Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 736

அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! – பாகம் 2

13

hallelujah-govindaஇந்த முறை ஊருக்குச் சென்றவுடன் சற்றே ஆர்வம் மேலிட அல்லேலுயா Vs கோவிந்தா சண்டை எந்த நிலையில் இருகிறது என்று விசாரித்தேன்.

குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை போடும் பிரச்சனை அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்தது. அப்போது ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆகி விட்டிருந்தது. அந்த முறை இந்த சண்டையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு, ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது.

‘ஜபக் கூட்டம் நடத்தி சாத்தானை விரட்டினால்தான் வீடு உருப்படும்’ இது அல்லேலுயா கோஷ்டியின் (மனைவி) நிலை. ‘அவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் ஹிந்து வேண்டுதல்களில் தலையிடக் கூடாது’ என்பது கோவிந்தா கும்பலின் (மாமியார், மாமனார்) நிலை. வழக்கம் போல் கணவர் நடுநிலை. ஆனால் கதை எதிர்பாராத விதத்தில் வேறு மாதிரி தடம் மாறியது.

கணவர் ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து 3 மாதம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘இது சாத்தான் வழிபாடுக்கு கர்த்தர் கொடுத்த தண்டனை’ என்று அல்லேலுயா கும்பல் தீர்ப்பு சொன்னது. ‘ஜபக் கூட்டம், அது இது வென பெருமாளை அவமானப் படுத்தியதால் வந்த தண்டனை’ என்று வாதிட்டது கோவிந்தா கும்பல். போட்டி போட்டுக் கொண்டு தண்டனை கொடுக்கும் எவ்வளவு நல்ல கடவுள்கள்!

‘ஒரு பெரிய தொகையை சபைக்கு கொடுத்துவிட்டு ஜபக் கூட்டம் நடத்தி புனித பிரார்த்தனை ஒன்றை செய்ய வேண்டும்’ என்று அல்லெலுயா பாதிரியார் சொல்லிவிட்டார். ஆனால் கோவிந்தா கோஷ்டி ஒரு படி முன்னேறி சிந்தித்தது. ‘இந்த கூட்டத்தை ஒரேயடியாக அடக்கா விட்டால் நல்லது நடக்க போவதில்லை. இனி சமரசமில்லை’ என்று கறாரான முடிவுக்கு வந்துவிட்டது.

ஜபக்கூட்டம் என்று பிரச்சனையை அல்லேலுயா கிளப்பியது வரை காத்துக்கொண்டிருந்த கோவிந்தா கூட்டம் சண்டையை நன்றாக வலுக்க செய்து, பின்னர் ஒரு அதிரடி இடியை தூக்கி போட்டது.

“இனியும் இந்த மாதிரி அல்லேலுயா கூட்டம், கிறிஸ்துவ மதம் பற்றிய பேச்செல்லாம் இந்த வீட்டில் கேட்கக் கூடாது. மீறினால் சொத்தில் சல்லி பைசா கூட விடாமல் திருப்பதிக்கு எழுதி வைத்துவிடுவேன்” என்று ஒரு செக் வைத்தார் கோவிந்தா கூட்டத்தைச் சேர்ந்த மாமனார்.

ஆடிப் போய்விட்டது அல்லேலுயா கூட்டம். பாதிரியார் தலைமையில் கொள்கை முடிவெடுப்பதற்காக முக்கிய கூட்டம் நடந்தது. இறுதியில் ‘சொத்தை இழக்க வேண்டாம். வீட்டில் எந்த விதமான கூட்டங்களும் நடத்த வேண்டாம். கர்த்தரை மனதில் நினைத்து ஜபித்தால் போதும். சாத்தான் வென்றுவிட்டான், ஆனால் இறைவன் நம்மை ரட்சிப்பார்’ என்று சில ஆண்டுகளுக்கு ரகசிய பெந்தகோஸ்தேவாகவே கர்த்தாவின் கருணையை பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

வீட்டில்ல் அல்லேலுயா சத்தம் அடங்கி ரகசிய செயல்பாடுகளாகவும், இரவு நேர பிரார்த்தனைகளாகவும் பதுங்கி விட்டிருக்கிறது. இந்த ரகசியமெல்லாம் தெரிந்தாலும் தெரியாதது போல் தன் வெற்றியை எண்ணி பெருமிதத்துடன் மீண்டும் கிராமத்தில் திரிய தொடங்கி விட்டார் கோவிந்தா கூட்டத்தின் தலைவர் மாமனார்.

அல்லெலுயாவா கோவிந்தவா சண்டையின் இப்போதைய நிலவரப்படி சொத்து தான் வெற்றிபெற்றிருக்கிறது.

______________________________________

– ஆதவன்.

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_______________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

மாட்டுத்தாவணி – கோயம்பேடு

11

மாட்டுத்தாவணி-கோயம்பேடு

தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி
தாய்ச்சுமையொடு பக்குவமாக
மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து
தேசிய நெடுஞ்சாலையை
பிடித்தது பேருந்து.

இயங்குவது எந்திரம் மட்டுமா?
அதனொரு பாகமாய்
ஓட்டுநரின் கையும், காலும்
தசையும், நரம்பும் அசையும்.
வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு
வெகுதூரம் சரிபார்த்து
விழிகள் சுழன்று இசையும்.

அவியும் எஞ்சின் சூடும்
இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே
பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால்
உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம்.
கும்மிருட்டில்
விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல்
பத்திரமாய் நம் பயணங்கள்.
எத்தனை பேர் அறிவோம்
அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும் தருணங்கள்.

போகும் நள்ளிரவில்… எதிரே தனியார் பேருந்துகளின்
தகிக்கும் விளக்கொளிகள்,
இரவையும் பகலாக்கும்
நிலவையும் கூச வைக்கும்.
அதை.. தனியே எதிர்கொண்டு
வேகம் குறையாமல்
லாவகமாய் சைடு வாங்கி
தாய்மடி தூங்காத குழந்தையையும்
தனது ஸ்டியரிங் இட வலது தாலாட்டில் உறங்க வைத்து,
துடிக்கும் கண்களுக்குள்
டீசலொடு ஓட்டுநரின் தூக்கமும்
எரிந்து விசையாகி எஞ்சின் துடிதுடிக்கும்.

அண்ணா சமாதி அணையா விளக்கு போல
ஏதோ வெளிச்சம் காட்டும்
முன்விளக்கைப் பற்றிக் கொண்டு
பாதை விரியும் தூரம் முழுக்க
தன் கண் விளக்கால் கடந்து கடந்து
பயணிகளைச் சுமந்து செல்லும்
ஓட்டுநரின் விழி இருக்கை.

கொட்டாம்பட்டி தாண்டும்போதோ
கொட்டும் மழை…
பேருந்து நிர்வாகம் போல் இயங்காத வைப்பர்
தினந்தந்தி நாளிதழோ, தான் போடும் புகையிலையோ
பேருந்து கண்ணாடிக்கும் போட்டு
விழி மறைக்கும் மழை விலக்குவார்.
எதிர்ப்படும் மின்னலை கருவிழி துடைத்து
திருச்சி தாண்டி
ஒரு தேநீர் குவளைக்குள்
இரவைக் கலக்கி குடிக்கும் ஓட்டுநரின் கையில்
பயணிகள் அனுபவித்த தூக்கம்
தோலுரிந்து  கிடக்கும்.

இருள் அப்பிக் கிடக்கும் சாலைகள்…
எதிர்ப்படும் தடைகள், குண்டு குழிகள்
பராமரிப்பில்லாத பேருந்தின் தொல்லைகள்
அத்தனைக்கும் முனகும் குரல்களை
வலிகளாய் தான் வாங்கி…
எரிபொருள்  சிக்கனமாய் வண்டியை ஓட்டி
தன் இரத்தம் தாராளமாய் விடிய விடிய
கண்களில் கொப்பளித்து
அத்தனை பயணிகளையும்
பத்திரமாய் கோயம்பேட்டில் இறக்கி விட
வானம் வெளுத்து வரும்
ஓட்டுநரின் கண்களோ செக்கச் சிவந்திருக்கும்.

தனியார்மயத்தால் தறிகெட்டு ஓட்டி
நாட்டையே விபத்துக்குள்ளாக்கும்
மன்மோகனையும், ப. சிதம்பரத்தையும்
‘மினிஸ்டர்’ என மரியாதையாகப் பேசும் வாய்கள்

பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல்
“ஊம்.. வந்துட்டேன்,
ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

–  துரை. சண்முகம்.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!

14

செய்தி -72

ஜெயலலிதா-சோ

5.9.12 தேதியிட்ட துக்ளக் இதழில் வந்த கேள்வி பதில் இது:

கேள்வி: ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வக்கீல் ஆச்சார்யா அலுத்துப் போய் ராஜினாமா செய்து விட்டது பற்றி?

பதில்: அவர் அலுத்துப் போய் ராஜினாமா செய்தாரா, வெறுத்துப் போய் ராஜினாமா செய்தாரா அல்லது வேறு ஏதாவது திட்டத்துடன் ராஜினாமா செய்தாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயம். பத்திரிகைகளில் அவர் தரும் பேட்டிகளைப் படிக்கும் போது, ‘ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை, தான் நடத்தினால்தான், அதில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வரும்’ என்று பொருள்படும்படியாக, பல விஷயங்களை அவர் கூறி வருகிறார். ஒரு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி அவர் நடந்து கொள்வதாக எனக்குத் தெரியவில்லை.

பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவரின் விரோதி அல்ல. அவருடைய எதிரி அல்ல. குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமான சாட்சியங்களோ, வாதமோ அவர் கண்ணில் பட்டால், அதை முதலில் நீதிமன்றத்தில் முன் எடுத்து வைப்பது அவருடைய கடமை. ‘குற்றவாளிக்குச் சாதகமான விஷயங்களை அவர் தரப்பு வக்கீல் கவனித்துக் கொள்ளட்டும், எனக்கென்ன?’ என்று அவர் இருந்துவிடக் கூடாது. அவராக முன் வந்து, இன்னின்ன அம்சங்கள் குற்றவாளிக்குச் சாதகமாக உள்ளன’ என்பதை நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேன் என்று செயல்படுவது அவருடைய கடமை அல்ல. இது கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த அடிப்படை சட்டத் தத்துவங்களில் ஒன்று, சுப்ரீம் கோர்ட் பல்வேறு வழக்குகளில் இதை வலியுறுத்தியிருக்கிறது. இதை ஆச்சார்யா லட்சியம் செய்கிற மாதிரி தெரியவில்லை.

வாய்தா-ராணிஆச்சார்யா ஊடகங்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வெளிப்படையானவை. வாய்தா மேல் வாய்தா வாங்கி, நீதிபதி, வழக்கறிஞர் யாரும் ஜெயாவை விசாரிப்பதற்கு தகுதி இல்லை என்று புதுப்புது வழக்குகள் போடுவது, அதையும் உச்சநீதிமன்றம் வரை போய் இழுத்தடிப்பது, ஆச்சார்யா மேலேயே சில வழக்குகள் போட்டு மிரட்டியிருப்பது, நீதிபதியே களைத்துப் போய் ஜெய-சசிகலாவை நிர்ப்பந்தம் செய்யாமல் இருப்பது குறித்துத்தான் ஆச்சார்யா வெறுத்துப் போய் பேசியிருக்கிறார். இவை எவை குறித்தும் சோ பேசவில்லை என்பது அவரது அப்பட்டமான பூணூல் பாசமே அன்றி வேறல்ல.

அடுத்து ஜெயாவை எதிரியாக நினைக்கக் கூடாது என்று ஆச்சார்யாவுக்கு சோ உபதேசம் செய்கிறார். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேனென்று செயல்படக்கூடாது என்று வழக்கறிஞர் தர்மம் பேசுகிறார். அதாவது ஆச்சார்யா கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டுமென்பதுதான் சோவின் விருப்பம். ஆனால் ஜெயாவின் மிரட்டல், நிர்ப்ந்தங்களால் விலகிப் போயிருக்கும் ஆச்சார்யாவை வழக்கறிஞர் தர்மம் தெரியாமல் நடந்து கொண்டிருப்பதாக வெட்கமே இல்லாமல் தூற்றுகிறார் சோ. நரித் தந்திரம் என்பதற்கு இலக்கணமே சோ தான் என்பதற்கு இந்தப் பதில் ஒரு சான்று.

ஆச்சார்யா விலகியிருக்கும் காரணங்கள் வெளிப்படையானவை. அந்தக் காரணங்களுக்கு பதில் சொன்னால் ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் சோ லீகலாக வேறு விசயங்களை இட்டுக்கட்டி பேசுகிறார். அதுவும் உப்புப்பெறாத விசயங்களை வைத்து. மணலில் கயிறு திரிப்பது என்பது இதுதான். நேற்று ஜெயலலிதாவின் திரையுலக நண்பர்களுக்கு போயஸ் தோட்டத்தில் விருந்தாம். அதில் பங்கேற்ற ஆண் நடிகர் சோ மட்டுமே. விருந்தில் மட்டுமல்ல ஜெயாவின் பார்ப்பன கிச்சன்கேபினெட்டில் முக்கிய நபராக இருக்கும் இந்த ஆள் இப்படி பேசாமல் வேறு எப்படி பேசுவார்?

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து!

58
புதிய-தலைமுறை

புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன?

புதிய தலைமுறை டி.வி.யை மட்டும் பார்க்கும் பலருக்கு இதன் உரிமையாளர் யார் என்று தெரிவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் முதலாளி பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்தான் புதிய தலைமுறையின் உரிமையாளர். பச்சைமுத்துவின் மகன் சத்தியநாராயாணா இந்த டி.வி. நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார். காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். கேம்பஸ், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது. 1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.

மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம். உரிமையாளர் பச்சைமுத்து தங்களது வட இந்திய கல்வி முதலீடுகள் பற்றி ‘தி ஹிந்து’வில் தனி பேட்டியே கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் மூச்சுவாங்கிக்கொண்டு படியுங்கள்…

  1. புதிய-தலைமுறைNightingale Matriculation Higher Secondary School,
  2. Valliammai Polytechnic Institute,
  3. SRM Engineering College,
  4. SRM College of Nursing and SRM College of Pharmacy,
  5. SRM School of Nursing and SRM College of Physiotherapy,
  6. SRM Institute of Hotel Management,
  7. SRM Arts & Science,
  8. SRM Polytechnic Institute,
  9. Easwari Engineering College,
  10. SRM College of Occupational Therapy,
  11. SRM Institute of Management & Technology,
  12. Valliammai Engineering College,
  13. SRM Institute of Science and Technology,
  14. SRM Dental College,
  15. SRM Medical College Hospital and Research Centre,
  16. SRM Institute of Management and Technology, Modinagar, Delhi
  17. Chennai Medical College, Trichy
  18. Inter Disciplinary School of Indian System of Medicine,
  19. TRP Engineering College, Trichy,
  20. Faculty of Science and Humanities, Vadapalani,

இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். ஹோட்டல்கள், எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. மீடியாவில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. விரைவில் ‘யுவா’ என்ற இன்ஃபோடைன்மென்ட் சேனலும், வேந்தன் என்ற பொழுதுபோக்கு சேனலும், புதிய தலைமுறை ஆங்கில செய்தி சேனலும் வரப்போகிறது. இதுபோக, ‘வேந்தன் மூவீஸ்’ என்ற பெயரில் சினிமாக்களை வாங்கி விற்கும் வேலையும் நடக்கிறது.

****

ந்த பிரமாண்ட வர்த்தகத்தின் ஒரு சிறு பகுதிதான் புதிய தலைமுறை டி.வி. இதன் வெற்றியை கொண்டாடும் யாரும் எஸ்.ஆர்.எம். எப்படி இந்த பணத்தை சம்பாதித்தது என்பதை பற்றி பேச மறுக்கின்றனர். ஏனெனில் ஆதாயம் அடையும் சந்தர்ப்பங்களை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. புதிய தலைமுறையின் ஓராண்டு வெற்றிக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் மனுஷ்யபுத்திரன், ‘எப்போது எதைப்பற்றி பேசக் கூப்பிடுவார்கள் என்று தெரியாது என்பதால் தினசரி எல்லா பேப்பர்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இதில் உள்ள ஒரே கஷ்டம்”’ என்று செல்லமாக ஒரு கம்பெனி ஆர்ட்டிஸ்டுக்குரிய வகையில் அலுத்துக் கொள்கிறார். எல்லா நேரமும் வாடிக்கையாளரை எதிர்பார்த்தால் எல்லா நேரமும் மேக்&அப் செய்துகொண்டுதானே ஆக வேண்டும்? மனுஷ்யபுத்திரன் தனது பிராண்ட் இமேஜ் அதிகரிப்பதற்கு பு.தவை நாடுகிறார். பு.தவுக்கு கருத்து கந்தசாமிகள் நிறைய தேவை. பரஸ்பர ஆதாயம்.

