Friday, June 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 738

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

5

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி போபால் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இலண்டன் ஒலிம்பிக்கை “டௌ ஒலிம்பிக்” எனக் கூறும் போபால் மக்கள், டௌ வெளியேற்றப்படாவிட்டால், இலண்டன் ஒலிம்பிக்கை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். போபாலைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் இலண்டன் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு இந்திய விளையாட்டு துறையையும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியையும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்திய ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலையை மட்டுமே இதுவரை செய்துள்ளது.

டௌவுக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கடிதத்தைக்கூட அதன் ஆதரவாளர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. டௌவை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய தினமணி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியதற்காக இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவர் கௌ, டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

டௌ கெமிக்கல்சுக்கு ஆதரவாகப் பேசும் கௌ முதல் தினமணி வரை எல்லோரும் வைக்கும் வாதம், போபால் படுகொலைகளுக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பாளியாக முடியாது என்பதாகும். அவர்களது வாதப்படி, 1984ஆம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விபத்து நடந்தது; ஆனால், டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடை வாங்கியதோ 2001இல் தான்; அதாவது, விபத்து நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான். இதனால் போபால் படுகொலைக்கும் டௌவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் நியாயம் போலத் தோன்றும் இந்த வாதம் மிகவும் வக்கிரமானது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கும் போது அதன் சொத்துக்களை மட்டும் வாங்குவதில்லை. நிறுவனத்தின் பொறுப்புக்களையும் சேர்த்துத்தான் வாங்குகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கும்போது, போபால் படுகொலை பற்றி தெரிந்துதான் டௌ கெமிக்கல்ஸ் அதனை வாங்கியது. அதுமட்டுமல்லாமல், போபால் படுகொலைக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தரக் கோரி இந்திய அரசே டௌ கெமிக்கல்ஸ் மீதுதான் வழக்குத் தொடர்ந்துள்ளது. உண்மை இவ்வாறிருக்கையில், போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பில்லை என இவர்கள் வாதிடுகிறார்கள் என்றால், ஒன்று டௌவிடமிருந்து இவர்கள் பணம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது நாட்டு மக்கள் குறித்தும், அவர்களது துன்ப துயரம் குறித்தும் கடுகளவும் கவலைப்படாத வக்கிரப் பேர்வழிகளாக இருக்க வேண்டும். செபஸ்டின் கௌ , டௌவை ஆதரிக்க முன்னது காரணம் என்றால், தினமணிக்குப் பின்னது காரணம்.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !போபால் படுகொலையை விடுத்துப் பார்த்தால்கூட, டௌகெமிக்கல்ஸ் ஒன்றும் சொக்கத் தங்கமில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா நடத்திவரும் பல படுகொலைத் தாக்குதல்களுக்கு ஆட்கொல்லி நச்சு இரசாயனங்களை உற்பத்தி செய்து தருவது இந்த நிறுவனம்தான். வியட்நாம் போரில் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்ட “நாபாம்” இரசாயன குண்டுகளை இதே டௌ நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. இத்தகைய கொலைகார நிறுவனத்தைத்தான் இவர்கள் மகா யோக்கிய சிகாமணியாகச் சித்தரிக்கிறார்கள்.

இவர்கள்தான் இப்படி என்றால், இந்திய விளையாட்டு வீரர்களின் யோக்கியதையோ அருவருக்கத்தக்கதாக உள்ளது. இந்தியா ஒலிம்பிக்கைப் புறக்கணித்துவிட்டால் போட்டிகளில் பங்கெடுக்கத் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு எங்கே பறிபோய்விடுமோ என அஞ்சும் அவர்கள் போட்டியைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்கின்றனர். காமன்வெல்த் போட்டி நாயகன் என ஊடகங்களால் போற்றப்படும் ககன் நரேங் (துப்பாக்கிச் சுடுதல்), ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பது தவறென்றும் ஒலிம்பிக்குக்குப் பணம் கொடுத்ததன் மூலம் ‘டௌ’ தனது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரிஷ்வி எனும் முன்னாள் ஹாக்கி வீரர் கையில் கறுப்பு பட்டை அணிந்து செல்லலாம் என யோசனை சொல்கிறார். நாட்டுப்பற்றோ மக்கள் நலனோ மயிரளவும் இல்லாமல், தனது நலனை மட்டுமே பார்க்கும் அற்பவாத அடிமைகளாகக் கிடக்கும் இந்த ‘வீரர்’கள்தான், அர்ஜூனா, கேல் ரத்னா என நாட்டின் உயர்ந்த விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியை ஏதோ புனிதமான நிகழ்வாகவும், அதில் கலந்து கொள்வது ஏதோ மிகப்பெரிய பொறுப்பாகவும் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் ஒலிம்பிக் என்பது, மிகப்பெரிய அளவில் உலக முதலாளிகள் நடத்தும் வியாபாரம். இதன் காரணமாகத்தான், அதனை நடத்தும் வாய்ப்புக்காக எல்லா நாடுகளும் போட்டி போடுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, 370 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையே இல்லை. டௌ கெமிக்கல்சுக்கு இத்தொகையைத் திருப்பிக் கொடுத்து வெளியேற்றிவிடுவதில் அதற்குப் பொருளாதார ரீதியில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால், அவ்வாறு செய்தால் அந்த நிறுவனத்தைக் கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதாகிவிடும். அதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை, தங்களில் ஒருவனை, கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதை உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறது. எனவேதான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி டௌவை ஆதரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள விரும்பாத இந்திய அரசும் டௌவை ஆதரிக்கிறது.

_______________________________________

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

மீள்பதிவு
________________________________________

8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்!

6

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது ராதேஷ் சென்னையில் ஒரு ஒட்டுநராகவும் சிறு அளவிலான விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தியும் வருகிறான். இவன் நாளிதழ்களில் உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து கொள்வதாக விளம்பரம் கொடுப்பது வழக்கம்.

அப்படி மாற்றுத்திறனாளி மணமகளோ, அவளது பெற்றோரோ இவனை தொடர்பு கொள்ளும் போது தான் ஒரு விளம்ரத் துறை நிர்வாகி என்றும் கூடிய விரைவில் அந்த பெண்ணை மணந்து கொள்வதாகவும் ஏற்க வைப்பான்.

அப்படி திருமணம் நடந்த உடனை அந்தப் பெண்ணை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்வான். பிறகு அவளிடமிருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு பறந்து விடுவான். ராதேஷால் சமீபத்தில் ஏமாற்றப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரை வைத்து போலீஸ் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றர்.

இந்த தூத்துக்குடி பெண்ணை ஏப் – 25 மணம் செய்திருக்கிறான். அதுவும் இருவாரத்திற்கு முன்னர்தான் அவனது விளம்பரத்தைப் பார்த்து அந்த பெண் வீட்டினர் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். திருமணம் ஆனதும் சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருக்கின்றனர். பின்னர் அந்தப் பெண்ணின் 8 பவுன் நகையை எடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டான் இந்த பிளேடு பக்கிரி

இந்த புகாரை வைத்து போலீசார் மேலும் விசாரிக்கும் போதுதான் அவன் பல மாற்றுத் திறனாளி பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களை உள்ளிட்டு பல இடங்களில் இவன் மோசடி செய்திருக்கிறான்.

சமீப காலமாக திருமண மோசடி என்பது குற்றங்களில் ஒரு குறிச்சொல்லாக சேர்க்கும் அளவு தனி கிரைம் வகையாக உருவெடுத்து வருகிறது. இதுவரை மேல்தட்டு வர்க்கத்தை குறிவைத்து ஐ.டி, அமெரிக்கா, ஐ.ஏ.எஸ், முதலாளி என்று ஏமாற்றியவர்களை கண்டிருக்கிறோம். அமெரிக்காவில் வேலை செய்யும் மாப்பிள்ளை, எம் பி ஏ படித்த மாப்பிள்ளை கிடைத்தால் வாழ்க்கையில் சடுதியில் முன்னேறி விடலாம் என்று பெண்களும் அவர்களது வீட்டினரும் நினைக்கின்றனர்.

இந்த காரியவாதத்தை தூண்டிலாக வைத்து பலர் ஏமாற்றியிருக்கின்றனர். இப்படி ஏமாற்றுபவர்கள் திருமண இணையதளங்களில் பந்தாவான ஃபுரஃபைலை போட்டு விட்டு மீன் சிக்குவதற்காக காத்திருப்பர். சிக்கியதும் அசத்தும் ஆங்கிலத்தில் பீட்டரைப் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைப்பார்கள். பிறகு அவரசமாக சென்னை வந்தேன், பணத்தை தொலைத்து விட்டேன், அவரசமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று சென்டிமெண்டை வீசி இலட்சங்களை அமுக்கிவிட்டு பறந்து விடுவார்கள்.

இவ்வளவு மலிவாக ஏமாற்றப்பட்டதை பெருமையாக வெளியே சொல்ல முடியாது என்பதால் பல மேல்தட்டுக் கனவான்களும், சீமாட்டிகளும் போலீசில் புகார் தருவதில்லை. சில ஜேப்படியினர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று ஆட்டையைப் போட்டு திருமணமே முடித்து பிறகு ஏமாற்றுவார்கள். இப்படி திருமணத்தை அடிப்படையாக வைத்து சமூகத்தில் அது தோற்றுவித்திருக்கும் மாயையை மூலதனமாக போட்டு இந்த எம்டன்கள் ஏமாற்றுகிறார்கள்.

ஆனால் இங்கே ராதேஷ் செய்திருக்கும் ஏமாற்று இந்த வகைப்பட்டதல்ல. இது ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்களின் அவல நிலையை இரக்கமற்ற வகையில் சுரண்டியிருக்கிறான் இந்தக் கேடி. பொதுவில் கால் ஊனம் அல்லது பிறவகை உடல் குறைபாடு உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்காது. பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

சற்று வசதி உள்ள பெற்றோர்கள் வரதட்சணை, தங்கத்தை அதிகம் கொடுத்து ஒரு மணமகனை விலைக்கு வாங்குவார்கள். அப்படியும் ஆள் கிடைப்பது சிரமம். கிடைத்தாலும் அந்த மணவாழ்க்கை பெண்ணின் பொருளாதார அந்தஸ்தை வைத்தே தீர்மானிக்கப்படும். இதிலும் ஏழைப்பெண்களுக்கு அந்த வழியும் கிடையாது. இருந்தாலும் அவர்களும் கடன் வாங்கியாவது பெண்களை கரை சேர்க்க விரும்புகிறார்கள். மாற்றுத் திறனாளி பெண்களை மணம் செய்ய வேண்டும் என்ற இலட்சியவாதம் உள்ள ஆண்கள் தற்போது அருகி வருகிறார்கள்.

ஆக, இத்தகைய அவலச் சூழலை புரிந்து கொண்டு இவர்களை சுலபமாக ஏமாற்ற முடியும் என்று திட்டம் போட்டிருக்கிறான் ராதேஷ். உடல் குறைபாடு பெண்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற அவனது அறிவிப்பை மாபெரும் மனித நேயமாக நினைத்து பல விட்டில் பூச்சிகள் சிக்கியிருக்கின்றார்கள். அதிலும் விளம்பரத் துறையில் மேலதிகாரி என்ற அந்தஸ்தும் பலரது கனவை கிளப்பி விட்டிருக்கும்.

இத்தகைய உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு இளைஞன் தமது மகளை  திருமணம் செய்ய முன்வந்திருப்பதையே மாபெரும் தியாகமாக நினைத்து அந்தப் பெற்றோர் அவனை அணுகியிருக்க வேண்டும். இதனால்தான் ராதேஷ் உடனடித் திருமணத்தை எல்லோரிடமும் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் திருமணம் செய்த உடன் வீட்டிற்கு செல்லாமல் லாட்ஜ்களுக்கு அழைத்து சென்றிருக்கிறான். இதன் மூலம் தனது உண்மையான வசிப்பிடத்தை யாருக்கும் தெரிவிக்காதபடி கச்சிதமாக ஏமாற்றியிருக்கிறான்.

இதையெல்லாம் விசாரித்து அறிந்து கொள்ளும் நிலையில் அந்த பெண்களோ வீட்டினரோ இல்லை. அப்படி இருக்கவும் இயலாது. ஊனமுற்ற பெண்ணை மணம் புரிவதாக சொன்னவனை அப்படி விசாரித்தால் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற அச்சமே அவர்களைத் தடுத்திருக்கிறது.

மேட்டுக்குடியினரின் பண ஆசையை வைத்து ஏமாற்றும் மற்ற மோசடிக்காரர்களை விட அனுதாபத்தை மூதலீடாக வைத்து அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றியிருக்கும் இந்த ராதேஷ்தான் கொடூரமான கயவன். அந்த பெண்கள் ஏமாந்ததோடு குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்த பணத்தையும், தங்கத்தையும் பறிகொடுத்திருக்கிறார்கள். இப்படி ராதேஷ் சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமாக ஆட்டையைப் போட்டிருக்கிறனென்று போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

புரோக்கரிடம் சொல்லி  மணமக்களை தேடும் நேரடி முறை போய் தொழில் நுட்பம் வழியாக ஊடகங்கள், இணைய தளங்கள் வழி உலகம் முழுவதும் வாழ்க்கைத் துணையை தேடலாம்தான். ஆனால் இங்கேயும் தொழில்நுட்பம் ஏமாற்றுபவர்களுக்கு அளப்பரிய வாய்ப்பை வழங்குகிறது. ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் பண்புகள் அடிப்படையில் மணமக்களைத் தேட வேண்டும். பணம், அந்தஸ்து, சாதி, தகுதி என்று சுயநலத்தோடு தேட ஆரம்பித்தால் அவர்கள்தான் மோசடிக்காரர்களின் சுலபமான இரை. ராதேஷ் போன்றவர்களுக்கோ ஆதரவற்ற பிரிவினர்தான் இரை.

அத்தகைய மக்களை ஆதரவற்றவர்களாக நடத்தும் இந்த சமூகம் மாறாமல் ராதேஷ் போன்ற மோசடிக்காரர்களை ஒழித்துவிட முடியாது.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?

91

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 19

”இந்தக் காலத்தில் கூட, நம் நாட்டின் மிக உயர்ந்த ஜனாதிபதி பதவியை ஒரு முசுலீம் அலங்கரிக்க முடிந்தது; மத்திய அமைச்சரவைகளிலும், உள்நாட்டு, வெளிநாட்டு இலாகாக்களிலும் முசுலீம்கள் பெரும் பதவிகளை அடைய முடிந்தது. அவையெல்லாம் நமது தேசிய பரம்பரையின்  வலிமையினால்தான் சாத்தியமாயிற்று. பக்கத்தில் உள்ள மதவழி அரசான பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடுகள் மிகத் தெளிவாகப் புலனாகின்றன. இவற்றை விளக்க வேண்டிய அவசியமே இல்லை.”

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரின் – ‘ஞானகங்கை‘ 2 –ஆம் பாகம், பக்கம் 135.

பாகிஸ்தான் மட்டுமல்ல ஏதாவது ஒரு முசுலீம் நாட்டில் முசுலீம் அல்லாதோர் இத்தகைய உயர் பதவிகளுக்கு வர முடியுமா? இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் மட்டும்தான் மாற்று மதத்தவர் வர முடியும்; இதுதான் இந்து மதத்தின் மேன்மைக்கும், பிற மதங்களின் கீழ்மைக்கும் சான்று என ஆர்.எஸ்.எஸ். கும்பல் வாதிடுகிறது. ஆயினும் உண்மை என்ன?

அநேக இசுலாமிய நாடுகளில் முசுலீம் மக்கள் தொகை விகிதம் 95 அல்லது 100 சதமாக இருக்கும்போது பிற மதத்தினர் உயர்பதவிகளுக்கு  வருவதற்கான வாய்ப்போர், அடிப்படையோ இல்லை. இருப்பினும் சிரியா, லெபனான், துருக்கி, எகிப்து, முன்னாள் சோசியத் யூனியனின் இசுலாமிய நாடுகளிலும் பிற மதத்தினர் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இசுலாத்தின் சர்வதேசியம் பேசும் சதாம் உசேனின் ஈராக்கில் கூட தாரிக் அசிஸ் என்ற கிறித்தவர் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதேசமயம் வளைகுடா மற்றும் பிற இசுலாமியக் குடியரசு நாடுகளில் இந்நிலைமை இல்லை. அதனால் என்ன, அந்த நாடுகள் மதச் சார்புடன் இருக்கும்போது, நாம் மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்கிறோம். மதச்சார்பை இழிவு என்று கருதுகிறோம். ஆயினும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் மதச்சார்பைத்தான் பெருமையென்றும், மதச்சார்பின்னையை இழிவு எனவும் கருதுகிறது. அதனால்தான் இசுலாமிய நாடுகளின் மதச்சார்பைக் காட்டி இங்கேயும் அப்படியே ஒரு இந்துராட்டிரத்தைக் கொண்டு வர இந்த வாதத்தை வைக்கிறார்கள். இந்து மதவெறியர்கள் எழுவதற்கு முன்பிருந்த இந்நாட்டின் மதச்சார்பின்மை என்பது ஒரு கேலிப் பொருளாகவும், பார்ப்பனியப் பண்பாடே சகல மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இருந்து வருகிறது.

துருக்கியில் முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், அந்நாடு மதச்சார்பின்மையைக் கறாராகக் கடைபிடித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு துருக்கி பாராளுமன்றத்தில் இசுலாமிய மதவாதம் பேசிய உறுப்பினர் ஒருவரின் பதவி ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. த.மா.காவைச் சேர்ந்த ஜெயந்தி நடராசன் அங்கு சென்றிருந்தபோது இதை அறிந்து அதிர்ச்சியுற்றதாகக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். இங்கே பால்தாக்கரே, தாராசிங் வகையறாக்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பும், சமூக மதிப்பும் தரப்படுகிறது. இந்திய மதச்சார்பின்மையை துருக்கியுடன் ஒப்பிடும் போது படுகேவலமாகத்தான் இருக்கின்றது.

இருந்தபோதும் நம் நாட்டின் உயர் பதவிகளில் முசுலீம்கள் சிலர் இருப்பதற்குக் காரணம் ”இயற்கையாகவே” இந்துக்களிடம் உள்ள பெருந்தன்மை என்கிறார்கள். ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராகவும், முகமது கரீம் சாக்ளா நீதிபதியாகவும், பட்டோடி, அசாருதீன் போன்றோர் கிரிக்கெட் அணித் தலைவராகவும் இருந்திருக்கிறார்கள். இதில் பெருந்தன்மை என்ன இருக்கிறது? ஒரு முசுலீமை ஜனாதிபதி ஆக்குவது என்பது ஒரு தாழ்த்தப்பட்டவரை ஜனாதிபதி ஆக்குவதைப்போல ஒரு பித்தலாட்ட வேலைதான். இப்பிரிவு மக்களிடம் ‘நம்மாள் ஜனாதிபதி’ என்ற பெருமிதத்தை உருவாக்கிவிட்டு, வழக்கமான ஒடுக்குமுறையைத் தொடருவார்கள். ரன்பீர்சேனாவின் படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடும் குடியரசுத் தலைவர் நாராயணன் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? முன்பு வெங்கட்ராமன் விட்ட அறிக்கையின் இடம், காலம் மாறியதைத் தவிர விளைவுகள் எதுவும் மாறவில்லையே?

மேலும் ஒரு நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்களின் நலனுக்குச்சேவை செய்யவே ‘அரசு’ உள்ளிட்ட ஏனைய சட்ட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. எனில் இந்நிறுவனங்களின் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பதவிகளுக்கு ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் வர வேண்டும் என்பதில்லை. அடக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூட வரலாம். அப்படி வருவதையே ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. எனவே அரசு என்ற நிறுவனம் இந்துத்தரகு முதலாளிகளுக்கும், இந்து அதிகார வர்க்க முதராளிகளுக்கும், இந்து நிலப்பிரபுக்களுக்கும் அடிபணிந்திருக்கும் போது, தலித் நாராயணனோ, முசுலீம் ஜாகீர் உசேனோ கோபுரத்தின் பொம்மையாக இருப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உண்மையில் இவர்களும் அதை அறிந்தேதான் இருக்கிறார்கள். இருவரது வர்க்க நலனும் இணைந்தே இருக்கின்றன.

இத்தகைய மோடி மஸ்தான் மோசடியை உலகமெங்கும் காணலம். சிட்னி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்கும் பெருமை ‘கதே ப்ரீமென்’ என்ற ஆஸ்திரேலிய பழங்குடி வீராங்கனைக்கு வழங்கப்பட்டது. இவரைவிடப் பிரபலமான வெள்ளையின வீரர்கள் இருந்தும் ஆஸ்திரேலிய அரசு இதைச் செய்யக் காரணம் ‘நிறவெறியை எதிர்க்கிறோம்’ என்று பம்மாத்துக் காட்டத்தான். உண்மையில் வெள்ளையர்களிடம் இழந்த தங்கள் மண்ணை மீட்க இன்று வரை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் போராடுவதும் அரசு அதை அடக்குவதும்தான் அங்கே நடைமுறையாக இருக்கிறது.

கோஃபி அன்னான் என்ற கருப்பர் செயலாளராக வந்ததினாலேயே, ஐ.நா.சபையின் ஏகாதிபத்திய அடிமைத்தனம் மாறி விட்டதா? முத்தையா முரளீதரனை இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்த்ததினாலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது என ஏற்க முடியுமா? பங்காரு லட்சுமணன் என்ற தாழ்த்தப்பட்டவர்  தலைவராக வந்தததினால், பாரதீய ஜனதாவின் பார்ப்பனிய ரத்தம் மாறிவிடுமா? கருப்புக் கிழவிகளைக் கண்ட மாத்திரத்தில்  கட்டிப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்துக்குக் குறையானவையல்ல மேற்கண்டவை!

நம் நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் முசுலீம்களாக இருக்கின்றனர். ஆனால், இந்த தேசிய விகிதம் பாராளுமன்ற – சட்டமன்றங்களில், வேலை வாய்ப்பில், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் பதவிகளில், கல்வியில், போலீசு – இராணுவத்தில் கிடையாது. நாட்டின் 50 பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் கூட முசுலீமாக இல்லை. மேலும் போலீசு – இராணுவ – உளவுப் பிரிவுகளின் உயர்மட்டப் பதவிகளுக்கு முசுலீம்கள் வர முடியாது என்பது எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்படுகிறது. இவைதான் யதார்த்தம் தெரிவிக்கும் உண்மை.

எனவே கிரிக்கெட் காப்டன், ஜனாதிபதி, மந்திரி பதவி எல்லாம் உலக நாடுகளிடையே மதச்சார்பின்மை எனும் பொய்யை நிரூபிக்கும் தந்திரமாகும். அதனால்தான் இந்தியாவில் வளைகுடா நாடுகளுக்கு தூதர் அனுப்புவது முதல், பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவது வரை எல்லாக் கட்சி அரசாங்கங்களும் சல்மான் குர்ஷித், நஜ்மா ஹெப்துல்லா, சிக்கந்தர் பகத், ஓமர் அப்துல்லா போன்ற முசுலீம்களைப் பயன்படுத்தி வருகின்றன.

