Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 737

சட்டிஸ்கர் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

2

சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

படுகொலை

ஜூன் 28ஆம் தேதி. சட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம்  கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமம். இவ்வாண்டின் விதைப்புத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பதையொட்டி, யார் முதல் ஏர் ஓட்டுவது என்பதைப் பற்றி அன்று இரவு நிலவொளியில் அப்பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 30 பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அக்கிராம மக்களைச் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசுப் படை,  திடீரென நாற்புறமிருந்தும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய அம்மக்களைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றது. பலரது முதுகிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்து சரிந்து விழுந்து மாண்டனர். கொல்லப்பட்டவர்களின் பிணங்களை பூட்சுக்காலால் எட்டி உதைத்தும், கத்தியைக் கொண்டு அவர்களது உடல்களை வெட்டியும் போலீசுப் படை வெறியாட்டம் போட்டது.

அன்று  ஜாலியன்வாலா பாக்கில் பிரிட்டிஷ் இராணுவம் இந்திய மக்களை நாற்புறமும் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வெறியாட்டம் போட்டதைப் போன்றதொரு மிகக் கொடிய பயங்கரவாத வெறியாட்டத்தை, சட்டிஸ்கரில் கடந்த ஜூன் 28அன்று இரவில் இந்திய துணை இராணுவப்படையான மத்திய ரிசர்வ் போலீசுப்படை நடத்தியிருக்கிறது. சிறுவர்சிறுமிகள் உள்ளிட்ட  19  அப்பாவி பழங்குடியினரைத் துடிக்கத்துடிக்கப் படுகொலை செய்துள்ளது.

கொல்லப்பட்ட இரண்டு அப்பாவிகளின் பிணங்களுக்கு மாவோயிஸ்ட் போல இராணுவச் சீருடையை அணிவித்து, பிணங்களின் அருகே துப்பாக்கிகள்  வெடிகுண்டுகளை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்ட போலீசுப்படை,  பிணங்களைச் சுற்றி தரையில் உறைந்திருந்த இரத்தக் கறைகளை அகற்றிய பின்னர் அன்றிரவே ஒரு டிராக்டரில் பிணங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு பசாகுடா கொண்டு சென்றது. அன்று இரவு முழுவதும் கிராமத்தில் முகாமிட்ட போலீசுப் படை, மறுநாள் காலைக்கடன் முடிக்க வீட்டைவிட்டு வெளியே வந்த ரமேஷ் என்பவரை அவரது வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொன்றது. இளம் சிறுமிகள்  4 பேரின் ஆடைகளை உருவி மானபங்கப்படுத்தி, அவர்களைத் தாக்கி வண்புனர்ச்சிக்கு முயற்சித்துள்ளது.

இப்படுகொலை நடந்த அடுத்த நாளில், 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் கசியத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, 1999க்குப் பிறகு பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக  நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை இதுதான் என்றும், இது மிகப் பெரிய வெற்றி என்றும் அறிவித்தது, மத்திய ரிசர்வ் போலீசுப் படை.

பின்னர், கொல்லப்பட்டவர் பழங்குடியின மக்கள் என்றும், இது மாவோயிஸ்டுகளுடனான மோதல் அல்ல, அப்பட்டமான படுகொலை என்றும்  அடுத்தடுத்து செய்திகள் வெளிவரத் தொடங்கின.  உடனே, “நாங்கள் தீவிரவாதிகளைக் கொல்வதற்கு முன்பாக, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பரிசீலிப்பது எங்கள் வேலை அல்ல” என்று திமிராக அறிவித்தார், மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் தலைமை இயக்குநரான  ‘வீரப்பன் புகழ்’ விஜயகுமார். பின்னர், கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பழங்குடியினர் என்று நிரூபணமானதும், “மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலின்போது  இடையில் சிக்கி அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால், அது மிகவும் வருந்தத்தக்கது” என்று முதலைக் கண்ணீர் வடித்தார்.

அதைத் தொடர்ந்து, “நாங்கள் மாவோயிஸ்டுகளைச் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்காகவே அக்கிராமத்துக்குச் சென்றோம். ஆனால், மாவோயிஸ்டுகள் எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டதால், நாங்கள் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சில அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடவடிக்கைக்குப் பின்னர் மாவோயிஸ்டுகள் தப்பியோடிவிட்டனர்” என்று கதையை அவிழ்த்துவிட்டது, மத்திய ரிசர்வ் போலீசுப் படை.

படுகொலை

இது போலி மோதல் என்றும், இத்தாக்குதலில் பெண்களும் சிறுவர்களுமாக 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உண்மைகள் வெளியானதும், “மத்திய ரிசர்வ் போலீசாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால், இது உண்மையான மோதல்தான், போலி மோதலே அல்ல; சிறுவர்கள் எவரும் கொல்லப்படவில்லை; நக்சல்பாரி பெண் போராளிகள்தான் கொல்லப்பட்டுள்ளார்கள்” என்றார்  மைய அரசின் உள்துறைச் செயலாளரான ஆர்.கே. சிங். ஆனால், ரிசர்வ் போலீசுப் படையினர் நாற்புறமும் சுற்றிவளைத்துக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுட்டதால்தான் எதிர்ப்புறமிருந்த படையினருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர், கிராம மக்கள்.

“இது குறித்து எவ்வித விசாரணையும் நடத்தத் தேவையில்லை. கொல்லப்பட்டவர்களில் மகேஷ், நாகேஷ், சோமுலு ஆகியோர் மாவோயிஸ்டு தலைவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன”  என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால்,  காகா நாகேஷ் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன். மற்றவர்கள் மீது பசாகுடா போலீசு நிலையப் பகுதியில் இதுவரை எந்த கிரிமினல் குற்றப் பதிவும் இல்லை.

கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசுப் படை வெறியாட்டம் போட்டுள்ளதை  அங்குள்ள மரங்கள் சிதைந்து குண்டு பாய்ந்திருப்பதையும், ஆடுமாடுகள் கூடக் குண்டடிபட்டுக் கொல்லப்பட்டுள்ளதையும் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. உடனே விஜயகுமார், “கண்ணி வெடிகளுக்கு நடுவே எங்கள் படையினர் உயிரைப் பணயம் வைத்துப் போரிடுகிறார்கள்.  மத்திய ரிசர்வ் போலீசு படை என்பது முறையான போர்ப் பயிற்சி பெற்ற கட்டுப்பாடுமிக்க படை; காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தும் படையல்ல” என்று ஊடகங்களைச் சாடினார்.

பசாகுடா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த  காகா சரஸ்வதி என்ற 12 வயது சிறுமி மற்றும் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கிப் படிக்கும் அவர்கள், கோடை விடுமுறையில் கிராமத்துக்கு வந்தவர்கள். பசாகுடா மத்திய ரிசர்வ் போலீசுப் படை முகாமுக்கு 3 கி.மீ. தொலைவில்தான் இந்தக் கிராமம் உள்ளது. கிராம மக்களோ அடிக்கடி பசாகுடா சந்தைக்குச் சென்று வருபவர்கள். அக்கிராம மக்கள் ரேஷன் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையும் வைத்துள்ளனர்.  இருப்பினும், “அப்பகுதியானது, மாவோயிஸ்டுகளின் விடுதலைப் பிரதேசமாகும். அங்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, எந்தப் பதிவேடுகளும் இல்லை” என்று கூசாமல் புளுகுகிறது போலீசுப் படை.

அன்று நல்ல நிலவொளி இருந்தது என்கிறார்கள் கிராம மக்கள். மேலும், இரவு நேரத்தில் ஊடுருவிப் பார்க்கும் வசதி கொண்ட பைனாகுலர்களையும் ரிசர்வ் போலீசுப் படையினர்  வைத்திருந்தனர். ஆனால்,“எங்கும் இருளாக இருந்தது, அதனால் கிராம மக்கள் யார், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் யார் என்று தெரியவில்லை” என்று நம்பச் சொல்கிறது போலீசுப் படை. பின்னர், நக்சலைட்டுகள் நாற்புறமிருந்தும் ஒரு மணி நேரத்துக்கு சுட்டனர் என்று புதிய கதையை அவிழ்த்து விட்டது இக்கொலைகாரப் படை. ஆனால், சிறுவர்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 30 பேர்தான் அந்தக் கிராமக் கூட்டத்தில் இருந்துள்ளனர்.  200 பேர் கொண்ட போலீசுப் படை சுற்றிவளைத்துத் தாக்கிய போது, இந்த 30 பேர் ஒரு மணி நேரத்துக்குத் தாக்குப் பிடித்துச் சுட்டிருக்கத்தான்  முடியுமா?

ஆனாலும், “கிராம மக்களையும் நக்சல்பாரிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கிறார்கள். விவசாயமும் செய்கிறார்கள். தாக்குதல் நடவடிக்கையின் போது அவர்கள் நக்சல்பாரிகளாக மாறுகிறார்கள். அந்தக்  கிராமத்தில் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்பதால், அவர்கள் நக்சல்பாரிகள் அல்ல என்று கருத முடியாது ” என்று இன்னுமொரு கதையை அவிழ்த்துவிடுகிகிறார், பிஜப்பூர் போலீசு சூப்பிரண்டு . “நக்சல்பாரிகள் அப்பாவி மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்; அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால், அதற்கு நக்சல்பாரிகள்தான் பொறுப்பு” என்று திமிராகப் பேட்டியளிக்கிறார், சட்டிஸ்கர் முதல்வர் ராமன் சிங்.

இது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத படுகொலை என்று அம்பலப்பட்டுப் போனதாலும், இதை எதிர்த்துப் பேசாவிட்டால் மக்களிடம் மேலும் தனிமைப்பட நேரிடும் என்பதாலும், சட்டிஸ்கரில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு இப்படுகொலையைக் கண்டித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் தீவிரவாத மாவோயிஸ்டுகள் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதை, பொறுப்பற்ற பேச்சு என்று சாடி, உண்மையறியும் குழுவை அமைத்து அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. அதேசமயம், மாநில காங்கிரசு கட்சியினர் அமைத்துள்ள உண்மையறியும் குழுவில் இருப்பவர்களில் பாதிப்பேர் மாவோயிஸ்டுகள் என்று அவதூறு செய்துள்ள பா.ஜ.க.வின் மாநில உள்துறை அமைச்சரான நான்கி ராம் கன்வார், நக்சல்பாரிகளுக்கு உதவும் எவரும் மாவோயிஸ்டு தீவிரவாதியாகத்தான் கருதப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என்று  ஊடகங்களுக்குத் திமிராகப் பேட்டியளிக்கிறார்.

படுகொலை

மத்திய ரிசர்வ் போலீசுப் படை நடத்திய பச்சைப் படுகொலையும், அதை நியாயப்படுத்த மேற்கொண்ட கீழ்த்தரமான முயற்சிகள் அனைத்தும் அம்பலப்பட்டுப் போனதாலும், இப்படுகொலை நடந்த பத்து நாட்களுக்குப் பின்னர், அரிசி, பருப்பு, ஆடைகள், பாத்திரங்கள்  என  நிவாரணப் பொருட்களுடன் இக்கிராமத்துக்குச் சென்றனர், அரசு அதிகாரிகள். “நாங்கள் மாவோயிஸ்டுகள் என்றால், எதற்காக அரசு எங்களுக்கு அரிசியும் பருப்பும் கொடுக்க வேண்டும்? எங்கள் குழந்தைகளைக் கொல்லும் போலீசுப் படை எங்களுக்குத் தேவையில்லை; முக்கியமாக, கோப்ரா படை தேவையயேயில்லை” என்று  வருவாய்துறை அதிகாரியிடம் தெரிவித்த இக்கிராம மக்கள், நிவாரணப் பொருட்களை வாங்க மறுத்து,  தங்கள் கோபத்தையும் சுயமரியாதையையும் எதிர்ப்பாகக் காட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கண்டனம், மனித உரிமை அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்கள் ஆகியவற்றால் அம்பலப்பட்டுப் போயுள்ள சட்டிஸ்கர் அரசு, வேறுவழியின்றி இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நக்சல்பாரிகள் அப்பாவி கிராம மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினால், துணை இராணுவப் படைகள் அந்த நேரத்தில் தற்காலிகமாகத் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்திவிட வேண்டும்; இருட்டில் ஊடுருவிப் பார்க்கக்கூடிய பைனாகுலர்கள் மூலம் சரிபார்த்துவிட்டுத் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்றெல்லாம் கொலைகாரப் படைகளுக்கு உபதேசிக்கிறது மைய அரசின் உள்துறை அமைச்சகம்.

குஜராத்தில் முஸ்லிம் பயங்கரவாதப் பீதியூட்டி அப்பாவி முஸ்லிம்களை மோதலில் கொன்று தீவிரவாதிகள் என்று இந்துவெறி பயங்கரவாத மோடி அரசு முத்திரை குத்தியதைப் போலவே, இப்போது சட்டிஸ்கரில்  மாவோயிஸ்டு பீதியூட்டி அப்பாவி பழங்குடியினரைச் சுற்றிவளைத்துக் கொன்றுவிட்டு, அவர்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றனர். பழங்குடி மக்கள் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறையை ஏவி அச்சுறுத்தி, அவர்கள் எந்த வகையிலும் மாவோயிஸ்டுகளுடன் இணைய விடாமல் தடுப்பது, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தி தாக்குவது என்ற உத்தியுடன்தான் இப்பயங்கரவாதப் படுகொலையை அரசும் துணை ராணுவப் படைகளும் நடத்தியிருக்கின்றன. கனிம வளமிக்க சட்டிஸ்கரில்,  கார்ப்பரேட் கொள்ளைக்காகப் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்திவரும் உள்நாட்டுப் போரின் இன்னுமொரு இரத்த சாட்சியம்தான் சர்கேகுடாவில் நடந்துள்ள இப்படுகொலை.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________

கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!

10

ர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகம், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த நான்கு குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறது. இது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும்.  இது ஏதோ தனிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதம் அல்ல; தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளி வர்க்கம், குழந்தைகளின் பாகுபாடற்ற சமத்துவக் கல்வி பெறும் உரிமைக்கு எதிராக விட்டுள்ள பகிரங்கச் சவாலாகும்.

‘‘தனியார் ஆங்கிலப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்பொழுது 25 சதவீத இடங்களை, தங்கள் பள்ளியின் அருகாமையில் வசிக்கும் சமூகத்தில் பின்தங்கிய, நலிவுற்ற மாணவர்களுக்கு ஒதுக்கிச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அப்படிச் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம் அல்லது தனியார் பள்ளிகள் நிர்ணயித்துள்ள கட்டணம், இதில் எது குறைவோ அக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும்” என்கிறது இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.

அதாவது, இச்சட்டப்படி சேரும் மாணவர்களுக்குத் தனியார் பள்ளி முதலாளிகள் இலவசக் கல்வியெல்லாம் அளிக்கவில்லை; அம்மாணவனுக்குரிய கட்டணத்தை அரசிடமிருந்து கறந்துவிடுகிறார்கள் என்றபோதும் முதலாளிகள் இச்சட்டத்தைத் தம் மீது திணிக்கப்படும் அநீதியான சுமையாகவும், தமது வியாபாரத்தில் அத்து மீறி செய்யப்படும் தலையீடாகவும் கருதி எதிர்த்து வருகிறார்கள்.  இச்சட்டப்படி சேரும் மாணவர்களை ஓசிக் கிராக்கிகள் என்றே முத்திரை குத்துகிறார்கள்.  யாராக இருந்தாலும், காசு கொடுக்க வக்கிருப்பவனைத்தான் அனுமதிப்போமேயொழிய, மற்றபடி உரிமை என்று கூறிக்கொண்டு ஏழைகள், அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் தமது பள்ளிவாசலை மிதித்துவிடக் கூடாது என்பதில் இந்தக் கும்பல் குறியாக இருக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொதுப்பாடத் திட்ட முறையை மட்டம் தட்டுவதற்குத் தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளிகள் எப்படியெல்லாம் புளுகினார்களோ, பார்ப்பன நஞ்சைக் கக்கினார்களோ,  அதனைப் போன்றே இச்சட்டத்திற்கு எதிராகவும் கீழ்த்தரமான, குசும்புத்தனமான வேலைகளைச் செய்து வருகிறார்கள்.  சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசங்கரா மேநிலைப்பள்ளி மற்றும் லேடி ஆண்டாள் வேங்கட சுப்பாராவ் மேநிலைப்பள்ளி என்ற இரண்டு தனியார் பள்ளிகளும், “இச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு குப்பத்துப் பசங்களை அனுமதித்தால், உங்கள் குழந்தைகளின் படிப்பும் பண்பாடும் கெட்டுவிடும்” எனத் தமது பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி, அவர்களை இச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்கும்படித் தூண்டிவிட்டது.

‘‘நாங்கள் சந்தியாவந்தனம் பண்ணுவோம்; நாங்கள் அசைவ உணவுகளைப் பள்ளிக்கு எடுத்துவர மாட்டோம்; படிப்பில் பின்தங்கிய பசங்களோடு எங்கள் பிள்ளைகள் எப்படி ஒன்றாக உட்கார முடியும்?” என்றெல்லாம் தமது ஆசிரியர்களையும், மாணவர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் பார்ப்பன சாதிவெறியைக் கக்கிப் பேசவிட்டு (தி ஹிந்து, ஏப்ரல் 14, பக்.6), இச்சட்டத்திற்கு எதிரான கருத்தை நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் உருவாக்கிவிடத் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.  தங்களின் எதிர்ப்பையும் மீறி, இச்சட்டப்படி ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டால், அம்மாணவர்களின் கதி என்னவாகும் என எடுத்துக் காட்டியிருக்கிறது, பெங்களூரு ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளி நிர்வாகம்.

அப்பள்ளி நிர்வாகம் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி முதல் வகுப்பில் சேர்ந்த அக்குழந்தைகளின் பெயர்களை வருகைப் பதிவேட்டில் சேர்க்காமல், அவர்களை வகுப்பறையில் தனியாக ஒதுக்கி, தீண்டத்தகாதவர்களாக நடத்திவந்திருக்கிறது.  இறைவணக்கம் நடத்தப்படும்பொழுது, அச்சிறுவர்கள் மற்ற மாணவர்களோடு சேர்ந்து நிறுத்தப்படாமல், ஓசிக் கிராக்கிகள் எனக் காட்டுவதற்காகத் தனியாக நிறுத்தப்பட்டுள்ளனர்.  வகுப்பறையில் அக்குழந்தைகள் கடைசி பெஞ்சில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அக்குழந்தைகள் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்னால், அவர்கள் என்ன உணவு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் டிபன் பாக்ஸைத் திறந்து சோதித்திருக்கிறது, பள்ளி நிர்வாகம்.  அக்குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கப்படுவதில்லை.  அக்குழந்தைகளின் பெற்றோர்கள், பெற்றோர்கள்  ஆசிரியர் கழகக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை.  இப்படி அக்குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, அதன் உச்சமாக அக்குழந்தைகளின் தலை சொட்டையாகத் தெரியும்படி, உச்சந்தலை முடியைக் கொத்தாக வெட்டிப் போட்டுள்ளது, பள்ளி நிர்வாகம்.

கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் பள்ளி முதலாளிகளின் கூட்டமைப்பு இச்சட்டத்திற்கு எதிராக ஜூலை 16 முதல் ஒரு வார காலத்திற்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.  அக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பள்ளியில் அந்த நான்கு குழந்தைகளும் அவமதிக்கப்பட்ட சம்பவமோ, அவ்வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக. ஜூலை 13 அன்று நடந்திருக்கிறது.  எனவே, இச்சட்டத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வலுவாகவும் வக்கிரமாகவும் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த வன்முறை, நவீன தீண்டாமை அக்குழந்தைகளின் மீது ஏவிவிடப்பட்டுள்ளது.

அந்நான்கு குழந்தைகளையும் மற்ற மாணவர்களுக்குத் தெரியும்படிதான் ஒதுக்கி வைத்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்; தலைமுடியைச் சிரைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.  இந்தக் கேடுகெட்ட வக்கிரத்திற்கு ஆசிரியர்களும் துணை நின்றிருக்கிறார்கள். ஏதுமறியாத இளம் குழந்தைகளை இப்படி அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கும் அப்பள்ளி நிர்வாகிகளையும் ஆசிரியர்களையும் நடுத்தெருவில் நிறுத்திச் சவுக்கால் அடிப்பதுதான் நியாயம்.

ஆனால், வல்லமை பொருந்திய மைய அரசும், மாநில அரசும் மயில் இறகால் தடவிவிடுவது போல், “அப்பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்; அந்த நோட்டீசுக்குப் பதில் அளிக்க பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறோம்;  அந்நிர்வாகம் பதில் அளித்த பிறகு, அது பற்றி விசாரித்து, உண்மை இருந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம்” என அறிக்கை சவடால்தான் அடித்து வருகின்றன.

நவீன-தீண்டாமை
தலைமுடி வெட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஏழைக் குழந்தைகள் – படம் http://www.thehindu.com

காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் எனப் பல கவர்ச்சிகரமான சட்டங்களை அடுத்தடுத்து இயற்றியிருக்கிறது.  அப்படிபட்ட ஏட்டுச் சுரைக்காய் சட்டங்களுள் ஒன்றுதான் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.  குழந்தைகளின் கல்வி உரிமை பற்றிப் பேசுவதாகப் பீற்றிக் கொள்ளப்படும் இச்சட்டமும், பல்வேறு உரிமைச் சட்டங்களைப் போலவே, பல்வேறு ஓட்டைகளுடன் அரைவேக்காட்டுத்தனமாகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த ஓட்டைகளை அடைத்துவிட்டு, இந்தச் சட்டத்தைக் கண்டிப்பாகவும், தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்தை மீறிக் குழந்தைகளைத் துன்புறுத்தாத வண்ணமும் அமல்படுத்தினால்கூட, இச்சட்டம் குழந்தைகளின் கல்வி உரிமைக்கானதாக, அவ்வுரிமையை உத்தரவாதப்படுத்துவதாக அமைந்துவிடாது.

இந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கமே, அரசுப் பணத்தைத் தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு வாரிக் கொடுத்து, தனியார்மயத்தின் கீழ் புதுவிதமான அரசு உதவி பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை உருவாக்கிப் பராமரிப்பதுதான்; நரியைப் பரியாக்கியாக்கிக் காட்டுவது போல, கட்டணக் கொள்ளை நடத்தும் தனியார் பள்ளி முதலாளிகளை, சமூகப் பொறுப்புமிக்கவர்களாகக் காட்டுவதுதான்.  தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் மட்டும் இக்கட்டாயக் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற 141 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது.  இந்தப் பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஏழை மாணவர்களின் பெயரால் அரசுப் பணம் மடைமாற்றி விடப்படுகிறது.

தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை உருவாக்கியது; மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவது; குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துவது; தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் தாழ்த்தப்பட்டபழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்குவது என அரசு பல வழிகளில் கல்வித்துறையில் நுழைந்துள்ள தனியார்மயத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை மாணவர்களின் பெயரால் எடுத்து வருகிறது.  அதிலொன்றுதான் இக்கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்.

இந்தச் சட்டத்தின் மூலம் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஏழை  பணக்காரன் என்ற வேறுபாடின்றி, ஒரேவிதமான பள்ளிக் கல்வியைக் கட்டாயமாகவும் இலவசமாகவும் கொடுக்கும் பொறுப்பிலிருந்தும், கடமையிலிருந்தும் அரசு தந்திரமாக விலகிக் கொள்கிறது.  கல்வி தனியார்மயமானலும்கூட, இது போன்ற கல்விச்சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஆங்கில வழிக் கல்வியைப் பெற்றுவிட முடியும் என்ற மயக்கத்தை ஏழை மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்துகிறது.

இக்கவர்ச்சிக்கு ஏழைக் குடும்பங்களைப் பலியாக்குவதன் மூலம், “கல்வியைத் தனியார்மயமாக்கதே!” என்ற கோரிக்கையை, போராட்டத்தைத் திசை திருப்புவதும், கல்வி என்பது காசுக்கு விற்கப்படும் கடைச்சரக்குதான் என்பதை நிலைநிறுத்துவதுமே அரசின் நோக்கம்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!

20
சுடுகாட்டுச்-சிறுவர்கள்

சிதையின் குழந்தைகள்  ஆவணப்படம் | Children of the Pyre

“நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால்  தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” என்று சிதையின் குழந்தைகள் (The Children of Pyre) ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தினார் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜாலா.

குளிரூட்டப்பட்ட அந்த திரையரங்கத்தில் இது ஒரு விளம்பர யுக்தியாகவே பட்டது. ஆனால், ஆவணப்படம் ஆரம்பித்த சில நொடிகளில் அந்த திரையரங்கமே காசி நகரின் கங்கைக்கரையில் பிணங்கள் எரிக்கப்படும் சுடுகாடாக மாறிவிட்டது. உடல் முதல் உள்ளம் வரை வேர்த்து விறுவிறுத்துவிட்டது.  காரணம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணங்களால் மட்டும் அல்ல, அந்த படம் முன் வைக்கும் அனல் தகிக்கும் உண்மைகளால்.

குழந்தைகள் என்றவுடன் ஹார்லிக்ஸ் பிள்ளைகளும் அமுல் பேபிகளும் நினைவுக்கு வந்தால் நீங்கள் இந்தப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். இது புனித பூமியான காசியில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு நேராக போய்ச் சேர உதவும் வகையில் பிணங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றியது.

