ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்சலக் மோகன் பகவத், ஹைதராபாத்தில் ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் அவர், இந்துக்களையும் இந்து மதத்தையும் முற்றிலும் வித்தியாசமாக வரையறுத்தார். அமைதி மற்றும் அகிம்சை பற்றிய உலகளாவிய அங்கீகாரம் பெற்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகம் கொண்டாடிய, கிறிஸ்துமஸ் தினத்தில் பகவத்தின் உரை நிகழ்த்தப்பட்டது.

அவரைப் பொறுத்தவரை, அனைத்து இந்தியர்களும் அதாவது 1.3 பில்லியன் மக்களும் இந்துக்கள். இந்த (இந்திய) நிலத்தில் வசிக்கும் ஒரு இந்து, பாரத மாதாவை வணங்க வேண்டும், மேலும் மண்ணையும் நீரையும் நேசிக்க வேண்டும். அதாவது அனைத்து இந்தியர்களும், அவர்கள் நம்பும் கடவுளை வணங்குவதையோ அல்லது ஜெபிப்பதையோ தவிர, ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய தெய்வமான பாரத் மாதாவையும் வணங்க வேண்டும்.

மோகன் பகவத்.

எனவே, அனைத்து முசுலீம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் பலர்  தங்கள் கடவுளையும் மற்றொரு சக்தியான பாரத் மாதாவையும் வணங்க வேண்டும்.

குடிமக்களின் தேசிய பதிவேட்டில் அல்லது பள்ளியில் அல்லது வேறு எந்த பதிவிலும் தங்கள் பெயர்களை பதிவு செய்யும் போது ‘மதம்’ என்ற நெடுவரிசைக்கு எதிராக அவர்கள் முசுலீம் – இந்து, பவுத்த – இந்து, கிறிஸ்தவ – இந்து, சீக்கிய – இந்து, பார்சி – இந்து என எழுத வேண்டும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் புத்தகம், உணவு கலாச்சாரம், திருமண முறை ஆகியவற்றைப் பின்பற்றலாம்.

இந்த முறை அவர் பசுவை வணங்கவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிடவும் அவர் கேட்கவில்லை. பொது சிவில் சட்டம் குறித்தும் அவர் பேசவில்லை.

இப்போது எவரும் புதிதாக கிறிஸ்தவம் அல்லது பவுத்தம் அல்லது சீக்கியம் அல்லது இஸ்லாத்திற்கு மாற விரும்புகிறார்களோ அவர்கள் இந்துக்களை தங்கள் மதத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து குறிப்பிட வேண்டும்.

சாவர்க்கர், ஹெட்கேவர், கோல்வல்கர் மற்றும் பலரால் வழங்கப்பட்ட இந்துத்துவத்தின் முந்தைய வரையறையிலிருந்து மோகன் பகவத் வந்தவர். முந்தைய இந்து மதமும் இந்துத்துவாவும் ஒருவிதத்தில் வித்தியாசமாக தோன்றின.

பகவத் சொற்பொழிவிலிருந்து அரசியல் கருத்தியல் உள்ளடக்கத்தை வெளியே எடுத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்த உருவாக்கம் முஸ்லிம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் விரும்பும் அனைத்தையும் உள்ளடக்கியது. ஒருவேளை இது CAA – NRC பிரச்சினையையும் தீர்க்கும். அந்த முசுலீம் குடியேறியவர்கள் அல்லது அகதிகள் தங்கள் பெயர்களுக்கு எதிராக ‘முசுலீம் – இந்து’ என்று குறிப்பிட வேண்டும். பின்னர் அவர்கள் தங்கள் அல்லாஹ்விடம் அரபு மொழியில் பிரார்த்தனை செய்யலாம், ஆனால் பிரார்த்தனையின் முடிவில் அவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும்.

கவுடில்யா மற்றும் மனுவுக்குப் பிறகு மோகன் பகவத் இந்து தத்துவத்தின் மிகப் பெரிய கோட்பாட்டாளராக உருவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கவுடில்யா மற்றும் மனு இருவரும் மவுரியா சந்திர குப்தா மற்றும் புஷ்யமித்ரா ஷுங்கா ஆகிய ராஜ்யங்களுக்கு தங்களது சொந்த தத்துவார்த்த நூல்களான அர்த்தசாஸ்திரம் மற்றும் மனுதர்ம சாஸ்திரங்களை எழுதி அடித்தளத்தை வழங்கினர். கவுடில்யாவும் மனுவும் தங்கள் கோட்பாடுகளுடன் சந்திர குப்தா மற்றும் புஷ்யமித்ராவை ஆட்சிக்கு கொண்டு வந்த நிலையில், மோகன் பகவத், நரேந்திர மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார். நரேந்திர மோடிக்குப் பிறகு அமித் ஷா பிரதமராக வருவார். பாராளுமன்றத்தில் தற்போதுள்ள பாஜக பெரும்பான்மையும், இரண்டு கால ஆட்சியும் மோகன் பகவத்தின் தத்துவ மூலோபாய பங்களிப்பாகும்.