இவராவது பரவாயில்லை. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி அவரது ‘தீம்தரிகிட’’ காலத்தில் இருந்து ‘நடுநிலை’’ பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அதாவது “நடுநிலை என்று ஒன்று கிடையாது. ஒன்று நன்மையின் பக்கம் இருக்க வேண்டும். அல்லது தீமையின் பக்கம் இருக்க வேண்டும்’” என்ற ஞாநியின் கருத்துதான் நமது கருத்தும். ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு எதிராக இருப்பதாகத்தான் கருத முடியும். அதைவிடுத்து, சாம்பல் நிற கட்டங்களை’ தேட முடியாது. இப்போது புதிய தலைமுறை தொலைகாட்சி, “சிலர் இந்தப் பக்கம், சிலர் அந்தப் பக்கம், நாங்கள் நடு சென்டரில்”’ என்கிறது. தனது கருத்துப்படி ஞாநி இதை எதிர்த்திருக்க வேண்டும். மாறாக, பெருமகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கிறார். புதியதலைமுறையின் நடுநிலை’ அவருக்கு தொந்தரவாக தெரியவில்லை.

எந்தப்பிரச்சினையிலும் யாரையும் புதிய தலைமுறை எதிர்ப்பதில்லை. அதிகபட்சம் இவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள், சில்லறை அதிகாரிகளைத்தான் எதிர்க்கிறார்கள். அதற்கு மேலே கலெக்டர், மாவட்ட செயலாளர், ஜெயலலிதா என்றெல்லாம் மறந்தும் போக மாட்டார்கள். இந்த ‘நடுநிலை’ அப்ரோச் ஞாநிக்கு ரொம்ப பிடித்திருக்கிறது போலும். மேலும் 49ஓ-வுக்கு ஓட்டுப்போடச் சொல்லி சில வருடங்களாக பிரசாரம் செய்து வருகிறார். ‘ஓட்டுக்கட்சிகள் சீரழிந்துவிட்டன. ஆகவே அவர்களுக்க் ஓட்டுப்போட வேண்டாம். அதற்காக ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருக்க முடியாது. என்ன செய்யலாம்? வாருங்கள் நடுவில் நின்று ஓ போடுவோம்’ என்று அறைகூவல் விடுக்கிறார். கிழிந்து தொங்கும் போலி ஜனநாயகத்தின் டவுசரை ஓ போட்டு ஒட்ட வைக்க முடியும் என்பது ஞாநியின் நம்பிக்கை. மூடநம்பிக்கை பாமரர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, சர்வமும் உணர்ந்த ஞானிகளுக்கும் கூட இருக்கலாம்.

புதிய-தலைமுறை-2

புதிய தலைமுறையை கொண்டாடுபவர்களும், அண்ணா ஹஸாரேவின் பக்தர்களும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒன்றே. பாம்பும் சாக வேண்டும். தடியும் உடையக்கூடாது வகையறா. போராட வேண்டும், 24 மணி நேரமும் சமூகத்துக்காகவே தன்னை அர்ப்பணிக்க வேண்டும், ஆனால் சின்ன சேதாரம் கூட வரக்கூடாது.  மிஸ்டு காலில் போராடுவது, மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது, ஸ்டேட்டஸ் போட்டு போராடுவது, எஸ்.எம்.எஸ்ஸிலேயே போராடுவது என்ற இந்த தொழில்நுட்பத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கை தேர்ந்தவர்கள். புதிய தலைமுறை தொலைகாட்சியோ… மக்களுக்கு இந்த சிரமத்தை கூட தரவில்லை. ‘எங்கள் டி.வி.யை பாருங்கள், நீங்களும் போராளிதான்’ என்கிறது. உலகில் ஏதேனும் ஒரு மூலையில் புதிய தலைமுறை டி.வி. பார்த்தால் நீயும், நானும் போராளியே. இதுதான் நம் நடுத்தர வர்க்கத்துக்கு தேவையான நாட்டுமருந்து.

அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லா தவறையும் செய்துவிட்டு கடைசியில் காலணா குத்தக்காசு கட்டி புனிதமடைவதைப் போல… தங்களது சமூக பொறுப்பற்ற வாழ்க்கை முறை உருவாக்கும் குற்றவுணர்ச்சியில் இருந்து எளிமையான வழியில் புனிதமடையும் வாய்ப்புகளை நடுத்தர வர்க்கம் தேடிக்கொண்டே இருக்கிறது. அதில் ஹஸாரேவும், புதிய தலைமுறையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றனர். அண்ணா ஹஸாரேவின் உண்ணாவிரத்தை நேரலை செய்து தனது முதல் நாள் ஒளிபரப்பை புதிய தலைமுறை துவங்கியது எதேச்சையான ஒற்றுமைதான் எனினும் பொருத்தமானதே.

புதிய தலைமுறை தொலைகாட்சி, கடந்த ஒரு வருடத்தில் வியாபார ரீதியிலான வெற்றிகளை பெற்றிருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு. ஏனெனில் வட இந்தியாவில் மிடிள்கிளாஸ் மக்களின் கோபம், ஆவேசம், கண்ணீர், மகிழ்ச்சி போன்றவற்றை இறக்கி வைக்க ஏராளமான தொலைகாட்சிகள் உண்டு. தமிழ்நாட்டில் அப்படி ஒன்று இல்லை. புதிய தலைமுறை, அந்த வெற்றிடத்தின் சிறு பகுதியை நிரப்பியிருக்கிறது. ஆனால் இது கொண்டாடத்தக்கதல்ல. ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்கும் செய்தி தொலைகாட்சிகளின் ஆபத்தை புதிய தலைமுறை முன்னறிவிக்கிறது.

நாள்தோறும் நாட்டில் நடக்கும் சகல மக்கள் பிரச்னைக்கும் உண்மையின் பக்கமிருந்து வினை புரிவதாக புதிய தலைமுறை காட்டிக்கொள்கிறது. தனது பார்வையாளர்களும் அவ்வாறே நம்ப வேண்டுமென விரும்புகிறது. அதனால்தான் கலாநிதிமாறனுக்கும், இவர்களுக்குமான தொழில்போட்டியில் புதிய தலைமுறை தொலைகாட்சி முடக்கப்படுவதை மக்கள் பிரச்னையை போல முன்வைத்து நீதி கேட்கிறார்கள். இந்த நீதியின் வரம்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும்.

பேருந்து ஓட்டையில் சிக்கி மாணவி ஸ்ருதி இறந்துபோன செய்தியை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் அலசினார்கள். அதன் தன்மை ஒரு சிறுமியின் மரணத்தால் விளைந்த மனிதாபிமானத்தை அறுவடை செய்வதாய் இருந்ததே ஒழிய, தனியார் கல்வியின் கோர முகம் பற்றி பேசுவதாய் இல்லை. அப்படிப் பேசினால் எஸ்.ஆர்.எம். கல்வி கொள்ளை பற்றியே முதலில் பேச வேண்டிவரும். சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோன செய்தியை மற்ற மீடியாக்களை போல அடக்க ஒடுக்கமாக அடக்கித்தான் வாசித்தது புதிய தலைமுறை.

பதவியேற்ற சில மாதங்கள் மௌனமாக இருந்த ஜெயலலிதா, இப்போது சகட்டுமேனிக்கு ஊடகங்கள் மீது வழக்குகளை தொடுக்கிறார். ஓர் அரசியல் தலைவர் அறிக்கை விடுவதை பத்திரிகையில் வெளியிட்டால் அதற்கும் வழக்கு. ஊடகங்கள் மீதான இந்த அநீதியான தாக்குதல் குறித்து மற்ற ஊடகங்கள் பேசாதது போலவே புதிய தலைமுறையும் பேசவில்லை.

புதிய-தலைமுறை

ல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது. இப்போதுவரை தமிழினவாதிகள் இதைப்பற்றி பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இலங்கை போனால் ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் கல்வி வியாபாரம் செய்யும் பச்சைமுத்துவை எதிர்க்க முன்வரவில்லை. ஏனெனில் அப்படிப் பேசும் தமிழினவாதிகளில் பலருக்கு புதிய தலைமுறையில் முகம் காட்டும் ஆசை இருக்கிறது. முகம் காட்டிய நன்றிவுணர்ச்சி இருக்கிறது.

சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்துக்கு மாற்றாக எஸ்.ஆர்.எம்மை முன் வைக்க முடியாது. ‘அஞ்சு வருஷம் அய்யா கொள்ளையடிச்சார். இந்த அஞ்சு வருஷம் அம்மா கொள்ளையடிக்கட்டும்’’ என நாட்டை சுரண்டும் உரிமையை இவருக்கும், அவருக்கும் மடைமாற்றிவிடுவதை போல… ஊடகங்களை ஆக்கிரமிக்கும் உரிமையை கலாநிதிமாறனுக்கும், பச்சைமுத்துவுக்கும் தாரைவார்க்க முடியாது. கலாநிதிமாறன் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய நபரோ அதே முக்கியத்துவத்துடன் எஸ்.ஆர்.எம். குழுமமும் எதிர்க்கப்பட வேண்டும். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் நல்ல கொள்ளியல்ல!

___________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

10

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் ‘மர்ம’மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  ‘சுமங்கலித் திட்டம்’ எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து ‘தரமான கல்வி’  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் – கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய – லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!

  • நாடு மீண்டும் காலனியாவதைத்
    தடுத்து நிறுத்துவோம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை
    அடித்து வீழ்த்துவோம்!
  • போலி ஜனநாயக தேர்தல் பாதையைத்
    தூக்கியெறிவோம்!
  • நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
    ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு:

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 24
பேச : 94448 34519

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

56
கொலையான மாணவன் ரஞ்சன் - பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி
கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி

திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பள்ளியின் ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். ஆசிரியர்களுக்கே இதுதான் கதியென்றால் நீச்சல் பயிற்சியாளரெல்லாம் உரிய தகுதிகளுடன், அதிக சம்பளத்துடன் நிச்சயம் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

மேலும் சமச்சீர் கல்வி வருவதை எதிர்த்து முழுமூச்சுடன் போராடிய பார்ப்பன- மேட்டுக்குடி கூட்டத்திற்கு இந்த பள்ளியின் தாளாளர்தான் தலைமை தாங்கினார். ஆக கல்வியில் தனியார் மயத்தின் கொள்ளையை தடையின்றி நடத்தும் மற்ற கொள்ளையர்களுக்கு இந்த அம்மையார்தான் முன்னோடி.

சிறுமி சுருதி கொலையில் சியோன் பள்ளியின் தாளாளர் விஜயனை கைது செய்த போலீசு இங்கே திருமதி ஒய்ஜிபியை கைது செய்யவில்லை. வெறுமனே பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்களை மட்டும் பேருக்கு கைது செய்திருக்கிறது. முழுப்பழியையும் இவர்கள் மீது போட்டு ஏதாவது தண்டனை வாங்கி வழக்கை ஊத்தி மூடிவிடுவார்கள். ஆகவே திருமதி ஒய்ஜிபையை கைது செய்து கொலை வழக்கு போடுவதுதான் தனியார் பள்ளிகளில் மாணவர் உயிரிழக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் என்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் கணேசன். அவரிடம் நேற்று கலைஞர் டீவி கண்ட நேர்காணலை இந்த வீடியோவில் காணலாம்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரேவின் கட்சியும் வினவின் ‘வரலாற்றுத் தவறும்’!

அண்ணா-ஹசாரே
அண்ணா ஹசாரே

கேள்வி: அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அண்ணா ஹசாரேவின் ஆட்டம் குளோஸ் என்று எழுதி குதூகலித்த வினவு இப்போது என்ன சொல்லப் போகிறது? ஹசாரே அரசியலற்ற வாதத்தை முன்வைப்பதாக குற்றம் சாட்டிய வினவு இப்போது அண்ணாவின் அரசியலை ஆதரிக்கப் போகிறதா இல்லையா? இதற்கு நேரடி பதில் தேவை. அண்ணா ஹசாரேவின் அரசியல் கட்சியை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் ஒரு வரலாற்றுத் தவறை இழைக்கிறீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா?

கணேசன், சேலம்.

அன்புள்ள கணேசன்,

அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்னார்; அப்படியில்லை என்று அவர் சொன்னதாக அவரது குழுவினர் சொல்லியதை பத்திரிகைகள் சொல்லின; இல்லையென்று மறுத்தார்; ஆமாம் என்றார்; இருக்கலாமென்றார்; கட்சி தொடங்கச் சொல்லி அண்ணா உத்தரவிட்டதாக கேஜ்ரிவால் சொல்கிறார் – உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பதற்காக இது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து வாசித்ததில்  இந்தளவுக்குத் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அண்ணா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் எழுத்தாளர் கோணங்கியின் பிற்காலக் கதைகளைப் போலவே இருப்பதால் லேசாக கிர்ரடிக்கிறது.

போகட்டும். நீங்கள் ஒரு முன்முடிவோடு நாங்கள் அண்ணாவின் கட்சி துவங்கும் அறிவிப்பை எதிர்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இந்திய ஜனநாயகத்தின் வேட்டியும் பட்டாபட்டியுமே பறந்தோடிப் போய் விட்டபின் தலைப்பாகை களைந்து போனதற்கா நாங்கள் சஞ்சலப்படுவோம்? ஏற்கனவே இங்கே விஜயகாந்த் ஒரு கட்சியை நடத்துகிறார். விஜய டி.ராஜேந்தரும் ஏதோவொன்றை நடத்துவதாகச் சொல்லிக் கொள்கிறார். கார்த்திக் நடத்தாத கட்சிக் கூட்டங்களா? சேலத்தில் மாநாடு நடத்துமளவு சுப்ரீம் ஸ்டாரின் கட்சி பொளந்து கட்டுகிறது. காதலர்களின் புரட்சித் தலைவர் குமார் ஸ்ரீ ஸ்ரீ நடத்தும் “அகில இந்திய காதலர்கள் கட்சியில்” கோடிக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். கிளி ஜோசியக்காரர்கள் ஏதாவது கட்சி வைத்துள்ளார்களா என்கிற தகவல் எம்மிடம் இல்லை.  இத்தனை கட்சிகள் இருக்கும் போது, அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பித்தால் புதிதாகவா குடி முழுகப் போகிறது? வடிவேலு வேறு இப்போதெல்லாம் சினிமாக்களில் நடிப்பதில்லை – வறண்டு போன மக்களுக்கு இப்படியாவது ஆறுதல் கிடைக்குமென்றால் கிடைத்து விட்டுத்தான் போகட்டுமே.

indian-lovers-party
குமார் ஸ்ரீ ஸ்ரீயின் அகில இந்திய காதலர்கள் கட்சி

அண்ணா ஹசாரேவின் அறிவிப்பைப் பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை பெரிய அளவு மகிழ்ச்சியும் இல்லை. நாங்கள் வேறொன்றைப் பற்றித்தான் அக்கறை கொள்கிறோம்.

கணேசன், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அண்ணா ஹசாரே மேல் எங்களுக்கு வன்மம் ஏதுமில்லை. உலக அளவில் வரவேற்புப் பெற்ற ஜஸ்ட் ஃபார் லாஃப் நகைச்சுவை நிகழ்ச்சியைப் போய் யாராவது வைவார்களா என்ன? மேலும் அரசியல் அரங்கில் அண்ணா ஹசாரே பெரிய அளவுக்கு ஒர்த் இல்லை என்பது ஒரு காரணமென்றாலும், அவரது தன்னம்பிக்கையை நினைத்து பெரிதும் ஆச்சரியப்படுகிறோம். நீங்களே நினைத்துப் பாருங்களேன், ஒரு கிராமத்திலிருந்து மஞ்சப்பையுடன் பட்டினத்துக்கு வரும் பெரியவர் ஒருவரை டைம்ஸ் நௌவிலிருந்து பேட்டியெடுக்கிறார்கள்; பிரதமர் அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் – நேரில் சந்திக்கிறார், அமைச்சர்கள் பதட்டத்துடன் அறிக்கை விடுகிறார்கள்,  நாடெங்கும் ஆங்காங்கே சில பத்து பத்தரை போராளிகள் திரளுகிறார்கள். ஆனானப்பட்ட அமெரிக்க ரிட்டர்ன் விவேகானந்தராலேயே நூறு பேரைத் திரட்ட முடியாமல் அல்லு கழண்டுவிட்டது – அண்ணா ஹசாரேவுக்கு திரண்டார்களென்பது சாதனைதானே?

