“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் அப்பட்டமான சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சு இப்போது செயல் வடிவம் பெற்று வருகிறது. வன்னிய சாதிவெறியின் கோரத் தாண்டவத்துக்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.

நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். நாய்க்கன் கொட்டாய் பகுதியே வன்னிய சாதியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்பதாலும் அதிலும் சமீப ஆண்டுகளாய் இவர்களிடையே சாதிவெறி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும் தாங்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடியாது என்று திவ்யாவும் இளவரசனும் அஞ்சினார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் நடந்த உடனேயே வன்னியர்கள் தரப்பிலிருந்து மிரட்டல்களைச் சந்திக்கத் துவங்கிய புதுமணத் தம்பதிகள், தங்கள் பாதுகாப்புக்கு காவல் துறையை நாடினார்கள்.

தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரையும் தர்மபுரி எஸ்.பி அஸ்ரா கர்க்கையும் சந்தித்து முறையிடுகிறார்கள்.

இதற்கிடையே திவ்யாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி வன்னியர்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக நத்தம் காலனி மக்களுக்கும் இளவரசனின் உறவினர்களுக்கும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நவம்பர் 5ம் தேதி திவ்யாவின் பெற்றோர் தங்கள் சாதியைச் சேர்ந்த சுமார் 500 பேர்களுடன் நத்தம் காலனிக்கு வெளியே திரண்டு பஞ்சாயத்து பேச வருமாறு இளங்கோவின் உறவினர்களை அழைத்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு நத்தம் காலனியில் இருந்து சுமார் பத்து பேர் சென்றுள்ளனர்.

வன்னியர்கள் தரப்பிலிருந்து வந்திருந்த 500 பேர்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியப் பொருளாளர் மதியழகன் தலைமை தாங்கி வந்துள்ளார். நத்தம் காலனியில் இருந்து வந்தவர்களை நேரடியாக மிரட்டும் மதியழகன், “நாம பார்த்து வைப்பது தான் சட்டம். மரியாதையாக பெண்ணை ஒப்படைத்து விடுங்கள்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணை ஒப்படைப்பதற்கு நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதிக்கிறார். உரிய கெடுவுக்குள் பெண்ணை ஒப்படைக்காவிட்டால் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

சாதிவெறி தலைக்கேறிய நிலையில் மிக அதிகளவில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அஞ்சிய நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள், அந்த நேரத்தில் உடனடியாக தப்பிக்க எண்ணி அதற்கு ஒப்புக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான கட்டைப் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலும் நடந்துள்ளது. அங்கே தொடர்ந்து சென்று வந்த திவ்யாவின் தந்தை நாகராஜனை அங்கேயிருந்த வன்னிய சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், “பெண்ணை கீழ்சாதிக்காரனோடு அனுப்பி வைத்த பொட்டைப் பயல்” என்பது போல கேலி பேசி வெறியேற்றியிருக்கிறார்.

நவம்பர் 5ம் தேதி பா.ம.க மதியழகன் முன்னிலையில் நடந்த கட்டைப்பஞ்சாயத்தில் பெண்ணை ஒப்புவிப்பதாக நத்தம் காலனியைச் சேர்ந்த ஒருசாரார் ஏற்றுக் கொண்டு வந்திருந்தாலும், ஊருக்குத் திரும்பியதும் மற்றவர்கள் வேறு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திருமணம் முடிந்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக திவ்யா இளவரசனுடன் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் வலுக்கட்டாயமாக பெண்ணைத் திருப்பி அனுப்பினால், அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அஞ்சிய இளவரசனின் உறவினர்கள், நவம்பர் 7ம் தேதியன்று அவரை ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

பெண் திரும்பி வராத நிலையில் நாகராஜனின் உறவினர்களும் அவரைக் கேலி பேசி வெறுப்பேற்றிய நிலையில்  அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதிலும் அவர் விஷம் அருந்தினார் என்றும் அவரது நெருங்கிய உறவினர்களே அவருக்கு விஷத்தைப் புகட்டினர் என்றும் இருவேறு விதமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்.

