privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்இந்து - முஸ்லிம் - தமிழ் கூட்டணியில் 5 வயது சிறுமி நரபலி!

இந்து – முஸ்லிம் – தமிழ் கூட்டணியில் 5 வயது சிறுமி நரபலி!

-

நரபலி சிறுமி ராஜலட்சுமி
கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமி

அலகு குத்துவதும், கங்கு மிதிப்பதும், காவடி தூக்குவதும் என்றெல்லாம் இருக்கும் மூடநம்பிக்கைகள் தன்னையே வருத்திக் கொள்ளும் வரை தொலையட்டும் என்று விடலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கைகள் குடி கொண்டிருக்கும் அடித்தளமெது? குறிப்பிட்ட சடங்கையோ, பரிகாரத்தையோ, வலி நேர்த்திக்கடனையோ செய்து விட்டால் சம்பந்தப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த மதத்தவரும் விதிவிலக்கல்ல. ஆனால் அந்தப் பரிகாரம் ஒரு குழந்தையை நரபலி கொடுத்துத்தான் தீரும் என்றால்? அதையும் செய்திருக்கிறார்கள் சில கொடியவர்கள். இந்தக் கொடூரத்தில் இந்து, முசுலீம் என இரு மதங்களோடு தமிழ் உணர்ச்சியும் கலந்திருக்கிறது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்த தொத்தன் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவர். இவரது 5 வயது மகள் ராஜலட்சுமி கடந்த 2011 ஜனவரி 1-ம் தேதியன்று காணாமல் போகிறாள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவள் கண்டெடுக்கப்படுகிறாள். சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் இது நரபலியாக இருக்கலாமென்று போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் மலபார் என்ற கருப்பு மீது சந்தேகமேற்பட்டு கைது செய்யப்படுகிறார். அவரைத் தொடர்ந்து கருப்புவின் தந்தை மகாமுனியும்(65) கைது செய்யப்பட்டார். அவரோ உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்து போகிறார். நாக்கை அறுத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் சேர்ந்த கருப்புவும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இது கொலையா, தற்கொலையா, தற்கொலைக்கு நெருக்கடி கொடுத்த நிர்ப்பந்தமா என்பதெல்லாம் தெரிய வருமா என்பது சந்தேகம்தான்.

சிறுமியின் கொலை கண்டிப்பாக நரபலிதான் என்பதோடு தேடப்படும் நபர்களின் மர்ம மரணம் காரணமாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்ட 16 மாதங்களுக்குப் பிறகு தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிறுமி அணிந்திருந்த கொலுசு வாடிப்பட்டி அடகுக் கடையில் இருந்ததை வைத்து அதைக் கொடுத்த முருகேசன் என்பவரை பிடித்து கைது செய்த போது இந்த அதிர்ச்சியூட்டும் நரபலியின் முழுக்கதையும் தெரிய வந்திருக்கிறது.

முருகேசன் கொடுத்த தகவலின் படி கச்சகட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் அயூப்கான் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நரபலியின் முதன்மைக் குற்றவாளியான அயூப்கான் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பதோடு முன்னர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தி.மு.கவில் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவரெல்லாம் காமா சோமா நபர்களாக இருக்கமாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கை. நாமும் நம்புவோம். அதன்படி அயூப்கானுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம், திராவிட இயக்க வரலாறு எல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்குமென்பதால் இவரது தமிழ் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது.

அடுத்து ஐந்து வேளையும் தவறாமல் அல்லாவைத் தொழும் முன்னுதாரணமான இசுலாமியனாகவும் இருந்திருக்கிறார். எனினும் அல்லா உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு பெரிய உணர்ச்சி ஒன்று உண்டு. வருமானத்தைக் கொடுக்கும் பொருளாதர உணர்ச்சிதான் இவரது வாழ்வின் அடிப்படையான உணர்ச்சி. சுயநிதிக் கல்லூரி முதலாளிகளாக இருக்கும் ஏனைய ஒட்டுக்கட்சி பிரமுகர்களைப் போல அயூப்கானும் மதுரை எல்லீசு நகரில் ஆசிரியை பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த ஒரு முதலாளி. பொறியியில் கல்லூரி முதலாளிகளின் வருமானம் இலட்சங்களில் இருக்குமென்றால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதலாளிகளின் வருமானம் ஆயிரங்களில் இருக்கும். கூடவே ஊராட்சி பதவி, கட்சிப் பதவி மூலம் வருமானங்கள் தனி.