ஆவணப்படத்தின்  டிரைலர்

காசி நகரம்:
மாலை நேரம்:
மணிகார்னிகா சுடுகாடு:

சுடுகாட்டுச்-சிறுவர்கள்பிணம் எரிப்பதற்கு முன் சடங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் சில சிறுவர்கள் உஷாராக நின்று கொண்டிருக்கிறார்கள்.  பிணத்தை சிதையின் மீது வைப்பதற்கு முன்பு அதன் மீது போர்த்தப்பட்டிருக்கும் பல வண்ண பளபளப்பான துணியை எடுக்கிறார் புரோகிதர். அவ்வளவுதான் அந்தத் துணியை நொடியில் கைப்பற்றிக் கொண்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்கிறான் ஒரு சிறுவன். பிணத்துடன் வந்தவர்களோ சிறுவர்களை திட்டியபடி துரத்துகிறார்கள். துணியை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாற்றியபடி சிறுவர்கள் சிட்டாய் பறக்கிறார்கள்.

காசி ஹிந்துக்களுக்கு மிக முக்கிய புண்ணிய ஸ்தலம். தவறு செய்யும் கிறித்துவர்களுக்கு உடனடியாக சர்ச்சில் பாவமன்னிப்பு கிடைப்பது போல், ஹிந்துக்கள் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்து விட்டு காசியில் உள்ள கங்கையில் குளித்துவிட்டால் அவற்றை கரைத்துக் கொள்ளலாம்.

இன்னும் முக்கியமாக ‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கு நேராக போய் விடலாம்’ என்ற நம்பிக்கையும் உண்டு. கடவுளின் நகரில் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும் துறைமுகமாக இருந்தாலும் சரி, அங்கு பிணங்களை எரிக்கும் வேலையை செய்பவர்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’தான். ‘நாங்க குளிச்சு சுத்த பத்தமாக வந்தாலும் எங்களைத் தொட மாட்டார்கள். பிணத்தையும் பிணத்தை மூடியிருக்கும் துணியையும் தொடுவதால் எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறார்கள்’ என்கிறான் ஒரு சிறுவன்.

காசியில் கங்கைக் கரையில் இருக்கும் மணிகார்னிகா சுடுகாட்டில் பல பிணங்கள் ஒரே நேரத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு காட்சியில் பார்க்கும் தூரத்தில் 14 பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதாக எண்ணுகிறான் ஒரு பையன். அனைத்து பிணங்களையும் தொழில்முறை வெட்டியான்கள் எரிக்க வேண்டும் என்றால் வரிசையில் பிணங்கள் வெயிட் செய்து நாறிவிடும். ‘நாங்கள் இல்லையென்றால் இந்த பிணங்களை நாய்கள்தான் இழுத்துக் கொண்டு போகும்’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். ‘பிணம் சீக்கிரமா எரிஞ்சுடணும்னுதான் எங்க விருப்பம், அப்பதான் எங்க வேலை சீக்கிரம் முடியும், தூர தூரத்திலிருந்து வந்திருக்கும் சொந்தக்காரங்களும் சீக்கிரம் திரும்ப முடியும்’ என்று வாடிக்கையாளர்கள் மீது அக்கறையுடன் பேசுகிறான்.

‘இப்போ எனக்கு 15 வயதாகிறது, 5 வயதிலேயே இந்த வேலைக்கு வந்து விட்டேன்’ என்கிறான் ஒரு பையன். இன்னொருவனை 8 வயதுக்கு மேல் மதிக்க முடியாது.

ரவி, யோகி, சுனில், மனீஷ், ககன், ஆஷிஷ், கபில் என்ற ஏழு சிறுவர்களின் மூலமாக புண்ணிய நதிக் கரையில் இருக்கும் மயானத்தின் செயல்பாடுகளை காட்டுகிறது இந்த ஆவணப் படம்.

பிணங்களை எரிப்பதற்கு உதவி செய்யும் எடுபிடிகளாக இந்த சிறுவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக பிணத்தை மூடி வரும் அலங்காரங்கள் செய்யப்பட்ட, பல வண்ணத் துணியை எடுத்துச் சென்று விற்பதில்தான் அவர்களுக்கு வருமானம். அதைத் தவிர பிணத்தை எரிக்க வருபவர்களிடம் வசூலிக்க முடிந்ததை வசூலித்துக் கொள்கிறார்கள்.

பிணத்தை சிதையில் ஏற்றும் முன்பு துணியை உருவி அருகில் வைக்கிறார்கள். அந்த நேரத்தில் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள், லாகவமாக அதை கையில் எடுத்தபடி கவனத்தை ஈர்த்து விடாதபடி நடக்கிறார்கள், யாராவது கவனித்து விட்டால் ஓடுகிறார்கள். சில சமயம் பிணத்தை எரிக்க வந்திருப்பவர்கள் அல்லது வெட்டியான் பிடித்து துணியை பிடுங்கி கொள்கிறார்கள் ‘சில பேர் நல்லவங்க, துணியை கொடுத்திடுவாங்க, போய் காசு சம்பாதிச்சுங்க என்று. சில பேருக்கு பொறாமை நாங்க துணியை வித்து நிறைய சம்பாதிக்கிறோம்னு பிடுங்கிடுவாங்க, துணியை சிதையில் வைத்து எரித்துப் போடுவார்கள்’.

அந்தத் துணியை எடுத்துச் சென்று கடைகளில் விற்றால் ஒரு துணிக்கு 2.50 ரூபாய் கிடைக்கும். அதை துவைத்து, மடித்து, பையில் போட்டு கடைகளில் 25-30 ரூபாய் விலைக்கு மறுபடியும் விற்கிறார்கள் கடைக்காரர்கள்.

கிடைக்கும் துணி எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு போய் விற்று பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள் இந்த சிறுவர்கள். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்காகத்தான் தங்கள் வாழ்நாளையே இங்கு கழிக்கிறார்கள். பிணம் ரோட்டில் கடக்கும் போது நாம் மூக்கை பொத்திக்கொள்கிறோம். நம் குழந்தைக்கு கூட சாவைப் பற்றி விளக்காமல் “சாமிகிட்ட போய்டாங்க” என்று தான் சொல்லுகிறோம். ஆனால் காசியில் இருக்கும் இந்த சிறுவர்கள் சாவை தினமும் எதிர்கொள்கிறார்கள்.

“ஆரம்பத்தில் இந்த வேலைக்கு போனா என் அம்மா என்னை அடித்து நொறுக்கி விடுவார். இனிமேல் சுடுகாட்டிற்கு சென்றால் கொன்று விடுவேன் என்பார். ஆனால் ஒரு நாள் 500 ரூபாய் நோட்டை கொண்டு கொடுத்த பிறகு ‘நீ தினமும் சுடுகாட்டிற்கே வேலைக்கு போ’ என்று சொல்லிவிட்டார்”

அவர்கள் கஞ்சா புகைக்கிறார்கள், புகையிலை சாப்பிடுகிறார்கள். ‘இத்தனை பிணங்களை எரிக்க வேண்டியிருக்கிறது, கஞ்சா பிடிச்சா இன்னும் நான்கு பிணங்களை எரிப்பதற்கு தயாராக மனது லேசாகி விடும்’ என்கிறான் ஒரு பையன்.

‘சின்ன பையனாக இருந்து கொண்டு இந்த வயதிலேயே புகையிலை சாப்பிடுகிறாயே’ என்று கேட்டதும்

‘அது சரி, இவ்வளவு சின்ன வயதில் வேலை செய்து சம்பாதிக்கிறேனே, அதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா! அவ்வளவு அக்கறை இருந்தா அரசாங்கத்திடம் சொல்லி மாசா மாசம் 5,000 ரூபாய் அனுப்பி வைக்க ஏற்பாடு செய். நான் இதை எல்லாம் விட்டு விடுகிறேன். அது முடியாதுன்னா என்னை என் போக்கில் விட்டு விடு’

ஆம், இவர்களின் வாழ்க்கை பரிதாபப்பட வேண்டிய ஒன்றல்ல, சமூகத்தின் மீது கோபம் கொள்ள வேண்டிய விடயம். நம் பரிதாபத்தை உதிரும் மயிருக்கு சமமாக கூட அவர்கள் மதிப்பதில்லை.

“இன்று ஒரு அரசியல் தலைவரின் பிணத்தை எரிக்கிறார்கள். எங்க தேசத்தின் மிகப்பெரிய தலைவராம் அவர்” என்கிறான். தூரத்தில் மூவர்ணக் கொடி போர்த்திய உடல் ஒன்று சிதையில் வைக்கப்படுகிறது.

“அரசியல் தலைவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்”

“தாயோளி எல்லாவனும் தாயோளிகதான்!. பணக்காரங்களுக்குத்தான் வேலை செய்கிறானுங்க, அதிலும் முதலில் அவங்க பையை நிரப்பிக் கொள்கிறானுங்க’

“நான் மட்டும் நாட்டின் தலைவரானால், எல்லாருக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய ஏற்பாடு செய்வேன். எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி செய்து கொடுப்பேன். ஆனா, ஏழைகளுக்கு மட்டும்தான். பணக்காரங்க எல்லாம் தாயோளிங்க’

“தலைவர்கள் பிணத்தின் மேல் மூவர்ணக் கொடி போர்த்தியிருக்கும். அதை எடுத்துச் சென்று போன முறை ஒரு படகுக் காரருக்கு 5 ரூபாய்க்கு விற்றேன்”. அந்த வகையில் ஒரு தலைவரின் மரணம் இந்த சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஓரிரு ரூபாய்கள் அதிக வருமானம் கிடைக்கும்.

ஆகஸ்ட் 15 அன்று மூவண்ணக் கொடி ஏற்றுகிறார்கள், தேசிய கீதத்தை பாடிக் காட்டுகிறான் ஒரு சிறுவன். மாலையில் ஓய்வு கிடைக்கும் போது தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.

பிணங்கள் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவெல்லாம் கூட வேலை செய்கிறார்கள்.  பிணங்கள் எரிந்துக்கொண்டே இருக்கும் என்பதால் பக்கத்திலேயே, அதாவது எரிந்துகொண்டிருக்கும் சிதைக்கு 5 அல்லது 10 அடிக்குள் உள்ள தரையில் அப்படியே படுத்துக்கொள்கிறார்கள். இரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தூங்குவதற்குள் ஏதாவது ஒரு பிணத்தை புரட்டிப் போடச் சொல்லி யாராவது எழுப்பி விடுகிறார்கள்.

வெயில் காலத்தில் சூட்டில் சிறுநீர் கூட வராது, உடம்பெல்லாம் வேர்க்குருக்களால் நிரம்பி விடுகிறது.

ககன் எனும் சிறுவனுக்கு 10 வயது தான். அவன்தான் எல்லோரையும் விட குறும்புக்காரன். தூக்கத்தில் ‘சிதைகள் எழுந்து நிற்கும், வாயைப் பிளந்து காட்டும்’ என்று சொல்கிறான்.  ”ஒரே கெட்ட கனவு பேய்கள் எல்லாம் வருகின்றன” என்கிறான்.

சுடுகாட்டுச்-சிறுவர்கள்

ந்தப்படத்தின் டிவிடியை என் நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். உயர்  மத்திய வர்க்க நண்பரின் மனைவி இந்தப்படத்தை பார்த்துவிட்டு “நல்ல வேளை, என் பிள்ளைகள் புண்ணியம் செய்தவர்கள்”என்றார். பார்ப்பனிய தத்துவத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள நண்பரின் மனைவி ஒரு சாட்சி. ஆனால் காசியிலேயே பிறந்து தினமும் கங்கையில் காலை மாலை குளிக்கும் அந்த சிறுவர்களின் பாவம் கரையவில்லை என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கங்கையுடன் துளியும் சம்பந்தமில்லாத நம் சென்னை குழந்தைகள் கூட புண்ணியத்துடன் பிறந்துவிடுகின்றன.

கண்ணுக்கு முன் நடக்கும் எந்த அயோக்கியத்தனத்தையும் கடந்து சூடு சொரணையற்று செல்ல நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆயிரமாண்டு காலம் அடிமையாக, அரை வயிற்றுக் கஞ்சி குடித்து ஆதிக்க சாதிக்கு உழைத்து, கேள்வி கேட்காமல் மடிந்த மனிதர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவத்தை எண்ணி, அடுத்த ஜென்மத்தில் ஆதிக்க சாதியில் பிறக்க வேண்டிக் கொண்டே, விதியை நொந்து இறந்தவர்கள் தான்.

அந்த தத்துவம் இன்று சுரண்டப்படுபவர்களை பாவம் செய்தவர்களாகவும், சுரண்டுபவர்களை புண்ணியம் செய்தவர்களாகவும் சொல்லுகிறது. அப்பொழுது கங்கையில் குளித்தால் பாவம் போகாது என்ற சிறு உண்மையையாவது ஒப்புகொள்வார்களா? தலித் ஒருவர் கங்கையில் குளித்துவிட்டு வந்தால் ‘பாவ’மெல்லாம் போய், நல்ல வாழ்க்கை அவருக்கு கிடைக்குமா?

சுடுகாட்டுச்-சிறுவர்கள்
இயக்குநர் ராஜேஷ்.எஸ்.ஜாலா

ஆனால் இந்தப் படத்தை எடுத்த ராஜேஷ் ஜாலா ஒரு தீர்வை சொல்கிறார். ‘இந்தப்படத்தை அரசியல்வாதிகள், ஆளுபவர்களுக்கு போட்டு காட்ட வேண்டும். இது தான் இந்தியா’ என்று அம்பலப்படுத்தி அவர்களை திருத்த வேண்டும் என்கிறார்.

‘ஆளுபவர்களும், அதிகாரிகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது’ என்பது அபத்தம். சரி தெரியாது என்ற வைத்துக்கொண்டாலும், தினம் தினம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைக்கும் பொருளாதார கொள்கை, போராடும் மண்ணின் மைந்தர்களை தீவிரவாதிகள் என்று கொல்வது போன்ற சமூகப் பணி செய்துக்கொண்டிருக்கும் அவர்கள் இந்த படத்தை பார்த்து திருந்தி விடுவார்கள் எனும் வாதத்தை பற்றி என்ன சொல்வது! அவர்கள் என்ன விஜய்காந்த படத்தில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளா அல்லது எம்ஜி ஆர் படத்தில் வரும் நம்பியார்களா, நீண்ட நீதி நெறி வசனத்தின் பின் திருந்திவிட?

ஹார்லிக்ஸ் பிள்ளைகள் அல்ல, சமுகத்துடன் உறவாடும் பிள்ளைகள் தான் நேர்மையாகவும், இரக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த சிறுவர்கள் ஒரு அனாதை பிணத்தை பார்த்தவுடன் அதற்கு ஈமச் சடங்குகள் செய்து அதை எரிக்கிறார்கள்.

அந்த சிறுவர்களுக்கு அழகுணர்ச்சி இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆடிப்பாடுகிறார்கள். தங்களுக்குள் சிரித்து கேலி பேசி மகிழ்கிறார்கள். நவராத்ரா திருவிழா நேரத்தில் எரியும் சிதைகளின் பின்னணியில் மேடை போட்டு ஆட வரும் நாட்டிய பெண்களுடன் ககன் டான்ஸ் ஆடுகிறான். ‘நான் அவ்வளவு நல்லா ஆடலை’ என்று வெட்கத்துடன் புன்னகைக்கிறான். மழை பெய்யும் போது, எடுத்து வைத்திருந்த பிணத்தை போர்த்தும் துணியை கட்டிக் கொண்டு அழகு பார்க்கிறான் இன்னொரு சிறுவன்.

‘இந்தத் தொழிலை விரும்பி தான் செய்கிறோம் என்று அவர்கள் எங்குமே சொல்லவும் இல்லை. வேறு வழியில்லை, குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

ஹிந்துத்வவாதிகளும், ஜெயமோகன்களும் ஜாக்கி ஏத்தி நிற்க வைக்கும் காசியின் புனிதத்தை இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவற்றை கேள்வி கேட்டபடியே தான் இருக்கிறது. படத்தை பார்த்த பிறகு தீர்வை நோக்கி நகர வேண்டியது நாம் தான். என்ன செய்ய போகிறோம்? இவர்களுக்காக உச்சு கொட்டிவிட்டு நகரபோகிறோமா? அல்லது ஹிந்து மரபை எண்ணி கன்னத்தில் போட்டு கொண்டு முக்தியடைய போகிறோமா?

_________________________________________________

– ஆதவன்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சிறுமி சுருதி கொலை:சீயோன் பள்ளியை அரசுடமையாக்கு!

5

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரைபோராடுவோம்  !

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் தெருமுனைக்கூட்டம்

சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் படித்து  வந்தசுருதி, அப்பள்ளி முதலாளியின் லாபவெறியினால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இக்கொலைக்கு காரணமான அப்பள்ளியினை அரசுடமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில்  02.08.12 அன்று தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மாலை  6 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

”பாவம் அந்தக் குழந்தை , வாழ வேண்டிய வயதில் விதி அழைத்துக் கொண்டதே” என்ற அனுதாபங்கள் பரவிக் கிடந்த இடங்களில் எல்லாம் சென்று கண்ணீர் மட்டுமல்ல, இக்குழந்தையின் இறப்புக்கு காரணமான தனியார்மயத்தினை ஒழிப்பதற்கான போராட்டம்தான் தற்போதைய தேவை என்பதை உழைக்கும் மக்களிடம் பதிய வைக்கும் வகையில் இந்த தெருமுனைக் கூட்டம்அமைந்தது.

கடந்த 25 அன்று தனியார்மய லாபவெறிக்கு படுகொலை செய்யப்பட்ட சுருதிக்கு அஞ்சலி செய்யும் நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் “சிறுமி சுருதிக்கு நடந்தது விபத்து என்று கூறுவது அயோக்கியத்தனம் என்றும் இது படுகொலை என்பதை புரிந்து கொண்டதால்தான் முடிச்சூர் கிராம மக்கள் கொதித்தெழுந்து போரடி பேருந்தினை தீ வைத்து எரித்தார்கள்.  இது இரங்கல் கூட்டம் அல்ல, கண்ணீர் மட்டும்  விட்டு விட்டுப் ,போவதல்ல நமது வேலை, .தினமும் பல குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கல்வித் தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் நல்லப் படிப்பைத் தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர். கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ், பேருந்து கட்டணம் என்று பகற் கொள்ளையை நடத்திவரும் தனியார் பள்ளிகள், அதை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களை மிரட்டுவதும், குழந்தைகளை அடித்து கொடுமைப் படுத்துவதும் என ரவுடிகளாக செயல்படுவதையும் கூறி இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி தரமான கல்வியைத் தரும் ? இந்த கல்வி முறையில் படிக்கின்ற குழந்தைகள் சிந்தனை சீரழிக்கப்பட்டு சமூகத்திற்குஉதவாதவையாக  மாற்றப்படுவதையும் ” விளக்கினார்.

“அடிப்படை வசதிகள் அரசால் மறுக்கப்பட்ட நிலையிலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 800 பேர்கள் மருத்துவப் படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கல்வியை ஒழுங்காக அளிக்காமல், கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டும், சட்டவிரோதமாக செயல்பட்டும் வரும் தனியார் பள்ளிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் குடிக்கின்ற தண்ணீர் முதல் நாம் பயன் படுத்துகின்ற அனைத்தும் காசாகிவிட்ட நிலையில் கல்வியிலும் தனியார்மயம் தரமான கல்வி என்ற பெயரில் நுழைந்து உயிர் வாழும் உரிமையான கல்வியைசூறையாடிக் கொண்டிருப்பதற்கு எதிராக உழைக்கின்ற மக்கள் வீதியிலிறங்கி போர்க்குணமான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் தான் இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும், அதற்குமக்களை அணி திரட்டுவதற்கான கூட்டம்தான் இது.” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாகப் பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச்செயலாளர் தோழர். வெற்றிவேல் செழியன், முன்னாள் சாராயவியாபாரியும், இந்நாள் கல்வி முதலாளியுமான ஜேப்பியாரின் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஓட்டுனர் என்று தனது உரையினை  ஆரம்பித்தார். “ இந்தப் பிரச்சினையை தொழிற்சங்கத்தை சேர்ந்த தான் பேசுவதற்கு முழு உரிமையும் உண்டென்றும் ஏற்கனவே  இந்த சீயோன் பள்ளி முதலாளி விஜயன் தன் கல்வி நிறுவனங்களில் வேலை செய்த ஓட்டுனர்களை தினமும் 12 மணி நேரம் கசக்கிப் பிழிந்தும் சம்பளம் கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததையும் அதைக்கண்டு கொதித்துப் போன அந்த தொழிலாளிகள் புஜதொமு சங்கத்தை ஆரம்பித்து போராடியதையும் அதனாலேயே அத்தொழிலாளர்கள் வேலை நீக்கம்செய்யப்பட்டதையும்” எடுத்துக்கூறினார்.

சங்கம் ஆரம்பித்த தோழர்களை ரவுடிகள் மூலம் மிரட்டிய  ஒரு ரவுடி இந்த நல்லாசிரியர் விருது பெற்றவர், கல்வி வள்ளல் என்று புகழப்படுவதையும் அம்பலப்படுத்தினார். தொழிலாளியான சுருதியின் தந்தை தனக்கு லாபம் வரும் என்பதற்காக பழைய வண்டியை வாங்கி ஓட்டக்கூடாது என்று   நேர்மையுடன் இருந்ததை பல நூறுகோடி சொத்துடையவிஜயன் தன்னுடைய லாபம் குறையக்கூடாது என்பதால் பழைய வண்டிகளை வாங்கி இயக்கிய அயோக்கியத்தனத்துடன் ஒப்பிட்டு பேசினார்.

உற்பத்தி துறையைவிட லாபம் கொழிக்கும் துறையாக மாறிப்போன கல்வித்துறையை வைத்து பல கோடிகளை முதலாளிகள் பெருக்கிக்கொள்கிறார்கள். அதற்கு ஏற்றபடி அரசாங்கம் அரசுப்பள்ளிகளை இழுத்து மூடி தனியார் பள்ளிகளில் மாணவர்களை வலுக்கட்டாயமாக தள்ளி விடுவதையும் விளக்கினார்.

இப்படி ஒரு விஜயன்அல்ல, பல விஜயன்கள் பல சுருதிகளை தினமும் கொன்று கொண்டிருக்கிறார்கள். சாதாரணமக்கள் கூட தனியார் பள்ளி நிறுவன முதலாளிகளை மாபியா குற்றக் கும்பல் என்று கூறும் அளவுக்கு, தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் அயோக்கியத்தனத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இன்று விவசாயம் , சிறு தொழில் , வணிகம் என்று அனைத்துமே தனியார் – பன்னாட்டு முதலாளிகளால் அழிக்கப்பட்ட சூழலில்  இந்த மறுகாலனியாக்கத்தை வேரறுக்க மக்கள் அணி திரண்டு போராட வேண்டும்.

அன்று தொழிலாளர்கள் காய்ந்த வயிறுடன் உணவின்றி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும்போது, விஜயனிடம் பிரியாணி வாங்கித்தின்ற காவல் துறையும் கல்வித்துறை அதிகாரிகளும்  இன்று அவனை கைதுசெய்திருக்கிறார்கள் என்றால் அது மக்களின் போராட்டம்தான் அதை சாதித்தது. அப்படி 5000 பேர்கள் போராடி அவனை கைது செய்ய முடியுமென்றால் லட்சக்கணக்கான மக்கள் வீதியிலிறங்கி போராடும் போது கண்டிப்பாக இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும் “ என்று தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியில் புமாஇமு சென்னைக் கிளைத் தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தனியார்மயத்திற்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வினை ஊட்டும் வகையில் அமைந்தது.

இந்த தெருமுனைக்கூட்டத்தில் மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாம்பரம் பகுதி வாழ் உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர். வியாபாரிகளும் நிகழ்ச்சிகளை  கவனித்து ஆதரவளித்தனர். மேலும் அந்த தெருமுனைக்கூட்டத்தில் மட்டும் 10000 ரூபாய் வரை துண்டேந்தி வந்த தோழர்களுக்கு மக்கள் மனமுவந்து நிதியளித்தார்கள். உழைக்கும் மக்கள் தானாகவே முன்வந்து கூட்டத்தின் நடுவில் செல்பவர்களை முறைப்படுத்தியும் வந்தனர் .

இந்த தெருமுனைக் கூட்டத்தை ஒட்டி தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தோழர்கள் பிரச்சாரம்செய்த போது உழைக்கும் மக்கள்  கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தே தீர வேண்டும் என்பதை புரிந்து கொண்டும், பலர் கண்ணீர் விட்டும் தனியார் பள்ளி முதலாளிகளை வசைமாரிப் பொழிந்து  நமக்கு ஆதரவளித்தார்கள், பார்ப்பன மற்றும் மேட்டுக்குடிகளோ “குழந்தை செத்ததுக்கு அவர் என்ன பண்ணுவார்?, செத்தது விதி” என்றனர். அதற்கு தோழர்கள் “உங்க குழந்தை செத்தாலும் அது விதிதானா?”  என்று கேட்டு அவர்களுக்கு உறைக்கும்படி விளக்கினர்.

காசு கொடுத்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் தனது மூளையில் அறைந்து வைத்திருக்கும் மேட்டுக் குடியினரின் மயக்கத்தை அவ்வளவு சீக்கிரத்தை உடைத்து விட முடியாது.  ஆனால் உழைக்கும் மக்களின் மத்தியில் தனியார்மயத்தை ஒழித்தால் மட்டுமே கல்வி கற்கும் உரிமையை பெற முடியும் என்ற கருத்தைபதிய வைப்பதாக இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________________________

– தகவல்:  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , சென்னை.

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது?

8

சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? பேருந்தின் ஓட்டையா? தனியார்மய இலாபவெறியா?