இதெல்லாம் போகட்டும். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில், ஒரு தோட்டி – வெட்டியானின் வேலையைச் செய்ய, கேவலம் ஒரே ஒரு ஐயர், முதலியார், செட்டியார், நாயுடு கூடத் தயாராக இல்லையே, என்ன அநீதி? ஏர்க்கலப்பையுடன் வயலில் உழும் ஒரு மார்வாடி, சேட்டு, ஐயங்காரை திரைப்படத்தில் கூடக் காண முடியவில்லையே? எப்பேர்ப்பட்ட வஞ்சனை! இன்னும் புரியும்படி கேட்போம். பார்ப்பன – பனியா, ‘மேல்’ சாதியினர் தவிர சூத்திர – பஞ்சம சாதிகளைச் சேர்ந்த எவரும் தரகு முதலாளிகளாக இல்லையே, ஏன்? நாடெங்கும் பரவிக் கிடக்கும் பார்ப்பன -வேளாள – ‘மேல்’சாதி மடங்களில், ஒரு சூத்திரனுக்கோ, பஞ்சமனுக்கோ கேவலம் ‘சந்நியாசமா’ வது வாங்கித்தர முடியுமா? முசுலீம்களுக்கு சில உயர் பதவி பிச்சையளித்து தமது பெருந்தன்மை பற்றிப் புல்லரிக்கும் இந்து மத வெறியர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும்.

ஆகையால் முசுலீம்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கும், இவர்கள் அளிக்கும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ உயர்பதவிகளை அளிக்காமலே இருக்கலாம். அப்போதாவது அந்தச் சமூக மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் மாயை சுலபமாகக் கலைந்து போகும்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை!

23
பலியான மாணவி அகிலா
பலியான மாணவி அகிலா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர்.

அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால் வெறிபிடித்த அந்த மாணவர்களோ மறுத்திருக்கின்றனர். இதனால் மனம் உடைந்த அகிலா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாள்.  இறப்பதற்கு முன்னர் அவள் எழுதிய கடிதத்தில் அந்த மூன்று மிருகங்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள்தான் காரணமென்று எழுதியிருக்கிறாள்.

செல்பேனில் படம் பிடிப்பதை அந்த மூவர் அணி திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறது. அதற்கு அத்தை மகன் என்ற உறவுமுறை பயன்பட்டிருக்கிறது. ஒரு இளம் பெண்ணின் அந்தரங்கத்தை படம்பிடித்து அவளிடமே காட்டி இன்புறுவது எந்த அளவுக்கு விகாரமானது, இழிவானது என்பதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை வேட்டையாடும் ஆண்மையின் பெருமையாக தெரிந்திருக்கிறது. இதனால் அவர்களது குற்றச் செயல் இப்படி படம் பிடித்ததோடு மட்டும் நின்று போயிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நிச்சயம் தமது வக்கிர நோக்கங்களுக்காக அகிலாவை மிரட்டியிருப்பார்கள்.

டிப்ளமா படித்து விட்டு ஒரு வேலை, பின்னர் திருமணம் என்று வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கனவுகளோடும், கற்பனைகளோடும் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை இப்படி பரிதாபமாக முடிய வேண்டிய அவசியம் என்ன? செல்பேசி என்பது பெண்களைப் பொறுத்தவரை எப்போதும் கற்பழிக்கக் காத்திருக்கும் வில்லன்களைப் போல மாறிவிட்டதா?

நாளிதழ்களில் வரும் குற்றச் செய்திகள் இப்போதெல்லாம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் கூட இத்தகைய குற்றச் செய்திகள் குறைந்த பட்சம் புலனாய்வு புலிகளின் அட்டைப்படத்தை மலிவான நோக்கத்திற்காகவென்றாலும் ஆக்கிரமித்திருந்தன. தற்போது இதெல்லாம் ஒரு செய்தியா எனுமளவுக்கு குற்றங்களும் நிறைய நடக்கின்றன. அவற்றை சுவாரசியமாக்குவதற்கு ஊடகங்கள் முயல முயல அடுத்த குற்றச் செய்தி வெறுமனே தகவலாக மட்டும் மக்களிடம் முக்கியத்துவம் பெறாமல் மறைந்து விடுகிறது.

எல்லா மாணவர்களும் இப்படி செல்போனும் வக்கிரமுமாக அலையவில்லை என்றாலும் இந்த போக்கு மாணவர்களிடையே பரவிவருவது கண்கூடு. ஆரம்பத்தில் முகத்தை மட்டும் மறைவாக படமெடுப்பவர்கள் பின்பு முழு ஆபாச படமெடுக்கும் பரிணாம வளர்ச்சியை எட்டுகிறார்கள். பிறர் எடுத்த படத்த ரசித்தவன் பின்பு தானே எடுக்க முயல்கிறான். இத்தகைய வக்கிர சீரழிவுக்கு அத்தகைய மாணவர்களின் குடும்பப் பெண்களே முதல் பலி.

வரலாற்றுக் காலம் முழுவதும் வர்க்க ரீதியாகவும், பாலின ரீதியாகவும் ஆணாதிக்கத்தின் வன்கொடுமைகளை அனுபவித்து வந்த பெண்களுக்கு தற்போதைய தொழில் நுட்ப புரட்சி வேறு தன் பங்கிற்கு வதைத்து வருகிறது. மாராப்பை சரிசெய்வதை அனிச்சைச் செயலாய் செய்யும் பெண்கள் இனி வெளியிலோ, வீட்டிலோ இருக்கும் போது சுற்றுச் சூழலில் செல்பேசிகள் இல்லை என்பதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும் போல. ஆனாலும் மாணவர்களிடையே தினுசு தினுசுகா பரவி வரும் வக்கிரம் இத்தகைய கண்காணிப்பையெல்லாம் உடைத்து விடும்.

மாணவர் சங்கங்களும், மாணவர்களும் குறிப்பாக மாணவிகள் இத்தகைய கயவர்களை குறி வைத்து தனிமைப்படுத்தி தாக்குவதன் மூலம் மாணவ சமூகத்திடையே வேரூன்றி நிற்கும் இந்த வக்கிரத்தை அறுக்க முடியும். அரசையும் ஆளும் வர்க்கத்தையும் அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடும்போதே இத்தகைய பண்பாட்டு தாக்குதலையும் அதற்கு பாதை போடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். அப்போதுதான் நாம் அகிலாக்களைக் காப்பாற்ற முடியும்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!

63
மாருதி-சுசுகி
மாருதி சுசுகி தொழிற்சாலை லாக்-அவுட்

தலைநகருக்கு அருகில் உள்ள மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நடந்திருக்கும் தொழிலாளர்களின் எழுச்சி பல முதலாளிகளையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், அரசையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இனி ‘இந்தியாவை முழுவதுமாக தனியார் மயமாக்கி விற்று விட முடியாதோ’ என்ற பயம் அவர்களின் முதுகெலும்பில் சிலீரென்று இறங்கியிருக்கும்.

ஜியாலால் என்கிற தொழிலாளர், ராம்கிஷோர் என்கிற மேனஜரை தாக்கியதாகவும், ஜியாலால் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக நிர்வாகம் அறிவித்ததாகவும், அதனால் கோபமான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், அலுவலகங்களையும் கணினிகளையும் எரித்ததாகவும் சொல்கிறது நிர்வாகம்.

உயர் அதிகாரிகள் உட்காரும் முதல் மாடியில் நுழைந்த தொழிலாளர்கள் மேனேஜர்களை தாக்கி சில இடங்களுக்கு தீ வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இரு கால்களும் உடைந்த நிலையில் அவனிஷ் குமார் தேவ் என்கிற மேனேஜர் தீயில் சிக்கி இறந்து விட்டார். இதுவும் நிர்வாகத் தரப்பு தெரிவித்ததுதான்.

ஒரு மேலாளர் தலித் தொழிலாளரை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், அந்தத் தொழிலாளர் அதை எதிர்த்து கேட்டதாகவும், மேலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகம் தொழிலாளரை தற்காலிக வேலை நீக்கம் செய்ததாகவும் தொழிலாளர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

மேலும் யூனியன் பிரதிநிதிகள் மனிதவளத் துறை அதிகாரிகளுடன் இதைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, நிர்வாகம் சம்பளத்துக்கு வைத்திருந்த குண்டர்களை தொழிற்சாலைக்கு வெளியிலிருந்து உள்ளே அழைத்து, செக்யூரிட்டிகளிடம் கதவுகளை மூட உத்தரவிட்டிருக்கிறது.

அந்த குண்டர்கள் ஆயுதங்களால் தொழிலாளர்களை தாக்க பல தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்த குண்டர்கள் நிறுவனத்தின் பொருட்களை அடித்து உடைத்ததுடன் தொழிற்சாலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர் என்றும் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் கூறுகிறது.

நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன, 96பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலை காலவரையறை இன்றி லாக்-அவுட் செய்யப்பட்டிருக்கிறது.

மாருதி-சுசுகி
தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் ஊடகங்கள்

மாருதி சுசுகி நிர்வாகமும், முதலாளித்துவ ஊடகங்களும், அரசும் தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். போராடி பெற்ற யூனியனின் அங்கீகாரம் ‘ரத்து செய்யப்பட வேண்டியதுதான்’ என்று தீர்ப்பு எழுதுகிறார்கள். ‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனிமேல் இந்தியாவுக்கு வர பயப்படுவார்கள், அவர்களை சமாதானப்படுத்த தொழிலாளர் சட்டங்களை மாற்றி எழுத வேண்டும், விருப்பம் போல வேலையை விட்டு நீக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

மாருதி சுசுகியின் முதல் தொழிற்சாலை குர்கானில் 1980களில் தொடங்கப்பட்டது. மானேசரில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொழிற்சாலையிலும் நிர்வாகத்தின் எடுபிடியான ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்க’த்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியது நிர்வாகம். தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, சென்ற ஆண்டுதான் தமது புதிய யூனியனுக்கான அங்கீகாரத்தை பெற்றார்கள். 7 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும், அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் 1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி தரப்பட்டுள்ளது. அதை செயல்படுத்தவே கடும் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது.

மானேசர் ஆலையை பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமானால் அது 50 விநாடிகளில் ஒரு கார் உற்பத்தியாகும் இடம். மாருதி சுசுகி காரின் மூன்று அடிப்படை மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும் ஒரு கார் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

அதன் ஸ்டியரிங் வலது புறமா, இடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலா, டீசலா, எரிவாயுவா, ஏ.சி உள்ளதா இல்லாததா, இருக்கைகளில் என்ன ரகம், டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள், டாஷ் போர்டுகள் போன்ற காரின் அனைத்து அங்க அவயங்களின் பட்டியலையும் தாங்கி அந்தக் கார் கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும்.

அந்தப் பட்டியலைப் பார்த்து, காரின் இனத்தை புரிந்து கொண்டு, தொழிலாளி அதன் மீது வினையாற்ற வேண்டும். ஒரு நொடி அதிகமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி இழப்பு என்று பதிவாகும். நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதட்டத்துடனும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடனும் ஐம்புலன்களையும் குவித்து தொழிலாளி தனது பணியை செய்து முடிக்க வேண்டும். முடித்ததும் அடுத்த கார் வந்து நிற்கும்.

தொழிலாளியின் இயற்கைத் தேவைகளான தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, பணி இடையில் சிறிது ஓய்வு போன்றவையெல்லாம் வீணாகும் நேரம், நேரடியாக உற்பத்தியையும், லாபத்தையும் பாதிக்கும் விசயங்கள். தொழிலாளி ஒருவர் ஆலையினுள் நுழைந்து, எந்திரங்களுடன் வேலையை தொடங்கி அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து, எந்திரத்துடன் ஒரு எந்திரமாகவே அவர்கள் மாறி விட வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மாருதி-சுசுகி
மாருதி சுசுகியின் தொழிலாளி

எந்திரங்கள் சம்பள உயர்வு கேட்காதல்லவா! ஆனால் தொழிலாளர்கள் தமக்குரிய நியாயமான ஊதியத்தை கேட்கும் போது நிர்வாகத்தால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

மானேசர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிக பட்ச சம்பளம் ரூ 17,000. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 7,000 மாதச் சம்பளம். அதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 2007க்கும் 2011க்கும் இடையே ஹரியானா மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 50 சதவீதம் உயர்ந்திருக்க தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 5.5 சதவீதம்தான் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது 4 ஆண்டுகளில் தொழிலாளர் பெறும் வருமானத்தின் உண்மையான மதிப்பு சுமார் 45% குறைந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சம்பளம் நான்கு மடங்கு (419 சதவீதம்) அதிகமாயிருக்கிறது.

நிர்வாகத்துக்கு ஒவ்வாத புதிய தொழிலாளர் யூனியன், அதிகரித்துக் கொண்டே போகும் வேலைப் பளு, நான்கு ஆண்டுகளாக வருமான வீழ்ச்சி என்ற சூழலில் சம்பள உயர்வு குறித்து யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சு நடந்திருக்கிறது. நிர்வாகம் அந்த பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து கால தாமதம் செய்திருக்கிறது.

தொழிலாளர்கள் கேட்கும் அதிக பட்ச ஊதிய உயர்வான ரூ 18,000ஐ எல்லா தொழிலாளர்களுக்கும் (சுமார் 2,500 பேர்) கொடுத்தாலும் நிறுவனத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ 54 கோடிதான் செலவாகியிருக்கும். 2010-11-ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ரூ 2,289 கோடி நிகர லாபம் ரூ 2,235 கோடியாக குறைய வேண்டியிருக்கும்.

தமது லாபத்தில் சுமார் 2% பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து தனக்குப் பிடிக்காத யூனியனை தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இழக்கச் செய்ய முயற்சித்தது நிர்வாகம்.

‘கடந்த ஆண்டை விட லாபம் அதிகம் ஈட்ட வேண்டும் அப்பொழுது தான் லாப வளர்ச்சியைக் காட்டி பங்கின் விலையை பங்குச் சந்தையில் ஏற்ற முடியும், அதிகாரிகள் சம்பள உயர்வு பார்க்க முடியும். ‘உற்பத்தியை அதிகமாக்கி லாபம் காட்டலாம். அதிக உற்பத்தியை குறைந்த செலவில் செய்யும் போது இன்னும் லாபம் காட்டலாம்’ என்பது நிறுவனத்தின் அடிப்படை நோக்கம்.

திங்கள் கிழமை ‘முதல் ஆண்டுக்கு ரூ 6,000தான் சம்பள உயர்வு’ என்று நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை, காலையில் வழக்கமாக நடக்கும் ஒருங்கிணைப்பு கூட்டத்தை தொழிலாளர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

புதன் கிழமை காலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பணிக்கு வந்து கொண்டிருந்து சில தொழிலாளர்களிடம் ராம் கிஷோர் என்ற மேலாளர் ‘ஒருங்கிணைப்பு கூட்டத்தை புறக்கணிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் பலத்து தொழிலாளர் ஜியா லாலை சாதி பெயர் சொல்லி திட்டியிருக்கிறார் மேலாளர். பல நாட்கள் தொழிலாளர் மத்தியில் புழுங்கிக் கிடந்த கோபம் பெருவெடிப்பாக வெடித்திருக்கிறது.

இப்பொழுது நடந்திருக்கும் தொழிலாளர் போராட்டம் ஒரு அவச் சொல், பணிநீக்கம் என்பதின் வெளிப்பாடு என்று சுருக்கிவிட முடியாது.

சந்தையில் நல்ல லாபத்தில் மாருதி காரை விற்றுவிட்டு, அந்த லாபத்திற்கு சம்பந்தம் இல்லாத சொற்ப சம்பளத்தை கொடுப்பது, தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்கள் ஆக்காமல் தற்காலிக தொழிலாளர்களாகவே வைப்பது, அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது, அவர்களின் யூனியனை வேவு பார்ப்பது, ‘யூனியன் நடவடிக்கைகள் சட்டம் விரோதம் அதில் பங்கெடுக்கமாட்டேன்’ என உறுதி பத்திரத்தில் கையெழுத்திட நிர்ப்பந்திப்பது என இந்தியாவின் தொழிலாளர் சட்டம் என்பது தாங்கள் மலம் துடைக்க உதவும் காகிதம் என வெளிப்படையாக செயல்படுகின்றன வெளிநாட்டு நிறுவனங்கள். இதை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை சட்ட விரோதிகள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது தொழிலாளர்களின் உரிமை.  அதை முதலாளிகளால் ஏற்க முடியவில்லையென்றால், முதலாளிகளுக்கு புரியும் மொழியில் தங்கள் கோரிக்கைகளை ஏற்கச் செய்வதுதான் தொழிலாளர்களிடம் உள்ள ஒரே வழி. ஆனால் தொழிலாளிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அதிகாரத்தின் துணை கொண்டு நசுக்க நினைக்கிறார்கள் முதலாளிகள்.

மாருதி-சுசுகி
கடந்த ஆண்டு போராட்டதின் போது.

மாருதி தொழிலாளர்களும் சரி மானேசரில் செயல்படும் வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் சரி இந்த போராட்த்தின் பாதையை திடுமென வந்து அடைந்து விடவில்லை. தொடர்ந்து பல மாதங்கள் பல அநீதிகளை ஏற்க முடியாமல்தான் அவர்கள் போராடி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நடந்திருக்கும் பல்வேறு போராட்டங்களில் தொழிலாளர்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்குமுறையை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடியுள்ளனர்.

தொழிற்சாலையில் வன்முறையை அவிழ்த்து விட்டு சொத்துக்களை நாசம் செய்து உயிரிழப்புக்கும் காயங்களும் பிரச்சினை என்றால் அந்தப் பிரச்சினையை திமிரோடு தருவித்துக் கொண்டது மாருதி சுசுகி நிர்வாகம்தான்.  ஒப்பந்தத் தொழிலாளரை நிரந்தரம் ஆக்க மறுப்பது, குறைந்த பட்ச ஊதிய உயர்வைக் கூட மறுப்பது என்று அதிகார ஆட்டம் போடும் மாருதி நிர்வாகத்தை தொழிலாளிகள் வேறு எப்படி வழிக்கு கொண்டு வர முடியும்?

புதிய பொருளாதாரக் கொள்கையின் படி முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்க உரிமை இல்லை, நிரந்தரத் தொழிலாளர் தேவையில்லை, குறைந்த கூலி, நீதிமன்றம் தலையிட முடியாது, தொழிலாளர் ஆணையர் கேட்க முடியாது என்று இந்தியா முழுவதும் இத்தகைய கொள்கைகளே அமல்படுத்தப்படுகின்றன.  இத்தகைய அடக்குமுறையின் தர்க்க ரீதியான எதிர்வினைதான் மாருதி தொழிலாளர் போராட்டம்.

தங்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கி லாப வெறிக்காக தங்களின் மேல் போர் தொடுத்த முதலாளி வர்க்கத்தை மாருதி தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதால் முதலாளி வர்க்கம் வெற்றி பெற்று விடாது. ஏனென்றால்  இழப்பதற்கு நிறைய முதலாளி வர்க்கத்திடம்தான் இருக்கிறதே ஒழிய தொழிலாளிகளிடம் இல்லை. மாருதி தொழிலாளர் போராட்டம் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னுதாரமாண போராட்டம். இதை பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிரான போராட்டமாக ஒருங்கிணைக்கும் போது தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல இந்திய மக்களும் தங்களது விடுதலைக்கான பாதையை கண்டடைவார்கள்.

____________________________________________

– அப்துல்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

 

திருட்டு ‘தம்’மினால் பிரபலமான கடவுள்!

17

சுடலை

 

சக்கிவிளை சுடலை மாடனைத் தெரிந்தவர்களாயிருந்தால் ஒரு கணம் லேசாக விக்கித்துப் போவார்கள். உண்மையில் சுடலைமாடன் மட்டுமில்லையென்றால் எசக்கிவிளை என்கிற பெயரே வெளியே தெரியாமல் போயிருக்கும். இன்றைக்கும் மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் யார் யாரோ விசாரித்துக் கொண்டு எசக்கிவிளைக்கு வருகிறார்களென்றால் அதற்கு சொடலைமாடன் மட்டும் தான் காரணம்.

முன்பெல்லாம் ஊருக்கு ஒழுங்கான சாலை கூட இருக்காது. நீங்கள் திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் வந்து அங்கே 2ம் நெம்பர் பஸ்ஸைப் பிடித்து துலுக்கப்பட்டியில் இறங்க வேண்டும். பின், கண்ணநல்லூர் பாதையில் நாலு கிலோ மீட்டர் நடந்து வந்து, சொரிமுத்தான் கோயிலருகே நம்பியாற்றைக் கடக்க வேண்டும். மழைக்காலமென்றால் பெரும்பாடு தான். அப்புறம் ஒரு மணி நேரம் நடைக்குப் பின் தான் ஊரே தென்படும். இப்போது சொடலையின் புண்ணியத்தில் நம்பியாற்றின் குறுக்கே ஒரு பாலம் தோன்றியிருக்கிறது. வள்ளியூரிலிருந்து நேரே பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை டக்கர் வண்டிகள் வந்து போகிறது.

இந்த மாற்றங்களும் சுடலைமாடனின் புகழ் பரவியதும் கடந்த பத்தாண்டுகளில் நடந்தேறியவை. இதற்குப் பின் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது நண்பர்களே. இத்தனை வருடங்களாக வெளியே யாரிடமும் சொல்லாத அந்தக் கதையை இப்போது சொல்கிறேன். அது ஒரு வினோதமான சம்பவத்திலிருந்து துவங்கியது.

***

ந்த சம்பவம் நடந்து சுமார் பன்னிரெண்டு வருடங்கள் இருக்கும். எசக்கிவிளை சுடலைமாடன் ஒரு துடியான சாமி என்பதை ஊரார்கள் அறிவார்கள் தான்.. ஆனாலும் அன்றைக்கு அவருக்கு அத்தனை மவுசு இல்லை.  ஊரில் இருந்த 300 குடும்பங்களில் மூன்றில் ஒருபங்கு கிறித்தவர்கள், அடுத்த ஒருபங்கு அய்யா வழியினர் மீதம் ஒருபங்கு இந்துக்காரர்கள். ஒரு கிறித்தவ தேவாலயமும், பெருமாள் கோயிலும் அய்யாவழிக் கோயிலும் ஊரினுள் இருந்தது. சுடலைமாடன் அங்கேயிருந்த எல்லா குடும்பங்களுக்கும் குலசாமி – கிறித்துவர்கள் கூட கொடை கொடுப்பார்கள். ஆனாலும் அவர் ஊருக்கு வெளியே தள்ளி வைக்கப்பட்டிருந்தார்.

என் நண்பன் பூசப்பன் என்கிற பேச்சிமுத்தானின் குடும்பம் தான் சுடலை கோயிலுக்கு பரம்பரை பரம்பரையாக பூசாரியாக இருந்து வந்தனர். பூசணிக்கு கையும் காலும் முளைத்தது போன்ற ஒரு தோற்றத்தின் காரணமாக பேச்சிமுத்தானுக்கு பூசணியப்பன் என்கிற பெயர் விளங்கியது – பின் பேச்சு வழக்கில் திரிந்து பூசப்பன் – பூசன் என்பதாக மாறியது. அது கிடக்கட்டும், பூசப்பன் ஒரு சுவாரசியமான பேர்வழி. எங்கள் செட்டு தான். எங்கள் பையன்களிலேயே அவன் கொஞ்சம் வெளிர் நிறம். உருண்டு திரண்ட உடல் வாகு. அவனிடம் ஒரு நல்ல பழக்கமும் இரண்டு கெட்ட பழக்கங்களும் இருந்தன.

