இந்திய அரசின் அனுமார்களால் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது ஈழம். மிச்சமிருக்கும் தமிழ் மக்களையும் முள்வேலிக்குள் வைத்து சிறுகச் சிறுக கொலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள இனவெறி அரசு.
சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.
புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.
இவர்கள் மீதெல்லாம் நம்பிக்கை வைக்குமாறு 1983இல் தொடங்கி நேற்று வரை தமிழக மக்களையும், ஈழத்தமிழ் மக்களையும், புலிகளையும் தவறாக வழிநடத்திப் படுகுழியில் இறக்கியவர்கள் யாரோ அவர்கள் மீது கோபம் வர வேண்டும். மாறாக, தமிழ் தேசியம் பேசுவோர் இந்த இலக்கைத் திசை திருப் பி, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு எதிரான கோபத்தைத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு “இன உணர்வை’ ஊட்டும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
“தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனும் மலையாளிகள் என்பதனால்தான் இந்திய அரசைத் தவறாக வழிநடத்தி விட்டார்கள்” என்று கூறி இந்திய மேலாதிக்க எதிர்ப்பை மலையாளி எதிர்ப்பாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களுக்கு மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள். அதிகாரிகள் மலையாளிகள் என்றால், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தார்களே அதற்கென்ன சொல்கிறார்கள்?
ப.சிதம்பரத்தில் தொடங்கி, தி.மு.க. அமைச்சர்கள், கடைசி நேர விற்பனையை முடித்துக் கொண்டு கல்லா கட்டிய பாமக ஆகிய தமிழர்கள் அங்கே மட்டைக்கு நாலாய் கிழித்தது என்ன? தமிழர்கள் அமைச்சர்களாக இருந்ததனால் தான் ஈழத்தமிழனுக்கு இந்த கதி என்று சொல்லாமல், இவர்களை சந்தர்ப்பவாதிகள், பதவிப் பித்தர்கள் என்று தனிநபர்களாக விமரிசித்து விட்டு, நாராயணன் முதல் டீக்கடை நாயர் வரை என்று அங்கே மட்டும் ஒரு இனத்துக்கு எதிராக நஞ்சு கக்குவது ஏன்?
கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?
தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,
ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?
பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?
தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.
எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?
பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!
இந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.
இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.
“தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..” என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.
பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, “தமிழா.. தமிழா” என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?
“வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு இது! இன்று தமிழன் கூலிவேலைக்கு கேரளா போகின்றான்” சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிழைப்பு தேடி ஓடும்படி தமிழகத்தை விட்டு அவனைப் பிடித்துத் தள்ளியது யாரோ அவர்களை எதிர்த்தல்லவா போராட வேண்டும்? யார் பிடித்துத் தள்ளியது? மலையாளியா, கன்னடனா? கேரளா எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குப் போகும் தேனி மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப் பாருங்கள். “இங்கேயை விட அங்கே கூலி அதிகம், தொழிற்சங்கம் இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்கிறார்கள், மரியாதை இருக்கிறது” என்று எதார்த்தமாக அவர்களுடைய அனுபவத்தை விளக்குவார்கள். இந்த உழைப்பாளித் தமிழர்களெல்லாம் இனத்துரோகிகளா?
வந்த தொழிலாளிகளையெல்லாம் எந்த மாநிலத்து முதலாளியும் கசக்கிப் பிழிவதுதான் உண்மை. சென்னை பாலம் கட்டும் வேலைகளிலும் வடசென்னை கனரகத் தொழில்களிலும் வாட்டி வதைக்கப்பட்டு, உயிரையும் இழக்கும் நிலை தான் வடநாட்டுத் தொழிலாளர்களுக்கு. இதே நிலைதான் வேறு மாநிலம், நாடுகளுக்குப் பிழைக்கப் போகும் தமிழ்த் தொழிலாளிகளுக்கும்!
“வந்தாரையெல்லாம் வாழ வைத்தது தமிழகம்” என்று வசனம் வேறு! படையெடுத்து வந்த மன்னர்களையும், பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் பன்னாட்டு மூலதனத்தையும் வாழ வைத்துவிட்டு இந்த மானக்கேட்டை பெருந்தன்மை போல சித்தரித்துக் கொள்கிறார்கள். அன்றைய மன்னர்கள் மட்டுமா, இன்றைய கல்வி வள்ளல்களும் கூடத்தான் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் தமிழர்களை மட்டுமே சேர்க்காமல், எல்லா இனத்துக்காரனுக்கும், வெளிநாட்டாருக்கும் தாராளமாக சீட்டு கொடுக்கிறார்களே, இது வந்தாரை வாழ வைக்கும் பண்பா, அல்லது “வந்தவரை’ இலாபம் என்று பணத்தை அள்ளும் வணிகமா? கல்விக் கொள்ளைக்கு வட நாட்டு மாணவர்களை தமிழ் முதலாளி வளைத்துப் பிடிப்பதில் வெளிப்படுவது வர்க்கமா? இனமா?
சுரண்டும் முதலாளி தமிழனாய் இருந்தால் புரவலர் என்று பல்லைக் காட்டுவது, சுரண்டப்படும் தொழிலாளி வேறு இனம் என்பதால் பல்லைக் கடிப்பது இதுதான் தமிழ்த்தேசிய குடி நாயகப் பண்போ?
தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், நாம் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண் டும். அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும். தமிழன் அன்று கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான்.. என்று ஊரை அடித்து உலையில் போட்டதைப் பெருமையாகப் போற்றுகிறார்கள். யவனப் பெண்களை அடிமையாக வாங்கி அரண்மனை, அந்தப்புரங்களில் “கொண்டி மகளிர்’ ஆக்கியதை எண்ணிப் புளகாங்கிக்கிறார்கள்.
“பேராற்றல், பெரும்படை, வாள்வீச்சு, வேல்வீச்சு எல்லாமிருந்தும், ஏங்க பின்னே தமிழன் ஆட்சி வீழ்ந்தது?” என்று கேட்டால், “பார்ப்பான் பொம்பளையக் காட்டி மயக்கிட்டான்’ என்று பதிலளிக்கிறார்கள் “ஆம்பிள சிங்கம்தான்.. ஆனா பொம்பள விசயத்துல வீக்கு!” என்பது போல. மன்னர்கள் என்றழைக்கப்படும் இத்தகைய திருடர்களையும் பொறுக்கிகளையும் இனப்பெருமையின் நாயகர்களாகச் சித்தரிப்பவர்களிடமிருந்து ஒரு முற்போக்கான இன விடுதலையை எதிர்பார்க்க முடியுமா?
வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களை அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் மன்னராட்சி மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சுயேச்சையான முதலாளித்துவம் இந்தியாவில் வளரவில்லை.
ஆங்கிலக் காலனியாதிக்கவாதிகளால் மேலிருந்து திணிக்கப்பட்ட முதலாளித்துவ அரசு வடிவமும், வெள்ளையனுக்குத் துணை நின்ற தரகு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய இந்து தேசியமும் எந்த இனத்திலும் ஜனநாயகப்பூர்வமான இன உணர்வைத் தோற்றுவிக்கவில்லை. இதனை இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. அதன் எதிரிகளான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடாமல், மலையாளி.. கன்னடன் என்று இனவெறியைத் தூண்டி விடுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கிறது.
தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். “இதைச் செய்யத் தவறுவதுடன் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என்று மக்களுக்கு இடையிலான பிளவையும், பிரிவையும் அதிகப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு உதவுவதாகும்” என்று நாம் கூறினால், உடனே, “தமிழன்னா இளிச்சவாயனாடா! பட்டத்து யானையை அவுத்து விடுங்கடா” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். எப்போது வாயைத் திறந்தாலும் “அவன் மலையாளி, இவன் கன்னடன், அதோ பாரு தெலுங்கன்” என்று உசுப்பேற்றி விட்டு அடிவாங்கும் போது மட்டும் “அவன் கேட்டானா? இவன் கேட்டானா?” என்று பேசுவதில் அர்த்தமுள்ளதா?
இன்னும் ஒருபடி மேலே போய், “ராஜ் தாக்கரே பாணிதான் சரி. அவன் பீகாரிகளை அடிச்சு துரத்தியது மாதிரி இங்கேயும் நடக்க வேண்டும்” என்கிறார்கள். இந்த மனநிலை ஒரு குட்டி பாசிசம் இல்லையா? மும்பைக்குப் பிழைக்க வரும் பீகார் தொழிலாளிகளை பிய்த்து உதறும் சண்டியர் ராஜ் தாக்கரே யார்? பால் தாக்கரேக்கு போட்டியாக முகேஷ் அம்பானியால் வளர்த்து விடப்படும் ஏவல் நாய். குஜராத்திலிருந்து வந்த பனியாவும், இந்தியாவையே கொள்ளையடிக்கும் தரகு முதலாளியுமான அம்பானியை அனுமதித்து விட்டு, அவனிட ம் காசும் வாங்கிக்கொண்டு குரைக்கும் இந்தப் பிராணி, மராத்திய இனவுணர்வின் எடுத்துக்காட்டா, தரகு முதலாளியின் கைக்கூலியா? ராஜ் தாக்கரேயைப் பார்த்துப் புல்லரிக்கும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜுவப் பார்த்தும் புல்லரிக்குமா?
ராஜ் தாக்கரேயும், வட்டாள் நாகராஜுவும் ஒரு வகையில் யோக்கியர்கள். தங்களைப் பச்சையான ஆளும்வர்க்க இனவெறியர்களாக மட்டும்தான் அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படத்தை வைத்துக் கொண்டு தங்களைப் பொதுவுடைமைக் கட்சி என்று கூறிக்கொள்வதில்லை. வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான இனவாத அரசியலைப் பேசிக்கொண்டே, பொதுவுடைமைக் கட்சி போல பம்மாத்துப் பண்ணும் இந்த வேலையைத்தான் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன செய்கின்றது.
இடதுசாரி வேடமிட்ட இந்த இனவாதிகளுக்கு ஈழம் உட்பட எந்த ஒரு விவாதத்திலும், நாம் வர்க்கம் என்று சொன்னா எரிச்சல் வருகிறது. ஈழ விடுதலையை நசுக்குவதில் இந்திய அரசின் வர்க்கநலன் இருக்கிறது என்றால், இது போகாத ஊருக்கு வழி என்று நம்மைப் புறம் பேசி விட்டு, ஈழ விடுதலையை வாங்கிவர இவர்கள் போகும் வழி கடைசியில் போயஸ் கார்டனில் போய் முடிகிறது. ஈழமாக இருக்கட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையாக இருக்கட்டும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் நம்மைப் போல உரிமைகள் மறுக்கப்படும், ஒட்டச் சுரண்ட ப்படும் பிற தேசிய இன மக்களையும் விலக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையைப் பிடுங்கும் பிற மாநில அரசுகள், அரசியல் நோக்கத்துக்காக இனவுணர்வை விசிறி விட்டாலும், அந்தத் தண்ணீரை மக்களுக்கு வாரி வழங்குவதில்லை.
மாறாக அந்த மாநில தொழில் முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளுமே இதனை உறிஞ்சுகிறார்கள் என்பது எதார்த்தம். இங்கே சென்னைக் குடிநீருக்கு என்று கொண்டுவரப்படும் வீராணம் தண்ணீர் ஐ.டி பார்க்குகளுக்கும், புதிய பணக்கார சாடிலைட் நகரங்களுக்கும் திருப்பி விடப்படுவதைப் போலத்தான்.
வர்க்க ஒடுக்குமுறையின் மருவிய வடிவமாக இன ஒடுக்குமுறை வெளிப்படுவதை இனவாதிகள் அங்கீகரிப்பதில்லை. பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்தின் கொலைக்கருவியாக உள்ள இந்த அரசை, ஏகாதிபத்திய அடிமைத்தளையை அழித்தொழிக்கும் பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. அதனால்தான், ஒபாமாவிடம் பூங்கொத்து தந்தோ, ஜெயலலிதா, அத்வானியின் காது கடித்தோ இன விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம், பார்ப்பன மதவெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டாமல், “போதையில் கொஞ்சுவானாம், சுதி இறங்குனா புள்ளையப் போட்டு அடிப்பானாம்” என்ற கதையாக, ஒரு மூச்சு பழம்பெருமையும் சவடாலும் பேசுகிறார்கள், பிறகு ” தமிழனுக்கு சூடு இல்லை, சொரணையில்லை” என்று வசை பாடத் தொடங்குகிறார்கள்.
______________________________________________
· பரிதி, புதிய கலாச்சாரம் – செப்டம்பர் 2009
_______________________________________________
டெர்மினேட்டர்களாகவும், ராம்போக்களாகவும் அவதரித்து தீயவர்களோடு சண்டையிட்டு உலகை மாபெரும் அபாயத்திலிருந்து அமெரிக்கர்கள் காப்பாற்றுவதாக வரும் ஹாலிவுட் திரைப்படங்களின் இடையே எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு. அவ்வாறான ஒரு படம் தான் 2008–இல் வெளியான ’தி ரெஸ்லர்’(THE WRESTLER).
நரம்புகள் தளர்ந்து, இரத்தத்தின் வேகம் குறைந்து, வயோதிகத்தின் வாயிலில் நிற்கும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரனின் வாழ்க்கையைப் பேசும் அக்கதையின் நாயகன் ராண்டி. வில்லன் இல்லாத இத்திரைக்கதையில் சூட்சுமமான எதிர்நாயகன் ஒருவனும் உண்டு. பிரமாண்டமான அமெரிக்கப் பொழுதுபோக்குத் தொழில் எனும் அந்த வில்லன் தனது நாயகர்களைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் வலியை இந்தத் திரைப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது.
நிஜ உலகில் நமக்குக் கடும் ஆச்சரியத்தை உண்டாக்கும் எத்தனையோ அம்சங்களின் மறுபக்கத்தை, நம்மிடம் இருந்து மறைக்கப்படும் பக்கத்தை வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் காட்டுகிறது ’தி ரெஸ்லர்’. அதற்கு முன் ரெஸ்லர் திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தை பார்ப்போம்.
ராண்டி என்கிற ரோபின் ராம்ஸின்ஸ்கி எண்பதுகளில் நட்சத்திரமாய் விளங்கிய தொழில்முறை மல்யுத்த வீரன். இருபது வருடங்களும் இளமைத் துடிப்பும் வழிந்து ரத்தம் சுண்டிப் போன பின் இப்போது அவன் ஒரு பல்பொருள் அங்காடியின் வேலை செய்து அன்றாட ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் பழைய வாழ்க்கையையும், இரசிகர்களின் ஆரவாரத்தையும், அது கொடுத்த புகழ் போதையையும் மறக்க முடியாத அவன் வார இறுதி நாட்களில் சிறு நகரமொன்றின் சிறிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் பங்கு கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் அவனது ஒப்பந்ததாரர்கள் அவன் புகழுடன் இருந்த காலத்தில் மல்யுத்த மேடைகளில் அவனது பிரதான எதிரியாக இருந்த அயதுல்லா கொமேனி என்பவனோடு ஒரு போட்டியை ஏற்பாடு செய்கிறார்கள். இளமை தொலைந்து உடல் தளர்ந்து போன நிலையில் இருக்கும் ரேண்டி, இந்தப் போட்டிக்காக தனது உடலை ஊக்க மருந்துகளின் துணையோடு தயாரிக்கிறான். ஆனால் அந்தப் போட்டிக்கு முன் உடலில் செலுத்திய ஊக்கமருந்துகளின் விளைவாக அவனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
அதன் பின் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளும் ராண்டி, இனிமேலும் மல்யுத்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வது தற்கொலைக்கு ஒப்பானது என்று மருத்துவர்கள் தெரிவித்து விடுகிறார்கள். நட்சத்திரமாய் மிளிர்ந்து ஒளி வீசிய அவனது கடந்தகாலப் பெருமைகளோடு நிகழ்கால எதார்த்தம் முரண்படுகிறது – அதன் முடிவில் எதார்த்த நிலைமைகளே ஜெயிக்கிறது. ராண்டி தனது வார இறுதி நாட்களில் ஒரு அங்காடியில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிக்குச் சேர்கிறான்.
மல்யுத்த மேடையின் ஒளிவெள்ளமும், இரசிகர்களின் ஆரவாரமும் புடைசூழ வாழ்ந்த ராண்டி முதன்முறையாக தனித்து விடப்படுகிறான். கதையில் அவனுக்கு ஒரு தோழியும் இருக்கிறாள். ஸ்ட்ரிப் க்ளப் எனப்படும் உடலைக் காட்டி முக்கால் நிர்வாணத்தோடு நடனமாடுபவளாய் ஒரு பாரில் பணிபுரியும் அவளும் ரேண்டியைப் போலவே நடுத்தர வயதின் வாயிலில் நிற்பவள் தான். உடல் தளர்ந்து தனிமையில் வாடும் ராண்டிக்கு அவளின் நட்பு ஆறுதலாய் இருக்கிறது. அவளது யோசனையின் பேரில் முன்பு அவனால் கைவிடப்பட்ட ஒரே மகளைச் சந்தித்து மீண்டும் தனது உறவைப் புதுப்பிக்கிறான் ராண்டி.
ஒரு கட்டத்தில் தனது பழைய வாழ்க்கையை மறக்க முடியாத ராண்டி தனது மல்யுத்த நண்பர்களைத் தேடிப் போகிறான். அங்கே போதை மருந்து உட்கொள்ளும் அவன், மகளைச் சந்திக்க வருவதாகச் சொன்ன நேரத்தில் சந்திக்கத் தவறி விடுகிறான். தனது பதின்ம வயதுகளில் தந்தைப் பாசத்திற்காக ஏங்கிய அந்தப் பெண், மீண்டும் சிறிதாய் துளிர்விடத் துவங்கிய அந்த நம்பிக்கை முளையிலேயே கருகியதால் ஏமாற்றமடைகிறாள். ராண்டியைப் புறக்கணிக்கிறாள்.
இதற்கிடையே நடனமாடும் பெண் தோழியிடம் தன் காதலை வெளியிடுகிறான், ராண்டி. ஒரு விடலைச் சிறுவனுக்குத் தாயான அவளோ முதலில் அதை மறுக்கிறாள். காதலும் மறுக்கப்பட்டு மகளும் புறக்கணித்து விடும் சூழலில் கடுமையாக ஏமாற்றமடையும் ராண்டி, சொந்த வாழ்க்கையின் உறவுகள் தனக்கு ஒட்டாது என்று முடிவு செய்கிறான். தனது வாழ்வும், சாவும் மல்யுத்த மைதானத்தில் என்று தீர்மானிக்கிறான். தற்கொலைக்கு ஒப்பான ஒரு முடிவை எடுக்கிறான். மீண்டும் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறான். அது அயதுல்லா கொமேனி எனும் வீரனுடன் முன்பு திட்டமிடப்பட்ட போட்டி.
அந்தப் போட்டியின் துவக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தும் ராண்டி, தன்னை இத்தனை ஆண்டுகளாக ரசித்து ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறான். தனது உலகம் இதுதானென்று அறிவிக்கிறான். போட்டி துவங்குகிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்ட இதயம் போட்டியின் முரட்டுத்தனங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஊசியாய்க் குத்தும் வலியால் தடுமாறும் ராண்டி, ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில், இரசிகர்களின் ஆரவாரத்தோடு (அயதுல்லா பெயர் ஈரானோடு சம்பந்தப்பட்டதால் ரசிகர்கள் யு.எஸ்.ஏ என்று கத்துகிறார்கள்) தட்டுத்தடுமாறி பக்கவாட்டுத் தடுப்பின் மீதேறி தனது எதிரியின் மேல் பாய்கிறான்.. அதோடு திரைப்படம் முடிகிறது.
மல்யுத்தம்: விளையாட்டா, வெறியா?
தற்காப்பு நடவடிக்கை அல்லது சண்டை என்பது எப்போது விளையாட்டாகிறது – எப்போது கலையாகிறது? உடலின் இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட லயத்தில் தொடர்ச்சியாக இயங்கும் போது உண்டாகும் நளினம் உடற்தசைகளோடு ஊறி, உடலையும் மனதையும் ஒரு பக்குவத்திற்குக் கொண்டு வந்து ஒரே நேர் கோட்டில் நிறுத்துகிறது. அப்போது அதன் உள்ளடக்கமாய் இருக்கும் வன்முறை என்பது இயல்பாகவே உதிர்ந்து, ஒரு கலையாகப் பரிணமிக்கிறது. இதுவே ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட, பாதுகாப்போடு நடக்கும் போது விளையாட்டாகிறது.
கலை எனும் அம்சத்தில் புறவயமாயுள்ள சமூக உலகின் சவால்களுக்கு ஒருவனின் அகநிலைமைகளைத் தயாரிக்கிறது – விளையாட்டு எனும் அம்சத்தில் புற உலகின் அழுத்தங்களில் இருந்து கண நேர விடுதலையையும், உடலுக்கும் மனதுக்குமான புத்துணர்வையும் அளிக்கிறது. பல ஆண்டு தொடர் பயிற்சிகளின் ஊடாக ஒருவனுக்குக் கிடைக்கும் ஆற்றல் புறநிலையில் மனிதர்களின் மீதான அன்பாக மிளிர்கிறது.
அதே கலை வணிகமாகவும், இலாபமீட்டும் தொழிலாகவும் மாறும்போது அது தன்னோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் உண்டாக்கும் விளைவுகளைத் தான் ரெஸ்லர் திரைப்படம் நேர்மையாகக் காட்சிப்படுத்துகிறது. வீரன் ஒருவனுடன் ராண்டி மோதும் காட்சியைக் காணும் நமக்கு நரகலைக் கண்டது போல் அருவெறுப்புத் தோன்றக் கூடும். கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் வைத்துத் தாக்கிக் கொள்கிறார்கள். அந்த வீரன் ஸ்டாப்லரின் சிறிய ஊசிகளைக் கொண்டு ரேண்டியின் உடலெங்கும் குத்துகிறான். சுற்றியிருக்கும் இரசிகர்களோ கத்தி வெறியேற்றுகிறார்கள்.அந்த அரங்கத்திலிருந்த இரசிகர்களின் தேசியவெறியை மேலும் தூண்டி, தன்மேல் ஒரு பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்ள ரேண்டி தன் உடலில் காயங்களை தானே உண்டாக்கிக் கொள்கிறான்.
மல்யுத்தம் என்பது விளையாட்டு என்பதைக் கடந்து தொழிலாகவும், அதிலும் குறிப்பாகக் கேளிக்கைத் தொழிலாகவும் இருப்பதன் இரகசியம் இந்த இரத்த இரசிகர்களின் வக்கிர ரசனையின் அடிப்படையில் தான் இருக்கிறது. WWE, TCW, TNA போன்ற கார்ப்பரேட் மல்யுத்தக் கேளிக்கை நிறுவனங்கள் அந்த இரசனையை மேலும் மேலும் வெறியேற்றிப் பயன்படுத்திக் கொள்கின்றன. காசுக்கு ஏற்ற தோசை என்பது போல் அதிக வலியையும், வேதனையையும் தன் உடல் மேல் ஏற்றுக் கொள்பவரே திறன்மிக்க வீரராக இரசிகர்களால் போற்றப்படுகிறார்.
மேடைகளில் காட்டும் வெறித்தனம் மட்டுமே போதாது என்பதால், இக்கேளிக்கை விளையாட்டை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வீரர்களிடையே நடக்கும் மோதல்களுக்கு நாடகம் போல ஒரு கதைப் பின்னணியையும் உருவாக்குகின்றன. அதற்காகவே ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் போல் கதை எழுதவென்றே தனிப்பிரிவையும் கூட சம்பளம் கொடுத்துப் பராமரிக்கின்றன. உதாரணமாக, எதார்த்த உலகில் அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் போல் சித்தரிக்கப்படும் மல்யுத்த வீரர்கள் வில்லன்களாகவும், அமெரிக்க வீரர்கள் நல்லவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
இவ்வகையில் தான் சாமானிய விளையாட்டு ரசிகர்களான அமெரிக்கர்களைக் கூட போதை தலைக்கேறிய வெறியர்களாக திட்டமிட்டு மாற்றுகிறார்கள். பே பெர் வ்யூவ் எனப்படும் காசு கொடுத்து மல்யுத்தப் போட்டிகளைக் காண்பவர்கள் மூலம் கிடைக்கும் வருமானமே இந்த பில்லியன் டாலர் தொழிலில் பிரதானமானது எனும் செய்தியிலிருந்தே இது சராசரி அமெரிக்கர்களிடையே எந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
சுமார் ஐந்தாயிரம் கோடிகளைக் குவிக்கும் இத்தொழிலில் விற்பனை செய்யப்படும் பண்டம் வெறித்தனமும், மிருகத்தனமும். அமெரிக்காவில் மட்டுமல்ல – அதை நுகர்வது உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் இரசிகர் பட்டாளம் என்பது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது தான் உண்மை. அமெரிக்காவின் மேலாதிக்க அரசியல் நலனுக்கேற்ற விதத்தில் இத்தகைய கேளிக்கைத் தொழில்கள் உலகெங்கும் தமது சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கின்றன.
ரத்தம்.. மேலும் ரத்தம்… மேலும் மேலும் ரத்தம்..!
அமெரிக்காவில் மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான தொழில்முறை மல்யுத்த வீரர்களும், தொழில் முறை பாடிபில்டிங் வீரர்களும் அனபாலிக் ஸ்டிராய்டுகளின் பயன்பாட்டினால் மரணமடைந்துள்ளனர். இது மட்டுமல்லாமல், தங்கள் உடலின் மேல் தாங்களே வலிந்து திணித்துக் கொள்ளும் வலியைப் போக்க அதீதமான வலி நிவாரணி மருந்துகளையும் உட்கொள்கிறார்கள். 2004–ஆம் ஆண்டு யு.எஸ்.ஏ டுடே எடுத்த நேர்காணலில் தான் நாளொன்றுக்கு 200 வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வதாக ஸ்காட் லெவி என்ற வீரர் தெரிவிக்கிறார்.
போதை மருந்துகளாலும், ஊக்க மருந்துகளாலும் செத்துப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் நம் நாயகன் ராண்டியைப் போலவே நடுத்தர வயதினர் அல்லது நடுத்தர வயதைக் கடந்தவர்கள். உடலின் ஒத்துழைப்பு விடைபெற்றுச் செல்லும் காலகட்டத்தில் நுகர்வோர்களான ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மருந்துகளின் துணையின்றி வேறு வழியில்லை. வயோதிகத்தின் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு ஒரு சராசரி வாழ்க்கையை இவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் பல்பொருள் அங்காடியில் வேலைக்குச் செல்ல முயலும் ராண்டிக்கு ஒவ்வொரு கணமும் மல்யுத்த மேடையின் ஜொலிக்கும் ஒளி வெள்ளமும், ஆரவாரிக்கும் ரசிகர்களின் கூச்சலும் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இறுதிக்காட்சியில் ராண்டி தற்கொலைக்கு ஒப்பான அந்த முடிவை எடுக்க பழைய வாழ்வின் மீதான ஏக்கம் ஒரு காரணம் என்றால், இன்னொரு புறம் ரசிகர்களும் காரணம். இது ஒருவிதமான கையறு நிலை. தானே உருவாக்கிக் கொண்ட மரணக்குழி.