அரசியலில் பல ஆண்டுகள் பழம் தின்று கொட்டையை துப்ப முடியாதபடி வெம்பிப் போன டி.ராஜேந்தருக்குக் கூட “நானும் டி.ஆர் தான்” என்று அறிவித்துக் கொள்ளும் தொண்டர்கள் இல்லை. ஆனால், அண்ணாவின் தொண்டர்களோ “தாமும் அண்ணா தான்” என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தொப்பியை மாட்டிக் கொண்டு தெருவில் அலைந்தார்கள். இது எப்பேர்பட்ட தியாகம்? இப்படி பல பத்து தியாகிகளை ஒரு கிராமத்து பெரிசினால் உருவாக்க முடியுமென்றால் அது ஒரு சாதனை தானே?

வார இறுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்த தயாராக இருக்கும் இந்த வீக் எண்ட் புரட்சியாளர்களைக் கொண்டே இந்தியாவைத் தலைகீழாய்த் திருப்ப முடியும் என்கிற நம்பிக்கை என்பது கோணவாயன்பட்டியிலிருந்து கல்கண்டு பத்திரிகைக்கு எழுதியனுப்பிய நெம்புகோல் கவிதையின் மூலம் இந்த பூமிப் பந்தையே நெம்பித் தள்ளி விடலாம் என்று கனவு காணும் கவிஞனின் நம்பிக்கைக்கு சற்றும் குறையாத தன்னம்பிக்கை அண்ணா ஹசாரேவின் தன்னம்பிக்கை. பாருங்கள், இந்த வாக்கியத்தில்தான் எத்தனை கை! அதனால் தான், மும்பையில் ஓடாத படப் பெட்டியோடு தில்லிக்கு வண்டியேறியிருக்கிறார். அங்கும் ரீல் அறுந்து போன பின்னும் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் என்றால் அதற்கு எத்தனை மனத்துணிவு வேண்டும்? கைப்புள்ள கூட  வான்டடாக கட்டதுரையிடம் மாட்டவில்லை என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

கணேசன், சென்ற ஆண்டு அண்ணாவின் கிராமமான ராலேகான் சித்திக்கு நாங்கள் புனித யாத்திரை சென்றிருந்த சமயத்தில்  தான் அவர் ஜூலைப் போராட்டத்தின் வெற்றியை தில்லியில் கொண்டாடி விட்டு ஊர் திரும்பியிருந்தார். தினமும் மூன்று முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் வறப் பட்டிக்காடு அது. அந்த நேரத்தின் பரபரப்பின் காரணமாக அண்ணாவுக்கு போலீசு பாதுகாப்பெல்லாம் போட்டிருந்தார்கள் – ஒரு 807-ம் ஒரு 205-ம் கையில் லத்தியோடும் இடையில் தொந்தியோடும் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அப்போது அவர் அகில உலக வி.ஐ.பி ஆகியிருந்ததால் பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டு பார்க்க வந்திருந்தனர்.

ஆனால், அவர் வி.ஐ.பி அந்தஸ்துக்கு வரும் முன்பு வரை பத்மாவதி கோவிலின் முன்னே உள்ள ஆலமரத்தடி பஞ்சாயத்து மேடை தான் அவரது ஜாகை. அதைச் சுற்றி வரும் மூன்று ரிடையர்டு காந்திக் குல்லாய்களும் வாடிப்போயிருந்த நான்கு சொறி-தெரு நாய்களுமே அவரது நண்பர்கள். தன் உற்ற நண்பர்கள் புடைசூழ அந்தப் பஞ்சாயத்து மேடையிலிருந்து அண்ணா வழங்கிய தீர்ப்புகள் ஒவ்வொன்றும் இன்றளவும் அந்த கிராமத்தின் இ.பி.கோ சட்டங்கள். அதிக பட்சம் ராலேகான் சிந்தி டைம்ஸ் எனும் ஒரு பக்க பத்திரிக்கையில் மேட்டருக்கு பஞ்சமென்றால் அண்ணாவை குழாயடி, கொசுக்கடி போன்ற பிரச்சனைகளுக்காக உண்ணாவிரதம் இருக்கச்சொல்லி செய்தி போடுவர்.  இப்படி ஒரு சாதாரண கிராமத்திலிருந்து துண்டை உதறி கக்கத்தில் சொருகிக் கொண்டு தில்லிக்கு வண்டியேறிய அண்ணாவின் வளர்ச்சி என்பது அண்ணாமலை ரஜினியின் வளர்ச்சியைக் காட்டிலும் மிகப் பெரியது.

கிரண்-பேடி-அரவிந்த்-கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால் – கிரண்-பேடி (டீம் அண்ணா)

இன்றைக்கு அரசியல் கட்சி துவங்கப் போவதாக அவர் சொல்கிறார் ( அல்லது அவரது குழுவினர் சொல்கிறார்கள் – அல்லது ஜந்தர்மந்தரில் சுண்டல் விற்ற சிறுவன் சொல்கிறான்) – இதற்காக எங்களுக்கு சந்தோஷமோ வருத்தமோ இல்லை. ஆனால், இந்த அறிவிப்பை சுமாரான திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூம் போட்டு கொண்டாடும் மன நிலையில் இருக்கும் ஒரே கட்சி காங்கிரசு தான். 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் அவரை சில்லறைதான் என்றாலும், எத்தனை துண்டுகளாக சிதறப் போகிறது என்பதை இப்போதே ராகுல் தலைமையிலான காங்கிரசு செயல்வீரர்கள் குழு கணக்கிட்டு வருவதாக தில்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணா ஹசாரே பிரிக்கும் ஓட்டைக்கூட எண்ண வேண்டிய அவலத்தில் காங்கிரசுக் கட்சி இருப்பது பெரும் சாதனையல்லவா?

அண்ணா அரசியலுக்கு வந்தைக் கூட தாங்கிக் கொள்ளலாம் – அதன் மூலம் ராகுல் காந்தியெல்லாம் சில்லறை வாக்குகளைப் பொறுக்கி ஒரு ஆளாக விரும்புவதை நினைத்தால் தான் பேஜாராக இருக்கிறது. முந்தா நாள் தான் நடைபழகப் ஆரம்பித்த சிறுவர்களான அகிலேஷ் யாதவ், ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்களிடமெல்லாம் தோற்றுப் போன ராகுல் காந்திக்கு வரப்போகும் வாழ்வைப் பாருங்கள். பாஜ.கவும் காங்கிரசும் ஆளும் வர்க்கத்தின் கட்சிகளென்றாலும் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடுகளை அதாவது தேர்தல் சண்டைக்கெல்லாம் நமது அண்ணா பயன்படுகிறார் என்பது எத்தனை பெரிய சாதனை.

கணேசன், காங்கிரசின் போதைக்கு அண்ணா ஹசாரே ஊறுகாய் ஆவதை உங்களால் எப்படி கொண்டாட முடிகிறது? தயவு செய்து அண்ணாவே கட்சி கட்டி, தேர்தலில் நின்று, மெஜாரிட்டி பெற்று பிரதமர் ஆவார் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் – ஏற்கனவே இட்லிக்கடை சரத்பாபுவில் இருந்து ஐ.ஐ.டி மாணவர்களின் லோக் பரித்ரன் வரை இயன்ற மட்டும் எகிறிக் குதித்தும் எட்டாத திராட்சைப் பழம் அது. வேண்டுமென்றால் கே.வி ஆனந்திடம் சொல்லி கோ படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் அண்ணாவை ஹீரோவாகப் போட்டு அழகு பார்த்துக் கொள்ளலாம்.

ஏனெனில் தேர்தல் என்பது மெழுவர்த்தி ஊர்வலம் நடத்துவது போல் அத்தனை சுலபமானதில்லை.  சாதாரணமாக ஒரு அகில இந்திய அரசியல் கட்சி பாராளுமன்றத் தேர்தலுக்கு குறைந்தது ஆயிரம் கோடி வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று முன்னாள் மத்திய கேபினெட் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் சொல்கிறார். ராலேகான் சித்தியில் அண்ணாவுக்கு இருக்கும் ரெண்டு நெளிந்த அலுமினியத் தட்டையும் மூன்று நசுங்கிய சொம்பையும் (அதிலொன்று ஊர்பஞ்சாயத்தாருக்கு பாத்தியப்பட்டது) நாலு மஞ்சள் பைகளையும் விற்றால் கூட நூறு ரூபாய்கள் தானே தேறும் மீதம் தொள்ளாயிரத்து தொன்னூற்றொன்பது கோடியே தொன்னூற்றொன்பது லட்சத்து தொன்னூற்றொன்பதாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய்களுக்கு அவர் எங்கே போவார்? இதற்காகவெல்லாம் அவர் வாழும் மாளிகை வீட்டை விற்றுவிட்டு ஆலமரத்தடியில் கொசுக்களோடு படுக்கப் போய்விடுவார் என்றெல்லாம் தோன்றவில்லை.

அண்ணா-ஹசாரே
அண்ணா ஹசாரே

தேர்தலில் போட்டியிடும் புனிதக் காரியத்துக்கு காசு தேற்ற கிரண் பேடி விமானத்தில் பயணித்து கள்ளக் கணக்கு எழுத வேண்டுமென்றால் கூட செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் டிக்கெட் செலவில் இருந்து தான் இத்தனை பெரிய தொகையைத் தேற்ற முடியும். இன்னும் மல்லையா கூட செவ்வாய் கிரகத்துக்கு விமானப் போக்குவரத்து சர்வீஸ் துவங்கவில்லை. கேஜ்ரிவால் வேண்டுமானால் என்.ஜி.ஓ நிதியை இதற்காகத் திருப்பி விடலாம் – ஆனாலும் கூட காங்கிரஸ் பி.ஜே.பியின் பலத்துக்கு முன்னாள் அது கொசு தான். ஏனெனில் முதலாளிகள் அனைவரும் ஜெயிக்கிற குதிரை மீதுதான் பணம் கட்டத் துணிவார்கள். வாயலேயே முழம் போடுபவர்களுக்கு கொஞ்சம் சில்லறைகளை வீசிவிட்டு போய்விடுவார்கள்.

ஆக, அண்ணா ஹசாரேவின் கட்சி டி.ஆரின் லட்சிய தி.மு.கவை விட கொஞ்சம் அதிகம் வளர வாய்ப்பிருந்தால் பத்து நூறு காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டைப் பிரித்து ராகுல் காந்திக்கு உதவி செய்யலாம் – ஒருவேளை சுத்தமாக டெப்பாஸிட் காலியானால் போட்ட காசைக் கூட எடுக்க முடியாது. ஐ.ஐ.டி சரத்பாபுவுக்காவது கைவசம் இட்லி சுடும் தொழில் இருக்கிறது. காலம் போன காலத்தில் அண்ணா ஹசாரே என்னதான் செய்வார்? மிஞ்சிய ஆயுள் முழுக்க உலகமெங்கும் விமானத்தில் பறக்க கிரண் பேடி வேண்டுமானால் தயாராய் இருக்கலாம் – ஆனால் தோத்தாங்காலிகளை யார் ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொள்வார்கள்?

ராலேகான் சித்தியில் சிங்கமாக சுற்றி வந்தவரை அழைத்து வந்து முட்டுச் சந்தில் நிறுத்தி சாணியடி வாங்கிக் கொடுத்தது போலாகி விட்டது நிலைமை. அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட அண்ணாவின் குழுவினர் வேலியில் போன ஓணானைப் பிடித்ததும் இல்லாமல் அதை அண்ணாவின் வேட்டிக்குள் விட்டு விட்டனர் என்பது எப்பேர்பட்ட சோகம்?

கணேசன், இதற்காக நாங்கள் வருந்துகிறோம்; நீங்கள்?

______________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?

34

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 21

”பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விட்டோம். பாகிஸ்தான் ஒரு புதிய தந்திரம் பண்ணியது. பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் இருந்த முசுலீம்களைப் பசி, பட்டினி போன்ற காரணங்களைக் காட்டி ‘எங்கள் நாட்டில் வறுமை, பிழைக்க வழியில்லை’ என்று சொல்ல வைத்து பாரதத்திற்குள் ஊடுருவிய அந்த அந்நியர்கள் சுமார் இரண்டரை கோடிப் பேர் பாரதத்தில் உள்ளார்கள்.  ஏற்கெனவே இருக்கிற தலைவலி போதாது என்பது போல் வெளியிலிருந்து இறக்குமதி செய்கின்ற இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

உலகில் ஒவ்வொரு நாடுமே தங்கள் நாட்டிற்குள் அதிகப்படியாக மற்ற நாட்டின் குடிமக்களை அனுமதிப்பதில்லை. எல்லா நாடுகளும் இப்படி கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் போது நமது நாடு மட்டும் என்ன சத்திரமா? எவர் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகக் கொடுமையானது.”

இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?” – இந்து முன்னணி, வெளியீடு, பக்கம் – 26.

முதலில் பொய்களைக் கவனிப்போம். இரண்டரைக் கோடிப் பேர் அகதிகளாக வந்தார்கள் என்பது எந்தவித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத வடி கட்டிய பொய். அடுத்து பாகிஸ்தானிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதும் முழுப் பொய்தான். காசுமீர் பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பேயே, பாகிஸ்தானுடன் நடந்த மூன்று போர்களையொட்டி எல்லையைக் கடுமையாகக் கவனித்து வருகிறது இந்திய அரசு. சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லை மாறும் இருநாட்டு எல்லையோர கிராம மக்கள் பலர் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் பல கிராமங்கள் வருடத்தில் பாதி நாட்கள் காலியாகத்தான் இருக்கின்றன.

எனில் இந்தியாவில் அகதிகள் என்ற நிலையில் இருப்பவர்கள் யார்?

இங்கே அரசின் சட்டபூர்வ பாதுகாப்பைப் பெற்ற அகதிகளும், பெறமுடியாத பரிதாபமான அகதிகளும் இருக்கின்றனர். இந்திய அரசின் பிராந்திய வல்லரசு என்ற நலனக்கேற்ப அகதிகளைக் கவனிக்கும் முறை வேறுபடுகிறது.

வங்க தேசத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த ‘சக்மா’ எனும் பழங்குடியினர் இருக்கின்றனர். இவர்களது நிலத்தையும், வாழ்வையும் பறித்துக்கொண்ட வங்கதேச அரசு இராணுவத்தின் மூலம் தொடர்ந்து அடக்கியும் வருகிறது. அதனால் வேறு வழியின்றி மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமிற்கும் சில ஆயிரம் பேர் அகதிகளாக வந்தனர். இவர்கள் மூலம் அரசியல் ஆதாயம் ஏதும் இல்லையென்பதால், கணிசமான சக்மா பழங்குடியினரை மீண்டும் வங்க தேசத்திற்கே விரட்டி வருகிறது இந்திய அரசு.

சீனாவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் திபெத் பீடபூமியில், கடந்த சில நூற்றாண்டுகளாக லாமா எனப்படும் பௌத்தத் ‘துறவி’ நிலப்பிரபுக்கள் பெரும்பான்மை திபெத்தியர்களை ஒடுக்கி வந்தனர். 1949-இல் முடிவடைந்த சீனப் புரட்சி, இந்தக் கொடுங்கோன்மையான, பௌத்த நிலப்பிரபுக்களின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதிகாரத்தை இழந்த லாமாக்கள் தலாய்லாமா தலைமையில் 60-களில் இந்தியாவிற்கு ஓடி வந்தனர். இமாச்சல பிரதேசத்தின் தர்மஸ்தலாவிலும், ஏனைய வடஇந்திய நகரங்களிலும் பரவிக்கிடக்கும் சில ஆயிரம் திபெத்தியர்களை இந்திய அரசு தொடர்ந்து சீராட்டி வருகிறது. தலாய்லாமா கும்பலைத் தனி அரசாக அங்கீகரித்ததோடு அவர்களையம் உலக அரங்கில் ‘சுதந்திர திபெத் நாடு’ என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியும் ஆதரவும் அளித்து வருகிறது. இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக இந்த ‘திபெத் அகதிகள்’ நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்கின்றனர்.

காலனிய ஆட்சிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே பாரசீகத்தைச் (ஈரான், ஈராக்) சேர்ந்த பார்ஸிகள் மேற்கு இந்தியாவிற்கு வந்தனர். குஜராத்திலும், பம்பாயிலும் வாழும் இப் பார்ஸிகளும், இவர்களது தரகு முதலாளிகளும் இந்து மத வெறியர்களுக்கு ஆதரவான சமூகப் பிரிவாகவே இருக்கின்றனர். எனவேதான் வெளிநாட்டுப் பின்னணியும், வேற்று மதச் சடங்குகளும் கொண்ட பார்ஸிகளை இந்து மதவெறியர்கள் முசுலீம்களைப் போல் எதிர்ப்புணர்ச்சி கொண்டு நடத்துவதில்லை.

