Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 735

கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -4

3
கறுப்பு-பணம்

னக்கு ஒரு கனவு உண்டு. எந்த தேசமும் சொந்தம் கொண்டாட முடியாத வகையில், நமக்கு மட்டும் சொந்தமான ஒரு தீவை விலைக்கு வாங்க வேண்டும். எந்த தேசத்துக்கும் சமூகத்துக்கும் கட்டுப்படத் தேவையில்லாத, உண்மையிலேயே நடுநிலையான அந்த மண்ணின் மீது டௌ நிறுவனத்தின் உலகத் தலைமையகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.’

கார்ல் கெர்ஸ்டாக்கர், தலைவர், டௌ கெமிக்கல்ஸ்,1972.

கறுப்பு-பணம்இந்தியாவிலிருந்து வெளியேறிய கறுப்புப் பணம், அந்நிய முதலீடாக வேடமணிந்து இந்தியாவுக்குள் நுழைவதை முன்னேற்றம் என்று கொண்டாடிக் கொண்டே, கறுப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்கிறது அரசு என்று குறிப்பிட்டு, ஜூலை இதழில் இக்கட்டுரைத் தொடரை நிறுத்தியிருந்தோம்.

2009  ஆம் ஆண்டில் இந்தியாவில் போடப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகளில், 21% மொரிசியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்களின் மூலம் நுழைந்திருக்கும் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் கறுப்பு பணம்தான் என்கிறது ஐ.எஸ்.ஐ.டி. என்ற ஆய்வுக் கழகத்தினைச் சேர்ந்த பேரா.சலபதி ராவ், பிஸ்வஜித் தர் ஆகியோருடைய ஆய்வு.

இதுவன்றி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் ( FII ) மூலம் இந்தியப் பங்குச்சந்தைக்குள் அன்றாடம் நுழைந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான டாலர்களுக்குள்ளேயும் இந்தியக் கறுப்பு பணம் இருக்கிறது. அது சர்வதேச நிதிமூலதனம் என்ற பரமாத்மாவில் ஐக்கியமாகிவிட்ட தேசிய கறுப்புப் பண ஜீவாத்மா. அதனைப் பிரித்தறிவது கடினம்.

“இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்பட்ட சட்டவிரோத (கருப்பு) பணத்தின் கணிசமான பகுதி, ஹவாலா, வரியில்லா நாடுகள் மூலமான அந்நிய நேரடி முதலீடு, இந்திய கம்பெனிகளுக்கான பன்னாட்டு முதலீட்டு வரவுகள் (GDR), பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் ஆகிய வடிவங்களில் மீண்டும் இந்தியாவுக்குள்ளேயே நுழைந்திருப்பது சாத்தியமே” என்று கூறுகிறது நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்டிருக்கின்ற கறுப்பு பணம் குறித்த வெள்ளை அறிக்கை.

மேற்கூறிய ‘கருப்புப் பண‘ தீவுகளெல்லாம் ஏதோ சட்டத்திற்கு உட்படாத மர்மமான பிராந்தியங்கள் போலவும், அவர்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசுகள் முயன்று கொண்டிருப்பதைப் போலவும், இந்திய அரசும் அவ்வாறு முயன்றால், கறுப்புப் பணம் மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு வந்துவிட முடியும் என்பதைப் போலவும் உருவாக்கப் படும் சித்திரம் அபத்தமானது, மோசடியானது என்பதை இத்தொடரில் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம்.

நிக்கோலஸ் ஷாக்ஸன் என்ற பொருளாதாரப் பத்திரிகையாளர் எழுதி, சென்ற ஆண்டு வெளிவந்துள்ள “டிரஷர் ஐலேண்ட்ஸ்  வரியில்லா சொர்க்கங்களும், உலகத்தைக் கொள்ளையிடும் மனிதர்களும்” என்ற நூல், ஏகாதிபத்தியங்கள் இந்தக் கடல் கடந்த சொர்க்கங்களைத் திட்டமிட்டே எப்படி உருவாக்கின என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது.

கடல் கடந்த சொர்க்கங்கள் எனப்படுபவை, சுயேச்சையான அரசுகள் அல்ல; அவை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற உலகின் வல்லரசுகளால்  கட்டுப்படுத்தப்படும் வலைப்பின்னல்கள் என்பதை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார், ஷாக்ஸன்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சரிந்து விட்ட தனது உலக சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ள இயலாத பிரிட்டன், உலகின் நிதி மூலதனத்தைத் தன்னை நோக்கி ஈர்க்கும் பொருட்டு இலண்டன் மாநகரத்தையே உலக கோடீசுவரர்களின் பணத்தைப் பாதுகாக்கும் ரகசியச் சுரங்கமாக மாற்றியது என்கிறார் ஷாக்ஸன். பிரிட்டிஷ் அரசின் சட்டங்களுக்கு, குறிப்பாக நிதி மற்றும் வரிகள் தொடர்பான சட்டங்களுக்கு அப்பாற்பட்ட, ஒரு தனித் தீவாக, ‘சிட்டி ஆப் லண்டன்’ என்ற நிதி நகரத்தைச் சட்டபூர்வமாக உருவாக்கியதுடன், உண்மையான இலண்டன் நகரத்துக்கான மேயரைப் போன்றே, இந்த நிழல் நகரத்துக்கும் ஒரு மேயரை உருவாக்கியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.

இப்படி உலகெங்குமுள்ள முதலாளிகளும் கோடீசுவரர்களும், தத்தம் நாட்டின் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு இடத்தில், தமது பணத்தை இரகசியக் கணக்குகளில் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும் என்பதற்கான சாத்தியத்தை உருவாக்கியதே பிரிட்டன்தான்.

இன்று மொரிசியஸ் உள்ளிட்ட வரியில்லா சொர்க்கங்களில்  கம்பெனிகளைப் பதிவு செய்து கொண்டு வரி ஏய்ப்பு செய்பவர்கள், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை இன்னொரு நாட்டில் உள்ள தனது நிறுவனத்தின் கிளைக்கே பத்து ரூபாய்க்கு விற்றதாகக் கணக்கெழுதி ( Transfer pricing) நட்டக்கணக்கு காட்டி வரி ஏய்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் பிதாமகர்களே பிரிட்டனைச் சேர்ந்த ஏகபோக முதலாளிகளான வெஸ்டே சகோதரர்கள்தான் என்பதையும் தனது நூலில் கூறுகிறார் ஷாக்சன்.

பிரிட்டனின் காலனியாக இருந்த 14 சிறிய தீவுகளை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கடல் கடந்த பிரிட்டிஷ் பகுதிகளாக (Overseas British Territories) அறிவித்துக் கொண்டது பிரிட்டன். இன்று வோடஃபோன் வழக்கில் 11,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கும் ஹட்சின்சன் வாம்போவா நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்கும் கே மேன் தீவுகள் உள்ளிட்ட இந்த 14 சொர்க்கத்தீவுகள் கொண்ட வலைப்பின்னலின் சிலந்தி, இலண்டன் நிதி நகரம். வெறும் 54,000 பேர் மக்கட்தொகை கொண்ட கே மேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே 80,000.

பிரிட்டன் நிதி நகரத்தைப் போலவே, அமெரிக்கா, தன் நாட்டுக்குள்ளேயே உருவாக்கியிருக்கும் வரியில்லா சொர்க்கம் டெலாவர் என்ற மாநிலம். ‘பார்ச்சூன் 500‘ என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் டெலாவரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. டெலாவரில் ஒரு கம்பெனியைப் பதிவு செய்து அம்மாநில அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தேவைப்படும் அவகாசம் ஒரே ஒரு நாள் என்று இம்மாநிலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது.

இத்தனை பெரிய வரியில்லா சொர்க்கத்தை தன் நாட்டில் வைத்துக் கொண்டு,கே மேன் தீவுகளில் ஒரே கட்டிடத்தில் 12,000 கம்பெனிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்று அந்த அரசை விமரிசித்தார் ஒபாமா. “அது உலகின் மிகப்பெரிய கட்டிடமாக இருக்கவேண்டும், அல்லது  மிகப்பெரிய ஊழலாக இருக்க வேண்டும்” என்று கேலி செய்தார்.

இதற்குப் பதிலளித்த கேமேன் தீவுகளின் நிதித்துறை ஆணையர், டெலாவர் மாநிலத்தில், 1209, வடக்கு ஆரஞ்சு தெரு, வில்மிங்டன்  என்ற முகவரியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கோகோ கோலா, போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், கென்டகி சிக்கன், கூகிள், டாயிஷ் வங்கி உள்ளிட்ட 2,17,000 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஒபாமாவுக்கு நினைவுபடுத்தி, ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிக்கக் கூடாது என்று ஒபாமாவுக்கு சூடு வைத்தார்.

உலகத்தில் உள்ள வரியில்லாத கறுப்புப் பண சொர்க்கத் தீவுகளைப் பட்டியலிட்டால், அதில் முதல் இரண்டு இடங்கள் இலண்டனுக்கும் டெலாவருக்கும்தான் என்கிறார் ஷாக்சன்.

கறுப்பு-பணம்

உலகமுழுவதிலும் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளும், கோடீசுவரர்களும் வரி ஏய்ப்பு, கள்ளக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் மூலம் தாங்கள் ஈட்டிய பணத்தை, பினாமி பெயர்களில் முதலீடு செய்வதற்குத் தெரிவு செய்யும் சொர்க்கத் தீவு எது?

‘டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க்‘ என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு 2009   நவம்பரில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளும், நிதி நிறுவனங்களும் கோருகின்ற நிதித்துறை கள்ளத்தனத்தை (Financial secrecy) பேணுவதில் உலகத்திலேயே இலண்டன் 5  வது இடத்தில் இருக்கிறது. நான்காவது இடம் கேமேன் தீவு, மூன்றாவது இடம் சுவிஸ், இரண்டாவது இடம் லக்சம்பர்க், முதல் இடம் அமெரிக்கா. அதாவது, அம்பானி முதல் ஆ.ராசா வரையிலான யாரும் தங்களது பணத்தை இரகசியமாக முதலீடு செய்து வருவாய் ஈட்ட உகந்த இடம் அமெரிக்கா என்பதே இந்த ஆய்வு முடிவின் பொருள்.

கறுப்புப் பணம் என்பது கட்டு கட்டாக ஸ்விஸ் வங்கியின் இரும்பு பீரோக்களில் வைக்கப்பட்டிருப்பதல்ல. பூட்டி வைக்கப்பட்டால் அது செத்த பணம். உயிருடன் அலைந்து சுரண்டலில் ஈடுபட்டு அல்லது சூதாட்டத்தில் ஈடுபட்டு, பெருக முடிந்தால்தான் அது மூலதனம். பங்குச் சந்தை, நாணயச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் உற்பத்தி போன்றவற்றில் புகுந்து மூலதனம் இலாபமீட்டவேண்டும். அதே நேரத்தில் எந்த நாட்டின் சட்டத்திற்கும் வரி விதிப்பிற்கும் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கக் கூடாது. இதுதான் உலக முதலாளி வர்க்கத்தின் விருப்பம்.

கடந்த சுமார் 25 ஆண்டுகளில், அதாவது உலகம் முழுவதும் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதற்குப் பின்னர், முதலாளி வர்க்கத்தின் இந்த விருப்பம் வெகு வேகமாக நிறைவேறி வருகிறது. முகவரி இல்லாத முதலீட்டு வடிவங்களைச் சட்டபூர்வமானவையாக ஆக்கியதன் மூலம், சட்டவிரோதமானவையெல்லாம் சட்டபூர்வமானவையாகிவிட்டன. கறுப்பு வெள்ளையாகிவிட்டது.

எடுத்துக் காட்டாக, பிரைவேட் ஈக்விடி போன்ற முதலீட்டு நிறுவனங்களில், பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் போன்ற நிதிக் கருவிகளில் (Financial instruments) டாடா, மித்தல், அம்பானி முதலிய தரகு முதலாளிகள் தங்களது வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணத்தையோ, அமைச்சர்கள் தங்களது ஊழல் பணத்தையோ எத்தனை ஆயிரம் கோடிவேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அந்த நிறுவனங்கள் அப்பணத்தை எந்த நாட்டின் பங்குச் சந்தையிலும் சூதாடி இலாபம் ஈட்டும். தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் யார் என்பதை எந்த அரசுக்கும் அவர்கள் காட்டத்தேவையில்லையென்றும், அவர்கள் போட்டிருக்கும் மூலதனத்துக்குக் கிடைக்கின்ற ஆதாயத்திற்கும் (Capital gains) வரி செலுத்த தேவையில்லை என்றும் டெலாவர், இலண்டன், கேமேன் தீவுகள் போன்றவை சட்டமியற்றி வைத்துள்ளன. வரி ஏய்ப்பு, இரகசியம் என்ற இரட்டை ஆதாயங்களை வழங்குவதால்தான் பன்னாட்டு நிறுவனங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் தங்கள் கறுப்பு பணத்தை இங்கே முதலீடு செய்கின்றனர்.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் தனியார்துறை நிறுவனங்கள் வரை பலவற்றிலும் அந்நிய நிதி நிறுவனங்களின் (FII) முதலீடு பெருகி வருகிறது. ஆனால் இப்படி முதல் போடும் ‘அந்நியர்கள்‘ யார் என்பது இந்திய அரசுக்குத் தெரியாது. காரணம், இவை முகமூடி அணிந்த முதலீடுகள். இவ்வாறு “பங்குச்சந்தைக்குள் முகவரி தெரியாத முதலீடுகள் நுழைவது ஆபத்து” என்று ஒருபுறம் ரிசர்வ் வங்கி கூறுவதும், மறுபுறம் “அந்நிய முதலீடுகள் பெருகுவதுதான் முன்னேற்றம்” என்று மன்மோகன் அலுவாலியா கும்பல் கூவுவதும் தொடர்ந்து நாம் கண்டு வரும் காட்சிகள்.

2007அக்டோபரில், அந்நிய மூலதனத்தில் சரி பாதி, பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் என்ற வடிவத்தில் வந்திருப்பது கண்டு பீதியடைந்த செபி (SEBI) அமைப்பு அதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற தகவலை நிதியமைச்சகத்துக்கு அனுப்பியது. இந்த செய்தி கசிந்தவுடன் அக்டோபர் 17  ஆம் தேதி ஒரே நாளில் சென்செக்ஸ் 1744 புள்ளிகள் வீழ்ந்தது. மும்பை பங்குச் சந்தையின் வரலாற்றில் இவ்வளவு மோசமான வீழ்ச்சி நடந்ததில்லை. பங்குச்சந்தையின் செயல்பாடு ஒரு மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பார்ட்டிசிபேட்டரி நோட்டுகளை தடை செய்யப்போவதில்லை என்று காலில் விழாத குறையாக நிதி அமைச்சர் சிதம்பரம் கெஞ்சிய பின்னரே, பங்குச் சந்தை சாதாரண நிலைக்கு திரும்பியது.

தற்போது வோடஃபோன் வரி ஏய்ப்பைத் தொடர்ந்து, வரி தவிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை (GARR) அறிமுகப்படுத்த இருப்பதாக நிதியமைச்சகம் கூறியதும், சுமார் ஒரு இலட்சம் கோடி அந்நிய மூலதனம் வெளியேறியது. உடனே நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , “அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் பார்ட்டிசிபேட்டரி நோட்டுகளாக  முதலீடு செய்துள்ளவர்கள் யார் என்ற கேள்வியை இந்திய வரி அதிகாரிகள் யாரும் கேட்கமாட்டார்கள். சோதிக்கவும் மாட்டார்கள். எனவே, பார்ட்டிசிபேட்டரி நோட் உரிமையாளர்கள் இந்தியாவில் வரி கட்டவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சத்தியம் செய்தார். (தி இந்து, மார்ச்30, 2012)

வரிவிதிப்பு தொடர்பான இந்திய அரசின் கொள்கைகள் அமெரிக்க முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதாக இந்திய அரசை ஒபாமா எச்சரித்தவுடன், “விதிகள் தளர்த்தப்படும்” என்றார் மன்மோகன். அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் தற்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஜி.ஏ.ஏ.ஆர் விதிமுறைகளை உருவாக்கிய வருவாய்த்துறை செயலர் ஆர்.எஸ்.குஜ்ராலும் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டுவிட்டார்.

கறுப்பு-பணம்வோடஃபோன் வரி ஏய்ப்பைத் தொடர்ந்து, 1983இல் மொரிசியசுடன் போடப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யப்போவதாக நிதியமைச்சகம் கூறியவுடனே, அங்கே பெயர்ப்பலகை கம்பெனி வைத்துள்ள இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு கம்பெனிகள் மொரிசியஸ் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்தியாவுக்குப் பத்தி விட்டனர். 1983 ஒப்பந்தத்தை மாற்றவோ, திருத்தவோ வேண்டாம் என்றும், 40 சதுர கி.மீ. பரப்பளவுள்ள ‘அகலேகா‘ தீவுகளை இந்தியாவுக்கு வழங்குவதாகவும், அங்கே இந்தியா கடற்படைத் தளம் அமைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் ஆசை காட்டியிருக்கிறார்.

சமீபத்தில் ஹாங்காங் ஷாங்காய் பாங்கிங் கார்ப்பரேசன் (HSBC) என்ற பிரிட்டிஷ் வங்கியின் மீது அமெரிக்க அரசு பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது. அந்தப் பன்னாட்டு வங்கி மெக்சிகோவைச் சேர்ந்த போதை மருந்து மாஃபியாவின் கறுப்பு பணத்தை அமெரிக்காவுக்குள் முதலீடு செய்திருக்கிறது; சுமார் 700 கோடி டாலரை காகிதப் பணமாகவே மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தி வந்திருக்கிறது. சவூதியை சேர்ந்த இசுலாமிய பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்கைப் பேணுகிறது.

இதேபோல, அமெரிக்க அரசு விதித்துள்ள பொருளாதாரத் தடையையும் மீறி, இரானின் வணிகத்தை கள்ளத்தனமாகச் செய்து கொடுத்ததாக ஸ்டான்சார்ட் வங்கியின் மீதும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால், இத்தகைய அதிபயங்கர குற்றங்களை இழைத்த வங்கிகளுக்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் தண்டனை  அபராதம்!

கறுப்பை வெள்ளையாக்கும் குற்றம் (Money laundering) என்று அழைக்கப்படும் இந்தக் குற்றம் எச்.எஸ்.பி.சி. வங்கியில் நடந்தபோது அதன் தலைவராக இருந்த லார்டு ஸ்டீபன் கிரீன் என்பவர்தான், தற்போது பிரிட்டனின் வர்த்தகத்துறை அமைச்சர்.

இந்த இலட்சணத்தில், கறுப்பு பணத்துக்கு எதிராக அமெரிக்கஐரோப்பிய அரசுகள் தீவிரமான நடவடிக்கை எடுப்பதாகவும், அதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவில்லை என்றும் பாரதிய ஜனதா, காங்கிரசு அரசை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.

கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் நடத்திக் காட்டப்படும் இந்த “திருடன்  போலீசு விளையாட்டில்”, திருடன்தான் போலீசு  கறுப்புதான் வெள்ளை ! இரண்டையும் வேறு வேறாகக் காண்பது நம்முடைய காட்சிப்பிழை.

கறுப்புப் பணம் என்பது, போதை மருந்துக் கும்பல்கள், கடத்தல்காரர்கள், மாஃபியாக்கள், பயங்கரவாதிகள் ஆகியோருடனும் ஊழல் அரசியல்வாதிகளுடனும் மட்டுமே தொடர்புள்ள, கன்னங்கரிய நெடிய கரடியைப் போன்ற சித்திரமாகவே மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வெள்ளை நிறத்தின் பிரநிதிகளாக காட்டப்படும் டாடா, அம்பானி, மித்தல், மல்லையா போன்றோரே கறுப்பின் முதன்மையான உறைவிடங்கள்.

கறுப்புப் பணம் என்பது வரி ஏய்ப்பு செய்தது அல்லது இலஞ்ச ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈட்டியது என்று மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. அவ்வாறே சித்தரிக்கவும் படுகிறது. ஆனால், சட்டபூர்வமானவை என்று அங்கீகரிக்கப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு உள்ளேதான் கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி ஒளிந்து கொண்டிருக்கிறது.

கறுப்புப் பணம் ஒளிந்திருக்கும் இடங்களாக வரியில்லா சொர்க்கத் தீவுகள் காட்டப்படுகின்றன. மாறாக, அவை சர்வதேச வர்த்தகத்தின் முக்கியமான வழித்தடங்கள். அந்தத் தீவுகளுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள், கறுப்பை வெள்ளையாக்கிக் கொள்வதற்கு முதலாளிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள்.

கறுப்பு என்பது முகமூடியின் நிறம் மட்டுமே. அதற்குப் பின்னால் இருக்கின்ற முகம் எது என்பதுதான் நம் கவனத்துக்குரியது. முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளான தரகு முதலாளிகள்.

டெலாவர், மொரிசியஸ், கே மேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் இருப்பவை, பித்தளையில் பளபளக்கும் பெயர்ப் பலகைகள் மட்டுமே. அந்தப் பலகைகளின் பெயரில் நாள்தோறும் பல்லாயிரம் கோடி டாலர்கள் வால் ஸ்டிரீட்டிலும், இலண்டன், டோக்கியோ, மும்பை பங்குச்சந்தைகளிலும் சூதாடப்படுகின்றன.