விளையாட்டு என்பது தொழிலாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், அதன் நுகர்வோரின் சந்தையின் முன் ரகரகமான வகையினங்களைக் கடைபரப்ப வேண்டிய தேவை எழுகிறது. அமெச்சூர் மல்யுத்தத்தில் ஒரு வீரரின் தொழில் நுணுக்கமும், அறிவாற்றலும் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றால், இங்கே மனித இயல்பைத் தாண்டிய அசுர பலம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஒரு வீரன் எத்தனை அடி வாங்குகிறான், எத்தனை ரத்தம் சிந்துகிறான், அந்த வலியையும் தாண்டி எப்படி ஜெயிக்கிறான் என்பதில் இருந்தே அவன் தனது வாடிக்கையாளர்களான ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.
இதற்கு மனித உடலின் சாத்தியங்களையெல்லாம் கடந்த ஒரு வலிமையும், கொடூரத்தனமும் தேவைப்படுகிறது. இயல்பான மனித உடலால் அது சாத்தியப்படாது என்கிற நிலையில் தான் போதை மருந்துகளை வீரர்கள் நாடுகிறார்கள். பார்வையாளர்களின் மன வக்கிரங்களை ஆற்றுப்படுத்த மேடையிலேயே இரத்தம் சிந்திக் காட்ட வேண்டும். இதற்காக கையுறைகளுக்குள் சிறிய பிளேடுகளை மறைத்து வைத்துக் கொண்டு தங்கள் முகங்களைத் தாங்களே கீறி இரத்தம் சொட்டச் சொட்ட மேடையில் நிற்கும் மல்யுத்த வீரனை வெறியுடன் கூடிய ரசிகர் கூட்டம் ஆரவாரித்துப் போற்றுகிறது. படத்தில் ராண்டியும் இந்த உத்தியைக் கையாள்கிறான்.
பண்டைய ரோம நாகரீகத்தில் கிளாடியேட்டர்கள் எனப்படும் அடிமைகளை ஒருவரோடு ஒருவர் மோத விட்டு அவர்கள் மடிந்து விழுவதைக் கண்டு ரசிக்கும் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தின் நவீன வடிவம் தான் தொழில்முறை மல்யுத்தம். அன்றைய ரோம கிளாடியேட்டர்களின் கதை ஓரிரு போட்டிகளில் முடிந்து விடும். வலியும், வேதனையும் கண நேர அவஸ்தை தான். ஆனால், தொழில்முறை மல்யுத்த வீரர்கள் சுலபத்தில் இறந்து விடுவதில்லை. இந்த நரக வேதனையையும் மரணவஸ்தையையும் தங்களோடு சுமந்து திரிகிறார்கள் – தமது சுற்றாத்தாருக்கும் அதையே பரிசளிக்கிறார்கள்.
க்ரிஸ் பென்னுவா
க்ரிஸ் பென்னுவா தொண்ணூறுகளிலும், இரண்டாயிரங்களின் மத்தியப் பகுதி வரையிலும் கூட மல்யுத்த மேடைகளைக் கலக்கிய கனேடிய வீரர். ஒவ்வொரு போட்டியிலும் அவரது இறுதித் தாக்குதலான கிரிப்லர் க்ராஸ் பேஸ் எனும் பாய்ச்சலுக்கு மயங்காதவர் கிடையாது. அதீதமான ஊக்க மருந்துகளை உட்கொண்டதால் மூளை பாதிக்கப்பட்ட பென்னோய்ட், 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராண்டியின் வாழ்வுக்கும், பென்னுவாவின் வாழ்வுக்கும் சாராம்சத்தில் வேறுபாடு ஏதுமில்லை. பென்னுவா தனது மனைவியையும் குழந்தைகளையும் நேரடியாகக் கொன்றார் என்றால், ரேண்டி தனது மகளுக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய பாசத்தை அளிக்காமல் புறக்கணித்து உளவியல் ரீதியில் கொல்கிறார். பென்னுவாவின் தற்கொலையும் ரேண்டி மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்வதும் கூட சாராம்சத்தில் ஒன்றே தான்.
ரெஸ்லர் திரைப்படத்தைப் பார்த்த பிரபல மல்யுத்த வீரரான ரவுடி ரோடி பைப்பர் கதறி அழுதிருக்கிறார். இவ்விளையாட்டுக்காகவும், ரசிகர்களின் அன்பைப் பெறுவதற்காகவும் தன்னைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்கள் செய்த தியாகங்களை இத்திரைப்படம் தனக்கு நினைவூட்டியதாகப் பின்னர் குறிப்பிட்டுள்ளார். தான் பிரபலமாயிருந்த காலத்தில் தனது உணவே பெயின் கில்லர் மாத்திரைகளாக இருந்ததையும், அதிலிருந்து விடுபட தான் போராடிய அந்த நினைவுகளும் இந்தத் திரைப்படத்தைக் காணும் போது வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவருக்கு நினைவில் வராத இன்னொரு அம்சமும் உள்ளது. திரைப்படத்தின் இறுதியில் ராண்டியின் உரை படத்தின் ரசிகர்களிடம் உண்டாக்க விரும்பும் அனுதாப உணர்ச்சியாகட்டும், ரவுடி ரோடி பைப்பரின் அழுகையாகட்டும் ஒரே தளத்தில் தான் நிற்கிறது. அது தன்னலமிக்க ‘தியாக’த்தைக் குறித்து அவர்களே கொண்டிருக்கும் சுய கழிவிரக்கம் தான். எதார்த்தத்தில் ஆயிரக்கணக்கான மல்யுத்த வீரர்களையும், பாடி பில்டர்களையும், அமெரிக்க கால்பந்து வீரர்களையும் ஸ்டிராய்டுகளை நோக்கியும் பிற போதை வஸ்துக்களை நோக்கியும் தள்ளியது அவர்களது தியாகம் அல்ல. அது இத்தொழிலின் நுகர்வோரான ரசிகர்களின் வெறிகொண்ட விருப்பமும், இதை நடத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறியும் தான்.
படம் நெடுக அரூபமாய் உலாவந்து ராண்டியோடு வினையும், எதிர்வினையும் புரியும் அவனது எதிர்நாயகன் இவ்விரு அம்சங்கள் தான். திரைப்படத்திலும் சரி எதார்த்தத்திலும் சரி, தொழில்முறை மல்யுத்த வீரர்கள் தோற்றுப்போய் தாங்கள் வாழ்வை இழப்பது இவைகளிடம் தான். ஆனால், அந்த அடிமைத்தனத்தைத் தியாகமாகவே அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ரோடி பைப்பரின் கண்ணீர் சொல்லும் செய்தி அது தான். அதனால் தான் இறுதிக் காட்சிகளில் தனது அறியாமையையும், அடிமைத்தனத்தையும் தியாகமாக நினைத்துக் கொண்டு ராண்டி நிகழ்த்தும் அந்த உரை நமக்குள் கண்ணீரைக் கோரவில்லை – பரிதாபத்தைக் கோருகிறது.
பண்டைய க்ளாடியேட்டர்கள் ஒருவகையில் இந்த முதலாளித்துவ க்ளாடியேட்டர்களினின்றும் உணர்வுத் தளத்தில் மேம்பட்டவர்களாயிருந்தார்கள். தாம் அடிமைகள் என்கிற குறைந்தபட்சப் புரிதல் அவர்களுக்கு இருந்ததாலேயே பின்னர் விடுதலை என்பதை நோக்கிய அவர்களின் முன்னேற்றம் சாத்தியமானது. ஆனால், இவர்களோ தங்களது எதிரி யாரென்று கூடத் தெரியாமல் நிழலோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை வாசகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். தொலைக்காட்சியில் அமெரிக்க மல்யுத்தப் போட்டிகளுக்கு அடிமையாகி இருக்கும் நமது சிறார்களை எப்படி மீட்க முடியும் என்பதைக் கற்பதற்காகவாவது அனைவரும் இந்தப் படத்தைக் காண வேண்டும். வீரனை மெல்லக் கொன்றும், ரசிகனை விரைவாக வெறியனாகவும் மாற்றும் இந்த கேளிக்கைத் தொழிலின் இருண்ட பக்கங்களை இந்தத் திரைப்படம் காட்டுகிறது. அது காட்டத் தவறிய அரசியலை நாம் கண்டுபிடிப்பதற்கும் அதுவே உதவி செய்கிறது.
__________________________________________________________
– தமிழரசன், புதிய கலாச்சாரம் – ஜூலை, 2011
____________________________________________________
இயற்கை தனது மடியில் வைத்து தாலாட்டும் குரூநானக் கல்லூரி கான்கிரீட் காடான சென்னையின் ஓர் ஆச்சரியம். செழித்து, கிளைத்து நிற்கும் ஆலமரங்களை கட்டியணைக்க இருபது பேர் வேண்டும். மரக்கிளைகளிலிருந்து மலைப்பாம்புகளைப் போல நமது தலைக்கு மேலே சற்றே உயரத்தில் நெளிந்து தொங்கும் ஆழ விழுதுகளை கடந்து செல்வது பரவசமூட்டும்.
மூப்பின் அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டும் தான் என்பது போல கூன் இன்றி உயர்ந்து நிற்கின்றன பழமையான பனை மரங்கள். வேப்ப மரங்கள், அசோக மரங்கள் மற்றும் காட்டு மரங்களின் வரிசை நாம் உள்ளே நடந்து செல்கையில் அணிவகுத்து மரியாதை செய்கின்றன. வேகத்துடன் மேலெழுந்து பிறகு குடை விரித்து நிழல் தரும் மரங்கள் எப்போதும் மாறாத நேசத்துடனே அதனை செய்கின்றன. மரக்கிளைகள் ஒன்றுடன் ஒன்று உரசியும், ஊடுருவியும், பின்னிப்பிணைந்திருக்கும் காட்சி நம்மை கிளர்ச்சியுற செய்யும். ஒரு பெரு மழையில் குளிக்கும் இந்த மரங்களும், செடிகளும் இலைகள் ஒடுங்கி நாணுவது பார்ப்போரை வெட்கத்துக்கு உள்ளாக்கும்.
வகுப்புகள் போரடிக்கும் போது மாணவர்களும், மாணவிகளும் தியேட்டர் வாசல்களை விடவும் அதிகம் விரும்புவது கல்லூரி வளாகத்தை தான். ரொமாண்டிக் கவிஞர்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கல்லூரி ஆண்டு மலரில் அவர்களின் கவிப் பூக்கள் கொட்டி கிடக்கின்றன. ஜன்னல் கம்பிகளிலும், மரக்கிளைகளிலும் தொங்கியவாறு உரையாடும் குரங்குகள் இங்குள்ள பேராசிரியர்களை விடவும் மாணவர்களுக்கு அதிகம் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது மிகையல்ல. பறவைகளின் ஒலியால் எப்போதும் விழித்திருக்கிறது குருநானக் வனம்.
மைனாரிட்டி நிறுவனமான இந்த கல்லூரியை நிர்வகிப்பவர்கள் சீக்கியர்கள். 1971 -இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கான நிலத்தை அப்போதைய கருணாநிதி அரசு, கிண்டி ராஜ்பவன் அமைந்துள்ள காடு பரப்பிலிருந்து இருபது ஏக்கர் நிலத்தை பிரித்து அளித்துள்ளது. மாலை நேர கல்லூரி 1981 -இல் தொடங்கப்பட்டது. அரசு உதவியுடன் ஷிப்ட் 1 (காலை கல்லூரி) இயங்குகிறது. ஷிப்ட் 2 முழுக்க முழுக்க சுயநிதி கல்லூரியாக இயங்குகிறது.
இக்கல்லூரியின் நிர்வாக பொறுப்பில் தலைவராக மஞ்சீத் சிங் கில் என்பவரும் செயலாளராக மஞ்சீத் சிங் நய்யார் என்பவரும் உள்ளனர், இக்கல்லூரியின் முதல்வராக மெர்லின் மொரைஸ் என்ற பெண்மணி உள்ளார். இவர் முதல்வரான கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.
கல்லூரியின் முதல்வராக மெர்லின் பொறுப்பேற்பதற்கு முன்னர் முதல்வராக இருந்தவர், இவரது கணவர், ஜான் மொரைஸ். கணவனின் ஓய்விற்கு பின்னர் இப்பதவியை மெர்லின் பெறக்கூடாது என்பதற்காக இக்கல்லூரியில் உள்ள பார்ப்பன பேராசிரியர்கள் லாபி தீவிரமாக முயன்றது. சிறிது காலம் பொறுப்பு முதல்வராக பார்ப்பனரான ராகவன் நியமிக்கப்பட்டார். மாணவர்களின் கல்வி கட்டண முறைகேடுகள் சம்பந்தமாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது குறித்த செய்தி ஒன்று அப்போது ‘நக்கீரனில்’ வெளியானது.
ஷிப்ட் 2 என்பது நிர்வாகத்திற்கு பொன் முட்டையிடும் வாத்து. இதன் பொறுப்பில் இருந்தவர் ரவிக்குமார் என்ற பார்ப்பனர். மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பணம் நிர்வாகத்தின் கல்லாவுக்கு செல்வதற்கு முன்னர் அது சிலரால் பதுக்கப்படுவதை உணர்ந்தது, நிர்வாகம். தமக்கு பணம் சிந்தாமல், சிதறாமல் வருவதற்கு ஓர் விசுவாச கைக்கூலியின் அவசியத்தை உணர்ந்தது. அந்த தேவையை பூர்த்தி செய்த மெர்லினை இப்போது முதல்வராக செயல்பட அனுமதித்துள்ளது.
பெண் என்ற அனுதாபத்தை முதலில் பெற்ற மெர்லின் மொரைஸ் முதல்வரானதை அங்கு பணிபுரியும் பெரும்பான்மை ஆசிரியர்கள் பெரிதும் வரவேற்றார்கள். ஆண் பேராசிரியர்களின் சதிகளை முறியடித்து வென்றதாக ஓர் பிம்பத்தை மெர்லின் மொரைஸ் உருவாக்கினார். கல்லூரி முதல்வர் என்ற முறையில் தமது உரிமைகளுக்கு துணையாக இருப்பார் என்று அப்பாவித்தனமாக பலரும் நம்பினர். மேய்ப்பனை அண்ணாந்து பார்க்கும் ஆட்டுக் குட்டிகளை போல அவரின் கருணைக்காக ஏங்கினர், ஆசிரியர்கள்.
ஜெயலலிதா முதல்வராக வரும் போது முதல் கையெழுத்து மட்டும் ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்வது போல இருக்கும். அது போல மெர்லின் மொரைசும் இங்கு பணி புரியும் நிர்வாக நிலை ஆசிரியர்களுக்கு ஒரு சிறிய அளவிலான ஊதிய உயர்வை பெற்றுத் தந்தார். பிறகு கொஞ்ச நாட்களிலேயே தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார்.
துறை தலைவர்களை கலந்தாலோசிக்காமல் புதிய விரிவுரையாளர்களை நியமிப்பது; தனக்கு பிடிக்காத ஆசிரியர்களை பழி வாங்குவது; ஸ்கூல் பாணியில் மாணவர்களை அசெம்ப்ளி என்று கூட்டுவது; ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது; இரக்கமற்ற முறையில் மாணவர்கள் பிரச்சினைகளை கையாள்வது; அற உணர்வின்றி ஆசிரியர்களை பிழிவது என்று கேள்வி முறையின்றி தொடர்கிறது இவரது அட்டகாசம்.
இது போக மாலை நேர கல்லூரி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வதைக்க ஆபிரகாம் தேவகுமார் என்றொரு ரிட்டையர்ட் நபர் கல்லூரி கல்வி இயக்குனகரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். ஒரு கல்வியாளருக்குரிய எந்த பண்பும் அற்ற இவர் மெர்லின் மொரைசுக்கு ஒரு அல்லக்கை போல செயல்படுகிறார். மாணவர்களை கெட்ட வார்த்தைகளால் ஏசுகிறார். ஆசிரியர்களை ஒருமையில் அழைக்கிறார். ஒரு மொக்கை ஆசாமி இந்த ஆபிரகாம் தேவகுமார் என்பதை மாணவர்கள் அவருடைய முதல் உரையிலே புரிந்து கொண்டார்கள். ஒரு பஜனை மடத்தை நிர்வகிக்க தகுதியான நபரை கல்லூரிக்கு இயக்குனர் பொறுப்பில் நியமித்திருப்பது, உயர்கல்வி துறையின் சீரழிவு.
உயர்கல்வின் நோக்கம் அறிவுச்சமூகத்தை படைப்பது என்று யுனெஸ்கோ வரையறுத்துள்ளது. ஆபிரகாம் தேவகுமாருக்கு பதில் குரு நானக் வனத்தில் வாழும் ஒரு மூத்த குரங்கை அந்த பொறுப்புக்கு நியமித்திருக்கலாம் என்று மாணவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த கல்லூரியை ஆரம்பித்த நிறுவனர்கள் தொலை நோக்கு பார்வையுடன் (vision) செயல்பட்டிருக்கிறார்கள். சிறந்த பேராசிரியர்கள் இங்கு பணியாற்றி உள்ளார்கள். அவர்களில் அநேகர் ஓய்வு பெற்று விட்டார்கள்.
இப்போதிருக்கிற நிர்வாகம், கல்லூரி முதல்வர், கல்லூரியின் புதிய இயக்குனர் ஆகியோர் இந்த சிறப்பு வாய்ந்த கல்லூரியை ஒரு பணம் பிடுங்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியாக சிறுத்து போக வைத்துள்ளார்கள். தமது இந்த கொள்ளை நோக்கத்துக்கு தோதாக ஆசிரியர்களை வேலை வாங்குகிறார்கள். நிவாகத்திடம் நல்ல பெயர் வாங்க மாணவர்கள் மீது உச்சகட்ட வன்முறையை பிரயோகிக்கிறார்கள் இந்த பேராசிரியர்கள்.
வகுப்பு இல்லாத நேரத்திலும் கிரவுண்டில் மாணவர்களை பார்த்தால் ID கார்டுகளை பறிப்பது, பைக் சாவியை வாங்கி வைத்துக் கொள்வது, வகுப்புக்கு கொஞ்சம் லேட்டாக வந்தாலே மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்குவது, தனியாகக் கூடி நிற்கும் மாணவர்களை அழைத்து வாயை ஊத செய்வது, மரத்தடியில் மாணவர்கள் உட்காருவதை கண்டால் துரத்தியடிப்பது, மொபைல் போனை பார்த்த மாத்திரத்திலே பிடுங்குவது என்று சினிமா தாதாக்களைப் போல செயல்படுகிறார்கள். மாணவர்களோடு மாணவிகள் பேசுவதை கண்டால் ‘சிவ சேனையாக’ மாறி விடுவார்கள். அம்மா அப்பாவை அழைத்து வந்தாலொழிய நிம்மதியடைய மாட்டார்கள்.
வகுப்பறையில் தூங்கும் மாணவனை வெளியே துரத்தும் ஆசிரியனே அம்மாணவன் முந்தின இரவு தூங்கினானா? என்று விசாரித்து அறியும் பொறுமை உண்டா?
ஐந்து நிமிடம் லேட்டாக வந்தால் ‘ஆப்சென்ட்’ போடும் ஆசிரியனே குருநானக் கல்லூரி நிறுத்தத்தில் நிற்காமல் போகும் பேருந்துகள் குறித்து ஏதேனும் தெரியுமா?
கிரவுண்டில் கூட விசிலடித்தால் கன்னத்தில் அறையும் ஆசிரியனே நீங்கள் என்ன ‘ஆக்ச்போர்டிலும், கேம்பிரிட்ஜிலும்’ படித்து வந்தவர்களா? உங்கள் கல்லூரி வாழ்க்கையின் யோக்கியதையை கொஞ்சம் சொல்ல முடியுமா?
மாணவர்களை சர்வசாதாரணமாக பொறுக்கி என்றும், ராஸ்கல் என்றும் அழைக்கும் ஆசிரியனே உங்கள் வீட்டு டார்லிங்குகளை அப்படித்தான் அழைக்கிறீர்களா?
பழைமையான அரசு கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகளுக்கு என்று ஒரு பண்பு உள்ளது. வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளின் குதூகலத்துடன் இங்கு கல்வி கற்க வருகிறார்கள் மாணவர்கள். ஒரு சுதந்திர மனநிலையில் மாணவர்கள் இங்கு கற்பதால், ஆளுமை மிக்கவர்களாக வெளியே செல்கிறார்கள். பால்யத்தின், கல்லூரி வாழ்வில், ஆண்-பெண் உறவு நிலையில் ஒரு முழுமையை அவர்கள் பெறுவதால் உளவியல் ரீதியாக ஆரோக்கியமானவர்களாக அதன் பிறகு இருக்க வாய்ப்புண்டு. கிரிக்கட், பில்லியர்ட்ஸ், கைப்பந்து, தடகளம் போன்றவற்றில் மாநில, தேசிய அளவிலான வீரர்கள் இந்த கல்லூரியில் உண்டு. இந்த திறப்புகள் அனைத்தையும் அடைத்து, அவர்களை சிறைப்படுத்தி, முடமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர், ஆசிரியர்களின் தற்போதைய அணுகுமுறை.
இப்படி இந்த கல்லூரியின் மதிப்பை, மாணவர்கள், ஆசிரியர்களின் மகிழ்ச்சியை, அவர்களுக்கிடையேயிருந்த நல்லுறவை சிதைத்த நிர்வாகம் இன்னொன்றையும் செய்தது. அது கல்வி கட்டண கொள்ளை சம்பந்தமான புதிய அறிவிப்பு. கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளுக்கு ரூ. 25000 , பி.காம், பி,பி,ஏ., பாடப்பிரிவுகலூகு 16000 , காட்சி ஊடகவியல், எலக்ட்ரானிக் communications பிரிவிற்கு 45000 மும் வருடம் வசூலிக்கிறார்கள். கடந்த வருடம் வரை இரண்டு தவணைகளாக கட்டி வந்த வருட கல்விக் கட்டணத்தை ஒரே தவணையாக கட்ட வேண்டும் என்று அறிவித்தார் கல்லூரி முதல்வர்.
உயர் கல்வி பெறும் முதல் தலைமுறை மாணவர்களை கொண்ட அடித்தட்டு மக்கள் பிரிவினர் பெரும்பான்மையாக படிக்கும் இக்கல்லூரியில் இந்த புதிய கட்டண அறிவிப்பு ஏற்படுத்தும் சிரமத்தை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. ஒய்யாரமாக பைபிளை ஏந்தி செல்லும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர் கல்லூரி முதல்வர். அவருக்கு தெரிந்த பைபிள் கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட வேண்டுமானால் பழைய ஏற்பாடு காலத்து எகிப்திய மன்னன் பரர்வோ-வுடன் அவரை ஒப்பிடலாம். இந்த பொம்பிளை பரவோவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இஸ்ரவேல் ஜனங்கள், இங்குள்ள மாணவர்களும், நிர்வாக நிலை ஆசிரியர்களும்.
உரிமைகளை விட்டுக் கொடுத்து, சுயமரியாதையை இழந்து வேண்டுமானால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கலாம். ஆனால் மாணவர்களால் அப்படி இருக்க முடியாது. ஜூலை ஆறாம் தேதி ஸ்டிரைக் என்று அறிவித்தார்கள். அதன்படி ஐந்தாம் தேதி கல்லூரியில் போஸ்டர் ஓட்டினார்கள். அவற்றை எஸ்டேட் ஆபீசரான ஒரு சிங் சுரண்டி அப்புறப்படுத்தியுள்ளான். ஸ்டிரைக் நாளன்று, பெரிய அளவுக்கு போலீசைக் குவித்து பீதியூட்டியும், ஆசிரியப் போலீஸ்களை வைத்து மிரட்டியும் இப்போராட்டத்தை நீர்த்து போக செய்தது நிர்வாகம்.
அதே நேரத்தில், மாணவர்களின் ஒருங்கிணைவை கண்டு உள்ளுக்குள் பயந்த போன நிர்வாகம், கல்வி கட்டணத்தை செலுத்த ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. ஒரு போராட்ட அறிவிப்பின் பலனே இதுவென்றால், ஒரு முழுப் போராட்டத்தின் பலன் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள், குருநானக் கல்லூரி மாணவர்கள்.
அந்த சிந்தனை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களால் உரமூட்டப்பட்டு விரைவில் வெடிக்கும். குருநானக் கல்லூரியின் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும். ஒரு பெரும் புயலுக்கு காத்திருக்கிறது குருநானக் கல்லூரி.
சமச்சீர் கல்வி – பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்துமாறு அம்மாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “வலது இடது போலி கம்யூனிஸ்டுகளின் பேராதரவுடன் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தமும் செல்லத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாகப்பதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பின் முழு விவரம் இன்று மாலைதான் கிடைக்கும்.
தமிழகத்தின் காவல் தெய்வம், தங்கத்தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக அமர்ந்து, முதல் முறையாக நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முதன் முதலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.
அம்மா உச்சநீதிமன்றம் போகிறார். ஒரு தலைப்பட்சமாக இடைக்காலத் தடை உத்தரவு எதையும் கொடுத்துவிடாமல் தடுக்கும் பொருட்டு, கேவியட் மனு தாக்கல் செய்வதற்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் உச்ச நீதிமன்றம் போகிறது.
உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதி கிருஷ்ணனும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவும் முன்வைத்த வாதங்கள் உப்புசப்பற்றவை. அவர்கள் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு உள்ள இறையாண்மை மிக்க அதிகாரம் குறித்துத்தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்கள். தமிழ் மாணவர்களின் முடியைத் திருத்தி குடுமி வைப்பதற்கோ, அல்லது மொட்டை அடிப்பதற்கோ அம்மாவுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதெனினும், ஒரு கோடி மாணவர்களுக்கும் இந்த ஆண்டே, இந்தக் கணமே மொட்டை அடித்தாக வேண்டும் என்ற சட்டத் திருத்தத்துக்கான நியாயத்தை விளக்கவில்லை.
அம்மா வின் கோபம், அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனை நோக்கித் திரும்புமே தவிர, பத்மா ஸேஷாத்ரி பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி ஒய்.ஜி.பார்த்தஸாரதி, டி.ஏ.வி ஸ்கூல் என்று அறியப்படும் தயானந்தா ஆங்கிலோ வேதிக் ஸ்கூலின் தாளாளர், ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் அம்மையார் ஆகியோரை நோக்கித் திரும்பாது. அம்மா வை மூக்கறுபட வைத்தவர்கள் இவாள்தான். பொதுப்பாடத்திட்டத்தைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரித்த அக்ரகாரத்து அறிவுஜீவிகளும், ஆங்கிலக் குஞ்சுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தங்களது தரப்பு வாதங்களைப் படித்துப் பார்ப்பார்களேயானால், தங்கள் முகத்தில் தாங்களே காறித்துப்பிக்கொள்ள வேண்டிய நியாயம் குறித்து அவர்கள் புரிந்து கொள்ள இயலும்.
வாதங்களின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று கொண்டால், தற்போதைய உயர்நீதி மன்றத் தீர்ப்பினை “நாம் எதிர்பார்த்த்துதான்’ என்று சொல்ல்லாம். நீதிமன்றங்களின் எதார்த்தநிலையைக் கணக்கில் கொண்டு கூறுவதாயின் இந்த தீர்ப்பு அவ்வப்போது நிகழும் அதிசயங்களில் ஒன்று.
இந்த வழக்குக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் பலர் உழைத்திருக்கின்றனர். வழக்குரைஞர் மோகன், புருஷோத்தமன் ஆகியோர் வாதிட்டிருக்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டக் குழவின் உறுப்பினரான கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் ஒன்றையும் பெற்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தாக்கல் செய்தது.
பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் சார்பில் வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத், திருமதி மனோன்மணி அவர்கள் சார்பில் வழக்குரைஞர் விடுதலை ஆகியோர் இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கின்றனர்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மார்க்சிஸ்டு கட்சியின் சார்பாளர் என்ற போதிலும் அக்கட்சியின் நெறியற்ற, சந்தரப்பவாத நடைமுறையை நிராகரித்து இறுதிவரை உறுதியாக நின்று போராடியிருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது. சமச்சீர் கல்விக்காக இவரும், இந்திய மாணவர் சங்கமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்க்சிஸ்டு, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைமைகள் அம்மாவின் குலக்கல்வித் திட்டத்துக்கு “ஓ” போட்டுக் கொண்டிருக்கின்றனர். சொரணையுள்ளவர்கள் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து தாங்களாகவே வெளியேறிவிடுவார்களா அல்லது அன்புச் சகோதரி அவர்கள், இவர்களையெல்லாம் “நமது எம்ஜிஆர்” நாளேட்டில் கட்டம் கட்டி வெளியேற்றும் காலம் வரை காத்திருப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு தமிழகத்தில் ஜெ அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், வல்லுநர் குழுவின் அறிக்கை எரிப்பு, அம்மா வின் கொடும்பாவி எரிப்பு எனப் பல்வேறு வடிவங்களில் போராடியதும் சிறை சென்றதும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான். மக்களின் வரவேற்பையும், அதிமுகவினருடனான மோதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு கடந்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன இந்த பிரச்சாரங்கள்.
இப்போராட்டத்துக்கு இணையாக மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடைக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்களும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. மெட்ரிக் மோகத்துக்கு ஆட்பட்ட பெற்றோரை, அந்தக் கொள்ளையர்களிடமிருந்து மீட்பதற்காகப் போராடுவதுடன், அவர்களை சமச்சீர் கல்வியை ஆதரித்தும், கல்வி தனியார்மயத்தை எதிர்த்தும் போராட வைத்திருக்கிறோம்.
000000000000000000000000000000000
போன வாரம் பேருந்து ஒன்றில் ஜெ அரசின் சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ஒரு ம.க.இ.க தோழர். “டேய்.. அம்மா ஆட்சியைப் பத்தி பேசாதே” என்று வெயிட்டாக வந்த்து ஒரு குரல். அதைக் காதில் வாங்காமல் அந்த தோழர் தனது பேச்சைத் தொடர்ந்தார். “டேய் பேசாதேங்கிறேன்ல” என்று குரலுக்கு ஏற்ற வெயிட்டுடன் எழுந்து நின்றது ஒரு கரை வேட்டி. “நான் என் கருத்தை சொல்றேன். நீங்க உங்க கருத்தை சொல்லுங்க. எது சரின்னு சனங்க முடிவு பண்ணட்டும்” என்று அந்தத் தோழர் மிகவும் நாகரீகமாகப் பதிலளித்தார்.
“டேய்.. நிறுத்துடான்னா…” என்று சொல்லி கையை ஓங்கிய கரை வேட்டியின் கை ஓங்கியபடி நின்றது. “னா..” என்ற குரல் முடியாமல் “ஆ” என்று தொடர்ந்தது. கரை வேட்டியின் கண்ணாடி தெறித்து கீழே விழுந்திருந்தது. “யோவ், இறங்கிப் போய்யா” “தம்பி தொலையிறான் விடுங்க” என்று தலையிட்டார்கள் பயணிகள். கரை வேட்டி தப்பித்த்து.
என்ன இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற்று செயித்த கட்சியல்லவா? கேப் இல்லாம ரெண்டாவது அடிய அடிக்கப்படாது.
உண்மையில் இது ஒரு பொற்காலம்தான். சாயிபாபா உயிரோடு இருந்தபோது கக்கிய தங்க லிங்கங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தங்கத்தை பாபா இறந்தபின் அவருடைய தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறையிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட தங்கம், வைரங்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இல்லை, 5 இலட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்படக் காத்திருக்கின்றன.
இந்தியாவின் முதற்பெரும் கோடீசுவரனான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ரத்தன் டாடா பிடித்து விட்டார் என்று சமீபத்தில்தான் செய்தி வெளிவந்தது. ஆன்மீக உலகிலும் அதிரடி மாற்றம். இந்தியாவிலேயே மிகப்பெரும் கோடீசுவரர் என்ற இடத்தை நெடுங்காலமாகக் கைப்பற்றி வைத்திருந்த திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தி அந்த இடத்தைப் பிடித்து விட்டார் பத்மமநாபசாமி. ஏழுமலையானின் சொத்து மதிப்பு 40,000 கோடிதானாம். பத்மநாபசாமியின் இன்றைய நிலவறைச் சொத்து மதிப்பு நிலவரமே ஒரு இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. திருமாலைத் தோற்கடித்தவரும் திருமாலே என்பதனால் வைணவர்கள் ஆறுதல் கொள்ளலாம்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலகப் பணக்கார மனிதர்களின் பட்டியலோடு உலகப் பணக்காரக் கடவுளர்களின் பட்டியலையும் வெளியிடுமானால் ஆன்மீக உலகின் அசைக்க முடியாத வல்லரசு இந்தியாதான் என்ற உண்மையை உலகம் புரிந்து கொள்ளும். நிற்க. மீண்டும் நாம் பத்மநாபசாமி கோவிலுக்கே வருவோம்.
சீரங்கத்து அரங்கநாதனைப் போலவே, பாம்புப் படுக்கையின் மீதில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பத்மநாபசாமியின் கோவிலுக்குக் கீழே, கல் அறைகள் என்று அழைக்கப்படும் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. காற்றோட்டமில்லாத இந்தப் பொந்துகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுத்து, அவற்றைப் பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் புதையல் வேட்டை நடந்து வருகின்றது.
சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மகாவிஷ்ணுவின் தங்கச்சிலை, தங்கத்தினால் செய்யப்பட்டு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு தேங்காய் மூடிகள், பத்தரை கிலோ எடையுள்ள 18 அடி நீள மார்புச் சங்கிலி, 36 கிலோ எடையுள்ள தங்கத் திரை, தங்க அங்கி, 500 கிலோ தங்கப் பாளங்கள், தங்கத்தில் வில் அம்பு, வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தட்டுகள், பல நூறு கிலோ எடையுள்ள தங்க மணிகள், நகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தங்கக் காசுகள், நெப்போலியனின் தங்கக் காசுகள், ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆன்ட்வெர்ப் நகரின் வைரங்கள் ..
தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவதாகவும், புராதனக் கலைப்பொருட்கள் என்ற வகையில் மதிப்பிட்டால், இவற்றின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றன பத்திரிகைகள். நிலவறைக்குள் தங்கம் இருக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதன் அளவுதான் யாரும் எதிர்பாராதது. இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்பட வேண்டும். அவற்றைத் திறப்பதற்கு முன் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது போலீசு.
கோவிலைச் சுற்றிலும் நெருக்கமாக வீடுகள் இருப்பதுடன், பூமிக்கு அடியில் இரண்டரை அடி நீள அகலத்தில் பழங்காலத்து பாதாள சாக்கடை ஒன்று இருப்பதால், அந்த பாதாள சாக்கடை வழியாக யாரேனும் நிலவறைகளுக்குள் புகுந்து தங்கச் சுரங்கத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறது போலீசு. எனவே, பத்மநாப சாமி கோவிலுக்கு அருகில் குடியிருக்க நேர்ந்த துர்ப்பாக்கியசாலிகள் அனைவரும் போலீசின் கண்காணிப்புக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள்.
ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்தத் தங்கப் புதையல் எப்படி வந்தது? மன்னர்களின் ஆடை ஆபரணங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், அவர்களது சொத்துகள் ஆகிய அனைத்தும் மக்களின் ரத்தத்தை வரியாகப் பிழிந்து எடுக்கப்பட்டவைதான் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. பார்ப்பனக் கொடுங்கோன்மையின் வரலாற்று உதாரணமாக இருந்த கேரளத்தில், விவசாயிகள் எவ்வளவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர் என்ற உண்மையைக் கடந்த நூற்றாண்டின் மாப்ளா விவசாயிகள் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. இன்று பத்மநாபசாமி கோவிலின் தங்கப்புதையலும், வைர நகைகளும் அந்தச் சுரண்டலின் ஆபாசமான நிரூபணமாக மின்னுகின்றன.
ஸ்விஸ் வங்கிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் கோவில்கள்தான் மன்னர்கள் தமது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்கான பெட்டகங்களாக இருந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவ சாதிய சமூகத்தின் அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில் வழியாகவே செலுத்தப்பட்ட காரணத்தினால், கோவில்கள் அறிவிக்கப்படாத அரசு கஜானாக்களாகவே இருந்திருக்கின்றன. ஆகையினால்தான் இராசராச சோழன் முதல் கஜினி முகமது வரையிலான மன்னர்கள் அனைவரும் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாட்டில் உள்ள கோவில்களைக் குறிவைத்துக் கொள்ளையிட்டிருக்கிறார்கள். தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இந்த அளவுக்குத் தங்கம் சேர்ந்ததற்குச் சில குறிப்பான காரணங்களும் உள்ளன. அன்று ஐரோப்பாவுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி ஆகிய நாடுகள் திருவிதாங்கூரைக் காட்டிலும் பன்மடங்கு செல்வ வளம் மிக்கவையாக இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னனாக இருந்த மார்த்தாண்ட வர்மா, இந்த நாடுகளின் மீது படையெடுத்து அந்நாடுகளின் செல்வத்தைக் கொள்ளையிட்டிருக்கிறான். இவையன்றி மன்னன் விதிக்கும் அபராதங்கள் அனைத்தும் கோவிலின் பெயரில் தங்கமாக வசூலிக்கப்பட்டதால் அவையும், வணிகர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குச் செலுத்திய காணிக்கைகளும் தங்கமாகச் சேர்ந்திருக்கின்றன.
18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும் கும்பினியின் கைக்கூலிகளாக இருந்தனர். கும்பினியின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சியது மட்டுமல்ல, அரச குடும்பங்களுக்குள் வழக்கமாக நடக்கும் அரண்மனைச் சதிகளும், உள்குத்துகளும் கூட இப்படி தங்கத்தைப் புதைத்து வைக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.
அவ்வாறின்றி, ஆன்மீக அடிப்பொடிகள் சித்தரிப்பதைப் போல இவையெல்லாம் கடவுளுக்கு வந்த காணிக்கைகள் அல்ல. ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் அதற்குக் கணக்கும் இல்லை, யார் கொடுத்த காணிக்கை என்பதற்கான விவரமும் இல்லை. கோவிலில் மணி அடிப்பவனுக்கும், சமையற்காரனுக்கும், விளக்கு போடுபவனுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு கலம் நெல் அளிக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும் அளவுக்கு ‘யோக்கியர்களான’ மன்னர் பரம்பரையினர், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘காணிக்கைகளை’ புதைத்து வைத்திருப்பது பற்றி ஒரு துண்டுச் சீட்டில் கூட எழுதி வைக்காததற்கு வேறு என்ன காரணம்?
இந்தப் புதையல் அனைத்தையும் மக்கள் நலனுக்கும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், கேரள பகுத்தறிவாளர் சங்கத்தை சேர்ந்த காலநாதன், வரலாற்றாய்வாளர் செரியன் போன்றோர் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டவுடனே ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் காலிகள் நள்ளிரவில் காலநாதன் வீட்டைக் கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.
“தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகள் எல்லாம் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது காஞ்சிபுரத்து யோக்கியர் ஜெயேந்திரனின் கருத்து. “அவை தொல்லியல் துறைக்குச் சொந்தம்” என்பது கே.என். பணிக்கர் போன்றோரின் கருத்து. “மாநில அரசுக்குச் சொந்தம்” என்பது வேறு சிலர் கருத்து. “அனைத்தும் பகவான் பத்மநாப ஸ்வாமிக்கே சொந்தம்” என்பது மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து.
“பகவான் பத்மநாபஸ்வாமியும், அவருடைய கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது தற்போதைய திருவிதாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. அது வெறும் கருத்து அல்ல. இந்தக் கோவிலும், அதன் சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமா அல்லது மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமா என்பது உச்சநீதி மன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு. இந்த வழக்கின் அங்கமாகத்தான் தற்போதைய புதையல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதால் மேற்கூறிய கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்வதற்கு இவ்வழக்கு பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம்.
1947 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், கேரளத்தின் மற்ற கோவில்களெல்லாம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், பத்மநாபசாமி கோயில் மட்டும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொண்டார் திருவிதாங்கூர் மன்னர். பத்மநாபசுவாமியின் மீது மட்டும் மன்னர் கொண்டிருந்த அளவுகடந்த பக்திக்குக் காரணம் என்ன என்பது அப்போது புரியவில்லையெனினும் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
‘இந்துக் கோவில், இந்து மன்னர், இந்துப் புதையல்’ என்று சங்க பரிவாரத்தின் அமைப்புகள் தற்போது கூச்சல் எழுப்புகின்றனர். . கிறித்தவர்கள், முஸ்லிம்களிடத்திலிருந்தும் திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப் பொக்கிஷமாக மின்னிக் கொண்டிருக்கிறது. எனினும், இந்தப் பொக்கிஷத்தை என்ன செய்வது என்பது பற்றி கிறித்தவர்களோ முஸ்லிம்களோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர் இந்து வெறியர்கள். அவர்களது அபிமான திருவிதாங்கூர் மன்னரும், திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் அகண்ட பாரதத்திலிருந்து திருவிதாங்கூரைத் துண்டாடவும், அதன் பின் பாகிஸ்தானுடன் கூட்டணி சேரவும் முயன்றார்கள் என்ற வரலாற்று உண்மை அரை டவுசர் அம்பிகள் பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1947 இல் மேற்படி இந்து மன்னரும், அவருடைய திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் திருவிதாங்கூரை (கேரளத்தை) தனிநாடாக அறிவித்து பிரிந்து போவதற்கே முயன்றனர். அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் மோனோசைட் எனும் தாது திருவிதாங்கூர் கடற்கரையில் நிறைந்திருந்ததால் திருவிதாங்கூரைத் தனிநாடாக்கி விட்டால், அதனைப் பிரிட்டன் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று பிரிட்டிஷ் அமைச்சர்களும், சி.பி. ராமசாமி ஐயரும் சேர்ந்து இரகசியத் திட்டம் தீட்டினர். பாகிஸ்தானும் திருவிதாங்கூரும் தனியே நட்புறவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஜூன், 1947 இல் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதினார் சி.பி. ராமசாமி ஐயர். ஜூலை 1947 இல் தனிநாடாகச் செல்லப்போவதாக மவுண்ட்பாட்டனிடம் ராமசாமி ஐயர் அறிவிக்கவும் செய்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான புன்னப்புரா வயலார் விவசாயிகள் எழுச்சியும், சமஸ்தானம் முழுவதும் மன்னராட்சிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் மன்னருடைய தனிநாட்டுக் கனவில் மண் அள்ளிப் போட்டன. (ஆதாரம், தி இந்து, 25.5.2008)
இதுதான் ‘இந்துப் பொக்கிஷத்தை’ச் சுருட்டிக்கொண்டு போவதற்கு ‘இந்து மன்னன்’ செய்த சதியின் கதை. சமஸ்தான மன்னர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி இந்திய யூனியனுன் இணைத்த இரும்பு மனிதர் சர்தார் படேல், திருவிதாங்கூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.
1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:
“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.
பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.
கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.
தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.
ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.
எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”
மேற்கூறிய தீர்ப்பில் கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசு என்று குறிப்பிட்டு விமரிசிப்பது மார்க்சிஸ்டு கட்சி அரசைத்தான். மே.வங்கத்தில் தரகு முதலாளி டாடாவுக்கு ஆதரவாக புத்ததேவ் பட்டாச்சார்யா. கேரளத்தில் திருவிதாங்கூர் மன்னனுக்கு ஆதரவாக அச்சுதானந்தன்! கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னரிடமே இருக்கட்டும் என்று கூறிய மார்க்சிஸ்டு கட்சி அரசு, அதனை மறுத்து உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது. மூன்று மாதங்களுக்குள் கோவிலை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 31, 2011 இல் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அச்சுதானந்தன் அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
விளைவு, மார்த்தாண்ட வர்மா உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, மேற்கூறிய உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் வாங்கி விட்டார். கோவிலை மாநில அரசு மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை பெற்றதன் மூலம், கோவிலின் நிர்வாகத்தை மார்த்தாண்ட வர்மா தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறார். சுரங்க அறையிலிருந்து பொக்கிஷங்களை எடுத்துப் பட்டியலிடுவதற்கு மட்டும் உச்சநீதி மன்றம் ஒரு குழுவை நியமித்திருக்கின்றது.
பொக்கிஷங்கள் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை நாம் அரசியல் ரீதியாகக் கூறுகிறோம். சட்டப்படி அது அரசுக்குத்தான் சொந்தம் என்று தனது தீர்ப்பில் விளக்கியிருக்கிறது கேரள உயர்நீதி மன்றம்.
ஆனால் பொக்கிஷங்களும், கோவிலும் தனக்குச் சொந்தம் என்பது மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. சங்கராச்சாரியின் கருத்தும் அதுதான். “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடக் கூடாது” என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்து. “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். கோவில் நிர்வாகம் மன்னனுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடத் தேவையில்லை” என்பது மார்க்சிஸ்டுகளின் கருத்து. “பொக்கிஷம் பத்மநாபசுவாமிக்கு சொந்தம்” என்பது காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து. இவர்கள் எல்லோரது கருத்தும் சாராம்சத்தில் ஒரே கருத்துதான்.
யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள். காணிக்கைக்குக் கணக்கு எழுதி வைக்கக் கூடாது என்று பகவான் சொன்னாரா, அல்லது பக்தன் சொன்னானா? கணக்கில் வராத பணத்தைத்தானே கருப்புப் பணம் என்று அழைக்கிறார்கள்?
திருவிதாங்கூரின் பாதாள அறையிலிருந்து மட்டுமல்ல, புட்டபர்த்தியிலுள்ள பாபாவின் தனியறையான யஜுர்வேத மந்திரத்திலிருந்தும் தங்கமும் வைரமும், கட்டு கட்டாகப் பணமும், காசோலைகளும் வருகின்றன. தனியறையில் படுத்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காணிக்கைகளை ஆராயக் காரணம் என்ன? பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்? வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.
அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறையோ, சி.பி.ஐ யோ பாபாவின் அறையைச் சோதனை போடவில்லை. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக ‘கலைஞர் கோவில்’ என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம். கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வெளிநாட்டுக்கு ஓடுவதும், கே மேன் ஐலாண்ட், மொரிஷியஸ் போன்ற தீவுகளைத் தேடுவதும் மேற்கத்திய சிந்தனை முறையில் உதித்த வழிமுறைகள். பாரம்பரிய மிக்க நமது பாரத மரபில் இதற்கான பல வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் தொன்மையானது திருவிதாங்கூர் நிலவறை. நவீனமானது பாபாவின் யஜூர்வேத மந்திரம். இவை எந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிடிக்கும் சிக்காதவை.
ஏனென்றால் இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள். தற்போது தோண்டியெடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தொல்லியல் மதிப்பு மிக்க செல்வங்கள் அல்ல. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் தங்கத்தின் வடிவிலான பணம். அவ்வளவே. அவை இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிமையான சொத்து. அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு.
திருவிதாங்கூர் அரசாட்சி கீழ் விவசாயிகள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும் நம்பூதிரிகளும், நாயர்களும் இழைத்த கொடுமைகளையும், அவ்வரசாட்சியின் கீழ் மக்களுடைய அவலமான வாழ்நிலையையும், ஆங்கிலேயனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நம் நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் பரம்பரை இழைத்த துரோகத்தையும் காட்சிப்படுத்தி, இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் பின்புலத்தில், கண்டெடுக்கப்பட்ட இந்த ஒரு இலட்சம் கோடிப் புதையலைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தப் புதையல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் காட்டிலும், யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையின் முக்கியத்துவம் நிலைநிறுத்தப்படும்.
கட்டணக் கொள்கையை ஒழித்துக் கட்டு!
அனைத்துத் தனியார் கல்வி
நிறுவனங்களையும் அரசுடைமையாக்கு!
அரசுப் பள்ளிகளில் போதுமான
ஆசிரியர்களை நியமி!
அடிப்படைக் கட்டுமான வசதிகளைச்
செய்து கொடு!
சமச்சீர் கல்வியை அனைவருக்கும்
கட்டாயமாக – இலவசமாக வழங்கு!
அரசுப் பள்ளிகளில்
படித்த மாணவர்களுக்கு மட்டும்
உயர்கல்விப் படிப்புகளுக்கு அனுமதி கொடு!
அரசுக் கல்வி நிறுவனங்களில்
படித்தவர்களுக்கே
அரசு வேலை என்று ஆணையிடு!
உழைக்கும் மக்களே!
மனித மாண்பை மேம்படுத்தும்
கல்வியை ஒரு பண்டமாக்கி,
மக்களைக் கொள்ளையடிக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்கு,
அடிமைகளை உருவாக்கும்
தனியார்மய – உலகமயக் கல்விக் கொள்கைக்குக்
கல்லறை கட்டுவோம்!
ஆங்கிலவழிப் பயிற்சி – தரமான கல்வி
என்ற போர்வையில் புகுத்தப்படும்
புதிய பார்ப்பனியக் கல்விமுறையைத்
தூக்கியெறிவோம்!
பெற்றோர்களே!
10-வது மற்றும் +2 தேர்வுகளில்
சாதனை நிகழ்த்துவது
தனியார் பள்ளிகளை விட
அரசுப் பள்ளிகளே!
ஆங்கிலவழிப் பயிற்சி – தரமான கல்வி
என்ற மோகத்திற்குப் பலியாகி,
குழந்தைகளை பிராய்லர் கோழி போல்
வளர்க்கும் கல்வி வியாபாரிகளிடம்
சிக்கிச் சீரழியாதீர்!
அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பெருமக்களே!
மாணவர்களுக்கு முறையாகக்
கற்றுக் கொடுப்பதில்லை,
ஒழுக்கமாக வளர்ப்பதில்லை என்று
அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும்
கேவலப்படுத்திக் கொச்சைப்படுத்தும்
தனியார் பள்ளி முதலாளிகளுக்கு
எதிராக அணிதிரள்வீர்!
தனியார் பள்ளி ஆசிரியர்களே!
அற்பச் சம்பளம் கொடுத்து
உங்களைக் கொத்தடிமைகளைப் போல
நடத்துவதோடு, கல்விக் கொள்ளைக்குக்
கருவியாகப் பயன்படுத்தும்
தனியார் பள்ளி வியாபாரிகளுக்கு
எதிராக சங்கமாகத் திரண்டு போராடுவீர்!
மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனாதைப் பிணங்களை சடங்குக்காக அறுத்து நீதிமன்றத்திற்காகப் பதிவு செய்து யாரும் கோருபவர் இல்லாமல் எரிக்கப்படுவது போல குண்டு வெடிப்பின் அலசல்கள் அரசியல் அரங்கிலும், ஊடகவெளியிலும் உயிரின்றி பேசப்படுகின்றன. அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தையை தூக்கத்தில் எழுப்பி தீவிரவாதத்திற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் கூட அழகாய் ஒப்புவிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறுது என்றாலும் இது தேசத்திற்கெதிரான போர் என்று முழங்கும் அத்வானி பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிறார். புரட்சித் தலைவியும் அதனை வழிமொழிகிறார். ஈழத்தமிழர்களை ஆயுள்தண்டனை கைதிகளாக முகாம்களில் அடைத்து கண்காணிப்பது போல வங்கதேச அகதிகளை கண்காணிக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?
குண்டுகள் இந்த வெற்றுப்பேச்சினை சட்டை செய்வதில்லை. ஓரிடத்தில் குண்டுவெடிப்பது ஏதோ தீபாவளி பட்டாசு வெடிப்பது போல, ஹாலிவுட் படத்தில் நிகழ்வது போல அவ்வளவு சுலபமில்லை. அதிரடிக்காட்சிகளை நொறுக்குத்தீனியாக மனதில் பதியவைத்திருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி உணர்ச்சி, உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை, நிஜத்தின் வலியை உணர்த்துவதில்லை. உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும். இலட்சியத்தின்பால் இருக்கும் உறுதியுடன் கூடவே அப்பாவி மக்களை கொல்லுவது குறித்த இரக்கமின்மையும் கணிசமாக வேண்டும். ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?
அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே! சொல்லப்போனால் இந்த இரும்புக்கர நடவடிக்கைகள் குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. எனில் இந்த சட்டதிட்டங்களை தகர்த்தெறியும் வலிமையினை குண்டுகள் எங்கிருந்து பெற்றன?
குண்டுகள் அந்த வலிமையினை வரலாற்றின் அநீதியிலிருந்து பெற்றுக்கொண்டன. குண்டுகளினுள் பொதியப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தினைவிட சமகால வரலாற்றின் வீரியம் அதிகமானது. குண்டுகள் தன்னளவில் இயல்பாக வெடித்துவிடுவதில்லை. கூர்ந்து நோக்கினால் அவை வரலாற்றின் விளைபொருட்கள்! 1992 பம்பாய் கலவரத்திற்கு பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு! 2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! 1996 கோவை கலவரத்திற்கு பிந்தையதுதான் 1999 கோவை குண்டுவெடிப்பு! இந்த சங்கிலித் தொடர் நிகழ்வின் தீர்மானிக்கும் கண்ணியாக கலவரங்கள் இருக்கின்றது. இருதரப்பார் அடித்துக்கொள்வதுதான் கலவரம் என்பதன் இலக்கணமாக இருக்கும்போது அவற்றைக் கலவரங்கள் என அழைப்பது பொருத்தமற்றது. சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்! இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை! இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டால் குண்டுகளின் தோற்றுவாயை அறிந்து கொள்ள இயலுமா?
நிச்சயம் முடியும். 91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது. அதன் உச்சம் பம்பாய் கலவரமாக வெடித்தது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார். போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன. இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது. ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம். ஆனால் ஒருவேளை என்ற சொல்லை வரலாற்றை பரீசீலிப்பதற்கு பயன்படுத்தலாமே ஒழிய வரலாற்றை மாற்றிப்போட்டு கற்பனை செய்வதற்கு இடம் கிடையாது. இன்று பம்பாய் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள். எனினும் பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்?
குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா?
குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு?
ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு?
குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன?
எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.
ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.
திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவ தில்லை. இதனால், அம்மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக்கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும். இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.
விழுப்புரம் நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினமும் ஏறத்தாழ 2,000 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த ஜூன் 2 அன்று வழக்கத்தைவிட அதிகமாக நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் 750 ரூபாயிலிருந்து 825 ரூபாய் வரை விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அன்று 75 கிலோ மூட்டைக்கு ரக வாரியாக 360 ரூபாய் முதல் 639 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் அறிவித்தனர்.
தவிட்டின் விலையைவிட நெல்லின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதைக் கேட்ட விவசாயிகள் கொதித்துப் போனார்கள். நெல் மூட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரிகளும் வியாபாரிகளும் கூட்டணி கட்டிக் கொண்டு தம்மிடம் பகற் கொள்ளை அடிக்க முயலுவதைப் புரிந்து கொண்ட விவசாயிகள், நெல்லுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உள்ளூர் போலீசு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் வந்திறங்கிய போலீசு பட்டாளம், பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கு முயலாமல், விவசாயிகளை அடித்துத் துரத்தியது.
விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் நெல்லை, வியாபாரிகள் அதிகாரிகள் துணையோடு நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்கும் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன். “திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் டன் நெல்லை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக ஒரு குவிண்டாலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட 200 ரூபாய் குறைவாக விலை வைத்தாலே, விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக’’க் கூறுகிறார், அவர். விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பு வியாபாரிகளுக்குக் கொள்ளை இலாபமாக, அதிகாரிகளுக்கு இலஞ்சமாகப் போய்ச் சேருகிறது.
ஜெயா பதவியேற்றவுடனேயே, “விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து, விவசாயத்தில் மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக” அறிவித்தார். ஆனால், விழுப்புரத்தில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி போராடிய ‘குற்றத்திற்காக’ ஆறு விவசாயிகள் மீது பொய்வழக்குப் போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது, அவரது அரசு.
விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்3 அல்லவா!
_________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2011
_________________________________
”இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம். இது 2007ம் ஆண்டு வெளியான புள்ளிவிவரம். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்தக் கோடீஸ்வரர்களில் சிலர் சென்னையிலேயே வசிக்கிறார்கள். பலர், ஆண்டுக்கு சில மாதங்கள் சென்னையில் வந்து தங்குகிறார்கள்.
காரணம், இந்தியாவின் பெரு நகரங்களில் சென்னையும் ஒன்று. விமானநிலையமும், நீர்வழிப் போக்குவரத்தும் ஒருசேர இருப்பது சென்னையின் சிறப்புகளில் ஒன்று. இதனாலேயே பல பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் தங்கள் கிளைகளை தொடங்கியுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் கிளைகளை தொடங்குவதற்காக காத்திருக்கின்றன.
இந்த நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் வசிப்பவர்களும், தனியாக தொழில் செய்யும் தொழில்முனைவோரும் வசிப்பதற்கு சென்னையில் வீடுகள் தேவை. அந்த வீடுகளும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தகுதிக்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடியும் வசதியாக இருக்க வேண்டும். கூச்சல் இருக்கக் கூடாது. போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படக் கூடாது. சாதாரண சோப்பு, சீப்பு வாங்கக் கூட அவர்கள் நடக்கக் கூடாது. எல்லாமே அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் நிம்மதியாக வாழவும் முடியும். தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.
இதனை கருத்தில் கொண்டு ரூபாய் 75 இலட்சத்தில் ஆரம்பித்து ரூபாய் 10 கோடி வரையிலான வீடுகள் சென்னையில் இப்போது உருவாகி வருகின்றன. இந்த வீடுகள் எங்கெங்கு, எந்தெந்த இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன என்பதை அவர்கள் தங்கள் வேலை நெருக்கடிக்கு மத்தியில் தேட வேண்டி இருக்கிறது. இதற்காக செலவிடும் நேரத்தில் ஆக்கப்பூர்வமாக தொழிலில் கவனம் செலுத்தலாமே என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பதிலும் தவறில்லை. ஒவ்வொரு மணித்துளியும் அவர்களுக்கு முக்கியம். பல கோடி ரூபாய்கள் பெருமானமுள்ள பரிவர்த்தனைகளை அந்த நேரத்தில் அவர்களால் முடிக்க முடியும்.
எனவே அவர்களது நலனை கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் கட்டப்பட்டு வரும் வசதியான வீடுகள் குறித்த விவரங்களை ஒரே இடத்தில் இரு நாட்களுக்கு கண்காட்சியாக வைக்க முடிவு செய்தோம். இதன் மூலம் அவர்கள் அலையாமல், நேரத்தை வீணாக்காமல் ஒரே கூரையின் கீழ் தங்களுக்கு வேண்டிய இல்லங்களை தேர்ந்தெடுக்கலாம். இதற்காகத்தான் இந்த ‘லக்சரி ஹோம் 2011’ கண்காட்சி. மொத்தம் 30 பில்டர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கிறார்கள். ஹிர்கோ (Hirco), ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (True Value Homes), இன்ஃப்யூயன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Influence Infrastructure) , ஃபோனிக்ஸ் ஹோடு டெவலப்பர்ஸ் (தி வில்லேஜ்) (Phoneix Hodu Developers) , லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் Landmark constructions, மார்க் ப்ராபர்டிஸ் Marg Properties… போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற பில்டர்களும் இந்தக் கண்காட்சியில் கலந்துக் கொள்கிறார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையின் மிக உயரமான குடியிருப்பு, தண்ணீருக்கடியில் அமைக்கப்பட்ட உடற்பயிச்சி கூடம், எல்லாமே தயாராக வைக்கப்ட்டுள்ள ”பிளக் அண்டு பிளே (Plug and play)” வீடுகள், விளையாடிக் களிக்க பிரத்தியேகமான கடல் – நீர்நிலை ஆதாரங்களை ஒட்டிய குடியிருப்புகள் உள்ளிட்ட ரூபாய் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான வீடுகள் குறித்த விவரங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
ஜூலை 9, 10 ஆகிய இரு நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் இக் கண்காட்சி நடைபெறும். உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்காகவும், கோடீஸ்வரர்களுக்காவும் இந்த எக்ஸ்போ நடத்தப்படுவதால் 3 முதல் நான்காயிரம் பார்வையாளர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்…”
ஜூலை 5 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐபால் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி.யான சக்தி, இத்தகவலை தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆங்கில தினசரி மற்றும் ஆங்கில காட்சி ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள் மட்டுமே. தமிழ் நாளிதழ்களின் வாசகர்களுக்கு இந்த ஒசத்தியான ஒய்யாரமான வீடுகள் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம்.
என்றாலும் சென்னையின் ஷாப்பிங் மால்களிலும், தி.நகர், அண்ணா நகர், போர்ட் க்ளப், பழைய மகாபலிபுரம் சாலை, கடற்கரைச் சாலை ஆகிய இடங்களிலும் இக் கண்காட்சி குறித்த பேனர்களை வைத்திருந்தார்கள்.
முரசொலி மாறனின் முன்முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை டிரேட் செண்டரில், உள்ளடங்கியிருக்கிறது கன்வென்ஷன் செண்டர் (கூட்டரங்கம்). இங்குதான் இந்த ‘லக்சரி ஹோம் 2011’ நடைபெற்றது.
வெயிலில் நனைந்தபடி அந்த கன்வென்ஷன் செண்டரை அடைந்தால், 2004-ம் ஆண்டு நவம்பர் 1 அன்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், இக்கட்டத்தை திறந்து வைத்தார் என்ற கல்வெட்டை பார்க்கலாம். அங்கிருந்து அந்தக் கூட்டரங்கின் வாசலை மேற்கூரையின் நிழலில் நடந்தபடி தொடலாம். ஆனால், உள்ளே நுழைய நான்கைந்து படிக்கெட்டுகள் ஏற வேண்டும். சிவப்புக் கம்பளத்தை மிதித்து ஏறும்பொழுதே உள்ளிருந்து குப்பென்று தாக்குகிறது குளிர்.
கறுப்பு கோட், சூட், வெள்ளைச் சட்டை, கறுப்பு டை அணிந்த இளைஞர்களும், கறுப்பு ஸ்கர்ட், கறுப்பு கோட், டை, வெள்ளைச் சட்டை அணிந்த இளைஞிகளும் புன்னகையுடன் வருபவர்களை வரவேற்று இடப்பக்கமுள்ள ரிசப்ஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அச்சடிக்கப்பட்ட ஒரு காகிதம் நீட்டப்படுகிறது.
பெயர், விலாசம், வேலை பார்க்கும் இடம், விலாசம், வயது, பிறந்த தேதி, ஆண்டு வருமானம், மின்னஞ்சல் முகவரி, வீட்டு தொலைப்பேசி எண், கைப்பேசி எண், மத்திய சென்னையா தென் சென்னையா வட சென்னையா கிழக்கு சென்னையா மேற்கு சென்னையா… எந்த இடத்தில், ரூபாய் 75 இலட்சம் முதல் ரூபாய் 10 கோடி வரை எவ்வளவு தொகையில் வீடு வேண்டும், இந்த எக்ஸ்போ நடைபெறும் விஷயத்தை ஆங்கில செய்தித் தாள் மூலம் தெரிந்துக் கொண்டீர்களா அல்லது ஆங்கில காட்சி ஊடகம் மூலம் அறிந்தீர்களா அல்லது எஃப்.எம். ரேடியோ மூலம் தகவல் அறிந்தீர்களா அல்லது பேனர்களை பார்த்து தெரிந்துக் கொண்டீர்களா ஆகிய விவரங்களை அக்காகிதத்தில் பூர்த்தி செய்து ரூபாய் நூறுடன் அங்கு தர வேண்டும். எந்நேரமும் புன்னகைக்கும் ரிசப்ஷன் பெண், ‘ப்ளீஸ்…’ என உள்ளே நுழைய வழி காட்டுகிறார். அங்கே ததும்பியிருந்த அமைதி நம்மைப் போன்ற பாமரரை குறைந்த பட்சம் எழுபது இலட்ச ரூபாய் வீட்டை காணுவதற்கு கூட தகுதியற்றோரை ரொம்பவே அச்சுறுத்தியது.
அது நீளமான, ஆயிரம் பேர் அமர்ந்து கூட்டம் நடத்தக் கூடிய ஒரு ஹால். வலப்பக்கம் பத்தடிக்கு ஒன்று வீதம் அக்வஃபீனா குடிநீர் வைக்கப்பட்டிருக்கிறது. ஹாலின் மறுமுனையில் துரித உணவகம். ஸ்நாக்ஸ், டிபன்கள் அங்கு விற்கப்படுகின்றன. இரண்டு அக்வஃபீனா குடிநீரை கடந்ததும் வலப்பக்கம் செல்வதற்கான ஒரு வழி அன்புடன் வரவேற்கிறது. அங்கும் கறுப்பு சூட், வெள்ளைச் சட்டை.
அரங்கினுள்……
வலுக்கட்டாயமாக நம்மீது சூழும் அந்தப் புன்னகைகளை கடந்து உள்ளே நுழைந்ததும் விரிகிறது கண்காட்சி. முப்பதடி நீளமும், நூற்றி இருபதடி அகலமும் கொண்ட அந்த இடத்தை நான்கு தெருக்களாக பிரித்திருக்கிறார்கள். நீலக்கம்பள கார்பெட்டில் கால்கள் புதையப் புதைய நடக்கலாம். 30 பில்டர்களும் அவரவர் வசதிக்கு ஏற்ப கடை விரித்திருக்கிறார்கள். அக்கடைகளும் அவரவர் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டு மாதிரிகளை பிரதி எடுத்திருக்கின்றன. ஒவ்வொரு கடையிலும் ஆண்களும் பெண்களும் சம அளவில் அமர்ந்திருக்கிறார்கள். அனைத்துப் பெண்களுக்கும் அதிகபட்சம் இருபத்தைந்துக்குள்ளேயே வயதிருக்கும். ஆனால், ஆண்கள் மட்டும் விதிவிலக்கு. வழுக்கை விழுந்த, நரைத்த தலைமுடிகள் இருந்தாலும் பரவாயில்லை என அவர்கள் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆண்களின் டிரெஸ் கோட் கோட், சூட். ஆனால், பெண்களை கோட், சூட் தவிர இழுத்துப் பிடிக்கும் ஜீன்ஸ், ஷர்ட்டிலும், ஸ்கர்ட், ஷர்ட்டிலும் பார்க்க முடிகிறது. எந்த வாடிக்கையாளர் அவர்களது கடைகளை கடந்தாலும் எழுந்து நிற்கிறார்கள். நுனி நாக்கில் அமெரிக்கன் இங்கிலீஷும், பிரிட்டன் இங்கிலிஷும் சரளமாக தவழ்ந்து வருகின்றன. வாடிக்கையாளர்களாக வருபவர்களும் சரி, பில்டர்ஸ் சார்பாக பேசுபவர்களும் சரி, ‘ம்…’ என்ற தமிழ் வார்த்தைகளைக் கூட பயன்படுத்தவில்லை. ‘அச்சா…’ என்பதை ஆங்காங்கே கேட்க முடிந்தாலும் ‘ஓ… ஈசிட்… மை குட்னஸ்… வாவ்… எக்சலண்ட்…’ என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்ப கேட்க முடிந்தது. கேட்பவர்களுக்கும், சொல்பவர்களும் அலுக்கவேயில்லை. என்ன இருந்தாலும் மேன்மக்களது இல்லங்களை விற்கும் கண்காட்சியல்லவா! அங்கு நாசுக்கான நாகரீகம் பழகியவர்களுக்கு மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தது. பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை பார்த்தது போல இருந்தது அநேகமாக நான் மட்டும்தான்.
அனைத்துக் கடைகளின் சுவற்றிலும் ஒட்ட வைக்கப்பட்டிருந்த வால்வ் மவுண்டட் டிவிகளில் அவரவரது வீடுகள் குறித்த விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தன. சின்னத்திரை மற்றும் பெரியத்திரை நட்சத்திரங்கள் அல்லது மாடல்கள் அந்தந்த இடங்களை இசையின் மீது பயணம் செய்தபடி பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் வாஸ்து நிபுணர் ஒருவர் தோன்றி, நவகிரகங்களின் வழியாக அந்த இடத்தின் சிறப்பை விளக்கிக் கொண்டிருந்தார். இந்த விளம்பர ஒலிகள் அடுத்தக் கடையை ஒருபோதும் அடையவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது. பத்து கோடி ரூபாயாக இருந்தாலும் வாஸ்துவுக்கு எந்த குறையுமில்லை என்று சீமாட்டிகள் சிலிர்த்துக் கொண்டனர்.
அனைத்து பில்டர்ஸின் கடை வாசல்களிலும் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்த விவரங்கள் அடங்கிய காகிதத்தை கொடுக்கிறார்கள். வழுவழு தாளில் வண்ணப் புகைப்படங்களுடன் அச்சடிக்கப்பட்டிருக்கும் அவற்றை காகிதம் என்று குறிப்பிடுவதை விட, புத்தகம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நீச்சல் குளம், பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், சூப்பர் மார்கெட், வங்கிகள், பள்ளிகள், பியூட்டி பார்லர்கள், யோகா மையங்கள்… ஆகியவை இல்லாமல் எந்த வீடும் கட்டப்படவில்லை என்பதை அனைத்து பேம்லெட்ஸையும் வாசித்தபோது புரிந்தது. நேர்பேச்சில் 24 மணிநேர மின்வசதி உண்டு என்பதை அனைத்து பில்டர்களும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது இரு கார்கள் நிறுத்தக் கூடிய அளவுக்கு பார்கிங் வசதிகள் உண்டு. குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமா, லாரியில் தண்ணீர் வாங்க வேண்டிய அவசியம் வருமா… போன்ற கேள்விகளை ஏதோ மனிதக் கழிவுகளை மிதித்துவிட்ட உணர்வுடன் எதிர்கொள்கிறார்கள். லாஸ் விகாசில் சீட்டுக்கட்டு கிடைக்குமா என்று கேட்டு விட்டோமோ?
அங்கிருந்த பில்டர்களில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை விற்பவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர்தான் இருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் பெண்த்ஹவுஸ், வில்லா, ரோ ஹவுஸஸ் ஆகியவற்றை விற்பனை செய்பவர்களே. இவர்கள் தவிர, வேகேஷன் ஹோம்ஸ் விற்பவர்களையும் பார்க்க முடிந்தது. அனைவருமே ஐரோப்பிய அல்லது அமெரிக்க மாதிரிகளில் இல்லங்களை கட்டி வருவதாக குறிப்பிடுகிறார்கள். அதற்கான மாதிரிகளையும் புகைப்படங்களில் காட்டுகிறார்கள். சிலர் கட்டப்பட்டு வரும் வீடுகளின் ப்ளு பிரிண்டை சுவற்றில் பெரிதுப் படுத்தி மாட்டியிருந்தார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே வீடு ஒன்றுக்கு 800 சதுர அடி என்று ஆரம்பிக்கின்றன. மற்றவை அனைத்தும் வீடு ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சதுர அடிகளில் உருவாகுபவை. 2க்கும் மேற்பட்ட படுக்கையறைகளும், ஒவ்வொரு படுக்கையறையிலும் ‘அட்டாச்டு’ பாத்ரூமும் அனைத்து வீடுகளிலும் உண்டு.
வீடு என்றால் பாத்ரூம் இருக்கிறதா என்ற சம்பிரதாய தேவைகளைத் தாண்டி நாம் எப்போதும் சிந்திப்பதில்லை. கொஞ்சம் வசதியிருந்தால் பூஜை அறை…இங்கோ சரளமாக லிவிங் ரூம் டெகரேஷன் என்ன ஸ்டைல், டைனிங் ஹாலின் தீம் என்ன, டிராயிங் ரூமின் ஹார்மனி வண்ணம் என்ன என்று என்னவெல்லாமோ போட்டுத் தாக்குகிறார்கள். அவர்களது மொழி நமக்கு புரிந்திருக்க வேண்டுமென்றால் நாமும் அத்தகைய வீடு ஒன்றில் வாழ்ந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘இல்லிட்ரேட்’தான்.
இந்தக் கண்காட்சி மேட்டுக்குடியினருக்காக என்பதால் எந்த உள்நாட்டு – வெளி நாட்டு வங்கியும் அங்கு வீட்டுக் கடன் தருவதாக கடை விரிக்கவில்லை. சேர்த்த பணத்தை செலவழிக்க சிரமப்படுபவர்களுக்கு கடன், இன்ஸ்டால்மென்ட், வங்கி, சுலப தவணை, குறைந்த வட்டி என்று எதுவுமே தேவையில்லை. கட்டப்பட்டு வரும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் ‘தபோவனம்’, ‘ஆஸ்ரமம்…’ என்று பாரத பண்பாட்டின் அடியொற்றி பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். ஐரோப்பிய மாடல் வீடுகளென்றாலும் பெயரென்னவோ சுதேசிதான். என்ன ஒரு நாட்டுப்பற்று!
சென்னையில் முதல் முறையாக கட்டப்பட்டு வரும் 5 நட்சத்திர வீடுகள் குறித்த அரங்கு நடுநாயகமாக இருந்தது. சென்னை கடற்கரைச் சாலையில், தாஜ் ஃபிஷர்மென் கோவ் கடந்து, 2 கி.மீ. தூரம் சென்றால், 3 ஏக்கர் பரப்பளவில் 4500 முதல் 5500 சதுர அடி வரையிலான 22 வீடுகள் உருவாகி வருகிறதாம். வீட்டுக்குள்ளேயே தரையில் ‘பா’ வடிவில் நீரும் அதனுள் தங்க மீன்களும் இருக்குமென்றும், இதன் மீது கண்ணாடி தரை பதிக்கப்பட்டிருக்குமென்றும் சொன்னார்கள். இதன் மாதிரியை தங்கள் அரங்கிலேயே உருவாக்கி காண்பிக்கவும் இவர்கள் தவறவில்லை. நீச்சல் குளத்தில் நீந்தியபடி அல்லது மூழ்கியபடி இங்கு உடற்பயிற்சி செய்ய முடியும். ‘இன்ஃப்ளுயன்ஸ்’ சார்பில் இந்த ஐந்து நட்சத்திர வீடுகள் உருவாகின்றன. ஒரு வீட்டின் மதிப்பு ரூபாய் 10 கோடி.
கால்கழுவுவதற்கு குட்டி வாளியை எடுத்துக் கொண்டு அடி பம்பிற்கு சென்று வரிசையில் நின்று வாழ்க்கையை ஓட்டும் நாகரிகமற்ற பரதேசிகளின் நாட்டில் என்ன ஒரு கற்பனை! இந்தக் கற்பனை வளம் உள்ளதால்தானே அம்பானியால் ‘ஆன்டிலியா‘ மாளிகையை ரசித்து ரசித்து கட்ட முடிந்திருக்கிறது? யார் சொன்னார்கள் இந்தியர்களுக்கு ரசனைக் குறைவென்று?
அனைத்து அரங்குகளிலும் வாடிக்கையாளருடன் அமர்ந்து பேசுவதற்கான குஷன் சோஃபா செட் போட்டிருக்கிறார்கள். சிலர் கண்ணாடியாலான மேஜை நாற்காலிகளை நிரப்பியிருக்கிறார்கள். எந்தக் கண்ணாடி மேஜையிலும் கைவிரல் கூட பதியாத அளவுக்கு வேலைப் பார்க்கிறார்கள்.
அடுக்குமாடி வீடுகளோ அல்லது வில்லாவோ அனைத்துமே ‘ஃபர்னிஷிட் ஹவுஸ்’. கதவுகள் ஐரோப்பிய மரங்களாலும், சோஃபாக்கள் ஐப்பான் தயாரிப்பாகவும், கட்டில்கள் ஜெர்மன் உருவாக்கமாகவும், மார்பிள் சுவிட்சர்லாந்து மேக்கிங்காகவும் இருக்கின்றன. இந்த அலங்காரங்களுக்கு ஏற்ற தகுதியை இந்தியப் பொருட்கள் இன்னும் பெறவில்லை என்பது ஒரு பிரச்சினையல்ல. மேலும் இந்தப் பொருட்களை அழகாக பாரமரிக்கும் பணியை செய்வதென்னவோ சென்னை சேரி மனிதர்கள்தான். அதைச் செய்வதற்கும் வெளிநாட்டிலிருந்து வெள்ளையான பணியாட்களை நம்மவர்கள் கொண்டு வரமாட்டார்களா என்ன?
இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் சென்னை கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, பள்ளிக்கரணை, ஓரகடம், குரோம்பேட்டை, நல்லம்பாக்கம், மணப்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், ஈகாட்டூர், கொட்டிவாக்கம், காலவாக்கம்… ஆகிய பகுதிகளிலேயே அமைந்துள்ளன. ஏரிக்கரையில் அல்லது பசுமை சூழவே கட்டப்பட்டு வருகின்றன. மீனவ மக்களின் கருவாட்டு குப்பையால் ‘அழகற்று’ கிடக்கும் கிழக்கு கடற்கரை இனி இந்தத் தங்க மாளிகைகளால் அழகு பெறும். குப்பங்களின் அசுத்தத்தை இனி இங்கு காண இயலாது.
1189 சதுர கி.மீ. தூரமுள்ள சென்னையில், ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் கோடீஸ்வரர்களுக்காக, பெரும் பகுதி நிலப்பரப்பில் உருவாகி வரும் குடியிருப்புகள் இவை. இந்த இடங்கள்தான் நாளை ‘ஒளிரும் சென்னை’யின் அடையாளமாகப் போகிறது.
2007ம் ஆண்டு வெளியான இந்திய கோடீஸ்வரர்களின் புள்ளிவிவரத்தை சொல்லி புளாங்கிதம் அடைந்த ஐபால் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி.யான சக்திக்கு 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விவரம் தெரியாதா என்ன?
தெரியும். அவருக்கு மட்டுமல்ல… இந்த இடங்களில் வீடுகளை வாங்கி குடியிருக்கப் போகிறார்களே ‘மில்லியனர்கள்’… அவர்களுக்கும் இந்த விவரம் நன்றாகவே தெரியும்.
சென்னைப் பெருநகரில் குடியிருக்கும் 3 சதவிகிதத்தினரின் குடும்ப வருமானம் மாதம் ரூபாய் 250க்கு கீழேதான் என்பதையும், 9 சதவிகித குடும்பங்களின் மாத வருமானம் ரூபாய் 501க்கு கீழ் என்பதையும், 38 சதவிகிதத்தினரின் மாத வருமானம் ரூபாய் 1101 கீழே என்பதையும் நன்றாகவே அறிவார்கள். 72 சதவிகித குடும்பங்கள் நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் குடும்பங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தெரிய வந்த உண்மைகள்.
அதுமட்டுமல்ல, சென்னை நகரில் 9.62 லட்சம் குடியிருப்புகளும், பெருநகரங்களில் 16 – 19 இலட்சம் குடியிருப்புகளும் இருப்பதாக அதே கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இதில் மாநகரப் பகுதியில் மட்டும் 2 இலட்சத்து 5 ஆயிரத்து, 20 குடியிருப்புகள் அறைகள் அற்ற ‘வீடு’களாகவும், ஓர் அரை குடியிருப்புகள் 3 இலட்சத்து 18 ஆயிரத்து, 325 என்றும், இரு அறை குடியிருப்புகள், 2 இலட்சத்து 51 ஆயிரத்து, 659 என்றும்…
29.2 சதவிகித குடியிருப்புகள் மட்டும்தான் தனிப்பட்ட கழிப்பிட வசதிகளை கொண்டுள்ளன. 48.3 சதவிகித குடியிருப்புகள் பொதுக் கழிப்பிடங்களை கொண்டுள்ளன. 22.5 சதவிகிதத்தினர் கட்டணக் கழிப்பிடம் அல்லது திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர் என்றும்…
பொதுக் கழிப்பிட ஏற்பாடு 1086 பேருக்கு ஒரு மலம் கழிக்கும் இருக்கை எனவும், 2817 பேருக்கு ஒரு சிறுநீர் கழிக்கும் இருக்கை எனவும் இருப்பதாக ‘கணக்கெடுப்பு’ சொல்கிறது.
சென்னை பெருநகரில் உள்ள 1731 குடிசைப் பகுதிகளில், 1473 பகுதிகள் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாகவும், 242 பகுதிகள் ஆட்சேபகரமான இடங்களில் அமைந்துள்ளவையாகவும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி நீர்வழி துறையோரங்களில், சாலையோரங்களில், அமைந்துள்ளன. இந்த ஆட்சேபகரமான குடிசைப் பகுதிகளில் 71 ஆயிரத்து 840 குடியிருப்புகளில், 3 இலட்சத்து 92 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆற்றுடன் இணைப்பு கால்வாய் ஓரங்களில் 5288, ஆற்றோரங்களில் 30,922, சாலையோரங்களில் 22,769, கடற்கரைப் பகுதிகளில் 16,519 என குடியிருப்புகள் ஆட்சேபகர பகுதிகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை நகர மக்கள் தொகையில் குடிசை பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம். இவர்களின் வசிப்பிடத்தின் மொத்தம், சென்னை நகர பரப்பளவில் சுமார் 6 சதவிகிதம் மட்டுமே. குடிசைப் பகுதிகளில் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் சராசரியாக 7 பேர் தங்குகின்றனர். இங்கு வாழும் உழைக்கும் மக்களில் 84.12 சதவிகிதத்தினர் கட்டுமானம், ஆட்டோ, வீட்டு வேலை, சிறு வியாபாரம், இதர சிறு வேலைகள், முறைசாரா தொழில்களில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். இவர்களில் 78.47 சதவிகிதத்தினர் தங்கள் வேலை இடங்களுக்கு நடந்தே செல்கின்றனர். 45.09 சதவிகித குடும்பங்கள் குடிசைப் பகுதிகளிலும், வாடகை குடித்தனங்கள். முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற மேட்டுக்குடி சென்னைக்கு தேவையான பணிகளை இந்த சேரி மக்கள்தான் செய்கிறார்கள். இவர்களின்றி எழில்மிகு சென்னை சாத்தியமில்லை.
சென்னையின் சேரிப் பகுதி
இவையெல்லாம் 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அறிய வந்தவை. இன்று இந்த எண்ணிக்கையும், சதவிகிதமும் அதிகரித்திருக்கும். இது கண்டிப்பாக சென்னையில் முதன்முதலில் ‘லக்சரி ஹோம் 2011’ கண்காட்சி நடத்தியவர்களுக்கும் தெரியும். ஆயிரம் சதுர அடி முதல் 5500 சதுர அடி வரை வீடு வாங்கித் தங்கப் போகிறவர்களுக்கும் தெரியும். ஏனெனில் ஏழைகளிடமிருந்து சுரண்டப்பட்ட பணத்திலிருந்தும், அவர்களது இருப்பிடங்களை பிடுங்கியும்தான் ரூபாய் 75 இலட்சத்தில் ஆரம்பித்து ரூபாய் 10 கோடி வரையிலான இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
மறுகாலனியாதிக்கத்தின் விளைவு இது. உலகமயம், தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள், மேலும் ஏழைகளாகவும் மாறி வருவது அதிகரித்து வருகிறது. அதனால்தான் ”இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம்.இது ஆண்டுதோறும் 20 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்…” என வெட்கமின்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் சொல்ல முடிகிறது. இந்த இருபது சதத்திற்கு போட்டியாக விவசாயிகளும், சிறு தொழில்களும், நெசவும் போண்டியாகும் கணக்கு அதிகரிப்பது ஏன்? குப்பன், சுப்பனிமிடமிருந்து எடுத்துத்தான் குபேரர்கள் உருவாக முடியும். குபேரபுரியும் எழ முடியும்.
அன்று ‘மேல்’ சாதியினர் ‘சுத்தமாக’ வாழ அக்ரஹாரமும், ஊரும் இணைந்து சேரிகளை ஒதுக்குப்புறமாக வைத்தன. இன்று கோடீஸ்வரர்கள் ‘சத்தமின்றி நிம்மதியாக’ வாழ குடியிருப்புகள் உருவாகின்றன. உழைக்கும் மக்கள் வசிக்கும் சேரிப் பகுதிகள் இதற்காகவே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை நகர நிலப்பரப்பில் வெறும் 6 சதவிகித இடத்தில் மட்டுமே சென்னை நகர மக்கள் தொகையில் 40 சதவிகிதத்தினர் வசிக்கிறார்கள். ஆனால், சென்னை நகர மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் வசிக்க பல சதவிகித நிலப்பரப்புகள் கையகப்படுத்தப்படுகின்றன.
வேலைக்கு சென்றால் சிறுநீர் கழிக்கக் கூட இடமில்லாமல் அலையும் மக்கள் வாழும் நாட்டில் பொதுக்கழிப்பிடங்கள அதிகம் உருவாகவில்லை. ஆனால் மேன்மக்கள் சாலை நெரிசலில் சிக்கிவிடக்கூடாது என்று சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 1,300 கோடி ரூபாயில் உயர் விரைவு பறக்கும் சாலை; கடற்கரையோரம் ஆயிரம் கோடி ரூபாயில் அதி உயர் விரைவு சாலை; அடையாறு ஆறு பக்கிங்காம் கால்வாய்; மாம்பலம் கால்வாய்; கூவம் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் 3 ஆயிரம் கோடி ரூபாயில் ஆற்றோர வட்டச் சாலைகள்; பறக்கும் ரயில்; மெட்ரோ ரயில்; சாலைகள் விரிவாக்கம்; கூவம் நதியை அழகுபடுத்தும் திட்டம் எனப் பல ஆயிரம் கோடிகளில் சென்னையானது ‘சிங்காரச் சென்னை’யாக மாற்றப்பட்டு வருகிறது.
‘வளர்ச்சி’ப் பணிகளுக்காக இடிக்கப்படும் சேரிகள்
இந்த வளர்ச்சிக்கு இடையூறாக, பல ஆண்டுகளாக – பல தலைமுறைகளாக – இப்பகுதிகளில் வாழ்ந்துவரும் அடித்தட்டு உழைக்கும் மக்களை விதிமுறைகளுக்கு மீறி குடியிருப்பதாகச் சொல்லி அரசாங்கம் கட்டாயமாக வெளியேற்றி, குன்றத்தூர் – திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலையில், குன்றத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் நல்லூர்… பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் கண்ணகி நகர்… பெருங்களத்தூர் அருகே எருமையூர் கூட்டு ரோடு செல்லும் வழியில் தாம்பரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் கன்னடபாளையம்… என மனித நடமாட்டம் இல்லாத புறநகர் பகுதிகளில் குடியமர்த்தி வருகிறது.
ஆனால், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் ஒரு நட்சத்திர விடுதியை குறித்தோ அல்லது சென்னை தியாகராய நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி, புறம்போக்கு நிலத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டிருக்கும் துணிக்கடைகள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்களை குறித்தோ அரசு கண்டுக் கொள்ளவேயில்லை. இத்தனைக்கும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் இந்த வணிக வளாகங்களை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது!
அதேபோல் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று சொல்லி அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆற்று கரைகளில் வசித்து வந்த மக்களை வெளியேற்றிய அரசாங்கம், சென்னையை விட்டு 40 கிலோ மீட்டர் தூரத்தில், இன்னொரு நீர் பிடிப்பு நிலத்தில்தான் அம்மக்களை குடியமர்த்தியுள்ளது.
வீடு என்பதற்கு இந்து மதத்தில் ‘வீடுபேறு’ என்ற பொருள் உண்டு. அதாவது சொர்க்கம் புகுதல். இதையே இன்னொரு பொருளிலும் புரிந்துக் கொள்ளலாம். அது மரணித்தல் அல்லது அழித்தல்.
ஆம், கோடீஸ்வரர்கள் சொர்க்கத்தில் வசிக்க, அடித்தட்டு உழைக்கும் மக்கள் மரணிக்கிறார்கள். ஏனெனில் இருவருமே வசிப்பது ‘வீடு’களில்…
ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி!
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மீது விழுந்த இடி!
வீரப்பெண்மணி தேவி வாழ்க!
_____________________________________
கூலி உழைப்பு மூலம் லாபத்தை குவிப்பது என்ற முதலாளித்துவ விதியின் படி குறைந்த கூலியை நோக்கி மூலதனம் ஓடுகிறது. அந்த வகையில் குறைந்த கூலியின் வடிங்களில் ஒன்றாக ஆண்,பெண் இடையேயான வேறுபாட்டைக் கண்டு பெண்களைப் பயன்படுத்துகிறது. ஆம், ஆணாதிக்க சமுதாயத்தின் அடிமை நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள் குறைந்த கூலியின் மூலம் மூலதனத்தைக் குவிக்கப் பயன்படும் கருவியாக உள்ளனர். இதுமட்டுமல்ல, பாலியல் ரீதியாகவும் ஆணாதிக்கம் என்ற வகையிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதும் நடக்கின்றன. இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் முதலாளித்துவ நிறுவனங்களில் பெண்கள் மீதான அடக்குமுறையாக வெளிப்படுகிறது.
ஒசூர் பிரிமியர் மில்லில் இளம் பெண் தொழிலாளர்கள் சுமங்கலித்திட்டம் என்ற பெயரில் கொத்தடிமையாக நடத்தப்பட்டு வதைக்கப்படுவது முதல் பல இடங்களில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் வெளிப்படையாக நடந்து வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகள் பெண்கள் மீது திணிக்கப்படுவதற்கும் பெண்கள் ஆண்களைவிட அதிகமாக சுரண்டப்படுவதற்கும் மேலும் சில காரணங்கள் உள்ளன. அதாவது, “பெண் என்றால் போராடமாட்டாள், பெண் என்றால் அடிமை, பெண்கள் எப்போதும் ஒற்றுமையை விரும்பமாட்டார்கள், சங்கம் சேரமாட்டார்கள், போராட்டம் என்றால் ஒதுங்கிக் கொள்வார்கள் காரணம் அவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறைக் கொண்டவர்கள்” என்றெல்லாம் முதலாளித்துவம் பெண்களுக்கு எதிராக கருத்துக்களை உருவாக்கி அந்தக் கோணத்திலேயே நடத்தியும் வருகிறது.
பெண்கள் குறித்து முதலாளித்துவம் உருவாக்கியுள்ள இந்த கருத்தாடல்கள், ஆணாதிக்கக் கருத்துக்கள் எல்லாவற்றையும் பொய் என்றும், பெண்கள் மீது திணித்து வரும் முதலாளித்துவ கொடிய அடக்குமுறைகள் அடித்து நொறுக்கப்படவேண்டியவை மட்டுமல்ல, அது நடைமுறையில் சாத்தியமானது என்றும் தனது நடைமுறை மூலம் நிரூபித்துள்ளார், ஒசூரை சேர்ந்த வீரப் பெண்மணி தேவி!
_____________________________________________
ஓசூர் சிப்காட்-2ல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோடிக்கணக்கில் லாபமீட்டும் இவ்வாலையில் பணிபுரியும் நிரந்திரத் தொழிலாளர்களோ பெண்கள் உள்ளிட்டு சுமார் 25 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி ஆணைப் பெற்று அதன்படி தங்களது பயிற்சிக்காலம் இரண்டாண்டுகளுக்கும் மேல் முடித்தும் நிரந்திரம் செய்யப்படாததால், இனிமேலும், அற்பக்கூலியுடன் அடக்குமுறைகளோடு காலம் தள்ளமுடியாத நிலையில் கம்பெனியை விட்டு வெளியேறியுள்ளனர். இது மாதிரியான நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் இழி சொற்களையும் சகித்துக் கொண்டு அங்கு வேலை செய்யும் பெண்களில் ஒருவர் தான் தேவி!
விவசாய பெண் தேவி, தொழிலாளியான கதை!
அசோக் லேலாண்டில் வேலை செய்யும் தொழிலாளியான செல்வராஜ் , விருத்தாச்சலத்தை பூர்வீகமாகக் கொண்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக அசோக் லேலாண்டில் வேலை செய்து வருகிறார். விவசாயத்தின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால், அவர் ஒசூரில் தொழிலாளி ஆன பின்னும், சிறிது நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்துள்ளார். சில கறவை மாடுகள் வாங்கி பராமரித்து வந்தார். இவருக்கு மனைவியாக அமைந்தவர்தான் தேவி. கணவரின் விவசாய வேலைக்கு உதவியாக இருந்து அதனை பராமரித்து வந்தார்.
விவசாயத்தின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தாலும், மறுகாலனியாக்கத்தின் மூலமாக விவசாயம் செய்யமுடியாத சூழல் அவரையும் நிர்பந்தித்துள்ளது. பலமுறை பயிர் செய்தும் இவரால் வெற்றிகரமாக செய்ய இயலவில்லை. எதையாவது விவசாயத்தில் சாதிக்க முடியும் என்று கருதியவர், தான் நினைத்த வகையில் செய்ய முடியாத காரணத்தினால் அதனைக் கைவிட நேர்ந்தது. விவசாயத்தை கைவிட்டாலும் உழைக்காமல் இருப்பதை வழக்கமாக கொண்டிராத தேவி, வேலைக்கு செல்ல முற்பட்டார். பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்த தேவி, ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். விவசாயத்தில் அவர் காட்டிய அதே ஈடுபாட்டை முதலாளியின் கீழ் வேலை செய்யும் இந்த ஆலையிலும் காட்டினார். எல்லோரும் மனிதர்கள் என்று கருதும் இயல்பான விவசாய மனநிலையும், லாப நோக்கம் பார்க்காத அர்ப்பணிப்பான உழைப்பையும் முதலாளிக்குக் காட்டினார் தேவி! காசு தான் முதலாளித்துவத்தின் அடிப்படை என்பதையும், அதற்காக எப்படிப்பட்ட சுரண்டலையும் கொடிய அடக்குமுறையும் செய்வதற்கு அது தயாங்காது என்பதையும் புரிந்து கொள்ளும் மனநிலை அன்று தேவிக்கு இல்லை. ஆனால், முதலாளித்துவத்தின் விதி அவருக்கு புரியவைக்காமல் போகாது!
தொழிலாளியான தேவி வர்க்க உணர்வு பெற்ற கதை!
ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் முதலாளி முத்துசாமி. இவர் தனது மகளை சென்னையில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த பின், இவரும் மகளுடன் சென்று தங்கிவிட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை, அங்கே வேலை செய்து வந்த உற்பத்தி பிரிவு மேலாளர் பெரியசாமி என்பவனிடம் ஒப்படைத்துச் சென்றார். முத்துசாமி, பெரியசாமியிடம் ஆலை நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. 44 வயது அடைந்த அரைக்கிழடு பெரியசாமி, ஒரு வக்கிரப் புத்திக்காரன். தொழிலாளர்களை மனிதர்களாகக் கருதுவதைவிட, தொழிலாளர்களாகக் கருதுவதைவிட அடிமைகளாகவே கருதி நடத்துவதே அவனது இயல்பு.
இதனால், தொழிலாளர்களை எப்பொழுதும் ஒருமையில் தான் விளிப்பான். பெண்கள் என்பதற்காகக் கூட மரியாதையாகக் கூட நடத்தமாட்டான். “அங்காடித்தெரு” படத்தில் வரும் அண்ணாச்சியின் கைக்கூலி மேனஜரின் மறுவடிவம் தான் இந்த பெரியசாமி! ஆலையின் குடியிருப்பில் தங்கியுள்ள பெரியசாமி, முதலாளித்துவ நிர்வாகி என்பதைவிட ஒரு நிலப்பிரபுத்துவ ஆண்டை என்றால் அது சிறிதும் தவறல்ல. திருமணமாகி இரண்டு பிள்ளைகளை பெற்றுப் போட்ட பெரியசாமி, காமவெறியன் போல பெண்களிடம் எப்போதும் தகாதவார்த்தைகளை பேசுவதையே பழக்கமாகக் கொண்டவன்.
சட்டப்படி ஒரு தொழிலாளி 480 நாட்கள் நிறைவு செய்தால் அவரை நிரந்தரத் தொழிலாளியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கம்பெனியில் பணியில் அமர்த்தப்பட்ட மறுநாள் முதலாகவே, அவருக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., போன்ற அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும். ஆனால், இதனை முதலாளிகள் யாரும் ஒரு மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை. அவரவருக்கு ஒரு விதியை வைத்துள்ளனர். இதனையும் முறையாகக் கையாள்வதில்லை.
ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் முதலாளியும் இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டாண்டுகள் பயிற்சி காலம், அதற்குபிறகு நிரந்தரம் செய்வதாக வாயளவில் சொல்கிறது, இந்த ஆலை நிர்வாகம். இரண்டாண்டுகள் முடிந்த பின்னர், அடுத்த மறுநாளிலிருந்தே அந்த தொழிலாளியிடமான பெரியசாமியின் அணுகுமுறை மாறிவிடும். முற்றிலுமான ஒரு மிருகமாக, நடந்து கொள்வான் பெரியசாமி. அசிங்கமான வார்த்தைகள், அதிக அளவில் ஒடுக்குமுறைகளை திணிக்கத் தொடங்குவான். ஒரு தொழிலாளி எவ்வளவு உண்மையாக வேலை செய்திருந்தாலும் அது பற்றி அவனுக்குக் கவலையில்லை, காரணம் கூலி அடிமைகள் எப்போதும் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள் என்ற திமிர் அவனுக்கு.
இதனால், பலரும் இரண்டாண்டுகள் பயிற்சி காலம் முடிந்த பின்னர், இந்த அடக்குமுறைகளை சகித்துக் கொள்ள முடியாமல், ஏன் வம்பு என்று கருதிக் கொண்டு தங்களது உரிமைக்காக போராடாமல் வேலையை விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். இதனை எதிர்ப்பார்த்திருக்கும் பெரியசாமி, அந்த இடத்திற்கு தேவையான அளவுக்கு புதிதாக ஆள் எடுப்பு செய்து கொள்வான். இது மட்டுமல்ல, இரண்டாண்டுகள் பயிற்சி காலம் முழுவதற்கும் இவர்களது கல்விச் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொள்வான். இடையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்குக் கேட்டாலும் தரமாட்டான். வேறு நல்ல ஊதியத்தில் எங்காவது வேலை கிடைத்தாலும், சான்றிதழ் கொடுக்கமாட்டான். கல்விச் சான்றிதழ் கொடுக்குமாறு கேட்டாலும், “நான் உனக்கு நிரந்தர வேலை கொடுக்கப் போறேன், பிறகு எதற்கு சர்ட்டிபிக்கேட்” என்று கூறுவான்.
இவ்வளவு ஒடுக்குமுறைகளை செய்யும் பெரியசாமி, தொழிலாளிக்கு கூலியை மட்டும் சராசரி அளவிற்கு கொடுத்துவிடுவானா என்ன.? கூலியை குறைத்து கொடுப்பதற்குத்தான் இவ்வளவு ஒடுக்குமுறைகளை செய்து வருகிறான். இந்த இரண்டாண்டுகள் தொழிலாளர்களுக்கு இவன் கொடுக்கும் கூலி ரூ.3,000க்கும் குறைவான தொகைதான்!
வேலைக்கு சேர்ந்த காலத்தில் உணராத தேவி, கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலம் முடிந்த பின், தான் நேர்மையாக வேலை செய்துள்ளதால், வேலை நிரந்தரம் செய்யப்படுவோம் என்று நினைத்திருந்தார். ஆனால், இரண்டாண்டுகள் பயிற்சி காலம் முடிந்த மறுநாள், ஆலை நிர்வாகம், உனது வேலை நிலைமை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை, ஆகையால், ஆறுமாதங்கள் பயிற்சிகாலம் நீட்டிக்கப்பட்டதாக தெரிவித்தது.
இதனை அரைமனதாக ஏற்றுக் கொண்ட தேவி ஆலையில் அந்த ஆறுமாதங்களில் அதிகமான ஒடுக்குமுறைகள் சந்தித்து வந்தார். இந்த ஆறுமாதங்கள் நீட்டிக்கப்பட்ட பயிற்சி காலம் முடிந்த பின், வேலை நிரந்தரம் செய்ய சொல்லி கேட்ட தேவிக்கு மீண்டும் ஒரு முறை ஆறுமாதங்கள் பயிற்சி காலம் நீட்டிப்பு என்ற அறிவிப்பு மட்டும்தான் கிடைத்தது. மூன்றாவது முறை நீட்டிக்கமாட்டார்கள், பணி நிரந்தரம் செய்துவிடுவார்கள் என்று நம்பிய தேவி, அற்பக் கூலியான ரூ.3,500 ஐப் பெற்றுக் கொண்டு பொறுமையாக நிர்வாகத்தின் இழிச்சொற்களையும் கால நீட்டிப்பையும் தாங்கிக் கொண்டு வேலை செய்தார்.
கடந்த 5-.7.-2011 அன்று நீட்டிக்கப்பட்ட பயிற்சி காலம் முடிந்த தேவிக்கு பணிநிரந்தர ஆணை கிடைக்கும் என நம்பி இருந்தார். ஆனால், அன்று ஆலையில் இவர் எதிர்பார்க்காத வகையில் மூன்றாவது முறையாக ஆறுமாதங்கள் பயிற்சி காலம் நீட்டிப்பு என்று கூறி, இதனை ஏற்றுக் கொண்டு கையெழுத்து இடுமாறு நிர்பந்தித்தான் பெரியசாமி. அதிர்ச்சியடைந்த தேவி, தனது கணவரின் ஒப்புதல் பெறாமல், கையெழுத்து போடமுடியாது என்று மறுத்தார். தனக்கு அடிமையாக வேலை செய்து வந்த தொழிலாளி அதுவும் ஒரு பெண் தனது உத்தரவை மீறி இவ்வாறு பேசுவதை எதிர்ப்பார்த்திராத பெரியசாமிக்கு, தேவியின் இந்த பதில் எரிச்சலை ஏற்படுத்தியது. மாடு போல உழைக்கும் தேவியை மிரட்டி பணியவைத்துவிடலாம் என்று கருதினான். இதனால், தேவியிடம் தகாத முறையில் பேசத் தொடங்கினான்.
“உன் புருசன் தான் உனக்கு இண்டர்வியூ வைச்சானா? உன் புருசன் தான் உன்னை வேலைக்கு வைச்சானா? உன் புருசன் தான் உனக்கு சம்பளம் தர்றானா?” என்று கேவலமாக பேசியுள்ளான். கூலிக்கு வேலை செய்கிறோம் என்பதற்காக, தனது கணவரை இழுத்து பேசுவதை சகித்துக் கொள்ள முடியாத தேவி, தனக்கு உரிய பி.எஃப்., எஃப்.பி.எஸ். போன்ற கணக்குகளை செட்டில் செய்து கொடுக்குமாறும், வேலையைவிட்டு செல்வதாகவும் தேவி கூறியுள்ளார். “பணம் தாண்டி உனக்கு வேணும், வா, என்னோட வந்து படு எவ்வளவு வேணாலும் பணம் தர்றேன்..” என்றெல்லாம் ஆபாசமாக பேசியுள்ளான். கேவலம் பணத்திற்காக இவ்வளவு கேவலமான இழி வார்த்தைகளை சகித்துக் கொள்ள முடியாத தேவி நிலை குலைந்து போயுள்ளார்.
ஆணுக்குப் பின்னால் பெண் என்பதல்ல.. தேவிக்குப் பின்னால் ஒரு ஆண்!
மனநிலை கடுமையாக பாதித்த நிலையில் தனது கணவரிடம் நடந்ததையெல்லாம் கூறி தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி புழுங்கியுள்ளார். தனது மணைவிக்கு நேர்ந்த இந்த அவமானத்தைக் கேட்டு செல்வராஜும் ஆற்றாமைக்குள்ளாகியுள்ளார். இந்த ஆபாச வார்த்தைகளை சகித்துக் கொண்டு வேலைக்கு சென்றால் என்ன ஆகும்? வாய்க்கொழுப்பாக பேசியவன், நாளை கையைப்பிடுத்தும் இழுக்கமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்த கொடுமையை இனியும் பொறுப்பதா என்றெல்லாம் கொதித்துள்ளார்.
இவ்வளவு கேட்டபின் செல்வராஜ், “சாராசரி” மனிதரைப் போல வருத்தப்பட்டு ஒதுங்கிவிடவில்லை. மீசை முறுக்கிய “ஆண்கள்” பலர் வீரம் பேசி ஒதுங்கி இருப்பது போல இவர் ஒதுங்கி இருக்கவில்லை. ஆண்மை என்றால், பெண்களை அடக்கியாள்வது என்பதல்ல, பெண்மைக்கு ஒரு அநீதி என்றால் அதற்கு எதிராக போராடுவது என்று உணர்ந்துள்ளார். தேவிக்கு நடந்த அவமானத்தை துடைக்கவில்லை என்றால், பெரியசாமியின் வக்கிர வார்த்தைகளை உமிழும் ஆணாதிக்க வாயை மூடமுடியாது என்று முடிவுக்கு வந்துள்ளார்.
தேவி- செல்வராஜ்
கணவரிடம் ஒத்துழைப்பு கிடைத்த தேவி, தனது அவமானத்தை துடைக்க மறுநாள் 06.07.2011 ஆலைக்குச் சென்றுள்ளார். தேவியை ஆலைக்குள் பார்த்த பெரியசாமி, தனக்கு ஒரு விசுவாசமான அடிமை தொடரப்போகிறது என்ற சந்தோசத்தில் இருந்துள்ளான். முதலாளித்துவத்தின் இந்த வக்கிர புத்திக்கு தேவியிடமிருந்து கிடைத்ததோ, வேறு! தனக்கு பணிநிரந்தம் செய்ய கோரிய தேவியிடம், ஆறு மாதங்கள் பயிற்சி காலத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்து இடுமாறு கேட்க வேண்டிய பெரியசாமியோ, மேலும், ஆபாசமாக பேசத் தொடங்கினான். எப்படியும் பெரியசாமி நேற்று பேசியதற்கு வருத்தப்படுவதற்கு பதிலாக மேலும் மேலும் ஆபாசமாக பேசத் தொடங்கிய பின்னர், பேசிய வாய்கள் மூடுவதற்கு முன்பாக, பெரியசாமியின் முகத்தில் விழுந்தது, மிளகாய் பொடி! ஆபாச வார்த்தைகள் பேசிய பெரிய சாமியின் மூக்கிலும் வாயிலும் ஏறியது மிளகாய் பொடி.
தேவியின் உள்ளம் கொதிப்படைந்த அளவைவிட அதிகமாக, பெரியசாமியின் நுரையீரல் எரிச்சலடைந்தது. இறுமினான், ஊருக்கே கேட்கும் வகையில் இறுமினான், அந்த இறுமல் சத்தத்திலேயே முகத்திலும் வாயிலும் கன்னத்திலும் தேவியின் செருப்புகள் விளையாடின. கன்னம் வீங்க அலறினான். ஐயோ, ஐயோ என ஓலமிட்டான்! ஆலையின் சுவர்கள் எல்லாம் எதிரொலித்தன. பெரியசாமியின் வார்த்தைகள் செல்வராஜ், தேவியின் உள்ளங்களை எரித்ததோ, அதே அளவிற்கு தேவி வீசிய மிளகாய் பொடியும், செருப்படியும் பெரியசாமியை எரித்தது.
தொழிலாளர்கள் யாரும் நெருங்கவில்லை. அடிமைகள் எப்போதும் புரட்சியைப் பார்த்து திகைத்து நிற்பது போல, அதிர்ச்சி கலந்த சந்தோசத்தில் திக்கித்து நின்றனர். பெண் தொழிலாளர்கள் இது நாள் வரை அனுபவித்து வந்த அத்தனை துன்பங்களுக்கும், அத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் தனது செருப்பின் மூலம் பதிலடி கொடுத்தார் தேவி! புரட்சி என்பது ஒரு மாலை விருந்தோ, ஒரு அழகிய பூ வேலைப்பாடோ, ஒரு கவிதையைப் போன்றோ அவ்வளவு அழகானதல்ல. அது பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட வர்க்கம், தன்னை ஒடுக்கி வந்த வர்க்கத்தை தூக்கியேறியும் பலாத்கார நடவடிக்கை என்ற மாவோவின் சிந்தனைகள் உண்மை என்பதை தேவியின் இந்த நடவடிக்கைகள் நிரூபித்தன.
‘பெரியசாமி’ ஸ்டேசன்!
பெரியசாமியை அடித்த பின்னர், தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு ‘நீதி’ கிடைக்கும் என நம்பினார் தேவி. தேவி தான் ஏன் அடிக்க நேர்ந்தது என்றும், பெரியசாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் போலீசுக்கு புகார் கடிதம் கொடுத்தார். ஆனால், போலீசோ பெரியசாமியின் அண்ணன்கள் தான் தாங்கள் என்பதை தேவிக்கு உணர்த்தத் தொடங்கினர். தேவியின் புகார் கடித்தத்தை வாங்காமல், போனில் பெரியசாமி சொன்னதற்கு விசுவாசமாக செயல்படத் தொடங்கினர். வழக்கம் போல, ஆலையின் உள்ளே நுழைந்து முதலில் தேவியைக் கைது செய்தது போலீசு. தேவியின் புகார் மனுவை வாங்க முடியாது என நிராகரித்தது.
தேவியின் புகார் மனுதேவியின் புகார் மனு
தேவி மேலும் கொதிப்படைந்து தனக்கு நேர்ந்த அவமானத்தை போலீசிடம் தெரிவித்தார். “அவன் அப்படி பேசினா, நீ வந்து என்கிட்ட சொல்லவேண்டியதானே, சட்டத்தை நீயே கையில எடுத்துக்குவியா” என்று போலீசு கேட்கத்தொடங்கியது. பெரியசாமி பேசிய ஆபாச வார்த்தைகளைவிட போலீசின் இந்த வார்த்தைகள், அருவருப்பானதாகவும் ஆபாசமாகவும் தேவியின் காதில் ஒலிக்கத் தொடங்கியது.
இவர்கள் சொல்லும் சட்டப்படி பார்த்தால், ஒரு பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் விளித்தது, பாலியல் ரீதியான வார்த்தைகளால் துன்புறுத்தியது, படுக்கைக்கு அழைத்தது, தொழிலாளி என்ற முறையில் பணிநிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியது ஆகிய அநீதிகளுக்கு முதலில் பெரியசாமியைத் தான் தண்டித்திருக்க வேண்டும். இவர்கள் சொல்லும் ‘உத்தமர்’ காந்தி, “ஒரு பெண் தனக்கு ஆபத்து நேரும் போது, தனது நகங்களை ஆயுதமாகப் பயன்படுத்தினால் கூட குற்றமாகாது” என்றார். ஆனால், இந்த காந்தியின் தேசத்தில் பட்டபகலில் பலர் முன்னால் தினம் தினம் சொல்லொனா கொடுமைகளை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள். இதனை கேட்க துப்புக்கெட்ட காந்தியின் போலீசு, பாதிக்கப்பட்ட பெண்ணை கைது செய்து தங்களை ‘வீரர்’களாக காட்டிக் கொண்டது.
‘ஆபத் பாண்டவன், அனாத ரட்சகன்… ‘ பு.ஜ.தொ.மு.!
“எங்கு எப்போது அநீதி நடந்தாலும், அங்கு அப்போது நான் தோன்றுவேன்” என்று சனாதான தர்மத்தை மீறி செல்பவர்களை தண்டிக்க கண்ணன் சொன்னதாக கூறுகிறது பார்ப்பன கீதை! அந்த கண்ணனும் பாஞ்சாலியின் சேலையை உருவியவனின் கண்ணத்தில் அடிக்கவில்லை… சேலையைத்தான் நீட்டித்துக் கொண்டே சென்றான். காரணம், பாஞ்சாலி கண்ணனை அழைக்கவில்லையாம்! ஆனால், தொழிலாளர்கள் அழைத்தாலும், அழைக்கவில்லை என்றாலும், தொழிலாளர்களுக்கு ஒரு அநீதி என்றால், வர்க்க ஒற்றுமையை கட்டிக் காக்க அங்கே, பு.ஜ.தொ.மு. தோழர்கள் தோன்றுவார்கள்.
அசோக் லேலாண்டு-2வது பிரிவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சி.எல். தொழிலாளர்கள் ஆறுமாத காலத்திற்கு தற்காலிகமாக வேலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஆறுமாத காலம் முடிந்த பின், மீண்டும் புதிதாக சேர்க்கப்படுவர். இவர்களுக்கு எந்த வித உரிமையும் லேலாண்டு நிர்வாகம் வழங்கியதில்லை. தரமற்ற உணவு; கேண்டீனில் செக்யூரிட்டியை நிறுத்தி அவர்களை சிறைக் கைதிகளைப் போல கண்காணித்தது. அவமானம் பொறுக்காமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். வேலை நிறுத்தத்தில் இறங்கிய மறுநிமிடமே தாங்கள் விரட்டியடிக்கப்படுவோம் என்பதை அறிந்து போராட்டத்தில் இறங்கினர்.
பெரிய தொழிற்சங்கங்கள் எல்லாம் வாய் மூடி மௌனமாக இருந்த போது, புஜதொமு மட்டும் களமிறங்கி அவர்களுக்காக குரல் கொடுத்தது. அதன் பின் அவர்கள் வேலையிலிருந்து உடனடியாக விரட்டியடிக்கப்படாமல் நீடிக்கப்பட்டனர். உணவும் தரமானதாக மாறியது; கேண்டீனில் செக்யூரிட்டி வைத்து கண்காணிப்பதும் நின்றது. இது போன்று புஜதொமுவின் பல போராட்டங்களைக் கண்டு மனதிற்குள் வாழ்த்தியவர்கள் பலர். நேரடியாக உதவியவர்கள் சிலர். அந்த வகையில் லேலாண்டு தொழிலாளியான செல்வராஜ், வேறொரு அமைப்பு என்றாலும் புஜதொமு-வின் நியாயமான தன்முனைப்பான பங்களிப்புகளை பாராட்டி வந்துள்ளார்.
அவர் தனக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு பின், உடனடியாக அவருடைய நினைவுக்கு வந்தவர்கள்,’ஒளிவட்டம் போடப்பட்ட அவர்களது தலைவரல்ல, தொழிற்சங்க மாமேதையல்ல”. நக்சலைட் என்று பீதியூட்டப்படும் புஜதொமு மாவட்ட தலைவர் பரசுராமன் தான்! இ.பி.கோ.வில் இந்தத் தோழர்கள் கைது செய்யப்படாத சட்டங்கள் இல்லை என்றே சொல்லலாம்!
மதியம் 1.30 மணியளவில் பு.ஜ.தொ.முவின் தோழர்கள் ஹட்கோ போலீசு நிலையத்திற்கு சென்றனர். அங்கு நடந்த விசயங்களை விசாரித்தனர். தேவியின் புகார் மனுவை படித்துப் பார்த்தனர். “தேவியின் தைரியமான செயல்பாட்டைப் பாரட்டினர். உங்களால், ஒசூர் பெண்களுக்கு மரியாதை கிடைத்துள்ளது” என்று தெரிவித்தனர். “நீங்கள் தைரியமாக இருப்பீர்களா” என்று கேட்டதற்கு அவரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
போலீசு நிலையத்தில் வந்த பின்னர், திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டதாக தேவிக்கு சிந்தனைகள் மனதில் நிழலாடிக் கொண்டிருந்த பொழுது, புஜதொமு தோழர்களின் அணுகுமுறையும் வார்த்தைகளும், சோர்வுற்றிருந்த போராளிக்கு புது இரத்தம் பாய்ச்சுவதாக, சமூகத்தின் அவலநிலைமை மீது அதிருப்தி கொண்டிருந்த தேவிக்கு போராட புது வழி கிடைத்துள்ளதாக, போராட்டம் இத்துடன் முடிந்தது என்று கருதிய தேவிக்கு இனிதான் போராட்டமே தொடங்குகிறது என்பதை உணர்த்துவதாக… பு.ஜ.தொ.மு. தோழர்களின் வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டியது.
புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று அருகில் உள்ள காவலரிடம் கேட்ட போது, “இது தொடர்பாகத் தான் ஐயா உள்ளே பேசிக்கிட்டுருக்கார்” என்று தெரிவித்தார். அங்கு வந்த கியூ பிரிவு போலீசு, “என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதீங்க,? அந்த பெண்ணை கம்பெனியிலேயே போயி, ஸ்பாட்ல விசாரிச்சிட்டுதான், இந்தம்மாவை புடிச்சிட்டு வந்திருக்கிறோம். இந்த அம்மா இங்க வந்து முதல்ல புகார் கொடுக்கல்ல தெரியுமா?” என்று கோபமாக கூறினார். “பெரியசாமியை போயி பாருங்க, ஜி.ஹச்.ல இருக்காரு, அவரோட கன்னமெல்லாம் என்னமா செவந்து வீங்கி போயிருக்கு தெரியுமா?” என்று பெரியசாமியின் மீது கரிசனையுடன் பேசினார்.
“அதிகாரி தவறா பேசுறாருன்னா, உடனே செருப்பைக் கழற்றி அடித்துவிடுவதா?” என்று நியாயம் கேட்கத் தொடங்கினார். தேவியின் புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்கான காரணங்கள், அந்த கியூ பிரிவு போலீசு கேட்ட கேள்விகளில் அடங்கி இருப்பதை தோழர்கள் உணர்ந்து கொண்டனர். போலீசின் மூளை எல்லாம், பெரியசாமியைப் போலவே சிந்திக்கும் போது, தேவிக்கு எப்படி நீதி கிடைக்கும்? பெரியசாமியுடன் மட்டுமல்ல… தேவி இனி போலீசுடனும் போராடித்தான் ஆகவேண்டும்.
மற்றொரு போலீசு அங்கு வந்தார், அவருடன் “ஒரு புகார் மீது விசாரித்து வழக்கு பதிவு செய்ய எவ்வளவு நேரமாகும்? மனு கொடுத்து மூன்று மணி நேரமாகுது, ஏன் எப்.ஐ.ஆர் போடவில்லை? ஆள் பற்றாக்குறையா?” என்று கேட்டுக் கொண்டிருந்த போது, ஆய்வாளர், அறையிலிருந்து வெளியே வந்தார். செல்வராஜ் கையில் இருந்த புகார் மனுவை வாங்கினார், நீங்கள் யார் என்று தோழர்களைப் பார்த்து கேட்டார். தோழர்.பரசுராமன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தேவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். ஆனால், அதற்குள், அசோக் லேலாண்டு-2 சங்க செயலாளரை அழைத்து அவரிடம், தேவியின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், பிணையில் எடுப்பதற்கான வேலையை செய்யுமாறு தெரிவித்துள்ளார். செல்வராஜ், என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது, செல்வராஜிடம் தோழர்கள் பேசத் தொடங்கினர்.
“செல்வராஜ், இது உங்கள் மனைவி ஒருவரின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனை, தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு அநீதி என்றால், தேவி மாதிரிதான் பதிலடி கொடுக்க வேண்டும், இது மற்ற பெண்களுக்கு ஒரு நம்பிக்கையை விதைக்கும்” என்று உணர்த்தினர். தேவியை சிறையிலிருந்து மீட்பதற்காக பு.ஜ.தொ.மு தோழர்கள் உடனே அங்கு குவியத் தொடங்கினர். இதற்குள் அசோக் லேலாண்டு தொழிலாளர்களும் குவியத் தொடங்கினர். மாலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக புஜதொமு தலைவர் பரசுராமன் தலைமையில் நடத்தப்பட்டது. “காமவெறியனுக்கு செருப்படி கொடுத்த வீரப் பெண்மணி தேவி வாழ்க! முதலாளித்துவ பயங்கரவாதம் ஒழிக!! வீரப் பெண்மணி தேவியை விடுதலை செய்! காமவெறியன் பெரியசாமியைக் கைது செய்!!” என்று விண்ணதிரும்படி முழங்கினர்.
ஓட்டுக் கட்சி தலைவர்களுக்கு ஒரு சிறு தும்பல் என்றாலும் அதற்காக சாலை மறியல், கடையடைப்பு நடத்தும் குண்டர்களை போலீசு என்னைக்கும் தட்டிக் கேட்டது கிடையாது. அவர்களுடன் கொஞ்சிக் குலாவி வந்துள்ளது. ஆனால், முதலாளிகளின் அநீதிக்கு எதிராக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், கொதிப்படைந்து போனது. குறிப்பாக, போலீசு இந்த பிரச்சனையை அமுக்கிவிடலாம் என்று கருதி இருந்த போது, புஜதொமு தோழர்கள் தலையிட்டதால், ஆர்ப்பாட்டமாக வளர்ந்ததை அடுத்து எரிச்சலடைந்தது. உடனே உள்ளூர் செய்தியாளர்களை மிரட்டி, ஆர்ப்பாட்ட செய்தி பத்திரிக்கைகளில் வராத வகையில் தடுத்தது.
பரசுராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இருப்பதாக பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. தொழிலாளர்களுக்கு எந்த அநீதி நடந்தாலும், அடிமைகள் போல கேட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான், போலீசு நீதி! இந்த போலீசு நீதி கேள்விக்குள்ளான பின்னர், தோழர்.பரசுராமன் மற்றும் 20 பேர் அனுமதியின்றி சாலையை மறித்ததாக செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்து தோழர்.பரசுராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
பரசுராமன் கைது செய்யப்பட்டதால், தேவி பிரச்சனை திசைதிருப்பட்டுவிடும் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த போலீசுக்கும், பெரியசாமி போன்ற காமவெறி கும்பலுக்கும் இடியென இறங்கியது புஜதொமுவின் சுவரொட்டி! “ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் பெண் தொழிலாளி மீது பாலியல் துன்புறுத்தல்! காம வெறி பிடித்த அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி கொடுத்தார் பெண் தொழிலாளி!” என்ற தலைப்பில் சுவரொட்டிகள் பளிச்சிட்டது. ஒசூர் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. நாள் தோறும் முகம் தெரியாத பலரும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு புஜதொமுவுக்கு பாரட்டுக்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர், தோழர்.பரசுராமன், பிணையில் வெளியே வரும் போது, தொழிலாளர்கள், தோழர்கள் சிறை வாசலில் கூடி, மாலையணிவித்து, முழக்கமிட்டு வாழ்த்தினர். ஆனால், உண்மையில் இதில் பரசுராமன் பாராட்டுக்குரியவர் என்று பலரும் கருதுகின்றனர். அது புஜதொமுவை பொருத்தவரை பெரிய விசயமல்ல. உண்மையில் பாராட்டுகுரியவர் வீரப்பெண்மணி தேவிதான்! பரசுராமன் பிணையில் வெளிவந்ததற்காக பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
இருப்பினும், தேவி சிறையில் இருக்கும் போது, பரசுராமன் பிணையில் வந்ததில் மகிழ்ச்சியடைவதற்கு எதுவும் இல்லை. இந்த பிரச்சனை பரசுராமன் பிணையில் வெளியே வந்தவுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக, போலீசும் முதலாளிகளும் நினைக்கின்றனர். ஆனால், இந்த பிரச்சனை இப்போதுதான் தொடங்கியுள்ளது. தேவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓயாது! பெரியசாமி சிறைக்கு செல்லும் வரை இந்த போராட்டம் அடங்காது! நீதி கேட்டு கண்ணகி மதுரையை எரித்ததைவிட, தேவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடிக் கொண்டிருப்போம்!!
கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். வந்தே மாதரத்தைப் பாட மறுக்கும் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகள் என்று பெரும்பான்மை மக்கள் எளிதில் ஏற்கும் வண்ணம் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். ஆகையால் வந்தே மாதரத்தையும் நாட்டுப் பற்றையும் இணைத்து இந்து மதவெறியாளர்கள் போட்டிருக்கும் இந்தப் பொய் முடிச்சை நாம் அவிழ்க்க வேண்டும்.
நாட்டுப்பற்றுஜெபத்திலா, சிறையிலா?
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்களின் பெருமை, அவர்கள் ஒவ்வொரு நாளும் வந்தே மாதரத்தை உச்சசாடனம் செய்தார்களா என்பதில் இல்லை; தடியடி, சிறை, தூக்கு இன்னபிற கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தளராமல் போராடியதில்தான் இருக்கின்றது அவர்களது பெருமை. அதைத்தான் நாட்டுப்பற்று எனக்கூற முடியும். அதேசமயம் வெள்ளையர்கள் இருக்கும்வரை ‘ஷாகா’ சென்று கபடி விளையாடிய ஸ்வயம் சேவகக் குஞ்சுகள், ஒவ்வொரு நாளும் ‘வந்தே மாதரம்’ ‘பாரத் மாதாகி ஜெய்’ இரண்டையும் ஜெபம் செய்தார்களே ஒழிய, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை. சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?
பாரதமாதா கிடக்கட்டும், பாரதம் என்று இன்று அறியப்படும் இந்தியாவே உருவாயிராத காலம்தான் 19ஆம் நூற்றாண்டு. பல்வேறு வழிமுறைகளில் ஆட்சியதிகாரத்தை வெள்ளையர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் அதிகாரமிழந்தவர்கள் அவர்களை எதிர்ப்பதும், அதிகாரம் பெற்றவர்கள் ஆதரிப்பதும் இடத்திற்கிடம் மாறுபட்டது. உதாரணத்திற்கு மராத்திய சிவாஜிக்குப் பின், பேஷ்வாக்களின் ஆட்சியில் தக்காணம் முழுவதையும் பார்ப்பன ‘மேல்’சாதி நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் ஆண்டு அனுபவித்தனர். ஆங்கிலேயரின் வரவு பேஷ்வா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. தமது சமூக மேலாண்மை பறி போனதைக் கண்ட மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கிய சூழ்நிலை இதுதான். திலகர், கோகலே, சாவர்க்கர் போன்ற சித்பவனப் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாக உருவான விதமும் அப்படித்தான்.
ஆங்கிலப்பிதாவிடம்‘வங்கமாதா‘ காதல்!
மராத்திய நிலைமை இப்படியிருக்க வங்கத்தின் நிலைமை நேரெதிராக இருந்தது. மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முசுலீம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் – பார்ப்பன ‘மேல்’சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனர் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலை எழுதினர். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்ற தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.
”நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய்விட்டது; சமூகம் போய்விட்டது; மானம் போய்விட்டது; குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க் கொண்டிருக்கிறது…” இது ‘ஆனந்த மடம்’ நாவலில் வரும் ஒரு உரையாடல். இதில் யாருடைய மதம் – சமூகம் – மானம் – குலம் – பிராணன் போய்விட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!
காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கரியமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன ‘மேல்’சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தன.
பஜனைநாட்டுப்பற்றுஎங்கேயுமில்லை!
இந்த இடத்தில் வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபதியங்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்திருக்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் விடுதலையும் அடைந்திருக்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கிறித்தவம், இசுலாம், பவுத்தம் என்ற பலவிதமான மதநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். லிபியாவின் ஓமர் முக்தா தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இசுலாமிய மதப்பற்று கொண்டவர்; துருக்கியின் கமால் பாட்சாவோ மதச்சார்பற்றவர்.
சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானும், அடிமைப்பட்ட சீனாவும் பவுத்தமத நம்பிக்கை கொண்ட நாடுகள்தான். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் மதமும், அடிமைப்படுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மதமும் கிறித்தவம்தான்.
அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் மக்கள் தம்நாட்டைத் தாய்நாடென்றோ தந்தையர் நாடென்றோதான் அழைத்தார்கள். ஆனால், யாரும் கன்னி மேரியைப் போலவோ, ஏசுவைப் போலவோ, புத்தரைப் போலவோ ஒரு படம் வரைந்து வைத்து குடம், சாம்பிராணி காட்டி, இந்தப் படத்துக்கு பஜனை பாடுபவன்தான் உண்மையான நாட்டுப்பற்று கொண்டவன் என்று கூறவில்லை. ஒரு மதத்தினர் மட்டுமே வாழும் நாடுகளில் கூட நடக்காத இந்தப் பித்தலாட்டம், பல மதத்தினர் வாழும் இந்தியாவில் நடந்தது.
ரவிவர்மாவின்லட்சுமி காங்கிரசின்பாரதமாதா
கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா. இப்படி ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசிவரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலைக் கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையத் செய்யாதா?
இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கை காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது இந்துமத வெறியர்களின் குரூரமான விருப்பம். பாட மறுக்கும்போது தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது அவர்களது பாசிச நோக்கம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு.
பாரதமாதாவைவிற்பவர்கள்யார்?
ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களை மட்டும்தான் குறிக்கும். நாட்டுப்பற்று என்பது அம்மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மட்டும் குறிக்கும். மக்களையும், அவர்கள் நலனையும் பற்றிக் கவலைப்படாத இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். ஆகையால் நாட்டை தெய்வமாக்குவதை அதுவும் பார்ப்பனத் தெய்வமாக மாற்றுவதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
ஆகாசவாணியின் விடிகாலை ஒலிபரப்பில் கீறல் விழுந்த ரிக்கார்டாக ஒலித்துவந்த வந்தே மாதரத்தை, பிரேக் டான்சின் வலிப்புக்கேற்ப பாப்பிசை ‘வண்ட்டே மாட்றம்’ ஆக சோனி நிறுவனம் உலகெங்கும் வெளியிட்டிருக்கிறது. இன்னொருபுறம் மேல்நிலை வல்லரசுகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுத்து விற்கும் தரகனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இப்படி அரசியலிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் ”பாரத மாதா”வை விற்பவர்கள் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல!
கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)
சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில் எந்த கல்வியாளர்களும் இல்லை மாறாக தனியார் பள்ளி முதலாளிகள் மற்றும் நிர்வாகிகள்தான் உள்ளனர்.
அந்தக்குழுவோ சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை கல்வியியல் ரீதியாக ஆய்வு செய்யாமல் அதை முடக்குவதே குறிக்கோளாக கொண்டு சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை தரமற்றது என உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்தாமல் மீண்டும் பழைய பாடத்திட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஏழை மாணவர்களிடமிருந்து தரமான பள்ளிக்கல்வி பறிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை உடனே அமுல் படுத்தக்கோரியும், அதை நிறுத்திவைப்பதற்காக தமிழக அரசால் வெளியிடப்பட்ட கல்விக்கொள்ளைக்கான அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் உயர் நீதிமன்றம் முன்பு 08.07.2011 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைச் செயலாளர் தோழர் வ. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் வழக்குரைஞர்களும், ம.க.இ.க தோழர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். நகல் எரிப்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் கார்த்திகேயன் மற்றும் ஐந்து தோழர்கள் ம்ட்டும் வழக்கு தொடரப்பட்டு புழல் சிறையில் அடைக்க்கப்பட்டனர்.
பாசிச ஜெயா வெளியிட்ட அறிக்கையை எரித்து நடந்த போராட்டம் ‘அம்மா’ காதுக்குப் போனால் பிரச்சினை என்ற அடிமைத்தனத்துடன் போலீசு ஆறு தோழர்களை பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. ஆயினும் பு.மா.இ.மு, ம.க.இ.க தோழர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தத்தான் போகின்றனர். இந்த சிறை நடவடிக்கை அவர்களை முடக்கிவிடாது.
சமச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.
பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.
பாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.
அறிவியல்பாடம்:
1) ஐந்தாம் வகுப்பு:
ஆசிரியர்குழு:லயோலாகல்லூரி பேராசிரியர், சென்னை புனித பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர், மதுரைஎஸ் பி ஓ ஏ மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.
பசுமை உலகம் பற்றிய பாடம், உரையாடல் வடிவில் உள்ளது. விதை பரவுதலின் வகைகள் வண்ணப்படங்களால் மனதில் பதியும்வண்ணம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
நாம் இன்று உண்ணும் சில காய்கறிகளின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. (தர்பூசணி, வெண்டை- ஆப்ரிக்கா, தக்காளி,கொய்யா – தென் அமெரிக்கா)
விலங்குகளின் வாழ்விடமான காடு சுருங்குவதே விலங்குகள் ஊருக்குள் வரக்காரணம் என்பதை ஆழ நெஞ்சில் பதியவைத்துள்ளனர்.
எளிதில் அனைவரும் செய்து பார்க்கும் சோதனை: பாட்டில் ஒன்றில் முட்டையுடன் கூடிய எருக்கிலையைப் போட்டு அது புழு,கூட்டுப்புழு, பட்டாம்பூச்சி என வளர்ச்சியடவதைப் பார்க்கச் செய்தல்.
விண்வெளிப்பயணம் கட்டுரையில் அண்மையில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயனும் இடம்பெற்றுள்ளது.
நீர் எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. அது பொது உடமையானது என ஒரு பாடம் வலியுறுத்துகிறது.
2) ஏழாம் வகுப்பு:
ஆசிரியர்குழு:பெரியார் பல்கலைக்கழகவேதியியல் பேராசிரியர், எத்திராஜ் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், சென்னை புனிதஜான் மெட்ரிக் பள்ளி ஆசிரியர், மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளிஆசிரியர்.
முன்பு +1 இல் இடம்பெற்றிருந்த வகைப்பாட்டியல், சுற்றுச்சூழலியல் இப்போது 7ஆம் வகுப்பில்.
விலங்குகளால் மனித சமூகத்துக்குக் கிட்டும் பயன்களோடு விலங்கியல் பாடம் ஆரம்பமாகிறது.
லெக்ஹான் முட்டைக்கும் நாட்டுக்கோழிக்கும் உள்ள வேறுபாடு, நல்லமுட்டையை அழுகிய முட்டையில் இருந்து வேறுபடுத்தும் எளிய முறை ஆகியவை படிப்பை சுவாரசியமாக்குகின்றன.
நீரின் வணிகமயமாக்கம், ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றால் நீர்வளம் சிதைக்கப்படுதல் விளக்கப்படுகிறது. கடல்நீர் எவ்வாறு குடிநீராக்கப்படுகிறது என்பதும் விளக்கப்படுகிறது.
ஒவ்வொரு பாட முடிவிலும், கூடுதலாக வாசித்துத் தெரிந்துகொள்ள உசாத்துணை நூல்கள், பதிப்பக விவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இணையதள முகவரிகளும் தரப்பட்டுள்ளன.
அணுக்கள்->மூலக்கூறுகள்->செல்கள்->திசுக்கள்->நுண்ணுறுப்புகள்->உறுப்புமண்டல்லங்கள்->உயிரினம் என்று விளக்கும் காட்சிப்பட விளக்கம், செல்களைப்பற்றிய புரிதலை எளிதாக்குகிறது.
மனிதன் ஓடும்போது அவனுடைய எலும்புகள் எந்த நிலையில் இருக்கும் எனும் படமும் அறிவியலோடு அன்றாட நிகழ்வை இணைத்து சிந்திக்க வைக்க உதவும்.
சித்தவைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, நீரிழிவு நோய் பற்றிய அறிமுகம் புதிதாக 7ஆம் வகுப்பிலேயே இடம்பெற்றுள்ளது.
அண்ணாபல்கலை இயற்பியல் பேராசிரியர், கோவை எஸ் ஆர் எம் வி கல்லூரி, சென்னை பச்சையப்பன்கல்லூரி பேராசிரியர்கள், சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி, சென்னை டொன் போஸ்கோ,புனித பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் பள்ளிஆசிரியர்கள்
நெல்சாகுபடி ஆரம்பம் முதல் அறுவடை வரை விளக்கப்பட்டுள்ளது.நெல் சந்தைப்படுத்தப்படுவதும் உணவு பதப்படுத்தும் முறைகளும் விளக்கப்படுகின்றன.
கூடுதல் வாசிப்புக்குத் தரப்பட்டுள்ள ஒரு இணையதளம்: எம் எஸ் சுவாமிநாதன்.காம்
நாளமில்லாச்சுரப்பி, ஆண் பெண்கள் வளரிளம்பருவம் அடைதல், பால் நிர்ணய குரோமோசோம்கள், ஹார்மோன் குறைபாட்டால் வரும் முன்கழுத்துக் கழலை, குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதிலிருந்து எவ்வாறு தற்காத்தல், புகைத்தல், குடி போன்றவை உருவாக்கும் சீர்கேடுகள், நச்சுக்காளான்களை இனம் காணும் முறை – நன்கு எழுதப்பட்டுள்ளன.
சைகஸ், பைனஸ் ஆகிய மரங்களை 20 ஆண்டுகளுக்கு முன் +2 பாடத்தில் பார்த்தபோது கறுப்புவெள்ளைப் படத்தில் அது என்ன மரங்களென்றே தெரிந்துகொள்ள இயலவில்லை. இப்போது தெளிவான வண்ணப்படங்களால் 8ஆம்வகுப்பிலேயே அவற்றைப் பார்க்கமுடிகிறது.
எலுமிச்சை கேன்கர், வெள்ளரி பலவண்ணநோய் – வைரஸ்களால் உருவாகின்றன என அப்போது படித்தபோது அது என்ன நோய் என ஆசிரியரால் விளக்க முடிந்ததில்லை. இந்நூலில் அந்நோய் பாதித்த எலுமிச்சை, வெள்ளரிக்காய்கள் படங்களோடு தரப்பட்டுள்ளன.
வலசை போகும் ஆமை, உயிப் பன்மத்திற்கு அச்சுறுத்தல்கள், நமது பாரம்பரிய அறிவு இப்பன்மத்தைப் பாதுகாத்த தன்மை, காற்று நிலம் நீர் மாசுபடுதல் பற்றிய பாடங்களும் செறிவாக உள்ளன.
கழிவுநீர் சுத்திகரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது 8ஆம் வகுப்பில் விளக்கப்படுகிறது. இதனை எஞ்சினியரிங் கெமிஸ்ட்ரியில் கல்லூரியில்தான் முன்பு படித்தார்கள்.
உயிரி பிளாஸ்டிக் தயாரிக்கும் முறை இடம்பெற்றுள்ளது. இது உணவில் இருந்து பிளாஸ்டிக் போன்ற பொருள் தயாரிக்கும் முறை. இது உணவுப்பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லும் என்ற விழிப்புணர்வு இங்கே இடம் பெறவில்லை.
4) ஒன்பதாம் வகுப்பு:
ஆசிரியர்குழு:மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்றியல் துறையின் தலைவர், கோவை ராமகிருஷ்ணாமிஷன் கல்லூரிஇயற்பியல் துறை தலைவர், சென்னை புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை புனிதமேரி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்.
நகர்மயமாதலைப் படத்துடன் (ஒப்பீடு 1990 & 2010 ஒரே நிலப்பரப்பு எவ்வாறு மாறியுள்ளது எனப் புலப்படுத்தும் படம்) புரியவைத்து, இந்நகர்மயமாதல் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஆனதென்றும், இதனால் விளைச்சல் நிலம் குறைந்ததென்றும், மக்கள் மீதே பழிபோடும் விளக்கம் இடம்பெற்றுள்ளது J
பயிர் மேம்பாட்டுப்பாடம், இயற்கை உரங்களின் அவசியத்தையும் பேசுகிறது. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப் பரிந்துரைக்கும் இப்பாடம் உதாரணமாக டி.டி.ட்டி ஐ பரிந்துரைக்கிறது (இது பல ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நஞ்சாகும்)
முன்னரெல்லாம், பயிர்களுக்கு வரும் நோய் பற்றிய குறிப்புகள் வெறுமனே எழுத்தில்தான் இருக்கும். இப்பாடநூலில் நிலக்கடலைக்கு வரும் இலைப்புள்ளி நோயை விளக்க வண்ணப்படம் இடம்பெற்றுள்ளது.
பயிர்ப்பாதுகாப்புப் பாடத்துக்கான உசாத்துணையில் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் இணையதள முகவரி இடம்பெற்றுள்ளது.
புகைத்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு அடிமையாவதற்கான காரணிகள், அவை உருவாக்கும் நோய்கள் ஆழமாக விளக்கப்பட்டுள்ளன.
அதேபோல உடல்பருமன், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபட வழிமுறைகளும் சொல்லித்தரப்பட்டுள்ளன.
எலும்புமண்டலம், நரம்புமண்டலம் போன்றவற்றில் கண்டுபிடிப்பாளர்களின் படங்களுடன் அவர்கள் செய்த ஆய்வு, ஆய்வு முடிவுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இதே போல அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்பட்டுள்ளன. (உதாரணம் பெஞ்சமின் ப்ராங்ளின் சாவிக்கொத்தை பட்டத்தின் நூலில் கட்டி இடிதாங்கியைக் கண்டுபிடித்தது படத்துடன் உள்ளது)
மாசுபடுதலும் ஓசோன் படல ஓட்டையும் எவ்வாறு நிகழ்கின்றது எனும் பாடம் உள்ளது. இதில் சென்ற ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் நடந்த எண்ணெய்க் கசிவு உட்பட பல ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வேதியியல் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள விளக்கப்படத்துடன் கூடிய சமன்பாடு உதவுகிறது. கந்தக ட்ரை ஆக்சைடு எவ்வாறு கந்தக டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜன் ஏற்றமுறுகிறது என்பதை யாவரும் எளிதில் புரியும்படி சமன்பாடு புதுவகையில் தரப்பட்டுள்ளது.
தனிமவரிசை அட்டவணை உருவாக்கிய மென்டலீபின் புகைப்படத்தை முதன்முறையாக இப்புத்தகத்தில்தான் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
நேனோ தொழில்நுட்பம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
வேதிப்பிணைப்புகள் முன்பெல்லாம் +1இல் சொல்லித்தரப்பட்டது., இப்போதோ அது 9ஆம் வகுப்பில்.
கெல்வின், ஜேம்ஸ் வாட், டாப்ளர் போன்றோரின் வரலாறும் அறிவியலில் இவர்கள் செய்த பங்களிப்பும் இதற்காக ஊலகில் இவர்கள் பெயர் நிரந்தரமாக்கப்பட்டமை எல்லாம் சொல்லப்பட்டுள்ளது (திறனின் அலகு வாட், வெப்பநிலையின் அலகு கெல்வின்)
ஒன்பதாம் வகுப்பில் இருந்து செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.
5) பத்தாம் வகுப்பு:
ஆசிரியர்குழு:சென்னை ஐ ஐ டியின்இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல்பேராசிரியர், சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, சென்னை செயின்ட் பேட்ரிக் ஆங்கிலோஇந்தியன் பள்ளி ஆசிரியர்கள்
· மரபியல் 10ஆம் வகுப்பில் ஆரம்பமாகிறது.
· கிரிகர் ஜோஹன் மென்டல், டார்வின், ஜென்னர் எனப்பலரின் ஆய்வுகளோடு விவாதிக்கும் இப்பாடம் இரட்டைக்குழந்தைகள், குளோனிங் ஆட்டுக்குட்டி, ஸ்டெம் செல் சிகிச்சை வரை விளக்குகிறது.
· நோய்த்தடுப்பு முறை எனும் பாடம் சமகால நோய்களையும் பேசுகிறது. (இன்புளுயென்சா, ஊட்டக்குறைவு நோய்கள், ஹெச்1என்1 )
· செடி,மரங்களின் தாவரப்பெயர் அட்டவணை, அத்தாவரப்பெயரின் வட்டாரவழக்கிற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளது. உதாரணமாக ‘ஆர்டோகார்பஸ் இன்டக்ரிபோலியா’ என்பது பலாவைக் குறிக்கும். பலாவை சில வட்டாரங்களில் சக்கை என்றே அழைப்பது வழக்கம்.
· விலங்குகளின் நடத்தை பற்றிய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து செந்நாய்களின் கூட்டு வேட்டைப்பழக்கம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (இவற்றைப்பற்றி சிறுபத்திரிக்கைகளில் தியோடர் பாஸ்கரன் ஏற்கெனவே எழுதி இருந்தார்)
· ரயில் பயணங்களின்போது தேநீரை தூக்கி எறியும் குவளைகளில் வழங்குகின்றனர். முன்பு மண்குவளையில் வழங்கிப் பார்த்தனர். இதனால் வளமான மண் வீணானது..இப்போது லட்சக்கணக்கில் தூக்கி எறிகிறோம்..இது நல்ல முறையா? சிந்தித்துப் பார் என்கிறது ஒரு பெட்டிச் செய்தி.
· கழிவுநீர் மேலாண்மை எனும் பாடம் இடம்பெற்றுள்ளது.
· சந்திராயன் திட்டம் பற்றிய பாடம் மயில்சாமியின் பங்களிப்போடு விளக்கப்பட்டிருக்கிறது.
· செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.
ஆங்கிலப்பாடம்:
1) வகுப்பு 5:
பாடத்திட்டத்தைவகுத்தவர்களில் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைஒருவரும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வர்கள்இருவரும், பொறியியற்கல்லூரியைச் சேர்ந்தவர் ஒருவரும்இடம்பெற்றுள்ளனர்.
· ஆங்கிலத்தை வாசிப்பதற்கும், கேட்பதற்கும், எனத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்திலும் பேச்சுவழக்கு ஆங்கிலம் (ஸ்போக்கன் இங்கிலீஸ்) இடம் பெற்றுள்ளது. வார்த்தைகளை வைத்து விளையாடுதலும், அகராதியில் இருந்து கொடுக்கப்படும் பொருள்களும் அக்கம் பக்கமாக பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பயிற்சியும் ஒவ்வொரு பாடத்திலும் தரப்பட்டிருக்கின்றன. வொக்கபுலரியை மேம்படுத்தவும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மனப்பாடம் செய்து கற்பதைத் தவிர்த்து படங்கள், உரையாடல்கள் மூலமும் வார்த்தை விளையாட்டுகள் மூலமும் நடைமுறை ஆங்கிலம் பயில வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
· படங்கள் மூலம் ஆங்கில இலக்கணப் பயிற்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சில பயிற்சிகள்:
Supply the missing letters:
1) C_nso_e 2) mo_es_ly
3) F_n_ly
4)Con_ra_ul_te
2) ஏழாம்வகுப்பு:
பாடத்திட்டத்தைவகுத்தவர்களில் இடம்பெற்ற ஆசிரியர்கள், தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன்பள்ளி, சென்னை அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி, சென்னை ஹோலி ஏஞ்ஜெல்ஸ் ஆங்கிலோஇந்தியன் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். மாநிலக்கல்லூரியின் ஆங்கிலத்துறைஇணைப்பேராசிரியரும் இதில் அடக்கம்.
· இப்பாடத்திட்டத்தில் ஆங்கிலம் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுகிறது. வாசிப்புக்கு நிறைய வரிகளும், படித்ததில் கவனித்தவற்றை எழுதவும், அகராதி பார்த்துப் படிக்கும் பயிற்சிகளும், சில ஆங்கில வார்த்தைகளை எந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் போன்ற விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இலக்கணத்தைப் பொறுத்தளவில் வாசகனுக்கு சுதந்திரம் தரும் போக்கில் கற்றுக்கொள்ள பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்னொட்டு பின்னொட்டு மூலம் ஆங்கில வேர்ச்சொல்கள் எவ்வாறு வெவ்வேறு வார்த்தைகளாகின்றன என்பதை படம் மூலம் விளக்கியுள்ளனர்.
· இறந்த காலம் / நிகழ் காலம் போன்ற இலக்கணவிதிகள் கற்பது எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.
3) எட்டாம் வகுப்பு:
பாடத்திட்ட ஆசிரியர்கள் : சென்னை லயோலா கல்லூரி, சென்னை புனித பால்ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியர்கள், கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரிமுதல்வர், ஆங்கிலோ இந்திய பள்ளிகள்: சென்னை புனித ஜோசப் பள்ளி, சென்னை ஹோலிஏஞ்ஜெல்ஸ்.
நிபுணர்குழுத் தலைவர்: தி ஸ்கூல் சென்னை
· குழு விவாதங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலம் மொழிப்பயிற்சி, இலக்கணவிதிகளும் கூட்டு விவாதம் மூலம் பயிலுதல், வார்த்தை விளையாட்டுகள், பெட்டிச் செய்திகள் மூலம் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியவை, உரையாடல்கள் நடித்துக் காட்டுதல். சமீபத்திய இந்தியக் கவிஞர் கமலாதாஸின் ஆங்கிலக் கவிதை பாடமாக உள்ளது. கேள்விக்குறிய பதில்கள் ஆப்ஜெக்டிவ் டைப் வகையில் தரப்பட்டுள்ளன.
· தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சி உள்ளது.
4) ஒன்பதாம்வகுப்பு:
ஆசிரியர் குழு: சென்னை கிறித்துவ கல்லூரி ஆங்கிலப்பேராசிரியர், ராணி மேரிக் கல்லூரி பேராசிரியர், எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளி முதல்வர்,அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதல்வர்.
· ஒன்பதாம் வகுப்பின் பாடத்திட்டத்தின் இலக்கு மாறுகிறது. வளரிளம்பருவ மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் வண்ணம் பாடங்களும் துணைப்பாடங்களும் அவர்களின் இலக்கு, இலட்சியம் போன்றவற்றை வரையறுக்கும்படி சிறப்பான மேடைப்பேச்சுக்கள், சிறுகதைகள், உரைநடைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை காக்கும் விழிப்புணர்வை மையப்படுத்தியும் பாடம் உள்ளது. எட்டாம் வகுப்பை விட இந்த வகுப்பில் பாடத்தின் செறிவு அதிகரிப்பு. அதே நேரத்தில் துணைப்பாடங்கள் இலக்கிய ரசனையை உருவாக்கும் வகையில் உள்ளன. ஆங்கிலத்தில் மேடைப்பேச்சு நடத்தவும், சுயமாகக் கட்டுரை எழுதவும் பயிற்சிகள் உள்ளன.
· ஆங்கிலப்பிழைகளைக் கண்டறியும் மொழிப்பயிற்சி நன்கு உள்ளது. ஆங்கிலத்தில் விளம்பரம் / நிகழ்ச்சி நிரல் தயாரிக்க / சுலோகன் உருவாக்கி போஸ்டர் தயாரிக்க என ப்ராஜெக்ட் ஒர்க் களும் உள்ளன. க்ராஸ் வோர்ட் பஷில்ஸ் இருக்கிறது.
· வாசிக்கவும் கேட்கவும் பயிற்சிகள் உள்ளன. (இதில் அரசியலும் உள்ளது. சுய உதவிக்குழுக்களைப் பற்றிய அறிமுகம். களஞ்சியம் சின்னப்பிள்ளை பற்றிய வாசிப்புப் பயிற்சி இருக்கிறது).
· பேச்சுப் பயிற்சியில் கல்பனாசாவ்லா பற்றி பேசச் சொல்கின்றனர்.
· ‘பெண்களுக்கு கல்வி தரவேண்டுமா?’ எனும் பொருளில் ஆங்கில விவாத மேடைப் பயிற்சி உள்ளது.
· இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்த ஹிருதயனின் அம்மா கொடுத்த பேட்டியை அனைவரும் வாசிக்கச் செய்யும் பயிற்சி உள்ளது.
· ஆங்கிலப் பத்திரிக்கைக்கு செய்தி எழுதுதல் எனும் பயிற்சி உள்ளது. ஈ மெயில் எழுதி அனுப்பும் பயிற்சி உள்ளது.
· மாணவர் தன்னை பீர்பாலாகக் கருதிக் கொண்டு தன் கதையை அனைவர் முன்னிலையிலும் நடிப்போடு சொல்லும் பயிற்சி.
5) பத்தாம் வகுப்பு:
சென்னை ஐஐ டி வளாகத்துள் இருக்கும் வனவாணி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் தலைமையில்மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பள்ளி, மாம்பலம் அஹோபில மடம் ஓரியன்டல் பள்ளிஆசிரியர்கள் எழுதிய பாடநூல்.
இப்பாடநூலில் தனியொரு மாணவன் தனது கற்பனை வளத்தை, சிந்திப்பதை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தவும், கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் வளர்க்கவும் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
புகுந்திருக்கும் அரசியல்: வாரன் பப்பெட்டையும் பில்கேட்ஸையும் புகழ்ந்து சில பாராக்கள் எழுதப்பட்டுள்ளன.
கேட்கும் பயிற்சி & குழுவிவாத நடவடிக்கைகள் பாடத்திட்டத்தில் உள்ளன. ஆங்கில சொலவடைகளும் பழமொழிகளும் பயன்படுத்த வேண்டிய இடங்கள் விளக்கம். சூழ்நிலையைச் சொல்லி அச்சூழலில் இடம் பெற வேண்டிய ஆங்கில உரையாடல்களை எழுதுதல்.
உலக இசை மேதைகள் பற்றிய பாடம் ஒன்றில் இளையராஜாவின் சிம்பனி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இரட்டை கோபுர தாக்குதல், நாசி வதை முகாம்கள் பற்றிய பத்திகள் இடம்பெற்றுள்ளன.
பிரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும் அமெரிக்க ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பயிற்சி. (அரசு இசைக்கல்லூரி, சென்னை குறித்த கட்டுரை) அதே போல தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சியும் உள்ளது.
உலகளாவிய தண்ணீர்ப்பிரச்சினை பற்றிய பாடம் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் தொழிலில் இருப்பது பற்றிய பாடம் உள்ளது.
தமிழ்பாடம்
1) 5ஆம்வகுப்பு:
· குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கடவுள் வாழ்த்து யாவர்க்கும் பொதுவாக்கப்பட்டு வெறும் வாழ்த்தாக மாற்றப்பட்டுள்ளது. கவிமணி பாடிய ‘திருவடி தொழுகின்றோம்’ என்ற சமதர்ம வேட்கைப்பாடல்தான் இனி இறைவணக்கம்.
· காட்டின் வனப்பையும், சுற்றுச்சூழலையும் மய்யப்படுத்தி ஒரு பாடம். தமிழின் தொன்மை குறித்த பாடம் ஒன்றில் நடுகல் கல்வெட்டுகளின் வண்ணப்புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.
· செயல்திட்டம்: மாணவர்களே கூடி பள்ளிவிழாவிற்கு அழைப்பிதழ் உருவாக்குதல்
· உங்கள் ஊரில் வழங்கும் கதைப்பாடல் (விளையாட்டுகள்) தொகுத்துத்தா..சிறுவர் இதழ்களின் கதைகளைத் தொகுத்துத்தா..
· பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சிகளும் உள்ளன.
· கலைவாணர் பற்றிய பாடம், தலைவாரிப் பூச்சூட்டி உன்னை எனத் தொடங்கும் பெண்கல்வி குறித்த பாரதிதாசன் பாடல், பாரம்பரிய உணவுகள் பற்றிய கட்டுரை (கம்பு, கேப்பை) உணவுத்திருவிழா பற்றிப் பேசுகிறது..அது நடைபெறும் இடம் பாரதிதாசன் குடியிருப்பு J
· பாரதியின் ‘பட்டங்கள் ஆள்வதும்’ பெண்கல்வி குறித்த பாடல்,
· *விளம்பரங்கள், அறிவிப்பு பலகைகள், வரைபடங்கள் போன்றவற்றை வாசித்து உள்வாங்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
· *குடும்பம் பற்றிய பாடங்களுக்கு வரையப்பட்டுள்ள படங்களில் அனைவரும் வீட்டில் மேசையில் அமர்ந்து உண்கின்றனர். ஷூ மாட்டியபடி தாத்தா பேரனோடு வாக்கிங் போகிறார். (இப்படங்கள் ஏழை மாணவர்களின் மனதில் என்ன விளைவை உருவாக்கும்?)
· பெரியார், புராணக்கதைகளை சிறுவயது முதலே விமர்சித்த விசயம் எழுதப்பட்டு அது பயிற்சிக்கேள்வியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
· நூல் முழுக்க வரும் சிறுவர் சிறுமியர் பெயரெல்லாம் தூய தமிழ்ப்பெயர்களாக உள்ளன. (யாழினி, எழிலரசன், பாவை)
· அகரமுதலி என்பதை அறிமுகம் செய்யும் பாடம் அருமையாக உள்ளது. அதில் அபிதான கோசம் பற்றியும் அபிதான சிந்தாமணி பற்றியும் குறிப்பு உள்ளது. பெ.தூரன் தொகுத்த சிறுவர் கலைக்களஞ்சியத்தில் இருந்து சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன. அகரமுதலியில் இருந்தும் சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன.
2) ஏழாம்வகுப்பு:
இந்த வகுப்பிலும் எம்மதத்தையும் சாராத ஒரு வாழ்த்துப்பாடல் திருவிக வால் எழுதப்பட்டுள்ளது.
ஊர்ப்பெயர் ஆய்வு எனும் நுட்பமான பாடம், மதிப்புக் கல்வி எனும் தலைப்பில் ஆளுமைத்திறனை மேம்படுத்தும் பயிற்சி (முடிவெடுக்கும் திறன், சுயகட்டுப்பாடு), பெருஞ்சித்திரனாரின் ஒரு பாடல், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றிய பாடம், கணிதமேதை ராமானுஜன், தாய் மொழிக்கல்வியை வலியுறுத்தும் காந்தி பற்றிய பாடம், அதில் காந்தியின் தமிழ்க் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
இலக்கணம் பற்றிய பாடங்கள் அனைத்தும் உரையாடல் வடிவில் எளிதில் புரியும்படி எழுதப்பட்டுள்ளது.
சிறுபத்திரிக்கையில் மட்டும் பேசப்படும் ந.பிச்சமூர்த்தியின் கவிதை இடம்பெற்றுள்ளது.
சுயமரியாதை இயக்கத் தலைவி ராமாமிர்தம் பற்றிய வரலாறு,
ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் தொலைக்காட்சி உரையாடலைப் பிரசுரித்து அதைக் கண்டித்து தமிழிலேயே பேசுவோம் என்பதை உணர்த்தி உள்ளனர்.
கழியூரன் தொகுத்த ‘தாத்தா பாட்டி சொன்ன கதைகள்’ தொகுப்பில் இருந்து ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
வீட்டுக்குள் தந்தை மகன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் சித்திரத்தைத் தந்து அதனை எவ்வாறு களைவது, தனித்தமிழில் பேசுவதன் அவசியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
திட்டம்: ஏழாம் வகுப்பு மாணாக்கர் கூடி ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரித்தல் (அரும்பு கையெழுத்துஇதழ்)
3) எட்டாம் வகுப்பு:
செம்மொழி மாநாடு பற்றிய விவரணை ஒரு பாடமாக உள்ளது. தமிழறிஞர் ஜி.யு.போப் பற்றிய கட்டுரை, ஈழக்கவிஞர் சச்சிதானந்தனின் பாடல், தமிழ் அகராதிகளின் வரலாறு, கணினி உருவாக்கப்பட்ட வரலாறு பல அபூர்வமான படங்களுடன் பிரசுரமாகி உள்ளது. வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழச்சிகளின் சுதந்திரப்போராட்ட வரலாறு புது முயற்சி. அதில் கதர் கோஷ்டி பார்ப்பனப் பெண்களும் கூச்சம் ஏதுமின்றி இடம்பெற்றுள்ளனர்.
பிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச்சொல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (பஞ்சாயத்து என்பது உருதாம். அதன் இணைச்சொல் ஐம்பேராயம். பதில், கச்சேரி, பேட்டி, குமாஸ்தா அனைத்தும் உருதுச்சொற்களே. ஜமீன், பஜார் – பார்சி; பேட்டை, கில்லாடி – மராட்டி, மிட்டாய் – அரபு)
தன்னை குற்றவாளியைப் போலத்தூக்கிலிடாமல் போர்க்கைதியைப் போல சுட்டுக்கொல்லச் சொன்ன பகத்சிங் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து அறிமுகமாகி உள்ளது.
தேவநேயப்பாவாணர் பற்றிய பாடம் நன்கு அமைந்துள்ளது.
திட்டம்: குருத்து கையெழுத்து இதழ் தயாரித்தல்
4) ஒன்பதாம் வகுப்பு:
இதில் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்தும், ஆசிரியர் பற்றிய குறிப்பில் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக எனும்குறட்பாவுக்கு சான்றாக இவரைக் காட்டலாம்’ எனக் கரைந்துள்ளனர்.
தெருவில் பொருட்களை எப்படிக் கூவி விற்கின்றனர் என ஆசிரியர் கேட்கிறார். மாணவர்கள் ‘பூவோஒ பூவு’, பழமோ ஒபழம்’ எனக் கூவி விற்பதைச் சொல்கின்றனர். சொல்வதை அழுத்தமாகச் சொல்லி மனதில் பதியவைக்கும் இம்முறைதான் அளபெடை என மிகவும் எளிதில் விளக்கியுள்ளனர்.
மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி இதழ்கள் புதுக்கவிதை இயக்கம் போன்ற விசயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் பற்றிய கட்டுரை அந்நாட்குறிப்புகளின் அருமையை சிறப்புறப் பேசுகிறது. அக்குறிப்பிலிருந்து சில பகுதிகளும் தரப்பட்டுள்ளன.
திட்டம்: கையெழுத்து இதழாக ‘உடல்நலச் சிறப்பிதழ்’ தயாரிக்க வேண்டும். அதில் சிறுகதைக்கான தலைப்பு “108காப்புந்து அல்லது கலைஞர் காப்பீட்டு திட்டம்”.J
ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான பழமொழிகளைக் கண்டறியும் பயிற்சி உள்ளது.
மீனவர்கள் பாடும் தொழிற்பாட்டு ‘ஐலசா’வுடன் பிரசுரமாகி இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
ராணி மங்கம்மாவின் வரலாறும் சிறப்பாகவே உள்ளது.
பொங்கல் பண்டிகையைப் புகழ்ந்து ஒரு கட்டுரை. அதில் வண்ணப்படத்தில் பொங்கல் பானையை ஒரு வெள்ளைக்காரி கும்பிட்டபடி இருக்கிறாள். வெள்ளைக்காரி சொன்னாத்தானே பொங்கலின் மகிமை நம்மவங்களுக்குப் புரியும்னு நினைத்தார்களோ என்னவோ?
உழைப்பால் உயர்ந்த உத்தமர் கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் (என்பீல்டு) கதை இடம் பெற்றுள்ளது J
பெருஞ்சித்திரனாரின் சுயமுன்னேற்றப் பாடல் ஒன்று உள்ளது
புவி வெம்பலுக்கு காரணிகளை விளக்கி ஒரு கட்டுரை நன்றாக உள்ளது. அதில் ஏ.சி. சாதனங்கள் உமிழும் நச்சுக்கள் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.
5) பத்தாம் வகுப்பு:
பல பக்கங்களில் அபூர்வமான புகைப்படங்கள் – உதாரணமாக 1812இல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறளின் முகப்புப் படம் – இடம்பெற்றுள்ளன.
இதுவரை பெரியார் என்றால் பள்ளிப்பாட நூல்களில் 500 தென்னைமரங்களை வெட்டிய செய்தியைத் தாண்டி ஏதும் சொல்லப்பட்டதில்லை. இந்நூலில் ‘பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்’ எனும் நல்லதொரு கட்டுரை உள்ளது. அதேபோல அம்பேத்கரின் வரலாற்றிலும் அவரின் வட்டமேசை மாநாட்டுப் பங்களிப்பு கூட இடம் பெற்றிருக்கிறது.
வங்கி, அஞ்சலகம், ரயில்வே நிலையங்களில் விண்ணப்பங்கள் நிரப்பும் பயிற்சி முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.
பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வை விளக்குபவர் கருணாநிதிதான் J படித்தல் திறனை மேம்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியும் அவருடையதே..’இதைப் போன்ற நயமிக்கஉரைகளைத் தேடிப் படித்து, அவற்றைப் போன்று எழுதவும் பேசவும் பழகினால் உலகம் உங்களைநோக்கி வரும்’ என்று அறிவுரை வேறு இலவசமாகக் கிடைக்கிறது J
சுவீடிஷ் மொழிக்கதை ஒன்றின் மொழிபெயர்ப்பு துணைப்பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் நலனுக்குப் பாடுபட்ட அயோத்திதாசப் பண்டிதர் வரலாறும் உள்ளது. அதில் அவர் நடத்திய ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையின் புகைப்படமும் உள்ளது.
சிலி தங்கச்சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.
சமூக அறிவியல் பாடம்
5ஆம் வகுப்பு:
உருவாக்கியவர்கள்:யுனிசெப்பிற்கான ஆலோசகர் ஒருவர், சென்னை குட்ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்,எஸ் பி ஓ ஏ, சங்கரா வித்யாலயா ஆகிய மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும்இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் பற்றிய பாடம் அவர்களின் படங்களுடன் இடம்பெற்றுள்ளது.
வாசிக்க ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் லே அவுட் பல வண்ணங்களில் ஏராளமான படங்களுடன் அமைந்துள்ளது. தீபகற்பம், வளைகுடா, பாலைநிலம், தீவு போன்றவற்றிற்கு சரியான படங்கள் வைத்து புவியியல் விளக்கப்பட்டுள்ளது.
இந்திய நிலப்பரப்பின் மண்வகைகள், சுரங்கங்கள், கனிமங்கள் போன்றவை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
செயற்கைக்கோள்கள் கட்டுமானத்தில் இருந்து ஏவுதல் வரை தக்க படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
இந்திய அரசமைப்பு, சார்க் நாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய பாடம் 5 ஆம் வகுப்பிலேயே தொடங்குகிறது.
திட்டம்: வகுப்பில் மாதிரி தேர்தல் நடத்திடுதல்.
சாலைப்போக்குவரத்து விதிகள் பாடமாக உள்ளது.
7ஆம் வகுப்பு:
ராஜபுத்திரர்கள் என்பவர்கள் எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தனர் என்பதும் அவர்களின் வரலாறும் தனியாக விளக்கப்பட்டிருப்பது தமிழக வரலாற்றுப் பாடத்தில் புதிய விசயம்.
சூஃபி இயக்கம் பற்றிய பாடமும் புதிதுதான்.
புவியில் மாறிக்கொண்டிருக்கும் மேற்பரப்பு பற்றியும், நிலநடுக்கத்தின் காரணிகள் பற்றியும் உயிரோடு இருக்கும் எரிமலைகள் பற்றியும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கின்றது.
அருவி இதிலும் நீர்வீழ்ச்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது J
8ஆம் வகுப்பு:
காரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்திய நிலச்சீர்திருத்தம் – ஜமீன் தாரி முறை எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.
சிப்பாய்க்கலகம் இதில் மாபெரும் புரட்சி எனக் குறிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் இல்லாதிருந்த ‘தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி’ இதில் இடம்பெற்று, அப்பாடம் தெளிவாக அக்காலகட்டத்தை விளக்குகிறது. அதேபோல தஞ்சை மராட்டியர் ஆட்சியும் தனியாக விளக்கப்பட்டிருக்கிறது.
மருதுபாண்டியரும் தென்னிந்திய லீக் பற்றிய வரலாறும் வேலூர் புரட்சியும் இடம் பெற்றிருக்கிறது.
பொருளாதாரம் சமூக அறிவியலில் தனி அலகாக எட்டாம் வகுப்பில் இருந்து சொல்லித் தரப்படுகின்றது. தொழில்வகைகளும் பல்வகைத் தொழிலாளர்களும் பற்றிய வரையறைகள் உள்ளன.
வணிகத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் விளக்கப்பட்டுள்ளன.
குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, காரணிகள், சாதியப் பிரிவினை, மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானங்கள், இந்திய மனித உரிமை அமைப்புகள் போன்றவை அலசப்பட்டுள்ளன.
பணம் சேமிப்பு முதலீடு பண்டமாற்று போன்ற அடிப்படை வரையறைகள் விளக்கப்பட்டுள்ளன.
9ஆம் வகுப்பு:
ரோமானியப் பேரரசு வீழ்ந்து போப்பாட்சி வந்ததும், அதற்கான பொருளாதார சமூகக்காரணிகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாக உருவான வர்க்கப் பிரிவினை, அத்துடன் விளைந்த வேலை இல்லாத்திண்டாட்டம், முதலாளித்துவ வளர்ச்சி, ராபர்ட் ஓவன் போன்றோரின் அரசியல், மார்க்சியக்கோட்பாடுகள் உருவாதல், எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சுப் புரட்சிக்குத் தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புவியியலில் தமிழகத்தின் மழைப்பரவலும் காடுகளின் பரவலும் மண்பரவலும் மேப் மூலமாக விளக்கப்பட்டிருப்பது எளிதாக இருக்கிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் இருப்பிடங்கள் குறித்த மேப் உள்ளது.
சூழல் மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வுக்கட்டுரை உள்ளது.
தமிழால் அறியப்படும் பல்வேறு பறவை, விலங்குகளின் ஆங்கிலச் சொற்கள் பட்டியலில் தரப்பட்டுள்ளன.
குடிமையியலில் நாம் எவ்வாறு ஆளப்படுகிறோம், அரசியல் சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் உரிமை & கடமைகள், நாடாளுமன்றம் நீதிமன்றம் அமைச்சரவை, மாநில அரசு ஆகியவற்றின் அதிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தற்கால சமூகச் சிக்கல்கள் எனும் பாடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, பிராமணர் ஆதிக்கம், நீதிக்கட்சி வரலாறு போன்றவை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
இடம்பெயரும் தொழிலாளர், திருநங்கையர் நிலைமை விளக்கப்பட்டிருக்கின்றது.
பொருளாதாரம்: சப்ளை, டிமான்ட் (அளிப்பும் தேவையும்), மார்ஷலின் தேவை விதி விளக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு:
ஏகாதிபத்தியத்தின் தன்மை என்ன? ராணுவ ஏகாதிபத்தியம், பொருளாதார ஏகாதிபத்தியம், 1870 வரை கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் தன்மை, காலனி ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படை விளக்கப்பட்டுள்ளன.
முதல் உலகப்போர், ரஷ்யப் புரட்சி, அதனை அடுத்து வந்த பொருளாதாரப் பெருமந்தம், பாசிசம் நாசிசம் தோன்றி வளர்ந்தது..இரண்டாம் உலகபோர் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதை விளக்கி நேர்க்கோட்டில் விளக்கி உள்ளனர்.
சீனாவில் ஏகாதிபத்தியங்கள் நடத்திய அபினிப்போர்கள், சன்யாட்சென்னின் புரட்சி, வரை விளக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம், யூரோ நாணயம், போன்ற அண்மைய வரலாறுகளும் விளக்கப்பட்டுள்ளன.
நீதிக்கட்சிஏன் தோன்றியது? தியாகராயர், டி எம் நாயர் போன்றோரின் பங்களிப்புகள், நீதிக்கட்சிஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கம், அதன் நோக்கங்கள், சாதனைகள், பெரியார்நீதிக்கட்சித்தலைவராகி திராவிடர் கழகமாக்கியது, அண்ணா, முத்துலட்சுமி ரெட்டி,தர்மாம்பாள், ராமாமிர்தம் போன்றோரின் தொண்டுகள் என விரிவாக திராவிட இயக்கத்தின்தேவையையும் பங்களிப்பையும் அலசியுள்ளனர்.
இமயமலை உருவான புவியமைப்பு வரலாறு சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ், செயற்கைக்கோள் பயன்பாடு, இணையம், மென்பொருள் பூங்கா, விளக்கப்பட்டுள்ளன.
ஒருகட்சி ஆட்சிமுறை, இருகட்சி ஆட்சிமுறை, பலகட்சி ஆட்சிமுறை ஆகியவற்றின் சாதக பாதகங்கள் விளக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் உரிமை ஒரு பாடமாக உள்ளது.
பொருளாதாரத்தில் நாட்டின் வருமானம், நிகர நாட்டு உற்பத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், இவற்றைக் கணக்கிடும் முறை, 1947க்கு முன்னும் பின்னும் பொருளாதார நிலைகள், தனியார்மயம், தாராளமயம் – விளக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக
சமச்சீர் கல்விப் பாடங்களில் திருமதி பார்த்தசாரதி போன்ற கல்வியாளர்கள் கண்டறிந்த தவறுகளை, அச்சிடப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் புத்தகங்களில் தேடினோம். அறிக்கை கூறுவதை கருப்பு எழுத்துக்களிலும் நமது குறிப்புகளை நீல எழுத்துக்களிலும் தந்திருக்கின்றோம்.
1) Touching on factual incorrectness of the content, the committee cited the example of Social Science textbook for class VII. In the lesson on “Changing face of Earth’s surface” (pg no 75), a statement is given as “the continuous freezing and melting of water.” It is a factual error because water cannot melt, only ice can, the report said.
உறைபனி சிதைவு பற்றிய இந்தப் பத்தி:
சிலநேரங்களில் விரிசல் உள்ள பாறைகளின் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. இரவு நேரங்களில் நிலவும் வெப்பநிலை காரணமாக இந்த நீரானது உறைந்து பனிக்கட்டியாக மாறும் மற்றும் பகல் நேரங்களில் உருகும்.பனிக்கட்டியானது திடப்பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைபட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும்.
SCIENCE
2) Content is too heavy. In Class 8, unit 10 of the book deals with atomic structure and concepts such as laws of chemical combination, electrical nature of matter, discovery of fundamental particles, properties of cathode rays and discovery of protons
இதெல்லாம் ரொம்ப ஓவர்..1980களில் படித்தபோதும் இதே பருண்மைமாறாவிதியையும், டால்ட்டனின் அணுக் கொள்கையையும் 9ஆம் வகுப்பில் இதே அளவுதான் படித்தோம்..இப்போது அவை 8ஆம் வகுப்பில்..
ரொம்ப கொஞ்சமா படிக்கிறாங்க ஸ்டேட் போர்டுல..அப்படின்னு சொல்லி மெட்ரிக் வியாபாரிகள் தங்கள் சரக்கை உயர்ந்ததென்று கடைகட்டிக் கொண்டிருந்தாங்க…பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத இந்த அத்தியாயத்தை முன்வைத்து, சிலபஸ் ரொம்ப அதிகம்னு புளுகுறாங்க..
இவற்றில் என்ன பாடச்சுமை இருக்கிறது
3) Syllabus has no analytical activities. In Class 9, students could have been given the opportunity to study the unit ‘Matter’ through experiential learning rather than by rote
இது அப்பட்டமான பொய். பருப்பொருள் பற்றிய இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள செய்முறைகள் பின்வருவன. (பக்கம் 152 முதல்)
4) Syllabus does not integrate life skills with contents or activities. In Class 1, in the unit ‘Science in Everyday Life’, everyday practices such as ‘not to spit or litter in public places’, ‘respecting others’ and ‘solving problems’ have not been considered
இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்ல அவங்களுக்கே கூச்சமா இருந்திருக்காதா?
SOCIAL SCIENCE
5) Syllabus deals withconcepts that are too complex for a student of that age group. Ideas such as the Universe, stars and the solar system are dealt in the lesson ‘Wonders in the Sky’ in Class 3
இதில் என்ன விந்தை இருக்க முடியும்? சூரியக்குடும்பம், விண்மீன்கள் பற்றி எல்லாம் சென்ற தலைமுறை மாணவர்கள் கூட 4ஆம் வகுப்பில் படித்தவைதானே..1980களின் ஆரம்பத்திலேயே இவை ஸ்டேட் போர்டில் இப்படித்தான் இருந்தன.. எவருக்கும் புரிதலில் சிக்கல் எல்லாம் இல்லை.
Instead of introducing chapters on the Union government and the state government before human rights and the United Nations, the chapters are introduced the other way round in Classes 8 and 9
எட்டாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பது மனித உரிமைகளும், மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களும். இவை தவிர பெண்கள் உரிமைகள் என பன்னாட்டு அமைப்புகள் வரையறுத்தவையும், மனித உரிமை ஆணையங்கள் இந்தியாவில் செயல்படுவதும், அவற்றின் அதிகாரங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பவையோ, எவ்வாறு மத்திய மாநில அரசுகள் இயங்குகின்றன, தேர்தல் முறை என்ன போன்றவைதான்.
மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களுக்கும் மத்திய மாநில அரசமைப்புகளுக்கும் முன் பின் எனும் தொடர்ச்சி தேவையே இல்லை..
இந்த பாடங்களைப் படிக்காமலேயே, தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு மாநில அரசு->மத்திய அரசு -> ஐ நா சபை எனும் கற்பனைப் புரிதலோடு இந்த விமர்சனத்தை வைத்துள்ளனர்.
6) There is no meaningful link between the history units as they are not logically arranged. The Class 8 history syllabus begins with a unit on the ‘Advent of Europeans’ and ends with ‘Indian Independence’
இதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு தொடங்கி விஜயநகரப் பேரரசு வரை விளக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 16ஆம் நூற்றாண்டின் முகலாயர் ஆட்சியில் தொடங்கி, மராத்தியர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போரை விளக்கி உள்ளனர். இதில் தொடர்ச்சி ஏதும் அறுபடவில்லை..அதுவரை மத்திய, வட இந்திய வரலாறு விளக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் நடந்த வேலூர் புரட்சியும் தொடர்ச்சியாகத்தானே எழுதப்பட்டிருக்கின்றது?
சமச்சீர் கல்வி குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி தமிழக அரசு அமைத்த ‘நிபுணர்’ குழு உயர்நீதிமன்றத்திடம் அறிக்கையை அளித்து விட்டது. சாரமாகச் சொன்னால் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறிவிட்டது. இந்த மூன்று வாரத்தில் அதிலும் நான்கு முறை மட்டும் கூடி 10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் ‘அம்மாவின்’ விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதைதான். இனி இதை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அம்மாவின் விருப்பத்தையே நடைமுறைப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது.
உண்மையில் இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். இதிலிருந்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று மூடநம்பிக்கை போல பரப்பப்படும் கருத்துக்களை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
‘‘நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி.
அடுத்த நொடி, ‘சர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது. நரநரவென்று முன்னும் பின்னுமாக இழுத்தாள். அந்தக் கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள், குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.’’
–வாரிஸ் இப்படிச் சொன்னபோது, லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்தார்.
வாரிஸின் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத அந்த உண்மையை, அன்றுதான் உலகம் தெரிந்து கொண்டது.
வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர்.
வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.
ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.
ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.
என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.
எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, ‘கல்யாணமாகாதவள்’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.
பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே…
அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.
அம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார்.
அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.
‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள்.
சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன்.
‘‘வாரிஸ்’’
அம்மா திடீரென்று எழுப்பினாள்.
நாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா.
வானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்’ என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.
பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி…
‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
‘அய்யோ…!’ -நரக வேதனை.
அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.
‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.
முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.
மரண வேதனை.
இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.
என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.
நாட்கள் ஓடின.
நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார்.
தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’
அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.
‘அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!’
நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு,
‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.
அவர் என் முகத்தை திருப்பி,
‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.
அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.
‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார்.
அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.
நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.
சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார்.
அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.
‘த்தூ..
இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன்.
அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.
நான் அம்மாவை நெருங்கி,
‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன்.
‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’
‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’
‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.
நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.
அம்மாதான்.
‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள்.
நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.
‘‘எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே’’ என்றாள்.
‘‘சத்தியமா’’
சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
பாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.
எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது.
அந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.
‘’வாரிஸ், வாரிஸ்’’
திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்?
இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும்.
நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும்.
அப்பா தோற்றுவிட்டார்.
சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.
ஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்…
சூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.
நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.
அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது.
‘அப்பாவாக இருக்குமோ?!’
பதறியடித்து எழும்பினால், ‘கடவுளே..! அது ஒரு சிங்கம்.’
என்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.
நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.
இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.
‘‘வா! வந்து என்னைச் சாப்பிடு.’’ -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.
எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.
‘ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.
சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.
அப்படியானால்?
கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.
‘அது என்னவாக இருக்கும்?’
நம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.
வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.
அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.
மொகாதிஷுவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா. அம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, ‘வாய்ப்பே இல்லை’ என்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார்.
அம்மா எப்போதும் என்னை ‘அவ்டஹொல்’ என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், ‘சின்ன வாய்’ என்று அர்த்தம். ஆனால், ‘வாரிஸ்’ என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் ‘பாலைவனப் பூ’ என்று அர்த்தம்.
நான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே! சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன்.
ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் ‘எங்க அக்கா அமென் தெரியுமா?’ என்று விசாரித்தேன்.
‘‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!’’ -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து,
‘‘இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு’’ என்றாள்.
நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
நல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள்.
மொகாதிஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன.
நான் என் சித்தி வீட்டுக்குப் போய், ‘‘கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா?’’ என்றேன்.
எதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.
‘தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.’ என்றார்கள்.
வழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன்.
அம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும்.
‘நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.’ என்று தீர்மானித்தேன்.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை. எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.
நாட்கள் ஓடியது…
ஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.
‘‘அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு’’ -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.
நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு,
‘‘நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்’’ என்று கெஞ்சினேன்.
சித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘‘ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.’’ என்றார்.
சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார்.
‘‘ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.’’
மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்! முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது.
ஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது.
மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள். ‘அம்மாடி!’ அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன்.
அடுத்த நாள்…
பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள்.
எனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.
நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள்.
பிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ‘‘என்னதிது?’’ என்றேன்.
‘‘இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்’’
‘போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?’
ம்ம்… நான் அதை மறந்துவிட்டேன்.
இதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது.
‘‘சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்’’ -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.
பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’’ சித்தப்பா கோபப்பட்டார்.
‘‘பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்’’
என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார்.
‘யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்’
எனக்குள் பயம் பரவத் தொடங்கியது.
அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ‘ஹல்வு’வைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.
‘‘என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே?’’ என்றாள் சோமாலியில்.
நாங்கள் முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை.
‘‘என்னத்தைச் சொல்ல! என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார். இத்தனை நாள் அவரோடுதான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை’’
ஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள்.
‘‘ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ’’
இப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம்.
‘‘சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை’’
ஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் என் வேலை.
வார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள். அதுதான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவுதான். இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக்கொண்டேன்.
இனிதான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.
‘‘இந்த ஆளுக்கு என்னதான் வேணுமாம்?’’ ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோகிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன்.
‘‘அதை அவர்கிட்டயே கேளு. போனைப் போடு’’
‘‘நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு’’
‘‘‘மைக் கோஸ்.’ அவர்தான் அந்த அன்புக்குரிய போட்டோகிராபர். அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது, நான் வேறொரு உலகத்தில் விழுந்ததுபோல் உணர்ந்தேன். சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.
மைக் என்னிடம், ‘‘யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.
‘‘இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?’’
‘‘ஆமாம்’’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘‘எவ்ளோ பணம் தருவீங்க?’’
‘‘ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு’’ மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.
‘‘ஒகே. போய் கண்ணாடியைப் பார்’’
‘‘வாவ்…! நானா இது?’’ பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்… அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.
‘‘ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்…’’ -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.
வேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.
சில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.
‘‘இங்கே என்ன நடக்குது?’’
‘‘பைரேலி காலண்டர்’’
‘‘ஓ… சூப்பர். அப்டினா, என்ன?’’
போட்டோகிராபர் ‘டெரன்ஸ் டொனோவன்’தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.
‘ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.’
ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
‘‘இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்’’ –டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.
ஷூட்டிங் முடிந்தபோது என் படம் ‘அட்டை’க்குத் தேர்வாகி இருந்தது.
ஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. ‘ரெவ்லான்’ விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன். எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.
ஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ்சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப்பட்டது. மாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பலமடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், ‘தூக்கத்தின்போதே செத்துவிட்டால் தேவலாம்’ என்று நினைப்பேன்.
முன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்தபோதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். சித்திதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், உண்மைக் காரணம் என்னவென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை.
‘‘உதிரப்போக்கை நிறுத்தணும்னா, கர்ப்பத்தடை மாத்திரை ஒண்ணுதான் தீர்வு. வேற வழியில்லை’’ என்றார் டாக்டர்.
எல்லா டாக்டர்களும் இதையேதான் சொன்னார்கள்.
இந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின. உடல் எடை கூடியது.
‘இந்த வேதனைக்கு, உதிரப்போக்கையே தாங்கிக்கலாம்’ என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.
‘‘உண்மையிலேயே உனக்கு விருப்பம்னா, இவங்க திறந்து விடுவாங்க. ஆனா, இது நம்ம பன்பாட்டுக்கே விரோதம். இது உங்க வீட்டுக்கு தெரியுமா?’’ என்றான்.
‘‘தெரியாது’’
‘‘முதல்ல அவங்ககிட்ட பேசு.’’ -அவன் ஒரு அக்மார்க் சோமாலியன். போய்விட்டான்.
கடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
‘‘நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியாவிலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாவம், சில பெண்கள் கற்பமாகக்கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.
சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும்.
ஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்தபோது…
‘உஷ்ஷ்ஷ்ஷ்…’
ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை… வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது.
1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக்குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.
‘‘நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவவேண்டும்’’ -டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.
என் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.
சிலர், ‘நான்தான் உன் அம்மா’ என்று வந்தனர்.
‘‘உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி’’ என்றார் கெரி.
‘‘ஓ… ஆமால்ல! என்னை ‘அவ்டஹொல்’னு எங்க அம்மா கூப்பிடுவாங்க’’
‘‘இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா?’’
‘‘நிச்சயமா’’
இப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒருநாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, ‘‘அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச்சிட்டோம்னு நினைக்கிறோம். அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்துபோச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க’’ என்றனர்.
நாங்கள் உடனடியாக எத்தியோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறியரக விமானம் ஒன்றில், ‘கலாடி’க்கு பயணம். எத்தியோப்பிய&சோமாலிய எல்லை கிராமமான அங்குதான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்காத்துக்கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.
கடைசியில் அது என் அம்மாவே இல்லை.
ஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம். அப்போதுதான் அந்த வயதான மனிதர் வந்தார்.
‘‘என்னை தெரியுதா? நான்தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டுபிடிச்சித் தர்றேன்’’ என்றார்.
பி.பி.சி குழு ஒப்புக்கொண்டது.
மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து,
‘‘நீ நம்பப்போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மாதான்’’ என்றார். நான் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும்போதே தெரிந்துவிட்டது.
‘‘அம்மா…’’
ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.
ட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்றுவிட்டாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.
‘‘அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல. அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும்’’ என்றார் அம்மா.
திடீரென்று, அலி என்னைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
‘‘டேய்! நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா!’’ என்றேன்.
‘‘எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு’’ என்றார் அம்மா.
அன்றிரவு நானும் அலியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன்.
மறுநாள் காலை… விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
‘‘அம்மா! போதுமான அளவுக்கு நீ உழைச்சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத்தாகணும். கிளம்பு என்கூட.’’ என்றேன்.
‘‘இல்லை. உங்க அப்பா இங்கதான் இருக்கார். அவரை நான்தான் பாத்துக்கணும். அவர் இருக்கிற இடம்தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமாலியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடு. அது போதும்.’’
நான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன்.
‘‘அம்மா! நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.’’
இப்போது நான் லண்டன் திரும்பிவிட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.
மாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.
‘‘சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகிராபரை சந்தித்தீர்கள்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா?’’
‘‘இல்லை’’
‘‘என்ன?’’
‘‘ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல. எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.’’
ரிப்போர்ட்டர் ‘லாரா ஸிவ்’வின் கண்கள் அகல விரிந்தன.
‘‘ஐ டூ மை பெஸ்ட்’’ சொல்லிக்கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.
நான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.
லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். என் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்துகொண்டுவிட்டது.
‘‘ஆனால், செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.
3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூமையான பாறைக் கற்கள்தான்.
வாரிஸ் டேரி
நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?
மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்றுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’
-பேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித்தான் பேசினேன். இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித்திருக்கிறது.
அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார். பிறகு சிங்கத்திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.
–ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டது.
குறிப்பு -1:
இந்தக் கட்டுரைக்குப் பிறகு, ‘டெஸர்ட் ஃப்ளவர்’ என்கிற வாரிஸ் டேரியின் டாகுமென்ட்டரி படத்தைப் பார்த்தேன். அதில் மூன்று வயதில் தனக்கு கந்து அகற்றம் செய்யப்பட்டதாக வாரிஸ் கூறுகிறார். வாரிஸ் டேரியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ஐந்து வயது என்றுதான் உள்ளது. அதேபோல், ஒய்.எம்.சி.ஏ.வில் சோமாலியப் பெண்ணுடன் தங்கியதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் குறிப்பிடுகிறது. ஆனால், படத்தில் வெள்ளைக்காரப் பெண் வருகிறார்.
ரீடர்ஸ் டைஜஸ்ட், பள்ளிக்கூட வாசலில் போட்டோகிராபர் Mike Goss-ஐ வாரிஸ் சந்தித்ததாக எழுதியிருக்கிறது. ஆனால், படத்தில் மெக்டொனால்டில் சந்திப்பதாக வருகிறது. வாரிஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்டவை போட்டோகிராபர் டெரன்ஸ்’தான் வாரிஸை கண்டெடுத்ததாக சொல்கின்றன. மைக் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.
படத்தில், மொகாதிஷுவுக்கு தப்பியோடும் வாரிஸ், வழியில் ஒரு நள்ளிரவில் லாரியில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ஒருவன் அவளை கற்பழிக்க முயற்சிக்கிறான். இது ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரையில் இடம்பெறவில்லை. அதேபோல, பாஸ்போர்ட் வேலிடிடிக்காக அங்கிருக்கும் வெள்ளைக்காரர் ஒருவருடன் கல்யாணம் ஆனதுபோல் நடித்து அதிகாரிகளை நம்ப வைக்கிறார் வாரிஸ்.
கணவனாக நடிப்பவர் வாரிஸை சின்ஸியராக காதலிக்கிறார். ஆனால், வாரிஸால் அதை ஏற்கமுடியவில்லை. இதனிடையே டிஸ்கொதேவில் சந்தித்த தனா என்கிற கருப்பு இளைஞனுடன் வாரிஸுக்கு காதல் பிறக்கிறது. அவள் கர்ப்பமாகிறாள். பிறகு முறைப்படி டைவர்ஸ் பெற்று தனாவுடன் இணைகிறாள். இதுவும் ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் இல்லை.
குறிப்பு -2
பெண் உறுப்பு சிதைப்பு என்பது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றுவதாகும். இது சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே சிறுமிகளுக்கு நடைபெறும் ஒரு சடங்கு. கந்து அகற்றம் நடத்தப்பட்ட ஒரு பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்க முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவளாக இருந்தாலும் அப்பெண்ணால் கலவி உச்சநிலையை அடைய முடியாது.
ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் தற்போதும் பின்பற்றப்படுகிறது. 1999-&ம் ஆண்டின் கணக்குப்படி, 13 கோடி பெண்களுக்குக் கந்து அகற்றம் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், நாளொன்றுக்கு 6,000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகவும் சொல்கிறது. பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் கந்து அகற்றப்படுகிறது.
இதில் மூன்று வகையான முறை கடைபிடிக்கப்படுகிறது.
1. பெண்ணின் கந்து முனையை மட்டும் வெட்டி விடுதல்.
2. கந்து முனை மற்றும் புழையின் இரு பக்கத்திலும் உள்ள இதழ்களை வெட்டு விடுதல்.