தமது தாயகத்திலிருந்து துரத்தப்பட்ட யூதர்கள் உலகெங்கும் சிதறியபோது ஒரு சிலர் இந்தியாவிற்கும் வந்தனர். இஸ்ரேல் உருவான பிறகு பெரும்பான்மை யூதர்கள் அங்கே சென்றுவிட்டாலும் சிறு எண்ணிக்கையிலான யூதர்கள் இங்கே இருக்கின்றனர். அமெரிக்க ஆதரவு, முசுலீம் எதிர்ப்புக் கொள்கையிலிருக்கும் இஸ்ரேலிய அரசு இந்து மதவெறியர்களுக்கும், இந்திய அரசுக்கும் நெருக்கமாக இருப்பதால், இந்திய யூதர்களும் பிரச்சினையின்றி நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இமயத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நேபாளம் இந்தியாவின் பிராந்தியத் துணை வல்லரசு ஆதிக்கத்திற்கு அடங்கி வாழ்ந்துவரும் நாடாகும். தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நேபாள மக்களை இந்திய அரசு தனது தேவைகளுக்கேற்பப் பயன்படுத்திச் சுரண்டி வருகிறது. அதனாலேயே இந்தியாவிலிருக்கும் நேபாள மக்களைக் கண்டும் காணாமலும் நடத்தி வருகிறது. இந்திய இராணுவத்தின் தீவிரப் போரிடும் பிரிவான ‘கூர்க்கா ரெஜிமண்ட்’டில் பல ஆயிரம் நேபாள வீரர்கள் இருக்கின்றனர். பம்பாய் விபச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான நேபாளச் சிறுமிகள் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆசியுடன் இந்திய மாஃபியா கும்பல்கள் நேபாளத்தை மையமாக வைத்து போதைப் பொருள் வியாபாரத்தையும் வளமாகச் செய்து வருகின்றனர். இப்படி இராணுவத்தில் குறைந்த கூலி கொடுத்துப் பலியிடவும், பம்பாய் விபச்சாரத்தில் பணத்தை அள்ளவும் பயன்படும் நேபாள  மக்களை, இந்த மதவெறியர்கள் அகதிகளாகக் கருதாமல் இருப்பதன் மர்மம் இதுதான்.

சோவியத் ஆதரவுடன் ஆப்கானில் ஆட்சி நடத்திய நஜிபுல்லா அரசு, இந்திய அரசாலும் ஆதரிக்கப்பட்டது. இது பாக். எதிர்ப்பு மற்றும் சோவியத் ஆதரவு கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகும். பின்னர் அமெரிக்க – பாக். ஆதரவு முஜாஹிதீன்களும்,  தாலிபான்களும் நஜிபுல்லா அரசை வீழ்த்தினர். அப்போது இந்தியாவிற்கு ஓடிவந்த ஆயிரக்கணக்கான நஜிபுல்லா ஆதரவு ஆப்கானியர்களை இந்திய அரசு வரவேற்று இன்று வரை பராமரித்து வருகிறது. இவர்களும் முசுலீம்கள்தான் என்றாலும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் வாய் திறவாமல் இருக்கக் காரணம் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியல்.

அடுத்து நமக்கு நெருக்கமான ஈழ அகதிகள் பிரச்சினையைப் பார்ப்போம். ஈழத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் அகதிகளில் சரிபாதிப் பேர், பல்லாயிரக்கணக்கானோர், இந்தியாவில் – தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். நேபாளத்தைப் போல இலங்கையும் இந்தியாவுடன் பல்வேறு உறவுகளில் பிணைக்கப்பட்டிருக்கும் நாடுதான். இந்திய பிராந்தியத் துணை வல்லரசுக் கொள்கையின் முக்கியமான அங்கமாக இலங்கை இருப்பதும், ஈழவிடுதலைப் போராட்டம் காரணமாக, அக்கொள்கை இன்னும் முக்கியத்துவம் பெறுவதும் நாம் அறிந்ததே. 1983 ஜுலை படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஆரவாரத்துடன் மைய அரசினால் வரவேற்கப்பட்டனர். ஈழப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும், பணமும், பயிற்சியும் தடையின்றித் தரப்பட்டன. காரணம், இலங்கையில் தன் தலையீட்டையும், ஆதிக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும், உறுதி செய்வதற்கும், இந்திய அரசு அகதிகளையும், போராளிகளையும வரவேற்று உபசரித்தது.

இன்றோ தமிழகத்தின் ஈழ அகதிகள் முகாம்கள் அனைத்தும் சிறைக் கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சிங்கள அரசால் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூட இங்கே  அகதிகளுக்குக் கிடையாது என்பதே உண்மை. முன்பு ஈழ அகதிகளுக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ந்த இராமேசுவரம், இன்று மரணப் பள்ளத்தாக்காக மாறிவிட்டது. தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு பாதி வழியில் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டும், மீறி வந்தால் ஐந்தாம் மணற்திட்டில் இறங்கி பசி – வெயில் – குளிரில் பரிதவித்தும் வாடுவதே அவர்களின் தலைவிதியாகிவிட்டது. பத்தாண்டுகளுக்குள் நடந்த இந்தத் தலைகீழ் மாற்றம், அகதிகள் பிரச்சினையில் அரசியல் நலனுக்கேற்ப இந்திய அரசு போடும் இரட்டை வேடத்தைப் பளிச்செனப் புரிய வைக்கும். அவ்வகையில் இந்து மதவெறியர்களும் ஈழ அகதிகளை ஒடுக்குவதையே விரும்புகின்றனர்.

இனி ஆர்.எஸ். கும்பல் விரட்டத் துடிக்கும் வங்கதேச அகதிகளைப் பார்க்கலாம். 80-களில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் 70-களில் வங்கதேச அகதிகளுக்கும் நடந்தது. பாகிஸ்தானைப் பிளப்பதற்குத் தருணம் பார்த்திருந்த இந்திய அரசுக்கு வங்கதேசம் ஒரு கருவியாக வாய்த்தது. இந்திரா காலத்தில் பாகிஸ்தானுடன் இதற்காக நடந்த 1971 போரின்போது வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் வரவேற்கப்பட்டார்கள். பாகிஸ்தானை எதிர்த்த வங்கதேசத்து சேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவால் வளர்க்கப்பட்டார். அவரது ‘முக்தி வாஹனி’ இயக்கத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் இந்திய அரசால் அளிக்கப்பட்டன. போரில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, வங்கதேசம் பிரிந்தபோது அகதிகளின் வாழ்வும் முடிவுக்கு வந்தது.

சேக் முஜிபூர் ரஹ்மானுக்குப் பிறகு வந்த இராணுவ மற்றும் ஜனநாயக ஆட்சியாளர்கள் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வருவதால், இங்கிருக்கும் வங்கதேச ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசும், இந்து மதவெறியர்களும் தீவிரம் காட்டுகின்றனர். இன்றைய வங்கதேசமும் (பங்களாதேஷ்) இங்கிருக்கும் மேற்கு வங்க மாநிலமும், மொழியால், இனத்தால், பண்பாட்டால் ஒரே மக்கள் வாழும் பிராந்தியமாகும். மேற்கு வங்கத்தில் இந்துக்களும், கிழக்கு வங்கத்தில் முசுலீம்களும் பெரும்பான்மையாக இருந்தாலும், இரு மதத்தைச் சேர்ந்தோரும் கணிசமான அளவில் இரு பகுதிகளிலும் வாழ்கின்றனர். வங்கதேசிய இனம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஒருசில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால் இம்மக்களது நெருக்கமான உறவு பற்றி அதிகம் விளக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.

காலனிய ஆட்சியின்போது 1905-இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைசிராய் வங்கத்தை மேற்கு, கிழக்கு என மதத்தை அடிப்படையாக வைத்துப் பிரித்தான். ஆயினும் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை அன்றைய வங்கத்து மக்கள் தீரத்துடன் போரிட்டு முறியடித்தார்கள். மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வங்காளிகள் என்ற முறையில் அவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆயினும் அதன்பிறகு நாட்டு விடுதலைப் போராட்டம் இந்து மதச்சார்பை எடுத்ததும் அதை வெள்ளையர்கள் ஆதரித்ததும், எதிர் விளைவாக முசுலீம் லீக் தோற்றமும் இறுதியில் வங்கம் மதத்தால் பிளவுண்டு போகக் காரணமாய் அமைந்தன.

கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானின் ஒடுக்கு முறையிலிருந்து பிரிந்து வந்தாலும், வறுமையிலிருந்து விடுதலையடையவில்லை. இந்தியாவைவிடப் பின்தங்கியிருக்கும் வங்கதேசம் எவ்விதப் பொருளாதார முன்னேற்றமும் இல்லாத ஒரு வறிய நாடாகும். ஏற்கனவே துணைக் கண்டத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த வங்கத்து மக்களில் ஆகக் கடையரான ஏழைகள் பஞ்சம் பிழைக்க கல்கத்தா, டெல்லி, பம்பாய் நகரங்களுக்கு வருகின்றனர். இப்படி இந்தியாவின் வறிய பகுதிகளிலிலிருந்து பிழைப்புத் தேடி பெரு நகரங்களுக்குக் குடிபெயர்வது என்பது இந்நூற்றாண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். வங்க தேசத்திலிருந்து இந்தியா வந்து ரூ.20, ரூ.30 என கூலிக்கு  வேலை செய்யும் இந்த ஏழைகளை முசுலீம்கள் என்ற ஒரே காரணத்தினால், விரட்டி அடிக்க வேண்டும் என்று இந்து மத வெறியர்கள் கூப்பாடு போடுகின்றனர்.

அகதிகள் பிரச்சினை என்பது ஆர்.எஸ்.எஸ். கூறுவது போல உலக அதிசயமல்ல. காலனிய நாடுகளை அடக்கி ஆளும் ஏதாதிபத்தியம் தோன்றியதிலிருந்து, நாடுவிட்டு நாடு போகும் அகதிகள் பிரச்சினையும் துவங்கிவிட்டது. அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டுக் காரணங்களினால் தன் நாட்டில் வாழ வழியின்றி அடைக்கலம் தேடி ஓடுவது என்பது இன்றைய உலகமாயக்கத்தின் வளர்ந்து வரும் பிரச்சினையாகும். இதற்குக் காரணமான வல்லரசு நாடுகளே இதற்குத் தீர்வு சொல்ல முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து மலேசியா-சிங்கப்பூருக்கும், வளைகுடாவிற்கும் விசா இல்லாமல் போவது, மத்திய – தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து, அமெரிக்க –  ஐக்கிய நாட்டிற்குப் (யு.எஸ்.) போவது, மத்திய தரைக்கடல் – ஆப்பிரிக்க ஏழை நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் போவது, தெற்காசிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்வது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்வது என வேலை – வாழ்க்கை தேடி ஓடும் ‘சட்ட விரோத அகதிகளின்’ இடமாற்றம் உலகெங்கும் நடந்து வருவதுதான்.

இன்னும் போஸ்னியா, குர்திஸ்தான், செசன்யா, கிழக்கு திமோர், ஆப்கான், ஈழம், காசுமீர் போன்ற அரசியல் அகதிகள் பிரச்சினையும் உலகெங்கும் உள்ளதுதான். இப்படி நாடு விட்டு நாடு போகும் இத்தகைய அகதிகளை அந்தந்த நாட்டு முதலாளிகள் குறைந்த கூலி கொடுத்து சக்கையாய்ப் பிழிந்து சுரண்டியும் வருகின்றனர். இத்தகைய மலிவான உழைப்புச் சுரண்டலுக்காக பல நாடுகள் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கண்டும் காணாமல் அனுமதிக்கின்றனர்.

அதேசயம் இந்த அகதிகள் அரசியல் ரீதியாக ஒன்று சேர்வதைத் தடுத்து மிரட்டுவதற்காக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி அந்நாட்டு இளைஞர்களை உசுப்பி விடுவது என்ற தந்திரத்தை இந்நாட்டு அரசுகள் பின்பற்றி வருகின்றன. பிரிட்டனில் ஆசிய நாட்டவரைத் தாக்குவது – அல்ஜீரியர்களை பிரான்சில் தாக்குவது, தென் அமெரிக்கர்களை மிரட்டுவது, ஈழ அகதிகளை ஜெர்மனியில் அடிப்பது, ஆஸ்திரேலியாவில் தெற்காசியைரைத் தாக்குவது, இவை சில எடுத்துக்காட்டுக்கள். இந்நிகழ்ச்சிப் போக்கிலிருந்தே உலகெங்கும் பாசிச இனவெறிக் குழுக்கள் தோன்றியுள்ளன. உலகளாவிய இந்த பாசிசக் கூட்டணியின் இந்தியப் பிரதிநிதிகளான ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் வங்கதேச அகதிகளை அடித்து  விரட்டுகிறது.

எனவே அகதிகளுக்காகக் கண்ணீர் விடுவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை அடித்து விரட்டுவதும் , ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகங்ககளாகும். ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனம் வகுத்திருக்கும் அகதிகளின் உரிமைகள் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டன. வல்லரசு நாடுகளின் அரசியல் ஆதாயத்துக்காகப் பந்தாடப்படும் அகதிகளின் அவலம இக்கணம்வரை அதிகரித்தே வருகிறது. இந்தியாவிலும் அப்படித்தான்.

அமெரிக்க – ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மத வெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழைகளை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது. முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

தொடர்புடைய பதிவுகள்

வினவுடன் இணையுங்கள்

தமிழ்நாடு: அடிமைகளின் தேசம்!

10
முகுல்-ராய்-சிவப்பு-கம்பள-வரவேற்பு
சொகுசு இரயிலும் – சிவப்பு கம்பளமும்

ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர்.

விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து பார்வையிட வந்தார் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய். சென்னையிலிருந்து நெல்லூருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு ரயில்பெட்டியில் பயணித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயில்நிலையத்தின் நடைமேடைகளைக் கழுவிச் சுத்தமாக்கி, வாசனைத் திரவியம் தெளித்து, சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றிருக்கிறார்கள் தென்னக ரயில்வே அதிகாரிகள்! அமைச்சரின் நடத்தை இருக்கட்டும், அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்த அதிகாரிகளின் நடத்தையை என்ன சொல்வது? பிணங்களுக்கும் பரிதாபத்துக்குரிய மரண ஓலங்களுக்கும் மத்தியில் அதனை துக்கம் விசாரிக்க வந்தவருக்கு பன்னீர் தெளித்து பால் பாயாசம் கொடுத்து விருந்தோம்பும் இந்தக் கேவலம் தமிழர்களின் உன்னதப் பண்பாட்டைக் காட்டுகிறதா?

இதே விபத்து மே.வங்கத்திலோ அல்லது கேரளத்திலோ நடந்திருந்தால் அங்கே எந்த அதிகாரியாவது இப்படியொரு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கக் கூடுமா?  தமிழன்தான் இளித்தவாயன், வடவர் ஆதிக்கம் என்று இனவாதிகள் தயார் நிலையில் வைத்திருக்கும் விடையை வழங்கக் கூடும். அது விடையல்ல, விடையைப் புரிந்து கொள்ள முடியாமல் தமிழ்மக்களின் மூளையை மறிக்கின்ற தடை.

வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது. மற்ற மாநிலங்களின் அரசியலும் பண்பாடும் உன்னதத்தில் உள்ளதாக இதற்குப் பொருள் அல்ல. இத்தகைய அருவெறுக்கத்தக்க அடிமைத்தனம் வேறு எங்கும் இல்லை என்பதே இதன் பொருள்.

அ.தி.மு.க அடிமைகள் கூட்டமே ஜெயாவின் காலில் விழுகிறது. அதிகாரிகளும் துணை வேந்தர்களும் ஜெயலலிதாவின் முன்னால் விநோதமான முறையில் உடம்பை மடித்தவாறு நிற்கப் பழகியிருக்கிறார்கள். இத்தகைய காட்சிகளை இந்தியாவில் வேறு எங்கே காணமுடியும்? வேறு எந்த முதலமைச்சராவது தலைநகரை விட்டு சுற்றுலாமைய மாளிகைகளில் தங்கி ஆட்சி செலுத்தியிருக்கிறார்களா? தலைமைச் செயலர் துவங்கி, பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்கள் வரை தமது கோப்புக்களை இருமுடியாகச் சுமந்து  கொடநாட்டிற்கு பயணிக்கிறார்கள். இத்தகைய கேவலத்தை ஊடகங்களும் அறிவுத்துறையினரும் அங்கீகரித்திருப்பதை வேறு எங்கும் காண இயலாது.

கோபாலபுரம் சி.ஐ.டி நகர் குடும்ப ஆட்சியைப் போன்ற அருவெறுக்கத்தக்க அற்பத்தனத்தை வேறு எங்காவது நாம் கண்டிருக்க முடியுமா?  டெசோ எனும் காற்றுப் போன பலூனைப் பாருங்கள்! சுதந்திர ஈழம் என்று தொடங்கி, பின்னர் அது ஈழத்துயரை பகிர்ந்து கொள்ளும் சோக காவியமாகி, பிறகு படம் கொடி முழக்கம் ஏதுமற்ற மவுன ஊர்வலமாகி, கடைசியில் உள்துறை அமைச்சகத்தின் நற்சான்று பெற்ற நடவடிக்கையாகிவிட்டது.