மோகன் பகவத்தின் கூற்றுப்படி, ஹைதராபாத் கூட்டத்தில் தனது புதிய கோட்பாட்டை விளக்கும்போது, உலகின் மனிதர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவர்கள் அனைவரும் மூன்று வகையான வெற்றிகளை விரும்புகிறார்கள். அவை:

“அசுரா, ராஜசிகா, தர்மம். அசுரா பிரிவைச் சேர்ந்தவர்கள் சோகத்தில் வாழ்ந்தனர், மற்றவர்களை சோகப்படுத்தினர், வன்முறையை ஏற்படுத்தினர், ஆனால் வெற்றியை அடைந்தனர், இது இறுதியில் எல்லாவற்றையும் அழிக்கும். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் சுயநலத்துக்காக செய்தார்கள். அவர்கள் தங்களுக்கு செல்வத்தையும் பெருமையையும் பெற மற்றவர்களைப் பயன்படுத்தினர். சங்கமும் இந்தியாவும் தர்ம வெற்றியை நம்பின; அங்கு மக்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவும் நலனுக்காகவும் வாழ்ந்தார்கள். மேலும் தங்களுக்கு சொர்க்கம், ராஜ்யம் அல்லது எதையும் வேண்டும் என அவர்கள் விரும்பவில்லை.”

படிக்க:
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !
போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

இது மிகவும் கற்பனைபூர்வமான கோட்பாடாகும். சொர்க்கம் மற்றும் ராஜ்யத்தின் நம்பிக்கையிலிருந்து இது விசுவாசிகளை பாதுகாக்கிறது. மோகன் பகவத் தனது இந்துக்களை சொர்க்கம் மற்றும் ராஜ்யத்தின் விருப்பத்திலிருந்து விடுவித்துள்ளார்.

இந்த இரண்டு ஆசைகளும் இவ்வளவு வன்முறையை ஏற்படுத்தின, அவை காரணமாக இனப்படுகொலைகள் நடந்தன. இப்போதைக்கு அவர்கள் முசுலீம்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும், பவுத்தர்களாக இருந்தாலும் அல்லது சீக்கியர்கள் தூய முசுலீம்களாகவோ, தூய பவுத்தர்களாகவோ, அல்லது தூய்மையான சீக்கியர்களாகவோ இருந்தாலும் சரி ‘இந்த வாழ்க்கையில் அவர்கள் மரணத்திற்குப் பின் சொர்க்கத்தையும் ராஜ்யத்தையும் (அரசியல் அதிகாரத்தை) விரும்புகிறார்கள்.’

அவரைப் பொறுத்தவரை அத்தகைய சக்திகளும் வன்முறையைச் செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் ‘சொர்க்கத்தையும் ராஜ்யத்தையும் விரும்பவில்லை’ என்று முதன்முறையாக உலகுக்குத் தெரிவிக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் போலவே, சொர்க்கம் மற்றும் ராஜ்யத்தின் விருப்பத்திலிருந்து வெளியேற விரும்பும் மக்கள் தங்களிடம் உள்ள வேறு எந்த மதக் குறிப்பையும் சேர்த்து ஒரு இந்து குறிச்சொல்லை வைத்திருக்க வேண்டும். அவர் அவர்களிடம் இந்து மதத்திற்கு மாறும்படி கேட்கவில்லை, இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மீண்டும் மதமாற்றும்படி கேட்கவில்லை.

அவர்கள் ஏற்கனவே இருக்கும் மதத்தில் ‘இந்து’ என்ற புதிய குறிச்சொல்லைச் சேர்க்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும், நிச்சயமாக ‘தர்ம’ வன்முறை மட்டுமே.

ஒரே கேள்வி என்னவென்றால், மாநில அதிகாரத்தை (இராஜ்ஜியம்) கைப்பற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ். ஏன் பாஜகவை நிறுவியது, மதச்சார்பின்மை மற்றும் அரச அதிகாரத்தை நம்பும் மற்ற அரசியல் கட்சிகளுக்கு எதிராக, அதன் வெற்றிக்காக அது ஏன் தொடர்ந்து செயல்படுகிறது? அவருடைய கூற்றுப்படி, இவை பாவச் செயல்களா?

95 ஆண்டுகால வாழ்நாளில் தனது அமைப்பு அசுரா மற்றும் ராஜ்சிகா நடவடிக்கைகளில் ஒருபோதும் பங்கேற்கவில்லை என்று அவர் உலகுக்குச் சொல்கிறார். 2014-க்கு முன்னர் அதன் கலகக் காலத்தை அவர் தர்ம காலமாகக் கருதவில்லையா? அத்வானியின் ரத யாத்திரை மற்றும் 1990 களில் ஏற்பட்ட கலவரங்கள் அசுர மற்றும் ராட்சசா நடவடிக்கைகள் என்று அவர் அர்த்தப்படுத்துகிறாரா? அப்படியானால், அவரது சொந்த பாஜக அரசு அத்வானியையும் அவரது குழுவினரையும் ஏன் சிறைக்கு அனுப்பவில்லை?

பகவத்தின் புதிய இந்து கோட்பாடு பண்டைய இந்து நூல்கள் நமக்குச் சொன்னது போல அசுரர்களும் ராஜ்சிகாக்களும் பாரதத்தில் இல்லை என்று ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தைத் தருகிறது. அவர்கள் தாழ்ந்த சாதியினர் அல்லது முசுலீம்கள் அல்லது இந்திய கிறிஸ்தவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ளனர். இந்திய முஸ்லிம்கள், பவுத்தர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் தங்கள் மதக் குறிப்பில் இந்துக்களைச் சேர்க்காவிட்டால், அவர்கள் வெளியில் இருந்து குடிபெயர்ந்த அசுரர்கள் மற்றும் ராஜசிகாக்கள் என்று கருதப்படுவார்கள்.

படிக்க:
ஆத்திகர்களின் “சாமானிய சாலம்” – அறிவியல் அயோக்கியத்தனம் !
அக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர்

ஒரு புதிய மாற்ற முறை மூலம் அவர்களின் (மத) மாற்றத்திற்கு போதுமான வாய்ப்பை அவர் வழங்கியுள்ளார். அவர்கள் மாறாவிட்டால், அவருடைய தர்ம வன்முறை அதன் சொந்த போக்கைப் பின்பற்றும்.

இதுதான் மோகன் பகவத்தின் புதிய பாரதம். தேசத்தின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர் ஒரு சிறந்த வடிவமைப்பை கொடுத்துள்ளார். ஹைதராபாத் கோட்பாடு, விளக்கம் அளிக்கப்பட்டு மீண்டும் விளக்கப்படும். அவரது கோட்பாட்டை ஊடகங்கள் மிக முக்கியமான கவனத்தை தந்துள்ளன. தொலைக்காட்சி சேனல்கள் அவரது உரையை நேரடியாக ஒளிபரப்பின.

இந்தக் கோட்பாட்டிற்கு பிற மத அறிவுஜீவிகள், மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மற்றும் மேற்கத்திய கல்வி அறிஞர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அவரது கோட்பாடு இந்திய சிறுபான்மையினருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல சிறுபான்மை தலைவர்கள் ஏற்கனவே இந்த வகையான ஒரு இந்து தேசக் கோட்பாடு குறித்து கடுமையான அச்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அறியப்பட்ட இந்திய வரலாற்றில் முதல்முறையாக, மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர், CAA மற்றும் NRC ஐ எதிர்க்க வீதிகளில் வந்துள்ளனர். மோகன் பகவத் இந்த கோட்பாட்டின் மூலம் அவர்களை மேலும் பயமுறுத்துகிறார்.

காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட்.

முன்னதாக அவர் ‘இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லை’ என்ற கோட்பாட்டைக் கொண்டு இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்வதற்காக பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பயமுறுத்தினார். கேள்வி என்னவென்றால்: ஒரு தேசமாக இந்தியா இந்த வகையான ஆபத்தான மதக் கோட்பாடுகளுடன் வாழ முடியுமா? நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பிற்கு என்ன நடக்கும்? எனது அச்சம் என்னவென்றால், இந்தியா என்கிற கருத்தாக்கம் கடுமையான அச்சுறுத்தலில் உள்ளது. மேலும் மோகன் பகவத் வேண்டுமென்றே தனது நிலையிலிருந்து இந்த அச்சுறுத்தலை முன்வைத்துள்ளார்.

சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் ஒரு அரசியல் கோட்பாட்டாளர் ஆவார். அவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 2012 வரை பேராசிரியராக பணியாற்றியவர்.


தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: தி வயர்.