பள்ளி-மாணவி-சுருதி-கொலை

சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி சுருதி, 25ஆம் தேதி புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பும்போது, பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் கால் தவறி விழுந்து, பின் சக்கரம் தலையில் ஏறி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தப் பள்ளிப் பேருந்துக்கு ஜூலை 9ஆம் தேதியன்றுதான் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எஃப்.சி. வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நாளேடுகளில் வெளியாகவே, இப்பிரச்சினையைத் தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பேருந்தின் ஓட்டுநர், கிளீனர் சிறுவன், ஒப்பந்தக்காரர் யோகேசுவரன், பள்ளித் தாளாளர் விஜயன், பேருந்துக்கு சான்றிதழ் தந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஆகியோர் கைது செய்து சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடின்றி வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தைச் சரியாகப் பராமரிக்காதது, பராமரிப்பற்ற வாகனத்தைப் பயன்படுத்துவது, கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை இழைத்தது  ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

“கைது மட்டும் போதாது; இதை ஏன் கொலை வழக்காக மாற்றக்கூடாது” என்று விசாரணையின் போது நீதிபதிகள் ஆவேசமுற்றதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்க புதிய சட்ட வரைவை உருவாக்கி அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளதாகவும் தினமலர் செய்தி கூறுகிறது.

குடந்தை தீ விபத்துக்குப் பின் எல்லாப் பள்ளிகளுக்கும் தீப்பிடிக்காத கூரைகள் வந்தது போல , இதற்கும் ஒரு தீர்வு வேண்டும் என்று கூறியிருக்கிறது தினமணி. அதென்ன தீர்வு, ஓட்டை விழ முடியாத பேருந்துகளா?

மொத்தப் பிரச்சினையையும் பேருந்தின் ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில், தம் கண்களுக்கு பட்டியைக் கட்டிக் கொண்டுதான் ஊடகங்கள், நீதிமன்றம் ஆகிய அனைத்துமே இப்பிரச்சினையை அணுகுகின்றன. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியன் சினிமாவை ரீமிக்ஸ் செய்து சிந்திப்பதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது.

பள்ளி-மாணவி-சுருதி-கொலை

இது வெறும் பேருந்து விபத்து அல்ல. மெட்ரிக் பள்ளிக்குப் பிள்ளைகளை அள்ளிப்போகும் வாகனத்தில் ஏற்பட்டுள்ள விபத்து. டான் பாஸ்கோ, பத்மா சேஷாத்ரி போன்ற அதிஉயர் தரம் வாய்ந்த பள்ளிகள் இயக்கும் வாகனங்களில் இத்தகைய ஓட்டைகள் விழுவதில்லை. ஆம்னி பேருந்துக்கும் லோக்கல் பேருந்துக்கும் இடையிலான வேறுபாடு போலத்தான். “பேருந்தில் ஓட்டை விழுந்திருக்கிறது” என்று பெற்றோர் யாராவது தாளாளர் விஜயனிடம் போன வாரம் புகார் செய்திருப்பார்களேயானால், “நீ கொடுக்கிற காசுக்கு ஏ.சி. வண்டியா அனுப்ப முடியும்?” என்று கேட்டிருப்பார்.

சொந்தமாகப் பேருந்து வைத்திருந்த சென்னையின் சுயநிதிக் கல்லூரிகள், அந்தப் பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் கட்டிய ஒரே காரணத்துக்காக, அவை அனைத்தையும் காண்டிராக்ட் முறைக்கு மாற்றிவிட்டனர். சீயோன் பள்ளி தனது சொந்தப் பேருந்தை காண்டிராக்டுக்கு விட்டிருப்பதற்கான காரணமும் அதுதான்.

இப்போதைக்குச் சூழ்நிலை சரியில்லை என்பதால், சீயோன் பள்ளித் தாளாளரால் இப்படிப் பேச இயலாது என்றாலும், இதுதான் உண்மை. மெட்ரிக் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து கோவிந்தராசன் கமிட்டி அறிக்கை வெளியிட்டபோது, அதைப் பின்பற்ற முடியாதென்று வழக்கு தொடுத்த 6400 மெட்ரிக் பள்ளிகளில் சீயோன் பள்ளி முக்கியமானது.

இந்த விபத்தும் முதன்முதலாக நடப்பது அல்ல. செப். 2010 இல் போச்சம்பள்ளியில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியின் பேருந்து, அந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது அந்தப் பள்ளி வாயிலிலேயே ஏறி இறங்கியது. அந்தப் பள்ளியின் அடாவடித்தனத்தால் ஆத்திரம் கொண்டிருந்த ஊர் மக்கள், அந்தப் பள்ளியை அடித்து நொறுக்கி தீ வைத்தது மட்டுமின்றி, தாளாளரின் காருக்கும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். உடனே தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒரு நாள் பள்ளிகளை இழுத்து மூடி பெற்றோர்களை மிரட்டினார்கள்.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் எனப்படுபவர்கள் யார்?

இவர்கள் கல்வி மாஃபியாக்கள்  எந்த அரசாங்கம் வந்தாலும், அதிகாரிகள் வந்தாலும் அவர்களை அரவணைத்து விலைக்கு வாங்கிக் கொள்கிற மணல் மாஃபியா, சுரங்க மாஃபியா போன்றவர்கள்.

இவர்கள் வியாபாரிகள் மட்டுமல்ல; வழிப்பறிக் கொள்ளையர்கள். குழந்தைகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு பெற்றோரிடம் பணம் பறிக்கும் கயவர்கள். பெற்றோரிடம் பணம் பறிப்பதற்கான புதிய முறைகளைப் பற்றி இடையறாமல் சிந்தித்துப் புதிய புதிய வழிமுறைகளை டிசைன் டிசைனாகக் கண்டு பிடிப்பவர்கள்.

“பணம் இல்லாதவனுக்குக் கல்வி தேவையில்லை. தாய்மொழிக் கல்வி இழிவானது. ஆங்கில வழிக் கல்வியே உயர்வானது. தனியார்மயமே சிறந்த கொள்கை. பணம் பண்ணுவதே வாழ்க்கை இலட்சியம்.பெற்றோர்களால் ஒப்படைக்கப்படும் உருப்படாத பிள்ளைகளை, நூற்றுக்கு நூறு வாங்கும் கறிக்கோழிகளாக உயர்த்தும் உன்னதப் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதால், இதற்கு நிர்ணயிக்கும் விலையை, எதை அடகு வைத்தேனும் கொடுப்பது பெற்றோரின் கடப்பாடு.”  இவை இவர்களது கொள்கைகளில் சில. அனைத்தையும் விரித்துச் சொல்லத் தேவையில்லை.

கோவிந்தராசன் கமிட்டி, ரவிராசபாண்டியன் கமிட்டி என்று எந்த கமிட்டி போட்டு கட்டணத்தை வரன்முறைப்படுத்தினாலும், அதை மதிக்க முடியாது என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்பவர்கள்; எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்கள்.

இவர்கள் சமச்சீர் கல்வியை எதிர்த்தவர்கள். காசு கொடுப்பவனுக்கும் ஓசியில் படிப்பவனுக்கும் ஒரே பாடத்திட்டமா என்பதுதான் இவர்களது குமுறல். சமச்சீர் பாடத்திட்டம்தான் வரப்போகிறது என்று தெரிந்த பின்னரும், தாங்கள் வாங்கி வைத்திருந்த பாடப்புத்தகங்களை மாணவர்கள் தலையில் கட்டிக் காசு பார்த்தவர்கள்.

மெட்ரிக் பாடத்திட்டம் என்றொரு பாடத்திட்டமே தற்பொழுது தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற போதும், பெற்றோர்களிடமிருந்து காசு பறிக்கும் தீய நோக்கத்திற்காகவே, இன்னும் தங்கள் பள்ளிகளை மெட்ரிக் பள்ளிகள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டவிரோதச் செயலை ஜெயா அரசும் தெரிந்தே அனுமதித்து வருகிறது.

இவர்கள் கிரிமினல்கள், கருப்புப் பணப் பேர்வழிகள்  வாங்குகிற காசுக்கு ரசீது கொடுக்காமல், பிளாக் டிக்கெட் விற்பவனை விடவும், ஆர்.டி.ஓ. ஆபீசு புரோக்கரை விடவும் கேவலமான முறைகளில் பணம் வசூலிப்பவர்கள்.

இவர்கள் ரவுடிகள்; பெற்றோர்கள் சட்டமோ நியாயமோ பேசினால் பிள்ளைகளுக்கு டி.சி. கொடுத்து விடுவோம் என்று பெற்றோர்களை மிரட்டும் தாதாக்கள். விபச்சார விடுதித் தலைவிகள், திருநங்கைகளை அடியாட்களாகப் பயன்படுத்துவது போல, தங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களை அடியாட்களாகப் பயன்படுத்துபவர்கள்.

இப்படிப்பட்ட கிரிமினல்களில் ஒருவர்தான் சீயோன் பள்ளிகள் குழுமத்தின் தாளாளர் விஜயன்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்தக் கிரிமினல்களெல்லாம் ஒன்று சேர்ந்து, அம்மையாரைத் தரிசித்து காணிக்கை செலுத்தியதன் விளைவாகத்தான் பொதுப் பாடத்திட்டம் நிறுத்தப்பட்டது. பத்மா சேஷாத்திரி உள்ளிட்ட மெட்ரிக் பள்ளி தாளாளர்களைக் கமிட்டியாகப் போட்டு, பொதுப் பாடத்திட்டம் சரியில்ல என்று அறிக்கை வாங்கப்பட்டது. மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடை விவகாரத்தில் அரசு தலையிடமுடியாது என்றும்,  அது பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான பிரச்சினை என்றும் ஜெ அரசு அறிவித்தது.

பள்ளி-மாணவி-சுருதி-கொலைஇப்போது “பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது” என்று கேட்டு,  சீயோன் பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசன் தாக்கீது அனுப்பியிருப்பதாக நாளேடுகளில் செய்தி வந்திருக்கிறது.  இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசன் என்பவர் மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி. அவருக்கு அந்த மாவட்டத்தில் எத்தனை தனியார் பள்ளிகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டால், அவர் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது.

நன்கொடைக் கொள்ளை தொடர்பாகவோ அல்லது தனியார் பள்ளியின் வேறு எந்தப் பிரச்சினை தொடர்பாகவோ இன்ஸ்பெக்டர் ஆப் மெட்ரிகுலேசனிடம் புகார் கொடுக்கப் போவதாகப் பள்ளித் தாளாளர்களைப் பயமுறுத்திப் பாருங்கள். அந்த அதிகாரியை ஒரு பிச்சைக்காரனுக்குச் சமமாகக்கூட அவர்கள் மதிப்பதில்லை என்பது அப்போதுதான் உங்களுக்கு தெரியவரும்.

மற்ற அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து பிரித்து மெட்ரிக் பள்ளிகளுக்காகத் தனியொரு இயக்ககம் அமைத்திருப்பதன் நோக்கமே, இவர்களுடைய சுதந்திரமான கொள்ளையை ஊக்குவிப்பதுதான். மெட்ரிக் பள்ளிகளின் அட்டூழியம் என்பது தனியொரு பிரச்சினை அல்ல. இது, கல்வி தனியார்மயத்துடன் நேரடியாகத் தொடர்புள்ளது.

“கல்வி ஒரு வணிகப் பொருள்தான், அதை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முடியாது” என்பதே மத்தியமாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் கொள்கை. அதனால்தான் “ஏழைகளுக்கு 25% இடம் ஒதுக்குங்கள், அதற்கு நியாயமான ஒரு தொகையை நாங்கள் கொடுத்து விடுகிறோம்” என்று கல்வி வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கல்வி அடிப்படை உரிமை இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் இந்த சட்டத்திற்கு ‘கல்வி உரிமைச் சட்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறது.

ஒரு சரக்கை என்ன விலைக்கு விற்கலாம் என்பதை முதல் போட்டு தொழில் நடத்தும் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தங்களுடைய வியாபார உரிமையில் அரசு தலையிடக் கூடாது என்பதும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் வாதம். அதை மீறி 25% என்பதை தங்கள் மீது திணித்தாலோ, கோவிந்தராசன் கமிட்டி, ரவிராசபாண்டியன் கமிட்டி என்று கமிட்டி போட்டு கட்டண நிர்ணயம் செய்தாலோ, அப்படி உள்ளே நுழையும் மாணவர்களை அவர்களுக்குத் தகுதியான வகுப்பறைகளில்தான் அமரவைக்க முடியும் என்றும், காசுக்கு ஏற்ற தோசையாகத்தான் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வியும் இருக்கும் என்றும் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் வெளிப்படையாகவே நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார்கள்.

இதை ஏன் கொலை வழக்காக மாற்றக்கூடாது என்று நீதிபதிகள் உணர்ச்சி வசப்பட்டு பேசியிருப்பதாகத் தெரிகிறது. உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துப் பார்த்தால், கொலைகொள்ளை உள்ளிட்ட பல குற்றப் பிரிவுகளில் மெட்ரிக் பள்ளி முதலாளிகளைத் தண்டிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குச் சட்டத்தில் இடமில்லையே!

சுருதியைக் காவு கொண்ட ஓட்டை பேருந்தில்தான் இருக்கிறது என்று பலரும் எண்ணலாம். ஆனால், கல்வி தனியார்மயத்தைப் பாதுகாக்கும் விதத்தில் இருக்கிறது சட்டம். அது சட்டத்தில் இருக்கும் ஓட்டை அல்ல; சட்டமே ஓட்டை. அது பிரேக் இன்ஸ்பெக்டரால் அடைக்க முடியாத ஓட்டை. விஜயன் முதல் ஜேப்பியார் வரையிலான எல்லா கிரிமினல்களும் சுலபமாகத் தப்பித்துக் கொள்ள முடிகின்ற ஓட்டை!

__________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

32

மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன்  ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம்.

-வினவு

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்

ஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்….

கோவை மாநகரில், மாநகராட் சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத் தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும்,இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகை யாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களி லும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகை யாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்-கார்டூன்

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?

__________________________

நன்றி – இனியவன்

__________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

புரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்!

16

பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையும், சுரண்டலுக்கு எதிரான அதன் கோபமும், முதலாளிகளின் முதுகுத் தண்டில் சிலீரென்று பயத்தை ஏற்படுத்தும் என்பது மானேசர் தொழிலாளர் போராட்டத்துக்கு பிறகு வெளிப்பட்டது. இப்போது தென்னிந்திய முதலாளிகளின் நெஞ்சங்களில் ஏற்பட்டிருக்கும் கலக்கம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் படி தென்னிந்திய முதலாளிகள் கூட்டமைப்பு  ஜெயலலிதாவிடம் புகார் மனு கொடுத்துள்ளது.

“தமிழகத்தின் மிகப் பெரிய தொழிற்சாலை நகரங்களில் நிறுவனங்களின் (முதலாளிகளின் சுரண்டல் என்று பொருள்) வளர்ச்சியை பாதிக்கும் வகையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி எனும் தொழிற்சங்கம் நடந்து கொள்கிறது. இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படலாம். புஜதொமுவால் பல வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளன. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மீதும் அரசு உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதுதான் கடிதத்தின் சாரம்.

1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மய- தாராளமய- உலகமய கொள்கைகளுக்குப் பிறகு  “விருப்பம் போல வேலையை விட்டு நீக்கும் உரிமை இந்தியாவில் இல்லாததால்தான் தொழில் வளர்ச்சி முடங்கிப் போயிருக்கிறது” என்று புலம்பிய முதலாளிகள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை மாற்றவும் உடைக்கவும் முயற்சித்தனர். அரசு அமைப்புகளுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

“எங்கே ஒற்றுமையாக செயல்பட ஆரம்பித்து விடுவார்களோ” என தொழிலாளர்கள் கண்காணித்து அப்படி சிறு அறிகுறி எந்த தொழிலாளியிடமாவது தெரிந்தாலும் வேலையை விட்டே அந்த தொழிலாளியை நீக்கிவிடுகிறது. இதற்கு நல்ல உதாரணம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள். பல நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே வேலையை செய்யும் ஒப்பந்த தொழிலாளருக்கு நிரந்தர தொழிலாளரை விட பல மடங்கு குறைந்த கூலி, எந்த நேரத்திலும் வேலையிலிருந்து நீக்க நேரிடலாம் என்ற நிரந்தரமின்மை, வேலைக்கும் வாழ்க்கைக்கும் தேவையான அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலைமை என்று அவர்கள் கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

பயிற்சி ஊழியர்கள் (trainees) என்ற பெயரிலும், பணி பழகுநர் (apprentice) என்ற பெயரிலும் நூற்றுக் கணக்கான தற்காலிக தொழிலாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் சட்ட விரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

லட்சக்கணக்கான படித்த இளைஞர்களும், திறமையான தொழிலாளர்களும் இத்தகைய அதி சுரண்டல் சூழலில் வேலை செய்கிறார்கள். “வெளி நாட்டு கம்பெனி, விவசாய கூலியை விட அதிக சம்பளம், வீட்டுக்கு அருகிலேயே பேருந்து வந்து ஏற்றிக் கொண்டு போய் விடுகிறது” என்ற கவர்ச்சிகளில் ஏராளமான இளைஞர்கள் இந்த வேலைகளில் சேர்ந்தார்கள்.

குறைந்த கூலி, பணி நிரந்தரமின்மை என்ற வகையில் மட்டுமின்றி கொடுமையான பணிச் சூழலும் தொழிலாளர்களை சுரண்டுகிறது. உற்பத்தி இலக்குகளை எட்டுவதற்காக தொழிலாளர்களை இயந்திரங்கள் போல வேலை வாங்குவதற்கு மேற்பார்வையாளர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். உற்பத்தி கன்வேயர் வேகத்தை அதிகரிப்பது, பணியின் வேகம் குறையாமல் இருக்க பாதுகாப்பு கருவிகளை செயலிழக்கச் செய்தல், தொழிலாளர்களை ஓய்வெடுக்க அனுமதிக்காது இடைவிடாமல் வேலை வாங்குவது என்று கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன நிர்வாகங்கள்.

உதாரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் அம்பிகா என்ற தொழிலாளி மெஷினில் சிக்கி போராடிக் கொண்டிருந்த நிலையிலும் உற்பத்தியை நிறுத்தி மெஷினை பிரித்து அவரை மீட்பதை மேலாளர் தடை செய்ததும், அதே பாக்ஸ்கான் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதை நிர்வாகமும் ஆளும் வர்க்கமும் சேர்ந்து மூடி மறைத்ததும் நினைவிருக்கலாம்.

இது போன்ற கொடூர சூழல்களின் விளைவாக வெடித்த போராட்டங்கள்தான் சென்ற மாதம் நடந்த மானேசர் தொழிற்சாலை போராட்டமும், ஜனவரி மாதம் புதுச்சேரி பிளெக்ஸ் நிறுவனத்தில் நடந்த தொழிலாளர் போராட்டமும், 2009-ல் கோயம்புத்தூரில் பிரைகால் நிறுவனத்தில் நடந்த போராட்டமும்.

ndlf-toi

மறுபுறம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர்களை திரட்டி போராட வேண்டிய தொழிற்சங்கங்கள் செயலற்று போயிருந்தன. போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிஐடியு, ஏஐசிடியு, காங்கிரசின் ஐஎன்டியூசி, பிஜேபியின் பாரதீய மஸ்தூர் சங், அதிமுகவின் சங்கம், திமுகவின் சங்கம், பாமகவின் சங்கம் போன்றவை நிர்வாகத்துடன் ஒத்துழைத்து சில சமரசங்களை செய்து கொள்வதை தாண்டி தொழிலாளர்களுக்காக போராடுவதில்லை. பல யூனியன் தலைவர்கள் ஊழல் முதலைகளாக மாறி தொழிலாளர்களுக்கு துரோகம் செய்து  லட்சக் கணக்கில் சம்பாதித்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

முதலாளிகளுக்கும் அத்தகைய யூனியன்கள்தான் தேவைப்படுகின்றன. தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை செலவழித்து யூனியன் தலைமையை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். தமது லாப வேட்டையை தடையின்றி நடத்தி வருகிறார்கள்.

பல பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் சங்கம் கட்டும் அடிப்படை உரிமையே மறுக்கப்படுகிறது. ஹூயுண்டாய் நிறுவனம் யூனியன்களை அனுமதிக்க மறுத்து, ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் நிர்வாக தரப்பும் தொழிலாளர்களும் உறுப்பினர்களாக கொண்ட குழுவை அமைத்திருக்கிறது.

பல தொழிற்சாலைகளில் நிர்வாகத்தின் கைப்பாவையாக செயல்படும் யூனியன்கள் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர்களை வஞ்சிக்கின்றன. ஒரே நிறுவனத்தினுள் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சி யூனியன்கள், சாதி யூனியன்கள், என்று நிறுவனமே பணம் கொடுத்து வளர்த்துவிடுகிறது. முதலாளிகள் புத்திசாலித்தனமாக தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்காதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.

இத்தகைய சூழலில் 90கள் முதலே தமிழகத்தில் செயல்படத் துவங்கியிருந்த புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி 2000ம் ஆண்டுகளில் வீச்சாக வளரத் துவங்கியிருந்தது. உடனடி பொருளாதார பிரச்சனைகளுக்காக மட்டும் போராடாமல் அரசியல் அதிகாரம் உழைக்கும் மக்களுக்கு வேண்டுமென்ற புரட்சிகர அரசியலுக்காகவும் தொழிலாளர்களை திரட்டுகிறது. தொழிலாளிகளின் விடுதலை என்பது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் விடுதலையோடு இணைந்தது என்ற கல்வியை தொழிலாளிகளிடம் வேகமாக கற்பித்து வந்தது. ஏற்கனவே இருந்த போலி கம்யூனிஸ்டு உள்ளிட்ட சமரச யூனியன்களை அம்பலப்படுத்துவது, தொழிலாளர்களை வர்க்கமாக ஒன்றிணைப்பது, அவர்களுக்கு அரசியல் அறிவு அளிப்பது என திட்டமிட்டு தொழிலாளர் மத்தியில் வேலை செய்கிறது.

அத்தகைய பிரச்சாரத்தை கேட்கும் பல தொழிலாளர்கள் முதலில்  ‘நமக்கு ஏன் வம்பு’ என்று ஒதுங்கிப் போகவே விரும்புவார்கள். ஆனால் ‘ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் செய்து கொள்ளும் சமரசங்களும் சலுகைகளும் தமது வாழ்க்கையின் சரிவை எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை என்பதையும் தம்மை கிள்ளுக் கீரையாக நடத்தும் முதலாளிகளின் இயல்புக்கு அடிப்படை வர்க்க முரண்பாடுதான்’ என்பதையும் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்த தொழிலாளர்கள் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் இணைய ஆரம்பித்தார்கள்.

அதைப் பார்த்து போலி கம்யுனிஸ்டுகள், மற்ற கட்சிக் காரர்கள், சாதி வெறியர்கள், முதலாளிகள் பயப்படத் தொடங்கினார்கள். ‘யூனியன் தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடவில்லையென்றாலும் பரவாயில்லை, புஜதொமுவிற்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று பிரச்சாரம் செய்வது, புஜதொமுவில் சேரும் தொழிலாளர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

இந்த தடைகளுக்கு மத்தியில் புஜதொமு வளர்ந்து தொழிலாளர் நலன்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்தது.   ஓசூர், ஸ்ரீபெரும்புதூர், கோவை, வேலூர், கும்முடிபூண்டி, செய்யாறு, புதுச்சேரி என தொழிலாளர்கள் மத்தியில் நன்மதிப்பும், சமரசமற்ற போராட்ட குணத்துக்கான மரியாதையும் பெறத் தொடங்கியது.

உதாரணமாக, ஜேப்பியாரின் நிர்வாகத்தில் இருக்கும் புனித ஜோசப் கல்லூரி ஊழியர்கள் புஜதொமு சங்கம் ஏற்படுத்தி நிர்வாகத்தின் அடக்குமுறையையும் எதிர் கொண்டு சளைக்காமல் போராடினார்கள். 2010-ம் ஆண்டு சங்கத் தலைவரையும் புதிய கலாச்சாரம் செய்தியாளரிடம் பேசிய ஓட்டுனர்களையும் பணி நீக்கம் செய்தது நிர்வாகம். “சங்கத் தலைவர் வெற்றிவேல் செழியனை பணி நீக்கம் செய்தது செல்லாது” என்று இப்போது தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

“ஆண்டுக்காண்டு விற்பனை அதிகமாக வேண்டும், உற்பத்தி அதிகமாக வேண்டும், லாபம் அதிகமாக வேண்டும். இதற்கு இடையூறாக எதுவும் வரக்கூடாது” என்று வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதை தட்டிக் கேட்க யாரும் இல்லாத நிலையில் தமது லாபத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்கள் இந்திய முதலாளிகள்.

“ஒரு நிறுவனம் செய்யும் மதிப்பு கூட்டலில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியின் பங்கு கடந்த 30 ஆண்டுகளில் 30.3 சதவீதத்திலிருந்து 11.6 சதவீதமாக குறைந்திருக்க அதே காலகட்டத்தில் லாபத்தின் பங்கு 23.4 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது’ என்கிறது இந்து நாளிதழில் வெளியான ஒரு ஆய்வு . பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது 30 ஆண்டுகளில் தொழிலாளர்களுக்கான கூலி சுமார் ரூ 8,000லிருந்து ரூ 10,000 ஆக மட்டும் உயர்ந்திருக்கிறது.

இப்படி தட்டிக் கேட்க ஆளில்லாமல் தொழிலாளர்களை பூச்சிகளாக மதித்து, எந்திரங்களின் உதிரி பாகங்களைப் போல தேய்ந்ததும் தூக்கி எறிந்து கொண்டிருந்த முதலாளிகள் தமது அராஜக நடைமுறைகளை தட்டிக் கேட்க ஒரு அமைப்பு ஏற்பட்டு, தொழிலாளர்கள் அதன் பின் ஒன்று திரளும் போது கண்ணைக் கசக்குகிறார்கள்.

nokia-cartoon

தென்னிந்திய முதலாளிகள் சங்கம் என்பது 1918-ம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் தொழிலாளர் சங்கத்துக்கு எதிர் வினையாக முதலாளிகளால் 1920-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காலனிய ஆட்சியிலும் சரி, 1947க்குப் பிறகான அரைக்காலனிய ஆட்சியிலும் சரி மாநில மத்திய அரசுகளிடம் லாபி செய்வது, தமக்கு சாதகமான கொள்கைகளையும் சட்டங்களையும் ஏற்படுத்திக் கொள்வது, தொழிலாளர்களை ஒடுக்குவதில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று 85 ஆண்டுகளாக அரசியல் நடத்தி வருகிறது இந்த சங்கம்.

தென்னிந்திய முதலாளிகள் கூட்டமைப்பும், CII எனப்படும் இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் நடவடிக்கைகளைப் பற்றி பல அறைக் கூட்டங்களில் விவாதித்தார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி சொல்கிறது. இப்போது, குஜராத்தின் பாசிஸ்ட் மோடியை போல தமிழ்நாட்டில் நல்லாட்சியை நிறுவ வந்திருக்கும் பாசிஸ்ட் ஜெயலலிதாவை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியையும் அதன் தோழமை அமைப்புகளையும் ஒடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறார்கள்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொழிற்சங்க சட்டத்தின் கீழ் முறைப்படி பதிவு செய்யப்பட்ட யூனியன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை ரத்து செய்து தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒழிக்க விரும்புகிறது தென்னிந்திய முதலாளிகள் சபை. அதன் பொருட்டே ஜெயலலிதாவிடம் மனு கொடுத்து அடக்குமுறையை ஏவுமாறு கோருகிறார்கள்.

“சிபிஎம், சிபிஐ போன்ற போலி கம்யுனிஸ்டுகள் கூடத்தான் சங்கம் வைத்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அந்த சங்கத்து தொழிலாளர்கள் மத்தியில் புரட்சி, போராட்டம் என்று பேசுகிறார்களா? மார்க்ஸியம் பேசுகிறார்களா? ஆனால் இந்த புஜதொமு எல்லையை மீறுகிறது. புரட்சி என்கிறது, தொழிலாளர்களை அரசியல்படுத்துகிறது. சமரசமில்லாமல் போராடுகிறது. புஜதொமு தொழிலாளி மார்க்ஸியம் முதல் உலக அரசியல் வரை, தனியார் மயம் முதல் மறுகாலனியாக்கம் வரை என சகலமும் பேசுகிறார். அதனாலேயே புஜதொமு தடை செய்யப் பட வேண்டும்” என்று முதலாளிகள் தொலை நோக்காக யோசிக்கிறார்கள் போலும்.

இழப்பதற்கு என்று எதுவும் இல்லாத தொழிலாளர் வர்க்கம்  போராடுவது, தவறுகளில் இருந்து கற்று முன்னேறுவது, ஒற்றுமையாக செயல்படுவது மூலம் தனது எதிர்காலத்தை படைக்கும். அந்த அடிப்படையில் செயல்படும் புஜதொமு தோழர்கள் முதலாளிகளால் வெறுக்கப்படுவது எதிர்பார்த்ததுதான்.

பாசிஸ்டுகளும், பணத்திமிர் பிடித்த முதலாளிகளும் தம்மை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற இறுமாப்புடன் செயல்படுவது வாடிக்கைதான். ஆனால் அவர்களை எளிய தொழிலாளி வர்க்கம் பிடரியில் இரண்டு தட்டுத் தட்டி விழ வைப்பது வரலாறு. அந்த வரலாற்றின் இன்னொரு பக்கத்தை படைத்துக் கொண்டிருக்கிறது புஜதொமு. தென்னிந்திய முதலாளிகள் மட்டுமல்ல, இந்திய, பன்னாட்டு முதலாளிகள் அணிவகுத்து வந்தாலும் நக்சல்பாரி அரசியலால் போர்க்குணத்தோடு வழிநடத்தப்படும் இந்த தொழிற்சங்கத்தையும், தொழிலாளர்களையும் யாரும் வீழ்த்த முடியாது. ஒரு வேளை பாசிச ஜெயலலிதா அந்த புகார் மனுவை நெஞ்சிலேந்தி உடன் நடவடிக்கை எடுத்து புஜதொமுவை தடை செய்தார் என்றால் அது தமிழக வரலாற்றில் தொழிலாளர்களின் புதிய வரலாற்றை பொன்னெழுத்துக்களால் எழுதும்.

இன்று ஆங்கில ஊடகங்களின் தயவினால் இந்த் பூச்சாண்டி அரசியலை தென்னிந்திய முதலாளிகள் சபை ஆரம்பத்திருக்கிறது. ஆனால் பூச்சாண்டியை மட்டுமல்ல பாசிசத்தையும் வீழ்த்துவார்கள் இழப்பதற்கு ஏதுமற்ற எங்கள் தொழிலாளகள்!

__________________________________________________

– செழியன்.

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை!

2

 ஒபாமா-மன்மோகன்

புழுதி பறக்கக் கம்பைச் சுழற்றி, புழுதி அடங்குமுன் அப்படியே குனிந்து வாத்தியாருக்கு சலாம் வைப்பதை, சிலம்பத்தில் சலாம் வரிசை என்பார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் பி.டி.ஐ. செய்தி நிறுனவத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் வர்த்தகச் சூழல் பற்றித் தெரிவித்திருந்த கருத்துகளால், ஆத்திரம் கொண்ட மத்திய அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் அவர்களுடன் இந்தியத் தரகு முதலாளிகளும்கூடச் சாமியாடி சலாம் வரிசை எடுத்து விட்டார்கள். பத்திரிகைகளைப் படிக்கின்ற வாசகர்கள், அடேயப்பா ஒபாமாவுக்கு பலத்த அடிதான் போலும் என்று எண்ணியிருக்கக் கூடும். புழுதி கிளப்பிவிட்டதால், காலில் விழுந்த காட்சியை யாரும் கண்டிருக்க முடியாது.

இந்தியாவில் முதலீட்டுச் சூழல் மோசமாகிவருகிறதென்று அமெரிக்க முதலீட்டாளர்கள் தன்னிடம் பெரிதும் கவலை வெளியிட்டார்களென்றும், பல துறைகளில், எடுத்துக்காட்டாக சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடு தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஒபாமா அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

பிறகு, “தன்னுடைய பொருளாதார எதிர்காலத்தை இந்தியா எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று வழிகாட்டுவது எங்கள் வேலை அல்ல, அதைத் தீர்மானிக்க வேண்டியது இந்தியர்கள்தான்” என்று யோக்கியர் போலக் கூறிவிட்டு, அடுத்த வாக்கியத்திலேயே, “பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு இதுதான் தருணம் என்ற கருத்து உங்கள் நாட்டில் வளர்ந்து வருவதாகத் தெரிகிறது” என்று ஒரு கொக்கியைப் போட்டு, “அப்படி பிரச்சினைக்குரிய சீர்திருத்தங்களை இந்தியா அமல்படுத்தத் தொடங்குமானால், அமெரிக்கா இந்தியாவுக்குத் துணை நிற்கும்” என்றும் கூறியிருக்கிறார். “சில்லறை வணிகம், பென்சன் நிதி, காப்பீடு மற்றும் கல்வித்துறையை திறந்துவிடு. ஒத்துவராதவர்கள் இருந்தால் நான் அவர்களைச் சரிக்கட்டுகிறேன்” என்பதுதான் ஒபாமாவுடைய கூற்றின் பொருள்.

ஒபாமாவுக்குக் கண்டனம் தெரிவித்த சூரர்கள் என்ன கூறினார்கள்? ஐ.நா. (UNCTAD) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி அந்நிய முதலீட்டாளர் களை ஈர்ப்பதில் இந்தியா உலகளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், இது தெரியாமல் இந்தியாவைப் பற்றி யாரோ ஒபாமாவுக்குத் தவறான தகவல் கொடுத்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகமும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் அறிக்கை வெளியிட்டனர். “அமெரிக்கா சொன்னதற்காக நாம் சில்லறை வணிகத்தைத் திறந்து விட முடியுமா?” என்றார் பா.ஜ.க.வின் யஷ்வந்த் சின்கா. சி.ஐ.ஐ. எனும் இந்திய தரகு முதலாளிகள் சங்கமோ, “நம்முடைய அரசுக்கு யாரும் உத்தரவிட முடியாது” என்று தலைப்பு போட்டு தொடங்கி, சில்லறை வணிகம், காப்பீடு, இராணுவத் தளவாடங்கள் ஆகிய துறைகளைத் திறந்துவிட்டால், அந்நிய முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தைப் பெற முடியும் என்று அறிக்கையை முடித்திருக்கிறது.

இவையெல்லாம் நாட்டுப்பற்று, இறையாண்மை, தன்மானம் கொண்ட இந்தியர்கள் தெரிவித்திருக்கும் கண்டனங்களாம்! ஒபாமாவின் கருத்துக்களை ஒபாமாவைவிடத் தீவிரமாக முன்வைத்து விட்டு, தங்களது அடிமைத் தனத்தையே அமெரிக்காவின் மீதான கண்டனமாகவும் காட்டி, கைதட்டலும் வாங்க முடிகிறது என்றால், நமது மக்களின் பாமரத்தனத்தை என்னவென்று சொல்வது?
__________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

108

மாருதி

மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம்.

“கலவரத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்காமல், ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாமல் ஆலையைத் திறக்கப் போவதில்லை. எனக்குப் பணம் முக்கியமில்லை. ஊழியர்களின் பாதுகாப்புதான் முக்கியம்” என்று கூறி கதவடைப்பை அறிவித்திருக்கிறார் மாருதி சுசுகியின் தலைவர் பார்கவா. “அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்று கவலை தெரிவித்திருக்கின்றன தரகு முதலாளிகளின் சங்கங்கள். 3000 தொழிலாளர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு போட்டு, நூறு பேரைக் கைது செய்து மீதிப் பேரை தேடுவது என்ற பெயரில் சுற்றுவட்டாரம் முழுவதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரியானா போலீசு. தொழிலாளர்கள் அனைவரும் தலைமறைவாகியிருக்கின்றனர்.

பேயறைந்து வெளிறிப்போன ஆளும் வர்க்கத்தின் முகத்தைத் தரிசிப்பதற்கான அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மாருதி தொழிலாளர்களுக்கு  நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிவர்க்கம்.

ஜூலை 18 அன்று நடைபெற்ற ஒரு சம்பவம்தான் “திரி” பற்றிக் கொண்டதற்கான காரணம் என்று கூறுகிறார்கள் தொழிலாளர்கள். “ஜியாலால் என்ற தொழிலாளியை மேலாளர் ஒருவன், சாதியைச் சொல்லி திட்டினான். தீண்டாமைக் குற்றத்துக்காக அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மேலாளருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டு, தட்டிக் கேட்ட அந்தத் தொழிலாளியை நிர்வாகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. தற்காலிகப் பணிநீக்கத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் எற்கவில்லை. அன்று மாலை பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, அடியாட்களைக் கொண்டுவந்து இறக்கி நிர்வாகம்தான் தொழிலாளிகள் மீதான தாக்குதலைத் தொடங்கி வைத்தது” என்கிறது மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராம் மெகர் விடுத்துள்ள அறிக்கை.

தற்காலிகப் பணிநீக்கத்தை நிறுத்தி வைப்பதாகப் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், அதன் பின்னரும் ஏன் இப்படி நடந்தது என்பதைத்தான் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் வெகுளித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார், மாருதி நிறுவனத்தின் தலைவர் பார்கவா.

யாரோ ஒரு தொழிலாளியை, எவனோ ஒரு மேலாளர், ஏதோ ஒரு நாள் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசியிருந்தால், அதற்காக ஆலை எரிந்திருக்குமா? இல்லை. கொடூரமான பணிநிலைமைகளாலும் அடக்குமுறையாலும் அன்றாடம் கிடிக்கப்பட்ட வெடிமருந்தாகக் காய்ந்திருந்தனர் தொழிலாளர்கள். வெடிப்பதற்கு ஒரு சிறுபொறி மட்டுமே தேவைப்பட்டது. அந்தப் பொறி அரியானா மாநிலத்தின் இழிபுகழ் வாய்ந்த ஆதிக்க சாதிவெறியாக அமைந்ததையும், அதுவே தொழிலாளிகளின் வர்க்கக் கோபத்தைப் பற்றவைத்து வெடிக்கச் செய்திருப்பதையும் நாம் ஒரு கவித்துவ நீதியாகக்தான் கொண்டாட வேண்டும்.

மாருதி

மாருதி சுசுகி நிறுவனம், ஜப்பானிய சுசுகி மோட்டார் கார்ப்பரேசனின் ஒரு கிளை. இந்திய கார் சந்தையில் பாதி மாருதியின் கையில். மாருதி உற்பத்தி செய்கின்ற 14 மாடல்களில், சொகுசு ரகத்தைச் சேர்ந்தவையான சுவிப்ட், டிசையர், ஏ ஸ்டார், செடான் ஆகிய கார்கள் குர்கான் அருகில் உள்ள இந்த மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு 1152 கார்கள். ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சுசுகியின் ஆண்டு விற்பனையில் (201011) மாருதியின் பங்கு 48%.

நாளொன்றுக்கு இரண்டு ஷிப்டுகள். முதல் ஷிப்ட் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாருதி தொழிலாளி காலை 5 மணிக்கு பேருந்தைப் பிடிக்க வேண்டும். 6.30க்கு ஆலைக்குள் நுழைய வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் அரை நாள் சம்பள வெட்டு. “சம்பளம்தான் இல்லையே” என்று திரும்பிப் போக முடியாது. ஆலைக்குள் நுழைந்துவிட்டால் வேலைக்குப் போய்தான் தீரவேண்டும். சம்பளவெட்டு என்பது தாமதத்துக்கான தண்டனை.

மாருதி சுசுகி காரின் 4 மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும் ஒரு கார் இந்த 180இல் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அதன் ஸ்டியரிங் வலது புறமாஇடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலாடீசலாஎரிவாயுவா, ஏ.சி உள்ளதாஇல்லாததா, 32 வகை இருக்கைகளில் என்ன ரகம், 90 வகை டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள் போன்ற காரின் அங்க அவயங்கள் என்னென்ன வகையைச் சேர்ந்தவை என்ற  பட்டியலை நெற்றியில் சுமந்தபடியே அந்த கார் அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும். அதைப் பார்த்துப் புரிந்து கொண்டு, பொருத்தமான பாகத்தை தொழிலாளி அந்தக் காரில் பொருத்த வேண்டும். இதற்கு ஒரு தொழிலாளிக்குத் தரப்படும் அவகாசம் 48 நொடிகள். (அமன்சேத்தி, தி இந்து, 6.11.2011)

ஒரு நொடி தாமதமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி தாமதம் என்று பதிவாகும். அந்த உற்பத்தி இழப்புக்கு ஒவ்வொரு தொழிலாளியும் பொறுப்பேற்க வேண்டும்.

நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதற்றத்தில் வேலை செய்யவேண்டியிருப்பினும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடன் ஐம்புலன்களையும் குவித்து ஒரு தொழிலாளி வேலை செய்யவேண்டும்.

ஒரு தொழிலாளி குனிவதற்கும், நிமிருவதற்கும், திரும்புவதற்கும், ஸ்குரூ டிரைவரை வைத்து திருகுவதற்கும் ஒவ்வொரு மாடல் காருக்கும்  தேவைப்படும் நொடிகளை  மைக்ரோ செகண்டு துல்லியத்துடன் கணக்கிட்டு, கணித அல்கோரிதம்களின் அடிப்படையில் அசெம்பிளி லைனின் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் 100 நொடிகளாக இருந்த இந்த நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட்டின் வேகம் கூட்டப்பட்டு விட்டது. எனவே உற்பத்தியும் இரு மடங்காகிவிட்டது.

கணினிமயமாக்கப்பட்ட இந்த எந்திர வலைப்பின்னலில், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல தொழிலாளி வெறும் உப உறுப்பு. மனிதன் என்கிற காரணத்தால் அவனுக்கு, உணவுக்கு 30 நிமிட இடைவேளை. கான்டீனுக்கு போக 10 நிமிடம், வர 10 நிமிடம், சாப்பிட 10 நிமிடம். தேநீர் இடைவேளை 7.5 நிமிடம்  இருமுறை. கழிவறையில் நின்று சிறுநீர் கழித்தபடியே பிஸ்கெட்டைத் தின்று, தேநீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாகத் திரும்பினாலும் அரைநாள் சம்பள வெட்டு.

மாருதிதொழிலாளர்கள் தமது பணி நிலைமைகளை மேம்படுத்துவது பற்றிப் பேசுவதைக்கூட மாருதி சுசுகி நிர்வாகம் அனுமதித்ததில்லை. மாருதி நிறுவனத்தின் கட்டுப்பாடு சுசுகியின் கைக்கு மாறியவுடனே, தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் 1000 பேர் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டனர். மாருதி உத்யோக் காம்கார் யூனியன் என்ற கைக்கூலி சங்கத்தை சுசுகி நிர்வாகம் 2001இல் உருவாக்கியது. 11 ஆண்டுகளாக அந்த சங்கத்தில் தேர்தலே நடந்ததில்லை.

அதிகரித்துக் கொண்டே போகும் அசெம்பிளி லைனின் வேகம், குறைந்த கூலி, ஒப்பந்தக் கூலி முறை ஆகியவற்றைச் சகிக்க முடியாத தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்தை ஒழித்து, சுயேச்சையான தமது சங்கத்தைக் கட்டுவதன் மூலம்தான் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் என்று, புதிய சங்கத்துக்கான போராட்டத்தை சென்ற ஆண்டு துவங்கினர்.

உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்த தொழிலாளிகளை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது அரியானா உயர் நீதிமன்றம். உடனே ஆலையின் கதவை இழுத்துப் பூட்டி, தண்ணீர் சப்ளையைத் துண்டித்து, உணவு கொண்டு செல்வதையும் தடுத்தது போலீசு. தொழிலாளர்கள் வெளியே வந்தார்கள்.  “ஆலைவாசலிலும் உட்காரக் கூடாது” என்றது நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு. 33 நாட்கள் கதவடைப்பு செய்தது நிர்வாகம். புதிய சங்கத்தைப் பதிவு செய்ய விடாமல் இழுத்தடித்தது மாநில அரசு.

புதிய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குப் போட்டது நிர்வாகம். 16 இலட்சம் வாங்கிக் கொண்டு ராஜினாமா செய்தால், வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி அவர்களை விலை பேசியது. அவர்கள் சரணடைந்தவுடன், “தலைவர்கள் விலைபோய்விட்டார்கள்” என்ற பிரச்சாரத்தையும் நிர்வாகமே ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டு தொழிலாளிகளின் உறுதியைக் குலைக்க முயன்றது, முடியவில்லை.

பிறகு 103 கூடா நடத்தைகளைப் பட்டியலிட்டு, அவற்றை ஏற்றுக் கொண்டு நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வேலை என்று அறிவித்தது. 2 மாதங்கள் தொழிலாளிகள் கையொப்பமிட மறுத்துப் போராடினர். “இவ்வாறு கையெழுத்து கேட்பது 1947 தொழில் தகராறு சட்டத்தின்படி முறைகேடானது” என்று மத்திய தொழில்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டார்.

ஆனால், எந்த அமைச்சனையும் சுசுகி நிர்வாகம் சட்டை செய்யவில்லை. “பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் வேலை” என்றது. பக்கத்திலுள்ள தொழிலாளியுடன் வம்பு பேசுவது, பாட்டுப் பாடுவது, சுத்தமாக இல்லாதிருப்பது, நேர்த்தியாக உடையணியாமலிருப்பது, கழிவறையில் கூடுதல் நேரம் செலவிடுவது  இவையெல்லாம் பத்திரத்தில் நிர்வாகம் குறிப்பிடும் கூடாநடத்தைகளில் சில. இவற்றுக்காக அபராதம், தற்காலிக பணிநீக்கம் முதல் நிரந்தப் பணிநீக்கம் வரை எதையும் செய்யும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உள்ளது என்று கூறுகிறது இந்தப் பத்திரம். கம்பெனியின் நிலை ஆணையோ, “ஆலை வளாகத்தில் மட்டுமின்றி, ஆலைக்கு வெளியேயும் எந்த நேரத்திலும் தொழிலாளியைச் சோதனை போடுவதற்கு நிர்வாகத்துக்கு உரிமை உண்டு” என்கிறது.

மாருதி

1947 தொழிற்தகராறு சட்டத்தின்படி இவையெல்லாம் சட்டவிரோதமானவை என்பது மட்டுமல்ல, விதிகள் என்ற பெயரில் கொத்தடிமைத்தனத்தைத்தான் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கிறது மாருதி. மாருதி நிறுவசனத்தின் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர்தான் நிரந்தரத் தொழிலாளி. மூன்றில் இருவர் பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

ஒரு நிரந்தரத் தொழிலாளியின் நிச்சயமான மாத ஊதியம் 8000 ரூபாய். மீதி 8000 ரூபாய் “நிபந்தனைக்குட்பட்ட” மாத ஊதியம். ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இந்த 8000 ரூபாயில் 1500 ரூபாய் வெட்டப்படும் என்பதுதான் நிபந்தனை. 5 நாள் லீவு எடுத்தால் 7500 ரூபாய் காலி. பயிற்சித் தொழிலாளர்கள் என்று 500 பேர் உள்ளனர். இவர்களது மாத ஊதியம் 6500. நிபந்தனைக்குட்பட்ட மாத ஊதியம் 2250. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் வெட்டப்படும் தொகை 800 ரூபாய். அப்பிரன்டீஸ்களின் மாத ஊதியமோ வெறும் 3000 ரூபாய்.

2001-02இல் 900 கோடி ரூபாயாக இருந்த மாருதி சுசுகியின் ஆண்டு வருவாய், 2010-11 இல் 36,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. அவர்களே கணக்கு காட்டியபடி வரி விதிப்புக்குப் பிந்தைய இலாபம் 2200 விழுக்காடு ( 105 கோடி ரூபாயிலிருந்து 2289 கோடி ரூபாயாக) உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகியின் மானேஜிங் டைரக்டர் பெற்ற ஆண்டு ஊதியம் 47.3 இலட்சம் ரூபாய். 2010-11இல் அவரது ஊதியம் 2.45 கோடி ரூபாய். அதாவது 419% உயர்வு.

2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆக மூத்த தொழிலாளிக்கு கிடைத்த மாத ஊதியம் சுமார் 23,000 ரூபாய். இன்று அவரது மாத ஊதியம் 25,000 ரூபாய். 5.5 % ஊதிய உயர்வு. இந்த நான்கு ஆண்டுகளில் அரியானா மாநிலத்தின் அதிகார பூர்வ நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணே 50% உயர்ந்திருக்கிறது. அதாவது, 4 ஆண்டுகளில் தொழிலாளியின் உண்மை ஊதியமும் வாழ்க்கைத் தரமும் பன்மடங்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

“கோன் உயரக் குடி உயரும். முதலாளிகள் உயரக் தொழிலாளிகள் உயர்வார்கள். ஜி.டி.பி. உயர மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்”  என்று தலைகீழ் சூத்திரம் கூறி வருகிறார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் அப்போஸ்தலர்கள். பத்தாண்டுகளில் மாருதியின் விற்பனை 40 மடங்கு உயர்ந்திருக்கிறது. இலாபம் 22 மடங்கு உயர்ந்திருக்கிறது. புல்லுக்கு எதுவும் பொசியவில்லை. குடி மென்மேலும் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இந்திய அரசு வெளியிட்டுள்ள தொழில்துறை குறித்த ஆண்டு சர்வேயின்படி, 2004-05இல் 85 இலட்சமாக இருந்த வாகன உற்பத்தி         (இருசக்கரம் முதல் லாரி வரையிலான அனைத்து வாகனங்களும்) 2011-12இல் 204 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. கார்களின் ஆண்டு உற்பத்தி மட்டும் ஆண்டுக்கு 12 இலட்சத்திலிருந்து 30 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றியமைக்கும் பொருட்டு முதலாளிகளுக்கு மானியங்களை வாரி வழங்கி வருகின்றன மத்தியமாநில அரசுகள். (ஆஸ்பெக்ட்ஸ் ஆப் இந்தியாஸ் எகானமி, ஜூன், 2012 )

டெல்லிக்கு அருகில் இருக்கும் குர்கான்  மானேசர்  பவால் பகுதியில்தான் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் 60% நடைபெறுகிறது. அங்கிருக்கும் 10 இலட்சம் தொழிலாளர்களில் 80% பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள் (பிசினெஸ் ஸ்டாண்டர்டு, 6.6.2011 )

மாருதியில் மட்டுமல்ல, எந்த ஆட்டோமொபைல் துறை நாடு முழுவதும் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்களோ, அந்த துறை முழுவதும் ஏறத்தாழ இதுதான் நிலைமை.

மகிந்திரா, நாசிக் (மே 2009), சன்பீம் ஆட்டோ, குர்கான் (மே,2009), போஸ்ச் சேஸிஸ், புனே (ஜுலை,2009), ஹோண்டா மோட்டர் சைக்கிள், மானேசர் (ஆக,2009), ரிக்கோ ஆட்டோ, குர்கான்(ஆக,2009), பிரிகால், கோவை (செப்,2009), வோல்வோ, ஹஸ்கொடே(ஆக,2010), எம்.ஆர்.எப்., சென்னை, (அக்,2010; ஜூன்,2011), ஜெனரல் மோட்டார்ஸ், ஹலோல், குஜராத் (மார்ச், 2011), மாருதி சுசுகி, மானேசர், ஜன்,அக் 2011), போஸ்ச், பெங்களூரு(செப், 2011), டன்லப், ஹூக்ளி(அக் 2011), காபாரோ, சிறீபெரும்புதூர்(டிச, 2011), டன்லப், அம்பத்தூர்(பிப் 2012), ஹூண்டாய், சென்னை (ஏப், டிச. 2011, ஜன. 2012)  இது கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தொழில் துறையில் தொழிலாளி வர்க்கம் நடத்திவரும் போராட்டங்களின் பட்டியல்.