நல்ல பழக்கம் என்பது தினசரி காலையிலேயே திருநீரை தண்ணீரில் குழப்பி பட்டையடித்துக் கொள்வான் – அது சாயந்திரம் வரை அழியாமல் ஒரு தெய்வகடாட்சமான முகத்தை அவனுக்குத் தரும். மற்றபடி, மாதம் ஒருமுறை குளியல் வாரம், ஒருமுறை பல்துலக்குவது என்பதில் அவன் வைராக்கியமாக இருந்தான். கொடை சமயத்தில் மாடன் இறங்கி குறி சொல்வான் – நண்பர்கள் என்பதால் கூட்டத்தோடு எங்களைத் தான் அருகில் அழைப்பான். அந்தக் கொடுமை தாளாமல் ஒரு முறை கேட்டே விட்டேன்,

“பல்லு வெளக்கினா தேய்ஞ்சாலே போவும்?”

“போங்கடே, ஊர் பெருமாளு கோயில் ஐயரே குளிக்க மாண்டேங்கான்.. அவம் மணிய வேகமா அடிக்கச்சுல லேசா வாடை வரும் பாத்திருக்கியாலெ… அந்த நேரமா பாத்து தாம்லே வெடிய போடுதாம்.. பேரு தாம்லே பெருசா ஐய்யர்ர்ரூ… வள்ளியூர் மாணிக்க அண்ணாச்சி ஓட்டல்ல நல்லா கிடா கறிய தின்னுபிட்டு இங்க பெருசா ஆட்டிக்கிட்டு வாராம்லே”

“சவத்த அவன் கெடக்காம்லே.. நீ பல்லு வெளக்கி குளிச்சி எடுத்து இருக்க வேண்டியது தான? நீயும் பூசாரி தானடே?

“அது…  எனக்கு குளிச்சா தண்ணி சேர மாண்டேங்கி பாத்துக்க..  திரேகத்தில ஒரே சொரிச்சலா எடுக்கு. வாய்ல ஈரெல்லாம் ஒரே புண்ணா கெடக்கு.. அதாம் பல்லு வெளக்க முடியல்ல… விடுலா.. அந்தாம் பெரிய யானையே பல்லு வெளக்க மாண்டேங்கி நமக்கு என்னலே?”

“நாத்தம் தாங்காம மாடன் செவுட்டுல ஒரே போடா போடப் போறாரு பாத்துக்க..”

பத்தாம் வகுப்பு வரை எங்களோடு தான் படித்தான். அதன் பிறகு இரண்டு வருடங்களாக அப்பாவிடம் பயிற்சி எடுத்து  வந்தான். அப்போது நான் பாளையம்கோட்டையில்  தங்கியிருந்து டிப்ளமோ படித்து வந்தேன். வார இறுதியில் கூட ஊருக்கு வரக்கூடாது என்று ஐயா சொல்லியிருந்தார். ஊரில் எனது கூட்டாளிகள் அப்படி. செமஸ்டர் லீவுக்கு மட்டும் தான் வருவேன். வந்தாலும் ஐயாவுக்குத் தெரியாமல் தான் வெளியே போக முடியும். அப்போதே திருட்டுத் தனமாக புகைக்கும் வழக்கம் உண்டாகியிருந்தது.

நான், ஜெபராஜி, வில்சன், சந்திரன், பூசப்பன், கிராம்ஸ் மகன் மருதமுத்து என்று ஜமா சேர்வோம். ஜெபராஜின் வீட்டில் பீடி சுத்திக் கொண்டிருந்தார்கள். அதில் கழித்துப் போடப்படும் பீடிகளை அவன் களவாண்டு வருவான். சொக்கலால், யோகி, மல்லிசேரி பீடிகள் என்றால்  புகையிலையும் சுற்று இலையும் தரமானதாக இருக்கும் இருக்கும். ஜமா களைகட்டும். ஜமா கூடும் நேரம் பின் மாலைப் பொழுது – இடம் சுடலை மாடன் கோயில்.

அப்படி ஒரு முறை செட்டு கூடிய போது பூசப்பனை சேர்த்துக் கொள்ளவில்லை. நானோ நாலைந்து மாதம் கழித்து வருவதால் என்ன நடந்ததென்று புரியவில்லை. ஜெபாவிடம் தான் கேட்டேன்,

“எங்கடே பூசனைக் காணல?”

“அவனெ வெட்டி விட்டாச்சிடே” ஜெபா சிரித்துக் கொண்டே சொன்னான்.

“என்னாச்சி?”

“அவம் சரியாவுல காரியக்காரம்லெ. போனதிருப்பு இங்க பீடிய வாங்கி இழுத்துட்டு கெடந்தாம்லா? நீ ஊருக்குப் போன அடுத்த நாளு தொரை வாத்தியார் கிட்ட போயி பயலுவ கோயில் மேடைல பீடி இழுக்கானுவ, தண்ணியடிக்கானுவன்னி ஆவ்தாளி சொல்லி இருக்கான்டே.. வாத்தியாரு எங்கைய்யா கிட்ட சொல்லிக் கொடுத்து வீட்ல எனக்கு ஒரே ஏச்சு. பூசன் சரியாவுல கோள் சொல்லிடே… அதான் கூப்பிடலை”

ஓரளவு வெளிச்சம் விழும் வரை காத்திருந்து பின் ஆரம்பித்தோம். சுடலைமாடன் கோயில் என்பது ஒரு சின்னஞ் சிறிய கட்டிடம். ஆறடி ஆளாக இருந்தால் உள்ளேயே நுழைய முடியாது. சுமார் ஐந்தடி உயரம் இருக்கலாம். நாலடி அகலம் – நாலடி நீளம். நான்கு பேர் சேர்ந்தால் கோயிலைக் கட்டிப் பிடித்தே விடலாம். கோயில் தான் சிறியது. ஆனால், அதன் முன்புறம் சுடலைமாடன் சிலைக்கு இடது பக்கமாக பெரிய சிமென்டு குதிரைச் சிற்பங்கள் இரண்டு இருக்கும்.

அந்தக் குதிரைகள் ஒரு பிரம்மாண்டமான மேடையின் மேல் முன்னங்காலை உயர்த்தி பாய்வது போன்ற தோரணையில் நின்று கொண்டிருக்கும். சுமார் இருபதடி உயரம் கொண்ட சிலைகள். திறந்த வாயில் வரிசையான பற்கள் பளிச்சென்று தெரிவதற்காக அதில் கண்ணாடிகள் பதித்திருப்பார்கள். இரவு நேரம் நீங்கள் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் போது எங்கேயிருந்தாவது அந்தக் குதிரையின் முகத்தில் விழும் வெளிச்சத்தில் அந்தக் கண்ணாடிச் சில்லுகள் மின்னலடிக்கும். பார்க்கும் எவருக்கும் அடிவயிற்றில் ஏதோவொன்று புரண்டு படுக்கும்.

ஒரு குதிரையின் மேலே ஓங்கிய கத்தியோடு சுடலை… அந்த மேடையின் பின்புறமாக ஒரு பெரிய ஆலமரம்  – அதன் வயது நானூறு வருடங்கள் என்று சொல்லக் கேள்வி. காற்றடிக்கும் போது அதன் இலைகள் சலசலத்துக் கொள்ளும் – அது சிலசமயம், சலங்கைகள் குலுங்கும் ஒரு சப்தத்தை உண்டாக்கும். அதைத் தவிர்த்தால், ஆள் நடமாட்டமற்ற அமானுஷ்யமான ஒரு அமைதி அங்கே நிலவியது. மாலை மங்கியபின் யாருமே அந்தப் பக்கமாக வரத் துணிய மாட்டார்கள்.

நாங்கள் கூட்டாக புகை விட ஆரம்பித்த சற்று நேரத்திலேயே வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருளத் துவங்கியது. அப்போது, தூரத்தில் இரண்டு வெளிச்சப் பொட்டுகள் உருவாகி நெருங்கி வருவதைக் கவனித்தோம்.

“யார் அது? இந்த நேரத்தில இங்கெ ஏன் வாரான்?” வில்சனுக்கு லேசாக நடுக்கம் கொடுத்தது. எங்களில் அவன் கொஞ்சம் இளையவன் – பதினைந்து வயது தான். அவனது அப்பா வேதக்கோயிலில் ஊழியக்காரராய் இருந்தார். மகனுக்கு புகைப்பழக்கம் இருப்பது தெரிந்தால் வெளுத்து விடுவார்.

“யே.. சும்மா இருடே. மக்கா.. எல்லாரும் குதிரைக்குப் பின்னாடி மறைஞ்சி நில்லுங்கடே. நான் இங்கன நின்னு யார்னு பாக்கேன்” அவசரமாக பீடியைக் கீழே போட்டு அனைத்து விட்டு குதிரை முன்னங்காலின் கீழே அமைதியாக உட்கார்ந்தேன். அந்த வெளிச்சப் பொட்டுகள் நெருங்கி வரக் காத்திருந்தேன்.

அது ஒரு புத்தம் புதிய மாருதி கார். நேரே கோயிலின் முன்னே சாலையின் எதிர்பக்கமாக நின்றது.

“இங்க பாருங்கடே புதூ ப்ளசர் காரு… “ குதிரையின் பின்னிருந்து சந்திரன் கிசுகிசுக்கத் துவங்கியதை “ஷ்ஷ்ஷூ..” என்கிற எச்சரிக்கையால் அடக்கினேன்.

காரின் முன்னிருக்கையைத் திறந்து கொண்டு கீழே இறங்கியவரைப் பார்த்தேன். அது வள்ளியூர் அரசுப் பள்ளியின் ஹெச்.எம். அவரை எனக்குத் தெரியும். இங்கே எசக்கிவிளையில் தான் பெண்ணெடுத்திருந்தார். புதிதாகக் கார் வாங்கியிருப்பார் போலும், முதல் பூசை போட வந்திருக்கிறார்.  காரிலிருந்து இறங்கியவர் ஒரு கணம் குதிரை இருக்கும் பக்கமாக பார்வையை ஓட்டினார். சுடலை கோயிலின் மேலே ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது – வெளிச்சத்தைக் குவிப்பதற்காக அதன் மேலே ஒரு தகரக் கூம்பு இருக்கும். அந்தக் கூம்பின் திசை சாலையை நோக்கி இருந்ததால்,  நாங்கள் இருந்த திசையில் குறைவான வெளிச்சமே விழுந்தது. அதனால், என்னை அவரால் ஒரு நிழலுருவமாகத் தான் பார்க்க முடிந்தது.

“யார் அது…” குரல் கொடுத்து விட்டு தாமதித்துப் பார்த்தார். எனக்கு லேசாக பயம். கிட்டே அழைத்துப் பேசினால் பீடி நாத்தம் காட்டிக் கொடுத்து விடும். எனவே, அமைதியாக அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேன். சில நொடிகள் இங்கே பார்வையை ஓட்டியவர், காரைச் சுற்றிக் கொண்டு பின்னங்கதவைத் திறக்கச் சென்றார். அது தான் சமயமென்று சப்தமின்றி நான் குதிரையின் பின்னங் கால்களுக்குக் கீழே ஒண்டிக்கிடந்த நண்பர்களோடு போய்ச் சேர்ந்து கொண்டேன். இதற்குள் காரின் பின் கதவைத் திறந்தவர், தலையை உயர்த்தி குதிரையைப் பார்த்தார். பார்த்தவர் ஒரு கணம் துணுக்குற்றார். அவருக்குத் தெரிந்த ‘நிழலுருவத்தைக்’ காணவில்லை.

“யேட்டி.. நீ சித்த உள்ளயே இரு..” மனைவியிடம் வெளியே இறங்க வேண்டாமென்று சொல்லி விட்டு குதிரையிருக்கும் திசையையே வெறித்துப் கொண்டு நின்றார். அருகே நடந்து வரலாமென்று நினைத்திருப்பார். அந்த நேரம் பார்த்து லேசாக காற்று வீசியது. ஆலமரத்தின் இலைகள் மோதிக் கொண்டதில் சலங்கைச் சத்தம் உண்டானது. ஹெச்.எம்மின் உடலில் உண்டான நடுக்கத்தை இங்கிருந்தே காண முடிந்தது. அதற்குள் பையன்களுக்கும் லேசாக விவரம் புரிந்தது. கிராம்ஸ் மகன் மருதமுத்து கழுதைப் புலியைப் போன்ற ஒரு எக்காளச் சத்தத்தை எழுப்பினான்.

ஹெச்.எம் சர்வநிச்சயமாக பயந்து விட்டார். மனைவியையும் பிள்ளைகளையும் காருக்குள்ளேயே இருக்கச் செய்தவர் நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்து நான்கு சக்கரங்களின் கீழும் வைத்தார். கோயிலின் அருகிலேயே வராமல் சாலையின் எதிர்பக்கத்திலிருந்தே கையெடுத்துக் கும்பிட்டார். காரில் ஏறியவர் தலைதெறிக்கும் வேகத்தில் ஓட்டிச் சென்று மறைந்து விட்டார்.

நள்ளிரவு வரை பல்வேறு கதைகளைப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த நாங்கள் வீட்டுக்குச் செல்லும் போது மணி ஒன்றாகி விட்டது. அடுத்த நாள் நான் ஊரிலிருந்து கிளம்பி பாளையங்கோட்டைக்குச் சென்று விட்டேன். அது நான்காம் செமஸ்டரின் லீவு சமயம். அதன் பின் ஐந்தாம் செமஸ்டர் லீவில் நான் ஊருக்கு வரவில்லை – அடுத்தது கடைசி செமஸ்டர் என்பதால் ப்ராஜக்ட் வேலைகளை முடிப்பதற்காக ஹாஸ்டலிலேயே தங்கிக் கொண்டேன். இறுதி செமஸ்டர் லீவு துவங்கும் முன்பே கேம்பஸில் வேலை கிடைத்தும் விட்டதால் அப்படியே அங்கிருந்து தில்லிக்குச் சென்று விட்டேன்.

இடையில் வருடத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே ஊருக்குச் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. கூட்டாளிகள் அத்தனை பேரும் திசைக்கொருவராய் விசிறியடிக்கப்பட்டு விட்டனர். ஜெபராஜி பம்பாய் சென்று விட்டான்; சந்திரன் சென்னை; கிராம்ஸ் வேலையெல்லாம் சரிப்பட்டு வராது என்பதால் மருதமுத்துவின் அப்பா அவனுக்கு திருநெல்வேலி பஜாரில் ஒரு கடை வைத்துக் கொடுத்துள்ளார்.  அவன் பக்கத்தில் கண்டித்தான்குளத்தில் பெண்ணெடுதிருப்பதால் இங்கே அதிகம் வருவதில்லை என்றார்கள்.

ஆனால், ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் ஒரு முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ஐந்து வருடத்திற்கு முன் நம்பியாற்றின் குறுக்கே ஒரு கல்பாலம் கட்டி முடித்தனர். அங்கேயிருந்து ஊர் வரைக்கும் சிமெண்டு சாலை அமைத்தனர். நான்கு வருடத்திற்கு முன் முதன் முறையாக ஊருக்கு பஸ் வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக  ஒவ்வொரு வீட்டின் மேலும் சன் டைரக்ட் டிஷ் ஆண்டெனா முளைத்து வருகிறது. இன்னும் செல்போன் டவர் வரவில்லை. கண்ணூரில் ஒன்றும் துலுக்கப்பட்டியில் ஒன்றுமாக சுற்று வட்டாரத்தில் இரண்டு டவர்கள் இருக்கிறது. கொஞ்சம் உயரமான இடத்தில் நின்றால் சிக்னல் கிடைக்கிறது.

முக்கியமானது – எசக்கிவிளை சுடலைமாடன் பெரும் புள்ளியாகியிருந்தார். சுடலைமாடனின் சக்தி சகல திசைகளிலும் பரவியுள்ளது. ஒரு கோயில் கொடையென்றால் சுமாராக பத்தாயிரம் பேர் வரை கூடுவதாக அப்பா சொன்னார். ஆனால், எப்படி இந்த திடீர் பிரபலம் என்பது தான் எனக்கு விளங்கவில்லை – சமீபத்தில் சந்திரன் கல்யாணத்திற்கு ஊருக்குப் போகும் வரை.

சந்திரன் கலியாணத்திற்கு எங்கள் பழைய செட் எல்லோரும் ஒன்று சேர்ந்தோம். அதே பழைய சேட்டைகளை ஓரிரு நாட்களுக்கு அரங்கேற்றிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம். காலை கிராம்ஸின் கினற்றில் குளியல், அப்புறம் ஜெபராஜின் வயலில் நின்ற பனைமரத்திலிருந்து பனம்பழங்களைப் பறித்துத் தின்றோம், மதியம் வள்ளியூரில் சினிமா, அப்புறம் மாலை வரை ஊரெல்லாம் சுற்றி வந்து விட்டு இரவு சுடலைமாடன் கோயிலில் திருட்டு தம் என்று முடிவு செய்தோம்.

கோயிலை பிரம்மாண்டமாக எடுத்துக் கட்டியிருந்தனர். மூன்றாவதாக ஒரு குதிரையை நிர்மாணித்திருந்தனர். மேடை இன்னும் விசாலமாயிருந்தது. முகப்பில் “ஸ்ரீ ஸுடலை மாடஸ்வாமி” என்று ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. கோயிலின் முன்னே இருந்த சிமென்டு சிற்பத்தில் சுடலைமாடனின் முகத்தில் வழக்கமாக இருக்கும் ஆக்ரோஷம் மிஸ்ஸிங். நாங்கள் எங்கள் வழக்கமான மேடையில் அமர்ந்தோம்

இப்போது ஜெபராஜி பில்டர் கோல்டுக்கு முன்னேறியிருந்தான். ஆளுக்கொன்றைப் பற்றவைத்தோம்.

“யே…யப்பா, இந்தக் கோயிலுக்கு வந்த வாழ்வப் பாத்தியளாடே” என்னால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

“யேல மக்கா.. சொடல மாடன் இப்ப பெரும்புள்ளியானதுக்கு நீயும் ஒரு காரணம் தெரியுமாடே?” ஜெபராஜி சிரித்துக் கொண்டே சொன்னான்.

“என்னலெ சொல்றிய?”

“ம்ம்ம்…. உனக்கு தெரியாதுல்லா… கடேசி திருப்பு நாமெல்லாம் ஒரே செட்டா சேர்ந்து இங்கன பீடி அடிச்சது ஞாபகம் இருக்கா?”

“ஆம்மா… அதுக்கு என்ன?”

“அப்ப வள்ளியூர் ஹெச்.எம் புது ப்ளசர்ல வந்தார்லா..?”

“ம்.. சொல்லு”

“அப்ப உன்னிய இருட்டுல பாத்துட்டு ஏதோ உருவம்னு பயந்தாரே… அதுல இருந்து தான் சொடல மாடனுக்கு வாழ்வே ஆரம்பிச்சது”

எனக்கு விஷயம் சரியாகப் புரியவில்லை.  “… வெட்டி வெட்டிச் சொல்லாதடே.. ஒரே நேரா கதை என்னான்னி சொல்லி முடியேன்” ஜெபராஜி சொல்ல ஆரம்பித்தான்.

அன்றைக்கு இரவு என்னைப் பார்த்து பயந்து விட்ட ஹெச்.எம், அடுத்த நாள் திரும்ப கோயிலுக்கு வந்துள்ளார். பூசனைப் பார்த்து இரவு வேளைகளில் இந்தப் பகுதியில் சுடலையின் நடமாட்டம் இருப்பதாகவும், ஆட்களை உருத்து உருத்துப் பார்ப்பதாகவும் சொல்லி இருக்கிறார். கோயிலை ஏனோதானோவென்று அலட்சியம் செய்யாமல் சுத்த பத்தமாக பராமரிக்க வேண்டுமென்று பூசனிடம் எச்சரித்துள்ளார். அதையே கிராம்ஸிடமும் சொல்லியிருக்கிறார். இந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக கிராமம் முழுக்கப் பரவியுள்ளது.

ஒவ்வொருவனும் அடுத்தவனிடம் கதையைச் சொல்லும் போது கொஞ்சம் சொந்த சரக்கையும் சேர்த்துப் பரப்பியுள்ளனர். இப்போது, சுடலை மகாப் பெரிய உருவம் கொண்டவர், சுடலையின் நிறம் கருப்பு, கையிரண்டும் இரண்டு பனை மரம், காலிரண்டும் இரண்டு தென்னை மரம், ஓங்கிய கையில் மிகப் பெரிய கருக்குப் பட்டையம் வைத்திருப்பார், சுடலையிடம் பொய் சொன்னால் இரவு நேரே வீட்டுக்கே வந்து ரத்த பலி வாங்கி விடுவார், ராத்திரி மலையாள குட்டிச்சாத்தான் சுடுகாட்டில் பிணத்தைத் திருடித் தின்னாமல் சுடலை தான் காத்து நிற்கிறார், இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் சுடலை குதிரை மேலேறி கிராமத்தை வலம் வருகிறார், அப்போது எதிர்பட்டவர்கள் ரத்தம் கக்கிச் சாகிறார்கள், சுடலைக்கு நேர்ந்து கொண்டு காசு முடிந்து வைத்தால் நினைத்தது நடக்கும், தீராத வியாதிகள் தீர்ந்து விடும் – இப்படியாக ரகம் ரகமான கதைகள் பேசப்பட்டு பரவியிருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கதைகள் அக்கம் பக்கத்தைத் தாண்டிப் போனதால் சுடலை இந்த வட்டாரத்திலேயே இப்போது பெரும் வி.ஐ.பி அந்தஸ்தை பெற்றிருக்கிறார். மக்கள் அள்ளித்தந்த காசில் கோயிலும் சுடலையும் இவர்களோடு சேர்ந்து பூசனும் நன்றாக வளர்ந்திருக்கிறார்கள்.  பூசன் சில மாதங்களுக்கு முன்பு தான் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக் ஒன்றை வாங்கினானாம். ஓட்டத்  தெரியாமல் ஒரு வாரம் முழுக்க உருட்டிக் கொண்டே அலைந்திருக்கிறான்.  இரவு நெடுநேரம் கதை பேசி விட்டு சுடலை கிராம உலா தொடங்கும் சமயத்தில் வீட்டுக்குக் கிளம்பினோம். விடிந்தால் சந்திரன் கலியாணம்.

சந்திரன் கலியாணம் முடிந்த அடுத்த நாள் நான் ஊருக்குக் கிளம்பினேன். பஸ் ஏற்றி வழியனுப்ப ஜெபராஜியும் உடன் வந்திருந்தான். சுப்பையா அண்ணாச்சி கடையில் டீ குடித்துக் கொண்டு நின்றோம். திடீரென்று ஜெபராஜின் முகத்தில் ஓரு பிரகாசம்,

“அந்நா பாருடே.. திடீர் சாமியாரு வாராரு”  ஜெபராஜின் விரல் நீண்ட திசைக்குத் திரும்பினேன். தொலைவில் ஒரு மனிதர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். பெண்களுக்கு இருப்பதைப் போல் தலை நிறைய முடி, முகத்தில் அடர்த்தியான தாடி – அது மார்பு வரை வளர்ந்திருந்தது.

