privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?

சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 12

”முசுலீம்களும், கிறித்தவர்களும் எல்லா இடங்களிலும் தனிக்குடியிருப்பில் ஒதுங்கி வாழ்வது ஏன்? அவர்கள் இந்துக்களுக்கெதிராக தேச – விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், திட்டமிடுவதற்கும் இதுவே காரணமாவதால், இந்தத் தனிக் குடியிருப்புகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.”

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் முதல், இந்து முன்னணி இராம.கோபாலன் வரை  பலர் பேசி, எழுதி வரும் ஒரு அவதூறு.

முசுலீம்களும் கிறித்தவர்களும் தனியாக  வாழ்வது பற்றி பீதியைக் கிளப்பும் இந்துமதவெறியர்கள்தான், தனிக்குடியிருப்பு – தனி வாழ்க்கை முறையை விதியாக்கி – மதமாக்கி – சாதியாக்கி இன்று வரையிலும் அமல்படுத்துகிறார்கள். உலக மனித குலத்தின் ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் ‘பிரிந்து வாழ்தல்’ என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.

ஊருக்கு நடுவே கோவில், கோவிலுக்கருகில் குளம், இரண்டைச் சுற்றியும் அக்கிரஹாரம், அக்கிரஹாரத்தில் பார்ப்பனர்கள். அக்கிரஹாரத்தைச் சுற்றி மேலத் தெருக்கள். மேலத்தெருக்களில் வேளாளர், ரெட்டி, நாயுடு, முதலியார், செட்டியார் போன்ற ‘மேல்’சாதியினர். இதை அடுத்து கீழத்தெருக்களில் ‘பிற்படுத்தப்பட்ட மேல்’ சாதியினர். இவர்களை அடுத்து நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவைச் சாதியினர். ஊருக்கு வெளியே சேரி. சேரியில் பள்ளர், பறையர், சக்கிலியர். இந்த பார்ப்பன செட் – அப்பில் இல்லாத கிராமங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.

குடியிருப்பு, தொழிலில் மட்டுமல்ல; உண்பது, உடுத்துவது, கேளிக்கை, சுடுகாடு என மொத்த வாழ்க்கையிலும் பார்ப்பனியத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகிறது. நீர் கலந்து தயாரிக்கப்படும் ‘கச்சா’ உணவு தீட்டு. நெய் அல்லது சுத்தமான எண்ணெயில் தயாரிக்கப்படும் ‘பக்கா’ உணவு சுத்தமானது. கச்சா உணவை தன் சாதியினரிடமும், பக்கா உணவை தனக்கு கீழ் உள்ள சாதியிலும் பெற்றுக் கொள்ளலாம். வட இந்திய மேல் சாதியினரிடம் இந்த ‘உணவுத் தீண்டாமை’ இன்றும் நிலவுகிறது.

பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது. சமீபகாலம் வரை உணவு விடுதிகளில் இருந்த ‘பிராமணாள் கபே, சைவாள் கபே’ போன்ற பெயர்கள் யாத்திரை வரும் பார்ப்பனர்களின் புனிதத்தைக் காப்பாற்றத்தான் ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பன இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அதிதி பூசை’ (விருந்தினர்களை உபசரித்தல்) பார்ப்பன ‘மேல்’சாதியினரை மட்டும் குறித்தது. சேவைச்சாதியினர் சமைத்து மிகுந்துபோன உணவை தானமாகப் பெறுவார்கள். பூசை – புனஸ்காரங்களுக்கு வரும் ஐயர் பச்சரிசியை மட்டும் தானமாகப் பெறுவார்.

வட இந்தியாவின் பார்ப்பன – ‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கமலபதி திரிபாதி என்ற உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அதற்கோர் உதாரணம். அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம், எம்.சி.ஏ. புத்திரனுக்கு இதே உட்பிரிவில் வெல்  – எஜுகேட்டட் பெண் தேவை’ என்றுதான் மணவிளம்பரம் கொடுப்பான். ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா வாடகைக்கு உள்ளது. பிராமின்ஸ் மற்றும் சைவாள் தொடர்பு கொள்க’ – இவ்விளம்பரம் சென்னையில் அடிக்கடி வெளிவரும்.

20-ஆம் நூற்றாண்டின் கணினி யுகத்திலேயே கிராமம், நகரம், சென்னை, தில்லி, அமெரிக்கா என்று எல்லா இடங்களிலும் தனி வாழ்க்கை முறையைத்தொடர்பவர்கள் யார் என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். இனி இந்துமத வெறியர்களின் அவதூறைப் பரிசீலிப்போம்.

கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தமிழகமெங்கும் முசுலீம் குடியிருப்புகளில் போலீசு காவல் அரண் வைத்துச் சோதிப்பதாக நாளேடுகள் செய்தி வெளியிடுகின்றன. ஏதோ தீவிரவாதத்தை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டே, அவர்கள் தனியாகக் குடியிருப்பதுபோல செய்தி நிறுவனங்களும், இந்து மதவெறியர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இது அப்பட்டமான பொய். ஏற்கனவே பார்த்ததுபோல சாதி ஆதிக்க உணர்வு நிரம்பி வழியும் சமூகத்தில் அனைத்துத் தனிக் குடியிருப்புகளுக்கும் காரணம் பார்ப்பனியம்தான். பார்ப்பன ‘மேல்’ சாதியினர் தங்களது புனிதத்தைக் காக்க, தாங்களே தெரிவு செய்து தனியாக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக வாழ்வது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்று. முசுலீம்களுக்கும் இது பொருந்தும்.

சாதி இந்துக்கள் பலரும் முசுலீம் மக்களுக்கெதிராகக் கொண்டுள்ள பண்பாட்டு வெறுப்பு, முசுலீம் மக்களின் ஏழ்மை இவைகளே அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது. கிராமங்களை விடுங்கள், நகரங்களில் கூட சேர்ந்து வாழ நினைத்தாலும் முசுலீம்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாரும் வீடு தருவதில்லை. அநேக நகரங்களில் முசுலீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அருகருகிலோ, கலந்தோதான் வாழ்கின்றனர். அதிலும் இவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதாலும் சேர்ந்து வாழ்கின்றனர். கிறித்தவ மதத்திலும் வர்க்க சாதி வேறுபாட்டுக்கேற்பவே சேர்ந்தோ, தனியாகவோ வாழ்கின்றனர்.

எனவே, இசுலாமிய மக்களின் தனிக்குடியிருப்புக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பு சாதி வர்க்கத் துவேசமாகும். பம்பாய், கோவை, திருவல்லிக்கேணி கலவரங்களில் சேரிகளில் முஸ்லீம் மக்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மக்களே முசுலீம்களைத் தாக்கினர். தனியாக இருந்தும் ஏழைகளாக இருந்தும் இரு பிரிவினரையும் ஒருவரையொருவர் மோதவிட்டிருப்பது தான் இந்து மதவெறியர்களின் சமீபத்திய சாதனையாகும்.

எனவே, சாதி  – மதக் கலவரங்களுக்காகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றால் – இந்து மதவெறியர்கள், சாதி வெறியர்கள் வாழும் அக்ரஹார – ‘மேல்’ சாதிக் தெருக்கள்தான் கண்காணிக்கப்பட வேண்டும். அதேபோல மக்கள் விரோத – தேசவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு நகரத்தின் பணக்கார வர்க்கம் வாழும் பகுதிகளையும், நட்சத்திர விடுதிகளையும் கண்காணிக்க வேண்டும்.

– தொடரும்.

முந்தைய பாகங்களுக்கு :