privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதனிமனிதரும் சமூக மாற்றமும் : ஊரான், தீபா

தனிமனிதரும் சமூக மாற்றமும் : ஊரான், தீபா

-

என் பார்வையில் வினவு – 33 : ஊரான்

நான் படிப்பது, பார்ப்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என எனது புலனறிவுக்கு எட்டியவை குறித்து பிறரோடு பகிர்ந்து கொள்வதும், அதன் மீதான மற்றவர்களின் கருத்துக்களை அறிய விரும்புவதும் எனது அன்றாட வழக்கம். வினவு தொடங்கிய போது வினவில் வெளியான படைப்புகளைப் படித்து விட்டு அதன் மீதான கருத்துகளைக் கூட என்னால் தெரிவிக்க முடியாமல் தவித்த காலம். நான் படித்ததை நண்பர்களோடு, தோழர்களோடு பகிர்ந்து கொள்ள முயற்சித்தால் அவர்கள் வினவு படிப்பதில்லை அல்லது படிக்க வாய்ப்பில்லை என்பார்கள். உலகின் அழகிய மணமக்கள் ! கட்டுரையை செப்டம்பர் 2010-ல் படித்த போது அதன் மீதான கருத்தை எப்படியாவது சொல்ல வேண்டும் என்கிற உந்துதல் என்னுள் எழுந்த போது தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்த தோழர் ஒருவரின் மூலம் அதன் மீதான எனது கருத்தை பதிவு செய்தேன். அது ஒரு நீண்ட கருத்துப் பதிவு. இப்படித்தான தொடங்கியது வினவோடு எனது உறவு.

அதன் பிறகு நானே தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்து கொண்டு பல கட்டுரைகளில் எனது கருத்துக்களை பதிவு செய்யலானேன்.  மே 2010-ல் வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !! என்கிற வினவில் வெளியான கட்டுரை அக்டோபர் 2010-ல் ஊரான் வலைப்பூ தொடங்கக் காரணமாக அமைந்தது. நவம்பர் 2010-ல்  “ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா? என்கிற கட்டுரையும், டிசம்பர் 2010-ல் மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்! என்கிற கட்டுரையும் வினவில் வெளியான போது என்னாலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு சில கட்டுரைகளை நான் வினவுக்கு அனுப்பிய போது எனக்குக் கிடைத்த பதில் “மக்களின் போராட்டங்கள், அதன் விவரங்கள் பற்றிய கட்டுரைகள் இருந்தால் அனுப்புங்கள்” என்பதுதான். வினவின் வருகைக்குப் பிறகு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுதுவது அதிகரித்துள்ளது என்பதை வலையுலகம் நன்கறியும்.

இணைப்பு
மக்களின் போராட்டம் குறித்து எழுத வேண்டுமானால் நம்மையும் மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொண்டால்தான் அது சாத்தியம்.

பெரும்பாலும் தனிமனித சிந்தனை சார்ந்த கட்டுரைகளே என்னால் எழுத முடிந்தது. மக்களின் அன்றாடத் தேவைகள், அதற்கான போராட்டங்கள் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுரைகளை அனுப்பக் கோரினர். தனிமனித சிந்தனைப் போக்கு குறித்து எழுதுவது சுலபமானது, ஆனால் மக்களின் போராட்டம் குறித்து எழுத வேண்டுமானால் நம்மையும் மக்களின் போராட்டத்தில் இணைத்துக் கொண்டால்தான் அது சாத்தியம் என்பதை உணர வைத்தது வினவு.

தனி மனிதனின் சிந்தனையில் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டால் சமூகம் தானாக மாறிவிடும் என்கிற மேம்போக்கான கருத்தையே பலரும் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் ஒழுக்க நெறிகளை அன்றாடம் போதித்து வருகின்றனர். ஆனால் இத்தகைய போதனைகள் எதுவும் மக்களிடம் எடுபடுவதில்லை. வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது, எனவே வாழ்நிலையை மாற்றுவதற்கான போராட்டம் இன்றி சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்கிற மார்ச்சிய பாடத்தைத்தான் வினவு நம்மிடையே பதிய வைக்கிறது.

ஒரு சமூகம் சீரழிந்துள்ளது என்றால் அது பின்பற்றும் அரசியல் – பொருளாதார கொள்கைகளும், நடைமுறைகளுமே காரணமாக அமைகின்றன. இதை மாற்றி அமைக்காமல் ஒட்டு மொத்த சமூகத்தையும் விடுவிக்க முடியாது. இதற்கு மார்ச்சியத்தைத் தவிர வேறு சித்தாந்தங்கள் ஏதும் கிடையாது. ஆனால் பெண்ணியம், சூழலியம், தலித்தியம், தமிழியம் என ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவற்றை சரி செய்தால் போதும் எனப் போராடுகின்றனர். இத்தகைய அணுகுமுறை மக்களை பிளவு படுத்துவதோடு மக்கள் விரோத அரசை தூக்கி எறிந்து ஒரு மாற்று மக்கள் அரசை அமைப்பதற்கு பெரும் தடையாக அமைகின்றன.

வினவு வெறும் ஊடகம் அல்ல. வினவு ஒரு போராளி. அதனால்தான் மக்களின் அன்றாட வாழ்வைப் பறிக்கும் அரசின் கொள்கைகள், நடைமுறைகள் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்துகிறது. இத்தகைய போராட்டங்கள் குறித்து எழுதும் போது  மக்களின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? சமரசவாதிகள் யார்? என்பதை அடையாளம் காட்ட வேண்டி வருகிறது. இத்தகைய சூழலில்தான் வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள், சாதி – மத அமைப்புகள், இனவாதிகள் என பலரும் அம்பலப்பட்டுப் போகிறார்கள். அவர்களை மக்களின் எதிரிகளாக வினவு காட்டவில்லை. அவர்களேதான் அம்பலப்பட்டுப் போகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் வினவுக்கு எதிராக நிற்கின்றனர். மக்களின்பால் பற்று கொண்டோர், பிறகு வினவின் கருத்தை ஏற்கின்றனர். பிழைப்புவாதிகள் மட்டுமே தொடர்ந்து வினவை எதிர்த்து வருகின்றனர். வினவின் வாசகன் என்கிற முறையில் வினவை நான் இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளேன்.

புகழ்வதற்காக நான் இதை எழுதவில்லை. புரிதலுக்காகத்தான் எழுதுகிறேன். வினவுக்கு ஆலோசனைகள் சொல்வதைவிட வினையாற்ற செல்வதே மேல் எனக் கருதுகிறேன்.

நன்றியுடன்
– ஊரான்
www.hooraan.blogspot.in

______________________________

என் பார்வையில் வினவு – 34 : தீபா

2009. அப்போது தான் தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமாகி இருந்த நேரம். இத்தனை பேர் தமிழில் எழுதுகிறார்களா என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த சமயம். தீவிர இலக்கியக்கட்டுரைகள், கவிதைகள், சினிமா அலசல்கள், நகைச்சுவைப் பதிவுகள் என்று பல்வகையான எழுத்துக்கள் தமிழ் வலைப்பூக்களில் வலம் வந்து கொண்டிருந்தன.

முற்போக்கு எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்களை (திரு. மாதவராஜ் உட்பட) விமர்சனம் செய்வதும் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதுமான தளமாகத் தான் வினவு முதலில் அறிமுகமானது. ஆனால் வெகு விரைவில் புரிந்து போயிற்று – வினவு வம்பு (மட்டும்) செய்யும் தளம் அல்ல எழுத்தின் மூலம் ஆரோக்கியமான விவாதங்களையும், கலகங்களையும் உண்டாக்கக் கூடியது என்று.

மேலும், மதிப்புக்குரிய டாக்டர். ருத்ரன் அவர்களின் “ஆன்மிகச் சந்தை – ஒரு முன்னுரை” என்ற தொடரை வினவில் வாசித்ததும் இனி வினவைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் கோரமுகத்தைத் தொடர்ந்து தோலுரித்துக் காட்டிக் கொண்டே இருப்பதன் மூலம், அன்றாட வாழ்க்கையில் நமக்கே தெரியாமல் அதற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கும் நமது மனசாட்சியைச் சதா தொந்தரவு செய்வது தான் வினவின் வெற்றி. ”மகிழ்ச்சியின் தருணங்கள்”, “பாராளுமன்றத்திற்குச் சென்ற பால்காரம்மா” போன்ற கட்டுரைகளை நினைத்த போதெல்லாம் பலமுறை வாசித்ததுண்டு.

சில படங்கள் நமக்கு ரொம்பப் பிடிக்கும்; பலரும் சிலாகிக்கும் சில படங்கள் நமக்கு அநியாய எரிச்சலைத் தரும் (எ.கா: மதராசப்பட்டினம்); அதன் காரணங்கள் வினவின் விமர்சனத்தைப் படிக்கும் போது தான் புரிந்து தெளிவு பிறந்தது. குறிப்பாக, “அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன” என்ற வினவின் மாற்றுப் பார்வை இவ்வளவு விஷயம் இருக்கிறதா, நமக்கு ஒன்றுமே தெரியவில்லையே என்று எண்ணமிட வைத்தது.

அதன்பின் எந்தவொரு முக்கிய நிகழ்வாயினும் அது பற்றி வினவின் கோணத்தை அறிய விரும்புவது வாடிக்கையானது. பொதுவாய் நாம் ஏற்றுக் கொண்டு செல்லும் பல விஷயங்களையும், சினிமா பிரபலங்களின் மீது இருக்கும் மயக்கத்தினால் அவர்களது விளம்பர ஸ்டண்டுகளை நம்பிப்பாராட்டும் (சூர்யாவின் அகரம் நிறுவனம், தல மட்டன் பிரியாணி உட்பட) நிகழ்வுகளையும் விமர்சிப்பதன் மூலம் நமது பொதுவான பார்வையைக் கலைத்துப் போட்டு உண்மையைப் பார்க்கத் தூண்டும் வினவின் யுக்தியும், ”எல்லாத்துக்கும் ஒரு கோணக்கட்சி பேசறாங்க” என்ற விமர்ச்னத்தை வினவு எதிர்கொள்ளும் விதமும் பிடித்திருந்தது.

இதனிடையே என்னுடைய சில இடுகைகளில் வினவு பின்னூட்டமிட்டது ஊக்குவிப்பதாகவும், பொறுப்புடன் எழுத வேண்டுமென்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்தது. (ஆனாலும் நான் மொக்கையாகவும் தான் எழுதி வந்தேன் என்பது வேறு விஷயம்!)

2010 பெண்கள் தினத்துக்காக எழுதச் சொல்லி அழைத்ததும் அன்னா, சங்கரி, தமிழச்சி, உமாருத்ரன் சந்தனமுல்லை போன்ற பலரின் சிறந்த கட்டுரைகளுக்கிடையே என்னுடைய கட்டுரையும் வெளிவந்ததும் பெருமைக்குரிய நினைவுகள். குறிப்பாகத் தோழர் சங்கரி எழுதிய  ”நாப்கின்” கட்டுரை மறக்கமுடியாத ஒன்று.

2011 இல் டிவி சீரியல்களில் பெண்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டார்கள். அதைப் பகடி போல் எழுதி விட்டேன்; இன்னும் ஆழமாக எழுதி இருக்கலாம் என்ற உணர்வு இன்னும் எனக்கு உண்டு.

பிறகு வெகுகாலம் பதிவுலகத்திலிருந்து (இன்று வரை) ஒதுங்கியே இருக்க நேர்ந்து விட்டது. வலைப்பூக்கள் வாசிப்பதும் தொடர்வதும்  வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனால் வினவு மறக்கக்கூடியது அல்ல; அலுவலகத்தில் யாராவது வினவை வாசிப்பது கண்டால், சட்டென்று அவர்களிடம் ஒரு தோழமை உணர்ச்சி தோன்றுவதும், அவர்களிடம் வாசிப்பதைப் பகிர்ந்து கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. அப்படி ”வினவு வாசிக்கும்” நண்பர்கள் எல்லா இடத்திலும் இருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் வெளியாகும் சாய்நாத், அருந்ததிராய் ஆகியோரின் முக்கியமான கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு உடனடியாக வெளியாவதும் வினவின் சிறப்பம்சங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

வினவுக்கு ஆலோசனைகளும் விமர்சனங்களும் சொல்லும் அளவுக்கு எனக்கு அரசியல் அறிவு  போதாது. முற்றிலும் ஜனநாயக முறையில் வினவு ஊக்குவிக்கும் மறுமொழிகளும், வளர்த்து விடும் விவாத முறைகளுமே அதைப் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆறாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் வினவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

– தீபா
சிதறல்கள்
Just My Thoughts