நாகராஜன் இறந்து போன நிலையில், அக்கம் பக்கம் ஊர்களைச் சேர்ந்த வன்னிய சாதியினர் சுமார் 2000 பேர் திரட்டப்படுகிறார்கள். நாகராஜனின் சடலைத்தை எடுத்துக் கொண்டு செல்லங்கொட்டாயிலிருந்து நத்தம் காலனி வழியே தருமபுரி – திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்கு ஊர்வலமாய்க் கிளம்புகிறார்கள். வரும் வழியிலேயே மூன்று குழுக்களாய் பிரிந்து கொள்ளும் இந்த கும்பல், நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டம்பட்டி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறார்கள். இம்மூன்று பகுதிகளும் ஆதிதிராவிடர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதிகள்.

கையில் கிடைத்த கடப்பாரை, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டைகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் கிளம்பிய இந்த கும்பல், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிறது. அந்த சமயத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த ஆண்கள் கூலி வேலைகளுக்காக வெளியூர் சென்றிருந்தனர். சுமார் 40 பெண்களும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுமே காலனியில் இருந்துள்ளனர்.

கொலைவெறியில் உள்ளே நுழையும் கும்பலைக் கண்டதும் சிதறி ஓடும் பெண்கள் ஊருக்கு வெளியேயும் வயல்களுக்குள்ளும் புகுந்து மறைந்து கொள்கிறார்கள். பெயின்ட் அடிக்கப் பயன்படும் கருவியில் (Painting Gun) பெட்ரோலை  நிரப்பி எடுத்து வந்த கும்பல் அதை குடிசைகளின் மேலும் வீடுகளின் மேலும் பீய்ச்சி அடித்தும் பெட்ரோல் குண்டுகளை எரிந்தும் வீடுகளைக் கொளுத்தியிருக்கிறார்கள்.

நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

வன்னிய சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். தாக்குதல் நடத்திய கும்பலை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மதியழகன், சிவா, பச்சியப்பன், மகாலிங்கம், லலிதா மாது, ராஜேந்திரன் மற்றும் P.K சின்னச்சாமி ஆகியோர் திட்டமிட்டு வழிநடத்தியிருக்கிறார்கள். ஒரு படையெடுப்பைப் போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பங்கேற்ற வன்முறைக் கும்பலில் பெரும்பாலும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

நத்தம் காலனியிலும் கொட்டாம் பட்டியிலும் மாலை நான்கு மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது மணி வரை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். அண்ணா நகரில் இரவு 11 மணி வரை தொடர்ந்து வீடுகளை எரிப்பதும், பொருட்களைக் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடந்துள்ளது.

ஒரு பக்கம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு குழு ரம்பத்தால் மரங்களை அறுத்து தருமபுரி திருப்பத்தூர் சாலையில் தடுப்பரண்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் தீயணைப்புத் துறையும் நெருங்க விடாமல் செய்ததுடன் உள்ளே நுழைய முயன்ற காவல்துறை வாகனங்களை கற்களை எறிந்து தாக்கியிருக்கிறார்கள்.

சென்றாண்டு பரமக்குடியில் தலித்துகளிடம் துப்பாக்கியால் பேசி வீரம் காட்டிய போலீசு,  இங்கு வன்னிய ஆதிக்க சாதியினரின் முன் பணிந்து போயிருக்கிறார்கள். இத்தனைக்கும் சம்பவம் நடக்கும் பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது.

தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கும் செல்லங்கொட்டாய் நத்தம் காலனி பகுதியில் சாதி ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும் இப்போது நடந்துள்ளதைப் போன்ற வெறித்தனமான தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை. தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாங்கள் அங்கே சென்றிருந்த போது நத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, “ நக்சலைட்டு கட்சி வலுவிழந்து போனது தான் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது” என்று கண்ணீரோடு தெரிவிக்கிறார்.

எண்பதுகளில் வன்னிய சாதி அடையாளத்தோடு துவங்கப்பட்ட ராமதாஸின் பா.ம.க, தொண்ணூறுகளிலிருந்தே ‘பாட்டாளி’ முகமூடியோடு  பச்சோந்தித்தனமாக பல்வேறு தேர்தல் கூட்டணிகளின் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்கிறது. ராமதாஸின் பிழைப்ப்புவாதமும் சந்தர்பவாதமும் சாதாரண மக்களின் முன் போதிய அளவுக்கு அம்பலமான நிலையில் இரண்டாயிரங்களின் மத்தியிலிருந்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து அரசியல் அரங்கில் தனிமைப்படுகிறார்.

வேல் முருகன் போன்ற அவரது முன்னாள் கூட்டாளிகளே தனி கடை போட்டு பிழைப்புக்குப் போட்டியாக உருவெடுக்கிறார்கள். கரைந்து கொண்டிருக்கும் தனது அரசியல் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுப்பதற்காக தற்போது மீண்டும் வன்னிய சாதிவெறியை  கையிலெடுத்திருக்கும் ராமதாஸ், தற்போது வன்னியர்களிடையே சாதிவெறியைத் தூண்டி விட்டு மக்களிடையே பிளவுண்டாக்கி ரத்தம் குடிக்கும் வெறியோடு வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சாதிப் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி வந்திருந்த ராமதாஸ், இந்த வகையில் தனது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி அமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் குருவின் சாதிவெறிப் பேச்சு மகாபலிபுரத்தில் அரங்கேறுகிறது. சாதிக்காக என்ன செய்தாலும் தங்களைக் காப்பாற்ற ஒரு அமைப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையை சாதிவெறியேறிய லும்பன் கூட்டத்துக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தான் இந்தக் கலவரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தருமபுரிக் கலவரத்தைத் தொடர்ந்து 96 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்டு செய்யக் கூடாது என்பதற்காக எஸ்.பி அஸ்ரா கர்க் மற்றும் தலைமை மேஜிஸ்டிரேட் வரை சென்று வாதாடியுள்ளனர்.

அரசியல் அரங்கில் சாதிவெறி மீண்டும் அரங்கேறி உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு துடிக்கிறது. நவீன தொழில் நுட்ப புரட்சியின் காலம் என போற்றப்படும் இந்நிகழ்காலத்தில்தான் சாதிவெறியும் முடிந்த மட்டும் ஒருங்கிணைத்துக் கொண்டு வன்முறையில் குதிக்கிறது. இதை இணையம் தொட்டு நாய்க்கன் கொட்டாய் வரை காணலாம். இதனால் தலித் மக்களின் வாழ்வுரிமை பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறது. பல வருடங்கள் உழைத்து சேர்த்த வீடும், பொருட்களும் நாயக்கன்கொட்டாய் மற்றும் ஏனைய பகுதிகளில் சூறையாடப்பட்டன. இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் வளர்வதும் வன்னிய சாதிவெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த ஆபத்திலிருந்து தலித் மக்களைக் காப்பாற்றுவதாய் கூறிக் கொள்ளும் தலித் கட்சிகளும் இப்போது ஆகச் சீரழிவான நிலைக்கு இறங்கிச் சென்ற பின், அந்த மக்கள் இன்று பாதுகாப்பற்று தனித்து விடப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதிவெறி என்பது அந்த சாதியில் இருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கே  எதிரானது என்பதை அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொள்வதோடு தம்மைப் போன்றே இழப்பதற்கு ஏதுமற்ற உழைக்கும் மக்களான தலித்துகளோடு கரம் கோர்ப்பதன் மூலம் தான் ராமதாஸ் தலைமைதாங்கும் வன்னிய சாதிவெறியை அகற்ற முடியும். இவ்வாறு வர்க்கமாக அணிதிரள்வதன் மூலம் தான் பொருளாதார விடுதலையை மட்டுமல்ல, சாதி ஒழிப்பையும் சாத்தியமாக்க முடியும்.

____________________________________________

– வினவு செய்தியாளர்கள்
_________________________________________