கெக்கெக்கே என்று கருணாநிதியைப் பார்த்து சிரிக்க விரும்பினால், ஈழத்தாய் என்று ஜெயலலிதாவுக்கு காவடி சுமந்த சீமான், நெடுமாறன், இன்னபிற தமிழினவாதிகளின் வரலாறும், ஈழத்தைக் காப்பாற்ற அத்வானியின் காலைப்பிடித்த வைகோ வின் அரசியல் சாணக்கியமும் நினைவில் வந்து நம்மை சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றன. கிளிநொச்சியின் தோல்வி, ஒரு மிகப்பெரிய பின்னடைவை முன்னறிவித்த பின்னரும், வெற்றி வெற்றி என்று ஆய்வுக்கட்டுரை எழுதுவது, எல்லாம் முடிந்து புல் முளைத்த பின்னரும், தம்பி இருக்கிறார் என்று சொல்லக் கேட்டு ஓ வென்று ஆர்ப்பரிப்பது இவையெல்லாம் தமிழகம் தவிர வேறு எங்கே சாத்தியம்?  யோசித்துப் பார்க்கும்போது, முகுல் ராய்க்கு சிவப்புக் கம்பளம் விரித்ததொன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை என்று தோன்றவில்லை.

________________________________________________

– புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

5

புதிய-கலாச்சாரம்-ஆகஸ்டு-2012

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

அடிமைகளின் தேசம்!
“வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது.”

கடவுளை நொறுக்கிய துகள்!
“இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது.” “தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை.”

கடவுளை நொறுக்கிய துகள்! ஒரு வரலாற்று விளக்கம்
“கடந்த மாதத்தில் உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலகப் பத்திரிகைகள் வரை தலைப்புச் செய்தியாக இருந்தது – ‘கடவுள் துகள்’. ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘கடவுள் துகளை’க் கண்டுபிடித்து விட்டனர் என்பதே இச்செய்திகளின் சாராம்சம். விஞ்ஞான மொழியில் சொல்வதானால் தற்போது ‘பிடிபட்டிருக்கும்’ துகளை ஹிக்ஸ் போசான் துகள் என்று சொல்லலாம். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும் அந்தத் துகளைப் பற்றியும் விஞ்ஞானம் சொல்லும் விளக்கங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

நாமக்கல்பிராய்லர்பள்ளிகள்!
“நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.”

 கல்லறைக் கருநாகங்கள்!
தனக்கு நடந்த அநியாயத்தைப் பாட்டி போதகரிடமும், சர்ச் கமிட்டி மெம்பர்களிடமும் முறையிட்டிருக்கிறாள். அவர்களோ, கோயில் குட்டியாருக்கு ஏற்கெனவே சம்பளம் குறைவு என்றும், இருந்தாலும் அத்தனை கஷ்டத்தோடும் தேவ காரியத்தில் ஈடுபட்டிருப்பவர் மேல் அபாண்டமாகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்யக் கூடியவரல்ல என்றும் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள். தான் அத்தனை நேசித்த கோயிலைச் சேர்ந்தவர்களே ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் அவர் இப்போதெல்லாம் கோயிலுக்குப் போவதில்லையாம்.”

சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் எஸ்.எம்.எஸ். புரட்சி!
“உண்மையில் ஊழலையோ, பிற சமூகக் கேடுகளையோ எதிர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தெருவிலறங்கிப் போராடியாக வேண்டும். ஆனால், அதற்கு லீவு போட வேண்டும்; வெயிலில் நிற்க வேண்டும்; அரசு அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டும்; சம்பள இழப்பைச் சந்திக்க வேண்டும் – அதிகபட்சமாக வேலையிழப்பையே கூட சந்திக்க வேண்டியிருக்கலாம் – இந்த இக்கட்டான நேரத்தில் தான் அமீர் கான் ஆஜராகிறார். சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலேயே நீங்களும் ஒரு சமூகப் போராளியாகி விடலாம் என்கிற எளிய வழியைத் திறந்து விடுகிறார். நாம் யாரையும் குற்றவாளியாக்க வேண்டாமே என்கிறார்.”

 கருணையா, கொலையா? வரமா, சாபமா?
“அந்த முப்பதாவது நாள், அதிகாலை நான்கு மணியளவில் திண்ணையில் படுத்திருந்த சுதா, நாலு வயசு முதல் குழந்தையை தன் பாவடை நாடாவாலும், இரண்டு மாதம் கூட முடியாத அடுத்த குழந்தையை தன் கை விரல்களாலும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு, கடைசியாகப் புடவையால் தானும் தூக்குப் போட்டு விட்டாள். உயிர் போகும் நிலையில் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த உறவுக்கார சனங்க வெளியில் வந்து பார்த்து, சுதாவைக் காப்பாற்றி உடனே கார் வைத்து நகரத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.”

 திரைவிமரிசனம்: ‘மேட் சிட்டி‘: பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!
“சன் டி.வி.யின் உலகச் செய்தியோ, புதிய தலைமுறையின் நாசூக்கான விவாதமோ எல்லாமுமே அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களின் பாதையில்தான் பயணிக்கின்றன. அத்தகைய அமெரிக்க செய்தி ஊடகங்களின் வணிக வெறி ஒரு அப்பாவியை எப்படி அலைக்கழித்து, அவனது இயல்பான பிரச்சினையை எப்படி ஒரு தேசியப் பிரச்சினையாக மாற்றி, மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசும் திரைப்படம் தான் இயக்குநர் கோஸ்டா கவ்ராசின் ’மேட் சிட்டி’.”

குறுக்கு வெட்டு
ஜீன்ஸ் அணிந்தால் கொலை, பேட்மேன் ரிடர்ன்ஸ், ராம்போவுக்கு புரியுமா, இந்தியாவின் உறக்கமின்மை, தங்கக் கவலைகள், காதல் கொலை, கட்சி மாறி ஓட்டுப்போடும் கட்டுப்பாடான கட்சி…

பிச்சை புகினும் கற்கை நன்றே….
“யாருமற்ற அநாதையாக்கப்பட்டு, பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்ற ஒரு சிறுமி… வர்க்க உணர்வோடு ஒரு அமைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையும், விருப்பமும், தன் வர்க்கத்தை உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணமும் மனித குலத்தின் ஆழமான அர்த்தமான உணர்ச்சிகளில் ஒன்று. நிலை மறந்து மரத்துக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு அந்தச் சிறுமி போட்ட உணர்ச்சியின் பிச்சை அது!”

மாட்டுத்தாவணிகோயம்பேடு
“தனியார்மயத்தால் தறிகெட்டு ஓட்டி நாட்டையே விபத்துக்குள்ளாக்கும் மன்மோகனையும், ப. சிதம்பரத்தையும் ‘மினிஸ்டர்’ என மரியாதையாகப் பேசும் வாய்கள் பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல் “ஊம்.. வந்துட்டேன், ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

“இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!”

6

ஸ்பெயின் சுரங்கத் தொழிலாளர்களின் கிளர்ச்சி

 

கிரீஸைத் தொடர்ந்து ஸ்பெயினைக் கவ்வியிருக்கிறது உலக முதலாளித்துவ நெருக்கடி. நிதி மூலதனச் சூதாடிகளால் சூறையாடப்பட்ட ஸ்பெயின், திவால் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. “கடன் வேண்டுமானால், சிக்கன நடவடிக்கைகளை அதிகப்படுத்து; மக்கள் நலத்திட்டங்களை நிறுத்து; பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கு” என்று உத்தரவிடுகின்றன சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய மத்திய வங்கியும்.

போனஸ் வெட்டு, பென்சன் வெட்டு, வேலையில்லாதவர்களுக்குப் பராமரிப்புத் தொகை வெட்டு, பள்ளிகள்  மருத்துவமனைகள் மூடல், துறைமுகம், ரயில்வே, விமானநிலையங்கள் தனியார்மயம்  என்று அடுக்கடுக்கான தாக்குதல்களை பிரதமர் மரியானார ஜோய் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். “வீதிகளில் பெட்ரோலை ஊற்றாதீர்கள்!” என்று நாடாளுமன்றத்தில் அலறின எதிர்க்கட்சிகள். வீதிகளோ ஏற்கெனவே எரியத் தொடங்கிவிட்டன.

சிக்கன நடவடிக்கையின் தொடக்கமாக நிலக்கரிச் சுரங்கங்களை மூடிவிட்டு, நிலக்கரியை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது ரஜோய் அரசு. 18ஆம் நூற்றாண்டு முதல் 5 தலைமுறைகளாக நிலக்கரி வெட்டி வரும் அஸ்தூரியா பிராந்தியத்தின் சுரங்கத் தொழிலாளர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர். 8000 சுரங்கத் தொழிலாளர் குடும்பங்களுடன், அப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து அந்தப் பிராந்தியத்துக்குள்ளேயே போலீசை நுழைய விடாமல் போர் நடத்துகிறார்கள். சாலைகளில் தடுப்பரண்கள் எழுப்பி போலீசுக்கு எதிராகக் கவண் கற்களையும் ராக்கெட்டுகளையும் ஏவுகிறார்கள். எங்கும் தீ; கரும்புகை. “இழப்பதற்கு இனி ஏதுமில்லை. தாக்குங்கள்!” என்று புகையைக் கிழித்துக் கொண்டு எழும்புகின்றன பெண்களின் குரல்கள்.

கருப்புப் பயணம் என்ற பெயரில் அஸ்தூரியாவிலிருந்து தலைநகர் மாட்ரிட் நோக்கி தொழிலாளர்கள் தொடங்கிய நடைபயணம், ஜூலை 10 அன்று மாட்ரிட் நகரில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டமாகியது.

ஸ்பெயின்-சுரங்கத்-தொழிலாளர்கள்

அரசு ஊழியர்கள் சாலை மறியலில் இறங்கினார்கள். லாரி ஓட்டுனர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து வண்டிகளை நிறுத்தினார்கள். நாடு முழுவதும் 60 நெடுஞ்சாலைகள் முடங்கின. “நாங்கள் பயங்கரவாதிகளல்ல, நிலக்கரிப் பெண்கள்” என்று முழங்கிய வண்ணம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் மனைவியர்கள் அதிரடியாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்கள். போராட்டக்காரர்கள் ஏவிய ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் சன்னலை நொறுக்கியது. “அடுத்தமுறை வெடிமருந்தோடு வருவோம்” என்று முழங்கியது ஒரு குரல்.

1934இல் 3000 தொழிலாளர்களை உயிர்ப்பலி கொடுத்து, ஃபிராங்கோவின் பாசிச ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை துவக்கிய அஸ்தூரியாவின் சுரங்கத்தொழிலாளர்கள், போர்க்குணமிக்க கம்யூனிஸ்டு மரபில் வந்தவர்கள்.

‘‘எப்போதுமே தேசத்தின் முதல் எழுச்சி எங்கள் சுரங்கத்தில்தான் தொடங்கும். நாங்கள்தான் முன்னணியில் நிற்போம். இதோ, வரலாறு திரும்புகிறது” என்றார் மெனன்டெஸ் என்ற சுரங்கத்தொழிலாளி.  ஆம்; இது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் மறுவருகை.

__________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?

45

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 20

”பாரதத்தில் முசுலீம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்; இந்துக் கோவில்களும் இடிக்கப்படுகின்றன.”

–  இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று.

இந்தியாவில் முசுலீம்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உரிமைகள், சலுகைகள் என்பவை ஏதோ பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டவை போல ஆர்.எஸ்.எஸ். சித்தரிக்கிறது. முசுலீம் என்றாலே பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்ற உண்மைக்குப் புறம்பான அயோக்கியத்தனமான பிரச்சாரத்தை முதலில் முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக முசுலீம் மக்கள் வாழந்து வருகின்றனர். காஷ்மீர் உள்ளிட்ட வட மாநில முசுலீம்களும் பல நூற்றாண்டுகளாய் இம்மண்ணில் வாழ்பவர்கள்தான். இன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், பணக்கார பா.ஜ.க. தலைவர்கள் பலரும்தான் பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்த அகதிகள்!

இந்தியாவில் இந்து – முசுலீம் மதக் கலவரங்களில் நேற்றும் இன்றும் பாதிக்கப்படுபவர்கள் இரு மதத்தைச் சேர்ந்த ஏழைகள்தான். அதேசமயம். இரு மதத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டும் இந்தக் கலவரங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழியைத் தேடுகின்றனர். அதன்படி 1947 பிரிவினையின் போது வடமேற்கு மாநிலம் மற்றும் வங்காளத்தில் உள்ள மேட்டுக்குடி முசுலீம்கள் மட்டும் பாகிஸ்தானுக்கும், பங்களாதேசுக்கும் சென்றனர். அதேபோல அங்கிருந்த பணக்கார – மேல்சாதி இந்துக்கள் மட்டும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியா வந்தனர். இரு நாடுகளிலும் உழைத்தால்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற நிலையிலிருந்த ஏழைகள் மட்டும் இடம் பெயரவில்லை.

பிரிவினைக் காலத்தில் கலவரங்கள் ஏதும் தென்னிந்தியாவில் நடக்கவில்லை. அதனால் இங்கிருக்கும் வசதி படைத்த முசுலீம்களும் இடம் பெயரவில்லை. மேலும் அவர்கள் இதுதான் தமது மண் எனக் கருதியதாலும், பிற மக்களுடன் கொண்டிருந்த நேச உறவினாலும், பாகிஸ்தான் போவது பற்றிச் சிந்திக்கவில்லை. 1947-க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்ட்ட காசுமீர் மற்றும் ஐதராபாத் நிஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்தோரும் இடம் பெயரவில்லை. எனவே கலவரம் தூண்டிவிடப்பட்ட வட மேற்கு, வட இந்திய, வங்காள மாநிலங்களில்தான் இடம் பெயர்தல் நடைபெற்றது.

அடுத்து இந்தியாவில் 12 கோடி முசுலீம் மக்கள் பல மாநிலங்களில் பரவலாக வாழ்கின்றனர். மதத்தைத் தாண்டிய மொழி, இன, பண்பாடு, பொருளாதாரக் காரணங்களினால் அந்தந்த வட்டாரத்தோடு ஐக்கியப்பட்டே வாழ்கின்றனர். முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களெல்லாம் வங்க தேசத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ போக முடியாது. அந்த அளவுக்கு வாழ்வியல் – சமூகவியல் – அரசியல் வேறுபாடுகள் இருக்கின்றன.

ஆனால், பாகிஸ்தானில் வாழும் இந்துக்களிடையே இத்தகைய வேறுபாடுகள் இல்லையென்றாலும் வாழ்க்கை நிலைமை இடம் பெயருவதற்கு உகந்ததாக இல்லை. அங்கே சிந்து மாகாணத்தில் குறிப்பாக லாகூரைச் சுற்றிய பகுதிகளில் சுமார் 13 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அதிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். ஆய்வாளர் அஸ்கர் அலி என்ஜினியர் ஒரு முறை லாகூருக்குச் சென்றிருந்தபோது தெருக்கூட்டும் தாழ்த்தப்பட்ட தொழிலாளி ஒருவரிடம் ‘நீங்கள் ஏன் பிரிவினையின் போது இந்தியா செல்லவில்லை’ எனக் கேட்கிறார். ”இங்கேயும் தெரு கூட்டுகிறேன். இந்தியா சென்றாலும் அதைத்தான் செய்யப் போகிறேன். இதற்கு எங்கே இருந்தால் என்ன?” என்று பதிலளிக்கிறார் அந்தத் தொழிலாளி. அவரைப் பொறுத்தவரை வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் மதத்திற்குப் பங்கு ஏதுமில்லை. ஏழ்மைக்கு ஏது மதம்?

இப்படி ஏழ்மையில் உழலும் இத்தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ அங்கே தாக்கப்படுவதற்கு ஆதாரமும் கிடையாது; அடிப்படையும் கிடையாது. இந்தியாவைப் போல அங்கும் பெரும் கலவரங்கள் நடந்ததாகப் பார்ப்பனப் புளுகுணி தினமலரில் கூட செய்தி வந்ததில்லை. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் எதிர்விளைவாக பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கின. இருந்தபோதும் அப்படிக்  கலவரம் செய்தமைக்காக இரு நாடுகளைச் சேர்ந்த பல இசுலாமிய வெறியர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. ஆனால், இங்கே மசூதியை இடித்த கரசேவகர்கள் யாரும் சுடப்படவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானில் தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்காக பா.ஜ.க. கும்பல் முதலைக் கண்ணீர் விட வேண்டாம். ஏனெனில் இங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் – இந்திய இந்துக்களால் தாக்கப்படுவதைவிட பாகிஸ்தான் இந்துக்களின் நிலைமை பரவாயில்லை. மற்றபடி இந்தியப் புவியியல் எல்லையை புனிதம் கொண்டாடும் இந்து மதவெறியர்கள் நினைப்பது போல் வாழ்வியல் நிலைமைகள் மதத்தை வைத்து மட்டும் சிக்கலாகவில்லை.