மானேசர் வன்முறை காரணமாக இந்த “235 ரூபாய் கவர்னர் உத்தியோகம்” இந்தியாவிடமிருந்து கை நழுவிப் போய்விடுமென்றும், அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டுகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். பத்து ஆண்டுகளில் 900 கோடியிலிருந்து 36,000 கோடியாக வருவாயை உயர்த்திக் கொண்டிருக்கும் சுசுகி நிறுவனம், ஒரேயொரு செருப்படிக்கா ரோசப்பட்டுக் கொண்டு கிளம்பி விடும்? இந்தியாவிலிருந்து பிரிட்டனோ, இராக்கிலிருந்து அமெரிக்காவோ அப்படி ஓடியதாக வரலாறில்லையே!

இருப்பினும் அந்தப் பகுதியில் ஆலைகளுக்கு நிலத்தை விற்றுவிட்டு, கிடைத்த காசில் வீடு கட்டி வாடகைக்கு விட்டும், கடை வைத்தும், லாரிவேன் ஓட்டியும் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் முன்னாள் விவசாயிகளை, ரியல் எஸ்டேட் தரகர்கள், லேபர் காண்டிராக்டர்கள் போன்ற ஒட்டுண்ணிகள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள். வெளியூரிலிருந்து பிழைக்க வந்த தொழிலாளர்கள், அமைதியைக் கெடுப்பதால், உள்ளூர்க்காரர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், செங்கொடிக்காரர்களின் பிரச்சினை இல்லாமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் வெளிநாட்டு சுசுகி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர், உள்ளூர் ஆதிக்கசாதி “கப்” பஞ்சாயத்துகளின் தலைவர்கள்.

மாருதிபன்னாட்டு மூலதனத்தைக் காப்பாற்றுவதற்காக சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே மோதலைத் தூண்டிவிடும் சதிகளை மாநில அரசும் போலீசும் ஓட்டுப் பொறுக்கிகளும் இணைந்து அரங்கேற்றுகிறார்கள். எட்டப்பனும் தொண்டமானும் கூடிப்பெற்ற கைக்கூலியான நரேந்திர மோடியோ ஜப்பானுக்கே சென்று சுசுகி கார்ப்பரேசனின் தலைவர் ஒசுமா சுசுகியின் காலை நக்கி, குஜராத்துக்கு அழைக்கிறார்.

துரோகிகளும் அடிமைகளும் வன்முறையின் ஆபத்து குறித்து தொழிலாளி வர்க்கத்தை எச்சரிக்கிறார்கள். அகிம்சை வழியில் நடக்குமாறு அறிவுரை வழங்குகிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன் அகிம்சை வழியில் தொழிற்சங்க உரிமை கேட்டுப் போராடிய ஹோண்டா தொழிலாளர்களை இரத்தத்தில் குளிப்பாட்டியது அரியானா போலீசு. ஆனால், கொலைமுயற்சி குற்றம் சாட்டப்பட்டு 63 தொழிலாளர்கள் தான் இன்று வரை கோர்ட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீசுக்காரன் மீதோ, மானேஜர் மீதோ எந்த வழக்கும் இல்லை.  3 ஆண்டுகளுக்கு முன் இதே குர்கானில் அஜித்சிங் என்ற தொழிலாளியை ஆள் வைத்துக் கொன்ற முதலாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கொலை வழக்கு தூங்குகிறது.

தொழிலாளி வர்க்கத்துக்கு  எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கும் ஊடகங்கள் எவையும், தொழிலாளர் நல சட்டங்களையும் தொழிற்சங்க உரிமைகளையும் கடுகளவும் மதிக்காத மாருதி உள்ளிட்ட நிறுவனங்களை ஒப்புக்குக் கூட எச்சரிப்பதில்லை. 2008இல் குர்கானில் கிரேசியானோ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் எம்.டி. லலித் கிஷோர் சவுத்திரி தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டபோது, அன்றைய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்னான்டஸ், “இந்தச் சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் நல சட்டங்களை மதித்து மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு கார்ப்பரேட் உலகம் கொதித்தெழுந்தவுடன், “தான் சொன்னது தவறு” என்று முதலாளிகளிடம் வருத்தம் தெரிவித்தார்.

அது தவறுதான். பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடம் மனிதத்ததன்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்பதை நாடு முழுவதும் நாள்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். தனியார்மய  தாராளமயக் கொள்கைகளின் கீழ் மதம் கொண்ட மிருகமாகவே மாறியிருக்கும் முதலாளி வர்க்கத்தின் முகத்தின் மீது விழுந்திருக்கிறது மாருதி தொழிலாளர்கள் கொடுத்த அடி!

மத்திய அரசு, மாநில அரசு, அதிகாரிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தையும் தனது ஏவலாட்களாக வைத்திருக்கும் திமிரில், தொழிலாளி வர்க்கத்தை புழுவைப் போலக் கருதி நடத்திய மாருதி சுசுகி நிர்வாகம் அவமானத்தில் புழுங்குகிறது. அதன் அதிகாரிகளோ அச்சத்தில் நடுங்குகிறார்கள்.

மருத்துவமனையில் கிடக்கும் ஜப்பானிய அதிகாரிகள், தங்கள் சொந்தக் கம்பெனியின் வளாகத்துக்குள்ளேயே, உயிர் பிழைப்பதற்கு ஓடி ஒளிந்த கதையை, சக பன்னாட்டு நிறுவன அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறட்டும்!

முதலாளித்துவ நிறுவனங்களில் தொழிலாளிகளை அச்சுறுத்தும் எச்.ஆர். வேட்டை நாய்கள், அவனீஷ் குமார் தேவின் புகைப்படத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து, நாள்தோறும் தம் அச்சத்தைப் புதுப்பித்துக் கொள்ளட்டும்!

எட்டு மணி நேரமோ, பனிரெண்டு மணி நேரமோ தனது ஆற்றலைப் பிழிந்து விற்கும் தொழிலாளி வர்க்கம், ஒரே ஒரு கணம் எதிர்காலம் குறித்த தனது பொருளற்ற அச்சத்தைக் கைவிடுமானால், அந்தக் கணத்தின் ஆற்றல் எப்படி இருக்கும் என்பதை எதிரிகள் உணர்ந்து கொள்ளட்டும்!

மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!

“பயங்கரவாதம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் அதனை அன்றுதான் முதன் முறையாக அனுபவித்தோம்” என்று பேட்டியளித்திருக்கிறார்கள், மருத்துவமனையில் கிடக்கும் சில மாருதி அதிகாரிகள். பயங்கரம்தான்! ஒவ்வொரு நாளும் தங்கள் மீது பயங்கரத்தை ஏவும் முதலாளி வர்க்கம் சுவைக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தால் பரிமாறப்பட்ட சிவப்பு பயங்கரம்!

_______________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

9

புதிய-ஜனநாயகம்-ஆகஸ்டு-2012

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1) ”தனியார்மயக் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! மறுகாலனியாக்கக் கொள்கையை மோதி வீழ்த்துவோம்!!”  

2) ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை!

3) மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!
தாராளமயக் கொள்கைகளின் கீழ் மதம் பிடித்த மிருகமாக மாறியுள்ள முதலாளி வர்க்கத்துக்குப் பொருத்தமான பதிலடி கொடுத்திருக்கிறார்கள், மாருதி தொழிலாளர்கள்.

4) சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? பேருந்தின் ஓட்டையா? தனியார்மய இலாப வெறியா?                       
கல்வி தனியார்மயத்தைப் பாதுகாக்கும் விதத்தில் இருக்கிறது, சட்டம். அது, சட்டத்தில் இருக்கும் ஓட்டை அல்ல; சட்டமே ஓட்டை.

5) கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
நான்கு ஏழைக் குழந்தைகளின் தலைமுடியை வெட்டி அவமானப்படுத்திய தனியார் பள்ளி முதலாளியை முச்சந்தியில் நிறுத்திச் சவுக்கடி தண்டனை கொடுப்போம்

6) மாணவரைத் தற்கொலைக்குத் தள்ளிய தனியார் பள்ளியை மூடு! பள்ளி நிர்வாகிகளைக் கைது செய்!”                                        
-பெற்றோர்களுடன் இணைந்து ம.உ.பா.மையம் நடத்திய முற்றுகைப் போராட்டம்.

7) நீதி வேண்டுமா, ஆயுதமேந்து! -ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை.

8) தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி!
இரான் மீது போர்த் தாக்குதல் நடத்துவதற்காகப் பயங்கரவாதப் பீதியூட்டிவரும் அமெரிக்கா, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பழிவாங்கல், சட்டவிதோதக் கதவடைப்புக்கு எதிராகத் தொடரும் மெடிமிக்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.

8) போலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்!
ஒவ்வொரு நாளும் நடந்துவரும் போலீசின் அத்துமீறல்கள், பொதுமக்களை எப்படி போலீசிடமிருந்து பாதுகாப்பது என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

9) பழிவாங்கல், சட்டவிதோதக் கதவடைப்புக்கு எதிராகத் தொடரும் மெடிமிக்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.

10) தொடரும் போலீசு அட்டூழியங்களுக்கு எதிராக கருவேப்பிலங்குறிச்சி மக்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்!

11) சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

12) மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் வரலாற்றுப் பின்புலம்

13) பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!
மருந்துப் பரிசோதனைக்கு யூதர்களை நாஜிகள் பயன்படுத்திக் கொண்டதைப் போல, ஏழை இந்திய மக்களை ஏமாற்றி முறைகேடான மருந்துப் பரிசோதனைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

14) ”இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!” – -ஸ்பெயின் சுரங்கத் தொழிலாளர்களின் கிளர்ச்சி

 புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

நோய்கள் விற்பனைக்கு! மருந்து கம்பெனிகளின் மோசடி!! ஆவணப்படம்

4
நோய்

நோய்

‘அமெரிக்கா உலகின் வல்லரசு. அங்கு பாலாறும் தேனாறும் ஓடுகிறது, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் டாலரில் சம்பாதிக்கிறார்கள், உலகின் எல்லா நாட்டவரும் அமெரிக்க குடிமக்கள் ஆக போட்டி போடுகிறார்கள், எல்லா நாடுகளும் அமெரிக்கா போல வல்லரசாக முயற்சிக்கின்றன’ என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் கருத்தாக்கம்.

இந்தியா 2020-ல் வல்லரசாகி விடும் என்ற அப்துல் கலாமிய கனவு அமெரிக்கா போல இந்தியாவும் ‘முன்னேறுவது’ என்பதைத்தான் குறிக்கிறது. வல்லரசு என்றால் எப்படி இருக்க வேண்டும்? இராணுவ வல்லமை, விண்வெளி சாகசம், போர் என்றுதான் இத்தகைய ‘தேசபக்தர்கள்’ பட்டியலிடுவார்கள். கூடவே கொசுறு பின்னிணைப்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, உடல் நலம் பேண அனைவருக்கும் கட்டுப்படியாகும் கட்டணத்தில் மருத்துவ வசதிகள், தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் முதலியவற்றையும் கூறுவார்கள்.

அமெரிக்காவின் ஜனநாயகமும், சந்தைப் பொருளாதாரமும், வல்லரசு வலிமையும் மக்கள் நலன் சார்ந்த துறைகளில் என்ன சாதித்திருக்கின்றன? அமெரிக்காவின் மருத்துவத் துறையைப் பற்றி பார்ப்போம்.

அமெரிக்காவின் மருத்துவத் துறை, லாபம் தேடும் முதலாளித்துவ நிறுவனங்களால் திரிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, உருத்தெரியாத ஜந்துவாக மாற்றப்பட்டிருக்கிறது. தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம், தலையை கவட்டை வழியாக விட்டு கையை கீழே நீட்டி மூக்கை தொடுவதுதான் அமெரிக்க மருத்துவத் துறையின் செயல்பாட்டுக்கு சரியான உதாரணமாக இருக்க முடியும்.

மருத்துவத் துறையின் ஒரு பகுதியான மருந்து ஆராய்ச்சி, பரிசோதனை, விற்பனை பற்றிய Big Bucks Big Pharma என்ற ஆவணப் படம் அந்த அவலங்களை அம்பலப்படுத்துகிறது.

மருந்துத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்

  • அமெரிக்காவில் எப்படி செயல்படுகின்றன
  • மக்களை எப்படி மேலும் மேலும் மருந்துகளை வாங்கி பயன்படுத்த தூண்டுகின்றன
  • புதிய புதிய நோய்களை எப்படி கண்டுபிடிக்கின்றன

என்ற விவரங்கள் இந்த ஆவணப்படத்தில் தெளிவாக விவரிக்கப்படுகின்றன.

மேலும்,

  • தமது மருந்துகளை அதிகம் பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கும் பிற சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை (லஞ்சம்) கொடுப்பது
  • மருந்து ஆராய்ச்சியில் லாப நோக்கிற்காக மோசடி செய்வது
  • மருந்து ஒழுங்கு முறை ஆணையத்தையும் ஊழல் மயமாக்குவது
  • புதிய மருந்துகளுக்கான பரிசோதனைகளை தமது லாப நோக்கத்திற்கு ஏற்றபடி வடிவமைப்பது
  • தமக்கு ஏற்றபடி சட்டங்களை உருவாக்க மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்குவது

என்று அந்த கிரிமினல்கள் விட்டு வைக்காத உத்திகள் எதுவும் இல்லை.

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது, தகுதி பெற்ற மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் கண்டறிந்த நோய்க்கூறுகளின் அடிப்படையில் அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது நவீன மருத்துவத்தின் மைய அம்சம். இந்த வேதி மருந்துகளின் பயன்பாடு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முதல் உலகப்போரில்தான் முதல் முதலில் காயங்களை குணப்படுத்த நவீன முறைகளை பயன்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்த 100 ஆண்டுகளில் மருந்துகளை

விற்கும் நிறுவனங்கள் பகாசுரன்களாக வளர்ந்து இப்போது உலகளாவிய சந்தையில் ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

தனியார்மயம், தாராளமயம் விரிவடைந்த 1980களுக்கு முன்பு வரை மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்கள் மூலமாகவே  மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்து வந்தன. அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனும், பிரிட்டனில் மார்கரெட் தாட்சரும் பிரதிநிதித்துவப் படுத்திய கார்ப்பரேட்  அரசுகள், மருந்துகளை விளம்பரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தி விட கடந்த 20 ஆண்டுகளில் மருந்து விளம்பரங்கள் பெருகியிருக்கின்றன.

இப்போது மருத்துவர்களால் பரிந்துரைக்க்கப்பட வேண்டிய மருந்துகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. விளம்பரங்களில் மருந்துகளை சாப்பிட்ட மக்கள் ஆனந்தத்தில் ஆடிப் பாடுகிறார்கள், துள்ளிக் குதிக்கிறார்கள், அழகில் மிளிர்கிறார்கள். அதைப் பார்க்கும் பார்வையாளரை, தனது மருத்துவரிடம் அந்த மருந்தை கேட்டு வாங்கும்படி விளம்பரம் அழைக்கிறது. மருந்து எதற்காக பரிந்துரைக்கப்பட்டதோ அந்த நோயைப் பற்றியோ, அதன் பாதிப்புகளையோ இந்த விளம்பரங்கள் பேசுவதில்லை. மருந்தின் பக்க விளைவுகளையும் பார்வையாளருக்கு விபரமாக காட்டுவதில்லை. பெப்சி கோலா, குர்குரே சிப்ஸ், குளியல் சோப்பு விளம்பரங்கள் போல இந்த மருந்து விபரங்கள் மக்கள் மத்தியில் உணச்சி பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை மருந்துகளின் பக்கம் தள்ளுகின்றன.

என்ன விளைவு? மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. கூடவே மருந்துகளின் பாதகமான பக்க விளைவுகளால் லட்சக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் இறப்புகளுக்கான காரணங்களில் அது 5வது இடத்தை வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் பாதகமான மருந்து பக்க விளைவுகள் 1 லட்சம் பேரின் இறப்புக்கும் சுமார் 15 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

எந்த மாதிரி மருந்துகள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகின்றன?

‘1998 முதல் 2004 வரையிலான ஏழு ஆண்டுகளில் புதிதாக ஒப்புதல் கொடுக்கப்பட்ட மருந்துகளில் 14% மட்டுமே ஏற்கனவே விற்கப்படும் மருந்துகளை விட சிறப்பானவை என்று சொல்லக் கூடிய புதிய வேதி சேர்மங்கள். பெரும்பான்மை, பழைய வேதிப் பொருட்களை சிறிதளவு மாற்றி உருவாக்கப்பட்டவைதான். சந்தையில் ஏற்கனவே கிடைக்கும் மருந்துகளை விட அவை எந்த வகையிலும் சிறந்தவை இல்லை. இவற்றை ‘ஈயடிச்சான்’ மருந்துகள் என்கிறோம்’ என்று விளக்குகிறார் ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மார்சிய ஏஞ்சல் .

இதைப் பற்றி புரிந்து கொள்ள லாப வேட்டை அடிப்படையிலான முதலாளித்துவ மருந்து உற்பத்தி சங்கிலியின் ஒரு விபரத்தைப் பார்க்க வேண்டும்.

நோய்ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்து, சோதனை செய்து, கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்து, அனுமதி வாங்கிய பிறகுதான் சந்தைப்படுத்த முடியும். உண்மையான ஒரு புதிய மருந்தை உருவாக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகலாம். அவ்வளவு முயற்சி செய்து உருவாக்கிய மருந்துகளை போட்டியாளர்கள் நகல் செய்து விற்க முடியாமல், மருந்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு (20 ஆண்டுகள்) ஏகபோக உரிமை தருகிறது காப்புரிமை சட்டம்.

மருந்து நிறுவனங்கள் முதல் 20 ஆண்டுகளுக்கு மருந்தை அதிக விலைக்கு விற்று தனது முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் நீங்கி விட போட்டி நிறுவனங்களும் உற்பத்தியில் குதித்து மருந்தின் விலை பல மடங்கு வீழ்ந்து விடும்.

புதிய மருந்து கண்டுபிடிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு, அதை ஈடுகட்ட பல ஆண்டுகளுக்கு ஏகபோக விற்பனை உரிமை என்பது நோக்கம். லாபத்தை இன்னும் அதிகமாக்கிக் கொள்ள மருந்து நிறுவனங்கள் என்ன செய்கின்றன? பெருமளவு செலவு செய்யாமலேயே புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முடிந்தால், அவற்றை 20 ஆண்டுகள் அதிக விலைக்கு விற்க முடிந்தால்? அதைத்தான் செய்ய ஆரம்பித்தார்கள்.

தங்களுக்கு காப்புரிமை இருக்கும் மருந்துகளின் தனி உரிமக் காலம் முடியப் போகும் நேரத்தில் அதன் மூலக்கூறில் மிகச் சிறிய மாறுதல் ஒன்றை ஏற்படுத்தி புதிய பெயரில் அதிக விலையில் விற்க ஆரம்பித்தார்கள். அந்த புதிய பெயரிலான மருந்துதான் சிறந்தது என்று மக்களை நம்ப வைக்க பல கோடி ரூபாய்கள் விளம்பரத்தில் செலவிடுகிறார்கள். இதே உத்தியை போட்டியாளர்களும் கையாள, ஒரே மருந்தின் நான்கைந்து வடிவங்கள் பல மடங்கு விலை வேறுபாட்டுடன் கிடைக்கின்றன.

இதற்கு அரசின் சட்டங்களும் துணையாக இருக்கின்றன.

‘மருந்து நிறுவனங்கள் தமது மருந்துகளை அமெரிக்க உணவு மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் போது அதே நோயை குணப்படுத்த பயன்படும் பழைய மருந்துகளோடு ஒப்பிட வேண்டியதில்லை. புதிய மருந்தை வெறும் மாத்திரையுடன் ஒப்பிட்டால் போதும். அதாவது புதிய மருந்து ஒன்றும் இல்லாததை விட சிறந்தது என்று நிரூபித்தால் போதும்’

இதற்கு உதாரணமாக பிரைலோசெக் என்ற மருந்தை எடுத்துக் கொள்ளலாம். 1990களின் ஆரம்பத்தில் நெஞ்செரிச்சலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய புதுமையான கண்டுபிடிப்பாக பிரைலோசெக் வெளி வந்தது. அதன் தனிப்பட்ட காப்புரிமை முடியும் காலம் வந்ததும் நிறுவனம் அதை எப்படி எதிர் கொண்டது அப்போது பிரைலோசெக்கின் விற்பனை பிரதிநிதியாக இருந்த ஜீன் கார்போனா விளக்குகிறார்.

‘ஆண்டுக்கு $6 பில்லியன் (சுமார் 25,000 கோடி ரூபாய்) வருமானத்தை இழக்கவிருந்தோம். எங்கள் நிறுவனத்தின் வரவு செலவு அறிக்கையின் லாபக் கணக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்தோம். எங்கள் நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பழைய மருந்தை மிகச் சிறிதளவு மாற்றி அதே மாதிரியான நெக்சியம் எனற மருந்தை உருவாக்கி உரிமம் பெற்றார்கள்’

2004 வாக்கில் நெஞ்செரிச்சலுக்கான பிரபலமான ஊதா மாத்திரை மூன்று வடிவத்தில் கிடைத்தது. அவற்றின் விலைகள் பெருமளவு வேறுபட்டிருந்தன. கடையில் நேரடியாக வாங்கும் பிரைலோசெக்கை பயன்படுத்தினால் மாதம் $24 செலவாகும் (சுமார் ரூ 1000). மருத்துவரிடம் பரிந்துரை வாங்கி நெக்சியத்தை பயன்படுத்தினால் மாதம் $171 (சுமார் ரூ 8,000) செலவாகும்.

நோயாளிகளை அதிக லாபம் கிடைக்கும் மருந்துகளை வாங்க வைக்க  விளம்பரங்களில் பணத்தை கொட்டுகின்றன மருந்து நிறுவனங்கள்.

இரண்டாவதாக, ஒரு நோய்க்கான அளவீட்டு வரையறையை உயர்த்துவதன் மூலம் அந்த நோய்க்கான மருந்துகளின் சந்தையில் பல லட்சம் புதிய நுகர்வோரை சேர்த்து விடுகிறார்கள்.

‘உங்கள் இரத்த அழுத்தம் ஒரே நாளில் இயல்பு நிலையிலிருந்து உயர் அழுத்த நிலைக்கு போயிருக்கலாம். புதிய அரசு பரிந்துரைகளின் படி இலட்சக்கணக்கான பேருக்கு இரத்த அழுத்த பரிசோதனை தேவை. உங்களுக்கு?’ என்று முழங்கியது ஒரு சிபிஎஸ் தொலைக்காட்சி செய்தி அறிக்கை.

இன்னொரு சிபிஎஸ் செய்தியில் ‘நேற்று வரை உங்களுக்கு கொலஸ்டிரால் பிரச்சனை இல்லை என்றால் இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். புதிய பரிந்துரைகள் கொலஸ்டிராலை குறைக்கும் மருந்துகளான ஸ்டாடின்களின் சந்தையை பெருமளவு பெருக்குகின்றன. புதிய வரையறைகளின் படி கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் தமது வாழ்நாள் முழுமைக்கும் ஸ்டாடின் மருந்துகளை சாப்பிட வேண்டியிருக்கும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கொலஸ்டிரால் பற்றிய புதிய பரிந்துரைகள் ஒன்பது நிபுணர்களால் உருவாக்கப்பட்டன. அவர்களில் ஆறு பேர் இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து சிறப்புரை கட்டணம், ஆராய்ச்சி உதவி, மற்றும் பிற வழிகளில் பண உதவி பெறுபவர்கள் என்று பின்னர் தெரிய வந்தது.

நன்றாக இருப்பவர்களையும் நோயாளியாக அறிவித்து  தமது மருந்து விற்பனைகளை விற்கலாம் என்பதுதான் முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தின் efficiencyயின் விளைவு.

நோய்

மூன்றாவதாக ஒரு மருந்தை இன்னொரு நோய்க்கூறுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம் என்று காட்டி விண்ணப்பித்தால் அதன் காப்புரிமை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது சட்டத்தின் ஒரு ஷரத்து. புதிய புதிய நோய்களை தேடி கண்டுபிடித்து, அவற்றை சரி செய்ய தமது மருந்துகளை வாங்கி சாப்பிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகின்றன மருந்து நிறுவனங்கள்.

  • பதின்ம வயது சிறுவர்கள் நான்கு பேர் மத்தியில் கூச்சப்படுவது ஒரு நோயாக விளம்பரப்படுத்தப்படுகிறது
  • வீட்டிலும் அலுவலகத்திலும் எப்போதும் டென்ஷனாக இருப்பது ஒரு நோய்
  • அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது ஒரு நோய்

இந்த நோய்களுக்கு நீள நீளமான பெயர்கள் சூட்டி, அவற்றை சரிசெய்ய தமது மருந்துகளை மருத்துவர்களிடம் கேட்டு பெறுமாறு விளம்பரங்கள் செய்கிறார்கள். உதாரணமாக கூச்ச சுபாவத்திற்கு Social Anxiety Disorder என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

‘பலர் கூடியிருக்கும் இடத்துக்குள் போய் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள தயக்கமாக இருக்கிறதா! வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால் பதில் தெரிந்தாலும் எழுந்து சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறதா! அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் கருத்தை சொல்ல நடுக்கமாக இருக்கிறதா!. என்ன செய்ய வேண்டும்?’ என்று போகிறது ஒரு விளம்பரம்.