“ஆள் யார்னு தெரியுதாடே” ஜெபராஜி கேட்டான்.

“தெரியலையே மக்கா… யார் இவன், ஊருக்குப் புதுசா?”

“இதாம்ல நம்ம பூசன்.. எப்படி ஆளே மாறிட்டான் பாத்தியா?” அதற்குள் அந்த வண்டி எங்களுக்கு சமீபமாய் வந்திருந்தது.

“யேல.. பூசா… இங்க வாலெ” நான் கைதட்டி சப்தமாய்க் கூப்பிட்டேன். எங்களைக் கடந்த வண்டி ஒரு கணம் தயங்கி ஒரு யு-டர்ன் அடித்து கிட்டே வந்தது. பூசனின் உடல்வாகு  அப்படியே தானிருந்தது. ஆனால் அதில் ஒரு தேஜஸ் சேர்ந்திருந்தது. கழுத்தில் இரண்டு ருத்திராட்ச மாலையும் ஒரு ஸ்படிக மாலையும் தொங்கியது. மேலே சட்டையணியாத உடலில் குறுக்கு வாக்காக ஒரு காவித் துண்டை கட்டியிருந்தான்.  தாடிக்குளிருந்து சொற்பமாக எட்டிப் பார்த்த பூசனின் முகத்தில் ஒரு சங்கடம் பரவியிருந்தது. கிட்டே வந்தவன் கிசுகிசுத்த குரலில்,

“நான் இப்பம் பூசாரி சாமியாடின்னி ஆளாயாச்சிவே.. ஆட்கள் முன்னாடி ‘ஏல வாலெ போலென்னி’ கூப்பிடாதவே.. சரி நான் வாரன் பெறவு பாப்பம்” விருட்டென்று கிளம்பினான்.

“ஆள் எப்படி மாறிட்டான் பாத்தியாடே” ஜெபராஜி முணுமுணுத்தான். ஆம் நிறைய மாறித்தான் போயிருக்கிறான். ஒன்றே ஒன்றைத் தவிற – இப்பவும் பயல் பல்லு விளக்குவதில்லை.

_______________________________________________________

மாடசாமி.
(உண்மைச் சம்பவம். ஊர், பெயர் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது.)

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பூக்காயம்…

18

பூக்களை சும்மா
புகழ்ந்து தள்ளாதீர்கள்
ரெண்டுவேளை பாடுக்காய்
மணிக்கணக்கில் பூ கட்டி
நகக்கணுக்கள் வலியெடுக்க
அதைவிட பயங்கர ஆயுதம்
அப்போது வேறேதுமில்லை.

மல்லிகையை சரம் தொடுத்து
மரிக்கொழுந்தை காம்பொடித்து
சில்லரைக்கு ஏங்கி நிதம்
வெய்யலிலே காய்கையிலே
மனம் வாடும், பூ சுடும்.

கருவகுச்சி ஒடிச்ச கையில்
கனகாம்பரம் கட்டும்போது
உரசும் பூ இதழ்கள்
உள்ளங்கையை நோகடிக்கும்.

முல்லரும்பு எனக்கூவி
முடுக்கெல்லாம் சுற்றி வந்து
நல்லவிலை விற்பதற்குள்
நாடி நரம்பெல்லாம் – பூ வலிக்கும்.

ஈரவிறகை ஊதி ஊதி
இடையிடையே பூத்தொடுத்து
சோறுதிங்க கையெடுத்தால்
பூவாசம் குமட்டும்.

தண்ணீர் தெளித்துவைத்து
தருகின்ற பூக்களெல்லாம்
கண்ணீரால் கட்டியதால்
கசங்காமல் இருக்குதென்று
காரணம் அறிவீரா!

பூத்தொடுக்கும் போதே
முரண்டு பிடிக்குது மொட்டுகள்
வாழ்க்கை போர் தொடுத்த போதும்
பொறுமையாய் இருக்கச் சொல்லி
யாரும் எங்களுக்கு பூ சுற்ற வேண்டாம்.

_________________________________

•துரை. சண்முகம் ( புதிய கலாச்சாரம், ஜனவரி’1997 )
படம் – நன்றி – ஜோ

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ

5

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-3

கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி ராஜூ அவர்கள் தனியார் மயக் கல்வியை ஒழித்துக் கட்டுவோம்என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புகள்.

______________________________________

போராடினால்தான் உரிமைகள் நமக்கு கிடைக்கும், மனு போட்டால் கிடைக்காது’ என்று உணர்த்தியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் போராட்டம். ஆனால் போராடினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தினர் காவல் துறையும் அதிகார வர்க்கமும்.

அப்படி என்ன கேட்டு விட்டோம்? ‘காசு வாங்காம ஆனா ஆவன்னா, ஏபிசிடி சொல்லித் தரக் கேட்டோம்’ அவ்வளவுதான்.  பெரிய பெரிய அரசியல் சட்ட அறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இருக்கும் நாட்டில்தான் உரிமைகளை கேட்டாலே அடி உதை, சிறை என்று நடக்கிறது. தமது உரிமைகளை அடைந்தே தீருவது என்று யாராவது போராடினால், அவர்களுக்கு அடி, உதை, சிறைவாசம்.

தனியார் மயத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் அனைவருக்கும் எப்படி போராட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக புமாஇமுவின் போராட்டம் திகழ்கிறது. போராடும் மக்கள் எல்லாம் ‘புமாஇமு போல போராட வேண்டும்’ என்று சொல்லப் போகிறார்கள். இந்த ஆண்டு 200 பேர் போய் டிபிஐயை முற்றுகை இட்டீர்கள். அடுத்தபடியாக 2000 பேர் சட்டசபையை முற்றுகை இட்டால் என்ன செய்வார்கள்? அப்படி ஒரு வீரமிக்க போராட்டம் நடக்கும் போது உங்களுக்கு துணையாக மறுகாலனியாதிக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் ஆடு மாடு ஓட்டிக் கொண்டு வருவார்கள்.

இப்போது, தனியார் கல்வி முதலாளிகளின் நலனுக்காக பல துறைகளும் வளைந்து கொடுக்கின்றன.

பொறியியல் கல்லூரிகளில் ஆட்சேர்ப்பை அதிகரிக்க இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தாரளமாக மதிப்பெண் போடச் சொல்லியிருந்தார்களாம். ஏ சி சண்முகம், உடையார், ஜேபிஆர், போன்ற கொள்ளையர்கள் கல்வித் துறையில் தனிக்காட்டு ராஜாக்களாக செயல்படுகிறார்கள். நன்கொடை 5 லட்ச ரூபாய் என்று சொன்னதும், போய் சொத்துக்களை வித்து, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்தால், பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை கொடுக்கிறார்கள்.

அப்படி தனியார் முதலாளிக்கு கொண்டு கொடுக்க ப சிதம்பரம் வங்கிகளில் கல்விக் கடன் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அது கடன் இல்லை, தனியார் கல்வி முதலாளிக்கு கொடுக்கும் மானியம். ஆனால், படித்து முடித்த பிறகு கடன் கட்டவில்லை என்றால் வாங்கிய மாணவனைத்தான் பிடிப்பான்.

எல்லோர்க்கும் ஒரே பாடத் திட்டம் என்றால் ஏன் இன்னமும் மெட்ரிக் என்று பெயர் வைத்திருப்பதை ஏன் தடை செய்யவில்லை? அப்படி சிறப்பான பெயர் வைத்திருந்தால்தான் மக்களிடம் சிறப்புக் கட்டணம் என்ற பெயரில் பணம் பிடுங்க முடியும். சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள், மக்களைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும். ஆனால் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நட்டம் வந்து விடுமே என்று யோசிக்கிறார்கள்.

1950 அரசியல் அமைப்புச் சட்டம் 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதாவது 8வது வரை கல்வி. அதற்குப் பிறகு, +2 வரை, கல்லூரி படிப்புக்கு உத்தரவாதம் வழங்கவில்லை. 2002-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்தில் 6 வயதுக்கு மேல் 14 வயதுக்குள் கல்வி உத்தரவாதம் என்கிறார்கள். 6 வயதுக்கு முந்தைய கல்விக்கு யார் பொறுப்பு?

இருக்கிற சட்டங்களையும் தனியார் கல்வி முதலாளிகள் மதிப்பதில்லை. ‘தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று சொன்னீங்களே, வாங்கித் தா’ என்று காங்கிரஸ்காரர்களை என்று உலுப்ப வேண்டும். ‘உங்க அம்மா ஆட்சியிலதானே சிங்கார வேலர் கமிட்டி அறிக்கை வந்தது, அதை நடைமுறைப் படுத்து’ என்று அதிமுக காரர்களை இழுக்க வேண்டும்.

எல்கேஜி வகுப்புக்கு 25,000 கட்டணம் என்கிறார்கள். அதில் நீச்சல், குதிரையேற்றம் கற்றுக் கொடுப்பேன் என்கிறார்கள். ‘கட்டணத்தை ஒரே தவணையில் கட்டினால் ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் இலவசம்’ என்கிறார்கள். ‘கல்வியோடு செல்வமும் தருகிறோம்’ என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.  வீட்டுமனை போல பள்ளிக்கு விளம்பரம் செய்கிறார்கள். பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும் போது நான்கு தூண்கள்தான் இருக்கின்றன, வேறு எந்த வசதியும் இல்லை. மாணவர்களிடம் வசூல் பண்ணித்தான் கட்டிடம் கட்டப் போகிறார்கள்.

பெற்றோர்களும் தனியார் கல்வி என்ற மாயையில் சிக்கியிருக்கிறார்கள். கடனை உடனை வாங்கி நர்சரி பள்ளியில் பையனை சேர்த்ததும், அவனை செட்டில் செய்து விட்டதாக பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அவன் வளர்ந்து பெரிய படிப்பு படித்து நிறைய சம்பாதிப்பதற்கான அடிப்படையாக அதை கருதுகிறார்கள்.

ஒரு தனியார் பள்ளியில் வகுப்பும் தங்கும் இடமும் ஒன்றாக இருந்தது. ஏமாளி பெற்றோர்களிடமிருந்து இல்லாத ஹாஸ்டலுக்கு பணமும் வாங்கிக் கொண்டார்கள் . பகலில் தங்குமிடத்தில் வகுப்பு நடக்கும், மாலையில் வகுப்பறை தங்குமிடமாகி விடும். அழுத்தம் தாங்காமல் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். பெற்றோர்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

தலைமை கல்வி அதிகாரி ‘தங்கும் விடுதி தொடர்பாக உத்தரவு போட தனக்கு அதிகாரம் இல்லை’ என்றார். பள்ளியைப் பற்றி உத்தரவு போடத்தான் அதிகாரம், தங்குமிடத்தைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியவில்லை. கடைசியில் போராடும் பெற்றோர்களை சமாதானப்படுத்த ‘5.30க்கு மேல் மாணவர்கள் யாரும் பள்ளியில் யாரும் தங்கக் கூடாது’ என்று சொல்ல தமக்கு அதிகாரம் இருப்பதாக அப்படி உத்தரவு போட்டார். இப்போது மாணவர்களை  ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைத்திருக்கிறார்கள்.

சிதம்பரம் காமராசர் மெட்ரிக் பள்ளி தாளாளர் தான் சொல்வதுதான் சட்டம் என்கிறார். கூடுதல் கட்டணம் கட்டாத மாணவர்களை அரியர் மாணவர்கள் என்று தனியாக உட்கார வைத்தார்கள். அதை எதிர்த்து ஐஎம்எஸ், டிஎம்எஸ், டிஈஓ, சிஈஓ என்று எல்லாருக்கும் மனு போட்டோம். கடைசியில் கேட்டை மூடி உள்ளிருப்பு போராட்டம் ஆரம்பித்தோம்.

நாங்கள் வெளியில் உட்கார்ந்திருக்க மாவட்ட காவல் அதிகாரி ஒரு ஐபிஎஸ் அதிகாரி அந்த பள்ளிக் கூட தாளாளருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். நள்ளிரவு வரை பேசுகிறார். ‘சட்டத்தை மீறிய தாளாளரை கைது செய்ய வேண்டியதுதானே’ என்று கேட்டால், ‘அடுத்த நாள் பிரித்து உட்கார வைப்பதில்லை என்று உறுதி சொல்லியிருக்கிறார். அதை செய்யா விட்டால் கைது செய்வோம்’ என்றார். அதன் பிறகுதான் பள்ளி நிர்வாகம் பணிந்தது.

தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவு போட முடியவில்லை, பள்ளிக் கல்வி இயக்குனராலேயே முடியவில்லை. பெற்றோர் சங்கத்தை இன்னும் வலுவாக்கி போராடச் சொல்கிறார்கள். ‘போய் கலெக்டரை பாருங்க அவருக்குத்தான் எல்லா அதிகாரமும்’ என்றார்கள். கலெக்டரை பார்க்கப் போனால் மாலை வரை காத்திருக்க வைத்து பேசினார். ‘பள்ளிக் கூடத்து ஆள் ஒருத்தன் இருந்தான் அவன் போன பிறகு பேசலாம் என்றுதான் மாலை வரை காத்திருக்க வைத்தேன்’ என்கிறார். அவனைக் கண்டு இவருக்கு அவ்வளவு பயம். ‘நீங்க போங்க நான் ஏதாவது ஒரு வழி செய்கிறேன்’ என்றார். அப்புறம் தொலைபேசி கேட்டால், நீங்க அதிகாரிகளை harass செய்றீங்க என்கிறான்.

ஒவ்வொரு தடவையும் போராட்டம் நடத்துறீங்க என்று அலுத்துக் கொள்கிறார்கள். எல்லா ஊரிலும் இது சாத்தியமா? டவுட்டனில் கூடுதல் கட்டணம் கொடுக்க மறுத்தவங்களுக்கு டிசி கொடுத்தான். அப்படி கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பள்ளி இறுதித் தேர்வுகளில் டாப் 10ல், 50ல், இடம் பிடிக்க 100-150 பேருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார்கள். மீதி 900 பேர் பாஸானால் போதும். அகர வரிசையை புறக்கணித்து அந்த 150 பேரையும் ஒரே ஹாலில் உட்கார வைக்கிறார்கள். திருவண்ணாமலை செயின்ட் பால் பள்ளியில் பிட்டு கொடுத்து மாட்டியது போல பல பள்ளிகளில் நடக்கிறது.

ரிசல்ட் வந்த அன்று விளம்பரம், பெப்சி கோக் போல படம் போட்டு பிராண்ட் அம்பாசடர்களாக மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். உழைக்கும் மக்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் வாங்கியதை எழுதி மேல் படிப்புக்கு நிதி உதவி செய்யும் படி பத்திரிகைகளில் கேட்கிறார்கள்.

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நாமக்கல் பள்ளிகள் பற்றிய விவாதம். அதில் ஒரு மாணவன் ‘நாங்கள் எந்திரங்களாக மாறி விட்டோம், ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பதில்லை, அருகில் இருக்கும் இருபாலர் பள்ளி மாணவிகளைப் பார்த்து பேசக் கூட நினைத்ததில்லை’ என்கிறான் அதற்கு ஒரு எதிர் தரப்பிலிருந்து ஒருவர் ‘தம்பி நீ இரண்டு ஆண்டு கஷ்டப்பட்டுட்டா சீட் வாங்க தனியார் பொறியியல் கல்லூரிக்கு 20 லட்சம் கொடுக்க தேவையில்லாமல் அரசு கோட்டாவில் கிடைத்து விடும்’ என்கிறார்.  20 லட்சம் மிச்சப்படுத்த இங்கே 2 லட்சம் கொடுத்து விடுகிறார்கள். நடுவில் ஒரு மனிதப் பிறவி இருக்கிறது என்பதை யோசிப்பதே இல்லை.

என்ன நோக்கம், அதிக மார்க் எடுக்க வேண்டும் என்பதுதான். +2 படிப்பவன் காலை முதல் மாலை வரை எழுதி எழுதி படிக்க வேண்டும் என்கிறார்கள். வாத்தியாரும் மனப்பாடம் செய்து பாடம் நடத்துகிறாராம். ஒரு ஆசிரியர் கணக்கு வகுப்பில் கணக்கை கடைசி வரை எழுதிப் போட்டு விட்டார், விடையும் வந்து விட்டது, ஆனால் நடுவில் இரண்டு ஸ்டெப் காணவில்லை.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூலி வேலை செய்வதற்காக தயாரித்து விடுவதுதான் இன்றைய கல்வியாக இருக்கிறது. கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றுவதை தடுக்க வேண்டும். ஒரு மனிதனின் ஆளுமையை செதுக்குவது கல்வி.

தனியார் கல்வியால் அந்த நோக்கம் நிறைவேறப் போவதில்லை. சமச்சீர் கல்வி பாடத் திட்டம் போட்டால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை போகிறார்கள் தனியார் பள்ளி முதலாளிகள். கடைசியில் நீதிமன்றம் தீர்மானித்தது ‘தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் உண்டா இல்லையா’ என்பதை மட்டும்தான். யார் பெரியவன் என்பதைப் பற்றிதான். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைப் பற்றி நீதிமன்றம் எதுவும் பேசவில்லை.

காமராசர் காலத்தில் கல்விக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டது, அது இப்போது 14% ஆக குறைந்திருக்கிறது. மக்களைப் பற்றி கவலைப் படாத அரசையும், அரசியல் தலைவர்களையும் என்ன செய்வது? ஒரே உத்தரவில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி கொடுக்கச் ஏற்பாடு செய்கிறார்கள், கல்வி உரிமைக்கு 1950 முதல் இன்று வரை எதுவும் செய்யவில்லை. அப்படி செய்யாமல் தள்ளிப் போடுவது கிரிமினல் குற்றம்.

தனியார் மயத்தை அனைத்து துறைகளிலும் ஒழிக்க கல்வி தனியார் மய ஒழிப்பு முன்னோடியாக இருக்க வேண்டும்.

________________________________________________________

– வினவு செய்தியாளர்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

1

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-2

கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் பேரா லஷ்மி நாராயணன் பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளியின் தேவைஎன்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து சில குறிப்புகள்.

பேராசிரியர் லஷ்மி நாராயணன் அகில இந்திய கல்வி உரிமை அமைப்பின் கல்வி பாதுகாப்புக் குழுவின் ஆந்திர மாநிலத் தலைவராகவும் செயல்படுகிறார்.  2010ம் ஆண்டு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது அந்த நாளை கறுப்பு நாள் என்று பிரகடனம் செய்து அதை எதிர்த்து போராடிய முன்னோடிகளில் ஒருவர்.

___________________________________________

புரட்சிகர மாணவர்-இளைஞர் மாணவர் முன்னணி நடத்தும் கல்வியில் தனியார் மயமாக்க எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கல்வியில் தனியார் மயத்தை ஒழிப்பது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்.

இந்த மாநாட்டு நடக்கும் சென்னைக்கு ஒரு சிறப்பான வரலாறு உண்டு. 1950களில் ஈவேரா பெரியார் அவர்கள் அரசு பள்ளிகள் மூடப்படுவதை எதிர்த்து வீரமிக்க போராட்டம் நடத்திய மண் இது. அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி நிதி பற்றாக்குறையின் காரணமாக அரசு பள்ளிகளை மூடுவதாக அறிவித்தார். ‘மாணவர்கள் அரை நாள் பள்ளிக்கு வந்தால் போதும், அரை நாள் வேலைக்கு போகட்டும், தம் பெற்றோரின் சாதித் தொழிலை செய்யட்டும்’ என்று சொன்னார். குலக்கல்வி என்று அழைக்கப்படும் அந்த பிற்போக்குக் கொள்கையை எதிர்த்து பெரியார் அன்றைய சட்டசபைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்படி அரசு பள்ளிக்காக அன்றே போராடிய மண்ணிது.

இப்போது மத்திய அரசும், மாநில அரசும், கல்விக்கும், மருத்துவத்துக்கும், குடிநீர் வழங்குவதற்கும் பணம் இல்லை என்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்குவதில் நடந்த ஊழலில் கல்மாடி பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தார். ஆந்திராவில் ராஜசேகரரெட்டியும் சந்திர பாபு நாயுடுவும் மாற்றி மாற்றி கொள்ளை அடித்தார்கள். ‘ராஜசேகர ரெட்டி எப்படி 1 லட்சம் கோடி சம்பாதித்தார்?’ என்று சந்திரபாபு நாயுடு கேட்கிறார். ‘ஏன் சம்பாதித்தாய்?’ என்று கேட்கவில்லை, ‘எப்படி சம்பாதித்தாய்?’ என்றுதான் கேட்கிறார். அந்த விபரங்கள் தெரிந்தால் தானும் வாய்ப்பு கிடைக்கும் போது அதே போல சம்பாதிக்க வசதியாக இருக்கும் என்றுதான் அப்படி கேட்கிறார்.

ஆ ராசா முதலியவர்கள் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தினார்கள். அந்தப் பணத்தை கல்வித் துறையில் செலவிட்டிருந்தால், நாட்டில் படிப்பறிவின்மையை இல்லாமல் ஒழித்திருக்க முடியும்.

அரசாங்கம் என்பது அதிகார வர்க்கத்துக்கான கருவியாக செயல்படுவதுதான். அவர்கள் பொதுமக்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. இந்து பரம்பரையில் மனுவாதி தர்மத்தின் கீழ் சாதியின் பெயரால் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது, ஆங்கிலேயர் ஆட்சிக்குப் வந்த பிறகு அவர்கள் நினைத்திருந்தால் வெகு விரைவில் நாட்டில் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்திருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அப்படி ‘மக்கள் அனைவரும் கல்வி பெற்று விட்டால், தங்களது ஆட்சி 20 ஆண்டுகள் கூட நீடிக்க முடியாது, மக்களால் தூக்கி எறியப்பட்டிருப்போம்’ என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

அதே உள்நோக்கத்துடன்தான் 1947க்குப் பிறகு மத்தியிலும் மாநிலங்களிலும் அரசு நடத்திய காங்கிரஸ், பிஜேபி, சிபிஎம், சிபிஐ பிரதிநிதித்துவப்படுத்திய அதிகார வர்க்கமும் செயல்படுகின்றன. சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளுக்குப் பிறகு 66% மக்கள் மட்டுமே கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். ஏழைகளில் 5% பேர்தான் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள். 95% ஏழை மாணவர்கள் போதுமான கல்வி அறிவு பெறாமலேயே இருந்து விடுகிறார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரமான கல்வி அளிப்பதை சாத்தியமாக்க பொதுப்பள்ளி முறை உருவாக்கப்பட வேண்டும். எல்லாக் குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு போக வேண்டும். பொதுப்பள்ளியை கொண்டு வர வேண்டுமானால் தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்.