நாளொரு மேனியும் வளர்ந்து வந்த கல்வித் தொழிலுக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டுமென்று தனிச்சியம் பகுதியில் கட்டிடம் கட்ட ஆரம்பித்தார் அயூப்கான். அதன் பெயர் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரியாம். இருப்பினும் அயூப்கான் நினைத்த வேகத்தில் கட்டிடம் எழவில்லை. வழக்கமாக கட்டிடம் கட்டுவதற்கு முன்னும் கட்டிய பின்னும் கோழியை பலி கொடுத்து அதன் ரத்தத்தை தெளித்து கட்டிடம் இடியாமல் இருப்பதற்கு கொத்தனார் ஒரு சடங்கு செய்வார். ஆனால் அயூப்கானுக்கு கோழி போதவில்லை. ஆகவே விரைவில் கட்டிடம் முடிக்கப்பட்டு தனது கல்வி வியாபரம் கொடிகட்டிப் பறக்க வேண்டுமென்று நினைத்ததால் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

கோழி என்றால் நூறு இருநூறில் முடிந்து விடும். ஆனால் கைமேல் பலன் தரும் நம்பிக்கை என்றாலும்  குழந்தைக்கு எங்கு போவது? இதனால் கச்சைக் கட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு, பொன்னுசாமி, முருகேசன் ஆகிய மூவரையும் தொடர்பு கொண்டு தனது கொடூர ஆசையை தெரிவித்து எத்தனை இலட்சம் செலவானாலும் தருகிறேன் என்று பேசி முடிக்கிறார். நரபலிக்காக மொத்தம் ஆறு இலட்ச ரூபாய் ரேட் பேசுகிறார், அயூப்கான்.

ஆறு இலட்சமா என்று வாய்பிளந்த அந்த கும்பல் உடனே காரியத்தில் இறங்கியது. அன்றலர்ந்த மலர் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இராஜலட்சுமியை கடத்தி கருப்பின் வீட்டில் வைத்தனர். பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியின்  கழுத்தை துடிக்கத் துடிக்க அறுத்து இரத்தத்தை தூக்கு வாளியில் பிடித்துக் கொண்டனர். சிறுமி இறந்து போகிறாள். பின்னர் உடலை வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் போட்டுவிடுகின்றனர். கருப்புவின் தந்தை மகாமுனி மட்டும் இரத்தம் அடங்கிய தூக்குவாளியை அயூப்கானை சந்தித்து கொடுக்கிறார். அல்லாவைத் தொழும் அயூப்கானும் கல்லூரிக் கட்டிடத்தை சுற்றி அந்த ரத்தத்தை தெளிக்கிறார். பின்னர் அந்த மூவர் கும்பல் அயூப்கானிடம் ஆறு இலட்ச ரூபாயை பெற்றுக் கொள்கிறது.

இவையெல்லாம் முதலில் கைது செய்யப்பட்ட முருகேசன் மூலம் படிப்படியாக மற்றவர்கள் பிடிபட்டு போலிசிடம் தெரிவித்த தகவல்கள். அதன் பின்னரே அயூப்கான் கைது செய்யப்படுகிறார். இப்போது மகாமுனி, கருப்பு ஆகிய இருவரின் மர்ம மரணங்கள் எப்படி நடந்திருக்குமென்பதை நாம் யூகிக்கலாம்.

நரபலி

மனித குல வரலாற்றின் ஆரம்பத்தில் புராதான இனக்குழு சமூகமாக இருந்த மனிதர்கள் பின்னர் அடிமையுடமை சமூகத்தில் நுழையும் போது நரபலியும் தோன்றுகிறது. இயற்கை சீற்றங்கள், பருவ கால மாற்றங்கள், இனக்குழுச் சண்டைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாத மனித சமூகம் அவற்றை நிறுத்த வேண்டி இனக்குழு கடவுளர்களுக்கு பலியிடலை செய்கிறது. ஆரம்பத்தில் விலங்குகள் பிறகு மனிதர்கள் என்று அது மாறுகிறது.

