த்துணவு ஊழியர்களின் போராட்டம் கடந்த 25.10.2018 அன்று தொடங்கி  நவம்பர் 2-ம் தேதி தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தின் நோக்கம், சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது ஒட்டு மொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களைப்போல் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து சத்துணவு ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து விட்டு காலவரையற்ற வேலை நிறுத்தம், சாலை மறியல், ஊராட்சி ஒன்றிய அலுவலக முற்றுகைப் போராட்டம், இறுதியாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்று நடத்தி ஓய்ந்திருக்கிறது.

இந்த போராட்டம் என்பது ஊழியர்களின் ஜனநாயகப்பூர்வமான போராட்டம்.. அவர்களின் கோரிக்கையும் மிகமிக அத்தியாவசியமான, நியாயமான கோரிக்கை… இதனை அமல்படுத்தகோரி  போராடிய  பல இடங்களில் அனுமதி மறுத்தும், பெண் ஊழியர்களையும், நிர்வாகிகளையும் கைது செய்தும் போலிசு ஜனநாயக விரோத செயலை வழக்கம்போல் நிலைநாட்டியது. அது இப்பொழுது மட்டுமல்ல. தங்கள் கோரிக்கைக்காக போராடிவரும் கடந்த 30 ஆண்டுகாலமாக இதுதான் நிலைமை!

யார் இந்த சத்துணவு ஊழியர்கள்….!

குறைந்தபட்ச கல்வித் தகுதி அடிப்படையில் கடந்த 1982-ம் ஆண்டு வேலையற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில்  குறளமுதாசிரியர் என்ற பெயரில் அவர்களை பணிக்கு அமர்த்தியது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு. அப்பொழுது அவர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு 1 ரூபாய் வீதம் மாதம் முப்பது ரூபாய் என்று தீர்மானித்தது. சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 50 பைசா. இதற்கு முன்பு பள்ளிகளில் சத்துணவு போடும் பொறுப்பை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்கள் கவனித்து வந்தனர்.

படிக்க :
அங்கன்வாடி
மழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

பணிச்சுமையாக இருக்கிறது என்று அவர்கள் இதனை எதிர்க்கவே இத்திட்டம் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அரசு ஊழியர்களின் ஆதரவில் 1985 -ஆம் ஆண்டு சம்பளம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக சங்கமாக திரண்டனர். தொடர்ச்சியான போராட்டத்தின்  காரணமாக 1987 -ல் 150 ரூபாயாகவும் சமையலருக்கு 80 ரூபாய் உயர்த்தப்பட்டது. பின்னாளில் இவர்கள் சத்துணவு அமைப்பாளர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

என்ன பிரச்சனை? எதற்காக இந்த போராட்டம்?

தமிழகத்தில் சுமார் 48 ஆயிரம் சத்துணவு மையங்களும், 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார்  இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.  இவற்றில் சுமார் 40 ஆயிரம் காலிபணி இடங்கள் உள்ளன. கடந்த 2012 -க்குப் பிறகு  இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக ஒரு சத்துணவு அமைப்பாளர் ஐந்துக்கு மேற்பட்ட மையங்களைக் கண்காணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எனவே உடனடியாக காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அதேசமயம் தற்பொழுது அவர்கள் பெறும் கூலி அற்பத்தொகையே. இவர்களுடைய வேலை நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை 3 மணி வரை செய்கிறார்கள். சத்துணவு அமைப்பாளர்  ரூ.12,000மும், சமையலர் ரூ.6000 உதவியாளர் ரூ.4000 வாங்குகிறார்கள்.  இவர்களுக்கு நிகரான வேலை செய்யும் அரசு ஊழியர்கள் 50,000-க்கும் மேல்தான் வாங்குகிறார்கள்…. இவர்களை பகுதி நேர ஊழியர்கள் என அழைக்கப்படுவதால் இந்த ஊதியம் மறுக்கப்படுகிறது..

எவ்வளவு பெரிய கேலிக்கூத்து?  அதுவும் பே-கமிஷனில்தான் இந்த ஊதியமும் உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் பெற்ற சம்பளம்… 7,700-4100-3000 வீதமாகும். தினக்கூலி மற்றும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப் படும் ஊதியத்தைக் கூடத் தொடவில்லை. ஆனால் அதை அரசு நியாயப்படுத்துகிறது.