பன்னாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து வேலைக்கு அமர்த்தியிருக்கும் நிதித்துறை வல்லுநர்களும், ஆடிட்டர்களும், சர்வதேச வர்த்தகம் சார்ந்த சட்ட வல்லுநர்களும் புதிய புதிய சூதாட்ட முறைகளையும், கருவிகளையும் உருவாக்குகிறார்கள். நாடுகளில் கண்காணிப்புகளை மீறி, சட்டங்களின் ஓட்டைகளின் புகுந்து, எல்லாவிதமான வரிகளையும் ஏய்த்து இலாபமீட்டுகின்ற முறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அமெரிக்காவின் டாட். காம் குமிழியை உருவாக்கியவர்களும், தென் கிழக்காசியாவை திவாலாக்கியவர்களும், சப்பிரைம் குமிழியை உருவாக்கி அமெரிக்க மக்களின் வீடுகளைப் பறித்தவர்களும், கிரீஸையும் ஸ்பெயினையும் போண்டியாக்கித் அந்த மக்களைத் தெருவில் நிறுத்தியிருப்பவர்களும் இவர்கள்தான்.

1997இல் 5.7 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) டாலராக இருந்த உலக கோடீசுவரர்களின் செல்வம் 2009இல் 32.8 டிரில்லியன் டாலராக உயர்ந்தது இப்படித்தான். “உலகின் சொர்க்கத் தீவுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 21 டிரில்லியன் டாலர்; அதிகபட்சம் 32 டிரில்லியன் டாலர்” என்கிறது டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க். இந்தியாவின் உண்மைப் பொருளாதாரத்தைப் போல 7 மடங்கு தொகை பங்குச்சந்தையிலும், நாணயச் சந்தையிலும், ஆன்லைன் வர்த்தகத்திலும் சூதாடப்படுகிறது. இதில் எவ்வளவு கறுப்பு, எவ்வளவு வெள்ளை என்பதை யாரும் கண்டறிய முடியாது.

“சிக்கலான நிதிக்கருவிகள், ஒன்றிலிருந்து ஒன்று கைமாறிச் செல்லும் சிலந்தி வலை போன்ற நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றைப் பின் தொடர்ந்து சென்று கறுப்புப் பணத்தின் உடைமையாளரை ஒருக்காலும் அடையாளம் காணமுடியாது. வங்கிக் கணக்குகளைச் சோதனை போடுவதையும் எந்த வங்கியும் அனுமதிக்காது. ஒரு வேளை கறுப்புப் பணத்துக்கு உரியவரைக் கண்டு பிடித்துவிட்டாலும், அதைச் சட்டப்படி நிரூபிப்பது சாத்தியமற்றது”  என்கிறார் குளோபல் பைனான்சியல் இன்டக்ரிடி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் தேவ்கார்.

சொர்க்கத்தீவுகள், அவற்றின் இறையாண்மை, இரகசியப் பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற ஏற்பாடுகள் அனைத்துமே உலக முதலாளி வர்க்கம் தனது கொள்ளையைப் பாதுகாப்பதற்கு செய்து கொண்டிருக்கும் ஏற்பாடு. இந்த ஏற்பாட்டுக்கு அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான அரசுகள்தான் போலீசாக நின்று காவல் காக்கின்றன. திருடனைப் பிடிக்கப்போவதாக சவடால் அடிப்பதும் இதே போலீசுதான்.

எந்த அரசுக்கும் சமூகத்துக்கும் கட்டுப்படத் தேவையில்லாத ஒரு தீவை டௌ கெமிக்கல்ஸ் தலைவர் 1972இல் கனவு கண்டிருக்கிறார். உலக முதலாளி வர்க்கத்தின் கனவும் அதுதான். கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் அந்தக் கனவு நனவாகி வருகின்றது. நாடே பர்மா பஜார் ஆகிவிட்ட பிறகு, தனியே பர்மா பஜார் எதற்கு? மூலதனத்தின் வரியில்லா சொர்க்கமாக உலகமே மாறி வரும்போது தனி ஒரு தீவு எதற்கு?

ஆலகால நஞ்சாகத் திரண்டு மேலெழும்பி, உலக மக்களை அச்சுறுத்துகிறது மூலதனம். நஞ்சின் நிறம் கறுப்பானாலும் வெள்ளையானாலும் அதன் குணம் ஒன்றுதான்.

•முற்றும்

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________

அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!

27
கால-பைரவர்

கால-பைரவர்யக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஜார்ஜியாவில் நடந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி.

படப்பிடிப்பு சமயத்தில் ஜார்ஜியாவை சேர்ந்த தெரு நாய் ஒன்று, யூனிட் ஆட்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்றிருக்கிறது. எனவே அனைவருக்கும் நண்பராகவும் மாறியிருக்கிறது. ஒருநாள் யூனிட்டை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு, தன் வாயை டிஷ்யூ பேப்பரால் துடைத்து தூர எறிந்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த நாய், ஓடிச்சென்று அந்த டிஷ்யூ பேப்பரை கவ்வி சாப்பிட ஆரம்பித்திருக்கிறது.

உடனே அனுஷ்கா, பதறி விட்டார். டிஷ்யூ பேப்பரை சாப்பிட்டால், நாயின் உடல்நலம் பாதிக்கும். பேதியாகும். எனவே ஓடிச்சென்று நாயின் வாயை பற்றி திறந்திருக்கிறார். அத்துடன் தன் கையை நாயின் வாயில் விட்டு அந்த டிஷ்யூ பேப்பரை முழுமையாக எடுக்க முயன்றிருக்கிறார். நாய்க்கு இது பிடிக்கவில்லை. கேவலம் ஐந்தறிவு படைத்த உயிரினம்தானே? எனவே எங்கே தன் உணவை பறிக்க அனுஷ்கா முயல்கிறாரோ என்று நினைத்து கோபத்துடன் அவர் கையை கடித்து விட்டது.

அனுஷ்கா அசரவேயில்லை. வசிஷ்டரில் ஆரம்பித்து ரமணர் வரை சகல ஞானிகளும் அருள்வாக்கு வழங்கிய இந்துஞான மரபின் ஜீவகாருண்யத்தை அல்லவா உண்டு செறித்து வாழ்கிறார்? எனவே நாய் கடியையும் தன் பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார். முழுமையாக டிஷ்யூ பேப்பரை நாயின் வாயில் இருந்து எடுத்த பிறகே தன் கையை வெளியே எடுத்தார். நாயை காப்பாற்றிய திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. இதன் பிறகு நாய் கடித்ததால், தொடர்ந்து மூன்று நாட்கள் அனுஷ்கா ஊசி போட்டுக் கொண்டது தனிக்கதை.

ஒரு தெருநாய் அதுவும் சினிமா யூனிட்டின் எச்சில் பருக்கைகளை உண்டு வாழும் நாயின் கடியை பொறுத்துக்கொண்டு அனுஷ்கா செய்திருப்பது சாதாரணமான செய்கையல்ல. தனது வீட்டு நாயைக் குளிப்பாட்டவில்லை என்று வீட்டு டிரைவரை அடித்தும் பிற்காலத்தில் ஹைதராபாத்தின் ப்ளூ கிராஸ் தலைவராக உயர்ந்த முன்னாள் நடிகை அமலாவின் செய்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்றுதான் அனுஷ்காவின் தியாகம்.

அனுஷ்காவின் இந்த தியாகத்தை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா இந்த உலகில் ஜெயமோகன் மட்டுமே என்பது நமது உறுதியான கணிப்பு. மாறுபடுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்கலாம்.

இந்தியாவில் இலட்சியவாதத்தின் மறைவு குறித்து அடிக்கடி துக்கப்படுபவர் ஜெயமோகன். இலட்சியவாதம் என்றால் என்ன என்று ஜெயமோகன் அளவுக்கு அறிவில்லை என்றாலும் வாசகருக்காக ஒரு இலக்கணம் தர முயற்சி செய்கிறோம். அதாவது கறாரான விழுமியங்களுடன், புற உலகு பேதமிட்டு பிரிந்தாலும், அர்ப்பணிப்புடன் வாழும் இலட்சியவாதிகளின் அரசியல், சமூக, ஆன்மீக நடைமுறைகள்தான் இலட்சியவாதம். இந்த இலட்சியவாதிகள் அநேகமான எல்லா நிறுவனங்களோடும் முரண்பட்டாலும் தமது இ.வாதத்தை விடமாட்டார்கள்.

ஆனாலும் இந்த இலட்சியவாதிகள் கையெடுத்து கும்பிடும் வண்ணம் வரலாற்றின் பக்கங்களுக்குள் மட்டும்  ஒளித்து வைக்கப்படுவதாக ஜெயமோகன் வருந்துகிறார். அண்ணா ஹசாரேவின் எழுச்சியும், பிறகு வீக் எண்ட் புரட்சியாளர்கள் அவரைக் கைவிட்டதும் அவருக்கு பெரும் துக்கத்தை கொடுத்திருக்கிறது. அதே போல குஜராத்தில் அமுல் ராஜ்ஜியத்தை கட்டியமைத்த குரியனின் மறைவும் அவரை சொல்லணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இடையில் ஜெயமோகன் அன்புடனும், ஆன்மீக அர்ப்பணிப்புடனும் வளர்த்த ஹீரோ எனும் நாயும் சமீபத்தில் இறந்திருக்கிறது.

ஆனால் இந்த நாயின் சோகத்திலிருந்தும், இலட்சியவாதத்தின் மறைவு குறித்தும் இனி ஜெயமோகன் வருந்தத் தேவையில்லை. இரண்டின் அறத்தையும் வியப்பூட்டும் விதத்தில் அனுஷ்கா உயிர்ப்பித்திருக்கிறார்.

அனுஷ்கா அடிப்படையில் ஒரு யோகா டீச்சர் என்பது ஒரு முக்கியமான விசயம். அதன்படி ஜெயமோகன் மட்டுமே விளக்கும் அருகதை கொண்ட பதஞ்சலி யோக சூத்திரத்தை கற்று செரித்த ஒரு ஞானம் அனுஷ்காவிடம் உண்டு. அதனடிப்படையிலேயே தனது கட்டழகை பராமரிப்பதோடு பிரபல தமிழ் வலைப்பதிவர்கள் உள்ளிட்டு மிகப்பெரும் இரசிகர்களையே கட்டிப்போட்டிருக்கிறார். தென்னிந்தியாவின் இப்போதைய நடிகைகளில் ஏன் இந்திய அளவில் கூட அவரது அழகுக்கும் அறிவுக்கும் ஈடான ஒருவர் கிடையாது என்பது சத்தியமான உண்மை.

அத்தகைய அனுஷ்கா ரசிய நாட்டிலே ஒரு தெருநாயின் கடியைப் பொறுத்துக் கொண்டு அதைக் காப்பாற்றியிருக்கிறார் என்றால் இதைக் கேள்விப்படும் ரசிகர்கள் அதன்படி தங்களது தெருநாய்களை காப்பாற்ற துணிவார்கள் என்பது நிச்சயம். இப்படி நடிகையாக இருந்தாலும் ஒரு ஞானப்புரட்சியை, ஜீவகாருண்யத்தை தனது இமேஜை வைத்து பரப்புகிறார் என்றால் இந்தியாவில் இலட்சியவாதம் ஏன் மறைய வேண்டும்? அதுவும் மற்றவர் காமக்கண்ணால் பறிக்கும் அழகைக் கொண்டிருப்பவர், அதையே நடிப்பு என சம்பாதிப்பவர் செய்யும் செயலா இது? கண்டவர் விண்டிலர்.

அனுஷ்கா, காப்பாற்றியது நாயை அல்ல. பைரவரை. அதுவும் கால பைரவரை. எனவே காலத்தை அழியாமல் அனுஷ்கா பார்த்துக் கொண்டிருக்கிறார்… என்று அர்த்தம் சொல்லி, இடம் சுட்டி பொருள் விளக்கி, குறியீட்டுடன் ஜெயமோகன் எழுதுவார் என மலையாள பகவதியின் மேல் சத்தியம் செய்வதும் கொலைக் குற்றமாகவே கருதப்படும்.

இவ்வளவு பெரிய மன நிம்மதியையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நடிகை அனுஷ்கா, தனக்கு கொடுப்பார் என ஜெயமோகன் துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரையே நம்பி இயங்கும் ‘விஷ்ணுபுர வாசகர் வட்டம்’ கூட தராத பரிசு இது. என்ன செய்ய, அவரது மொழியில் சொல்வது என்றால், தற்செயலாக நிகழ்பவைதானே வரலாற்றை எழுதுகிறது?

கமான் ஜெயமோகன், உங்களது விசைப்பலகையை தட்டுங்கள்! அறம் வரிசையில் அனுஷ்காவின் நாய்க்கடியை மகுடமேற்றும் மந்திரசக்தி உங்கள் கைகளுக்குத்தான் உண்டு!

ஜெய் ஹிந்த்!

_____________________________________________________________

படம் – காலபைரவர் வாயில் பிரசாதம் வைத்து, எடுக்கும் பக்தை படஉதவி கூகிள்

______________________________________________________

கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!

15
பிரகாஷ்-காரத்
பிரகாஷ் காரத்

சி.பி.எம்-மின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் “இறக்குமதி அணு உலைகள் ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். முதலில் இந்தக்கட்டுரையை அவர் ஏன் எழுதினார்? கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம் கட்சி மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூர் திட்டத்தை மட்டும்  ஏன் எதிர்க்கிறது என்ற கேள்விக்குத்தான் இந்த பதில். அதாவது சி.பி.எம்மின் இரட்டை வேடத்தை அல்லது டபுள் ஆக்டிங் சரிதான் என்பதே காரத்தின் பதில்.

காரத் எழுதிய இந்த வழா வழா கொழா கொழா கட்டுரையின் சாரம் என்ன? அல்லது ஏற்கனவே சி.பி.எம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்டுரை மறுக்கின்றதா அல்லது ஆதரிக்கின்றதா? நிச்சயமாக ஆதரிக்கவே செய்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்திற்கு முன்பேயே ரசியாவிடமிருந்து இரண்டு அணு உலைகள் வாங்கப்பட்டு 15,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு விட்டதால் அதை மூடுவது சாத்தியமானது அல்ல என்பதோடு நாட்டு நலனிற்கும் உகந்தது இல்லையாம்.

இதைத் தவிர்த்த மற்ற அணு உலைகள் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு வந்தவையாம். இந்திய சுதேசி அணு உலைகளை விட இவை மிகுந்த செலவு பிடிப்பவையாம். அதனால் அமெரிக்க, ஐரோப்பாவிலிருந்து இறக்குமடி செய்யப்பட்ட அணு உலைகளை சி.பி.எம் கட்சி எதிர்க்கிறதாம். சரி, இதன்படி இந்த ஐரோப்பாவின் மேப்பில் ரசியா வராது போலும். மேலும் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பும் பிரச்சினையாம். அதாவது ஒரு இடத்தில் இரண்டு உலைகள் இருந்தால் பிரச்சினை அல்ல, நான்கு, ஆறு என்று இருந்தால் பிரச்சினை என்பதை காரத் சுற்றி வளைத்து கூறுகிறார். இதற்கு ஆதாரமாய் புகுஷிமா வில் ஆறு உலைகள் இருந்ததை காரத் கண்டுபிடித்துக் கூறுகிறார்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணு உலைகள் குறித்த மக்களின் அச்சம் அதிகரித்திருக்கிறதாம். இதை நிவர்த்தி செய்யுமாறு சுயேச்சையான நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டுமாம். பாதுகாப்பு தொடர்பான அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு தெளிவு படுத்தி அதையும் மக்கள் முன் வைக்க வேண்டுமாம்.

அணுமின் நிலையங்களை ஆதரிக்கும் அப்துல் கலாம் உள்ளிட்டு பலரும் காரத் பேசுவதைப் போலத்தான் பேசுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது என்ற போர்வையில்தான் கூடங்குளம் அணுமின்நிலைய அனுமதியும், துவக்கமும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதையெல்லாம் செய்து விட்டால் அணுமின்நிலையங்களை சேமமாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் காரத் மற்றும் அவரது கட்சியின் நிலைப்பாடு.

தந்திரமான மொழியிலும், விவாதத்திலும் மறைந்து கொண்டாலும் காரத்தின் சந்தர்ப்பவாதம் இங்கே பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவே செய்கிறது. இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களது பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவே இங்கு அணுமின்நிலையங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அமெரிக்கா முதல் ஆதாயம் அடைகிறது என்றால் பிரான்ஸ், ரசியா அடுத்தடுத்து ஆதாயம் அடைகின்றன. இதில் ஒன்றை எதிர்த்து விட்டு பிறிதொன்றை ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

மேலும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் என்று என்.ஜி.ஓ மொழியில் விளக்கமளிப்பது சி.பி.எம்மின் மறைமுக ஆளும் வர்க்க சேவையையே குறிக்கிறது. ஒரு வேளை போராடும் மக்கள் அப்படித்தான் அதை புரிந்து கொண்டு எதிர்த்தாலும் அதை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்வது நமது  கடமை. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசையே எதிர்ப்பதாக கருதப்பட்டு அங்கு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை ஒரு பகுதியின் பொருளாதார பிரச்சினையாக சுருக்கி பார்ப்பதன் மூலம் சி.பி.எம் கட்சி தனது மறைமுக இந்திய முதலாளிகளது சேவையை தொடர்கிறது.

அடுத்து கூடங்குளம் திட்டம் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு முன்பேயே வந்தாலும் அது முற்றிலும் தற்போதைய அமெரிக்க ஒப்பந்த்தத்தின் ஷரத்துக்களின் படியே அமல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமானது விபத்து ஏற்பட்டால் அணுஉலைகளை அளித்த நாடுகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்பது. இதை காரத் குறிப்பிட்டாலும் பெரிய மனதுடன் இரண்டு உலைகளை அங்கே செயல்படலாம் என்று அனுமதிக்கிறார். அங்கு கூடுதலாக வரும் இரண்டு உலைகளை மட்டும் அவரது கட்சி எதிர்க்குமாம்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அது இதர அணு உலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குமென்பதால்தான் இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்க முனைகிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட காரத்திற்கு அறிவு இல்லை என்பதல்ல, அவரது சந்தர்ப்பவாதம் இங்கே உண்மைகளை கொன்று விடுகிறது.

இதற்கு மேல் நிறைய செலவு செய்து விட்டார்கள் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிப்பதை இப்படியும் சொல்லலாம். அதாவது முதலாளித்துவம் இதுவரை செலவழித்து உருவாக்கியிருக்கும் பல கோடி பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கைப்பற்றி சோசலிச சமூகத்தை படைக்கும் புரட்சி கூட நாட்டு நலனுக்கு உகந்தது அல்லதான். அதனால்தான் சி.பி.எம் கட்சி புரட்சியிலிருந்து விலகி மனமகிழ் மன்றமாக மாறிவிட்டது போலும்.

அ-மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

அதே நேரம் காரத்தின் இந்தக் கட்டுரை அறிஞர் அ.மார்க்சை குஷிப்படுத்தியிருக்கிறது. முகநூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கும் அ.மா அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

” மக்கள் திரளைச் சார்ந்து இயங்கும் ஒரு கட்சி இப்படியான ஒரு கருத்தியல் மாற்றத்தையும், அதனடிப்படையில் ஒரு நிலைபாட்டு மாற்றத்தையும் மேற்கொள்வது கேலிக்குரியதோ, இழிவானதோ அல்ல. மக்களைத் திரட்டுவது குறித்துக் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் கொள்கை மாற்றம் இல்லாமல் என்றோ உருவாக்கப்பட்ட பழைய திட்டத்தின் அடிப்படையில்  கறாராகச் செயல்படுவது பெருமையாக இருக்கலாம். இந்த அடிப்படையில் காரட்டின் கட்டுரையினூடாக வெளிப்படும் அணுகல் முறை மாற்றம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, தனி மனித ஆர்வங்கள், சுற்றுச் சூழல் இயக்கங்கள், சிறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையுடனேயே இதுவரை நடைபெற்று வந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவின் முக்கிய இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு ஒரு பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பலாம்.”

இந்தக்கட்டுரை சி.பி.எம்மிடம் எந்த நிலைப்பாட்டு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே காரத்தே ஒத்துக் கொண்டாலும் அறிஞர் அ.மா மறுப்பார் போலும். நிலவுகின்ற சமூக அமைப்பை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் கோரும் ஒரு நிலையை மாபெரும் புரட்சி என்று சித்தரிக்கும் அளவு அறிஞரின் காமன்சென்ஸ் குறுகிவிட்டது. அணு மின்சாரம் தவிர்த்த மாற்று எரி சக்தி திட்டங்களை மையமாகக் கொள்ள வேண்டும் என்று காரத் கூறயிருப்பதெல்லாம் அ.மாவுக்கு மாபெரும் கலக குரலாக தென்படுகிறது. இதைத்தான் டிராபிக் ராமசாமி முதல் சூரிய விளக்கிற்காக என்.டி.டி.வியுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான் வரை பலரும் சலிப்பூட்டும் விதத்தில் சொல்கிறார்கள். அதன்படி அவர்களையும் புரட்சிக்காரர்களாக அ.மா ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.

மக்களை அணிதிரட்டும் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்கள் மட்டும் இது போல ஏதாதாவது கூவிக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார் அ.மா. இதைத்தான் கருணாநிதி பலமுறை ஈழம் குறித்து சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும், ஆட்சியில் இருக்கும் போது எச்சரிக்கையாகத்தான் செயல்பட முடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது…. இதெல்லாம் கூட அ.மாவின் இந்த இரும்பு இலக்கணத்தில் கண்டிப்பாக வரும். ஒரு பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ன என்பதும் அதை நோக்கியே தற்கால போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் புரட்சி குறித்து ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி அறிய வேண்டிய அடிப்படைப் பாடம். அதாவது புரட்சிக்காகத்தான் மக்களை திரட்டுகிறோமே அன்றி மக்கள் எதற்காகவாவது திரண்டு விட்டால் அது புரட்சி அல்ல. ஆனால் அ.மா இரண்டாவதைத்தான் புரட்சி என்று நம்புவதால் அதை அதற்கு உரிய சி.பி.எம்மிற்கும் விருதாக அளித்து மகிழ்கிறார்.

அணுமின்நிலையத்தை சுற்றுசூழல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பது என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தி. சி.பி.எம் அதையும் பேசிக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு என்பதாகவும் நாடகம் ஆடுகிறது. உள்நாட்டு உலை பாதுகாப்பானது, வெளிநாட்டு உலை ஆபத்தானது என்ற காரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் அ.மா அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு அறிவாளியின் நடவடிக்கையில் சந்தர்ப்பவாதம் மட்டும்தானே மையமாக இருக்க முடியும்? ஆனாலும் இது ஒரு நாசுக்கான, நாகரீகமான முறையில் வெளிப்படும் என்று அறிஞர் அ.மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

__________________________________________________

இதையும் படிக்கலாம்:

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி!

4

அரசுப்பள்ளிகள்: ஆங்கிலவழிக் கல்வி வந்தது முன்னே!

தனியார்மயம் நுழையும் பின்னே!!

மிழகத்தில்  சுமார் 320 அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டில் இருந்து ஆங்கிலவழிக் கல்வி அமல்படுத்தப்படும் என அரசு அண்மையில் அறிவித்திருந்தது. ஏற்கெனவே ஆங்கிலவழிக் கல்வி ஒருசில அரசுப் பள்ளிகளில் மட்டுமே இருந்த நிலையில், மாவட்டந்தோறும் 10 பள்ளிகள் வீதம், 24 ஆயிரம் மாணவர்களைத் தமிழ்வழிக் கல்வியில் இருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றி, அரசு உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றின்  தேவைக்காக என்றும், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்றும் அரசு இதற்குக்

ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகள் என அறிமுகமாகியுள்ள ஆங்கிலவழிக் கல்வி, வெகுவிரைவில் தமிழ்வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளிலிருந்து ஒழித்துக்கட்டப் போகிறது. அரசின் நடவடிக்கை ஆங்கிலவழிக் கல்வியை வலிமைப்படுத்தி தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு இடமில்லாமல் செய்துவிடும் என்ற கோணத்தில் இருந்து குமரி அனந்தன், பொன்வைக்கோ போன்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலவழிக் கல்வி என்பது மொழிப் பிரச்சினை மட்டும் அல்ல. அரசுப் பள்ளிகளில் வீழ்ச்சியடைந்து வரும் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்திக் காட்டி, அப்பள்ளிகளைத் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும்  நயவஞ்சகத் திட்டத்தின் ஒருபகுதிதான் இது.

இந்நயவஞ்சகத் திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு பெயர்களில் இயங்கிவந்த அப்பள்ளிகளை “சென்னைப் பள்ளி” என மாற்றி,  70 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்தனர். பின்னர் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்  உதவியுடன் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி,  மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரித்தனர். அவற்றில் 10 பள்ளிகளைத் தேர்வு செய்து தனியார் வசம் ஒப்படைப்பது என்பது அரசின் திட்டம். தற்போது அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியிருப்பதும் தனியார்மயமாக்கலை நோக்கமாகக் கொண்டதுதான்.

தனியார்துறை  பொதுத்துறை கூட்டு என்பது உலகவங்கியால் வழிகாட்டப்படும் தனியார்மயத்தின் ஒரு வடிவம். இது முழுமையான தனியார்மயத்தைக் காட்டிலும் நயவஞ்சகமானது. சுகாதாரம், துறைமுகம், விமானத்தளம், ரயில்வே, கல்வி போன்றவற்றை பொதுத்துறை  தனியார் துறை கூட்டு எனும் வடிவத்துக்கு மாற்றவேண்டுமென்று 11ஆவது ஐந்தாண்டுத் திட்டம் கோருகிறது. மத்திய மனிதவளத்துறையும், நாடெங்கும் பொதுத்துறைதனியார்துறை கூட்டு முறையில் உயர்நிலைப்பள்ளிகளை உருவாக்க பொதுக்கொள்கையை வகுத்துள்ளது.

அரசுப்-பள்ளி

தனிநபர்களோ, அறக்கட்டளைகளோ பள்ளிக் கட்டடங்களைக் கட்டி, ஆசிரியர்களை நியமிப்பதும், அப்பள்ளிகளைக் குறிப்பிட்ட சில காலம் நடத்திய பின்னர், அரசு அவற்றை ‘அரசு உதவிபெறும்’ பள்ளிகளாக அங்கீகரித்து ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்குவதும்தான் இதுவரை இருந்த நடைமுறை.

இதை அப்படியே தலைகீழாக்கியுள்ளது, புதிய கொள்கை. இதன்படி, அரசே பள்ளிகளைக் கட்டிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஏற்று நடத்தச் சொல்லும். ரூ.25 இலட்சம் முன்பணம் செலுத்தும் வசதிகொண்ட எந்த நிறுவனமும் இதற்குத் தகுதிபடைத்ததாகும். நாடெங்கும் 3000 பள்ளிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியும் சுயமாகவே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளும்.  ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் அப்பள்ளிகளே தீர்மானிக்கும். பாடத்திட்டம் ஒன்று இருந்தாலும், பள்ளி நேரம் முடிந்த பின், தனியார் முதலாளிகள் தமக்குத் தேவையான துறைகளில் தேவையான மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். காலப்போக்கில் பாடத்திட்டத்தையும் தனியார் முதலாளிகளே முடிவு செய்வதை நோக்கிச் செல்வதற்கான முதல் படியாகும் இது.

‘அரசுப் பள்ளிகள்’ என்றே அழைக்கப்படும் இந்தப் பள்ளிகள் ஏழை மாணவர்களிடம் மாதம் ரூ.25ம், பிற மாணவர்களிடம் மாதம் ரூ.1000மும் வசூலிக்கலாம். இதில் ஏழை மாணவர்களுக்கான மானியத்துக்கு அரசு டோக்கன்களை வழங்கிவிடும். பள்ளி ஒன்றுக்கு 1000 மாணவர்களுக்கு டோக்கன் தர 2017ஆம் ஆண்டுவரை அரசு ரூ.10ஆயிரம் கோடி வரை செலவிட உள்ளதாகக் கூறுகிறது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளை வாழ வைப்பதைப் போல, இந்தப் பணம் பள்ளிகளை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மானியமாகவே இருக்கும். அதற்கு மேல் கட்டணம் செலுத்துமாறு ஏழை மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இல்லையேல் ஒதுக்கப்படுவார்கள். தற்போது தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு தரும் கல்வி உரிமைச் சட்டம் அமலாகும் யோக்கியதையிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

இப்படி கரையான் புற்றெடுத்து கருநாகத்திடம் ஒப்படைக்கும் இந்த அற்புதத் திட்டத்தில் தலைநகர் தில்லிதான் முன்னிலை வகிக்கிறது. அரசுப் பள்ளிகளை தாங்கள் ஏற்று நடத்த வேண்டுமானால், அக்கட்டிடத்தை தங்களது வணிக நோக்கத்துக்கு  பயன்படுத்திக் கொள்வோம் என்று கூறுகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆரம்பத்திலேயே இவ்வாறு செய்வது அரசாங்கத்தை அம்பலப்படுத்திவிடும் என்பதால், இது இன்னும் நடைமுறைக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

நகரின் மையப் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிக் கட்டிடங்களைத் தனியாரிடம் தருவது மட்டுமின்றி, பள்ளியை நடத்தப்போகும் முதலாளிகளுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் மாணவர் எண்ணிக்கை இருப்பதையும் அரசு உத்திரவாதப்படுத்த வேண்டியிருக்கிறது. தற்போது அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கைவிகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களே வராத பள்ளியை ஏற்பதற்கு எந்த கார்ப்பரேட் நிறுவனந்தான் ஒப்புக்கொள்ளும்? எனவே சேர்க்கை வீதத்தைக் கூட்ட, மாணவர்களை ஈர்த்தாக வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கிறது அரசு.

அரசுப்-பள்ளி

கல்வி தனியார்மயமாவதும், தாய்மொழிக் கல்வி புறக்கணிக்கப்படுவதும் ஒன்றோடொன்று இணைந்தவை. தாய் மொழி என்பது  ஒரு சமூகத்தின் பண்பாடு, விழுமியங்கள், பாரம்பரிய அறிவு, வரலாற்று உணர்வு ஆகியவற்றோடு தொடர்பு கொண்டதாகும். சுயசார்புப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகம்தான் தனது உற்பத்தி மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கு உகந்தவாறு, மக்களுக்கு தாய்மொழியிலேயே கல்வியைக் கொடுக்கும்.

தற்போதைய உலகமயமோ, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்குச் சேவை செய்யும் உள்கட்டமைப்பையே இங்கு உருவாக்குகிறது. அமெரிக்க  ஐரோப்பிய முதலாளிகளுக்கான  அவுட்சோர்ஸிங் மையமாக இந்தியப் பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதால், அதற்கு ஆங்கிலம் அறிந்த, அடிமைத்தனமான, தமிழ் மண்ணின் வாசனை அற்ற மூளைகளே தேவைப்படுகின்றன.

எனவே, கல்வியின் நோக்கமும் மாறுகிறது. சொந்த மண்ணையும் மக்களையும் பற்றித் தெரியாத, அவர்களுடைய வாழ்க்கையை  பண்பாட்டைப் புரிந்து கொள்ளக்கூட முடியாத ஒரு கூட்டம் உருவாக்கப்படுகிறது. தேசிய உணர்வு, மொழியுணர்வு, பண்பாடு, வரலாற்றறிவு, சமூகப் பொறுப்புணர்ச்சி, குடிமை உணர்வு போன்ற மனிதத்தன்மைகள் ஏதுமற்றவர்களாக இளைஞர்களைப் பயிற்றுவிப்பதே தமது எதிர்காலத்துக்கு நல்லது என்று பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும் கருதுகின்றனர்.

ஒருபுறம் ஆங்கில மோகம், இன்னொருபுறம் தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற அச்சம்  இரண்டும் பிடித்தாட்டுவதால், மக்கள் ஆங்கிலவழிக் கல்வியில் விழுகிறார்கள். இந்த அடிமை மோகத்தை எதிர்த்து விடாப்பிடியாக நாம் போராடித்தான் ஆகவேண்டும்.

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காகச் செய்யப்பட்ட மோசடிகள்!

3

கூடங்குளம்-மோசடி-2கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி இடிந்தகரை பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் ஓராண்டு நிறைவெய்திய அதே தருணத்தில், கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருட்களை நிரப்பி, அதனை இயக்கும் அனுமதியை அளித்திருக்கிறது, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்.  இதனையடுத்து, கடந்த ஐந்து மாத காலமாக கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி 7 கி.மீ. தூரத்துக்குப் போட்டு வைத்திருக்கும் 144 தடையுத்தரவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டித்துள்ள ஜெயா அரசு, அப்பகுதியில் மீண்டும்  போலீசைக் கொண்டுவந்தும் குவித்திருக்கிறது.  இந்த 144 தடையுத்தரவை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கில் வாய்தா வாங்கியே வழக்கை இழுத்தடித்து வருகிறது, தமிழக அரசு.

கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்பட்டிருப்பது குறித்து ஆய்வு நடத்தி உறுதிசெய்துகொண்ட பிறகுதான் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்திருப்பதாகக் கூறுகிறது, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்.  இக்கூற்று எந்த அளவிற்கு உண்மையானது?  கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன.  சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு உத்தரவு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் சமரசங்கள் செய்துகொள்ளப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது.

அணுஉலையிலிருந்து கடலுக்குள் கொட்டப்படும் கழிவுகளின் வெப்பநிலை 37 டிகிரி சென்டிகிரேடுக்குள்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தி, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தமது கழிவுகளை 45 டிகிரி சென்டிகிரேடு கொதிநிலையில் கடலில் கொட்டுவதற்குத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்திருந்தது.  மேலும், கடல்சார் ஒழுங்குமுறைச் சட்டங்களிலிருந்தும் கூடங்குளம் அணுஉலைக்கு  மைய அரசால் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இவ்விதிவிலக்குகள் கடல்சார் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் கூடங்குளம் அணுஉலை இயங்குவதைச் சட்டபூர்வமானதாக்கும் குறுக்கு வழியன்றி, வேறெதுவுமில்லை.

இவ்விரு விதிவிலக்குகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அளித்திருக்கும் விதிவிலக்கை நீக்கச் சொல்லி விட்டது, சென்னை உயர் நீதிமன்றம். எனினும், அணுக் கழிவுகளை எத்தனை டிகிரி சென்டிகிரேடில் வெளியேற்றும் வண்ணம் கூடங்குளம் அணுஉலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது?  அதில் குறைபாடு இருப்பது தெரியவந்து, அதன் காரணமாகத்தான் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டதா? இந்த உத்தரவுக்குப் பின் அணுஉலை நிர்வாகம் 37 டிகிரி சென்டிகிரேடுக்குள்தான் அணுக்கழிவுகளை வெளியேற்றும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அதனை யார் தொடர்ந்து கண்காணிப்பது?  என்பது போன்ற கேள்விகளை விசாரணையின்பொழுது நீதிபதிகள் எழுப்பவில்லை.  மாறாக, விதிவிலக்கை நீக்கிவிட்டு, அணுஉலை இயங்க மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கலாம் எனக் காதைக் குடைந்தபடி உத்தரவிட்டுள்ளனர்.  அணுக்கழிவு பிரச்சினையை, ஏதோ குப்பையை அகற்றும் பிரச்சினையைப் போல பார்க்கும் அலட்சியம்தான் நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிகிறது.

‘‘ஜப்பான் ஃபுகுஷிமா விபத்திற்குப் பிந்தைய இந்திய அணுஉலைகள் பாதுகாப்பு குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே கூடங்குளம் அணுஉலை செயல்படுத்தப்படும்” என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உயர் நீதிமன்றத்திடம் உறுதி அளித்திருந்தது.  ஆனால், நீதிமன்றத்திடம் அளித்த அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்தாமலேயே எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகப் பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுப்புறச் சூழல் அமைப்பு தற்பொழுது நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது.

அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கும் முன்பாக, அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மை பயிற்சி மிகவும் வெளிப்படையாக அளிக்கப்பட வேண்டும் என்பது விதி.  ஆனால், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், யாருக்கும் எந்த விவரத்தையும் சொல்லாமல், பத்திரிகைகளையும் அழைக்காமல், நக்கநேரி கிராமத்தில் மிகவும் இரகசியமான, மோசடியான ஒரு பயிற்சியை நடத்தி முடித்திருக்கிறது.  அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் அனுமதியை வழங்க, ஒப்புக்காக நடத்தப்பட்ட இப்பயிற்சியை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமும் அங்கீகரித்திருக்கிறது.

எரிபொருள் நிரப்பப்படும் பகுதியான அணுஉலை அழுத்தக் கலனில் இரண்டு பற்றவைப்புகள் (welding) இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் 2008இல் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.  எனினும், இந்த பற்றவைப்புகள் அணுக்கதிர் வீச்சைத் தாங்கும் திறன் குறித்த சோதனைகள் நடத்தப்படாமலேயே எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து வெளியே கசிந்துவரும் ஒவ்வொரு உண்மையும், இந்த அனுமதி பல்வேறு விதிமுறைகளை மீறித்தான் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றன.

‘‘ஃபுகுஷிமா விபத்திற்கு சுனாமியைவிட, மனிதத் தவறுதான் பிரதான காரணம்.  பாதுகாப்பு ஏற்பாடுளை நிர்வாகம் அலட்சியப்படுத்தியதுதான் காரணம்” என ஜப்பான் நாடாளுமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், இத்துணை பாதுகாப்பு குறைபாடுகளோடு கூடங்குளம் அணுஉலை இயங்க அனுமதிக்கப்படுகிறதென்றால், ஆளும் கும்பல் தெரிந்தே தமிழகத்தை அழிவுப் பாதைக்குள் தள்ளிவிட முயலுகிறது என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.

ஃபுகுஷிமா அணுஉலை விபத்தின் பின், மேற்குலக நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகளே அணுமின் திட்டங்களை மூடுவது, குறைப்பது, கைவிடுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன.  சூரியமின்சக்தி, காற்றாலை போன்ற சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று மின்திட்டங்களை அமல்படுத்த முனைகின்றன.  தமிழகத்திலும் இப்படிபட்ட மாற்று மின்உற்பத்திக்கான வாய்ப்புகள் இருப்பதை  மேலும் 1,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலைகளை அமைப்பது, தனுஷ்கோடி கடற்பரப்பில் காற்றாலைகள் அமைப்பது  வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மாற்று மின்திட்டங்களுக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்திய ஆளும் கும்பலோ ஆபத்தும், பெருஞ்செலவும் நிறைந்த அணுஉலை தொகுப்புகளை வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி அமைக்கத் திட்டம் போடுகின்றன.  இந்திய மக்களின் உயிர், நல்வாழ்வைவிட, இந்திய ஆளும் கும்பலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு போட்டுக் கொண்டுள்ள அணுஉலை வியாபார, இராணுவ ஒப்பந்தங்கள்தான் பெரிதாகத் தெரிகிறது.

நமது நாட்டில் தற்பொழுது இயங்கிவரும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவ்வுலையை இயக்கி வரும் நிறுவனத்திற்குச் சட்டப்படி விதிக்க முடிந்த அபராதம் வெறும் 500 ரூபாய்தான் எனத் தலைமைக் கணக்கு அதிகாரியின் சமீபத்திய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.  கடந்த 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அணுசக்தி கடப்பாடு சட்டமோ இதைவிடக் கேவலமாக உருவாக்கப்பட்டுள்ளது.  அணுஉலையை விற்கும் நிறுவனங்கள் இந்த 500 ரூபாய் அளவிற்குக்கூட அபராதமோ, நட்ட ஈடோ அளிக்கத் தேவையில்லை எனச் சலுகை அளிக்கிறது, அச்சட்டம்.

தற்பொழுது கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ள அணுஉலை எண் 1 மற்றும் 2இல் விபத்து ஏற்பட்டால், இந்த அணுஉலைகளை விற்ற ரசியா அதற்குப் பொறுப்பேற்று நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை என மன்மோகன் சிங் அரசு, நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் ரசியாவிற்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளது.  இதே போன்ற விலக்கை கூடங்குளத்தில் நிறுவப்படவுள்ள அணு உலைகள் 3 மற்றும் 4க்கும் தர வேண்டும் என்கிறது, ரசியா.  “அது சாத்தியமா?” என யோக்கியர் போல அதிகாரிகளிடம் ஆலோசனை கலக்கிறார் மன்மோகன்.

அணுஉலையை ஆதரிப்பதில் ஜெயா வேறு கட்சி, மன்மோகன் சிங் வேறு கட்சி அல்ல.  இடிந்தகரை மக்களின் முதுகில் குத்தி ஜெயா இதனை நிரூபித்திருக்கிறார்.  எனினும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைமை, “ புதிய பேச்சுவார்த்தைத் தொடங்க விரும்புவதாகவும், கூடங்குளம் மின் திட்டத்தை மக்களுக்கு உகந்த, இயற்கையோடு இணைந்த திட்டமாக மாற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்”  வேண்டுகோள் விடுத்து,  தமிழக முதல்வர் ஜெயாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது (தினமணி 27.8.2012, பக்.9).  வௌக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது தகுமா?

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!”

11

கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல..

அடக்குமுறைக்கெதிரான போராட்டம்!

நிராயுதபாணியாய் மக்கள்,
நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை,
கைக்குழந்தையோடு போராடுபவர்கள்
வன்முறையைத் தூண்டுபவர்களாம்!

கைத்தடியும் துப்பாக்கிகளோடும் சூழ்ந்தவர்கள்
அமைதியை நிலைநாட்ட அவதரித்தவர்களாம்?!

மூலதனமும், பேரழிவும் உயிர்வாழ
சட்டத்தைக் காட்டி கலைந்து போகச் சொல்லும்
உத்திரவு ஆளும் வர்க்கத்துக்கு உண்டெனில்,

எங்கள் இயற்கையும், சந்ததியும் உயிர்வாழ
அணு உலையைத் திரும்பிப் போகச் சொல்லும்
உரிமை மக்களுக்கும் உண்டுதானே!

ஜனநாயக நெறிப்படி எதிர்ப்பைக் காட்ட
கடலோரம் சுடுமணலில் கலந்தனர் மக்கள்.
ஒரு நாள் வெயில் தாங்கி
உழைத்து பழக்கமில்லாத அதிகார வர்க்கமே,
உனக்கும் ‘ஜனநாயகத்’ தெம்பிருந்தால்
உன் ‘கொள்கைக்காக’ சுடுமணலில்
நீயும் அமர்ந்து கொள்ளடா எதிரில்
ஏன் ஜனநாயகம் தாங்காமல் அலறுகிறாய்
எங்கள் இருப்பைப் பார்த்து!

கடலோரம்… மண்ணை பிளந்து
கூடங்குளத்தை தன்னில் பார்க்கும்
எங்கள் மழலையரின் தாய்மண் உணர்ச்சிக்கு
நேர் நிற்க முடியுமா?
கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!

அலைகளின் முழக்கில்
இரண்டறக் கலந்த அணுஉலை எதிர்ப்பில்…
மெகா போனை வைத்துக் கொண்டு
மெகா சீரியல் ஓட்டிய அதிகாரி குரல்கள்
அடிபட்டுப் போயின…
போராட்டத்தின் அலை பொங்கி வரும்போது
செத்த மீனுக்குள்ள மரியாதை கூட
மொத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் க்கு கிடையாதென்பதை
கடல் புறம் காட்டி நின்றது.

உளவுப்படை, இழவுப் படை எதுவாயினும்
கடலுக்குப் போகாமலேயே மணற்பரப்பில்
போலீசை கருவாடாய் காயவைத்தனர் மக்கள்.

ஜனநாயக அவஸ்தைகளை தாங்கிக்கொள்ளும்
சகிப்புத்தன்மை மக்களுக்கிருக்கலாம்,
ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும்
அது ஒரு போதும் இல்லையென…
மீண்டும் உறுதி செய்தது போலீசு…
நிராயுதபாணியாய் நின்ற மக்கள்மீது
தடியடி, தாக்குதல், கண்ணீர்புகை, துப்பாக்கிச் சூடு!

முற்றுகைப் போராட்டம் சட்டவிரோதமென
அறிவித்த அரசு… இப்போது ஆயுதங்களுடன்
கன்னியாகுமரி தொடங்கி… கடலோரப் பகுதிகள்
இடிந்தகரை வரை முற்றுகை.

சம்மணம் போட்டு அமர்வது கூட
சட்டவிரோதமென,
இடிந்தகரை உண்ணாநிலை போராட்ட
பந்தலையும் ஆக்கிரமித்து
சொந்த நாட்டு மக்கள் மீது
அரசுப்படையின் அட்டூழியங்கள்

தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை
தடை செய்து,
இடிந்தகரையை முள்ளிவாய்க்காலாக்கும்
பாசிச காட்டாட்சி!

இத்தனைக்கும் மத்தியில்..
போராடும் மக்கள் நம்மிடம் வேண்டுவது
அனுதாப அலையல்ல…
உண்மைகளை கண்டுணரும் நேர்மை!

அணு உலைக்கெதிரான போராட்டத்தின் வழியே
கதிரியக்க பயங்கரத்தை மட்டுமல்ல,
உழைக்கும் மக்களுக்கு உதவாத
இந்த போலி ஜனநாயக அமைப்பையும்
இதில் புழுத்து திரியும்
அரசியல் பயங்கரங்களையும்
நமக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

பயங்கரவாதிகள் பலரகம்… பலவிதம்…

ரத்தக் களறியில் மக்கள்.
‘ரத்தத்தின் ரத்தமான’ தா.பாண்டியனோ
தாக்குதல் நடத்திய கைக்கு
தங்கக் காப்பாய் அறிக்கை;

“பொறுமையாகவும், நிதானமாகவும்
பிரச்சினைகளை கையாண்டு
சுமூகமாக தீர்க்க வேண்டும்…”

போராடி… துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட
மீனவர் அந்தோணியின்
போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு
கட்டாயம் தா.பா. ‘டெக்னிக்’ உதவும்.

அடித்தவனுக்கே போய் ஆறுதலும்
தேறுதலும் சொல்லும்
இப்படியொரு பயங்கரவாதியை
எங்காவது பார்த்ததுண்டா?

இன்னொருபடி முன்னேறி…
மார்க்சிஸ்டு ஜி.ராமகிருஷ்ணனோ
“மக்கள் போராட்டத்தை கைவிட்டு
சுமூகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்”
என ஜெயாவின் ஆவியாகி ஜீவிக்கிறார்.
சொந்தநாட்டு மக்களையும்,
சொன்ன பேச்சை கேட்காத கட்சிக்காரனையும்
நந்திகிராமிலும், கேரளாவிலும்
வேட்டையாடுவதில்
ஜெயலலிதாவுக்கே ராஜகுரு
சி.பி.எம். பயங்கரவாதிகள் என்பதை
கூடங்குளமும் குறித்துக் கொள்கிறது.

போராட்டக் களத்தில்
அப்பாவி மக்களை விட்டுவிட்டு
தலைவர்கள் தப்பியோடிவிட்டதாய்
ஊடக பயங்கரவாதிகள் ஊளை!
பாவம்! தவிக்கும் மக்களை
சன்.டி.வி. கலாநிதிமாறன் போய்
காப்பாற்றி வரவேண்டியதுதானே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
தப்பியோடும் பயங்கரவாதிகள்
வாழ்வுரிமைக்குப் போராடுபவர்கள் மீது
வன்மம் கொப்பளிப்பது
தற்செயலல்ல, வர்க்கப் பகைதான்!

தெற்கிருந்து தினந்தோறும்
போராடுபவர்களைப் பார்த்து,

நயன்தாரா இடுப்பைக் கிள்ளவும்,
நாடார்கள் ஓட்டை பொறுக்கவுமே
தெற்கு பக்கம் ‘செட்டு’ போடும் சரத்குமார்
“தலைவர்கள் தலைமறைவானதிலிருந்தே
அவர்கள் சரியானவர்கள் இல்லை” என
வாய் கொழுப்பும், வர்க்கக் கொழுப்பும்!

வாய் சும்மா இருந்தாலும்
உங்கள் வர்க்கம் சும்மா இருக்காது
வாய்திறந்து பேசுங்கள் வரவேற்கிறோம்…
உங்கள் வர்க்கம் தெரியவருவதால்!

புடைசூழ வாருங்கள் பொய்யர்களே…
உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது…
பணம் உள்ளது…. படை உள்ளது….
ஆனால் உண்மையும், நீதியும்
எங்களிடம் மட்டுமே!

உரிமையின் உணர்ச்சிகளை
அறியாத உங்கள் தோல்களை
உரித்துக் காட்டும் மக்களின் போராட்டம்.

போராட்டத்தின் நியாயம் அறிய
கொஞ்சம் கூடங்குளத்திற்கு  செவி கொடுங்கள்…
போராட்டத்தின் உண்மை அறிய
கொஞ்சம் இடிந்தகரையை உற்றுப் பாருங்கள்…
போராட்டத்தின் சுவை அறிய
துப்பாக்கிகளுக்கு முன்னே
தங்கள் மழலையை போராட்டத்திற்கு ஒப்படைத்திருக்கும்
எம் பிள்ளைகளின் கரம் சேருங்கள்…

அதோ… தடிகொண்டு தாக்கும் போலீசை
நெய்தல் செடிகொண்டு
வர்க்க குறியோடு எறியும் – எங்கள்
பரதவர் மகனின் போர்க்குணம் பார்த்து
பொங்குது கடல்!

மண்ணைக் காக்கும் போராட்டத்தில்
மண்ணும் ஒரு ஆயுதமாய்
வெறுங்கையோடு எம் பெண்களும்
பிள்ளைகளும் தூற்றும் மணலில்…
அடக்குமுறை தூர்ந்து போவது திண்ணம்!

______________________________________________

– துரை. சண்முகம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!

7

ஏரிவிழுப்புரம் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் பல ஏரிகள் பல்வேறு ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவ்வப்போது நாளேடுகளில் செய்திகள் வந்துள்ள நிலையில், இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் கடந்த ஜூன்ஜூலை மாதங்களில்  கிராமங்கள் தோறும் ஆய்வு செய்தபோது, பண்ருட்டி வட்டாரத்தில் மட்டும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு 40 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இதை அம்பலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்தி விவசாயத்துக்குப் பயன்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூலையில் சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்புகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு வேதனையில் துவண்டிருந்த இவ்வட்டார விவசாயிகள், இப்பிரச்சாரத்தை வரவேற்று தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

பண்ருட்டி வட்டம் ஒரையூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டு காலமாக 96 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ஏறத்தாழ 80 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக இக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வி.வி.மு.வின் சுவரொட்டிப் பிரச்சாரத்தால் உற்சாகமடைந்து, கடந்த ஆகஸ்டு முதல் நாளன்று தங்கள் சொந்த செலவில் மூன்று மண்வாரும் எந்திரங்களை வரவழைத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து ஆக்கிரமிப்பை அகற்ற வருமாறு கோரினர்.  நில அளவை செய்துவிட்டுச் சென்ற அதிகாரிகள், வருவதாகச் சொல்லிவிட்டு ஒருநாள் முழுக்கவும் வரவில்லை. இதில் முன்முயற்சியுடன் செயல்பட்ட தே.மு.தி.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் கார்த்திக், காளிதாஸ் ஆகிய தன்னார்வலர்கள் வி.வி.மு. தோழர்களைத் தொடர்பு கொண்டு, நீங்களே வந்து இந்த ஆக்கிரமிப்பு அகற்றலைத் தொடங்கி வைக்குமாறு கோரினர். அதன்படி வி.வி.மு. தோழர்கள் ஆகஸ்டு 2ஆம் தேதியன்று செஞ்சட்டையுடன் அணிதிரள, ஆக்கிரமிப்பாளர்கள் அரண்டு போயினர். ஏரியில் கால் வைக்கக் கூட முடியாமல், ஆடுமாடுகள் கூட மேய்ச்சலுக்குச் செல்ல முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அணிதிரண்டு தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதைத் தொடர்ந்து ஏரியின் கரை மடிக்கப்பட்டது. இந்தச் செய்தி காட்டுத் தீ போல அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவியதால், பலரும் தங்கள் கிராமத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை நிற்குமாறு வி.வி.மு.விடம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

வி.வி.மு. தோழர்களின் துணையோடு கிராம மக்கள்  ஒற்றுமையாக அணிதிரண்டு ஏரியை மீட்ட இச்சம்பவம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளதோடு வி.வி.மு. மீது புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?

7

சாமியர்களைக் காப்பாற்று.பாரதக் குடிமக்களாகிய போடோக்களைக் காப்பாற்று. வங்கதேச ஊடுருவல்காரர்களை வெளியேற்று. அசாமியர்களின் நிலங்களையும் தொழில்களையும் ஆக்கிரமித்துவருகின்ற வங்கதேச முஸ்லீம்களை வெளியேற்று”

மேற்கண்ட முழக்கங்களோடு ஆர்பாட்டம் ஒன்றை ஆகஸ்ட் 21ம் தேதியன்று விஷ்வ ஹிந்து பரிசத் என்கிற சங்கப்பரிவார அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு ‘தேசபக்தர்களை’ அணிதிரளக் கோரி ஒரு துண்டறிக்கையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி துண்டறிக்கையில், “பங்களா தேசத்தவர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி பாகிஸ்தானுக்குள் நுழைய முடியுமா?” என்றும், “பாகிஸ்தானியர்கள் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி சௌதி அரேபியாவுக்குள் நுழைய முடியுமா?” என்றும் கேள்வி  எழுப்பப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் 3 கோடி வங்க தேசத்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளாதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் அடித்துள்ள நோட்டீஸின் சாராம்சம் இது தான் – வங்கதேசத்திலிருந்து முசுலீம்கள் கள்ளத்தனமாக ‘பாரத’ தேசத்திற்குள் நுழைகிறார்கள்; இது சட்டவிரோதமானது. மேலும், இந்த வந்தேறிகளின் மூலம் வடகிழக்கு மாநிலங்களை முசுலீம்கள் ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள் என்பதும் ஆகும். இவை எப்பேர்பட்ட பொய்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில வரலாற்று பின்னணிகளையும் புள்ளிவிவரங்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

 

Table 1

Percentage Decadal Variation in Population since 1951 in India and Assam

1951-61

1961-71

1971-81

1971-91

1991-01

01-2011

India

21.64

24.80

24.66

54.41

21.54

17.64

Assam

34.98

34.95

53.26

18.92

16.93

Dhubri

43.74

43.26

45.65

22.97

24.40

Dhemaji

75.21

103.42

107.50

19.45

20.30

Karbi Anglong

79.21

68.28

74.72

22.72

18.69

 

மேலே உள்ள புள்ளிவிவரத்தை கவனமாகப் பரிசீலித்தால் நமக்கு சில விஷயங்கள் தெளிவடையும். இந்தப்  பட்டியலில், ஒவ்வொரு பத்தாண்டுகளில் அனைத்திந்திய அளவில் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம், அசாமின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் அதன் சில மாவட்டங்களில் வளர்ச்சி விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கலவரம் நடந்து வரும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் துப்ரி மாவட்டம் தான் பங்களாதேசத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தான் வங்க மொழி பேசும் முசுலீம்களின் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.

பட்டியலின் படி பார்த்தால், 1971-ம் ஆண்டுக்குப் பிறகு துப்ரி மாவட்டத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் விழுந்துள்ளது ( அதாவது, முசுலீம்களின் வளர்ச்சி விகிதம்) அதற்கு முன்பும், துப்ரி மாவட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இருந்த காலத்திலேயே அசாமின் பிற மாவட்டங்களில் ‘இந்துக்களின்’ மக்கள் தொகை மிக அதிகளவிலான வளர்ச்சி நிலையில் இருந்துள்ளது. குறிப்பாக தெமாஜி மற்றும் கார்பி மாவட்டங்களின் வளர்ச்சியை துப்ரி மாவட்டத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும்.

அதே போல், இப்போது கலவரம் நடக்கும் கோக்ரஜ்ஹர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 2001 – 2011 காலகட்டத்தில் அதன் மக்கள் தொகை வளர்ச்சியே 5.19 சதவீதத்திற்கு வீழ்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தியும் மிகக் குறைவான அளவான 280 பேராக (சதுர கிலோமீட்டருக்கு) உள்ளது. மேலும் மக்கள் இம்மாவட்ட மக்கள் தொகையில் 20% அளவுக்கே முசுலீம்கள் உள்ளனர். இந்த விவரங்களில் இருந்தே முசுலீம்களால் பிரதேச அளவில் பெரியளவில் நெருக்கடி ஏதுமில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஆக, வங்கமொழி பேசும் முசுலீம்கள் பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி அசாமிய நிலங்களை அக்கிரமிக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் சொல்வது பச்சைப் பொய். ஆனால், அசாம் மாநிலத்தில் – குறிப்பாக துப்ரி மாவட்டத்தில் – வங்க மொழி பேசும் முசுலீம்கள் மக்கள் தொகை சதவீதத்தில் அதிகளவில் இருப்பதற்குக் காரணம் என்ன?

1826-ம் ஆண்டுக்கு முன்பு அசாம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இல்லை. அது அப்போது மூன்றாம் பர்மிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதி எல்லைப்புற பிரதேசமாக இருந்தது. 1800களின் துவக்கத்தில் நடந்த ஆங்கிலோ – பர்மிய யுத்தத்தில் தோல்வியுறும் பர்மாவின் ஏவா அரசு ஆங்கிலேயருடன் ஒரு ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுகிறது – அது யெந்தபோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் படி, பர்மா காலனிய இந்தியாவிடம் விட்டுக் கொடுத்த நிலப்பகுதி தான் அசாம். அதாகப்பட்டது, பாரதமாதாவின் பீச்சாங்கையாக விளங்கும் நிலப்பகுதியே வேறு ஒரு நாட்டிடம் இருந்து அடித்துப் பறித்து ஒட்டவைக்கப்பட்டது தான்.

அதே காலகட்டத்தில் வெள்ளையர்கள் வங்காளப் பகுதியில் அமுல்படுத்திய விவசாயக் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயிகளையும் கைவினைஞர்களையும் ஓட்டாண்டிகளாக்குகிறது. பெருந்திரளான மக்கள் வெள்ளை அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஜமீந்தாரி முறையின் கீழ் அல்லலுற்று வந்தனர். அதே நேரம் வெள்ளையர்கள் புதிதாக ஆக்கிரமித்துக் கொண்ட பகுதியில் நிறைய நிலங்கள் இருந்தன – ஆனால், அவற்றின் மூலம் நிலவருவாய் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களே வங்கத்தின் கிழக்குப் பகுதி மக்களை புதிய நிலப்பகுதியில் குடியேற ஊக்குவித்துள்ளனர். அப்படிக் குடியேறியவர்கள் அசாமியப்பகுதியில் நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்யத் துவங்குகிறார்கள்.

இப்படி புதிதாக குடியேறும் வங்காளிகளின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் அதிகரித்துச் சென்ற நிலையில், 1920-ம் ஆண்டு வாக்கில் வங்க விவசாயிகளின் இடப்பெயர்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். ஆனால், அதற்குள் கோல்பாரா, நாகாவ்ன், காமரூப் போன்ற மாவட்டங்களின் முசுலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு அரசின் அலட்சியமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் இடம்பெயர்ந்தவர்களைத் தான் இன்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘சட்டவிரோதமாக’ குடியேறியவர்கள் என்று தூற்றுகிறது.

இத்தனைக்கும் இவர்கள் தேசப் பிரிவினையின் போது தாங்கள் குடியேறிய மண்ணுக்கு விசுவாசமாக இந்த நாட்டையே நம்பி இதன் இறையாண்மையையே ஏற்றுக் கொண்டு இங்கே தங்கி விட்டவர்கள். அவர்கள் அசாமின் மொழி கலாச்சாரத்தை தமக்குள் வரித்தும் கொண்டனர். உதாரணமாக, துப்ரி மாவட்டத்தில் முசுலீம்களின் மக்கள் தொகை சதவீதம் 74.29% அங்கே அசாம் மொழி பேசுபவர்கள் 70.09%. முசுலீம்கள் என்றாலே அவர்கள் நமது நாட்டின் மீது விசுவாசம் அற்றவர்களென்றும் அவர்கள் பிற மொழிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்களென்றும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் வழக்கமாக அவிழ்த்து விடும் பொய்களின் மேல் வங்காளதேச முசுலீம்கள் காறித் துப்பியிருக்கிறார்கள். பிறகு ஏன் இந்தக் கலவரங்கள்?

அசாம்-கலவரம்-1இன்றைக்கு அசாமில் நடந்து வரும் கலவரங்களுக்கு சிக்கலான வரலாற்றுப் பின்னணி உள்ளது. இன்றைக்கு போடோக்களின் தரப்பாகவும் பார்ப்பன இந்து தேசியத்தின் தரப்பாகவும் முன்வைக்கப்படும் ‘வங்காளதேச முசுலீம் ஊடுருவல்காரர்களின்’ ஆக்கிரமிப்புகள்  உண்டாக்கும் சமூக பொருளாதார நெருக்கடி என்பது முதன் முதலில் ‘அந்நியர்களுக்கு’ எதிரானதாகத் தான் துவங்கியது. அசாமியர்களோடு முதலில் முரண்பட்டது வங்கதேச முசுலீம்கள் அல்ல வங்காள மொழி பேசும் இந்துக்கள் தாம்.

போலி சுந்தந்திரத்திற்குப் பின் அசாமின் உள்ளூர் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது அசாமியர்கள் தான். அதே போல, ‘சுதந்திரத்தின்’ மூலம் கிடைத்து வந்த பலன்களை பெருமளவில் அனுபவித்து வந்ததும் நடுத்தர வர்க்க அசாமியர்கள் தான். அரசு வேலைகளிலும் மற்ற பிற சலுகைகளிலும் அசாமிய நடுத்தர வர்க்கத்துக்குப் போட்டியாக வங்க மொழி பேசும் இந்துக்கள் எழுகிறார்கள். அசாமியர்களும் வங்காளிகளுக்கும் இடையிலான முதல் கலவரம் 1960-ல் நடக்கிறது – அது இரண்டு மொழி பேசும் ‘இந்துக்களுக்கு’ இடையில் நடந்த கலவரம்.

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் (All Assam Students Union/ AASU) ஆரம்பத்தில் நடத்திய ‘அசாம் இயக்கம்’ அதன் துவக்கத்தில் வங்காளதேச முசுலீம் ‘ஊடுருவல்காரர்களுக்கு’ எதிராக நடத்தப்பட்டதல்ல – அது அந்நியர்களுக்கு எதிரான இயக்கம் என்றே சொல்லப்பட்டது. அதற்கு, உள்ளூர் அளவிலான அதிராக வர்க்கத்தின் ஆதரவும் இருந்தது.

இதற்கிடையே எழுபதுகளில் இடதுசாரிகள் அசாமில் ஓரளவுக்கு செல்வாக்குப் பெறுகிறார்கள். 1974-ல் நடந்த கவுஹாத்தி முனிசிபல் தேர்தலில் முதன்முதலாக இடதுசாரிகள் வெற்றி பெருகிறார்கள். வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த முசுலீம்கள் மட்டுமின்றி வங்கமொழி பேசும் இந்துக்கள் மற்றும் பல்வேறு பழங்குடியினரின் ஆதரவையும் இடதுசாரிகள் பெற்றிருந்தனர். அந்த சமயத்தில் எழுந்து வந்த இனவாதிகளுக்கு இப்போது ஒரு நெருக்கடி உண்டாகிறது; அதாவது, உள்ளூர் பழங்குடியினரையோ அல்லது மாநிலத்துக்கு வெளியே – குறிப்பாக தில்லியில் – அரசியல் செல்வாக்குடன் திகழும் பிரிவினரையோ தமது வெறுப்புப் பிரச்சாரத்தின் இலக்காக வைத்திருப்பது ஆபத்துக்குரியதானது.

இந்த கட்டத்தில் தான் ‘அந்நியர்களுக்கு எதிராக’ என்பது ‘வங்கதேச முசுலீம் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக’ என்று மாறுகிறது. இதன் தொடர்ச்சியாகத் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். பிரிக்கப்படாத நாகோன் மாவட்டத்தில் 1983 பிப்ரவரி 13ம் தேதி நிகழ்ந்த நெல்லீய் படுகொலையில் மட்டும்  சுமார் 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெருமளவு குழந்தைகளும் பெண்களுமே இருந்தனர்.

1979 துவங்கி 1985 வரை அசாமிய இனவாதிகள் நடத்திய படுகொலைகள் இன்றும் ஆறாத ரணமாய் இருக்கிறது. வடகிழக்கில் உள்ளூர் அளவில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களிடம் ஒரு ஐக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே இருந்துள்ளது. போடோ, குக்கி, மிசோ நாகா என்று வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே தீராத இனக்கலவரங்களை மூட்டி விட்டது இந்திய ஆளும் வர்க்கம் தான்.

போடோக்கள் மற்றும் அசாமியர்களின் தொடர்தாக்குதலுக்குள்ளான முசுலீம்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டாயிரங்களில் பத்ருதீன் அஜ்மால் என்பவரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கீழ் அணிதிரளத் துவங்குகிறார்கள். வாசனைத் திரவியங்கள் தயாரித்து விற்கும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பெருமுதலாளியான பத்ருத்தீன் அஜ்மால் தியோபந்த் எனும் அடிப்படைவாத இசுலாமியப் பிரிவைச் சேர்ந்தவர்.

இரண்டாயிரங்களின் மத்தியில் அவ்வளவாகச் செல்லாக்கு இல்லாமலிருந்த இவரது கட்சி தற்போது 18 எம்.எல்.ஏக்களுடன் முக்கியமான எதிர்கட்சி எனும் அந்தஸ்திற்கு வளர்ந்துள்ளது. காங்கிரசு மற்றும் பாரதியஜனதாவின் இந்துத்துவ வெறிக்கு பதிலடியாகத் துவங்கப்பட்ட இந்த அமைப்பும் இசுலாமியர்களை ஒரு முக்கியமான ஓட்டுவங்கியாக அணிதிரட்டியுள்ளது. தற்போது நடந்து வரும் கலவரங்கள் இந்த அணிசேர்க்கையை மேலும் உறுதிப்படுத்துவதோடு மக்களைக் கூர்மையாகப் பிளந்து எதிரெதிர் முகாம்களாக நிறுத்தியுள்ளது.

சுமார் நூறைம்பது ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர் காலத்தில் அசாமில் குடியேறிய வங்காளிகளின் நிலைமை என்பது இலங்கையின் மலையகத் தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்களின் நிலைமையை ஒட்டியது தான். சிங்கள இனவாத பாசிஸ்டுகள் மலையகத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதும் ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகள் வங்காளி முசுலீம்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வது ஏறக்குறைய ஒன்று தான்.

மட்டுமல்லாமல் அசாமிய தேசிய இனத்தைக் காக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் நோக்கமன்று – இந்த பிரச்சினையை வைத்துக் கொண்டு அகில இந்திய அளவில் இந்துக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி முசுலீம்களை அந்நியப்படுத்துவதும், வடகிழக்கில் ஓட்டுக்களை அள்ளுவதும் தான் உண்மையான நோக்கம். அகில இந்திய அளவில் இந்துக்களை பாசிச செயல்திட்டத்தின் கீழ் அணிதிரட்ட இவர்கள் பிரதேச அளவிலான உத்திகளைக் கையாள்கிறார்கள். உதாரணமாக, கருநாடகத்தில் கன்னடப் பெருமிதம், குஜராத்தி அஸ்மிதா, மராத்தி மானூஸ் போல அந்தந்த பிரதேசங்களில் உள்ள பிற்போக்கு நிலபிரபுத்துவ ஆதிக்கக் கருத்தியலை தங்கள் முகமூடியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்வாறு தயார்படுத்தப்படும் இந்துத்துவ இயக்கங்களின் தொண்டர்களோ மூளையற்ற வெற்று மண்டையோடுகளோடு தான் அலைகிறார்கள் என்பது சமீபத்தில் நிரூபணமானது. கடந்த 30ம் தேதி பெங்களூருவில் இருந்து மங்களூருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்த வட இந்தியத் தொழிலாளர்களை மாண்டியாவில் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி எனும் சங்கப்பரிவார அமைப்பின் குண்டர்கள், அதில் 89 தொழிலாளர்களை வெளியே இழுத்துப் போட்டு ‘வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் இவர்கள்’ என்று கூச்சலிட்டபடியே அடித்துள்ளனர். இந்தத் தொழிலாளர்களில் பலர் ராஜஸ்தான், உ.பி, பீகார், ஒரிசா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாம் – அதிலும் பலர் ‘இந்துக்கள்’.

இந்து பாசிசம் பொய்களையும் வதந்திகளையும் செயல்தந்திரமாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. இது இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல – அனைத்து உழைக்கும் மக்களுக்குமே எதிரானது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் போது தான் அவர்களைக் களத்தில் வீழ்த்த முடியும்.

தகவல் மூலங்கள் – கஃபிலா, அவுட்லுக் மற்றும் ஹிந்து நாளிதழ்

_________________________________________________

– தமிழரசன்.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

1

லண்டன்-கலவரம்ங்கிலாந்தின் தலைநகர் இலண்டன் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மார்க் டக்கன் என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அங்கு வெடித்த கலகம், அந்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியது.  இக்கலகம் போலீசின் அத்துமீறலுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்வினையாக மட்டுமில்லாமல், தனியார்மயம் உருவாக்கிய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டமாகவும் உருவெடுத்தது.

அமெரிக்காவின் மிகப்பெரும் கோடீசுவரனும் பங்குச் சந்தை சூதாடியுமான வாரன் பஃபெட், “இங்கிலாந்தில் நடந்ததைப் போன்றதொரு கலகம் அமெரிக்காவிலும் நடக்க வாய்ப்புள்ளது” என இக்கலகத்தின் தன்மையை உணர்ந்து எச்சரிக்கும் அளவிற்கு, அதாவது ஆளும் கும்பலுக்கு உறைக்கும் அளவிற்கு, இக்கலகம் தனியார்மயத்தைக் குறி வைத்துத் தாக்கியது. இக்கலகத்தின்பொழுது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான சூப்பர் ஸ்டோர்கள் தாக்கப்பட்டதைக் கண்டு பீதியடைந்த இங்கிலாந்து அரசு,  இது சாதாரண தெருப் போராட்டம் அல்ல, வர்க்கப் போரின் தொடக்கம் என்பதை உணர்ந்து,  இதனை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் நோக்கத்தோடு, “கலகக்காரர்களை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிப்பதன் மூலம்தான் சமூகத்தின் அமைதியை, ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்” என்ற பாசிச பிரச்சாரத்தை நடத்தி வந்தது.  இங்கிலாந்தின் நீதித்துறையும் இந்த அரசு பயங்கரவாதத்திற்கு ஒத்து ஊதியது.

கலகத்தில் இறங்கிய பெரும்பாலோர் மீது அதற்கு முன்னதாக எவ்வித கிரிமினல் குற்றமும் இல்லாதபோதும்; கலகத்தில் இறங்கியவர்கள் தாமே போலீசு நிலையங்களுக்கு வந்து சரண் அடைந்தபோதும்; அவர்கள் நீதிபதியின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டபோதும்; குற்றம் சுமத்தப்பட்டவர்களுள் பலர் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் உள்ள இளம் பருவத்தினர் என்றபோதும் கலகக்காரர்களுக்கு மன்னிப்பு அளிப்பதோ, குறைந்த தண்டனை அளிப்பதோ நிராகரிக்கப்பட்டது.

  • 25 பவுண்டு பெறுமானமுள்ள செண்ட் பாட்டிலைத் ‘திருடிய குற்றத்திற்காக’ டேவிட் ஸ்வார்பிரிக் என்ற 25 வயது இளைஞனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை;
  • ஒரு சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து 10 பாக்கெட் சுயிங்கத்தை எடுத்த ‘குற்றத்திற்காக’ ஷனோலா ஸ்மித் என்ற இளம் பெண்ணுக்கு ஆறு மாத சிறை தண்டனை  என நீதித்துறையால் சட்டபூர்வ பாசிச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

சாதாரண காலங்களில் நடைபெறும் திருட்டுக் குற்றத்திற்கு 2 மாதங்கள் மட்டுமே தண்டனை அளிக்கும் இங்கிலாந்து நீதிமன்றம், கலகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டுக்கு 7 மாதங்கள் எனத் தண்டனையை அதிகரித்து அளித்தது; கடையை உடைத்துக் கொள்ளையிடும் குற்றச்சாட்டுக்கு வழக்கமாக அளிக்கப்படும் தண்டனைக்குப் பதிலாக (8 மாதங்கள்), 14 மாதங்கள் தண்டனை அளிக்கப்பட்டது; பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்கும் குற்றச்சாட்டுக்கு வழக்கமாக அளிக்கப்படும் 5 மாத தண்டனைக்குப் பதிலாக இரண்டு மடங்கு தண்டனை (10 மாதங்கள்) வழங்கப்பட்டது.

இக்கலகத்திற்காக இலண்டன் நகரில் மட்டும் 1292 பேர் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்த சிறைத் தண்டனைக் காலம் ஏறத்தாழ 1,800 ஆண்டுகள் ஆகும்.  இத்தண்டனைக் காலத்தின் சராசரியைக் கணக்கிட்டால், தண்டிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும்.

தனியார்மயம்  தாராளமயம் உருவாக்கியுள்ள மாபெரும் பொருளாதார மந்தத்திலும், கட்டமைப்பு நெருக்கடியிலும் சிக்கிக் கொண்டுள்ள ஐரோப்பா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின், மாணவர்களின், இளைஞர்களின் கலகங்கள் காட்டுத் தீ போலப் பரவி, முதலாளித்துவ சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்தி வருகின்றன.  கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம், உழைக்கும் மக்கள் மத்தியில் அரசு பயங்கரவாத அச்சத்தை உருவாக்குதன் மூலம் அத்தீ தன் நாட்டுக்குள் பரவுவதைத் தடுத்துவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, இங்கிலாந்தின் ஆளுங்கும்பல்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!

8

கிரானைட்-ஊழல்லைக்கள்ளன் பி.ஆர். பழனிச்சாமி கைது செய்யப்பட்டுவிட்டாராம். கைது என்று குறிக்கும் முகமாக போலீசார் கைதியின் கையைப் பற்றுவது வழக்கம். பழனிச்சாமி கைது காட்சியைப் பார்த்தால், பதவியேற்பு விழாவுக்கு அமைச்சர் செல்வது போல இருக்கிறது. போலீசு உயரதிகாரிகள் பயபக்தியாக உடன் நடந்து வருகிறார்கள். கைது செய்து 24 மணிநேரத்தில் நீதிமன்றத்திற்குக் கொண்டுவராமல், 6 மணிநேரம் அதிகம் எடுத்துக் கொண்டது ஏன் என்று சீறுகிறார் நீதிபதி. நீதிமன்றத்தில் பழனிச்சாமிக்கு நாற்காலி போடப்படுகிறது. போலீசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே அவருடைய தனிப்பட்ட மருத்துவர் வந்து சோதனை செய்கிறார். போலீசு விசாரணையின் போது தனக்குத் தூக்கம் வருவதாக பி.ஆர்.பி. கூறியவுடன் விசாரணைக்கு இடைவேளை விடப்படுகிறது. சிறையில் முதல்வகுப்பு கொடுக்குமாறு நீதிபதி நினைவுபடுத்துகிறார். பி.ஆர்.பி. யின் மகன்கள், துரை தயாநிதி ஆகியோர் மீது வழக்கிருந்தும் போலீசு அவர்களைத் தேடவில்லை. அவர்கள் முன் ஜாமீன் போட்டிருக்கிறார்கள். கைது செய்யமாட்டோம் என்று உயர் நீதிமன்றத்துக்கு அரசாங்கம்  உறுதி அளிக்கிறது.

இதற்குப் பெயர் அம்மாவின் கடுமையான நடவடிக்கையாம். “யாராயிருந்தாலும் விடவேண்டாம்” என்று அம்மா கூறிவிட்டதால், பழனிச்சாமியுடன் தொடர்புள்ள ஓ.பி.எஸ். போன்ற அ.தி.மு.க. வினர் பீதியில் இருக்கிறார்களாம். துக்ளக், ஜுவி முதலான பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதுகின்றன. சகாயத்தின் கடிதத்தைக்கூட அதிகாரிகள் அம்மாவுக்கு மறைத்து விட்டதாகவும், சகாயம் மாற்றப்பட்டதுகூட அம்மாவின் கவனத்துக்கே வராமல் நடந்து விட்டதாகவும் கூச்சமே இல்லாமல் புளுகுகிறது  ஜூவி.

ஓராண்டிற்கு முன்பே தினபூமி நாளிதழ் ஆதாரப்பூர்வமாக இந்தக் கொள்ளையை வெளியிட்டது. உடனே தி.மு.க. ஆட்சி தினபூமி ஆசிரியரை வழிப்பறி வழக்கில் கைது செய்தது. சகாயத்தின் கடிதத்தை அன்பழகன் என்றொரு பத்திரிகையாளர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கி பத்திரிகையில் வெளியிட்ட பின்னர்தான், வேறு வழியின்றி தற்போதைய நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன.

நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளை ரவுண்டு கட்டிச் சிறையிலடைத்த ஜெயலலிதா, இன்று கருணாநிதியின் குடும்பம் நேரடியாகச் சிக்கியுள்ள இந்தக் கொள்ளையைப் பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பதற்குக் காரணம், இதில் அ.தி.மு.க. வினரும் சம்மந்தப்பட்டிருப்பது மட்டுமல்ல, மொத்த அதிகாரவர்க்கமும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதுதான்.

கிரானைட் கொள்ளைவழக்கில் அம்மாதான் பி.ஆர்.பி.யை விடவும் மூத்த ‘அக்யூஸ்டு’.  தமிழகத்தின் கிரானைட் சுரங்கங்கள் அனைத்தும் தமிழ்நாடு மினரல்ஸ் (டாமின்) நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தன. ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான், “ரெய்சிங் அண்டு சேல்” முறையில்  தனியார் முதலாளிகள் சொந்தமாக கிரானைட் குவாரிகள் அமைத்துக்கொள்ள ஏதுவாகச் சட்டம் இயற்றப்பட்டு, இவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அன்று “37 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, டாமினுக்குச் சொந்தமான சுரங்கங்களின் உரிமத்தை, முறைகேடாகத் தனியாருக்கு கொடுத்தார்” என்று ஜெ. மீதும், அன்றைய டாமின் தலைமை அதிகாரி தியானேஸ்வரன் மீதும் 1997இல் தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால், மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதும் 2004இல்  இந்த வழக்கு ஊத்தி மூடப்பட்டது. அண்ணன் அழகிரி கிரானைட் கொள்ளையில் இறங்கிவிடவே, மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்த வழக்கு விவகாரத்தை கிளறவில்லை.

ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது. சாராய உடையாரையும், ஜேப்பியாரையும் உருவாக்கிய எம்.ஜி.ஆர், கிரானைட் மலைகளை உடைத்து விற்பதற்கு 1978இல் டாமின் நிறுவனத்தைத் தொடங்கி, அதற்குத் தனது நண்பரான நிலவியல் துறை பேராசிரியர் சரவணன் என்ற திருடனை தலைவராக நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்த கிரானைட் சுரங்கங்களை ’டைகோ’ என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விட்டுப் பல கோடிகளைக் கொள்ளையடித்தார் சரவணன்.

1989இல் கருணாநிதி ஆட்சியில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் 1991இல் ஜெயலலிதா வந்தவுடன் சரவணன் மீண்டும் டாமின் தலைவராக்கப் பட்டார். பின்னர் சரவணனை விருப்ப ஓய்வில் அனுப்பி விட்டு, தொழிலை தொடர்வதற்கு தியானேசுவரனை நியமித்தார் அம்மா.

ஓய்வு பெற்ற பின் ‘மாபெரும் பக்திமானாக’, சென்னை அசோக் நகரில் செட்டிலாகி இருந்த சரவணன், 2008ஆம் ஆண்டு மர்மமான முறையில், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, நகைகளும் வெளிநாட்டு கரன்சிகளும் களவு போயின. சரவணனுக்கு ஸ்விஸ் வங்கியிலெல்லாம் பணமிருப்பதாகவும் அப்போது நாளேடுகளில் செய்தி வந்தது. அந்த திருட்டுச் சொத்துக்கள் யாருக்குச் சேர்ந்தன என்பது போலீசுக்குத்தான் வெளிச்சம்.

ஆட்சி மாறியவுடன் பேருந்து நிலைய சைக்கிள் நிறுத்தம், கட்டணக் கழிப்பறை போன்றவற்றில் சம்பாதிக்கும் உரிமையை சுமுகமாக அடுத்த கட்சிக்கு கைமாற்றிக் விடுவதைப் போல, மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் பி.ஆர்.பி. போன்றோரிடம் பங்கு வாங்குவதிலும், தொழில் கூட்டுச் சேர்ந்து கொள்வதிலும், பங்கு பிரித்துக் கொள்வதிலும் சர்வ கட்சிகளும்  ஒரு சுமுகமான கூட்டினைப் பேணி வருகின்றனர். தனியார்மயம் இந்தக் கொள்ளைகளில் பெரும்பகுதியை சட்டபூர்வமாக்கிவிட்டது.

மதுரையின் வடக்கு எல்லையில் உள்ள ஆனைமலை என்ற குன்று மக்களின் அபிமானத்துக்குரியது. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அந்தக் குன்றை அறுத்து விற்பனை செய்ய முயன்றது பி.ஆர்.பி.அழகிரி கூட்டணி. ஆனால், மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. இமயமோ, பொதிகையோ எதுவானாலும், அது நோட்டுக்கட்டின் உருவமாகவே மலைக்கள்ளர்களுக்கு தெரிகிறது. “அக்கா, தங்கச்சி, பெண்டாட்டி, பிள்ளைகூட உனக்கு ரூவா நோட்டாகத்தான் தெரியுமா?” என்று அழகிரியையோ பி.ஆர்.பி.யையோ மக்கள் கேட்டால், “அதுக்கெல்லாம் கிரானைட் அளவுக்கு விலை வராது” என்று அவர்கள் கோபப்படாமல் பதிலளிக்ககூடும்.

இயற்கை வளங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களைத் தமது சொந்த சொத்தாக எண்ணி, அவற்றைப் பாதுகாக்க மக்கள் அணிதிரண்டு இந்தக் கொள்ளையர்களை மோதி அழிக்காத வரை இந்தக் கொள்ளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சிவகாசி-முதலிபட்டி படுகொலை-நேரடி ரிப்போர்ட்!

6

செய்தி -95

டந்த புதன்கிழமை (05/09/2012) பிற்பகலில் சிவகாசியை அடுத்த முதலிபட்டி ஓம்சக்தி புளூ மெட்டல்ஸ் எனும் வெடி பொருட்கள் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. நேரடியாக அங்கு சென்று நிலமையை அறியும் பொருட்டு தோழர்கள் அடுத்த நாள் காலையில் சிவகாசியைச் சென்றடைந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஈரத்துடன் காட்சியளித்தன. விசாரித்துப் பார்த்ததில் முதலிபட்டிக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆட்டோ, வேன் போன்றவையும் கூட செல்லாது என்றும் கூறினார்கள். வேறு வழியின்றி டூவீலர்களுக்கு ஏற்பாடு செய்து கிளம்பினோம்.

முதலிபட்டிக்கு சென்றதும் யாரும் தொழிற்கூடம் இருந்த பகுதிக்குச் சென்றுவிட முடியாதபடி காவல் படைகளின் அரண் தான் எம்மை எதிர்கொண்டது. முன்பக்கப் பாதை, பின்பக்கப் பாதை, சுற்றுவழி, ஒத்தையடிப் பாதை, முள்வேலி என அனைத்து வழிகளில் உள்ளே செல்ல முயற்சித்தும் அத்தனையிலும் லத்திக்கம்புகள் விரட்டின. கேரளாவின் கைரளி தொலைக்காட்சியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஏதேதோ பேப்பர்களைக்காட்டி உள்ளே நுழைந்தன. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் சிபிஎம் தலைவர் எச்சூரியும் (மதுரையில் எஸ்.எஃப்ஃ.ஐ மாநாடாம், அப்படியே துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்) அவர் பின்னே ஒரு கூட்டமும் வந்தது. பின்னர் காவல்படை அரண்களும் விலக்கப்பட்டுவிட உள்ளே நுழைந்தோம்.

வெடித்துச் சிதறி சிதிலமைடைந்த அறைகள், தீப்பிடித்து கரிந்து போன சுவர்கள், முறிந்து போன மரம் என காணக் கிடைத்தவை நடந்த கோரத்தின் மௌன சாட்சிகளாய் எஞ்சியிருந்தன. ஆனால் சிதறிய பட்டாசுகளின் மிச்சங்கள் கூட்டிப் பெருக்கி ஓரமாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லா இடமும் சுத்தமாய் காட்சியளித்தது. தெளிவாய்ச் சொன்னால் கட்டிட இடிபாடுகளைக் கழித்து விட்டால் சில மணி நேரங்களுக்கு முன்னர் கோரமான வெடி விபத்து நிகழ்ந்த இடம் என்று கூறமுடியாதபடி இருந்தது. அதாவது, இப்படி ஒரு விபத்து நேர்ந்து ஒரு வாரம் கழித்து அந்த இடத்தைப் பார்வையிட்டால் எப்படி இருக்குமே அப்படி ஒரே இரவில் மாற்றப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் இது ஏன் என்ற கேள்விதான் மனதில் தொக்கி நின்றது. மெல்ல அங்கு கூடியிருந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

சிவகாசி-வெடி-விபத்து-நேரடி-ரிப்போர்ட்

ஒரு முதியவர் கூறினார், இரவோடு இரவாக புல்டோசர்களும், ஜேசிபி எந்திரங்களும் வந்து சென்றன என்று. அந்தக் கோரம் நடந்து ஓரிரு மணி நேரத்திற்குள் அந்தப் பகுதியை காவல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. காலை வரை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் கனரக வாகனங்கள் வந்து சென்றிருக்கின்றன. காலையில் உள்ளே சென்று பார்த்தால் எல்லா இடமும் சுத்தமாக இருக்கிறது. என்றால் இதன் பொருள் என்ன? முதல் நாள் இரவில் ஜி டிவி செய்தியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 வரை என்று கூறினார்கள். ஆனால் காலையில் அனைத்து நாளிதழ்களும் செய்தி ஊடகங்களும் 38 என்று முடித்து விட்டன. ஆகவே, இது தெளிவாக இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் வேலைதான்.

சிறிதும் பெரிதுமாக சிவகாசி பகுதியில் இது போன்ற பட்டாசு ஆலைகள் 900க்கும் அதிகமாக இயங்கி வருகின்றன. முதலிபட்டி பகுதியில் மட்டும் தோராயமாக 200 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அத்தனையும் எந்த நேரமும் வெடிவிபத்தை ஏற்படுத்தக் கூடிய மிக ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கையாளும் ஆலைகள். இத்தனைக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு எட்டு பெண்களுக்கு எட்டு என பதினாறு படுக்கைகள் கொண்ட தீக்காய சிகிச்சைப் பிரிவு மட்டும் தான். ஆபத்து காலங்களுக்கு சிவகாசியிலிருந்தோ சாத்தூரிலிருந்தோ தான் தீயணைப்பு வண்டிகள் வர வேண்டும். சாலைகளோ படு மோசம். 15 ஆண்டுகளாக சாலைகள் செப்பனிடப்படவே இல்லை என்கிறார்கள் பகுதி மக்கள். சரியாக பகல் 12.15 மணிக்கு முதலில் வெடித்திருக்கிறது. ஆனால் தீயணைப்பு வண்டிகளோ, ஆம்புலன்ஸ்களோ வந்து சேர ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகியிருக்கிறது. ஆளும், அதிகார வர்க்கங்கள் எந்த அளவுக்கு மக்கள் மீது அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பதம்.

இங்குள்ள எந்த பட்டாசு ஆலையும் விதிமுறைகளுக்கு மயிரளவுக்கும் மதிப்பளிக்கவில்லை. ஓம்சக்தி ஆலை உட்பட எந்த ஆலையிலும் சிறிய அளவில் விபத்து நடந்தால் கூட அதை எதிர்கொள்வதற்கு முதலுதவியோ, மருத்துவ உபகரணங்களோ, மருத்துவப் பணியாளர்களோ கிடையாது. வேலை செய்பவர்களுக்கு முறையான பயிற்சியோ, தொழில்நுட்பங்களோ கற்றுக் கொடுக்கப்படவில்லை. முதலிப்பெட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் கூறுகிறார், இங்குள்ள யாருக்கும் எந்தவித பயிற்சியும் தரப்பட்டதில்லை என்று. மட்டுமல்லாது ஆபத்தான ஃபேன்ஸி ரக வெடிகளை தயாரிக்கும் அவருக்கு அதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் பெயரோ, அது என்ன விதமான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும் என்பதோ, விபரீதம் நேர்ந்தால் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பதோ தெரியவில்லை. சிவப்பு மருந்து, பச்சை மருந்து, நீல மருந்து என்று அவற்றின் நிறங்களே பெயராக தெரிகிறது. அவருக்கு மட்டுமல்ல அந்தப்பகுதியில் வேலை செய்யும் பெரும்பான்மை தொழிலாளிகளுக்கு தெரியாது என அடித்துக் கூறுகிறார்.

சிவகாசி மருத்துவமனையில் கையில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவரும் காளியம்மாளிடம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெடிவிபத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போதிய அனுபவமற்ற தொழிலாளர் ஒருவர் வெடிமருந்தை கிட்டிக்கும் போது (வெடியின் குழாய்களில் வெடிமருந்துக் கலவையை திணிப்பது) அதிக அழுத்தம் கொடுத்ததால் வெடித்தது என்கிறார். அனுபவமற்ற, புதிய, பயிற்சியற்ற தொழிலாளரைக் கொண்டு படு ஆபத்தான வேலையைச் செய்வித்த அந்த முதலாளியின் லாப வெறியை என்னவென்று அழைப்பது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் கூறும்போது, நாங்கள் முப்பத்தாறு பேர் இந்த ஆலையில் வேலை செய்தோம் ஒருவர் இறந்து விட்டார் என்கிறார். எப்படி நேர்ந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது, நான் வெளியில் சென்றுவிட்டேன் என்கிறார். இன்னொருவரைக் கேட்டாலும் அதே பதில். ஏனையவர்கள் எங்கே என்றால் கூற மறுக்கிறார். எதையும் கூறக் கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

இறந்தவர்களில் ஓம்சக்தியில் வேலை பார்த்தவர்களைவிட முதல் வெடித்தலுக்குப் பிறகு அக்கம் பக்கத்திலிருந்து காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கை பார்க்கச் சென்றவர்களுமே அதிகம். சரியாக 12.15க்கு முதல் வெடி வெடித்திருக்கிறது. இதில் அதிக சேதம் ஏற்படவில்லை. வேலை செய்தவர்கள் காயங்களுடன் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அருகிலிருந்த ஆலைகளில் வேலை செய்தவர்கள் உதவிக்கு வந்து பெரும்பாலானோரை தூக்கிவந்து வெளியில் கிடத்தியிருக்கிறார்கள். அதற்கு சரியாக அரை மணி நேரம் கழித்து மணி மருந்து என்று சொல்லப்படும் கடுகைப் போல் உருட்டிய வெடிமருந்துக் கலவை சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து அறை மிக மோசமாக வெடித்துச் சிதறி இருக்கிறது. இது தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது முதல் வெடிப்பு நிகழ்ந்த பிறகு, உதவி செய்யவும் வேடிக்கை பார்க்கவும் வந்த அநேகர் இரண்டாவது வெடிப்பில் சிக்கிக் கொண்டனர்.

இதில் தன் தம்பியை பறிகொடுத்த குமார் என்பவர் புதுத் தகவல் ஒன்றைக் கூறினார், காலை பத்து மணிக்கு சிறிய அளவில் வெடித்ததாகவும், அதை அணைத்து தார்ப்பாயில் சுற்றி தனியாக ஒதுக்கி வைத்துவிட்டு வேலையை தொடருமாறு நிர்வாகத் தரப்பில் வற்புறுத்தியதாகவும், அது தான் இவ்வளவு பெரிய வெடிப்புக்கு காரணமாகி விட்டது, முதலிலேயே வேலை நிறுத்திவிட்டு அனைவரையும் வெளியேற்றி இருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்கலாம் என்றும் கூறினார். ஆனால் இந்தத் தகவலை அங்கு வேலை செய்த யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த கோரத்துக்கு காரணமான விசயம் என்னவென்றால் மணி மருந்தை சிறிய அளவிலல்லாது சேமித்து வைக்கவே கூடாது. ஆனால் வேறொரு ஆலைக்கு வேண்டி மிக அதிக அளவில் மணி மருந்தை இரண்டு நாட்களாக சேமித்து வைத்திருந்திருக்கிறது நிர்வாகம். இது தான் இரண்டாவது வெடிப்புக்கு முக்கியமான காரணம். மணிமருந்தை சேமித்துவைப்பது ஆபத்து என்று தெரிந்திருந்த போதிலும் இரண்டு நாட்களாக சேமித்து வைக்கத் தூண்டியது எது? அந்த லாப வெறி அல்லவா இந்த விபத்துக்கும் இத்தனை மரணங்களுக்கும் காரணம்?

முதல் வெடிப்பு நிகழ்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது கிரசஷர் எனப்படும் கன்வேயர் பெல்ட் போன்ற ஒன்றின் மீது ஏறி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இரண்டாவது வெடிப்பின் போது சடுதியில் புகை சூழ்ந்து கொண்டதால் எந்தப் பக்கம் இறங்குவது என்று தெரியாமல் கிரஷருக்குள்ளேயே விழுந்திருக்கிறார்கள். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். மட்டுமல்லாது உள்ளே நின்றிருந்த நான்கு பேருந்துகளை வெளியில் எடுத்துவரும் போது அதில் சிக்கியும் சிலர் இறந்திருக்கிறார்கள்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

எப்படி இருந்த போதிலும் 38 என்பது மிகக் குறைந்த எண்ணிக்கை. நேற்று இரவு தொலைக்காட்சி செய்திகளில் மதுரையிலும் சாத்தூரிலும் தலா 13 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சிவகாசியில் 18 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் மொத்தம் 44 என்று கூறினார்கள். ஆனால் இன்று காலையில் அது எப்படி 38 ஆனது என்பது முதலாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ஓம்சக்தியில் அதிகாரபூர்வமாக தற்காலிக வேலை செய்பவர்கள் (நிரந்தரத் தொழிலாளர்கள் பெரும்பாலும் இல்லை) 260 வரை இருக்கும் என்கிறார்கள். ஆனால் எல்லா ஆலைகளிலும் ‘எக்ஸ்ட்ரா ஆட்கள்’ தான் உற்பத்தியில் பெரும்பகுதியைச் செய்வது. இவர்கள் வேலை செய்ததற்காக எந்தப் பதிவும் இருக்காது.

250 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டமிருக்கிறது, பயிற்சித் தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டமிருக்கிறது. ஆனால் இந்த சட்டங்களெல்லாம் முதலாளியின் கழிப்பறைக் காகிதமாகத்தானே இருக்கிறது. அதன்படி எக்ஸ்ட்ரா ஆட்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மொத்தம் 400 பேர்வரை வேலையில் இருந்திருக்கிறார்கள். வெடிப்பு நடந்து ஒன்றரை மணி நேரம் வரை எந்த உதவியும் அரசிடமிருந்து வரவில்லை. வந்த பின்னரும் கூட மிக மோசமான சாலைகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் இறப்பு எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும் என்று கூறுவதை மிகைப்படுத்தப்பட்டது என்று கொண்டாலும், நூற்றுக்கு குறையாமல் இருக்கும் என்பதை களத்தை ஆய்வு செய்யும் போது அறிய முடிகிறது. ஆனாலும் இது துல்லியமான எண்ணிக்கை அல்ல.

எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று உறுதியாக தெரியாதவரை இறப்புக் கணக்கை துல்லியமாக கூற முடியாது. மேற்கு வங்கத்திலிருந்து முதலிபட்டி வரை பல இடங்களிலிருந்தும் வந்து எக்ஸ்ட்ராவாக வேலை பார்த்தவர்கள் இருக்கும் போது உண்மை கணக்கு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அல்லது தெரியாமலும் போகலாம்.  அதேநேரம் ஊடக வலைப்பின்னல் கொண்டிருக்கும் எந்த செய்தி நிறுவனங்களும் இதை கணக்கெடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு அரசு சொன்ன 38 போதுமானதாக இருக்கிறது.

இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை விட ஏன் இறந்தார்கள் என்பதே முதன்மையானது. சற்றேரக்குறைய 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இந்த வெடிமருந்து ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தப்பகுதியில் வேலை செய்யும் அனைவரும் இந்த வேலையைத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் சிறிதும் பெரிதுமாய் விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆபத்தான இரசாயனப் பொருட்களை எந்த வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி, எந்தவித தொழில்நுட்ப பயிற்சியும் இன்றி வெறுங்கைகளுடன் குழைத்து திரித்து உருட்டி கிட்டித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு ஆபத்தான இந்த தொழிலை விட்டு வேறு வேலைகளுக்கு ஏன் அவர்கள் செல்லக் கூடாது?

சிவகாசி-வெடி-விபத்து-நேரடி-ரிப்போர்ட்

இதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் கேட்கலாம். இவ்வளவு கோரமான விபத்து நடந்து இத்தனைபேர் இறந்திருக்கிறார்கள் ஆனாலும் இந்தப்பகுதி மக்களிடம் உறவினர்கள், நண்பர்கள் இறந்துபோன சோகம் இருக்கிறது ஆனால் இவ்வளவு கோரமான இந்த விபத்து குறித்து எந்த வித அதிர்ச்சியும் அவர்களிடம் இல்லை. இது ஏன்? இதற்கு செல்லையநாயக்கன்பட்டி ஆறுமுகம் பதில் கூறுகிறார், “இன்று எல்லை ஆலைகளுக்கும் லீவு விட்டு விட்டார்கள் அதனால் எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். வேலை வைத்திருந்தால் இன்றும் வேலைக்கு சென்றிருப்பார்கள். ஏனென்றால் இதை விட்டால் நாங்கள் வாழ்வதற்கு வேறு வழியில்லை” மாற்று வேலை வாய்ப்புகளே இல்லாமல் இந்த மக்களை வெடிமருந்தோடு மருந்தாய் கிட்டிக்கச் செய்திருப்பது யார் பொறுப்பு?

திருடனையும் திருட்டுக் கொடுத்தவனையும் ஒரே தட்டில் வைத்து இருவர் மீது தவறு இருக்கிறது என்று கூறுவது போல், ஜாக்கிரதையாக இல்லாதது தொழிலாளர்கள் தவறுதான் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எட்டு மணி நேரம் வேலை, மாதச் சம்பளம் என்று இருந்தால் அவர்கள் செய்யும் வேலையின் ஆபத்தை உணர்ந்து நிதானமாய் செய்திருக்க மாட்டார்களா? ஆனால் பீஸ் ரேட் போட்டு ஒரு யூனிட்டுக்கு (ஆயிரம் வெடிகள்) ஆறு ரூபாய் சம்பளம் என்று அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதால் தானே, தங்கள் வயிற்றுக்காக உயிரையே துச்சமென மதிக்கிறார்கள். பீஸ் ரேட் போட்டு கொள்ளையடிப்பதற்கு அனுமதித்த இந்த அரசை யார் தண்டிப்பது?

இராமலிங்காபுரம் இன்னாசி வேடிக்கையாக ஒன்றைக் குறிப்பிட்டார். “மற்ற எல்லா வேலையிலும் கங்காணியோ சூபர்வைசரோ பின்னால் நின்று கொண்டு வேலை செய் வேலை செய் என்று தார்க்குச்சி போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதில் மட்டும், கங்காணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அதேநேரம் ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் வேலை நடக்கும்”.  பீஸ் ரேட் என்ற ஒன்றைக் கொண்டு வந்து அவர்களை அவர்களே எந்திரமாய் மாற்றிவைத்தது யார் பொறுப்பு?

இத்தனைக்கும் மேல் மக்களை கொதிக்க வைக்கும் விசயமும் இதிலிருக்கிறது. இந்த ஓம்சக்தி ஆலையின் உரிமையாளரான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் விருதுநகர் சேர்மன் முருகேசன் ஆலை நடத்துவதற்காகப் பெற்றிருந்த அனுமதி கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இவனுக்கோ, இதை லீசுக்கு ஏற்று நடத்தும் திருத்தங்கல் பால் பாண்டிக்கோ இது தெரியாதா? இன்னும் எத்தனை உயிர்கள் இந்த மண்ணில் வீழ்ந்தாலும் இவர்களின் லாபவெறி கண்ணை மறைக்கும். ஆலை நடத்த அனுமதி இல்லை, தொழிலாளர் சட்டங்களை மதிப்பது இல்லை, முறையான பயிற்சி அளிப்பதில்லை, விழிப்புணர்வு கொடுப்பதில்லை, முறையான ஊதியம் கொடுப்பதில்லை, சங்கம் சேர அனுமதி இல்லை. ஆனால் தொழிலாளர்களை கொன்றொழிக்கவும் தயங்குவதில்லை என்றால். இது யார்மீது யார் செலுத்திய வன்முறை? இந்த அரசும் முதலாளிகளும் சேர்ந்து செய்த படுகொலை இது என்பதில் யாருக்காவது ஐயமிருக்கிறதா?

_________________________________________________

– வினவு செய்தியாளர்கள்.

__________________________________________________

மாருதி தொழிலாளர்கள் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்!

2

மாருதி-தொழிலாளர்-அடக்குமுறை-1

மாருதி சுசுகி நிர்வாகத்தின் கொடிய அடக்குமுறைக்கு எதிராக ஜுலை 18  அன்று வெடித்த தொழிலாளர் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஆலையில்  கதவடைப்பு அறிவிக்கப்பட்டது. ஆலையின் சுற்றுவட்டார கிராமங்களில்  வசித்து வந்த மாருதி தொழிலாளர்கள் மீது போலீசு அடக்குமுறையும்  பொய்வழக்குகளும் பாய்ந்தன.

இப்போது மாருதி சுசுகி தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே  வேலைக்கு வந்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

1528 நிரந்தரத் தொழிலாளர்களில் 500 பேர் பணி நீக்கம்  செய்யப்பட்டிருக்கின்றனர். பணி நீக்க அறிவிப்பும் ஆலை  இயங்கத் தொடங்கும் என்ற அறிவிப்பும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.‘காயம்பட்ட அதிகாரிகள் யாரையெல்லாம்  அடையாளம் காட்டினார்களோ, அவர்கள் அனைவரையும் வேலை நீக்கம்  செய்திருக்கிறோம்; இன்னும் யாரெல்லாம் அடையாளம்  காட்டப்படுகிறார்களோ,  அவர்களையெல்லாம் வேலைநீக்கம் செய்வோம்” என்று அறிவித்திருக்கிறார் மாருதியின் தலைவர் பார்கவா.

எந்த விதமான விளக்கமும் கேட்காமல், விசாரணையும் நடத்தாமல்  பணிநீக்கம் செய்வது, சட்டத்துக்குப் புறம்பானது என்று தெளிவாகத்  தெரிந்த போதும், மாநில அரசு மூச்சுவிடவில்லை. 500 போலீசாரை  ஆலைக்குள்ளேயே குவித்திருக்கிறது மாநில அரசு. முன்னாள்  இராணுவத்தினர் உள்ளிட்ட 100 ஆயுதம் தாங்கிய தனியார் படையினரை  நிர்வாகம் நிறுத்தியிருக்கிறது. வெளிப்படையாக நிர்வாகத்தின் அடியாள்  படையாகவே போலீசு நிறுத்தப்பட்டிருப்பதால், வேறு வழியின்றி  காங்கிரசு, பா.ஜ.க. தொழிற்சங்கங்களே, ‘ஆலைக்குள்ளிருந்து போலீசைத்  திரும்பப் பெறவேண்டும்’ என்று கோரியிருக்கின்றன.

அரியானா மாநிலம் போன்ட்சி சிறையில் 154 தொழிலாளர்கள்  அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இ.பி.கோ 302, 307, 323, 147,  148, 149, 34, 114 உள்ளிட்ட பல பிரிவுகளில் பொய்வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. பெயர் குறிப்பிடமுடியாத, ஆனால்  கண்டால் அடையாளம் காணத்தக்க 500, 600 தொழிலாளர்கள்  வன்முறையில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளுக்கு ஒரு  நாளைக்கு மூன்று முறை போலீசு வருவதாகவும், தங்களை  மிரட்டுவதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.  தலைமறைவாகியிருக்கின்ற தொழிலாளிகளைப் பிடிக்க, போலீசார்  தபால்காரர்கள் போல வேடமணிந்து வந்து விசாரிப்பதாகவும்  குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவருமே போலீசால்  கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றனர். நிர்வாகத்திலிருந்து  வந்த அதிகாரிகள் போலீசுடன் சேர்ந்து விசாரணையில்  ஈடுபட்டிருக்கின்றனர். அனைவருமே நிர்வாணப்படுத்தப்பட்டு,  தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு அடிக்கப்பட்டுள்ளனர். மூச்சு முட்டித்  தவிக்கும் வரை தலையைத் தண்ணீர் தொட்டிக்குள் அமுக்குவது,  மின்சார ஷாக் கொடுப்பது போன்ற கொடிய சித்திரவதைகளுக்குப் பின்,  நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களிடம் வெள்ளைத் தாள்களில்  கையெழுத்து வாங்கியுள்ளனர். ஒரு முன்னணித் தொழிலாளியை  படுக்கவைத்து அவர் மீது 90 கிலோ உருளையை உருட்டியிருக்கின்றனர்.  போலீசு நிலையத்தில் இருக்கும் வரை தொழிலாளர்கள் யாரும்  வழக்குரைஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

சித்திரவதைகள் குறித்து தொழிலாளர்களின் வக்கீல் விவரித்த பின்னரும்  நீதிமன்றம் அதைப் பதிவு செய்யவில்லை. போலீசு கையில்  வைத்திருக்கும் தொழிலாளிகளின் பட்டியல், நிர்வாகம் எழுதிக்  கொடுத்ததேயன்றி, போலீசு விசாரணை செய்து கண்டுபிடித்தது அல்ல  என்பதைத் தொழிலாளர் தரப்பு வக்கீல் பதக் நீதிமன்றத்தில் நிறுவிய  பின்னரும், அதனை நீதிபதி கண்டுகொள்ளவில்லை.

“நிர்வாகம் கொடுத்திருக்கும் அந்தப் பட்டியலில் உள்ள  தொழிலாளர்கள்தான், சுயேச்சையான தொழிற்சங்கம் ஒன்றைக்  கட்டுவதற்காக கடந்த ஒரு ஆண்டாக இடைவிடாமல் போராடி  வருபவர்கள். அடக்குமுறைகள் ஒவ்வொன்றின்போதும்  அடங்கிப்போகாமல், நிர்வாகத்தை உறுதியாக எதிர்த்து நின்றவர்கள்.  வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும், வெளியில் இருந்தபடி மீண்டும்  சங்கத்தைக் கட்டியமைக்கக் கூடியவர்கள். எனவே, மீண்டும் ஒரு  சுயேச்சையான சங்கம் தலையெடுப்பதைத் தடுக்க வேண்டுமானால்,  இவர்கள் அனைவரும் சிறையில் இருந்தாகவேண்டும். நிர்வாகம் தனது  கைக்கூலி சங்கம் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்துவதும்கூட, இவர்கள்  வெளியில் வந்து விட் டால் இயலாமல் போய்விடும் என்பதுதான்  நிர்வாகத்தின் அச்சம்” என்கிறார்கள் தொழிலாளர்கள்.

அரசாங்கமும் ஊடகங்களும் ஒரு தரப்பாக, நிர்வாகத்தின் ஊதுகுழலாக  இருப்பதால், அன்று ஆலைக்குள் நடைபெற்ற சம்பவம் என்ன என்பது  இன்னமும் முழுமையாக வெளிவரவில்லை. சில பத்திரிகையாளர்களும்,  பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த முன்னணியாளர்களும்,  தலைமறைவாக இருக்கின்ற தொழிலாளிகளிடம் விசாரித்ததில் புதிதாகப்  பல தகவல்கள் தெரிய வருகின்றன.

மானேசர்-குர்கான் ஆலைகள் அனைத்திலுமே, தொழிலாளர்களை  மேலாளர்கள் கெட்டவார்த்தையால் திட்டுவது என்பது மிகவும் சகஜம்  என்றும், தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும்  நேரங்களில், பேச்சுவார்த்தை நடக்கும் அறைக்கு உள்ளேயே  நிர்வாகத்தின் அடியாட்படை நின்று கொண்டிருக்கும் என்பதையும், ஒரு  பழகிப்போன சம்பிரதாயம் போல விவரிக்கிறார்கள் அப்பகுதி  தொழிலாளர்கள்.

அன்று மாருதி ஆலையில் பேச்சுவார்த்தைக்குப் போன தொழிற்சங்க  முன்னணியாளர்கள் நாற்காலியில் அமர்ந்தவுடன், நிர்வாகத் தரப்பு  மேசையின் மீது ஒரு ரிவால்வரை எடுத்து வைத்ததாகவும்,  பேச்சுவார்த்தையின் ஊடாகவே தலைவர்கள் அடியாட்களால்  தாக்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மாருதி-தொழிலாளர்-அடக்குமுறை-1

எத்தனை உண்மைகள், எத்தனை ஆதாரங்கள் தரப்பட்டாலும் அவை  எதையும் அரசோ, போலீசோ, நீதிமன்றமோ கணக்கில்  கொள்ளப்போவதில்லை. ஜூலை சம்பவத்துக்குப் பின்னர்  பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த மாருதி சுசுகியின் தலைவர்  பார்கவா, சுயேச்சையான தொழிற்சங்கத்தைத் தாங்கள் எதிர்க்கவே  இல்லையென்றும், அரியானா மாநில அரசுதான் சங்கத்தைப் பதிவு  செய்வது தொடர்பாக சில பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தது  என்றும், சங்கத்தை விரைவாகப் பதிவு செய்து தருமாறு தாங்கள்  அரசைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

இதைவிடக் கடைந்தெடுத்த ஒரு பொய் இருக்க முடியாது. சுயேச்சையான  தொழிற்சங்கத்துக்கான அங்கீகாரம் என்ற கோரிக்கையை முன்வைத்து  2011இல் மட்டும் 5 மாதம் போராட்டம் நடந்துள்ளது. மாருதியின்  உற்பத்தி வீழ்ந்தது. பங்கு விலை வீழ்ச்சி அடைந்தது. என்ன  நடந்தாலும், சங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஜுலை 2011இல் அறிக்கை விட்டார், மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி சித்திகி.  இறுதியில் தொழிலாளர்கள் தமது கோரிக்கையில் வென்றவுடனே,  தொழிற்சங்கத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் 16 இலட்சம் ரூபாய் கொடுத்து  ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியது நிர்வாகம். இவையனைத்தும்  உலகறிந்த உண்மைகள். எனினும், ஒரு ஊடகம்கூட பார்கவாவிடம்  எதிர்க்கேள்வி கேட்கவில்லை.

குர்கானில் உள்ள மாருதி உத்யோக் காம்கார் யூனியனின் செயலர்  குல்தீப் ஜங்கு, “500 தொழிலாளர்களின் வேலைநீக்க உத்தரவை ரத்து  செய்யவேண்டும்” என்று கோரியிருக்கிறார். அச்சங்கத்தின் சார்பில் 5000  தொழிலாளர்கள், மாருதி தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தக்  கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். புரட்சிகர அமைப்புகள் மற்றும்  ஜனநாயக சக்திகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.  தமிழகத்தில் மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை வாழ்த்தி  வரவேற்று பு.ஜ.தொ.மு.,  பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை  நடத்தியிருக்கிறது.

மாருதி போராட்டத்தை ஆதரிக்கவும் விரும்பாமல், கண்டிப்பதற்கும்  துணிவில்லாமல் சிக்கித் தவிக்கின்றன போலி கம்யூனிஸ்டு  தொழிற்சங்கத் தலைமைகள். சட்டத்தின் ஆட்சியைத் துளியும் மதிக்காமல்,  தங்களை இப்படிப்பட்ட இக்கட்டுகளில் இழுத்துவிடும் முதலாளிகளின்  மீதும், தொழிலாளிகளின் மீதும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு கோபம்  வருகிறது. இருந்த போதிலும், அவர்கள் சட்டத்தைப் உறுதியாகப் பற்றி  நிற்கிறார்கள்.

“மாநில அரசைக் கலந்து கொள்ளாமல் இவ்வளவு பேரை நிர்வாகம்  வேலை நீக்கம் செய்திருப்பது சட்டவிரோதமானது. நாடாளுமன்றத்தில்  ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவருவோம்” என்று கூறியிருக்கிறார்  ஏ.ஐ.டி.யு.சி.யின் தேசியச் செயலர் சச்தேவா.

ஒத்திவைப்புத் தீர்மானமல்ல முதலாளிகளின் கவலை. பிரிகால், ஏனாம்,  மாருதி என்று அடுத்தடுத்து தொடரும் தொழிலாளி வர்க்கத்தின்  போர்க்குணம்தான் முதலாளி வர்க்கத்தின் கவலை. மானேசரில்  மாவோயிஸ்டுகள் ஊடுருவலா என்று தேடுகிறார்கள். தமிழகத்தில்  பு.ஜ.தொ.மு. மற்றும் அதன் தோழமை அமைப்புகளை ஒடுக்க  வேண்டுமென்று தென்னிந்திய முதலாளிகள் சங்கம் ஜெயலலிதாவிடம்  மனுகொடுக்கிறது. உடனே உளவுத்துறையும் போலீசும் தமது  நடவடிக்கைகளைத் தொடங்குகின்றன.

நக்சல் அபாயம் என்பது முதலாளி வர்க்கத்துக்கு  உண்மையான  அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. தொழிலாளிகளின் மீது அரசு  அடக்குமுறையை ஏவிவிடுவதற்கான பூச்சாண்டியாகவும் அதற்குப்  பயன்படுகிறது. இருப்பினும், மாருதி பிரச்சினையின் ஊடாக தனது  வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை இந்தியத்  தொழிலாளி வர்க்கம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.

“அன்று இப்படி ஒரு சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்த குறிப்பான  நிகழ்வுகள் என்ன என்பது குறித்துத் தனக்கு தெரியாதெனினும், இத்தகைய  போக்கினை ஈவு இரக்கமின்றி நசுக்கவேண்டும்” என்று பேசியிருக்கிறார்  விப்ரோ நிறுவனத்தின் முதலாளி அசிம் பிரேம்ஜி. மாருதி சம்பவத்தை  ‘ஒரு வர்க்கத் தாக்குதல்’ என்று வருணிக்கிறார், மாருதி சுசுகியின்  தலைவர் பார்கவா.

‘வர்க்க உணர்வு’ என்பதை முதலாளி வர்க்கத்திடமிருந்து ஒரு  எதிர்மறைப் பாடமாகக்கூடத் தொழிலாளி வர்க்கம் சில சந்தர்ப்பங்களில்  கற்றுக் கொள்ள முடியும்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயலும் காங்கிரசு பா.ஜ.க. நரித்தனங்கள்!

3

அசாம்-கலவரம்டந்த ஜூலை மாதத்தில் அசாமின் போடோலாந்து பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் 78 பேர் கொல்லப்பட்டு, ஏறத்தாழ 400 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 4 இலட்சம்  போடோ அல்லாத பழங்குடி மக்களும்  முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். போடோ அல்லாத மக்கள் மீது, குறிப்பாக முஸ்லிம்களைக் குறிவைத்து போடோக்கள் நடத்திய இந்தப் பயங்கரவாத வெறியாட்டமும்  அட்டூழியங்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்த போதிலும், அசாம் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும், உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால், தென்மாநிலங்களுக்குப் பிழைப்புத்தேடி வந்துள்ள தங்களது உறவினர்களை  ஊருக்குத் திரும்பிவிடுமாறு அசாமியர்கள் அழைத்துள்ளனர்.  அதையொட்டி, வடகிழக்கிந்திய மாநிலத்தவர் அனைவரும் தாக்கப்படக்கூடும் என்ற அச்சமும் பீதியும் கைபேசி குறுந்தகவல்களாகப் பரப்பப்பட்டு, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து வடகிழக்கிந்திய மாநிலத்தவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்லாயிரக்கணக்கில் வெளியேறியுள்ளனர்.

அசாமின் போடோ சுயாட்சி கவுன்சில் பிராந்திய மக்கள் தொகையில் போடோ இனக்குழுவினர் மூன்றிலொரு பங்கினராக உள்ளனர். பாரம்பரியமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் மூன்றிலொரு பங்கினராகவும், போடோ அல்லாத  அசாமியர்கள், கூலித் தொழிலாளர்களாக பீகார், உ.பி. மாநிலங்களிலிருந்து குடியேறிய சந்தால், முண்டா முதலான பழங்குடியினர் மூன்றிலொரு பங்கினராகவும் உள்ளனர். இவர்கள் தவிர, வங்கதேசப் போரின் போது அகதிகளாகக் குடியேறிய வங்கதேச முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர்.

ஆனால், தமது சமூகம் முன்னேறாததற்கு அகதிகளாக ஊடுருவியுள்ள வங்கதேச முஸ்லிம்களே காரணம் என்றும், முஸ்லிம்களும் இதரப் பழங்குடியினரும் நதிக்கரை, காட்டுநிலங்களை ஆக்கிரமிப்பதாகவும் வெறியூட்டப்பட்ட போடோக்கள்  90களிலிருந்து அடுத்தடுத்து போடோ அல்லாதவர்கள் மீது கொடிய தாக்குதல்களை  நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்த வடகிழக்கிந்திய தேசிய இனங்களின் போராட்டங்களைப் பழங்குடி இனரீதியில் பிளவுபடுத்தி மோதவிட்டு இரத்தம் குடிப்பது காங்கிரசின் அரசியல் நரித்தனம்; அந்த வகையில் அனைத்து அசாம் மக்களின், அனைத்து அசாம் மாணவர்களின்  போராட்டத்துக்கு எதிராக போடோக்களை ஆயுதபாணியாக்கி, இனவெறிக் குழுக்களை உருவாக்கியதே காங்கிரசு அரசின் உளவுப்படையான  “ரா” தான்.

இதுவரை  சிதறிக்கிடந்த அசாமிலுள்ள முஸ்லிம்கள் இப்போது  தனிக் கட்சியாக வளர்ந்துள்ளதால், முன்போல அவர்களை வளைத்து ஓட்டு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரசால் முடிவதில்லை. எனவே, பா.ஜ.க. வழியில் முஸ்லிம் அல்லாதோரின் ஓட்டுக்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன், அசாம் காங்கிரசு இப்போது போடோக்களுடன் புதிய கூட்டணி கட்டிக் கொண்டு அரவணைத்துச் செல்கிறது. போடோ இனவெறிக் குழுக்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்கள் மீதும் பிற பழங்குடியினர் மீதும் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளன.

போடோ இனவெறிக் குழுக்களின் பயங்கரவாதத் தாக்குதல்  அட்டூழியங்களுக்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் மும்பையில் முஸ்லிம்கள் பேரணி  நடத்தியபோது, போலீசைக் குவித்து அச்சுறுத்தியதால், அக்கெடுபிடிகளை எதிர்த்து சில முஸ்லிம் இளைஞர்கள் போலீசு வாகனங்களைச் சேதப்படுத்தி எரித்தனர். இதைச் சாக்கிட்டு போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.  அதைத் தொடர்ந்து, போலீசுக்குப் பாதுகாப்பில்லை, மும்பையில் குடியேறியுள்ள முஸ்லிம்கள்தான் வன்முறைக்குக் காரணம் என்று அவதூறு பரப்பி, இந்துவெறிஇனவெறி பாசிஸ்டான ராஜ்தாக்கரே திடீர் பேரணி நடத்தினார். அத்வானியோ, வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல்தான் போடோலாந்தில் நடந்துள்ள வன்முறைத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணம் என்கிறார்.

அசாமில் நடந்துள்ள இந்த பயங்கரவாதத் தாக்குதலை, பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ராஜ்தாக்கரேவும் நாடு தழுவிய விவகாரமாக்கி, அனைத்து இஸ்லாமியருக்கும் எதிராகத் திருப்பிவிட்டுத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. இந்து ஓட்டுக்களை இழந்துவிடாதிருக்க காங்கிரசு அரசு இச்சக்திகளை அனுசரித்துப் போகிறது. அசாம் விவகாரத்தைத் தமது அரசியல் நோக்கங்களுக்குச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டு மக்களை இனக்குழு அடிப்படையிலும் மதவாத அடிப்படையிலும் பிளவுபடுத்தி மோதவிட்டு , அரசு பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்க இந்துவெறியர்களும் காங்கிரசும் போட்டி போடுவதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மலைக்கள்ளன் அண்ட் கோ!

12

கிரானைட்-ஊழல்

“பூமிப்பந்தின் மேலடுக்கான பாறை மனித வாழ்க்கையின் பிரிக்கவொண்ணாத அங்கமாக இருந்திருக்கிறது. மனிதன் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்திய கற்காலம் முதல் இன்றைய இணையப்புரட்சி காலம் வரை. இருப்பினும் கி.மு. 2600இல்தான் மனிதகுலம் கிரானைட்டின் சிறப்பை உணர்ந்தது. காலத்தால் அழிக்க முடியாத பல கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறது.”

இந்தத் தொகையறாவெல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா?

கிரானைட் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக,  போலீசார் புடை சூழ மெல்ல மிதந்து வரும், பி.ஆர்.பழனிச்சாமியின் சாதனைகளை விதந்து, இந்து ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள, செய்தி போல தோற்றம் தரும் விளம்பர வாசகங்கள். இன்றல்ல, டிசம்பர் 10, 2010 அன்று.

இஸ்தான்புல் விமானநிலையம், தோஹா மசூதி, துபாய் ரேஸ் கோர்ஸ், தமிழ்நாடு புதிய சட்டமன்றக் கட்டிடம், இன்னும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ரசியா, தென்கிழக்காசியா என எல்லா இடங்களிலும் உள்ள மாபெரும் கட்டிடங்களை அலங்கரிப்பவை, மதுரை மாவட்டத்தையே கண்டதுண்டமாக வெட்டித் துண்டு போட்டு சாமியால் விற்பனை செய்யப்பட்ட கிரானைட்டுகள்தான் என்று பெருமை பொங்க கூறுகிறது அந்த செய்தி.

கிரானைட்டின் சிறப்பு பற்றி மனித குலத்துக்கு கி.மு. 2600இலேயே தெரிந்திருந்தாலும், அது பழனிச்சாமிக்கு 1980களின் பிற்பகுதியில்தான் தெரியவருகிறது. அப்போதுதான் மதுரைப் பாறைகளில் உள்ள அற்புதத்தை அவர் அடையாளம் கண்டாராம். நல்வாய்ப்பாக கி.மு. 2600இல் பழனிச்சாமி பிறக்கவில்லை. பிறந்திருந்தால் தமிழ்நாட்டைக் கடல் கொண்டிருக்கும்.

1980களில் பொதுப்பணித்துறையில் ஒரு சிறிய காண்டிராக்டராக இருந்து, நாங்குனேரியில் ஒரு வாய்க்கால் வேலையில் எல்லை மீறி மோசடி செய்ததால் காண்டிராக்டர் என்ற உரிமமே ரத்து செய்யப்பட்ட நபர்தான் பி.ஆர்.பழனிச்சாமி என்ற கிரிமினல். அதன்பின், மேலூர் வட்டத்தில் ஒரு கல் குவாரியை எடுத்துத் தொழில் செய்ய முனைந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் தொழில் செய்துவந்த ஒரு வடநாட்டு சேட் தொடர்பு பி.ஆர்.பி.க்குக் கிடைக்கிறது. மதுரையில் இருப்பது உலகத்தரம் வாய்ந்த கிரானைட் என்பதும் தெரிகிறது. அது முதல் கொள்ளையடிக்கத்  துவங்கி,  மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் 8 முறை ஏற்றுமதிக்கு அவார்டு வாங்குமளவுக்கு மாவட்டத்தையே வெடி வைத்துத் தகர்த்து விற்றிறிருக்கிறார் பழனிச்சாமி.

பழனிச்சாமி ‘தொழிலுக்குள்’ நுழைந்த காலம் என்பது தமிழகத்தைப் பொருத்தவரை, ‘வரலாற்று ரீதியில்’ முக்கியத்துவம் வாய்ந்த காலம். 1991இல் ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவியும் உடன்பிறவாத் தோழியும், “ஐந்தே ஆண்டுகளுக்குள் தமிழகத்தை முடிந்த வரை வாங்கிவிட வேண்டும், அல்லது விற்றுவிடவேண்டும்” என்ற கொலைவெறியோடு களத்தில் இறங்கியிருந்த காலம் அது. பழனிச்சாமியின் கொள்கையும் அதுவாகவே இருந்தது. அவரது கொள்கையும் உடன் பிறவாதோழிகளின் கொள்கையும் ஒத்துப்போனதையும்,  பழனிச்சாமியின் சாதியும் சின்னம்மாவின் சாதியும் ஒத்துப்போனதையும் மட்டும் தற்செயல் என்றுதான் சொல்லவேண்டும். அன்று முதல் இன்றுவரை சின்னம்மாவுடன் ஹாட்லைன் தொடர்பில் இருப்பவர் பழனிச்சாமி.

கிரானைட் கொள்ளைக்கு மன்னார்குடி கும்பல் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. பி.ஆர்.பி.க்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் குருநாதர் என்று சொல்லுமளவுக்கு தொழில் நெருக்கம். இன்னொரு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் பரமசிவம் தனது மைத்துனர் கோட்டைவீரன் பெயரில் கீழையூரில் பிரம்மாண்ட கிரானைட் குவாரியை எடுத்து நடத்தினார். பின்னர் அதுவும் மன்னார்குடி கும்பல் தயவால் இன்று பி.ஆர்.பி. கைக்கு வந்துவிட்டது.  பி.ஆர்.பி.யிடம் மேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாமி, மதுரை அ.தி.மு.க. மேயர் ராஜன் செல்லப்பா, ஜெயா அமைச்சரவையில் இரண்டாவது இடத்திலுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது பினாமிகள், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மன்னார்குடி கும்பல்   எனப் பலரும் பல நூறு கோடிகள் பங்கு வாங்கியிருக்கின்றனர்.

தி.மு.க.வில் அழகிரிக்கும் பி.ஆர்.பி.க்கும் இடைத்தரகர் நாகேஷ் என்ற தி.மு.க. பிரமுகர். 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூரின் மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ சிவராமன்தான், விலையுயர்ந்த கிரானைட்டுகள் கொண்ட கீழையூரில் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமாக குவாரி ஏற்படுத்தி கொடுத்தவர். இது சென்ற தி.மு.க. ஆட்சியின் போதே,  அழகிரியின் பினாமி பொட்டு சுரேசின் மகன் நாகராஜ் பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது.

அனைவரையும்விட பழனிச்சாமியிடம் அதிகமாகப் பொறுக்கித் தின்றவர் அஞ்சா நெஞ்சன் அழகிரிதான். அவரது பினாமிகள் சூடாமணி, நாகராஜ், நாகேஷ், பொட்டு சுரேஷ், தனபால், பாலசுப்பிரமணி முதலானோரும் தனித்தனியே காசு பார்த்திருக்கின்றனர். அது மட்டுமின்றி, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பி.ஆர்.பி. விட்டெறியும் காசைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு, மாவட்ட ஆட்சியர்களாக இருந்த மதிவாணன், உதயசந்திரன் ஆகியோருடன் அஞ்சாநெஞ்சனின் உடன்பிறப்புகள் மல்லுக்கட்டியிருக்கின்றனர்.

மொத்தத்தில், தி.மு.க., அ.தி.மு.க. வில் மேலிருந்து கீழ் வரை பழனிச்சாமியிடம் மொய் வாங்காத உடன்பிறப்போ, ரத்தத்தின் ரத்தமோ கிடையாது. இந்த ‘மாமன்கள்’ எல்லோருடைய பெயர்களையும் அச்சிடுவதற்கு பத்திரிகையில் இடமும் கிடையாது.

கிரானைட்-ஊழல்

பூமிக்குக் கீழே உள்ள கனிம வளங்கள் அரசுக்குச் (சமூகத்துக்கு) சொந்தம் என்பது பொது நியதி. இந்த விதிக்கு உட்படாமல், பூமிக்கு அடியில் கிரானைட், லைம்ஸ்டோன் போன்றவை இருக்குமானால், அவை நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம் என்று சட்டம் அங்கீகரிப்பதால், ஒரு நிலத்தை வாங்கி, தனக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அரசு அனுமதிக்கின்ற அளவுக்கான ஆழத்துக்கு குவாரி வெட்டி கிரானைட்டுகளை எடுத்து விற்பது சட்டபூர்வ நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படுகிறது.

இதன்படி பாமர விவசாயிகளுடைய நிலங்களை ஏமாற்றி வாங்குவது, தரமான கிரானைட் உள்ள நிலத்தை யாரேனும் தர மறுத்தால், மிரட்டியோ, தாக்கியோ, பொய்வழக்கு போட்டோ, நாற்புறமும் உள்ள நிலங்களை வாங்கி அந்த விவசாயியை முடக்கியோ அவருடைய நிலத்தைப் பறிப்பது, பிறகு அங்கே  குவாரி வெட்டுவது என்ற வழிமுறைகளை பி.ஆர்.பி; அழகிரியின் மகன் துரை தயாநிதி,  தளி ராமச்சந்திரன் போன்று இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மாஃபியாக்கள் அனைவருமே கையாண்டு வருகின்றனர். இந்த அயோக்கியத்தனம் சட்டபூர்வமானது என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இதைத்தான் ‘நியாயமாகத் தொழில் செய்வது’ என்று கூறுகிறார்கள்.

பி.ஆர்.பி. மற்றும் அழகிரியின் மகன் முதலானோருக்கு இந்த ‘நியாயம்’ போதவில்லை. டாமின் குவாரிக்கு அருகாமையில் ஒரு இடத்தை வாங்கிப்போட்டு, டாமின் குவாரியின் கற்களைத் திருடி,  தனது குவாரியின் கற்களாக கணக்கு காட்டி விற்பது; அரசு அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு, பொது நிலங்கள், கண்மாய்கள், குளங்கள், மலைகள் ஆகியவற்றில் ஒரு பகுதியை அரசிடமிருந்து குத்தகையாக வாங்கிக் கொண்டு, அதைக் காட்டி அந்த வட்டாரம் முழுவதையும் ஆக்கிரமித்து கிரானைட் கொள்ளையடிப்பது; எந்த ஆவணமும் இல்லாமல் பொதுநிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளையிடுவது  எனத் தங்களுடைய கொள்ளையை நடத்தியிருக்கின்றனர். அதாவது இலஞ்சத்தை ‘நியாயமாக’ கேட்டு வாங்கும் போலீசுக்கும், சட்டையில் கைவிட்டு எடுக்கும் போலீசுக்குமுள்ள வேறுபாடு!

இந்த வழியில் மக்களுக்குச் சொந்தமான 70 கண்மாய்கள், 50 ஊருணிகள், எண்ணற்ற சாலைகள், புறம்போக்கு நிலங்கள்  என அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது பி.ஆர்.பி. நிறுவனம்.  மேலூர் வட்டத்தில் கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி, செம்மணிப்பட்டி, திருவாதவூர் ஆகிய கிராமங்களிலுள்ள கிரானைட் குவாரிகளும்; மதுரை வடக்கு வட்டத்தில் புதுத்தாமரைப்பட்டி, இடையப்பட்டி ஆகிய கிரானைட் குவாரிகளும் முக்கியமானவையாகும். செம்மணிப்பட்டியிலுள்ள உயர்ந்த புறாக்கூட்டு மலையும், ரெங்கசாமிபுரம் கீழையூர் மலையும், கீழவளவு பொக்கிச மலையும் இருந்த சுவடுகூடத் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட்டுகள் பி.ஆர்.பி.யால் பெயர்த்தெடுக்கப்பட்டுவிட்டன.

உரிமம் ஏதும் இல்லாமலே, அரசு நிலங்கள், புறம்போக்கு  என எல்லா இடங்களிலும் குவாரிகளைத் தோண்டிக் கொள்ளையடித்துள்ளனர்.  உதாரணமாக, மதுரை மாவட்டம் கீழவளவுக்கு அருகிலுள்ள பிள்ளையார்குளம் கண்மாயில் குவாரி அமைக்க 99 வருடக் குத்தகைக்கு பி.ஆர்.பி. நிறுவனம் கேட்டபோது அரசு தர மறுத்ததால், அக்கண்மாயைத் தோண்டிக் கற்களனைத்தையும் எடுத்த பி.ஆர்.பி. நிறுவனம், பின்னர் மண்ணைப்போட்டு  மூடியிருக்கிறது. ஆவணங்களில் மட்டும் இருக்கும் இக்கண்மாயை தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

தொல்லியல் மதிப்புள்ள புராதனச் சின்னங்களும் இவர்களது கொள்ளைக்குத் தப்பவில்லை.  கீழையூர் சமணமலையில் சமணப்படுகைகள், கல்வெட்டுகள் இருப்பதால் அம்மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அதற்கு வெகு அருகிலேயே கற்களை வெட்டி எடுத்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் வெட்டி எடுத்த கற்களை அடுக்கி சமணப்படுக்கையையே மறைத்துவிட்டனர்.

100 ஏக்கர் சுற்றளவுள்ள மேலூர் திருச்சுனை மலையில் சுரக்கும் நீர் பத்தாயிரம் ஏக்கருக்கு பாசனவசதி அளித்துவந்தது. வருவாய்த்துறையும் கனிமவளத்துறையும் இன்ன பிற துறைகளும் அந்த மலையின் மையத்தில் உச்சந்தலையில் 0.2 ஹெக்டேரை பி.ஆர்.பி. பினாமிக்குக் குத்தகைக்கு விட்டிருக்கின்றனர். நினைத்தும் பார்க்க முடியாத இந்த வக்கிரத்தின் விளைவாக,  இன்று மலை இல்லை. பல இடங்களில் மலைகள் மடுவாகிவிட்டன. விளைநிலங்களிலும்  நீர்வரத்து கால்வாய்களிலும் கற்களை அடுக்கிவைத்துப் பாசனமும் இல்லை.

பல்லாயிரம் ஏக்கரில் விவசாயம் அழிக்கப்பட்டிருக்கிறது. மேய்ச்சல் நிலம் இல்லாததால் கால்நடைகள் இல்லை. விளைந்த பயிரின் மேல் கிரானைட் தூசு படிந்து பயிர்கள் அழிவதால் விவசாயம் இல்லை. பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால், கிராமங்களில் வீடுகள் விரிந்து நொறுங்கியிருக்கின்றன.

மதுரை தெற்குத்தெரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரை வளைத்துப் போட்டு 400 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பி, இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களைக் கொண்டு மிகப் பெரிய கிரானைட் தொழிற்சாலையை நடத்துகிறது பி.ஆர்.பி. நிறுவனம்.  கற்களை அறுப்பது,  பாலிஷ் போடுவது, கிரானைட் கற்களிலேயே விதவிதமான அழகு சாதனப் பொருட்கள், சோபா செட், நாற்காலிகள் போன்றவை தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகின்றன.

விதிகளின்படி குறிப்பிட்ட  ஆழத்துக்கு மேல் கிரானைட்டுக்காகப்  பூமியைத் தோண்டக்கூடாது. ஆனால், பி.ஆர்.பி. மற்றும் பிற கிரானைட் கும்பல்கள் பாதாளம் வரை தோண்டியிருக்கின்றனர். அந்த வட்டார மக்களுக்கு மின்சாரம் கிடைப்பது அத்திபூத்தாற் போலத்தான். மின்வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தேவையான அளவு மின்சாரத்தைத் திருடுகிறது இந்த கிரானைட் கொள்ளையர் கூட்டம்.

பி.ஆர்.பி. நிறுவனம் திருமோகூரில் தலித் மக்களுக்கான தொகுப்பு வீடுகளை  இடித்து குவாரியாக்கியிருக்கிறது. ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் இடையபட்டியில் சத்துணவுக் கூடம்,  சமூகக் கூடம் போன்றவை  இடிக்கப்பட்டு குவாரிகளாக்கப்பட்டிருக்கின்றன.  கீழவளவில் குவாரிக்காகப் பள்ளிக்கூடத்தை  இடித்துள்ளனர். இதனை மக்கள் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.  திருவாதவூரில் தலித் மக்களுக்கான பஞ்சமி நிலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. கண்மாய், ஊருணி, புறம்போக்கு, மின்சாரம் ஆகியவற்றைத் திருடுவதை எதிர்த்த ஊர்த்தலைவர்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள். மீறிப் போராடிய விவசாயிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கிரானைட்-ஊழல்

பி.ஆர்.பழனிச்சாமிக்கு மேலூர் வட்டத்தில் மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர்,இராமநாதபுரம், கோவை, நாமக்கல்,சேலம், கரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 1500 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், தேனியில் மட்டும் 700 ஏக்கர் என்றும் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. மிக முக்கியமான கிரானைட் குவாரி மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரியில் பழனிச்சாமியின் சொத்து விவரங்கள் பற்றி தெரியாதது மர்மமாக இருக்கின்றது.

பி.ஆர்.பழனிச்சாமி நடத்தி வந்தது ஒரு அரசு. வருவாய்துறை, கனிமவளத்துறை, காவல்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளையும் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் பி.ஆர்.பி. யின் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நிலத்தை ஆக்கிரமிப்பது முதல் எதிர்ப்பவர்களை ஒழித்துக் கட்டுவது வரையிலான எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் திட்டம்போட்டுக் கொடுப்பது இவர்கள்தான். சொல்லப்போனால் பி.ஆர்.பி. கும்பல், இந்த ‘ஓய்வு பெற்ற அரசை’ வைத்துத்தான் ஓய்வின்றி உழைக்கும் அம்மாவின் அரசை இயக்கியிருக்கிறது.

கிரானைட் தோண்டும் பகுதிகளிலுள்ள கிராம உதவியாளர்களுக்கு (தலையாரி) ரூ.1000. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.5000; வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.8000; மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு ரூ.10,000; வட்டாட்சியர்களுக்கு ரூ.20,000; கோட்டாட்சியர்களுக்கு ரூ.30,000; மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ.50,000; கலெக்டருக்கு ரூ. 1லட்சம் முதல் 2 லட்சம்வரை  என மாதந்தோறும் தவறாமல் வேன் மூலம் உரிய நபர்கள் மூலம் பட்டுவாடா நடந்திருக்கிறது. கனிமவளத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பி.ஆர்.பி. நிறுவனம் தாய்வீடு போல. ஒன்று கேட்டால் இரண்டு கிடைக்கும். தலையாரிகளைப் பொருத்தவரை, சுவரில் கிரானைட் பதித்திருப்பவர்களெல்லாம் உண்டு.

இதைப்போன்றே காவல் துறையில் ‘ஏட்டய்யா’, சார் ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி; ஐ.ஜி. முதலானோருக்கும் மாதந்தோறும் பணப்பட்டுவாடா நடந்து வந்துள்ளது.  கீழ்நிலை நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை ‘நீதி அரசர்’களுக்குத் தகுந்த முறையில் மாதந்தோறும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்துள்ளது. ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கார் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.

கட்சிகளைப் பொருத்தவரை,  காங்கிரசு, பா.ஜ.க., ம.தி.மு.க, பா.ம.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி., புதிய தமிழகம்  என விதிவிலக்கின்றி அனைத்து ஓட்டுக் கட்சிகளும் தத்தம் தகுதிக்கேற்ற ‘அன்பளிப்பு’களைச் சுருட்டியிருக்கின்றனர். மறைந்த மார்க்சிஸ்டு கட்சியின் மதுரை எம்.பி. மோகன், தேர்தல் செலவுக்கென ஒரு கோடி ரூபாயை பி.ஆர்.பி. யிடம் வாங்கியிருப்பதாகவும், இதுவன்றி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து பிழைப்புவாத தொழிற்சங்கங்களும் தத்தம் மாநாடுகள், கருத்தரங்குகளுக்கு இலட்சக் கணக்கில் பி.ஆர்.பி.யிடம் பணம் பெற்றுள்ளனர் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் எவ்விதத் தயக்கமுமில்லாமல் சாதாரணமாக கூறுகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் அழகர்கோவிலில் நடைபெற்ற மார்க்சிஸ்டு கட்சியினர் தலைமை தாங்கும், மதுரை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாட்டில் பரிமாறப்பட்ட ஆடு, கோழி, மீன், முட்டை  முதல் பீடா வரையிலான அனைத்தும்  பி.ஆர்.பி. யின் செலவுதான் என்றும் இவர்கள் கூறுகின்றனர். தலையாரி முதல் தாசில்தார் வரையிலான ‘தோழர்கள்’ தனித்தனியாக மாதாமாதம் கைநீட்டும்போது, எல்லா கைகளும் இணைந்து ஒற்றுமையாக, ஒரே சங்கமாக, கை நீட்டுவதில் புதிதாக என்ன மானக்கேடு வந்துவிடப் போகிறது என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.

குவாரிகளைத் தாரைவார்த்த டாமின் அதிகாரிகளுக்கு, சிட்டா அடங்கல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தங்களிடம் ஒப்படைத்து ஆக்கிரமிப்புக்கு ரூட்டு போட்டுத்தந்த வருவாய்த்துறைக்கு, கால்வாய்கள்  ஊருணிகளை விழுங்க உதவிய பொதுப்பணித்துறைக்கு, சமணமலை, திருவாதவூர் போன்றவற்றைத் தோண்ட அனுதித்த தொல்லியல் துறைக்கு, மற்றவர் நிலத்தையும் புறம்போக்கையும் பதிவு செய்து தருவதற்காக பத்திரப் பதிவுத்துறைக்கு, சத்துணவுக்கூடம், பள்ளி, சமூகக்கூடங்களைக்கூட இடித்து குவாரியாக்க உதவிய ஊரக வளர்ச்சித்துறைக்கு, ஒரு நம்பர் பிளேட்டில் எட்டு கன்டெயினர் லாரிகள் வீதம் ஓட்டுவதற்கு உதவி புரிந்த வட்டாரப் போக்குவரத்துத் துறைக்கு, கணக்கில் வராமல் விற்பனை செய்வதற்குத் துணை புரிந்த வணிகவரித்துறைக்கு, கணக்கில் வராத கள்ள ஏற்றுமதிக்கு துணை நிற்கும் சுங்கத்துறைக்கு, அனைத்துக்கும் துணை நின்று அருள் புரியும் எல்லாம் வல்ல அன்னைக்கு… என்று சகலருக்கும் அவரவர் பங்களிப்புக்கு ஏற்ப ‘அன்பளிப்பு’ வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 31, 2012 வரை அனைவருக்கும் மாமூல் முறையாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் ‘நல்லபடியாக’ போய்க்கொண்டிருந்த நேரத்தில், அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவும் விதத்தில் ஆட்சியர் சகாயம் எழுதிய கடிதம் அம்பலத்துக்கு வந்துவிட்டது.

கிரானைட்-ஊழல்

தற்போது விசாரணை நடத்திவரும் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, பி.ஆர்.பி. நிறுவனத்தில் மட்டுமின்றி, சோதனையிட்ட 175 குவாரிகளில் 89 இல் எல்லாவிதமான முறைகேடுகளும் நடந்திருப்பதாகவும், பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். ஆக்கிரமித்த புறம்போக்குகளைத் தலையாரிகள் அளந்து கொண்டிருக்கிறார்கள். தோண்டப்பட்ட குழிகளை டாமின் அதிகாரிகள் அளந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியாறு பாசனக்கால்வாய் கோட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் காணாமல் போன கால்வாய்களைத் தேடுகிறார்கள். குவாரிகளில் மர்மமான முறையில் இறந்தவர்கள் பற்றி டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையிலான குழு மருத்துவமனை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுகளை ஆராய்ச்சி செய்கிறதாம்.

இந்த விசாரணையை நடத்திவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த விவசாயிகள், கிரானைட் கொள்ளையர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, கொள்ளைக்குத் துணை நின்ற அனைவர் மீதும், குறிப்பாக எல்லா அரசுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆனால், ஒன்றிரண்டு வி.ஏ.ஓ., தலையாரி, தாசில்தார்கள் மட்டுமே தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மற்றபடி பி.ஆர்.பி.க்குப் புறம்போக்கை அளந்து கொடுத்த அதே தலையாரிகள், அதே இடத்தை, அதே இஞ்சு டேப்பை வைத்து இப்போது கலெக்டர் தலைமையில் அளந்து கொண்டிருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு முன் பெரியாறு கால்வாயை பார்த்திராதவர்கள் போலத் தேடுகிறார்கள். விபத்து என்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கைகளை ஆராய்வது போல போலீசார் பாவ்லா காட்டுகிறார்கள். மற்றபடி, பி.ஆர்.பி. அலுவலகங்களில் நடந்த சோதனைகள் பலவற்றில் கணினிகள் கைப்பற்றப்பட்டன, வன்தகடுகள் இல்லை. பீரோக்கள் உள்ளன, கோப்புகள் இல்லை என்று கூறுகின்றன நாளேடுகள். மலைகளையும் கால்வாய்களையுமே தொலைக்கத் தெரிந்த அதிகாரிகள் கொண்ட அரசில் கோப்புகள் காணாமல் போவதா பெரிய அதிசயம்?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது இந்தக் கொள்ளை. கொள்ளையின் மதிப்பு பன்மடங்கு  சில இலட்சம் கோடிகளாக இருக்குமென்பதில் ஐயமில்லை. பண மதிப்பைக் குறிப்பதற்காக இதனைக் கொள்ளை என்று நாம் குறிப்பிட்டாலும், ‘கொள்ளை’ என்ற சொல் இந்தக் குற்றத்தின் முழுப் பரிமாணத்தையும் சுட்டவில்லை. இந்தக் கொள்ளைக்குள் கொலை, இலஞ்சம், மோசடி, நம்பிக்கைத் துரோகம், தேசத்துரோகம், சூழல் நாசம், இயற்கைவளம், விவசாய அழிப்பு உள்ளிட்ட எல்லாப் பாதகங்களும் அடங்கியுள்ளன.

பி.ஆர்.பழனிச்சாமி என்றொரு திருடன் முதன்மைக் கொள்ளையனாக இருந்த போதிலும், பழனிச்சாமி, துரை தயாநிதி போன்றவர்கள் மட்டுமே இந்தக் குற்றவாளிகள் கூட்டத்தின் முழுமையைக் காட்டவில்லை. தலையாரியில் தொடங்கி ஆட்சியர், அமைச்சர்கள் வரையிலான எல்லாத்துறை அதிகாரிகள் மற்றும் எல்லா ஓட்டுப்பொறுக்கிகளும் குற்றக்கூண்டில் நிற்கிறார்கள்.

மக்கள் மீதோ, இந்த மண்ணின் மீதோ, நம் தொன்மை மரபின் மீதோ, இயற்கை வளங்கள் மீதோ, அறநெறிகளின் மீதோ எவ்வித மதிப்புமற்ற ஒரு பெரும் கூட்டம் இந்தச் சூறையாடலில் ஈடுபட்டிருக்கிறது. குவாரிகளின் வெடிச்சத்தத்தில் தூக்கியெறியப்பட்டுப் புழுதியைப் போலக் காற்றில் கலந்து காணாமல் போய் விட்டது அந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்க்கை. இந்தக் குற்றத்தின் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியமாக வெட்டுப்பட்ட கழுத்தைப் போல, இரத்தம் கசிய நிற்கிறது சக்கரமலை.

பிரெஞ்சுப் புரட்சியின் கிலெட்டினில் வெட்டுப்பட்டுச் சரிந்த முண்டங்களின் ஓவியம் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொருவராகத் தண்டிக்க முடியாத அளவுக்கு பிரபுக்குல குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அன்று கிலெட்டின் பயன்படுத்தப்பட்டதென்று கூறுவார்கள். குற்றவாளிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, குற்றவாளிகளுக்கு எதிரான மக்கள் கோபத்தின் வடிவமாகவும் கிலெட்டின் இருந்தது. இருக்கிறது.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

3

புதிய-ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1. மாருதி தொழிலாளர் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்!

2. அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயற்சிக்கும் காங்கிரசு-பா.ஜ.க.வின் நரித்தனங்கள்!

3. மலைக்கள்ளன் அண்ட் கோ!
பி.ஆர்.பழனிச்சாமி – துரை தயாநிதி – எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – கருணாநிதி – கலெக்டர் – எஸ்.பி – நீதிபதி – தாசில்தார் – கிராம நிர்வாக அலுவலர் – தலையாரி…..

4. மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!

5. சென்னை பு.மா.இ.மு. தோழர்கள், மக்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்!

6. தென்னாப்பிரிக்கச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!

7. அரசுப் பள்ளிகள்: ஆங்கிலவழிக் கல்வி வந்தது முன்னே! தனியார் மயம் நுழையும் பின்னே!!
– அரசுப் பள்ளிகளைப் படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைக்கும் நோக்கத்தோடுதான் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

8. சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச் சாலை!
– தனது மேலாதிக்க நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள, அமெரிக்கா முசுலீம் பயங்கவரவாதத்தை ஊட்டி வளர்க்கும் என்பதற்கு சிரியா இன்னுமொரு உதாரணமாக உள்ளது.

9. தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்திருத்தமா? புரட்சியா?
– இட ஒதுக்கீடு உள்ளிட்டு தாழ்த்தப்பட்டோரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள்அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன.

10. கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காகச் செய்யப்பட்ட மோசடிகள்!
– கூடங்குளம் அணு உலையில் காணப்படும் பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன.

11. வி.வி.மு.வின் துணையுடன் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!

12. அடாவடி உத்தரவால் அல்லற்படும் ரேசன் அட்டைதாரர்கள் ரேசன் கடைகளை மூடுவதற்கான சதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

13. காவிரி நீரின்றித் தவிக்கும் தமிழகம்! விவசாயத்தைக் காவு கொள்ளும் மறுகாலனியாக்கம்! – புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

14. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்….பாகம் 4
– வெளிநாட்டு வங்கிகளில் முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும் பா.ஜ.க.வும் கனவிலும் விரும்பவில்லை.

15. சிறுமி சுருதியைப் பலிகொண்ட தனியார்மயத்தை வீழ்த்துவோம்! – பு.மா.இ.மு.வின் தெருமுனைக் கூட்டம்

16. இலண்டன் கலகம்: 1,800 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)