உலகிலேயே இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த இப்பிரிவினை அந்த அளவுக்கு சோகத்தையும், பிரச்சனைகளையும் கொண்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முசுலீம்கள் ‘முஜாகிர்கள்’, வந்தேறிகள் என்றழைக்கப்படுகின்றனர். அதன்படி அவர்களுக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் இன்றுவரை மறுக்கப்பட்டே வருகின்றன. அவர்களும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் ஆயுத மோதலை நடத்தி வருகிறார்கள்.

இருநாட்டு எல்லையில் வாழும் மக்களும் இரு நாட்டுப் போர்களினால் அடைந்த துயரங்கள் அளவில் அடங்கா. இராணுவச் சண்டையினால் தேசியம் மாறுவதும், எல்லை தாண்டி இயங்கிவரும் மண உறவுகளும் – அதைத் தொடர முடியாத அரசுத்தடைகளும் அங்கே இயல்பானவை. பிரிவினையின்போதும், பின்னர் நடந்த 3  போர்களினாலும் இலட்சக்கணக்கான இந்துக்கள் இங்கே வந்திருக்கின்றனர். முசுலீம் நிலவுடைமையாளர்களின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்ந்து அடிமைப்பட்டிருந்த இராஜபுத்திரர்கள், இந்தியா வந்தவுடன் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஆளும் உண்மையான இராஜபுத்திரர்களாக மாறிவிட்டனர். எனவே பிரிவினை என்பது இரு நாட்டிலிருந்தும் இடம் பெயர்ந்த உழைப்பாளிகளான முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் பொன்னான வாழ்க்கை எதையும் வழங்கவில்லை.

பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை. அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான். மதக்குடியரசு தவறு என்று கருதும் நாம் அதை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டியதில்லை.

மேலும் மதத்தின் பெயரிலான எந்தவொரு அரசும் தனது நாட்டுச் சிறுபான்மை மத மக்களை ஒடுக்கப் பயன்படுவதைக் காட்டிலும் தன் மதத்துப் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஏய்க்கவும் ஒடுக்கவுமே பயன்படுகிறது. இந்து மதவெறியர்கள் – கிறித்துவ, உழைக்கும் மக்களுக்கும் எதிரிகள் என்பது எப்படி உண்மையோ அப்படி ஒரு இசுலாமியக் குடியரசு, அந்நாட்டு முசுலீம் உழைக்கும் மக்களுக்கும் விரோதியாகத்தான் இருக்கிறது.

பாகிஸ்தான் – வங்க தேசத்தில் சட்டப்படியும், இந்தியாவில் சட்டமின்றியும் பெரும்பான்மையினரின் மதவாதம் இருந்து வருகிறது. ஆயினும் இந்தியாவில் ஆயிரமாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்ட போதும், மசூதி இடிக்கப்பட்ட போதும் வளைகுடாவில் பிழைக்கப் போன இந்துக்களைக் கேட்பார் இல்லாமல் தாக்கியிருக்கலாமே? ஏன் அப்படி நடக்கவில்லை?

வங்க தேசத்தில் இந்துக்களைத் தாக்கிய முசுலீம் மதவெறியர்களை எதிர்தத்து ‘லஜ்ஜா’ (அவமானம்) என்ற நாவலை எழுதினார் தஸ்லிமா நஸரீன். அதனால் மதவாதிகள் அவருக்கு மரணதண்டனை அறிவித்து நாட்டை விட்டு விரட்டினாலும் தஸ்லிமா தனது போராட்டத்தைக் கைவிடவில்லை.

‘பம்பாய்’க் கலவரத்துக்குக் காரணம் பால் தாக்கரேதான் என்று பத்திரிகைகளும், நீத மன்றமும், வரலாறும் நிரூபித்திருக்கின்றன. ஆனால், பம்பாய்க் கலவரம் நடந்த புழுதி மறைவதற்குள் ‘பம்பாய்’ திரைப்படத்தின்மூலம் வரலாற்றை மாற்றி, முசுலீம்கள்தான் காரணம் என்று கதை சொல்லி, பால் தாக்கரேவிடம் ஆசியும், அனுமதியும் வாங்கினார் மணிரத்தினம். மாநில, தேசிய விருதுகள், த.மு.எ.ச. உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ அறிஞர்களின் பாராட்டு, தொலைக்காட்சிகளில் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பு என ‘பம்பாய்’ படத்துக்குக் கிடைத்த சீராட்டும், பாராட்டும் பட்டியலிட்டு மாளாது.

வங்கதேசம் இசுலாமிய நாடு என்றாலும் ஒரு தஸ்லிமா நஸரீனுக்காக அந்நாடு பெருமைப்பட முடியும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டாலும் ஒரு மணிரத்தினத்துக்காக நாம் வெட்கப்படவே இயலும்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!

9

மருந்து-கம்பெனி-பரிசோதனை

 பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தமது மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்கு நம் மக்களைச் சோதனை எலிகளாக்கும் விசயம் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலமாகி வந்தது. தற்போது உலகமயக் கொள்கையின் கீழ் இந்த அயோக்கியத்தனம் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டது.

ம.பி. மாநில மருத்துவர்கள் குறித்துப் புலன் விசாரணை நடத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு, இம்மாநிலத்தில் மட்டும் 2006-10 காலக்கட்டத்தில்  3307 பேர் மீது நெறிமுறைக்கு விரோதமாக மருந்துப் பரிசோதனை செய்து, பல கோடி ரூபாயைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இம்மாநில மருத்துவர்கள் பலர் பெற்றுள்ளனர் என்று சென்ற ஆகஸ்டு மாதம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சோதிக்கப்பட்ட தடுப்பூசிகள் 6 பழங்குடியினச் சிறுமிகளைக் கொன்ற போதும், தில்லி “எய்ம்ஸ்” மருத்துவமனையில் 49 பச்சிளங்குழந்தைகள் பலியான போதும் இச்சோதனைகள் வெளியுலகுக்குத் தெரிய வந்தன. தற்போது சமூக ஆர்வலர்கள் சிலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  கோரிப் பெற்றுள்ள தகவல்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன.

இந்தூர் அரசு மருத்துவமனையில் ஜான்சன் அன்ட்ஜான்சன், க்ளாக்ஸோ போன்ற பிரபல மருந்து கம்பெனிகள், அரசு மருத்துவர்கள் உதவியுடன் 2000 ஆரோக்கியமான குழந்தைகளிடம்  புற்றுநோய், ஆஸ்துமா, இதய நோய், போலியோ, கருப்பைப் புற்றுநோய் போன்றவற்றுக்கான மருந்துகளைச் சோதித்துள்ளன.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  ஒரு வயது கூட நிரம்பாத 4142 குழந்தைகளிடம்  உயர் ரத்த அழுத்த நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளை செலுத்தி,  42 வகை சோதனைகளை நடத்தி உள்ளனர். இதில் 49 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.

நாடெங்கிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வாறு 2031 பேர்கள் இறந்துள்ளர் என்றும், 22 பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதென்றும் தகவல் அறியும் உரிமையின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்திருக்கிறது அரசு.  இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்குப் பலமுறை நோட்டீசு அனுப்பியும் இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் வாய்தா வழங்குவதற்குச் சளைக்கவில்லை.

மருந்து-கம்பெனி-பரிசோதனைமருந்துப் பரிசோதனைகள் எனப்படுபவை அனைத்தும் அறிவியல் ஆய்வின் தேவைக்காகவோ, புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காகவோ செய்யப்படுபவை அல்ல.

எந்த ஒரு நோய்க்கும் மருந்து என்பது குறிப்பிட்டவகை வேதியங்களின் கலவையாகத்தான் இருக்கிறது. ஏறத்தாழ ஒரே அடிப்படை மருந்தை, அதன் வீரியத்தைக் கூட்டியும், வேறு சில வேதியங்களைக் கலந்தும் பல வகையான வணிகப் பெயர்களில் விற்கும் மருந்துகம்பெனிகள், அம்மருந்துகளைச் சந்தைப்படுத்துவதற்கு முன்னர், சட்டரீதியான தேவையை நிறைவு செய்வதற்காகச் சோதனைகளை நடத்துகின்றன.

இத்தகைய சோதனைகளின் நோக்கம் கொள்ளை இலாபம்தானே தவிர, அறிவியல் ஆய்வு அல்ல. ஒரு மருந்து உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறும் நாளிலிருந்து 20 ஆண்டுகள் வரைதான் அக்காப்புரிமை செல்லும். காப்புரிமை பெற்ற பின் மருந்துப் பரிசோதனை நடத்தி, பின்னர் சந்தைப்படுத்துவதற்கு ஒப்புதல் பெறவேண்டும். எனவே, பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தமது விற்பனைக் காலத்தையும் இலாபத்தையும் அதிகரித்துக் கொள்வதற்காகச் சோதனைக் காலத்தை சுருக்குகின்றன.

மருந்து கம்பெனிகளுடைய ஆராய்ச்சி மேம்பாட்டுச் செலவில் 70 சதவீதம் மனிதர்கள் மீதான ஆய்வுக்கானது. இதனைக் குறைப்பதன் மூலம் இலாபத்தைக் கூட்ட முடியும். உதாரணமாக, மருந்துச் சோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள பிரிட்டனில் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு 100 பவுண்டுகளை (ரூ.8800) ஆய்வு நிறுவனங்கள் தரவேண்டியிருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ, அதில் பத்தில் ஒரு பங்குகூடச் செலவாவதில்லை. அம்மருந்துகள் பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால், அங்கே பல இலட்சம் டாலர் நட்ட ஈடு தரவேண்டியிருக்கும். இந்தியாவிலோ அந்தப் பிரச்சினையே இல்லை.

நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்தச் சோதனைகளில், முதல் கட்ட ஆய்வு, மருந்தின் பாதுகாப்பு மற்றும் மனிதர்களின் தாக்குப் பிடிக்கும் திறனைச் சோதிப்பதற்கானது. இது, 8 முதல் 10 ஆரோக்கியமான நபர்கள் மீது நடத்தப்படுகிறது.

இரண்டாவது கட்ட சோதனை, மருந்தின் திறனையும் அதன் பக்கவிளைவுகளையும் சோதிப்பதற்கானது. இது, 100 முதல் 200 நபர்களிடம் சோதிக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டத்தில், 1000 பேர் முதல் 3000 பேர் வரை சோதிக்கப்பட்டு மருந்து வெற்றிகரமாக வேலை செய்கிறதா என்பதையும், அதன் பக்கவிளைவுகளையும் உறுதிப்படுத்துகின்றனர். நோயின் பல்வேறு கட்டங்களிலும், வேறு பல மருந்துகளுடன் சேர்த்தும் இந்த சோதனை செய்யப்படுகிறது.

நான்காம் கட்ட சோதனை என்பது, இந்திய மருந்துக் கண்காணிப்பாளரின் அனுமதி மருந்துக்குக் கிடைத்த பின்னர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மருந்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ஆய்வாகும்.

இவற்றில் மூன்றாம் கட்ட ஆய்வுதான் மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. அமெரிக்க மருந்து கம்பெனிகள் 2008ஆம் ஆண்டில் ஆய்வுக்காக செலவிட்ட 2,12,446 கோடி ரூபாயில், 69, 022 கோடி ரூபாய், அதாவது சுமார் 33 சதவீதம் இந்த மூன்றாம் கட்ட ஆய்வுக்குச் செலவிடப்பட்டது. இந்த ஆய்வை இந்தியா போன்ற நாடுகளுக்கு “அவுட்சோர்ஸ்” செய்வதன் மூலம் பல்லாயிரம் கோடி டாலர்களை பன்னாட்டு மருந்துக் கொள்ளையர்கள் மிச்சம் பிடிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனிகள், சமீப காலமாக அறிமுகப்படுத்துகின்ற புதிய மருந்துகளுக்கான மூன்றாம் கட்ட சோதனையில் 50% இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டதாகவே அவை தெரிவிக்கின்றன.

அவர்களுடைய இந்தத் தேவையை நிறைவு செய்வதற்கு, இந்திய மக்களைச் சோதனை எலிகளாகப் பிடித்துக் கொடுத்து, அதன் மூலம் ஆதாயமடைகின்ற ஒப்பந்த ஆய்வு அமைப்புகள் இந்தியாவில் காளான்கள் போலப் பெருகியிருக்கின்றன.

காண்ட்ராக்ட் ரிசர்ச் ஆர்கனைஸேஷன் (சி.ஆர்.ஓ.) என்றழைக்கப்படும் இந்த அமைப்புகளைத் தொடங்குவதற்கு ஒருவர் மருத்துவராகவோ, மருந்தாளுனராகவோ இருக்கவேண்டியதில்லை; பதிவு செய்யும் தேவையோ, கட்டுப்பாடுகளோ இல்லை.  இந்த அமைப்புகள்தான்  மருத்துவர்கள் துணையோடு இந்திய மக்களைச் சோதனை எலிகளாக்கி வருகின்றன.

நடைபாதைவாசிகள், குடிசை வாழ் மக்கள், மொழி தெரியாத அண்டை மாநில ஏழைகள் ஆகியோரிடம் ரத்த மாதிரி எடுக்கிறோம், நோய் இருக்கிறதா என்று சோதனை செய்கிறோம் என்று பொய்க் காரணங்களைக் கூறி, அவர்களை ஒரு தரகர் கும்பல் அழைத்து வருகிறது. சில ஆங்கில ஆவணங்களில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுடைய உடலில் மருந்துகளை செலுத்தி, பிறகு தேவைக்கு ஏற்ப சில மணி நேர இடைவெளியிலோ, சில நாட்களுக்குப் பின்னரோ இரத்த மாதிரியைப் பெற்றுக்கொண்டு கையில் ஆயிரம், இரண்டாயிரத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பி விடுகின்றனர். என்ன மருந்து, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குச் சொல்வதில்லை.  சோதனை எலிகளுக்குப் பணம் தரப்படுவதில்லை என்பது ஒன்றுதான் இம்மக்களுக்கும் எலிகளுக்குமான வேறுபாடு.

சி.ஆர்.ஓ.க்கள் மற்றும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தமது சோதனைகளுக்கு அரசு மருத்துவமனைகளையேகூடப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நிதி ஒதுக்கீடு இல்லாமல் வாடும் அரசு மருத்துவமனைகளுக்குச் சில வசதிகளைச் செய்து தந்து, தங்கள் சோதனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தை இணங்கச் செய்கின்றனர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நோய், மருந்து பற்றிய அனைத்து ஆவணங்களும் மருத்துவத் தொழில் தருமத்துக்கு விரோதமாக விலை பேசப்படுகின்றன.

மருந்து-கம்பெனி-பரிசோதனைமருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களை வஞ்சிப்பது மருத்துவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. ஒரு புதிய மருந்து வந்திருப்பதாகவும், அதைப் பயன்படுத்தினால் குணமாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி நோயாளியை இணங்கச் செய்கின்றனர்.

சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்பட்ட நோயாளிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களில் 97% பேர் மருத்துவரின் பரிந்துரை காரணமாகத்தான் இதில் கலந்து கொண்டதாகக் கூறியிருக்கின்றனர்.

சோதனைகளுக்குச் சம்மதித்தால் நல்ல மருத்துவம் இலவசமாகக் கிடைக்கும், மருத்துவமனையில் படுக்கை வசதியும் சாப்பாட்டு வசதியும் கிடைக்கும் என்றெல்லாம் மருத்துவர்களாலும், சி.ஆர்.ஓ.க்களாலும் ஆசை காட்டப்பட்ட அப்பாவி மக்கள் பலர், சோதனைகளுக்குத்  தங்களை ஒப்புவித்துள்ளனர்.

சி.ஆர்.ஓ.க்களுக்கு ஒத்துழைக்கும் அரசு மருத்துவர்களுக்கு  மருத்துவ மாநாடுகள் என்ற பெயரில் வெளிநாட்டு இன்பச் சுற்றுலாக்களும் கேளிக்கை வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.

