ண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.

மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.

இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது.  ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’

சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.

பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?

“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.

வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?

மனுதரும சாஸ்திரமும் கீதையும்!

“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13).  “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.

“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.

இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).

கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.

தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?

இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.

இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது.  வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா  வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?

இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.

படிக்க:
சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஊரான்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க