Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 737

துப்பாக்கி: துருப்பிடித்த மசாலா! கொழுப்பெடுத்த துவேசம்!!

29

“விஜய் படத்திற்கு விமரிசனமா” – அதிர்ச்சியுடன் கேட்டார் ஒரு தோழர். உண்மைதான். ஒரு ஸ்டூடியோ குத்துப்பாட்டு, ஃபாரின் மரங்களை சுற்றும் இரண்டு டூயட், ஐந்து ரம்பக் காமடி, காட்சிக்கொரு டமால்-டுமீல் பஞ்ச் டயலாக் என்று புளித்துப் போன பஞ்சாமிர்த ஃபார்முலாவில், கதை கானல் நீராக இருப்பதால் விமரிசனங்களுக்கு பெரிய தேவை இருப்பதில்லை. மக்களும் ஆட்டம், பாட்டம் என்று விறுவிறுப்புக்காக இத்தகைய படங்களை பார்த்து மறப்பதால் இது ஒரு பெரிய பிரச்சினையும் அல்ல.

நமக்கு பிரச்சினையில்லை என்றாலும் விஜய் படங்களின் தொடர் தோல்வி அவருடைய கம்பெனி இமேஜுக்கு பிரச்சினை இல்லையா? “நண்பன்” படத்திலிருந்து விஜய் வேறுவழியின்றி வித்தியாசமாக அதாவது அடங்கி ஒடுங்கி நடிக்க தள்ளப்பட்டாராம். “ஏழாம் அறிவி”ல் தமிழனது தொல்பெருமையை ரீல் பொங்க அவிழ்த்து விட்டாலும் வசூலில் கொஞ்சம் சொதப்பியதால் ஏ.ஆர். முருகதாஸுக்கும் ஒரு வெற்றி தேவைப்பட்டிருக்கிறது. சினிமா அழைப்பிதழையே உசிலம்பட்டி முதல் அமெரிக்கா வரை வாய் பிளக்குமளவுக்கு ‘புதுமையிலும், பிரம்மாண்டத்திலும்’ மலிவாக பொளந்து கொட்டும் கலைப்புலி தாணுவுக்கும் ஒரு வசூல் வெற்றி அவசியமிருந்தது. இப்படியாக மூவரும் தங்களது தொழில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக பிரச்சினைக்குரிய இந்தப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்.

***

லையின் அளவுக்கேற்பத்தான் தொப்பியைத் தேடுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவிலோ தொப்பியைச் செய்து விட்டு அதற்கேற்ப தலையை வெட்டுவார்கள். வசூலில் முன்னணி வகிக்கும் இயக்குநர்கள் நிச்சயமாக இந்த ரகம்தான். அப்படித்தான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒரு மசாலா கதையை உருவாக்கிவிட்டு அந்த ஃபார்முலாவிற்கேற்ப வாழ்க்கை, வரலாறு கதை, உணர்ச்சிகள் அத்தனையும் வெட்டி எறிந்திருக்கிறார்.

“ரமணா”வில் துவங்கி “துப்பாக்கி” வரை முருகதாஸின் படங்கள் அனைத்தும் தாங்க முடியாத அளவுக்கு தமிழ் மசாலா, அண்ணா ஹசாரே அட்வைஸ் கலந்த த்ரில்லர் வகைப் படங்களாக இருக்கும். இதையெல்லாம் விறுவிறுப்பு என்று கொண்டாடுமளவுக்கு தமிழ் பதிவுலகமும் மொக்கை ரசனையில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தப்படத்தையே எடுத்துக் கொண்டால் இதை சினிமா என்ற முறையில் பார்ப்பதற்கு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதென பலரும் ரசித்து எழுதியிருக்கின்றனர். அப்படி என்ன ஈர்ப்பு இந்த படத்தில்?

குமுதம், விகடன்களில் ஒரு பக்க கதைகளை படித்திருக்கிறீர்களா? ஏதாவது ஒரு க(சொத்)தைக் களனில் ஓரிரு பாத்திரங்கள், ஒரு முரண்பாடு என்று ஆரம்பித்து படிப்பவர் ஊகிக்கும் தீர்வு போல வந்து பின்னர் அதற்கு நேரெதிராக முடிப்பது இவற்றின் கலை ரகசியம். இதையே ஏ.ஆர் முருகதாஸ் ஒவ்வொரு காட்சிக்கும் வைத்து தாளிக்கிறார். ஆரம்ப காட்சிகளில் ஓரிரு முறை ஈர்ப்பாக இருக்கும் இந்த தாளிப்பு பின்னர் தாளமுடியாத வதையாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு காட்சி வரும் போதும் தேர்ந்த ரசிகர்கள் அந்த முரண்பாடு அல்லது ட்விஸ்ட் எழவை ஊகிப்பார்கள். அல்லது இந்த முரண்பாடு என்ன குப்பையாகவோ இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடுவார்கள். கலையை ரசிப்பது இப்படியாக கணக்கு போட்டுப் பார்க்கும் மொக்கைப் புதிராக மாறுகிறது.

இராணுவத்தில் இருந்து விடுமுறையைக் கழிக்க மும்பைக்கு வரும் விஜய் தொடர் குண்டு வெடிக்க முனையும் இசுலாமிய ஜிகாதி தீவிரவாதிகளை அழித்து அவர்களது தலைமை வில்லனை துப்பறிந்து ஒழிப்பதுதான் கதை. இடையில் காஜல் அகர்வாலை காதலிப்பார். ஒட்டுமொத்தமாக இந்தக்கதையை ஒன்றாம் கிளாஸ் படிக்கும் குழந்தை கூட படம் துவங்கிய ஐந்து, பத்து நிமிடத்தில் ஊகித்து விடும். ஆனால் அப்படி ஊகித்தாலும் பலவீனமாக இருக்கும் ரசனையில் நம்பிக்கை வைத்து கதையை கொஞ்சம் இழுஇழுவென எதிர்பாராத கோணத்தில் இழுத்து மேலோட்டமான ஈர்ப்பை ஒவ்வொரு காட்சிக்கும் கொண்டு வந்து சினிமாவை குதறிக் கொண்டு செல்கிறார்கள்.

விறுவிறுப்பு கூட்டுவதற்கு வேகமான கதையும் இன்றைய ட்ரெண்ட் என்று மொக்கை சினிமா ஆய்வாளர்கள் கூட ஆய்வு செய்வது வழக்கம். இந்த வேகத்திற்கு சூர்யா நடித்து ஹரி இயக்கிய சிங்கம் ஒரு பதம். சென்னையில் இருந்து வில்லன் தூத்துக்க்குடி வந்து ஹீரோவிடம் பஞ்ச் டயலாக் பேசி ஆரம்பச் சுற்றில் தோற்றுப் போகும் விசயத்தை எடிட்டிங்கின் உதவியாலும், சர் சர் என பறக்கும் பின்னணி இசையாலும் ஓரிரு நிமிடத்தில் சொல்லி விடுவார்கள். எந்த ஒரு கதையும் அதன் உள்ளடக்கமும் அதற்கு பொருத்தமான வடிவத்தைக் தெரிவு செய்து அமைதி அடைகிறது. மாறாக வேகம் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் முனைப்பு கொண்டதால் சிங்கம் படம் நம்மைப் பொறுத்தவரை வாய்விட்டு சிரிப்பதற்குரிய அஜிங்கமான காமடிப் படம் மட்டுமே. கிராபிக்சில் சிங்கம், அதிவேக எடிட்டிங், அதற்கு உறுதுணையாக வெட்டு இசை,  ஒரு கையடியில் ஒரு டன் எடை என்று அதில் சிரிப்பதற்கு ஏராளமிருக்கின்றது.

இத்தகைய ரசனை வீழ்ச்சிதான் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற படைப்பாளிகளுக்கு பலம். இதில் சுலபமாக ஒரு மொக்கையை தயார் செய்து விடுவது அவர்களைப் பொறுத்த வரை சுலபமானது. மூன்று மணி நேரப் படத்தை முப்பது குறும் பிரிவுகளாக பிரித்து விட்டு அவை ஒவ்வொன்றையும் குமுதம் ஒரு பக்க கதை பாணியில் அமைப்பது இதுதான் முருகதாஸின் (பல இயக்குநர்களின்) சூட்சுமம்.

அதிலும் அந்த குறும்பிரிவுகளில் காதல், காமடி, பாடல் போன்ற வைத்தே ஆக வேண்டிய சமாச்சாரங்களை தவிர்க்க முடியாது என்பதால் பாதியை இவைகள் தின்று தீர்க்க மீதிப் பாதியில்தான் ‘கதை’. இவ்வளவு தொந்தரவுகளையும் தாங்கிக் கொண்டு ஒரு படத்தில் கதை வைப்பது சிரமம் என்பதை விட அந்த தொந்தரவையும் தாங்கிக் கொண்டு கதையை கண்டுபிடித்து பொழிப்புரை போட்டு ரசிக்கிறார்கள் என்றால் தமிழனது பரந்த மனத்தோடு போட்டி போட யாருமில்லை என்பது நிச்சயம்.

“துப்பாக்கியின்” விறுவிறுப்பில் மனம் சிக்குண்ட பதிவர்கள் என்ன மாதிரி காட்சிகளில் தம்மை அடகு வைத்திருப்பார்கள்? ரயில் நிற்கும் பின்னணியில் ராணுவ உடையுடன் விஜயின் அறிமுக ஆட்டம், அதே உடையுடன் ராகுகாலம், அஷ்டமிக்குள் பெண் பார்க்க ரயில் நிலையத்திலிருந்தே செல்லுதல், அடக்க ஒடுக்கமாக நடக்கும் காஜல் தனக்கு மேட்சாக மாட்டார் என்று விஜய் வீடு திரும்பி சொல்லும் போதே அதற்கு நேர் எதிராக அங்கே காஜல் நடந்து கொள்ளுதல், அதிலும் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ளுதல் (முக்கியமாக காஜலின் குத்துச்சண்டையை மெய்மறந்து பார்ப்பவர்கள்தான் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லையென அழுகிறார்கள் என்பது ஒரு சோக காமடி),

பிக்பாக்கெட் பேருந்தில் தற்செயலாய் வில்லனைக் கண்டுபிடித்தல், பிக்பாக்கெட் கண்டுபிடிக்கப்படும் அதே நேரத்தில் வெடிகுண்டு வில்லன் தப்பி ஓடுதல், மருத்துவமனையிலிருந்து வில்லன் தப்பிச் செல்வதை ஊரே பேசிக் கொண்டு இருக்கும் போது அடுத்த காட்சியில் அவன் விஜயின் வீட்டில் இருத்தல், சத்யனிடம் இந்தக் கதையை கூறிக்கொண்டிருக்கும் போதே காஜல் வந்ததால் சஸ்பென்சில் வைத்தல், காஜலுக்கு முத்தம் கொடுக்கும் நேரத்தில் வில்லனைக் கண்டுபிடிக்கும் கிரியேட்டிவிட்டி வேலை செய்து முத்தத்தை ரத்து செய்து பறந்து போதல், இரண்டுமணி நேரத்திற்கு மட்டும் மயக்க மருந்து போட்டு வில்லனை தப்பி போக வைப்பது, அதற்குள் கல்யாண விருந்துக்குச் சென்று ராணுவ வீரர்களை ஆப்பரேஷனுக்கு தயார் செய்வது….

இப்படிச் சின்ன சின்ன திருப்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்று ஊசிப்போன ஒரு எளிய கணக்குப்புதிர் போன்ற காட்சிகளைத்தான் பதிவர்கள் விறுவிறுப்பான திரைக்கதை என்று கொண்டாடுகிறார்கள். எனில் இவர்களெல்லாம் உண்மை வாழ்க்கையிலும், திரைப்பட அனுபவத்திலும் அப்படி ஒரு ஒரிஜினல் விறுவிறுப்பை கண்டவர்கள் இல்லை என்று தெரிகிறது. இறுதியில் குமுதத்தின் ஒரு பக்க கதை ஃபார்முலாதான் நமது சினிமா பதிவர்களது ரசனை அளவு கோல் என்றால் தமிழ் மக்களிடம் வசூலிக்கவும் விறுவிறுப்பை அளிக்கவும் ஒரிஜினல் துப்பாக்கி தேவையில்லை, வெறும் தீபாவளி பொம்மைத் துப்பாக்கியே போதும்.

அடுத்து நமது சினிமா பதிவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் லாஜிக் மீறல். இதையும் எளிய கணக்கு புதிருக்குண்டான விதிகள் போலத்தான் கருதுகிறார்கள். பாத்திரங்கள், வேலை விவரங்கள், காட்சிகளின் தொடர்பு போன்றவற்றில் உள்ள தொழில்நுட்ப ரீதியான சமாச்சாரங்கள் முரண்படாமல் அல்லது மீறாமல் இருந்தால் லாஜிக் ஷேமகரமாக இருக்கிறது என்பது இவர்களது புரிதல்.

சான்றாக படத்தில் இராணுவக் கேப்டனான விஜய் மேலதிகாரிகளது அனுமதி இன்றி வில்லன்களை கொல்வதும், அதற்கு சக வீரர்களை பயன்படுத்திக் கொள்வதும் ஏன்? – இப்படித்தான் இவர்கள் லாஜிக்கை ஆராய்கிறார்கள். உண்மையில் ஒரு திரைக்கதையில் இதெல்லாம் மீறப்படுவது பெரிய பிரச்சினை இல்லை. உண்மையிலும் இராணுவத்தினர் பல இடங்களில் அப்பாவி மக்களை அனுமதியின்றி, உத்தரவின்றி கொல்வதும் ஏராளமாய் நடப்பது என்கிற விதத்திலும் இது லாஜிக் மீறல் இல்லை. ஆனால் ஒரு திரைக்கதை எதார்த்த வாழ்வின் உண்மைகளோடும், அறவியல் மதிப்பீடுகளிலிருந்தும் வழுவாமல் இருப்பதுமே முக்கியமாகிறது. இந்த ‘லாஜிக்’ மீறாமல் இருப்பதுதான் நமது கவனிப்பிற்கு உரியது.

இது நமது மொக்கை திலகங்களுக்கு எப்போதும் உறைக்காது, தெரியாது, புரியாது. இந்தியா ராணுவம் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொன்ற கணக்கு ஏராளமிருக்கையில் அதன் ஆக்கிரமிப்பு, மக்கள் விரோத மனோபாவமே எதார்த்தம் எனும் போது படத்தில் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களைக் காட்டி கருணைப்படுமாறு கெஞ்சுகிறார்கள். “ஆயிரம் மக்களை கொல்பவன் தன்னுடைய உயிரை விடுவதற்கு கவலைப்படாத போது, மக்களைக் காப்பாற்றுபவனும் தனது உயிரை துறப்பதற்கு தயங்கக் கூடாது” என்று விஜய் இரண்டு, மூன்று முறை பேசுகிறார்.

டான்ஸ் ஆடி குஷால் பேபியாக அறியப்பட்ட விஜய் இதைப் பேசும் கொடுமை ஒருபுறம் இருந்தாலும் இதுதான் உண்மையான ‘லாஜிக்’ மீறல்! ஆக்கிரமிப்பு நாடுகள், இராணுவத்திற்கு எதிராக அரசியல், விடுதலை, பொருளாதார, வாழ்க்கை காரணங்களால் மட்டுமே ஒரு போராளி தன்னுடைய உயிரைத் துறக்கும் தற்கொலைப் போராளியாக மாற முடியும். ஆனால் இத்தகைய போராட்டங்களிலிருந்து முகிழ்விக்கும் தற்கொலைப் போராளிகள் எவரும் ஆக்கிரமிப்பு இராணுவம், நாட்டிலிருந்து தோன்றவே முடியாது.

தன்னுடைய பாதுகாப்பான வாழ்வு போக அடுத்தவனுடைய வாழ்வையும் அபகரிக்க வேண்டுமென்ற சிந்தனை உள்ள ஆக்கிரமிப்பாளன் வாழ்க்கையின் இன்பத்தை துய்ப்பதற்குத்தான் துணிவானே அன்றி உயிரை விட அல்ல. வேண்டுமானால் அமெரிக்க அரசாங்கமோ இல்லை ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ நாட்டிற்காக தற்கொலை தியாகிகள் வேண்டுமென்று அறைகூவல் விட்டுப் பார்க்கட்டும். தயிர் சாதத்திற்கு வழியில்லாத அம்பி கூட அதற்கு துணிய மாட்டான் என்பது உறுதி.

ஜிகாதி பயங்கரவாதிகளிடமிருந்து மும்பை மக்களை பாதுகாக்கும் கடமையை ஏற்றுக் கொண்ட விஜய் இடையிடையில் அதற்கு லீவ் கொடுத்து விட்டு காஜல் அகர்வாலின் பின்னால் சுற்றுகிறார். இப்பேர்ப்பட்ட நபர்தான் நாட்டிற்காக தனது உயிரை கொன்று விடுமாறு சக வீரர்களிடம் உதார் விடுகிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் காஜல் அகர்வாலை சுற்றாமல் ஆரம்பத்திலேயே கண்ணும் கருத்துமாக பணியாற்றிருக்கலாம் அல்லவா?

சரி, விஜய் தனது உயிரை எடுக்குமாறு கூறும் போது ரசிகர்கள் சிரிப்பார்களா, இல்லை தேசபக்தியில் புல்லரித்து பொங்குவார்களா? ஒரு பாத்திரம் அதனுடைய கதையமைதியில் வழுவாமல், முரண்படாமல் இருக்குமாறு இருப்பது அடிப்படை விசயம். இது கூட நமது படைப்பாளிகளுக்குத் தெரியவில்லை என்பது சிரிப்பதற்குரிய உண்மை.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு வில்லன்கள் என்றால் நமது படைப்பாளிகள் இயல்பிலையே இசுலாமிய தீவிரவாதிகள் என்று செட்டிலாகிவிடுகிறார்கள். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பா.ராகவனது “நிலமெல்லாம் ரத்தம்” நூலையோ இதை ஒட்டி வந்த “கிழக்கி”ன் ஏனைய மத்திய கிழக்கு உடான்சுகளையோ படித்திருப்பார் போலும். அதில் வரும் ஸ்லீப்பர் செல், அதனுடைய விளக்கம், எல்லாம் தனது மொக்கை த்ரில்லருக்கு பொருந்தி வரும் என்பதால் அப்படியே அதை மும்பைக்கு நாடு கடத்தி விட்டார்.

மத்திய கிழக்கில் இசுரேலுக்கு எதிராக தோன்றிய இசுலாமிய அமைப்புகளின் நடைமுறை, ஸ்தாபன முறை அனைத்தும் வலுவான, சதிகார எதிரிக்கு எதிராக போராடும் மக்களிடம் தோன்றிய எதிர் போராட்ட வன்முறை. அதை அந்த சூழலில் இருந்து துண்டித்து விட்டு ஒரு மலிவான வில்லனாக வேறு ஒரு நாட்டில் காண்பிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஹமாஸ், அல்கைதா ஏனைய அமைப்புகளின் டெக்னிக்கல் டீடெய்ல் மட்டும் பா.ராகவன் தொட்டு, முருகதாஸு வரையிலும் ஈர்க்கப்படும் அவஸ்தையை இங்கே இனியும் விளக்க வேண்டியதில்லை.

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு என்பது இந்துமதவெறியின் எதிர்வினை. ஒரு வேளை இங்கே இந்துமதவெறியோ, அத்வானி, மோடி, தாக்கரேக்களோ தண்டிக்கப்படும் நிலையிருந்தால் இத்தகைய குண்டு வெடிப்புகளுக்கு தேவைப்படும் சமூக அடிப்படை இருந்திருக்காது. இதை வினவின் பல கட்டுரைகளில் விரிவாக விளக்கியிருக்கிறோம். இதன் அரிச்சுவடி கூடத் தெரியாமல் ஒரு வில்லன் எஃபெக்டுக்காக ஜிகாதி, இசுலாம், நமாஸ், முகமூடி, கழுத்தறுப்பது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முசுலீம் வெறுப்பு இந்தியாவின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இசுலாமிய மக்கள் எவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

முருகதாஸ் ஒருவிதமான அண்ணா ஹசாரே டைப்பில்தான் அனைத்து விசயங்களையும் பார்க்கிறார். அதன் அபத்தத்தை ஏழாம் அறிவிலேயே பார்த்தோம். அந்த குப்பை மசாலவை ஏதோ தமிழனது வீரம், ஈழவிடுதலை என்று ஜாக்கி வைத்து தூக்கிய தமிழ் தேசிய இனவாதிகளையும் கண்டிருக்கிறோம். அதனால்தான் மற்றுமொரு தமிழ்தேசியவாதியான கலைப்புலி தாணு தனது பெரிய பட்ஜெட் படத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்மத்தை கக்குவதற்கு கைக்காசை போட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இவர்தான் ஈழத்தில் அமைதிப்படையின் கொலையை அவரது படமான “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனி”ல் மறைத்து அமைதிப்படையை வரவேற்கமாட்டேன் என்று சொன்ன கருணாநிதியை குற்றம் சாட்டுவதற்கு பயன்படுத்தியவர்.

ஆக தமிழ் உணர்வு என்றால் அது இந்துத்வ உணர்வின் பங்காளிதானோவென ஐயம் வருகிறது. அதனால்தான் பால்தாக்கரே உயிரோடு இருந்து நடத்திய இனவெறி போராட்டங்களுக்கும் தமிழ்தேசிய வாதிகள் பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

அரசியல், வரலாறு, சமூகம், கலை அனைத்தையும் மிக மிக மேலோட்டமான பார்வை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் கண்ணோட்டத்தோடு புரிந்து வைத்திருக்கும் படைப்பாளிகளிடமிருந்து இத்தகைய விபரீதங்கள் வரும் என்பதற்கு “துப்பாக்கி” எனும் மசாலாவே சாட்சி. இதன் மூத்த சகோதரனாக அமெரிக்க அரசின் ஆசிபெற்ற “விசுவரூபம்” அடுத்து வரப்போகிறது. மீதி விமரிசனங்களை அதில் தொடருவோம்.

குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?

52
மோடி-4

முன்னுரை: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியே வெற்றி பெறுவார் என்று பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. 2007 தேர்தலின் போதும் இது நடந்திருக்கிறது. 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த கலவரத்தின் நாயகன் மீண்டும் வெற்றி பெறக் காரணம் என்ன? இந்த வெற்றிக்கும் பாசித்திற்கும் என்ன தொடர்பு? 2008 இல் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை காலம் கடந்தும் குஜராத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. படித்துப் பாருங்கள்!

வினவு

மோடி-4

”இந்த முகமூடி எனக்கும் மக்களுக்கும் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. நான் தாக்கப்பட்ட போதெல்லாம், என் வலியை மக்கள் உணர்ந்தார்கள்.”

(மோடியின் பேட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், டிசம்பர்-25, 2007)

‘அண்ணனே, தளபதியே, அம்மா, அய்யா’ என்று தலைவனாகிய ஆண்டவனைத் தொண்டர்கள் தொழுது வழிபடும் ‘துவைத’ நிலையிலிருந்து. ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ‘அத்வைத’ நிலைக்கு, ‘நானே மக்களாக இருக்கிறேன்’ என்ற தூய பாசிச நிலைக்கு, இந்திய ஜனநாயகத்தை உயர்த்தியிருக்கிறார் மோடி.

தனது முகமூடிகளை இலட்சக்கணக்கில் சீனத்திலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை குஜராத் முழுவதும் விநியோகித்திருந்தார் மோடி. தலைவனை ‘முக’மாகவும், மக்களை வெறும் ‘பிரதிபிம்ப’மாகவும் மாற்றி விட்ட இந்த ‘அத்வைத’ நாடகத்தில், அரசியல் எதிரிகள் மோடியை விமர்சித்த போது, முகமூடிகள் வலியால் துடித்ததில் வியப்பில்லை.

முன்பு, வாஜ்பாயி எனும் ‘மிதவாத மூகமுடி’யை அணிந்து கொண்டு பாசிசம் ஆட்சி நடத்திய போது, அந்த முகமூடியின் மிதவாத ஒப்பனையைப் பாதுகாக்கும் பொறுப்பை, மதச்சார்பற்ற கட்சிகள் ஏற்றிருந்தன். அது பாசிசத்தின் முன்னுரை. இன்று ஒரு கொலைகாரனின் முகத்தைத் தனது முகமூடியாக அணிந்து கொண்டு, ஆனந்தக் கூத்தாடும் குஜராத் நமக்கு வழங்குவது பாசிசத்துக்கான பொழிப்புரை.

முஸ்லிம் இளைஞனை மணந்த இந்துப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை எடுத்து எரித்துக் கொன்றதையும், அண்டை வீட்டு முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவால் சிதைத்து, பின்னர் அவர்களைக் கசக்கிக் கொன்று போட்டதையும், குழந்தைகளைத் தீயில் வறுத்ததையும் பெருமை பொங்க அசைபோடும் கொலைகாரர்களை தெகல்கா படம் பிடித்துக் காட்டியபோது, ”இவர்கள் என்ன வகை மிருகங்கள்?” என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் பல வாசகர்கள். எந்த மண்ணில் அந்தப் பாசிசப் பிராணிகள் முளைத்து, தழைத்து வளர்ந்தனவோ அந்த குஜராத் மண், இந்த முகமூடிக் கூத்தின் மூலம் தன்னுடைய முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.

நீதி, கருணை அல்லது மனிதத் தன்மையின் சாயலையேனும் தமக்குள் காப்பாற்றி வைத்திருக்கும் ஒருவொருவரும், தெகல்கா இதழின் செய்தியைப் படித்த பின்னர் ‘எப்படியாவது மோடி தோற்றுவிட மாட்டானா!’ என்று தவித்தனர். தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக் கணிப்புகள், மோடியின் வெற்றியைத்தான் ஊகித்தன என்ற போதிலும், மோடி தோற்க வேண்டும் என்று ஏங்கினர். ஒருவேளை வெற்றியே பெற்றுவிட்டாலும், மோடியின் ஒரு முடியைக் கூடக் காங்கிரசு பிடுங்கப் போவதில்லை, என்பது தீர்க்கமாகத் தெரிந்திருந்தும், தெகல்கா கிளறிவிட்ட மனப்புண்ணின் ஆறுதலுக்காகவாவது, ‘மோடி தோற்க வேண்டும்’ என்று பலர் விரும்பினர்.

இனப்படுகொலையின் பிணவாடையை முகர்ந்தபடியேதான், குஜராத்தின் பெரும்பான்மை இந்துக்கள் 2002-ல் மோடிக்கு வாக்களித்தனர் என்ற போதிலும், ”அது கோத்ரா சம்பவம் தோற்றுவித்த தற்காலிகக் கிறுக்குத்தனமாக இருக்கக் கூடும்” என்று தமக்குத் தாமே சமாதானம் கூறிக்கொண்ட பலர், 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் குஜராத்தின் இந்து மனோபாவத்திற்கு புத்தி தெளிந்துவிடும் என்றும், அதன் அடிமனதிலிருந்து ‘அறவுணர்ச்சி’ மேலெழும்பி 2002-இன் அநீதிக்குப் பரிகாரம் வழங்கும் என்றும் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர்.

தெகல்காவின் பேட்டிகள், இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. இமை தாழாமல், சொல் தடுமாறாமல் தாங்கள் இழைத்த பஞ்சமா பாதகங்களை ‘திரைக்கதை’ போல வருணித்தார்கள் ‘குஜராத்தின் எழுச்சியுற்ற இந்துக்கள்’. ‘மாமிசம் தின்னும் ‘தமோ’ குணம் நிரம்பிய கீழ்சாதி அடியாட்படையின்’ வாயிலிருந்து மட்டுமல்ல, ‘சாக பட்சிணிகளும், இயல்பிலேயே ‘சத்வ’ குணம் நிரம்பியவர்களுமான’ பார்ப்பன – பனியா உயர்சாதி இந்துக்களின் வாயிலிருந்தும் ‘ரத்தக் கவிச்சு’ வீசியது. இருப்பினும், குஜராத்தின் உயர்சாதி இந்துக்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளவிலை. பெரும்பான்மை இந்து மனம், அதனைக் கண்டு அவமானத்தால் குறுகி, வெட்கித் தலைகுனியவில்லை. ‘வருந்துகிறோம்’ என்று மனதிற்குள் கூட முணுமுணுக்கவில்லை. முகம் என்ன செய்ததோ, அதையே முகமூடிகளும் பிரதிபலித்தன.

மோடி-3”2002 சம்பவங்களுக்காக வருந்துகிறேன் என்று நீங்கள் ஒரு வார்த்தை கூறினால் அது காயம்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கமல்லவா?” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நரேந்திர மோடியிடம் கேட்டார் கரண் தாப்பர் என்ற பத்திரிகையாளர். மறுகணமே அந்தத் தொலைக்காட்சிப் பேட்டியிலிருந்து வெளியேறினார் மோடி. தெகல்கா பேட்டிகளோ, குஜராத் தொலைக்காட்சிகளிலிருந்தே வெளியேற்றப் பட்டன. பிரதிபலிப்பு தோற்றவிக்கும் ‘இடவல மாற்றம்’ என்பது, இதுதான் போலும்!

குஜராத் தேர்தல் முடிவு, காந்திய மத நல்லிணக்கவாதிகளையே கூட அதிர்ச்சியுறச் செய்துள்ளது. ”குஜராத்தை ‘இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்று இனிமேலும் அழைக்க முடியாது; அது தொழிற்சாலையாகி விட்டது” என்கிறார் ஒரு பத்திரிகையாளர். ”குஜராத் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்” என்று எச்சரிக்கிறார் குல்தீப் நய்யார். ”இனி இந்தியாவே குஜராத் தான்” என்று இரண்டு விரலைக் காட்டிக் கொக்கரிக்கின்றன மோடியின் முகமூடிகள்.

அத்வானியின் கூற்றுப்படி, இது பாரதிய ஜனதாவுக்கு ஒரு திருப்புமுனை. இது ‘ஆம்பளை ஜெயா’வின் வெற்றி என்பதால், ஜெயலலிதாவைப் பொருத்தவரை இது அவரது சொந்த வெற்றி. ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் (anti – incumbency) மக்களின் மனோபாவத்தை மீறி மோடி வென்றிருப்பதால், இந்த வெற்றிக்கு இந்துத்துவத்தைத் தவிர வேறு என்ன காரணம்? என்பதே மற்ற ஓட்டுக்கட்சிகளின் அக்கறைக்கு உரிய விசயமாக இருக்கிறது.

சங்க பரிவார அமைப்புகளும், லூவா படேல் சாதியைச் சேர்ந்த கேசுபாய் படேல், கோர்தன் ஜடாபயா போன்ற பா.ஜ.க தலைவர்களும், தொகாடியா போன்ற வி.எச்.பி தலைவர்களும், மோடியை எதிர்த்த போதிலும், போட்டி வேட்பாளர்களை நிறுத்தியும், காங்கிரசை மறைமுகமாக ஆதரித்த போதிலும், மோடி வென்றது எப்படி? மாயாவதியின் கட்சி வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால், காங்கிரசு கூடுதல் தொகுதிகளில் வென்றிருக்கக் கூடுமா? மோடிக்கு மாற்றாக முதல்வர் பதவிக்கு காங்கிரசு சார்பில் யாரையும் முன் நிறுத்தவில்லை என்பதுதான், தோல்விக்கு அடிப்படையா? ஆதிக்க சாதியான படேல் சாதியினர் பா.ஜ.க வை எதிர்த்ததால், மற்றெல்லா சாதியினரும் பா.ஜ.க-வின் பக்கம் சாய்ந்து விட்டனரா? அல்லது உள்கட்சிப் பூசலால் பிளவுபட்டிருந்த இந்து ஓட்டு வங்கியை, தெகல்கா விவகாரம் தோற்றுவித்த இந்து உணர்வு, ஒன்றுபடுத்திவிட்டதா?…. என தும்பிக்கை, காது, வால் என்று பிரித்து ‘யானை’யைத் தடவுகின்றன, தேர்தல் முடிவு குறித்த ஊடகங்களின் ஆய்வுகள்.

குஜராத் இனப்படுகொலை குறித்த பெரும்பான்மை இந்துக்களின் மனப்போக்கு என்ன? மோடியின் மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்கள் குறித்த குஜராத் மக்களின் கண்ணோட்டம் என்ன? அவை இந்தத் தேர்தல் முடிவுகளின் மீது செலுத்திய தாக்கம் என்ன? – என்ற கேள்விகளையே இந்த ஆய்வுகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக, கேந்திரமான இவ்விரு பிரச்சினைகளையும், நமது பார்வையிலிருந்தே தந்திரமாக அகற்றி விடுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவல்ல, நமது பிரச்சினை. ஒருவேளை இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், அந்த வெற்றி, காந்திய மத நல்லிணக்க வாதிகளின் மனப்புண்ணுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமேயன்றி, நிச்சயமாக அது இந்துத்துவத்தின் தோல்வியாக இருந்திருக்காது. ‘குஜராத் – இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்ற நிலைமையை மாற்றுவதற்கான ஒரு துவக்கப் புள்ளியாகக் கூட இருந்திருக்காது.

***

குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மோடி விடுத்த ஒரு சவால் மிகவும் முக்கியமானது. ”என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் எல்லாக் குறுந்தகடுகளையும், ஒரு நடுநிலையாளர் குழுவிடம் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். அதில் மதவெறியைத் தூண்டக்கூடிய ஏதாவது ஒரு பேச்சைக் காட்டுங்கள். நான் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிசம்பர் 25, 2007)

பாசிஸ்டுகளின் வழக்கமான ‘வாய்ச்சவடால்’ என்று இதனை ஒதுக்கிவிட முடியாது. இந்து, இந்துத்துவம், முஸ்லிம் என்ற சொற்களைத் தனது பிரச்சாரத்தில், மோடி அநேகமாக உச்சரிக்கவே இல்லை. அவற்றை உச்சரிக்காமலேயே, அவை தோற்றுவிக்கும் விளைவுகளை மோடியால் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. காங்கிரசும், இந்தச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதுதான், குரூரமான நகைச்சுவை. (இந்து பயங்கரவாதிகள் என்று ஒரே ஒருமுறை ‘திக்விஜய் சிங்’ பேசியதைத் தவிர).

‘இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்று அறியப்படும் ஒரு மாநிலத்தில், கிராமம் முதல் நகரம் வரை, இந்து பாசிச அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில், இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசும் அமைப்புகள், திரைப்படங்கள், பத்திரிகைகள், கலைஞர்கள் யாராக இருந்தாலும், தாக்கித் துரத்தப்படுவார்கள் என்பது நிலைநாட்டப்பட்டிருக்கும் மாநிலத்தில், 2500 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, பல்லாயிரம் பேர் வீடு வாசலை இழந்து, கடந்த 5 ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழ வேண்டியிருக்கும் ஒரு மாநிலத்தில், ‘இந்து பாசிசம்’ என்ற சொல்லையே பயன்படுத்தாமல், அதன் கொடூரத் தன்மையை அம்பலப்படுத்தாமல், மோடிக்குப் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கும் மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பதில், காங்கிரஸ் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும்?

இந்துத்துவத்தை எதிர்ப்பது இருக்கட்டும், காந்திய மத நல்லிணக்கத்தைப் பேசினால்கூட குஜராத் இந்துக்களின் வாக்குகளை இழந்து விடுவோமென்று, காங்கிரசு அஞ்சியது. மோடி முகாமிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்களும், 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளுமான கோர்தன் ஜடாபயா, கேசுபாய் படேல், பிரவின் தொகாடியா போன்றோரை அரவணைத்துக் கொள்வதன் மூலம், படேல் சாதி வாக்குகளையும், மோடி எதிர்ப்பு இந்து வாக்குகளையும் அள்ளிவிடலாம் என்று கணக்கிட்டது. இது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும், காங்கிரசை விட்டால் இப்போதைக்கு வேறு நாதி இல்லை என்ற முஸ்லிம் மக்களின் பரிதாபமான நிலைமையை, காங்கிரசு மிகவும் வக்கிரமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது குஜராத் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு காங்கிரசு வகுத்த தேர்தல் தந்திரம் மட்டுமல்ல. காங்கிரசே ஒருமிதவாத இந்துத்துவக் கட்சிதான். அயோத்தி பிரச்சினைக்கு அடிக்கொள்ளியாக இருந்த ராஜீவ்காந்தி முதல், இன்று சேதுக் கால்வாய் விவகாரத்தில் பாரதிய ஜனதாவிடம் சரண்டைந்த சோனியா காந்தி வரை இதற்குச் சான்றுகள் பல உண்டு. 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளைச் சட்டப்பூர்வமாகத் தண்டிப்பதற்கு, ஒரு துரும்பைக் கூட காங்கிரசு எடுத்துப் போட்டதில்லை என்பது மட்டுமல்ல, கடந்த 5 ஆண்டுகளில் இந்த வழக்குகளை முடக்குவதிலும், மைய அரசு மோடிக்கு துணை நின்றிருக்கிறது என்பதே உண்மை.

எனவே பெயரைத் கூடக் குறிப்பிடாமல், ‘மரண வியாபாரி’ என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா குறிப்பிட்டாரே, அது மட்டும்தான் மோடியின் மீது காங்கிரசு தொடுத்த ‘அதிபயங்கரத் தாக்குதல்’! இதற்கு மோடி கொடுத்த பதிலடிதான், மோடிக்கும் முகமூடிகளுக்குமிடையிலான உறவை நமக்கு விளக்குகிறது.

”5 கோடி குஜராத் மக்களை ‘மரணவியாபாரிகள்’ என்கிறார் சோனியா. அது உண்மையா?” – ”இல்லை… இல்லை…”

”சோரபுதீன் ஷேக்கை என்ன செய்ய வேண்டும்?” – கொல்ல வேண்டும்… கொல்ல வேண்டும்”

”குஜராத்தில் நடக்கக் கூடாத சம்பவங்களெல்லாம் நடந்ததாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?” – ”இல்லை… இல்லை…”

மோடி-1மேற்கூறியவையெல்லாம், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி எழுப்பிய கேள்விகள். அவற்றுக்கு, கூட்டம் ஆரவாரமாக அளித்த பதில்கள். இது போன்றவையெல்லாம் எல்லாக் கூட்டங்களிலும் கட்சித் தொண்டர்கள் போடும் கூச்சல்தானே! என்று கருதிக் குறைத்து மதிப்பிட முடியாது. கூட்டம் அளித்த பதில் என்பது, குஜராத் இந்து உயர்சாதியினரிடம் உறுதியாக நிலவும் பொதுக்கருத்து. குஜராத் இந்து சமூகத்தின் பொது மனோபாவம்.

தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை, 5 கோடி குஜராத் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக திசை திருப்புவதில், மோடி எப்படி வெற்றி பெற முடிந்தது? பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, சாதிமறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு ‘தமிழன்’ என்ற சொல்லைப் பெரியார் பயன்படுத்தினாரென்றால், அதன் நேர் எதிரான பொருளில் ‘குஜராத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான் மோடி.

2002 தேர்தலின் போதே ‘இந்து’ என்ற சொல்லை, ‘குஜராத்தி’ என்ற சொல்லைக் கொண்டு தந்திரமாக மாற்றீடு செய்துவிட்டான் மோடி. 2002 இனப்படுகொலையைத் தொடர்ந்து, உலகமே இந்து பாசிஸ்டுகளைக் காறி உமிழ்ந்தபோது, தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வைத்த பெயர் ‘குஜராத் கவுரவ யாத்திரை’. ”கர்வ் சே கஹோ ஹம் ஹிந்து ஹை” என்ற ஆர்.எஸ்.எஸ்.-ஸின் முழக்கம், ‘குஜராத்தி கர்வமாக மாற்றப்பட்டுவிட்டது. முஸ்லிம்கள் அந்நியர்கள்’ என்ற உட்கிடையான பொருளைக் கொண்ட இந்த குஜராத்தி இனவாதம், இந்து பாசிச மனோபாவத்தைத் தன் இதயமாகக் கொண்டிருக்கிறது.

”சோரபுதீன் ஷேக் என்ற கிரிமினலை என்ன செய்யவேண்டும்?” என்று கூட்டத்தைப் பார்த்து மோடி எழுப்பிய கேள்வி

”முஸ்லிம் = கிரிமினல், முஸ்லிம் = பயங்கரவாதி” என்ற கருத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

”கொல்ல வேண்டும்” என்ற கூட்டத்தின் கூச்சல், 2002 இனப்படுகொலைக்கு ‘சங்கேத மொழி’யில் கூட்டம் வழங்கிய அங்கீகாரம்.

அரசாங்கம், போலீசு, நீதிபதிகள் மட்டுமல்ல, ”மொத்த இந்து சமுதாயமே எங்கள் பின்னால் இருந்தது.” என்று தெகல்கா நிருபரிடம், இந்து பாசிஸ்டு கிரிமினல்கள் அளித்த வாக்கு மூலத்தின் பொருள், இதுதான்.

2002 இனப்படுகொலைக்காக குஜராத்தின் இந்துப் பொதுக்கருத்து, கடுகளவும் வருந்தவில்லை, என்றே குஜராத்தின் எல்லா சமூகவியலாளர்களும், குறிப்படுகிறார்கள். ‘கோத்ரா சம்பவம்’ முஸ்லிம்கள் நடத்திய திட்டமிட்ட தாக்குதல், என்று நம்பியதால் உருவான பொதுக்கருத்து அல்ல. ”நாங்கள் ஒன்றும், நடந்ததை நியாயப்படுத்தவில்லை. இருந்தாலும் ஏன் அதையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? முஸ்லிம்கள் மட்டும்தான் இந்த சமூகத்தில் பாதிக்கப் பட்டிருக்கிறார்களா? டெல்லி சீக்கியர் படுகொலையின் குற்றவாளிகளைத் தண்டித்து விட்டார்களா?” என்று அடுக்கடுக்காக எதிர் கேள்வி கேட்டு, இறுதியில் படுகொலையை நியாயப்படுத்துவதில் வந்து முடிக்கிறார்கள், இந்த நடுத்தர வர்க்கத்தினர். இவர்களில் ‘மிகவும் நல்லவர்கள்’ என்று கூறப்படுபவர்கள் கூட ”2002-ஐ மறந்து விடுங்கள்” என்று அறிவுரை கூறுகிறார்கள். ‘மறப்பதா? வேண்டாமா? என்பதை பாதிக்கப்பட்ட மக்கள்தான் முடிவு செய்ய முடியும்’ என்ற எளிய நியாயம் கூட உரைக்காத அளவிற்கு, இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் அங்கே ‘சகஜநிலை’ திரும்பியிருக்கிறது.

மறக்க மறுத்தால்? மீண்டும் சகஜநிலை குலையும். தெகல்கா-வின் அம்பலப்படுத்தல்கள் வெளியானவுடனே, மீண்டும் ஒரு தாக்குதல் தொடங்கிவிடுமோ? என்று அகதி முகாம்களில் இருந்த முஸ்லிம்கள் அடைந்த அச்சம் இதற்குச் சான்று கூறுகிறது.

இத்தகைய சகஜ நிலையையும் அமைதியையும் நிலைநாட்டியிருப்பதே, இப்போது மோடியின் சாதனையாகி விட்டது.

”பாதுகாப்பு இல்லாமல், வளர்ச்சி எப்படி இருக்க முடியும்?” என்று கேட்கிறார் மோடி. யாரிடமிருந்து பாதுகாப்பு? என்ற கேள்வியை குஜராத் எழுப்பவில்லை. 2500 பேரைக் கொன்று போட்ட பிறகும், சிறு சலசலப்போ மும்பையில் நடந்ததைப் போன்ற பயங்கரவாத எதிர்த்தாக்குதலோ இல்லாமல், குஜராத் இந்து சமூகத்தை, குறிப்பாக அதன் முதலாளிகளையும், வணிகர்களையும் பாதுகாத்திருக்கிறார் அல்லவா, அந்தப் பாதுகாப்பைத்தான் கூறுகிறார் மோடி!

மோடி-6மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால், நாடே நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், பயங்கரவாதமும் தீவிரவாதமும் தான் இந்த வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், மன்மோகன் சிங் வழங்குகின்ற சித்திரம், பன்னாட்டு முதலாளிகள் நலனையும், இந்தியத் தரகுமுதலாளிகளின் நலனையுமே பிரதிபலிக்கிறது. மோடியும் அதையேதான் கூறுகிறாரெனினும், குஜராத்தின் குறிப்பான பின்புலத்தில், ‘ஆளும் வர்க்கத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பிலிருந்து, இந்துக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பிரிக்கவொண்ணாததாகி விடுகிறது.’ அதாவது, ‘எது ஆளும் வர்க்கத்தின் நலனோ? அதுதான் இந்துக்களின் நலன் என்ற கருத்து அதன் வர்க்க ரீதியான அர்த்தத்திலும், குஜராத் மக்களின் மனதில் பதியவைக்கப் பட்டிருக்கிறது.

”விமான நிலையத்துக்கே கார்களே அனுப்பிவைத்து, தொழிலதிபர்களை மகாராஜாக்களைப் போல வரவேற்கும் ஒரே முதல்வர், மோடி மட்டும்தான்” என்று கூறி, மோடியின் வெற்றியைக் கொண்டாடினார் ஒரு இந்தியப் பெருமுதலாளி. ”குஜராத் சாதித்திருப்பதையும், சாதிக்கவிருப்பதையும் எஞ்சியுள்ள இந்தியா, ஒருக்காலத்திலும் இனி சாதிக்க முடியாது” என்று கூறி மோடியின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள், வெளிநாட்டில் குடியேறிய குஜராத்திகள்.

இவர்களின் இந்தக் கொண்டாட்டத்துக்கு அர்த்தமிலாமல் இல்லை. போராட்டங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவியிருக்கும் மாநிலம் குஜராத். சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தை 2006-இல் மைய அரசு கொண்டுவருவதற்கு முன்னர், 2004-லேயே குஜராத்தில் அச்சட்டத்தைக் கொண்டு, வந்தவர் மோடி. ‘அடானி குழுமம்’ என்ற தரகு முதலாளிக்கு, சதுர கெஜம் 50 பைசா விலையில் (சதுர அடி 5 காசு) 33,000 ஏக்கர் நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விற்றிருக்கிறார் மோடி. அதை சதுர கெஜம் 1200 ரூபாய்க்கு விற்று, இந்த நிலவிற்பனை மூலம் மட்டுமே 20,000 கோடி ரூபாயை இலாபம் ஈட்டியிருக்கிறது அடானி குழுமம். சி.பொ. மண்டலத்தால், வாழ்க்கை இழந்த கூலி விவசாயிகளுக்கோ அங்கே எவ்வித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. இந்திய மக்கள் தொகையில் 5% உள்ள குஜராத், இந்திய பங்குச்சந்தையின் 30 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது. அதே குஜராத் கல்வியிலும், ஆரம்ப மருத்துவத்திலும் பின்தங்கியிருக்கிறது.

சராசரி தனிநபர் வர்மானத்தில், குஜராத்திற்கு இந்தியாவிலேயே 4-வது இடம். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலோ 15-வது மாநிலமாக இருக்கிறது குஜராத். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் ஊட்டச்சத்துக் குறைவினால் எடைகுறைந்து, சூம்பிக் கிடக்கின்றனர். தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில், முதல் 3 இடங்களிலேயே குஜராத் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொழில் மயமாக்கத்தினால் வெளியேற்றப்படும் பழங்குடிகளும் தலித் மக்களும், எவ்வித நிவாரணமும் இல்லாமல் கிராம்பபுறங்களிலிருந்து வெளியேற்றப்படுக் கொண்டிருக்கிறார்கள். ‘சூப்பர் ஹைவே’க்கள் எனப்படும் சாலைகள் குஜராத்தில் இருக்கின்றன; ஆனால், அந்தச் சாலைகளுக்குச் சுங்க வரி செலுத்த பணமில்லாமல், சாலையோரமாக ஒட்டகத்தில் பயணம் போகிறார்கள், மக்கள்.

மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால் தீவிரமடைந்திருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள், சுரண்டப்படும் மக்களிடம் கலக உணர்வைத் ‘தானே’ தோற்றுவித்து விடுவதில்லை. தேர்தல் ஆதாயத்துக்காகக் கூட, காங்கிரஸ் கட்சி இந்த வர்க்க முரண்பாடுகளை அம்பலப்படுத்துவதில்லை. ஆளும் வர்க்க நலனைப் பேணுவதில் அந்த அளவுக்கு ஒன்றியிருக்கும் பாரதிய ஜனதா – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே, அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதால், மக்கள் அரசியல் கண்ணோட்டமும் ஆளும் வர்க்கம் விதிக்கும் வரம்புகளைத் தாண்டுவதில்லை. வர்க்க ஒடுக்குமுறைக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறைக்கும் இடையிலான உறவுக்கு குஜராத்தில் தெளிவாக அடையாளம் காணத்தக்க பல வேர்கள் உள்ளன.

தொழிற்சங்க இயக்கத்தை முளையிகேயே கருக்கி, முதலாளிகளைத் தம் அறங்காவலர்களாகப் பார்ப்பதற்கு உழைக்கும் மக்களைப் பழக்கிய காந்தியம், வர்க்க ஆதிக்கத்துடன் சாதி ஆதிக்கத்தையும் மறைமுகமாக உறுதிப்படுத்தியது. 1980-களில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன் முதலாகப் போராட்டம் நடத்திய மாநிலம் குஜராத் என்பதும், அந்தப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் மோடியும் ஒருவர் என்பதும் அந்த மாநிலத்தில் நிலவும் ‘சாதி ஆதிக்க’ மனோபாவத்தைப் புரிந்து கொள்ள உதவும் வரலாற்றுச் சான்றுகள். மலம் அள்ள மறுத்த குற்றத்துக்காக, 80-களில் தலித்மக்கள் மீது, கட்டுப்பாடாக சமூகப் புறக்கணிப்பு நடத்திய மாநலமும் குஜராத் தான். ‘மலம் அள்ளுவதைக் கூட, ஒரு தியானமாகச் செய்யமுடியும்’ என்று மோடி பேச முடிவற்கான காரணம் இங்கே இருக்கிறது.

அன்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பின் தாக்குதல் இலக்காக தலித்துகள். இன்று குஜராத் கவுரவத்தின் தாக்குதல் இலக்காக முஸ்லிம்கள். இதில் தலித்துகளும் பழங்குடி மக்களும் இந்துத்துவத்தின் காலாட்படையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிய முன்னேற்றம்.

மறுகாலனியாக்க வளர்ச்சியை ‘உடலாக’வும், இந்துத்துவத்தை அதன் ‘ஆன்மா’வாகவும் ஒருங்கிணைக்க முடிந்ததில்தான், மோடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. சந்தைக் கடுங்கோட்பாட்டு வாதமும், மதக் கடுங் கோட்பாட்டு வாதமும் இணையும் புள்ளி இது. தனியார்மய ஆதரவு, தொழில் வளர்ச்சி, பங்குச் சந்தை, சிறுவணிகம் என்று தமது வர்க்க நலனைப் பார்க்கவோ ஏங்கவோ பழகியிருக்கும் குஜராத் சமூகத்தைப் பொருத்தவரை, ‘மதச்சார்பின்மை’ என்பது அதிகபட்சம் ஒரு அறக் கோட்படாக மட்டுமே இருக்க இயலும்.

ஆனால், மதச்சார்பின்மை என்பது வெறும் அறம் சார்ந்த விழுமியம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஜனநாயகத்துக்கான போராட்டங்களின் மூலம் மட்டும்தான், மதச்சார்பின்மையைத் தனது பண்பாடாக ஒரு சமூகம் கிரகித்துக் கொள்ள இயலும். ஆளும் வர்க்க அரசியலிலும், அரசியலற்ற வணிக மனோபாவத்திலும் ஊறப்போடப்பட்ட ஒரு சமூகம், பாசிசத்தைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வது தவிர்க்க இயலாதது.

தாராளவாதக் கொள்கை அளிக்கும் நவீன தொழில் வளர்ச்சியும், கல்வியும், பண்பாடும், தாராளவாத(liberal) விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. மாறாக, பழைமைவாதத்தையும். சுயநலத்தையும், ஆணவத்தையும், பாசிசத்தையும் மட்டுமே அவை வளர்க்கின்றன என்பதற்கு குஜராத்தும், குஜராத்தின் பாசிசத்தை டாலர் ஊற்றி வளர்க்கும் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களும், சான்றாக இருக்கிறார்கள்.

மோடி-5மோடியின் முகமூடிப் பிரச்சாரத்தைப் பார்த்து விட்டு, இது, ‘இந்துத்துவா’ அல்ல ‘மோடித்துவா’ என்கிறார்கள், சில பத்திரிகையாளர்கள். பாசிசம் தனியொரு கொள்கையாக இருப்பதில்லை. இட்லர், முசோலினி, அத்வானி, மோடி போன்ற பாசிஸ்டுகளின் வழியாகத்தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மோடி முகமூடி வருவதற்கு முன்னால், மோடி ஆணுறை வந்துவிட்டது. அரசு விநியோகிக்கும் ஆணுறைகளில் கூடத் தன்னுடைய படத்தை அச்சிட்டிருக்கிறார் மோடி. கேட்பதற்கே அருவருப்பாகத்தான் இருக்கிறது, எனினும் ஆணுறைகளில் அச்சிடத்தக்க ஆண்மகனாக, குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை, மோடியைக் கருதியிருக்கிறது என்பது, அதைக் காட்டிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

தெகல்கா நிருபரிடம், ‘பாபு பஜரங்கி’ என்ற இந்துத்துவக் கொலைகாரன் வியந்து கூறிய சொற்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ”மார்த் ஆத்மி ஹை!” –ஆம்பிள்ளைச் சிங்கம்யா! இந்தச் சொல்லின் வழியே தெறிக்கும் பன்முகம் கொண்ட பொருள், ‘குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை மோடியைத் தெரிவு செய்தது ஏன்?’ என்பதை விளக்குகிறது.

***

ந்த முகமூடியால், மோடிக்கும், குஜராத்தின் இந்துப் பெரும்பான்மைக்கும் இடையே ஏற்படுத்தியிருந்த ‘வலிமையான பிணைப்பின்’ பொருளும் விளங்குகிறது.

_________________________________________

புதிய கலாச்சாரம், ஜனவரி 2008

__________________________________________

பரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்!

10
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!

பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்தைச் சம்பளமாகப் பெற்ற பாவிகளையே மேல்சாதிப் பாவிகள், கீழ்சாதிப் பாவிகள் என இரண்டு ரகமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் திருச்சி நகரில்.

திருச்சி – வேர்ஹவுஸ் சுரங்கப்பாதை அருகேயுள்ள கிறித்துவ மயானத்தின் குறுக்கே 600 அடி நீளச் சுவர் ஒன்று சீன நெடுஞ்சுவர் போல நின்று கொண்டிருக்கிறது. சுவரின் தெற்கே ரோமன் கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் கல்லறை; வடக்கே உத்தரிய மாதா கோயில் மயானம் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கான கல்லறை.

அந்தச் சுவரை இடிக்கவொட்டாமல் அதற்கு முட்டுக் கொடுத்து நின்று கொண்டிருக்கிறது ஒரு சங்கம். அதன் பெயர் ரோமன் கத்தோலிக்க மேற்குல கிறித்துவ கல்லறைச் சங்கம்.

கல்லறைச் சங்கம் என்பதால் செத்துப் போனவர்களின் ஆவிகள்தான் கமிட்டி உறுப்பினர்களோ என்று எண்ண வேண்டாம். ரத்தமும் சதையுமாக (அப்பமும் ஒயினுமாக) உயிரோடிருக்கும் ‘பாவிகள்’தான் உறுப்பினர்கள். சரியாகச் சொன்னால் வெள்ளாளக் கிறிஸ்தவப் பாவிகள்; இன்னும் குறிப்பாகச் சொன்னால் ”தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் மட்டுமே இனி சாப்பிடுவேன்” என்று சபதம் செய்திருக்கும் மூப்பனார் அவர்களைத் தலைவராகக் கொண்ட த.மா.கா. எம்.பி. அடைக்கலராஜை உறுப்பினராகக் கொண்டிருக்கும் சங்கம் அது.

உயிரோடிருப்பவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காக சங்கம் வைத்து நடத்துவதே பெரும்பாடாக உள்ள இந்தக் காலத்தில், பிணங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு சங்கம் வைத்து நடத்துகிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் நிச்சயமாக ஒரு லட்சியவெறி இருக்க வேண்டும். அந்த வெறி சாதிவெறி; அந்த லட்சியம் தீண்டாமை. அதுவும் நகர்ப்புறத்தில் தனி மயானத்தைச் சுவர் எழுப்பி நிலைநிறுத்துவது என்றால் அது வரம்பு கடந்த சாதித்திமிர்.

சாதித்திமிர் அடையாளமான இந்தச் சுவரை இடித்துத் தள்ளுவோமென திருச்சி நகர புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் – அறிவித்துள்ளன. எனினும், இந்தச் சுவர் ஏற்கெனவே இடித்துத் தள்ளப்பட்டு மீண்டும் ‘உயிர்த்தெழுந்த’ சுவர்தான்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட சிவில், கிரிமினல் வழக்குகள் சாதி – மதம் – சொத்துடைமை – சட்டம் இவற்றுக்கிடையிலான உள் உறவுகள் குறித்த ஒரு புரிதலை நமக்கு அளிக்கின்றன.

**

”14.3.76 அன்று காலை சுமார் 7 மணியளவில் பாதிரியார் சைமன், பாதிரியார் ஜான் பீட்டர் ஆகியோர் தலைமையில் ராஜமாணிக்கம், சந்தியாகு, டேவிட், பால்ராஜ் மற்றும் 17 பேர் கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் கல்லறைக்கும், அரிசன கிறித்தவர்கள் கல்லறைக்கும் இடையே இருந்த மேற்குல கிறித்துவர்களுக்குச் சொந்தமான சுவரை இடிக்கும் நோக்கத்துடன் சட்ட விரோதமாகக் கூடினர்.”

”கையில் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த சுமார் 200 முதல் 300 பேர் அடங்கிய அந்தக் கும்பல் சுவரை இடித்துத் தள்ளியது. பிறகு அந்தக் கும்பல் மேற்குல கிறித்தவர்கள் மயானத்திற்குள் அத்துமீறி நுழைந்தது. பாதிரியார் சைமனும், ஜான் பீட்டரும் சில நிமிடங்கள் உரையாற்றினர். பின்னர் அந்தக் கூட்டம் கலைந்து சென்றது.”

கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ”சுவர் இடிப்புப் போராட்டம்” பற்றி மேற்கண்டவாறு கூறுகிறது.

மேற்குல கிறித்தவர் சங்கம் குற்றவியல் நீதிமன்றதில் வைத்த வாதம் கீழ்வருமாறு:

”எங்களது மயானம் ஒரு தனியார் மயானம். கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே அங்கே புதைக்க முடியும். எமது சங்கத்தின் உறுப்பினர்கள் எல்லாம் உயர்சாதி இந்துக்களாக இருந்து பின்னர் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள்.

தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து கிறித்தவ மதத்திற்கு மாறிவர்களுடைய கல்லறை அருகாமையில் உள்ளது. இரண்டுக்கும் இடையிலான சுவர் பன்னெடுங்காலமாக உள்ளது. இந்தச் சுவர் மேற்குல கிறித்தவர் சங்கத்துக்கு சொந்தமானது. எங்களுக்குச் சொந்தமான சுவரை அவர்கள் இடித்து அத்துமீறி நுழைந்தது கிரிமினல் குற்றமாகும்.”

இந்த வழக்கை விசாரித்த முதல் வகுப்பு நீதிமன்ற நடுவர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 148, 447, 427 ஆகியவற்றின் கீழ் ‘குற்றவாளி’களுக்குத் தலா ரூ. 50 அபராதமும், மூன்று வாரம் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிராக செசன்சு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ”இடித்துத் தள்ளப்பட்ட சுவர் எங்களுக்குச் (தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு) சொந்தமானது. கிறித்தவ மக்களிடையேயான சமத்துவம் என்ற கருத்துக்கு எதிரானதாக இந்தக் குறுக்குச் சுவர் இருந்ததால் அதை இடித்துத் தள்ளினோம்” என்று வாதிட்டனர்.

மேற்குல கிறித்தவ மயானத்திற்கான நிலம் வாங்கப்பட்டதற்கான கிரயப் பத்திரத்தின் நகலையும் அவர்கள் (13.3.1879 தேதியிட்டது) தாக்கல் செய்தனர். அந்தப் பத்திரத்தில் மேற்படி காலி மனையின் வடக்கு எல்லை ”பரயன் கல்லறை சுவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை செசன்சு நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது. சுவர் மேற்குலத்தினருக்குத்தான் சொந்தம் என்பதற்கோ, சுவரை அவர்கள் தான் மராமத்து செய்து பராமரித்து வந்தார்கள் என்பதற்கோ உரிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்.

ஆனால் இடிக்கப்பட்ட சுவர் மீண்டும் எழுப்பப்படாமல் இல்லை. மேற்குல கிறித்தவ மயானமும் புறம்போக்குதான் என்ற அடிப்படையில் மீண்டும் அங்கே சுவர் எதுவும் எழுப்பக் கூடாது என 1978-இல் மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இடைக்காலத் தடை பெற்று மீண்டும் சுவரை எழுப்பி விட்டனர் மேல்சாதி வெறியர்கள்.

மேற்குல கிறித்தவக் கல்லறை நிலம் தனியார் நிலமா, அரசு புறம்போக்கா? மாவட்ட ஆட்சியர் அதனை அரசுப் புறம்போக்கு என்று கூறுவதால் அரசுக்கெதிராக மேற்குல கிறித்தவர்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.

இங்கேதான் அவர்களது நரித்தனம் வேலை செய்கிறது. அரசுக்கெதிராக வழக்கு தொடுத்து தோற்று விட்டால் நிலம் பறி போவது மட்டுமல்ல, சுவரும் இருக்காது, சுவரைக் காவல் காக்க கல்லறைச் சங்கமும் இருக்காது.

எனவே அரசுக்கெதிராக வழக்குத் தொடுப்பதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கெதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

”வழக்கிடைச் சொத்து (மேற்குலக் கல்லறை நிலம்) சாதி கிறித்தவர்களுக்குச் சொந்தமானது…. எதிர்வாதிகளோ அரிசன கிறித்தவர்களின் பிரதிநிதிகள். அவர்களுடைய மயானம் புறம்போக்கு ஆகும். இரண்டுக்குமிடையில் உள்ளே காம்பவுண்டு சுவர் உள்ளது. தேவையில்லாத சாதி உணர்வுகள் ஏற்பட்டு மேற்படி எல்லைக் கோட்டை இடித்தனர். வாதிகளின் (மேற்குலத்தினரின்) சொத்தில் அரிசன கிறித்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் அமைதி குலையும். தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். எனவே அந்நியர்கள் (அரிசன கிறித்தவர்கள்) எமது நிலத்தை ஆக்கிரமிக்காமலிருக்க நிரந்தர உறுத்துக் கட்டளை (Permanent injunction) பிறப்பிக்க வேண்டும்” என மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்று விட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வருவாய்த்துறை அதிகாரிகள், 1924-ம் ஆண்டு வருவாய்த்துறை ஆவணங்களின் படி இது அரசு புறம்போக்குதான் என்றும், ஆனால் இது மேற்குல சங்கத்தின் மேற்பார்வையில் இருந்து வருவதும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மயானமாக உபயோகப்படுத்தப்பட்டு வருவதும் உண்மை என்று கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கான விசாரணை நடந்தது என்றும், ஆனால் அது தொடர்பான கோப்புகளைக் காணவில்லை என்றும் அவர்கள் கைவிரித்து விட்டனர்.

புறம்போக்கு என நிரூபிக்க அரசு சாட்சிகள் உரிய ஆதாரம் ஏதும் தராததால் நிலம் மேற்குல கிறித்தவ சங்கத்திற்கே சொந்தம் என திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அந்நியர்கள் யாரும் தங்கள் மயானத்திற்குள் நுழையக் கூடாது என்றுதான் மேற்குல கிறித்தவர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு கூறுவது தீண்டாமைக் குற்றம் ஆகாது. மேலும், பாரம்பரியமாக தாழ்த்தப்பட்டோர் யாரும் அங்கே பிணத்தைப் புதைப்பதில்லை; மேற்குல கிறித்தவ சங்கத்தில் அவர்கள் உறுப்பினராகவும் இல்லை. எனவே தங்கள் சங்க உறுப்பினர்கள் மட்டுமே மயானத்தைப் பயன்படுத்தலாமென மேற்குலக் கிறித்தவர்கள் கூறுவது தீண்டாமைக் குற்றம் ஆகாது; அது அவர்களுடைய மரபுரிமை ஆகும்” – என்றும் சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

இவ்வாறாக தீண்டாமைக்கெதிரான ஒரு போராட்டத்தை சட்டம் கேலிக்கூத்தாக்கி விட்டது.

தீண்டாமை பாராட்டுவது கிரிமினல் குற்றம்; அதே நேரத்தில் சொத்துரிமை அடிப்படை உரிமை. இதுதான் நம் அரசியல் சட்டம். ”தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழையக் கூடாது” என்று எழுதி வைத்தால் அது தீண்டாமைக் குற்றம். ”அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக் கூடாது” என்று கூறுவது உரிமை. யார் அந்நியன் என்பதை சொத்துக்கு உரியவன்தான் முடிவு செய்ய வேண்டும். ”அந்நியர்கள்” தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க நேர்ந்தால் அதற்காக அதனை தீண்டாமைக் குற்றம் என்று சொல்லிவிட முடியாது. சொத்துரிமை சாதியைப் பாதுகாப்பது இப்படித்தான்.

கிறித்தவ மதக் கோட்பாடுகளின் படி சாதி என்பது கிடையாது. ஆனால் இந்த மயானப் பிரச்சினையில் ”அது தனியார் சொத்து; அதில் மதம் எப்படித் தலையிட முடியும்” என்கிறது ரோமன் கத்தோலிக்க மத நிறுவனம். அரசு நிலமாக இருந்தால் ”நடவடிக்கை எடு” என்று அரசைக் கோரப் போகிறோம். அங்கே மதத்துக்கு வேலையில்லை. ஆனால் இடம் தனியாருக்கு – கிறித்தவருக்கு – சொந்தமாக இருக்கும் போது பிஷப் அல்லவா நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆனால் இடித்த சுவரை மீண்டும் கட்ட பணம் கொடுக்கிறார் பிஷப். பிஷப்புக்கு பைபிள் புனிதம்தான்; ஆனால் தனிச்சொத்து அதைவிடப் புனிதமாயிற்றே!

திருச்சி மயானப் பிரச்சினையில் மட்டுமல்ல, தீண்டாமைக்கெதிரான போராட்டம் ஒவ்வொன்றிலும் சொத்துரிமை குறுக்கிடுகிறது. கிராமப்புற கோயில் நுழைவுப் போராட்டங்களின் போது தீண்டாமையைச் சட்டப்படி நியாயப்படுத்த முடியாத ஆதிக்க சாதியினர் ”இது நாங்க பணம் போட்டு கட்டின கோயில். எங்களுக்கு விருப்பம் உள்ள ஆட்களைத்தான் உள்ளே விடுவோம். உங்களுக்கு தனிக்கோயில் கட்டிக்கிங்க” என்று சொத்துரிமையைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு புரட்சியின் மூலம் உடைமை உறவுகளில் மாற்றம் கொண்டு வராமல் சாதி – தீண்டாமையை ஒழிக்க முடியாது என்ற உண்மையைத்தான் இவை அனைத்தும் நிரூபிக்கின்றன.

புரட்சி செய்வது கம்யூனிஸ்டுகளின் வேலை; சாதி – தீண்டாமையை ஒழிப்பது எங்கள் வேலை – என்று புரட்சிக்கும் சாதி ஒழிப்புக்குமிடையில் கனமான சுவரொன்றை சில அறிஞர்களும், தலித் தலைவர்களும் எழுப்பியிருக்கிறார்கள். பல காரணங்களால் இது அவர்களுக்கு வசதியாக இருக்கலாம்.

ஆனால் இந்தச் சுவரை இடிக்காமல் கல்லறைக் காம்பவுண்டு சுவர்களை நிரந்தரமாக இடித்துத் தள்ளவியலாது.

______________________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் 1998

______________________________________________________

ஜேப்பியாருக்கு ஆப்பு!

10

மிழகம் அறிந்த சாராய வியாபாரியாக இருந்த ஜேப்பியார் இன்று தமிழகத்தின் முன்னணி கல்வி தந்தையாக இருக்கிறார். ஜே.பி.ஆருக்கு மொத்தம் ஏழு பொறியியல் கல்லூரிகளும், ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும், ஒரு பல் மருத்துவக்கல்லூரியும், ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது. தனது  கல்வி வியாபாரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி வரும் ஜேப்பியார் சென்ற ஆண்டு தன்னுடைய பெயரில் ஒரு புதிய கல்லூரியை திறந்துள்ளார்.

சுங்குவார்சத்திரத்திற்கு அருகில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டு அங்கே தான் இந்த புதிய கல்லூரியை துவங்கியுள்ளார். அருகிலேயே ஒரு ஸ்டீல் பிளான்டையும், வாட்டர் பிளான்டையும் நிறுவியுள்ளார். அத்துடன் தீம் பார்க் ஒன்றையும் கட்டி வருகிறார். இது தவிர சொந்த ஊரான முட்டத்தில் ஒரு சிறிய துறைமுகத்தையும் கட்டி வருகிறார்.

மேற்கூறிய புதிய கல்லூரியில்தான் பணிரெண்டு தொழிலாளர்கள் இறந்து போயுள்ளனர். கல்லூரியின் உள்அரங்கை கட்டிக்கொண்டிருக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அது விபத்து அல்ல. கொலை. கல்விக் வியாபாரியான ஜேப்பியாரின் லாபவெறிக்காக அந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கல்லூரியின் உள் அரங்கிற்கான கட்டுமான வேலைகளை செய்தது வெளி நிறுவனங்கள் அல்ல. ஜேப்பியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தான் அந்த வேலைகளை செய்தது. வேகமாக கட்டினால் கூட மூன்று மாதங்கள் பிடிக்கக்கூடிய இந்த வேலையை மூன்றே வாரங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்று ஜேப்பியார் கொடுத்த டார்ச்சரால் வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்தன. கட்டிடங்கள் இடிந்துவிழ காரணம் இது தான். ஈரத்துடன் கொட்டப்பட்ட சிமெண்ட் கலவை இறுகி காய்ந்து உறுதியடையும் முன்பே அதன் மீது அடுத்தக்கட்ட வேலைகளை துவங்கியதால் காய்ந்தும் காயாமலும் இருந்த கட்டிடச் சுவர்களும், தூண்களும் சரிந்து விழுந்தன. பன்னிரெண்டு தொழிலாளர்கள் இறந்து போனார்கள். இது விபத்தா கொலையா?

கல்வி சாம்ராஜ்யத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இத்தகைய ரவுடி ஜேப்பியாருக்கு எதிரான போராட்டத்தில் தான் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றிருக்கிறது. சட்டப் போராட்டத்தில் பு.ஜ.தொ.மு வின் இரண்டாவது கதை இது.

சத்யபாமா பண்ணையார்க் கழகம் !

’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யின் தற்போதைய மாநில அமைப்புச் செயலாளரும்,  சத்யபாமா கல்லூரி பு.ஜ.தொ.மு ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிசியன்கள் சங்கத்தின் செயலாளருமான தோழர் வெற்றிவேல் செழியன் 2005-ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக் கழகத்தில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தார்.

சத்யபாமாவில் பணிபுரியும் துப்புறவுத் தொழிலாளி முதல் லேப் டெக்னீசியன்கள் வரை அனைவரும் ஜேப்பியார் அய்யாவை பார்த்தால் வணக்கம் வைக்க வேண்டும். யார் மீதாவது அய்யாவுக்கு கோபம் வந்துவிட்டால் கையை நீட்டி கன்னத்தில் நாலு அறைவிடுவார், அதையும் வாங்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் கேவலமான கெட்ட வார்த்தைகளையும் கொட்டுவார், அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். பண்ணையார் வீசியெறியும் காலனா அரையனா பிச்சைக் காசை போல அய்யா போடுவது தான் சம்பள உயர்வு.

கேன்டீனில் மதிய உணவு உண்டு. ஆனால் தொழிலாளர்களுக்கு என்று தனியாக இல்லை. மற்றவர்கள் உண்பது போக என்ன மிச்சமோ அவை தான் தொழிலாளர்களுக்கான மதிய உணவு. நிர்வாகத்தை எதிர்த்துப் பேசுபவர்களை அல்ல முணுமுணுப்பவர்களை கூட இருட்டறையில் வைத்து குமுற சிறப்பான முறையில் ஊட்டி வளர்க்கப்பட்ட தொழில்முறை குண்டர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்னையார் கம்பெனி தான் நாகரீகமான முறையில் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படுகிறது.

இத்தகைய மோசமான வேலை நிலைமையின் கீழ் அடிமைகளாக வேலை செய்த தொழிலாளர்கள் இவற்றுக்கெதிராக குமுறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான் வெற்றிவேல்செழியனுக்கு பு.ஜ.தொ.மு சங்கம் அறிமுகமாகிறது. அவர் தனது சக தொழிலாளிகளுக்கு சங்கத்தை அறிமுகம் செய்கிறார்.

அதிரடியான வேலை நீக்கம் !

2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்தவித முன்னறிவிப்புமின்றி வெற்றிவேல்செழியன் வேலையிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். வேலை நீக்கத்திற்கு நிர்வாகம் கூறிய காரணம் ஒழுங்கீனமாக இருக்கிறார் என்பது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. ஓட்டுனர்களிடையே சங்கம் துவங்க முயற்சித்தார் என்பது தான் உண்மையான காரணம். ஒரு தொழிலாளியை இவ்வாறு முன்னறிவிப்பின்றி வேலைநீக்கம் செய்தால் தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2 ஏ வின் கீழ் தொ.உ.ஆணையரிடம் (ACL) முறையிடலாம்.

அதன்படி தொ.உ.ஆணையரிடம் தொழிற்தாவா எழுப்பப்பட்டது. பு.ஜ.தொ.மு தனது வாதத்தில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் இவைதான்.

வெற்றிவேல் செழியன் எந்த முன் அறிவிப்புமின்றி அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், ஒரு தொழிலாளி எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அவரிடம் முறையாக விளக்கம் கேட்டிருக்க வேண்டும், குற்றத்தை நிரூபிக்க உள்விசாரணை நடத்தியிருக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் தந்திருக்க வேண்டும்;

இவ்வாறெல்லாம் நடந்து கொண்ட பிறகு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதை தொழிலாளியிடமும் முறையாக அறிவித்து அதன் பிறகு தான் வேலை நீக்கம் செய்ய வேண்டும். இது தான் சட்டப்படியான நடைமுறை. ஆனால் சத்யபாமா நிர்வாகம் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளவில்லை மாறாக வெறும் வாய்மொழி உத்தரவின் மூலம் அதிரடியாக வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கை. எனவே இந்த வேலைநீக்க நடவடிக்கையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தொழிலாளர் உதவி ஆணையரின் நடுநிலைமை !

வழக்கு விசாரணை 2006-ம் ஆண்டு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. பு.ஜ.தொ.மு வின் வாதத்திற்கு பதிலளிக்கிறேன் என்று நிர்வாகம் அடிமுட்டாள்த்தனமான ஒரு வேலையை செய்தது. தொ.உ.ஆணையரை அணுகி ஒரு கடிதத்தை கொடுத்தது. அக்கடிதத்தில் வெற்றிவேல் செழியன் சங்கம் ஆரம்பிக்க முயற்சி செய்தார் எனவே தான் வேலையிலிருந்து நீக்கினோம் என்கிற உண்மையான காரணத்தை கூறியிருந்தனர். உடனே பதறிப்போன தொ.உ.ஆணையர் இப்படி எல்லாம் கடிதம் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் தான் மாட்டிக்கொள்வீர்கள் என்று கூறி அந்த கடிதத்தை பத்திரமாக நிர்வாகத்தின் கைகளிலேயே திணித்தார்.

பு.ஜ.தொ.மு மனுதாரர். நிர்வாகம் எதிர்மனுதாரர். எதிர்மனுதாரர் ஒரு கடிதத்தை கொடுத்தால் அதை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அதே போல மனுதாரர் அளிக்கும் அனைத்து கடிதங்களையும் எதிர் மனுதாரருக்கு வழங்க வேண்டும். இது தொ.உ.ஆணையரின் வேலை. ஆனால் தொ.உ.ஆணையர் அந்த கடிதத்தை பு.ஜ.தொ.மு விற்கு கொடுக்காமல் மறைத்து விட்டார். கேட்டதற்கு அவ்வாறு எந்த கடிதமும் கொடுக்கவே இல்லை என்று மறுத்து விட்டார். அந்த கடிதம் மட்டும் அன்றே கிடைத்திருந்தால் ஜேப்பியாரை அன்றைக்கே மண்ணைக் கவ்வவைத்திருக்கும் பு.ஜ.தொ.மு. முதலாளிகள் தொழிலாளிகளோடு மோதும் போதெல்லாம் முட்டாள்தனங்களையே அதிகமாக செய்கிறார்கள் என்பதால் இது போன்ற முட்டாள்தனங்களுக்கு பஞ்சமிருக்காது.

இவ்வாறு கடிதம் கொடுத்தால் பிரச்சினை என்றதும் சில நாட்களில் வேறு ஒரு கடிதத்தை கொடுத்தனர். அதில் ஒரு புதிய காரணத்தை கூறினார்கள். அதாவது வெற்றிவேல்செழியனை நாங்களாக வேலை நீக்கம் செய்யவில்லை அவராகவே தான் சொல்லாமல் கொள்ளாமல் வேலையைவிட்டு நின்று விட்டார் என்றார்கள். தன்னிச்சையாக வேலையிலிருந்து நின்றால் நாங்கள் ஏன் இங்கே வருகிறோம், வழக்கு போடுகிறோம் ? மேலும் நீங்கள் முதலில் கூறிய காரணம் (ஒழுங்கின்மை) வேறு, இப்போது கூறுகின்ற காரணம் வேறு. இதில் எது உண்மை ? எதுவும் உண்மை அல்ல. நிர்வாகம் சொல்வது பொய். தொழிலாளியை நிர்வாகம் தான் வேலை நீக்கம் செய்திருக்கிறது அவராக வேலையிலிருந்து நிற்கவில்லை என்றது பு.ஜ.தொ.மு.

தொ.உ.ஆணையரிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தையிலேயே ஓராண்டு ஓடிவிட்டது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. எனவே தொ.உ.ஆணையர் சமரச முறிவு அறிக்கை தயாரித்து இருவருக்கும் நகல் வழங்கி வழக்கை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டார்.

தொழிலாளர் நீதிமன்றத்தில்.

தொ.நீதிமன்றத்தில் வழக்கு 2007-ம் ஆண்டு துவக்கத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு வந்த நாளிலிருந்து சரியாக ஓர் ஆண்டு வரை நிர்வாகம் நேரில் வரவே இல்லை. எதிர் மனுதாரர் என்கிற வகையில் பதில் மனுவை போடுவதற்காக கூட வரவில்லை. இழுத்தடிக்கும் நோக்கத்துடன் காலம் கடத்தினார்கள். இவ்வாறு இழுத்தடிப்பது மட்டும் தான் முதலாளிகளுக்கு தெரிந்த ஒரே ராஜதந்திரம். அனைத்து முதலாளிகளும் இவ்வாறு தான் செய்கிறார்கள். விசாரணைக்கு வராமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பதன் மூலம் தொழிலாளியை வறுமையில் உழல விட்டு வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு ஓட வைப்பதற்கான வேலை தான் இது.

ஓராண்டாக வராத ஜேப்பியார் கம்பெனி 2008 ஜூன் மாதத்தில் தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அப்போதும் மனு போட்டதோடு சரி அடுத்தக்கட்ட விசாரணைக்கெல்லாம் வரவே இல்லை. அதன் பிறகு 2010-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளாக விசாரணைக்கு வரவில்லை. அப்போது வழக்கு விசாரணைக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகியிருந்தது !

ஜேப்பியார் எவ்வளவு பெரிய ஆள். ஐந்து ஆண்டுகளாக இப்படியே ஓடிப்பிடித்து ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய பிஸ்தா !

சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய முயற்சி செய்தார்கள். நாங்கள் ஏற்கெனவே ஒரு மனு அளித்திருக்கிறோம் அதில் சில விசயங்களை கூறாமல் விட்டுவிட்டோம், அவற்றையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனவே ஒரு கூடுதல் மனுவை போடுகிறோம் என்று கூடுதல் மனு போட்டார்கள்.

எங்களுடைய முந்தைய மனுவில் அவர் வேலையிலிருந்து தானாகவே நின்றுவிட்டதாக கூறியிருந்தோம் இப்போது கூடுதலாக இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறோம். அவருடைய வேலையில் எங்களுக்கு திருப்தி இல்லை. பேருந்தை ஓட்டும் போது விபத்தை ஏற்படுத்தும் வேகத்தில் (rash driving)  ஓட்டுகிறார், வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதே (அதாவது மாணவர்களையும் ஆசிரியர்களையும் அழைத்து வரும் போது மற்றும் அழைத்து போகும் போது) சாலை ஓரங்களில் வண்டியை நிறுத்திவிட்டு போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்.

இவ்வாறெல்லாம் நடந்துகொண்டதால் எங்களுக்கு அவருடைய வேலையில் திருப்தி இல்லை. மேலும் பல்கலைக்கழக கேன்டீனுக்காக நாங்கள் நடத்திய காய்கறி குடோனிலிருந்து காய்கறிகளையும் திருடியிருக்கிறார். எனவே இந்த அனைத்து காரணங்களாலும் இவரை வேலையிலிருந்து நீக்கினோம் என்று கூடுதல் மனுவில் கூறினார்கள்.

முட்டாள் முதலாளிகள் !

பு.ஜ.தொ.மு தனது வாதத்தில் நிர்வாகத்தின் வாதத்தை பொய் என்று மறுத்து வாதிட்டது. தொ.உ.ஆணையரிடம் கூறிய பதிலுறையில் இங்கே கூறிய காரணத்தை கூறவில்லை. அதன் பிறகு தொ.நீதிமன்றத்திலும் கூறவில்லை. அத்துடன் இரண்டாண்டுகளாக வழக்கு விசாரணைக்கே ஆஜராகாமல் இழுத்தடித்துவிட்டு திடீரென்று ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்து இவை தான் வேலை நீக்கத்திற்கு உண்மையான காரணங்கள் என்று கூறுவது பொய் என்று கூறியது.

இதை மறுத்த நிர்வாகம், இல்லை இதற்கு முன்பே இந்த காரணங்களை கூறியிருக்கிறோம் அதை தொ.உ.ஆணையரும் பதிவு செய்திருக்கிறார் என்று வாதிட்டது. 2006-ல் தொ.உ.ஆணையரிடம் நடந்த சமரச பேச்சு வார்த்தையின் போது இந்த குற்றச்சாட்டுகளை கூறியதாகவும். அந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த போது சமரச அதிகாரி கொடுத்த சமரச முறிவு அறிக்கையில் இந்த காரணங்களை பதிவு செய்துள்ளார் என்றும் கூறி அதற்கு சான்றாக ஓரு கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அந்த கடிதத்தில் வெற்றிவேல் காய்கறி திருடியது உட்பட நிர்வாகம் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டு தொ.உ.ஆணையரின் கையெழுத்திடப்பட்டிருந்தது.

ஆனால் தொ.உ.ஆணையர் பு.ஜ.தொ.மு வுக்கும் ஒரு பிரதியை கொடுத்திருப்பார் என்பதை இந்த முட்டாள்கள் மறந்துவிட்டார்கள். பு.ஜ.தொ.மு விடம் கொடுக்கப்பட்ட மற்றொரு பிரதியில் அவ்வாறு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆக என்ன நடந்திருக்கிறது ? ஒன்பது கல்லூரிகளை நடத்தும் இந்த முட்டாள்கள் தொ.உ.ஆணையரின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து அதில் தமக்கு விருப்பமான குற்றச்சாட்டுகளை எல்லாம் ஏற்றியிருக்கிறார்கள் !

மனுதாரர், எதிர் மனுதாரர் ஆகியோரின் மனுக்கள், கடிதங்கள், ஆணையரின் உத்தரவுகள் அனைத்தும் இரண்டு தரப்புக்கும் வழங்கப்படும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போலி ஆவணம் தயாரித்து வசமாக மாட்டிக் கொண்டார்கள். ஏற்கெனவே ஒரு முறை இதே போன்ற ஒரு முட்டாள்தனத்தை செய்யவிருந்து தொழிலாளர்களுக்கு ’உதவி’ செய்ய வேண்டிய ஆணையர் முதலாளிக்கு உதவியதால் அந்த கடிதம் பு.ஜ.தொ.மு வின் கைகளுக்கு கிடைக்காமல் போனது. அப்படியிருந்தும்  கூட இவர்களுக்கு அறிவு வரவில்லை. மீண்டும் அதே தவறை செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த கடிதம் போர்ஜரி என்பதை அம்பலமாக்க பு.ஜ.தொ.மு மேலும் சில வாதங்களை வைத்தது. இந்த கடிதம் உண்மையானது என்றால் ஏன் முதல் மனுவிலேயே குறிப்பிடவில்லை ? மேலும், தொ.உ.ஆணையர் சமரச முறிவு அறிக்கை கொடுத்தது 2007-ல் இப்போது 2011 கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கடிதத்தை தாக்கல் செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? இதற்கு நிர்வாகத்தால் பதில் கூற முடியவில்லை. கடிதம் போலி என்பது அம்பலமானதால் அந்த முயற்சியை விட்டுவிட்டு அடுத்ததற்கு தாவினர்.

பொய் மேல் பொய்! புகார் மேல் புகார் !!

பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் விட்டுவிட்டு இப்போது வேறு ஒரு புதிய குற்றச்சாட்டை தூக்கிக்கொண்டு வந்தது நிர்வாகம். இவருடைய கட்டுப்பாடில்லாத ட்ரைவிங்கால் ஒரு பெண் பேராசிரியையின் கருவே கலைந்துவிட்டது. மாணவர்களும் அந்த பெண் பேராசிரியையும் இவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றது. அந்த மாணவர்கள் மற்றும் பெண் பேராசிரியையின் பெயரோடு அவர்களிடமிருந்து புகார் கடிதம் வாங்க வாருங்கள் என்று கூறியது பு.ஜ.தொ.மு. வாங்கித் தருகிறோம் என்று கூறியவர்களிடமிருந்து அதற்கு பிறகு எந்த பதிலும் இல்லை.

பு.ஜ.தொ.மு வின் வாதங்கள் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்ததால் அதற்குமேல் நிர்வாகத் தரப்பை அனுமதிக்காமல் நீதிமன்றம் குறுக்கிட்டு தொழிலாளியை விசாரணையின்றி ஏன் வேலையிலிருந்து நீக்கினீர்கள் என்று கேட்டது. அதற்கு இல்லை இல்லை அவருக்கு முறையாக விசாரணைக்கான கடிதம் அனுப்பப்பட்டது அவர் தான் வரவில்லை என்றனர். எப்படி அனுப்பினீர்கள் என்று கேட்டால். விரைவு தபால் மூலம் என்றார்கள். சரி அவ்வாறு அனுப்பியதற்கான இரசீதை ஒப்படையுங்கள் என்றால் இல்லை என்கிறார்கள். பொய் பொய் பொய் அனைத்திலும் பொய்.

முதலில் அவரே வேலையைவிட்டு நின்றுவிட்டதாக கூறினார்கள், பிறகு வேலையில் திருப்தி இல்லாததால் நாங்கள் தான் நீக்கினோம் என்றார்கள். பிறகு ரேஸ் டிரைவிங், போன்டா பஜ்ஜி தின்றார், காய்கறி திருடினார் என்றார்கள். அதற்கு போர்ஜரி வேலை செய்து ஒரு கடிதம் தயாரித்து மாட்டிக் கொண்டார்கள். அதன் பிறகு, விசாரணைக்கு அழைத்தோம் அவர் தான் வரவில்லை அதற்கான கடிதத்தை விரைவு தபாலில் அனுப்பி வைத்தோம் என்றார்கள். இப்போது பேராசிரியையும், மாணவர்களும் புகார் கொடுத்ததாக கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் ஜேப்பியார் தரப்பு இவ்வாறு மாறி மாறி பேசிக்கொண்டிருந்தது எல்லாம் பச்சைப்புளுகுகள் என்பது அனைவருக்குமே அப்பட்டமாகத் தெரிந்தது.

2011-ம் ஆண்டுடன் இரு தரப்பு வாதங்களும் மேற்கண்ட புளுகுகளுடன் முற்று பெற்றது. இனிமேல் நீதிமன்றம் தான் தீர்ப்பளிக்க வேண்டும். இந்நிலையில் நீதிபதி மாற்றலாகி போய்விட்டார். இதன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. மீண்டும் 2012-ம் ஆண்டில் புதிய நீதிபதி வருகிறார். அவர் விசாரணையை மீண்டும் முதலிலிருந்து துவங்கி விரிவாக விசாரிக்கிறார். இவருடைய தலைமையின் கீழ் நான்கு மாதங்களாக நடந்த விசாரணையில் பு.ஜ.தொ.மு மீண்டும் முதலிலிருந்து தனது வாதங்களை வைத்தது அதில் வெற்றிவேல் தரப்பின் நியாயங்களை ஆணித்தரமாக நிரூபித்தது. ஜேப்பியார் தரப்பும் தனது பழைய பொய்ளை ஆரம்பம் முதல் அப்படியே வாசித்தது.

தீர்ப்பு – ஜேப்பியாருக்கு ஆப்பு !

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி கீழ்கண்டவாறு தீர்ப்பளித்தார். வெற்றிவேல்செழியனை நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது சட்டவிரோதமானது. விளக்கம் விசாரணை என்று எதுவும் இல்லாமல் வேலையிலிருந்து நீக்கியிருப்பது செல்லத்தக்கதல்ல. எனவே வேலையிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அவருக்கு முழுமையான பின் சம்பளத்தை வழங்க வேண்டும். சம்பளம் மட்டுமின்றி போனஸ் சீருடை உள்ளிட்டு என்னென்ன சலுகைகள் உள்ளதோ அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் வேலையிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தீர்ப்புகெதிராக மேல்முறையீடு செய்வதாக இருந்தாலும் இவற்றை வழங்கியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

சில எலும்புத்துண்டுகளும் ஒரு சவாலும் !

தோழர் வெற்றிவேல்செழியனை போல டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் பலர். முதலில் அவர்களுக்காகவும் தான் வழக்கு நடந்தது. ஆனால் ஏழு ஆண்டுகள் நடந்த இந்த சட்டப் போராட்டத்தில் அனைவருமே நிர்வாகத்திடம் விலை போய்விட்டனர். ஜேப்பியார் விட்டெறிந்த சில ஆயிரங்களுக்காகவும், லட்சங்களுக்காகவும் துரோகமிழைத்து சரணடைந்துவிட்டனர். ஆனால் வெற்றிவேல் செழியன் எதற்கும் மசியவில்லை. அவரிடமும் தான் பேரம் பேசினார்கள். சொல்லுங்க வெற்றி உங்களுக்கு என்ன வேணும் ? என்ன வேணுமோ அதை வாங்கிக்கிட்டு கேசை வாபஸ் வாங்கிக்கங்க. ஒரு லட்சமா இரண்டு லட்சமா எவ்வளவு வேண்டும் என்று கேட்டது நிர்வாகம். பேரம் பேசியிருந்தால் நான்கு ஐந்து லட்சங்களை கூட வாங்கியிருக்க முடியும்.

ஆனால் அவர் நிர்வாகத்திடம் சவால் விட்டார். யாருக்கு வேணும் உன்னுடைய எச்சில் காசு ? என்னை வேலையிலிருந்து நீக்கிய போது என்ன காரணம் என்று கேட்ட போது என்ன சொன்னீங்க ? அதையெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை, எங்களுக்கு தேவை இல்லைங்கிறதால நீக்கிவிட்டோம்னு சொன்னீங்க. இல்ல சார் என்ன காரணம்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும் என்ற போது ? என்ன கேசு போடப்போறீய உன்னால் என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்க போ என்று சவால் விட்டீர்கள் இல்லையா நான் இப்ப உங்களுக்கு சவால் விடுகிறேன் நான் என்ன புடுங்குறேங்கிறத கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க, சத்யபாமா பஸ்சை மறுபடியும் நான் ஓட்டுவேன். இதே பல்கலைக்கழகத்தில் மறுபடியும் ஒரு நாளாவது நான் வேலை செய்வேன் என்று நிர்வாகத்திடம் சவால் விட்டு காறித் துப்பிவிட்டு வந்தார்.

தற்போது அந்த சவாலில் வென்றிருக்கிறார் வெற்றிவேல் செழியன். கூடவே இருந்த பல தொழிலாளிகளும் சோரம் போய்விட்ட நிலையில், லட்சங்களில் தருகிறேன் என்று ஆசை காட்டிய போதும், ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்த போதும் வெற்றிவேல் மனம் தளரவில்லை. உறுதி குலைந்து போய்விடவில்லை. மாறாக மேலும் மேலும் உறுதியடைந்தார். தற்போது அவருக்கு முழுமையான சம்பளமும், வேலையும் வழங்கப்பட்டிருக்கிறது ஆனால் அவரோ இந்த இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் ஒரு பாட்டாளி வர்க்க போராளியாக வளர்ந்து ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ யின் முன்னணி ஊழியராகிவிட்டார்.

சத்யபாமா உள்ளிட்ட ஜேப்பியார் குழுமங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த போராட்டச் செய்தி மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பு.ஜ.தொ.மு மீதான மதிப்பும் நம்பிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எத்தகைய கோட்டையையும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் அசைத்துக்காட்டுவார்கள். மீண்டும் பல வெற்றிவேல் செழியன்கள் ஜேப்பியாரின் கல்லூரிகளிலிருந்து உருவாகி வருவார்கள் அவர்களும் அங்கே சங்கம் கட்டுவார்கள். அது தொழிலாளர்களின் சங்கமாக மட்டுமல்ல மாணவர்களின் சங்கமாகவும் இருக்கும் அப்போது அனைத்து கிளைகளிலும் செங்கொடிகள் பறக்கும். அப்போது கல்லூரி ஜேப்பியாரின் கைகளில் இருக்காது தொழிலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

_____________________________________

– வினவு செய்தியாளர்.

_____________________________________

ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்! கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு!!

2
ஹாலிவுட்

ஹாலிவுட்

”உங்களுக்குத் தேவை திறமையான பொறியியலாளர், யாரும் நினைத்திராத உருவங்களை வடிக்கும் கணிப்பொறி வல்லுநர், இந்த ஊடகத்தைப் புரிந்து கொண்டு திரைக்கதை வார்க்கும் படைப்பாளி – இது போதும், உலகம் உங்கள் வசப்படும்; ஆயிரம் கோடி டாலர் உங்கள் கூரையைத் துளைத்துக் கொண்டு கொட்டும்” என்கிறார் ஹாலிவுட் படங்களுக்கு ‘ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்’ செய்து கொடுக்கும் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் அதிபர்.

நீல வானத்தைப் பார்த்து விட்டும், அடர்ந்த கானகத்தின் இருளில் பயந்தவாறும் நடித்துவிட்டு, நடிகர்கள் போய்விடுவார்கள். வானத்தில் செவ்வாய்க் கிரகம் வெடிப்பதையும், காட்டிற்குள் டயனோசர் விழிகளை உருட்டுவதையும் கணிப்பொறி மூலம் உருவாக்குகின்ற டிஜிட்டல் – ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வல்லுநர்கள்தான் இன்றைய ஹாலிவுட்டின் நட்சத்திரங்கள்.

ஹாலிவுட் ஃபார்முலா

காதல், குடும்பம், கிராமம், பழிக்குப்பழி, சகோதர பாசம், தேசபக்தி போன்ற 9 ஃபார்முலாக் கதைகள் மட்டும் தமிழ் திரைப்படங்களில் உலவுவதாகச் சொல்வார்கள். ஹாலிவுட் படங்களும் கிட்டத்தட்ட அப்படிதான்.

நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் வில்லனை வீழ்த்தும் கௌபாய், பெல்ட்டில் தொலைபேசி – பேனாவில் துப்பாக்கி – பார்வையினால் எந்தப் பெண்ணையும் படுக்கையில் வீழ்த்தும்  ஜேம்ஸ்பாண்ட், சிலந்தி மனிதன் –வௌவால் மனிதன் – சூப்பர் மேன் போன்ற காமிக்ஸ் நாயகர்கள், மாஃபியா அல்லது தீவிரவாதியை வென்று தர்மம் காக்கும் போலீசு – இவையெல்லாம் ‘ஆக்ஷன்’ படங்கள். கல்லறைப் பேய், டி.வி. பிசாசு, உருகும் மனிதன், டிராகுலா, ஈயாக – சிங்கமாக – கழுதையாக மாறும் மனிதன், வேற்றுக் கிரக வாசிகளுடன் நட்பு – போர், டயனசோர், ஏலியன்ஸ், எந்த காலத்திற்கும் சென்று வரும் தற்கால மனிதன், விண்வெளிச் சாகசங்கள் – போன்றவை ‘அறிவியல்’ படங்கள்! மீதி – குடும்பம், காதல், நகைச்சுவை, பாலுணர்வு போன்ற ‘செண்டிமெண்ட்’ படங்கள். இடம், பொருள், காலம் அறிந்து தனது மூலதனம், தொழில்நுட்பம், அரசியல் மேலாண்மை மூலம் சர்வதேசச் சந்தையைக் குறிவைத்து எடுக்கப்படும் இந்த ‘வகை’ப் படங்களை வைத்துத்தான் உலகின் திரைப்பட ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கின்றனர் ஹாலிவுட்டின் பன்னாட்டு முதலாளிகள்.

தொழில்நுட்பமே கலையாக!

அமெரிக்காவின் ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மாளிகை’ என்றழைக்கப்படும் ‘இண்டஸ்ட்ரியல் லைட் அண்ட் மேஜிக்’ எனும் நிறுவனத்தின் அதிபர் ஜார்ஜ் லூகாஸ். 1977-ம் ஆண்டிலிருந்து இவரால் வெளியிடப்பட்ட “ஸ்டார் வார்ஸ்” வரிசைப் படங்கள் ஹாலிவுட்டிற்குப் புதிய திசை வழியைக் காட்டின. இதன் பின்னர் வந்த ஸ்டார் ட்ரெக், யங் ஷெர்லாக் ஹோம்ஸ், தி அபீஸ் போன்ற படங்களில் முதன்முறையாகக் கணிப்பொறி கிராஃபிக்ஸ், முப்பரிமாண டிஜிட்டல் முறை மூலம் காட்சிகளும், பாத்திரங்களும் உருப்பெற்றன. படத்தொகுப்பில் புதுமையையும், ஒலி – ஒளிச் சேர்க்கையில் துல்லியத்தையும் – வேகத்தையும் கொண்டு வந்தது அவிட், லைட் ஒர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் ‘டிஜிட்டல் எடிட்டிங்’ என்ற புதிய முறை. இதற்காகவே திரையரங்கில் பொருத்தப்பட்ட புதிய ஒலி உபகரணங்கள் பார்வையாளர்களை மயங்க வைத்தன.

இறுதியில் தொழில்நுட்பமே கலையானது. கலிஃபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள ஹாலிவுட் திரையுலகமும், கம்ப்யூட்டர் உலகமான சிலிக்கான் பள்ளத்தாக்கும் இணைந்த கூட்டணியின் ‘சாதனை’ இதுதான். தற்போது அமெரிக்கத் தமிழில் ஓடிக்கொண்டிருக்கும் ஸ்பீல்பெர்க்கின் “ஜூராஸிக் பார்க்: தி லாஸ்ட் வோர்ல்ட்” திரைப்படத்தின் பின்னணியும் இதுதான்.

‘ஜாஸ்’ வரிசைப் படங்களில் மனிதர்களை வேட்டையாடும் சுறாமீனைப் படைத்தபோது ஸ்பீல் பெர்க்கின் வயது இருபத்தேழு. 23 வருடங்கள் கழித்து அவரது படங்களில் வேட்டையாடும் டயனசோர்தான் இடைக்காலத்தில் கலைத்துறையில் அவர் கண்ட பரிணாம வளர்ச்சி.

கற்பனை உருவங்கள், இயற்கை, கனவுகளுக்குப் பொருத்தமான குழந்தைகள் ஸ்பீல்பெர்க்கின் படங்களில் தவறாமல் இடம் பெறுவர். ‘முன்னேறிய மேற்குலக நாகரிகத்தின்’ பார்வையில் மூன்றாம் உலகம் காட்டு வாசிகளாய் இருப்பதால் விரக்தியுற்ற தனது அமெரிக்கக் குழத்தைகளுடன் நட்பு கொள்ளும் தகுதியை வேற்றுக் கிரக வாசிகளுக்கு அளிக்கிறார் போலும் ஸ்பீல்பெர்க்! டயனசோரையும், வேற்றுக் கிரக வில்லன்களையும் வீழ்த்திக் காட்டும் அமெரிக்காவை உலகின் விடிவெள்ளியாகவும், லட்சிய நாடாகவும் மூன்றாம் உலகிற்குக் காட்டுகின்றனர் ஸ்பீல்பெர்க்கும், ஏனைய ஹாலிவுட் இயக்குநர்களும்.

நன்மைக்கும், தீமைக்கும் நடைபெறும் போராட்டத்தில் நல்லது வெல்ல வேண்டும் என்ற அவா, திரையரங்கில் அமெரிக்க ஹீரோக்கள் வில்லனை வீழ்த்தும் போது கைதட்டுகின்றது. இதில் நல்லது எது, கெட்டது எது என்பதை அமெரிக்கர்கள் தீர்மானிப்பார்கள். அமெரிக்க நன்மையின் பிரதிநிகளாக ஆர்னால்டு, ஹாரிசன் ஃபோர்டு, புரூஸ் வில்லிஸ், சில்வஸ்டர் ஸ்டல்லான், மெல்கிப்ஸன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்.

ஒரு படத்தில் எத்தனை நபர்களைக் கொல்கிறார்கள் என்பதை வைத்து இவர்களின் நட்சத்திர அந்தஸ்து உருவாகிறது. நாயகனின் போராட்டத்திற்கு நீங்கள் தார்மீக ஆதரவளிக்க கொடூரமாக ஒரு கொலை இருக்கும். கதையின் வேகத்தையும் கூட்ட அதிவிரைவுத் துரத்தல் காடசியும் இடம்பெறும். இறுதியில் பெரும் குண்டு வெடித்து, கட்டிடங்கள் தகர்த்து அமெரிக்க நன்மை வெற்றி பெற்றதும் மந்திரத்தில் கட்டுண்ட பார்வையாளர்கள் வெறும் வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.

கனவும் நனவும்

கார் சவாரி கூடக் கைகூடாதவர்களை விண்கலத்தில் ஏற்றி வெளியை ஊடுருவி வலம் வரும் வண்ணமயமான விண்வெளி அனுபவம் தாலாட்டுகின்றது. படம் முடிந்து வெளியில் வந்து பேருந்து நடத்துநரிடம் காசை நீட்டும் போதுதான் கட்டண உயர்வு நினைவுக்கு வருகிறது. அழகான மாந்தர்கள், எழிலான இருப்பிடம், உல்லாச வாழ்க்கையை நடத்திக் காட்டும் ஹாலிவுட்டின் சராசரி அமெரிக்க வாழ்க்கை, மூக்கு வடியும் குழந்தைகள், சமையல் பாத்திரம் கழுவும் பெண்கள், வியர்வையில் நாறும் ஆண்களும் கொண்ட நமது நரக பூமியை நினைத்து வெட்கப்படவைக்கிறது; வெறுக்க வைக்கிறது. கணிப்பொறியில் உயிர்பெற்று வரும் விதவிதமான கொடூர வில்லன்கள் ஏற்கெனவே விதியை நொந்து வாழும் நமது வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தன்னிரக்கம் எனும் புதிய பரிமாணத்தைச் சேர்க்கின்றனர்.

அவர்களுடைய நாகரீகத்தின் சின்னங்களான பெப்சியும், கோக்கும் நம் நாட்டின் பெட்டிக்கடை வரை வந்தாயிற்று. இளைய தலைமுறை பாப் கலாச்சாரத்தின் எம். டி. வியும், அமெரிக்கக் கொள்கை பரப்பும் சி.என்.என்-னும் வீடுகளில் குதித்துவிட்டன. தினசரி 4 காட்சிகள் மூலம் நிகழ்த்தப்படும் திரையரங்க அமெரிக்கக் கனவு, தனது பிரம்மாண்டத்தின் மூலம் மெல்ல மெல்ல மூன்றாம் உலக மூளையில் ஊடுருவுகிறது.

அதற்காகத்தான் தொழில் நுட்பம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், டிஜிட்டல் ஒலி. நம்மிடம் இருக்கும் சமூகத் தன்மையை உறிஞ்சி, எல்லையற்று நுகரும் இயந்திரமாக மாற்றி, அதையே ரசனையாக, பண்பாக, வெறியாக மாற்றுவதற்குத்தான் அத்தனை முயற்சிகளும். இருப்பினும், குழந்தைகள் கண்டு களிக்கும் டயனசர் படங்களைப் போய் வலிந்து குற்றம் காணுவதாய்ச் சிலர் எண்ணக் கூடும்.

அதற்கு, தகவல் தொடர்பு- சேவைத்துறையின் ஒரு பிரிவான ஹாலிவுட்டையும் – அதன் எண்ணிலடங்கா துணைத்துறைகளான கேளிக்கைத் தொழில்களையும் வைத்து பன்னாட்டு மூலதனம் நம்மைச் சுரண்டுவதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்டி வைக்கும் மூலதனம்

ஹாலிவுட் படங்களைத் தயாரிக்கும் எம்.சி.ஏ. நிறுவனத்தின் கேளிக்கைத் தொழில்களின் பட்டியலைப் பாருங்கள். திரைப் படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், வீடியோ விளையாட்டு, கணினிப் பொழுதுபோக்கு மென்பொருள், இசை விற்பனை, கேளிக்கைப் பூங்கா, புத்தக விற்பனை, பரிசுப் பொருள் தொடர் கடைகள், ஆடம்பர நுகர்பொருள், கேசினோ கிளப்புகள், 368 திரையரங்குகள், உலகம் முழுவதும் திரைப்பட விநியோகம் என்று… நீண்டு கொண்டே போகிறது. இந்நிறுவனத்தைப் போன்று பாரமவுண்ட், யுனைட்டட் ஆர்டிஸ்ட், வார்னர் பிரதர்ஸ், ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா உட்பட அனைத்து ஹாலிவுட் நிறுவனங்களும் பன்னாட்டு முதலாளிகளின் கையில். ஒரு படம் வெற்றியடைந்தால் முன்னர் கண்ட அனைத்துத் தொழில்களிலும் சரக்காக்கிக் காசாக்குவார்கள்.

ஒரு வருடம் முழுவதும் தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தகம் 300 கோடி என்றால் ஒரு சராசரி ஹாலிவுட் மசாலாவின் செலவு 400 கோடி. வெற்றியடையும் படங்கள் சில ஆயிரம் கோடிகளை வசூல் செய்யும். அற்பத் தடைகளையும் அழித்து, மிரட்டல் மூலம் காட் (GATT) ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, உலக வணிகச் சந்தையில் கேளிக்கைத் தொழில்களின் மூலம் பணம் பறிப்பதற்கு அவர்களுக்கு எந்தத் தடையுமில்லை. எனவேதான் உலகப் பங்குச் சந்தையில் ஆதிக்கம் வகிக்கும் அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட்’ எனப்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைத் தரகர்கள் அடங்கிய மூலதனத் தெரு ஹாலிவுட்டின் கடிவாளத்தையும் கையில் வைத்திருக்கிறது.  ஹாலிவுட்டின் வர்த்தகச் சூதாட்டங்களுக்குத் தரகு வேலை செய்பவர் ஹாலிவுட்டின் பிரபலத் தரகர் மிச்சல் ஓவிட்ஸ்.

இவரைப் போன்று பல தரகர்கள் ஹாலிவுட்டில் அலைகின்றனர். பங்குச் சந்தையின் ஒழுக்கங்களான சூது, வஞ்சகம், கழுத்தறுப்பு, கால் வாருதல் அனைத்தும் அடங்கியதுதான் ஹாலிவுட்டின் பிரம்மாண்டம். பட நிறுவனங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் அனைவரும் இந்த ஒழுக்கத்தின் மூலம் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஹாலிவுட்டும், சிலிக்கான் வேலியும், வால் ஸ்ட்ரீட்டும் வெள்ளை மாளிகையின் பாதுகாப்போடு அமைத்துள்ள இந்த உலகளாவிய சுரண்டல் கூட்டணியில் புதிய வரவு ஸ்பீல் பெர்க் ஆரம்பித்திருக்கும் ‘ட்ரீம் வொர்க்ஸ்’ நிறுவனம்.

பிரம்மாண்டமான டிஜிட்டல் ஸ்டூடியோ கட்டுவது உட்பட அனைத்துக் கேளிக்கைத் தொழில்களையும் விதம் விதமாகத் தயாரிக்க இருக்கும் ஸ்பீல்பெர்க்கின் நிறுவனத்தில் முதலீட்டைக் கொட்டுவதற்கு ஓடி வருகிறார்கள் முதலாளிகள். ”ஸ்பீல்பெர்க்கின் நிறுவனத்தைக் கேள்விப்பட்டவுடனே 2 பில்லியன் டாலரோடு அவரைச் சந்திக்க விரைந்தேன். இன்று வெள்ளிக்கிழமை, மசூதிக்குப் போய்த் தொழ வேண்டும் என்பதால் விமானப் பயணத்தைத் தடுத்து விட்டார் என் தந்தை” என்கிறார் அரபு ஷேக் ஒருவர்.

மசூதி- தொழுகை என்று ஆச்சாரம் பார்க்கும் ஒரு அரபு ஷேக்கிற்கு அவ்வளவு ஆசை என்றால் சுரண்டலுக்கேற்ப மதிப்பீடுகளை உருவாக்கியோ ஒழித்தோ வரும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எவ்வளவு வெறி இருக்கும்?

வானொலிப் பெட்டி கூட வாங்க முடியாத மக்கள் வாழும் நாடுகளுக்கு மத்தியில்தான் ‘ஜூராசிக் பார்க்’ அனுபவத்தைத் தரும் கேளிக்கைப் பூங்காக்களை உருவாக்குகிறார் ஸ்பீல் பெர்க். தலை பெருத்து, வயிறு வீங்கி, கால் சூம்பி நிற்கும் உயிருள்ள ஆப்பிரிக்கக் குழந்தகள் வாழும் உலகில்தான் விண்கலம் அனுப்புவதை விடச் செலவு பிடிக்கும் மனித ரோபோ இயந்திரங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்  கலைஞர்கள். முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் முன்னேறிய நாகரீகத்தின் இலக்கணம் இதுதான்.

ஆக்கிரமிப்புக்குத் துதிபாடி

”அமெரிக்காவின் பேரரசுக் கொள்கை என்பது அதன் வரலாற்றில் செவ்விந்தியர்களை ஒழித்தும், கறுப்பர்களை அடிமைப்படுத்துவதிலும் இருந்து தொடங்குகிறது.” தன் தோற்றத்திலேயே ஆக்கிரமிப்புக் குணத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையைத் தான் தனது தோற்றத்திலிருந்தே பிரச்சாரம் செய்கிறது ஹாலிவுட். இதனால் தான் அமெரிக்க அரசு ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர்களை மானியமாக ஹாலிவுட் திரையுலகிற்கு வழங்குகிறது. பதிலுக்கு, கடந்த 80 ஆண்டுகளில் ஹாலிவுட் செய்திருக்கும் நன்றிக் கடன், திரைமறைவுச் சதிவேலைகள் நடத்தும் ஏவல் நாயான சி.ஐ.ஏ.வின் பணிக்கு ஈடானது.

ரசியப் புரட்சி முடிந்து இளம் சோவியத் அரசு தன் எதிரிகளிடம் போராடிய காலம்; பொதுவுடமைச் சித்தாந்தத்தின் வீரியத்தில் உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உதித்தெழுந்த காலம். ‘ஜனநாயகக் காவலனான’ அமெரிக்க அரசு, ”போல்ஷ்விசத்திற்கு எதிராகவும், புலம் பெயர்ந்தோரையும் – ஏழைகளையும் நாம் எப்படிப் பணக்காரர்களாக மாற்றுகிறோம் என்பதையும் படமெடுங்கள்” என்று ஹாலிவுட்டிற்கு 1921-இல் உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு முன்பேயே கம்யூனிச எதிர்ப்புப் படங்களைத் தயாரித்து வந்த ஹாலிவுட் உலகில், தனது ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தின் மூலம் முதலாளித்துவ வாழ்க்கையின் குரூரத்தையும் அற்பத்தனங்களையும் தோலுரித்து அமெரிக்காவை உறுத்தத் தொடங்கினார் சார்லி சாப்ளின். பின்னர் 2-ம் உலகப் போரில் ரசியாவை ஆதரித்து அவர் செய்த பிரச்சாரத்தையும் வைத்து ‘கம்யூனிஸ்ட் ஆதரவாளன்’ எனக் குற்றம் சாட்டப்பட்டு சாப்ளின் மேல் 10 ஆண்டுகள் வழக்கு நடந்தது. இறுதியில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.

வெள்ளை மாளிகையின் முன் மண்டியிடுபவன்தான் அமெரிக்காவில் கலைஞனாக முடியும். சுதந்திர தேவி சிலையை நியூயார்க் நகரில் பிரம்மாண்டமாக வைத்திருக்கும் அமெரிக்காவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தின் அளவு இதுதான்.

2-ம் உலகப் போரில் 2 கோடி மக்களையும், அளவிலாப் பொருளையும் இழந்து ஹிட்லரை ஒழித்து மனித குலத்தைக் காப்பாற்றியது சோவியத் ரசியாவின் செஞ்சேனை. முதல் உலகப் போரில் தோற்றவர்களுக்கும் வென்றவர்களுக்கும் வட்டிக்குக் கடன் கொடுத்தே சம்பாதித்த அமெரிக்கா 2-ம் உலகப் போர் முடியும் தறுவாயில்தான் கலந்து கொண்டது. ஹிரோஷிமா- நாகசாகியில் சோதனைக்காக அணுகுண்டு போட்டு சில லட்சம் மக்களைக் கொன்றதைத் தவிர அதன் பங்கு அதிகமில்லை. ஆனால் மேலை நாடுகள்தான் ஹிட்லரை வீழ்த்தியதைப் போன்று ஏராளமான சண்டைப் படங்களை பெரும் பொருட்செலவில் எடுத்து வெளியிட்டது ஹாலிவுட். 1950-களில் சோவியத் ஆதரவுடன் காலனிய நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெடித்த போதும் சிவப்பின் மீது காழ்ப்பினைக் கக்கி, ‘அயர்ன் கர்ட்டெய்ன், ரெட் டானுபில், மைசன் லூசன்’ போன்ற படங்கள் வெளிவந்தன.

1960-களின் அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் காலம் வரை நடைபெற்றது வியட்நாம் போர். பல லட்சம் துருப்புக்களை இறக்கியும், வியட்நாம் முழுவதும் நாபாம் தீக்குண்டுகளை வீசியும் மாபெரும் மனிதப் படுகொலை நடத்திய அமெரிக்க இராணுவம் இறுதியில் தோல்வியுற்று நாடு திரும்பியது. தனது 23-வது வயதில் போரில் கலந்து கொண்ட ஆலிவர் ஸ்டோன் போரைப் பற்றித் தயாரித்த திரைப்படமான ‘பிளாட்டூன்’ 1975-ல் வெளியானது. வியட்நாமில் போரிட்டு மடியும் அமெரிக்க இளைஞனின் உளவியல் துன்பத்தைப் பற்றிய படமது. வியத்நாமியர்களைச் சுட்டுப் பழிவாங்கும் அமெரிக்க இராணுவத்தை ஓரளவு சித்தரித்தாலும், ஸ்டோன் இந்தப் படத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் பிரகடனம் ஒன்றும் செய்து விடவில்லை. இருந்தும் இந்தப் படத்தைக் கூடத் தயாரிக்க ஹாலிவுட் மறுத்து விட்டதால் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வெளியிட்டார் ஸ்டோன். தேச பக்தியுடன் போராடிய அமெரிக்க இளைஞர்களைக் கொச்சைப்படுத்தியதாகச் செய்தி நிறுவனங்கள் ஸ்டோனைக் கண்டித்தன.

கலைஞர்களை கம்யூனிஸ்டுகள் ஒடுக்குவதாக கோரஸ் பாடுகின்ற அமெரிக்க தாசர்களும், பேச்சுரிமை- எழுத்துரிமை- பெண்ணுரிமை- கருப்பின உரிமை- சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றில் அமெரிக்கா சாதித்திருப்பதாக ஆங்கிலப் பத்திரிக்கைகளின் நடுப்பக்கத்தில் கட்டுரை தீட்டும் ஆய்வாளர்களும்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

1980-களில் அமெரிக்கா எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு செய்ததோ, அதையெல்லாம் ஆதரித்த சண்டைப் படங்கள் சரமாரியாக வெளிவர ஆரம்பித்தன. 85-இல் சக் நாரிஸ், லீமார்வின் நடித்து வெளிவந்த ‘டெல்டா ஃபோர்ஸ்’ அதில் ஒரு திருப்புமுனை. கதை: லெபனான் தீவிரவாதிகள் ஒரு அமெரிக்க விமானத்தைத் கடத்தி பிரயாணிகளைப் பணயக் கைதிகளாக்குகின்றனர். அமெரிக்க இராணுவத்தின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவான ‘டெல்டா ஃபோர்ஸ்’ ஹாலிவுட் பாணி சாகசங்கள் புரிந்து 600 அரேபிய வீரர்களைக் கொன்று, ஒரு வீரரை மட்டும் இழந்து பணயக் கைதிகளை மீட்கிறது. படத்தைத் தயாரித்த ‘கேனன் பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கு இசுரேல் அரசு 3.6 மில்லியன் டாலரை மானியமாக அளித்து ஜெருசலேத்தில் ஒரு ஸ்டுடியோவையும் கட்டிக் கொடுத்தது. உலக தாதாவின் பேட்டை ரௌடியான இசுரேல் தனது இசுலாமிய எதிர்ப்புக் கொள்கைக்காக ஹாலிவுட்டைக் குளிப்பாட்டுவது இன்றும் தொடர்கிறது.

இதே காலகட்டத்தில் ‘ராக்கி’ என்ற குத்துச் சண்டை வீரராக சில்வெஸ்டர் ஸ்டல்லான் நடித்த படங்களில், ரத்தக் காயங்களோடு முகம் வீங்கிய நிலையிலும்- எதிராளிகளான கருப்பின, ரசிய வீரர்களைப் போராடி வெல்கிறார். இறுதிக் காட்சிகளில் அமெரிக்கக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. இவர் நடித்து வெளிவந்த ‘ராம்போ’ வரிசைப் படங்களில் ரசியர்களையும், வியத்நாமியர்களையும் பந்தாடி. அவர்களின் கொடூரங்களையும் முட்டாள்தனத்தையும், அமெரிக்க வீரனின் வெல்ல முடியாத சக்தியையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகிறார் ஸ்டல்லான்.

ஸ்டல்லான் அமெரிக்க இளைஞர்களின் மாடலானார். ஜீன்ஸ் போட்டு, ஜிம்முக்குப் போகும் ஆறடி அமெரிக்க இளைஞர்களெல்லாம் தம்மை ராம்போவாக நினைத்துக் கொண்டனர்.

இவ்வாறு அமெரிக்க ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஹாலிவுட்டின் கவர்ச்சியான தேசபக்தி நியாயம் சேர்த்தது. கம்யூனிஸ்டுகளையும், வியத்நாமியர்களையும், அரேபியர்களையும் அற்பப் புழுக்களைப் போலக் கொன்று பார்ப்பதில் தங்கள் வக்கிரங்களை ஒளிவு மறைவின்றிக் காட்டினார்கள். ஆனால் இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளின் உண்மைக் குணம் நாம் அறியாததல்ல. நிக்கராகுவாவின் துறைமுகங்களில் கண்ணி வெடி வைத்தும், லெபனான்- ஈராக் கிராமங்களில் டன் கணக்கில் குண்டுகள் வீசியும், பொருளாதாரத் தடையின் மூலம் மருந்தின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கொன்றும், கிரானடா, மெக்சிகோ, ஹெய்தி, குவாட்டிமாலா, டொமினிக்கன், ஹோண்டூராஸ் போன்ற நாடுகளில் தனக்கு ஒத்துவராத ஆட்சிகளை முரட்டுப் பலத்தால் கவிழ்த்தும், இன்றுவரை கியூபாவை அச்சுறுத்தியும் வரும் இந்தக் கயவாளிகள்தான் நியாயவான்களாக, அமைதி விரும்பிகளாக, மாபெரும் வீரர்களாக ஹாலிவுட்டின் படங்களில் வலம் வருகின்றனர்.

ஆக்ஷன் ஹீரோ யார்?

ஹாலிவுட்டின் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒவ்வொரு வியாழனன்றும் தனது புதிய படங்களின் தொகுப்பை அமெரிக்க அதிபரின் பார்வைக்கு அனுப்புகிறதாம். கோவில் திருவிழாவின் முதல் கௌரவம் பண்ணையாருக்குத்தான் என்பது போல. தேர்தல் பிரச்சாரத்திலிருந்து, பதவி காலம் முடியும் வரை அமெரிக்க அதிபரின் ஒவ்வொரு அசைவும் விளம்பர நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. ஆனால் தற்போது வரும் ஹாலிவுட் படங்களில் அதிபரே ஆக்ஷன் ஹீரோவாக வருகிறார். இந்தக் கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது?

‘இன்டிபென்டன்ஸ் டே’ படத்தில் பூவுலகை ஆக்கிரமிக்கும் வேற்றுக் கிரக வில்லன்களை, அதிபரின் தலைமையில் முறியடித்து ஜூலை 4-ல் (அமெரிக்க சுதந்திர தினம்) உலகத்துக்கே விடுதலை வாங்கித் தருகிறார்கள். இதன் பிறகு வெளியான ‘ஏர் போர்ஸ் ஒன்’ படத்தில் ஜெட் விமானத்தைக் கடத்தும் அரேபியத் தீவிரவாதிகளை ஜேம்ஸ்பாண்ட் பாணிச் சாகசம் புரிந்து அதிபர் வெல்லுகிறார். இதே காலத்தில் குதிரையிலிருந்தோ- குளியலறையிலோ விழுந்து நொண்டிக் கொண்டிருந்த பில்கிளிண்டன் இந்தப் படங்களை நிச்சயம் ரசித்திருப்பார்.

பொருளாதாரத்தில் அமெரிக்காவிடம் சரணடைந்த போலி கம்யூனிச நாடான சீனாவைக் கூட ஹாலிவுட் விடவில்லை. தலாய்லாமாவின் வரலாறு, சீனாவை எதிர்த்துப் போராடும் திபெத் போன்ற கதைகளைக் கொண்டு தற்போது ஐந்து சீன எதிர்ப்புப் படங்கள் தயாராகிறதாம்.

மாபெரும் சமுத்திரங்களையும், பலவீனமான அண்டை நாடுகளையும் கொண்ட அமெரிக்காவிற்குத் தற்போது எதிரி என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. எனவே எதிரியை வென்று காட்டியே தேசபக்தியை வளர்த்த ஹாலிவுட், இப்போது தனது வில்லன்களை விண்வெளியில் தேடுகிறது. போராடுகின்ற விண்கல ஆயுதங்களைத் தருவதற்கு ஸ்பீல்பெர்க், காமரூன், லூகாஸ் போன்ற ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வல்லுனர்கள் தயாராக இருக்கின்றனர்.

காலடியில் உலகச் சந்தை

உலக வர்த்தக நிறுவனத்தைத் தோற்றுவித்த பிறகு, மேல்நிலை வல்லரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உலகமய ஆக்கிரமிப்புக்குத் தடையேதுமில்லை. கடந்த பத்தாண்டுகளில் ஹாலிவுட்டும் உலகச் சந்தையைத் தன் காலடியில் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது படைப்புத் தரத்தினால் அல்ல; மூலதன- அரசியல் ஆக்கிரமிப்பினால் மட்டுமே.

இந்தியாவில் 8 ஹாலிவுட் நிறுவனங்கள் கிளைகளைத் திறந்திருக்கின்றன. ”பெரு நகரங்கள் மட்டுமல்ல, போடிநாயக்கனூர் கூட முக்கியமான ஏரியாதான்” என்கின்றார் இந்நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி. ‘லாஸ்ட் வோர்ல்ட்’ தென்னிந்திய மொழிகளில் ஓடுகிறது. ‘ஸ்பீடு’ திரைப்படம் கேரளாவில் 120 திரையரங்குகளில் ஓடியது. இனி வருடத்திற்கு 40 படங்கள் வர இருக்கின்றன.

பாரீஸ் நகரில் ‘யூரோ டிஸ்னி லேண்ட்’ திறக்கப்பட்ட போது ”அமெரிக்கக் கலாச்சாரத்தை அனுமதியோம்” என்று பிரெஞ்சு மக்கள் எதிர்த்தார்கள். இன்று தங்கள் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காமல் ஐரோப்பியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் திண்டாடுகின்றனர். ”ஹாலிவுட்டிற்கு அடுத்தபடியாகத் திரைப்படங்களை ஏற்றுமதி செய்யும் ஹாங்காங்கும் இனி தேறாது” என்கிறார் ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான்.

உலகை வளைத்துவிட்ட ஹாலிவுட் தனது ஃபார்முலாப் படங்களுக்கு ஏற்ற திறமையாளர்களை மட்டும் உலகெங்கிலிருந்தும் கொண்டு வந்து விடுகிறது. கம்ப்யூட்டர் நகரமான சிலிக்கான் வேலியிலும், விண்வெளி மையமான நாசாவிலும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் வல்லுநர்கள் இருப்பது போலத்தான் ஹாலிவுட்டிலும். மூளை உழைப்பிற்கும், சந்தை விற்பனைக்கும் உலகமே அவர்களுக்குக் கடன்பட்டவர்கள் போலும்.

என்ன இருந்தாலும் ஹாலிவுட் படங்களைப் போல் யார் எடுக்க முடியும் என்கிறார்கள் சிலர். குருச்சேத்திரத்தில் பல்வேறு கதைகள் கேட்டும் அசையாத அருச்சுனன், சங்கு சக்கர கதாயுதங்களுடன் கிருஷ்ணன் பிரம்மாண்டமாக விசுவ ரூபமெடுத்துத் தரிசனம் காட்டிய பின்தான் பணிகிறான்; போருக்குச் செல்கிறான்.

”நான் வெல்லற்கரியவன்; பிரம்மாண்டமானவன்; வல்லவனுக்கே வாழ்வு” என்று ஏகாதிபத்தியமும் அதைத்தான் சொல்கிறது. ரத, கஜ, துரக பதாதிகளுடன் அவர்கள் வருகிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்புக்கு முப்படை; சதிக்கு சி.ஐ.ஏ.; துரோகத்திற்குத் தன்னார்வக் குழுக்கள்; பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு ஆறாவது படையாக- ஹாலிவுட்.

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­_________________________________________ 

புதிய கலாச்சாரம், நவம்பர் – 1997.

_________________________________________

கல்லறைக் கருநாகங்கள்! – உண்மைச் சம்பவம்!

6

பாட்டி-ஓவியர்-மருது

ர் நினைவு வந்தாலே பிச்சைக்காரப் பாட்டியின் நினைவும் சேர்ந்தே வந்து விடுகிறது. இதோ, ஒரு ஆண்டுக்குப் பின் ஊருக்கு வருகிறேன். திருநெல்வேலியில் இருந்து திசையன்விளை வந்து, அங்கிருந்து மகிமையின் நகரம் நோக்கி ட்ரக்கர் வண்டில் வந்து கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை பிச்சைக்காரப் பாட்டியின் நினைவு தான். கடைசியாக சென்ற கிருஸ்துமசுக்குப் பார்த்தது தான்.

அவரை ஏன் எல்லோரும் பிச்சைக்கார பாட்டியென அழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் பிச்சையெடுப்பவரல்ல. ஆனாலும் அப்படித் தான் எல்லோரும் கூப்பிடுகிறார்கள்.  அவரது வயது என்னவென்பதும் யாருக்கும் தெரியாது. அவருக்கு 120 வயது என்று ஓரு முறை அகஸ்டின் சொன்னது நினைவிருக்கிறது. அவன் ஒரு பொய் சொல்லி என்பதால் நான் அதை நம்பவில்லை.  ஒரு முறை இந்தக் கேள்வியை பாட்டியிடமே கேட்டு விட்டேன். சுமார் இருநூற்று எழுபத்தி நான்கு சுருக்கங்கள் கொண்ட முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி கொஞ்சம் நேரம் முறைத்துப் பார்த்தாரேயன்றி பதில் மட்டும் சொல்லவில்லை.

அதே போலத்தான் அவரது பெயரும் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது – யாரும் பெயரைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அந்த ரகசியத்தை அம்பலமாக்கியது நான் தான்.  கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது முதியோர் உதவித் தொகைக்காக அரசாங்கத்துக்கு அவர் அனுப்பிய பாரம் ஒன்றை நான் நிரப்பிக் கொடுத்தேன். அப்போது தான் அவரது பெயர் ரோஸ்லின் என்பது தெரிய வந்தது. ஆனாலும் ரோஸ்லின் என்பது அவருக்கு ஒட்டவில்லை. எல்லோரும் பிச்சைக்காரப் பாட்டி என்றே அழைத்தார்கள். அதில் அவருக்கும் பெரிதாக மனக்குறை எதுவும் இருக்கவில்லை.

‘அவர் எங்கேயிருந்து வந்தார்? உறவினர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?’ என்பதெல்லாம் கூட யாருக்கும் தெரியாத ரகசியங்கள் தான். வாத்தியார் தாத்தா நாற்பது ஆண்டுகளாகவே பிச்சைக்காரப் பாட்டியை இந்தப் பகுதியில் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒருமுறை சொன்னார். பிச்சைக்காரப் பாட்டி எங்கள் தெருவில் இருக்கும் எல்லோரது வீட்டுக்குள்ளும் அநாயசமாகச் சென்று வருவார். கீரை ஆய்ந்து கொடுப்பார்; காய்கறி வெட்டிக் கொடுப்பார்; துணி மடித்துக் கொடுப்பார். சில சமயம் பாத்திரம் விளக்கித் தருவார். சின்னக் குழந்தைகள் இருந்தால் பாட்டுப் பாடி தூங்க வைப்பார். என்னைக் கூட அவர் தான் சின்ன வயதில் தாலாட்டினாராம். யார் வீடாக இருந்தாலும் சமயலறை வரை உரிமையோடு சென்று, இருக்கும் சாப்பாட்டை அவரே போட்டு சாப்பிட்டுக் கொள்வார்; யாரிடமும் அனுமதியெல்லாம் கேட்க மாட்டார்.

தள்ளாடித் தள்ளாடி தான் அவரால் நடக்க முடியும். கொஞ்சம் கூன் விழுந்த முதுகு. கைநீட்டிக் காசு கேட்டால் பாவம் கொடுக்கலாமே என்று எண்ண வைக்கும் முதிய தோற்றம். ஆனாலும் அவர் யாரிடமும் கைநீட்டியதில்லை. ஏதாவது வேலை செய்து கொடுத்து விட்டு, கொஞ்ச நேரம் தயங்கி நிற்பார். எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார் – கொடுக்கா விட்டாலும் குறைபட்டுக்கொள்ள மாட்டார். அவர் சுருக்குப்பை எப்போதும் புடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். கோனார் தெருவின் கடைசியில் இருக்கும் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்திருந்தார். நானூறு ரூபாய் வாடகை. பக்கத்து வீட்டிலிருந்து ஒயர் இழுத்து ஒரு குண்டு பல்பு போட்டிருப்பார்.

பிச்சைக்காரப் பாட்டியின் லட்சியம் ஒன்றே ஒன்று தான். ‘சாக வேண்டும்; சீக்கிரமாகச் செத்து விட வேண்டும். தனது சாவுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் வர வேண்டும்; எல்லோரும் அழ வேண்டும். தனது சாவு கவுரவமாய் இருக்க வேண்டும்’ என்பதே அவரது கனவு. வாழ்க்கையின் அர்த்தமே நல்ல சாவில் தான் உள்ளது என்று அவர் சொல்லிக் கொள்வார். இதற்காக அவர் நிறைய பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். மழைக்காலங்களில் அவரது குடிசையினுள் நீர் புகுந்து விடும். அப்போதெல்லாம் எங்கள் வீட்டு வெராந்தையில் படுத்துக் கொள்வார். உறங்கப் போகும் முன் அவர் அழுது அழுது ஜெபம் செய்வதைக் கேட்டிருக்கிறேன்.

“கர்த்தாவே எங்கள் ஏசப்பா ! லாசருவை உயிர்ப்பித்த ஏசைய்யா! ஆவியில் ஏழைக்கே பரலோக ராஜ்ஜியம் என்று சொன்ன கர்த்தாவே! உம் பிள்ளைகளை ஆசீர்வதியுமப்பா..” என்று துவங்கும் ஜெபத்தில் தொடர்ந்து அவருக்குத் தெரிந்த ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி ஆசீர்வதிக்க வேண்டிக் கொள்வார். இறுதியில் தனக்காகக் கேட்க வரும் போது  “ஐயா! ராஜாதி ராஜாவே! நியாயாதிபதியே ! இந்த சரீரத்தினின்றும் எனது ஆவிக்கு ஒரு விடுதலை தாருமப்பா!” என்று கேட்டு முடிப்பார். அதற்கு நான்கு மணி நேரமாவது முழங்காலிட்டே அமர்ந்திருப்பார். இது என்ன கிறுக்குத்தனம் என்று யோசித்திருக்கிறேன். கிழண்டு விட்டால் சாக்காட்டுக்குக் காத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதுதான் நேரில் பார்க்கிறேன். அதிலும் நாலு மணி நேரமா ஜெபிப்பார்கள்? பாட்டிக்கு இது மட்டுமல்ல, இன்னொரு கிறுக்கும் இருந்தது. அது தான் சர்ச்.

அவரைத் தெருவில் காண முடியவில்லையென்றால் பார்க்க வேண்டிய ஒரே இடம் சர்ச் ஆகத்தான் இருக்கும். தினமும் காலையில் சர்ச் திறந்ததும் முதல் ஆளாக அங்கே செல்பவர் அவர் தான். ஞாயிறென்றால் காலை ஏழு மணி முதல் சர்வீசில் தொடங்கி 10 மணிக்கு முடியும் இரண்டாம் சர்வீசிலும் கலந்து கொண்டு தான் வருவார். ஐயர் “சமாதானத்தோடே போய் வாருங்கள்” என்று சொன்ன பிறகும் ஒரு இரண்டு நிமிடங்கள் முழங்காலிட்டு ஜெபித்து விட்டு தான் வெளியேறுவார். ஐ.எம்.எஸ் தினமோ, அறுப்பின் காலப் பண்டிகையோ, அசணப் பண்டிகையோ எதுவானாலும் ஏற்பாடுகள் தொடங்கி அனைத்திலும் முன்னால் நிற்பது பிச்சைக்காரப் பாட்டி தான். தள்ளாத உடலைத் தூக்கிக் கொண்டு சர்ச் வளாகத்தைத் முழுவதும் பெருக்குவார்; ஓரங்களில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்; எதையாவது வேலையை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பார்.

போன கிருஸ்துமஸ் விடுமுறையில் தான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன். ஊருக்குக் கிளம்பும் போது பிச்சைக்காரப் பாட்டி தான் துணி மடித்துக் கொடுத்து, பெட்டி அடுக்க உதவி செய்தார். மனதில் ஏதோ சஞ்சலம் இருந்திருக்க வேண்டும்; முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை.

“ஏம் பாட்டி! என்ன யோசிக்கிய?”

“யெய்யா! மெட்ராசுல நீ இருக்க எடத்துக்கு தந்தி வருமா?”

“தந்தியெல்லாம் அந்தக் காலம் பாட்டி. அதான் இப்ப செல்போன் இருக்கில்லா?”

“ஆமா என்ன… நான் செத்துப் போனா ஊருக்கு வருவியாய்யா?”

“அதான் நல்லா கல்லு கெணக்கா இருக்கியளே.. எங்க சாவு வரப்÷ பாவுது..” சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“திரேகத்துக்கு அழிவு இருக்கேய்யா. நான் செத்துப் போனா, நீயெல்லாம் வந்து அழுவியாய்யா? ஏதுமில்லாதவன்னி வராமப் போயிராதய்யா..”

“என்ன பாட்டி! அப்படியெல்லாம் வராமப் போவோமா? கண்டிப்பா எல்லாரும் வருவோம்.. சரி, இப்ப ஏன் சாவு மேல் திடீர்னு ஆச உண்டாயிரிச்சி?

“கல்ற தோட்டத்துக்கு ரூவா சேர்த்தாச்சிய்யா… இந்த வருசமே செத்துட்டா நல்லதுன்னு பாக்கேன்”

“கல்ற கட்ட துட்டு சேக்கியளா? எவ்வளவு சேத்திருக்கிய?” பதிலேதும் சொல்லாமல் துணி மடிப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டார். அதற்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட வாங்கி விட முடியாது என்று எனக்குத் தெரியும். சென்னை வந்த பின் ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் விசாரித்தேன்.

தன்னை தனியான ஒரு கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது பாட்டியின் ஆசையாம். இதற்காகவே, இங்கும் அங்கும் கிடைக்கும் சொற்ப காசுகளையெல்லாம் மூன்று பெரிய பானைக்குள் போட்டு சேமித்து வந்திருக்கிறாள். நான் ஊருக்குக் கிளம்பியதற்கு முந்தைய நாள் அதையெல்லாம் எண்ணித் தரும்படி டேனியலிடம் கேட்டிருக்கிறாள். மொத்தம் அறுபதாயிரம் வந்ததாம்.

அவ்வளவும் இருபத்தைந்து ஆண்டுகளாய் சேர்த்த காசாம். கல்லறை கட்டவும் மற்ற செலவுகளுக்கும் நாற்பத்தைந்தாயிரம் ஆகுமென்று டேனியல் சொன்னானாம். மீதமிருக்கும் காசில் நாலாயிரத்துக்கு வெடி வாங்கிப் போடும்படி கேட்டுக்கொண்ட பிச்சைக்காரப் பாட்டி, மிஞ்சியதை சர்சுக்கு அளித்து விடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். டேனியல் பெரிய அத்தையின் மகன்; பாட்டியின் சாவு நிகழ்ச்சிக்கு இன்சார்ஜாக பொறுப்பேற்றிருக்கிறான். அதன் பின் வேலை, அலைச்சல் என்று மூழ்கியதில் அநேகமாய் பாட்டியை மறந்தே விட்டிருந்தேன்.

“த்த்தட்ட்டார்..” ட்ரெக்கர் ஒரு பெரும் குழியில் இறங்கியேறியது “சவத்த.. ரோடா போட்றுக்கானுவ? களவானிப் பயலுவ” டிரைவர் சலித்துக் கொண்டார் – நினைவுகள் வெட்டிக் கொண்டு நிகழ்காலத்துக்குத் திரும்பியது. ட்ரக்கர் ஊரை நெருங்கி விட்டிருந்தது. தூரத்திலேயே சர்ச்சின் ஸ்பீக்கரில் இருந்து வழியும் பாடல் வரவேற்றது.

“தாசரே ! இத்தரணியை அன்பாய் ஏசுவுக்குச் சொந்தமாக்குவோம்… வருத்தப்பட்டு பாரம்  சுமப்போரை வருந்தி அன்பாய் அரவணைப்போம்…”

நாளை கிருஸ்துமஸ் என்பதன் அடையாளம் ஏதும் காணப்படவில்லை. வழக்கமாக உற்சாகமாக அலைந்து திரியும் வாலிபர் ஐக்கியத்தைச் சேர்ந்த பையன்களைக் கூட பார்க்க முடியவில்லை. ஐந்து நிமிட நடையில் வீடு வந்தது. வெராந்தையில் ஒரு பாயை விரித்து அதில் தின்பண்டங்களைக் கொட்டி உறவினர்கள் வீடுகளுக்கு பரிமாரிக் கொள்ள சின்னச் சின்ன சம்படங்களில் பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தனர். அம்மா, பெரியம்மா, அத்தை, மயினி இவர்களோடு ஒரு ஓரமாய் பிச்சைக்காரப் பாட்டியும் குறுகி உட்கார்ந்திருந்தார்.

இன்னும் சாகவில்லை. ஆனால் அதை எப்படி அவரிடமே கேட்பது என்று தான் தெரியவில்லை. என்னை ஏறெடுத்துப் பார்த்தவர் அளவான பொக்கைவாய்ப் புன்னகையோடு தலைகவிழ்த்துக் கொண்டு பண்டங்களைப் பிரித்துப் போடுவதில் ஆழ்ந்து விட்டார். காலை உணவை முடித்துக் கொண்டு, பயணக் களைப்பு தீர ஒரு நீண்ட தூக்கம் போட்டு விட்டு மாலை நான்கு மணிக்குத் தான் எழுந்தேன். இப்போது சுட்ட பனங்கிழங்குகளைப் பிரித்துக் கொண்டிருந்தனர். ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. பாட்டியும் இருந்தார். எப்படிக் கேட்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். வார்த்தைகள் ஏதும் சிக்கவில்லை.

இரவு சாப்பிடும் போது அம்மாவிடம் கேட்டேன், “யெம்மா! பிச்சைக்காரப் பாட்டி போன வருசமே சாகப் பேறேன்னு சொல்லிக்கிட்டு அலைஞ்சிதே! இன்னும் நல்லா பெலனா இல்லா இருக்கு!?”

“ஏல! அறிவிருக்கால? ஆள் ஏன் சாவலைன்னா கேப்பா?”

“இல்ல… நா மெட்ராசுக்கு போவச்சுல்ல செத்துப் போயிருவேனாங்கும், தந்தி வருமாங்கும்னு சொல்லிப் பொலம்பிகிட்டு கெடந்தாவளே ! அதான் கேக்கேன்”

“அது இவா கைலயா இருக்கு? ஆண்டவருக்குத் தான் யாருக்கு என்ன எழுதிருக்குன்னு தெரியும்.. நீ இதெல்லாம் போய் அவா கிட்ட கேட்டுக்கிட்டு கெடக்காத! என்ன? ஒரு வருசம் கழிச்சி ஊருக்கு வந்திருக்கா! வந்து நாலு சொக்காரங்க வீட்டுக்குப் போவோம்னு ஒரு எண்ணம் இருக்கா?! யாரு செத்தா, யாரு சாவலைன்னு விசாரிச்சிகிட்டு கெடக்கான், கோட்டிக்காரப் பய” எனக்குப் பதில் சொல்லத் தொடங்கி விட்டு, பன்மையாகப் பேசிக் கொண்டே, திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார்.

அதற்கு மேல் விபரங்கள் ஏதும் பெயராது என்று எனக்குத் தெரியும். ஆனால், அவர் எதையோ மறைக்கப் பார்ப்பது மட்டும் புரிந்தது.

சாப்பிட்டு விட்டு, திருட்டு தம் அடிக்க நண்பர்கள் எல்லோரும் கண்மாய்க்கரை டி.டீ.டி.ஏ பள்ளிக்கூடத்தின் பின்புறமாக ஒதுங்கினோம். டேனியலும், அகஸ்டினும் கூட வந்திருந்தனர். டேனியலிடம் கேட்டேன், “என்னடே ஆச்சி? பாட்டி மூஞ்சில ஒரு சுருத்தே இல்லாம இருக்காவளே? இன்னும் சாக்காடு வரல்லேன்னு ஓவர் கவலையோ?”. டேனியல் எனக்குப் பதில் சொல்லாமல் சர்ச் உபதேசியாரின் மகன் கேப்ரியேலை நோக்கித் திரும்பினான், “ஏல! ஒனக்குத் தான முழு வெவரமும் தெரியும். நீயே சொல்லுல” என்றான்.

கேப்ரியேல் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். பின் மெல்ல வாய் திறந்து சொல்ல ஆரம்பித்தான்.

பிச்சைக்காரப் பாட்டி தனக்குக் கிடைத்த ஐந்து, பத்து ரூபாய்களையும், முதியோர் பென்சனையும் அப்படியே ரூபாய்த் தாள்களாக மூன்று பெரிய பானைகளில் போட்டு வைத்திருந்திருக்கிறாள். டேனியல் கடந்த ஆண்டு அதையெல்லாம் எண்ணித் தரும்போதே அதில் சில ரூபாய்த் தாள்கள் செல்லரிக்கத் துவங்கியதைப் பார்த்துச் சொல்லியிருக்கிறான். இந்தப் பணத்தையெல்லாம் யாரிடம் நம்பிக்கையாகக் கொடுத்து வைப்பது, எப்படிப் பாதுகாப்பது என்று பாட்டி குழம்பியிருக்கிறாள். எங்கள் அம்மாவிடமும், பெரியம்மாவிடமும் கேட்டுப் பார்த்திருக்கிறாள். அவர்களோ நாளை இதில் கொஞ்சத்தையாவது இவர்கள் வாயில் போட்டு விட்டார்களென்று யாராவது சொல்லி விட்டால் என்னவாவது என்று நினைத்துக் கொண்டு, வாங்க மறுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்ற மே மாத வாக்கில் கோயில் குட்டியாரின்  மகனுக்கு இஞ்சினியரிங் சீட் கிடைத்துள்ளது. அதற்காக ஒரு பெரிய தொகையை கல்லூரியில் கட்ட வேண்டியிருந்திருக்கின்றது. அவருக்கு ஒரு ஐம்பதாயிரம் தேவைப்பட்டிருக்கிறது. சர்ச்சுக்கு வரும் யார் மூலமோ பிச்சைக்காரப் பாட்டியிடம் பணம் இருப்பதைக் கேள்விப்பட்ட கோயில் குட்டியார், தானக்கு உடனடியாகப் பணம் தேவையிருப்பதாகவும், அந்தப் பணத்தை இப்போது கொடுத்தால் பின்னால் பாட்டிக்கு ஏதாவது ஆகி விட்டால் மொத்தச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் பாட்டியிடம் கூறியிருக்கிறார்.

பாட்டியும், கோயில் வேலை செய்யும் இவர் ஏமாற்ற வாய்ப்பில்லை என்று எண்ணி அவரிடம் மூன்று பானைகளையும் கொடுத்து வைத்திருக்கிறார். இடையில்  சில மாதங்களுக்கு முன்பு பாட்டிக்குக் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரம் கோயில் குட்டியாரிடம் போய் இந்த முறை நிச்சயம் தான் செத்துப் போவேனென்றும், எந்தக் குறைவுமில்லாமல் சடங்குகளைச் செய்து விடும்படியும் பாட்டி கேட்டிருக்கிறார். அதற்குக் கோயில் குட்டியார், தான் காசு வாங்கவேயில்லை என்று மறுத்ததோடு, வெளியே சொன்னால் கிறுக்குப் பிடித்திருப்பதாகச் சொல்லி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

தனக்கு நடந்த அநியாயத்தைப் பாட்டி போதகரிடமும், சர்ச் கமிட்டி மெம்பர்களிடமும் முறையிட்டிருக்கிறாள். அவர்களோ, கோயில் குட்டியாருக்கு ஏற்கெனவே சம்பளம் குறைவு என்றும், இருந்தாலும் அத்தனை கஷ்டத்தோடும் தேவ காரியத்தில் ஈடுபட்டிருப்பவர் மேல் அபாண்டமாகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்யக் கூடியவரல்ல என்றும் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள். தான் அத்தனை நேசித்த கோயிலைச் சேர்ந்தவர்களே ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் அவர் இப்போதெல்லாம் கோயிலுக்குப் போவதில்லையாம். வெளியே யாரிடமும் சொல்வதும் இல்லையாம். அரசல் புரசலாக விஷயம் தெரிந்து விசாரிப்பவர்களிடமும் ஒன்றும் சொல்ல மறுக்கிறாராம்.

“ஏல! இவ்வளவு நடந்திருக்கே? நீங்க யூத் கமிட்டி பயலுவல விட்டு ஐயர்ட்ட கேக்க வேண்டியது தானல?” கேப்ரியேலிடம் கேட்டேன்.

“அதெல்லாம் கேட்டோம். ஆதாரம் இருந்தா பேசலாம்னு ஐயர் சொல்லிட்டார் டே! அவரு எழுதுத கள்ளக் கணக்குக்கெல்லாம் கோயில் குட்டியாரும், கமிட்டி மெம்பரும் சாட்சியா இருக்கானுவ. பதிலுக்கு இந்தப் பயலுவ என்னத்தக் களவாண்டாலும் அவரு கண்டுக்கிட மாட்டாரு. இது ஒரு விஷயம் தான். காணிக்கை காசுலயே கைய வைக்கானுவ. பிஷப்புக்கே எழுதிப் போட்டாச்சு. அவரு “போதகனைப் பாராதீர் போதகத்தைப் பாரும்”னு பதில் சொல்லுதாரு. அவரு பங்குத்தந்தை எலக்சன்ல ஜெயிக்க இவங்க ஆதரவு வேணும்லா! அதாம் கண்டுக்கிட மாட்டேங்காரு”

நீண்ட நேரம் பேசினோம். சர்ச் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்த விதம் பற்றி நிறைய சொன்னார்கள். அழகிரியின் திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவை மிஞ்சும் வகையில் அது நடத்தப்பட்டுள்ளது. கள்ள ஓட்டு, ஓட்டுக்கு நோட்டு, பூத் கேப்ச்சரிங் என்று ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கிறது. வாய்ப்பிருந்தால் வேறு சமயத்தில் அது பற்றிக் கூட எழுதலாம். பாட்டியின் காசை கோயில் குட்டியார் களவாண்ட விவகாரமும், அதைப் பாதிரியாரும் பிற கமிட்டி மெம்பர்களும் பாராமுகமாய் இருந்து மறைமுகமாக ஆதரித்துள்ள விவகாரமும் கேப்ரியேல் மூலம் சர்ச்சின் வாலிபர் கமிட்டி முழுக்கப் பரவியுள்ளது.

ஏற்கெனவே பல்வேறு முறைகேடுகளால் அதிருப்தியுற்றிருந்த இளைஞர்களை இந்த விவகாரம் ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு போயிருக்கிறது. அவர்கள் இந்த முறை ஒட்டுமொத்தமாக பண்டிகை ஏற்பாடுகளைப் புறக்கணித்து விட்டிருக்கிறார்கள். இது போன்ற முறைகேடுகளைக் கண்டு மனம் வெறுத்துப் போன இளைஞர்கள் இப்போதெல்லாம் அதிகம் சர்ச்சுக்குப் போவதில்லையாம். அதனால் தான் இந்த ஆண்டு கிருஸ்துமசுக்கு முந்தைய இரவு வாலிபர் ஐக்கியக் குழுவினர் நடத்தும் கேரல் ரவுண்டு கூட நடக்கவில்லை என்று கேப்ரியேல் சொன்னான்.

“யாரும் வரல்லேன்னா என்ன! நீயாவது வாடே! உபதேசியார் மகனே வரலேன்னா எல்லோரும் ஒரு மாதிரியா பேசுவாங்க” என்று கேப்ரியேலின் அப்பா கூப்பிட்டிருக்கிறார்.

“அதான் வேதத்துல துன்மார்க்கர் இருக்கும் இடத்தில் இருக்காதேன்னு சொல்லிருக்கில்லா… இந்த உலகத்துலயே சர்ச்சை விட துன்மார்க்கர் அதிகமா இருக்க வேற இடம் ஏதாவது இருக்கா சொல்லுங்க” என்று கேப்ரியேல் முகத்திலடித்தாற் போல் கேட்டு விட்டானாம். உபதேசியாரிடம் அதற்குப் பதிலே இல்லையாம்.

பேச்சினூடாகவே விடிந்திருந்தது. நான் வீட்டுக்குக் கிளம்பினேன். ஸ்பீக்கரில் பாதிரியின் போதகத்தைக் கேட்க முடிந்தது. தெரு முனையில் திரும்பும் போது அம்மா கையில் பைபிளோடு கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். பையன்கள் மூலமாக விசயத்தை நான் அறிந்திருப்பேன் என்று அவருக்குத் தெரியும்.  நான் முழு நாத்திகனாகி பல ஆண்டுகளாகி விட்டது; எனக்கு நம்பிக்கையில்லையென்று தெரிந்திருந்தும் கோயிலுக்கு வரச் சொல்லி ஒரு சம்பிரதாயத்துக்காவது கூப்பிடுபவர் இந்த முறை கூப்பிடவில்லை. தலையைத் தாழ்த்திக் கொண்டே கடந்து போய் விட்டார். வெராந்தையில் பாட்டி படுத்துக் கிடந்தார். விழித்துக் கிடந்தார்; ஆனால் எழுந்து கொள்ளவில்லை. வழக்கமாக எல்லோருக்கும் முன்பாகக் கோயிலுக்கு ஓடுபவர் அன்று எந்த ஆர்வமுமின்றி விட்டத்தை வெறித்துக் கொண்டே கிடந்தார்.

“பாட்டி…”

“…….”

“காசு போச்சின்னு கவலப் படாதீய. நாங்கெல்லாம் இருக்கோம். அப்படியேதாச்சும் ஒன்னு ஆச்சின்னா நல்ல முறையா அடக்கம் செய்வோம்”

“……”

வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உள்ளே செல்லத் திரும்பினேன். பின்னால் விசும்பல் சப்தம் கேட்டது. சர்ச் ஸ்பீக்கரில் போதகம் தொடர்ந்து கொண்டிருந்தது.

“உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும்  சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் – என்று மத்தேயு 5:37 ல் தேவனாகிய ஏசு கிருஸ்து சொல்கிறார்……….”

தூத்தேறி..!

________________________

குறிப்புகள்:

1)            கோயில் குட்டியார் என்பவர் சர்ச்சில் ஒரு உதவிப் பணியாளர் போன்றவர். அவருக்கென்று சம்பளம் உண்டு. அவரது குடும்பச் செலவுகள் அனைத்தும் சர்ச் பணத்தில் நடக்கும்.

2)            வாலிபர் ஐக்கியம் / யூத் கமிட்டி என்பது ஒரு சர்ச்சில் இருக்கும் திருமணமாகாத இளைஞர்களைக் கொண்ட குழு. சர்ச்சின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை இவர்கள் தான் முன்னின்று நடத்துவார்கள்.

3)            சர்ச் கமிட்டி என்பது தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டது.

4)            ட்ரக்கர் / டக்கர் – என்பது பெரிய சைஸ் ஜீப். தென் மாவட்டங்களில் சிறிய கிராமங்களை இணைக்கும் பொதுப் போக்குவரத்து.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

ஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை!

7
ஜேப்பியார்

சத்யபாமா பல்கலைக்கழகம் –

பாறையில் முளைத்த விதை,

ஒரு தொழிற்சங்கம் உருவான கதை!

ஜேப்பியார்ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், SRR, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.

இப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் “மாவீரன்” ஜேப்பியாருக்கு “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்பது போல ஒரு சோதனை! மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.

கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே ‘வாடா! போடா! என்ன மயிரு?’ என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.

ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஜேப்பியாரின் சீமாட்டி கூறும் புளுக்கை வேலையையும், மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் வாங்கிக்கொண்டு வேலை செய்தாலும் பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ, ஈ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்ததற்கான ஆதாரமாகச் சம்பள ரசீதோ கிடையாது. இதுதான் ஜேப்பியார் என்ற போக்கிரி வள்ளலின் சாம்ராஜ்யம்.

“யாரும் எதற்கும் கேள்வியே கேட்க முடியாது என்ற சூழலைத் தகர்த்து, எங்களையும் மனிதனாக மதித்துப் பேசவிடு! என்று நாங்கள் பேசத் துவங்கியதுதான் சங்கத்தின் முதல் வெற்றி” என்கிறார் பு.ஜ.தொ. ஓட்டுநர், மற்றும் டெக்னீசியன்கள் சங்கம், (சத்யபாமா பொறியியல் கல்லூரியின்) செயலாளர் வெற்றிவேல் செழியன்.

சங்கம் உருவானவுடனேயே அதுவரை ‘தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்தான்’ என்பது போலக் குதித்த ‘மாவீரன்’ நாயகன் திரைப்படத்தில் வருவது போல வழியில் போன தொழிலாளியை நிறுத்தி “நான் நல்லவனா? கெட்டவனா?” எனப் புலம்பியிருக்கிறார். சங்கத்தில் இணைந்திருக்கும் ஓட்டுநர் ரமேஷ்  விவரமாகச் சொல்கிறார்.

“ஒருநாள் நான் ஹாஸ்டலில் நின்றிருந்தபோது காரில் வேகமாக வந்த ஜேப்பியார் என்னருகே நிறுத்தி, கண்ணாடியை இறக்கி, ரமேசு நீ சங்கத்துல இருக்கியான்னு கேட்டார். நான் சட்டென்று ஆமாம்னேன். பயப்படாமல் சொன்னதைப் பார்த்து, வந்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ஏன் சங்கத்துல இருக்க? என்றார். ஏதாவது நல்லது நடக்கும்னுதான் இருக்கேன் என்றேன். ஏன் நான் நல்லது செய்யலையா? என்று திரும்பவும் கேட்டார்.”

நான் “அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ், கேண்டீன் வசதி இதெல்லாம் வேணும்னேன்! நீ சங்கத்தை விட்டு வா எல்லாம் தர்றேன் என்றார். சங்கத்தை விட்டு வரமாட்டேன் என்று நான் உறுதியாகச் சொல்லவும் முகம் சிவந்து போய் சர்ருன்னு போயிட்டாரு! இதே முன்னவா இருந்தா ஒரு வார்த்தை பேச முடியாது. இப்ப அவுரு பேசாம போயிட்டாரு” என்று ‘மாவீரனை’ப் புரட்டிப் போட்ட கதையை விவரித்தார்.

“முன்னாடி அவரைப் பார்த்தா நாங்க ஓடி ஒளிவோம். இப்ப சங்கம் ஆரம்பிச்ச பிறகு எங்களப் பார்த்து அவுரு ரூட்ட மாத்திப் போறாரு! இது பெரிய மாற்றம். மொதல்ல இப்பதான் எங்களை மனுசனா மதிக்கிறானுங்க” என்று பெருமிதமாகச் சொல்கிறார் ஓட்டுநர் உத்திராபதி.

பாசிஸ்டுகளும், பணத்திமிர் பிடித்த முதலாளிகளும் தம்மை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற இறுமாப்புடன் வாழ்வது வழக்கம்தான். ஆனால் அவர்களை எளிய தொழிலாளி வர்க்கம் பிடரியில் இரண்டு தட்டுத் தட்டி விழ வைப்பது வரலாறு. பதினெட்டுப் பட்டிக்குத் தீர்ப்புச் சொல்லும் நாட்டாமைக்கு கவட்டைக்குள் நுழைந்துவிட்ட சித்தெறும்பு போட்ட போடில் வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடிய கதைதான் “மாவீரரின்” கதையும். ஆனால் இதற்காகத் தொழிலாளி வர்க்கம் செயல்படுத்தும் உழைப்போ ஒரு காவியத்தன்மை வாய்ந்தது.

ஜனநாயகம் உள்ளிட்ட நற்பண்புகளை முதலாளிக்கு கற்றுக் கொடுக்கும் தொழிலாளிகள்

காவியம் என்றாலே கதாநாயகன், வில்லன், துரோகிகள் இருப்பது போல சங்கம் உருவான கதையிலும் இவர்கள் உண்டு. தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளில் முதலில் கேண்டீனில் வழங்கப்பட்ட தரமற்ற உணவுக்காக முன்னின்று போராடி, சங்கத்தைத் துவக்கியதால் ஓட்டுநராகப் பணியாற்றிய வெற்றிவேல் செழியனை பணிநீக்கம் செய்து, ஒரு வகையில் முழுநேர சங்கப் பொதுச்செயலாளராகப் பதவி உயர்வு வழங்கியது, சத்யபாமா நிர்வாகம்.

“ஆசிரியர்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் ஒரே விதமாகவும், நன்றாகவும் இருந்த கேண்டீனை புது டைரக்டராக வந்த ஜேப்பியாரின் மருமகன் மரிய ஜான்சன் தொழிலாளர்களுக்குத் தனியாகப் பிரித்து, தனிக் கேண்டீனை உருவாக்கி ஆசிரியர் மாணவர் கேண்டீனின் மிச்ச மீதிகளைத் தண்ணீர் ஊற்றித் தரக்குறைவாக அங்கே தருவதைப் பலமுறை சுட்டிக்காட்டியும், ஒரு சம்பவத்தில் (விபத்தில்) ஓட்டுநர் ஒருவரை நாள் முழுக்க போலீஸ் ஸ்டேசனில் வைத்திருக்க, நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததையும் நான் சில தொழிலாளர்களுடன் சேர்ந்து போய் டைரக்டரிடமே நியாயம் கேட்கையில்…

“ஏன் கூட்டம்? பாதிக்கப்பட்டவன் தனித்தனியா வா!” என்று அதிகார தோரணையில் பேசியதுடன் “தொழிலாளி மட்டும் ஒழுங்கா!” என்றார். “நாங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம். நீங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தாருங்கள்” என்று பேசிய பிறகும், எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; நிலைமையில் பெரிய முன்னேற்றமும் இல்லை. இனி சங்கமாகச் சேராமல் எந்தப் பிரச்சினையும் தீர வழியில்லை என்பதை உணர்ந்தோம்.” என்று சங்கம் அரும்பிய சூழலை விவரித்தார் வெற்றிவேல் செழியன்.

“தொடக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்த்து முதலாளித்துவம் எரிச்சலாகிறது; பின்பு அவர்கள் அறிவாளிகளாக மாறும்போது முதலாளித்துவம் அச்சப்படுகிறது” என்றார் காரல் மார்க்ஸ். அதேபோல விழிப்படைந்த தொழிலாளிகளைப் பார்த்து பயந்துபோன நிர்வாகம் முரட்டு நடவடிக்கைகளில் இறங்கியது. அப்போதைய நிலைமையை வெற்றிவேல் செழியன் விவரித்தார்.

“கல்லூரிகளில் சி.ஐ.டி.யு. சங்கம் இல்லை; ஜேப்பியார் கான்கிரீட் நிறுவனத்தில் இருந்த சி.ஐ.டி.யு. மூலம் சத்யபாமாவிலும் ஒரு 40 பேர் இரகசியமாக அதில் வெளியே தெரியாதபடி இருந்தனர்; என்னுடன் பத்து பேர்  பு.ஜ.தொ.மு.வில் இணைந்தோம். இதை நிர்வாகம் மோப்பம் பிடித்து ‘இதுக்கெல்லாம் யார் காரணம்? யார் லீட் பண்றது?’ என்று கேட்க, டிரான்ஸ்போர்ட் இன்ஜார்ஜ் சதீஸ் என்பவர் ஜேப்பியாரிடம் வெற்றிவேல் செழியன்தான் என்று சொல்லவும், உடனடியாக என்னை வேலைநீக்கம் செய்தது நிர்வாகம்.

தொழிலாளர் ஆணையரிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது கூட ஆணையரிடமே வேலைநீக்கத்திற்கு காரணம் சொல்லி தங்களுக்குப் பழக்கமில்லை என்று நிர்வாகத்தரப்பு தெனாவெட்டாகப் பேசியது” என்றவர், “இதைவிடக் கொடுமை சஸ்பெண்ட் ஆனவுடன் முதலில் பிற தொழிலாளிகளின் வற்புறுத்தலால் சி.ஐ.டி.யு.வில் ஒரு பொறுப்பானவரிடம் ஆலோசனை கேட்கப் போனோம்.

அவர் எடுத்த எடுப்பிலேயே “முதலில் காலேஜில் சங்கம் ஆரம்பிக்க முடியாது; உங்களுக்கு யார் கைடு பண்ணது. அதுவும் ஜேப்பியாரை எதிர்த்து ஒண்ணுமே செய்ய முடியாது; அவுரு நெனச்சா உங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டு பஸ்ஸை காண்ட்ராக்ட்ல வுட்டுருவாரு! அவரு பெரிய ஆளுய்யா! நீங்க திடுதிப்புன்னு ஏன் செஞ்சீங்க.. என்று எங்களுக்குப் பீதியூட்டி ஜேப்பியாரைப் பிரமாண்டமாக்கிப் பேசினார்.

நொந்து போன நாங்கள் பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் சுப. தங்கராசுவைச் சந்தித்தோம். அவர் எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு நம்பிக்கையூட்டி “அவனைப் பார்க்கலாம் கம்யூனிஸ்டுகளுக்கு முன்னால ஜேப்பியார் ஒரு தூசி. நம்ப பக்கம் நியாயம் இருக்கு, தொழிலாளி வர்க்கம் இருக்கு,” என்றும் “ஆணையத்தில் வழக்கு போட்டு அவனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வாதாடி, ஒரு தொழிலாளி 480 நாட்கள் வேலை செய்தாலே கன்பார்ம் செய்யணும்னு சட்டமிருக்கு, ஆனா நடைமுறையில் சட்டம் முதலாளிகளுக்கு பாத சேவை செய்யுதுன்னு” பல விவரங்களை எங்களுக்குப் புரிய வச்சார். அவரது வழிகாட்டுதலின்படி மீண்டும் சங்க வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

பு.ஜ.தொ.மு.வின் துணிச்சலான அணுகுமுறையைப் பார்த்த தொழிலாளிகளில் சி.ஐ.டி.யு.வில் இருந்த 40 பேரும் இடம்மாறி இப்போது பு.ஜ.தொ.மு.வில் 80 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னைத் தவிர முன்னணியாளர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்த பிறகும் சங்கம் வழக்கை நடத்தி வருகிறது. முன்னைவிட வெளிப்படையாகத் தொழிலாளர்கள் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்,” என்று வேலை பறி போன சோகமோ, அயற்சியோ இல்லாமல் வர்க்க உணர்வுடன் தொழிலாளர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சங்க வேலையைச் செய்வதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“முன்னெல்லாம் என்ன ஏதுன்னே விவரம் சொல்லாம உம்மேல தப்பு இருக்குன்னு டூட்டி கொடுக்காம மாசக்கணக்குல கூட மரத்தடியில நிக்க வைப்பான். இப்ப சங்கம் ஆரம்பிச்சு போராடுன பிறகுதான் சஸ்பெண்ட் ஆர்டர்னு முறையா தாரான். இப்படி ஜேப்பியாரைத் திருத்தியிருக்கிறதே எங்களுக்கு ஒரு வெற்றிதான்” என்று ஆர்வமுடன் கூறுகிறார் ஓட்டுநர் பரமன்.

தொழிலாளி வர்க்கத்தின் தலையாய உரிமை அதன் சுயமரியாதையே!

காணப் பொறுக்குமோ? ‘கல்வி வள்ளல்’ ஜேப்பியாருக்கு. “ஏண்டா 45 சங்கத்துக்கு நானே தலைவன்; என்னை எதிர்த்தே சங்கமாடா” என்று வீரவசனம் பேசி யாரெல்லாம் சங்கத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இனி கேண்டீனில் சாப்பாடு கிடையாது, சங்கத்தில் உள்ளவன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் உதவியும் கிடையாது, சங்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கூட கிடையாது என்று நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. “போடா கிடையாதுக்குப் பொறந்த கிடையாது, எங்களுக்கு சங்கம் தாண்டா சத்துணவு” என்கின்றனர் தொழிலாளிகள்.

“சோறு போட்டா போடுறான், போடாட்டி போறான். இப்ப டைரக்டரைப் பார்த்து பயமில்லை.  இப்ப நாங்க யாருக்கும் அடிமை இல்லை. எக்ஸ்ட்ரா டூட்டி பாக்கறது இல்லை. இப்ப ஊட்டிக்கு கல்விச் சுற்றுலாவுக்கு வண்டி எடுத்தப்ப கூட காசு தந்தாதான் போவோம்னோம், கொடுத்தான். முன்னாடியெல்லாம் தரமாட்டான். இப்பல்லாம் மிரட்டாமல் சலுகையைப் பேசி விலைக்கு வாங்கப் பாக்குறான். வேலையே போனாலும் சங்கத்தை விட்டுப் போறதா இல்லை…” என்று பிடிவாதமாகத் தனது சங்க உணர்வை வெளிப்படுத்துகிறார் ஓட்டுநர் ரவி.

சங்கத்தில் சேர்ந்ததால் திடீரென ஒருநாள், “உங்களுக்கெல்லாம் கேண்டீனில் உணவு கிடையாது” என மதிய நேரத்தில் நிர்வாகம் அறிவித்தவுடன், பரமன் என்ற ஓட்டுநர் உடனே தனது மோதிரத்தை அடகு வைத்து 48 தொழிலாளிகளும் பசியாற உதவியிருக்கிறார். வர்க்க உணர்வுக்குப் படியளப்பதில் பரமன் ஒரு முன் உதாரணம். ஜேப்பியாருக்கு மோதிரக் கையால் விழுந்த குட்டு இது. “சங்கத்தை விட்டுப் போனவர்கள் இப்பவும் தரக்குறைவா பேச்சு வாங்கிக்கிட்டு இருக்குறாங்க. ஆனால் எங்களை இப்ப மரியாதையா, துப்புரவு தொழிலாளிகளையும் மரியாதையா நடத்துறான்னா காரணம் சங்கம்தான். இப்பதான் லீவு எடுக்குறோம். உரிமையா இருக்குறோம்…” என்று பெருமிதப்படுகிறார் பரமன்.

சங்கத்தில் இணைந்ததால் உடனடியாக எவ்விதப் பொருளாதாரக் கோரிக்கையும் நிறைவேறாத போதும், குறைவான ஊதியத்தில் இருக்கும் கிளீனர் சார்லஸ் என்பவரோ “100 வண்டி போல இருக்கு. அத்தனைக்கும் கிளீனர் கிடையாது. சம்பளத்த விடுங்க வண்டி கழுவ தண்ணி கிடையாது. கேட்டா மழைத் தண்ணியில கழுவுங்கிறான். சாக்கடைத் தண்ணியுல நின்னு காலே புண் ஆயிடுச்சு” என்று கரும்படையாக மாறியிருக்கும் கால்களைக் காட்டியவர்,

“புண் ஆற 11 நாள் லீவு எடுத்தேன். நான் சங்கத்துல இருக்குறதால 11 நாளுக்கு சம்பளத்த புடிச்சுட்டாங்க; ஒரு தண்டனை மாதிரி. பரவாயில்லை. முன்ன எல்லாம் இன்ஜார்ஜ் நவநீதகிருஷ்ணன் பைக்கைக் கூட கழுவணும். இப்ப அடிமை வேலை இல்லை. மரியாதை இருக்கு.. நீ சங்கத்தை விட்டுவா எல்லாச் சலுகையும் தாரேன்! வண்டி ஓட்டலாம் என்று நிர்வாகம் ஆசை காட்டுது… இந்த மரியாதை இருக்குமா? சங்கத்தை விட்டுப் போக மாட்டேன்!” என்று வைராக்கியமாகப் பேசுகிறார்.

சங்கத்தில் உள்ள ஓட்டுநர் சங்கரனோ வர்க்க உணர்வற்ற தொழிலாளிகளுக்கும் உணர்த்தும்படி முன்னேறி விவாதிக்கிறார். “என்ன ஒருத்தன் கேட்டான், நீ யூனியன்ல இருந்து என்ன சாதிச்சே”ன்னு? நான் கேட்டேன் “நீ இல்லாம என்னாத்த சாதிச்சே?” அவன் சொன்னான், “எங்களுக்கு சோறு உண்டு, நிர்வாகம் காசு தருது”ன்னான். அதுக்கு நான் “உனக்கு மரியாதை உண்டா? போடா நாங்க யூனியன் அமைச்சு போராடியதாலேதான் உன்னைத் தன்பக்கம் இழுக்க நிர்வாகம் காசு தருது; அது கூட உனக்கு நாங்க வாங்கிக் கொடுத்த காசுடா”ன்னு சொன்னேன். மூஞ்சத் திருப்பிக்கிட்டு பேச முடியாமல் போயிட்டான்” என்றார்.

மெக்கானிக் விநாயகம், ஜேப்பியார் ஸ்டீல் ஜெயக்குமார் இப்படிப் பலரும் தங்களது இழப்புகளைவிட சங்கத்தால் தாங்கள் அடைந்திருக்கும் மரியாதையான வாழ்க்கையை முன்னிறுத்திப் பேசுகின்றனர். தொழிற்சங்கம் என்பது வெறும் கூலி உயர்வு, போனஸ் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கானது மட்டுமின்றி, அதனுடன் முக்கியமாக ஒரு தொழிலாளி தன்னை ஒரு மனிதனாக உணர்வதும், வர்க்கமாக இணைவதும், அரசியல் சக்தியாகத் தன்னை உயர்த்திக் கொள்வதுமான விடுதலைப் பாதையை நோக்கியது என்பதைத் தங்களது அனுபவமாக நம்முன் வாழ்ந்து காட்டுகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட ஜேப்பியாரோ, நான் ‘மாவீரன்டா’ என்று பஞ்ச் டயலாக் பேசினாலும், தனிமையில் தொழிலாளர்களைச் சந்தித்தால், “என்னை டென்சனாக்கிட்டீங்களே… என் காலேஜீக்கு எதிராவே கூட்டம் போட்டு என்னைத் திட்டிட்டீங்களே… BP ஏறிடுச்சே” என்று பொருமுவதுடன்… கோரிக்கையை முன்வைக்கும் தொழிலாளியிடம் பேசிக் கொண்டே “அப்புறம், சொல்லுங்க சார்!” என்று நக்கலடிப்பதோடு, மேசையில் உள்ள மணியை ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘டிங், டிங்’ என்று அடித்து தெலுங்குப் பட வில்லன் பாணியில் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

போராடிய தொழிலாளர்கள் தமது வியர்வையால் ஜேப்பியாரின் வாயையும் கழுவிச் சுத்தப்படுத்தி இருக்கிறார்கள். வாடா! போடா! என்ற ஜேப்பியாரின் வாயை வாங்க சார்! எனுமளவுக்கு சுத்தப்படுத்தியிருப்பது, துப்புரவுத் தொழிலாளர்களின் முதல் வெற்றி. வேறு வழியில்லாமல் இப்போது ஜேப்பியார் “பேசாமல் சங்கத்துல இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு வா! எல்லாச் சலுகையும் தாரேன்! வாங்க சார்!” என்று புடவைக் கடைகாரர் லெவலுக்கு இரைஞ்சினாலும், தொழிலாளர்களோ, “சம்பள இரசீது கொடு, வருடம் ஒரு போனஸ் கொடு, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கொடு, ஓட்டுநர்களுக்கு மழை வெயிலில் ஒதுங்க இடம் கொடு, வண்டி கழுவ, குடிக்கத் தண்ணீர் கொடு, கேண்டீன் வசதி கொடு.. என்ற அடிப்படையான கோரிக்கைகளை முன் வைத்து சங்கத்தை முன்னேற்றிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவீரனின் மதில் கோட்டைக்கு எதிரிலேயே ஒரு தேநீர்க்கடைக்காரரின் உதவியால் அவரது கடை மாடியில் சங்க அலுவலகத்தை அமைத்து தங்களது வர்க்கக் கோட்டையைக் கட்டி உள்ளனர்.

அமைப்பு இல்லாமல் தொழிலாளிகளுக்கு எதுவுமில்லை

சங்க வேலைகள், போராட்டக் களங்கள் இந்த அனுபவக் களத்தில் தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சிகளைப் பற்றியும், தொழிலாளர் ஆணையம் போன்ற அதிகார வர்க்க அமைப்புகளின் முதலாளியச் சார்பைப் பற்றியும், அரசியல் அமைப்பு பற்றியும் தெளிவான புரிதலைப் பெற்றிருக்கிறார்கள்.

“எல்லாம் திருட்டுப் பசங்க, போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு இங்க இடம், சாப்பாடு, சகல வசதியும் தாராங்க. பிறகு போலீஸ் ஜேப்பியாரோட தவறைக் கேட்குமா? நமக்கு ஒரு பத்து ரூபாய் தரமாட்டான். நலிந்த கலைஞர்களுக்கு உதவி, டிரஸ்ட்ன்னு விஜயகாந்தைக் கூட்டி வந்து லட்சக்கணக்குல செலவு பண்ணி விழா நடத்துறான். விஜயகாந்தும் ஜேப்பியார் கால்ல வுழுவுறான். ஆசி வாங்குறான். எல்லாம் ஒரு கணக்குதான்! இந்த

தா. பாண்டியன், நல்லக்கண்ணு கூட வந்து தனியா ஜேப்பியாரைப் பாத்துட்டுப் போனாங்க! பிறகு 2 நாள் கழித்து சி.பி.ஐ. ஆபீசுக்கு 25 கம்ப்யூட்டர் பாக்சு போச்சு. நானே வண்டியில போயி இறக்குனேன். எல்லாம் பிராடு!” என்று சகலத்தையும் அம்பலப்படுத்துகிறார் ஓட்டுநர் ஜாகீர் உசேன்.

சங்கத்தின் கூர்மையை உணர்ந்த ஜேப்பியாரும் அதனால்தான் “சங்கத்தைக் கலை” என்கிறார். அதன் பலனை உணர்ந்த தொழிலாளிகளோ “சங்கத்தை நுழை” என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கில் செலவு செய்து த்ரிஷாவையும், நமீதாவையும் கல்லூரிக்குக் கூட்டி வந்து குத்தாட்டம் போட முடிகிறது; வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஜேப்பியாரால் குடிநீர் கூடத் தரமுடியாதாம். பாரதிராஜாவையும் கமலஹாசனையும் ஓட்டிவந்து பல லட்சம் செலவு செய்து டாக்டர் பட்டம் தரமுடிகிறது;

பல ஆண்டுகள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்க முடியாதாம். வசூல்ராஜா சினிமாவினுடைய படப்பிடிப்புக்கு இந்தக் கல்லூரி ‘வசூல்ராஜா’ இடம், வசதி செய்து தருவாராம்; உழைக்கும் தொழிலாளர்களுக்கு மழைக்கு ஒதுங்கக் கூட இடம் தர முடியாதாம்.. இந்த உலக அநியாயத்தை உலக நாயகன் தட்டிக் கேட்பாரா?

உண்மையான உலக நாயகர்களான தொழிலாளர்கள் கேட்டதற்கு ஜேப்பியார், “என் பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு கூட தருவேன்; உங்களுக்குத் தரமாட்டேன்” என்றாராம். அது சரி! கமலஹாசன், பாரதிராஜா ‘லெவலுக்கு’ தொழிலாளர்கள் இல்லைதான். மானம், மரியாதையோடு வாழத் தெரிகிறதே! அதனால்தான் ஜேப்பியாரை எதிர்த்து இப்படி ஒரு மனிதக் குரலா? என்று மகிழ்ந்த அந்தக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் “துப்புரவுத் தொழிலாளத் தோழர்களே உங்களுக்கு உள்ள சூடு, சொரணை எங்களுக்கு இல்லை… நாங்கள் இன்னமும் அடிமைகள்… நீங்கதான் எங்களையும் காப்பாத்தணும்” என்று மறைமுகமாகப் பார்த்து ஆதரித்துப் பேசியுள்ளார்.

மாணவர்களும் ஓட்டுநர்களின் பு.ஜ.தொ.மு. சங்கத்துக்கு நிதி உள்ளிட்ட ஆதரவு தந்துள்ளனர். எஸ்.ஆர்.எம். போன்ற பிற கல்லூரி நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், பு.ஜ.தொ.மு. சங்கத்தில் இணைவதற்காகத் தருணம் பார்த்து காத்திருக்கின்றனர்.

கால்களை உதைத்து, கைகளை அசைத்து, கண்களைப் பிசைந்து பாதுகாப்பாக உரிய நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்களை உரிய இடத்தில், உரிய நேரத்தில் சேர்க்கும் பு.ஜ.தொ.மு. ஓட்டுநர்கள், வண்டியை மட்டுமல்ல, வர்க்க நெளிவு சுளிவுகளோடு இலக்கையும் நோக்கி அனைவரையும் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இனி ஒதுங்கி வழிவிட்டுச் சிணுங்குவதைத் தவிர ‘மாவீரனுக்கு’ வேறு வழியில்லை!

_______________________________________________

–  புதிய கலாச்சாரம், ஜூலை’ 2008

_______________________________________________

விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?

21

தா-பாண்டியன்ம்மா விசுவாசத்தில் விஞ்சி நிற்பவர் தா.பா.-வா ஓ.ப.-வா?” என்று  பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு  ஜெயலலிதாவின்  அடிமையாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் வலது  கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன்.

தனது 80-வது பிறந்தநாளையொட்டி, வீட்டுக்‘கே’ வந்து வாழ்த்து  தெரிவித்த ஜெயலலிதாவின் மனிதப்பண்பு, தமிழர் பண்பாடு மற்றும்  இன்னபிற பண்பு நலன்கள் குறித்து அவர் வெளிப்படுத்தியிருக்கும்  புல்லரிப்பைக் காணும்போது, அது எத்தனை சொரிந்தாலும் அடங்காத  அரிப்பு என்று புரிகிறது. சில மாதங்களுக்கு முன் மகளின் திருமணத்துக்கு  வருவார் வருவாரென்று அம்மாவுக்காக மண்டப வாசலிலேயே தா.பா.  காத்திருந்த கதையை நினைவுபடுத்தி தா.பா. வைக் கேலி செதிருக்கிறது  விகடன் இதழ்.

இதற்கெல்லாம் கூச்சப்படுபவரல்ல தா.பா. அவரைக் கேட்டால், அது  போன மாசம்” என்பார்.

பார்ப்பன ஊடகங்களாலேயே நியாயப்படுத்த முடியாத, சட்டசபைக் கட்டிட  விவகாரம், செம்மொழி நூலகம், அண்ணா நூலகம், சமச்சீர் கல்வி  விவகாரம் ஆகியவை தொடர்பான ஜெ-வின் வக்கிரங்களை தா.பா.  நியாயப்படுத்துகிறார். நூறு கருணாநிதி வந்தாலும் ஒரு  ஜெயலலிதாவுக்கு சமமாக முடியாது” என்று கூவுகிறார்.

அம்மா அறிமுகப் படுத்தியிருக்கும் டிலைட் பார் உள்ளிட்ட டாஸ்மாக்  வளர்ச்சித்திட்டங்களை விமரிசித்தால், இங்கே மதுவைத் தடை  செய்தால் வேறு மாநிலத்தில் போ குடிப்பார்கள்” என்று சாக்கனாக்  கடையை ஏலமெடுத்தவர் போல நியாயப்படுத்துகிறார்.

ஜெ ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த மின்சாரம், பால், பேருந்து கட்டண  உயர்வு நடவடிக்கைகள் மூர்க்கத்தனமான தனியார்மயத் தாக்குதல்கள்  என்று உலகத்துக்கே தெரிந்திருந்த போதிலும், இது கருணாநிதி வாங்கி  வைத்திருக்கும் கடனுக்கான வரி” என்று ஜெயலலிதாவின்  பித்தலாட்டத்துக்கு பொழிப்புரை போடுகிறார்.

போலீசின் கொட்டடிக் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், போலீசே நடத்தும்  கொள்ளைகள், பெருகி வரும் கொலை-கொள்ளைகள், கிரிமினல்  குற்றங்கள், எங்கெங்கு நோக்கினும் கோடிக்கணக்கில் நடக்கும்  மோசடிகள், மந்திரிசபை மாற்றம், மின்வெட்டு உள்ளிட்ட நிர்வாக  சீர்குலைவுகள் ஆகியவை குறித்து நாடே காறித்துப்பிக் கொண்டிருக்கும்  போதும், நீங்கள் ஏன் போராடவில்லை என்று கேட்டால், ஜெ ஆட்சியில்  எனக்கு குறையொன்றும் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால்  சொல்லுங்கள்” என்று நிருபரை எதிர்க் கேள்வி கேட்கிறார்.

ஒரு மாநிலங்களவை சீட்டுக்காக ஜெயலலிதாவுக்கு இவ்வளவு  வக்காலத்து வாங்க வேண்டுமா?” என்று பொறுக்க முடியாமல் விகடன்  நிருபர் கேட்க, அப்போதும் தா.பா.வுக்கு ரோசம் வரவில்லை. இந்தக்  கேள்விக்கு நான் ஏதாவது பதில் கூறி முதல்வரின் கோபத்துக்கு ஆளாக  வேண்டும்… அதுதானே உங்கள் விருப்பம்?” என்று நிருபரிடம்  வெடித்திருக்கிறார்.

‘சிரிப்பு போலீசு’ வடிவேலுவைப்போல, தா.பாண்டியனை ஒரு ‘சிரிப்பு  கம்யூனிஸ்டு’ என்று சொல்லலாம். அதற்காக குண்டு கல்யாணம்,  எஸ்.எஸ்.சந்திரன் ரகத்திலும் தா.பா.வை சேர்த்துவிட முடியாது.

கிரானைட்  திருட்டு, கொலை உள்ளிட்ட டஜன் கணக்கிலான  குற்றங்களுக்காக குடும்பத்தோடு உள்ளே இருக்கும் வலது கம்யூனிஸ்டு  எம்.எல்.ஏ, தளி ராமச்சந்திரனை விடுதலை செயக்கோரி அவர்தான்  இயக்கம் நடத்துகிறார். கூடங்குளம் அணு உலை வேண்டாமென்றால்,  அப்பகுதி மக்கள் ஊரைக் காலி செது கொண்டு வேறு இடத்துக்குப்  போகட்டும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமியைப் போலப்  பேசுகிறார். உங்கள் கட்சியிலேயே நல்லகண்ணு அணு உலையை  எதிர்க்கிறாரே” என்று கேட்டால், ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு  இருக்கும்” எகத்தாளமாக பதில் சொல்கிறார். போராடினால் மின்சாரம்  வந்து விடுமா” என்று மின்வெட்டுக்கு எதிராகப் போராடும் மக்களை  நக்கலடிக்கிறார். தா.பா.வின் முந்தைய பேச்சுகளில் வெளிப்படுவது  அடிமைத்தனம் என்றால், இந்த பதில்கள் அனைத்திலும் ஒரு  பாசிஸ்டுக்குரிய திமிர் ததும்புகிறது.

தெலுங்கு சினிமா வில்லனைப் போல ஒருபுறம் பார்த்தால் காமெடி பீசு;  மறுபுறம் பாசிஸ்டு.

தா.பா.வின் கட்சியை கம்யூனிஸ்டு கட்சி என்று ஊர்ல இன்னமுமா  நம்புறாங்க?” என்று வாசகர்கள் கேட்கலாம். என்ன செய்வது,  இருக்கிறார்களே! அப்படி நம்பிக்கொண்டிருப்பவர்கள், தா.பா.வின்  பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.  ஆனால் அக்கட்சியில் உள்ள ரொம்ப நல்லவர்கள்கூட,  அதிர்ச்சியடையவில்லை. கொஞ்சம் சங்கடப்படுகிறார்கள்.

ஜெ.வுக்கு காவடி எடுப்பது பற்றி அவர்களுக்கு ஆட்சேபமில்லை. அதை  நாசூக்காகச் செயாமல், அரோகரா என்று சத்தம் போட்டு, கட்சியின்  டவுசரைக் கழட்டுவதுதான் அவர்களை நெளியச் செகிறது. தா.பா.வின்  குருநாதர் கல்யாணசுந்தரம்தான் எம்.ஜி.ஆருக்கு கட்சி வைத்து, கொள்கை  எழுதி, தொழில் கத்துக் கொடுத்தவர்.

அவரும் தா.பா.வும் வலது கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து தாவி,  இந்திராவின் நேரடி எடுபிடியான யு.சி.பி.ஐ. என்ற கட்சிக்குப் போனவர்கள்.  தா.பா. ராஜீவின் அல்லக்கையாக இருந்தவர். எங்கிருந்தாலும்,  ஜெயலலிதாவுடைய ஐந்தாம்படையின் சிப்பாயாக செயல்படுபவர்.  இதெல்லாம் தெரிந்துதான், அவர் மாநிலச் செயலராக்கப்பட்டார்.

தளி இராமச்சந்திரனின் கிரிமினல் நடவடிக்கைகளோ, அவருக்கும்  தா.பா.வுக்கும் இடையிலான விசேடத் தோழமையோ, ராமச்சந்திரனுக்கு  எம்.எல்.ஏ சீட் விற்பனை செயப்பட்ட கதையோ, சசிகலா  வகையறாக்களுடனான அவரது பாசப்பிணைப்போ உலகம் அறியாத  ரகசியங்களல்ல.

இருந்த போதிலும், தா.பா.-தளி வகையாறாக்களின் நடவடிக்கைகளால்  ‘அதிருப்தியுற்ற’ தருமபுரி மாவட்ட வலது கம்யூனிஸ்டு கட்சியினர்   ராமகிருஷ்ணன் முன்னிலையில் மார்க்சிஸ்டு கட்சியில்  இணைந்திருக்கிறார்கள் என்பதுதான் நகைச்சுவை.

தா.பா. வேலையில் தனிப்பெருமை பெற்றது மார்க்சிஸ்டு கட்சி. இந்திரா  வீட்டு சமையலறைக்கே செல்லுமளவு நான் அம்மாவுக்கு நெருக்கம்  என்று மேடையிலேயே பெருமை பேசியவர் பி.ராமமூர்த்தி.  டி.கே.ரங்கராஜனோ போயஸ் தோட்டத்தின் பூசையறைக்கு  செல்லுமளவுக்கு நெருக்கம். சி.ஐ.டி.யு. சவுந்தரராசனுக்கு போயஸ்  தோட்டத்து கூர்க்காவுக்கு பக்கத்து சீட்டு என்பதை அவரது சட்டமன்ற  உரைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

எனவே, தா.பா. வை எதிர்த்து, தா.பா.க்களின் கட்சிக்கு அவர்கள்  போயிருக்கிறார்கள் என்றுதான் சோல்லவேண்டும். போலி கம்யூனிஸ்டு  கட்சிகள் சந்தி சிரித்துப் போனாலும், நாலு முழம் வேட்டியுடன் நடமாடும்  சில ‘மூத்த’ தோழர்களை, பிராண்டு இமேஜுக்காக ஒரு முகமூடி போலப்  பராமரித்து வருகிறார்கள். ‘பெரியவர் நல்லகண்ணு’ அப்படி ஒரு  முகமூடி. அத்தகைய முகமூடிகளை சுமந்து திரிய வேண்டியதில்லை  என்பதே தா.பா. முன்மொழியும் கொள்கை.

அரசியலிலும் சரி, வாழ்க்கையிலும் சரி எல்லா வகையான சீரழிவுகளும்  சில ‘முன்னோடி’களால் முன்மொழியப்பட்டு, பின்னர் அவை சகஜமான  விசயமாக மாறுகின்றன. பாலியல் வக்கிரங்களையும், விரசங்களையும்  இயல்பான பண்பாடாக சித்தரித்து, புதிய ‘டிரெண்டு’ களை  உருவாக்குகின்ற, கோடம்பாக்கத்தின் துணிச்சலான இயக்குநர்களைப்  போல, தா.பா.வும் ஒரு ‘துணிச்சல்’ பேர்வழி.

மாண்புமிகு இதயதெவம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒரு  அடிமைகள் படையையே வைத்திருக்கிறார். அந்த அடிமைகளுக்குப்  பேசத்தெரியாது. அம்மா பேசத்தெரிந்தவர்களை அடிமைகளாக  வைத்துக்கொள்வதும் இல்லை.

அம்மாவின் செருப்பை வைத்து ஆண்ட பரதனாக இருந்த போதிலும்,  தனது அடிமைத்தனத்தை நிரூபிக்க மேலும் சில அங்குலங்கள்  கஷ்டப்பட்டு வளைவது மட்டுமே பன்னீருக்கு தெரியும். வார்த்தைகளால்  ‘ங‘ ப்போல் வளைந்து அம்மாவுக்கு சலாம் போடும் வித்தையில் தா.பா.  வை ஒருபோதும் அவரால் வெல்ல முடியாது.

ஓ.ப. வை விஞ்சி நிற்பவர், தா.பா. தான் என்று தைரியமாகத்  தீர்ப்பளிக்கலாம். டி.கே.ரங்கராஜனையும், சவுந்தரராசனையும் பட்டியலில்  சேர்த்து, விஞ்சி நிற்பவர் யாரென்று தீர்ப்பளிக்கச் சோன்னால், நம்மால்  முடியாது. சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போகவேண்டும்.

___________________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
___________________________________________________________

பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!

53

மீபத்தில் சொந்த வேலையாக பழனி செல்ல வேண்டியிருந்தது. வேலை முடிந்து ஊர் திரும்புமுன் கொஞ்சம் நேரம் இருந்ததால், நம்ம தண்டபாணி எப்படி இருக்கிறான் என்று ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாமே என்று தோன்றியது. தண்டபாணியின் ‘பின்புறத்தை’ வெகு வேகமாக வெட்டிச் சுரண்டி விற்று வருகிறார்கள் என்றும், கூடிய சீக்கிரம் விடைப்பாக நின்று கொண்டிருக்கும் முருகன் விழுந்து விடக்கூடும் என்றும் வெகு நாட்களாகவே ஒரு செய்தி உலவியதால், ‘தரிசனத்தை’ நான் தள்ளிப்போட விரும்பவில்லை.  மலையையே சுரண்டி விற்கும் காலத்தில் சிலை எம்மாத்திரம்?

பழனி எனும் திருஆவினங்குடி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாம். இருந்த போதிலும் வருமானத்தில்  இதுதான் முதல் இடமாக இருக்கும். இங்கே முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.

நடைபயணமாக அரும்பாடு பட்டு வரும் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலிக்கிறாரோ இல்லையோ, நோயை மட்டும் தவறாமல்  அளிக்கிறார்.  சுகாதாரக் கேடுகள் மலிந்த நகராட்சிகளுக்குள் ஒரு போட்டி வைத்தால், பழனி அன் அப்போஸ்டில் ஜெயித்து விடும் – அத்தனை சிறப்பு. அதுவும் தைப் பூசம் மற்றும் பங்குனி உத்திர நாட்களில், ஊரே பஞ்சாமிர்தம் தான்.

முன்பெல்லாம் பழனி படிக்கட்டுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்திருந்தது. தொழில் போட்டி என்று வந்து விட்டால் பிச்சைக்காரனாவது, முருகனாவது – தூக்கி வீசியெறிந்து விட்டார்கள் போலத்தெரிகிறது பழனி கோயில் பார்ப்பனர்கள். நான் சென்றிருந்த போது வரிசையில் நிற்காமல், சிலர் மட்டும் பவிசாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர், கூடவே ஒரு அர்ச்சகரும்.

வரிசையில் முன்னே நின்று கொண்டிருந்தவர் சலித்துக் கொண்டார். “ச்சை.. எங்களையெல்லாம் பாத்தா மனுசனுகளாவே தெரியலையா இவனுகளுக்கு?” ஆமோதிப்பிற்காகத் என்னைத் திரும்பிப் பார்த்தவர், எதிர்பார்த்தது கிடைத்ததும் தொடர்ந்தார். “இந்த நாயிங்க தானுங்க முருகனையே சொரண்டித் தின்னு போட்டானுக” ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த சேதிதான்.  இருந்தாலும், மீண்டுமொரு முறை உள்ளூர்க்காரரின் வாயினால் கேட்க சுவையாக இருந்தது.

பழனி முருகனின் சிலை போகர் எனும் சித்தரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷானக் கட்டு என்று சொல்கிறார்கள். இந்த நவபாஷானம் தீராத நோயையெல்லாம் தீர்க்குமென்றும், இளமை கூடும் என்றும் பல்வேறு கதைகளைச் சொல்வார்கள். 1980களில் இந்தப் புரளிகள் மர்மக் கதை போல மிகப் பிரபலம். அதனை எடுப்பதற்கு இந்த ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்த பார்ப்பனப் புரோகிதர்கள், முருகப்பெருமானின் பின்புறத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி எடுத்து  அரசியல்வாதிகளுக்கு படையல் வைத்து விட்டதாகவும்,  அவ்வாறு முருகனைக் கூறு போட்டதில் ஆர்.எம்.வீ.க்கு கொஞ்சம் பெரிய ‘பீசாக’ கிடைத்தது என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.. வட்டக் குதத்தை வடிவேல் காக்க..  நகநக நகநக நகநக நகென.. டிகுடிகு டிகுடிகு டிகுகுண டிகுண..” என்று சூலமங்கலம் சகோதரிகள் குரலில் கந்தர் சஷ்டி கவசம் என் காதில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

வழியும் வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே நண்பர் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.  அர்ச்சனைத் தட்டுகளை எடுத்துச் செல்ல 150 ரூபாய் வரை கட்டணமாம். அதில் தேங்காயை ஸ்பெஷலாக உள்ளே எடுத்துச் சென்று, பின்னர் பக்தர்களுக்குத் தனியே வழங்குவதற்கு தனி கமிசனாம். சாமிக்கும்— பக்தனுக்கும் இடைத்தரகராக அர்ச்சகர் என்றால், அந்த இடைத்தரகருக்கும் பக்தருக்கும் இடையில் இன்னொரு தரகராம்.

ஒரு வழியாக வரிசை முன்னேறியது. பக்தர்களின் முகங்களிலோ பரவசம், பக்தி, பயம், ஏக்கம், ஏமாற்றம், துன்பம், எதிர்பார்ப்பு, ஆசை என்று பல்வேறு பாவங்கள்; தட்டேந்தி நிற்கும் பார்ப்பனர்களின் முகங்களிலோ ஒரே பாவனை தான் – அது எரிச்சல் கலந்த கடுகடுப்பு. தட்டில் காசு போட்டவர்களுக்கு மாத்திரம் திருநீரை வீசினார்கள். அதிலும் பத்து ரூபாய்களுக்கு மேல் போடுபவர்களுக்கு சின்னச் சின்ன தாள்களில் மடிக்கப்பட்ட சிறிய விபூதிப் பொட்டலங்களை விட்டெறிந்தனர்.

பக்தர் ஒருவர், அர்ச்சகரின் பைக்குள் கையை விட்டு விபூதி பாக்கெட்டுகள் சிலவற்றை லவட்டி விட முடியுமா என்று முயற்சித்தார். பழனிக்கே பஞ்சாமிர்தமா? சுதாரித்துக் கொண்ட அர்ச்சகர் பையை இறுகப் பற்றிக் கொண்டே லோக்கல் மதுரைத் தமிழில் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார். தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் திகைத்துப் போனார்கள்.

வெளியே வரும்போது, ஒரு சின்னப் பெண் கையிலிருந்த விபூதியை வாயில் போடச் சென்றாள்.  வரிசையில் நம்மோடு பேசிக் கொண்டிருந்தவர் பதறிப்போய் அந்தப் பெண்ணின் கையைத் தட்டி விட்டார்.  “பாப்பா இத வாய்ல போட்றாதம்மா, நல்லதில்லே” என்றபடி நம்மை நோக்கித் திரும்பியவர், “சுத்தக் கலப்படம் சார்” என்றார்.

“என்னாங்க சொல்றீங்க? இது சாம்பல் தானே?”

“இல்லீங்க, இதெல்லாம் வீணாப் போற காகிதக் கூழில் கெமிக்கல் கலந்து தயாரிக்கறாங்க” என்றவர், கையிலிருந்து நழுவப் பார்த்த பஞ்சாமிர்த டப்பாவை பத்திரமாய் பைக்குள் போட்டுக் கொண்டார். அதன் மூடி லேசாகப் பிளவு பட்டிருந்தது. நான் பார்ப்பதை கவனித்துவிட்டார்.

“இது மட்டும் எப்படிங்க ஒரிஜினலா இருக்கும்? இதுவும் போலி தான்” என்றவர், “ஆனா ஒரிஜினலை விட இது கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்” என்றபடி கண்ணைச் சிமிட்டினார்.

ஆச்சர்யமான எனது பார்வையைக் கவனித்தவர், “அட, ஒரிஜினல்ல புழுவா நெளியும். அதுக்கு இது பரவாயில்ல தானே?” என்றார்.

பேசிக் கொண்டே வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். தரையிலும், படிக்கட்டுகளிலும் உயர்தர கிரானைட் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. “இது மதுரையின் எந்த மலையாக இருக்கும்? இந்த பழனி சாமிக்கு, அந்த பழனிச்சாமி கொடுத்த லஞ்சமாக இருக்குமோ” என்று யோசித்துக் கொண்டே இறங்கினேன்.

கூட வந்தவர் அதற்குள் நன்றாக நெருக்கமாகியிருந்தார். பழனி பஞ்சாமிர்தத்துக்கு அடுத்தபடி சித்தர்களுக்குத்தானே புகழ் பெற்றது! சாக்கடை சித்தர்னு ஒரு சித்தராம். கடந்த 30 ஆண்டுகளாக சாக்கடை நீரைக் குடித்து, அதிலேயே குளித்து வரும் அந்தச் சித்தரிடம் அடி வாங்கினால் நல்ல பலன் இருப்பதாக நம்பி பக்தர்கள் சாமியாரை அடிக்கச் சொல்லி உடம்பை காட்டுவார்களாம். சமீபத்தில் கோவையில் இருந்து வந்த ஒரு தொழிலதிபரை சாக்கடை சாமியார் அறைந்ததில் அவருக்கு காது செவிடாகி விட்டதாம்.

ஒரு சித்தர் காறித் துப்பினால் நன்மை விளையுமாம்; இன்னொருவரிடம் கெட்ட வார்த்தையால் ஏச்சு வாங்கினால் குலம் விருத்தியடையுமாம். ஒருவர் கஞ்சா சாமியாம்; அவரிடம் குறி கேட்க வேண்டுமானால் கஞ்சா படைக்க வேண்டுமாம். சற்று தூரத்திலேயே கஞ்சா விற்பனையும் ரகசியமாய் நடந்து கொண்டிருந்தது. பல்வேறு ‘சித்தர்களின்’ மகாத்மியங்களை நண்பர் சொல்லச் சொல்ல நாராசமாய் இருந்தது. கடைசியில் பொறுமையிழந்தேன்.

“ஏங்க, பீ தின்னி சித்தர்னு எவனும் இல்லீங்களா?” என்றேன். துணுக்குற்றுப் போய், ஒரு சங்கடமான சிரிப்புடன் விடைபெற்றுக் கொண்டார்.

“நாத்திகர்களான நீங்கள் எங்கள் மனதைப் புண்படுத்துவது போலப் பேசுகிறீர்கள்” என்று எனது ஆத்திக நண்பர்கள் குறைபட்டுக் கொள்வதுண்டு.  உண்மையில் ஆத்திகர்களையும், பக்தர்களையும் புழுவினும் கேவலமாக மதிப்பதும், அவர்கள் உணர்வுகளைப் புண்படுத்துவதும், அவர்கள் பக்தியைக் கொச்சைப் படுத்துவதும் யார் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஒரு முறை பழனி கோயிலுக்குச் சென்று வரலாம்.

அப்புறமும் திருந்தாதவர்கள், கந்தர் சஷ்டி கவசத்தில் ஒரே ஒரு வரியை திருத்திக் கொள்ளலாம்.

“சூடு சொரணை சுயமரியாதை..
பக்கப் பிளவை படர்தொடை வாழை..
எல்லாப்பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக் கருள்வாய்”

_____________________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012

_____________________________________________________________

பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?

41

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 23

இந்நாட்டில் ஏசு கிறிஸ்து, முகமது நபி பிறந்த தினங்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாரதத்தின் தேசிய புருஷர்களான ஸ்ரீராமர் (ராம நவமி), ஸ்ரீகிருஷ்ணர் (கோகுலாஷ்டமி) பிறந்த தினங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு மறுக்கிறது.

இந்து முன்னணியின் இந்துக்களுக்கான கோரிக்கைகளில் ஒன்று.

காவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இரண்டிற்கு மட்டும் விடுமுறை கோருகிறார்கள். கல்கி அவதாரம் எப்போது பிறக்கும் என்பது தெரியாததால், ஏனைய ஏழு அவதாரங்கள், அப்புறம் சிவன்,  பிரம்மா அவர்கள் மனைவிமார்கள் – வைப்பாட்டிகள், நேரடிக் குழந்தைகள் – கள்ளக் குழந்தைகள், அவர்களின் பேரன் – பேத்திகள், மொத்தத்தில் முப்பது முக்கோடி தேவர்களையும் தேசிய புருஷர்களெனக் கருதினால், விடுமுறை அளிக்க 365 நாட்கள் போதாது. போதும் என்று வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் கொழுக்கட்டை, அப்பம், பணியாரம், வடை, முறுக்கு, சுண்டல், அவல், பொரி, கடலை, பூசை – புனஸ்காரங்கள் என்று குஷாலாகக் காலம் தள்ளலாம். தற்சமயம் அவாளின் ஆட்சி நடைபெறுவதால் உடனே இதை அமலுக்குக் கொண்டு வர என்ன தடை?

மைய அரசின் விடுமுறைகளில் முசுலீம்களுக்கு ரம்சான், பக்ரித், மொகரம், மிலாது நபி நான்கும், கிறிஸ்தவர்களுக்க கிறிஸ்துமஸ், புனிதவெள்ளி என இரண்டும் மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய விடுமுறைகளில் பெரும்பங்கு இந்து மதப் பண்டிகைகளுக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. மகர சங்கராந்தி, சித்திரை – யுகாதி வருடப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி – ஆயுத பூசை, விஜய தசமி, தீபாவளி,  கார்த்திகை போன்றவை மைய அளவிலும், இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம், ஹோலி, ரக்ஷாபந்தன், பொங்கல், சூரசம்ஹாரம், ஆடிவெள்ளி, புரட்டாசி சனி, பங்குனி உத்திரம், கும்பமேளா, குடமுழுக்கு, மகாமகம், தேரோட்டங்கள் போன்றவை மாநில, உள்ளூர் அளவிலும் விடுமுறை நாட்களாக இருக்கின்றன.

எனவே எல்லா மாநிலங்களிலும் உள்ள இந்துப் பண்டிகை விடுமுறை தினங்கள் இருபதுக்கும் மேல் வருகிறது. இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி இரண்டும் ‘விருப்பப்பூர்வ விடுமுறை தினங்கள்’ என்ற பட்டியலில்  மறைமுகமாக மைய விடுமுறை தினங்களாக உள்ளன. பார்ப்பன மேல்சாதியினர்தான் இந்தப் பண்டிகை விடுமுறைகளைக் கொண்டாடுகின்றனர். இத்தகைய இந்துப் பண்டிகைகளில் தீபாவளி, பொங்கலைத் தவிர வேறு எதையும் பெரும்பான்மை இந்துக்கள் (சூத்திரர்கள், பஞ்சமர்கள்) கொண்டாடுவதில்ல. அவர்கள் கொண்டாடுகின்ற சுடலைமாடன், மதுரை வீரன், முனியாண்டி, இசக்கியம்மன் விழாக்களுக்கு விடுமுறை இல்லை. காரணம் அவை பார்ப்பன எதிர்ப்பு வரலாறுகள்.

புராணக் கடவுளர்களான இராமனையும், கிருஷ்ணனையும் ‘தேசிய புருஷர்கள்’ என்று பொருள் மாற்றி நாட்டு மக்களது தலைவர்களாகச் சித்தரிப்பது இந்து மதவெறியாளர்களின் சதியாகும். இருவரும் கோவில்களில் கும்பிடப்படும் கற்பனை உருவக் கடவுள்கள்தான். மேலும் இவ்விருவரையும் புராணப் புரட்டுக்களின் படி ‘உண்மையான’ அரசர்கள் என வைத்துக் கொண்டாலும் அவர்கள் சாதாரண அரசர்களேயன்றி முன்னுதாரணமான பண்புகளைக் கொண்ட தேசிய நாயகர்களல்லர்.

இதுபோக பார்ப்பனப் பண்டிகைகளின் ‘வரலாற்றுக் கதை’களைப் பாருங்கள். அனைத்தும் தேசிய, இன, பழங்குடி, மொழி, சாதி, பெண்கள் மீதான அடக்குமுறையைத்தான் கொண்டிருக்கின்றது. திராவிட ‘அசுரர்களை’க் கொன்றதைக் கொண்டாடத் தீபாவளியும், விஜயதசமி பழங்குடி மக்களை கொன்றதற்காகவும், ரக்ஷாபந்தன் பெண்கள் சாகும் வரை அடிமையாக இருப்பதற்கும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் பார்ப்பனியத்தின் ஆகப் பெரும்பான்மையான பண்டிகைகளை (பொங்கல் போன்றவை தவிர) கொண்டாடவே கூடாது என்கிறோம். மாறாக பார்ப்பன இந்துமத எதிர்ப்பு முன்னோடிகளான புத்தர், சித்தர், நந்தன், ஏகலைவன் இன்னபிற தலைவர்களைக் கொண்டாடலாம்.

அதேபோன்று காலனிய, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டச் சம்பவங்களான 1857 சுதந்திரப் போர், ஜாலியன் வாலாபாக், 1905 வங்கப் பிரிவினை, 1942 மக்கள் போராட்டம், தெலுங்கானா – கீழ்த்தஞ்சை விவசாயப் போராட்டங்கள் போன்றவற்றையும், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் நாட்களையும் கொண்டாட வேண்டும். அதேபோன்று தாழ்த்தப்பட்ட, முசுலீம் மக்கள் மீதான படுகொலைகள் நினைவு கூறப்பட வேண்டும்.

மனிதகுல வரலாற்றில் அந்தந்தக் கால பிற்போக்கு விஷயங்களைத் தளராத ஆற்றலுடன் போராடி வென்ற மக்களின் போராட்டங்களையும், தலைவர்களையும் மனிதகுலப் பண்பாட்டின் மைல் கற்களாக நினைவு கூறுவதுதான் சரி. அவ்வகையில் பார்ப்பனப் புராணப் புரட்டு, அடிமைத்தனப் பண்டிகைகளையும் மொத்தத்தில் எல்லா மதப் பண்டிகைகளையும்  – அவற்றுக்கான விடுமுறைகளையும் இரத்து செய்வதே சரி.

– தொடரும்

__________இதுவரை____________

எம்.எல்.ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்!

8
எம்.எல்.ஏ கணேசன்
எம்.எல்.ஏ கணேசன்
எம்.எல்.ஏ கணேசன்
எம்.எல்.ஏ கணேசன்

ப்பவும் போல, நைட்டெல்லாம் கரண்டு இல்லாம, கொசுக்கடியா தூக்கமும் இல்லாம, குழந்தைகளின் அழுகையோடு பொழுது விடிந்தது. (10-11-12) “சனிக்கிழமைக்கும்  ஸ்கூல்” என்று குழந்தைகள் புலம்பிக் கொண்டே பள்ளிக்கு கிளம்பியது. அப்போது தெருவிலிருந்து பலமான குரல்கள்..

“ஜெயா, ஜெயா சீக்கிரமா வா…. மனு ஒண்ணு எழுதணும்….. வாயேன்….”

அதற்கு, “ஏன்… ஏற்கெனவே பல மனுக் கொடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்ல… திங்கட்கிழமை தானே மறுபடியும் மனுக் கொடுக்க கலெக்டர் ஆபிசுக்கு போலாமுனு இருக்கோம்.  இப்ப என்ன….?” என்று  பதில்.

“இல்ல….. கருக்குப்பேட்டைக்கு ரேஷன் கடை திறக்க எம். எல். எ. வாலாஜாபாத் கணேசன் வர்றாராம்…. அவர் கிட்ட நேரடியா மனுக் கொடுப்போம்….. நகர்ல இருக்கிற பொம்பளங்க, ஆம்பிளைங்க, பசங்க என எல்லாருமா போய் பார்க்காலம்.  மனு  கொடுக்கலாம்” என்றனர்

“சரி, குழந்தையை பள்ளிக்கூடம் அனுப்பிட்டு மனு எழுதுறேன்… நீங்க ஆளுங்களை தயார் படுத்துங்கப் போலாம்….”என்று பதில்குரல்.

குறைந்தது இது, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கைக் கொண்ட மனுவாதான்   இருக்கும்… அப்போது, இட்லி வாங்க, பக்கத்துவீட்டுக்கு, வந்த அம்மு, “அக்கா, இப்ப கொழந்தைகளுக்கு கொசு கடிச்சி, உடம்பெல்லாம் கொப்பளமா இருக்கு, அதையும் சேர்த்து எழுது, பள்ளிக் கூடமும், பால்வாடியும் பக்கத்திலிருக்கிறதையும் குறிப்பிட்டு எழுது, கொழந்தையை கூட்டிக் கொண்டு வரேன். எல்லாருமா போய் கொடுக்கலாம்.” என்றார்.

மனு எழுதியவர், பெண்களிடம் கையெழுத்து வாங்க வெளியில் சென்று பார்த்தால், பாதிப் பெண்களை காணவில்லை. எங்க போய்ட்டாங்க…. என்று விசாரித்ததில், – கரண்ட் இல்லாததால, பட்டு தறி  நொடிஞ்சிப் போய்,குறைந்த வருமானத்துக்கும் வழியில்ல.. இதைப் பயன்படுத்தி – என். ஜி. ஓ. க்கள் வட்டி கடை விரித்து, “நாணயமாக திருப்பி செலுத்துவது எப்படி?” என்று பாடம் நடத்தி,  கடன் தருகிறார்கள்.  பெண்கள் அங்கு இருந்தனர்.

அங்கிருந்து அனைவரும்  கிளம்பினோம். மனுவுடன்..

கொப்பளத்தோடீருந்த குழந்தைகளையும் தூக்கிச் சென்றோம். அங்கு ரேஷன் கடைய திறந்துவிட்டு, ‘அம்மா’ புகழ் பாடிக்கொண்டிருந்தார், எம்.எல்.எ. வாலாஜாபாத் கணேசன். அவரைச் சுற்றி பி.டி.ஒ., மற்றும் பிற அதிகார  கும்பல். 10 க்கும் மேற்பட்ட கார்களில் அவரது அல்லக்கைகள் சூழ, ஒரே தடபுடல். அலப்பறை, அல்லொகளம். 2  புல்லட் வாகனத்தில் அ.தி.மு.க., கொடியுடன் “எம்.எல்.ஏ., பேசுகிறார், எம்.எல்.ஏ., பேசுகிறார்”என்று தெருவில், புழுதி கிளம்பும் விளம்பரம். சாமி ஊர்வலம் போல், தெருவில் கோலம் போட்டு சூடம் காட்டாததுதான் பாக்கி.

நேரடியாக அவரைப் பார்க்க விடாமல், நடுவுல இரண்டுப் பேர், மனுவை வாங்கி படித்துவிட்டு, பிறகு, அவரிடம் கொண்டு சென்றனர்.  கூட இருந்த அல்லக்கைகள், “யாருனா ஒருத்தரா பேசுங்க… எல்லாரும் பேசக்கூடாது.” என்றனர்.  அதன்படி நாங்க, அம்மு என்பவரிடம் மனுக் கொடுத்து, குழந்தையையும் தூக்கிக்கொண்டு பிரச்சனைகளை சொல்லும் படி அனுப்பி, பின் தொடர்ந்தோம்.

மனுதானே கொடுக்கிறார்கள், வாங்கிப் போட்டுட்டு கிளம்பிவிடலாம் என்று நினைத்த எம்.எல்.எ கணேசனுக்கு கிளம்ப வழியில்லை. பெண்கள் சுற்றி நின்றோம். அம்மு பிரச்சனைகளை கூறிக்கொண்டு இருக்கும் போதே,  “இரும்மா, மனு படிக்குறோம் இல்ல… சும்மா சத்தமா பேசாதே..” என்று அதட்டினார் எம்.எல்.எ.

அடிக்கடி கைப்பேசியைக் காதில் வைத்துக் கொண்டு, பேசமாலேயே,  கட் பண்ணி போடுவது என பலமுறை வித்தை காட்டினார். அவர் போனை எடுத்ததும் உடனிருப்பவர்கள்,  “அண்ண போன் பேசுறாரு, அண்ண போன் போசுறாரு …உஷ் …உஷ்…”  என்று எங்கள் வாயடைத்தனர். நாங்கள் அனைவரும், அனுபவிக்கும் கொடுமையை விளக்கி, “சாக்கடையை வந்து பார்த்துவிட்டுதான் போக வேண்டும்” என்று எம்.எல்.எ., வை விடவில்லை.

எம்.எல்.எ. கணேசன், “இப்பதானே மனு கொடுத்து இருக்கிறீங்க… பார்த்துக்கலாம்.. நான் ஊர்த்தலைவர் கிட்ட சொல்றேன்…” என்று நழுவ பார்த்தார். அதற்கு பெண்கள், “இதையேதான் ஒரு வருஷமா…. சொல்றீங்க… நடவடிக்கை ஒன்றும் காணோம். இன்னிக்கு ஒரு முடிவு தெரிந்தாகணும்” என்றனர்.

உடனே எம்.எல்.எ கணேசனின், அல்லக்கைகள், “அண்ணங்கிட்ட சொல்லிட்டீங்க, இல்ல. பார்த்துக்குவாறு” என்று எங்களை துரத்தினார்கள்.

அதற்கு, “சார், வெறும் பைவ் மினிட்ஸ் தான் ஆகும்.. நீங்க வந்து பார்த்துட்டு போங்க” என்று மறுபடியும்,  ஒரு தச்சு தொழிலாளி கெஞ்சினார். எம்.எல்.எ. கணேசன், “இல்ல, இல்ல, மனு என் கையில இருக்கு….. போதும்”  என்று பிடிஓ வை கூப்பிட்டு எங்களிடம் விட்டுவிட்டு, அவர் தப்பித்து போவதிலே குறியா இருந்தார். நாங்கள், வீண் விவாதம் செய்வதுப் போன்றத் தோற்றத்தை எம்.எல்.எ.,வே, கூட்டத்தில் உருவாக்கினார். முகத்தை சுளித்து, எரிச்சலைடைந்தார்.

இதனை கண்டப் பெண்கள், குழந்தைகள் என்ன செய்வது என்று மிரட்சியுடன், நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது,

எங்களில் ஒருப் பெண், பெண்களை தள்ளிக்கொண்டு, கொப்பளத்துடன் இருக்கும் குழந்தையை அவர் மேஜை மீது உட்காரவைத்தார். குழந்தையைக் காட்டி, “ இங்க பாருங்க, தேங்கி இருக்குற கழிவுநீரால ஏற்பட்ட கொப்பளங்கள், பல கொழந்தைகள் என்ன ஜுரமுனு தெரியாம காய்ச்சல் இருக்குதுங்க, இதுக்கு வழி சொல்லிட்டு கிளம்புங்க..” என்று கத்தினார்.

எம்.எல்.எ. கணேசன் பாவமாக, ‘உச்’ கொட்டிவிட்டு கோவமாக, “சரி பார்த்துக்கலாம்” என்றார்.

மறுபடியும் போனை காதில் வைத்துக் கொண்டார்.  அவரது அல்லக்கைகளை பார்த்து  எங்களை துரத்தும்படி சைகை காட்டினார்.

பிறகு, “உடனே…. அய்யம்பேட்டை தலைவரை வரச் சொல்” என்று உத்தரவு போட்டார் அடியாட்களிடம்.

திரும்பவும் கிளம்ப முயற்சித்தார். நாங்கள் விடாமல்,

மீண்டும்,“வருஷக் கணக்கா இருந்து அவஸ்தை பட்றோம், அஞ்சு நிமிசங்கூட வந்து பார்க்கமுடியாதா?

இதுக்கு தான் ஓட்டுப்போட்டு உட்கார வைச்சிருக்கோமா? பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்ல, ….. வாந்தி பேதி வந்தது தான் மிச்சம். இன்னிக்கு கண்டிப்பா எதாவது தீர்வு வேண்டும்” என்றோம்.

அதற்கு எம்.எல்.எ. கணேசன் எங்களை நோக்கி, கையை நீட்டி, “மூஞ்சப்பாரு, .. நீங்க, டிஎம்கே வா… இந்த பொம்பளங்கள இழுந்துக்கினு போங்க… இல்லனா நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்”  என்று இரண்டு, மூன்று முறை ஏக வசனத்தில் கத்தினார்.

அதற்கு நாங்கள், “மூஞ்சப்பாரு, கீருனு… திட்டின அவ்வளவுதான்.. இதுக்குதான் உன்னை ஓட்டுப்போட்டு உட்காரவைத்திருக்கமா?” என்று கோவமடைந்தோம். சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர்.

எங்களை  அடக்க ஆள் இல்லாமல், அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க.. உஷாரான எம்.எல்.எ., சட்டென்று எழுந்து பெண்களை காரணம் காட்டி கோவித்துக்கொண்டு கிளம்ப முற்பட்டார். கிளம்பும்போது  நாங்கள், “கிளம்ப வேற சாக்கு கிடைக்கில…  பிரச்சனைய தீர்க்க சொன்னா, கோவிச்சிக்கினு போறாராம்” என்று சத்தம் போட்டோம்.

அனைவருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. எம்.எல்.எ கோவித்து கொண்டு போறாரே என்று… எங்களை சமாதானப்படுத்தினார்கள் சிலர்.  மெதுவாக எங்களிடம், “நீங்க கோவமா பேசவேதான் அவரு கிளம்பிட்டாரு…” என்று முறையிட்டனர்.

அதற்கு நாங்கள்,  “நாங்க தான்  கோவமா பேசினோம்…. நீங்கல்லாம் கெஞ்சி, கெஞ்சிதானே பேசினீங்க அதுக்கு மதிப்பு கொடுத்து வந்து பார்க்கணும் இல்லயா?” என்று எம்.எல்.எ. கணேசன் முன்னிலையிலேயே கேட்டோம்.

ஒரு அக்கா, அவரிடம் சென்று “அண்ணே கோவிச்சுக்காதே… நாங்க படற அவஸ்தைதான் அவங்க சொன்னங்க.. நீ வந்து … பார்த்துட்டு போ… ” என்று கெஞ்சினார்.

இதுக்கு மேலே எம்.எல். எ.  கிளம்பினால், அவருடைய சுய ரூபம் வெளிப்பட்டு விடும் என்று, எங்களை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி, “உங்களுக்காக நான் வந்து பார்க்கிறேன்” என்று சாக்கடையை  பார்வையிட்டார். அப்போது  ஊர்த்தலைவரை திட்டுவது மாதிரி பாவ்லா காட்டினார். ஊர்த்தலைவரிடம்,

“பொம்பளங்க என்ன, என்னா?…. கேள்வி கேக்குதுங்க…. உன்னால தான்..” என்று,  முறைத்தார்.

மறுபடியும் “மூன்று நாட்கள் பிறகு முடிக்கிறோம்” என்றார்கள்…. மீண்டும் கெடு வைச்சதுதான் மிச்சம். சாக்கடையை அப்புறப்படுத்த அல்ல! சாக்கடையை,  எம்.எல்.எ., பார்த்துவிட்டு போவதற்கே இந்த பாடு!…. இந்தப் போராட்டம்!…… இன்னும், அதை சீர்ப்படுத்த நாங்க படப்போற பாடு.. அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்!!

பிரச்சனையின் மூலம்

சாயக் கழிவுகள் சாக்கடை
சாயக் கழிவுகள் சாக்கடை

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையில், நெசவுதான் உயிர்த்தொழில். அதைப்போல, நூலுக்கு சாயம் போடுவதும் முக்கியத் தொழில். அதிலிருந்து வரும் கழிவுகளை அப்புறப்படுத்த சரியான வழிஇல்லை. ஆகையால் ஊர் கோடியில் இருக்கும் பகுதியில் அந்த கழிவுகளை விட்டுவிடுவார்கள். இதனால், ஏகப்பட்ட பாதிப்புகள். பெண்களுக்கு, பல், நகம் சொத்தை, அவர்கள்,வாயை திறந்தாலே கோரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தீராத ஜூரம், காதில் சீழ், அம்மைப்போன்ற கொப்பளங்கள் என்று சொல்ல அடங்காத நோய்கள். குடிதண்ணிரும் கெட்டு, சோப்புதண்ணிர்ப்போல வரும்.

இதனை பலமுறை வலியுறுத்தி,  மக்கள் திரண்டு, ஊர்த்தலைவர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தாகிவிட்டது. பெயருக்கு மறியலும் செய்தாகிவிட்டது.

அப்போது நடந்த கூத்துகள் ஒரு தனிக் கதை!

கலெக்டர் கிட்ட மனு கொடுத்தால், நல்லா பார்த்தீங்களா….? அது சாய தண்ணியா…..? என்று நக்கலடிப்பார். அதிகாரிகள்  எங்களிடம் மனு வாங்கும் போது ஒவ்வொரு முறையும்,  நாங்க சொல்ற கஷ்டங்களை 5 நிமிட சீரியலா வரும் ‘ரியல் ஷோவா’ நினைத்து காலை ஆட்டிக்கொண்டே எங்களை வேடிக்கையாக பார்ப்பர். கடைசியில் பிரச்சனைக்கு, ஏதோ பரிகாரம்  செய்வதாக எங்களை பந்தாடுவார்கள். கலெக்டர், பிடிஓ வைப் பார்க்க சொல்லுவார். பிடிஒ, ஊர்த்தலைவரை பார்க்கச் சொல்லுவார்.  ஊர்த்தலைவர் எம்.எல்.எ வைப் பார்க்க சொல்லுவார். எம்.எல்.எ. திரும்பவும் கலெக்டரை பார்க்கச் சொல்லுவார். கடைசியில் மக்கள் சலிப்படைந்து மனுக் கொடுக்கும் போராட்டத்திலிருந்தும் ஒதுங்கிக் கொள்வார்கள்.

மக்களின் போராட்டம் மனுக் கொடுப்பது, மன்றாடுவது என்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் அதிகாரிகளும், போலிசும், எம்.எல்.எ வும் மக்கள் வந்து நின்றாலே அவர்களை மந்தைகள் போன்று மிரட்டுவது, கத்துவது நிரந்தரமாகிவிட்டது. கடைசியில் முடிவு என்ன?  திரும்பவும் ஆரம்பம்தான் என்று தோன்றினாலும், பெண்களின் விடாமுயற்சி போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். கண்முன் உதாரணம், எம்.எல்.எ. என்றும் அஞ்சாமல், துணிச்சலுடன் பேசி முற்றுகையிட்டது.

இது பெண்கள் தன்னிச்சையாக நடத்தியப் போராட்டம்.  அவர்கள், புரட்சிகர அரசியல், அமைப்புப் பலத்தை உணரும் போது  இதன் வேகம், மேலும் கூடும், என்பது நிதர்சனம்.

_________________________________________________

– வீரலட்சுமி.

_________________________________________________

தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!

200
தர்மபுரி-வன்னிய-சாதிவெறி

“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் அப்பட்டமான சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சு இப்போது செயல் வடிவம் பெற்று வருகிறது. வன்னிய சாதிவெறியின் கோரத் தாண்டவத்துக்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.

நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். நாய்க்கன் கொட்டாய் பகுதியே வன்னிய சாதியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்பதாலும் அதிலும் சமீப ஆண்டுகளாய் இவர்களிடையே சாதிவெறி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும் தாங்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடியாது என்று திவ்யாவும் இளவரசனும் அஞ்சினார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் நடந்த உடனேயே வன்னியர்கள் தரப்பிலிருந்து மிரட்டல்களைச் சந்திக்கத் துவங்கிய புதுமணத் தம்பதிகள், தங்கள் பாதுகாப்புக்கு காவல் துறையை நாடினார்கள்.

தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரையும் தர்மபுரி எஸ்.பி அஸ்ரா கர்க்கையும் சந்தித்து முறையிடுகிறார்கள்.

இதற்கிடையே திவ்யாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி வன்னியர்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக நத்தம் காலனி மக்களுக்கும் இளவரசனின் உறவினர்களுக்கும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நவம்பர் 5ம் தேதி திவ்யாவின் பெற்றோர் தங்கள் சாதியைச் சேர்ந்த சுமார் 500 பேர்களுடன் நத்தம் காலனிக்கு வெளியே திரண்டு பஞ்சாயத்து பேச வருமாறு இளங்கோவின் உறவினர்களை அழைத்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு நத்தம் காலனியில் இருந்து சுமார் பத்து பேர் சென்றுள்ளனர்.

வன்னியர்கள் தரப்பிலிருந்து வந்திருந்த 500 பேர்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியப் பொருளாளர் மதியழகன் தலைமை தாங்கி வந்துள்ளார். நத்தம் காலனியில் இருந்து வந்தவர்களை நேரடியாக மிரட்டும் மதியழகன், “நாம பார்த்து வைப்பது தான் சட்டம். மரியாதையாக பெண்ணை ஒப்படைத்து விடுங்கள்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணை ஒப்படைப்பதற்கு நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதிக்கிறார். உரிய கெடுவுக்குள் பெண்ணை ஒப்படைக்காவிட்டால் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

சாதிவெறி தலைக்கேறிய நிலையில் மிக அதிகளவில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அஞ்சிய நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள், அந்த நேரத்தில் உடனடியாக தப்பிக்க எண்ணி அதற்கு ஒப்புக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான கட்டைப் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலும் நடந்துள்ளது. அங்கே தொடர்ந்து சென்று வந்த திவ்யாவின் தந்தை நாகராஜனை அங்கேயிருந்த வன்னிய சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், “பெண்ணை கீழ்சாதிக்காரனோடு அனுப்பி வைத்த பொட்டைப் பயல்” என்பது போல கேலி பேசி வெறியேற்றியிருக்கிறார்.

நவம்பர் 5ம் தேதி பா.ம.க மதியழகன் முன்னிலையில் நடந்த கட்டைப்பஞ்சாயத்தில் பெண்ணை ஒப்புவிப்பதாக நத்தம் காலனியைச் சேர்ந்த ஒருசாரார் ஏற்றுக் கொண்டு வந்திருந்தாலும், ஊருக்குத் திரும்பியதும் மற்றவர்கள் வேறு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திருமணம் முடிந்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக திவ்யா இளவரசனுடன் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் வலுக்கட்டாயமாக பெண்ணைத் திருப்பி அனுப்பினால், அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அஞ்சிய இளவரசனின் உறவினர்கள், நவம்பர் 7ம் தேதியன்று அவரை ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

பெண் திரும்பி வராத நிலையில் நாகராஜனின் உறவினர்களும் அவரைக் கேலி பேசி வெறுப்பேற்றிய நிலையில்  அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதிலும் அவர் விஷம் அருந்தினார் என்றும் அவரது நெருங்கிய உறவினர்களே அவருக்கு விஷத்தைப் புகட்டினர் என்றும் இருவேறு விதமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்.

நாகராஜன் இறந்து போன நிலையில், அக்கம் பக்கம் ஊர்களைச் சேர்ந்த வன்னிய சாதியினர் சுமார் 2000 பேர் திரட்டப்படுகிறார்கள். நாகராஜனின் சடலைத்தை எடுத்துக் கொண்டு செல்லங்கொட்டாயிலிருந்து நத்தம் காலனி வழியே தருமபுரி – திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்கு ஊர்வலமாய்க் கிளம்புகிறார்கள். வரும் வழியிலேயே மூன்று குழுக்களாய் பிரிந்து கொள்ளும் இந்த கும்பல், நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டம்பட்டி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறார்கள். இம்மூன்று பகுதிகளும் ஆதிதிராவிடர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதிகள்.

கையில் கிடைத்த கடப்பாரை, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டைகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் கிளம்பிய இந்த கும்பல், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிறது. அந்த சமயத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த ஆண்கள் கூலி வேலைகளுக்காக வெளியூர் சென்றிருந்தனர். சுமார் 40 பெண்களும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுமே காலனியில் இருந்துள்ளனர்.

கொலைவெறியில் உள்ளே நுழையும் கும்பலைக் கண்டதும் சிதறி ஓடும் பெண்கள் ஊருக்கு வெளியேயும் வயல்களுக்குள்ளும் புகுந்து மறைந்து கொள்கிறார்கள். பெயின்ட் அடிக்கப் பயன்படும் கருவியில் (Painting Gun) பெட்ரோலை  நிரப்பி எடுத்து வந்த கும்பல் அதை குடிசைகளின் மேலும் வீடுகளின் மேலும் பீய்ச்சி அடித்தும் பெட்ரோல் குண்டுகளை எரிந்தும் வீடுகளைக் கொளுத்தியிருக்கிறார்கள்.

நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

வன்னிய சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். தாக்குதல் நடத்திய கும்பலை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மதியழகன், சிவா, பச்சியப்பன், மகாலிங்கம், லலிதா மாது, ராஜேந்திரன் மற்றும் P.K சின்னச்சாமி ஆகியோர் திட்டமிட்டு வழிநடத்தியிருக்கிறார்கள். ஒரு படையெடுப்பைப் போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பங்கேற்ற வன்முறைக் கும்பலில் பெரும்பாலும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

நத்தம் காலனியிலும் கொட்டாம் பட்டியிலும் மாலை நான்கு மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது மணி வரை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். அண்ணா நகரில் இரவு 11 மணி வரை தொடர்ந்து வீடுகளை எரிப்பதும், பொருட்களைக் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடந்துள்ளது.

ஒரு பக்கம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு குழு ரம்பத்தால் மரங்களை அறுத்து தருமபுரி திருப்பத்தூர் சாலையில் தடுப்பரண்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் தீயணைப்புத் துறையும் நெருங்க விடாமல் செய்ததுடன் உள்ளே நுழைய முயன்ற காவல்துறை வாகனங்களை கற்களை எறிந்து தாக்கியிருக்கிறார்கள்.

சென்றாண்டு பரமக்குடியில் தலித்துகளிடம் துப்பாக்கியால் பேசி வீரம் காட்டிய போலீசு,  இங்கு வன்னிய ஆதிக்க சாதியினரின் முன் பணிந்து போயிருக்கிறார்கள். இத்தனைக்கும் சம்பவம் நடக்கும் பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது.

தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கும் செல்லங்கொட்டாய் நத்தம் காலனி பகுதியில் சாதி ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும் இப்போது நடந்துள்ளதைப் போன்ற வெறித்தனமான தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை. தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாங்கள் அங்கே சென்றிருந்த போது நத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, “ நக்சலைட்டு கட்சி வலுவிழந்து போனது தான் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது” என்று கண்ணீரோடு தெரிவிக்கிறார்.

எண்பதுகளில் வன்னிய சாதி அடையாளத்தோடு துவங்கப்பட்ட ராமதாஸின் பா.ம.க, தொண்ணூறுகளிலிருந்தே ‘பாட்டாளி’ முகமூடியோடு  பச்சோந்தித்தனமாக பல்வேறு தேர்தல் கூட்டணிகளின் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்கிறது. ராமதாஸின் பிழைப்ப்புவாதமும் சந்தர்பவாதமும் சாதாரண மக்களின் முன் போதிய அளவுக்கு அம்பலமான நிலையில் இரண்டாயிரங்களின் மத்தியிலிருந்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து அரசியல் அரங்கில் தனிமைப்படுகிறார்.

வேல் முருகன் போன்ற அவரது முன்னாள் கூட்டாளிகளே தனி கடை போட்டு பிழைப்புக்குப் போட்டியாக உருவெடுக்கிறார்கள். கரைந்து கொண்டிருக்கும் தனது அரசியல் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுப்பதற்காக தற்போது மீண்டும் வன்னிய சாதிவெறியை  கையிலெடுத்திருக்கும் ராமதாஸ், தற்போது வன்னியர்களிடையே சாதிவெறியைத் தூண்டி விட்டு மக்களிடையே பிளவுண்டாக்கி ரத்தம் குடிக்கும் வெறியோடு வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சாதிப் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி வந்திருந்த ராமதாஸ், இந்த வகையில் தனது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி அமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் குருவின் சாதிவெறிப் பேச்சு மகாபலிபுரத்தில் அரங்கேறுகிறது. சாதிக்காக என்ன செய்தாலும் தங்களைக் காப்பாற்ற ஒரு அமைப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையை சாதிவெறியேறிய லும்பன் கூட்டத்துக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தான் இந்தக் கலவரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தருமபுரிக் கலவரத்தைத் தொடர்ந்து 96 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்டு செய்யக் கூடாது என்பதற்காக எஸ்.பி அஸ்ரா கர்க் மற்றும் தலைமை மேஜிஸ்டிரேட் வரை சென்று வாதாடியுள்ளனர்.

அரசியல் அரங்கில் சாதிவெறி மீண்டும் அரங்கேறி உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு துடிக்கிறது. நவீன தொழில் நுட்ப புரட்சியின் காலம் என போற்றப்படும் இந்நிகழ்காலத்தில்தான் சாதிவெறியும் முடிந்த மட்டும் ஒருங்கிணைத்துக் கொண்டு வன்முறையில் குதிக்கிறது. இதை இணையம் தொட்டு நாய்க்கன் கொட்டாய் வரை காணலாம். இதனால் தலித் மக்களின் வாழ்வுரிமை பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறது. பல வருடங்கள் உழைத்து சேர்த்த வீடும், பொருட்களும் நாயக்கன்கொட்டாய் மற்றும் ஏனைய பகுதிகளில் சூறையாடப்பட்டன. இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் வளர்வதும் வன்னிய சாதிவெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த ஆபத்திலிருந்து தலித் மக்களைக் காப்பாற்றுவதாய் கூறிக் கொள்ளும் தலித் கட்சிகளும் இப்போது ஆகச் சீரழிவான நிலைக்கு இறங்கிச் சென்ற பின், அந்த மக்கள் இன்று பாதுகாப்பற்று தனித்து விடப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதிவெறி என்பது அந்த சாதியில் இருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கே  எதிரானது என்பதை அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொள்வதோடு தம்மைப் போன்றே இழப்பதற்கு ஏதுமற்ற உழைக்கும் மக்களான தலித்துகளோடு கரம் கோர்ப்பதன் மூலம் தான் ராமதாஸ் தலைமைதாங்கும் வன்னிய சாதிவெறியை அகற்ற முடியும். இவ்வாறு வர்க்கமாக அணிதிரள்வதன் மூலம் தான் பொருளாதார விடுதலையை மட்டுமல்ல, சாதி ஒழிப்பையும் சாத்தியமாக்க முடியும்.

____________________________________________

– வினவு செய்தியாளர்கள்
_________________________________________

மைனர் குஞ்சுகளின் இந்தியாவுக்கு வருகிறது பிளேபாய்!

2
பிளேபாய்-1
பிளேபாய் பந்நிகளுடன் நிறுவனர் ஹெப்னர்

வாங்கும் சக்தியுள்ள நடுத்தர வர்க்கம் கணிசமாக இருக்கும் இந்தியாவின் பாக்கெட்டை ஆட்டையை போட இந்தியாவுக்குள் பாய்ந்து கொண்டிருக்கும் பிராண்டுகளின் வரிசையில் லேட்டஸ்ட் நுழைவுதான் “பிளேபாய்”!

பிளேபாய் என்றவுடன் ஏதோ விளையாடும் பொம்மைகள் பற்றியது என்று நினைத்து விடாதீர்கள். அது ஊதாரித்தனமாக பெண், போதை என கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ‘மைனர் குஞ்சு’களை குறிப்பது. இவர்களை குறிவைத்து பிரத்யோகமாக அமெரிக்காவில் துவங்கப்பட்டவை தான் வரலாற்றுப் புகழ்பெற்ற ‘பிளேபாய்’ புத்தகம், இரவு விடுதிகள், ஓய்வகங்கள் மற்றும் பிராண்ட் பொருட்கள்.

பாலுணர்வுத் தூண்டல், பெண்களின் அரை – முழு நிர்வாண படங்கள் போன்ற பின்னடித்து பாக்கெட்டில் தொங்கவிடப்படும் ஆண்களுக்கான பிரத்தியேகமான மூன்றாம்தர பத்திரிக்கையான பிளேபாய்  1953 முதல் இன்றும் மவுசு குறையாமல் தடை செய்யப்பட்ட சில நாடுகளைத் தவிர உலகத்தின் பல நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பிளேபாய் பத்திரிகை தடை செய்யப்பட்டிருந்தாலும், அன்னிய முதலீட்டிற்காக நாட்டை ஹோல்சேலில் விற்பனை செய்யும் அரசும், முதலாளிகளும், நிழலை விடுத்து நிஜத்தை அரங்கேற்ற தயாராகியிருக்கின்றனர்.

மனிதகுலத்துக்கான தனது 52 வருட ‘பணி’யில் உலகம் முழுவதிலும் 44 இரவு விடுதிகளை நடத்தும் பிளேபாயை இந்தியாவில் சந்தைப்படுத்த ‘பிளேபாய் லைஃப் ஸ்டைல்’ என்ற மும்பை நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் பிளேபாய் கிளப் கோவாவின் காண்டோலிம் கடற்கரையில் 22,000 சதுர அடி பரப்பளவில் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘அது உலக அளவில் பிளேபாயின் முதல் கடற்கரை கிளப்பாக விளங்கும்’ என்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சஞ்சய் குப்தா. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் 120க்கும் மேற்பட்ட நைட் கிளப்புகளையும், உணவு விடுதிகளையும், சில்லறை விற்பனைக் கடைகளையும் தொடங்குவதாக இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிளேபாய் கடைகள் டாஸ்மாக் பார்களை போல மட்டுமின்றி “பிளேபாய் பந்நி (முயல் குட்டி)” என்ற பெயரில் கவர்ச்சியுடையில் மேசைப் பணிப்பெண்களை வைத்து நடத்தப்படுகின்றன. அதற்காக வேலைக்கு அமர்த்தப்படும் பெண்கள் பெயருக்கேற்றபடி பணக்கார பொறுக்கிகளின் விளையாட்டுப் பொம்மைகளாக நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

பிளேபாய்-1
பிளேபாய் பந்நிகளுடன் நிறுவனர் ஹெப்னர்

இந்த பிளே பந்நிகளுக்கான கவர்ச்சி உடை பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘கோர்செட்’’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உள்ளாடை வகையை சாட்டின் போன்ற பளபளக்கும் துணியில் வெளியாடையாக அணிந்துகொண்டு, நெட் துணியால் ஆன காலுறை,  சாட்டினால் செய்யப்பட்ட முயலைப்போல நீண்ட  காதுகள், பின்புறத்தில் முயலுக்கு இருப்பதைப்போல பருத்தி வால், கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு உடுத்தி, பெயர் அட்டையை இடுப்பில் தொங்கவிட்டுக்கொண்டு அரை நிர்வாண கோலத்தில் வலம் வர வேண்டும். இந்தச் சீருடை மட்டும் $10,000 (சுமார் ரூ 5 லட்சம்) அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது.

விடுதிக்கு வரும் மேட்டுக் குடி ஆண்களுக்கு மது பரிமாறும் வேலையைச் செய்வது இந்த பெண்களின் கடமை. கதவைத் திறந்து விடுவதிலிருந்து, சிகரெட் பற்ற வைப்பது, ஒவ்வொருவரின் தேவை அறிந்து சேவைகளை செய்வது, நடன கூட்டாளியாக இருப்பது போன்ற பணிகளையும் இந்தப் பணிப்பெண்கள் செய்வார்கள். தவிர பார்ம் ஹவுஸ்களில் நடக்கும் பிரைவேட் பார்ட்டிகளுக்கும் சென்று சேவை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு விடுதியிலும், இவர்களை மேய்ப்பதற்காகவே பந்நி அன்னை என்பவர் தலைமை வகிப்பார். அவர் வேலை நேரங்களை ஒழுங்கு செய்வது, பணிக்கு அமர்த்துவது, பணிநீக்கம் செய்வது, பயிற்சி தருவது போன்றவற்றை கையாளுவார். ‘முதலாளித்துவ ஒழுக்கத்தில் அதெல்லாம் கறாராக இருக்கும்’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அழகு, இனிய குரல், மற்றும் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற குணங்கள்தான் இங்கு முக்கியம். இவர்கள் எல்லோருக்கும் பொறுப்பாக இருக்கும் மேனேஜர் தினமும் வேலைக்கு வரும் பணிப்பெண்களின் எடையை நிறுத்துப் பார்க்கவேண்டும். எடை குறைவு அல்லது ஏற்றம் இரண்டும் கம்பெனியின் வரையறையை மீறினால் அவர்கள் உடனே வேலையை விட்டு நீக்கப்படுவார்கள்.

இப்படியாக, பளபளக்கும் விளக்குகள் மாட்டி, ஊழியர்களுக்கு சிறப்பான சீருடை அணிவித்து, பல மடங்கு விலையில் உணவுப் பொருட்களை விற்கும் மெக்டொனால்டு-கே.எப்.சி போன்ற உணவகங்களைப் போல “பிளேபாய்” என்ற பிராண்டுக்கும் தனித்துவம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஏற்கனவே பெரு நகரங்களில் உரிமமில்லாத இரவு விடுதிகள் பல போலீஸ் அதிகாரிகளின் ‘ஸ்பெஷல்’ கவனிப்பில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது இதில் என்ன பெரிய அதிசயம்’ என்று நீங்கள் நினைக்கக் கூடும். எலியைப்பிடிக்க மசால் வடையை வைப்பது போல இந்திய ‘அழகிகள்’ கிடைக்கும் வரை இறக்குமதி செய்யப்பட்ட பாரின் அழகிகளையல்லவா பணிக்கு அமர்த்தப்போகிறார்கள். ‘மேட் இன் அமெரிக்கா என்றால் பால்டாயிலையும் கூட ‘ஆசம் டியூட்’ என குடிக்க தயாராக உள்ள கூட்டத்தை நம்பியல்லவா இறங்கியிருக்கிறார்கள்.

மேலும் நிழல் உலகுக்குள் பயந்து போகத் துணியாத டீசன்ட் ஜென்டில்மேன் மற்றும் எக்ஸ்கியூஸ் மீ பார்ட்டிகளெல்லாம் இந்த அரசு அங்கிகாரம் பெற்ற கேளிக்கை விடுதிக்குள் தயங்காமல் செல்லலாமே… இந்த அடிப்படையில் பிளேபாய் கிளப்புகள் இந்திய நடுத்தர வர்க்க பொழுதுபோக்கு உலகை புரட்டிப் போட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது ‘கேஎப்சி போய் வருகிறேன்’ என்று சொல்வதைப் போல ‘பிளேபாய் கிளப் போகிறேன்’ என்று கௌரவத்துடன் போய் வரலாம்.

‘இதனால் இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து போகுமே’ என்று முண்டா தட்டுபவர்களுக்கு ‘இந்தியாவில் பந்நிகள் அம்மணக்கட்டையாக வலம் வரமாட்டார்கள் இந்திய கலாச்சார அறங்களை நாங்கள் மதித்து நடப்போம்’ என முழுக்க நனைந்திருந்தாலும் முக்காடு உண்டு என்ற உத்தரவாதம் அளிக்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சஞ்சய் குப்தா. இப்படி இந்து ஞான மரபு சர்டிபிகேட்டையும் வாங்கியதோடல்லாமல், அறத்தின் அறங்காவலராகவும் தன்னை நியமித்துக்கொண்டுள்ளது பிளேபாய்.

இந்த விடுதிகளில் நுழைந்து பார்த்து விட நினைக்கும் கூட்டம் ஏராளமாக இருந்தாலும் பெரும் பணம் இருப்பவனுக்கு மட்டும் தான் அங்கு அனுமதி கிடைக்கும். அனுமதி மறுக்கப்படும் நபர்களின் நுகர்வு வெறியைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? ஏற்கனவே பைக் வாங்குவதற்காக கொலை, செல்போன் செலவுக்காக கொலை, பார்ட்டிக்காக கொலை, சூதாட்டத்திற்காக கொலை என்று சக மனிதர்களின் உயிரையும் துச்சமாக மதிக்கும் போக்கு மலிந்துள்ள நிலையில் மேலும் இது போன்ற குற்றங்கள் பல்கிப் பெருகும். காணும் பெண்களையெல்லாம் பந்நிகளாக கருதத்துவங்கி ஏற்கனவே அபாய நிலையில் இருகும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்தச் சூழலில்தான் இந்தியாவில் கால் எடுத்து வைக்கிறான் பிளேபாய். ‘உங்களில் யார் பிளேபாய் ஆக விரும்புவீர்கள்’ என்ற சதவீத கணிப்பை கொண்டு இரத்தின கம்பளத்தை விரித்திருக்கின்றனர். அதன் சமூக விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப் படப் போவதில்லை. பாலியல் உணர்வில் மனிதத் தன்மையை துறந்து வெறும் விலங்குணர்ச்சியாக வெறியேற்றும் ப்ளேபாயின் பாலுறவு விற்பனை தந்திரம் அவர்களைப் பொறுத்தவரை இலாபம் மட்டுமே.  ஆனால் நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் சிக்கி  ‘எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்’ என்ற வெறி மேட்டுக்குடி மட்டுமின்றி மேல்நடுத்தர இளைஞர்களிடமும் பரப்பப்பட்டு வருகிறது. ‘சமூக மிகுதியின் விளைவே குற்றம்’ (Crime is a product of social excess) என்று தோழர் லெனின் சொன்னது நம் நகரங்களில் இன்று நிஜமாகி வருகிறது.

படிக்க

சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் SMS புரட்சி!

20
ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே-3

அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கலங்கிய கண்களோடு அமர்ந்திருக்கிறார். கேமராக்கள் அந்த முகத்தை நெருக்கத்தில் காட்டுகின்றன. எதிரே அமர்ந்திருக்கும் இந்தி நடிகர் அமீர் கான் மெல்லிய குரலில் கேட்கிறார் –

“சொல்லுங்க! உங்க சோகத்தை எல்லோருக்கும் சொல்லுங்க!”

லேசான தழுதழுத்த குரலில் பேசத் துவங்கும் அப்பெண்ணின் பெயர்  கவுஷால் பன்வார். ஹரியானா மாநிலத்தில் வால்மீகி சாதியைச் சேர்ந்த தலித் பெண். கடுமையான சாதி ஒடுக்குமுறைகளைத் தாண்டி துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டே சமஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள கவுஷால், தற்போது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியையாகப் பணிபுரிவதாகச் சொல்கிறார்.

கவுஷாலின் துயரமான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய விவரணைகளால் அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த பலரும் கண் கலங்குகிறார்கள்.  கவுஷாலின் முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்டிருந்த அவரது தந்தை ‘சித்தா’வின் பெயரைச் சொன்னதும் அமீர் பார்வையாளர்களைக்  கரவொலி எழுப்பச் சொல்லிக் கேட்கிறார் – அவர்களும் உற்சாகமாக கை தட்டுகிறார்கள்.

கவுஷாலைத் தொடர்ந்து ஆவணப்பட இயக்குநர் ஸ்டாலின் கே. வருகிறார். அவரது ஆவணப்படமான “தொடப்படாத இந்தியா”விலிருந்து (Untouched India) சில காட்சிகள் திரையிடப்படுகின்றது. அதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் இயக்கத்தைச் (safai karmachari andholan)  சேர்ந்த பெசவாடா வில்சன் வருகிறார். மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதற்கெதிரான அவரது போராட்டங்களை விவரிக்கிறார். தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி தர்மாதிகாரி வருகிறார். பார்ப்பனரான அவர் சாதி வேற்றுமை கொடியது, இந்த வேற்றுமையை குழந்தைகளிடம் விதைக்கும் பெற்றோர்களே அதை அகற்ற வேண்டிய கடமையையும் கொண்டிருப்பதாகச் சொல்லிச் செல்கிறார்.

இறுதியில் அமீர் கான்.

“இதற்கெல்லாம் என்ன செய்யப் போகிறோம்? எப்படித் தடுக்கப் போகிறோம்? மனிதக் கழிவை மனிதனே அகற்ற வேண்டுமா? உங்கள் பதிலை திரையில் பளிச்சிடும் இந்த எண்ணுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்புங்கள்… நாம் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்”

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே-3

மேலே விவரிக்கப்பட்டிருப்பது ஸ்டார் குழுமத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயம். கடந்த 2012 மே மாதம் 6-ஆம் தேதி ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு மொழிச் சேனல்களிலும், தூர்தர்ஷனிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகத் துவங்கியது சத்யமேவ ஜெயதே. பிரதி வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அலசுவதும், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமென்று கூறிக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ ஊடகங்களில் எழுதும் அறிவுஜீவியினர் சிலர் இந்நிகழ்ச்சி வெறும் ரியாலிட்டி ஷோ மட்டுமல்ல, இதில் பேசப்படும் ஒவ்வொரு விசயமும் சாமானிய மக்களின் இதயங்களைத் தொடுவது போலிருப்பதாகவும், ஒரு மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்து வைப்பதால் இது ஒரு சமூக இயக்கம் என்றும் சொல்கிறார்கள். ஒரு சிலர் நிகழ்ச்சியைக் காணும் போதே அடக்க முடியாமல் கண்ணீர் வடித்ததாக எழுதுகிறார்கள்.

சத்யமேவ ஜெயதே இதுவரையில்லாத வரவேற்பைப் பெற்றுள்ளதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முக்கியமான ஆறு பெருநகரங்களில் மட்டுமே 4.74 டி.ஆர்.பி (தொலைக்காட்சி பார்வையாளர் கணக்கீட்டுப்) புள்ளிகளைப் பெற்றுள்ளது இந்நிகழ்ச்சி. இதன் இணையதளம் மே மாதத்தில் மட்டுமே சுமார் 68 ஆயிரம் வாசகர்களது மறுமொழிகளைப் பெற்றுள்ளது.

முதல் நிகழ்ச்சி நடந்த சமயத்தில், ஒரே மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமீர் கானைத் தொலைபேசியில் அழைக்க முற்பட்டுள்ளனர். பல லட்சம் செல்பேசி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 42 ஆயிரம் பேர் சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் இந்நிகழ்ச்சியைத் தொடர்கிறார்கள். ஐ.டி. துறையைச் சேர்ந்த இளைஞர்களின் அரட்டைகளில் சமீப காலமாக சத்யமேவ ஜெயதே கட்டாயமாக இடம் பிடித்துள்ளது.

சத்யமேவ ஜெயதே பெற்றுள்ளது ஒரு பிரம்மாண்டமான வெற்றி போலத் தோன்றினாலும் அதன் பின்னே விளம்பர, ஸ்பான்சர் அளிக்கும் பெரும் நிறுவனங்கள் உள்ளன. நட்சத்திர நாயகர்கள் நடிக்கும் தமிழ் சினிமாவை முதல் வாரத்தில் பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு பரபரப்பை கிளப்பி விட்டு ஆதாயம் பார்ப்பதற்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கும் நிறைய தொடர்புண்டு.

உதாரணமாக, கட்டுரையின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள தீண்டாமை தொடர்பான நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். ஸ்டார் குழுமத்தின் படப்பிடிப்பு அரங்கத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் கண்ணீரும், சிரிப்பும், ஆத்திரமும், ஆர்வமும், பெருமிதமும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்திருக்கும் நேயர்களையும் பற்றிக் கொள்வதாகத் தோன்றினாலும் இது ஒரு செட்டப் என்றால் நம்புவீர்களா?

அறிவுஜீவிகள் வியந்தோதும் அமீர்கானில் இந்த மலம் அள்ளும் சாதி பிரச்சினையின் பின்னே மறைக்கப்பட்ட இரண்டு வார்த்தைகளை அநேகமானோர் கவனிக்கத் தவறியுள்ளனர் – அந்த வார்த்தைகள் அம்பேத்கர் மற்றும் இட ஒதுக்கீடு.

outlook-satyameva-jayate
நன்றி Silence Eva Jayate – அவுட்லுக்

ஜூலை 23-ம் தேதியிட்ட அவுட்லுக் பத்திரிகையில் இது பற்றி எழுதியுள்ள ஆனந்த், தனது பத்தியில் இதை மிகச் சரியாக சுட்டிக் காட்டுகிறார். தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைகளின் கொடூரங்களை விளக்கியும், அதற்கான தீர்வுகளை இலக்கில்லாமல் முன்வைத்தும் சுமார் ஒன்றரை மணி நேரங்கள் நீண்ட அந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் பற்றியோ, இடஒதுக்கீடு பற்றியோ எந்த வார்த்தையும் வெளிப்படாமல் மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளனர்.

ஆனந்த் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் விசாரித்துள்ளார். குறிப்பாக வில்சன் தனது பேட்டியின் போது இட ஒதுக்கீடு பற்றியும் அம்பேத்கர் பற்றியும் குறிப்பிட்டதாகவும், பின்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் அது வெட்டப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் கவுஷால் பன்வாரும் அம்பேத்கர் பற்றி குறிப்பிட்டுள்ளார் – அதுவும் வெட்டப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியடைந்த ஆனந்த் வேறு சிலரிடமும் பேசியிருக்கிறார். அதில் சிலருடைய வாதங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது – சிலருடைய பதிவுகள் நிகழ்ச்சியில் வெளியிடப்படாமலேயே வெட்டியெறியப்பட்டிருக்கிறது.

மேலும், கவுஷால் பன்வார் தனது வாழ்க்கையை விவரித்தது பார்வையாளர்கள் இல்லாத ஒரு படப்பிடிப்பு அரங்கத்தில் – ஆனால், நிகழ்ச்சி ஒளிபரப்பான போது அந்த அரங்கத்தில் பார்வையாளர்கள் இருந்தனர். அவர்கள் அழுதனர், சிரித்தனர், கரவொலியெழுப்பினர், ஆத்திரமாகவும், அசூசையுடனும் முகபாவனைகளைக் காட்டினர் – இந்த ‘உணர்ச்சிகளெல்லாமே’ தனியே படம் பிடிக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த உணர்ச்சிகள் ஏதேனும் ஒரு பாலிவுட் மசாலாப் படத்தின் மேல் எழுந்ததாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது – ஆனால் நிச்சயம் கவுஷால் பன்வாரின் வாழ்க்கைச் சம்பவங்களின் மேல் எழுந்ததல்ல.

அமீர் கான் தனது நேயர்களை ஏமாற்றி விட்டார் என்பது மட்டும் இங்கே பிரச்சினையில்லை – இந்த போலித்தனங்களின் வெளிச்சத்தில் கேந்திரமான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அயோக்கியத்தனம் தான் நமது கவனத்திற்குரியது. சொல்லப்போனால், அமீரின் நேயர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை விரும்புகிறார்கள் என்பதே எதார்த்தம்.

தலித் மக்களுக்காக உயிர், பொருள், குடும்பத்தைத் தியாகம் செய்து இந்நாட்டில் நடந்த போராட்டங்கள் எண்ணற்றவை – அந்தப் போராட்டங்களில் எண்ணிறந்த உயிர்கள் மடிந்து போயுள்ளன. சமஸ்கிருத பண்டிதராவதற்காகப் போராடிய தலித்தின் கதையை இத்தனை மெனக்கெட்டுத் தேடியெடுத்த அமீர் கான், அதே ஹரியானாவில் மாட்டுத் தோலை உரித்த ‘குற்றத்திற்காக’ கொளுத்தப்பட்ட தலித் உடல்களைப் பற்றியோ, இந்த நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ரத்தமும் தசையுமாக வாழும் கயர்லாஞ்சியின் போட்மாங்கேயைப் போன்றவர்களையோ சொல்லாமல் மறைப்பது தற்செயலானதல்ல.

“இந்த நாட்டில் சாதி இருக்கத்தான் செய்கிறது; அது மக்களின் மூளைகளுக்குள் இருக்கிறது; நாம் தான் நமது குழந்தைகளிடம் அதை விதைத்திருக்கிறோம் – எனவே நாம் தான் அதை அகற்ற வேண்டும்” என்றார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதி சந்திரசேகர தர்மாதிகாரி. அவரே மேலும், “நமது பாரதம் இன்னும் முன்னேறி பல சாதனைகள் படைக்க வேண்டுமென்றால் நாமெல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம்” என்கிறார்.

இந்திய சமூகத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தின் உயிராதாரமே சாதியினுள் தான் புதையுண்டு கிடக்கிறது. ஓட்டுமொத்த இந்துப் பொதுப்புத்தியே சாதிப் படிநிலையென்கிற செங்கற்களால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு சமூக எதார்த்தத்திற்கு தனிநபர்களைப் பொறுப்பாளிகளாக்கி கதையெழுதுகிறார் அமீர் கான். அதுவும் உழைத்து முன்னேறிய தலித்துக்கள்தான் அவரது அக்கறைக்குரியவர்களே அன்றி, வெட்டிப் புதைக்கப்பட்டவர்கள் அல்ல. இதைக் கூறினால் கொன்றவர்கள் யாரென்று குறிப்பாகப் பேச வேண்டியிருந்திருக்கும்.

அதாவது உள்ளூர் அளவில் கயர்லாஞ்சியின் கொலைகாரர்களைப் பாதுகாத்த கட்சி எதுவென்று சொல்ல வேண்டியிருக்கும்; மாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகளைக் கொளுத்திய வெறியர்கள் புனிதப் போராளிகள் என்று ஆராதிக்கும் காவிக் கட்சிகளை அடையளம் காட்ட வேண்டியிருக்கும். ஆனால் இத்தகைய கட்சிகள்தான் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்கு காசு கொடுக்கும் புரவலர்களின் சமூக அடித்தளங்கள் மற்றும் கூட்டாளிகள்.

சல்வா ஜூடூமினுடைய ஸ்தாபகர்களையும், ரன்பீர் சேனாவின் பிதாமகர்களையும் அமீர் எதிர்த்துப் பேசுவதை ரிலையன்சும் விரும்பாது; சத்யமேவ ஜெயதேவின் மற்ற புரவலர்களும் விரும்ப மாட்டார்கள்.  அது மட்டுமல்ல சத்யமேவ ஜெயதேவின் இந்தி-இந்து மாநில ரசிகர்களே கூட அதை விரும்பக் கூடியவர்களல்ல.

எனவே தான் அமீர் இருளான அந்தப் பக்கங்களுக்குள் நுழைய மறுக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தர்மாதிகாரி பேசியது அவரது கருத்து மட்டுமல்ல – சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் கருப்பொருளே அது தான். மருத்துவத் துறைப் பிரச்சினைகளைப் பற்றி நடந்த முந்தைய நிகழ்ச்சியொன்றில் மருத்துவம் தனியார்மயமாகியிருப்பது, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் இலாப வெறி, அவர்களுக்கு பாதபூசை செய்யும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடிமைப் புத்தி போன்றவற்றைத் தவிர்த்து விட்டு சில மருத்துவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்.

ஆட்டத்தின் விதிகள் இவ்வாறாகத் தீர்மானிக்கப்பட்ட பின் கோகிலா பென் அம்பானி மருத்துவமனையின் மூலம் கொள்ளையடிக்கும் ரிலையன்ஸ் சத்யமேவ ஜெயதேவின் ஆஸ்தான புரவலராக இருக்க தடையேது? அதனால் தான் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் அமீர்கானால் கைகாட்டப்படும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு இணையான தொகையைத் தானும் வழங்க முன்வந்திருப்பதாக எந்தக் கூச்சமும் இன்றி ரிலையன்ஸால் பீற்றிக்கொள்ள முடிகிறது.

பெண் சிசுக் கொலை பற்றிப் பேசும் போது இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்தின் ஊற்றுமூலமான பார்ப்பன இந்து மதத்தையும். அதன் சமூக அடித்தளமான நிறுவனங்கள், கட்சிகளைப் பற்றியும் பேசாமல் இருப்பது; குடியின் தீமை பற்றிய நிகழ்ச்சியில் விஜய் மல்லையாவின் கொள்ளைகளையும், அதற்கு இசைவான முதலாளி வர்க்கத்தையும் தவிர்த்து விடுவது; விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் பற்றிப் பேசும் போது பன்னாட்டு விதைக் கம்பெனிகளான மான்சாண்டோ, கார்கில் பற்றியும், அவர்கள் தேசத்தினுள்ளே நுழைய எல்லைகளை அகலத் திறந்து விட்ட மன்மோகன் —- சிதம்பரம்  கும்பலைப் பற்றிப் பேசாமல் தவிர்ப்பது – இது தான் சத்யமேவ ஜெயதே.

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே-2

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது மக்களின் ஆரோக்கியத்துக்கு எத்தகைய கேடுகளை உண்டாக்கும் என்று ஓதிய அமீர்கான், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகளை மட்டும் பொறுப்பாளிகளாக்குகிறார். இங்கே முறைகேடான வழிகளில் மரபீனி விதைகளையும், வீரிய நச்சு உரங்களையும் கள்ளத்தனமாக விற்கும் கார்கில், மான்சான்டோ முதலான பன்னாட்டுக் கம்பெனிகளைத் தடைசெய்து நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று கோரவில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்குச் சாதகமான காட் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலக வேண்டுமென்று கேட்கவில்லை.

இது தான் அண்ணா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு நடைமுறை என்பது. ஊழலை ஒழிக்க வேண்டும் – ஆனால் அம்பானியின் ஊழலைப் பற்றியோ, டாடாவின் திருட்டைப் பற்றியோ, மிட்டலின் கொள்ளைகள் பற்றியோ, வேதாந்தாவின் நிலப்பறிப்புகள் பற்றியோ வாயைத் திறப்பதில்லை என்பது தான் அண்ணா ஹசாரே. தாலுகா ஆபீஸ் ப்யூன் வாங்கும் பத்து ரூபாயைத் தடுக்க என்ன செய்யலாம், என்ன சட்டம் போடலாம் என்பதைப் பற்றியெல்லாம் மூளையைக் கசக்கும் ஹசாரே, பெல்லாரியின் இரும்புத் தாதுக்கள் வாரிச் செல்லப்படுவதற்கு வகை செய்யும் தனியார்மயத்தைத் தகர்த்தெறிவது பற்றிப் பேச மாட்டார்.

அதனால் தான் அவரது ஊழல் ஒழிப்புப் போருக்கு ஸ்பெக்ட்ரம் திருடர்களான ஏர் டெல்லும், ரிலையன்சும், டாடாவும் ஸ்பான்சர் செய்தார்கள் – அதே காரணத்திற்காகத் தான் இன்று அமீருக்கும் இவர்கள் ஸ்பான்சர் செய்யக் காத்திருக்கிறார்கள். ‘யார்ட்ட துட்டு வாங்கினா என்னா சார், எதுனா நல்லது நடக்குதா பாருங்க சார்’ என்று ஒரு மூலையிலிருந்து கூவுகிறது அறிவாளிகளின் மனசாட்சி. ‘கோழி குருடா இருந்தாலென்ன ?! குழம்பு ருசியா இருக்கா பாரு!’ பளீரென்று ஒளிரும் இந்த சந்தப்பவாதத்தின் நிழலில் தான் மோடியும், மான்சான்டோவும், ரன்பீர் சேனாவும், டாடாவும், அண்ணா ஹசாரேவும், ராமகோபாலனும், ப.சிதம்பரம்-மன்மோகன் சிங்கும் சந்தித்து கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.

இந்தளவுக்கு நேர்மையற்றும், அயோக்கியத்தனமாகவும் வழங்கப்படும் ஒரு நிகழ்ச்சி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளதை எவ்வாறு புரிந்து கொள்வது? சின்ட்ரெல்லா கதைகளைப் போல மகிழ்ச்சியான தீர்வுகளை அளித்து தமது வார இறுதிகளைக் கொண்டாட்டமாக்குவதைத் தான் இதன் நடுத்தர மற்றும் உயர்நடுத்த வர்க்க நேயர்கள் விரும்புகிறார்கள். சிக்கலான சமூகப் பிரச்சினைகளை இப்படி மொன்னையாகவும், தட்டையாகவும் ஒரு வெண்ணைக் கட்டியை சுலபமாக அறுப்பது போலவும் ஒரு பேக்கேஜ்ஜாக வழங்குவதைத் தான் அவர்கள் வரவேற்கிறார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இதை அமீர்கான் வெளிப்படையாக அறிவித்தும் விடுகிறார். முதல் வார நிகழ்ச்சியின் துவக்கத்தில் அவர் விலை உயர்ந்த கார்களிலும், பைக்குகளிலும், ட்ரெயினிலும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணிக்கிறார். பின்னணியில் பாடல் ஒன்று ஒலிக்கிறது. கையிலிருக்கும் கின்லே பாட்டிலில் இருந்து தண்ணீரை அருந்தியபடியே ‘உண்மையான’ இந்தியாவின் முகத்தைத் தரிசிக்கிறார். திரையில் எழுத்துக்கள் முடியும் நேரத்தில், அந்திசாயும் பொழுதில் கடற்கரையொன்றில் அமீர் இறுகிய முகத்தோடு அமர்ந்திருக்கிறார். கனமான குரலில் ஒரு சிறு உரை நிகழ்த்துகிறார். அதில்…

“நான் யாரையும் குற்றம் சுமத்த வரவில்லை; யாரையும் குற்றவாளியாக்கவில்லை; யாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதோ அல்லது புண்படுத்துவதோ என் நோக்கமல்ல. ஆனால்…. நம்மில் ஒருவர் தானே இதற்கெல்லாம் (சமூகப் பிரச்சினைகளுக்கு) காரணம்?  அல்லது எல்லோருமே தானே காரணம்? வாருங்கள்! நாம் சேர்ந்து பயணிப்போம். கொஞ்சம் தேடல்.. கொஞ்சம் களைத்தல்.. கொஞ்சம் கேட்பது, கொஞ்சம் சொல்வது.. சில கஷ்டமான விஷயங்களுக்கு விடை தேடுவது. இதனூடாக கலவரம் எனது நோக்கமல்ல. சிறு மாற்றம் தான் விருப்பம்.” என்கிறார். நடுத்தர வர்க்கத்தின் இதயங்கள் ஏன் ‘விழுந்தன’ என்கிற கேள்விக்கான விடை இதனுள் தான் பொதிந்து கிடக்கிறது.

இந்தியாவில் நடுத்தர வர்க்கமாய் வாழ்தவதன் சிக்கல்கள் அவ்வளவு அலாதியானது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி, வியர்வை வழியும் போக்குவரத்துப் பயணங்கள், நாளிதழ்களில் புரட்டப் புரட்ட முடைநாற்றமெடுக்கும் ஊழல்கள், அலுவலகத்தில் வெட்டப்படும் சலுகைகள், அதிகரித்து வரும் வீட்டுக் கடனின் மாதாந்திரத் தவணை, பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தது ஒரு லட்சமாவது அதிகமாயிருகிறதே என்கிற எரிச்சல், இன்னுமா ஸ்மார்ட் போன் வாங்கவில்லை என்கிற துக்க விசாரிப்புகள், எப்போதாவது தென்படும் வறுமை பற்றிய செய்திகள் – ‘பேசாம இராணுவ ஆட்சி வரணும் சார்’ என்று அவலை மென்று கொண்டிருந்த வாய்களில் வி.கே.சிங் என்கிற புண்ணியவான் வேறு மண்ணள்ளிப் போட்டு விட்டார் – கடைசியில் இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரமான அண்ணா ஹசாரே உலக மகா காமெடியனாக சீரழிந்து விட்டார். பரிதாபமான நிலை தான்.

படித்த நடுத்தர வர்க்கத்தினர் புழங்கும் இணையம், ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்களில் சமூகத்தை எதிர்நோக்கும் சவால்கள் என்பவை குறித்த மிக மேலோட்டமான, ஆனால் உணர்ச்சியைத் தூண்டும் விதமான விவாதங்களே நிறைந்துள்ளன. இந்த அடிப்படையில் இருந்து தான் ‘எதாவது செய்யணும் பாஸ்’ என்கிற அரிப்பு தோன்றுகிறது. உண்மையில் ஊழலையோ, பிற சமூகக் கேடுகளையோ எதிர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தெருவிலறங்கிப் போராடியாக வேண்டும்.

ஆனால், அதற்கு லீவு போட வேண்டும்; வெயிலில் நிற்க வேண்டும்; அரசு அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டும்; சம்பள இழப்பைச் சந்திக்க வேண்டும் – அதிகபட்சமாக வேலையிழப்பையே கூட சந்திக்க வேண்டியிருக்கலாம் – இந்த இக்கட்டான நேரத்தில் தான் அமீர் கான் ஆஜராகிறார். சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலேயே நீங்களும் ஒரு சமூகப் போராளியாகி விடலாம் என்கிற எளிய வழியைத் திறந்து விடுகிறார். நாம் யாரையும் குற்றவாளியாக்க வேண்டாமே என்கிறார்.

இந்தக் குறுஞ்செய்தி எல்லைக்குள்ளேயே பாதுகாப்பாக நின்று கொள்வதில் வேறு சில வசதிகளும் இருக்கிறது. சிக்கலான பல்வேறு அரசியல் பரிமாணங்களைக் கொண்ட பிரச்சினைகளை மிக எளிமையாகவும், தட்டையாகவும் புரிந்து கொள்ளும் சாத்தியத்தை  உண்டாக்குவதோடு, எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளின் ஆன்மாவாக இருக்கும் அரசியலை உருவியெடுத்து விடுகிறது. அந்த இடத்தில் சில தனிநபர்களை வில்லன்களாக நிறுத்துகிறது.

இந்த வில்லன்களைக் கூட மனுப் போடுவது மூலமோ, சட்டங்கள் மூலமோ திருத்தி விட்டால் பிரச்சினை தீர்ந்தது என்கிறார் அமீர் கான். ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும், சட்டங்கள் இயற்றச் சொல்லியோ நடவடிக்கை எடுக்கச் சொல்லியோ அரசை வலியுறுத்த நேயர்களைக் குறுஞ்செய்தி அனுப்பச் சொல்கிறார் – சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக அரசும் அவ்வாறாக ‘நடவடிக்கை’ எடுத்திருக்கிறது.

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே

ஒரு சமூகப் பிரச்சினையைத் தீர்க்க மனு அளிப்பது என்கிற 19-ம் நூற்றாண்டின் காங்கிரசு வழிமுறையை அன்றைய வெள்ளை அரசாங்கம் எந்தளவுக்கு ரசித்து வரவேற்றதோ அதே அளவுக்கு இன்றைய ஆளும் வர்க்கமும் விரும்பி வரவேற்கிறது. அமீர் கான் முன்னெடுத்துச் செல்லும் சமூகப் பிரச்சினைகளின் ஆயுள் ஒரு வாரம் தான் என்பதும், அதன் வரம்புகள் மனு மற்றும் குறுஞ்செய்திகள் மட்டும் தானென்பதும் ஆளும் வர்க்கத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

தண்டகாரண்யாவிலோ, வடகிழக்கு மாநிலங்களிலோ, காஷ்மீரத்திலோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையைத் திருப்பியளித்ததன் மூலம் கூடங்குளத்திலோ இருக்கும் மக்கள் இயக்கங்களின் போராட்டமும் அமீர் கானின் ‘ கடிதக் கலகமும்’  சாராம்சத்திலேயே வேறுபட்டது. முந்தையது ஆளும் வர்க்கத்தின் அதிகார அடிப்படையையே ஆட்டம் காணச் செய்பவையாக இருக்கும்; அதே நேரம் அமீர் கானுடையது காந்தி-ஹசாரே வகைப்பட்ட தடவிக் கொடுத்தல்கள் தான்.

அதனால் தான் ஊர்வலம், சாலை மறியல், கடையடைப்பு போன்ற மக்களின் ஜனநாயகப்பூர்வமான, மிதமான எதிர்ப்புகளைக் கூட ஏதோ பயங்கரமான தீவிரவாத நடவடிக்கை போல நடத்தும் அரசுக்கு இது போன்ற ‘போராட்டங்கள்’ உவப்பானதாக இருக்கிறது. முதலாளியே ஏற்பாடு செய்யும் தொழிற்சங்கம் போன்றது தான் அண்ணா ஹசாரே- அமீர் கான் வகைப்பட்ட ‘சமூக இயக்கங்கள்’. பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள சிவப்பு விளக்குப் பகுதி இருப்பது அவசியம் என்று சில ‘அறிவுஜீவிகள்’ சொல்வார்களல்லவா, அது போல மக்களிடையே எழக்கூடிய நியாயமான எதிர்ப்புணர்வுகளுக்கு அண்ணா ஹசாரேவும், அமீர் கானும் வடிகால் அமைத்துக் கொடுக்கிறார்கள்.

அமைப்பாக்கப்பட்ட வகையில் ஆத்திரம் கொள்வதற்கும், அதனடிப்படையில் ‘எதிர்ப்பு’ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படுத்துவதே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் உட்கிடை. பாதுகாப்பான முறையில் எதிர்வினையாற்ற ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கிடந்த நடுத்தர வர்க்கத்திற்கு இது கச்சிதமாகப் பொருந்திப் போனதாலேயே அவர்கள் இதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

காமெடியனாய்ச் சீரழிந்து போன அண்ணா ஹசாரேவின் சோக முடிவுக்குப் பின் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ‘போராட்ட வாழ்வில்’ ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறார் அமீர் கான்.

ஆகவே தான் அண்ணா ஹசாரேவை ஆதரித்தது போலவே அமீர் கானையும் பெரும் கார்ப்பரேட்டுகள் முன்னின்று ஆதரிக்கின்றன. பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் குடித்து அந்தப் பகுதியையே பாலைவனமாக்கிய கோகோ கோலா வாய்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே) என்று சுதி சேர்க்கிறது, நாட்டையே கொள்ளையடித்த ரிலையன்ஸ் வயலின் வாசிக்கிறது; 2ஜி கொள்ளையர்களெல்லாம் கன்னக் கோல்; கொலைகார பால் தாக்ரே பின்பாட்டு; உலகவங்கி ஏஜெண்ட் மன்மோகன் சிங் தம்புரா. இந்தக் கன்றாவியை ரசித்துப் பார்க்கும் நேயர்களெவருக்கும் கிஞ்சித்தும் வெட்கமில்லை – கச்சேரி மிகச் சிறப்பாகக் களை கட்டுகிறது.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக!

18

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

நவம்பர் 7,  1917 உழைப்பது மட்டுமல்ல நமது வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான புதிய அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவுலகில் சோசலிசம் என்கிற சொர்க்கத்தை உழைக்கும் மக்களுக்கு அறுமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களின் உண்மையான கொண்டாட்ட நாளும் இதே தான் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம்!

பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான தோழர் லெனின் தலைமையில், ரசிய  கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோசலிச அரசு, தமது குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடானடியாகத் தீர்த்து வைத்ததோடு, அனைவருக்கும் கல்வியையும் வேலையையும் உத்திரவாதப்படுத்தி சாதனை படைத்தது.

ஆனால் நமது நாட்டின் நிலை ?

விலைவாசி விசம் போல் ஏறி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் வீசப்படுகிறார்கள். விவசாயம் அழிந்து தற்கொலைகள், பட்டினிச்சாவுகள் என விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். கல்வி வியாபாரமயமாக்கப்பட்டு விட்டதால் ஏழை மாணவர்கள் தற்குறிகளாக்கப்படுகிறார்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் இந்த நாடே பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்காக கூறுபோட்டு விற்கப்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததன் மூலம் கோடிக்கணக்கான சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்துள்ளது. வால்மார்ட் போன்ற பன்னாடு நிறுவனங்கள் கொழுக்கவும் வழிவகுத்துள்ளது. மேலும் காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து மக்களின் சேமிப்பை பன்னாட்டு கம்பெனிகள், மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் சூறையாடவும் பட்டுக் கம்பளம் விரித்துள்ளது மன்மோகன் கும்பல்.

மானிய வெட்டு என்கிற பெயரில் கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் போன்ற இதர பொருட்களின் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பல லட்சக்கணக்கான, கோடி ரூபாய்களை வரிச்சலுகைகளாக வாரி வழங்குகின்றன மத்திய மாநில அரசுகள். இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் மக்கள் மீதோ இராணுவம், போலீசை ஏவி அடக்குமுறைகளை  கட்டவிழ்த்து விட்டு ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தி வருகிறது மன்மோகன்-சோனியா-சிதம்பரம் கும்பலின் காங்கிரசு அரசு.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

இந்த அரசு மனமுவந்து ஏற்று நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கை தான் காரணம். இது தான் இன்று உலக மக்களை மரணக்குழியில் தள்ளி வருவதோடு நாட்டையும் அடிமையாக்கி வருகிறது.

இதெற்கெல்லாம் என்ன காரணம் ? உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகள் மீது உலக முதலாளித்துவம் திணித்து வரும் சுரண்டல் கொள்கையான மறுகாலனியாக்க கொள்கை தான் காரணம். இதை ஒழிப்பதே உலக உழைக்கும் மக்களின் இன்றைய உடனடி கடமை, இக்கடமையை நிறைவேற்ற ஏழை நாட்டு உழைக்கும் மக்களோடு ஒன்றிணைவோம். உலக முதலாளித்துவ சுரண்டலை, மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம். தெற்காசிய மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாகத் திகழ்வோம்.

மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முதலில் நமது நாட்டில் ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரிகள் தலைமையில் கட்டியமைப்போம். பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு மரண அடி கொடுப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி சமூக விடுதலையையும் சாதிப்போம். அதற்காக இன்றைய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம்.

 நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம் !

______________________________________________________

சென்னையில் நவம்பர் புரட்சி நாள் நிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சி நிரல்

நாள்  : 7.11.2012
நேரம் : பிற்பகல் 2 மணி.

தலைமை : தோழர் த. நெடுஞ்செழியன்
இணைச் செயலாளர்,  புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி. சென்னைக் கிளை.

நவம்பர் தின உரை :  தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில அமைப்புச் செயலாளர்,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.

நாடகம்,  உரைவீச்சு,  விவாத மேடை. கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இளம் தோழர்களின் புரட்சிகர பாடல்கள்.

உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக !

தொடர்புக்கு
வினவு -97100 82506
புதிய கலாச்சாரம்  -99411 75876

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி