நோய் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இது அனைத்து தரப்பு மக்களிடமும் வெவ்வேறு வகைகளின் நிலைபெற்றுள்ளன. அவற்றை களைய முயல்வதே இப்பதிவின் நோக்கம்.
*****
“வேலூர் வாணியம்பாடியை அடுத்த் ஆலங்காயம் கொட்டாவூரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சக்தி இளவரசி தம்பதியினரின் குழந்தை பிரித்திவிராஜ்.
ஒன்பது மாத குழந்தையான பிரித்விக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் இருந்துள்ளது. இது குறித்து இளவரசி தனது பெரியம்மாள் ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார்.
அவர், ‘குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள நாட்டு மருந்து வைத்தியசாலைக்கு குழந்தையை தூக்கிச்செல்’ என்றார். இளவரசி அவர் கணவருடன் அங்கு சென்றுள்ளார். அங்கு இருந்த நாட்டு வைத்தியர் குழந்தைக்கு ஒரு கயிறு கட்டிவிட்டு, மருந்தும் கொடுத்துள்ளார்.
ஆனால் சில நிமிடங்களில் குழந்தை மூர்ச்சையானதையடுத்து அத்தம்பதியினர் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடலை மடியில் ஏந்திப் பெற்றோர் கதறி அழுதனர்.
***
குழந்தை பிறந்த ஒரு வயது வரை மிக மிக முக்கிய காலக்கட்டம் அதை Infant period என்கிறோம்.
உடலில் ஒரு பாகத்தில் ஏற்படும் தொற்று மிக எளிதாக மொத்த உடலுக்கும் பரவி “அபாயகரமான நோய் தொற்றாக” மாறும் வாய்ப்பு உண்டு.
படிக்க :
டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !
மருத்துவத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு | ஃபருக் அப்துல்லா
குழந்தை பிறந்த முதல் ஒரு வருடத்திற்குள் இறக்கும் இறப்பு சதவிகிதத்தை Infant mortality rate என்கிறோம். இந்த காலத்தில் வரும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, சளி, இருமல் போன்ற வியாதிகளை உடனே நவீன மருத்துவரிடம் சென்று காண்பிப்பதே சிறந்த விசயம்.
நாட்டு மருந்து கொடுக்கிறேன் என்று போலி மருத்துவர்களை நாடினால் உங்கள் குழந்தையை நீங்களே கொல்வதற்கு சமமாகும்
இந்த செய்தியில் ஒன்பது மாத குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு; மிக எளிதாக ஓ.ஆர்.எஸ் மற்றும் தகுந்த மருந்து கொடுத்தால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய உயிரை கொன்று விட்டனர்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.
*****
96 படத்தில் ஒரு காட்சி ;
ராம் வீட்டில் ஜானு குளியலறைக்குள் செல்கிறாள். ஜானுவிற்கு ராம் டவல் மற்றும் சோப் எடுத்துக்கொண்டு செல்கிறான். அப்போது ஜானு கூறுகிறாள் “இங்க உள்ள டவல் சோப் இருக்கு ராம்”
ராம் “ஐயோ… அது நான் யூஸ் பண்ண டவல் மற்றும் சோப்” என்கிறான்.
ஜானு கிண்டலாக “பரவாயில்ல..உனக்கு சோரியாசிஸ் ஒன்னும் கிடையாதுல்ல?”
ராம் “இல்ல இல்ல” என்கிறான்
எப்போதும் பெரிய டைரக்டர்கள் கூட மருத்துவ விசயங்களை படத்தில் வைக்கும் போது ஃபெய்ல் ஆகி விடுவார்கள்.
உண்மையில், சோரியாசிஸ் என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய் அல்ல.
சோரியாசிஸ் என்பது சுய எதிர்ப்பு சக்தி தனது தோலையே பாதிக்கும் ஆட்டோ இம்யூன் வகை நோயாகும். இது தொற்றும் நோயல்ல. ஆகவே, இந்த படத்தில் அறியாமல் வைக்கப்பட்டிருக்கும் இந்த காட்சி பிழையாகும்.
சோரியாசிஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் அரவணைப்புக்கு உரியவர்கள். அருவருப்புக்கு உரியவர்கள் அன்று.
இந்த பதிவு மருத்துவராக எனது பொறுப்பு.
நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.