ம.பி.மாநிலம் இந்தூர் எம்.ஜி.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஹேமந்த் ஜெயின் என்ற குழந்தை மருத்துவர் ரூ.75 இலட்சம், நெஞ்சக நிபுணர் சலீல் பார்கவா ரூ.64 லட்சம், இதய நோய் மருத்துவர் அனில் பரணி 65 இலட்சம்  என  மருந்துச் சோதனையின் மூலம் தாங்கள் வருவாய் ஈட்டியதாக இவர்கள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்திருக்கின்றனர். பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்று, அவ்வளவே.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் சிறந்த சிகிச்சை இலவசமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கி, அவர்கள் மீது மருந்துகளைப் பரிசோதிக்கின்றன. இந்தச் சோதனைகளின் முடிவுகளை சி.ஆர். ஓ.க்கள் ஆவணப்படுத்திப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்கின்றனர். ஆந்திரப் பழங்குடிச் சிறுமிகள் 6 பேரின் உயிரைப் பலி கொண்ட ’கருப்பைப் புற்றுநோய் மருந்து’ திட்டத்திற்கு நிதியுதவி செய்து நடத்தியது, பில்கேட்ஸின் தன்னார்வ நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தைக் கொட்டியழுது தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் மக்களும் இத்தகைய மருந்துச் சோதனைகளிலிருந்து தப்புவதில்லை. ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை மருந்துச் சோதனைக்கு உட்படுத்தினால், அவருக்குத் தரப்படும் தொகை குறைந்த பட்சம் ரூ.30,000. அதுவே, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் தொடர்பான மருந்துகளுக்கானச் சோதனை என்றால் ஒரு நோயாளிக்கு ரூ.90 ஆயிரம் வீதம் மருத்துவருக்கு வழங்கப்படுகிறது. இவையெல்லாம் கிளின்வென்ட் ரிசர்ச், கிளினி ஆர் எக்ஸ் போன்ற சி.ஆர்.ஓ. நிறுவனங்கள் அதிகாரபூர்வமாகவே தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (Drug Controller General of India ) எனும் அமைப்புதான்  இந்தியாவில் நடைபெறும் இத்தகைய சோதனைகளையும், அவற்றை நடத்தும் சி.ஆர்.ஓ.க்களையும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளையும் கட்டுப்படுத்தும் அமைப்பாகும்.

இந்த அமைப்பில் உள்ள வல்லுநர்கள் வெறும் 4 பேர். முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்காக வேண்டுமென்றே இந்த ஆள் பற்றாக்குறையைப் பராமரித்து வருகிறது அரசு. இவர்கள் செய்யும் விதிமீறல்களோ யாராலும் நியாயப்படுத்த முடியாதவை.

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஒப்புதல் பெறப்பட்ட மருந்துகளாக இருப்பினும், அவை இந்திய மக்களின் தேவைக்கும், உடலுக்கும் பொருந்தினால் மட்டுமே இங்கே சந்தைப்படுத்த முடியும். இதற்காக மருந்துக் கம்பெனிகள் நடத்தும் மருந்துச் சோதனைகளையோ, சோதிக்கப்படுபவர்களையோ டி.சி.ஜி.ஐ. ஒருமுறை கூட நேரில் சோதித்ததில்லை. பொதுநலன்(?) கருதி சோதனை தேவையில்லை என்று கூறியும், சோதனையே நடத்தாமல் வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்றும் 2008 ஜனவரி முதல் அக்டோபர்  2010 வரை 31 மருந்துகள் முறைகேடாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியிருக்கின்றது.

ஆஸ்துமாவுக்கான டாக்சோபைலின், ரத்தம் உறைவதைத் தடுப்பதற்கான ரிவாரோக்சாபான், நுரையீரல் நோய்க்கான பிர்பெனிடோன், ஸ்கிசோபெர்னியா எனும் மனநோய்க்கான செர்டின்டோல் போன்றவை தொடங்கி, எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் மருந்துகள் வரை இதில் அடக்கம்.

ஒரு குறிப்பிட்ட மருந்தைப் பரிசோதிப்பதற்கான திட்டவரைவு உள்ளிட்ட 800 பக்க ஆவணத்துக்கு நாலே நாளில் டி.சி.ஜி.ஐ.  அனுமதி அளித்திருக்கிறது என்றும், அதை ஊன்றிப் படிப்பதற்கு தனக்கே ஒரு மாதம் தேவை என்றும் கூறுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் குலாட்டி. இந்தூரில் நடைபெற்ற மருந்துச் சோதனையால் உயிரிழந்த 89 பேர் குறித்த ஆய்வில் இவர் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தியாவில் மருந்து சோதனைகளை நடத்துவதற்கு ஏற்கெனவே இருந்த கட்டுப்பாடுகளும் 2005ஆம் ஆண்டில் நீக்கப்பட்டு விட்டன.

மருந்து-கம்பெனி-பரிசோதனை

2005 க்கு முன் இந்தியாவில் பரவாக உள்ள நோய்களுக்கான மருந்துகளைத் தவிர வேறு எந்த மருந்துக்கும், முதல் கட்ட ஆய்வு இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் மூன்றாம் கட்ட ஆய்வுகள் முடிந்த மருந்துகளுக்குத்தான் இங்கே இரண்டாம் கட்ட ஆய்வு நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

2005இல் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி கதவைத் திறந்து விடுவதற்காக “டிரக்ஸ் அண்டு காஸ்மெடிக்ஸ் ரூல்ஸின் செட்யூல் ஒய்” திருத்தப்பட்டது. வெளிநாட்டில் ஒரு மருந்தை விலங்குகள் மீது பரிசோதித்து, அந்தப் பரிசோதனை முடிவுகள் அடங்கிய காகிதத்தைக் காட்டி, டி.சி.ஜி.ஐ. இன் தலையிலடித்து ஒரு ஹிப்போகிரெடிக் சத்தியத்தையும் செய்து விட்டால், இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனைகளை இந்தியர்கள் மீது நடத்திக் கொள்ளலாம் என்றும், அந்த ஆவணங்களை ஆராயத் தேவையில்லை என்றும் விதிகள் திருத்தப்பட்டன. உடனே ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் மனிதக் கசாப்புக் கடைகளாக இந்தியாவெங்கும் முளைத்தன.

இதற்குப் பிறகுதான் போபால் விசவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது, அவர்களுக்கே தெரியாமல் இதய நோய் மருந்து முதல் மயக்க மருந்து வரையிலானவை சோதிக்கப்பட்டன. இந்தூரில் 233 மனநோயாளிகளின் உடம்பில் பல்வேறு மருந்துகள் சோதிக்கப்பட்டன. இந்த நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்களின் உடல்களை, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் சோதனைக் களமாகத் திறந்து விட்ட யோக்கியர் அன்புமணிதான், இன்று மக்களைக் கொல்லும் மதுக்கடைகளைப் பூட்டப் போகிறாராம்!

மருந்துச் சோதனையால் கடுமையான பக்க விளைவுகளுக்கு ஆளானவர்கள் அது பற்றி புகார் செய்யும்போது, எங்கள் மருந்தால்தான் இந்த பாதிப்பு என்று நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுகின்றன, மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள். அரசு உதவி பெறும் மருத்துவமனையான போபால் நினைவு மருத்துவமனையிலேயே போபால் மக்கள் மீது சோதனை நடத்தப்பட்டது பற்றித் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விவரம் கேட்டதற்கு, தர முடியாது என்று பதிலளித்திருக்கிறது அம்மருத்துவமனை. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் நோயாளிகளுக்கேகூடத் தனியார் மருத்துவமனையில் தரப்படும் மருந்துகள், சோதனைகளின் முடிவுகள் ஆகியவை ரகசியமாக்கப்படுகின்றன. தவறான அலட்சியமான சிகிச்சையால் பாதிக்கப்பட்டது கண்கூடாகத் தெரிந்தாலும், நிரூபிக்கச் சொல்லி சவால் விடுகிறார்கள் மருத்துவ மாஃபியாக்கள்.

தன்னை நம்பி உயிரையே ஒப்படைக்கின்ற ஒரு நோயாளியின் உடலை மருந்து கம்பெனிக்கு விலைபேசும் இவர்கள், கூலிப்படைக் கொலையாளிகளை விடக் கொடியவர்கள்.  ஆனால் இந்த வெள்ளை உடைக் கிரிமினல்களைத் தண்டிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை. ம.பி. மாநிலத்தில் மனநோயாளிகள் மீது அவர்களுக்குத் தெரியாமலேயே மருத்துவ சோதனை நடத்திய 12 அரசு மருத்துவர்களுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டும் அபராதம் விதித்திருக்கிறது அம்மாநில அரசு. ஏனென்றால், இதைக் கிரிமினல் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க சட்டத்திலேயே இடமில்லை.

மருந்துச் சோதனைகள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பதைக் கண்ட  ம.பி.யைச் சேர்ந்த மருத்துவரானஆனந்த் ராய், இது தொடர்பாக ஒரு ஆணை பிறப்பிக்கக் கூடாதா என்று உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டார்.  கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, சட்டம் இயற்றுவது எங்கள் வேலை அல்ல என்று கறாராகக் கூறிவிட்டனர் நீதிபதிகள்.

மருந்து-கம்பெனி-பரிசோதனை

சர்வதேச மருந்துச் சோதனைத் தொழிலின் ஆண்டு மதிப்பு 1,56,870 கோடி ரூபாய். இதில் 15% சந்தையை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றி விட்டதாகக் கூறுகிறது மெக்கின்சி நிறுவனம். மீதி 85 சதவீதத்தையும் கைப்பற்றுவதற்கு ஒரு விபச்சாரத் தரகனைப் போல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு வலை வீசுகிறார், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல்.

வாருங்கள். 5 இலட்சம் மருத்துவர்கள், 160 மருத்துவக் கல்லூரிகள், ஆங்கிலம் பேசத் தெரிந்த மருத்துவப் பட்டதாரிகள், 7 வகையான மனித மரபணு வகைகளில் 6 வகைகளை உள்ளடக்கிய 100 கோடி மக்கட்தொகை, மேலை நாடுகளைப் போலன்றி மருந்துகளால் களங்கப்படாத 100 கோடிக்கும் மேற்பட்ட பச்சை உடம்புகள்; வாருங்கள், உங்கள் மருந்துச் சோதனைகளை இங்கே தொடங்குங்கள்  என்று மருந்து கம்பெனி முதலாளிகளின் கையைப் பிடித்து இழுக்கிறார் அவர்.

பி.பி.ஓ. க்களும் ஆலைகளும் மலிவான இந்திய உழைப்பை விற்கின்றன. சி.ஆர்.ஓ.க்கள் இந்திய உடலும் மலிவுதான் என்று கூவுகின்றன. நாஜிகளால் மருந்துச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் எதிரிகளின் கைகளில் சிக்கியிருக்கிறோம் என்று உணர்ந்திருந்தார்கள். இந்திய மக்களோ, நம்ம டாக்டர், நம்ம கெவர்மென்டு என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்!

7

இந்தியாவின் உற்பத்தி தளங்களின் வீழ்ச்சியும், அழிவும் !!

“இந்தியாவின் உற்பத்தி துறைகள் நிரந்தரப் பணியை துறந்துவிட்டு, தினக்கூலிகளை, தற்காலிக பணியாளர்களை வைத்து லாபம் ஈட்டுகிறது.  இது தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதுடன், தொழில்துறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய மானேசர் வன்முறை, நிலைமை மோசமாகி வருவதற்கான அறிகுறியாகும்.”

மனேசர் மாருதி தொழிலாளி – முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரந்தர தொழிலாளர்களை விட ஊதியம் குறைந்த – சட்டப் பாதுகாப்பற்ற தற்காலிக – ஒப்பந்த தொழிலாளர்களையே பணியில் அமர்த்துகின்றனர் படம் நன்றி – http://www.thehindu.com/

வ்வொரு காலையும் இந்தியாவின் 50 மில்லியன் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் சங்கு அலறலில் பணியிடத்திற்கு சென்று, அங்கு அவர்களது  ஒரே மாதிரி பணியை பிசகில்லாமல் செய்துவிட்டு, பின் அதே சங்கின் அலறல் சத்தம் கேட்டவுடன் அன்றைய ஷிப்ட் பணியை முடித்துவிட்டு,  அடுத்த ஷிப்ட் பணி துவங்க பார்க்கின்றனர்.

இந்தியாவின் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மொத்தத்தில் 11 சதமானமே என்றாலும், அவர்களும், இந்த துறையும்தான் இந்தியாவின் பொருளாதார பெருக்கத்திற்கு அடித்தளமாக உள்ளனர்.

சமீபத்தில் மாருதி சுசுகியின் மானேசர் தொழிற்பிரிவில் தொழிலாளர்கள், நிர்வாகத்தினரிடையே நடந்த மோதலில் ஒரு மூத்த பொது மேலாளா் கொல்லப்பட்டு,பலர் காயமடைந்த வன்முறை சம்பவம், கடந்த கால தொழிற்சங்க மூர்க்கத்தனத்தை நினைவூட்டுவதாக உள்ளது என பத்திரிகைகள் எழுதுகின்றன.  ஆனால் தொழில்துறை வேலைநிறுத்தம், மற்றும் மனித வேலை நேர இழப்பு என்பது வரலாற்று ரீதியாக பார்க்கையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. 1973-74-ல் அவசர கால பிரகடனத்திற்கு முந்தைய காலத்தில் 3 லட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது.  ஆனால் 2010ல் 429 நிகழ்வுகள்தான் நடந்துள்ளன என வி.வி.கிரி தேசிய தொழில் மையம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலைக்கு எதை காரணம் காட்டுவது?  இந்தியாவில் நமது தொழிற்சாலைகள் பாதுகாப்பானதாக, சிறந்த ஊதியம் வழங்கும் ஒரு அதீத பாதுகாப்புள்ள தொழிற்கூடம்தானா?

புள்ளி விபரங்கள் வேறுமாதிரி சொல்கிறது.  இன்று தொழிலாளர்கள், நிஜ ஊதியம் என்ற அளவில் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டதைக் காட்டிலும், மிகக் குறைந்த ஊதியமே பெறுகின்றனர், வேலை பாதுகாப்பில்லை.  இருப்பினும் அவர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

20 ஆண்டுகள் பரிதாபாத்தில் கருவி (உதிரிபாகம்) உற்பத்தித் தொழிலில் இருந்த திரு பூபன் சிங் கூறுகிறார்- தொழிற்கூடங்கள் தற்போது வேலை பார்ப்பவர்கள், வேலை பார்ப்பவர்களை மேற்பார்வையிடுபவர்கள் என இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது என்றார். இயற்கையாகவே தொழிலாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்குமிடையே ஒரு பகையுணர்வு இருந்தே வருகிறது.  அவரது காலத்தில் தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் இணைந்து இந்த இடைவெளியை இணைத்து வந்தனர்.  தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகத்தின் முன் வைத்ததுடன் பணியிடத்திலும் ஒழுக்கத்தை முறைப்படுத்தினர்.

1970களின் வேலை நிறுத்தங்களை தொடர்ந்து திரு சி.பி.சந்திரசேகர் என்ற பொருளாதார நிபுணரால் தொழிற்சாலைகளின் ஆண்டு ஆய்வு அறிக்கையில், 1981-82லிருந்து 1994-95 வரையிலான 15 ஆண்டுகளில், பணவீக்கத்தை ஈடுகட்டும் வகையில் கொடுக்கப்பட்ட ஊதியஉயர்வு 40 சதமானமாக இருந்தது.  அதைத் தொடர்ந்த 15 ஆண்டுகளில் 15 சதம் குறைந்துவிட்டது என்கிறார்.

குறைந்து வரும் ஊதியங்கள்

தொழிற்சாலைகளில் வருவாய் நிகர மதிப்பிற்கு இணையான ஊதிய விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் 30.3 சதத்திலிருந்து 11.6 ஆக குறைந்துள்ளது.  அதே நேரத்தில் கடந்த 30 ஆண்டுகளில் முதலாளிகளின் லாபம் 23.4 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக உயா்ந்துள்ளதிலிருந்து, ஒன்று தெளிவாகிறது.  தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கூடிய அந்த விகிதத்தில்- முதலாளிகளின் லாபம் உயர்ந்த அந்த விகிதத்தில் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் உயர வில்லை என்பதே. தற்காலிக பணியாளர்கள் பெருகிவருவது, மருத்துவ பலன்கள், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் இல்லாதது, இன்றைய நிலையை தெளிவாக்குகிறது.

19 வயது தற்காலிக பணியாளர் பாபு கூறினார். “தற்காலிக பணியாளர்களிடையே பல்வேறு வகை உள்ளது”  நிர்வாகத்தால் நியமனம் செய்யப்படும் தற்காலிக பணியளர்கள், தற்காலிக பணியாளர்கள் வருகைப் பட்டியலில் காட்டப்படும் தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தகாரர்கள் ஊதிய பட்டியலில் ஊதியம் பெறுபவர்கள், ஒப்பந்த காரர்கள் வருகைப்பட்டியலில் உள்ளவர்கள், ஆனால் ஊதிய பட்டியலில் வராதவர்கள் என பல்வேறு வகைகள் உள்ளது என்று கூறுகிறார்.

பாபு குட்டையாகவும், மெலிந்தும் ஐ ஐ டி படிக்க துடிக்கும் மாணவர் போல் அவ்வப்போது சீப்பினால் தலையை சீவி விட்டுக் கொள்வார்.  தேசிய பகுதி கணிப்பின் பிரகாரம் 2000-ல் இத்தகைய தொழிலாளர்கள் அமைப்பு சார் தொழிற்சாலையிலும், உற்பத்தி துறையிலும், கட்டுமான தொழிலிலும் பணிபுரிந்த தொழிலாளர்கள் 38 சதமானமாக இருந்தது, 2010-ல் அவர்களின் விகிதாச்சாரம் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தற்போதைய வீழ்ந்து வரும் சூழலில், உற்பத்தி தொழிலில் மட்டும் 5 மில்லியன் தற்காலிக தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்த தலைசுற்றுகிற சிப்ட் முறையால், ஒரு நிலையான தொழிற்சங்க நடவடிக்கை சாத்தியமற்றதாகிறது.

மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் ஊசி முதல், மாத்திரை வரை செய்யும் ஒரு மருந்து உற்பத்தி கம்பெனியில்தான் பாபு தனது முதல் வேலையை துவக்கினார். அவருக்கு அப்போது வயது 16 என்பதால், அந்த நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தது.  ஆனால் ஒப்பந்தகாரர், அவரை ஓராண்டிற்கு வருகைப்பதிவில் இல்லாத பட்டியலில் வைத்து, குறைந்த பட்ச ஊதியத்திற்கு குறைவாக மாதம்  ரூ 2400க்கு வேலை கொடுத்து, தூய்மையாக்கப்பட்ட பாட்டில்களை மெஷினில் ஏற்றி, இறக்கும் பணியை 8 மணி நேரம் பார்க்க வைத்துள்ளார்.

அதன்பின் 300 நிரந்தரத் தொழிலாளர்களையும், 1200 தற்காலிக பணியாளர்களையும் பணிக்கமர்த்தியுள்ள ஒரு எலக்டிரிக்கல் கம்பெனியில் வருகைப்பதிவில் உள்ள தொழிலாளியாகவும் பணிபுரிந்தார். அவர் அங்கே ஒரே இடத்தில் நின்று கொண்டு ஒரு மெஷினில் உள்ள திருகியை இறக்கிக்கொண்டு எட்டு மணி நேரம் வேலை பார்த்து மாதம் குறைந்த பட்ச ஊதியமாக ரூ 4847 பெற்றார். இத்தகைய ஒப்பந்த தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்க்க வேண்டும். நிரந்தர தொழிலாளி மட்டுமே உட்கார முடியும்? என்கிறார் அவர்.  நிரந்தர தொழிலாளர்களுக்கு சங்கம் இருக்கிறது.  ஆனால் அவர்கள் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்காக போராட மாட்டார்கள்.  “நாங்கள் ஏதாவது ஒரு சிறு நாற்காலியில் உட்கார்ந்தால், இந்த நிரந்தர தொழிலாளர்கள் எங்களை எழுப்பி விட்டு விடுவார்கள்” என்கிறார் பாபு.  இத்தகைய சூழலில் கழிப்பிடம் செல்வது போல் சென்று தனது கால்களுக்கு ஓய்வு கொடுத்துக் கொள்வதும், மேற்பார்வையாளர் கண்டுகொள்ளாத வரையில்தான். பின்னர் அந்த பணியையும் விட்டுவிட்டு பூமா போன்ற  பல்வேறு நிறுவன பெயர்களில் காலணிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் வேலை தேடிக்கொண்டார்.

அந்த கம்பெனிக்கு அவர் ஒரு “கம்பெனி தற்காலிக ஊழியராக” எடுத்துக் கொள்ளப்பட்டார்.  ஆனால் அந்த கம்பெனியோ அதனது தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுத்து வந்தது.  எங்களது நிலுவை ஊதியத்தை கொடுங்கள், நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்றோம்.  ஆனால் அந்த கம்பெனியிடமோ எங்களது ஊதியத்தை தீா்வுசெய்ய பணமில்லை என்கிறது. சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது ஊதியத்திற்காக போராடுகிறார்கள்.  ஒப்பந்த தொழிலாளர்களோ ஊதியம் பெறாமலேயே அதற்காக போராட வருகிறோம் என்கிறார்கள்.

ஊதியம் பெறாத தொழிலாளர்கள்

மக்களவை சமர்ப்பித்த புள்ளி விபரப்படியே “இந்தியா இங்க்” என்ற நிறுவனம் 2011-12-ல் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையோ ரூ 711 கோடி.  இதில் சம்பளப்பட்டியலில் வராதவர்கள் ஊதியமோ, தொழில் நீதிமன்றங்களின் தாவாவுக்காக செல்லாத பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள தொகையோ சேராது.  அவர்கள் எப்போதுமே தொழில் நீதிமன்றங்களை அணுகியதில்லை. ஏனென்றால் அங்கு நியாயம் கிடைக்காது என்பதால்.  பூபன்சிங் என்ற ஓய்வுபெற்ற கருவிகளை செய்பவர் தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை பெறுவதற்காக 1997 லிருந்து போராடி வருகிறார்.  கடந்த ஆண்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் 13,527 அது தற்போது 13,642ஆக இந்த ஆண்டு உயர்ந்துவிட்டது.

இந்த நீதிமன்ற தலையீடோ, சங்கங்களோ இல்லாமல் பாபு போன்ற தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப, ஒரு புதுவகை சீர்குலைவு வழியில் நிர்வாகத்தை நிர்பந்தித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாலை, தீயிலிருந்து பாதுகாப்பு குறித்த ஒரு மணி நேர சொற்பொழிவுக்கு வர அனைத்து தொழிலாளர்களும் அழைக்கப்பட்டனர்.  கடந்த 2009 மே மாதம் லகனியில் 10 தொழிலாளர்கள் தீ விபத்தில் மாண்டனர். பலர் தீக்காயமுற்றனர். “எப்போதெல்லாம் ஆலையின் சங்கு ஒலிக்கப்படுகிறதோ, அப்போது உடன் அனைவரும் திறந்த வெளிக்கு வந்து விட வேண்டும்” என்று மேலாளர் சொன்னார்.  தொழிலாளர்கள் தங்களது தலைகளை அசைத்து, சம்மதத்தை தெரிவித்தனர்.

மறுநாள் காலை 10 மணிக்கு ஆலையின் சங்கு ஒலித்தது, அனைத்து தொழிலாளர்களும் சொன்னது போல் ஆலையின் திறந்த வெளிக்கு வந்து திரணடனர்.  ஆனால் அங்கு எந்தவித தீ விபத்து ஏதும் நடைபெறவில்லை.  மேற்பார்வையாளர் விரைந்து திறந்த வெளிக்கு வந்தார். அங்கு அனைத்து தொழிலாளர்களும் “எங்களது ஊதியத்தை கொடுங்கள்” என முழக்கமிட்டனர்.

இது பல மாதங்களாக தொடர்ந்தது.  “யாராவது ஒருவர் அந்த ஆலையின் சங்கை ஒலிக்கச் செய்வோம், எல்லோரும் திறந்த வெளிக்கு ஓடி வந்து விடுவோம்”, பாபு சொன்னார். நிர்வாகத்தினர் வெளியே வந்து எங்களை பார்க்கும் போது, “எங்களது ஊதியத்தை கொடுங்கள்” என முழக்கமிடுவோம். அந்த மேற்பார்வையாளரும் ஒன்றும் சொல்லமாட்டார்.  ஏனெனில் அவருக்கே நான்கு மாத ஊதியம் நிலுவையாக உள்ளது. மேலும் தொழிலாளர்கள் உதிரிபாகங்களை இணைக்கும் பிரிவில் பணியை மெதுவாக செய்யத் தொடங்கி, முற்றாக நிறுத்திவிட்டனர்.  அதன் பின்னரே அவர்களது ஊதியத்தின் ஒரு பகுதி மட்டுமாவது, அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், பாபு போன்ற தொழிலாளர்களுக்கு இன்னும் நிர்வாகம் கொடுக்க வேண்டியது நிறையவே உள்ளது.

லக்னியில் நடந்த இந்த நிகழ்வுகள் ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வல்ல. மஸ்தூர் சமாச்சார் போன்ற பிரசுரங்கள், தொழிலாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக, சிறந்த பணி நிலையை பெற தலைமையில்லா பல போராட்டங்களை நடத்தியுள்ளதை பட்டியலிட்டுள்ளது.  இத்தகைய போராட்டங்களை கலைத்திட முடியாது, ஏனென்றால், இவைகள் அனைத்தும் “தொழிற்தாவா”, “அமைதியின்மை”, “வேலைநிறுத்தம்”, “கதவடைப்பு” போன்ற எந்த வகையிலும் சேராதது.  மாருதி நிறுவனம் போல சில நேரங்களில், இத்தகைய போராட்டங்களை கட்டுக்குள் வைத்திருப்பதோ, வழிகாட்டுவதோ அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால், அங்கெல்லாம் தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களின் கட்டுப்பாட்டிலில்லை.  காரணம், அங்கு தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.  திரு ராம்குமார், ஐசிஐசிஐ வங்கி குழுமத்தில் ஒரு இயக்குனர்.  அவரது நண்பர்தான் மாருதி தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் நடந்த வன்முறையில் இறந்து போன திரு அவானிஷ் தேவ்.  மானேசரில் நடந்தது ஒரு கொலை, இது ஒரு குற்றம் என்கிறார் திரு ராம்குமார்.  எந்தவித சமத்துவமின்மையும் ஒருவரை கொல்வதற்கு உரிமம் கொடுத்ததாக கொள்ள முடியாது என்கிறார் அவர்.

“இதுவரை நிர்வாகமும், தொழிற்சங்கமும் இணைந்து இருந்து வந்த இந்த தொழிற்சாலை என்ற பெரியவீட்டில் ஒரு சாரளம் உடைந்து விட்டது.  மேலும் பல கற்கள் வந்து உள்ளே விழுவதற்கு முன்பு இந்த உடைந்த சாளரம் உடன் செப்பனிடப்பட வேண்டும்” என்கிறார் தனியாக கூறும் போது.

“தொழிலதிபர்கள் தொழிற்சாலையை நடத்த தங்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென்று கோரமுடியாது.  அது தங்களது தொழிலாளர்களது உரிமைமற்றும் நலத்தினை குறைத்திட முயலுமானால், அதை ஏற்க முடியாது”  என்கிறார் திரு ராம்குமார்.

ஆனால் அதே நேரத்தில், தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தினர் மீது கொண்டுள்ள சந்தேகத்தை விலக்கிக்கொண்டு, ஒரு பன்முறையற்ற தொழிற்கூடத்திற்கு உறுதி அளிக்கும் திட்டத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திரு ராம்குமார்.

அத்தகைய ஒரு திட்டம் நிரந்தர தொழிலாளர்களும், தற்காலிக தொழிலாளர்களுக்கு மிடையேயான ஊதிய வேறுபாடுகள் களைவதற்கும், மற்றொருபுறம் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்குமிடையேயான வேறுபாடுகளை களையும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார் திரு ராம்குமார்.

கடந்த ஆண்டு மாருதியில் நடந்த தொடர் வேலை நிறுத்தங்களை ஒட்டி மானேசர் தொழிற் கூடத்தில் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது போராட்டங்களை முன்நடத்த வந்த தலைவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளி, வருங்கால திட்டம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு ஆய்வு அறிக்கை போல செய்தியை, அந்த பகுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.  கனவானே இன்றைய நிலைமை ஒன்றும் புரியவில்லை அல்லவா.  கடந்த சில மாதங்களாகவே, தொழிலாளர்களில் சிலர் மற்ற தொழிலாளர்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்து வந்தனர். அத்தகையோரை பணி நீக்கம் செய்ததன் மூலம் நிர்வாகம், ஒரு மதிப்பிடமுடியாத கருவியை தூக்கியெறிந்துவிட்டது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)

_________________________________________________________
நன்றி- தி இந்து – திரு அமன்சேத்தி
தமிழில் –சித்ரகுப்தன்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி!

0

மீனவர்-கொலை-டந்த ஜூலை 16ஆம் தேதியன்று,  துபாய் அருகேயுள்ள  ஜாபல்அலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த, 6 இந்தியர்களும் 2 துபாய்காரர்களும் அடங்கிய மீன்பிடி படகை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அமெரிக்கக் கடற்படையினர் எந்திரத் துப்பாக்கி மூலம்  கண்மூடித்தனமாகச் சுட்டதில் இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினத்தைச் சேர்ந்த சேகர் என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளார். முத்து முனிராஜ் என்ற மீனவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். தமிழக மீனவர்கள் எதற்காக துபாய் செல்ல வேண்டும்?

சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி தமிழக மீனவர்களைக் கொன்று வருவதாலும், பொதுவில் மீன்பிடித் தொழில் நசிவடைந்துள்ளதாலும், தமிழக மீனவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வளைகுடா நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்குச் சேர்ந்து பாரசீக வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அங்கேயும் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை செய்த பின்னரும் அந்தப் படகு தங்களை நோக்கி வேகமாக வந்ததால், இரானியப் படை அல்லது அல்கய்தா தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்க வருவதாகச் சந்தேகித்து, தற்காப்புக்காகச் சுட்டதாக அமெரிக்கக் கடற்படை திமிராக விளக்கம் அளிக்கிறது. ஆனால், கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே வருவது மீனவர்களா, தீவிரவாதிகளா என்று தெரிந்துவிடும்.

மேலும், இந்திய மீனவர்கள் சென்ற படகு யாருக்கும் அபாயத்தை ஏற்படுத்தாத வகையில் சரியான திசையில் சென்றுள்ளதாகவும், அமெரிக்கக் கடற்படையினர்தான் தவறிழைத்துள்ளனர் என்றும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக துபாய் போலீசுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்கா, இதை ஏற்க மறுத்து விசாரணைக்குப் பின்னர்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறது.  பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் எதற்காக அமெரிக்கக் கடற்படை நிறுத்தப்பட்டிருக்கிறது?

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், இப்போது இரானைக் குறிவைத்துள்ளன. இரானை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நோக்கத்துடன் பாரசீக வளைகுடாவில் அமெரிக்க மேலாதிக்க வல்லரசு தனது படைகளைக் குவித்து வருகிறது. பாரசீக வளைகுடாவின் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் உலகின் 40%க்கும் மேலான எண்ணெய் ஏற்றுமதி வணிகம் நடக்கிறது என்பதால், இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் நாடுகளின் இறையாண்மைக்கும் பெருத்த அச்சுறுத்தலாக உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்கிறது இரான்.

இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்த, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகப் பொய்க்குற்றம் சாட்டி அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் பல பொருளாதாரத் தடைகளை போட்டுள்ளன. தனது எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலும் முடமாக்கும் இப்பொருளாதாரத் தடை நடவடிக்கையை எதிர்க்கும் இரான், ஹோர்முஸ் நீரிணை கால்வாய் பகுதியை மூடப்போவதாக  எச்சரித்தது. இரான் அப்படிச் செய்தால், அதை உடனடியாக முறியடிப்போம் என்று நான்கு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களை வளைகுடா பகுதியில் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா, இரானை ஆத்திரமூட்டி வம்புக்கு இழுத்து போர்த் தாக்குதலைத் தொடுக்க முயற்சித்து வருகிறது.

நேற்றுவரை இராக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று  அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள், இப்போது பாரசீக வளைகுடாவில் இரானின் தற்கொலைப் படகுத் தாக்குதல் என்ற பயங்கரவாதப் பீதியூட்டி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தக் கிளம்பியுள்ளதன் வெளிப்பாடுதான் மீனவர் சேகரின் படுகொலை.  ஒருக்கால், தமிழக மீனவர்கள் இரானிய ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தால், அவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இப்படுகொலையை அமெரிக்கா இந்நேரம் நியாயப்படுத்தியிருக்கும். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பதால், மீன்பிடி படகின் மீதான தாக்குதல் பற்றிய விசாரணைக்கு வேறுவழியின்றி அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் அடாவடித்தனங்களைத் தடுக்கக்கூட முன்வராத இந்தியா, ஏகாதிபத்திய எஜமானரான அமெரிக்காவின் அட்டூழியத்துக்கு நியாயம் கேட்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பாரசீக வளைகுடாவில் இன்று ஒரு  தமிழக மீனவர் அமெரிக்க மேலாதிக்க வெறியர்களால் கொல்லப்பட்டுள்ளார். நாளை, எந்தவொரு ஏழை நாட்டைச் சேர்ந்த மீனவரும் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பேரபாயம் ஏற்பட்டுள்ளதை உலகுக்கு உணர்த்திவிட்டு, மீனவர் சேகரின் உடல் இந்தியாவுக்குத் திரும்பியிருக்கிறது.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: