடிக்க முடியாது என்பதை சூசகமாக அறிவிக்கும் தந்திரம் இது.

“போர் முடிவதற்கு 4 ஆண்டுகள் கூட ஆகலாம். கம்யூனிசத்தை முறியடிக்க நமக்கு 50 ஆண்ன்டுகள் தேவைப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் பிரிட்டிஷ் இராணுவத் தளபதி.

அமெரிக்காவின் ஆசியோடு தங்கள் சொந்த நலனுக்காக இசுலாமிய சர்வதேசியத்தை எண்ணெய் ஊற்றி வளர்த்த வளைகுடா ஷேக்குகள், முசுலீம் மக்களிடையே வளர்ந்து வரும் அமெரிக்க எதிர்ப்பைக் கண்டு பீதியடைகிறார்கள்.

“அவர்களிடம் நிறைய எண்ணெய் இருக்கிறதென்பது உண்மை தான். ஆனால் இப்போது நமக்கு அவர்கள் தேவைப்படுவதைக் காட்டிலும் நாம் தான் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறோம்” என்று ஏளனம் செய்கிறார் அமெரிக்க செனட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜோசப் பிடன். கைக்கூலிகளுக்குத் தேவையான சூடு தான் இது.

“ரம்ஜானுக்காவது போரை நிறுத்துங்கள்” என்று மன்றாடுகிறார் முஷாரப் “ஈரானும் ஈராக்கும் அடித்துக்கொண்ட போது ரம்ஜானுக்கு விடுமுறையா விட்டார்கள்” என்ற ஏளனம் பதிலாய் கிடைக்கிறது.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கும் போராளிகள் கொல்லப்படுகிறார்கள் அல்லது விடுதலையை வென்றெடுக்கிறார்கள். கைக்கூலிகளின் கதையோ வேறு.

எசமானை எதிர்த்து நிற்பவர்கள் ஏவுகணைகளால் தாக்கப்படுகிறார்கள். எசமான விசுவாசிகளோ மக்களால் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள்.

அமெரிக்கா பொருளாதார நெருக்கடியாலும், உள்நாட்டில் வளர்ந்து வரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாலும் அச்சுறுத்தப்படுகிறது. உலக பயங்கரவாதத்தைக் காட்டி உள்நாட்டில் அரசு பயங்கரவாதத்தை ஏவுகிறது.

பின்லாடனைத் தேடி அலைகிறது அமெரிக்க அதிரடிப்படை, அமெரிக்க ராஜதந்திரிகளோ மிதவாத தாலிபான்களைத் தேடி அலைகிறார்கள்.

எண்ணெய் முதலாளிகளின் மூலதனத்துக்குப் பதில் சொல்ல, குழாய் அமைக்க வேண்டும், அதற்கு ஈரானுடனும் ரசியாவுடனும் முரண்பட வேண்டும்; தாலிபான், பாகிஸ்தான் மட்டுமின்றி வடக்கு முன்னணியின் ஆதரவும் வேண்டும்.

போர்த் தந்திர நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மத்திய ஆசியாவில் இராணுவத்தளம் வேண்டும் அதற்கு மத்திய ஆசிய நாடுகளின் ஆதரவு வேண்டும்; சீனா, ரசியா, ஈரானுடன் முரண்பட வேண்டும்.

அமெரிக்கப் போர்வெறியர்களுக்கோ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சதாமை ஒழித்துவிட ஈராக்கின் மீதும் போர் தொடுக்க வேண்டும் அதற்கு ஜரோப்பிய நாடுகளின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும்.

தங்களுடைய மவுனமான ஆதரவுக்குப் பரிசாக வளைகுடா ஷேக்குகளுக்கு பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு முடிவு வேண்டும், அதற்கு இசுரேலின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும்.

தனது துணிச்சலான ஆதரவுக்குப் பிரதி பலனாக முஷாரப்புக்கு காசுமீர் பிரச்சினையில் உதவ வேண்டும். அதற்கு இந்தியாவின் வெறுப்பை எதிர்கொள்ள வேண்டும்.

வெவ்வேறு விதமான தீர்வுகளைக் கோருகின்ற இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும், தனது நலனுக்கு உட்பட்டே தீர்த்துவிடலாம் என்று அமெரிக்கா கனவு காண்கிறது.

டாலரையும், ஏவுகணைகளையும் காட்டிக் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டி விடலாம் என்று நம்பி ஆசியப் புதை சேற்றில் கால் வைத்திருக்கிறது அமெரிக்கா.

பின்லாடனைப் பிடிப்பது. ஆப்கனில் பொம்மையாட்சியை நிறுவுவது என்ற உடனடி நோக்கம், எண்ணெய்க் குழாய் எனும் வர்த்தக நோக்கம், மத்திய ஆசியாவில் இராணுவதளம் நிறுவும் போர்த்தந்திர நோக்கம் அனைத்தையும் ஒரே கல்லில் அடித்து நிறைவேற்றி விடலாம் என்று எண்ணித்தான் அமெரிக்கா போரைத் துவக்கியது.

அமெரிக்காவின் வல்லமையை உலகுக்கு நிரூபிப்பதாக முரசு கொட்டிப் போரில் இறங்கினார் புஷ். தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவின் வல்லமையை அவர் அமெரிக்காவுக்கே நிரூபிக்க வேண்டியிருக்கிறது !

_____________________________________________________________

மருதையன், புதிய கலாச்சாரம் – டிசம்பர் 2001
_____________________________________________________________