இதில் பெரும்பாலான பகுதியை காய்கறி வாங்குவதற்கே செலவு செய்து விடுகிறோம் என்கிறார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.அண்ணாதுரை.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.அண்ணாதுரை.

மேலும் அவர், “தமிழக சத்துணவுத் திட்டம் ஏழைக் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்து கிடைத்திடவும், முறையான சத்துணவு வழங்கிடவும்  1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  உணவு தயாரிப்பு செலவினம் ரூ. 1.70-ம் பருப்பு வழங்கும் நாட்களில் ரூ. 1.30 வழங்கப்படுகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 1.80-ம் பருப்பு வழங்காத நாட்களில் ரூ. 1.40-ம் வழங்கப்பட்டு வருகிறது.

தினம் ஒரு உணவு என்ற வகையில் பிரியாணி தயாரிக்கும் நாளில் ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 வழங்கப்படுகிறது, 3 கிராம் எண்ணெய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்றைய விலைவாசியில் காய்கறிகள் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு வாங்க இயலாத நிலையே நீடிக்கிறது. எண்ணெய் 3 கிராம் என்ற அடிப்படையில் 100 குழந்தைகளுக்கு 10 கிலோ அரிசிக்கு 300 கிராம் என்பது போதாத நிலை உள்ளதால் எண்ணெய்யின் அளவினை 7 கிராமாக உயர்த்துவதோடு அன்றைய தினம் மிளகு முட்டை வழங்க வேண்டும். மிளகு 100 கிராம் 100 ரூபாய் ஆகிறது. எனவே ஒரு மாணவனுக்கு ஒரு நாளைக்கு 5 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஆனால் அதனை அரசு வழங்க மறுக்கிறது” என்கிறார்.

கடந்த 2013-ல் நாடாளுமன்ற வல்லுநர் குழுவானது இன்றைய விலைவாசிக்கு தற்பொழுது வழங்கப்படும் செலவினத்தொகை போதாது.. அதனை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறியது. அதனை இன்று வரை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் எப்படி பிள்ளைகளை ஊட்டச் சத்து மிக்கவர்களாக வளர்க்க முடியும்” என்று கேள்வியெழுப்புகிறார்.

அதேபோல் கடந்த 19.2.2016 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியர்கள் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் எதிர்வரும் ஊதியக்குழுவே பரிசீலிக்கும் என அறிவித்தார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

அதேபோல பட்டதாரிகள் வாழ்வாதரத்துக்கான சம்பளமும், அவர்களை நிரந்தரமாக்கும் படி குறுகிய காலத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்து நிரந்தரமாக்குவோம் என்றார் அதுவும் நிறைவேறவில்லை.

இதனை எல்லாம் கேட்டு 34 வருடங்களாக போராடி வருகிறோம். ஆனால் இது வரை ஒன்றும் நடக்கவில்லை.  இத்தனை ஆண்டுகாலம் மாடாய் உழைத்து நாங்கள் ஓய்வு பெறும்போது என்ன கொண்டு போகிறோம்? ஒன்றுமில்லை…  பணிக்கொடையாக  சத்துணவு அமைப்பாளர் ஒரு லட்சம்,  சமையலர்  மற்றும் உதவியாளகள் 50000 ஆயிரம் .. அவ்வளவுதான். மாத பென்சன் 2000 ஆயிரம் தருகிறார்கள். இதனை கொண்டு எப்படி கடைசி காலத்தில் வாழ்வது நீங்களே சொல்லுங்கள்?  “ஏன் இந்த வேலைக்கு வந்தோம்” என்று சளித்து விட்டது என்கிறார் அன்ணாதுரை.

அரசின் வஞ்சகமும்துரோகமும்!

தமிழகம் தான் இந்தியா முழுமைக்கும் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்திட வழிகாட்டியாக விளங்கியது. மேலும், சத்துணவுத்திட்டம் என்ன நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ, அதில் சிறப்படைய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனே களைந்து அமல்படுத்துவதுடன் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழி யர்களின் ஊதியம், பதவி உயர்வு சம்பந்தமாக அல்லல்பட்டுவரும் ஏழைகள், கணவனால் கைவிடப் பட்டவர்களின் வாழ்வாதாரக் கோரிக் கையை நிறைவேற்றப்பட வேண்டி நிர்வாகிகளை அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வரை இரண்டரை லட்சம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பங்கள் எதிர்பார்க்கின்றன.

சேப்பாகம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் (கோப்புப் படம்)

சத்துணவுத் திட்டத்திற்கென மத்திய அரசு ஒரு குழந்தைக்கு 150 கிராம் அரிசியும், உணவு தயாரிப்பு செலவினத்திற்காக ரூ.4.60 முதல் ரூ.5.00 வரை வழங்குகிறது. தேவையான பாத்திரங்களும், மையக் கட்டிடங்களும் மற்றும் அதற்கான நிதியும் இன்றைய விலைவாசிக்கு ஏற்றபடி உயர்த்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ள நிலையில், தமிழக அரசு கூடுதல் நிதியினைப் பெற முயற்சி மேற்கொள்ளாமல், திட்டத்தினை சுருக்குவது என்ற ரீதியில் செயல்படுவதுதான் சத்துணவு ஊழியர்களின் பிரச்சனைகளுக்குக் காரணமாகும்.

படிக்க :
ஜெயாவின் துணிவு ரவுடித்தனம் ! ஜெயாவின் கருணை பிச்சை போடுவது !!
அங்கன்வாடி பெண் ஊழியர்களை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா அரசு !

சத்துணவுத்துறையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி சத்துணவுத் திட்டம் சிறப்புடன் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளாமல் 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள மையங்களை மூடுவது என தமிழக அரசு பின்னோக்கி யோசிக்கிறது.

தமிழகம் தான் இந்தியா முழுமைக்கும் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்திட வழிகாட்டியாக விளங்கியது. ஆனால் சத்துணவு அமைப்பாளராக, சமையலராக, சமையல் உதவியாளராக, சமூக நலப்பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை முறையே வெறும் ரூ.700, ரூ.600 மற்றும் ரூ.500 மட்டுமே.

பல்லாண்டு காலம் சத்துணவுத் துறையில் வேலை செய்து விட்டு இப்போது, அடுத்த வேளை உணவிற்குக் கூட வழியின்றி தாங்கள் பணியாற்றிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களிலேயே சோற்றுக்காக தட்டேந்தி தவமிருக்கும் ஓய்வூதியர்களாக மாறியிருக்கும் அவலம் துயரமானது.

அம்மாவின் வழித்தோன்றல்

குறைந்தபட்சம், மாணவர்கள் ஊழியர்களின் நலன் கருதி, திமுக அரசு 18.07.2007 -ல் தொடக்கப்பள்ளி மாணவர்களின் காய்கறி மற்றும் விறகுக்கான செலவினத்தொகையையும், 24.9.2010-ல் சமையல் எண்ணெய் மற்றும் அரிசியின் அளவினை உயர்த்தி வழங்க அரசாணையை வெளியிட்டது. அதுகூட அதிமுக அரசில் இல்லை.

பள்ளி சத்துணவு மையங்களிலும், அங்கன்வாடி மையங்களிலும் பணிபுரிந்து பணியிடையே காலமான பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படியில் திமுக ஆட்சியில் மட்டுமே 118 பேருக்கு வழங்கப்பட்டது. அதுவும் தற்போதைய அதிமுக ஆட்சியில் வழங்கவில்லை. மகப்பேறு விடுப்பு, குடும்ப நல நிதி இதுபோன்ற சிறு சிறு உதவிகள்கூட திமுக ஆட்சியின்போதுதான் இந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறைகூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியிலேதான் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டது. முன்தேதியிட்டு வழங்கும் முறையைக் கூட அதிமுக அரசு காலி செய்துவிட்டது…

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வூதியமும் சரி, பதவி உயர்வும் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டதில்லை. ஆசிரியர் பட்டயப் படிப்பு பயிற்சி (Diploma in Teacher Education) முடித்த சத்துணவு மற்றும் குழந்தை மைய பணியாளர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பி.எட். படித்து முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க கழக அரசு ஆணை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தும்பொருட்டு தகுதிவாய்ந்த 59 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் 405 சத்துணவுப் பணியாளர்களுக்கும் பெயர் பட்டியல் 4.10.2010 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

சத்துணவு மற்றும் குழந்தை மையங்களில் 2001 முதல் 2006 வரை 5 ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் காலிப்பணியிடங்கள் 20,000 ஆயிரத்திற்கும் மேல் இருந்தும் வெறும் 7,655 பணி இடங்களில் மட்டுமே புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். வெறும் 2,000 ஊதியம் பெறுபவர்களை நியமிப்பதற்கே இந்த அரசு சொத்தை எழுதித் தருவதைப் போல் வேலை புறக்கணிப்பு செய்தது எவ்வளவு பெரிய அலட்சியம். இந்த திட்டம் எதன் நோக்கில் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு ஊறுவிளைவிக்கும் செயலையும் செய்தது.

கடந்த திமுக ஆட்சியில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பெற்றுவரும் ஊதியத்தை “இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம் என்பது மட்டுமன்றி; அவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் சலுகைகளும், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை” என்று குறிபிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ஆனால், 2010-ம் ஆண்டு சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் செய்தபோது “சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை ஏவி விட்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல மைச்சர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சவடால் விடுத்தார் ஜெயலலிதா.

சத்துணவு அமைச்சர் “முட்டை ஊழல் புகழ் சரோஜா”

அதோடு இல்லாமல், “எம்.ஜி.ஆர். ஆட்சி விரைவில் மலரும், சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீரும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.  ஆட்சி வந்தது, சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படவிலை.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் “சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்று அறிவித்தார். அதையும் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கன்வீனர் மு. வரதராசன், “கடந்த ஆட்சியில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நியாயமானது, போராடும் நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேச வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்று ஜெயலலிதா அறிவித்தார்.

படிக்க :
பாப்பாள் அம்மாளின் சத்துணவு சமையலில் பல்லியாம் ! சாதிவெறியர்கள் சதி தொடர்கிறது !
இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !

ஆனால் 3 ஆண்டாகியும் நிறைவேற்றவில்லை, போராடும் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசவில்லை, மாறாக போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சமூக நல இயக்குனர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்” என்று ஜெயலலிதா அரசின் பொய் வாக்குறுதிகைளை அம்பலப்படுத்தினார்.

எதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை… அடுக்கடுக்கான போராட்டம் நடத்தபட்டாலும் ஆட்சியாளகளின் அப்போதைய வாக்குறுதிகளை மட்டுமே நம்பி போராட்டத்தை கைவிட்டு விடுவதால், ஆட்சியாளகளும் அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். அதனை கண்டு கொள்வதே இல்லை. அம்மாவின் வழித்தோன்றல்களான இந்த எடப்பாடி கும்பலும் அதே வேலையை செய்து வருகிறது.

கடந்த முப்பத்தி ஒன்றாம் தேதி சத்துணவு அமைச்சர் ’முட்டை ஊழல் புகழ்’ சரோஜா, பேச்சு வார்த்தைக்கு அழைத்து, “கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. வரக்கூடிய நிதியில் கணிசமான தொகையை உங்களுக்கு தருகிறோம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள். முதல்வரிடம் பேசி ஒரு முடிவுக்கு வருகிறோம்” என்று கூறியதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் துணை செயலர் நூர்ஜகான் தெரிவித்தார்.

தொடர்ந்து நடத்திய போராட்டத்தின்போது, நவம்பர் 2 அன்று மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஒரு சில கோரிக்கைகளை மட்டும் பரீசிலிக்கிறோம். என்று கூறியதால், போராட்டதை கைவிடுவதாக அறிவித்தனர். அத்துடன் போராட்டம் தற்காலிகமாக முடிவு வந்துள்ளது.

ஆனால் இந்த முடிவில் சங்க நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. வந்தவர்களோ போராட்டதை தொடர வேண்டும் என்றாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. இந்த போக்கினால்தான் இந்த அரசும் தொடர்ச்சியாக இவர்களின் முதுகின்மீதமர்ந்து பயணித்து வருகிறது…!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க