புரோசேக் வகை மருந்துகள் மன அழுத்தத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டன.  இந்த மருந்துகள் இப்போது பல வகையான மனநிலைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. அனுமதிக்கப்படும் ஒவ்வொரு புதிய அறிகுறியும் இந்த மருந்துகளின் லாபத்தை அதிகரிப்பதால் அப்படி புதிதாக புனையப்படும் ‘நோய்கள்’ பொதுமக்களிடையே வெகுவாக சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த புதிய ‘நோய்கள்’ தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்கிறார்கள், பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் வெளிவர வைக்கிறார்கள். நேற்று வரை நன்றாக இருந்து இருந்த ஒருவர் இந்த விளம்பரங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்த்த பிறகு தனக்கு ஏதோ தீர்க்க முடியாத நோய் இருப்பதாக உணர்ந்து மருந்துக்களை வாங்கும் வாடிக்கையாளராக மாற்றப்பட்டு விடுகிறார்.

‘இந்த அமைப்புக்கு மூளையே இல்லை. அதன் நோக்கம் லாபம் மட்டும்தான். அது எதைப்பற்றியும் கவலைப் படாமல் தனது சந்தையை விரிவுபடுத்துகிறது’ என்கிறார் கேதரீன் கிரெய்டர் என்ற பத்திரிகையாளர்.

நோய்‘இது உங்கள் மாத விலக்குக்கு முந்தைய வாரம். எரிச்சலையும் மனநிலை மாற்றங்களையும் பொருமல்களையும் எதிர் கொள்கிறீர்கள். இது பிஎம்எஸ் என்று நினைக்கிறீர்களா? அது பிஎம்டிடி ஆக இருக்கலாம். Premenstrual Dysphoric Disorder – மாதவிலக்குக்கு முந்தைய கோளாறாக இருக்கலாம்’ என்று ஒரு நடுத்தர வயது பெண்ணை காட்டி விளம்பரப்படுத்தியது எலை லில்லி என்ற நிறுவனம். இந்த விளம்பரம் மூலம் புரோசேக் மருந்துக்கான தனது சந்தையை விரிவுபடுத்தியது. பச்சையாக இருந்த புரோசேக் மருந்தின் நிறத்தை இளம் சிவப்பாக மாற்றி, அதற்கு சாராபெம் என்று பெயர் கொடுத்து அதை மாதவிலக்குக்கு முந்தைய மன அழுத்தத்துக்கான மருந்தாக சந்தைப்படுத்துவதற்கு ஒப்புதல் பெற்றது.

இந்த மருந்தை பற்றி பெண்களுக்கு ‘அறிவுறுத்த’ எலை லில்லி நிறுவனம் $30 மில்லியன் (சுமார் ரூ 150 கோடி) செலவழித்தது என்கிறது ஏபிசி செய்தி. சாராபெம் தீர்ப்பதாக சொல்லும் பிரச்சனை உண்மையில் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மக்களை சோதனைக் கூட எலிகளை விட கேவலமாக நினைத்துக் கொண்டு தமது மருந்துகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் விற்பதற்கானவைதான் இத்தகைய முயற்சிகள்.

தமது மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு பரிசுகள் வழங்குவது மக்களுக்கு பரவலாக தெரிய வந்து அது விமர்சிக்கப்பட்டதும், கல்வி என்ற போர்வையில் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தன மருந்து நிறுவனங்கள்.

‘வெள்ளை கோட்டு அணிந்த ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரை அழைத்து அவரது பைகளை சோதித்தால் அவர் பைகளில் வைத்திருக்கும் பல  பொருட்கள் பிராண்ட் பொறித்தவையாக இருக்கும். பேனா, ஸ்டெதஸ்கோப் டேக், காம்பஸ் மற்றும் மருத்துவ பணிகளுக்காக பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இதில் அடங்கும். மருத்துவர்களும் மாணவர்களும் இப்படி விளம்பரம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வது போல நடந்து கொள்கிறார்கள்’ என்கிறார் டாக்டர் பாப் குட்மேன்.

மருந்து விற்பனையில் பணத்தை எங்கு செலவழித்தாலும் அது நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் என்று விற்பனை பிரதிநிதிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். இலவச மாதிரிகளை கொடுப்பதிலோ,  ஷேம்பேனுடனான விருந்து கொடுப்பதிலோ, நியூயார்க் போய் வருவதற்கு விமான டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுப்பதிலோ, பணத்தை செலவழிப்பதற்கு தனது நிறுவனம் முழு சுதந்திரம் அளித்திருந்ததாக ஜீன் கார்பானோ சொல்கிறார்.

நோய்கற்றுக் கொள்வதற்கான ஒரு செமினாரின் பகுதியாக ஷேம்பேன் பரிமாறப்படலாம், மருத்துவர்களுக்கு 18 சுற்று கோல்ப் விளையாட்டு ஏற்பாடு செய்யப்படலாம், $1000 மதிப்புடைய ஸ்காட்ச் விஸ்கி ஒவ்வருவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படலாம். எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்பதுதான் அவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.

நோய்க்கு பொருத்தமான மருந்தை பரிந்துரைக்கும் மருத்துவர் மருந்து நிறுவனங்களுக்கு தேவையில்லை. அவர்களது மருந்தை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும், அதுதான் அவர்களின் நோக்கம்.

மருந்துத் துறை அமெரிக்காவின் அதிகார அமைப்புகளையும் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஒவ்வொரு மாநில தலைமை செயலகத்துக்குள்ளும் வாஷிங்டனிலும் அவர்கள் நுழைந்திருக்கிறார்கள். பல கோடி டாலர்கள் செலவழித்து தமக்கு சாதகமான சட்டங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து கொள்கிறார்கள்’ என்கிறார் ஜீன் கார்பானோ.

1980களுக்கு முன்பு புதிய மருந்துகளுக்கான மருந்தக பரிசோதனைகள் தேசிய ஆரோக்கிய கழகத்தின் கண்காணிப்பில் அதன் செலவில் நடத்தப்பட்டன. பல்கலைக் கழகங்கள் தனியார் பணத்தை வாங்குவதை அவமானமாக நினைத்திருந்தன. 1980களில் ரீகன் அரசாங்கம் அரசு ஒதுக்கீடுகளை குறைத்து விட மருந்து நிறுவனங்கள் இந்த பரிசோதனைகளுக்கு நிதி அளிக்க ஆரம்பித்தன. 1991 வரை இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1990களில் இந்த பரிசோதனைகள் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறி லாப நோக்கமுடைய தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கின.

‘இப்போது 90% கிளினிகல் டிரையல்கள் மருந்து நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.  கிளினிக்கல் டிரையல்களுக்கான நடைமுறைகளை வகுக்கும் நிபுணர்களில் 50% பேர் மருந்து நிறுவனங்களிடம் ஊதியம் பெறுகிறார்கள். மருத்துவக் கல்வித் துறையில் பணியாற்றும் 70% மருத்துவர்கள் மருந்துத் நிறுவனங்களுடன் தொடர்பு உடையவர்கள்’.

இந்த பரிசோதனைகளின் முடிவுகளையும், தரவுகளையும் நிறுவனங்கள் முழுமையாக வெளியிடுவதில்லை.

உதாரணமாக, உயர் ரத்த அழுத்ததுக்கான மலிவான மாத்திரைகளை அதிக விலையில் விற்கப்படும் மருந்துகளுடன் ஒப்பிட்டு பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆண்டுக்கு $30 முதல் $50 வரை மட்டும் செலவு வைக்கும் மலிவான மருந்துகள் மற்ற விலை உயர்ந்த மாத்திரைகளை விட சிறப்பாக செயல்படுகின்றன என்ற ஆராய்ச்சி முடிவுகள் அந்தக் கட்டுரையில் வெளியாகியிருந்தன. இதைப் பற்றி மருந்து நிறுவனத்தின் விற்பனை மேலாளரை கேட்ட போது, ‘இது ஒரு பிரச்சனையே இல்லை, எங்களிடம் $55 மில்லியன் விளம்பரப் பணம் இருக்கிறது. எங்கள் விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த ஆய்வு விபரத்தை யாரும் கவனிக்கப் போவதில்லை ‘ என்று நம்பிக்கையுடன் சொன்னார். அப்படித்தான் நடந்தது.

உலகின் மிகவும் ‘முன்னேறிய’ நாடான அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம், நாட்டின் சட்டங்கள் என்று அனைத்தையும் தமது இலாப வெறிக்கு பலி கொடுத்தும் பசி அடங்காமல் உலகெங்கும் தமது கரங்களை விரித்துக் கொண்டிருக்கின்றன இந்த பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.

_____________________________________

– செழியன்.

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

‘காதல் கோட்டை, காதல் தேசம்’: கவலைப்படு சகோதரா!

7
காதல்-கோட்டை

பாலுறவு வாழ்க்கையில் (காதலில்) மனிதனுக்கு இயற்கையால் தரப்பட்டவை மட்டும் வெளியாகவில்லை. கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவையும் (அவை உயர்ந்த மட்டமோ, தாழ்ந்த மட்டமோ) வெளியாகின்றன என்றார் லெனின்.

‘ஆதிமுதல் காதலர்கள்’ என அறியப்படும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயற்கை அளித்த உணர்ச்சி காதல் அல்ல; ஏவாளுக்குப் பதிலாக ஓவாள் என்றொரு பெண்ணை ஏதேன் தோட்டத்தில் காண நேர்ந்திருந்தாலும் ஆதாம் அவளுடன் சேர்ந்திருப்பான்; அவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசித்திருப்பார்கள்; ஏனென்றால் அது வெறும் பாலுணர்வு – விலங்குணர்வு. அழகு, அறிவு, அந்தஸ்து, ரசனை ஆகியவற்றையெல்லாம் பார்த்து இவற்றில் ஏதோவொரு விதமாக ஈர்க்கப்படும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்புவதைத்தான் நாம் காதல் என்று அழைக்கிறோம்.

ஆணும் பெண்ணும் சுதந்திரமாகப் பழகுவதற்கும், அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் தனக்குப் பொருத்தமான துணையைத் தெரிவு செய்து கொள்வதற்கும் போதுமான வாய்ப்புகள் நமது சமூகத்தில் இல்லை. இரு பாலருக்குமிடையில் ஒரு அநாகரிகமான இடைவெளியைப் பராமரிப்பதை நமது சமூகம் தனது பண்பாட்டின் உயிர்நாடியாகக் கருதுகிறது. இதன் விளைவாகவே காதல் மணம் புரிய விரும்பும் பல ஆண்களும் பெண்களும் அதற்கு வாய்ப்பில்லாமல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட படுகுழியில் விழவேண்டியிருக்கிறது. சாதி, மதம், அந்தஸ்து போன்ற பல காரணங்களால் காதலர்கள் பிரிக்கப்பட்டுப் பெரியோர்கள் தோண்டிய படுகுழியில் தள்ளப்படுவதையும் பார்க்கிறோம். இருந்தாலும் திருமண விசயத்தில் மாடுகளைக் காட்டிலும் மனிதர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது என்ற உண்மையை நிரூபிப்பதற்கு நம் கைவசம் இருக்கும் ஒரே ஆதாரம் – தாலிக்கயிறு.

நிலைமை எவ்வளவு மோசமாக இருந்த போதிலும் சுமார் 30,40 ஆண்டுகளுக்கு முன்னால் கருதப்பட்டு வந்ததைப் போல் ‘காதல்’ என்பது ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்படுவதில்லை என்பதற்காக நாம் கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். அதே நேரத்தில் காதல் என்பது பெற்றோருக்குத் தலைவலியாக இருந்த நிலைமை போய் இளைய சமுதாயத்திற்குத் திருகுவலியாக மாறி வருகிறது என்ற உண்மையையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இந்த ‘அநாகரிக’ இடைவெளியில் ஆதாயம் அடைந்தவர்கள் தான் எத்தனைப் பேர்? வயசுக்கு வராத காதல், வயசு போன காதல், சொன்ன காதல், சொல்லாத காதல்…. என்று எத்தனைப் படங்கள்! நமது ‘அவல’ நிலையைப் பல்வேறு கோணங்களில் நமக்கே படம் பிடித்துக் காட்டி கோடீசுவரர்கள் ஆன நடிகர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை ஒரு கணம் பட்டியல் போட்டுப் பாருங்கள்! காதலின் காணிக்கையாக நாம் இவர்களுக்கு இதுவரை செலுத்தியுள்ள தொகையில் இந்தியா வாங்கிய கடன்களை மட்டுமல்ல, வாங்கவிருக்கும் கடன்களையும் அடைத்து விடலாமே! எனவே ஒரு பொருளாதாரப் பிரச்சினை என்ற முறையிலாவது நாம் இதனைப் பரிசீலிப்பது அவசியமாகிறது.

காதல்-கோட்டை

‘காதல் கோட்டை’ நூறு நாட்களைத் தாண்டி ஓடுகிறது; ‘காதல் தேசம்’ நூறு நாட்களை நோக்கி ஓடுகிறது. முன்னது ‘தரமான’ குடும்பச் சித்திரம்; பின்னது சற்றுத் தரம் குறைந்த மாணவர் சித்திரம்.

திருட்டுப் போன தனது கைப்பையைத் திருப்பியனுப்பிய (அநாதை) கதாநாயகன் மீது காதல் கொள்கிறாள் நாயகி. ”கண்ணாலே பாத்துப் பாத்து வந்த காதல் நூறுடா – கண்ணியமான காதல் இக்காதல் தானடா’ என்று விழியில் விழாமலேயே இதயத்தில் எகிறிப் பாய்ந்து கடைசியாக உயிரில் கலக்கிறார்கள் – இது ‘காதல் கோட்டை.’

இரண்டு மாணவர்கள் ஒரு மாணவியைக் காதலிக்க, இருவரது காதலின் ஆழத்தையும் கண்டு நெகிழ்ந்து போகிறாள் அந்தக் காதலி. கடைசியாக இரண்டு பேருடைய காதலையுமே ரத்து செய்வதன் மூலம் அவர்களுடைய காதல் மீது தான் கொண்ட மரியாதையைத் தெரிவிக்கிறாள் – இது ‘காதல் தேசம்.’

வேறு வார்த்தைகளில் சொல்வதனால், கண்ணியமான முறையில் காதலித்து ‘கண்ணியக் குறைவான’ நோக்கத்திற்காக இணைவது ஒரு படம்; கண்ணியக் குறைவான முறையில் காதலித்து ‘கண்ணியமான’ நோக்கத்தில் இணைவது இன்னொரு படம்.

இவற்றின் வெற்றியிலிருந்து தெரியவரும் உண்மை என்ன? உண்மையைத் திரைப்படத்தில் தேடுவதை விட ரசிகர்களிடம் தேடுவோம்; திரையரங்கினுள் தேடுவதை விட திரையரங்கிற்கு வெளியே தேடுவோம்.

”உங்கள் காதலைத் தெரிவிக்க தங்கத்தைக் காட்டிலும் சிறந்த மொழி வேறென்ன இருக்கிறது?” என்று கேட்கிறது ஒரு நகைக்கடை விளம்பரம்.

”முற்காலத்தில் காதலர்கள் தங்கள் காதலை நிரூபிப்பதற்கு வில்லை முறிப்பது, குதிரையை அடக்குவது, மாடு பிடிப்பது போன்ற ஆபத்தான விவகாரங்களில் தலை கொடுக்க வேண்டியிருந்தது. மணிபர்சைத் திருப்பிக் கொடுத்தால் போதுமானது என்கிற அளவுக்கு இன்று நிலைமை சீர்திருந்தியிருக்கிறதே” என்ற மகிழ்ச்சியுடன் காதலர்கள் வெளியே வரும்போது மேற்படி விளம்பரம் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.

உலக அழகின் நீள அகலங்களை வரையறுத்து அதற்கேற்ப உங்களைச் சுருக்கவோ, விரிக்கவோ உத்திரவாதம் தருகின்ற அழகு நிலையங்கள் பெண்களைக் கவலையுடன் கண்ணாடி முன் நிறுத்துகின்றன.

‘ஸ்கிரீன் பிரிண்டிங் கற்றுக் கொள்வது எப்படி’, ’30 நாளில் கன்னடம்’ ஆகிய நூல்களுடன் ‘காதலிப்பது எப்படி’ என்ற நூலும் விற்பனையாவதைப் பார்க்கும் போது, உங்கள் காதலர் அல்லது காதலி உங்களை உண்மையாகவே நேசிக்கிறாரா அல்லது இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை உங்கள் மீது பிரயோகித்துப் பார்க்கிறாரா என்ற ஐயம் எழுகிறது.

”எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் என்னை நேசிக்கிறார். எனினும் இல்லற வாழ்வில் சலிப்பு ஏற்பட்டு அலுவலகத்தில் உள்ள சக ஊழியரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. (எனக்கு 8 வயதில் ஒரு பெண் இருக்கிறாள்) இது சரியா? தவறா?” என்ற வாரப் பத்திரிகைகளின் ஆலோசனைப் பக்கத்தில் வெளிவரும் கேள்விகளைப் படிக்கும்போது ”பட்டினத்தார் சொன்னது சரிதானோ” என்ற பயம் ஆண்களுக்கு எழுகிறது.

”இந்தியாவில் மாபெரும் பாலுறவுப் பரட்சி நடக்கிறது. உடலின்பம் குறித்த பழமைவாதக் கண்ணோட்டம் மறைந்து வருகிறது. திருமணமான பெண்கள் முன்புபோல கட்டுப்பெட்டிகளாக இல்லை. பழமைவாதச் சென்னை நகரத்தில் தான் திருமணத்திற்கு முன் பாலுறவு வைத்துக் கொள்ளும் பண்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக நிலவுகிறது” என்று வெளிவரும் அட்டைப்படக் கட்டுரைகள் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன; இளைஞர்களின் ஆவலைத் தூண்டுகின்றன. கடலை மிட்டாய் வாங்கி வரும் தந்தையை விட ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டை வாயில் திணிக்கும் தொலைக்காட்சி ‘விளம்பரத் தந்தை’ பாசமுள்ள தந்தையாக மகனுக்குத் தெரிகிறான்; மனைவியோ பட்டுப்புடவை வாங்கித் தந்து காதலை நிரூபக்கச் சொல்கிறாள்.

கேள்விக்குள்ளாக்க முடியாதவையென்றும் புனிதமானவை என்றும் கூறப்படுகின்ற காதல், பாசம், நட்பு போன்ற மென்மையான மனித உணர்வுகளையெல்லாம் உயிரற்ற ஜடப் பொருட்களின் மூலமாகத்தான் வெளியிட முடியும் என்பதே நிலைமை. நீங்கள் அதற்கும் தயார். ஆனால் பணம்? பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று அன்றே சொல்லி விட்டான் வள்ளுவன். எனவே எங்கே செல்வது? மதம் அல்லது சினிமா.

”வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” – என்று சினிமாக் கொட்டகை வாசலில் எழுதிப் போடப்படவில்லை என்றால் என்ன? இந்த நூற்றாண்டின் மதம் சினிமா; மகனுக்கு தொலைக்காட்சித் தந்தை; அப்பனுக்கு சினிமாக் காதலி.

மனிதனின் உணர்ச்சிகள் என்று சொல்லப்படுபவை அனைத்துமே அவன் உருவாக்கிக் கொண்ட பொருளாதார உறவுகளிலிருந்து பிறந்தவைதான் – காதல் எனும் மென்மையான உணர்ச்சி உட்பட.

பொருளாதார உறவுடன் காதல், குடும்பப் பாசம் ஆகியவற்றைப் பேசுவது நம்மில் சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். அதற்குக் காரணம் காதல் பற்றிய நமது புரிதல் அத்தனை ஆழமாக இருக்கிறது என்பதல்ல; பொருளாதார உறவுகள் குறித்த நமது புரிதல் அத்தனை ஆழமற்று இருக்கிறது என்பதுதான். இது காதலைக் கொச்சைப்படுத்தும் முயற்சி அல்ல; கொச்சைப்படுத்தப்பட்ட காதலைப் புரிந்து கொள்ளும் முயற்சி.

”முதலாளி வர்க்கம் குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிமய முகத்திரையைக் கிழித்தெறிந்து குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுறச் செய்து விட்டது” என்றார் மார்க்ஸ்.

காதல்-தேசம்

பணம் பணத்தால் வாங்கக்கூடிய பொருள், பொருளால் கிடைக்கக் கூடிய இன்பம் – இப்படி டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் மகிழ்ச்சியை, நுகர்பொருள் மோகத்தை, சரியாகச் சொன்னால் நுகர்பொருள்  வெறியை நமக்கு வழங்கியிருக்கிறது முதலாளித்துவ அமைப்பு. குடும்பத்தின் நுகர்தல் வேட்கையைத் தணிப்பதற்காக திருட்டு, லஞ்சம், மோசடி ஆகிய எந்த வழிமுறையைக் கணவன் பின்பற்றினாலும் மனைவிக்கு அவன் மீது உள்ள காதல் குறையாது. மகனுக்குப் பாசம் குறையாது. காதல் கணவன் கயவாளியாக இருக்கலாம்; சமூகத்தின் விரோதி – குடும்பத்தின் ஒளி விளக்கு! ஆனால் சமூகத்தின் சேவகன் பாசமிக்க தந்தையாகவோ, காதல் கணவனாகவோ இருக்க முடிந்து விட்டால் அது அதிசயம். இல்லாமல் போனால் அது இயற்கை. என்ன வேடிக்கை!

பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் நுகர்பொருளைப் போல மனிதர்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொள்ளும் இந்தச் சமுதாயத்தில் இந்தப் பயன்பாட்டு விதிக்குத் தப்பி, காதலும், பாசமும் மட்டும் புனிதம் கெடாமல் எப்படி அந்தரத்தில் தொங்க முடியும்?

இப்போது பூனை தன் குட்டியை விழுங்குகிறது. தம்மைத் தவிர மற்றவர்களைப் பண்டங்களாகக் கருதிப் பயன்படுத்தி வந்த தம்பதிகள் இப்போது ஒருவரையொருவர் பண்டங்களாகக் கருதத்துவங்கி விட்டார்கள். தன்னைத் தருவதன் மூலம் பெருமை பெற்ற காதல், இப்போது பெறுவதைத் தனக்கு உத்தரவாதம் செய்யச் சொல்கிறது – விளைவு பாலுறவுப் பரட்சி!

காட்சிக்கு இன்பம் தராத கறுப்பு வெள்ளை டி.வி.க்குப் பதில் கலர் டி.வி.வாங்கும்பொழுது பழைய தொலைக்காட்சியுடன் தாங்கள் கழித்த இரவுகளை எண்ணி யாரும் உணர்ச்சி வயப்படுவதில்லை. காதலோடு இருவர் கருத்தொருமித்து இருந்தாலும் உடலின் ரசனையில் மாற்றம் ஏற்படும்போது உள்ளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்கிறது மேற்படி புரட்சி.

டால்ஸ்டாயின் ‘நடனத்திற்குப் பிறகு’ என்ற சிறுகதையை இங்கே குறிப்பிடுவது பொருந்தும். நடன விருந்தொன்றில் ஒரு பெண்ணைப் பார்க்கின்ற இளைஞன் ஒருவன் அவளுடைய அழகால் பெரிதும் கவரப்படுகிறான். அவளையும் அவளது தந்தையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அன்றிரவு அவனுக்கு உறக்கம் வராத இரவாகக் கழிகிறது. மறுநாள் காலை அவளைப் பற்றிய நினைவுடனேயே கடைவீதியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு அப்பாவி இளைஞனை கதறக்கதற ரத்தம் சொட்டச் சொட்ட ராணுவ அதிகாரியொருவன் அடித்து இழுத்துச் செல்வதைக் காண்கிறான். நெருங்கிச் சென்று பார்த்தால், அது அவன் மனங்கவர்ந்த மங்கையின் தந்தை! ஏனோ தெரியவில்லை. அவள் மீது அவன் கொண்ட காதல் கலைந்தே விடுகிறது.

காதலில் உடலின் பங்கிற்கும் உள்ளத்தின் பங்கிற்கும் உள்ள உறவை விளக்கும் இக்கதைக்கு பொழிப்புரை தேவையில்லை; இவ்விசயத்தில் பாலுறவுப் புரட்சியின் அணுகுமுறை என்ன என்பதற்கும் விளக்கவுரை தேவையில்லை.

கணவனையும் மனைவியையும் ஒருவருக்கொருவர் நுகர்வதற்கான பண்டங்களாகக் கருதும் இந்த இன்பத்தாகம் இன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்குத்தான் எதிராக இருக்கும்.

இந்த வடிகட்டிய தனி நபர்வாதத்தை என்ன உறவென்று அழைப்பது? காதல் என்றா? உடலின்ப வேட்கை என்றா? மனிதன் விலங்கிலிருந்து வெகுதூரம் வந்து விட்டான். உண்மைதான். எனினும் முதலாளித்துவம் உற்பத்தியில் ஈடுபடும் ‘விலங்குகளை’த் தான் உருவாக்குகிறது. ”இவையெல்லாம் அமெரிக்காவின் பண்பாட்டுத் தோல்விகள். நமது பண்பாடு இவற்றை வெற்றி கொள்ளும்” என்று சிலர் தங்களைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் காதல் கோட்டையின் வெற்றி நமது பண்பாட்டின் தோல்வியைத்தான் நிரூபிக்கிறது.

காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகள் எந்த அளவிற்கு இதயமற்றுப் போகின்றனவோ அந்த அளவிற்கு முதலாளித்துவக் கலை இலக்கியங்களில் அற்ப உணர்ச்சிகளின் (சென்டிமென்ட்) ஆதிக்கம் கொடிக் கட்டிப் பறக்கிறது. பார்த்துப் பழகி வளர்ந்த காதல் தோற்றுப் போனதற்குரிய காரணங்களை ஆராயத் தொடங்கினால் அது காதலன் அல்லது காதலி பற்றிய ஆராய்ச்சியுடன் முடிவடையாமல் காதல் குறித்த ஆராய்ச்சியாக மாறி அச்சமூட்டுகிறது.

இதுவரை கொண்டிருந்த சமூகக் கண்ணோட்டங்களையே கேள்விக்குள்ளாக்கி நிலைகுலைய வைக்கும் ஆராய்ச்சியை விட, பார்க்காமலே தோன்றி வளர்ந்து வெற்றி பெறும் காதல் நிழற் கோட்டையில் இளைப்பாறுவதே ரசிகனுக்குச் சுகமாக இருக்கிறது. புதிய அர்த்தங்கள் கொண்ட உறவை முதலாளித்துவம் உருவாக்க முடியாது; பழைய உறவுகளுக்குப் புது அர்த்தம் கற்பிக்க, போதையூட்டத்தான் முடியும்.

இது கோப்பெருச்சோழன் – பிசிராந்தையார் கதை என்கிறார் இயக்குனர் அகத்தியன். அது மட்டுமா, கம்பராமாயணமும் கூடத்தான். தனது காதலன்தான் இவன் என்று தெரியாத போதும், கதாநாயகனைச் சந்திக்கும் போதெல்லாம் அவன்பால் நாயகியின் மனம் ஈர்க்கப்படுகிறது – கற்பின் மகிமை! இருந்தாலும் தன் காதலின் புனிதத்தைக் காக்கும் பொருட்டு அவனை வெறுப்பது போல நடிக்கிறாள் – கற்பின் உறுதி! கம்பனின் ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ சீன்தான்.

இந்தக் கற்புக்கனலின் சூடு தாங்காமல் ரசிகர்கள் ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையின் காரணமாகக் கதாநாயகனின் நண்பனையும் கொஞ்சம் பேச விடுகிறார் இயக்குனர்.

”என் மனைவி இழுத்துப் போர்த்திக்கிட்டு இருக்கணும்; அடுத்தவன் மனைவி அவுத்துப் போடணும்னு எல்லாரையும் போல நெனைக்கிறவன்தான் நான், ஏன்னா நான் ஒரு சராசரி இந்தியன்.”

“நானும் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனால் மாதுரி தீட்சித்தையும், ஸ்டெபி கிராப்பையும் காதலிப்பேன். ஏன்னா நான் சராசரி இந்தியன்.”

அரங்கத்தில் அமர்ந்திருக்கும் சராசரி இந்தியர்கள் யாரும் இந்த வசனத்தைக் கேட்டுத் துணுக்குறவில்லை; கை தட்டுகிறார்கள். சராசரி இந்தியனின் காதல் ஒழுக்கம் இதுதான் என்று தெளிவுபடுத்தப்பட்டு விட்டதால், ஏற்கெனவே இது விசயத்தில் குழப்பமடைந்திருந்தவர்கள் கூட மனத்தைரியம் பெற்று விட்டார்கள். அருகில் அமர்ந்திருக்கும் சராசரி இந்தியனின் சராசரி மனைவிமார்களின் காதல் ஒழுக்கம் என்ன? அவர்கள் கமல்ஹாசனை அல்லது டெண்டுல்கரைக் காதலிக்கலாம்.

”இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவது போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னெறி ஆகின்றன” என்று ஏங்கெல்ஸ் முதலாளித்துவச் சமூகத்தின் குடும்ப உறவுகளைக் கேலி செய்தது எவ்வளவு பொருத்தம்!

காதல் தேசத்தின் மாணவர்களோ காமவெறி கொண்ட பொறுக்கிகளாகவும், மாணவிகள் அந்தப் பொறுக்கித்தனத்தால் கிளர்ச்சியூட்டப்படும் சந்தோஷமான ரசிகைகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இதை இளமையின் கலகத்துக்குக் கிட்டிய அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறார்கள் மாணவ மாணவிகள்.

‘புனிதமற்ற’ முறையில் காதலித்து, அநாகரிகமான முறையில் அடித்துக் கொண்ட காதலர்கள், கடைசிக் காட்சியில் காதலைக் கைவிட்டு, முன்னாள் காதலியுடன், புனிதமான நட்பில் பிணைந்து திரையின் உள்ளே நடந்து சென்று புள்ளியாகக் கரையும்போது, அவர்களைப் பின்தொடர முடியாத மாணவர்கள், அரங்கவாயிலை நோக்கி, எதார்த்த வாழ்வை நோக்கி எதிர்த்திசையில் புறப்படுகிறார்கள்.

காதல் கோட்டை – அற்ப உணர்வின் இடையில் தூவப்பட்ட பொறுக்கித்தனம்; காதல் தேசம் – பொறுக்கித்தனத்தின் வாலில் கட்டப்பட்ட அற்ப உணர்வு.

”என் மனைவியும் மகளும் படத்தில் ஒன்றிப் போய் விட்டார்கள். எனக்கோ சகிக்க முடியவில்லை” என்று அரற்றினார் குடும்பத்துடன் காதல் தேசம் பார்க்கப் போன ஒரு நண்பர். தன்னுடைய மனக்குமுறலை தனது மனைவி மகளுடன் அவர் மனம் விட்டுப் பேசியிருக்கலாமே; பேச முடியாது. தந்தைக்கும் மகளுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நிலவும் ‘அநாகரிக இடைவெளி’யைக் கடக்க சராசரி இந்தியர்கள் முயற்சிப்பதில்லை.

அந்த இடைவெளியில்தான் பாரதப் பண்பாட்டின் ‘உன்னதமும்’ கோடம்பாக்கத்தின் பணப்பெட்டியும் உயிர்பிழைத்திருக்கின்றன.

_________________________________________

புதிய கலாச்சாரம், ஜனவரி 1997

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!

3

“தென்னக டெட்ராய்டில்” உரிமைகள் மீதான தடைக்கற்கள்!

உயரும்-லாபம்-சுருங்கும்-கூலி
உயரும் லாபம் சுருங்கும் கூலி – நன்றி www.thehindu.com

ஹரியானா, மானசரிலுள்ள மாருதி சுசுகி ஆலையில் தொடர்ந்த நிகழ்வுகளால் தொழிலாளர்களின் 13 நாட்கள் வேலை நிறுத்தத்தின் முடிவில் கடந்த ஆண்டு ஆலை மூடல் அறிவிக்கப்பட்டது.

ஒரு வருடம் கடந்து விட்டது என்றாலும் அந்த வேலை நிறுத்தத்தின் முடிவில் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் பெற்ற வாக்குறுதிகள், குறிப்பாக நிரந்தர தொழிலாளிக்கு ஈடான சம்பள விகிதங்கள் ஒப்பந்த தொழிலாளிக்கும் அமுல் படுத்துவது, தொழிலாளர்களுக்கான குறை தீர்ப்பதற்கான குழு ஒன்றை நிறுவுவது ஆகியவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இதே போன்ற ஒரு பாவப்பட்ட, கொந்தளிப்பான சூழ்நிலையில் மேற்பார்வையாளர் ஒருவர் தொழிலாளி ஒருவரை சாதிப்பெயர் சொல்லி திட்டியது, உடனடியாக தொழிலாளர்கள் ஒன்றுபடவும், அந்த மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தவும் வழிவகுத்தது. அதனால் ஏற்பட்ட வன்முறை மீது நடுநிலை பார்வையாளர்கள் மூலம் விசாரணை துவங்கியுள்ளது.

இந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஐந்து வெவ்வேறு தரப்பிலிருந்து அறிக்கைகள் பெற்றுள்ளோம்.

நிர்வாகத்தரப்பில் வன்முறை நடந்த சில மணித்துளிகளிலேயே தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்- அதன் காரணமாக ஒரு மேலாளர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இந்த கூற்றை மறுத்தனர். குறிப்பாக அவர்கள் தெரிவிப்பது யாதெனில், தொழிலாளர் தரப்பில் வன்முறையின்றி அமைதியாகத்தான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தரப்பில் ஆலைக்குள் ஏவிவிடப்பட்ட கூலிப்படையினர்தான் தொழிலாளர்களை தாக்கத் துவங்கினர் என்றனர்.  அதன் காரணமாக நேர்ந்த குழப்பத்தில் ஏற்பட்ட வன்முறை என்பது ஒருவர் மரணத்தில் சென்று முடிந்தது.

தொழிலாளியிடம் கேட்டறிந்ததும், சில ஊடகங்கள் வெளிச்சொன்னதும், தொழிற்சங்கத்தினர் சொல்வதிலிருந்தும், அதாவது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வன்முறை என்ற கருத்துடன் ஏறக்குறைய ஒத்துப் போகிறது.

மூன்றாவது பார்வையாக புலனாய்வு துறை வாயிலாக அரசிற்கு கிடைத்த தகவலின் பேரில் அரசு அதிகாரிகள் தரப்பு யாதெனில் மாவோயிஸ்டுகள் தொழிலாளர்களிடையே ஊடுறுவி தொழிற்சங்கங்களில் கலந்ததால் அமைதியின்மை என்பது உருவானது என்கின்றனர்.

நான்காவது கருத்தாக ‘நடுநிலை பார்வையாளர்கள்’ மாருதியோடு வணிக தொடர்புகள் வைத்திருக்காதவர்கள் தரப்பிலிருந்து இத்தகைய அமைதியின்மை என்பது உற்பத்தியை பாதிக்கும் என கவலை தெரிவிக்கப்பட்டது.  அது குறிப்பிட்டு சொன்னது போல அத்தகைய அமைதியின்மை சூழல் இரக்கமற்ற முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றது.

ஐந்தாவது கருத்து மானேசர் கிராமத்தில் மாருதி உற்பத்திக்கு ஆதரவாகவும், தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் செயல்பட்டுவந்த மகாபஞ்சாயத்து என்ற அமைப்பிலிருந்து வெளிப்பட்டது.அந்த மகா பஞ்சாயத்து என்ற அமைப்பில் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும், அந்த ஆலை அமைவதற்கு நிலங்கள் கொடுத்து அதனால் பயன் பெற்றவர்கள் மற்றும் அந்த தொழிலாளர் களுக்கு தொடர்புடைய விதத்தில் தொழில்கள் செய்து லாபம் பார்ப்பவர்களாக இருந்தனர்.

இந்த வகையான பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருந்த நிலையிலும், பெரும்பான்மை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் தொழிற்சங்கங்கள் மீது சினத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த செய்தியை சொல்லின.  ஒரு பிரபல தமிழ் செய்தித்தாள் கூட “மத்தியஸ்தர்கள்” (அரசியல் படுத்தப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள்) என்ற தலைப்பிலான தனது தலையங்கத்தில் அத்தகைய தொழிற்சங்க தலைவர்கள்தான் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை, கள யதார்த்தத்தை திசை திருப்பும் வண்ணம் செயல்பட்டனர் என விவரித்திருந்தது.  நிர்வாகத் தரப்பு கூற்றை மட்டும் வைத்து வெளியிடப்பட்ட இத்தகைய செய்திகள் தொழிலாளர்கள் கோபத்தை தூண்டவும், வன்முறை ஏற்படவும் காரணமானது.

ஆனால் விஷ‌யங்கள் அவ்வாறாக இல்லை.  தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதாவது அவர்களை தாக்க கூலிக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டனர் என்பது ஊடகங்களால் கண்டு கொள்ளப்படவில்லை என்பதுடன், அதன் மீது ஆய்வும் மேற்கொள்ளப்படவுமில்லை. இல்லையென்றாலும், பல அறிக்கைகள் ஆலையில் தொழிலாளர்களின் நிலைகளை படம் பிடித்து காட்டுவதாக அமைந்தது.  கடந்த வருடம் தி இந்து நாளிதழில் வெளிவந்த (மாருதி சுசுகியில் தொழிலாளர்கள் போராட்டம் – 28 செப் 2011) செய்தி தொகுப்பில், எவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உண்மையான ஊதியம் அவர்கள் பணி புரியும் நேரம் மற்றும் வாழ்நிலைக்கு போதுமானதாக உயர்த்தப்படவில்லை என்பதையும் நிர்வாகத்தின் வருவாய் உயர்விற்கேற்ப தொழிலாளர்கள் ஊதிய நிலை மாற்றியமைக்கப்படவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தது.  எனவேதான் நிர்வாகத்தரப்பில் தொழிலாளர்களையே ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது என்ற நிலை நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது.

மிக சாதாரணமாக தொழிற்சங்க தலைவர்களை ‘வில்லன்களாக’ சித்தரித்து அதன் மூலம் அவர்கள் ஆலையின் தளத்தில் தொழிலாளர்களிடையே தோன்றும் பிரச்சனைகளின் மீது தலையிடவிடாமல் பிரித்து வைக்கப்பட்டனர்.  இது மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.  தொழிலாளர்கள் ஒரு பிரச்சனையின் மீது ஒன்றுபட்டு கருத்து செலுத்தாமலிருக்க தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தினரையும் பிரித்தாளும் நடைமுறை கையாளப்பட்டது.  தொழிற்சங்கங்களின் விஷ‌யங்களை மேலும் நலிவடையச் செய்யும் வண்ணம் அவர்கள் “சுயநலவாதிகள்” மற்றும் “கள்ளத்தனமானவர்கள்” என முத்திரை குத்தப்பட்டனர் (இவற்றை கையாள எளிதாக மாவோயிஸ்ட் என்ற அடையாளமும் குத்தப்பட்டது). பிரபலமான தமிழ் தினசரி ஒன்று இந்த விஷ‌யத்தில் நீண்ட தலையங்கம் ஒன்றை எழுதியது – அதில் போருக்கு தயார் நிலையில் இருப்பதான தொழிலாளி பக்கத்தை எடுத்துக் கொண்டு அவன் தொல்லையளிக்கும் தொழிற்சங்க தரப்பிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியது.

ஹரியானாவோ, தமிழ்நாடோ எதுவாக இருப்பினும் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது ஆதரவாளர்களுக்கு, குறிப்பாக தொழிற்சங்கங்களை பூதாகரமாக காட்டுவதற்கு மிகவும் சிரமப்பட தேவையில்லை.  ஊடகங்களே அந்த பணியை செய்கின்றன.  வடக்கே விந்திய சாரத்தில் மானேசரில் நடந்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் தொழிலில் கோலோச்சிவரும் முதலாளிகள் கவனத்தை ஈர்த்ததுடன், கவலையுறச் செய்துள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போர்க்குணம் தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு அனுபவம் உண்டு.  தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மேற்பார்வையாளர் உயிரிழப்பில் முடிந்த கோவை பிரிகால் ஆலையின் நிகழ்வுகள் 2009-ல் பெரிய அளவில் செய்தியானது.  சென்னையில் ஹூண்டாய் தொழிலாளர்கள் ஒன்றிணைந்ததற்காகவும், மே தினம் கொண்டாடியதற்காகவும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.  தொழிற்சங்கம் துவங்கி இணையவேண்டும் என்கிற அவர்களின் ஆசை கொடுஞ்செயாக பார்க்கப்படுகிறது.  அதை முறியடித்ததற்கு நன்றி கடனாக மாணவர்களை ஈடுபடுத்தி போக்குவரத்து சரிசெய்ய என்ற பெயரில் தமிழக அரசின் காவல்துறைக்கு 100 கார்கள் ஹூண்டாய் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

இதன் நடுவில் உற்பத்தி நிபந்தனைகள் என்பது தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்தது.  ஒவ்வொரு 48 வினாடிக்கும் ஒரு கார் வெளியேற்றப்பட வேண்டும்.  அதாவது தொழிலாளர்கள் கழிவறைக்குச் செல்ல, ஒரு கப் தேநீர் அருந்த சில நிமிடங்கள் செலவழிப்பது கூட அரிதாக இருந்தது.  பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்த பின்னர்தான் ஆலையை அடைய முடிவதுடன், அதற்கு பின்னர் 8 மணி நேரம் பணிபுரிய வேண்டியிருந்தது.  சென்னையில் வட-மேற்கில் தொழிற்சாலை பகுதியில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் பணி நிலை என்பது இவ்வாறாகத்தான் இருக்கிறது.  பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளில் பெரும்பாலும் இளைஞர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக ரூ 3500 முதல் 4000 வரையில் ஒரு மாதத்திற்கு என்ற குறைந்த சம்பள விகிதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  இங்கே நாம் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து வந்து இதைவிட மோசமான பணிநிலைகளில் ஒரு நாளைக்கு ரூ 140 என்பதை விட குறைவான கூலியில் பணிபுரிவதைப்பற்றி குறிப்பிடவில்லை.  அதுவும் மிகத் திறமையாக லாபம் கொழிக்கும் ஆட்டோமொபைல் தொழிலில் இவை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நாம் பல வருடங்களுக்கு முன்பாக மாநிலத்தில் தொழில் வளர்ச்சி என்று பேசப்பட்ட 1970களை திருப்பிப்பார்த்தால், அன்றும் இதே போல் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டிவிஎஸ், எம்ஆா்எப் போன்றவர்கள் செயல்பட்டு வந்ததும், தொழிற்சங்கங்களை பிரித்தாள்வதில் சாதனைகள் புரிந்தனர் என்பதும் அதற்கு அவர்களுக்கு முனைப்பாக திமுக மற்றும் அதிமுக தலைமையிலான அரசாங்கங்கள் உதவிகள் புரிந்துள்ளனர் என்பதும் தெரியவரும். தொழிலாளர்கள் மீது தடியடி தாக்குதல்கள் மேற்கொள்வதற்கும், தொழிற்சங்க தலைவர்கைள தங்கள் விருப்பத்திற்கேற்ப பிடித்து கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கங்கள் சிறிதும் யோசிக்காமல் செயல்பட்டு வந்துள்ளன.  இன்று ஹூண்டாய் மற்றும் கொரியன் நிறுவனங்களின் சங்கிலிதொடரில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பல சிறிய நிறுவனங்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆளும் கட்சி அரசியல் வாதிகளை கைக்குள் வைத்திருப்பதோடு, பல தாராள செய்தி ஊடகங்களையும் தமிழர்களில் பல நடுத்தர வர்க்கத்தினரையும் கையில் வைத்துள்ளன.

இந்த வகையில் பார்க்கப்போனால் மானேசர் நிகழ்வு என்பது விதிவிலக்கான ஒன்றல்ல.  ஆனால் இந்த சூழலில் மூலதனம் இட்டு குறுகிய அளவிலான தளம் கொண்ட அமைப்புசார் பகுதிகளில் கூட வெற்றிக்கான வாய்ப்பிருந்தும், ஆளுமையை நிறுவ முற்படுதலில் தொடர்ந்து முதலாளித்துவம் ஏன் தோல்வியை தழுவுகிறது என்பது வித்தியாசமாய் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. “சிவப்பி”ற்கெதிராக அமைக்கப்பட்ட மகாபஞ்சாயத்து என்ற அமைப்பினரோ, இதற்கெல்லாம் காரணம் “மாவோயிஸ்ட்கள்” என கூறும் அரசாங்கமோ உற்பத்திக்கான நிபந்தனை கடுமைகளும், அது சார்ந்த தொழிலாளர்களின் பணி நிலையும்தான் இத்தகைய வர்க்க மோதலுக்கு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றன
_________________________________________________________
.கீதா, மற்றும் மதுமிதா தத்தாநன்றிதி இந்து
தமிழில்சித்ரகுப்தன்
______________________________________________
____________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!

160

மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு!

மோடி

குஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த மதவெறிப் படுகொலை வழக்கில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பு அகமதாபாத் விசாரணை நீதிமன்றத்திடம் அளித்தது.  அந்நீதிமன்றம் இவ்வறிக்கையை உடனடியாக வெளியிடாமல் தன்வசமே வைத்திருந்தபோதும், “இப்படுகொலை தொடர்பாக மோடி மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுக்களுக்கும் போதிய ஆதாரமில்லாததால், அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது” எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு எடுத்த முடிவு, மோடி ஆதரவு கும்பலால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மறைமுகமான ஒத்துழைப்போடு வெளியே கசியவிடப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மோடிக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஜாகியா ஜாஃப்ரியிடமும், அமைதி மற்றும் நீதிக்கான குடிமக்கள் குழுவிடமும் நீதிமன்றம் தற்பொழுது அளித்துவிட்டது.  இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய விதம், அதனின் முதல் மற்றும் இறுதி அறிக்கைகள்; உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன் ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கை, அதனைச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்றுக் கொள்ள மறுத்திருப்பது ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிட்டன.

குஜராத்தில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய மதவெறிப் படுகொலையை கோத்ரா சம்பவத்தின் எதிர்வினை என்றும், ஜாகியா ஜாஃப்ரியின் கணவர் இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதையடுத்துதான் கொல்லப்பட்டார் என்றும் கூறி நியாயப்படுத்தினார், மோடி. அவரது கூற்றை அப்படியே தனது அறிக்கையில் வழிமொழிந்துள்ளது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மோடிக்கு எதிரான சாட்சியங்களை நடுநிலையாக நின்று ஆராயாமல், ஏதாவதொரு நொண்டிச்சாக்கைச் சொல்லித் தட்டிக் கழித்து மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.  “இப்படுகொலைக்கும் மோடி அரசிற்கும் இடையே எவ்விதத்திலும் தொடர்பில்லை; கலவரத்தின்பொழுது மோடியின் அரசும் போலீசும் கடமை தவறாது நடந்துகொண்டனர்” என்று புளுகியிருக்கிறது.  சுருக்கமாகச் சொன்னால், போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க ஆளும் கும்பலால் அமைக்கப்படும் தலையாட்டி விசாரணை கமிசன்களைவிட மிகக் கேவலமான முறையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

‘‘இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி காலனியில் வசித்து வந்த முசுலீம் குடும்பங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் துணிந்த சமயத்தில், எனது கணவர் இஷான் ஜாஃப்ரி நரேந்திர மோடியைப் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கோரினார்.  ஆனால், போலீசு துறையைத் தன்னிடம் வைத்துள்ள மோடியோ இத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த எவ்வித முயற்சியும் செய்யவில்லை.  எனவே, இத்தாக்குதல் மோடிக்குத் தெரிந்து, அவரது மறைமுகமான ஒப்புதலோடுதான் நடந்தது” என மோடி மீது  ஜாகியா ஜாஃப்ரி  குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இக்குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, “மோடிக்கு இஷான் ஜாப்ரியிடமிருந்து எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; அவரிடமிருந்து மட்டுமல்ல, குல்பர்க் சொசைட்டியில் வசிக்கும் யாரிடமிருந்தும் தாக்குதல் நடந்த சமயத்தில் மோடிக்கோ, மற்ற உயர் அதிகாரிகளுக்கோ எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; குல்பர்க் சொசைட்டி மீது இந்து மதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்த முயலுவது பற்றி அகமதாபாத் போலீசு ஆணையருக்குத் தொலைவரிச் செய்தி அனுப்பியதாக, அப்பொழுது உளவுத்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் அளித்திருக்கும் சாட்சியமும் இட்டுக்கட்டிய பொய்; அத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த அகமதாபாத் போலீசு ஆணையர் தன்னால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளது தூரம் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டு மோடியையும் போலீசு அதிகாரிகளையும் விடுவித்துவிட்டது.

மோடி

இதுவொருபுறமிருக்க, “ஒரு பெரும் கூட்டம் குல்பர்க் சொசைட்டியைச் சுற்றிவளைத்திருந்த சமயத்தில்,  இஷான் ஜாஃப்ரி தனது துப்பாக்கியால் அக்கூட்டத்தை நோக்கிப் பலமுறை சுட்டார்.  இத்தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.  இஷான் ஜாப்ரியின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைதான் குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடத்தக் காரணமாகிவிட்டது” எனக் குறிப்பிட்டு, இஷான் ஜாஃப்ரி நடத்திய துப்பாக்கிச் சூடுக்கு எதிர்வினையாகத்தான் இப்படுகொலை நடந்ததாகக் காரணத்தைக் கற்பித்திருக்கிறது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  கடந்த பத்தாண்டுகளில் இப்படிபட்ட கற்பிதத்தை மோடியையும், சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் தவிர வேறுயாரும் முன்வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மார்ச் 1, 2002 அன்று ஜீ  டி.வி. என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மோடி, “இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதை வினை என்றும், அவர் கொல்லப்பட்டதை எதிர்வினை என்றும் கூறியதோடு, கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து போன சம்பவத்தை, அங்கு வாழும் முசுலீம்களின் கிரிமினல்தனத்தின் வெளிப்பாடு;  (இப்பொழுது) அவர்கள் புரிந்துள்ள கொடூரமான குற்றத்திற்கு எதிர்வினை நடந்து கொண்டிருக்கிறது” என்று வருணித்தார்.  மோடியின் இந்த இந்து மதவெறி பிடித்த பேச்சுகள் அனைத்தும் இந்து மதவெறிக் கும்பலின் கொலைவெறியைத் தூண்டிவிட்டன எனக் குற்றஞ்சுமத்தியிருந்தார், ஜாகியா ஜாஃப்ரி.

‘‘நரேந்திர மோடி ஜீடி.வி.க்கு அளித்த பேட்டியின் மூல சி.டி.யைக் கேட்டிருந்தோம்.  ஆனால், அதனை அந்நிறுவனம் எங்களுக்கு அளிக்கவில்லை” என்ற அற்பத்தனமான நொண்டிச்சாக்கைக் கூறி, மோடி மீது வழக்குத் தொடர முடியாது எனக் கூறிவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மேலும், இச்சம்பவங்களை வினையாகவும் எதிர்வினையாகவும் குறிப்பிட்டு மோடி கூறியதை, அதன் பின்னணியோடு வைத்துப் பார்க்கும்பொழுது அவர் மீது வழக்குத் தொடருவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டு, மோடியை மட்டுமல்ல, இஷான் ஜாஃப்ரி கொலையை எதிர்வினையாகச் சித்தரித்த தன்னையும் நியாயப்படுத்திக் கொண்டுவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.

‘‘கோத்ரா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு, எதிர்காலத்தில் இப்படியொரு குற்றச்செயல் எந்தவொரு இடத்திலும் நடக்காதிருக்கும்படி, கடுமையான தண்டனை அளிப்போம்” என மோடி பிப்.27 மற்றும் பிப்.28, 2002 ஆகிய இரு தினங்களிலும் திரும்ப திரும்பக் கூறினார்.  பத்திரிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும், பொதுமக்களைச் சந்தித்த இடங்களிலும் மோடி இதனைத் திரும்பதிரும்பக் கூறினார்.  இது, சட்டம்  ஒழுங்கை காக்க வேண்டும்; குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை தர வேண்டும் என்ற அவரது உறுதியைக் காட்டுகிறது.  இப்படிபட்ட எண்ணங்கொண்ட மோடி மீது இரு மதத்தினர் இடையே பகைமையைத் தூண்டிவிட்டார் எனக் குற்றஞ்சுமத்துவதற்கு அடிப்படை இருக்க முடியாது.  அது மட்டுமல்ல, அவரது இந்த உரை, “இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக்கூடாதென மோடி அதிகாரிகளிடம் கூறினார்” என அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் மறுதலிக்கிறது.  அப்படியே மோடி கூறியிருந்தாலும்கூட, அது நான்கு சுவருக்குள் கூறிய தனிப்பட்ட கருத்தாகும்.  அதற்காக மோடி மீது வழக்குப் பதிய முடியாது” என மோடிக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வக்காலத்து வாங்கியிருக்கிறது.

எல்லாச் சதிச் செயல்களுமே நான்கு சுவருக்குள்தான் பேசித் தீர்மானிக்கப்படுகின்றன.  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வாதப்படி பார்த்தால், கலவரத்தில் நேரடியாக இறங்காமல் சதிச் செயலைத் தீட்டும் முக்கியப் புள்ளிகள் யாரையும் தண்டிக்கவே முடியாது.  மேலும், கோத்ரா சம்பவத்துக்குக் காரணமெனக் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களைத் தண்டிப்பது பற்றித்தான் மோடி நீட்டி முழங்கி வந்தாரே தவிர, அவர் மதவெறிப் படுகொலைகளை நடத்திய இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.  மாறாக, அக்கொலைவெறி பிடித்த கும்பலைக் காப்பாற்ற அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார், மோடி.

“முசுலீம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது” என்றவாறெல்லாம் மேடைதோறும் பேசி, முசுலீம்களை அவமானப்படுத்தி வந்தார்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, “மோடி அமைதியை விரும்பினார்; குற்றவாளிகளைத் தண்டிக்க முயன்றார்; அகமதாபாத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்; கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்” என இட்டுக்கட்டிய பொய்களை எடுத்துவைத்து, இந்து மதவெறி கொலைகாரன் மோடியை மத நல்லிணக்கவாதி போலத் தனது இறுதி அறிக்கையில் சித்தரித்துள்ளது.

கோத்ரா சம்பவம் நடந்த நாளன்று (பிப்.27, 2002) இரவில், மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்ததைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மறுக்கவில்லை.  ஆனால், அக்கூட்டத்தில் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் கலந்து கொண்டதற்கோ, அக்கூட்டத்தில், “இந்துக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது” என மோடி பேசியதாகக் குற்றஞ்சுமத்தப்படுவதை நிரூபிப்பதற்கோ போதிய ஆதாரமில்லை என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவு.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அதிகாரிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் இம்முடிவுக்கு வந்ததாகத் தனது இறுதி அறிக்கையில் கூறும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது முதல் அறிக்கையில் அந்த அதிகாரிகளின் சாட்சியங்களை நம்பமுடியாது என முரணாகக் குறிப்பிட்டுள்ளது.  அவர்களின் சாட்சியங்களை நம்ப முடியாது எனும்பொழுது, அக்கூட்டம் தொடர்பான கூட்டக் குறிப்புகளை வாங்கிப் பெற்று, அதன் அடிப்படையில் மோடி மீதான குற்றச்சாட்டு பற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், விசாரணைக் குழுவோ அக்கூட்டக் குறிப்புகளைக் கேட்டுப் பெற்று விசாரணை நடத்தாமல், நம்பத்தகாத சாட்சியங்களின் வாக்குமூலங்களை ஏற்று மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.

மோடி

பிப்.27, 2002 கூட்டம் மோடியும் அதில் கலந்துகொண்ட அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொள்ளுவதற்காக நடத்தப்பட்டிருக்க முடியாது.  குஜராத் மாநிலமெங்கும் முசுலீம்களுக்கு எதிரான கலவரம் எந்நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் நடந்துள்ள அந்த முக்கியமான கூட்டம் எந்தவிதமான எழுத்துபூர்வமான பதிவின்றி நடந்திருக்க முடியுமென்றால், அல்லது அந்தப் பதிவுகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றால், சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியின் கிரிமினல் உள்நோக்கத்தைச் சந்தேகித்திருக்க வேண்டும்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, அக்கூட்டம் நடந்தது தொடர்பாக அரசிடம் ஆவணங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி ஒரு கேள்வியைக்கூட எழுப்பவில்லை.  அதே சமயம், அச்சதிக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்துள்ள சஞ்சீவ் பட்டை, மோடி அரசு பல முக்கியமான தடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவருவதை அம்பலப்படுத்தி வரும் சஞ்சீவ் பட்டை, கறைபடிந்தவராகக் குற்றம் சாட்டுகிறது.  அவரது கடந்தகால அதிகாரமுறைகேடுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தி, அவரை நேர்மையற்ற சாட்சியம் என முத்திரை குத்துகிறது.  மதவெறிப் படுகொலைக்கு ஆதரவாக எவ்வித எழுத்துபூர்வமான சாட்சியமின்றிப் பல வாய்மொழி உத்தரவுகளைப் போட்ட மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் போலீசு அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தையும் உள்நோக்கம் கொண்டதென ஒதுக்கித் தள்ளுகிறது.

‘‘சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநருமான ராகவன் சட்டப்படி நடக்கக்கூடிய நேர்மையான அதிகாரி, எவ்விதமான அரசியல் சார்பும் இல்லாதவர், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடியவர்.  எனவே, அப்படிப்பட்டவரின் தலைமையில் நடக்கும் விசாரணையில் நீதி நிலைநாட்டப்படும்” என ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்டது.  ஆனால், ராகவன் இந்த ஒளிவட்டத்தை மோடியைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.  தனது கீழ் அதிகாரியான ஏ.கே.மல்ஹோத்ரா நடத்திய விசாரணை அறிக்கைகளில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததற்கு மேல், அவர் இந்த விசாரணையில் பாரதூரமான அக்கறை எதுவும் செலுத்தவில்லை.  சோ,  இந்து என்.ராம் ஆகியோரின் ஆலோசனையைப் பெற்றுத்தான் ராகவன் இறுதி அறிக்கையைத் தயாரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டையும் நிரூபிப்பதாகவே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகள் அமைந்துள்ளன.

இம்முடிவுகள் மோடியை பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து மட்டும் விடுவித்துவிடவில்லை; அவரின் பிரதமர் கனவுகளுக்கு உந்து பலகையாகவும் பயன்பட்டு வருகிறது.  மேலும், அரசு இயந்திரம் எந்தளவிற்கு இந்துமயமாகியிருக்கிறது என்பதையும்; இந்த அரசு இயந்திரத்தையும் இன்றுள்ள சட்டங்களையும் கொண்டு மோடி, அத்வானி, பால் தாக்கரே உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தளகர்த்தர்களைத் தண்டித்துவிட முடியாது என்பதையும் மீண்டும் எடுத்துக்காட்டுவதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

வறுமைக் கோட்டை அழிக்க, கார்ப்பரேட் கொள்ளையை ஒழி! பி.சாய்நாத்

2

கார்பரேட்-கொள்ளை

பி.பி.எல்.ஐ சரி செய்ய சி.பி.எல்.ஐ ஒழித்துக் கட்டுங்கள் – பி சாய்நாத்

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை புரிந்து கொள்ள நாம் பெருநிறுவன கொள்ளைக் கோட்டை செலுத்தும் புள்ளி விபரங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்

ஒரு டெண்டூல்கர் பெரிய ஸ்கோர்களை எடுக்கிறார். இன்னொருவர் சராசரிகளை அடித்து துவைக்கிறார். திட்டக் குழுவிற்கு சச்சினை விட சுரேஷ் மீதுதான் அபிமானம் என்பது தெளிவு. பேராசிரியர் சுரேஷ் டெண்டூல்கரின் வழிமுறையை பயன்படுத்தி, வறுமையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அது அறிவித்துள்ளது. ஆமாம், இன்னும் ஒரு முறை, ஊரக பகுதிகளில் வறுமை வியத்தகு அளவுகளில் வீழ்ச்சி.

“வறுமையில் வரலாறு காணாத வீழ்ச்சி” என்று அலறுகிறது ஒரு தலைப்புச் செய்தி. இதே தலைப்புச் செய்தியை கடந்த பல ஆண்டுகளில் எத்தனை முறை பார்த்து விட்டோம் என்பதுதான் வரலாறு காணாத சாதனை. எத்தனை தடவை வறுமை வெகுவாக குறைந்து, கணக்கை மாற்றி போட்டதும் திரும்பவும் உயர்ந்து விடுவது நடந்திருக்கிறது!

அதாவது, இந்திய மக்கள் தொகையில் இப்போது அதிகாரபூர்வமாக வறுமைக் கோட்டுக்கு (பி.பி.எல்- BPL) கீழ் இருப்பவர்கள் 29.9 சதவீதம் மட்டும்தான்.   2004-2005-ல் இந்த எண்ணிக்கை 37.2 சதவீதம் ஆக இருந்தது. அந்தக் “கோடு” பற்றிய கதை பேசப்பட வேண்டிய ஒன்று. மேலோட்டமாக பார்க்கும் போது ஊரக வறுமை வீதம் 2004-05-ல் இருந்த 41.8 சதவீதத்திலிருந்து எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து 33.8 சதவீதத்தில் நிலை கொண்டுள்ளது. நகர்ப்புற வறுமை அதே காலத்தில் 4.8 சதவீத புள்ளிகள் குறைந்து,  25.7 சதவீதத்திலிருந்து 20.9 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. தங்களை அறியாமலேயே கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

போலியான வழிமுறையை மாற்றி அமைத்தல் ஊடகங்கள் மறதி நோயின் காரணமாக புள்ளிவிபரங்களை “எப்போதும் இல்லாத அளவு குறைவான” என்று குழப்புகின்றன. இப்போதைய புள்ளிவிபரங்கள் ‘முன் எப்போதையும் விட குறைந்த’வை இல்லை. இதற்கு முன்பு இதை விட குறைந்த வறுமை வீதத்தை நாம் பார்த்திருக்கிறோம்.

1996-ல் பேராசிரியர் மது தண்டவதே ‘நான் உங்கள் நாட்டின் வறுமையை இன்றைக்கு இரண்டு மடங்காக்கி விட்டேன், அதற்காக என்னைக் கொல்ல வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று கிண்டலாக கூறினார். அப்போதைய திட்டக் குழுவின் துணைத் தலைவராக அந்த நியாய உணர்வுள்ள முதியவர் செய்தது என்னவென்றால் போலியான ஒரு வழிமுறையை தூக்கி எறிந்ததுதான். இந்த வழிமுறை அவர் பொறுப்பேற்பதற்கு முன்பு அதே ஆண்டு திட்டக் குழுவால் தூக்கிப் பிடிக்கப்பட்டது. வழிமுறையிலோ அல்லது வறுமைக் கோட்டிலோ செய்யப்படும் சிறு சிறு மாற்றங்கள் கூட பெருமளவு வேறுபடும் மதிப்பீடுகளை உருவாக்க முடியும்.

1993-94-ம் ஆண்டில் வறுமையை 19 சதவீதமாக குறைக்க மேற்கொள்ளப்பட்ட “முயற்சி” என்ற மோசடியைத்தான் மது தண்டவதே இல்லாமல் ஆக்கினார். அதாவது அந்த முயற்சியின் படி 1987-88-ம் ஆண்டில் 25.5 சதவீதமாக இருந்த வறுமை வீதம் 1993-94-ல் 19 சதவீதமாக குறைக்கப்பட்டது. “தேசிய மாதிரி ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் திட்டக் குழு நடத்திய ஆய்வின் பூர்வாங்க முடிவுகள்” இவை (எகனாமிக் & பொலிடிக்கல் வீக்லி, ஜனவரி 27, 1996). அந்த புள்ளிவிபரங்கள் உண்மையானவை என்று எடுத்துக் கொண்டால் அதற்குப் பிறகு வறுமை உயர்ந்து கொண்டேதான் இருந்திருக்கிறது என்று பொருள்.

அந்த வரலாறு காணாத வீழ்ச்சியை தூக்கிப் பிடித்தவர் ஒரு நேர்மையான நிதி அமைச்சர், ஒரு போதும் பொய்யே சொல்லாத டாக்டர் மன்மோகன் சிங். ஒரு வணிக தினசரி அந்த நேரத்தில் பெரும் தமாசான ஒரு “எக்ஸ்க்ளூசிவ்” வெளியிட்டது. ‘வறுமை வரலாறு காணாத அளவில் 19 சதவீதமாக குறைந்திருக்கிறது என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.’  சுதந்திரத்திற்குப் பிறகு வெளியான செய்திகளிலேயே தலை சிறந்த செய்தி அது. ஆனால், அதை வெளியிட்ட அந்த அடக்கமான அதிகாரிகள் முகத்தை வெளியில் காட்டவில்லை, தாங்கள் எவ்வளவு முட்டாள்களாக பார்க்கப்படுவோம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இப்போதெல்லாம் தமது மோசடியை விளம்பரம் செய்ய பத்திரிகையாளர் கூட்டங்கள் நடத்துகிறார்கள் அத்தகைய அதிகாரிகள்.

ஏப்ரல் 1996 தேர்தல்களின் அழிவுகளில் “இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான 19 சதவீதம் வறுமை” என்ற மோசடி புதைக்கப்பட்டது. அன்றைய அரசாங்கமும் அதனுடன் சேர்ந்து புதைந்து போனது. அதற்கு பிறகு அந்த “மதிப்பீடு” யாராலும் பேசப்படவில்லை. இப்போது நமக்கு கிடைத்திருப்பது அதே போன்ற ஒரு மதிப்பீட்டின் 29.9 சதவீத அவதாரம். இந்த இரண்டு மதிப்பீடுகளையும் ஏற்றுக் கொண்டால் வறுமை 16 ஆண்டுகளில் 10.9 சதவிகித புள்ளி உயர்ந்துள்ளதாகத்தானே கருத வேண்டும்? அல்லது இதுவும் ஒரு வழிமுறை மோசடிதானா!

இதற்கிடையில், திட்டக் குழுவின் புதிய புள்ளிவிபரங்கள் சாதித்து விட்ட ஒன்றை பாராட்ட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் பகுதியினரை அது ஒருங்கிணைத்திருக்கிறது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த “மதிப்பீடுகளை” பலமாக தாக்கியதோடு விளக்கமும் கேட்டிருக்கிறார்கள்.

டெண்டூல்கர் அறிக்கை தயாரிப்பில் பெரிய கோல்மால்கள் செய்யப்பட்டிருக்கின்றன. டாக்டர் மதுரா சுவாமிநாதன் சுட்டிக் காட்டுவது போல “நகர்ப்புறங்களுக்கு 2,100 கிலோ கலோரி, ஊரக பகுதிகளுக்கு 2,400 கிலோ கலோரி என்ற” என்ற கலோரி வரையறைகளை அந்தக் குழு தூக்கி எறிந்தது. “ஒரு நாளைக்கு 1,800 கிலோ கலோரி என்ற ஒரே வரையறையை பிடித்துக் கொண்டது அது. “உணவு, விவசாய நிறுவனத்தின் ஒரு வரையறை” யின் அடிப்படையில் அப்படி செய்ததாக குறிப்பிடுகிறது.

“உணவு,விவசாய நிறுவனம் நிர்ணயித்த ஆற்றல் தேவைகள் குறைந்த பட்ச ஆற்றல் தேவைகள். அதாவது எளிதான அல்லது ஓய்வான வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றல்” என்பதை சுட்டிக் காட்டுகிறார் டாக்டர் சுவாமிநாதன். அத்தகைய வாழ்க்கைக்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ள எடுத்துக் காட்டையும் அவர் குறிப்பிடுகிறார் “… வேலை நேரத்திலோ வேலை நேரத்துக்குப் பிறகோ எப்போதாவது மட்டும் உடல் உழைப்பில் ஈடுபடும் நகர்ப்புற ஆண் அலுவலக ஊழியர்”

டாக்டர் சுவாமிநாதன் கேட்பது போல: ” நாள் முழுவதும் மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் தலைச் சுமை தொழிலாளியை எளிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா?” – தி இந்து பிப்ரவரி 5, 2010.

வறுமையை அளவிடுதல்

கார்பரேட்-கொள்ளை-2
படம் நன்றி – www.thehindu.com

வறுமையை அளவிடுவதற்கு இன்னும் பிற வழிமுறைகள் இருக்கின்றன என்பதை ஊடகங்கள் குறிப்பிடுவது இல்லை. அவையும் இதே அரசாங்கம் ஆரம்பித்து வைத்த வழிமுறைகள்தான். முறை சாரா துறை நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பதாக கருதுகிறது. என் சி சக்ஸேனா தலைமையிலான வறுமைக் கோட்டிற்கான (பிபிஎல்) வல்லுநர் குழு அதை சுமார் 50 சதவீதம் என்று தீர்மானித்தது. டெண்டுல்கர் குழுவைப் போலவே, இந்த இரண்டும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவைதான். ஒன்றுக்கொன்று தாறுமாறாக வேறுபட்டாலும், மூன்றுமே ஊரக வறுமையை அரசாங்கத்தை விட அதிகமாகவே மதிப்பிடுகின்றன. அரசாங்கம் விரும்பும் அறிக்கை கிடைக்கும் வரையில் இதே பிரச்சனை மீது இன்னும் பல குழுக்கள் அமைக்கப்படும். அரசாங்கம் தப்பித்துக் கொள்ள உதவும் அறிக்கை கிடைப்பது வரை. (விவசாய தற்கொலைகள் மீதான பல விசாரணைகள் இதை எடுத்துக் காட்டுகின்றன.)

தற்போதைய மோசடியை யாரும் கவனிக்காமல் புகுத்தி விடலாம் என்று திட்டக் குழு நினைத்தது, அதிகார வர்க்கத்தின் ஆணவத்திலும் திறமையின்மையிலும் வரலாறு காணாத சாதனைதான். முதலில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த ஆவணத்தின் மூலம் மக்களின் கோபத்தை தூண்டினார்கள். அங்கு அவர்கள் ஊரக வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளைக்கு ரூ 26 என்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளுக்கு ரூ 32 என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை நியாயப்படுத்தினார்கள். இப்போது ஊரகப் பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ 22.42 நகர்ப் புறத்திற்கு ஒரு நாளைக்கு ரூ 28.35 என்ற அளவீட்டை புகுத்தி விட நினைக்கிறார்கள்.

1996-ம் ஆண்டில், அரசாங்கமும் திட்டக் குழுவும் தமது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட அதே ஆண்டில், தில்லியைச் சேர்ந்த ஒரு முன்னணி சிந்தனைக் குழு நாட்டின் வறுமை பற்றிய “இது வரை இல்லாத பெரிய ஆய்வு” ஒன்று நடத்தியது. அவர்கள் 30,000 குடும்பங்களைசந்தித்து பதில் அளித்தவர்களிடம் 300க்கும் மேற்பட்ட காரணிகளைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். போபாலில் நடந்த ஒரு கூட்டத்தில் அதன் புகழ் பெற்ற தலைவர் இப்படித்தான் சொன்னார். பார்வையாளர்கள் மத்தியில் இருந்த பத்திரிகையாளர்களை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுவரை, பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் கருத்தரங்குகளில் என்ன செய்வார்களோ அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அமைதியாக, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தூங்கிக் கொண்டிருப்பது. என் அருகில் இருந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் திடுக்கிட்டு உயிர்த்தெழுந்தார். “அந்த குடும்பங்களிடம் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டார்கள் என்றா சொல்கிறார்? கடவுளே! இந்தத் துறையில் முப்பது ஆண்டுகளாக இருக்கிறேன், நான் நடத்திய மிகப் பெரிய நேர்முகத்தில் ஒன்பது கேள்விகள்தான் இருந்தன. அது என் எஜமானரின் மிகச் சிறந்த நண்பருடனான நேர்முகம். அதில் எனது கடைசி கேள்வி, ‘இப்பவாவது நான் போகலாமா’ என்பதுதான்.”

300 கேள்விகளால் தாக்கப்பட்ட அவரது ஆய்வு இலக்குகள் வறுமையால் இல்லா விட்டாலும் சோர்வினால் செத்திருப்பார்கள் என்று அந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணரிடம் சொன்னோம். அந்த சிந்தனைக் குழுவின் ஒரு மூத்த உதவியாளர் ஒலி பெருக்கியை கையில் வாங்கி நாங்கள் சொல்வது எப்படி தவறானது என்று விளக்கினார். ‘நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு விசாரணையாளர்களை அனுப்பினோம்’ என்று அவர் கூறினார். அது நிச்சயமா புரிந்து கொள்ளக் கூடியதுதான்: ஒருவர் பதில் சொல்பவரின் கையை முறுக்கி பிடித்து வைத்துக் கொள்ள, இன்னொருவர் 300 கேள்விகளை கேட்டிருக்கிறார்.

பிபிஎல், ஏபிஎல், ஐபிஎல், போன்றவற்றின் வரிசையில் நான் என் பங்குக்கு ஒரு எளிய அளவீட்டை சேர்க்க விரும்புகிறேன். அதுதான் சி.பி. எல், அல்லது பெருநிறுவன கொள்ளைக்கோடு. இது பெருநிறுவன உலகத்தையும் பிற பணக்காரர்களையும் அல்லது “உயர் நிகர மதிப்பு நபர்களையும்” தழுவியது. அனைவருக்குமான பொது வினியோக முறைக்கு நம்மிடம் பணம் இல்லை. அல்லது பெரிதும் குறைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதாவுக்குக் கூட பணம் இல்லை. ஊரக வேலைவாய்ப்புக்கான நிகர செலவிலிருந்து பல ஆயிரம் கோடிகளை வெட்டியிருக்கிறோம். மனித வளர்ச்சி புள்ளிவிபரங்களிலும், பட்டினி புள்ளிவிபரங்களிலும் ஊட்டச்சத்து புள்ளிவிபரங்களிலும் நாம் கடுமையாக பின்தங்கியிருக்கிறோம். உணவு விலைகள் உயர்ந்து கொண்டே போகின்றன, கௌரவமான வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றன.

இருப்பினும், வறுமைக் கோடு பற்றிய புள்ளி விபரங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன. கார்பொரேட் கொள்ளைக் கோடு புள்ளி விபரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சிபிஎல் (கார்பொரேட் பிளண்டர் லைன் – பெருநிறுவன கொள்ளை கோடு) என்ற கருத்தாக்கம் மத்திய அரசின் அடுத்தடுத்த நிதி நிலை அறிக்கைகளின் “விட்டுக் கொடுக்கப்பட்ட வருமானம்” என்ற பிரிவில் வேர் கொண்டுள்ளது. உதாரணமாக, 2005-06-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு நிறுவன லாப வரியில் ரூ 4 லட்சம் கோடி சலுகை வழங்கியிருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மட்டும் அந்த சலுகையின் மதிப்பு ரூ 50,000 கோடி. இதே நிதி நிலை அறிக்கையில்தான் தேசிய கிராமப் புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றின் மீதான தள்ளுபடிகளையும் சேர்த்தால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் வரிச்சலுகைகள் ரூ 5 லட்சம் கோடியை தாண்டுகின்றன.

கலால் மற்றும் சுங்க வரியின் கீழ் வரும் பொருட்களில் பல, உதாரணமாக எரிபொருட்கள், பரந்து பட்ட மக்களையும் பாதிக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் அவை வணிக நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும்தான் உதவுகின்றன. இந்த நிதி நிலை அறிக்கையிலும் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் வைரம், தங்கம், மற்றும் நகைகள் மீதான இறக்குமதி தீர்வையில் ரூ 1 லட்சம் கோடி விட்டுக் கொடுத்திருக்கிறோம். இந்த அளவிலான பணம் மக்களுக்கு உணவு பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையானது. ஆனால் சிபிஎல் (வணிகநிறுவன கொள்ளை கோடு) பிபிஎல் (வறுமைக் கோடு)ஐ ஒவ்வொரு முறையும் தோற்கடித்து விடுகிறது. இயந்திரங்களின் மீதான வரி நீக்கங்களுக்கும் இதே உண்மை பொருந்தும். மருத்துவமனைகள் இறக்குமதி செய்யும் கருவிகள் போன்றவற்றின் மீதான சலுகைகள் எல்லோருக்கும் பலன் தரக் கூடியவை என்றுதான் ஏட்டுப் படிப்பு சொல்லும். ஆனால் நடைமுறையில், இந்தச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளும் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளுக்குள் பெரும்பான்மை இந்தியர்கள் நுழைவது கூட சாத்தியமில்லை.

2005-06 ஆண்டிலிருந்து இந்தப் பிரிவுகளின் கீழ் மொத்த தள்ளுபடி ரூ 25.7 லட்சம் கோடி (அட்டவணையை பார்க்கவும்). அது 2ஜி ஊழலை விட கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். பெருநிறுவன கொள்ளைக் கோட்டில் சமீபத்தில் சேர்ந்து கொண்ட நிலக்கரி ஊழலை விட இரண்டு மடங்கு அதிகம். அட்டவணையைப் பார்த்து விட்டு அதன் பிறகு கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 22.42, நகரப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 28.35 என்று வரம்பு விதிக்கும் வறுமைக் கோட்டுக்கான மதிப்பீடுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பிபிஎல்.ஐ சரி செய்ய சி.பி.எல்.ஐ ஒழித்துக் கட்ட வேண்டியிருக்கும்.

____________________________________________________

– பி.சாய்நாத், நன்றி: தி இந்து.

தமிழாக்கம்: செழியன்.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்