பார்ப்பனியத்தின் வரலாற்றிலும் விலங்குகளைப் பலியிடும் சடங்குகள் தீவிரமாக இருந்தது. கூடவே மனிதர்களை பலியிடுவதும் நடக்கிறது. மகாபாரதத்தில் வரும் அரவான் பலி அதற்கோர் சான்று. இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டு வரை பரவலாகவே இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. அன்றைக்கு இயற்கைக்கு அஞ்சிய மனிதகுலம் செய்த நரபலி, இன்று இயற்கையை மனிதன் கட்டுப்படுத்தும் காலத்திலும் தொடர்வதற்கு காரணமென்ன?

இன்னும் பின்தங்கிய நிலவுடமைச் சமூகங்களாக இருக்கும் நாடுகளில் இந்த வழக்கம் நீடிக்கிறது. குறிப்பாக ஆப்ரிக்கா, இந்தியா இரண்டிலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமிருக்கின்றன. வாழ்க்கைப் பிரச்சினைகளை வெளிப்படையான ஜனநாயத்தில் தீர்த்துக் கொள்ளும் சூழலில்லாத நிலையில் அந்த இடத்தை மதமும், மூடநம்பிக்கைகளும் கைப்பற்றிக் கொள்கின்றன. என்னதான் தொழில் நுட்ப புரட்சியும், நவநாகரீகமும் வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன இந்து மதம் உருவாக்கியிருக்கும் மூடநம்பிக்கைகள் கருவறை முதல் கல்லரை வரை செல்வாக்கு செலுத்துகின்றது.

இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. பார்ப்பனியத்தின் அடிப்படை விதிகளை விடாத பல முதலாளிகள் இந்தியாவில் உண்டு. மேலும் குறுக்கு வழியில் அதிக பணம் சேர்க்க வாய்ப்புகளை வழங்கும் இந்த மறுகாலனியாக்க சூழ்நிலையில் அந்த மூடநம்பிக்கைகள் முன்னிலும் வலுவாக பின்பற்றப்படுகின்றன. எனில் இந்த அடிமை சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு பெரியார் செய்த பணிகளை இன்னும் எத்தனை வீச்சில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரியார் இயக்க வழியில் வந்த ஒரு உடன்பிறப்பே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறது என்பதிலிருந்து திராவிட இயக்கத்தின் தோல்வியையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

மதுரை மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி அயூப்கான் முற்றிலும் தி.மு.கவிலிருந்து நீக்கப்படவில்லை. இது பொய்க்குற்றச்சாட்டு என்று அயூப்கான் மறுத்திருப்பதால் அவர் சட்டரீதியாக விடுதலையாகும் வரை தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை, அவரை அன்றாட நடவடிக்கைகளிலிருந்து நீக்கி வைப்பது என்பதுதான் தி.மு.கவின் முடிவு.

ஒன்றரையாண்டுகளாக நடந்து வரும் வழக்கு, கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது அயூப்கானின் பங்கையும் குற்றத்தின் முகாந்திரத்தையும் மேலோட்டமாகக்கூட உணரலாம். ஆனால் ஊரேல்லாம் சொத்தை கைப்பற்றிய தி.மு.க பிரமுகர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சொத்துக்கள் கைவிட்டுப் போகக்கூடாது என்று அவர்கள் ஏதாவது சடங்கு, பரிகாரங்களை கண்டிப்பாக செய்வார்கள். அதன்படி அந்த சடங்கை கொஞ்சம் வரம்பு மீறினார் என்றாலும் அயூப்கான் செய்திருப்பதை உடன்பிறப்புகள் அதிர்ச்சியாகப் பார்க்கவில்லை.

நரபலிதான் என்று முடிவான பிறகு அயூப்கான் தனது வீட்டு இளைஞர்களையோ, பெண்களையோ, குழந்தைகளையோ நினைக்கவில்லை. சொந்த பந்தங்களை பார்க்காத அந்தக் கால நரபலி இன்று அப்படி பார்த்து சம்பந்தமில்லாத நபரை அதுவும் குழந்தையை கொல்லலாம் என்று முன்னேறியிருப்பதுதான் பரிணாம வளர்ச்சி போலும். அதிலும் ஒரு தலித் சிறுமி என்றால் கேட்பார் நாதியில்லை அல்லவா?

ஊரை விட்டு விலக்கி வைக்கப்ப்ட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தம், ஊரை கொள்ளையடித்து சேர்த்த சொத்தை காப்பாற்றுவதற்கு மட்டும் வேண்டும். ஒரு பச்சைப் பிஞ்சைக் கொன்று தனது கல்லூரியை இலாபகரமாக நடத்த வேண்டுமென்றால் எவ்வளவு வெறி வேண்டும்? இத்தகைய பிரமுகர்கள்தான் அரசியலிலும், ஊராட்சி பதவிகளிலும், பள்ளி – கல்லூரிகளை நடத்தும் தொழிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள்? அந்த துணிச்சலுக்கு மத நம்பிக்கை இருக்க வேண்டுமென்பதில்லை. அதைத்தானே போபால் படுகொலையில் பார்த்தோம்.

ஆரம்பத்தில் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பிற்கு மாற்று என்று தோன்றிய இசுலாமும், கிறித்தவமும் கூட இறுதியில் இந்து மதத்தின் செல்வாக்கில் கரைந்து விட்டிருக்கின்றன. பார்ப்பனியத்திடம் சரணடைந்த இசுலாம் என்ற கட்டுரைக்கு இணையத்தில் இருக்கும் இசுலாமிய ‘அறிவாளிகள்’ பொங்கினார்கள். இதற்கு மதத்தை குற்றம் சாட்டாதீர்கள் என்ற நழுவல் வேறு. இவர்களெல்லாம் இணையத்தில் பாதுகாப்பாக நன்னெறி மார்க்கத்தை போதித்து தமக்குத்தாமே சுய இன்பம் காணும் சுயநலவாதிகள். நேரிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனை பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே சிறுநீர் கழிக்கும் கோழைகள். கிறித்தவர்களை வம்புக்கிழுத்து பைபிள் ஒரு ஆபாச நூல் என்று சவால் விடுவார்கள். ஆனால் இந்து புராணங்கள் ஒரு ஆபாசக் குப்பை என்று ஆர்.எஸ்.எஸ் காரனை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்க வக்கற்றவர்கள். அப்படி அழைத்தால் புரட்சித் தலைவியின் நெருப்பு இவர்களை சுட்டெரிக்கும் என்பதை தெரிந்தவர்கள்.

ஒருவேளை இந்து மதத்தை அம்பலப்படுத்தி நாம் அப்படி எழுதினாலும் இது மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என்று ஓடிவருவார்கள். இறுதியில் இவர்கள் மதநம்பிக்கை கொண்ட அயூப்கான் அதுவும் போறாது என்று ஒரு நரபலி செய்திருக்கிறாரே இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அமெரிக்காவை அண்டிப் பிழைக்கும் சவுதி ஷேக்குகள் உலக இசுலாத்தின் காவலர்கள் என்றால் பார்ப்பனியத்தின் நரபலியை பின்பற்றும் அயூப்கான்கள் போன்றோர்தான் உள்ளூர் இசுலாத்தின் பாதுகாவலர்கள். அமெரிக்காவிடமும், இந்து மதவெறியிடமும் சிக்கிக் கொண்டு துன்பப்படும் இசுலாமிய மக்கள் இந்தக் காவலர்களிடம் இருந்தும் விடுதலை பெற வேண்டும்.

தொன்மங்கள், நம்பிக்கைகள், படிமங்கள் வாயிலாக தொன்று தொட்டு வரும் இந்து ஞான மரபின் வேரை யாரும் அழிக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் ஜெயமோகன்கள் இந்த நரபலியின் தொடரும் தொன்மம் குறித்து விளக்கம் அளிப்பார்களா? எப்படி விளக்கினாலும் இந்த நரபலி இந்து ஞானமரபின் நீட்சிதான். அந்த நீட்சி இந்திய சமூகத்தை சின்னாபின்னாமாக்கியிருக்கும் யதார்த்தத்தை என்னதான் தரிசனம், அகம், உள்ளொளி என்று கீறிட்டாலும் யாரும் மறைக்க முடியாது.

இராஜலட்சுமி எனும் அந்த ஐந்து வயது தாழ்த்தப்பட்ட சிறுமி இன்று இல்லை. அவளைக் கொன்ற கொடியவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஊரறியக் கொன்ற ரன்வீர் சேனா கொலையாளிகளையே விடுவித்த நாடில்லையா? ஆனால் இந்து, இசுலாம், தி.மு.க, தமிழுணர்வு என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் தங்களது அகத்தை கொஞ்சம் கீறி சுய விமரிசனம் செய்து கொள்ளட்டும். இராஜலெட்சுமி சிந்திய இரத்தத்தை அப்படியாவது வீணாகாமல் காட்டுங்கள். பார்க்கலாம்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: