ஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமம் வளவன்புரம். எல்லா நகரத்திற்கு அருகிலும் நிச்சயம் ஒரு குடிசைப்பகுதி இருக்கும். அப்படி இங்கேயும் இருந்தது. இங்குள்ள பல வீடுகள் தென்னங்கீற்றால் வேயப்பட்டிருந்தன. அதில் கணிசமான வீடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டிருந்தன. வீட்டின் தூண்கள் முறிந்து அப்படியே கவிழ்ந்து கிடந்தன. தேறியது என்றால் ஒன்றிரண்டு வீடுகளே இருக்கும். அங்கே இருந்த ஒரு கொட்டகையின் கீழ் தஞ்சமடைந்திருந்தார்கள் வடுவம்மாவும் அவருடைய மருமகள் மணிமேகலையும்.

இருவரும் கீற்றுப் பின்னிக் கொண்டிருந்தனர். மணிமேகலையின் மகளும், மகனும் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். நம்மைப் பார்த்ததும் ஏதோ அதிகாரிகள்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்து பின்னிக்கொண்டிருந்த கீத்தை அப்படியே போட்டுவிட்டு எழுந்து ஓடிவந்தார்கள். “இது வரைக்கும் யாரும் வந்ததில்ல. நீங்க தான் முதல்ல இந்த வீட்டுல காலை வச்சிருக்கிங்க. குடிக்க தண்ணிக்கூட இல்லாம தடுமாறிக் கிடந்தோம்” என்றார் அந்த வயதான பாட்டி.

(வலது புறம்) வடுவம்மாளும் மருமகள் மணிமேகலையும்.

மணிமேகலை குறுக்கிட்டு சொன்னார், “இப்படி ஒரு புயலு வரும்னு எதிர்பாக்கல. முதல் புயல் வீசுர வரைக்கும் வீட்டுக்குள்ளதான் இருந்தோம். அப்ப ஒன்னும் தெரியல. இரண்டாவதா மூனு மணிக்கு ஒரு புயல் அடிச்சது எதிர் திசையில. அப்பதான் வீடு எல்லாம் ஆட்டம் கொடுக்க ஆரம்பிச்சது. என்ன பன்றதுன்னே ஒன்னும் புரியல. அந்த சமயம் வெளியில போகவும் முடியல. கொஞ்ச நேரம் தடுமாறி போயிட்டோம். ஒரு வழியா காத்து நின்னதும் வெளியில வந்துட்டோம். மாத்து துணிகூட எடுக்க முடியல.

கல்லு வூடு கட்டி இருக்கவங்க வீட்டுல இரவுல மட்டும் தங்கிப்போம். பகலான இந்த கொட்டாய்க்கே வந்துடுவோம். அங்க போறத அவங்களும் ஒரு மாதிரியா தான் பாக்குறாங்க. இன்னா பண்றது எங்களுக்கும் வேற போக்கிடம் இல்ல” என்கிறார் சோகமாக.

நாங்க கூலி வேலை செய்யிறவங்க. எங்ககிட்ட பணம் எதுவும் இல்ல. இருக்க அரிசி பருப்ப வச்சி இத்தன நாள் சமாளிச்சோம். இனிமே என்ன பண்றதுன்னுதான் தெரியல. இப்ப இருக்க ஒரே ஒரு துணை இந்த மட்ட பின்னுறதுதான். அதுவும் இப்ப சரிஞ்சிடுச்சி. இனிமே மட்டயும் கிடைக்காது.

வடுவம்மாள்.

நாங்க பெரிசா எதுவும் பண்றவங்க கிடையாது. ஒரு கட்டு, இரண்டு கட்டு மட்டும் வாங்கிட்டு வந்து பின்னுவோம். ஒரு கட்டு 100 ரூபாய்க்கு தருவாங்க.  ஒரு கட்டுக்கு 35 கீத்து இருக்கும். தோப்புக்காரங்க ஒரு மட்ட இரண்டு ரூபாய்க்கு கொடுப்பாங்க. நாங்க அதை பின்னி அஞ்சி ரூபாய்க்கு கொடுப்போம். சில சமயம் இங்க கீத்து கெடைக்காது. வெளில இருந்து கீத்து ஏத்திகிட்டு வருவோம். மினி டெம்போ வாடகையே வருமானத்துல பாதி போயிடும். இருந்தாலும் குடும்பத்த நடத்தவாது உதவுச்சி. இனிமே அதுகூட இல்லையே.

இந்த வேலை கூட பங்குனி – புரட்டாசி இந்த ரெண்டு மாசத்துலதான் கொஞ்சம் இருக்கும். மழைக்காலம் அதிகம் ஓடும். ஆனா இப்பதான் இந்த மாதிரி ஆகிடுச்சி” என்கிறார் மணிமேகலை.

படிக்க:
பட்டுக்கோட்டை : மண்ணில் புதைந்த கொல்லுப்பட்டறை ! நேரடி ரிப்போர்ட்
அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !

யப்பா! இனிமே எந்த வேலையும் இல்ல. வய வேலைக்கும் போக முடியாது. எங்க பாத்தாலும் தோப்பும் தொறவுமா ஆகிடுச்சி. இப்ப அதுவும் போயிடுச்சி.  இனிமே எந்த வழியும் இல்ல.

கடனுக்கும் வாங்க முடியாது. கையில காசும் இல்லப்பா. எல்லாம் தீபாவளியோட போச்சி. அதுக்கு வாங்குன கடனே சரியாருக்கு. இப்ப யாருகிட்ட கடன் கேக்குறது? வாங்கினாலும் எப்படி அடைக்கிறது? என்கிறார் பாட்டி வடுவம்மா!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க