1970கள் வரை அரசு பள்ளிகள்தான் செயல்பட்டன, கூடவே அரசு உதவி பெறும் பள்ளிகள் நடத்தப்பட்டன. 1970களுக்குப் பிறகுதான் தனியார் மயம் ஆரம்பித்தது. 1971ல் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பால் எண்ணெய் விலை கடுமையாக ஏறி மேற்கத்திய முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியது. 400 முதலாளித்துவ வரலாற்றில் அது ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொன்றுக்கு தள்ளாடிதான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பொருளாதார அறிஞர் மில்டன் ்பிரீட்மேன், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் போன்றவர்கள் திட்டம் வகுத்து தனியார் மயத்தை பரவலாக அமல் படுத்தும் கொள்கைகளை செயல்படுத்தினார்கள். இந்த சீர்திருத்தங்கள் உலகின் பிற நாடுகளுக்கும் புகுத்தப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக கல்வியில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டது. வியாபாரிகள், சாராய முதலைகள், மடம் நடத்தும் சாமியார்கள் எல்லாம் கல்வித் தந்தை ஆனார்கள். இப்போது அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள்.

1990களில் தனியார் மயத்தை எதிர்த்து உலகமெங்கும் மக்கள் போராட ஆரம்பிக்க செயல் உத்தியை மாற்றி பொதுத்துறை-தனியார் துறை கூட்டமைப்பு என்று ஆரம்பித்தார்கள். அதன் உண்மையான பொருள் நட்டம் பொதுத் துறைக்கு, லாபம் தனியாருக்கு என்பதுதான். உதாரணமாக ஆந்திராவில் 700க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன, அவர்கள் அரசிடமிருந்து 4000 கோடி ரூபாய் மானியமாக பெறுகிறார்கள்.

பொதுத்துறை-தனியார் துறை கூட்டு என்பது முழுக்க முழுக்க தனியார் மயத்தை கொண்டு வருவதுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு மட்டுமின்றி உள்நாட்டு கட்டமைப்பு, குடிநீர், மருத்துவத் துறை என்று அனைத்து கொள்கை ஆவணங்களிலும் தனியார்-பொதுத் துறை கூட்டு முயற்சி என்பது இடம் பெறுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கொள்கையின் அடிப்படையில் தனியார் முதலாளிகளுக்கு நிலம், நீர் இலவசமாக கொடுத்து, வரி கட்ட வேண்டியதில்லை என்று சலுகை கொடுக்கிறார்கள். அதன் மூலம் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து வெளி வர முயற்சிக்கிறார்கள். அதே போன்றுதான் பொதுத்துறை-தனியார் துறை பங்களிப்பில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பொதுச் செலவில் நிலம் கொடுத்து, பணம் கொடுத்து தனியார் லாபம் சம்பாதிக்க வழி செய்யப் போகிறார்கள்.

நான் ஏன் பொதுப்பள்ளி மற்றும் அருகாமைப் பள்ளி வேண்டும் என்று சொல்கிறோம்? ஏனென்றால் அதுதான் சமத்துவத்தை உறுதிப் படுத்தி சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.

பொதுப்பள்ளி கோரிக்கையில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன.

அ. கல்வியின் அளவு

– கல்வி பெறும் உரிமை சட்டம் கல்வியை கடைப்பொருளாக மாற்றுவதை அங்கீகரிக்கிறது.

– ஆறு வயதுக்கு முந்தைய இளம் பருவ கல்விக்கான பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கிறது.

பணக்காரர்களின் குழந்தைகள் இரண்டு வயதிலேயே பள்ளிக்கு அனுப்பப்படும் போது,  ஆறு வயதுக்கு மேல் பள்ளிக்கு வரும் உழைக்கும் மக்களின் குழந்தைகள் இடைவெளியை எப்படி சமன் செய்ய முடியும்?

– எட்டாம் வகுப்புக்குப் பிறகு கல்வி பெறும் உரிமையில் அரசுக்கு பொறுப்பு இல்லை.

ஆ. கல்வியின் தரம்

ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற உத்தரவாதத்தை கல்வி பெறும் உரிமை சட்டம் வழங்கவில்லை. ஆரம்பப் பள்ளியில் ஐந்து வகுப்புகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் தர மாட்டார்கள். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் 90 மாணவர்கள் வரை படிக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

மல்டிகிரேட் டீச்சிங் என்ற உலக வங்கி உருவாக்கிய உத்தியின் மூலம் ஒரே ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பாடம் நடத்துவது என்று திட்டமிடுகிறார்கள். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆய்வுக் கூட வசதி வழங்குவதைப் பற்றிப் பேசவில்லை.

ஒரே ஆசிரியர் 3 மொழிகளை கற்பிக்க வேண்டும் என்கிறார்கள். தாய் மொழி, ஆங்கிலம், இந்தி மூன்றையும் ஒரே ஆசிரியர் கற்பிக்க வேண்டும்.

இ. கல்வியின் உள்ளடக்கம்:

– மக்களின் தேவைகளுக்கான கல்வியாக இருக்க வேண்டும்

– உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனைகளை பேசும் கல்வியாக இருக்க வேண்டும்

– அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பேசுவதாக கல்வி இருக்க வேண்டும்.

இதுதான் சமூக மாற்றத்துக்கு தேவை. கல்வி தனியார் மயத்துக்கு எதிராக போராடுபவர்கள் சோசலிச புரட்சி வந்த பிறகுதான் மாற்றம் சாத்தியம் என்று சொன்னால் இப்போதைய அதிகார வர்க்கத்துக்கு மகிழ்ச்சிதான். புரட்சியை நோக்கிய போராட்டமாக பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறையை கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

1. தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

2. தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்

3. அரசு பள்ளிகளை மேம்படுத்துதல் வேண்டும்.

இதற்கு பிறகு பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை செயல்படுத்த முடியும்.

இறுதியாக, கல்வி உரிமைக்காக போராடிய சிறு குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், தோழர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்த பணக்காரர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால், எந்த சொத்தும் வைத்திராத பகத்சிங் மக்களின் நினைவில் நிற்கிறார். பகத் சிங் போல போராடுங்கள். நீங்கள் வீரமிக்க போராட்டங்களை நடத்தும் போது நாங்களும் எங்கள் கரங்களை உங்களுடன் இணைத்துக் கொள்வோம்.

________________________________________________________

– வினவு செய்தியாளர்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்

2

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-1

கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியர் அ. கருணானந்தம் ஆற்றிய உரையின் சுருக்கம். பேரா கருணானந்தம் விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.

றிவாளிகள், மேதாவிகள் என்று ஊடகங்களால் முன் வைக்கப்படுபவர்களிடம்  உண்மையில் அறிவு நேர்மை இருப்பதில்லை.  ‘கனவு காணுங்கள்’ என்ற வாசகம் அப்துல் கலாம் சொன்னதாக பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், அதை முதலில் சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங். ‘I have a dream  நான் கனவு காண்கிறேன்’ என்று கருப்பு இன மக்களுக்கு சம வாழ்வு கிடைப்பது பற்றிய ஏக்கத்தை அவர் குறிப்பிட்டார்.

கனவு காண்பது என்பது ஏக்கத்தை குறிப்பிடுவது. ஏ சி சண்முகம் போன்ற கல்வி வியாபாரிகள் கோடிக் கணக்கில் பணம் குவிக்க ஆசைப் படுகிறார்கள். அவர்கள் கனவு காணலாம்.  கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது தேவை. ஆசைக்கு கனவு காணலாம், ஆனால் தேவைக்கு போராட வேண்டும். மாணவர்கள் கனவு காண்பது சமூகத்தை பாழாக்கி விடும். ‘கனவு காணுங்கள்’ என்று சொல்லும் அப்துல் கலாம் தேவைகளுக்காக ஏன் போராட சொல்லவில்லை!

கல்வி அனைவருக்கும் வேண்டும் எனும் போது ‘கல்வி என்பது என்ன?’ என்ற ஒரு கேள்வியும், ‘யாருக்கு கல்வி?’ என்ற ஒரு கேள்வியும் எழுகின்றன.

கல்வி ஆதிக்க வர்க்கத்தின் கருவியாக இருந்தது என்று மார்க்ஸ் சொன்னார். பல ஆயிரம் ஆண்டுகளாக மனு தர்மத்தின் படி தாழ்த்தப்பட்ட சூத்திர, வைசிய, மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் குரு குலத்தில் குதிரை ஏற்றம், வாள் பயிற்சி என்று மக்களை ஒடுக்குவதற்கான பயிற்சி பெற்றார்கள். கல்வி யார் பெற வேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தீர்மானித்தார்கள். உழைக்கும் மக்களுக்கு, ஆதிக்க வர்க்கத்திற்கு தொண்டூழியம் செய்வதற்காக விதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ‘கல்வி யார் பெற வேண்டும்’ என்பதை தரும சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. ‘ஒடுக்கப்பட்ட பிரிவினர் தவறிப் போய் அறிவு தரும் விஷயங்களை கேட்டு விட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று’ என்று சொல்கின்றன தரும சாஸ்திரங்கள்.

நாம் விரும்பும் கல்வி என்பது உழைக்கும் மக்களுக்கான கல்வி. இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதிக்க வர்க்க மாணவர்களை எடுத்து தேச விரோதிகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் போய் கிரீன் கார்டு வாங்கிக் கொள்கிறார்கள், ‘குழந்தையை அமெரிக்க மண்ணிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் குடியுரிமை கிடைக்கும்’ என்று திட்டமிடுகிறார்கள். இது தேச விரோத கிரிமினல்களை உருவாக்கும் கல்வி.

நாம் விரும்பும் கல்வி மக்களிடமிருந்து மாணவர்களை அன்னியப்படுத்தாத கல்வி. நாட்டில் கல்வி பற்றிய திட்டமிடும் குழுக்களில் சாம் பிட்ரோடா போன்ற மக்களோடு தொடர்பில்லாத நபர்கள் இடம் பெறுகிறார்கள். வேலை வாய்ப்புக்கான கல்வி, அறிவை பெறுவதற்கான கல்வி என்று பேசுகிறார்கள். சமூக நலனுக்கான கல்வி, நாட்டு நலனுக்கான கல்வி என்பது பேசப்படுவதில்லை.

நாம் விரும்புவது மக்கள் பற்றை அடிப்படையாகக் கொண்ட கல்வி.  ஆனால், ஆட்சியாளர்களின் கொள்கை எந்தத் திசையில் செயல்படுகிறது?

இந்தியாவிற்கு அடுத்த சீர்திருத்த அலை தேவை என்று ஒபாமா சொல்லியிருக்கிறார்.  அவர் சொல்லும் சீர்திருத்தம் வேறு, இந்திய மக்களுக்குத் தேவையான சீர்திருத்தம் வேறு. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றியும் மோசமாகி வரும் முதலீடு சூழலைப் பற்றியும் அமெரிக்க நிறுவனங்களின் கவலையை அவர் வெளிப்படுத்தினார். அவர் சொல்லாமல் விட்டது கல்வித் துறையில் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை பற்றிதான். கல்வி நடத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடம் வேண்டும் என்பது அவர்களது முக்கிய குறிக்கோள்.

ஒபாமாவின் கருத்துக்கு இந்திய தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், அவை வந்த விதத்தைப் பார்க்க வேண்டும். ‘அன்னிய சக்திகள் இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றன, சில தனி நபர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒபாமா இப்படி பேசுகிறார். அடிப்படை பொருளாதார காரணிகள் அவர் கவனிக்கவில்லை.  ஏற்கனவே நிறைய சாதித்திருக்கிறோம். இன்னும் தொடர்ந்து அமெரிக்க தேவைகளை நிறைவேற்றுவோம்’ என்று அவர்கள் நீளமான விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அதனால்தான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கபில் சிபல் அக்கறையுடன் பேசுகிறார்.

கல்வியை அதன் சமூக பொருளாதார சூழலிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மற்ற துறைகளிலெல்லாம் தனியார் மயமாக இருக்கும் போது கல்வித் துறையில் தனியார் தாராள உலக மயத்தை எப்படி தடுத்து நிறுத்த முடியும்!

1946-ம் ஆண்டு சுதந்திரம் எத்தகையது? பாகிஸ்தானை பிரிக்க வேண்டுமா வேண்டாமா என்று கலவரங்கள் நடந்தன. காங்கிரசுக் கட்சி 1946-ம் ஆண்டு தேர்தலுக்கான தனது அறிக்கையில் ஒன்று பட்ட இந்தியாவை விரும்புவதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்கும் போது அதை நீக்கி விட்டு எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையை மறுக்கப் போவதில்லை என்றார்கள். அதாவது முஸ்லீம்களுக்கு தனி நாடு பிரித்துக் கொடுப்பதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். எதை செய்தாவது தாம் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி  விட வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தார்கள்.

அப்படி அதிகாரத்தைப் பிடித்தவர்கள்தான் இப்போது அமெரிக்காவை தமது எஜமானர்களாக ஏற்றுக் கொண்டு கொஞ்சம் பொறுத்திருக்குமாறு மன்றாடுகிறார்கள்.

2002-ல் அரசியல் சட்டத்தின் 86வது பிரிவுக்கு திருத்தம் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசு. காங்கிரசும் அதை ஏற்றுக் கொண்டது. அந்த திருத்தத்தை பலர் வெற்றியாக கொண்டாடினார்கள்.  மக்களுக்கு கல்வி அளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்று சித்தரித்தார்கள்.

உண்மையில் மாற்றியது என்ன?

1. அடிப்படை உரிமைகளில் ஒன்றை புதிதாக சேர்ப்பது

2. வழிகாட்டும் நெறிகளில் ஒன்றை மாற்றுவது

3. அடிப்படை கடமைகளின் ஒன்றை புதிதாக சேர்ப்பது.

21A ஷரத்தில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு மாநில அரசை காட்டுகிறது, மாநில அரசு உள்ளாட்சி அரசை காட்டுகிறது. பொறுப்பை தள்ளி விடுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது ஷரத்தில் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 1960க்குள்) 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை, 6 வயது வரை மழலையர் பராமரிப்பு கல்வியை தர முயற்சிக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறார்கள்.

மூன்றாவதாக, கடமைகளில் ஒன்றாக பெற்றோர் 6 முதல் 14 வயது வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை சேர்த்திருக்கிறார்கள்.

மழலையர் பராமரிப்பு உரிமையாகவோ கட்டாயமாகவோ சொல்லப்படவில்லை, இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை அரசு கல்வி தரும்.  ஆனால் கல்வி என்பது இதற்கு முன்பே ஆரம்பமாகிறது. 6 ஆண்டு வரையில் பணக்கார குழந்தைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப எந்த உதவியும் பேசப்படவில்லை.

2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி  நான்கு வகையான பள்ளிகள் இயங்குவதை அனுமதித்தார்கள் – சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள். இப்படி இருந்தால் சமத்துவம் எப்படி தர முடியும்?

அருகாமைப் பள்ளி என்பதன் வரையறையில் தனியார் சிறப்புப் பள்ளிகளைச் சேர்க்கவில்லை. உதாரணமாக சென்னை தரமணியில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு பள்ளியில் போய் கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படியான ஒதுக்கீடு கோர முடியாது. அந்த விதி குட்டி முதலாளிகள் நடத்தும் பள்ளிகளுக்குத்தான் பொருந்தும். கார்பொரேட் பள்ளிக் கூடங்களுக்கு பொருந்தப் போவதில்லை.

தனியார் பள்ளியில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயமான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்கிறார்கள். இலவசம் என்று சொல்லி விட்டு நியாயமான கட்டணம் என்றால் எப்படி? அவர்கள் சொல்லும் நியாயமான கட்டணம் என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்படியாவது என்பதில்லை, பள்ளிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பதைத்தான் குறிக்கிறது.

‘ஆசிரியர் சம்பளம், மற்ற தினசரி செலவுகளோடு எதிர்காலத்தில் விரிவாக்கத்துக்கான நிதியையும் கட்டணமாக வாங்கலாம்’ என்கிறார்கள். விரிவாக்கம் தனியார் முதலாளிக்கு எதிர்காலத்தில் லாபத்தை தரப் போகிறது, அதற்கு மாணவர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?

கல்வியாளர்களாக மாறிய தனியார் முதலாளிகள் அதில் குவிக்கும் பணத்தை எடுத்து தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கிறார்கள், அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இந்த மாநாடு நடக்கும் இடத்துக்கு எதிரில் இருக்கும் கல்லூரியின் அதிபர் ஏ சி சண்முகம் புதிய நீதிக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

இந்த அடிப்படையிலான தனியார் கட்டண வசூலுக்கு நீதிமன்றமும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் முறையான கட்டிடங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்துகிறார்கள். கும்பகோணம் தனியார் பள்ளியில் தீ விபத்து நடந்து 8 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆண்டு தோறும் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நீதிமன்றம் இன்று வரை எந்த கட்டளையும் தரவில்லை. பள்ளியில் கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அனைவருக்கும்  தரமான கல்வி பெற வேண்டுமானால் தனியார், தாராள, உலக மய திட்டங்களை  எதிர்க்க வேண்டும். அரசாங்கம் சட்டங்களை மட்டும் போட்டு விட்டு அவற்றை நிறைவேற்றத் தேவையான திட்டங்களை போடுவதில்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஒரு பகுதியில் தேவையான அரசு பள்ளிகளை உருவாக்கும் பொறுப்பை  அரசுக்கு தரவில்லை. இத்தகைய புதிய சமூக அநீதிக் கொள்கையின் விளைவுகளுடன் நாம் மோதிக்  கொண்டிருக்க முடியாது. நாம் போய் தனியார் முதலாளிகளுடன் கல்வி பெறும் உரிமைக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

காமராசர் காலத்தில் பெரும்பாலும் அரசுப் பள்ளி, அருகாமைப் பள்ளி இருந்தன, மற்றவை அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தன. 1970களுக்குப் பிறகுதான் மெட்ரிக் பள்ளிகள் வர ஆரம்பித்தன. பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்க அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். 1300 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டி அதை மருத்துவமனையாக மாற்றுவதாக சொல்கிறார்கள். அண்ணா நூல் நிலையத்தை மாற்றுகிறேன் என்கிறார்கள் அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. பள்ளிக் கூடம் கட்ட வேண்டுமென்றால் பணம் இல்லை என்கிறார்கள்.

அடிப்படையில் மக்கள் கல்விக்கு கல்விக் கூடங்கள் அரசால் நடத்தப்பட வேண்டும். அதற்கு கல்வியில் தனியார் மயம் ஒழிக்கப்பட வேண்டும். அதை சாதிக்க தனியார், தாராள, உலக மய கொள்கைகளை அவை எந்த உருவத்தில் வந்தாலும் மக்கள் எதிர்த்து போராட வேண்டும்.

கல்வி என்பது வறுமையிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல, வறுமையுடன் போராடுவதற்காக!

__________________________________

– வினவு செய்தியாளர்.

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்!

2

கல்வி-தனியார்மயம்-ஒழிப்பு-மாநாடு-சென்னை

கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட ‘கல்வி தனியார் மய ஒழிப்பு’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. பார்ப்பனீய சாதித் தீண்டாமை காரணமாக, நமது நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதையும் மீறி கல்வி கற்றவர்களை ஒடுக்கியும் வந்துள்ளது. இன்றளவும் சாதித் தீண்டாமை கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. கல்வி வாசனை அறியாத பல கோடி பழங்குடி மக்களைக் கொண்ட நம் நாடு, பின் தங்கிய பிராந்தியங்களையும் பொருளாதார – சமூக ஏற்றத் தாழ்வுகளையும், ஏழை உழைக்கும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கிராமப் புற அடித்தளத்தையும், பிற்போக்கு பழக்கவழக்கங்கள்-கலாச்சாரங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. எனவே, உண்மையான ஜனநாயகமும்  நாகரீக வளர்ச்சியடைந்த சிறந்த குடிமகன்களை கொண்டதாகவும் உலக அரங்கில் கௌரவமான நாடாகவும் திகழ வேண்டுமானால், அனைவரும் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனவே, முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை விருப்பப் பூர்வமான கல்வித் தகுதியை அனைவரும் இலவசமாகப் பெற அரசே தக்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். கல்வி கற்பிப்படை கட்டாய அவசியமாக்க வேண்டும். இப்படி செய்வதுதான் இயற்கை நியதியாகும், உண்மையான ஜனநாயகமாகும் என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

2. தேர்ந்த வல்லுநர்களையும் சிறந்த அறிவாளிகளையும் உருவாக்குவது, பொது அறிவை ஊட்டுவது மட்டும் கல்வியின் நோக்கமல்ல, இவற்றுடன் சமநோக்கு சிந்தனையும், உன்னத கலாச்சாரத்தையும், நயத்தக்க நாகரீகத்தையும், சமூகப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்ட சிறந்த சமூக மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். பணியாகும், பாத்திரமும் ஆகும்.எனவே கல்வி என்பது ஒரு உன்னதமான பொதுச் சேவையாகும். வணிகப் பொருளாகவோ பிச்சைப் பொருளாகவோ கருதுவது கல்வியை கொச்சைப்படுத்துவதாகும். எனவே, இந்த பொதுச்சேவையை மக்கள் அனைவருக்கும் இலவசமாக கட்டாயமாக வழங்க வேண்டியது அனைத்து மக்களின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அரசின் கடமை மற்றும் கடப்பாடு ஆகும்.

3. கல்வி நிறுவனங்களை தனியார் முதலாளிகள் தொடங்குவது அவர்களின் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 19-1(g) பிரிவு கூறுகிறது. மேலும் வர்த்தகம், வியாபாரம் என்ற பிரிவுகளுக்குள் கல்வி நிறுவனங்களும் அடங்கும் என்று பி.ஏ.பய் பவுண்டேசன் வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் கல்வியை கடைச்சரக்காக்கி தனியார் முதலாளிகள்  லாபமீட்டலாம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டமே அனுமதியளித்துள்ளது என தெளிவாகத் தெரிகிறது. மேலும் கல்வி நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு குறிப்பிட்ட இந்த தகுதி தேவை என்று இந்தச் சட்டப்பிரிவு வரையறை செய்யவில்லை. இதனால் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள், கொள்ளை லாபம் அடிப்பதையே நோக்கமாகக் கொண்ட பெரும் முதலாளிகள், நமது நாட்டை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகள் என எவர் வேண்டுமானாலும் கல்வி நிறுவனம் தொடங்கி லாபம் ஈட்டி கொள்ளையடிக்கலாம் என்று அனுமதி வழங்கும் இந்தத் தீர்ப்பு தேசத் துரோகமானது, மக்கள் விரோதமானது. எனவே இது தூக்கியெறியப்பட வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை – இவற்றை வழங்குவது அரசின் கடமை மற்றும் கடப்பாடு என்ற அடிப்படையில், இருக்கின்ற எல்லா தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை எல்லாவற்றையும் அரசுக் கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டுமே கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். இந்த அரசுக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்று முறை, ஒரே தேர்வு முறை, ஒரே தரமான கட்டுமான வசதிகளுடைய பொதுப்பள்ளி-அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்டதாக கட்டமைக்கப்பட வேண்டும். பயிற்று மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். விஞ்ஞானப் பூர்வமான மனித மாண்புகளை வளர்க்கின்றதாக கல்வி இருக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தனியார் கல்வி நிறுவனங்களில் ‘நியாயமான’ கட்டண நிர்ணயம், இலவசக் கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு, தனியார் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவது என்கின்ற பெயரில்  தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு லாப உத்தரவாதமளிப்பது, தனியார் துறை-பொதுத்துறை கூட்டு போன்றவையெல்லாம் கல்வியை தனியார் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட நயவஞ்சக நடவடிக்கைகளே. இவைகள் பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமை மேலும் மேலும் பறிக்கப்பட்டு வருவதை மூடிமறைக்கும் தந்திரமே என இம்மாநாடு பகிரங்கமாக அறிவிக்கிறது.

6. தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் ஒரு பகுதியாக, கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. இந்த நோக்கத்திற்காக இருக்கின்ற அரசு பள்ளி, கல்லூரிகளை திட்டமிட்டு சீரழிய விட்டு பெற்றோர்களை தனியார் கல்விக் கொள்ளையர்களை நோக்கி நெட்டித் தள்ளுகிறது என இந்த மாநாடு குற்றம் சாட்டுகிறது.

7. குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டுவதையே தமது ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் ‘தரமான கல்வி’ கொடுக்கும் என்று நம்புவது தவறு. பல புகழ் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் செய்த மோசடிகள், ஊழல் முறைகேடுகள் அன்றாடம் வெளிவந்து நாறுகின்றன. எனவே தனியார் கல்வியின் மீதான மோகத்தை விட்டொழிக்குமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. இந்தியா கையெழுத்திட்ட அடிமை சாசனமான காட் (GATT) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமலுக்கு வந்த, சேவைத் துறைகளுக்கான பொது வர்த்தக ஒப்பந்தப்படிதான் (GATS) கல்வித் துறை வியாபாரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் பின்பு இந்நாட்டின் கல்விக் கொள்கையை தீர்மானிப்பவர்கள், கல்வியாளர்கள் அல்ல, பிர்லா-அம்பானிகளும், பன்னாட்டு முதலாளிகள் சங்கமும், அவர்களின் கைக்கூலி அறிவாளிகளான அறிவார்ந்த குழுவினரும், ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வக் குழுக்களும்தான். இவர்களின் நலனுக்காக நாட்டின் மொத்த கல்வித் துறையையுமே கபளீகரம் செய்வதற்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மசோதா, உயர்கல்வி மற்றும் ஆய்வுத் துறை மசோதா, கல்வித் தீர்ப்பாயங்கள் மசோதா உள்ளிட்டு 16 வகையான சட்டமசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கேற்ப புதுப்புது பாடத் திட்டங்களை வகுப்பது, புதுப்புது ஆய்வுகளை செய்வது, கல்வியின் உள்ளடக்கத்தையே மாற்றியமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையெல்லாம், எல்லாத் துறைகளிலும் புகுத்தப்பட்டு வரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக, மத்திய-மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின்படி சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே ஒரு ஆக்டோபஸ் போல நம்மை வளைத்துப் பிடித்திருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழிக்காமல் அனைவருக்கும் கல்வி எனும் உரிமை பெற முடியாது. மறுகாலனியாக்கக் கொள்கைகளை தூக்கியெறியாமல் சட்டப் பூர்வமாகவே நம்மைக் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழிக்க முடியாது. மறுகாலனியாக்கக் கொள்கையை ஒழிக்க நக்சல்பாரி வழியில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைக்கும் போதுதான் அரசுக் கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசக் கட்டாயக் கல்விச் சேவையை அனைவரும் பெற முடியும். இதற்கான போராட்டத்திற்கு அணிதிரளுமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

__________________________________________________

– வினவு செய்தியாளர்.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு! ரிப்போர்ட்!!

20

தனியார் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டவும்
பொதுப்பள்ளி அருகமைப்பள்ளி முறைமையை நிலை நாட்டவும்
சென்னையில் புமாஇமு நடத்திய கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு! 

 

“தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம்!” என்கிற முழக்கத்துடன் கடந்த  ஜூன்28 அன்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு  போலீசின்  தாக்குதலையும், பொய்வழக்கையும் தீரத்துடன் எதிர்கொண்டு, பத்து  நாட்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்ட தோழர்கள், பிணையில் வெளியே  வந்த குறுகிய கால இடைவெளிக்குள்ளாகவே, முற்றுகைப் போராட்டத்தின்  தொடர்ச்சியாக, கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தி காட்டியிருக்கின்றனர்.

சென்னைமதுரவாயல், பூவிருந்தவல்லி சாலையின் இரு மருங்கிலும் பட்டொளிவீசிப் பறந்த செங்கொடிகள் மாநாட்டுத் திடலுக்கு நம்மை வழிநடத்திச் சென்றன. காலை நேர பரபரப்பில் ஒருக்கணம் நிமிர்ந்து பார்க்க அவகாசமின்றி சாலையை வெறித்து பார்த்தபடி பறந்து கொண்டிருந்தனர் வாகன ஓட்டிகள். அவர்களை உரிமையோடு  வழிமறித்து, மாநாட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த வண்ணமிருந்தனர், ஒருகையில் சமச்சீர்ப் பாடப்புத்தகத்தையும் மறு கையில் மாநாட்டுத்  துண்டுப் பிரசுரங்களையும் சுமந்திருந்த அரசுப்பள்ளி மாணவர்கள். வாகனத்தின் வேகத்தையும், அவசரக் குறுக்கீட்டால் எழும் கோபத்தையும் ஒரு சேர தணித்தது, இளந்தளிர்களின் சமூகப்பார்வை நிறைந்த பொறுப்புணர்ச்சி.

ஊர் சொத்தை உலையில் போட்டு, கூவம் ஆற்றங்கரையை  ஆக்கிரமித்து, தனியார் கல்விக் கொள்ளையின் அடையாளமாய், தமிழகத்தின்  அவமானச் சின்னங்களுள் ஒன்றாய் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலுக்கு நேர் எதிரே, விடுதலைப் போரின் வீரப்புதல்வர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய விடிவெள்ளிகளின் உருவங்களைத் தாங்கி கம்பீரமாய் எழும்பி நின்றது, கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டின் நுழைவாயில்.

மாநாட்டு திடலுக்குள் நுழையும் முன்பே நம்மை வழிமறித்தது, “காசு இருந்தா கான்வெண்ட்… இல்லேன்னா கட்டாந்தரை… கல்வி  வியாபாரம் ஒழிய… வாங்க நக்சல்பாரி வழிக்கு!” என்ற “வழிகாட்டும்” வாசகம்!. மாநாட்டு நிகழ்வுகள் தொடங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில், பேரார்வ மிகுதியோடு கீழைக்காற்று புத்தக அரங்கை மொய்த்திருந்தது இளைஞர்களின் கூட்டம்.

பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பெற்றோர்களுமாக நிரம்பி வழிந்த மாநாட்டு அரங்கில், எனக்கான இருக்கையை தேடித்தான் பிடிக்க வேண்டியிருந்தது. கீழ்தளத்தில் உள்ள உணவுக்கூடமும்  மாநாட்டு அரங்கமாக உருமாறியிருந்தது. புரஜக்டர் கருவி கொண்டு வெண் திரை அமைத்து மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பட்டன. இவ்விரு தளங்களும் நிறைந்ததினால் மட்டுமல்ல; குறிப்பாக கணிசமான அளவில் பள்ளி கல்லூரி மாணவிகளால் இந்த மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது என்பதில்தான், அடங்கியிருக்கிறது மாநாட்டின் வெற்றி.

“கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்க் கல்வி வரை  அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்! நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!” என்ற முழக்கத்தினை முன் வைத்து நடத்தப்பட்ட இந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு நிகழ்வுகள், தியாகளுக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கின். பங்கேற்பாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார், பு.மா. இ.மு.வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சரவணன்.

இம்மாநாட்டினை தலைமையேற்று நடத்திய, பு.மா.இ.மு. வின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன், “தனியார்மயக் கொள்கையை ஒழித்துக்கட்டாமல், அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியைப் பெறுவது சாத்தியமில்லை; இந்த மாற்றம் சில்லரை சீர்த்திருத்தங்களால் வந்துவிடாது; ஒரு சமூகமாற்றத்தின் மூலம், புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் மட்டுமே இவை சாத்தியம்; அதற்கு நக்சல்பாரி  பாதை ஒன்றே மாற்று! இவ்வழியில் மக்களை அணிதிரட்டுவதொன்றே இம்மாநாட்டின் நோக்கம்” என்றார் அவர்.

85 வயதை கடந்து உடளளவில் தளர்ந்துவிட்ட போதிலும், தனியார்மயக் கல்விக்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் என்றுமே உற்சாகமும் உத்வேகமுமிக்க இளைஞனாக தன்னை இணைத்துக் கொள்ளும் இயல்பைகொண்ட மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் அவர்கள் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றுவதாக இருந்தது. எனினும், எதிர்பாராத வகையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இம்மாநாட்டு நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. இருந்த போதிலும், மாநாட்டின் நோக்கத்தை வாழ்த்தி மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் அவர். இதனை பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்ட  மாநாட்டின் தலைவர் தோழர் கணேசன், “மக்கள் குடிநீர், ரேஷன் உள்ளிட்ட தமது அடிப்படைத் தேவைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவதைப் போல, தரமானக் கல்வி கேட்டு தெருவில் இறங்கிப் போராட முன்வரவேண்டும்” என்பதையே தனது ஆவலாக, கோரிக்கையாக நம் முன் வைத்திருக்கிறார், என்றார் அவர்.

மேலும், ஹைதராபாத் மத்தியப் பல்கலை கழகத்தின் பேராசிரியர் திரு.ஹரகோபால் அவர்களும் தவிர்க்கவியலாத காரணங்களால் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழலையும் தெரிவித்த அவர், மாற்று ஏற்பாடாக குறுகிய அவகாசத்திற்குள் இம்மாநாட்டில் பங்கேற்க இசைவு தெரிவித்த முனைவர் ஓ.லக்ஷிமி நாராயணா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

“கட்டண நிர்ணயம், 25% இட ஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார்மய த்தை ஊக்குவிக்கவே!” என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர். திரு. அ. கருணானந்தன்  (சமச்சீர் பாடபுத்தகத் தயாரிப்புக்குழு உறுப்பினர்; வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்  விவேகனந்தா கல்லூரி, சென்னை.) அவர்கள், “இளைஞர்களைப் பார்த்து கனவு  காணுங்கள் என வலியுறுத்தும் கலாம், என்றாவது உனது தேவைக்காக நீ  போராடு என்று கூறியிருக்கிறாரா?” எனக் கேள்வியெழுப்பிய அவர்,  “நாம் காண வேண்டியது கனவல்ல; நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான பாதையை” என்றார்.

2002இல் பா.ஜ.க. ஆட்சிகாலத்தில் காங்கிரசின் ஆதர வோடு கொண்டுவரப்பட்ட 86ஆவது சட்டத்திருத்தமும்; 2009 இல்  கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச்சட்டமும் அடிப்படையிலேயே எவ்வாறு ஏழை மாணவர்களின் கல்வி பெறும் உரிமை மறுப்பை நோக்கமாகக் கொண்டது என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார் அவர்.

இங்கு படித்துவிட்டு மேலைநாடுகளில் செட்டில் ஆவதையே  தனது இலட்சியமாகக் கொண்ட தேசவிரோதிகளைத்தான் உருவாக்கியிருக்கிறது இன்றைய கல்வி முறை எனச்சாடிய அவர், இன்று பணம் பண்ணுவதற்கான கல்வி, அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான கல்வி என்றுதான் பேசப்படுகிறதே ஒழிய, சமூகத்திற்கான கல்வி  சமூக மாற்றத்திற்கான கல்வி என்ற பொருளில் பேசப்படுவதே  இல்லை என்பதை கோடிட்டுக்காட்டி, இந்த மண்ணோடும் மக்களோடும் பிணைக்கப்பட்ட வெகுஜனங்களின் கல்வியாக மாற வேண்டும் என்றார் அவர்.

மேலும், “கல்வித்துறையில் மட்டும் தனியார்மயத்தை  ஒழிக்க முற்படுவது அறியாமையே; ஒட்டுமொத்த சமூகத்தின் அரசியல் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டும்;  நோய்நாடி நோய்முதல் நாடி என்பதற்கிணங்க இதன் அடிப்படையைத்  தகர்க்கும் வகையில், இன்று அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களையும் பாதிக்கக்கூடிய தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக போராடுவதொன்றே நம்முன் உள்ள கடைமை” என்றார் அவர்.

ஒவ்வொரு பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்த புரட்சிகர பாடல்களை பாடினர். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தேநீரையும் பொறுப்பாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, “தனியார்மயக் கல்வியை  ஒழித்துக்கட்டு!” என்ற தலைப்பில் பேசிய தோழர் சி.ராஜீ, (வழக்குரைஞர்; மாநில  ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.) அவர்கள்  தனது உரையில், ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை மட்டு மல்ல, அவர்களின் உயிரையும் சேர்த்துப் பறித்தெடுக்கும்; சமூகத்தையே அச்சுறுத்தும் மாஃபியா கூட்டமாக தனியார் கல்விக் கொள்ளையர்கள் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தினார்.  அரசின் சட்டங்களும்  கட்டண நிர்ணயிப்பு கமிட்டிகளும் இத்தகைய தனியார் கல்விக்கொள்ளையை  ஒரு போதும் தடுத்து நிறுத்தி விடாது என்பதை, தனியார்பள்ளி முதலாளிகளுக்கு எதிராக விருத்தாசலம் பகுதியில் தமது அமைப்பின் சார்பாக  நடத்தப்பட்ட போராட்ட அனுபவங்களிலிருந்து ஒப்பிட்டு விளக்கினார்.

ஜூன்28 அன்று பள்ளிக்கல்வி இயக்குனநகரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பு.மா.இ.மு.வின் வழியில் இந்த அரசை  அதன் நிர்வாகத்தை முடக்கும் அளவிற்கு தெருப்போராட்டங்களை கட்டியமைப்பதொன்றே இத்தனியார் கல்விக்கொள்ளையை முடிவுக்கு கொண்டு வரும் என்றார் அவர்.

தோழர் ராஜூ பேசி முடித்த பொழுது, மதிய 1.00 ஐ நெருங்கியிருந்தது. ஆனாலும், பார்வையாளர்கள் எவரையும் பசி நெருங்கவில்லை போலும்; அவர் உற்சாகம் பொங்க தொகுத்து வழங்கிய போராட்ட அனுபவத்தை செவிவழியே செரித்திருந்தது ஒட்டுமொத்த கூட்டமும். எனவே, உணவு இடைவேளையின்றி தொடர்ந்தது, மாநாட்டு நிகழ்ச்சி.

“பொதுப்பள்ளி அருகமைப்பள்ளி முறை ஏன் தேவை? என்ற      தலைப்பில் பேசிய முனைவர் ஓ.லக்ஷிமி நாராயணா, (பொருளாதாரத் துறை,ஹைதராபாத்  பல்கலைக் கழகம்; செயலாளர், கல்வி பாதுகாப்புக் குழு, ஆந்திரப்பிரதேசம்.) அவர்கள்   “கட்டாய இலவசக் கல்வி உரிமைக்காக நீங்கள் நடத்திய போராட்டமும்; அதனைத் தொடர்ந்து நடத்துகின்ற இந்த மாநாட்டிலும் பங்கு பெறுவதை  நான் பெருமையாகக கருதுகிறேன்.” எனக்குறிப்பிட்டவர், 1950இல் ஆறாயிரம் அரசுப்பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு, குலத் தொழில் திட்டத்தை அமல்படுத்திய ராஜாஜிக்கு எதிராக பெரியாரே முன்னின்று நடத்திய போராட்டத்தை தமக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது, இந்நிகழ்ச்சி என்றார் அவர்.

கல்வி, சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத்  தேவைகளுக்கு ஒதுக்க அரசிடம் போதிய நிதியில்லை என்று தொடர்ந்து  எல்லா அரசுகளுமே கைவிரிப்பதையும்; அதே நேரத்தில் 2ஜி ஊழல்,  காமன்வெல்த் ஊழல், என மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதையும்;  ஆந்திராவின் ராஜசேகர ரெட்டியும்; கர்நாடகாவின் ரெட்டி பிரதர்ஸ்களும் கோடிகளில் மக்கள் பணத்தை சுருட்டிக்கொள்வதையும் ஒப்பிட்டுப் பேசிய அவர்,  இவர்களிடம் குவியும் பணம் ஏழைகளின் அடிப்படைத் தேவைகளுக்கு மறுக்கப்பட்ட பணம்தான் என்பதை அம்பலப்படுத்தினார்.

அரசுப்பள்ளிகளின் அடிக்கட்டுமானத்தை மேம்படுத்தவும்  போதிய ஆசிரியர்களை நியமிக்கவும் போதிய நிதியை ஒதுக்கவும் முன்வராத அரசுகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டம் என்ற பெயரில் தனியாரின் பையை நிரப்பிக்கொள்ள நிதியை ஒதுக்கீடு செய்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆந்திராவில் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள்  கல்வியில் அடிக்கும் கொள்ளை ஆந்திர அரசின் மாநில பட்ஜெட்டிற்கு இணையானது என்றார் அவர்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும்,  அடிக்கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து; வரிவிலக்குகள், வரிச்சலுகைகளை வாரி வழங்கி அமைக்கப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல, பல்வேறு சலுகைகளையும் வரிவிலக்குகளையும் பெற்ற சிறப்பு கல்வி மண்டலங்களாக தனியார் கல்வி நிறுவனங்கள்  பரிணமித்து வருவதையும் அம்பலப்படுத்திப் பேசினார் அவர்.

நாட்டில் நான்கு கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக  உழல்கின்றனர். இந்த குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்காமல் எப்படி  அனைவருக்கும் கல்வியை வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், பல  பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் பாடம் நடத்த வேண்டிய  அவலமும்; 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதும்; இன்றளவும் ஓராசிரியர் பள்ளிகளும், ஈராசிரியர் பள்ளிகளும் இயங்கத்தான்  செய்கின்றன என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்த அவர், இந்த அவலங்களை ஒழித்து கட்ட வேண்டுமானால் அருகமைப்பள்ளிகளும் பொதுப் பள்ளிகளும் அவசியம் தேவை என்றார் அவர்.

நடைமுறையில் இவற்றை சாத்தியப்படுத்த வேண்டுமெனில்,  முதலில் தற்போதுள்ள தனியார் பள்ளிகளை முறைப்படுத்த வேண்டும். இதன்படி, தரமான ஆசிரியர்க்கையும் அடிப்படை வசதிகளையும் கொண்டதாக,  அரசு நிர்ணயிக்கும் விதிமுறைகளின் படி இயங்குவதை உத்திரவாதம் செய்ய வேண்டும்; இரண்டாவதாக, தனியார் பள்ளிகளை தனியார் கல்விக் கொள்கையை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும்; மூன்றாவதாக, அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் அருகமைப்பள்ளி, பொதுப்பள்ளி முறைகளையும் விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அமர்ந்தார், அவர்.

அவர் பேசி முடித்த பொழுது மணி 3.00. மதிய உணவிற்கான  இடைவேளை. மதிய உணவிற்கான நேரம் கடந்தது குறித்தோ பசியையோ பொருட்படுத்தாமல் மாநாட்டு நிகழ்வில் ஒன்றிப் போயிருந்தது ஒட்டு மொத்த கூட்டமும். இவர்களுக்கு ஒத்திசைவாய் மழையும் பேய்ந்து  ஓய்ந்திருந்தது.

தாமதமாக உணவருந்தியிருந்த போதிலும், உணவருந்தியவுடன் நிகழ்ச்சியில் அமர்ந்த போதிலும், பார்வையாளர்களுக்கு சோர்வையோ களைப்பையோ ஏற்படுத்தாத வண்ணம், உற்சாகத்துடனும் தனது  வழமையான எள்ளிநகையாடும் தொனியோடும் தொடங்கினர் தமது  உரையை, தோழர் துரை.சண்முகம் (மக்கள் கலை இலக்கியக் கழகம்).

“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை  நாட்டுவோம்!” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், “போலீசை  எதிர்த்து போரிடுவதை விட, தனியார் என்றால் தரமானது என்று அப்பாவித்தனமாக நம்பிகொண்டிருக்கும் பெருந்திரளான உழைக்கும் மக்களை நம் பக்கம் அணிதிரட்டுவதுதான், மிக சவாலான பணி. மிக மிக அவசியமான பணி.” என்று வலியுறுத்தினார். கல்வியை மறுப்பதென்பது மனிதனின் பிறப்பையே மறுப்பதற்கு சமமானது என்றும், இலவசக்கல்வி எனக்  கேட்பதென்பது அரசிடம் சலுகை கோருவதல்ல; இது நமது அடிப்படை உரிமை என்பதை உழைக்கும் மக்கள் மத்தியில் நிலைநாட்ட வேண்டியிருக்கிறது, என்றார் அவர்.

நிலத்திலிருந்து விவசாயிகளையும்; தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்களையும் விரட்டியடித்துவிட்டு அவர்களது உரிமையைப் பறித் தெடுக்கும் அதே மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான்,  ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையையும் பறிக்கிறது. இவற்றுக்கு எதிராக பெருந்திரளான உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதென்பதே நம் முன் உள்ள உடனடிக்கடமை என்ற வேண்டுகோளோடு தனது உரையை  நிறைவு செய்தார் அவர்.

இறுதியாக,  பு.மா.இ.மு. சென்னைக் கிளையின் புரட்சிகர கலை  நிகழ்ச்சி. வழமைபோல, “வெட்டறிவாளை எடடா… ரத்தம் கொதிக் குதடா…” என புரட்சிக்கனலாய் தகிக்கும் என எதிர்பார்த்திருக்க, எவரும் எதிர்பார்த்திராத தாளகதியில்  “வந்தனமுங்க.. வந்தனம்… வந்த  சனமெல்லாம் குந்தனும்” என கிராமிய மணம் கமழ தொடங்கியது,  கலை நிகழ்ச்சி. இந்தப் பாடலுக்கு அவ்வளவு கச்சிதமாய் பொருந்தியது கிருஷ்ணகுமாரின் குரல். இந்தக்குரலை இவ்வளவு நாளாய் அவர் எங்கு ஒளித்து  வைத்திருந்தாரோ தெரியவில்லை. இன்றைய கால சூழலுக்குப் பொருத்தமான பாடல்களை தேர்வு செய்ததோடு மட்டுமின்றி, அவற்றுக்குப்  பொருத்தமான இணைப்புரையோடு தொகுத்து வழங்கினர், தோழர் சரவணனும், தோழர் கிருஷ்ணகுமாரும். இவர்களைத் தவிர கலைக்குழுவின்  எஞ்சிய தோழர்களும் போட்டி போட்டுக்கொண்டு உற்சாகத்தோடு, நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். குறிப்பாக, அப்துல்கலாமை அம்பலப்படுத்திய “சொன்னாரு… கலாம் சொன்னாரு…”  என்ற காட்சி  விளக்கப்பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இம்மாநாட்டில், ஜூன்28 அன்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டக்காட்சிப் பதிவு ஒளிக்குறுந்தகடு வெளியிடப்பட்டது. அப்போராட்டத்தில் தீரத்துடன் போலீசை எதிர்கொண்டு சிறைசென்றவர்களுள் ஒருவரான தோழர் வெளியிட,  பு.மா.இ.மு.வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சரவணன்  பெற்றுக்கொண்டார்.

பு.மா.இ.மு.வின் செயற்குழு உறுப்பினர் தோழர் மருது  தனது நன்றியுரையில், போலீசின் அடக்குமுறையை எதிர்கொண்டு சிறைப் பட்டு மீண்டு வந்த போதிலும், மிக குறுகிய கால அவகாசத்திற்குள்ளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டு வேலைகளில் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பங்கெடுத்துக்கொண்டதை நெகிழ்ச்சியோடு  குறிப்பிட்டார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீததுடன் நிறைவடைந்தது, மாநாட்டு நிகழ்ச்சி.

மழைகுறுக்கிட்டது; ஆயிரம் பேருக்கும் அவசரம் அவசரமாக மதிய உணவை ஏற்பாடு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம்  ஏற்பட்ட போதிலும், பு.மா.இ.மு. தோழர்கள் இயல்பாய் இப்பணிகளை  திறம்பட செய்து முடித்தனர். மொத்த மாநாட்டு நிகழ்வுகளையும் தொய்வின்றி ஒருங்கிணைத்து சென்றனர். யாரையும் அதட்டவோ, மிரட்டவோ  செய்யாத தொண்டர்கள். காவல் காப்பதே தன் பணி என காத்துக் கிடக்காமல், புதிதாய் வருவோருக்கான இருக்கையை இடம் காட்டுவது தொடங்கி, பார்வையாளர்களின் தேவைக்கேற்ப தண்ணீரையும், தேநீரையும்  வழங்கியது மட்டுமின்றி, குடித்து முடித்த கோப்பைகளை திரும்பப் பெறுவது  வரையிலான பணிகளை பொறுப்புடன் அவர்கள் மேற்கொண்ட மனப்பாங்கு  மெய்சிலிர்க்க வைத்தது.

தனியார் கல்விக்கொள்ளையின் அடையாளமாய், அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப்பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலுக்கும்  இவற்றுக்கு நேர் எதிரே, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய விடிவெள்ளிகளின் உருவங்களைத் தாங்கி நிறுத்தப்பட்டிருந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டின் நுழைவாயில்களுக்கிடையிலான தூரம் மட்டுமல்ல; தனியார்  கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவதற்கான காலமும் நெருங்கிவிட்டதை  குறிப்பால் உணர்த்தின மாநாட்டு நிகழ்வுகள்.

_______________________________________________

இளங்கதிர்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

‘காதலுக்கு மரியாதை’: காதலர்களுக்கு அவமரியாதை!

19
காதலுக்கு-மரியாதை

இரசிகர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட்டு செல்வாக்கு செலுத்தியவற்றில், 90களில் வந்த காதல் தொடர்பான திரைப்படங்கள் முக்கியமானவை. மசாலா இல்லையென்பதற்காகவும், காதலின் ‘கண்ணியத்தை’ சித்தரித்தமைக்காகவும் இப்படங்களை மக்கள் விரும்பி பார்த்திருக்கிறார்கள். அந்த கண்ணியத்தின் பின்னே உள்ள கயமைத்தனத்தை கூரிய விமரிசனப் பார்வையால் புரிய வைக்கிறது இந்த விமரிசனம். புதிய கலாச்சாரத்தின் சினிமா விமரிசனங்கள் தமிழ் சினிமாவின் சமூக தடத்தை பதிந்து வைத்திருக்கின்ற வரலாற்று ஆவணம். அந்த தடத்தில் நீங்களும் சென்று பார்க்க இந்த விமரிசனத்தை வெளியிடுகிறோம்.

– வினவு

காதலுக்கு-மரியாதை

இரத்தத்தை உறைய வைக்கும் சண்டைக் காட்சிகளோ, இரத்தத்தைச் சூடேற்றும் நடனக் காட்சிகளோ இல்லாத ஒரு திரைப்படம் நூறு நாட்கள் ஓடுகிறதென்றால் அந்தத் திரைக்கதையின் உணர்ச்சியுடனோ அல்லது அது முன்மொழியும் நீதியுடனோ ரசிகப் பெருமக்கள், குறிப்பாக இளைளர்கள் ஒன்றிவிட்டார்கள் என்று சந்தேகிக்கத்தான் வேண்டும். ”காதலுக்கு மரியாதை” திரைப்படத்தின் வெற்றி இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பெற்றோரின் பாசத்துக்காகத் தங்கள் காதலையே தியாகம் செய்யத் துணிவதன் மூலம் ‘காதலுக்கு மரியாதை’ செய்கிறார்கள் காதலர்கள்.

ஒரு புத்தகக் கடையில் தற்செயலான ஒரு பார்வையில் ஏற்படும் ‘காதலில்’ காதலியைத் துரத்துகிறான் காதலன். ஒன்றிரண்டு வார்த்தைகள் கூடப் பேசிப் கொள்ளாமல் அகத்தின் அழகை முகத்திலிருந்து மட்டுமே தெரிந்து கொண்டு காதலிக்க இயலுமா என்றொரு கேள்வியை யாராவது கேட்பதாக இருந்தால் ”இது போன ஜென்மத்தின் தொடர்ச்சி” என்பது கதாநாயகனின் பதில்.

ஒரு நண்பனைப் போல மகனைச் சமமாக நடத்தும் பண்பாளர், கதாநாயகனின் தந்தை; கதாநாயகியின் அண்ணன்மார்களோ தங்கையைக் குடும்ப விளக்காகக் கருதிப் போற்றிப் பாதுகாப்பவர்கள். விட்டலாச்சாரயா படம் போல அந்த விளக்கில் தான் அக்குடும்பத்தின் உயிரே இருக்கிறது என்று நீங்கள் கருதுவதாக இருந்தால் திரைக்கதைப்படி அதுவும் மிகையில்லை.

கதாநாயகன் வழக்கமான ஹீரோக்களைப் போல கண்ணில் பட்ட கல்லூரிப் பெண்களையெல்லாம் கலாட்டா செய்து துரத்தும் சராசரி ரகத்தைச் சேர்ந்தவன் அல்ல; கதாநாயகியும் ”ஐ லவ் யூ” என்று சொல்லப்படுவதற்காகவே காத்திருந்து ”ஐ லவ் யூ” உடனே எதிரொலிக்கும் மலிவான பெண்மணி அல்ல; மனதில் அரும்பிய முதல் காதலை ‘முதல் பாவமாக’ப் கருதி தேவனிடம் மன்னிப்பு கேட்கும் ‘நல்ல கிறித்தவக் கன்னி’. மொத்தத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே நல்லவர்கள் மயம்.

கதாநாயகன் ஜீவா, தங்கள் தங்கை மினியைக் காதலிப்பதை அறிந்த அண்ணன்மார்கள் அவனை ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்குக் குழந்தை மனசு என்பதையும், கல்யாணமாகிப் பிள்ளை குட்டி பெற்றிருந்த போதும் அம்மா பேச்சைத் தட்டாத அம்மா பிள்ளைகள் என்பதையும் மறந்து விடக்கூடாது. கதாநாயகன் தன் காதலை முதலில் அறிவித்த முறை, பின்னர் தெரிவித்த முறை இவையெல்லாம் அநாகரிகமானவை, அடாவடித்தனமானவை என்று நீங்கள் ஒருவேளை கருதலாம். ஒரு தன்மானமுள்ள, நேர்மையான, துடிப்பான இளைஞனின் நடவடிக்கைகள்தான் அவை என்பதை கதாநாயகனின் கோணத்திலிருந்து சிந்தித்தால் நீங்கள் உணர முடியும்.

காதலுக்கு-மரியாதைகையைக் காலை உடைத்து கதாநாயகனைப் படுக்கையில் போடும்வரை தன் காதலை கதாநாயகி வெளிப்படுத்தவில்லையென்பதால் அவளைக் கல் நெஞ்சுக்காரி என்றும் கூறிவிட முடியாது. காதலை நிரூபிப்பதற்காகக் காதலனை பத்து மாடிக் கட்டிடத்திலிருந்தும், மலை உச்சியிலிருந்தும் குதிக்கச் சொல்லும் தமிழ்ச்சினிமாக் காதாநாயகிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் மினியின் அருமை புரியும்.

கடைசியில் ஒரு வழியாகக் கதாநாயகி காதலுக்கு உடன்பட்ட போதும், அவளது அன்புச் சகோதரர்கள் உடன்படவில்லை. காதலர்கள் ஓடுகிறார்கள். ஒரு ராத்திரி அவனுடன் தங்கிவிட்டால் அப்புறம் அவள் வீட்டுப்படி ஏறக் கூடாது என்று தாயார் உத்தரவு. இருட்டுவதற்குள் தங்கையின் கற்பைக் காப்பாற்ற கையில் அரிவாளுடன் துரத்துகிறார்கள், மினியின் அன்புச் சகோதரர்கள். அப்போதும் கதாநாயகனை வெட்டிவிட்டு தங்கையை அநாதை இல்லத்தில் சேர்ப்பதுதான் சகோதரர்களின் திட்டம் என்பதிலிருந்து அவர்களது நல்ல உள்ளத்தைப் பரிந்து கொள்ள வேண்டும்.

விடிந்தால் திருமணம் என்னும் சூழலில்தான் காதல் – அன்பு – பாசம் ஆகியவை குறித்த தத்துவஞானச் சிந்தனை காதலர்களை ஆட்கொள்கிறது. ”கண நேரத்தில் தோன்றிய காதல் உணர்வுக்காக 20 ஆண்டு உத்தரவாதமுள்ள பெற்றோரின் பாச உணர்வைப் புறக்கணிப்பதா? பெற்றோர்களைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுப் பிள்ளைகள் இன்பமான மண வாழ்வைத் துவக்குவது தருமமா?” என்ற கேள்விகள் அவர்களை அலைகழிக்கின்றன.

ஆசையே துன்பத்துக்கு அடிப்படை என்னும் தத்துவத்தைக் கண்டுபிடிக்க புத்தன் கூடப் பல ஆண்டுகள் சிந்திக்க வேண்டியிருந்தது. இந்தக் காதலர்களோ ஒரே இரவில் முடிவு செய்து காதலை ரத்து செய்து விடுகிறார்கள். திருமண ஏற்பாட்டைச் செய்த மீனவர் இந்த முடிவைக் கேட்டு முதலில் அதிரிச்சியடைகிறார். காரணங்களைக் கேட்டபின் அவருக்குள் இருந்த தந்தை உணர்வு உசுப்பிவிடப்படவே நெகிழ்ந்து போகிறார். வீட்டைவிட்டு ஓடி ஓரிரவு கழிந்தவுடனே மகளின் புகைப்படத்தைக் கூடத் தீ வைத்து எரிக்கச்சொன்ன தாயார், அவள் அரை கிராம் கற்பு கூடக் குறையாமல் திரும்பிவிட்டாள் என்று உத்திரவாதப்படுத்திக் கொண்டதும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கிறாள். மகனின் கற்பு பற்றி விசாரித்து உத்திரவாதம் செய்து கொள்ளாமலேயே கதாநாயகனின் பெற்றோர் உவக்கிறார்கள்.

சகோதரர்கள் சொல்கிற ஆளுக்குக் கழுத்தை நீட்ட கதாநாயகி தயார்; அம்மா சொல்லும் பெண்ணின் கழுத்தில் கயிற்றை மாட்ட கதாநாயகன் தயார். இருந்தாலும் பெற்றோர்கள் ‘அடிப்படையில் நல்லவர்கள்’ என்பதால் அவர்களைக் குற்றவுணர்வு வாட்டுகிறது. ‘காதலை விடப் பாசமே பெரிது’ என்று தங்களை நிரூபித்துக் கொண்ட பிள்ளைகளிடம், பெற்றோர் தமது பாசத்தை நீரூபிக்க வேண்டிய தருணமிது; நிரூபிக்கிறார்கள். காதலின் எதிர்காலம் குறித்த நடுக்கத்துடன் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

சமூகப் பிரச்சினைகள் எதுவும் வேண்டாம். காதல் தான் மனிதகுலத்தின் ஒரே பிரச்சினை என்று காதலையே சுற்றி வந்து கொண்டிருக்கிறது திரையுலகம். காதலுக்காகத் தியாகப் போராட்டம், சாகசங்கள் என்பது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, காதலையே தியாகம் செய்யச் சொல்கிறது காதலுக்கு மரியதை.

காதலுக்கு-மரியாதை

காதல் விவகாரங்களைப் பொறுத்தவரை, அதுவரையில் உலகம் எக்கேடு கெட்டால் என்ன என்று கவலையில்லாமல் இருக்கும் நபர்கள் வில்லங்கமான காதல் விவகாரங்களில் – அதாவது சாதி மதம் மாறிக் காதலித்தல் அந்தஸ்து வேறுபாடு போன்றவை – மாட்டிக்கொள்ளும்போது, அவர்கள் மீது சமூக விழிப்புணர்வு கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. தங்களது சொந்த நலனுக்காகவாவது சாதி, மத வெறியையோ பணத்திமிரையோ எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. பெற்றோர்கள், சகோதரர்கள், உற்றார், உறவினர்களின் குரூரங்களும், அற்பத்தனங்களும் அப்போதுதான் காதலர்களுக்கு நிதரிசனமாகின்றன. இயக்குநர் பாசில் மிகுந்த எச்சரிக்கையுடன் அமைத்திருக்கும் திரைக்கதையின் படி இருதரப்புக் குடும்பத்தினரும் ‘நல்லவர்கள்’தான். எனினும் அவர்களது கெட்ட பக்கத்தைச் சுவைக்கும் வாய்ப்பு அதுவரை பிள்ளைகளுக்குக் கிடைக்கவில்லை.

தங்கள் மீது பெற்றோர் செலுத்தும் பாசத்திற்கு எந்தவித நிபந்தனைகளும், எதிர்பார்ப்புகளும் கிடையாது என்று நம்பிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு பிரச்சினை (காதல்) வரும்போதுதான் உண்மை விளங்குகிறது. நிபந்தனைக்குட்படாத காதலோ, பாசமோ, நட்போ கிடையாதென்பது எலும்பில் உறைப்பது போலப் புரிகிறது.

பிறகுதான் அந்த நிபந்தனைகளின் தன்மை என்ன என்ற ஆய்வு துவங்குகிறது. பெற்றொர்கள் சாதி, மதம் பார்க்கிறார்களா, அந்தஸ்தைப் பார்க்கிறார்களா – எதற்காகக் காதலை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியும் அது சரியா தவறா என்ற சிந்தனையும் வருகிறது. பிறகு அதன்மீது கருத்துப் போராட்டம் நடக்கிறது.

இந்தப் படத்தில் பெண்ணின் சகோதரர்கள் தங்கள் ஒரே தங்கையை கண்ணின் மணியாகக் கருதுகிறார்கள்; அவளைச் சுற்றி வந்து பாட்டெல்லாம் பாடி தங்கள் பாசத்தின் ஆழத்தை ரசிகர்களுக்கு நிரூபிக்கிறார்கள். அவள் வீட்டின் குடும்ப விளக்காக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பாசத்திற்கு அவர்கள் விதிக்கும் ஒரே நிபந்தனை.

விளக்கு என்றால் குத்துவிளக்கா, நியான் விளக்கா, அத்தகைய விளக்குகள் காதல் மணம் செயது கொண்டால் தொடர்ந்து விளக்காக நீடிக்க முடியாதா என்ற கேள்விகளுக்கெல்லாம் சகோதரர்கள் சொல்வதுதான் பதில். அதன்மீது விவாதத்துக்கு இடம் கிடையாது.

காதலுக்கு-மரியாதைஅதே போல மகனை நண்பனாக நடத்துபவர் கதாநாயகனின் தந்தை. எனினும் நட்பு எங்கே முடிகிறது, தந்தை ஆதிக்கம் எங்கே தொடங்குகிறது என்பது தந்தைக்குத்தான் வெளிச்சம். அதிலும் விவாதத்திற்கு இடமில்லை. அத்தகையதொரு விவாதம் நடந்திருந்தால் குடும்பத்தினரின் பல விகாரங்கள் வெளிப்பட்டிருக்கும். பல தமிழ்ச் சினிமாக்களில் பணக்காரக் காதலிகள், தந்தையின் பணத்திமிரை எதிர்த்து 5 நிமிடம் பொரிந்து தள்ளிவிட்டு, கட்டிய ஃபாரின் சேலையுடன் ஏழைக்காதலனின் வீட்டுக்கு வந்து, நுழைந்தவுடனேயே அம்மிக் கல்லில் மசாலா அரைப்பது, மாமியாருக்குத் துணி துவைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் பாசில் படத்தைப் போல ‘எதார்த்தமாக’ எடுக்கப்பட்ட படங்களல்ல; கதாபாத்திரங்களும் எதார்த்தமானவர்கள் அல்ல.

நல்லவர்கள், கண்ணியமானவர்கள், அன்பானவர்கள், நாகரிகமானவர்கள், படித்தவர்கள் என்றெல்லாம் தோற்றம் தருகின்ற காதலர்களின் குடும்பத்தினர் ஏன் இந்தக் காதலை எதிர்க்கிறார்கள் என்ற விவகாரத்தை இயக்குனர் கிளறியிருந்தால் அவர்களது தோலைக் கொஞ்சம் உரசியிருந்தால் துர்நாற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டிருக்கும். அந்த மோதலினூடாகக் காதலர்கள் தங்கள் சொந்த நிறத்தையும், தரத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியிருக்கும். எனவேதான் விசயத்திற்குள் போகாமல் காதலா, பாசமா என்றொரு மோசடியான உணர்ச்சி நாடகத்தை நடத்தி எல்லா ‘நல்லவர்களையும்’, தயாரிப்பாளரையும் சேர்த்துக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டார் இயக்குநர்.

இறுதிக் காட்சியில் சிறிய மாற்றம் செய்து தப்பி ஓடிய காதலர்கள் சிக்கிக் கொள்வதாக அமைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ”நம்மள வெட்டணும் குத்தணும்னு நம்ம குடும்பத்துக்காரங்க அலையறதுக்குக் காரணம், அந்த அளவு அவுங்க நம்ம மேல பாசமாக இருக்கிறதுதான்” என்று கதாநாயகி கூறிய விளக்கம் நிரூபணமாகியிருக்கும்.

சுவாரசியமான பாசம்தான். பெற்ற பிள்ளையை விடப் பாசமாக ரேஸ் குதிரைகளை வளர்க்கும் பணக்காரர்கள், அந்தக் குதிரையால் பந்தயத்தில் வெற்றி பெற முடியாவிட்டால், அதனால் தன் கவுரவமும் குதிரையின் கவுரவமும் சேர்த்துப் பாதிக்கப்படும் என்ற கவலையால் அதனைச் சுட்டுக் கொன்று விடுவார்களாம். சாதி வெறியர்கள் பெற்ற பிள்ளைகளையே வெட்டிக் கொல்வது கூட இத்தகைய ‘பாச உணர்வு’ காரணமாகத்தான்.

எந்த லட்சியமும் வேண்டாம்; அதற்காகப் போராடுவதும் வேண்டாம்; காரியவாதமே சிறந்த பண்பாடு என்ற போக்கு பரவிவரும் இன்றைய சூழலில், நோகாமல் லாட்டரிப் பரிசு போல காதலும் வெற்றியடைய வேண்டும் என்று கருதுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது போலும்!

காதல் கோட்டை படம் பார்த்துவிட்டுக் கைப்பையில் தன் முகவரியை எழுதி வைத்து, அந்தப் பையை பேருந்தில் வேண்டுமென்றே தவறவிட்டுவிட்டு, யாராவதொரு ‘அஜித்’ அதைக் கண்டெடுப்பான் என்ற கனவில் இருந்தாளாம் ஒரு பெண். பையை எடுத்தவன் ஒரு ரவுடி. பிறகு அந்தக் காதல் கோட்டையிலிருந்து தப்பிக்க அந்தப் பெண் போலீசை நாட வேண்டி வந்தது. இது அப்போது வந்த பத்திரிக்கைச் செய்தி.

ரசிகைகள் யாரும் காதலனிடம் சங்கிலியைத் தவற விடவேண்டாம்; சங்கிலி திரும்பாது. ரசிகர்கள் யாரும் சங்கிலியைத் திருப்பிக் கொடுக்க காதலி வீட்டுக்குப் போக வேண்டாம்; ஆள் திரும்ப முடியாது.

____________________________________________________

புதிய கலாச்சாரம், ஜூலை 1998

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்!

18

முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கோர் இரத்த சாட்சியமாய், நோக்கியா நிறுவனத்தின்  இயந்திரத்தால் கழுத்தறுக்கப்பட்டு, ஈராண்டுகளுக்கு முன்பு படுகொலையான இளந்தொழிலாளி அம்பிகாவை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

இதோ அதன் நீட்சியாய் தனது இடது கை விரல்களைப் பறிகொடுத்து கூடவே தனது எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு தெருவில் நிற்கிறார், கலைவாணன் என்ற 22 வயது இளம் தொழிலாளி.  செயல்துடிப்புமிக்க அந்த இளைஞனின் இணையில்லா கடும் உழைப்பையும் குருதியையும் சேர்த்தே சுவைத்து விட்டு, இன்று எஞ்சிய சக்கையாய் வெளியேற்றியிருக்கிறது, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஜே.கே.எம். டைனமிக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்.

அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த கலைவாணன், தொழிற்படிப்பை முடித்துவிட்டு தொழில் பழகுநராக ஜே.கே.எம்.டைனமிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இணைகிறார். அவருக்கு இரண்டுநாள் மட்டுமே பயிற்சி அளித்த நிர்வாகம், 300 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்திலும் உயர் அழுத்தத்திலும் இயங்கக்கூடிய அபாயம் நிறைந்த அந்த இயந்திரத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் வழங்குகிறது.

தொழில் பழகுநரான கலைவாணனுக்கு நிரந்தர தொழிலாளிக்கு நிகரான உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஷிப்ட் ஒன்றிற்கு அவர்கள் நிர்ணயிக்கப்படும் அளவை விட குறைவான எண்ணிக்கையில் உற்பத்தியை காட்டினால், நிர்வாகத்தின் குடைச்சலுக்கும் நெருக்குதலுக்கும் ஆளாக நேரிடும். அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை எட்ட வேண்டுமானால், இரண்டு நிமிடங்களுக்குள்ளாக ஒரு பொருளை உற்பத்தி செய்தாக வேண்டும். “மாடர்ன் டைம்ஸ்” திரைப்படத்தில் வரும் காட்சியைப்போல, உணவுக்கும் இயற்கை உபாதைக்கும் ஒதுக்கும் சொற்ப நேரம் போக மீத நேரமெல்லாம் இயந்திரத்தின் மற்றுமோர் உறுப்பாய் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து தானும் இயங்கியாக வேண்டும். அவ்வாறே, இயங்கியும் வந்தார் கலைவாணன்.

அதிக வெப்பத்திலும் அதிக அழுத்தத்திலும் இயங்கக்கூடிய அபாயம் நிறைந்த இயந்திரம் என்பதினாலேயேதான், எதிர்பாராமல் ஏற்படும் மனித தவறுகளால் தொழிலாளியின் உடல் உறுப்புகள் இயந்திரத்தில் சிக்கி விபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவும் தான், இத்தகைய இயந்திரங்களில் “சென்சார்” கருவிப் பொருத்தப்படுகிறது. குறிப்பாக, கலைவாணன் இயக்கிய இயந்திரத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை, அச்சுவார்க்கப்பட்ட பொருளை வெளியே எடுக்கவும், அதனிடத்தில் அச்சுவார்ப்பிற்காகப் புதிய பொருள் ஒன்றை வைக்கவும் வேண்டும். எனவே, மனித உறுப்புகளின் குறுக்கீடு என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிறது.

இயந்திரம் இயக்கநிலையில் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக மனித உறுப்புகள் குறுக்கிடுமேயானால் சென்சார் கருவி செயல்பட்டு இயந்திரத்தின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும். முதலாளி தீர்மானிக்கும் உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு ‘குறுக்கீடாக’ இருக்கும் இந்த சென்சார் கருவியின் செயல்பாடு இங்கே துண்டிக்கப்பட்டது. இப்படித்தான் கலைவாணன் தனது இடது கை விரல்களை இழந்தார். இவ்வாறு, கரணம் தப்பினால் மரணம் என்ற அபாயகரமான சூழலில் உற்பத்தியில் ஈடுபடுத்திய, மனித உணர்ச்சி ஏதுமற்ற முதலாளித்துவ இலாபவெறிதான்  கலைவாணனின் கைவிரல்களை பறித்துச் சென்றது.

குறுகிய கால அவகாசத்திற்குள் அதிக தூரத்தை கடந்தாக வேண்டுமென்பதற்காக, அதிவேக பயணத்தில் ‘குறுக்கீடு’களே இருக்கக்கூடாது என்று “பிரேக் ஷூவை” அறுத்தெறிந்துவிட்டு வாகனத்தை இயக்குவதற்கு எந்த மடையனும் துணிவதில்லை.  ஆனால், தொழிற்சாலைகளில் சென்சார் கருவிகள் செயலிழக்க வைக்கப்படுகின்றன. பாதுகாப்பற்ற பயணத்தின் ஓட்டுநர் இருக்கையில் இளம் தொழிலாளர்கள் அமர்த்தப்படுகின்றனர்.

திட்டமிட்ட கொலை முயற்சிக்கு நிகரான, இந்த விபத்திற்கு ஜே.கே.எம். டைனமிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தார்மீகப் பொறுப்பைக்கூட ஏற்கவில்லை. நண்பர்களின் ஆதரவோடு, அவர்களது அறையில் தங்கிக்கொண்டு இராயப்பேட்டை அரசுமருத்துவனையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்றிருக்கிறார், கலைவாணன். தொடர் மருத்துவ சிகிச்சை குறித்தும், இழப்பீடு குறித்தும் பலமுறை தொலைபேசியில் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராஜனை தொடர்புகொண்டிருக்கிறார், கலைவாணன். பெரும்பாலான நேரங்களில் இவரது இணைப்பைத் துண்டித்துவிடும், ராஜன், ஒருகட்டத்தில் “இதுதான் எனக்குப் பொழப்பா?” என எரிந்து விழுந்திருக்கிறார். சட்டப்படி உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு, தொழில்பழகுனராக மேற்கண்ட நிறுவனத்தில் பணியாற்றியதற்கான எந்தவித ஆதாரமும் இல்லாமல், தொடர் மருத்துவசிகிச்சைக்கும் வழி இல்லாமல் சொந்த ஊருக்கும் சென்னைக்குமாக திக்கற்று அலைந்து கொண்டிருக்கிறார், கலைவாணன்.

இது தனிப்பட்ட கலைவாணனுக்கு மட்டுமே நேர்ந்து விட்ட அவலமும் அல்ல; அந்த குறிப்பிட்ட தொழிற்சாலையில் மட்டுமே நிகழக்கூடிய முறைகேடுமல்ல! சிறப்புப்பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இயங்கும் இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட கொத்தடிமைக்கூடாரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன இந்த அவலங்களும் முறைகேடுகளும்.

தொழில் பழகுநரை சட்டவிரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்துவது தொடங்கி தேர்வுநிலை தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, தற்காலிக தொழிலாளி எனப் பலப்பிரிவுகளை ஏற்படுத்தி அற்ப கூலி கொடுத்து ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள், இளம்தொழிலாளர்கள். சட்டப்படியான குறைந்தபட்சக்கூலி, எட்டுமணிநேர வேலை, பணிபாதுகாப்பு இவை எதுவும் கிட்டாத போதும் அதுகுறித்து அக்கறை கொள்ளாமல், “பல்லைக்கடித்துக்கொண்டு நிர்வாகம் சொல்லும் படிநிலைகளைத் தாண்டிவிட்டால் சில ஆண்டுகளில் நாமும் நிரந்தரமாக்கப்படுவோம்” என்ற நப்பாசையில் இந்தக் கொத்தடிமைத்தனத்தை சகித்துக்கொள்ளும் அவல மனநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர், இவ்விளம் தொழிலாளர்கள். இந்தப்படிநிலைகளும், கால அளவுகளும் தொழிற்சாலைகளுக்கேற்ப மாறுபடுகின்றன.

தாம் நிரந்தரமாக்கப்பட வேண்டுமானால், நிர்வாகம் நிர்ணயிக்கும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்தாக வேண்டும். எட்டுமணிநேரம் என்பதற்குப் பதில் பத்து மணிநேரம் பணிபுரிந்தாகவேண்டும். எத்தகைய அபாயகரமான சூழலில் தாம் வேலைக்குப் பணிக்கப்பட்டாலும் சிறு முணுமுணுப்பைக்கூட வெளிக்காட்டாமல் அவற்றை ஏற்றாக வேண்டும். நியாயம், தர்மம், சட்டவிதிகள் இந்த சொற்களின் பயன்பாட்டை முற்றிலும் துறந்தாக வேண்டும். நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற வேண்டுமானால், இவற்றையெல்லாம் செய்தாக வேண்டும்.

இவ்வளவிற்குப்பிறகும், நிர்வாகம் சொல்லும் இந்தப்படிநிலைகளை கடந்து வந்தால் கூட வேலை உத்திரவாதமா என்றால் அதுவுமில்லை. ஏதோ ஒரு மொன்னையான காரணங்களைக்கூறி நிரந்தரப்படுத்துவதற்கான வாய்ப்பு திட்டமிட்டே மறுக்கப்படுகிறது. அதிகபட்சம் ஆண்டொன்றுக்கு ஆயிரம் பேரில் ஒரு பத்து பேரை நிரந்தரமாக்கினால் அதுவே அதிசயம். இதனை நன்கு அறிந்திருந்தும், அந்த பத்து பேரில் ஒரு நபராக நாம் சென்றுவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் நிர்வாகத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை ஏற்கும் மனநிலைக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர், இவ்விளம் தொழிலாளர்கள்.

முதலாளித்துவ இலாபவெறிக்கு  தன் உயிரை கொடுத்து; உடல் உறுப்புகளைஇழந்து; இளம்பெண்கள் தம் இளமையை இழந்து, இறுதியில் “யூஸ் அன்ட் த்ரோ”ப் பொருட்களைப்போல எதற்கும் இலாயக்கற்ற  குப்பைகளாய் அன்றாடம் தூக்கியெறியப்படும் தொழிலாளர்கள் எத்தனை ஆயிரம் பேர்?  அன்று அம்பிகாவை இழந்தோம். இன்று கலைவாணன்  தனது இடது கை விரல்களை இழந்திருக்கிறார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே என்று நிம்மதியாக ஒதுங்கித்தான் சென்று விட முடியுமா?

செயல்துடிப்பும், வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற வேட்கையும் கொண்ட, வேடந்தாங்கல் பறவைகளாய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திங்கே குவிந்திருக்கும், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பணியாற்றும் இளம் தொழிலாளர்களே! இப்பொழுது, சொல்லுங்கள், உங்களுடனே எப்பொழுதும் சிரித்துப்பேசி, சக இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொண்ட சக தொழிலாளியின் இன்றைய நிலையென்ன? ஒற்றுமையாய் இரை தேடி வந்த பறவைகள்,  நாளுக்குநாள் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு இரையாகிக் கொண்டிருப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது, உங்களால்? இன்னும் எத்தனை அம்பிகாவையும், கலைவாணன்களையும் முதலாளித்துவ இலாபவெறிக்கு இரையாக்கப்போகிறோம்? இந்த நிலை நாளை நமக்கும் வராது என்பதற்கு என்ன நிச்சயம்?

சக தொழிலாளியை காப்பது இருக்கட்டும், நாளும் அதிகரித்துவரும் முதலாளித்துவக் கொடுங்கோண்மையிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் கூட, நாம் குறைந்த பட்சம் ஓர் சங்கமாய் சேர்ந்தாக வேண்டும். கலகக்குரல் எழுப்புவது இருக்கட்டும், அதற்கு முன் சிறு முணுமுணுப்பையாவது பதிவு செய்தாக வேண்டும். தொழில்பழகுநர், தேர்வுநிலை தொழிலாளி, ஒப்பந்தத்தொழிலாளி, தற்காலிக தொழிலாளி, நிரந்தர தொழிலாளி என்ற பிரிவினைகள் கடந்து, முதலாளித்துவத்தால் வஞ்சிக்கப்படும் தொழிலாளி வர்க்கம் என்று நெஞ்சு நிமிர்த்தி நின்றாக வேண்டும்.

“நாம் மட்டுமே பேசி என்ன செய்துவிட முடியும்? இதையெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது சார்” என்ற விரக்தி நிறைந்த வார்த்தைகள் உங்களுடையதென்றால், உம்மை நோக்கித்தான் நீள்கிறது எம் கரங்கள்!

முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக, உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக களத்தில் நின்று களமாடிக்கொண்டிருக்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. உரிமைக்குரல் எழுப்பும் சங்கம். இது உமக்கான சங்கம்.

கரம் கோருங்கள், களம் காணுவோம்!

__________________________________________________

–          இளங்கதிர்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

டைம் – மன்மோகன்:சிரிப்பு சீனுகளுக்கிடையில ஒரு அழுகை சீனு!

7

டைம்-மன்மோகன்

டைம் பத்திரிக்கைகாரன் மன்மோன் சிங் படத்த அட்டையில போட்டு ஏசியிருக்கானாம். காங்கிரசு அமைச்சருங்களும் கட்சிக் காரனுங்களும் அத கண்டிக்கதும், பிஜேபிகாரன் இதான் கோளுன்னு சத்தம் போடுறதும்னு டீவிகாரனுங்களுக்குத்தான் ஒரே கொண்டாட்டம். ஜனாதிபதி எலக்சன், பிராணாப்பு, சங்மான்னு சிரிப்பு சீனுகளுக்கு நடுவுல இப்பிடி ஒரு அழுக சீன்.

‘2002ல தூங்கி வழிஞ்ச டிரைவர்னு ஒங்காளு வாஜ்பாயிய இதே டைம் சொல்லிச்சேன்னு’ சிதம்பரம் பிஜேபிட்ட கேக்காரு. இதுக்கெடையில ‘காங்கிரசு காரனுங்க டைம்க்கு பதிலா டைம்ஸ் ஆப் இந்தியாவ எரிச்சிட்டாங்க’ன்னு இன்டர்நெட்டுல எல்லா பயக்களும் சிரிக்கானுங்க. ‘டைம்ணா என்ன டைம்ஸ் ஆப் இந்தியாண்ணா என்ன, ரெண்டுலயும் டைம் இருக்குல்லான்னு கையில கெடச்சத எரிச்சிருக்கான் காங்கிரசுகாரன், வேட்டிய கிழிக்க பயலுவளுக்கு அடிமையா கெடந்து பழக்கப்படவனுக்கு அறிவு எங்கனயிருந்துடே வரும்?

டைம்ங்கறது நம்ம நக்கீரன், ஜூனியர் விகடன் போல 90 வருசத்துக்கு முன்னாலயே, அமெரிக்காகாரன் ஆரம்பிச்ச பத்திரிகையாம். ஹேடன்கிற கொஞ்சாம் சோக்கான மனுசன், செய்திகள படிக்கிறவனுக்கு ஜாலியா போடணும்னு அன்னைக்கே யோசிச்சிருக்கான். கம்பெனிகாரனுகோ மொதல் போட்டு மொதல் எடுக்க வசதி செய்யறதுக்காக அமெரிக்காகாரன் ஒலகம் பூரா போட்டு வச்சிருந்த ரேடியோ ஸ்டேசன், டிராமா தியேட்டர் இங்கேல்லாம் எடம் பிடிச்சி டைம் பத்திரிகையையும் ஒலகம் பூர பரப்பினானுங்களாம்.

இப்போ டைம் பத்திரிகை அமெரிக்கால ஒரு மாரி, ஐரோப்பால ஒரு மாரி, ஆசியால ஒரு மாரி, ஆஸ்திராலியால ஒரு மாரின்னு அந்தந்த ஊருக்கேத்த மாரி வருகாம்! இந்த மாசம் 16-ம் தேதி போட்ட ஆசியா டைம் பத்திரிகை அட்டைலதான் மன்மோகன் சிங்கு படத்த போட்டுருக்கான்.

இந்த மன்மோகன் சிங், வாஜ்பாயிக்கெல்லாம் முன்னாலயே டைம் அட்டையில எடம் புடிச்சது யாரு தெரியுமா? பர்வீன் பாபின்னு ஒரு இந்தி சினிமாக்காரி. நம்ம ஊரு ஜெயமாலினி மாதிரி கவர்ச்சியா டேன்ஸ் ஆடக் கூடிய பர்வீன் பாபி சான்சு கெடச்சா கொணச்சித்திரமாவும் நடிக்கும். இந்தி சினிமா பத்தி ஒரு கட்டுரை போடும் போது 1976-ம் வருசம் ஐரோப்பா டைம் அட்டைல அவ படத்த போட்டுருக்கான் டைம் காரன்.  நம்ம ஊருல இருந்து போயி வெள்ளக்காரன் ஊருல வேல பாக்கக் கூடிய ஆளுக ஜொள்ளோட பொஸ்தகம் வாங்கணும்னா, இந்த மாரி சினிமா ஆளுக படத்த அட்டையில போடறான்.இடைக்கெடை அரசாளுர கோமாளிகளையும் போடுதான். இப்போ நம்ம நாட்டப் பத்தி அமெரிக்கா காரனுக்கும் டைம் புஸ்தம் படிக்கிறவனுங்களுக்கும் சங்கடம் வந்திருக்கும் போது மன்மோகன் சிங்கு படத்த அட்டையில போட்டிருக்கான்.

மன்மோகன் சிங் நம்ம நாட்டுக்கு என்ன செய்தாருங்கிறதயும் பர்வீன் பாபி சினிமால டான்ஸ் ஆடி நாட்டுக்கு என்ன செய்தாங்கிறதயும் ஒண்ணிச்சி பாக்கணும்.

ராஜீவ் காந்தி காலத்துல கலர் டீவி, பெரிய காரு, போபோர்சு பீரங்கின்னு வெளிநாட்டு பொருளையெல்லாம் எறக்குமதி செய்ய பெர்மிசன் கொடுத்து நம்ம ஊருல இருக்க பணத்தையெல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பிட்டானுங்க பாத்துக்கோ. ராஜீவ் காந்தி  தோத்த பொறகு விபி சிங்கு வந்து இன்னும் குட்டிச் சொவுராக்கினாரு. ஒரு கட்டத்துல வெளிநாட்டுல இருந்து பெட்ரோல் வாங்கணும்னா கூட கைல பைசா இல்லாம நம்ம ஊரு தங்கத்தையெல்லாம் கப்பல்ல ஏத்தி லண்டனுக்கு அனுப்பி அடகு வக்க வேண்டி போச்சு!

எடத்தக் கொடுத்தா மடத்தப் புடிக்கிற அமெரிக்காகாரன், நம்ம அரசியல் வாதிங்க குடுமியைப் புடிச்சி உலுக்க ஆரம்பிச்சிட்டான். ‘நான் சொல்றத கேட்டாத்தான் கடன் கொடுப்பேன்’னு அவன் ஆளு மன்மோகன் சிங்க நைசா நிதி அமைச்சராக்கிட்டான். இன்னைக்கும் சுப்பிரமணியம் சாமி இந்த மன்மோகன் சிங்க தாங்குறான்னா அது சும்மா இல்ல, தெரிஞ்சுக்கோ.

obama-Manmohan-Singh-cartoonமன்மோகன் சிங்கு நாட்ட தொறந்து விட்டு சொத்தையெல்லாம் எல்லா வெளி நாட்டுக்காரனும் கொள்ளை அடிக்க ஏற்பாடு செஞ்சாரு. 1994-ல எவனுக்கும் தெரியாம காட் ஒப்பந்தத்தில கையெழுத்த போட வச்சு காலா காலத்துக்கும் நம்மள அடிமையா எழுதிக் கொடுத்துட்டாரு.

கொள்ளக் கூட்டம் உள்ள வந்ததுல கொள்ளைக்கு எடுபுடியா வேல பாத்து சம்பாத்தியம் செஞ்சு காரு, பிளாட்டு, ்பிளாட்டுன்னு ருசி பார்த்த நம்ம ஊரு பயலுக கொஞ்ச பேரு மன்மோகன் சிங்குக்கு ரசிகனாயிட்டானுங்க. 2004-ல காங்கிரசு திரும்பயும் ஜெயிச்சி, சோனியா காந்தி தியாகச் சொடரா பிரதமர் பதவிய தூக்கி எறிஞ்சதும் மன்மோகனுக்கு கோளு அடிச்சு பிரதம மந்திரியாவே ஆயிட்டாரு. சிபிஎம்மு சிபிஐ கச்சிகளையும் கூடச் சேர்த்துக்கிட்டு இல்லாத கூத்தெல்லாம் அடிச்சாரு.

2005-ல அமெரிக்கா போகும் போது ‘எதாவது ஒப்பந்தம் கிப்பந்தம் போடப் போறியா’ன்னு கேட்ட பயலுகளுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துட்டு ராணுவ, அணு சக்தி ஒப்பந்தம் போட்டுட்டாரு. நேரம் பாத்து நைசா போலி கம்முயூனிஸ்டு கச்சிகளை கழத்தி விட்டுட்டு அணு சக்தி சட்டத்த போட்டாரு. அமெரிக்காகாரன் சொல் பேச்சு கேட்டு செல்போனு, கரண்டு, பள்ளிக் கூடம்னு எல்லாத்தையும் தனியாருக்கு தொறந்து விட்டாரு.

செல்போனு அலக்கத்தைய தனியார் கம்பெனிகளுக்கு கொடுக்கிறதுல 1.76 லச்சம் கோடி ரூவா கொள்ளை, நிலக்கரி தோண்டற விவகாரத்தில 10 லச்சம் கோடி ரூவாக்கு மேல கொள்ளைன்னு தனியாரு கம்பெனிக கொழிக்கிறானுங்க.

‘நாம இவ்வளவு செஞ்சும் அமெரிக்காகாரனுக்கு நன்னி இல்லையே’ன்னு மன்மோகன் சிங் கொமைஞ்சுகிட்டுருக்காரு, சிதம்பரம் மாரி ஆளுங்க ‘நமக்கும் நாளக்கி இதே கதிதானோ’ன்னு மூக்கை உறிஞ்சுறானுங்க.

மன்மோகன் சிங நெறைய செஞ்சிருக்காருதான், இல்லைங்கல, ஆனா இப்போ கொஞ்ச காலமா கொணம் இல்ல. அதான் வெவகாரம். மன்மோகன் சாதிக்கலைன்னா டைம் காரன் சொல்லுறான், சாதிச்சது போறலைங்கறான், அவ்வளவுதான். தெரிஞ்சுக்கோ.

‘நம்ம நாட்டுக்கார பயலுக இதெயெல்லாம் புரிஞ்சுகிட்டு போராட ஆரம்பிச்சிறக் கூடாது’ன்னு கவனமா இருக்க வேண்டியிருக்கு, ‘எதிர்க் கட்சிக்காரன் சான்சு கெடச்சா நம்மள கவுத்துட்டு அவனே அடியாள் சேர்ல உக்காந்திருவானோ’ன்னு பயமும் உண்டு. அதனால கொஞ்சம் பார்த்து பார்த்துதான் செஞ்சு தர வேண்டியிருக்கு, இடையில ஒண்ணுக்கும் லாயக்கில்லாத எலவச திட்டங்கள்ல கெவர்ன்மென்டு பணத்தை எறைச்சு மக்கள பைத்தியாரன் ஆக்க வேண்டியிருக்கு!

இதுதான் நம்ம மொதலாளிகளுக்கும் வெளிநாட்டு எடுபிடிகளுக்கும் ஆங்காரமா இருக்கு. ‘எலவசத்தையெல்லாம் ஒழிக்கணும், இந்த நாடே உருப்படாது, காசு இல்லாதவனையெல்லாம் சுடணும்’னு சத்தம் போடறானுங்க.

நம்ம ஊருல பலசரக்குக் கடை வைக்க வெளிநாட்டு கம்பெனிகாரனுங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கல, பள்ளிக் கூடமும் காலேஜூம் தொறக்க வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வாய்ப்பு இல்ல, இன்சூரன்சு, பேங்கு இதிலைல்லாம் தனியாருக்கு கொடச்சல் கொடுக்குற சட்டங்க நிறைய இருக்கு. மலையையும் காட்டையும் தோண்டி அலுமினியமும் இரும்பும் கொள்ளை அடிக்கலாம்னா அதுக்கு மாவோயிஸ்டுக முட்டு வைக்கானுங்க.

இதுக்கெல்லாம் சேர்த்துதான் மன்மோகன் சிங்க அட்டையில போட்டு, ‘இந்த ஆளு செய்தது வரை சரிதான், ஆனா போறாது, மேக்கொண்டு நம்ம சோலிக்கு வேற ஆள பாக்கணும்’னு டைம் காரன் சொல்லுறான்.

‘அமெரிக்காகாராளே சொல்லிட்டா, மன்மோகன் சிங் போயிறணும்னு’  குதிக்கிறான் பிஜேபி காரன்.  அமெரிக்காகாரனுக்கு வால் பிடிக்க நமக்கு ஒரு சான்சு கெடைக்காதான்னு அவனுக்கு நப்பாசை. ‘அவாள் 2002-ல வாஜ்பாயியையும்தான் ஏசுனா’னு காங்கிரசுகாரன் சமாளிக்கப் பாக்குறான்.

அடுத்தாப்புல அமெரிக்காவுக்கு புடிச்சா மாரி ஒரு பிரதமரை நீரா ராடியாவை விட ஒசந்த அரசியல் புரோக்கர்களும், பர்கா தத்தை விட ஒசந்த பத்திரிகை புரோக்கர்களும் பேசி ஒரு முடிவெடுப்பாங்க, பாத்துக்கோ.

அந்த பிரதமரையும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் ‘ரைட்டு’ நமக்குத்தாம்ல, அத மட்டும் விட்டுக் கொடுத்துறக் கூடாதுன்னு குதிக்கிற பயலுவ இனியாவது திருந்துங்கடே!

__________________________________________

வடசேரி நாகராசன்

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: